நேற்று! இன்று ! நாளை! – தொடர் 30 ( நமது கல்வி- 2 ) 17

அதிரைநிருபர் பதிப்பகம் | February 27, 2014 | , , , , , ,

சென்ற வாரத்திலிருந்து முஸ்லிம்களின் கல்வி நிலையின் பிற்போக்கான நிலைமைக்கான வரலாற்றுக் காரணங்களைக் கண்டு வருகிறோம். அந்த சம்பவங்களைத் தொடர்ந்து பதியும் முன்பு , இன்றைய அரசியல் நிலையை சற்று தொட்டுவிட்டுச் செல்ல நினைக்கிறோம். கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கான தற்போதைய சதவீதத்தை உயர்த்தி இன்று தமிழகத்தை ஆண்டு கொண்டு இருக்கும் அரசு தருமென்று மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த நமது சமுதாயத்துக்கும் – இதற்காக பெருமளவில் மக்களைத் திரட்டிக் காட்டி போராட்டம் நடத்திய தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத் இயக்கத்துக்கும் பதில் அளிக்கும் விதமாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை கடந்த 25/02/2014 அன்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் செல்வி. ஜெயலலிதா அவர்களால் வெளியிடப்பட்டு இருக்கிறது. இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு அந்தக் கட்சி எதிரானது என்று மீண்டும் நிரூபிக்கப்பட்டு இருப்பதாகவே நாம் கருதுகிறோம். அந்த தேர்தல் அறிக்கையின் சாராம்சங்களை அதிமுக தேர்தல் அறிக்கை: முக்கிய அம்சங்கள் என்ற தலைப்பில் இணைய தளத்தில் தொகுத்து வெளியிட்டு இருக்கிற இந்து ( தமிழ் ) கீழ்க்கண்டபடி குறிப்பிடுகிறது.

சமூக நீதி

“இட ஒதுக்கீட்டுக் கொள்கையை தொடர்ந்து நிலைநாட்ட அதிமுக பாடுபடும். இதே போன்று, அந்தந்த மாநிலங்கள், மாநிலங்களின் நிலைமைகளுக்கு ஏற்ப இட ஒதுக்கீடு பின்பற்றப்பட நடவடிக்கை எடுக்கப்படும்.”

அம்மையாரின் இந்த பூசி மொழுகும் நிலைப்பாடு பொதுவாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என்றாலும் இதைப்பற்றி பெரும் நம்பிக்கை கொண்டு இருந்த சகோதரர்களுக்குத்தான் இந்த நிலைப்பாடு ஏமாற்றம் அளித்து இருக்கும். அடுத்து இருதரப்பிலும் என்ன அறிவிப்பு வரப்போகிறது என்பதைத்தான் எதிர்பார்க்கலாம். வரும் அறிவிப்பு, சமுதாயத்துக்கான நலனுக்காகவும் ஒற்றுமைக்காகவும் இருக்கவேண்டுமென்று அதற்காக து-ஆச் செய்யலாம். இப்போது தொடருக்குள் செல்லலாம். 

கடந்த வாரம் குறிப்பிட்டது போல தமிழகத்தின் பல ஊர்களிலும் முஸ்லிம் கல்வி நிலையங்கள் முளைவிடத்தொடங்கின. இப்போது தலைநகர் சென்னையின் முறை. 1920 - ஆம் ஆண்டு இராமனாதபுரத்தைச் சேர்ந்த பிரபல தோல் வணிகர் மர்ஹூம் ஜமால் முகைதீன் ராவுத்தர் அவர்கள் சென்னை பெரம்பூரில் மதரஸா ஜாமியாவை நிறுவினார். இந்த மதரசாவில் பிக்ஹூ சட்டம் , பாஸில் (இஸ்லாமிய தத்துவம்) , மற்றும் இஸ்லாமியக் கல்விப் பிரிவுகள் போதிக்கப்பட்டன.

அதற்கு முன்பு 1901 –ல். சென்னையில் முஸ்லிம் இஸ்லாமியச் சங்கம் ஒன்று கூடி ஒரு தீர்மானம் போட்டது. அந்தத் தீர்மானத்தின் பிரகாரம், மத சார்பற்ற கல்வியை இஸ்லாமியக் கல்வியுடன் இணைக்க ஒரு புதிய பரிமாணத்தை முன்னெடுத்தனர். இதன் விளைவாக 1902 – ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் MEASI ( Muslim Educational Association of South India ) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் ஆரம்ப நிலை பரிதாபம், ஏனென்றால் தமிழ் அல்லது மலையாளம் தெரியாதவர்கள் இந்த அமைப்பின் தலைமையை ஆக்ரமித்ததுதான். ஜஸ்டிஸ் டியூடர் லாடம் என்ற பெயருடைய ஆங்கிலேயர்தான் இந்த கல்வி அமைப்பின் நிறுவனத் தலைவராக வந்தார். பிரபல பாஷா குடும்பத்தைச் சார்ந்த ஹாஜி பாஷா சாஹிப் அவர்களும் மிர்ஜா ஹாசிம் இஸ்பஹாணி ஆகிய இரண்டு முஸ்லிம்கள் துனைத்தலைவர்களானார்கள். இருவருமே உருது பேசும் முஸ்லிம்கள். இவர்களுக்கு மற்ற தென்னிந்திய மொழிகள் தெரியாது. இஸ்லாமியக் கல்வியுடன் நவீன உலகக்கல்வியை இணைத்த இந்த அமைப்பின் குறிப்பிடத்தக்கவர்களில் திருச்சியைச் சேர்ந்த உருது பேசும் சையித் முர்துஸாவும் அங்கம் வகித்தார். இன்றும் இவர் பெயரில் திருச்சியில் ஒரு பள்ளி நடைபெற்று வருகிறது. அத்துடன் முக்கியப் பங்கு வகித்த ஒரே தமிழ் பேசும் முஸ்லிம்களில் நாகப்பட்டினம் அஹமதுதம்பி மரைக்காயர் ஆவார். இந்த பத்தியில் நாம் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய இன்னொரு உண்மை இத்தகைய நவீனக் கல்வியை ஆதரித்து அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த முகைதீன் பக்கீர் என்பவர் ஒரு கையேடும் வெளியிட்டார் என்பதே. 

இந்த MEASI – யின் தலைமை மற்றும் முக்கிய அங்கங்களில் உருது பேசுவோர் வீற்று இருந்ததால் தென் இந்திய கல்விக் கழகம் என்பது பெயரளவில் இருந்ததே தவிர , வாய்ப்புக்கள் யாவும் உருது பேசுபவர்களுக்கே அளிக்கப்பட்டது என்பதுதான் உண்மை. இதனால் உருது பேசும் வட்டாரங்களில் கல்வி விழிப்புணர்வு ஏற்பட்டது. அதுவும் பணம் படைத்தவர்கள் மத்தியில்தான். அங்கங்கே உப்புக்குச் சப்பாணியாக மற்ற மதரஸாக்களுக்கு சில நேரங்களில் நிதிஉதவிகள் கிடைத்தன என்பதைத்தவிர உருது மொழியே பாலூட்டி வளர்க்கப்பட்டது. இதனால் மொழிவாரி சமத்துவமான பகிர்வுடைய கல்வி வளர்ச்சி தடைப்பட்டது. இதில் உச்சபட்ச முயற்சியாக உருது மொழியை முஸ்லிம்களின் மொழியாக அங்கீகரித்து சென்னை ராஜதானியின் மொழியாகவும் மாற்ற முயற்சிகள் நடைபெற்றன. ஆனால் ஆங்கில அரசு இதனை ஏற்க மறுத்துவிட்டது.

1924- ஆம் ஆண்டு பெரம்பூரில் மதரஸா ஜாமியாவைத் தொடங்கிய ஜமால் முகைதீன் ராவுத்தர் வபாத் ஆனதும் அவரது மகனார் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார். இங்கு 1925-ல் சையத் சுலைமான் நக்வி என்கிற புகழ்பெற்ற மார்க்க அறிஞர் இறைத்தூதர் நபி ( ஸல்) அவர்களைப் பற்றி உருதுவில் 6 முறைகள் தொடர் உரை நிகழ்த்தினார். உலகமகாக் கவி அல்லாமா இக்பால் அவர்கள் கூட இஸ்லாத்தின் தாத்பரியங்களைப் பற்றி உரையாற்றியதும் குறிப்பிடத்தக்கது; சிறப்பானது. 

முஸ்லிம்களின் கல்வி அறிவை மார்க்கக் கல்வியோடு நிறுத்திவிடாமல் உலகக்கல்வியோடும் இணைத்துவிட வேண்டுமென்று ஆங்கிலேயர்கள் அளவற்ற ஆர்வம காட்டினர். இதற்குக் காரணம் முஸ்லிம்கள் மீது அவர்களுக்கிருந்த பரிவல்ல. ஏற்கனவே கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டதைப் போல மதரஸாவில் கல்வி பயின்றவர்கள் அடக்குமுறைகளுக்கு எதிராகக் காட்டிய வீரமும் தவறுகளைத் தட்டிக் கேட்கும் அவர்களின் தைரியமும் ஆங்கிலேயரை அச்சுறுத்தியது என்பது ஒரு முக்கியக் காரணம். அத்துடன், இந்தியர்களுக்கு ஆங்கில வழிக் கல்வியூட்டி அதன் மூலம் கிருத்துவ மதத்தையும் பரப்பினால் மத ரீதியில் இந்தியர்களின் மனதை சுதந்திரத்துக்கு எதிராகத் திரும்பாமல் வென்று எடுக்கலாம் என்கிற இராஜதந்திர முயற்சியும்தான். ஆகவே மதசாக்கள் மீது தனது பிடியை இறுகச் செய்வதற்காக சாம்பியன் திட்டம் என்று அழைக்கப்பட்ட ஒரு திட்டத்தை 1930- 31 – ல் ஆங்கில அரசு கொண்டு வந்தது. 

இந்த சாம்பியன் திட்டம் என்பது ஒரு பசுத்தோல் போர்த்திய புலி. கல்விக் கூடங்களுக்கு அரசும் உதவி செய்ய வேண்டுமென்ற போர்வையில் பள்ளிகளையும் அவற்றின் பாட திட்டங்களையும் அரசின் கட்டுப் பாட்டில் கொண்டுவரும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டதுதான் சாம்பியன் திட்டம். அத்துடன் அரசின் உதவியை எதிர்பார்த்துத்தான் அடி எடுத்துவைக்க வேண்டுமென்ற ஆதிக்க உணர்வுடன் வந்ததே அந்தத் திட்டம். முதலில் உதவுவதுபோல் உதவி, பிறகு உதவிகளை படிப்படியாகக் குறைத்து முஸ்லிம்களின் கல்வி கற்கும் மற்றும் கல்வி நிலையங்களை அமைக்கும் முயற்சிகளை பலவீனப்படுத்தினர். அரசுக்குப் பண நெருக்கடி என்று பஞ்சப் பாட்டு பாடத் தொடங்கினர். இதன் ஒரு நடவடிக்கையாக சிறிய பள்ளிகளை பெரிய பள்ளிகளுடன் இணைக்க ஆரம்பித்தனர். இதன் விளைவாக தெருக்களில் அந்தந்த முஹல்லாக்களில் சிறு அளவில் அடிப்படையாக ஆரம்பிக்கப்பட்ட தொடக்கப் பள்ளிகள், மதரஸாக்கள் ஆகியவை இழுத்து மூடப்பட்டு பெரிய பள்ளிகளுடன் கலப்புக் கல்விக்காக இணைக்கப்பட்டன. பல இடங்களில் கல்வி நிலையங்கள் வெகுதூரங்களில் இருந்த பள்ளிகளுடன் இணைக்கப்பட்டதால் மாணவர்கள் போக்குவரத்து வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில் பயணித்துப் படிப்பதைவிட கடைகளில் எடுபிடி வேலை செய்வது நலம் என்கிற நிலைக்குத் தள்ளப் பட்டனர். பொருளாதார நெருக்கடி என்று காரணம் கூறி எப்படி நாளடைவில் கல்விக் கூடங்கள் குறைக்கப்பட்டன என்பதை கீழ்க் கண்ட அட்டவணை பட்டவர்த்தனமாக பறைசாற்றும்.


ஆதாரம்: தொடக்கப் பள்ளிகளின் பொதுக் கல்வி பற்றிய அறிக்கை 1928 to 1940. 

ஒன்றாம் வகுப்பில் சேர்ந்து சர்க்கரையும், தேன்மிட்டாயும் வகுப்பில் இருக்கும் அனைவருக்கும் கொடுத்து ( அந்தக் காலத்தில் பள்ளிக் கூடங்களில் சேர்த்துப் பெயர் எழுதினால், முதல் நாள் வகுப்புக்கு வரும்போதே ஒரு தட்டில் நாட்டுச் சர்க்கரை, அல்லது பனைமரத்துக் கருப்பட்டி, அல்லது தேன்மிட்டாய் கொண்டுவந்து வகுப்பில் இருக்கும் எல்லோருக்கும் கொடுப்பார்களாம். ) ஆர்வமுடன் படிக்க ஆரம்பித்த முஸ்லிம் மாணவர்கள் 100 பேர் என்று வைத்துக் கொண்டால் ஐந்தாம் வகுப்பு வரை படிப்பில் நிலைத்து இருந்தவர்கள் வெறும் 7 % தான். மீதி 93% பிள்ளைகள் படிப்பைத் தொடராமல் விட்டுவிட்டார்கள். இதற்குக் காரணங்கள் பல. 

வறுமை, சரியான வழிகாட்டுதல் இல்லாமை, பெண்கள் சற்று புஷ்டியாக வளர்ந்தாலே பள்ளிக் கூடத்தைவிட்டு நிறுத்துவது, அரபி & பாரசீக மொழிகளைப் படித்துக் கொடுக்க எல்லாப் பள்ளிகளிலும் போதிய முன்னேற்பாடு இல்லாமை, குடும்பத்தின் தேவைகள், சகோதரிகளின் சீதனத்துக்காக ஆண்களை இளவயதில் சம்பாதிக்க அனுப்புவது, விவசாயம், நெசவு, பாய் முடைதல் போன்ற கைத்தொழில்கள் கற்றுக் கொள்வது, உள்ளூரில் தொழில் செய்தால்தான் ஜீவனம் செய்ய முடியுமென்ற நிலைமை , பள்ளிக் கூடங்கள் வெகுதூரத்தில் அமைந்துவிடுவது, பாட நூல்களில் மார்க்கத்துக்கு முரணான கருத்துக்களால் மன வெறுப்பு, உலகக் கல்வி கூடாது என்கிற ஒரு சிலரின் பத்வா, போதிய இஸ்லாமியக் கல்வியைப் போதிக்கும் ஆசிரியர்கள் இல்லாமை, இப்படிப் பல குறைகள் – காரணங்கள் முஸ்லிம் குழந்தைகளின் படிப்பை மூடி போட்டு மூடிவிட்டன. தடைகளை உடைத்து வெளியே வந்து படிக்க வேண்டுமென்ற தாக்கமும் முயற்சியும் வெகுவாகக் குறைந்து போனது. வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர் நீச்சல் என்று மனதில் உறுதி இல்லாமல் போனது. 

முஸ்லிம்களுக்கு கல்வியில் ஆர்வமில்லாமல் போனதற்கு அன்று நிலவிய இன்னொரு சமூகக் காரணமும் உண்டு. அவர்கள் இயல்பிலேயே “திரைகடலோடியும் திரவியம் தேடும்" இரத்த அணுக்களுக்குச் சொந்தக்காரர்கள். நாகபட்டினத்தில் கப்பலைக் கொண்டு வந்து போட்டுக் கொண்டு மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் வருகிறவர்கள் வரலாம் என்று ஒரு வாசல் திறந்து விடப்பட்டு இருந்தது. ஊருக்கு ஊர் ஒலிபெருக்கி அறிவிப்புகள் என்று சொல்கிறார்கள். அந்தக் காலம், தூரக் கிழக்கு நாடுகளான மலேசியாவும் சிங்கப்பூரும் இன்னும் பர்மாவும் அண்மையில் இருக்கும் இலங்கை கூட பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்ததால் - இந்த நாடுகளில் வசித்த மக்கள் ஒரே ஆளுமையின் கீழ் வந்துவிட்ட காரணத்தால் இக்காலத்தில் உள்ளது போல விசா அது இது என்று பெரிதாக ஒன்றும் தேவைப்படவில்லை. எல்லோரும் பிரிட்டிஷ் குடியுரிமை பெறுவது இலகுவாக இருந்தது. இன்று கூட, அந்தக் காலத்தில் பிரிட்டிஷ் பாஸ்போர்ட் வைத்திருந்தவர்களின் பிள்ளைகள் தாங்களும் பிரிட்டிஷில் வாழ உரிமை உள்ளது என்று கேட்டு பிரிட்டனில் வாழ்வதைப் பார்க்கிறோம். “கட்டை விளக்குமாறு ஆனாலும் கப்பல் கூட்டும் விளக்குமாறு “வேண்டுமென்று வெளிநாட்டில் பொருளீட்டுபவர்களை உயர்த்திப் பார்க்கும் மனோபாவம் தென்புலத்து மக்களிடம் வளர்ந்தது. இதனால் தொடக்கப்பள்ளிகளில் படித்துக் கொண்டிருந்தவர்கள் கூட அக்கரைச்சீமைக்குப் போகத் தொடங்கினார்கள். அவர்களது பிள்ளைகளையும் அங்கேயே அழைத்துக் கொண்டார்கள். இதனால் பலரின் புத்தக மூட்டை பட்டாணிக் கடலைக் கடையைத் தேடிப் போனது. கடிதம் எழுதக் கூட அடுத்தவரை நாடும் அளவுக்குத்தான் இப்படிப் போனவர்களின் கல்வியறிவு இருந்தது. கைகளில் காசு ஏறினாலும் இவர்களின் மூளையில் ஒன்றுமே ஏறவில்லை. 

வடக்கிலோ தோல் தொழிற்சாலைகளில், பீடி சுற்றும் தொழிலில் வேலை கிடைத்தால் போதும் உள்ளூரில் , மனைவி மக்களுடன் சுகமாக வாழலாமென்ற மனோபாவம் வளர்ந்தது. கல்வி கற்று, அரசாங்கப் பதவிகளில் அமர வேண்டுமென்ற ஆர்வம் முழு முஸ்லிம்களின் இரத்த நாளங்களில் இடம்பெறாமல் போனது. விதி விலக்கான சிலர் வீதிக்கு விளக்காயினர். ஆனால் அந்த வெளிச்சம் போதவில்லை. 
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
ஆக்கம் : P. முத்துப் பேட்டை பகுருதீன் B.Sc;
உருவாக்கம்: இப்ராஹீம் அன்சாரி

The Influences... 27

அதிரைநிருபர் பதிப்பகம் | February 26, 2014 | , ,

Influences in every individual make or break one's life. Influences from the childhood are the keys which sets the future course of life. Every child from the birth has potential to live great life. It is based how the child got exposed to the environment and surroundings. External environments play key role in determining the limitation of people's thinking. Parents have to set great examples. The influence of grandparents, other family members and relatives are also impacting the behaviour of an individual. Then friends and acquaintances, peers are setting the standards in the future living. Most of the decisions are made by observing consciously or unconsciously how peers and friends are thinking and deciding. Children in the school age have influence of teachers and classmates. Actually characters are built in this age. 

Responsibilities of teachers ought to be great role model to the children. Children are emulating the teachers' behaviour and conducts. Moulding the characters of children to become independent thinkers and developing the skills of the children to become best citizens are important responsibilities of the teachers. An individual becomes a pilot due to the influences and a person becomes criminal due to the bad influences. The impacts of cinema and internet cannot be under estimated in one's thinking and behaviour

A person can become best and can have wonderful life by having right influences of good friends and peers whose few minutes talking will increase self estimation, confidence, positive attitude, motivation. But due to the bad acquaintances' influence, a person can have decreased self estimation, nil confidence, negative attitude, and no motivation at all. So beware of bad acquaintances and bad influences. So, identify and try your best to avoid the persons of bad influences.

Influences of groups and cults

A person is joining in a group or in a cult group because he/she wants some advantages and empowerment. Before joining in a group he/she might be a mean person. But after joining his/her sense of worth and well being become improved. This sense of strength is obtained at the cost of exposing the minds to groups' way of thinking and acting. That means he/she is controlled by the influence of the group. Before joining in any group, much thought is necessary.   The group can be a political party, religious group by different names, or a social service group. Those groups could influence us to get our time, attention, and money. Decision for giving our precious time, attention and money should be based on noble cause. 

Influence of news, rumours and freebies also play key roles in our thoughts and decision making. We have to make our intention to finding the facts and knowing the truth. People live in cities have different lifestyles and tastes in food, cloths, things they use, due to the influences of similar people and modern trends. But if we observe the people living in villages their life styles are as per the village surroundings.

A student chooses a career path due to the influences of fellow classmates or relatives. A person chooses a profession by the influence of his family business or by the influences of parents' or relatives' wishes.

Simply we can say that individuals are becoming and behaving the way they are because of various influences they are surrounded by.

Various influences
  • Influences of TV serial and cinema
  • Influences of technologies and fashion
  • Influences of virtual internet world
  • Influences of arts, music and books
  • Influences of local cultures and traditions
  • Influences of religions and religion based politics
  • Influences of politics and various groups
  • Influences of businesses and marketing world
Empowering oneself with self awareness and habit of truth finding and deliberately exposing to positive influences are the keys to great life.

May God almighty protect us from evils of bad influences and guide us to the right path.

B. Ahamed Ameen

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 31 5

அதிரைநிருபர் பதிப்பகம் | February 26, 2014 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..
சென்ற பதிவில் பெருமைகொள்வது பாவம் என்பது பற்றியும், அல்லாஹ்வின் கட்டளையையும், நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கையையும் சுட்டிக்காட்டி, நபி(ஸல்) அவர்களின் வாழ்விலிருந்து நடைபெற்ற சரித்திர முக்கியமான சம்பவத்தை நாம் அறிந்தோம் படிப்பினை பெற்றோம். இந்த வாரம் இஸ்லாமிய வரலாற்றில் நபி(ஸல்) அவர்களுக்கு பிறகு இஸ்லாமிய ஆட்சியை சிறப்பாக செய்த உத்தம தோழர்களான அபூபக்கர்(ரலி) அவர்கள் மற்றும் உமர்(ரலி) அவர்கள் இருவரும் நபி வழியில் பெருமை பாராட்டாதவர்களாக வாழ்ந்துள்ளார்கள் என்பதை அவர்களின் வாழ்வில் நடைபெற்ற முக்கியமான இரு சம்பவங்களைப் பார்ப்போம், படிப்பினை பெறுவோம்.

இவ்வுலகில் சிலர் பெருமை இல்லாமல் வாழ முயற்சி செய்கிறார்கள். பெருமையற்ற வாழ்வை விரும்புகிறார்கள். ஆனால் அப்படிப்பட்டவர்கள் நினைக்கிறார்கள் அவர்கள் பெருமைபடவில்லை என்று. ஆனால் அவர்களின் வாழ்வில் ஆங்காங்கே அவர்களின் பெருமை வெளிப்படுவதை அவர்களை அவதானித்து வருபவர்களால் அறியப்படுகிறது. பெருமை நாம் எப்போது, எங்கு எதில் பெருமைபடுகிறோம் என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிந்துகொள்வது மிக மிக அவசியம். காரணம் நாம் முந்தைய பதிவில் சுட்டிக்காட்டிய இறைவசனங்கள், நபி மொழிகள் வீண் பெருமை அடிப்பது பற்றி வன்மையாக எச்சரிக்கை செய்துள்ளது. 

மேலும் நமக்கு எந்த ஒரு செயல் இவ்வுலகில் நடந்தாலும் அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் என்று சொல்லுவதை இஸ்லாம் நமக்கு கற்றுத் தந்துள்ளது. அல்லாஹ் எனக்கு எதை நாடினாலும் அது என் நன்மைக்காக என்று அவனை புகழ்வதின் மூலம் நாம் பெருமைபடவில்லை என்பதை நாம் உள்ளத்தால் உறுதிபடுத்திக்கொண்டால், நிச்சயம் வெளி உலகிற்கு நாம் பெருமை அடிப்பவர்களாக தெரியமாட்டோம். இது தான் நபி(ஸல்) அவர்களின் வாழ்வு மற்றும் நம்முடைய முந்தைய சமுதாயமான நபித்தோழர்களின் வாழ்வின் சம்பவங்கள் நமக்கு உணர்த்துகிறது.

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.  இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் 'அள்பா' என்று அழைக்கப்பட்ட ஒட்டகம் ஒன்று இருந்தது. அது பந்தயத்தில் எவராலும் வெல்ல முடியாத (அளவுக்கு விரைவாக ஓடக்கூடிய)தாக இருந்தது. (ஒரு பயணத்தின் போது) கிராமவாசி ஒருவர் தம் (ஆறு வயதுக்குட்பட்ட) வாட்டசாட்டமான ஒட்டகத்தின் மீது வந்து நபிகளாரின் அந்த ஒட்டகத்தை முந்திச் சென்றார். இது முஸ்லிம்களுக்கு மிகுந்த மன வேதனையை அளித்தது. முஸ்லிம்கள் 'அள்பா பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது' என்று கூறினர். (இதை அறிந்த) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'உலகில் உயர்ந்துவிடுகிற எந்தப் பொருளாயினும் நிச்சயமாக (ஒரு நாள்) அதைக் கீழே கொண்டுவருவதே அல்லாஹ்வின் நியதியாகும்' என்று கூறினார்கள். புகாரீ 6501. 

எந்த ஒரு மனிதனோ அல்லது ஒரு பொருளோ உலகில் எந்த ஒரு உயர்ந்த நிலைக்கு சென்றாலும், என்றாவது ஒரு நாள் அந்த உயர்ந்த நிலை கீழே விழும் என்பது அல்லாஹ்வின் நீதியில் ஒன்று என்ற அருமையான தத்துவத்தை எடுத்துரைத்துள்ளார்கள். இதற்காகத்தான் நபி(ஸல்) அவர்களும், சத்திய சஹப்பாக்களும் தனக்கு வெற்றி வந்தாலும், தோல்வி வந்தாலும் ஒரு துளி அளவு பெருமைபடாமல் அல்லாஹ்வை புகழ்ந்து அவனுக்கு நன்றி செலுத்துபவர்களாக வாழ்ந்துள்ளார்கள். மேல் குறிப்பிட்ட ஹதீஸிலிருந்து நிறைய படிப்பினை உள்ளது.

இவ்வுலகில் நாம் எந்த ஒரு உயர்ந்த நிலைக்கு சென்றாலும், நாம் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அந்த உயர்ந்த நிலை நிலைக்காது என்ற எண்ணம் நம் மனதில் வந்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்திக்கொண்டே இருக்க வேண்டும். நான் இன்று ஒரு அலுவலகத்தில் மேனேஜராக நல்ல நிலையில் உள்ளேனா, இது என்னுடைய திறமைக்கோ அல்லது, படிப்புக்கோ கிடைத்த்து அல்ல, இது அல்லாஹ் எனக்கு கொடுத்த்து அவனுக்கே எல்லா புகழும் என்ற எண்ணம் நம் மனதில் ஒவ்வொரு வினாடியும் எழ வேண்டும். என்றைக்கு அந்த மேலாளர் பதவி பறிபோகும் என்பதை தீர்மானிப்பவன் அல்லாஹ் ஒருவனே. 

இன்று நான் நன்றாக இருக்கிறேன் அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் என்று உளத்துய்மையுடன் மனதில் நினைவூட்டிக்கொண்டே இருக்க வேண்டும். அல்லாஹ்வின் உரிமைகள் கடமைகள் நீதிகளில் ஒன்று “நாம் பெருளாதாரத்தாலும், பதவிகளாலும், அந்தஸ்தாலும் உயர்ந்தால் நிச்சயம் ஒரு முறையேனும் அவைகளிலிருந்து கீழ் நிலைக்கு கொண்டுவரப் படுவோம்.’ இது நாம் நல்லவனாக இருந்தாலும் சரி, கெட்டவனாக இருந்தாலும் சரி. இவ்விசயம் ஒவ்வொரு மனிதனுக்கும் நடந்தே தீரும்.

நான் தான் அறிவாளி, நான் தான் பலசாலி, நான் திறமைசாலி, நான் சிறந்த மார்க்க பிரச்சாரம் செய்பவன், நான் தான் இந்த சமுதாயம் காக்கும் இயக்கம் என்று பெருமை சொல்லியவர்களுக்கு மத்தியில் அல்லாஹ் சில நாட்களிலோ அல்லது சில மாதங்களிலோ வேறு ஒருவரையோ அல்லது ஒரு கூட்டத்தையோ அவர்களுக்கு மாற்றாக வைத்திருக்கிறான், அவர்களை இவ்வுலகிற்கு வெளிகாட்ட வைத்து பெருமையடித்துக் கொண்டவர்களை முகவரியற்றவர்களாக மாற்றி உள்ளான்.

மேல் சொன்ன ஹதீஸின் சம்பவத்தில் நம்மை நாம் இணைத்து கொஞ்சம் ஒப்பீடு செய்து பாருங்கள். நமக்கு ஆங்கிலம் பேசத்தெரியும், ஆனால் ஒரு முக்கிய அலுவலக கருத்தரங்கில், ஏதோ ஒரு தடுமாற்றம், ஆகவே நம்முடைய ஆங்கிலத்தை ஒருசிலர் விமர்சித்து விட்டார்கள். ஆனால் நமக்கு தெரியும் நாம் தடுமாறினோம் என்று ஆனால் தடுமாற்றம் உண்மை என்பதை உணர்ந்து பணிந்து செல்வதை காட்டிலும் ஏதாவது ஒரு சில சமாளிப்பு காரணங்களைச் சொல்லி நம்முடைய ஆங்கிலத்தில் தவறில்லை என்று நம்மை நாம் நியாயவான்களாக காட்டிக் கொண்டு பெருமையடிக்கவே விரும்புகிறோம். இது தான் எதார்த்தத்தில் நடைபெறும் உண்மை. 

