Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label சபீர் அஹ்மது அபுஷாரூக். Show all posts
Showing posts with label சபீர் அஹ்மது அபுஷாரூக். Show all posts

அம்மாவைப் பிடித்த பேய் 2

அதிரைநிருபர் பதிப்பகம் | November 10, 2016 | , ,

அப்படி
அடிக்கடி ஆட்டிவைத்தது
அம்மாவைப் பிடித்திருந்த
பேய்

அதிவேகமாகத்
தலையைச் சுழற்றி
பிரிந்துகிடக்கும் நீள்கேசத்தை
சாட்டையென
இடமும் வலமுமாய்ச்
சொடுக்கும்

அத்தனைக் கொடூரமான
அலறல்களும்
ஆக்ரோஷமானக் கூச்சலும்
அம்மாவின் குரலாய்
இருந்ததில்லை

நான்கு ஆட்கள்
பிடித் தழுத்தியும்
முண்டியடிக்கும்
அம்மாவிடம்
அப்படியொரு சக்தியை
கண்டதில்லை நான்

'மொத்தி மீன் மண்டை'யும்
'காளிமார்க் கல'ரும்
கொடுத்தாலோ
வாங்கித்தருவதாய் வாக்களித்தாலோ
மலையேறிப் போகும்
அம்மாவைப் பிடித்திருந்த
முச்சந்தி வீட்டு
'மோமுதாமா' பாட்டி

ஆத்திரத்தில்
'கல'ருக்குப் பதிலாக
'படிக்கன் தண்ணி'யைக்
குடிக்கத் தந்த
தாய்மான் சொன்னது
'குடித்தது அம்மா அல்ல' என்று

என்
அக்காளையும் தம்பியையும்
குழந்தைகளாகவே கொன்றது
அம்மாவின் பேய்தான்
என்ற மிரட்சி
என்னை அண்டவிடாமலேயே
வைத்திருந்தது

அதன் பிறகு
கிழிந்த நாராய்
பாயில் கிடக்கும்
அம்மா
என்னை
அருகில் அழைத்து
மெல்ல அனைத்துக் கொள்ளும்
தலையணையைக்
கண்ணீர் நனைத்துச் செல்லும்

பிற்காலத்தில்...

பிழைப்பு வேண்டி
பல வருடங்கள் முன்பு
பரதேசம் பயணப்பட்ட
அப்பாவை
அழைத்து வந்து
கடவு அட்டையக் கைப்பற்றி
காடு கழனி கவனிக்கச் சொல்லி
வீட்டோடு வைத்த பிறகு...

அப்பாவின் மீதான
கோபதாபங்களின்போது
ஓர்
அதட்டலான
முறைப்புக்காக மட்டுமே
அம்மா
பேயைப் பயன்படுத்திக் கொண்டது !

சபீர் அஹ்மது அபுஷாரூக்

முத்தலாக்கின் மூடுபொருள்! 2

அதிரைநிருபர் பதிப்பகம் | October 27, 2016 | , , ,


மோகத்திற்கு முப்பதும்
ஆசைக்கு அறுபதுமென
தொண்ணூற்றி ஓராம் நாள்
திகட்டிற்று வாழ்க்கை

சமைந்த நாள்முதல்
சமைக்கவே இல்லை போலும்
உண்ணக் கொடுத்ததிலெல்லாம்
உப்பு, புளி கூடியது

துவைத்து உலர்த்திய
துணிமணியி லெல்லாம்
ஈர வாடை இருந்தது
எதிர்ச் சொற்கள் சொல்லியே
எரிச்சல் கூட்டியது

ஆயிரெத்தெட்டுக் காரணங்கள்
அவளுக்கெதிராய்
ஒன்றுகூட நினைவில்லை
ஒருமித்து வாழ்வதற்கு

முதல் தலாக்குக்குப் பிறகு
முதுகில் முளைத்தது சிறகு

முறுக்கித் திரிந்தது இளமை
சொல்பேச்சுக் கேட்காதவளின்
சோலியை முடித்த
செருக்கோடு

***
இரண்டாம் தலாக்குக்குப் பிறகும்
இளகி வரக்காணோம்.

பிடிவாதம் என்றொரு நோய்
மண வாழ்வின்
அடிநாதம் கசக்கவைக்கும் எட்டிக்காய்
குடிகெடுக்கும் கோட்டானின் வாய்

உடல்வாதம்கூட
ஒரு பக்கமே இழுக்கும்
உறுப்புகளை வளைக்கும்
பிடிவாதம் எந்த
மனத்தினையும் சுருக்கும்
மனிதனையே முடக்கும்