இதனை யாரும் மறுக்க முடியாது. தவறு என்று சுட்டிக் காட்டப்பட்டு விட்டால் நாம் அதனை ஏற்றுக்கொள்ள விரும்பாவிட்டாலும், இது அல்லாஹ்வின் நீதியில் உள்ளது. இது நடந்தே தீரும் நாம் என்னதான் பூசி முழுகினாலும் நாம் செய்வது மட்டுமே சரி என்ற அகம்பாவம் பெருமை ஒரு நாள் நம்மை அந்த பெருமைக்கு துளி அளவும் பெருத்தமில்லாதவனாக்கி விடும் என்பது அல்லாஹ்வின் கட்டளை. நாம் எந்த நிலையில் இருந்தாலும் அல்லாஹ்வை புகழ்வோம். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். அல்ஹம்துலில்லாஹ்.

நபி(ஸல்) அவர்கள் எப்படி வாழ்ந்தார்களோ, அது போல் கண்ணியமிக்க, கவுரவமிக்க, அவர்களின் சத்தியத் தோழர்கள் வாழ்ந்தார்கள். உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்கள் ஒரு முறை முஹம்மது இப்னு ஸலமா (ரஹ்) என்று ஒரு தாபியீனுடைய தோட்ட்த்திற்கு செல்கிறார்கள். அப்போது உமர்(ரலி) அவர்கள் “முஹம்மது இப்னு ஸலமாவே என்னுடைய ஆட்சியை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். உடனே முஹம்மது இப்னு ஸலமா(ரஹ்) அவர்கள் “உங்களுடைய ஆட்சியை நான் விரும்புவது போல் நல்லாட்சியாக பார்க்கிறேன், உங்களுக்கு யாரெல்லாம் நல்லவை நாடுகிறார்களோ, அவர்களுக்கும் அப்படித்தான் பார்க்கிறார்கள்” என்று சொல்லிவிட்டு “நீங்கள் மக்களிடம் ஜகாத் பணத்தை வசூலிப்பதில் கடுமையாக உள்ளீர்கள், அதனை சரியான முறையில் பயன்படுத்துவதில் பேணுதலாக உள்ளீர்கள், ஆனால் நீங்கள் கொஞ்சம் ஆட்சியில் சறுகுவீர்கள் என்றால் நான் உங்களை நேராக்குவோம் அமீருள் முஃமினீன் அவர்களே” என்றார்கள். 

தன்னுடைய ஆட்சியில் தவறே செய்யாத அமீருல் முஃமினீன் உமர்(ரலி) அவர்கள் இவைகளை பொறுமையாக செவியுற்றார்கள், கோபம் கொள்ளவில்லை, பெருமை கொள்ளவில்லை. ஆனால் உமர்(ரலி) அவர்கள் சொன்னார்கள் “ நான் தவறு செய்தால், நான் அநீதியாக ஆட்சி செய்தால், என்னை நேர்படுத்தும் சமுதாயத்தோடு வைத்த அந்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்,” என்று சொன்னார்கள். சுப்ஹானல்லாஹ்… என்ன ஒரு வார்த்தை பாருங்கள். மிகப்பெரும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் தலைவர், நபி(ஸல்) அவர்களுக்கு பிறகு நீண்ட காலம் நேர்மையான ஆட்சி புரிந்தவர் என்று வரலாற்றில் அறியப்பட்ட அமீருள் முஃமினீன் உமர்(ரலி) அவர்களிடம் இருந்த பணிவு, அடக்கம், விமர்சன்ங்களை ஏற்றுக்கொள்ளும் மனோபக்குவம் இன்றைய ஆட்சியாளர்களிடம் உள்ளதா? குறைந்த பட்சம் இன்றைய முஸ்லீம் தலைவர்களிடம் உள்ளதா? நம்மை விமர்சிப்பவர் நம்மை சுற்றி இருப்பது நாம் நல்லவை மட்டும் செய்வதற்கு அவர்கள் ஒரு தூண்டுகோள், நாம் நம்முடைய தவறுகளிலிருந்து திருத்திக்கொள்வதற்கு நம்மை சுற்றியுள்ளவர்களின் விமர்சன்ங்களே காரணம் என்று அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லி உமர்(ரலி) அவர்களுடைய மனோபக்குவம் என்றைக்கு நம் சமுதாய தலைவர்களுக்கு வருமோ?

ஒரு முறை அபூபக்கர்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஒருவர் அபூபக்கர்(ரலி) அவர்களை மிகவும் உயர்த்தி பாராட்டி விடுகிறார்கள். உடனே அபூபக்கர்(ரலி) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள் “யா அல்லாஹ் இவர்களின் பாராட்டை வைத்து என்னை தண்டித்துவிடாதே, அவர்கள் தெரியாத என்னுடைய பாவங்களை நீ மன்னித்தருள்வாயாக, அவர்கள் என்னை இப்படி சிறந்தவர் என்று பாராட்டுகிறார்கள், இதைவிட சிறந்தவனாக என்னை ஆக்குவாயாக.” என்று அபூபக்கர் சித்தீக்(ரலி) அவர்கள் அல்லாஹ்விடம் து ஆ செய்தார்கள். பெருமை இல்லை, அகம்பாவம் இல்லை, ஆனவம் இல்லை, பாராட்டு கொஞ்சம் என்ற கோபம் இல்லை, ஆனால் அந்த மாமனிதரிடம் பணிவு இருந்தது, நியாய தீர்ப்பு நாளின் அதிபதியின் மேல் உள்ள அச்சம் இருந்தது. அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள், அவனை புகழ்ந்தார்கள். புகழுக்குரியவன் மனிதன் அல்ல அல்லாஹ் ஒருவன் மட்டுமே என்பதை இவ்வுலகிற்கு எடுத்துரைத்த நபி(ஸல்) அவர்களின் வழியில் உள்ளோம் என்பதை இந்த மனித சமுதாயத்திற்கு நினைவுறுத்தினார்கள் அபூபக்கர்(ரலி) அவர்களும் அவர்களைப் போன்ற சத்திய சஹாப்பாகளும்.

உத்தம நபி(ஸல்) அவர்கள் மற்றும் அவர்களின் அருமைத் தோழர்களின் வாழ்வின் சம்பவங்களை அறிந்தபின்பு நம்முடைய வாழ்வு எப்படி உள்ளது என்பதை சிந்திக்க வேண்டும். நபி(ஸல்) அவர்களும், சத்திய சஹாப்பாக்கள் இந்த தீணுக்காக செய்த எண்ணற்ற தியாகங்களை நினைத்துப்பார்த்தால், நான் இவ்வுலகில் இஸ்லாத்திற்காக செய்யும் சேவை ஒரு தூசுக்குக்கூட சமமாகுமா? என்பது கேள்வி குறியே.

ஒருவனுக்கு ஏதோ ஓர் உதவி செய்துவிட்டாலோ, அல்லது ஒருவனை இஸ்லாத்திற்கு அழைத்து வந்தாலோ, ஒருவனுக்கு திருக்குர்ஆனை பரிசளித்தாலோ, ஜக்காத், ஃபித்ரா வினியோகம், நிவாரண உதவி, மருத்துவ உதவி, கல்வி உதவி என்று இப்படி உதவிகள் செய்து அவைகளை இணையதளங்களிலும், வீதிக்கு வீதி ஃபிளக்ஸ் பேனர்களிலும் அவ்வுதவிகளை பட்டியலிட்டு, புகைப்பட்த்துடன் போட்டு பெருமை கொள்பவர்கள், நபி(ஸல்) அவர்களும், நபித்தோழர்களும் எப்படி பெருமையின்றி வாழ்ந்தார்கள் என்பதை படித்து உணர வேண்டும், திருந்த வேண்டும்.

நான் இன்று இணைவைப்பில் இருந்து மீண்டும் அல்லாஹ்வை வணங்கும் நல்லடியானாக உள்ளேன் இதற்கு காரணம் அல்லாஹ் ஒருவனே, அவனுக்கே எல்லா புகழும் அல்ஹம்துலில்லாஹ். நான் இன்று நிறைய சம்பாதிக்கிறேன், அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். நான் நோய் இல்லாமல் வாழ்கிறேன் அல்ஹம்துலில்லாஹ். இந்த சமுதாயத்திற்காக சேவை செய்கிறேன் இவ்வாறு செய்யத்தூண்டிய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும், நான் நிறைய தர்மம் செய்கிறேன் இது எனக்கு அல்லாஹ் கொடுத்தது அல்ஹம்துலில்லாஹ், பெருமைக்குரியவன் அல்லாஹ் ஒருவனே நான் பெருமைக்குரியவன் அல்ல என்ற எண்ணங்கள் நம் அனைவரின் உள்ளங்களில் வர வேண்டும். இவ்வாறான எண்ணங்கள் நிச்சயம் நம்முடைய ஒவ்வொரு செயல்பாடுகளிலும் ஓர் பணிவு ஏற்படும். ஆனவத்தோடும், அகங்காரத்தோடும் வாழும் மனிதன் எவரும் இவ்வுலகில் வெற்றி பெற்றதாக ஒரு சிறப்பான வரலாற்றை நாம் காண்பது மிக மிக அரிது. பணிவோடு வாழும் மனிதனுக்கு அல்லாஹ் தரும் வெற்றி இவ்விலகிலும் மறுவுலகிலும் நிச்சயம் கிடைக்கும். இன்ஷா அல்லாஹ்.

தன் வாழ் நாட்களில் பெருமையடிக்காத நபி(ஸல்) அவர்கள் மற்றும் அவர்கள் வழியில் வாழ்ந்த சத்திய சஹாப்பாக்களின் வாழ்வில் நிறைய படிப்பினைகள் உள்ளது. யா அல்லாஹ்! எங்கள் அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.
தொடரும்...
M.தாஜுதீன்

பயன் தரும் பன்மொழித் தொடர்பு – 4 16

அதிரைநிருபர் பதிப்பகம் | February 25, 2014 | ,

ஒரே நிறுவனத்தில், அல்லது அடுத்தடுத்த பிரிவுகளில் பணியாற்றுவோர், அவரவர் பண்பாட்டுப் பழக்க வழக்கங்களை மிக விரையில் தெரிந்துகொள்ள, நடைமுறைப் படுத்த வாய்ப்புகள் ஏராளம். அவரவரின் மொழியைவிட, பண்பாட்டுப் பழக்கவழக்கங்களை நாம் வெளிப்படுத்தும்போது, அவர்களின் வியப்பு, கண்களின் மூலம் வெளிப்பட்டு, சொற்களில் பாராட்டாக வந்து வீழும்.

பொதுவாக அரபுகள் மற்றவர்களுடன் கை குலுக்கும்போது நன்றாக அழுத்திப் பிடிப்பார்கள்.  அவர்களிடம் நாமும் அதே முறையைப் பின்பற்றிக் கைலாகு செய்யும்போது, அப்போதுதான் அவர்களின் முக மலர்ச்சியைக் காணலாம்.  பிடி இருக்கும் அளவுக்குப் பிரியமும் மிகுந்து வெளிப்படும்.  அவர்களின் பழக்க வழக்கங்களை ஊன்றிக் கவனித்து, அவர்களைப் போன்றே, அவர்களின் முன்னால் நாம் வெளிப்படுத்தினால், அவர்களின் உண்மையான முக மலர்ச்சியை அப்போது காண முடியும்!  இந்தியா, பாக்கிஸ்தான் முதலிய நாட்டவர்கள், இரு கைகளைக் கொண்டு ‘முஸாஃபஹா’ செய்வார்கள்.  அதுவும், பட்டும் படாமலும், ஒப்புக்காகச் செய்வது போல் இருக்கும்.  இறுக்கமாகச் செய்யும்போதுதான் நட்பு வலிமை பெறும்.

ஒவ்வொரு மொழிக்கும் இருப்பது போல அரபிக்கும் ‘லஹ்ஜா’ (Style) உண்டு.  அது நாட்டுக்கு நாடு வேறுபடும்.  நல விசாரிப்பைப் பொருத்தவரை, சஊதிகள், கத்தரிகள், குவைத்திகள், "கைஃப் ஹாலக்?” என்பதை இலகுவில் புரிந்து கொள்வார்கள்.  அதே அரபி இனத்தவர்களான லெபனான், சிரியா, இராக், ஃபலஸ்தீன் ஆகிய நாட்டவர்கள், அதே நலன் விசாரிப்பை, “கீஃப் ஹாலேக்?” என்று நீட்டுவார்கள்.  எகிப்தியர், “ஜெய் ஹாலேக்?”  அல்லது  “ஜெய்யக்?” என்பார்கள்.  

அவர்களின் அடுத்த நாடான சூடான் நாட்டவர், அதே முறையினை ஒன்றல்ல, பலமுறை கேட்டு, அதிலிருந்து விடுபட ஒரு மூன்று நிமிடமாவது ஆகும். அந்த அளவுக்கு இருக்கும் அவர்களின் விசாரிப்பு!  சூடானிகள் தமக்குள் நலன் விசாரிப்பைச் செய்யத் தொடங்கும் முன்பு, shake hand செய்வதற்கு முன்பு, தமது வலக் கையை மற்றவரின் நெஞ்சுக்கும் தோள் புஜத்திற்கும் இடையில் வைப்பார்கள்.  மேலதிகமாக ஒரு shake hand.  அதே முறையை நாம் கடைப்பிடித்தால், நம்மை மெச்சுவார்கள்.  எல்லாவற்றுக்கும் முதலாவதாக, “அஸ்ஸலாமு அலைக்கும்” என்ற முகமன் கண்டிப்பாக இருக்கும்.  

அரபியல்லாத பிற நாட்டவர்கள் சஊதி மற்றும் பிற அரபு நாடுகளில் வேலை பார்க்க வந்தவர்கள் இஸ்லாம் மார்க்கம் அதன் தூய வடிவில் பின்பற்றப்பட்டும், உபதேசம் செய்யப்பட்டும், இஸ்லாமிய வாழ்வு நெறியின் அருமையை உணர்ந்து, இஸ்லாத்தைத் தழுவுகின்றார்கள்.  அதைத் தொடர்ந்து, முழுமையான வாழ்க்கை நெறியைப் புரிந்து வாழத் தொடங்குகின்றார்கள்.

‘தஅவா’ சென்டர்கள் வழியாக இஸ்லாமிய அறிமுகம் கிடைக்கப்பெற்று, முறையாக அதைத் தன் வாழ்க்கை நெறியாக்கிக்கொண்ட பலரை உண்மையான முஸ்லிம்களாகப் பார்த்து வியந்துள்ளேன் நான்.  முஸ்லிமாக மாறிச் சில மாதங்களே ஆன ‘அஹ்மத்’ என்ற பிலிப்பைன் நாட்டுச் சகோதரர், அந்த வாரப் பயிற்சிக்காக வந்தவர் கையில் கட்டுப் போட்டவராக வந்தார்!  “என்ன நடந்தது?” என்று விசாரித்தபோது, “Every thing from Allah” என்று பதிலளித்து, என்னை வியப்பில் ஆழ்த்தினார்!

அரபு நாட்டு வாழ்க்கையால், நாம் பல பயன்களைப் பெற முடிந்தது. இஸ்லாம், ஈமான், ஓரிறை நம்பிக்கை போன்ற கொள்கைகள் அவற்றின் எதார்த்த நிலையில் பின்பற்றப் பெற்றதை நாம் கண்கூடாகக் காண முடிந்தது அங்கே.  இஸ்லாத்தின் அறிமுகம் கிடைத்து, அதன் மீது ஆர்வம் உண்டாகி, ஈடுபாட்டுடன் அதன் கொள்கைகளைக் கற்று, அல்லாஹ்வின் நேசத்திற்கு உரியவர்களாக மாறிய ஆயிரக் கணக்கானோரை அங்கே காண முடிந்தது.

1977 ஆம் ஆண்டில் சஊதிக்கு வந்து, கடினமான பணியில் அமர்த்தப்பட்டு, “இது நமக்கு லாயக்கில்லை;  இரண்டாண்டு ஒப்பந்தம் முடிந்தவுடன் இந்தியாவுக்குத் திரும்பிவிட வேண்டியதுதான்” என்று எண்ணிய எனக்கு, முப்பதாண்டுகள் எப்படிக் கழிந்தன என்பதை மீள்பார்வை செய்து பார்த்தபோது, ‘இது அல்லாஹ்வின் ஏற்பாடு’ என்பதை மட்டும் எனக்குள் கூறி, ஆறுதல் அடைந்தேன்.

அரபு மொழி, அரபுகளின் பண்பாடு ஆகியவற்றில் ஆர்வம் கொண்டு இருந்த உண்மை நிலையால், அந்த நாடு என் இதயத்தில் இடம் பிடித்ததை இன்றும் உணர்ந்து பார்த்து, நெஞ்சார்ந்த நன்றியை இறைவனுக்குக் கூறி, ஆறுதல் அடைகின்றேன்.

அல்ஹம்து லில்லாஹ்!

அதிரை அஹ்மது

கண்கள் இரண்டும் - தொடர் - 26 11

அதிரைநிருபர் பதிப்பகம் | February 24, 2014 | ,


அதே நேரத்தில் உடல் முழுவதையும் தானம் செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை. ஏனெனில் உடல் தானம் என்பது கண் தானத்தைப் போன்றதல்ல. உடல் தானம் செய்யும் மனிதனின் உடலிலுள்ள பாகங்களை எடுத்து பிற மனிதர்களுக்குப் பொருத்துவதில்லை. மாறாக உடலின் ஒவ்வொரு பாகத்தையும் எடுத்து மருத்துவக் கல்வியின் பாடத்திற்காகவும் ஆய்வுக்காகவுமே பயன்படுத்தப் படுகின்றன. 

கண் தானத்தின் போது கண்ணோ மற்ற உறுப்புகளோ சிதைக்கப்படுவதில்லை. இறந்தவரின் கண்ணை எடுத்து அடுத்தவருக்குப் பொருத்தப்படுகின்றது. ஆனால்உடல் தானம் செய்தவரின் உறுப்புகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக சிதைக்கப்படுகின்றன. இதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை. 

கொள்ளையடிப்பதையும் ஒருவரின் அங்கங்களை (உயிருடன் இருக்கும் போதோ அல்லது இறந்த பிறகோ) சிதைப்பதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.   அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி), நூல் : புகாரி 2474, 5516 

ஒருவருடைய உடலைக் குளிப்பாட்டும் போது அவ்வுடலில் பல குறைபாடுகள் இருக்கலாம். உலகில் வாழும் போது அந்தக் குறைபாடுகளை அவர் மறைத்து வாழ்ந்திருக்கலாம். உடலைக் குளிப்பாட்டுபவர் அதைக் காண வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு காண்பவர் அந்தக் குறைபாடுகளை வெளியில் சொல்லாமல் மறைப்பது மிகவும் அவசியமாகும். அவர்தான் இறந்துவிட்டாரே என்று அவரின் குறைகளை பேசித்திரிவதைவிட ஈனச்செயல் வேறு ஒன்றும் இறுக்க முடியாது.

'ஒரு முஸ்லிமைக் குளிப்பாட்டுபவர் அவரிடம் உள்ள குறைகளை மறைத்தால் அவரை அல்லாஹ் நாற்பது தடவை மன்னிக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ராஃபிவு(ரலி) நூல்கள்: பைஹகீ 3/395,ஹாகிம் 1/505, 1/516 தப்ரானி 1/315 

ஒரு மனிதரின் வெட்கத்தலம் அவர் இறந்த பின்னரும் மறைத்து பாதுக்காக்கப்பட வேண்டும். உடல் தானம் செய்தால் அந்த உடலை மற்றவர்கள் அன்றாடம் நிர்வாணமாகக் காணும் நிலை ஏற்படுவதினால் இஸ்லாத்தில் உடல் தானம் தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

மருத்துவ படிப்புக்கு உடல் தேவைப்படும் என்ற காரணத்தால் இதை இஸ்லாம் அனுமதிக்காது. மனித உடல் போன்ற மிருகங்களை  வைத்து மருத்துவப் படிப்புக்கு பயன்படுத்த முடியும். 

நவீனமான காரியங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளைப் பொருத்த வரை நேரடியாக திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் கூறப்பட்டிருக்காது. ஆயினும், மறைமுகமாக ஏதேனும் தடை இருக்கிறதா? எனப் பார்க்க வேண்டும். தடை காணப்பட்டால் அதைக் கூடாது என அறியலாம். கண்தானம், இரத்ததானம், கிட்னி தானம் போன்ற காரியங்கள் கூடாது என்பதை மறைமுகமாகக் கூறும் எந்த ஒரு ஆதாரமும் நாமறிந்த வரை கிடைக்கவில்லை. எதிர்ப்பாளர்கள் சுட்டிக் காட்டப்படும் ஆதாரமும் ஏற்புடையதாக இல்லை. மார்க்கம் தடை செய்யாத ஒன்றை தடை செய்ய நமக்கு எந்த அதிகாரமும் நமக்கில்லை. 

அடுத்தது நமது உறுப்புக்கள் அமானிதம் என்று கூறுகிறீர்கள். அமானிதம் தான். ஆனால், இந்த அமானிதத்தின் பொருள் வேறாகும். நான் உங்களிடம் ஒரு பொருளை அமானிதமாகத் தந்தால் அதை நீங்கள் உபயோகிக்கக் கூடாது. அதை அப்படியே திருப்பித் தர வேண்டும். ஆனால், அல்லாஹ் அமானிதமாகத் தந்த கண்களால் நாம் பார்க்கிறோம். காதுகளால் கேட்கிறோம். இன்னும் மற்ற உறுப்புகளையும் பயன்படுத்துகிறோம். அமானிதம் என்பதற்கு மற்ற அமானிதம் போன்று பொருள் கொண்டால் இவையெல்லாம் கூடாது எனக் கூற வேண்டும். 

இறைவன் தடை செய்த காரியங்களில் பயன்படுத்தக் கூடாது என்ற ஒரு நிபந்தனையுடன் அதைப் பயன்படுத்தலாம். இந்த அடிப்படையில் தான் அது அமானிதமாகிறது. நம்மிடம் அல்லாஹ் காசு பணத்தைத் தருகிறான் என்றால் அதுவும் அமானிதம் தான். அதாவது அதை நாமும் பயன்படுத்தலாம். மற்றவர்களுக்கும் கொடுக்கலாம். தவறான வழியில் மட்டும் செலவிடக் கூடாது. 

அதுபோல் தான் நமது உறுப்புக்களை நாமும் பயன்படுத்தலாம். நமக்கு எந்தக் கேடும் வராது என்றால் பிறருக்கும் கொடுக்கலாம். தப்பான காரியங்களில் அவற்றைப் பஸ்ன்படுத்தக் கூடாது. இது தான் அமானிதத்தின் பொருள். குர்ஆனினும், ஹதீஸிலும் தடை செய்யப்படாதவற்றைத் தவறா? சரியா? எனக் கண்டுபிடிக்க நமது மனசாட்சியையே அளவுகோலாகக் கொள்ள நபி(ஸல்) அனுமதியளித்துள்ளனர். (அஹ்மத் 17320) உங்களுக்கு மிக விருப்பமான ஒருவர் ஆபத்தான நிலையில் இருக்கிறார். அவருக்கு இன்னொருவரின் இரத்தமோ, கிட்னியோ வைக்கப்பட்டால் தான் பிழைப்பார். இந்த நிலையில் உங்களுக்கு நெருக்கமானவர் என்றால் உங்கள் மனசாட்சி அதைச் சரி காணும். 

பெற்றுக் கொள்வதை மட்டும் சரி கண்டு விட்டு கொடுப்பதைச் சரி காணாமல் இருந்தால் அது நேர்மையான பார்வை இல்லை. மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட காரியத்துக்கு இந்த அளவுகோலைப் பயன்படுத்துமாறு நாம் கூறுவதாக நினைக்க வேண்டாம். மார்க்கத்தில் தடுக்கப்பட்ட ஒன்றை நமது மனசாட்சி சரி கண்டாலும் அது தவறு தான். 

மார்க்கத்தில் தடுக்கப்படாத ஒன்றை நமது மனசாட்சி சரி கண்டால் அது சரியான அளவுகோல் தான் என்பதே அந்த நபிமொழியின் கருத்தாகும். ஆக கண்தானம் செய்வதை நாம் ஒவ்வொருவரும் வலியுறுத்துவோம் கண்தானம் செய்ய விருப்பமுள்ளவர்களும் பெற விருப்பமுள்ளவர்களும் கீழே உள்ள மருத்துவ மனைகளை அனுகலாம்

கண்வங்கிகளின் விபரங்கள்

இத்துடன் கண்தானம் தொடர்கின்றது அடுத்த தொடரிலும் கண்ணை தானத்தை இஸ்லாம் அனுமதிக்கின்றது என்பதற்காக சில சில குர்ஆனுடைய வசனங்களையும் ஹதீஸ்களையும் பார்ப்போம்
(தொடரும்)
அதிரை மன்சூர்

thanks: http://onlinepj.com/kelvi_pathil/matru_matha_kelvi/kan_thanam/Intro.php

என் இதயத்தில் இறைத்தூதர் ! - 1 9

அதிரைநிருபர் பதிப்பகம் | February 23, 2014 | , , , ,

பிஸ்மில்லாஹ்ஹிர்ரஹ்மானிர்றஹீம்...

அல்லாஹ் நமக்கு வழங்கிய அருட்கொடையாம் அல்குர்ஆனும், அண்ணல் நபியும் வழங்குகின்ற அறிவுரைகள், எச்சரிக்கைகள், சான்றுகள் நற்செய்திகள் இவைகள் எல்லோமும் இவ்வுலகிலும், மறுமை வாழ்விலும் நாம் வாழ்வாங்கு வாழ வகுக்கும் உன்னத மருந்தென்றால் மிகையல்ல !

எந்த ஒரு துறையாக இருக்கட்டும், அந்த விஷயமாக அல்லது நடைமுறையாக உள்ளவைகளுக்கு, எப்படியெல்லாம் நம் வாழ்க்கைக்கு பயன் உள்ளதை மட்டுமே கொண்ட அமுத ஊற்றுக்களே அல்குர்ஆனும், அண்ணல் நபிகளின் ஹதீஸ் என்னும் அமுத மொழிகளும் அன்றோ !

அவ்வாறுள்ள மொத்த விஷயங்களையும் - அல்லது தனித் தனியேயான எந்த ஒரு விஷயத்தையும் எடுத்து, அதனை திருக்குர்ஆன் ஒளியிலும், ஹதீசின் வழியிலும் ஆராய்ந்தால், நாம் மெய்சிலிர்க்காமல் கண்கள் பனிக்காமல் உள்ளம் உருகாமல் இருக்க முடியாது. மூக்கின் மேல் விரல் வைத்து அசைபோடாமல் இருக்க இயலாது.

உதாரணமாக பெண் / பெண் குழந்தை / பெண்மக்கள் / தாய் / மனைவி / சகோதரி என்ற வரையறுக்குள் மட்டும் நின்று அந்தப் பெண்களைப் பற்றி திருக்குர்ஆனில் ஏகன் அல்லாஹ்வும், அவனுடைய இறுதித் தூதர் அண்ணல் நபிகளும் எப்படி அறிவுறுத்தி, நாம் அவர்களின் சொற்படி எவ்வாறு நடக்க வேண்டும் என கட்டளையிட்டுள்ளார்கள். அந்த பெண்கள் மூலம் நாம் எவ்வாறு சுவர்க்கம் அடைய இயலும் என்பதை விளக்கியுள்ளார்கள் என்பன போன்றவைகளை அறியும் போது, உண்மையில் நம் பெண்கள், முஸ்லிம் பெண்கள் மிக அதிகமாக கொடுத்து வைத்தவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். 

பாவம் ! இந்நேரத்தில், பிறமதக் கோட்பாடுகளைப் பின்பற்றும் பெண்களின் பல்வேறு வகையான நிலைகளில் உள்ள அவலங்களை எண்ணி, பரிதாபம் மட்டுமே காட்ட இயலும் ! இறைவன் நாடினால் அந்த பெண்களும் இஸ்லாத்தை தங்களது வாழ்வியலாக ஏற்று, கரை சேர்ந்தால் - வெற்றி அவர்களுக்கும் தான் !

எனவே, இஸ்லாத்தின் கோட்பாடு பற்றி பெண்களின் அந்தஸ்து பற்றி அறியும் முன் பிறமத பெண்களுக்கு ஒரு வேண்டு கோள் ! "பிறமத சகோதரிகளே... ஏகன் அல்லாஹ்வும், அண்ணல் நபிகளும் கற்றுத் தந்த நடைமுறைகளையும், பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள், அவர்களுக்குரிய முக்கியத்துவங்கள் அனைத்தையும் - பிறமதக் கோட்பாடுகளை பின்பற்றும் பெண்கள் அங்கிருக்கும் அடிமைத்த சூத்திரங்கள், பெண்ணுரிமை, பெண்மைக்கான முக்கியத்துவம் இவைகள இஸ்லாம் வழங்கிய அறிவார்ந்த்த ஆய்வுப் பார்வை கொண்டு, இறைவேதமான அல்குர்ஆன் மற்றும் நபிகளாரின் வாழ்வியல் வழிகாட்டலோடு ஒப்பிட்டுப் பாருங்கள்,உரசிப் பாருங்கள். எவை நன்மையானவை, தீமையானவை எவைகளை வாழ்வியல் நெறியாக ஏற்று பின்பற்ற வேண்டும், எதனை விட்டு வெளியேற வேண்டும் என்பதை நன்கு அறிந்து கொள்வீர்கள்.

முஸ்லிம் பெண்களே ! அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டிய வழியில் இன்னும் பலமாக இஸ்லாமிய வாழ்வு நெறியை பலப்படுத்த உறுதி மேற்கொள்ளுங்கள்  ! ஏக இறைவன் அல்லாஹ்வும், அண்ணல் நபிகளும் உங்களின் மேல் கரிசனப் பட்டு, இரக்கப்பட்டு, சுவர்க்க வழிகளை இலேசாக்கி, யாரும் உங்களை  சுரண்டி விடக் கூடாது என சட்ட்ம் இயற்றி, உங்களை மிகவும் உயர்த்தி வைத்து, முதலிடம் வழங்கியுள்ளார்கள். அதைக் கையாள்வது நீங்கள் வாழும்  நெறியில்தான் இருக்கிறது. சுவர்க்கமும் கூட  தாயின்  காலடியில் இருப்பதை நபிகளின் வாக்கு உறுதிப் படுத்துவதையும் மறந்து விட வேண்டாம்.

இனி !

பெண் குழந்தைகளை உயிரோடு புதைத்த அந்த அரேபிய மண் கலாச்சாரம் ! பெண்கள் ஒரு போகப் பொருள் எனக் கொண்டு, அசிங்கம் கண்ட அந்த சமூகம், அப்படி சீர் கெட்டிருந்த சமூகத்தில் ஒரு புரட்சி மின்னல் தோன்றியது, அல்லாஹ்வின் தூதராக !

"இரண்டு பெண் குழந்தைகளை முறையாக வளர்ப்பவரும், நானும் சொர்க்கத்தில் இவ்வாறு நுழைவோம்" என நபி (ஸல்) அவர்கள் தங்கள் இரு விரல்களாலும் சைகை செய்தார்கள்" - அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக்(ரலி) - நூல் : திர்மிதி

சுப்ஹானல்லாஹ் ! இரண்டே வரி... சுருக்கமான வார்த்தைகள் !! அதன்  பொருளோ கடலிலும் பெரிது !!!

இன்றுகூட, பெண் பிள்ளை என்றால் ஆற்றிலும், குளத்திலும் மூழ்கடிப்பதும், நெற்மணிகள் கொடுத்தும், கழுத்தை நெறித்தும், பேருந்து இரயில் நிலையங்களில் பரிதவிக்க விட்டு,அநாதைகளாக்கப்பட்டும் நடந்து கொண்டுதானே இருக்கிறது. ஆனால் அண்ணல் நபி அவர்களின் பெண் குழந்தைகளின் மேல் உள்ள கரிசனத்தைப் பாருங்கள். நம் அருகில் நின்று கொண்டு, நம்மை நோக்கி, அந்தத் தூதர் சொல்வது போல் இல்லையா ?

பெண் குழந்தை பிறந்து விட்டதே என கவலை கொள்ளாதே, நல்ல முறையில் அவர்களை வளர்த்து வாருங்கள் ! பிறகென்ன என்னுடன் கூட சொர்க்கம் செல்லலாம், வாருங்கள், வாருங்கள் என நம் அருமை தலைவர்  கூப்பிடுவது கேட்கவில்லையா ? 

ஆ! அழைப்பது யார் தெரியுமா ? நபி ! நம் உயிரினிலும் மேலானவர் ! அல்லாஹ்வின் தூதர் ! அல்லவா ? பொய்யுரைக்காத உதடுகள் அவைகள் ! எனவே,சொர்க்கம் நிச்சயம்.பெண் பிள்ளைகளை நன்றாக வளாத்த்தாலே சொர்க்கமா? இந்த மாதிரி super deal எங்காவது கிடைக்குமா?

வாருங்கள் சகோதரர்களே  ! நம் தலைவர் அழைக்கிறார்... மாமனித அழைக்கிறார்... சுவர்க்கம் புக அழைக்கிறார் !

பெண் மகள் பிறந்து விட்டாளே என கவலைப் படாதே ! வரதட்சனைக்கும்,நகைகளுக்கும்,பெண்ணுக்கு  வீடு கட்டி முடிக்க காலமெல்லாம் உழைக்க வேண்டுமே  எனவும்  பயப்படுகிறீர்களா ? 

வரதட்சனையாய் நகையும், வீடும் கேட்கும் கேடு கெட்டவர்களை விரட்டியடி ! அல்லாஹ்வின் மேல் தவக்குல் வையுங்கள் ! பெண் பிள்ளைகளை ஆசை ஆசையாய் வள்ர்த்தெடுங்கள் ! அண்ணல் நபியின் கையைப் பிடித்துக் கொண்டு சுவர்க்கம் செல்லலாம் ! இன்ஷா அல்லாஹ்...!

இதற்கு மேலும் வேற என்னதான் வேண்டும் நமக்கு!!!

இறைவன் நாடினால் தொடரும் !
இப்னு அப்துல் ரஜாக்

எண்ணிலடங்கா இஸ்லாமிய தியாகிகள்...! 20

அதிரைநிருபர் பதிப்பகம் | February 22, 2014 | , , , ,

தொடர் 18.

வரலாற்றின் பக்கங்களில் மறைக்கப்பட்ட பல வீர வரலாற்று நாயகர்களின் வரலாற்றை கடந்த பல அத்தியாயங்களில் தந்தோம். இந்த தியாக வரலாற்றுக் கோபுரத்தின் கலசங்கள்தான் அவ்வரலாறுகள். ஆனால் இப்படிப்பட்ட கோபுரத்தின் அடித்தளமாகத் திகழ்கின்ற பல வரலாற்று நாயகர்களின் முழுவரலாறும் தேடிப்பார்த்தாலும் முழுமையான குறிப்புகள் கிடைக்காமல் நிலத்துக்குள் புதைந்துள்ள செங்கற்களைப் போல பலர் இருக்கிறார்கள். இந்த இந்திய மண்ணுக்காக தடியடி வாங்கி- இரத்தம் சிந்தி – சிறையில் அகப்பட்டு- தூக்கு மேடை ஏறிய பலரின் முழு வரலாறை நம்மால் திரட்ட முடியவில்லை. அவர்களைப் பற்றிய சிறு குறிப்புகளே கிடைக்கின்றன. உதாரணமாக கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. அவர்களைப் பற்றி படிக்கும்போதெல்லாம் அவரோடு இணைந்து நின்ற பல முஸ்லிம் தியாகிகள் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. ஆனால் அவர்களைப் பற்றிய முழு விபரங்களையும் திரட்டித்தர இயலவில்ல. இப்படி எண்ணிலடங்கா இஸ்லாமியத் தியாகிகளைப் பட்டியல் இடுவதே இந்தப் பதிவு. 

ஹாஜி ஷரியத்துல்லாஹ் :-

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வீரியம் வெளிப்பட்டதென்னவோ போராட்ட நடவடிக்கைகளில் காந்திஜியின் நுழைவுக்குப் பின்புதான் எனபது யாவரும் ஏற்கும் உண்மை. அதே நேரம், காந்திக்கும் முன்னோடியாக 19 – ஆம் நூற்றாண்டிலேயே மக்களைத் திரட்டி ஒரு போராட்டம் என்பதை முன்மாதிரியாக நடத்திக் காட்டியவர் ஒரு முஸ்லிம்தான் என்பதே வரலாறு காட்டும் உண்மை. இந்த சாதனையை நிகழ்த்திக் காட்டியவர் பெரைய்சி இயக்கம் (Farizis Movement) என்ற பெயர்கொண்ட விவசாயிகளைth திரட்டி ஒரு இயக்கமாக ஒன்று திரட்டி நடத்திக் காட்டியவர் ஹாஜி ஷரியத்துல்லாஹ் ஆவார். ஹாஜி ஷரியத்துல்லாஹ் அவர்களுக்கும் முன்னதாக 1820-ஆம் ஆண்டு கரம்ஷா என்பவரும் அவரது மகன் திப்பு என்பவரும் ஆன்மீக அடிப்படையிலும் மக்கள் உரிமை என்கிற அரசியல் அடிப்படையிலும் மக்களைத் திரட்டி ஆங்கிலேயருக்கு எதிராக நடத்திக் காட்டிய இயக்கம் , ஹாஜி அவர்களுக்கு ஒரு உந்து சக்தியாகத் திகழ்ந்தது. நில உடமையாளர்களான ஜமீன்தார்களின் விவசாயிகளுக்கு எதிரான கொடுமைகளுக்கு எதிராக அந்த விவசாயிகளின் உரிமைக்காகப் போராடும் இயக்கத்தைத் தொடங்கி நடத்திய திப்பு, 1825-ல் செர்பூர் (Sherpur) என்றழைக்கப்பட்ட பகுதியைக் கைப்பற்றி ஆட்சியும் அமைத்தார். 1830 முதல் 1840 வரை பத்தாண்டுகள் இந்த இயக்கம் ஆங்கிலேயருக்கு கனவிலும் பயமுறுத்தும் இயக்கமாக மாறியது. இந்த இயக்கத்தின் தாக்கமே ஹாஜி ஷரியத்துல்ல்லாஹ் அவர்களை கிழக்கு வங்காளத்தில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராட ஆக்கமும் ஊக்கமும் தந்தன. 

ஆங்கிலேயரின் வசூல் முகவர்களாக இருந்த ஜமீன்தார்களிடம் தங்களது உரிமைகளைப் பறிகொடுத்த விவசாயத் தொழிலாளர்களை ஒன்று திரட்டி ஹாஜி ஷரியத்துல்லாவும் அவரது மகன் தித்தேமியானும் நடத்திய இயக்கம் ஆங்கிலேயருக்குப் பல நிர்வாக இடையூறுகளையும் வருமான இழப்புகளையும் ஏற்படுத்தியது. ஆங்கிலேயரால் கைது செய்யபப்ட்ட தித்தேமியான் புரட்சியைத்தூண்டிவிட்டார் எ ன்று குற்றம் சாட்டப்பட்டு 1860 –ல் தூக்குக் கயிற்றை தழுவினார். 

ஹாஜி ஷரியத்துல்லாவும் அவரது மகன் தித்தேமியானும் தொடங்கி நடத்திய பெரைய்சி இயக்கம் (Farizis Movement) தான் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்றின் முதல் மக்கள் இயக்கம் என்பதை வரலாற்று ஆசிரியர் B.L.Grover, S. Grover A New Look At Modern History என்ற நூலில் பதிவு செய்திருக்கிறார். பாட நூல்களில்தான் இதுபற்றி நடுவில் பல பக்கங்களைக் காணோம். 

செய்யது அஹமது ராய்பரேலி:-

சுதந்திரப் போராட்டம் ஒரு புறம் காந்தியால் அஹிம்சை வழியில் அறப்போராட்டமாக அறிவிக்கப்பட்டு நடந்து கொண்டு இருந்தாலும் , மறு முனையில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களால் ஆங்கிலேயருக்கு எதிராக சுதந்திரப் போர் பிரகடனமும் செய்யப்பட்டது. இந்தியாவுக்காக் ஒரு தனிக்கொடியை உருவாக்கி அதை அந்தமானில் ஏற்றி ஆங்கிலேயரை அதிர்ச்சியடையச் செய்தார் நேதாஜி. ஜப்பானியாரின் ஆளுமைக்குட்பட்ட சிங்கப்பூரில் ஆசாத் ஹிந்த் சர்க்கார் (Azad Hind Government ) என்ற தற்காலிக சுதந்திர அரசை தைரியமாக அறிவித்தார். நேதாஜியின் இந்த வீரமிக்க முயற்சிகளுக்கெல்லாம் அவரோடு தோளோடு தோளாக நின்றவர்கள் முஸ்லிம்களாவர். இவர்களில் முக்கியமானவர் செய்யது அஹமது ராய்பரேலி அவர்கள் ஆவார். 

செய்யது அஹமது ராய்பரேலி அவர்கள் அடிப்படையில் சமுதாய சீர்திருத்தம் வேண்டி வஹாபி இயக்கத்தைத் தொடங்கியவர் ஆவார். பின்னர் இந்த இயக்கம் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட இயக்கமாக உருவெடுத்தது. ஹாஜி ஷரியத்துல்லா மற்றும் அவரது மகன் திப்புவின் மறைவுக்குப் பிறகு அவர்களுடன் இருந்த தொண்டர்கள் செய்யது அஹமது ராய்பரேலி அவர்களின் இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். 

பாட்னாவைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கிய இந்த இயக்கம், இந்தியாவை தாருல் இஸ்லாம் (Darul Islam) அதாவது இஸ்லாமியர்களின் உலகம் என்று சுதந்திர நாடாக பிரகடனப் படுத்தியது. இதற்காக இராணுவத்தையும் அமைத்தது. அந்த இராணுவத்தின் குறிக்கோள் ஆங்கிலேயருக்கு எதிரான புனிதப்போர் என்றும் அறிவித்தது என்பதைவிட பிரகடனப்படுத்தியது. இத்தகைய நடவடிக்கைகளுக்காக செய்யது அஹமது அவர்கள் அனுபவித்த கொடுமைகள் அளவிலடங்காதவை. இவருடன் இணைந்து இருந்த காரணத்தால் விலாயத் அலி, ஹிமாயத் அலி, முகமது ஜாபிர், அமிர் கான் ஆகியோரும் பல கொடுமைகளுக்கு ஆளாயினர். நாடு கடத்தப் பட்டனர்; அந்தமானில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுள் அமீர்கானை நாடுகடத்தும் உத்தரவில் கையெழுத்து இட்ட நார்மன் என்கிற நீதிபதியை அப்துல்லா என்ற பெயருடைய இளைஞன் துப்பாக்கியால் சுட்டுப் பழி தீர்த்தார் . 

மெளலவி மிர்ஜா மஹதீ ஸாலிஹ் லக்னவீ :-

நாம் ஏற்கனவே மெளலவி அஹ்மதுல்லாஹ் ஷாஹ் அவர்களின் தியாக வரலாற்றை கண்ணீர் சிந்தி, படித்து இருக்கிறோம். அவரைப் போலவே மெளலவி மிர்ஜா மஹதீ ஸாலிஹ் லக்னவீ அவர்களும் ஒரு தனிமனிதராக இருந்தாலும் ஒரு பெரும் படைக்குரிய செயல்திறனோடு திகழ்ந்தார் என்று பெருமையுடன் குறிப்பிடலாம். சிறந்த போர்க்கலைப் பயிற்சி பெற்ற மெளலவி மிர்ஜா மஹதீ ஸாலிஹ் லக்னவீ அவர்கள் முத்தீகஞ்ச் பகுதியை தனது ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்தார். அந்தப் பகுதிக்குள் ஆங்கிலேயர்கள் வாலாட்ட முடியாமல் வாகுடன் வைத்து இருந்தார். 

இவரை அடக்குவதற்காக கவுகாத்தியிலிருந்து அனுப்பி வைக்கப் பட்ட பறங்கியர் படை மிர்ஜா மஹதீ ஸாலிஹ் லக்னவீ அவர்கள் வகுத்திருந்த படைத் தடுப்பு வியூகத்தால் அவரது ஆளுகைக்குட்பட்ட பகுதிகளுக்குள் நுழைய முடியாமல் தவித்தது. முற்றுகை நீடித்துக் கொண்டே போன வேளையில் ஒரு அதிகாலை நேரம் பஜ்ர் தொழுகையை முடித்துக் கொண்டு வெளியே வந்த மிர்ஜா மஹதீ ஸாலிஹ் லக்னவீ அவர்களை சுற்றி வளைத்தது சூழ்ச்சிப் படை. ஆனாலும் மிர்ஜா மஹதீ ஸாலிஹ் லக்னவீ அவர்கள் தடுமாறவில்லை; தனது படைத்திறனைக் காட்டினார். தன்னந்தனியே நின்று போரிட்டு இருபது பேரை வெட்டி வீழ்த்தினார். அதற்குப் பரிசாக அவரது மார்பைத் துளைத்தது எதிரியின் துப்பாக்கியிலிருந்து பறந்து வந்த ஒரு முதல் குண்டு குண்டு; அதைத்தொடர்ந்து அவரைத்தேடி வந்த அனைத்து குண்டுகளையும் மார்பில் தாங்கிய வண்ணம் தக்பீர் முழங்கிக் கொண்டே மண்ணில் சாய்ந்தார். 

ஒரு துயரமான செய்தியை இங்குப் பதிவு செய்தே ஆகவேண்டும். இப்படி இந்த மண்ணின் விடுதலைக்காகப் போராடிய உலமாக்கள், மெளலவிகள் மரணமடைந்த போது அவர்களது இறந்த உடல் இரத்தக் கரை படிந்த சவத்துணிகளால் சுற்றப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட அவலச் செய்தியே அது. அந்த இரத்தக் கரைகளை, ஒரு தியாக வரலாற்றின் சத்திய ரேகைகள் என்று பேராசிரியர் மு. அப்துல் சமது தனது தியாகத்தின் நிறம் பச்சை என்ற நூலில் குறிப்பிடுகிறார். 

எம். ஜே. கலீலுர் ரஹ்மான் பாகவி :-

இன்றைய வியட்நாமில் , அன்று சைகோன் என்று அழைக்கப்பட்ட பெருநகரில் இருந்துகொண்டு இந்திய சுதந்திரத்துக்காகப் போராடியவர் மணிமொழி மெளலானா என்று அழைக்கப் பட்ட எம். ஜே. கலீலுர் ரஹ்மான் பாகவி அவர்களாவார். உணர்ச்சிப் பிழம்பாக இவர் எடுத்துவைத்த கருத்துக்கள் பலரை விடுதலைப் போராட்டத்தை நோக்கி ஈர்த்தன. 

மணிமொழி மெளலானா அவர்கள் “இந்தியாவை ஆங்கிலேயர் கைப்பற்றியது முஸ்லிம்களிடமிருந்தாகும். ஆகவே ஆங்கிலேயரிடமிருந்து இந்திய நாட்டை மீட்க முஸ்லிம்களே முன் நின்று போராட வேண்டும்" என்று முழங்கினார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தற்காலிக சுதந்திர இந்தியாவை அறிவிக்கும் முன்பே சைகோன் நகரில் “இன்டிபென்டன்ட் லீக் “ என்ற விடுதலை இயக்கத்தைத் தொடங்கி நடத்தியவர் மணிமொழி மெளலானா அவர்களாவார்கள். இந்த ஒரு அரிய பணியில் அவர்களுடன் இணைந்து நின்றவர் எஸ். ஏ. நூருத்தீன் என்பவராவார். இவர்கள் இருவரும் சைகோனில் இரகசியமாக நேதாஜியை சந்தித்துப் பேசிய நிகழ்வும் நடந்தது. “மெளலவி சாகிப்” என்று நேதாஜியால் பிரியமாக அழைக்கப்பட்ட மணிமொழி மெளலானா அவர்கள் நேதாஜி , இந்தியில் பேசிய வீர உரைகளை தமிழில் மொழி பெயர்த்து தொண்டாற்றியவர் ஆவார்கள். 

இரண்டாம் உலகப் போரில் ஜப்பானுக்கு உதவிய சுதந்திர இந்தியப் படையில் சிலருக்குத் தலைமை தாங்கினார் என்ற குற்றச்சாட்டு மணிமொழி மெளலானா அவர்கள் மீது ஆங்கில அரசால் சுமத்தப் பட்டு, அவருக்காக ஒரு தூக்குக் கயிறு காத்திருந்தது. ஆனால் அவர் நாடு கடத்தப் பட்டார். 

தனது தாய் மீது மாறாத அன்பு உடையவராக இருந்தார் மணிமொழி மெளலானா அவர்கள். நாடு கடத்தப் பட்டு 1946 – ல் நாட்டுக்குத் திரும்பிய மணிமொழி மெளலானா அவர்கள் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தனது தாயாரை சந்திக்கப் போகிறோம் என்கிற ஆவலுடன் நாடு திரும்பினார். ஆனால் தாய் மண்ணை மிதித்தபோது, அவர் வந்து சேர இரண்டாண்டுகளுக்கு முன்பே அவரது தாயார் இறைவனடி சேர்ந்த செய்தி இடி போல அவர் நெஞ்சில் இறங்கியது. ஆனாலும் நாட்டுக்காக தான் செய்த தியாகங்களுக்காத் தான் மனம் மகிழ்வதாகவே மணிமொழி மெளலானா அவர்கள் கூறினார்கள். 

ஹாஜி பக்கீர் முகமது :-

வ.உ.சிதம்பரனார் அவர்கள் கப்பல் வாங்கும்போது , தனது சொந்த பணத்தைக் கொண்டு மட்டும் வாங்கி விடவில்லை. உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களிடம் வசூல் செய்து தான் வாங்கினார். இதற்காக, பங்குகளை வாங்கி கொள்ளலாம் என்று அறிவிப்பும் வெளியிட்டார். கப்பல் கம்பெனியின் பங்குகளில் பெருவாரியானவற்றை ரங்கூனில் வசித்த உத்தமபாளையத்தை சேர்ந்த ஹாஜி பக்கீர் முகமது ராவுத்தர் அவர்கள் கொடுத்து உதவினார். ஆங்கில ஆக்கிரமிப்பாளர்களின் அடக்கு முறையால், கப்பல் கம்பெனி நஷ்டமான போதும், தனது பங்குத்தொகை எதையும் திருப்பி தர தேவையில்லை என்றும் பெருந்தன்மையாகத் தெரிவித்து விட்டார்.

இதற்கு நன்றி தெரிவித்து வ.உ.சி. எழுதிய கடிதம் தூத்துக்குடியில் உள்ள தமிழ்ப் பேராசிரியரும், வரலாற்று ஆய்வாளருமான பேராசிரியர் அ.சிவசுப்பிரமணியனிடம் இருக்கிறது. தியாகிகளை நினைவு கூறும் அரசாங்கம் ஹாஜி பக்கீர் முகமது ராவுத்தரை ஏன் நினைவு கூற தயங்குகிறது என்பது தெரியவில்லை. ஹாஜி பக்கீர் முகமது ராவுத்தரை அவரது தியாகத்துக்கான அங்கீகாரத்தை அவ்வளவு தொகையைத் தாரைவார்த்த அவரது குடும்பத்தினர் கேட்கிறார்கள். 

வ.உ.சி.சிலை திறப்பின் போது, இந்த விபரங்கள் அனைத்தும் தெரிந்த வ.உ.சி.யின் வாரிசுகளிடம் உத்தமபாளையத்துக்காரரைப் பற்றி மேடையில் பேசும் போது குறிப்பிடுங்கள் என்று முஸ்லிம் பெரியவர்கள் சிலர் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், அதனை சொல்ல அவர்களுக்கு என்ன தயக்கமோ தெரியவில்லை. தங்களுக்குத் தெரிந்த அந்த உண்மையை உலகுக்கு சொல்லாமல் மறைத்தனர். 

வ உ சி யின் கப்பல் கம்பெனியில் , 
  • ஹெச்.ஏ.ஆர்.ஹாஜி பக்கீர் முகமது சேட் அண்ட் சன்ஸ் கெளரவ செயலாளராகவும்
  • வ.உ.சிதம்பரம் பிள்ளை துணைச் செயலாளராகவும், இருக்க 
  • வழக்கறிஞர் சேலம் சி.விஜயராகவாச்சாரியார்
  • திருநெல்வேலி வழக்கறிஞர் கே.ஆர்.குருசாமி அய்யர்
  • கோழிக்கோடு வழக்கறிஞர் எம்.கிருஷ்ண நாயர்
  • தூத்துக்குடி வழக்கறிஞர் டி.எல்.வெங்கு அய்யர்
  • ஆகியோர் சட்ட ஆலோசகர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

கம்பெனியின் இயக்குநர்களாக 15 முக்கியப் பிரமுகர்கள் செயல்பட்டனர். அவர்களுள் புகழ்மிக்க வர்த்தகக் குழுவான ஹெச்.ஏ.ஆர்.ஹாஜி பக்கீர் முகமது சேட் அண்ட் சன்ஸ், முகமது ஹகீம் சேட், சி.வ. கப்பல் கம்பெனியைச் சேர்ந்த சி.வ.நல்லபெருமாள் பிள்ளை ஆகியோரும் அடங்குவர். 

இன்ஷா அல்லாஹ் ! இன்னும் இருக்கின்றன இந்தப் பட்டியலின் பக்கங்கள். 
தொடரும்... 
இபுராஹீம் அன்சாரி

நேற்று! இன்று ! நாளை! – தொடர் 29 (நமது கல்வி) 19

அதிரைநிருபர் பதிப்பகம் | February 20, 2014 | , , , ,

அன்பான சகோதரர்களே!

கடந்த இருவாரங்களாக வெளியான இந்தத்தொடரின் இடஒதுக்கீடு என்கிற பேசுபொருள் மிகப் பலரின் வரவேற்புக்கும் ஒரு சிலரின் எதிர்ப்புக்கும் ஆளானது. நம்மைப் பொருத்தவரை , நமது மனதில் எவ்வித களங்கமும் இல்லை – நடு நிலை தவறவில்லை என்கிற மனசாட்சியின் உறுதிப்பாடு இருப்பதால் எதிர்த்து எழுதியவர்களின்  தரங்கெட்ட வரிகள் நம்மை பாதிக்கவில்லை. மாற்றுக் கருத்து கொண்டோரை வசைபாடுவதை வழக்கமாக வைத்து இருப்பவர்களுக்காக நாம் இரக்கப்பட்டு அவர்களுக்காகவும் இறைவனிடம் இறைஞ்சுவோம் என்கிற வரிகளோடு இதற்கு, நம்மைப் பொருத்தவரை முற்றுப் புள்ளி வைக்க விரும்புகிறோம். அதே நேரம் இதுதான் அவர்கள் இத்தனை காலமாக கற்றுக் கொண்ட பாடம்- பகுத்தறிவு –பயனுள்ள அரசியல் தத்துவம் என்பதை அறிந்த அல்லாஹ் அவர்களுக்கு நல்ல எண்ணங்களைக் கொடுத்து இரட்சிக்க வேண்டும். அதே நேரம் சென்னையில் இருந்து நமக்கு ஆறுதல் கூறும் விதத்தில் அழைத்துப் பேசிய  நல்ல உள்ளங்களுக்கும் நன்றி செலுத்துகிறோம். 

இனி ஆக்கபூர்வமாக, 

இந்திய முஸ்லிம் சமுதாயத்தைப் பொருத்தவரை , கல்வியில் நாம் பின் தங்கிவிட்டதற்கான வரலாற்றுக் காரணங்களையும் அவற்றைக் களைந்து நாம் முன்னெடுத்துச் செல்லவேண்டிய ஆக்கப்பணிகளையும்  பற்றி நமக்குத்தெரிந்த சில கருத்துக்களைப் பதிய விரும்புகிறோம். 

இந்திய முஸ்லிம்களைப் பொருத்தவரை கல்வி ஒரு கேள்விக்குறியாகிவிட்டது. கடந்த வாரம் கும்பகோணத்தில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் பேசிய பேராசிரியர் தி. மு. அ. காதர் அவர்கள் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்கள். “முஸ்லிம் சமுதாயம் அடிப்படையில் ஒரு வணிக சமுதாயம். அவர்கள் படிப்பதில்லை. படிக்கும் பிள்ளைகளையும் படிப்பை நிறுத்திவிட்டு கடையில் வந்து தங்களுடன் இருக்கும்படியும் தொழிலை கவனிக்கும் படியும் செய்துவிடுகிறார்கள். இதனால் இந்த சமுதாயத்தை ஒரு கல்லாப்பெட்டி ( கல்லா  பெட்டி ) சமுதாயம் என்று அழைக்கலாம்” என்றார்.  இன்றுவரை இது உண்மையாகவே  இருக்கிறது. 

அடிப்படையில் நம்மை ஆண்டவர்களும் நமது முன்னோர்களும் செய்த தவறுகள் – விதைத்த விதைகள்- அவற்றை நாம் அறுவடை செய்து கொண்டு இருக்கிறோம். நவீனகாலக் கல்வியைக் கற்பது மார்க்கத்துக்கு எதிரானது என்ற கருத்தை விதைத்த வரலாற்றின் பின்னோக்கிய பக்கங்கள் இன்று நம்மை இந்நிலைக்கு ஆளாக்கி இருக்கிறது என்பதை மறுக்க இயலாது. முன்னூறு ஆண்டுகள் நம்மை ஆண்ட ஆங்கிலேயருடைய ஆட்சியில் வளர்க்கப் பட்ட கல்விக்கும் , எண்ணூறு ஆண்டுகள் நம்மை ஆண்ட மொகலாயர் ஆட்சிக்கும் கல்வி வளர்ப்பதில் எவ்வளவு பெரிய வேறுபாடுகள்  என்பதை நாம் முதலில் உணர வேண்டும்.  கல்வியில் பின் தங்கிய சமுதாயம் இன்று கால்பந்தாக உதைபட்டுக் கொண்டு இருக்கிறது. குறிப்பாக தமிழ் பேசும் முஸ்லிம்களுடைய கல்வி நிலையை உருது பேசும் முஸ்லிம்களுடைய  கல்வி நிலையுடன் ஒப்பிட்டால் தமிழ் பேசும் முஸ்லிம்கள் மிகவும் தாழ்மையான நிலையில் இருக்கிறார்கள். இது பற்றிய ஒரு வரலாற்றுக் கண்ணோட்டத்தை செலுத்தலாம்.

1631-ஆம் ஆண்டு, பிரிட்டிஷார், குஜராத் மாநிலம் சூரத்தில் ஒரு தொழில் செய்ய வேண்டுமென்று அன்றைய மொகலாய மன்னரிடம் அனுமதி பெற்று நுழைந்தனர். அன்று முதல் வஞ்சகமாக மெல்ல மெல்ல இந்திய சாம்ராஜ்யங்களைப் பிரித்து, ஏமாற்றி 1639-ல் சந்திரகிரி மன்னரிடமிருந்து அவரது கட்டுப்பாட்டுக்குட்பட்ட சென்னைப் பட்டினத்தை குத்தகைக்கு எடுத்து செயின்ட் ஜார்ஜ் கோட்டையை பலப்  படுத்தி தொழில்  செய்ய ஆரம்பித்தனர். 

பின்னர் தங்களை இராஜதானி நிலைக்கு உயர்த்தி, தென் இந்தியாவில் வடக்கில் தெலுங்குப் பிரதேசம், மேற்கே மலபார், தென் கன்னட மாவட்டங்கள் மற்றும் தெற்கே தமிழ் பேசும் பகுதிகள் உட்பட்ட 129, 500 சதுர கிலோ மீட்டர் பரப்பு உள்ள இராஜதானியாக ஆங்கிலேயர் ஆக்கிக் கொண்டனர். இப்படி ஒரு நிலையை ஏற்படுத்திக் கொண்டபின் அவர்களின் பார்வை ஆற்காட்டு நவாப் மீது திரும்பியது. நண்பனாக நடந்து, ஆற்காட்டு நவாப்பை  மடக்கி, அவரது ஆளுமைக்குட்பட்ட பகுதிகளின் அதிகாரத்தை தங்களிடம் ஒப்படைக்கும்படி நவாபை  கட்டாயப்படுத்தியதால் வேறு வழி இல்லாமல் அதிகாரம் ஆங்கிலேயருக்குக் கை மாறியது அல்ல அல்ல  அதிகாரம் பறிபோனது. தனக்கும் தன் மக்களுக்கும் என்ன தேவை என்பதை நிர்ணயம் செய்யும் உரிமை இப்படி கைவிட்டுப் போனதால்  முஸ்லிம்களின் கல்வியில் எவ்வாறான விளைவுகளை விளைவித்தன என்பதைப் பதிக்கும் நெஞ்சத்துடன்  பார்க்கலாம். 

18 – ஆம் நூற்றாண்டின் இறுதியில் நவாப் முகமது அலி வாலாஜா, அவர்கள் தனது தனிப்பட்ட முயற்சியில் இஸ்லாமிய ஆராய்ச்சியை வளர்க்கவும், இஸ்லாமிய சித்தாந்தங்களை வலுப்படுத்தவும் சென்னையில் மதராஸா- யே- ஆலம்  என்கிற அரபுப் பள்ளியை நிறுவினார். அதற்காக அந்தக் காலத்திலேயே , வட இந்தியாவிலிருந்து அப்துல் அலி மஹ்ருள் உலூம் என்ற  பேரறிஞரை முதல்வராகக் கொண்டுவந்து மதரசாவை  வழி நடத்தச் செய்தார். இந்தப் புனிதச் செயல் நவாபின் கல்வியை வளர்க்கும் நல்லெண்ண நெறிமுறைகளைக் காட்டுகிறது. 

இதனைத் தொடர்ந்து, பிரிட்டிஷார் முஸ்லிம்களின் நல்லெண்ணத்தைப் பெறும் நோக்கத்தில், அவர்கள் பங்குக்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அரபு மற்றும் பாரசீக மொழிகளை போதிக்கும் ஒரு மதரஸாவைத் தொடங்கினார்கள். 

அதே நேரம், இத்தகைய மதரஸா கல்விக்கு இடையூறாக, மெக்காலே கல்வித் திட்டம் என்ற ஒன்றைப் புகுத்தி, இஸ்லாமியர்களின் கல்விப் பணிக்கு ஊறு  விளைவித்தனர். இதன் மூலம் ஆங்கிலத்தில் நவீன மத சார்பற்ற கல்வித் திட்டத்தைப் புகுத்தி, அதுவரை கீழ்க் கோர்ட்டுகளில் வழக்கத்தில் இருந்த பாரசீக மொழியை 1837- ல்  அகற்றினார்கள். பிரிட்டிஷாரின் இந்தச்செயல் இந்தியா முழுதும் பாரசீக மொழியைப் பயன்படுத்திக் கொண்டிருந்த முஸ்லிம்களுக்கு கல்வியில் ஒரு பின்னடைவைத் தோற்றுவிக்கக் காரணமாயிற்று. சட்டத்துறையில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப் பட்டனர். 

இதன் எதிரொலியாக, நவாப் கவுஸ் கான் பகதூர் வாலாஜா அவர்கள், மெக்காலேயின் கல்வித் திட்டத்துக்கு எதிராக , தனிப்பட்ட முறையில் 1851- ஆம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில் அரபு மற்றும் பாரசீக மொழிகளின் வளர்ச்சிக்காக மதரஸா – யே- ஆஜம் என்ற பள்ளியை நிறுவினார். எனினும் இப்பள்ளி பணம்படைத்த முஸ்லிம்கள் மட்டுமே படிக்க இயன்றதாக இருந்தது. அத்துடன் அரசு அங்கீகரித்த பொதுக் கல்வி இந்தப் பள்ளியில் இணைக்கப் படவில்லை. இதன் விளைவாக, தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளைப் பேசிய முஸ்லிம்களுக்கு இப்பள்ளியால் பயனில்லாமல் போனது. 

என்றாலும் நரி மூளை படைத்த ஆங்கிலேயர்கள், இஸ்லாமியக் கல்வியை – அதன் தாத்பரியத்தை- வளத்தை- வளர்ச்சியை- வரலாற்றை- வீரத்தை சிதைக்கும் முயற்சியில் பட்டவர்த்தனமாக இறங்கி மெக்காலே கல்வித்திட்டத்தைக் கட்டாயமாக்கினார்கள். 

1859 – ஆம் ஆண்டு , மே மாதம் முதல் நாள் மதரஸா - யே- ஆஜமை,  மதசார்பற்ற கல்வி என்ற போர்வையில் ஆங்கிலக் கல்விப் பயிற்றுவிக்கும் இடமாக மாற்றினர். அதே நேரம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அவர்களால் ஆரம்பிக்கப் பட்ட பள்ளி, பொதுவான  உயர்நிலைப் பள்ளியாக மாற்றப் பட்டது. 

முஸ்லிம்கள் பயிலும் மதரஸாக்களை இப்படி மாற்ற ஆங்கிலேயரைக் கோபம அடையச் செய்த ஒரு வரலாற்றுப் பின்னணி உண்டு. அது என்ன? 

ஆங்கிலேயர்களின் அடாவடித்தனத்தின் அடித்தளத்தை தகர்த்தவர்கள் முஸ்லிம்கள். இதை எந்தப் பேடியாலும்- மோடியாலும்- கொம்பனாலும்- வம்பனாலும்  மாற்ற முடியாது. வேண்டுமானால் மறைக்கலாம். ஆனால் உண்மை வெளிவந்தே தீரும். 

1857 – ல் நடந்த சிப்பாய் கலகம் (இது பற்றி மறைக்கப்பட்ட வரலாறுகளில் எழுத இருக்கிறோம் இன்ஷா அல்லாஹ்) அல்லது முதல் சுதந்திரப் போரில் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடி, அவர்களை சின்னாபின்னமாக்கியவர்கள் முஸ்லிம்கள். குறிப்பாக இஸ்லாமிய கல்வி பயின்ற முஸ்லிம்கள். அதிலும் சிறப்பாக, நிறுவப்பட்டிருந்த மதரசாக்களில் கல்வி பயின்று பின் இராணுவத்தில் சேர்ந்தவர்கள். இந்த எதிர்த்து நின்ற இஸ்லாமிய செல்வங்களை பீரங்கியின் வாயில் வைத்து சுட்டு வீழ்த்தினர் பிரிட்டிஷார். எனவே, வீரமும் விவேகமும் முஸ்லிம்களின் இரத்த நாளங்களில் ஓடக் காரணம் அவர்கள் பயின்ற மதரசாக் கல்வி என்று பிரிட்டிஷார் உறுதியாக நம்பினார்கள். எனவே வாய்ப்புக் கிடைக்கும் போது இஸ்லாமியக் கல்வி நிறுவனங்களை ஒழிப்பது அல்லது அவற்றுள் ஆங்கிலக் கல்வி முறையைப் புகுத்துவது என்பது அவர்களின் கொள்கையாயிற்று. இதே கூற்றையும் கொள்கையையும்தான் இன்றைய இந்தியாவில் இஸ்லாத்தை எதிர்க்கும் பிஜேபி போன்ற கட்சிகள் தங்களின் தேர்தல் அஜெண்டாவிலும் வைத்துள்ளன என்பதும் கவனிக்கத் தக்கது. 

“ பிறையாகப் பிறந்த இஸ்லாமிய இளைஞனே!
நீ 
தரையில் அடித்த பந்து 
உந்தி எழுவது போல் 
குதித்தெழு !
உன்னுடன் ஒரு முழு நிலவு 
உட்புகுந்துள்ளது” -  

என்று பாடி உத்வேகம் ஊட்டிய உலகக் கவி அல்லாமா இக்பால் பாடினார் . அதுதான் இங்கு நமது நினைவுக்கு வருகிறது. 

விழித்து  எழுந்த முஸ்லிம் சமூகம் செய்தவை என்ன?

பதறி  எழுந்த முஸ்லிம் சமூகம்,  அந்தக் குமுறலின் விளைவாக , கீழக்கரையில் சையத் முகமது மாப்பிள்ளை லெப்பை என்ற பெயர் படைத்திருந்த தனவந்தர், அல் மதரஸசத்துல் அரூஸியா  என்ற பெயரில் பாரசீக மொழி கற்பிக்கும் கல்வி நிறுவனத்தை நிறுவினார். 1864- ல் மதரஸா – இ- மன்பவுல் அன்வர் லால்பேட்டையிலும் 1871- ல்  திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில், ரிவாஜ் –அல் – ஜினான், பி உலூம் – அல்- அத் யன் ஆகிய பள்ளிகளை பீர்  முகமது ராவுத்தர் அவர்களும், பிரபல பாஷா குடும்பத்தினர் சென்னையில் மதரஸா – இ- சயீதியா என்கிற கல்வி நிறுவனத்தை 1872 – லும், ஆத்தூரைச்சார்ந்த  மெளலானா அப்துல் வஹாப் அவர்கள் தனது சில நண்பர்களுடன் சேர்ந்து 1884 – ல் மதரஸா- பாக்கியத்துஸ் சாலிகாத் என்கிற கல்வி நிறுவனத்தையும் தோற்றுவித்தனர். இந்தப் பள்ளிகளில் கற்றவர்கள் தென்னிந்தியா முழுவதும் பரவி, தமிழ் மொழி மூலம் அரபுத் தமிழ், அரபு மொழி, இஸ்லாமியத் தத்துவம் போன்ற நெறிமுறைகளை போதித்தனர். 

இதே போல் 1865-ல்  வேலூரில் தாருல் உலூம் லத்தீபியா, 1887-ல் வாணியம்பாடியில் மதரஸா மதானுள் உலூம் மற்றும் மதரஸா – இ- முப்ஈது இ ஆம் பள்ளிகளும்  நிறுவப்பட்டன. சில வருடங்கள் கழித்து சென்னையில் மதரஸா- இ – முகம்மதி, கூத்தாநல்லூரில் மன்பவுள் உலா 1892-லும், தொடர்ந்து 1895-ல் தொண்டியில் மதரஸத்துல் இஸ்லாமியாவும் நிறுவப்பட்டன.

இவைகள் அல்லாமல் முஸ்லிம்களுக்குக் கல்வி அளிக்க, பொதக்குடி, நீடூர், ராஜகிரி, சேலம், திருவண்ணாமலை, திருநெல்வேலி, பண்டாரவாடை, அத்திக்கடை, அதிராம்பட்டினம் ரஹ்மானியா மதரசாவும் முத்துப் பேட்டையில் ஆ. நெ. உதவிபெறும் மதரஸா மற்றும் தொடக்கப் பள்ளியும் இதே ரீதியில் பல ஊர்களில்  வள்ளல் பெருமக்களால் தங்கத்தாமரையாக தொடங்கப் பட்டு பூமியில் பூத்துக் குலுங்கத் தொடங்கின. கல்வி ஒளி வீசத்தொடங்கிற்று . 

இவ்வளவு சூடாக தொடங்கப்பட்ட நமது சமுதாயத்தின்  கல்வி சூறையாடபப்ட்ட வரலாற்றைத் தொடர்ந்து பார்க்கலாம்.  இன்ஷா அல்லாஹ். 

ஆக்கம் : P. முத்துப் பேட்டை பகுருதீன் B.Sc;
உருவாக்கம்: இப்ராஹீம் அன்சாரி

பார்வைக்கு: முஸ்லிம்களின் அரசியல் பரிணாம வளர்ச்சி தமிழ்நாடு மற்றும் சென்னை - 1930-1947. - ஆசிரியர்: ஜே.பி.பி.மோரே

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 30 8

அதிரைநிருபர் பதிப்பகம் | February 19, 2014 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..
முந்தைய பதிவில் உஸ்மான்(ரலி) அவர்களின் மரணத்திற்குப் பிறகு ஏற்பட்ட குழப்பத்தினால் ஸஹப்பாக்களுக்கு மத்தியில் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி ஒருவருக்கு ஒருவர் பகைத்துக்குக்கொள்ளும் நிலை உருவான நிலையில் அவர்கள் எப்படி அவற்றை எதிர்கொண்டு ஒற்றுமையாக வாழ்ந்தார்கள் என்று பார்த்தோம் படிப்பினை பெற்றோம். இந்த வாரம் பெருமை விசயத்தில் அன்றைய முஸ்லீம்கள் எப்படி அனுகினார்கள், பெருமை விசயத்தில் இன்று நாம் எப்படி உள்ளோம் என்பதை பற்றி பார்க்கலாம்.

இவ்வுலகில் வாழும் மனிதர்கள் ஒவ்வொருவரும் பெருமை அடித்துக்கொள்வதில் மிகவும் ஆர்வமுள்ளவர்களாக உள்ளோம் என்பது ஒவ்வொருவரின் மனசாட்சியே அவைகளுக்கு சாட்சி. இவ்வுலகில் நம்முடைய தந்தை ஆதம்(அலை) அவர்களை அல்லாஹ் படைத்த பின்பு சைத்தானிடமிருந்தே அந்த பெருமை குணம் ஆரம்பமானது. இதோ அதன் வரலாறு குர் ஆன் வசனங்களிலிருந்து.

நிச்சயமாக நாமே உங்களைப் படைத்தோம்; பின்பு உங்களுக்கு உருக்கொடுத்தோம். அதன்பின், “ஆதமுக்கு ஸுஜுது செய்யுங்கள் (சிரம் பணியுங்கள்)” என்று மலக்குகளிடம் கூறினோம்; இப்லீஸைத் தவிர (மற்ற மலக்குகள்) யாவரும் (அவருக்குத்) தலைவணக்கம் செய்தார்கள்; அவன் (மட்டும்) தலைவணக்கம் செய்தவர்களில் ஒருவனாக இருக்கவில்லை.

“நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?” என்று அல்லாஹ் கேட்டான்; “நான் அவரை (ஆதமை)விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்” என்று (இப்லீஸ் பதில்) கூறினான்.

“இதிலிருந்து நீ இறங்கி விடு; நீ பெருமை கொள்வதற்கு இங்கு இடமில்லை; ஆதலால் (இங்கிருந்து) நீ வெளியேறு - நிச்சயமாக நீ சிறுமை அடைந்தோரில் ஒருவனாகி விட்டாய்” என்று அல்லாஹ் கூறினான்.  திருக்குர் ஆன் (07:11 – 07:13)

மேலும் அல்லாஹ் கூறுகிறான்.
பெருமைக்காகவும், மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவும் தங்கள் வீடுகளிலிருந்து வெளிக் கிளம்பி (முஸ்லிம்களுக்கெதிராக பத்ரில்) மக்களை அல்லாஹ்வுடைய பாதையை விட்டுத் தடுத்தார்களே அவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள் - அவர்கள் செய்வதை அல்லாஹ் சூழ்ந்து அறிந்தவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 8:47)

உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான்; எனவே, எவர்கள் மறுமையை நம்பவில்லையோ, அவர்களுடைய நெஞ்சங்கள் (இவ்வுண்மையை) நிராகரிப்பவையாக இருக்கின்றன - மேலும் அவர்கள் (ஆணவங் கொண்டு) பெருமையடிப்பவர்களாக இருக்கிறார்கள். (திருக்குர்ஆன் 16:22)

சந்தேகமின்றி அல்லாஹ், அவர்கள் மறைத்து வைத்திருப்பதையும்; அவர்கள் பகிரங்கப்படுத்துவதையும்; நிச்சயமாக அறிவான்; (ஆணவங் கொண்டு) பெருமையடிப்பவர்களை அவன் நிச்சயமாக நேசிப்பதில்லை. (திருக்குர்ஆன் 16:23)

“ஆகவே, நீங்கள் நரகத்தின் வாயில்களில் புகுந்து, அங்கே என்றென்றும் தங்கியிருங்கள்” (என்றும் மலக்குகள் கூறுவார்கள்; ஆணவங் கொண்டு) பெருமையடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் மிகவும் கெட்டது. (திருக்குர்ஆன் 16:29)

பெருமை யார் அடிப்பார்கள்? அவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை என்றும், நாளை மறுமையில் பெருமையடிப்பவர்களின் நிலை என்ன என்பதை அல்லாஹ் தன் இறைமறையில் மிகத்தெளிவாக கூறியுள்ளான்.

மேலும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பெருமையடிப்பவர்களை பற்றி மிகக் கடுமையான வார்த்தைகள் கொண்டு கண்டித்துள்ளார்கள்.

இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவிக்கிறார்கள்: - "யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர், “தமது ஆடை அழகாக இருக்க வேண்டும்; தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா?)” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் அழகானவன்; அழகையே அவன் விரும்புகிறான். தற்பெருமை என்பது உண்மையை ஏற்றுக் கொள்ள மறுப்பதும் மறைப்பதும் மக்களைக் கேவலமாக மதிப்பதும்தான்” என்று கூறினார்கள். (முஸ்லிம்).

ஹாரிஸா இப்னு வஹப் (ரலி) அறிவிக்கிறார்கள்: - நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் ”உங்களுக்கு நரகவாசியைப் பற்றி அறிவித்துத் தரட்டுமா? அவர் யாரெனில் மிகக் கடுமையானவரும், அகந்தையுடன் நடப்பவரும், பெருமையடித்துத் திரிபவருமாவார்.” . (ஸஹீஹுல் புகாரி)

”கண்ணியம் எனது கீழாடை, பெருமை எனது மேலாடை. அந்த இரண்டில் எதையேனும் என்னிடம் பறித்துக்கொள்ள முற்பட்டால் அவரை நரகில் போட்டு வேதனை செய்வேன்” என அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

மேற்குறிப்பிட்ட நபி மொழிகளைப் போன்று நிறைய நபி மொழிகள் பெருமையடிப்பவர்கள் குறித்து மேலும் எச்சரிக்கை செய்கிறது. நபி(ஸல்) அவர்களும் தங்களுடை வாழ் நாட்களில் துளி அளவும் பெருமையடிப்பவர்களாக வாழ்ந்ததாக ஹதீஸ் தொகுப்புகளில் காண இயலாது.

மேலும் நபி(ஸல்) அவர்கள் பணிவோடு நடக்கும்படி நிறைய கட்டளை பிறப்பித்த்தோடு அல்லாமல், அவர்களும் தன் வாழ் நாட்களில் வாழ்ந்துகாட்டினார்கள்.  மக்காவில் தொழுது கொண்டிருக்கும் போது தன் மேனி மீது அழுகிய குடலை மக்கத்து குரைசிகள் வைத்து அவமானப்படுத்தினார்கள், திட்டினார்கள், ஏசினார்கள், சமூக பரிஷ்காரம் செய்தார்கள், தாயிப் நகரத்தில் காஃபிர்கள், சிறுவர்களை வைத்து கல்லால் அடித்து துரத்தப்பட்டார்கள், பிறந்த சொந்த மண்ணில் எண்ணிலடங்கா துயரங்கள் பட்டு தன் நாட்டை விட்டு வெளியேறி மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்தார்கள். 

மதீனாவிலும் நிம்மதியற்ற வாழ்வையும், பல எதிர்ப்பு போர்களையும் சந்தித்தார்கள். இது போன்ற பல சந்தர்ப்பங்களிலும் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் யாரையும் திட்டவில்லை, தான் அல்லாஹ்வின் தூதர் என்று அகங்காரம் கொண்டு கேவலப்படுத்திய மக்களை ஏசவில்லை. அவர்களை பலிவாங்கும்விதமாக அவர்களுக்கு எதிராக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யவில்லை. பொருமையாக அனைத்தையும் அல்லாஹ்வுக்காக பொறுத்துக் கொண்டார்கள். தன்னை பாதுகாப்பவன் அவன் ஒருவனே என்று நம்பினார்கள்.

இறுதியில் மக்கா வெற்றி கிடைத்தது, சூரத்துல் நஸ்ர் (110:1 -110:3) என்ற அத்தியாயம் இறங்கியது, உலக ஆட்சியே கையில் வந்ததை போன்ற ஓர் நிகழ்வு, தனக்கு நபித்துவம் கிடைத்த நாள் முதல் மக்கா வெற்றிக்கு முன்பு வரை சகிக்க முடியாத எண்ணற்ற துன்பங்களை பட்ட நபி(ஸல்) அவர்கள். அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்க பாவமன்னிப்பு தேடியவர்களாக தங்களுடைய சிரத்தை தாழ்த்தியவர்களாக தான் பிறந்த பூமிக்கு மீண்டும் பல்லாயிரக்கணக்கான தன் தோழர் படையுடன் ஆராவாரமின்றி அமைதியாக தான் அமர்திருந்த ஒட்டகத்தின் கழுத்தை தொடும் அளவிற்கு தலையை குனிந்தவாறு நுழைகிறார்கள்.

பெருமைக்குரியவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே, எல்லா வெற்றியும் அல்லாஹ்வுக்கு உரியது, தனக்கு ஒன்றுமில்லை என்று எந்த ஒரு தற்பெருமையோ, அங்காரமோ இன்றி, தன்னை கொடுமைப் படுத்தியவர்களையும், கேவலப் படுத்தியவர்களையும் மன்னித்து தான் ஒட்டு மொத்த மனித சமுதாயத்திற்கு முன் மாதிரி என்பதையும், தலைவர்களுக்கெல்லாம் முன் மாதிரி என்பதையும் இவ்வுலகிற்கு நிரூபித்துக் காட்டினார்கள் நம்முடைய தலைவர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள். 

யார் எல்லாம் மக்காவில் நுழைகிறார்களோ, யார் எல்லாம் அவரவர் வீட்டில் நுழைகிறார்களோ, யார் எல்லாம் அபுசுப்யான்(ரலி) அவர்கள் வீட்டில் நுழைகிறார்களோ இவர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு என்று சொல்லி கவுரவமாக மக்காவின் உள்ளே துழைந்தார்கள், ஆனால் பெருமை இல்லை, ஆனவம் இல்லை, அட்டகாசம் இல்லை, வெற்றி முரசு சத்தமில்லை, எந்த ஒரு விளம்பரமும் இல்லை. ஒன்றே ஒன்று தான் அல்லாஹ்வின் கட்டளைக்காக பணிந்து மக்காவில் துழைந்தார்கள். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் என்று. 

நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் பணிவோடு நடந்துக்கொண்ட ஏராளமான சம்பவங்கள் உள்ளது. இது போல் நபி(ஸல்) அவர்களோடு வாழ்ந்து கவுரமிக்க, கண்ணியமிக்க, சத்தியத்தோழர்களான ஸஹாப்பாக்கள் அனைவரும்  பணிவோடு இருந்தார்கள் என்பதை ஏராளம் ஹதீஸ் தொகுப்புகளில் காணலாம். சுப்ஹானல்லாஹ்.

இவ்விலகில் இன்று பெருமையோடு வாழும் நம்முடைய வாழ்வு எப்படி உள்ளது என்பது பற்றி சிந்திக்க வேண்டாமா?

நம் வாழ்வில் பல தடவை அல்ஹம்துலில்லாஹ் என்ற வார்த்தையை நாம் சொல்லுகிறோம், என்றைக்காவது நம் மனதில் ஒரு துளி அளவு பெருமை இல்லாமல் அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் (அல்ஹம்துலில்லாஹ்) என்று சொல்லி இருப்போமா? அல்ஹம்துலில்லாஹ் சொல்லுவது ஒரு பெருமை என்ற நிலையில் தானே நாம் இருக்கிறோம்.

இன்று பெருமை என்பது எல்லா நிலைகளிலும் நம்மோடு உறவாடி வருகிறது என்பதை மறுக்க முடியாது. விட்டில் மனைவி பிள்ளைகளிடமாக இருந்தாலும், வெளியில் நண்பர்களிடமாக இருந்தாலும், அலுவலகத்தில் சக ஊழியரோடாக இருந்தாலும் நம்மை பற்றி பெருமையாக பேசி தான் மட்டும் எல்லாவற்றிலும் உயர்ந்தவன் என்று ஒரு பில்டப் கொடுப்பது என்பது அன்றாட வாடிக்கையாகிவிட்டது. இது போன்று பெருமையடிப்பதை அல்லாஹ் ஒரு போதும் விரும்பவில்லை என்பதை என்றைக்காவது உண்ர்ந்திருக்கோமா?

இன்று இஸ்லாமிய தஃவா களமும் பெருமை என்ற புற்று நோய்க்கு கொடி பிடித்து, சுவர் விளம்பரம் செய்து, பிளக்ஸ் பேனர் விளம்பரம் அடிச்சு வீண் விரயம் செய்து அனாச்சாரத்தின் உச்ச நிலைக்கு சென்று வருங்கால தலைமுறைக்கு இது தான் தஃவா களம் என்று ஒரு தவறான எடுத்துக்காட்டை தருகிறதே இது தான் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த அழைப்புப் பணியின் வழிமுறைகளா?

நாங்கள் அப்படி செய்தோம், இப்படி செய்தோம், இந்த சேவை செய்தோம், சமுதாயத்திற்கு இத்தனை சதவீதம் பெற்றுக்கொடுத்தோம், வாங்கிக் கொடுத்தோம் என்று பெருமையடிக்கும் இயக்கங்கள் இன்று தமிழகத்தில் ஏராளம் காணலாம். இது போல் ஒரு சில இயக்கங்களில் உள்ளவர்கள் “நாங்கள் மட்டும் தான் தமிழகத்தில் ஆரம்பகாலத்திலிருந்து ஏகத்துவக் கொள்கையில் உள்ளோம், மற்றவர்கள் வழி தவறியவர்கள்” என்று தங்களை உயர்த்தி பிறரை தாழ்த்தி சுய தம்பட்டம் அடிப்பது தான் நபி(ஸல்) அவர்களின் வாழ்விலிருந்து நாம் பெரும் படிப்பினையா? நான் ஆரம்ப ஏகத்துவவாதி என்று வெறும் தம்பட்டம் அடிப்பது முக்கியமா? அல்லது எந்த ஒரு சூழலிலும் பெரும்மை கொள்ளாமல், கொஞ்சம்கூட ஆனவமில்லாமல், சக முஸ்லீம்களின் மானத்தை சந்திச் சிரிக்க வைக்காமல் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த முறையில் வாழ்ந்து காட்டுவது முக்கியமா? என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும், திருந்த வேண்டும். இன்ஷா அல்லாஹ்.

நான் இன்று இணைவைப்பில் இருந்து மீண்டும் அல்லாஹ்வை வணங்கும் நல்லடியானாக உள்ளேன் இதற்கு காரணம் அல்லாஹ் ஒருவனே, அவனுக்கே எல்லா புகழும் அல்ஹம்துலில்லாஹ். நான் இன்று நிறைய சம்பாதிக்கிறேன், அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். நான் நோய் இல்லாமல் வாழ்கிறேன் அல்ஹம்துலில்லாஹ். இந்த சமுதாயத்திற்காக சேவை செய்கிறேன் இவ்வாறு செய்யத்தூண்டிய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும், நான் நிறைய தர்மம் செய்கிறேன் இது எனக்கு அல்லாஹ் கொடுத்த்து அல்ஹம்துலில்லாஹ், பெருமைக்குரியவன் அல்லாஹ் ஒருவனே நான் பெருமைக்குரியவன் அல்ல என்ற எண்ணங்கள் நம் அனைவரின் உள்ளங்களில் வர வேண்டும். இவ்வாறான எண்ணங்கள் நிச்சயம் நம்முடைய ஒவ்வொரு செயல்பாடுகளிலும் ஓர் பணிவு ஏற்படும். ஆனவத்தோடும், அகங்காரத்தோடும் வாழும் மனிதன் எவரும் இவ்வுலகில் வெற்றி பெற்றதாக ஒரு சிறப்பான வரலாற்றை நாம் காண்பது மிக மிக அறிது. பணிவோடு வாழும் மனிதனுக்கு அல்லாஹ் தரும் வெற்றி இவ்விலகிலும் மறுவுலகிலும் நிச்சயம் கிடைக்கும். இன்ஷா அல்லாஹ்.

தன் வாழ் நாட்களில் பெருமையடிக்காத நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் நிறைய படிப்பினைகள் உள்ளது. யா அல்லாஹ்! அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.
தொடரும்...
M.தாஜுதீன்

பயன் தரும் பன்மொழித் தொடர்பு-3 11

அதிரைநிருபர் பதிப்பகம் | February 18, 2014 | ,

தூரக் கிழக்கு நாடுகளுள் கல்வித் தரத்தில் உயர்ந்தவர்கள், பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் தான் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வர். அதனால், அரபுகள், நம்மை “ரபீக்” (தோழர்கள்) என்று அழைப்பார்கள்; பிலிப்பைன்ஸ் காரர்களை, “சதீக்” (உண்மையாளர்கள்) என்பார்கள்!  சில ஆண்டுகள் சென்ற பின்னர் ஒவ்வொரு நாட்டவர்களோடும் பழகி, அவரவர் உண்மை நிலையைக் கண்ட பின்னர், எல்லாரையும் அரபிகள், “ஹராமிகள்” (கள்ளன்கள்) என்பார்கள்;  ஆனால், இந்தியர்களை உயர்வாக, நம்பிக்கைக்கு உரியவர்கள் என்று மதிப்பில் உயர்த்துவார்கள்.  இது, இப்படி இருக்கட்டும். 

பிலிப்பைன்ஸ் மொழியில் “கா முஸ்தகா” என்றால், ‘How are you?’ என்பதாம். அதற்குரிய மறுமொழி, “மபோதி” என்பதாம். பிலிப்பைன்ஸ்காரர்களுள் பெரும்பாலோர் ‘செக்ஸ்’ வக்கிர புத்தி உடையவர்கள்.  நான் இன்னொருவனிடம் சுகம் விசாரித்தபோது, அவன் அதற்கு, “மபோதிதி” என்று கூறிச் சிரித்தான்!  அருகில்  நின்றவர்களிடத்தில் அவன் சொன்ன பதிலில் ஒரு ‘தி’ மட்டும் சேர்ந்திருந்தால், அதன் அர்த்தமென்ன என்று கேட்டபோது, அவர்களும் சிரித்துவிட்டு, “அசிங்கமான பொருள்” என்றார்கள். “ச்சப் சாப்” என்றால், ‘சாப்பாடு.’  அவர்கள் அடிக்கடி சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள்.  

அவர்களுக்கு ஏதாவது இடைஞ்சல், எதிர்பாராதது நிகழ்ந்துவிட்டால், அவர்களின் வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தைகள், “பூத்தாங் கினா” என்பதேயாகும்.  இதுவே நம்மிடமிருந்து வெளிப்படுமானால், அவர்களுக்கு வருமே கோபம்!  நாம் இவர்களிடம் ‘Thanks’ சொன்னால், “salamath po” (you welcome) என்று பதில் கூறுவார்கள்.  இவர்களை இதோடு விட்டுவிடுவோம்.  மற்றவர்களுக்கும் இடமளிக்க வேண்டுமல்லவா?

எனது முப்பதாண்டு சஊதி வாழ்க்கையில், பிந்திய 22 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் கழிந்தது.  அதுவும், மொழியறிவு என்ற ‘ப்ளஸ் பாயின்ட்’ இருந்ததால்தான்.  முதல் நிறுவனத்திலிருந்து விடுபட்டு, இன்னொரு நிறுவனத்தில் வேலை தேடிய என் முயற்சியின்போது, அமெரிக்க நிறுவனமான Four Winds எனக்கு வாய்ப்புக் கொடுத்தது.  அந்த நிறுவனத்தின் நிர்வாகியிடம் வேலை கேட்டுக்கொண்டிருந்த நேரத்தில், அவருக்கு ஒரு போன் வந்தது.  ஜித்தாவிலிருந்து ரியாதுக்குச் சில பொருள்களை ஏற்றிக்கொண்டு ஒரு சரக்கு வாகனம் அப்போது வந்திருந்தது.  ஓட்டுனர் சூடானி.  அந்த மேனேஜரோ அமெரிக்கர்.  அலுவலகத்திற்கு எப்படி வரவேண்டும் என்ற ‘ரூட்’ சொல்லவேண்டும் இந்த சூடானிக்கு.

“Do you know Arabic” என்று அந்த மேனேஜர் என்னிடம் கேட்டார்.  “தெரியும்” என்றவுடன், போனைக் கையில் தந்து, “இந்த ஆளுக்கு இங்கு வருவதற்கான ரூட் சொல்லிக்கொடு” என்றார்.  நான் சொன்ன அடையாளங்களை வைத்து சரக்கு வாகனமும் வந்து சேர்ந்தது.  இந்த நிகழ்வே அந்தக் கம்பெனியில் எனக்கு நீண்ட காலப் பணியமர்வைத் தந்தது!

அடுத்துச் சந்தித்த அந்நிய நாட்டார், இந்தொநேஷிகள்.  “சூடா மாக்கான்” என்றால் ‘சாப்பாடு நல்லது’.  (மலேஷியாவில் இருக்கும் சகோ ஜாகிர் பொறுத்துக்கொள்ளவும்.)  “சலாமத் ஹரிராயா” என்பது அவர்களின் தேசிய தினத்தில் வாழ்த்துவது.  

இதற்கு அடுத்து வந்தவர்கள் பங்களாதேஷிகள். “கேமனாஷே?” என்றால், ‘எப்படி இருக்கிறீர்கள்?’ என்ற சுகம் விசாரிப்பு.  அதற்கு, “பாலூவாச்சே” (நன்றாய் உள்ளேன்) என்பது பதில்.  இந்த நாட்டுக்காரர்கள் வசிக்கும் ‘கேம்ப்’களில் வசிப்பவர்கள் இன்னும் நன்றாக அந்த மொழியை அறிய வாய்ப்புண்டு.

நான் ஒரு தடவை விடுப்பில் வந்து, சென்னை விமான நிலையக் customs சோதனை வரிசையில் நின்றபோது, எனக்கு முன்னால் நின்ற பையன் பங்களாதேஷ் பாஸ்போர்ட்டைக் கையில் வைத்து நின்றான். அப்போது சவூதியா விமானத்தில் வந்து இறங்கியவர்கள்தான் அனைவரும்.  அந்த பங்களாதேஷ் பையன் வித்தியாசமாக எனக்குத் தோன்றினான். “நீ பங்காளிதானே?” என்றேன்.  ‘ஆமாம்’ என்று தலையசைத்தான்.  “நீ ஏன் இந்த வரிசையில் வந்தாய்” என்று கேட்டதற்கு, “உங்க மதராசைப் பார்க்க ஆசையாய் இருந்தது.  என் வெக்கேஷனைக் கழிக்க நண்பர்களோடு வந்தேன்” என்றான் தமிழில்!  இதற்குக் காரணம், அவன் வசித்த கேம்பில் தமிழ் நாட்டு லேபர்கள்தான் அதிகம் பேர்.  இவனும் ஓரிருவர் மட்டுமே பங்காளிகள்.  அதுவே அவனைத் தமிழ் கற்றுக்கொள்ளச் செய்தது!  

1990களில் நான் Dammam Branch Manager பொறுப்பில் வந்தபோது, எனக்குக் கீழ் Operations Manager பொறுப்பில் இருந்தவர் சோமாலியா நாட்டவர்;  பாதுகாப்பு கருதி, தன் அண்டை நாடான கென்யாவில் குடியுரிமை பெற்றவர்.  அவரிடம், “ஹா பாரி காணி” (How are you?) என்றால், “மிஜோரி” (நன்று) என்று பதில் கூறுவார்.

இதுவரை நாம் கண்டுவந்தது, மொழியறிவு.  இனி பல நாட்டாரின் பண்பாடு பற்றி அறிவோம், இன்ஷா அல்லாஹ்.

அதிரை அஹ்மது

கண்கள் இரண்டும் - தொடர் - 25 8

அதிரைநிருபர் பதிப்பகம் | February 17, 2014 | ,


கண்தானம், சிறுநீரகதானம் செய்வதில் இஸ்லாமிய சட்ட அறிஞர்களிடம் நெருக்கமான கருத்துக் காணப்பட்டாலும் இரத்ததானம் விஷயத்தில் கருத்து வேறுபாடு உள்ளதால் அதையும் விளக்குவோம். இந்த கருத்து வேறுபாடு ஏற்படக் காரணம் இஸ்லாம் அனுமதிக்கப்பட்ட உணவுகள் விலக்கப்பட்ட உணவுகளை தரம் பார்த்து அறிவிக்கின்றது. விலக்கப்பட்ட உணவுகளைக் கூறும் வசனங்களில்...

''(தானாக) செத்தது, பன்றியின் இறைச்சி, இரத்தம், இறைவன் பெயர் கூறாமல் அறுக்கப்பட்டது''... என்று பட்டியல் கூறப்படுகிறது (பார்க்க அல்குர்அன்- 5:3, 2:123, 16:115 ஆகிய வசனங்கள்) 

இதில் இறைவன் இரத்தத்தைத் தடுத்துள்ளான் எனவே இரத்தமாற்று சிகிச்சைக்கு நமது இரத்தத்தை தானம் செய்யக்கூடாது என்பது சில அறிஞர்களின் வாதம்.

''உங்கள் மீது விலக்கப்பட்டது'' என்று இறைவன் தடுத்துள்ள பொருள்கள் உணவாக உட்கொள்ளப்படுவதைத்தான். அதாவது இரத்தத்தை உணப்பொருளாகப் பயன்படுத்தாதீர்கள் என்பதுதான் அந்த வசனத்தின் பொருள். இரத்தத்தை அப்படியே குடிக்கும் மனிதர்களும் வறுத்து பொரித்து சாப்பிடும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இறைவன் இதைத்தான் தடுக்கிறான்.

இரத்த மாற்று மருத்துவம் என்பது உணப்பொருள் போன்று வாய்வழியாக நடப்பதல்ல. நரம்புகள் வழியாக உள்ளே செலுத்தப்படுகிறது. இதை அந்த வசனங்கள் தடுக்கவில்லை என்பதை சிந்தனையாளர்கள் விளங்கலாம். தடுக்கப்பட்ட உணவுகளைக் கூறும் வசனங்களில் இறுதியில் இறைவன்... ''வலியச் செல்லாமலும் வரம்பு மீறாமலும் எவராவது நிர்ப்பந்திக்கப்பட்டு தடுக்கப்பட்டவற்றை பயன்படுத்தினால் அவர் மீது குற்றமில்லை'' என்று முடிக்கிறான்.

தடுக்கப்பட்டவற்றை சாப்பிட்டுத்தான் பார்ப்போமே... என்ற நப்பாசையில் அதை நெருங்காதீர்கள் உண்மையிலேயே நெருக்கடி சூழ்நிலை உருவாகி பயன்படுத்த வேண்டி வந்தால் பயன்படுத்துங்கள் குற்றமில்லை என்கிறான் இறைவன். ஒருவருக்கு இரத்தம் தேவை என்ற சூழ்நிலை உருவாகும்போது அதுதான் தலையாய நிர்ப்பந்தம். 

இத்தகைய நிர்ப்பந்தங்களில் நமது இரத்தத்தை பிறருக்குக் கொடுப்பதோ அவர் அந்த இரத்தத்தை தம் உடலுக்குள் செலுத்த அனுமதிப்பதோ எத்தகைய தடையுமில்லாத பெரிதும் அனுமதிக்கப்பட்ட செயலாகும்.  "ஒரு மனிதன், தன் வாழ்க்கைக்கு பிறகும் இந்த உலகத்தை பார்க்க வேண்டும் என்றால் அது கண் தானத்தால் மட்டுமே முடியும். கண் தானம் என்பது நாம் ஒவ்வொருவரின் கடமையாகவும் உள்ளது."

கண், கிட்னி போன்ற சில மனித உறுப்புக்களை பிற மனிதர்களுக்கு பொருத்தி மருத்துவம் செய்யும் முறை தற்காலத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்த நவீன முறைகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இருக்கவில்லை. எனவே உலக விஷயத்தில் இது போன்ற முன்னேற்றங்கள் ஏற்பட்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இந்த முறை இருந்ததா? என்று கேட்கக் கூடாது. மாறாக இஸ்லாத்தின் சட்ட திட்டங்களுக்கு இவை எதிராக இருக்கின்றதா? என்று மட்டும் பார்க்க வேண்டும். 

நவீன முறைகள் இஸ்லாமியச் சட்ட விதிமுறைகளுக்கு எதிராக இல்லாவிட்டால் அவை அனுமதிக்கப்பட்டதாகி விடும். கண், கிட்னி, இரத்தம் போன்றவற்றை தானமாக கொடுத்து பிறரை வாழவைப்பதை தடை செய்யும் விதமாக குர்ஆன் ஹதீஸில் எந்த சான்றும் இடம் பெறவில்லை. 

மாறாக மனித உயிரை வாழச் செய்வது என்ற அடிப்படையில் இது ஒரு நல்லறமாகும். காலம் முழுதும் இருளில் மூழ்கியவன் கண்பார்வை கிடைத்ததும் நிச்சயம் அவன் அதைக்கொண்டு நல்ல வழிகளின் பயண் படுத்துவானே அல்லாமல் தீய வழியிகளில் பயண்படுத்த துளிகூட விரும்பமாட்டான் ஏனெனில் அவைகள் இல்லாமல் இருக்கும்போது அவர்கள் அனுவபவித்த கஷ்ட்டம் அவர்களுக்குத்தானே தெரியும்.

சிலர் சரியான மார்க்க அறிவு இல்லாமல் மனித உயிரைக் காக்கும் இது போன்ற உறுப்பு தானங்களை எதிர்த்து வருகின்றனர். இவர்களுக்கோ இவர்களின் உறவினர்களுக்கோ பிறருடைய உறுப்பைப் பொறுத்தினால் தான் வாழ முடியும் என்ற நிலை இருந்தால் அப்போது இவர்கள் உறுப்பு தானத்தை எதிர்க்க மாட்டார்கள். இந்த சூழ்நிலையில் அனைத்து மனிதனும் மன உறுத்தலின்றி இதை ஏற்றுக் கொள்வான்.

கண் புரை அறுவை சிகிச்சை செய்தவங்களோ, கிளக்கோமா இருந்தவங்களோ, சுகர் பிரஷரினால் ரெடினல் சிகிச்சை செய்தவ்ர்களோ  எது செய்திருந்தாலும் கண்களை தானமாகத் தரலாம். ஏன்னா, கண்களை நாம் எடுத்தால் கூட கண் பார்வை இழந்தவங்களுக்கு நாம பொருத்தப் போவது கருவிழியைத்தான். இது கருவிழி மாற்று சிகிச்சை. கார்னியல் டிரான்ஸ்ப்ளேண்ட் சர்ஜரி. மற்ற பிரச்சினை இருக்கிறவங்களுக்கும் கண்தானம் செய்யலாம்

கொயட் ரேர் கண்டிஷனில் இது மாதிரி நடக்கலாம். இறைவனின் படைப்பில் கண்களின் படைப்பே பெரிய விஷயம். ஒருவரின் கருவிழியை இன்னொருவருக்கு பொருத்தலாம். அது சரியாகப் பொருந்தும். இரத்த தானத்திலாவது ஒரு குரூப் இரத்தம் இருக்கிறவங்களுக்கு அதே குரூப் இரத்தம் தான் தானம் கொடுக்க முடியும். கண்களைப் பொருத்தவரையில் மகத்தான விஷயம் என்னன்னா பெரியவங்க கண், சின்னவங்க கண் என்ற பாகுபாடு இல்லாமல் யாருடைய கருவிழியையும் யாருக்கு வேண்டுமானாலும் வயது வித்தியாசமின்றி பொருத்தலாம். ரொம்ப சின்ன குழந்தைங்க இல்லைன்னா ரொம்ப வயது முதிர்ந்தவங்களுடையது மட்டுமே சில விஷயங்களுக்கு பொருந்தாது. பொதுவாகப்  பாத்தீங்கன்னா எல்லோருடையதும் எல்லோருக்கும் பொருந்தும். சுலபமாக இருக்கும். ரேர் கண்டிஷன்ல ஒருவருடைய கருவிழி இன்னொருத்தருக்கு ஒத்துக்காம ஏத்துக்காம இருக்கும். கிராப்ட் ரிஜக்ஷன் னு சொல்வோம். அந்த மாதிரி சமயங்களில் இரண்டாவது கருவிழி அறுவை சிகிச்சை செய்கிறோம். அப்போது செட்டாக வாய்ப்பிருக்கிறது.

அடுத்த தொடரிலும் கண்தாணம் தொடரும் உடல் தானம் பற்றி இஸ்லாத்தின் நிலைபாடு என்ன என்பது பற்றி இடம் பெறும் யாரும் படிக்க தவறிவிடாதீர்கள்
(தொடரும்)
அதிரை மன்சூர்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

OUR YOUTUBE CHANNEL

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Labels

அதிரை (412) கவிதை (353) இபுராஹீம் அன்சாரி (206) Alaudeen.S (195) அதிரை அஹ்மது (180) அதிரை செய்திகள் (143) ஜாஹிர் ஹுசைன் (142) MSM (136) சபீர் (127) சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக் (117) அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து (113) இஸ்லாம் (103) தாஜுதீன் (94) ஷாஹுல் ஹமீது (89) அபுஇபுறாஹிம் (69) நபிமணியும் நகைச்சுவையும் (65) இக்பால் M.ஸாலிஹ் (62) j1 (59) கல்வி விழிப்புணர்வு (57) ரமளான் (55) அதிரைநிருபர் (52) விழிப்புணர்வு (47) கல்வி (45) உமர் தம்பி (43) P.பகுருதீன் (41) அதிரை மன்சூர் (41) அதிரை மெய்சா (40) இன்று (40) படிக்கட்டுகள் (40) அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (39) கண்கள் இரண்டும் (39) a1 (37) crown (37) அரசியல் (37) நாளை (37) நேற்று (37) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (35) அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் (34) ADT (33) அதிரை அஹ்மத் (33) பேறு பெற்ற பெண்மணிகள் (33) சாஹுல் ஹமீது (32) S.அலாவுதீன் (31) ie (30) p1 (30) பேசும் படம் (30) மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் (30) வாவன்னா (28) தேனீ (27) SMF (26) அதிரை முஜீப் (26) மருத்துவம் (26) வரலாறுகள் (26) வழக்குகள் (26) ஹஜ் (26) கவியன்பன் (25) தேர்தல் (24) k1 (22) அதிரை தாருத் தவ்ஹீத் (22) இப்னு அப்துல் ரஜாக் (22) தமிழகம் (22) தமிழ் (22) துபாய் (22) நூருத்தீன் (22) பெண்கள் (22) யுனிகோட் (22) h1 (21) இபுராஹிம் அன்சாரி (21) ஏடு-இட்டோர்-இயல் (21) நினைவுகள் (21) நோன்பாளிகளே (21) பாலஸ்தீனம் (21) அபூஇப்ராஹீம் (20) என் இதயத்தில் இறைத்தூதர் (20) ஜமீல் M.சாலிஹ் (20) Sஹமீது (19) இந்தியா (19) எச்சரிக்கை (19) சேக்கனா M.நிஜாம் (19) மழை (19) adirai (18) editorial (18) loan (18) அதிரை சித்தீக் (18) கந்தூரி (18) அபுல்கலாம் (17) இயற்கை இன்பம் (17) சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக் (17) நோன்பு (17) மரணம் (17) ரமழான் (17) ஹஜ் பெருநாள் (17) ஆசிரியர் தினம் (16) கவிதை ஓர் இஸ்லாமிய பார்வை - ஆய்வு (16) பழகு மொழி (16) புதுசுரபி (16) Zakir Hussain (15) harmys (15) அபு ஈஸா (15) அப்துல் ரஹ்மான் (15) அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா (15) வரலாறு (15) Sabeer (14) ஊடகம் (14) காணொளி (14) படிப்பு (14) பெருநாள் (14) ஷஃபி அஹ்மது (14) M.H.ஜஹபர் சாதிக் (13) shameed (13) அதிரை என்.ஷாஃபாத் (13) அப்பா (13) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் (13) கடன் (13) சத்தியமார்க்கம்.com (13) சிந்தனை (13) சிந்திக்க (13) MHJ (12) ஆரோக்கியம் (12) ஒற்றுமை (12) சகோதரியே (12) தண்ணீர் (12) தாருல் இஸ்லாம் ஃபேமிலி (12) பேரூராட்சி (12) மரபு (12) மு.செ.மு.சஃபீர் அஹமது (12) யாசிர் (12) ரஃபீக் (12) AM (11) s1 (11) அனுபவம் (11) ஆமினா முஹம்மத் (11) ஒரு புத்தகம் பிறக்கிறது (11) சரிதை (11) சென்னை (11) தொடர் (11) பேசும்படம் (11) மனு நீதி (11) முஹம்மது ஃபாருக் (11) Sabeer AbuShahruk (10) aknk (10) kavithai (10) அதிரை அஹமது (10) அதிரை ஷஃபாத் (10) அதிரைநிருபர் பதிப்பகம் (10) அமீரகம் (10) அமெரிக்கா (10) அலசல் (10) ஆய்வு (10) உதவி (10) ஏக்கம் (10) கலாம் (10) தொழில் முனைவோர் (10) படிகட்டுகள் (10) பெற்றோர் (10) முகம்மது அலி ஐ.பீ.எஸ் (10) முஹம்மது யாசிர் (10) விவாதக்களம் (10) SMS (9) அரும்புப் பாட்டு (9) ஊடக போதை (9) குறுந்தொடர் (9) சிந்திக்கத் தூண்டும் சித்திரங்கள் (9) சுகாதாரம் (9) ஜகாத் (9) துஆ (9) தேடல் (9) நோன்பு பெருநாள் (9) பரீட்சை (9) பிரார்த்தனை (9) பேட்டி (9) பேரன் (9) மனித குலம் (9) ரமழான் சிந்தனை (9) வினாடி வினா (9) வேலை (9) ஹதீஸ் (9) LMS (8) ZAEISA (8) msm rafiya (8) poem (8) அதிரைக்காரன் (8) அபூ ஆசிஃப் (8) அப்துல் காதர் (8) அஹ்மது இர்ஷாத் (8) இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளி (8) இளமை (8) இஸ்லாமியப் பெண்மணி (8) எழுத்துப் பிழைகள் (8) ஏற்றம் (8) கடற்கரைத் தெரு (8) கலைக்களஞ்சியம் (8) காது (8) சத்தியமார்க்கம் (8) செய்தி (8) தக்வா பள்ளி (8) தன்னம்பிக்கை (8) தொழுகை (8) நண்பர்கள் (8) நூல் வெளியீடு (8) பள்ளிவாசல் (8) பழைய நினைவுகள் (8) பாலஸ்தீன் (8) மரபு கவிதை (8) மலேசியா (8) மாணவர்கள் (8) மாலிக் (8) முகமது யாசிர் (8) வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் (8) விபத்து (8) விவாதம் (8) வேண்டுகோள் (8) ARH (7) MSM MEERASHA RAFIA (7) SKM ஹாஜா முகைதீன் (7) SKM-H (7) history (7) அப்துர்ரஹ்மான் (7) அப்துல் மாலிக் (7) அம்மா (7) அல்குர்ஆன் (7) அல்லாஹ் (7) உணவு (7) கட்டுரையாளர் (7) கண் (7) கம்பன் (7) கல்வியாளர்கள் (7) காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி (7) கால்பந்து (7) குழந்தை (7) சிந்திப்போம் (7) சின்னகாக்கா (7) சிரியா (7) தொண்டை (7) நன்றி (7) நபிமொழிகள் (7) பயணம் (7) பள்ளிக்கூடம் (7) மின்சாரம் (7) முஸ்லிம் (7) மொழி (7) விளக்கம் (7) ஸஹாபாக்கள் (7) 2012 (6) 2014 (6) A.R.அப்துல் லத்தீஃப் (6) AEAC (6) B. Ahamed Ameen (6) Dubai (6) M H Jahabar Sadik (6) N.ஜமாலுதீன் (6) Shahnaz Sabeer Ahmed (6) UAE (6) ashik (6) m2 (6) u1 (6) அதிரை தென்றல் (Irfan Cmp) (6) அதிரை நிருபர் (6) அலசல் தொடர் (6) ஆதங்கம் (6) இதிகாசங்கள் (6) இத்தியாதி இத்தியாதி (6) இப்ராஹிம் அன்சாரி (6) இப்ராஹீம் அன்சாரி (6) இரத்தம் (6) ஊழல் (6) ஓட்டு (6) கந்தூரி போதை (6) கல்லூரி (6) கிரவ்ன் (6) கோடைகால பயிற்சி (6) தடை (6) திருமணம் (6) நகைச்சுவை (6) நட்பு (6) நண்பன் (6) நானும் ஆஃப்ரிக்காவும் (6) நூலகம் (6) புத்தகம் (6) போதை (6) மக்கா (6) முதுமை (6) முஸ்லீம்கள் (6) முஹம்மத் ஆஷிக் (6) மூக்கு (6) வணக்கம் (6) வளைகுடா (6) விமர்சனம் (6) ஷிஃபா மருத்துவமனை (6) AEM (5) SKM - H (5) Sஹமீத் (5) m1 (5) moon (5) umar history (5) அதிரை ஈத்மிலன் (5) அதிரை ஹாலித் (5) அபூஇப்ராஹிம் (5) அறிவியல் (5) அழகு (5) அழைப்பு (5) ஆங்கிலப் புத்தாண்டு (5) ஆஸ்திரேலியா (5) இடஒதுக்கீடு (5) இயற்கை (5) இரவு (5) இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா (5) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (5) உறவு (5) கணினி (5) கண்டனம் (5) கனவு (5) கவிஞர் (5) கவிதை ஆய்வு (5) காலம் (5) குர்ஆன் (5) குழந்தைகள் (5) சட்டமன்றம் (5) சந்திப்பு (5) சபீர் அஹ்மது அபுஷாரூக் (5) சான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வரை (5) சேமிப்பு (5) தக்வா (5) தாய் (5) தொட்டால் தொடரும் (5) தொலைக்காட்சி (5) நாசர் மவ்லவி (5) நீதி (5) பழமை (5) பாசம் (5) பாபர் மஸ்ஜித் (5) பாலியலுக்கு பலியாகாதே (5) பெண்ணுரிமை (5) பொருளாதாரம் (5) போட்டி (5) போராட்டம் (5) மண்ணறை (5) மனைவி (5) மற்றும் (5) மாட்டுக்கறி (5) மாற்றி யோசி (5) முஹம்மது பாரூக் (5) மூடநம்பிக்கை (5) மூன்றாம் கண் (5) ரஃபியா (5) ரியல் எஸ்டேட் (5) வட்டார உரையாடல் (5) வாழ்க்கை (5) விருந்து (5) விழி (5) வெற்றி (5) வேலை வழிகாட்டி (5) ஸதக்கதுல்லாஹ் (5) 2013 (4) B. Ahamed Ameen (4) EA (4) M. தாஜுதீன் (4) MSM மீராஷா ரஃபியா (4) MSM(n) (4) adirainirubar (4) eo1 (4) syria (4) v1 (4) அதிரை அறிஞர் (4) அதிரை பைத்துல்மால் (4) அதிரை மீரா (4) அபுஇப்ராஹிம் (4) அபுநூரா (4) அரபி (4) அறிவுரை (4) அவதூறு (4) அஹ்மது ஆரிஃப் (4) ஆங்கிலம் (4) இன்றைய சவால் (4) இபாதத் (4) இபுறாஹீம் நபி (4) இமாம் ஷாஃபி ஸ்கூல் (4) இலக்கியம் (4) இலவசம் விலை போனதே (4) இஸ்லாமிய வங்கி (4) ஈகை (4) ஈகைத் திருநாள் (4) ஈத் பெருநாள் (4) ஊரில் மழையாமே (4) ஊர்வலம் (4) எதிர்ப்பு (4) கடிதம் (4) கட்சிகள் (4) கட்டுரை (4) கலக்கல் (4) கல்வி வழிகாட்டி (4) கா.மு.மே.பள்ளி (4) காது கொடுத்து கேளுங்கள் (4) குடும்பம் (4) குழந்தை வளர்ப்பு (4) குழந்தைகளுக்காக (4) கேமரா (4) கோரிக்கை (4) கோவை அய்யூப் (4) சஹாபாக்கள் (4) சிட்னி (4) சுதந்திரம் (4) செக்கடிக் குளம் (4) டி.வி. (4) டெல்லி (4) தனிமை (4) தமாம் (4) தமிழ்மாமணி (4) தமுமுக (4) திருச்சி (4) தெரு (4) தோல்வி (4) தோழன் (4) நடை (4) நபி முஹம்மது (ஸல்) (4) நம்பிக்கை (4) நிறைவு (4) நிலவு (4) நீர் (4) நேரம் (4) நோன்பு கஞ்சி (4) பயணங்களில் பரவசம் (4) பயன் தரும் பன்மொழித் தொடர்பு (4) பழக்கம் (4) பாங்கு (4) பாதுகாப்பு (4) பிறை (4) புன்னகை (4) புரளி (4) புறம் (4) பெண் (4) பெண்மை (4) பேயோடு ஒரு ஹாய் (4) மகன் (4) மது (4) மலேஷியா (4) மலை (4) மலையேறலாம் (4) மாற்றம் (4) யார் (4) ரமலான் (4) லஞ்சம் (4) லண்டன் (4) லெ.மு.செ.அபுபக்கர் (4) லைலதுல் கத்ர் (4) வரதட்சனை (4) வலைப்பூக்கள் (4) வாப்பா (4) வாழ்கை (4) வாழ்கைப் பயணத்தில் உறவுகள் (4) வாழ்வியல் (4) விலைவாசி (4) விளையாட்டு போட்டிகள் (4) வெளிநாடு (4) வெளிநாட்டு வாழ்க்கை (4) ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (4) ஷேக் முகைத்தீன் (4) ஹைதர் அலி ஆலிம் (4) -அபூஹாஷிமா (3) 1977 (3) 23 (3) AIM (3) CMN SALEEM (3) Darul Islam Family (3) Dhua (3) TAMS (3) aamf (3) abu easa (3) avnv (3) eye care (3) shafi ahamed (3) sv (3) tmmk (3) ஃபித்ரு (3) அகம் (3) அகல இரயில் பாதை (3) அச்சம் (3) அஜிஜுதீன் (3) அண்ணா (3) அதிராம்பட்டினம் (3) அதிரை வரலாறு (3) அன்புடன் மலிக்கா (3) அபு இஸ்மாயில் (3) அபுஈசா (3) அபுசாருக் (3) அபுபக்கர் (3) அப்துர் ரஹீம் ஜமீல் (3) அமைதி (3) அரஃபா (3) அரஃபாத் (3) அறிக்கை (3) அறிவிப்பு (3) அலாவுதீன் (3) அவசரம் (3) ஆம்புலன்ஸ் (3) ஆய்வுக் கட்டுரை (3) ஆவணப்படம் (3) ஆஷிக் அஹமது (3) இசை (3) இட ஒதுக்கீடு (3) இட ஒதுக்கீடும் (3) இன ஒதுக்கீடும் (3) இனிக்க (3) இன்று ஒரு தகவல் (3) இரயிலடி (3) இரயில் (3) இர்ஷாத் (3) இறைத்தூதர் (3) இலக்கணம் (3) இலங்கை முஸ்லீம்கள் (3) இலவசம் (3) இழப்பு (3) இஸ்மாயில் நபி (3) இஸ்லாமிய ஆட்சி (3) உரையாடல் (3) உலக செய்திகள் (3) உலகம் 2010 (3) உள்ளாட்சி தேர்தல் (3) ஊக்கம் (3) எம்.காம். (3) எம்ஜிஆர் (3) ஒடுக்கு இடர் (3) ஒளரங்கசீப் (3) கடல் (3) கடுதாசி (3) கமிட்டி (3) கருகும் காதல் (3) கருணாநிதி (3) கலந்துரையாடல் (3) கல்வித் தந்தை (3) கா.மு.கல்லூரி (3) காதிர் முகைதீன் (3) குடி (3) குணம் (3) குற்றாலம் (3) குளம் (3) குளிர் (3) குழப்பம் - ஆலோசனை - தீர்வு (3) கூடங்குளம் (3) கேள்விகள் (3) கொடைக்கானல் (3) சபிதா காதர் (3) சமோசா (3) சம்சுல் இஸ்லாம் சங்கம் (3) சவுதிஅரபியா (3) சஹன் (3) சாகுல் ஹமீத் (3) சாப்பாடு (3) சிக்கனம் (3) சிங்கப்பூர் (3) சுத்தம் (3) சுனாமி (3) செக்கடி மோடு (3) செலவு (3) ஜமீல் M.ஸாலிஹ் (3) டாக்டர் (3) த.மு.மு.க. (3) தந்தை (3) தமிழ் வளர்ந்த நினைவுகள் (3) தர்கா (3) தர்பியத் (3) தாய்மை (3) தினசரிகள் (3) திமுக (3) தியாகத் திருநாள் (3) திருக்குர்ஆன் (3) திறன் (3) தீவிரவாதம் (3) தொப்பி (3) தோழர்கள் (3) நடுத்தெரு (3) நபி (3) நாஞ்சிலன் (3) நிஜாம் (3) நினைக்க (3) நிம்மதி (3) நேர்மை (3) நேர்வழி (3) நோய் (3) படிப்பினை (3) பட்ஜெட் (3) பட்டம் (3) பணம் (3) பத்ரு யுத்தம் (3) பயணக் கட்டுரை (3) பயம் (3) பயான் (3) பயிற்சி முகாம் (3) பரிசு (3) பாராளுமன்றம் (3) பாலியல் வன்முறை (3) பினாங்கு (3) பிப்ரவரி 14 (3) புண்ணியவான் (3) பெண் கல்வி (3) பெருநாள் சந்திப்பு (3) பேய் (3) பொய் (3) மகள் (3) மதமாற்றம் (3) மதீனா (3) மதுவிலக்கு (3) மனது (3) மனிதம் (3) மனிதவளம் (3) மன்னிப்பு (3) மலரும் (3) மவுனம் (3) மஹர் (3) மாடு (3) மாட்டுகறி (3) மார்க்க சொற்பொழிவு (3) மார்க்கக் கல்வி (3) மின்னஞ்சல் (3) மு.செ.மு. (3) முகநூல் (3) முத்துப்பேட்டை (3) முன்னாள் மாணவர்கள் (3) முற்போக்கு கூட்டணி (3) முஸ்லிம் சாதனை (3) மூக்கு கண்ணாடி (3) மூளை (3) மெதுவடை (3) மெளனம் பேசியதே (3) மேகம் (3) மோடி (3) ரசனை (3) வட்டி (3) வதந்தி (3) வரவேற்பு (3) வலைக்காட்சி (3) வாக்கு கொடுத்தல் (3) வாங்க (3) வாடா (3) வாழ்த்து (3) வாவன்னாசார் (3) விடுதலை (3) விடுப்பு (3) விண்ணப்பம் (3) வித்தியாசமானவர்கள் (3) வின்வெளி (3) விருந்தோம்பல் (3) விவாதக் களம் (3) வேகம் (3) வேலை வாய்ப்பு (3) ஷேக் ஜலாலுதீன் (3) ஸஹாபிய பெண்கள் (3) ஹராம் (3) +2 தேர்வு முடிவுகள் (2) 06122010 (2) 10 வகுப்பு 2010 (2) 1995 (2) 80/90 (2) ABM (2) AET (2) December-6 (2) ECR சாலை (2) ENT (2) HAJ 2012 (2) IAS தேர்வு (2) IPL (2) KMHSc. (2) KVS. (2) Lives (2) M.Y.முஹம்மத் (2) Motor Bike Riders (2) NAS (2) Rafeeq (2) Risky (2) SELAMAT HARI RAYA (2) Shahnaz (2) Student (2) U.A.E. (2) affa (2) air india (2) alumni (2) an news (2) book (2) broad gauge (2) camera (2) cmp (2) cute (2) decision (2) diabetes (2) do not disturb (2) dua (2) eye (2) facebook (2) flash back (2) food (2) india (2) library (2) live (2) making of படிக்கட்டுகள் (2) marriage (2) mk1 (2) motivation (2) mychoice (2) networking (2) news (2) password (2) peer mohammed (2) politics (2) prayer (2) q12 (2) ramadan (2) shafi (2) silence please (2) tntj (2) walking (2) www.adirainirubar.in (2) yasir (2) youth (2) ஃபெஸ்டிவல் (2) ஃபோட்டோகிராஃபி (2) அ.ர.ஹிதாயத்துல்லாஹ் (2) அஃப்சல் ஹுசைன் (2) அசத்தல் மொழி (2) அசத்தல் மொழிகள் (2) அச்சு (2) அணு உலை (2) அதி அழகு (2) அதிமுக (2) அதிரை உலா (2) அதிரை எக்ஸ்பிரஸ் (2) அதிரை கல்விச் சேவையகம் (2) அதிரை பசுமை 2020 (2) அதிரை மொழி (2) அதிரைகாரன் (2) அதிரைத் தென்றல் (CMP Ifran) (2) அதிரைநிருபரின் நிழல்கள் (2) அதிரைபட்டினம் (2) அதிரைப்பட்டினம் (2) அதிரைமணம் (2) அதிரையின் முத்திரை (2) அது ஒரு அழகிய மழைக்காலம் (2) அநீதி (2) அந்நிய முதலீடு (2) அந்நியர் முதலீடு (2) அனைத்து முஹல்லா (2) அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (2) அபூ முஸ்அப் (2) அபூசுஹைமா (2) அபூஹாமித் (2) அபூஹாஷிமா (2) அப்துல் ரசீத் ஆலிம் (2) அமானிதம் (2) அம்மாபட்டினம் (2) அம்மார்(ரலி. அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (2) அரசியல் ஜெயலலிதா (2) அரசியல்வாதி (2) அரசு (2) அரசு வேலை (2) அர்த்தம் (2) அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (2) அறிந்தும் அறியாமலும் (2) அறிமுகம் (2) அற்புதம் (2) அலங்காரம் (2) அலி (2) அலுவலகம் (2) அலைபேசி (2) அல்மனார் செண்டர் (2) அழுத்தம் (2) அழைப்புப் பணியின் அவசியம் (2) அழைப்புப்பணி (2) அவனா யிராதே (2) ஆகாயம் (2) ஆசிட் (2) ஆசிரியர் பணி (2) ஆசை (2) ஆசைகள் (2) ஆடை (2) ஆட்டோ (2) ஆணாதிக்கம் (2) ஆராய்ச்சி (2) ஆஷிக் முஹம்மத் (2) இணையத்தில் வலைவீச்சு (2) இணையம் (2) இதுதான் இஸ்லாம் (2) இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு (2) இந்திய முஸ்லீம்கள் (2) இபுறாகீம் அன்சாரி (2) இப்போது எல்லோரும் எழுதலாம் (2) இயக்க மயக்கம் (2) இயக்கம் (2) இயற்கை சீற்றம் (2) இருதய சிகிச்சை (2) இறப்பது (2) இறுதி கடமை (2) இறைவனிடம் (2) இறைவன் (2) இறைவழிபாடு (2) இலக்கிய மன்றம் (2) இலங்கை (2) இலைகள் (2) இவனா யிரு (2) இவர்கள் (2) இவ்வுலகம் அழிவை நோக்கி செல்கிறதா? (2) இஸ்லாத்தில் குற்றவியல் சட்டங்கள் (2) இஸ்லாமிய வருடப்பிறப்பு (2) இஸ்லாமியப் பொருளாதரம் (2) ஈத்கா (2) ஈமான் (2) ஈழம் (2) உடற்பயிற்சி (2) உணர்ந்தவை (2) உண்மை வரலாறு (2) உண்மைகள் (2) உதவி திட்டம் (2) உன்னப்பனின் விண்ணப்பம் (2) உம்மா (2) உம்மு சுலைம்(ரலி) (2) உரிமை (2) உருவப்படம் வரைதல் (2) உலகம் 2011 (2) உளவு (2) உழைப்பில்லா உடல்களும் (2) ஊடக தீவிரவாதம் (2) ஊட்டி (2) ஊர் (2) ஊர் நலன் (2) எங்க சார் (2) எங்க டீச்சர் (2) எங்கே அமைதி (2) எண்ணங்கள் (2) எதற்காக? (2) எதிரிப்பு (2) எதில் கஞ்சத்தனம் (2) எத்தி வைப்பு (2) எத்தியோப்பியா (2) எந்தப் பாதை உங்கள் பாதை? (2) எனக்குத் தெரிந்த இஸ்லாம் (2) என்பது (2) எம்.ஃபில். (2) எழுத்து (2) எழுத்தும் (2) ஏன் ஹிஜாப் (2) ஏர் இந்தியா (2) ஏழை (2) ஐரோப்பா (2) ஒப்பந்தம் (2) ஒருங்கிணைந்த (2) ஒருங்குறி (2) ஒழுக்கம் (2) ஓடுகாலி (2) ஓர் இஸ்லாமிய பார்வை (2) கஞ்சி (2) கஞ்சி வருதப்பா (2) கடன் தள்ளுபடி (2) கடன் வாங்கலாம் வாங்க (2) கடற்கரை (2) கடற்கரைத் தெரு கந்தூரி (2) கடற்கரைத்தெரு புளியமரம் (2) கடவுச் சொல் (2) கடை (2) கணவன் (2) கண்டிக்கிறோம் (2) கண்தானம் (2) கதையல்ல நிஜம் (2) கந்தூரி தடை (2) கபுர் (2) கப்ரு (2) கருமையும் (2) கலரி (2) கலைஞன் (2) கல்யாணம் (2) கல்வி முறை (2) கல்வி விருது (2) கல்வியும் கற்போர் கடமையும் (2) கவனம் (2) கவிக்கோ அப்துல் ரகுமான் (2) கா.அப்துல் கபூர் எம்.ஏ. (2) காட்சி (2) காட்டுப் பள்ளி (2) காணொளி உரை (2) காதர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி (2) காமராசர் (2) காற்று (2) காலை (2) காவல்துறை (2) காவேரி (2) கி.பி: 2011 அது ஒரு மழைக்காலம் (2) கிரிக்கெட் (2) குகை (2) குஜராத் (2) குஞ்ஞாலி (2) குடி தண்ணீர் (2) குணக்குன்று (2) குத்துச் சண்டை (2) குப்பை தொட்டி (2) குறை (2) கூட்டணி (2) கேரளா (2) கையேந்துங்கள் (2) கொசு (2) கொடுமை (2) கொண்டாட்டம் (2) கொலை (2) கொழும்பு (2) கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (2) கோபம் (2) சத்தம் (2) சபுறு (2) சமச்சீர் கல்வி (2) சமரசம் (2) சமுதாய சீர்கேடு (2) சமூக மாற்றங்கள் (2) சம்சுல் இஸ்லாம் (2) சம்பாதித்தால் (2) சர்க்கரை (2) சவால் (2) சவால்கள் (2) சஹர் (2) சாத்தியமா? (2) சான்பிரான்சிஸ்கோ (2) சிகிச்சை (2) சிதறல்கள் (2) சித்தீக் பள்ளி (2) சிந்தனை துளி (2) சின்ன வயசு (2) சிராஜ் உத்-தெலா (2) சிரிப்பு (2) சிறப்பு (2) சிலந்தி வலை (2) சீனி (2) சுயம் அறிக (2) சுர்மா (2) செயற்க்கை கோள் (2) செய்திகள் (2) செய்யுமிடத்தில் (2) செய்வீர் (2) சேவை (2) சொத்து (2) சோதிடம் (2) சோம்பேறி (2) சோறு (2) ஜஃபருல்லாஹ் (2) ஜமாஅத் (2) ஜஹபர் சாதிக் (2) ஜாஃபருல்லாஹ் (2) ஜித்தா (2) ஞாபகம் வருதே (2) டாக்டர் அப்துல்லாஹ் (2) டிசம்பர் (2) தன்னபிக்கை (2) தன்னிலை சுகாதாரம் (2) தமிழ் நாடு (2) தமிழ்நாடு (2) தமிழ்நாட்டில் (2) தலைமை ஆசிரியர் (2) தலையங்கம் (2) தலைவர் (2) தலைவர்கள் (2) தவறு (2) தாகம் (2) தாக்குதல் (2) தான தர்மம் (2) தாய்மொழி (2) திக்ரு (2) திடல் தொழுகை (2) தினம் (2) தியாகப் பெருநாள் சிந்தனை (2) தியாகம் (2) திருட்டு தடுக்க (2) திருவிழா (2) திரை (2) திறமை (2) தீ (2) தீமை (2) துணைத் தலைவர் (2) தூண்கள் (2) தூய்மை (2) தென்றல் (2) தெளிவு (2) தேர்தல் களம் (2) தேர்வு (2) தொந்தரவு (2) தொன்னூறு (2) நடுப்பக்கத்தில் நட்சத்திரம் (2) நடுவுல கொஞ்சம் நட்சத்திரங்களைக் காணோம் (2) நபி(ஸல்) (2) நம்ம ஊர் (2) நம்மளுக்கு (2) நற் குணங்கள் (2) நலமில்லா நவீனமும் (2) நாட்டு நடப்பு (2) நாணம் (2) நாற்காலி (2) நாற்பது (2) நினனவுகள் (2) நினைவூட்டல் (2) நியூயார்க் (2) நிறம் மாறும் மனிதர்கள் (2) நிறைவுரை (2) நிலநடுக்கம் (2) நூருல் இப்னு ஜஹபர் அலி (2) நூல் (2) நெசவுத் தெரு (2) நெனப்பு (2) நேபாளம் (2) நேரலை (2) நேருக்கு நேர் (2) நேர்காணல் (2) பகதூர்ஷா ஜாஃபர் (2) பகுத்தறிவாளர்களின் மதம் (2) பக்கத்து ஊர் செய்திகள் (2) பக்கீர் முஹம்மது (2) பங்கு (2) பசுமை (2) பசுமை அதிரை 2020 (2) பட்டுக்கோட்டை (2) பணி (2) பண்பு (2) பதிவர்கள் (2) பயிற்சி (2) பரிவு (2) பரீட்சை நேரம் (2) பர்ஜ் கலிஃபா (2) பர்மா தேக்கு வீட்டுக்காரர் (2) பள்ளி (2) பஷீர் அஹம்து (2) பாடம் (2) பானு என்றென்றும் (2) பாம்பன் பாலம் (2) பாருக்குள்ளே நல்ல நாடு (2) பிடித்தது (2) பின்னூட்டம் (2) பின்னூட்டவாதி (2) பிரதமர் (2) பிரதர் (2) பிரியமில்லா பிரிவு (2) பிறப்பது (2) பிறமதம் (2) பிலால் (ரலி) (2) பிலிப்பைன்ஸ் (2) புகார் (2) புகைப் பிடித்தல் (2) புகைப்பட பொழுதுகள் (2) புகைப்படம் (2) புதிய பள்ளிவாசல் (2) புதிய மத்திய அரசு (2) புதுக்கிப்படாத திருமணங்கள் (2) புதுமை (2) புரிந்துணர்வு (2) புலவர் (2) பூகம்பம் (2) பெண்ணீயம் (2) பெண்ணுக்கு வீடு (2) பெண்ணுறிமை (2) பெண்ணே (2) பெரியவர்கள் (2) பேருந்து (2) பொட்டிக்கடை (2) பொற்காலம் (2) போடுங்கள் (2) போர் அடிக்குது (2) போஸ்டர் (2) மகளிர் (2) மடமை (2) மணமகன் (2) மணமகள் (2) மணிமாலை (2) மதச்சாயம் (2) மதிப்பு (2) மதிப்புரை (2) மதிப்பெண்கள் (2) மதீனாவில் நோன்பும் பெருநாளும் (2) மந்தி (2) மனசாட்சி (2) மனனம் (2) மனு (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா ? (2) மன்றம் (2) மயக்கம் (2) மரண அறிவிப்பு (2) மரபுக் கவிதை (2) மருதநாயகம் (2) மர்யம் ஜமீலா (2) மறந்தவைகள் (2) மறுமை நாள் (2) மலர் வனம் (2) மலேசியா பெருநாள் (2) மலேஷியாவில் ரமளான் (2) மாணவமணிகளுக்காக (2) மாணவிகள் (2) மாணவியின் (2) மாது (2) மானிடா (2) மாப்புளே (2) மாயை (2) மார்க்கம் (2) மாலை (2) மாவீரன் (2) மின்சாரவாரியம் (2) மீன்கள் (2) மீள்பதிவு (2) மு.செ.மு.நெய்னா முஹம்மது (2) மு.மேக்தா (2) முகமது பாரூக் (2) முசெமு (2) முஜாஹித் (2) முடிவுகள் (2) முத்தம் (2) முன்னோர்கள் (2) மும்பை (2) முஸ்தகீம் (2) முஸ்லிம்கள் (2) முஸ்லீம் (2) முஸ்லீம் குரல் (2) முஹம்மத் அலீய் (2) முஹர்ரம் (2) மூணுக்கு வந்த டவுட்டு (2) மூனாறு (2) மூளைக்கு வேலை (2) மெரினா (2) மை (2) மையம் (2) யா அத்தஹாக் (2) யார்தான் சொல்வது (2) யாவாரம் (2) ரமலான் சிந்தனை (2) ரமளானுக்கு பின் (2) ராமாயணம் (2) ரியாஸ் அஹ்மது (2) ரிலாக்ஸ் ப்ளீஸ் (2) ரேங்க் கார்டு (2) வங்கி (2) வயோதிகம் (2) வரமா (2) வருக (2) வர்த்தகம் (2) வறுமைக்கோடு (2) வலைப்பூ (2) வலைவீச்சு (2) வழமை (2) வழிமுறைகள் (2) வழியனுப்புதல் (2) வா.உ.சிதம்பரனார் (2) வாகனம் (2) வாங்கடா (2) வாநிலை (2) வாய்க்கால் (2) வாவன்னா சார் (2) விஞ்ஞானம் (2) விதை (2) விமான பயணமும் விபரீதமும் (2) விமானப் பயணம் (2) விமானம் (2) விரயம் (2) விளம்பரங்கள் (2) விவேகம் (2) வெண்மையும் (2) வெந்நீர் ஒத்தடம் (2) வெரசன (2) வெளிச்சம் (2) வெள்ளிநிலா (2) ஷஃபான் (2) ஷப்-ஏ-அராஅத்து (2) ஷவ்வால் (2) ஷஹ்லா (2) ஷாஃபி M.I. (2) ஸதக்கத்துல்லாஹ் (2) ஸனது (2) ஸூரத்துல் பகரா (2) ஸ்ரீலங்கா விமானம் (2) ஹசினா அப்துல் பாசித் (2) ஹஜ் 2011 (2) ஹஜ் பெருநாள் சந்திப்பு (2) ஹபீப் முஹம்மத் (2) ஹலால் (2) ஹாஜா முகைதீன் (2) ஹிதாயத்துல்லாஹ் (2) ஹைதர் அலி (2) “பசு” ‘மை’பூசி அடி‘மை’ ஆகும் இந்தியா. (2) 'e'மான் (1) 'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு (1) .அதிரை (1) 10 வகுப்பு CBSE (1) 100வது நாளில் (1) 10ம் வகுப்பு (1) 1435 (1) 1600 கோடி வழங்கிய வள்ளல் (1) 1930 (1) 1970 (1) 1980 (1) 1984 (1) 1987 (1) 1993 (1) 2002 (1) 2012-13 (1) 2015 (1) 2015-2016. பட்ஜெட் (1) 2050 (1) 25000 அடி (1) 5-ம் (1) 50 வது பதிவு (1) 6 (1) 6-ம் (1) AAF (1) ABC (1) ALM ஆண்டுவிழா (1) ATCO (1) AZHAR HUSSEIN (1) Abdul Rahman (1) Albaqavi.com (1) American Adirai Forum (1) American Adirai Forum [A A F] – இரண்டாவது அமர்வு (1) Any suspended coffee (1) B.ஜமாலுதீன் (1) BBC (1) Beware of killer offers in Dubai (1) Budget 2012 (1) CMN சலீம் (1) CMண் சலீம் (1) Cancer Awareness Program (1) Cataract (1) December (1) ETA (1) Easy life leads to lazy life (1) Engineering career (1) Final Year MBBS (1) GROUP-1 (1) Glaucoma (1) Gulfnews (1) HABIT (1) HAJ 2015 (1) I am the Greatest (1) IAS (1) IFT (1) India is my country (1) Islam (1) J.A.தாஜுதீன் (1) JMC (1) KMHSSc (1) KVS (1) LOGO (1) London (1) M S M(n) (1) M.B.B.S. (1) M.L.A ரெங்கராஜன் (1) M.S.முகமது மீராசாகிப் (1) MANAGEMENT CAREER (1) MBA (1) MEDICINE CAREER (1) MF (1) MKN Trust (1) MMS (1) MOTHER (1) MS அப்துல் கஃபூர் (1) MSM(r) (1) Moinudeen (1) Moorthy (1) Motion Sickness (1) Mujahid Razeen (Srilanka) (1) Munawar (1) Naming and Calling Spiritually and Personally (1) Nizar Ahamed (1) Nursery School (1) PJ (1) PhD (1) Right Understanding (1) S.H.அஸ்லம் (1) S.சித்தீக்.M.Tech (1) SIS (1) SSLC (1) SSLC. (1) School (1) Shahbaz Mohamed (1) Sports Day (1) Stop N Shop (1) Straight line Stationery (1) TNPSC (1) Truly Asia (1) U.Aboobacker (1) UAE National Day (1) Union Budget 2017 - 2018 (1) abdul khader (1) abu hanifa (1) ac (1) activities (1) adco (1) adirai businessman (1) adirai classified (1) adirai educational mission (1) adirai news (1) adirampattinam (1) afghan (1) after ramadan (1) ayda (1) back2School (1) beach street (1) boxer (1) burkhalifa (1) cbse சமச்சீர் கல்வி (1) cc Sabeer appa (1) channel (1) chennai (1) citizen of world (1) cobol (1) computer (1) convert to islam (1) country club (1) credit card (1) cults (1) current affairs (1) dad (1) dare to dream (1) dc (1) demonetization (1) different thinking (1) drop box (1) dynamic cellcom (1) e-தமிழர் (1) ecr (1) editor-choice (1) email (1) emirates ID (1) engineer (1) english (1) family card (1) family tree (1) folder (1) forward (1) friend request (1) friendship (1) gulf (1) haj 0215 (1) haji marra (1) health (1) history of Rasoolullah (1) homework (1) ibraheem ansari (1) incredible (1) indian muslims (1) influences (1) inneram (1) inter school quiz competition (1) islamic bank (1) islamic banking (1) kalaam (1) kaveri (1) kayal (1) lagoon (1) life (1) living (1) m.nainathambi (1) madina (1) magazine (1) makkah (1) media (1) medical (1) mens way (1) mirage (1) mmk (1) mms பஹுருத்தீன் (1) mnt (1) mohamed ali (1) mp (1) mpmv (1) msf (1) msm1 (1) mumbai (1) music (1) national flag (1) notice (1) online (1) our (1) pain worth it (1) parotta (1) peach n berry (1) photography (1) physical (1) picture of play (1) police (1) power (1) programming (1) publisher (1) queenie padilla (1) real estate 1 (1) sabee (1) sad (1) sbeer (1) sha an sha (1) shaficast (1) sham (1) sharing (1) sharjah (1) shirt (1) shirts (1) smart phones (1) son (1) sp பட்டினம் (1) speech (1) srilankan muslim (1) syed abdul hameed (1) syria children (1) tamil (1) thajudeen (1) thamemunansari (1) treatment (1) truly asia (1) tweet (1) update (1) urdu (1) version 4.01 (1) we support (1) welcome Ramadhan (1) wikileaks (1) y1 (1) youtube (1) ஃபஜர் தொழுகை (1) ஃபாரூக் (1) ஃபிலிம் (1) ஃபேக்புக் (1) ஃபேஸ்புக் (1) ஃபோட்டூன் (1) ஃபோட்டோ (1) ஃபோன் (1) ஃபோர்ட்டூன் (1) ஃப்ரெண்டு ரெகுஸ்ட் (1) அ.ர.முஹமது தஸ்தகீர் (1) அஇதிமுக (1) அகத்தின் அழகு (1) அகிலம் (1) அங்கீகாரம் (1) அசத்தல் (1) அசைவு (1) அஜினோமோட்டோ (1) அஜீஸ் (1) அஜ்மான் (1) அஜ்மாஸ் நோன்பு கஞ்சி (1) அட (1) அடப் பாவிங்களா ? (1) அடிக்கல் (1) அடிமை (1) அடிமை வணிகர் அந்-நுஐமான் (ரலி) (1) அடியேனின் அகரம் (1) அட்லாண்டா (1) அணிவகுப்பு (1) அணு (1) அணை (1) அண்ணன் (1) அண்ணன் தம்பி உறவு (1) அண்ணே ! (1) அதிகாரம் (1) அதிகாரி (1) அதிகாலை (1) அதிசயம் (1) அதியற்புதம் (1) அதிராம்பட்டினம் 2011 (1) அதிராம்பட்டினம் 2012 (1) அதிராம்பட்டினம்2011 [2] (1) அதிரை ஃபாரூக் (1) அதிரை அபூபக்கர் (1) அதிரை அஸ்ரப் (1) அதிரை அஸ்லம் (1) அதிரை ஆத்திச்சூடி (1) அதிரை இலக்கிய மாமன்றம் (1) அதிரை இஸ்லாமிக் மிஷன் (1) அதிரை கல்வி CD (1) அதிரை கல்வி அறக்கட்டளை (1) அதிரை கல்வி விழிப்புணர்வு (1) அதிரை கீழத்தெரு (1) அதிரை சித்தீக் பள்ளி (1) அதிரை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் (1) அதிரை தமுமுக (1) அதிரை பெருநாள் (1) அதிரை பெருமை (1) அதிரை பேரூராட்சி (1) அதிரை பொருட்காட்சி (1) அதிரை போஸ்ட் (1) அதிரை மாடு (1) அதிரை மாணவி (1) அதிரை வரலாற்றில் (1) அதிரை வள்ளல் (1) அதிரை வாசனை (1) அதிரைக் கடல் (1) அதிரைச் செய்தி (1) அதிரைமுஜீப் (1) அதிரையன் (1) அதிரையின் நிய்யத்து (1) அதிரையின் பூர்வ குடிமக்கள் (1) அதிரையின் விருந்து உபசரிப்புகள் (1) அதிரையில் (1) அதிரையில் பரவிவரும் அதிபயங்கர ஆபத்தான நோய் (1) அதிரையில் மழையாமே (1) அதிரையில் ஷவ்வால் நோன்பு - புறக்கனிக்கப்படுகிறதா (1) அதிர்ச்சிகள் (1) அது (1) அது ஒரு பொற்காலம் (1) அது ஒரு ஹஜ்ஜுப்பெருநாள் நேரம் (1) அந்த ஏழு நாட்கள் (1) அந்த திக் திக் நேரங்கள் (1) அந்தக் காலம் (1) அந்தரத்தில் (1) அந்தி (1) அனஸ்(ரலி) (1) அனுபவப் பாடம் (1) அனுமதி (1) அனைத்துத் தெருக்களும் அதிரையின் கருக்கள்.editorial (1) அன்னை (1) அன்னை ஆயிஷா சித்தீக்க(ரலி) (1) அன்னை கதீஜா மகளிர் கல்லூரி (1) அன்னையர் தினம் (1) அன்பளிப்புகள் (1) அன்பு (1) அன்புக் குறிப்புகள் (1) அன்புடன் புகாரி (1) அன்று பெய்தது மழை (1) அன்றைய நோன்பும் (1) அபராதம் (1) அபு பஜ்லு (1) அபு ஹனிஃபா (1) அபுமஹ்மூத் (1) அபுருமானா (1) அபுல் ஹசன் (1) அபுல்கலாம் ஆஷாட் (1) அபூ சுஹைமா (1) அபூ நூரா (1) அபூஇப்றாஹீம் (1) அபூபக்கர் (1) அபூபக்கர் ரழி (1) அபூஹனிஃப (1) அபூஹனிஃபா (1) அப்டேட் (1) அப்துர் ரஷீது ரஹ்மானி (1) அப்துர் ரஷீத் ரஹ்மானி (1) அப்துல் கறீம் (1) அப்துல் கலீம் (1) அப்துல் ஜப்பார் (1) அப்துல் நாசர் மதனி (1) அப்துல் ராஜிக் (1) அப்துல்லாஹ் (1) அப்பர் கோதையர் (1) அப்பா ஏசுவாஹ....(அதிரையின் மண் வாசனை) (1) அப்பாஸ் அலி (1) அமீரக தமிழ் மன்றம் (1) அமீருல் முஃமின் (1) அமெரிக்க அதிரையர்களின் கூட்டமைப்பு (1) அமெரிக்காவில் இறையில்லம் தீக்கிரை (1) அமைதியின் ஆளுமை (1) அமோஜான் (1) அம்மார்(ரலி. (1) அம்மாவைப் பிடித்த பேய் (1) அய்டா (1) அரஃபாத் 1987 (1) அரஅல (1) அரசினர் மேல்நிலை பள்ளி (1) அரசியலல்ல (1) அரசியல் களம் (1) அரசியல் முதல்வர் (1) அரசியல் வியாதிகளா? (1) அரசியல்வாதிகளா? (1) அரசு உதவிகள் (1) அரசு வேலை வாய்ப்பு (1) அரபிக் (1) அரபு நாடுகள் (1) அரபு நாட்டு பயணம் (1) அரபுலகம் (1) அரவணைக்க அருகதையற்றவர்களா அகதிகள் (1) அருட்பேறு (1) அருமறை (1) அரும்பு (1) அரும்பு பாட்டு (1) அரும்புப்பாட்டு (1) அரும்பேறு (1) அருளைச் சுமந்த ஹாஜிகளே...வருக (1) அருவி (1) அரேபியர்கள் (1) அர்-ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (1) அர்ப்பணிப்பு (1) அறிகுறிகள் (1) அறிந்து (1) அறியாமைக் காலம் (1) அறிவிப்பு சம்சுல் இஸ்லாம் சங்கம் (1) அறிவியல் பாங்கு (1) அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே (1) அற்பணிப்பு (1) அலகே ஆயுதம் (1) அலைகள் (1) அலைபாயுதே (1) அல்-கத்ர் (1) அல்ஜஸீரா (1) அல்மாஸ் (1) அல்ல (1) அல்லாஹ் யாரை நேசிக்கிறான் (1) அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் 99 (1) அல்லாஹ்வின் சக்தி (1) அல்லாஹ்வுக்கு நன்றி (1) அழகியல் (1) அழகு மொழி (1) அழகுக் குறிப்புகள் (1) அழிக்க திட்டம் (1) அழுகை (1) அழுவதற்கா (1) அழைப்பு பணி (1) அழைப்பு பணி மதமாற்றம் ஆகுமா (1) அவசர இழப்பு (1) அவசர உலகம் (1) அவன் (1) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும். சஹாபாக்கள் (1) அவலம் (1) அவளைச் சுற்றி (1) அவள் (1) அவஸ்தை (1) அவ்லியா (1) அஸார் (1) அஸ்மா(ரலி) (1) அஸ்மாவுல் ஹுஸ்னா அகவல் (1) அஸ்லம் (1) அஸ்லம் பாஷா (1) அஹமது பாக்கவி (1) அஹமது ஹாஜா (1) அஹமது ஹாஜி (1) அஹமதுல்லா ஷா (1) அஹ்மது (1) அஹ்மது அமீன் (1) அஹ்மது ஷஃபி (1) அஹ்மது ஹாஜா (1) அஹ்மத் தீதத் (1) ஆஃபியா புரூட் (1) ஆஃபீஸ் பாயும் - வெகேஷனும் (1) ஆஃப்பிரிக்கா (1) ஆகஸ்ட் (1) ஆக்ஃபோர்டு (1) ஆக்கமிடு அடுமடையா (1) ஆக்ரா (1) ஆசியாநெட் (1) ஆசிரியர்கள் (1) ஆசிரியைகள் (1) ஆசை கணவுகள் (1) ஆச்சர்யம் (1) ஆஞ்சியோ கிராஃபி (1) ஆடவரும் (1) ஆடு (1) ஆடையகம் (1) ஆட்சியதிகாரம் (1) ஆட்சியிழந்த கட்சி (1) ஆட்டம். (1) ஆட்டு மூளை (1) ஆண் (1) ஆண்கள் (1) ஆண்டவனே ஆள்பவனே (1) ஆண்டு விழா (1) ஆண்டுவிழா (1) ஆதரவு (1) ஆனந்தாவின் அபிநயம் (1) ஆனலைன் (1) ஆபூஇப்ராஹீம் (1) ஆப்பரேஷன் (1) ஆப்பிரிக்க (1) ஆப்பிள் (1) ஆப்ரேஷன் (1) ஆமினா முஹம்மது (1) ஆமை (1) ஆம் ஆத்மி (1) ஆயத்துல் குர்ஸி (1) ஆயிஷா பல் மருத்துவமனை (1) ஆய்ஷா ஃபாத்திமா (1) ஆரசியல் (1) ஆரிஃபா ஆலிமா (1) ஆர்நோத் வான் டோர்ன் (1) ஆர்வம் (1) ஆறிலிருந்து அறுபதுவரை (1) ஆறு (1) ஆலிம்சா (1) ஆளுக்கொரு சட்டம் (1) ஆளும் கட்சி (1) ஆளும் வளரனும் அறிவும் வளரனும் (1) ஆளூர் ஷாநவாஸ் (1) ஆவ்மியாக்கா (1) ஆஷி அஹ்மத் (1) ஆஷிக் அஹ்மத் (1) ஆஹா (1) இஃப்தார் (1) இக்கணம் (1) இக்றா (1) இங்கு எது முடியும் (1) இடர்கள் (1) இடி (1) இடியப்பம் (1) இடியாப்பம் (1) இடைத்த் தேர்தல் (1) இணைவத்தல் (1) இணைவைப்பு (1) இதயதளம் (1) இது எப்படி இருக்கு (1) இந்த வார செய்தி (1) இந்தக் காலம் (1) இந்தப் பாதை (1) இந்தவுளே (1) இந்திய அரசியல் (1) இந்திய ஊடகங்கள் (1) இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கு (1) இந்திய சுந்தந்திர தினம் (1) இந்திய ரூபாய் (1) இந்தியா சுதந்திர தினம் 1947 (1) இந்து (1) இந்துத்துவா (1) இந்தோனேஷியா (1) இந்நேரம் (1) இனப்படுகொலை (1) இனிக்கிறது (1) இனிமை (1) இனிய (1) இனிய திசைகள் (1) இன்டர்வியூ (1) இன்னுமா தயக்கம் (1) இன்பம் (1) இன்று 10.01.2011 (1) இன்று 18 02 2011 (1) இன்று இரு தகவல் (1) இன்று இரு தகவல்கள் (1) இன்று நாளை (1) இன்றும (1) இன்றைய வீம்பும் (1) இன்ஷூரனஸ் (1) இபுராகீம் அன்சாரி (1) இப்தார் நிகழ்ச்சி (1) இப்னு அப்பாஸ் (1) இப்ராஹீம் (1) இப்றாகிம் அன்சாரி (1) இமாம ஷாஃபி பள்ளி (1) இமாம் (1) இமாம் அபூஹனீஃபா (1) இமாம் புகாரீ (1) இமாம் ஷாஃபி (1) இம்தாதி (1) இயக்க வெறி (1) இயக்கங்கள் (1) இயற்கை இன்பன் (1) இயற்கை எங்கே (1) இரங்கற்பா (1) இரங்கல் (1) இரண்டாம் ஆண்டு (1) இரயில்வே (1) இரவேலர்கள் (1) இராஜமடம் (1) இராணுவம் (1) இராமநாதபுரம் (1) இருட்டு (1) இருதயம் (1) இருளும் ஒளியும் (1) இருவேறு துருவங்கள் (1) இர்ஃபான் (1) இறக்கை (1) இறக்கை கட்டிப் பறக்குதய்யா (1) இறப்பு (1) இறுதி மூச்சு (1) இறுதியாண்டு (1) இறை வசனங்கள் (1) இறைமறை (1) இறைமார்க்கம் (1) இறையச்சமுள்ள தந்தை (1) இறையச்சம் (1) இறையில்லத்தில் யாருடன் மல்லுக் கட்டுகிறார்கள் (1) இறைவனின் கூலிப்படைகள் (1) இறைவனுக்கு நன்றி (1) இறைவேதம் (1) இலக்கு (1) இலங்கை தமிழனின் இதையக் குரல் (1) இலட்சினை (1) இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் (1) இலவச மருத்துவ முகாம் (1) இலை (1) இல்ம் (1) இல்லறம் (1) இல்லல்லாஹ் (1) இல்லாள் (1) இளம் மனைவின் கடிதம் (1) இஸலாம் (1) இஸ்மாயில் ஸலஃபி (1) இஸ்லாத்திற்காக (1) இஸ்லாத்திற்கு எதிரான (1) இஸ்லாமிய தீவிரவாதம் (1) இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் (1) இஸ்லாமிய வரலாறு (1) இஸ்லாமிய வரலாற்று மின்னொளிகள் (1) இஸ்லாமியப் பாரவை (1) இஸ்லாம் மதத்திற்கு ஐரோப்பாவின் கடன் (1) ஈடிணையற்ற இறைவா (1) ஈத்மிலன் (1) ஈன்ற பொழுதின் (1) ஈமெயில் (1) ஈர நெஞ்சம் (1) ஈராக் (1) ஈர்ப்பு (1) உ.பியில் துவங்கவிருக்கும் போர் (1) உங்கள் ஓட்டு விறபனைக்கு அல்ல (1) உங்கள் வீட்டுத் திருமணத்தில் இது இருக்கா (1) உசுரு (1) உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு (1) உடல் ஆரோக்கியம் (1) உடல் பயிற்சி (1) உணர்வுகள் மூன்று (1) உண்டாயிருக்கேன் (1) உண்ணாவிரதம் (1) உண்மைச் சம்பவம் (1) உதவியது இஸ்லாம் (1) உன்டகலியான் அதிரையரின் உணவு (1) உன்னை அறி (1) உப்பு (1) உமர் (1) உமர் (ரலி) (1) உமர் கையாம் (1) உமர் ஷரீப் முப்தி (1) உமர்தம்பி (1) உம்மா'ன்டா சும்மாவா ? (1) உம்மி மக்தூம் (1) உம்ரா (1) உயர் கல்விக்கு உதவித் தொகை (1) உயிரெழுத்துகள் (1) உயிர் (1) உயிர்க் கொத்திப் பறவை (1) உரிமைகள் (1) உருகிய எதிர்ப்புகள் (1) உருகுதே அதிரை (1) உருக்கம் (1) உரைநடை (1) உர்து (1) உறவின் பிரிவு (1) உறவு வளர்ப்போம் (1) உறவுகள் எங்கே (1) உறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள் (1) உறுப்புகளின் நோய் (1) உலக அதிசயம் (1) உலகக் கோப்பை (1) உலகமயம் (1) உலகம் எப்படி உருவானது (1) உலகின் தலைசிறந்த பணக்காரர் (1) உலோகப்பறவை (1) உல்லாசம் (1) உளத்தூய்மை (1) உளவியல் (1) உளுச் செய்வது (1) உள்குத்து (1) உள்ளம் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சி த் தேர்தல் (1) உள்ளாட்சித் தேர்தல் (1) உள்ளே (1) உழை (1) உழைப்பு (1) உஸ்மான்(ரலி) (1) ஊடக (1) ஊடக தேர்தல் பிரச்சாரம் 2016 பதிலடி (1) ஊடக விபச்சாரம் (1) ஊடகங்கள் (1) ஊடங்கள் (1) ஊனம் (1) ஊராட்சி (1) ஊரோடு உறவாடு (1) ஊர் செய்தி (1) ஊர் நடப்பு (1) ஊர் நினைவுகள் (1) ஊர் பார்வை (1) ஊர்க்காரர் (1) ஊர்வன (1) எக்ஸ்க்யூமி (1) எக்ஸ்பிரஸ் (1) எங்க முதலாளி (1) எங்கவூர் மாப்பிள்ளை (1) எங்கே (1) எங்கே நேரம் (1) எங்கே வீழ்ந்தோம் (1) எங்ஙனம்? (1) எச்சில் (1) எஞ்சினியர் (1) எடு-இட்டோர்-இயல் (1) எண்ணமும் (1) எண்ணம் (1) எண்ணிலடங்கா (1) எண்ணெய் (1) எதிரி (1) எதுக்கும் நல்ல மனசு வேணும் (1) எத்தீம்கானா (1) எந்தையே (1) எனக்காக (1) எனதூர் (1) என் ஃப்ரண்டப் போல யாரு மச்சான் (1) என் கண்ணான வாப்பாவே (1) என் கனவு (1) என் கேள்விக்கென்ன பதில் (1) என் பார்வை (1) என் மொழி (1) என் வீட்டுத் தோட்டத்தில் (1) என்.ஷஃபாத் (1) என்கவ்ன்ட்டர் (1) என்ன (1) என்ன கொடுமை (1) என்னாட்டின் (1) என்னால் இயன்ற அறம் (1) என்னைக் கண்டெடுத்தேன் (1) எபிக் வெப் பிரவுசர். (1) எப்படி அவர்களை மன்னிப்பேன் (1) எப்படிப் பிறந்தாய் நீ (1) எப்படியும் மரணம் முடிவாகி விட்டது (1) எப்புடீ (1) எம்.ஃபில் (1) எரிகல் (1) எர்மைல் தவாலும் (1) எறச்சி (1) எலும்பு உறுதிதன்மை (1) எலும்பு கூடு (1) எல்லாப் புகழும் இறைவனுக்கு (1) எல்லை (1) எல்லைக் கோடு (1) எழுதியதல்ல (1) எழுது (1) எழுத்தியல் (1) எழுவதற்கா? (1) ஏகத்துவம் (1) ஏஞ்சலா கொலின்ஸ் (1) ஏனெனில் திமிர் (1) ஏப்ரல் 1 (1) ஏமாற்றமா (1) ஏர்வாடி (1) ஏற்ற நாடு (1) ஏற்றமா (1) ஏழை மாணவர்கள் (1) ஏழ்மை (1) ஐ.ஏ.எஸ். (1) ஐ.பி.எல். கிரிக்கெட் (1) ஐக்கியம் (1) ஐந்து (1) ஐஸிஐ (1) ஐஸ்கிரீம் (1) ஒத்தடம் (1) ஒத்துமை (1) ஒரு உரையாடல் With சீனிவாசன் சார். (1) ஒரு கோணல் பார்வை (1) ஒரு ச்சிக்குபுக்கு பாதை (1) ஒரு பிள்ளையின் ஏக்கம் (1) ஒற்றுமை அழைப்பு (1) ஒற்றுமையே பலம் (1) ஒற்றுமை் (1) ஒற்றையாய் (1) ஒலி (1) ஒளரங்கசீப் நான்மணி மாலை (1) ஒளி (1) ஒளி வீசுமுன் (1) ஓடி விளையாடு (1) ஓடை (1) ஓர் அன்னையால் தன் மகனை எப்படி விற்க முடியும் (1) ஓர் ஆய்வு (1) ஓர் பார்வை (1) ஓலை (1) ஔரங்கசீப் நான்மணி மாலை (1) கசையடி (1) கஜினி முகமது (1) கஜ்ஜாலி (1) கஞ்சத்தனம் (1) கடன் அட்டை (1) கடமை (1) கடமைகள் (1) கடற்படை (1) கடி (1) கடி ஜோக்ஸ் (1) கடைத்தெரு (1) கட்சி (1) கட்சிகளின் தந்திரம் சுதந்திர தினம் (1) கட்டிடம் (1) கட்டுபாடு (1) கட்டுப்பாடு (1) கட்டுரைகள் (1) கணகள் இரண்டும் (1) கணினி தமிழ் (1) கண் தானம் (1) கண் பாதுகாப்பு (1) கண் பார்வை விழிப்புணர்வு (1) கண் மருத்துவம் (1) கண்காட்சி (1) கண்ணீர் (1) கண்பார்வை (1) கண்புரை (1) கண்மணி அன்போடு நான் (1) கதைகள் (1) கத்தனா (1) கந்தவரு (1) கந்தூரி மடமை (1) கந்தூரி வழிகேடு (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கனவும் நனவும் (1) கன்னிப் பதிவு (1) கபுரை இடிக்க வேண்டுமா? (1) கமாலுதீன் மதனி (1) கம்பி (1) கம்பியில்லா தொடர்பு (1) கம்யூனிசம் (1) கம்ளைண்ட் (1) கயவர்கள் (1) கரகரப்பு (1) கரன்ஸிக் களேபரங்கள் (1) கருணை (1) கருத்தாய்வு (1) கருத்து முரண்பாடுகள் (1) கருப்பு எலி (1) கருமையும் வெண்மையும் (1) கரும்புகை (1) கருவளையம் (1) கருவேலமரம் (1) கர்ப்பினி பெண்களுக்கு (1) கர்ழன் ஹஸனா (1) கறி (1) கறை (1) கற்கை (1) கலக்குங்க (1) கலப்படம் (1) கலரிச் சாப்பாடு (1) கலவியின் அவசியம் (1) கலாச்சார (1) கலிஃபா டவர் (1) கலிஃபோர்னியா (1) கலிஃபோர்னியா மாகாணம் (1) கலெக்டர் (1) கலை (1) கலைஞர் (1) கல்ந்துரையாடல் (1) கல்லும் (1) கல்வி நேரமில்லை (1) கல்வி மாநாடு (1) கல்வி வளர்ப்போம் (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு நேரலை. கல்வி விழிப்புணர்வு (1) கல்விக் கூடம் (1) கல்வித்துறை (1) கல்வியாண்டு (1) கல்வியாளார்கள் (1) கல்வியும் கற்போரின் கடமையும் (1) கல்வியும் கற்போர் க்டமையும் (1) களஞ்சியம் (1) கள்ளக்காதல் (1) கழிப்பிடத்தில் (1) கவனமாக கேளுங்கள் (1) கவலை நேரத்திலும் கவிதையா (1) கவிக்கோ (1) கவிஞன் (1) கவிஞர்கள் (1) கவிதை கிரவ்ன் (1) கவிதை சபீர் அஹ்மது (1) கவிதை வாப்புச்சா (1) கவிதைக் காணொளி (1) கவிதைப் பேட்டி (1) கவிதையல்ல (1) கவிதையே தெரியுமா ? (1) கவிநடை (1) கவியனபன் (1) கவியுரையாடல் (1) கவுரவம் (1) காகிதம் (1) காக்கை (1) காசிருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா (1) காடுகள் (1) காணவில்லை (1) காதலர்கள் (1) காந்தி நாட்டு இஸ்லாமியன் (1) கானல் நீர் (1) கானா (1) கான் அகடமி (1) கான்சல (1) காப்பி அடிக்கிறது (1) காப்பீடு (1) காமெடி (1) காயல்பட்டினம் (1) காரை வீடுகள் (1) காற்றலை (1) காற்றாழையும் (1) காலண்டர் (1) காழ்ப்பு (1) காவந்து பண்ணும் கலை (1) காவல் (1) காவல் நிலையம் (1) காவி தீவிரவாதி (1) காவித்துறை (1) காஷ்மீர் (1) கிரடிட் கார்டு (1) கிரவ்னு (1) கிரஸண்ட் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (1) கிளாஃபத் (1) கிள்ளித் திரிந்த காலம் (1) கிழவி (1) கிழிந்தது. (1) கிஷார் முஹம்மது. (1) கிஸ்ஸாஸ் (1) கீற்று (1) கீழக்கரை (1) குஜராத் கலவரம் (1) குஜாராத் (1) குஞ்சுகளும் (1) குடியரசுதினம் (1) குடும்ப அட்டை (1) குடும்பங்களின் சந்திப்பு (1) குடும்பன் குறிப்புகள் (1) குடைக்குள் மொட்டு (1) குப்பகள் (1) குப்பை (1) குயினி படில்லா (1) குரல் (1) குருதி (1) குருவி (1) குருவியும் (1) குர்ஆன் ஓதுதல் (1) குர்ஆன் சுன்னா (1) குர்பானி (1) குறிக்கோள் (1) குறிப்புகள் (1) குறைபாடுகள் (1) குறைவற்ற செல்வ (1) குற்றாலம் 2011 (1) குல்ல்லா (1) குளச்சல் (1) குளுக்கோமா (1) குழந்தை தொழில் (1) குழப்பம் (1) கூக்குரல்கள் (1) கூட்டணிக் கொட்டகைகள் (1) கூட்டணிக் கொள்கைகள் (1) கூட்டுத் தொழுகை (1) கூறு (1) கேடி (1) கேட்ட நினைத்த'வைகள்' (1) கேன்ஷல்ல அனுப்பிடுங்க (1) கேன்ஸரிலிருந்து தப்புவது எப்படி (1) கேரளம் (1) கேள்வி (1) கைகள் (1) கைகாட்டி கலாசாரம் (1) கைது (1) கொக்கு (1) கொசு ஒரு தொடர்கதை. (1) கொசுத் தொல்லை (1) கொஞ்சூண்டு (1) கொடு (1) கொடுவா மீனு (1) கொண்டாட்டம் கிரவ்ன் (1) கொண்டாட்டம் மட்டுமா பெருநாள் (1) கொல்லைப்புர தட்சனைகள் (1) கோ எஜுகேசன் (1) கோடி (1) கோடு உயர்ந்தது! குன்றம் தாழ்ந்தது (1) கோடை கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2016 (1) கோனார் ஹாஜியார் (1) கோப்பு (1) கோலாலம்பூர் (1) கோளாறு (1) கோள் (1) கோழி (1) க்ளாஸிக் (1) ஙே (1) சகக்ரை (1) சகன் (1) சகோதரகள் (1) சகோதரன் (1) சகோதரி (1) சங்கங்கம் (1) சங்கமம் (1) சங்கை மிகு ரமலான் (1) சட்டங்கள் (1) சட்டசபை (1) சட்டப்பேரவை (1) சட்டம் ஒழுங்கு பிரச்சினை (1) சட்டை (1) சதகா (1) சத்துணவு (1) சந்தேகம் (1) சந்தை (1) சந்தோஷம் (1) சன்டிகார் (1) சபிர் (1) சப்பிடலாம் (1) சமச்சீர் (1) சமய நல்லிணக்கம் (1) சமாதானக் கூட்டம் (1) சமாதி (1) சமுதாயம் (1) சமூக பிணைப்பு (1) சமூகம் (1) சரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 1 (1) சரி (1) சரித்திரம் (1) சர்தார்ஜி (1) சர்வீஸ் (1) சலுகை (1) சல்மான் கான் (1) சவுதி (1) சவுதியில் நடப்பது என்னா? (1) சவூதிச் சிறுமி லமா அல்-காமிதி (1) சாக்கடை (1) சாச்சா (1) சாச்சி (1) சாஜிதா புக் செண்டர் (1) சாதனயாளார் (1) சாதனைச் செம்மல் (1) சாதனைப் பெண்மனி (1) சாதி (1) சாதி ஒழிப்பு (1) சாதிக் பாட்சா (1) சான வயல் (1) சானவயல் (1) சாபமா (1) சாபாமா? (1) சாம்பல் (1) சார் (1) சார் பதிவாளர் (1) சார்ஜா (1) சார்ந்திருப்பவர்கள் (1) சாலைகள் (1) சி.எம்.பி.லைன் (1) சிகரம் (1) சிகெரட் (1) சிட்டுக்குருவி (1) சித்தப்பா (1) சிநேகிதிகள் (1) சிந்தனை அபு ஈசா (1) சிந்தனை ஏற்றத் தாழ்வு (1) சிந்தனைக் கோளாறு (1) சிந்தனைத் துறை (1) சிந்தியுங்கள் (1) சினிமா (1) சினிமாவும் முஸ்லீம்களும் (1) சின்னச் சின்ன ஆசைகள் (1) சிப்பி (1) சிப்பிக்குள் சூரியன் (1) சிரித்து (1) சிறப்பு நிகழ்வுகள் (1) சிறப்புரை (1) சிறுகதை (1) சிறுபன்மையினர் கல்லூரி (1) சிறுபான்மை (1) சிறுவர்கள் (1) சிறை (1) சில நேரங்களில் சில மனிதர்கள் (1) சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1) சிவகங்கை (1) சீ (1) சீச்சீ இந்த பழம் புளிக்கும் (1) சீதனமும் (1) சீதனம் (1) சீனப் பெண் (1) சீனா (1) சீரியல் (1) சுகங்கள் (1) சுடச்சுட அதிரை (1) சுட்டெரிக்கும் சூடு (1) சுட்டெரிக்கும் பாலையில் (1) சுதந்திர தினம் (1) சுதந்திர தினம் யாருக்கு (1) சுத்தமின்மை (1) சுப்ஹு (1) சுப்ஹு தொழுகை (1) சுமைய தாவூத் (1) சுமையா (1) சுமையாகிப்போனது (1) சும்மாதான் (1) சுய விளக்க உரை (1) சுயநலம் (1) சுரண்டல் (1) சுற்றித் திரியும் வாலிபமே (1) சுற்றுபுற சூழல் பாதுகாப்பு (1) சுவனத்தென்றல் (1) சுவனப்பிரியன் (1) சுவர்க்கம் (1) சூசன் பஷீர் (1) சூடு பறக்கும் விவாதம் (1) சூது சூழ் உலகு (1) சூனியம் (1) சூனியம் வைக்கத் தூண்டியது யார் (1) சூரத்தல் இஃக்லாஸ் (1) சூரத்துல் ஃபாத்திஹா (1) சூரத்துல் பஜ்ர் (1) சூரா லுக்மான் (31:32) (1) சூரியன் (1) செண்டர் (1) சென்சார் (1) சென்னை பல்கலைக்கழகம் (1) சென்ற வாரம் (1) சென்றுவா ரமளானே (1) செப்டம்பர் (1) செம்மல் (1) செயற்கை கண் (1) செய்தி சேனல்கள் (1) செய்தியாளர் (1) செய்முறை (1) செல்போன் டவர் (1) செல்லப் பிராணிகள் (1) செல்லப்பிள்ளை (1) செல்லம் (1) செல்வம் (1) சேது சமுத்திர திட்டம் (1) சேனல்கள் (1) சேய் (1) சேர்மன் (1) சேறு (1) சைலன்ஸ் ப்ளீஸ் (1) சொந்தம் (1) சொர்க்கம் (1) சொல் மந்திரம் (1) சொல்வதொன்றும் செய்வதொன்றுமாய் (1) சோம்பேறித்தனம் (1) சோலை (1) சோலையும் பாலையும் (1) ச‌ம்பாத்திய‌ம் (1) ஜக்காத் (1) ஜக்காத் நிதிப் பங்கீடு (1) ஜனநாயகத்தை விலைக்கு வாங்கிய பணநாயகம் (1) ஜனாதிபதி யார் (1) ஜப்பான் (1) ஜமாத் (1) ஜமால் மதனி (1) ஜமால் முகம்மது கல்லூரி (1) ஜலீலா கமால் (1) ஜாஃபர் (1) ஜாபிர் (ரலி) (1) ஜாமாத் (1) ஜாஸ்மின் (1) ஜாஹிர் (1) ஜும்மா (1) ஜும்மா பள்ளி (1) ஜூஸ் (1) ஜெ (1) ஜெஜெ. சொத்து குவிப்பு (1) ஜெட் (1) ஜெட்லி (1) ஜெய்தைக் காணவில்லை (1) ஜெய்னுல் ஆபிதீன் (1) ஜெர்மனி (1) ஜைனப்(ரலி) (1) ஜ்ஃபருல்லாஹ் (1) ஞானப் பயணம் (1) டாக்கி (1) டாக்டர் சுமையா தாவூத் (1) டாலர் (1) டி.வி. எச்சரிக்கை (1) டிக்கெட் (1) டிஜிட்டடல் (1) டிஜிட்டல் (1) டிஜிட்டல் இந்தியா (1) டியூசன் (1) டிரஸ்ட் (1) டிஸெம்பர் (1) டிஸைன்ஸ் (1) டீக்கடை (1) டீக்கடை குழுமம் (1) டெலஸ்கோப் (1) டேரா (1) ட்விட் (1) த.மு.முக. (1) தஃபீக் சுல்தானா (1) தகப்பன் (1) தகர்ப்பதற்கா? (1) தகவல் (1) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (1) தகவல் தொடர்பு (1) தகுதிக்கேற்ப தண்டனை (1) தக்பீர் (1) தங்க முதலாளி (1) தங்கச்சி (1) தங்கப் பதக்கம் (1) தங்கை (1) தடசணையும் (1) தடம் (1) தடைகள் (1) தடைக் கல் (1) தண்டனை (1) தண்டவாளம் (1) தண்ணீர் தாகம் தீர்க்கவா (1) ததஜ (1) தந்தி டிவி. (1) தந்தை மகள் (1) தந்தை வழி உறவு (1) தந்தையர் தினம் (1) தந்தையெனும் பாசம் (1) தனித் தன்மை (1) தனித் தூது (1) தனித்தமிழ் (1) தன்னடக்கமும் மரியாதையும் (1) தன்னிலை மேம்படுத்தல் (1) தன்னிலை விளக்கம் (1) தன்னிலை விள்க்கம் (1) தன்மை (1) தப்லீக் (1) தமிழக முதல்வர் (1) தமிழக முஸ்லீம்களின் ஒற்றுமை (1) தமிழர்கள் (1) தமிழும் ஆங்கிலமும் பேசிக்கொண்டால் (1) தமிழ் தாவா (1) தமிழ் தாவா பிரிவு (1) தமிழ்நாடு அரசு (1) தமீமுல் அன்சாரி (1) தயபுள்ளயளுவோ (1) தரகர் தெரு (1) தரமற்ற தாரகை விருப்பம் (1) தரமிழந்து வருகிறதா (1) தரவிரக்கம் (1) தராவிஹ் தொழுகை (1) தரைமட்டம் (1) தர்ஜுமா (1) தர்பியா மையம் (1) தர்பிய்யா (1) தர்மம் (1) தர்ஹா (1) தற்கொலை தீர்வாகுமா (1) தலை (1) தலைசிறந்த சமுதாயம் (1) தலைமை உருவாக்கம் (1) தலைமைத் தேர்வு (1) தலைமைத்துவம் (1) தலைவரின் தகுதிகள் (1) தலைவர் யார்? (1) தலைவியாகி (1) தள விளக்கம் (1) தள்ளி வண்டி (1) தழுவல் (1) தவாப் (1) தவிர்த்திடுங்கள் (1) தவிர்ப்போம் (1) தவ்ஃபீக் (1) தவ்ஹீத் (1) தவ்ஹீத்கான் (1) தஸ்தகீர் (1) தஹ்ஸின் நிலோஃபர் (1) தா.பாண்டியன் (1) தாஃவா (1) தாஜூதீன் (1) தாஜ் மஹால் (1) தாஜ்மஹால் (1) தாத்தா (1) தாம்பத்யம் (1) தாயின் அறிவுரை கேட்போம் (1) தாய் பாசம் (1) தாரூத் தவ்ஹீத் (1) தாரை வார்க்கவா? (1) தாலிச்சா (1) தால் (1) தாவஆ பணி (1) தாவா (1) தாஹா சார் (1) தி ஹிந்து தமிழ் (1) திக் திக் (1) திக்ர் (1) திடீர் கல்லறை (1) திட்ட அறிக்கை (1) திப்பு சுலதான் (1) திப்பு சுல்தான் (1) திமிங்கலச் சாவுகள் (1) தியாகிககள் (1) தியாகிகள் (1) திரட்டி (1) திரவியம் (1) திராம்பட்டினம் (1) திரிபு (1) திரு(தொடண்)டர்) (1) திருடன் (1) திருடாதே (1) திருட்டு (1) திருத்தம் (1) திருப்பூர் to அதிரை (1) திருமணங்கள் (1) திருமணத்திற்கு கவுன்சிலிங் (1) திருமறை (1) திரைகடலோடி திரவியம் தேடு (1) திரைகடல் (1) திரையங்குகள் (1) திரையரங்கம் (1) திரையில் சிறை (1) திறந்த மடல் (1) தில்லு முல்லு (1) தீ தீயனைப்பு நிலையம் (1) தீதும் நன்றும் பிறர்தர வாரா (1) தீன் (1) தீன்குல ஹீரோக்களுக்கு (1) தீரன் திப்பு (1) தீரன் திப்பு சுல்தான் (1) தீர்ப்பு (1) தீவிர (1) தீவு (1) துக்ளக் (1) துடிக்கக் கொன்றனர் (1) துணை போகாதீர் (1) துபாய் - அதிரை (1) துரோகம் (1) துர்நாற்றம் (1) துலங்கும் (1) துளி உலகம் (1) துளியளவு (1) தூக்கமற்ற பொழுதுகளில் (1) தூதரகம் (1) தூரோகம் (1) தென் தமிழகம் (1) தெரு சங்கங்கள் (1) தேச பக்தி (1) தேசிய கொடி (1) தேசிய தினம் (1) தேடுகிறேன் (1) தேத்தண்ணி (1) தேனி (1) தேன் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் கருத்துக் கணிப்புகள் (1) தேர்வு அட்டவனை (1) தேர்வு பள்ளித் தேர்வு முடிவுகள் (1) தேர்வு முடிவுகள் (1) தையல் (1) தொட (1) தொடர் சொற்பொழிவு (1) தொடு (1) தொட்டி (1) தொண்டர் (1) தொனா (1) தொலைக் காட்சி (1) தொலைத்தது (1) தொழிலாளி (1) தொழில் நுட்பம் (1) தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம்அ (1) தோழி (1) தோழியர் (1) நகை (1) நக்கப்பா (1) நடிகையாயிருந்து (1) நடை பயிற்சி மேடை (1) நட்சத்திரமாக (1) நட்சத்திரம் (1) நட்புடன் ஜமால் (1) நண்டும் நரியும் (1) நந்தினி (1) நனா (1) நன்கொடை (1) நன்மையே வேண்டி. 4th year (1) நன்றியுரை (1) நன்றே (1) நபி பெருமானார் வரலாறுமுன்னுரை (1) நபி(ஸல்) வரலாறு (1) நபித் தோழர்கள் (1) நபித்தோழர் (1) நபிவழி (1) நமது கல்வி (1) நயவஞ்சத்திற்கு பகிரங்க எச்சரிக்கை (1) நரகம் (1) நலம் (1) நல்ல மனையாள் (1) நல்லது (1) நல்லாருக்கியாம்மா? (1) நல்லிணக்கம் (1) நல்லொழுக்கம் (1) நள்ளிரவு (1) நவீன மவ்லூது (1) நாக்கு (1) நாங்கள் அதிரை நிருபர் (1) நாங்கள்தான் (1) நாடி (1) நாடு (1) நாட்டாமை தீர்ப்பு (1) நானும் ஆஃப்ரிக்காவும் - தொடர்கிறது (1) நான் (1) நான் என்பது (1) நான் மிகச் சிறந்த மனிதன் (1) நான் முஸ்லிமாகிவிட்டேன் (1) நான் ரெடி நீங்க ரெடியா (1) நான்காம் ஆண்டிலும் (1) நான்காவதுத் தமிழ் (1) நான்றி ஆசான்களே (1) நாய்கள் (1) நாற்காலிகள் (1) நாளங்கள் (1) நாளை? (1) நாவு (1) நிகழ்சிகள் (1) நிகழ்வுகள் (1) நிசார் அஹ்மது (1) நிதானமும் (1) நிதி அமைச்சர் (1) நித்தியோன் முன் நான் (1) நினைவலைகள் (1) நினைவிருக்கா (1) நினைவு (1) நிருபர் (1) நிர்வாகம் (1) நிர்வாகிகள் (1) நிர்வாண பாரதம் (1) நிலத்தடி (1) நிலத்தடி நீர் (1) நிழற்பட கருவி (1) நிழலாடும் (1) நிழலின் அருமை (1) நீங்களுமா ஆலிம்ஸா இப்படி செய்தீர்கள் (1) நீங்களும் கிளிக்கலாம் (1) நீடூர் அலி (1) நீதம் (1) நீதித் துறை (1) நீதிமன்றம் (1) நுண்மென் (1) நுனிப்புல் (1) நூதன விளம்பரங்கள் (1) நெஞ்சில் உரமின்றி (1) நெய்னா முஹம்மது (1) நேசம் மாநபி (1) நேரான வழி (1) நேர்கானல் (1) நேறறு (1) நேறு (1) நைஜிரியா (1) நைஜீரியா (1) நொங்கு வண்டி (1) நோக்கம் (1) நோன்பு காலங்கள் (1) நோன்புக் கஞ்சி (1) நோன்புக்கு பிறகு (1) நோம்பு (1) நோம்பு கஞ்சி (1) நோம்பு கஞ்சி அரிசி (1) நோயற்ற வாழ்வு (1) ன் (1) ப.சிதம்பரம் (1) பகல் (1) பகிர்வு (1) பகுருதீன் (1) பகைமை (1) பகையன்று நகை (1) பக்கம் (1) பங்களாதேஷ் (1) பங்கு சந்தை (1) பசி போக்குமா? (1) பசிக்கட்டுகள் (1) பசியாறிட்டு சாப்பிடலாம் (1) பசுமை எங்கே (1) பஜக (1) பஜ்ஜி (1) பஜ்லுர் ரஹ்மான் (1) பஞ்ச் டயலாக் (1) படகு (1) படச் சுருள் (1) படம் சொல்லும் பாடம் (1) படிக்கச் சென்றனர் (1) படித்த (1) படித்தால் மட்டும் போதுமா (1) படை (1) படைத்தவனின் திருக்குர்ஆன் (1) படைத்தவனை நோக்கி (1) படைப்பாளி (1) படைப்பாளிகள் (1) படைப்புகள் (1) பட்ஜெட் 2013 (1) பட்ஜெட் 2013-2014 (1) பட்டதாரி (1) பட்டப்பெயர்கள் (1) பட்டான் (1) பட்டினி (1) பட்டேல் (1) பட்டோலை (1) பணத்தை பிணமாக்கிய மோடி (1) பணம் இங்கே (1) பணம் படுத்தும்பாடு (1) பணி வாழ்வும் பணி ஓய்வும் (1) பணிக்கர் (1) பண்புகள் (1) பதற்றம் (1) பதவி (1) பதவிகள் (1) பதில் (1) பதில் இல்லா கேள்விகள் (1) பதிவது எப்படி (1) பதிவர் உலகம் (1) பதிவிலக்கணம் (1) பதிவேடு (1) பத்தாம் வகுப்பு (1) பத்திரிகை (1) பந்தம் (1) பனி (1) பனிப் பொழிவு (1) பனிப்பொழுது (1) பம்முக்காலே (1) பயங்கரவாதம் (1) பயணிக்கும் பாதை (1) பயிலரங்கம் (1) பரபரப்பு (1) பரமக்குடி (1) பரிசுகள் (1) பரோட்டா (1) பர்ஜ்துபாய் (1) பர்தா (1) பர்மீய முஸ்லீம்கள் (1) பற (1) பறவைகள் (1) பற்றாக்குறை (1) பலம் (1) பல் (1) பல்கிஸ் (1) பல்வலி (1) பள்லிவாசல் நினைவுகள் (1) பள்ளி நினைவுகள் (1) பள்ளி விடுமுறையை எப்படி கழிப்பது (1) பழ மொழி (1) பழ மொழிகள் (1) பழகிய மொழியிலே (1) பழகுமொழி (1) பழைய குருடி கதவைத் திறடி (1) பழைய பேப்பர் (1) பஷீர் ஹாஜியார் (1) பஸ் (1) பஸ்ஸார் (1) பஸ்ஸுப் பயணம் (1) பஹ்ருதீன் அஹ்மது அமீன் (1) பாகிஸ்தான் (1) பாடப் புத்தகம் (1) பாடல் (1) பாட்டி சொன்னது (1) பாட்டி பேரன் உறவு (1) பாட்டு (1) பாபரி மஸ்ஜித் (1) பாரதமணி (1) பார்ட்னர் (1) பார்த்த (1) பார்த்தீனியம் (1) பார்வேர்டு (1) பார்வை (1) பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை (1) பாலைவனம் (1) பால் அருவி (1) பாஸ்வேர்டு (1) பாஸ்வேர்ட் (1) பி (1) பிகார் (1) பிசாசு (1) பிச்சைக்காரர்கள் (1) பிச்சைப் பாத்திரம் (1) பிஜே (1) பிஜேபியை ஆகாதவர்கள் ஆக்கிய பீஹாரிகள் (1) பிடி நழுவிய (1) பித்அத் (1) பித்ரா (1) பினாங்கு சபுறு மாப்புளே (1) பினாங்கு சபுறுமாப்புளே (1) பிரச்சாரம் (1) பிரச்சாரம். (1) பிரயாண வழியில் (1) பிரான்ஸ் (1) பிரி (1) பிரிட்டன் (1) பிரிவு (1) பிரெஞ்சு (1) பிரைல் எழுத்து (1) பிர்ண்டர்ஸ் (1) பிறகு (1) பிறப்பு (1) பிறர் சிரிக்க (1) பிற்பகலும் (1) பிலால் (1) பிலால் (ரழி) (1) பிலால் நகர் (1) பில்கிஸ் (1) பிள்ளைகள் (1) பிழையறப் பிழை (1) பீகார் (1) பீச் (1) பீர் முஹம்மது (1) புகாரி இமாம் (1) புகை (1) புகை வண்டி (1) புகைபப்டம் (1) புகைப்பிடித்தல் (1) புதிய தொடக்கம் (1) புதிய நினைவுகள் (1) புதிய நிர்வாகம் (1) புதிய நூல்கள் (1) புதிய பிரவுசர் (1) புதிய வேலை (1) புதியது (1) புதியதோர் உலகைச் செய்யும் (1) புதிய‌தோர் ஊர் (1) புதுமைப் பெண் (1) புத்தக காட்சி (1) புத்தக வெளியிடு (1) புனித மாதம் (1) புன்சிரிப்பு (1) புராணம் (1) புரிதல் (1) புரை (1) புரோகிதம் (1) புற்றுநோய் (1) புலவர் பஷீர் அஹ்மது (1) புவியீர்ப்பு (1) பூ (1) பூக்கள் (1) பூங்கா (1) பூஜை (1) பூரியான் ஃபாத்திஹா (1) பெங்களூரு (1) பெட்டகம் (1) பெட்ரோல் (1) பெண் இமைக்குள் ஆண்மை (1) பெண் உரிமை (1) பெண்களின் கருத்தென்ன (1) பெண்களுள் பேரறிஞர் (1) பெண்கள்ம் மார்கெட் (1) பெண்சுதந்திரம் (1) பெண்டிரும் (1) பெண்ணாய் பிறப்பதைப் போல்போ ரின்பம் வேறில்லை (1) பெண்ணினம் (1) பெண்ணியம் (1) பெண்மக்கள் (1) பெயரிலித் தோழர் (1) பெயர் கூறுமா..? (1) பெரிய கடிகாரம் (1) பெரியர்வர்கள் (1) பெரியார் (1) பெரியார்தாசன் (1) பெருநாள் ஒளி (1) பெருநாள் தக்பீர் (1) பெருநாள் தொழுகை (1) பெருநாள் வாழ்த்து (1) பெருபான்மை (1) பெருமை (1) பெருமை தீது (1) பெர்னாட்ஷா (1) பேகம் ஹஜரத் மஹல் (1) பேக்கரி (1) பேங்க் (1) பேச்சும் (1) பேச்சுலர் (1) பேப்பர் வேர்ல்டு (1) பேரண்டம் (1) பேரன்பு (1) பேராசிரியர் (1) பேராசிரியர் M H J அவர்களுக்கு (1) பேராவூரணி பலாப்பழம் (1) பேரிடம் (1) பேரிடர் (1) பேருராட்சித் தலைவர் (1) பேரூராட்சி தலைவர் (1) பேரூராட்சி மன்றத் தலைவர் (1) பொக்கிஷம் (1) பொடிசுகளின் த்லை நோன்பு (1) பொது அறிவு (1) பொது சிவில் (1) பொதுக்குழு (1) பொதுமக்கள் (1) பொதுவானவை (1) பொய் வழக்கு (1) பொய் வழக்குகள் (1) பொரிச்ச மீன் (1) பொருட்காட்சி (1) பொறாமை (1) பொறியியல் (1) பொற்காலம் 1977 (1) பொழுதுகள். (1) போக்கு (1) போடாதே தப்பு கணக்கு (1) போட்டி வலைப்பூ (1) போட்டிகள் (1) போதனை (1) போனஸ் (1) போராட்டும் (1) போற்றுவோம் (1) போலி (1) போலி ஆலிம் (1) போலி சான்றிதழ் (1) போலிகள் ஜாக்கிரதை (1) போலிகள் பயிரை மேயும் வேலிகள் (1) போலித் தொப்பிகள் (1) போலீஸ் (1) ப்ராப்ளம் (1) ப்ளஸ் 2 தேர்வு முடிவ்கள (1) ப்ளாக் ஹோல் (1) ப்ளாஸ்டிக் பை (1) ப்ளீஸ் (1) மகத்துவ மருதாணி (1) மகளிருக்கு மட்டும் (1) மகளெனப்படுவள் (1) மகுடம் (1) மக்கட்பேறில்லா மக்கட்கு (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள்தொகையா (1) மக்கா நேரலை (1) மக்தப் மதர்சா (1) மச்சான் (1) மச்சான்ஸ் (1) மடமையிலிருந்து விடுதலை பெறுவோம் (1) மணல் மேடு (1) மண் வாசனை (1) மண்சட்டி (1) மண்டல் கமிஷன் (1) மண்ணறை வாழ்க்கை (1) மண்ணின் மைந்தர்கள் (1) மண்வட்டு (1) மண்வாசனை (1) மதம் (1) மதராஸ் (1) மதவாதம் (1) மதியம் (1) மதீனா நேரலை (1) மதுக்கூர் (1) மதுப் பழக்கம் (1) மதுரை (1) மத்திய அரசு (1) மத்திய கிழக்கு (1) மத்ஹபு (1) மந்திரச் சொல் (1) மந்திரவாதி (1) மனப்பாடம் (1) மனமே தொட்டாசினுங்கிதானே. ஜாகிர் ஹுசைன் (1) மனம் திறந்து (1) மனம் மகிழுங்கள் (1) மனிக்பான் (1) மனித நேயம் (1) மனிதமும் (1) மனிதவளமா (1) மனிதவளமும் மண்ணின் மைந்தர்களும் (1) மனிதா திருடாதே (1) மனு நீதி மனித குலத்திற்கு நீதியா (1) மனுநீதி (1) மனோரா (1) மன்னித்தருள்வாய் இறைவா (1) மமக (1) மரண சிந்தனை (1) மரண தண்டனை (1) மரத்தடி (1) மரபணுக்கள் (1) மரபுகள் (1) மரமும் (1) மரம் வளர்ப்பது ஒரு அறம் (1) மருதாணி (1) மருத்துவ (1) மருத்துவ காப்பீடு (1) மருத்துவ முகாம் (1) மருத்துவக் கல்லூரி (1) மருத்துவமனை (1) மருத்துவர் ஜானகிராமன் (1) மருவண்டி (1) மர்பு கவிதை (1) மறக்க முடியவில்லை (1) மறக்க முடியா மனிதர் (1) மறக்க முடியாத மருத்துவர்கள் (1) மறுப்பு (1) மறுப்பும் (1) மறைந்த (1) மறைந்து வரும் மண்பாண்டப் பாத்திரங்கள் (1) மறைந்து வரும் வளர்ப்பு பிராணிகள் (1) மறைவான அழகே நிறைவானது (1) மலரும் நினைவு மொட்டுக்கள் (1) மலரும் நினைவுகள் (1) மலர்கள் (1) மலாலா (1) மலைமகன் (1) மலையேற்றம் (1) மல்லிபட்ணம் சாலமீது (1) மழலை (1) மழலைகள் (1) மழை இஸ்லாமியப் பெண்கள் (1) மழை வந்தாச்சு (1) மழைக்கு பயந்த மின்சாரம் (1) மவ்லாய (1) மவ்லீது (1) மவ்லூது (1) மவ்லூதுக்கு மகுடமா ? (1) மஸ்ஜிதுகள் (1) மஸ்ஜிதுல் ஹாரமில் (1) மஹ்பூப் அலி (1) மா (1) மாங்காய் (1) மாசு (1) மாடிவீடு (1) மாணவ (1) மாணவப் பருவம் (1) மாணவமணிகள் (1) மாணவராக வாழ்ந்த ஆசிரியர் (1) மாணவர்கள் போரட்டம் (1) மாணவி (1) மாண்பு (1) மாண்புமிகு மந்திருக்கு (1) மாத்தியோசி (1) மாநகர் (1) மாநிலங்கள் (1) மானம் ஒன்றே உயர் ஆயுதமாய் (1) மானிடா... மாடு வருகிறார் (1) மாப்பிள்ளை (1) மாப்பிள்ளைக் கடத்தல் (1) மாமன்னர் (1) மாமரன் (1) மாமழை (1) மாம்பழம் (1) மாயன் இன்னும் சாகவில்லை (1) மார்கெட் (1) மார்க்க அறிஞர்கள் (1) மார்க்க வரம்புக்கு உட்பட்டு (1) மார்க்க விரோதத்துக்கு துணை போகாதீர் (1) மார்க்க விரோதம் (1) மார்க்க(மான) விவாதம் (1) மாறுகண் (1) மாற்று திறனாளி (1) மாலைப் பொழுது (1) மாவு (1) மிக்க மேலானவன் (1) மிதிரிக்கட்டை நினைவிருக்கா? (1) மினா (1) மின் கம்பம் (1) மின் தடை (1) மின்அஞ்சல் குழுமம் (1) மின்சார வாரியம் (1) மின்னல் (1) மின்வாரியம் (1) மின்வெட்டு (1) மியாசி (1) மிருகங்களாகும் மனிதம் (1) மில்லினியர் (1) மிள்பதிவு (1) மீட்பு (1) மீரான் சாஹிப் (1) மீராஷாஹிப் UPSC (1) மீளுதல் (1) மு.செ.மு.சபீர் அஹமது (1) மு.செ.மு.முஹம்மது ஹனீஃபா (1) முஃஆத் (1) முஃப்தி அப்துல் கையூம் (1) முஅத்தின் (1) முஆத் (1) முகத்திரையும் (1) முகப்புத்தகம் (1) முகமது செயினுத்தீன் - திருவிதாங்கோடு (1) முகமூடிகள் (1) முகம்து அலி (1) முகம்மது புஹாரி (1) முகவரிகள் (1) முகாம் (1) முக்காடும் (1) முக்கிய சுட்டிகள் (1) முக்கோணங்கள் (1) முடி (1) முட்டையும் (1) முதற் குழந்தை (1) முதலாம் ஆண்டு (1) முதலீடுகள் (1) முதல் பட்டதாரி (1) முதல் பயணம் (1) முதல் பிறை (1) முதல் மதிப்பெண் (1) முதல் மிடறு (1) முதல் வகுப்பு (1) முதல்வர்கள் (1) முதியோர் (1) முதிர் கன்னி (1) முதிர் நிலா (1) முத்தலாக்கின் மூடுபொருள் (1) முத்து (1) முந்திய சுன்னத் (1) முந்துங்கள் (1) முனாகீனா (1) முனைவர் (1) முன் மாதிரி (1) முன்னேற்றப் பாதை (1) முன்னேற்றம் (1) முன்பதிவு (1) முன்மாதிரி வடிவங்கள் (1) முபாரக் (1) முயலாமை (1) முயலும் (1) முயல் (1) முராத் (1) முற்பகலும் (1) முற்பகல் (1) முல்லைப் பெரியார் (1) முல்லைப் பெரியாறு (1) முள் (1) முள்மகுடம் (1) முழக்கம் (1) முஸ்லி (1) முஸ்லிம்கள் பாகிஸ்தானையும் சவுதியையும் கொண்டாடுவது ஏன் (1) முஸ்லீம் பதிவர்கள் (1) முஸ்லீம் மக்கள் தொகை (1) முஸ்லீம் லீக் (1) முஹம்மது (1) முஹம்மது அபுபக்கர் (1) முஹம்மது அலியார் சார் (1) முஹம்மது ரஃபீக் (1) முஹல்லா (1) முஹல்லா சங்கங்கள் (1) மூன்றாமிடம் (1) மூன்றாம் ஆண்டு (1) மூன்றாம் உலகப்போர் (1) மூர்த்தி (1) மூலதனம் (1) மூவண்ணக் கொடி (1) மெடிக்கல் (1) மெட்ரிக் பள்ளிகள் (1) மெட்ரோ (1) மெய்யெழுத்துகள் (1) மெர்சினா (1) மெளன ஓலம்! (1) மெளலவி அப்துல் பாசித் புஹாரி (1) மெளலித் (1) மெஷின் (1) மேட்டூர் (1) மேலாளர் (1) மேலைநாடுகள் (1) மைக் டைசன் (1) மைக்ரோ (1) மைதா (1) மையல் (1) மையவாடி (1) மைல்கல் (1) மொழிப்பெயர்ப்பு (1) மொழியால் விழிபேசுகிறது (1) மோகம் (1) மோசடி (1) மோடியின் முதுகில் ஏறும் தோல்வி மூட்டைகள் (1) மோதினார் (1) மோமியாக்கா (1) யாசகம் (1) யாசீன் சுஃபியான் (1) யார் அங்கே ? எங்கே போனார்கள் (1) யார் திவிரவாதி (1) யார் வசம்.. (1) யுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர் (1) யூசுபும் மொம்மாலியாக்காவும் (1) யூசுப் எஸ்டஸ் (1) யூசுப் ரியாஸ் (1) யூனுஸ் (1) யோகம் (1) யோசனை (1) யோசனைகள் (1) யோசி (1) யோசிக்கிறார் (1) ரஃபீக் சுலைமான் (1) ரகசியங்கள் (1) ரசாயன (1) ரஜினி (1) ரமளான் காணொளி (1) ரயிலடி (1) ரயில் (1) ரஷ்யா (1) ரஸூல் (1) ராக்கெட் (1) ராஜா வீட்டு விருந்தும் கறி (1) ராடார் (1) ராணி (1) ராஷித் அலி (1) ரிட்டர்ன் டிக்கெட் (1) ரியர் எஸ்டேட் (1) ரிஸல்ட் (1) ரிஸான நபீக் (1) ருசிக்க மான்பு (1) ரூபாய் (1) ரெடிமேட் (1) ரெட்டைக் கிளவி (1) ரேவடி (1) ரேஷன் கார்டு (1) ரொட்டி (1) ரோடு (1) ரோமாபுரியின் ரோஜா மலர் (1) ரோஷம் (1) லகும் தீனுக்கும் வலியதீன் (1) லகூன் (1) லக்கேஜும் நானும் (1) லஞ்சத்தை ஒழிக்க முடியாதா (1) லட்சம் (1) லண்டடன் (1) லண்டனில் கந்தூரி (1) லலுபிரசாத் (1) லாயிலாஹ (1) லேசர் (1) லைஃப் டைம் - Talk (1) லைசன்ஸ் (1) லைப்ரரி (1) வகிடும் (1) வக்ஃபு வாரியம் (1) வக்ப் வாரியம் (1) வசதி (1) வட இந்திய (1) வடியுது (1) வடிவும் (1) வட்டாட்சியர் முடிவு (1) வட்டார வழக்கு மொழி (1) வட்டியில்லா வங்கிச் சேவையை நோக்கி (1) வட்டிலப்பம் (1) வணங்குவோம் (1) வண்கொடுமை (1) வண்டூருது (1) வண்ணப்படம் (1) வண்ணம் (1) வதந்தியைப் பரப்பாதீர் (1) வன்மம் (1) வன்முறை (1) வன்மையாக கண்டிக்கிறோம் (1) வப்பா (1) வயசு (1) வயது (1) வயர்லெஸ் (1) வயலும் வாழ்வும் (1) வரம்பு (1) வரவுக்கும் செலவுக்கும் (1) வரிவரியாய் (1) வருகம் (1) வருமுன் (1) வருமுன் காப்போம் (1) வரும் முன் காப்போம் (1) வர்த்தக (1) வறட்டி (1) வலக்கரம் (1) வலி வழிச் செய்திகள் (1) வலைஞர்கள் (1) வலைத்தளங்கள் (1) வளம் (1) வளர்க (1) வளர்கிறாய் மகனே (1) வளர்ச்சிப்பாதையில் மோடி அரசு (1) வளைகுட (1) வளைகுடா பாதிப்பு (1) வளைகுடா வெயில் (1) வள்ளுவ (1) வழக்கம் (1) வழக்காடல் (1) வழக்கு (1) வழக்குக் கூண்டில் வறுமைக் கோடு (1) வழிகாட்டி (1) வழிகேடு (1) வழிமுறை (1) வஸ்வாஸ் (1) வா (1) வாகனங்கள் (1) வாகிங்க் (1) வாக்காளப் பெருமக்களே (1) வாக்கி (1) வாசனை (1) வாதம் (1) வாதி (1) வாப்பா பாட்டு (1) வாப்பிச்சா (1) வாயோதிக வலிகள் (1) வாய் (1) வாய் துர்நாற்றம் (1) வாரப் பத்திரிகை (1) வாழப் பழகுங்கள் (1) வாழவேண்டும் (1) வாழ்க சனநாயகம் (1) வாழ்கையின் வலக்கரம் (1) வாழ்க்கைத் தரம் (1) வாழ்க்கையின் பதிவேடுகள் (1) வாழ்ந்திடாதே (1) வாழ்வதற்கா? (1) வாழ்வு (1) வாழ்வு சிதைந்தது! வளம் குறைந்தது (1) வாஸ்கோடகாமா (1) விகடன் (1) விசா (1) விசாலம் (1) விசிட் (1) விடியலை நோக்கி (1) விடிவு (1) விடுமுறைக் காலம் (1) விடைபெறு (1) விண் கல் வீண் பயமா (1) விண்ணுலிருந்து மின்சாரம் (1) விண்வெளி (1) விதவை (1) விதி எண் 110 (1) விதி மீறல் (1) வித்தியாசமான வணிகர் (1) வித்தியாசமானவர்கள்.-பகுதி 3 (1) வித்யா (1) வினிகர் (1) வினோதினி (1) விபரீதம் (1) வியக்க வைக்கும் பயணக் கண்டுபிடிப்புக்கள் (1) வியாதி (1) வியாபாரம் (1) வியாபாரி (1) விரக்தி (1) விருட்சம் (1) விருது (1) விரைவு (1) விரோதம் (1) விலகல் (1) விலங்கினம் (1) விலாசம் (1) விலை (1) விளக்கு (1) விளைநிலங்கள் (1) விழலுக்கு வீணாகும் சிந்தனைகள் (1) விழா (1) விழி மொழி (1) விழிப்புணர்வு பக்கங்கள் (1) விழுஞாயிறு (1) விஷ வாயு (1) விஷுவல் (1) விஸ்வரூபம் (1) வீச்சு (1) வீடு கட்டுபவர்களின் கவனத்திற்கு (1) வீட்டுக்கு ஓர் ஆசான் (1) வீட்டுப் பாடம் (1) வீண் விரயம் செய்யாதீர்கள் (1) வீரர் (1) வீழ்வது (1) வெறியாட்டம் (1) வெற்றிலை (1) வெலக்காத் தெரு (1) வெல்லெஜொ (1) வெளியூர் (1) வெளியூர்காரர் (1) வெளியே (1) வெள்ளம் (1) வெள்ளிக்கிழமை (1) வெள்ளெழுத்து (1) வேங்கை (1) வேட்டு (1) வேட்பாளர்களின் நேர்காணல். நேர்காணல் (1) வேண்டாம் (1) வேண்டாம் கொண்டாட்டம் (1) வேண்டுதல் (1) வேண்டும் (1) வேதம் (1) வேற்றுமை (1) வேலை தேடுவோர்க்கு (1) வேலை வரைகலை (1) வேவு (1) வேவ்ரைடர் விமானம் (1) வேஷம் (1) வைத்தியன் (1) ஷஃபி (1) ஷபான பாஸிஜ் (1) ஷபே பராஅத் (1) ஷமீம் (1) ஷார்ஜா (1) ஷாஹிபா சபீர் அஹ்மது (1) ஷேக் (1) ஷேக் அப்துல் ரஹ்மான் சுதைஸி (1) ஷேக் உசேன் (1) ஷேக்கனா M.நிஜாம் (1) ஷைத்தான் (1) ஸலவாத் (1) ஸாத் பின் முஆத் (1) ஸூரத்துல் அஃலா (1) ஸூரத்துல் கியாமா (1) ஸூரத்துல் ளுஹா (1) ஸ்டாம்ப் (1) ஸ்டேஷனரி (1) ஸ்டேஷன் (1) ஸ்பீடு (1) ஸ்பெஷல் (1) ஸ்மார்ட் (1) ஹஜ் பெருநாள் (1) ஹஜ் 2012 (1) ஹஜ் கமிட்டி (1) ஹஜ்ஜின் மகத்துவம் (1) ஹஜ்ரத் மொஹானி (1) ஹத்தனா (1) ஹந்தூரி (1) ஹனீபா சார் (1) ஹலோ... ஹலோ... நலமா (1) ஹாபிட் (1) ஹாபிழ் (1) ஹாபிழ் பராஆ (1) ஹார்ட் (1) ஹாலித் (1) ஹிஜாப் (1) ஹிஜாப் S.அலாவுதீன் (1) ஹிஜாப் ஒரு கவசம் (1) ஹூமர் (1) ஹைக்கூ (1) ஹைடெக் காலம் (1)