முயலுக்கு மூன்று கால்கள்
மூச்சுமுட்ட முழங்கும்
நாலாவது காலை
கண்டாலும் மறுக்கும்

காண்பதையும் கேட்பதையும்
கொள்கை யென்று ஏற்கும்
தீர விசாரிக்காது
தீர்வுகளை எட்டும்

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும்
முடிச்சுகளைப் போடும்
ஒட்டடை படிந்ததுபோல்
உள்ளத்தைப் பாழாக்கும்

மாற்றமில்லாக் கோட்பாடுகளில்
ஏற்ற இறக்கம் தேடும்
வரிகளுக்கிடையேதான்
வாசிக்க நாடும்

****
மூன்றாம் தலாக்குக்கு
முதல் நா ளிரவில்
விட்டம் நோக்கிய
வெற்றுப் பார்வையில்
விழிகளில் நீர்

கண்டதும் களித்ததும்
காத்திருந்து புசித்ததும்
தலைவலித் தைலத்தோடு
உயிர் தோய்த்துத் தேய்த்ததும்

கைப்பிடித்த நாள்முதல்
கதி நீயே என்றதும்
கண்ணுக்கெட்டாத் தூரத்தை
கைகோர்த்துக் கடந்ததும்

வாழ்ந்த வாழ்க்கையின்
வசந்தம் நினைத்துக்
கனிந்தது உள்ளம்

மனைவியின் அன்பு
நினைவினைத் தீண்ட
மாசற்ற சேவைகள்
மனதினில் தோன்ற

சில்லரைச் சச்சரவுகளை
நல்லதைக் கொண்டு வெல்ல
மறுநாள் காலை
மனைவிக்காக விடிந்தது

இறைவனின் கருணையால்
இருவரும் இணைய
முத்தலாக்கின் மூடுபொருள்
முழுதும் புரிந்தது!

துலாக்கோலில் நிறுத்தறிய
பலாக்காயல்ல வாழ்க்கை
நிலாக்கால நினைவுகளை
தலாக்கென்று வெட்ட வேண்டாம்!

 சபீர் அஹ்மது அபுஷாரூக்

திரைகடலோடி திரவியம் தேடு...??? - காணொளி பாடல்... 14

அதிரைநிருபர் பதிப்பகம் | August 19, 2016 | , , ,



காசு பணங் கேட்கல
கைக் கடியாரங் கேட்கல
காத ராக்கா பொண்டாட்டியாட்டம்
கைக் கொலுசுங் கேட்கல

பட் டெடுத்துக் கேட்கல
பகட்டு வாழ்வு கேட்கல
பக்கத்து வீட்டு பாத்துமாபி
படுக்கும் மெத்த கேட்கல

கட்டி முத்தங் கேட்கல
கட்டில் சொகங் கேட்கல
கட்டிவச்ச மல்லிச் சரம்
கசங்கி உதிர கேட்கல

வூடு வாசல் கேட்கல
ஊறும் கெணறு கேட்கல
வூட்டு நடு உத்தரத்தில்
ஊஞ்சல் கட்டிக் கேட்கல

தோட்டந் தொரவு கேட்கல
தொங்கட்டானுங் கேட்கல
தோடு நடுவில் பதித்துவைக்க
தோதா வைரம் கேட்கல

காடு கழனி கேட்கல
காரு வாங்கி கேட்கல
காது ரெண்டும் ஜொலிஜொலிக்க
கனத்த நகை கேட்கல்

வாய்க்கா வரப்பு கேட்கல
வாத்து கோழி கேட்கல
வாய்க்கு ருசியா வக்கனையா
வறுத்த கறி கேட்கல

கேட்ப தெல்லாம் சொற்பமய்யா
கிடைத்து விட்டால் சொர்க்கமய்யா
கஞ்சி கூழே போதுமய்யா
கூடிக் குடிச்சா வாழ்க்கையய்யா

கண் முழிக்கும் காலையெலாம்
கனக்கும் நெஞ்ச லேசாக்க
கண் நெறைஞ்ச கணவர் உமை
காணுஞ் சொகம் கேட்கிறேன்

கத்திமுனை இளமை தனை
கடக்க துணை கேட்கிறேன்
கட்டி அவிழ்க்கும் சீலையோடு
கண்டு ரசிக்க கேட்கிறேன்

சேர்ந்து உண்ணக் கேட்கிறேன்
சிரித்துப் பேசக் கேட்கிறேன்
சாவு வந்து சேரும்வரை
சகல சுபிட்சம் கேட்கிறேன்

மாலை வெயில் சாயும்காலம்
மடியில் சாய கேட்கிறேன்
மறுபடியும் விடியும் வரை
முடியா காதல் கேட்கிறேன்

வீட்டுக்குள்ளே வெறுமையிலே
வீழ்ந்து சாக விரும்பல
வாழத்தானே வாழ்க்கைப் பட்டேன்
வாழ வைக்கக் கேட்கிறேன்

கிடைக்கும் செல்வம் போதுமய்யா
கண்ணீர் விற்க வேண்டாமய்யா
கணவன் மனைவி பொழப்புயிது
காசு தீர்க்காக் கணக்குயிது

சபீர் அஹ்மது அபுஷாரூக்
குரல் : ஜஃபருல்லாஹ்



பேரென்ன...பிறகென்ன? 2

அதிரைநிருபர் | July 20, 2016 | , , , , ,

பத்துமாத
பாதுகாப்பு வளை-
கதறிக்கொண்டே கண்திறந்த...
பிறந்த தெரு என் தெருவா?

கால்களில் இறக்கை கட்டி-
கடலென்றும் காடென்றும்-
குளமென்றும் குட்டையென்றும்-
குதித்துத் திறிந்த...
வளர்ந்த தெரு என் தெருவா?

பள்ளிக் கூடப் படிப்பும்-
வகுப் பறைகளின் வசீகரமும்-
வாத்தியார்களின் வாஞ்சையும்-
என...
பயின்ற தெரு என் தெருவா?

அரும்பிய மீசையும்-
தழும்பிய ஆசையும்-
தவம் கிடந்த பார்வைகளும்-
கத்துக்குட்டி கவிதைகளும்-
என...
களித்திருந்த தெரு என் தெருவா?

பார்த்ததெல்லாம் அழகாகவும்-.
படித்ததெல்லாம் தெளிவாகவும்-
நொடி நேர பார்வைக்கும்-
கோடி அர்த்தம் கண்ட-
கல்லூரிக் காலங்கள்...
கழிந்த தெரு என் தெருவா?

வாயிக்கும் வயிற்றிற்கும்-
சார்ந்தவர்களுக்கும் சேர்ந்தவளுக்கும்
என...
பிறந்த மண் துறந்து
பொருள் தேடி...
அலையும் தெரு என் தெருவா?

வைத்த காலம் முதல்
அழைத்த பெயரை-
மாமாவிலும் மச்சானிலும்
'என்னங்க'விலும் 'இந்தாங்க'விலும் வாப்பாவிலும் அப்பாவிலும்
தொலைத்து விட்டு-
மையத்து என்ற
பெயர் மட்டும் தாங்கி
மாய்ந்து...
அடங்கும் தெரு என் தெருவா?

பொறு சகோதரா...
மஹ்சரில் சந்திப்போம்
ஒரே தெருவில்!

- சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

மீள் பதிவு

மகளெனப்படுவள்... 5

அதிரைநிருபர் பதிப்பகம் | March 09, 2016 | , ,


மகளெனப்படுபவள்..
தாயோடு சேர்ந்து
தந்தையை வெறுப்பேற்றுபவள்

அவனது ஆடைகளின் நிறத்தேர்வை
ஆங்கில உச்சரிப்பைக்
கேலிசெய்து மகிழ்பவள்

மகனோடு எடுக்கும் செல்ஃபியைக்
கெடுக்க திட்டமிடுபவள்

கடைசி வரை...
முகம் பார்க்கும் கண்ணாடியை
ஊறுகாய் ஜாடியை
ஹார்லிக்ஸ் பாட்டியலை
உடைத்தது அவன்தானென
குடும்ப உறுப்பினர்களை
நம்பவைப்பவள்

அமேசானிலிருந்து
உள்ளூர் சூப்பர் மார்கெட் வரை
லிஸ்ட் கொடுத்து
திகீர் கிளப்பியும்
திருப்தியடையாமல்
அவித்த பணங்கிழங்கை
விடியற்காலையில் கேட்டு
தந்தைப் பாசத்துக்கு
டெஸ்ட் வைப்பவள்

ஒரு சோப்ளாங்கித் தகப்பனை
நாக்குதள்ளவைத்து
எப்போது ஹாஸ்டலுக்குப்
போவாலென
சிந்திக்க வைப்பவள்

விடுமுறை முடிந்து
இருள் பிரியா ஒரு காலையில்
பேருந்திலேற்றி கையசைத்துத்
திரும்பியவனை
வீட்டுக்குள் நுழைந்ததும்
கவிந்திருக்கும் வெறுமையை
விரட்ட முடியாது
கட்டிலில் குப்புறப் படுத்து
குலுங்கிக் குலுங்கி
கண்ணீர் விடவைப்பவளே

அவளே...
அந்தச் செல்ல ராட்சசியே
மகளெனப்படுபவள் !

நன்றி : ஆனந்த விகடன்
பரிந்துரை : சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு