Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label பிலிப்பைன்ஸ். Show all posts
Showing posts with label பிலிப்பைன்ஸ். Show all posts

ஒன்றாக இருந்தார் ஒற்றையாக பார்சல் செய்யப்பட்டார் ! 22

அதிரைநிருபர் பதிப்பகம் | April 05, 2013 | , , , , ,


எங்கள் அனைவருக்குமே பேரதிர்ச்சிதான், என்னுடைய முதலாளிக்கு தகவல் கொடுத்தேன் அவரும் இதனை அவரின் மனைவிக்கு தெரிவித்து விடு ஆனால் நீ ஃபோனில் பேச வேண்டாம் ஃபிலிப்பினோ மொழி பேசும் உன்னோட அசிஸ்டெண்டை பேசச் சொல் என்றார். அதற்கான காராணம் எடுத்துச் சொல்லும்போது அவர்கள் மொழியில் தகவல் சொன்னால் அவர்களை சமாதானப் படுத்தலாம் என்றார்... ஆனால், மாறாக அங்குதான் வெடித்தது வினை !

அவரின் மனைவி திருப்பி கேட்டிருக்கிறார் “நேற்று வரை நன்றாக இருப்பதாக டாக்டர்களும் நர்சுகளும் சொன்னார்கள் ஏன் கம்பெனியில் இருப்பவர்களும் சொன்னார்கள் திடீரெண்டு என்ன ஆச்சு ? ஏன் உங்கள் கம்பெனி முதலாளி எனக்கு இந்த தகவலை சொல்லாமல் வேறு ஒருவரிடம் சொல்லச் சொல்கிறார்” என்று வெடித்தார், கதறினார்.

அந்த களோபரத்தினை தொடர்ந்து நானும் 10 நிமிடம் கழித்து ‘சார்ல்டன்’ மனைவியிடம் பேசினேன், முடிந்தவரை சூழலை எடுத்துச் சொன்னேன் அவரால் இழப்பை பொறுக்க முடியாமல் வார்த்தைகளை கொட்டினார் பொறுமை காத்தேன்.

இதற்கு முன்னர் எங்கள் கம்பெனியில் நிகழ்ந்த ஐந்து இறப்புகளை சந்தித்து இருந்ததால் எவ்வாறான நடைமுறைகளை கையாள வேண்டும் என்பதை ஏற்கனவே தெரிந்து இருந்ததால் அலைச்சல் குறைவே இருந்தாலும் மன உலைச்சல் அதிகம் இந்த விஷயத்தில். 

நானும் கம்பெனி பி.ஆர்.ஓ.வும் பெல்ஹோல் மருத்துவமனைக்கு தேவையான டாகுமெண்ட்களை சேகரித்துக் கொண்டு மதியம் 02:30 மணிக்கு சென்றடைந்தோம், அதற்குள் அவரின் உடலை ஐஸ்பெட்டியில் வைத்து பூட்டி விட்டனர். உடணடியாக பார்க்க வேண்டும் என்றதும் எங்களுக்கு திறந்து காட்டினார்கள்.

போலீசுக்கு மதியமே தகவல் கொடுக்கப்பட்டது அவர்களும் பார்த்து விட்டுச் சென்றிருக்கின்றனர், எங்களின் வருகைக்காக காத்திருந்ததால் மீண்டும் போலீஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் எங்களிடம் அடையாளம் சரியா ? இவர்தானா என்று உறுதி செய்து கொண்டதும் அருகில் இருக்கும் பரஹா அரசு மருத்துமனைக்கு வரச் சொன்னார்கள், பெல்ஹோலில் கொடுத்த இறப்பு அறிவிப்பு சான்றிதழுடன் அங்கே சென்றதும் அவர்கள் வழக்கமாக கொடுக்கும் (அரபி மொழியில்) கிளியரன்ஸ் லெட்டரை தயார் செய்து தந்தார்கள்.  அதற்கு முன்னர் உடலை எங்கு அனுப்ப இருக்கிறோம் என்றும் கேட்டுக் கொண்டார்கள். (அதில் பெல்ஹோல் மருத்துவமனைக்கு, ஃபிலிப்பைன்ஸ் கான்சுலேட்டுக்கு, இறப்பு / பிறப்பு சான்றிதழ் வழங்கும் அலுவலகத்திற்கு, துபாய் ஹெல்த் அத்தாரிட்டி சோனாப்பூர்க்கு, அடுத்து ஏர்லைன்ஸ்க்கு)

பெல்ஹோல் மருத்துவமனையில் அவர்களுக்கான போலீஸ் லெட்டரைக் கொடுத்ததும், அலுவலகத்திற்கு செல்லுங்கள் என்றனர் அங்கே சென்றதும் ஐ.பி.பில்லிங்க் செக்ஷனுக்கும் செல்லுங்கள் என்றனர் (இன் பேஷண்ட் பில்லிங்). அனைத்து முஸ்தீபுகளையும் தாண்டி அரை மணிநேரம் காக்க வைத்த அவர்கள் 68 பக்கங்கள் அடங்கிய பிரிண்ட் அவுட்டை எடுத்து கடைசிப் பக்கத்தில் கையெழுத்துப் போடச் சொன்னார்கள். அது என்ன வென்று பார்க்கலாம் என்று ஒவ்வொன்றாக திருப்பிப் பார்த்தால், அவர் அங்கு அட்மிட் ஆனதிலிருந்து ஐஸ் பெட்டிக்குள் அடைக்கும் வரையிலான பில்.

தொகை மிகப் பெரியதாக இருந்தது, ஏன் எதற்கு எப்படி என்று கேள்விகள் கேட்டுக் கொண்டே அந்த பில்லிங்க் ஸ்டாஃப்போடு பேசிக் கொண்டிருக்கும்போதே நர்ஸ் வந்தார் "சீக்கிரம் பணத்தை செலுத்தி விட்டு கிளியரன்ஸ்ஸை எடுத்துக் கொண்டு எம்.ஐ.சி.யூ.வுக்கு வாருங்கள்” சென்று சொல்லிவிட்டுச் சென்றார்.

கூட்டிக் கழித்து இன்சூரன்ஸ் அப்ரூவல் செய்தது போக மீதம் இன்னும் திர்ஹம் 9,400 செலுத்தி விட்டால் கிளியரன்ஸ் தருவோம் என்றார்,  சரி இதற்கு மேல் என்ன செய்ய முடியும் என்று அந்த தொகையை கட்டிவிட்டு மாளிகைக் கடை சிட்டு போல் ஒரு பேப்பரில் எழுதி கொடுத்தார் ‘ஒகே’ என்று அதில் அவரின் கையெழுத்தும் அந்த மருத்தவமனையின் தலையெழுத்தையும் அச்சடிக்கப்பட்டிருந்தது.

அந்த துண்டுச் சீட்டை எடுத்துக் கொண்டு எம்.ஐ.சி.யூ.க்கு சென்றதும் 'ஜஸ்ட் வெயிட்” என்றார்கள் காத்திருந்தோம். 'சார்ல்டனின்' உடமைகளை ஒவ்வொன்றாக பிரித்து பிரித்து எழுதிக் கொண்டு தனித் தனி பிளாஸ்டிக் பையில் போட்டுக் கொடுத்தார்கள். எங்கே கிளியரன்ஸ் என்றதும், காத்திருங்கள் போலீஸ் ஆம்புலன்ஸை அழைத்திருகிறோம் என்றனர். எனக்கோ அதற்குமேல் பொறுமை காக்க முடியவில்லை "இறப்புக்கான காரணம் -  என்ன வென்று சர்டிபிகெட் தருவதற்கு ஏன் இந்த இழுத்தடிப்பு என்று சத்தம் போட்ட சிறிது நேரத்திலேயே எல்லாமே ரெடி என்றனர்.

மீண்டும் போலிஸுக்கு தகவல் கொடுத்து அவர்களும் வந்தனர் ஆம்புலன்ஸோடு (ஏன் தகவல் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை) அவர்கள் வந்ததும் நேரடியாக போஸ்ட்மார்ட்டம் செய்யும் கிஸ்ஸஸ் மருத்துவமனைக்குத்தான் எடுத்து செல்வார்கள் என்று எனக்கு தெரியும், இருந்தாலும் இது மருத்துவமணையில் இயற்கை(!?) மரணம் ஏன் போஸ்ட்மார்ட்டம் என்று ஆட்சேபனை தெரிவித்தேன் அப்போதுதான் போலீஸ் மீண்டும் முதல் மரண அறிவிப்பு சான்றிதழை மீண்டும் வாசித்து பார்த்தார் அவரும் நான் சொல்வதையே சொல்லிவிட்டு போலீஸ் ஆம்புலன்ஸில் எடுத்து செல்ல மாட்டோம் முனிசிபாலிட்டி ஆம்புலன்ஸில்தான் எடுத்துச் செல்ல வேண்டும் என்று சொல்லிவிட்டு அவர்கள் திரும்பிச் சென்றனர்.

பெல்ஹோல் மருத்துவமனை அலுவலர்களோ எங்களிடம் ஒரே ஒரு ஐஸ் பெட்டிதான் இருக்கிறது இடமில்லை எப்படியாயினும் இன்றே பாடியை எடுத்துச் செல்லுங்கள் என்று வற்புறுத்தினர். நாளை வரை இங்கேயே இருக்கட்டும் என்று சொன்னேன் காலையில் Death Certificate  இறப்பு சான்றிதழ் பெற்றதும், கான்சுலேட் என்.ஓ.சி.யும் பெற்று அதன் பின்னர் பாடியை சோனாப்பூருக்கு எடுத்துச் செல்கிறோம் என்றேன். பாடி இங்கு இருக்கும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் நீங்கள் சார்ஜ் கட்டணும் என்றானர். நாங்களும் சரியென்று சொல்லிவிட்டு வந்துவிட்டோம் அன்று இரவு 10:30 இருக்கும்.

அடுத்த நாள் பிப்ரவரி 24ம் தேதி, காலை 07:30 மணிக்கு துவங்கியது அன்றைய அலைச்சலின் அடுத்தக்கட்டும், நானும் என்னுடைய கம்பெனி பி.ஆர்.ஓ.வும் முதலில் இறப்புச் சான்றிதழ் வாங்குவதற்கு அல்பர்ஹா கவர்மெண்ட் ஹாஸ்பிடலுக்குச் சென்றோம் தேவையான ஆவணங்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு அங்கே ஒரு மணி நேரத்தில் வேலைகள் முடிந்தது. அதற்கிடையில் சார்ல்டன் மனைவிக்கும் குழந்தைக்கும் விஷா அப்ளை செய்ய நண்பரின் டிரவால்ஸில் ஏற்பாடு செய்துவிட்டு நகர்ந்தோம்.

கிடைத்த இறப்புச் சான்றிதழ் அரபியில் இருப்பதால் அதனை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ய மற்றொரு இடத்திற்கு சென்று அதனையும் பெற்றுக் கொண்டோம். பிலிப்பைன்ஸ் கான்சுலேட்டுக்கு சென்றோம் திர்ஹம் 100 கட்டி அவர்களிடம் ஒரு NOCஐ பெற்றுக் கொண்டதும், பாஸ்போர்ட்டையும் உடணடியாக கேன்ஷல் செய்து (பாஸ்போர்ட்டின் அட்டை முதல் இரண்டு பக்கங்களில் ஓட்டை போட்டு) கொடுத்தார் அந்த ஃபிலிப்பினோ ஆபிசர்... !

அங்கிருந்து நேராக அல்முசினா / சோனாப்பூர் என்ற இடத்தில் இருக்கும் துபாய் ஹெல்த் அத்தாரிட்டி மருத்துவமனைக்குச் சென்று அங்கே பாடி ஸ்டோரேஜுக்கு இடம் இருக்கிறதா என்று விசாரிக்கச் சென்றோம் (அங்கு இடம் இல்லை என்றால், கிஸ்ஸஸில் இருக்கும் போலீஸ் மார்சுவரியில்தான் இடம் பார்க்கனும்). நல்ல வேலை இடமிருந்தது, அங்கிருந்து அனுமதி வாங்கிக் கொண்டு முனிசிபாலிட்டி ஆம்புலன்ஸுக்குரிய தொகையை அங்கேயே கட்டிவிட்டு மீண்டும் பெல்ஹோல் மருத்துவமனைக்கு வந்தோம்.

நேரம் மதியம் 03:30 மணி, நாங்கள் மருத்துவமனையை அடைந்த அரை மணிநேரத்தில் ஆம்புலன்ஸும் வந்தது அடுத்து என்ன பாடியை ஆம்புலன்ஸில் ஏற்றி அல்-முஹ்சினா / சோனாப்பூர் மார்சுவரிக்கு அனுப்ப வேண்டும். ஆனால், மருத்துவமனை பெண் அலுவலர் மீண்டும்  ஓடி வந்தார் பாடியை ரிலீஸ் செய்ய ஸ்டோரேஜுக்கு பணம் கட்ட வேண்டும் அதன் பின்னர்தான் ரிலீஸ் செய்வார்கள் என்றார் (என்னடா கொடுமையிது !) வேறு வழி !?

முந்தைய நாள் (அதாவது அனைத்து தொகையும் செட்டில் செய்த பின்னர்) இரவு 07:30 மணியிலிருந்து அடுத்த நாள் மாலை 04:00 மணிவரை ஒரு மணிநேரத்திற்கு திர்ஹம் 100 என்று நன்றாகவே கணக்கு செய்து கட்டச் சொன்னார்கள், அங்கே திர்ஹம் ஐம்பது குறைவாக இருந்தது அந்த ரிசிப்டில் டிஸ்கவுண்ட் திர்ஹம் 50/= (ஸ்பெஷல்) கையில் எழுதிக் கொடுத்தார்.

அங்கிருந்து பாடியை ஏற்றிக் கொண்டு ஆம்புலன்ஸ் கிளம்பியது மாலை 5:00 மணியாகிவிட்டது.  மீண்டும் ஜெபல் அலி அலுவலகம் வந்து அடுத்த நாட்கள் செய்ய வேண்டிய பணிகளை நெறிப்படுத்தி விட்டு வீட்டுக்கு வந்தேன் இரவு 10:30 மணி.

அடுத்த நாள் ஃபிப்ரவரி 25ம் தேதி, விசா கேன்சலேஷன் 09:00 மணிக்கே செய்து கொண்டு அவரின் பாஸ்போர்ட்டை எடுத்துக் கொண்டு, நேராக பிலிப்பைன்ஸ் கான்சுலேட்டுக்கு சென்று அங்கே அவர்கள் கேட்ட அனைத்து ஆவணங்களையும் கொடுத்து விட்டு அவரது மனைவிக்கும் மகனுக்கும் ஏற்பாடு செய்திருந்த விஷாவுக்கும் NOC வாங்கி விசாவை பிலிப்பைன்ஸுக்கு அனுப்பிவிட்டு காத்திருன்தோம் ஃபேமிலி வருகைக்காக.

பிலிப்பைன்ஸில் இருக்கும் பயணச் சடங்குகளை முடித்துக் கொண்டு 27ம் தேதிதான் சார்ல்டன் மனைவி மட்டும் வந்தார். அன்று மதியம் 2:00 மணிக்கு அவரை அழைத்துக் கொண்டு மார்சுவரிக்கு சென்று இறந்தவரின் உடலை பார்க்கச் சென்றோம். அவர் இறந்தவரின் (சார்ல்டன்) உடலை கட்டிப் பிடித்து நிறைய ஃபோட்டோ எடுத்துக் கொண்டார் (விளக்கம் மிக நீண்டதாக கொடுத்தார் ஃபோட்டோக்களை ஏன் எடுத்தேன் என்று). அன்று மாலையே அவரை ஜெபல் அலிக்கு அழைத்து வந்து அவரின் கணவருடைய உடமைகளை அவரை வைத்தே பேக் செய்து மொத்த 7 பாக்ஸ் மொத்தம் 382 கிலோ அவரே அனைத்து பெட்டிகளிலும் அவரது முகவரியை எழுதினார்.

அடுத்த நாள் 09:00 மணிக்கு அவரை எங்களது தலைமை அலுவலகத்திற்கு அழைத்து வந்து, அவரது கணவருக்கு சேர வேண்டிய அனைத்து வகையான செட்டில்மெண்டை பணமாகவே கொடுத்து விட்டு கையெழுத்தும் வாங்கிக் கொண்டோம். அன்றே அவர் மீண்டும் மருத்துவம் செய்த டாக்டரை சந்திக்க வேண்டும் என்று அடம் பிடித்தார் அவரை பெல்ஹோல் மருத்துவமனைக்கு அழைத்து சென்று டாக்டரை பார்க்க வைத்து (அது ஒரு பெரிய கதை) அவரை அங்கிருந்து டாக்ஸியில் அனுப்பி விட்டு நான் வீடு திரும்பும் போது மணி இரவு 8:00.

சனிக்கிழமை மார்ச் 2 2013, சார்ல்டன் மனைவி திரும்பிச் செல்வதற்கான டிக்கெட்டை ரீகன்பாஃர்ம் செய்து விட்டு (மார்ச் 3ம் தேதி காலை 10:00மணிக்கு) அந்த டிக்கெட் நகலை எடுத்துக் கொண்டு மீண்டும் சோனாப்பூர்.

அங்கே பாடி பேக்கிங்கிற்கும் அவர்களின் சேவைக்கான கட்டணம் திர்ஹம் 1010/- (மூன்று நாட்களுக்கு தாக்குப்பிடிக்கும் ஊசி, மருந்து தெளிப்பு) மற்றும் பெட்டிக்கு (மரப்பெட்டி) திர்ஹம் 1,500/- என்று கட்டணங்களை செலுத்திவிட்டு எல்லாம் ரெடியாக பகல் 01:30 மணியாகிவிட்டது. அடுத்து ஆம்புலன்ஸ் (மீடும் திர்ஹம் 210/-  மார்சுவரியிலிருன்து எமிரேட்ஸ் ஸ்கை கார்கோ (துபாய் கார்ஜோ வில்லேஜுக்கு) எடுத்துச் செல்ல கட்டணத்தையும் செலுத்தியாகிவிட்டது.

ஆம்புலன்ஸ் அரைமணி நேரத்திற்குள் பாடியை எமிரேட்ஸ் கார்கோவில் இறக்கி வைத்து விட்டு சென்றது. அடுத்து என்ன நேரடியாக அங்கே இருக்கும் போலிஸ் அலுவலகத்தில் அவர்களுக்கு தேவையான ஆவணங்களை கொடுத்து விட்டு, NOC (ஸ்டாம்புதான்) அடித்துக் கொண்டு, மீண்டும் பாடி வைக்கப்படிருந்த அந்த மேற்கூறையுடன் இருந்த பக்கவாட்டில் திறந்த வெளித் திண்ணைக்கு வந்து அங்கிருந்த எமிரேட்ஸ் ஸ்டாஃபிடம் அனைத்து ஆவணங்களை காட்டியதும் அவர் பாடிக்கு எடை போட்டார். அப்புறம் அதனை ஸ்கேனிங்க் உள்ளே அனுப்பிவிட்டு எடையை எழுதி சீல் அடித்து தந்தார்.

ஸ்கேனிங் உள்ளே சென்றதும் அங்கே உள்ளே இருந்த போலீஸ் அந்தப் பெட்டியை சரிபார்த்து உள்ளே இருப்பது அவர்தானா என்று என்னிடம் கேட்டுவிட்டு மற்றொரு கையொப்பம், மொபல் நம்பர் வாங்கிக் கொண்டார்.

கட்டணங்கள் செலுத்த எமிரேட்ஸ் அலுவலகம், அங்கே அனைத்து ஆவணங்களையும் கொடுத்ததும் எடைக்கு எவ்வளவு என்று சொன்னதும் அந்த தொகையை கட்டிவிட்டு அவர்கள் கொடுத்த ஏர்வே பில்லை வாங்கிக் கொண்டு, பாடியுடன் செல்லும் அவரது மனைவியின் டிக்கட்டோடு கார்கோவை புக்கிங்க் செய்துவிட்டு அங்கிருந்து நகரும்போது மாலை 6:00 மணி.

அடுத்த நாள் அதிகாலை 06:30 மணிக்கு டெர்மினல் - 3 சார்ல்டன் மனைவியிடம் அவருக்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் கொடுத்து அனுப்பிவைக்க அங்கே சென்றதும் மீண்டும் ஒரு குண்டை தூக்கிப் போட்டார்....

ஊருக்கு சென்றதும் அவரது கணவரைப் புதைக்க இடம் வாங்க வேண்டும் அதற்கு யார் பணம் தருவார்கள் என்று !

இத்தோடு போதும் தானே.... (இதனை வம்பு செய்து வாசிக்க வைத்த வசை என்னோடு போகட்டும்)

அபூஇப்ராஹீம்

ஒன்றாக இருந்தார் ஒற்றையாக பார்சல் செய்யப்பட்டார் ! 8

அதிரைநிருபர் பதிப்பகம் | March 17, 2013 | , , , , ,


2002ம் வருடம் ஏப்ரல் மாதம் 12ம் தேதி தனது பணியைத் தொடங்கினார், முதல் வேலையாக என்னிடமே அனுப்பி வைக்கப்பட்டார் அவருக்கான வேலையின் பொறுப்புகளை பொறுமையாக எடுத்துரைத்தேன் அவரும் கேள்வி மேல் கேள்வி கேட்டு ஒவ்வொன்றாக தெரிந்து கொண்டார். அதோடு இல்லாமல் அனைத்தையும் குறிப்பெடுத்துக் கொண்டார்.

அவருக்கான வேலை புரடெக்ஸன் ப்ளேனிங் அதாவது உற்பத்திற்கான கால அளவை நிர்ணயிப்பது, வேலையாட்கள் பணியமைப்பை திட்டமில், உற்பத்திக்கான பொருட்களை முன்கூட்டியே தயார் செய்ய திட்டமிடுதல் என்பதாகும். அவர் ஃபிலிப்பைன்ஸ் நாட்டைச் சார்ந்தவர், பார்ப்பதற்கு குள்ளமாக இருப்பார் நல்ல ஆங்கிலப் புலமை எழுத்தில் இருக்கும். நாளடைவில் டைரி, மற்றும் அச்சுக்கு செல்லும் அனைத்து ஆங்கில எழுத்துருக்களையும் புரூஃப் பார்ப்பதற்கும் பணிக்கப்பட்டார்.

உடன் வேலை செய்யும் அனைவரையும் மரியாதையாகவே அழைத்துப் பழகியவர், அதனையே அவரும் எதிர்பார்ப்பார். லேபராக இருந்தாலும் மேலாளராக இருந்தாலும் அவர்களின் பிறந்த நாள், கல்யாண நாள், குழந்தை பிறந்த நாள் என்று அவருக்கு தெரியவரும் பட்சத்தில் கட்டாயம் பரிசுப் பொருட்களை வாங்கிக் கொடுப்பதற்கு தவறமாட்டார். அதோடு ஈத் (பெருநாட்கள்) தேசிய தினம், கிருஸ்துமஸ், என்று எது வந்தாலும் அவரிடமிருந்து அவரோடு நெருக்கமாக இருப்பவர்களுக்கு பரிசுப் பொருட்கள் நிச்சயம் கிடைக்கும்.

வேலையில் இருக்கும்போது ஏதாவது கொரித்துக் கொண்டோ சாப்பிட்டுக் கொண்டோ இருப்பார், அதனால் மற்றவர்களுக்கு ஏதும் சிரமங்கள் இல்லாவிடினும் அவரின் தொடர் செயல்களால் அதனை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

ஒவ்வொரு மாதமும் சம்பளம் வாங்கிய முதல் வாரத்தில் ஷாப்பிங் செல்வது அவரின் வழக்கம். நிறைய பரிசுப் பொருட்களும் ஆடைகளும் வாங்கி 71x45x71cm என்ற கொள்ளலவு கொண்ட பாக்ஸில் மாதம் ஒரு பார்சல் பிலிப்பைன்ஸுக்கு அவரால் அனுப்பப்படும் அதில் அவரின் வீட்டார் அனைவருக்கமான பரிசுப் பொருட்கள் நிரம்ப இருக்கும்.

கம்பெனியில் (தொழிற்சாலையில்) நடக்கும் முக்கிய நிகழ்வுகளில் அவரின் பங்கு அதிகமாக இருக்கும், விழாவானாலும், பிரெசெண்டேஷன் ஆனாலும், இன்னும் முக்கிய நிகழ்வுகளானாலும்.

சில சமயங்களில் வேலையில் நடக்கும் கோபதாபங்களில் அவரும் அதிகம் பாதிக்கப்படிருக்கிறார், 'யாருக்கு யார் ?' என்று அவரால் அடிக்கடி எனக்கு மின்னஞ்சலில் கேட்கப்படும் கேள்வி, பல விஷங்களை அவர் என்னோடு வாதிடும்போது தெரியவரும். என்ன இவன் இவ்வளவு பீடிகை போடுகிறானே என்று நெளிய வேண்டாம்.

அவருடைய பெயர் 'சார்ல்டன்'

கடந்த சில நாட்களாக அதிகமாக இருமிக் கொண்டே இருந்தார், பலமுறை அவரிடம் டாக்டரிடம் செல்லும்படி தனிப்பட்ட முறையில் அறிவுறுத்தி வந்தேன், அவரும் இன்று நாளை என்று சொல்லிக் கொண்டே இருந்தார். அதற்கு முன்னர் அவரின் ஆரோக்கியம் பற்றி சின்ன குறிப்பு கடந்த மூன்று வருடங்களாக ஹைபர்டென்ஷன், சுகர் இருப்பதாகவும் தொடர்ந்து ட்ரீட்மெண்ட் எடுத்து வந்தார்.

கடந்த ஃபிப்ரவரி மாதம் 11ம் தேதி காலை வழக்கம்போல் வேலைக்கு வந்தார் அவரின் முகத்தில் வாட்டம் தெரிந்தது அவரிடம் "என்ன சார்ல்டன்?" என்றேன். "உடல்நிலை சரியில்லை" என்றார், உடனடியாக டிரைவரை அழைத்து அவர் எங்கு வழமையாக மருத்துவத்திற்கு செல்வாரோ அங்கே அழைத்துச் செல்லும் படி சொல்லிவிட்டு நானும் என்னுடைய வேலையைப் பார்த்துக் கொள்ள தொடர்ந்தேன்

அடுத்த நாள் 12ம் தேதி, அவர் வேலைக்கு வரவில்லை நானும் ஒருவேளை மெடிக்கல் லீவாக இருக்கும் என்று என்னுடைய அசிஸ்டெண்டிடம் என்ன வென்று விசாரிக்கச் சொல்லியிருந்தேன். அவரும் விசாரித்து விட்டு இன்று மெடிக்கல் லிவு என்றார்.

பிப்ரவரி 13ம் தேதியும் அவர் வேலைக்கு வரவில்லை, நானே அவரின் மொபைலுக்கு ஃபோன் செய்தேன், பதில் இல்லை... அன்று மதியம் சுமார் 2:30 மணிக்கு டேரா பெல்ஹோல் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலிருந்து எனக்கு அழைப்பு வந்தது கம்பெனியிலிருந்து யாராவது அங்கு வரவேண்டும் என்றும் அவருக்கு உடணடியாக ஆப்ரேஷன் செய்ய வேண்டும் அதற்காக இன்சூரன்ஸ் அப்ருவல் இன்னும் வரவில்லை அது வந்தாலும் வராவிட்டாலும் கம்பெனியிலிருந்து அவர்கள் குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யச் சொன்னார்கள்.

அன்று மாலையே அங்கு செல்லலாம் என்று இருக்கும்போது, ஒரு மணிநேரம் கழித்து 'சார்ல்டனே' என்னிடம் மொபைலில் பேசினார், ஆப்ரேஷன் இன்று இல்லை பிறகு செய்ய விருப்பதாக டாக்டர் சொல்லியிருக்கிறார் என்றார். "இப்போது நீ வரவேண்டாம் நாளை அல்லது மறுநாள் மருத்துவமனையிலிருந்து நான் திரும்பி விடுவேன்" என்று தெளிவாகச் சொன்னார்.

அடுத்த நாள் 14ம் தேதி காலை 11:30 மணிக்கு மீண்டும் மருத்துவமனையிலிருந்து ஃபோன் வந்தது, அவர்கள் என்னிடம் உடணடியாக டெபாசிட் செய்யுங்கள் அப்போதுதான் தொடர்ந்து சிகிச்சை அளிக்க முடியும் என்றனர். நானும் எனக்கிருக்கும் அனுமதியைப் பயன்படுத்தி அவர்கள் சொன்ன தொகையை ரொக்கமாக எடுத்துக் கொண்டு மாலை 4:30 மணியளவில் அங்கு சென்றேன். முதலில் 'சார்ல்டனை' பார்க்கலாம் என்று விசாரித்தேன் அவரை ICUவில் வைத்திருப்பதாகச் சொன்னார்கள். எனக்கு சுல்லென்றது 'என்னடா நேற்று பேசும்போது நாளை அல்லது மறுநாள் திரும்பி விடுவேன்' என்று சொன்னார் இப்போது ICU என்றதும் அதிர்ச்சியாக இருந்தது.

அங்கு சென்று பார்த்ததும் அதிர்ந்தே விட்டேன் அவரின் நிலையைக் கண்டதும், ஒரு குழந்தையைப் போல் பிதற்றிக் கொண்டிருந்தார். அந்த அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாமல் அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரை பார்க்க வேண்டும் என்று அங்கிருந்த நர்ஸிடம் சொன்னதும் அவரும் இரண்டாவது மாடிக்குச் சென்று பார்க்கச் சொன்னார். டாக்டரை பார்த்ததும் அவர் ஒவ்வொன்றாகச் சொல்லச் சொல்ல உறைந்து போய்விட்டேன்.

அன்றே அவரின் சொந்தக்காரர்கள் யாரும் இருக்கிறார்களா என்று விசாரிக்க ஆரம்பித்தேன் யாரும் சிக்கவில்லை, உடணடியாக அவரின் மனைவிக்கே (பிலிப்பைன்ஸ்க்கே) தகவல் கொடுத்தேன், அதோடு மருத்துவமனை தொலைபேசி, டாக்டர் பெயர், நர்ஸ் பெயர் அனைத்தையும் கொடுத்தேன். அன்றிருலிந்து அவரின் மனைவியும் காலை, மாலை என்று இரண்டு நேரமும் ஃபோன் போட்டு பேசி வந்திருக்கிறார்.

இருமல், மயக்கம் என்று சொல்லித்தான் அங்கே அட்மிட் ஆனார், அடுத்த நாள் கிட்னியில் கல் இருப்பதாகச் சொல்லி ஆபரேஷன் என்றனர், அதன் பின்னர் ஹார்ட் வீக்காக இருக்கிறது ஆப்ரேஷன் செய்ய முடியாது அதனை பிறகு செய்யலாம், முதலில் ஹார்ட்டுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றனர். அடுத்து மூன்று விதமான MRI எடுத்தனர், அப்புறம் CT-Scan எடுத்தனர்.

அன்றிலிருந்து நான் அதிகாலை 6:30 மணிக்கும் மாலை 5:00 மணிக்கும் தினமும் அவரைப் இருமுறை பார்க்கச் சென்று வந்தேன், அவரின் உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. ஒவ்வொரு நாளும் அவரின் சுயநினைவுகள் மறைந்து கொண்டே சென்றது. ஆரம்பத்தில் என்னோடு நன்றாக பேச ஆரம்பித்தவர் அடுத்து மெல்லிய புன்னைகயை காட்டினார், அதன் பின்னர் "yeah" என்று சத்தம் மட்டுமே அவரால் எழுப்ப முடிந்தது.

ஃபிப்ரவரி 19ம் தேதி காலை 10 மணியளவில் மருத்துவமனையிலிருந்து மீண்டும் ஃபோன், மேலும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் சொல்லி அதனை உடணடியாகச் செலுத்துங்கள் மற்றுமொரு ஸ்கேனிங் இன்றே செய்ய வேண்டும் அவசரம் என்றனர். நானும் இன்ஷூரன்ஸில் பேசுகிறேன் முதலில் ஆன்லைன் ரெகுஸ்ட் செய்யவும் என்றேன் அவர்களும் அதனையும் செய்து வைத்திருக்கிறோம் இருந்தாலும் நீங்கள் இந்த தொகையையும் டெபாஸிட் செய்யுங்கள் என்றனர்.

வேறு வழி, அவர்கள் சொன்ன தொகையை டெபாஸிட் செய்து விட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கும் மற்றொரு மருத்துவரை சந்திக்கச் சென்றேன், அவரோ இன்று இரவு மற்றொரு ஸ்கேனிங்க் செய்ய இருக்கிறோம் "we suspect there is bleeding" என்றார் என்னடா இவர் மொட்டையாகச் சொல்கிறாரே என்று விளக்கமாகக் கேட்டேன். அவரோ "சார்ல்டன் மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டிருக்கிறது, அதனால்தான் நினைவு மாறி மாறி வருகிறது" என்று சொன்னவர். "அதனைச் சரி செய்து விட்டோம்" என்றார்.

நானும் நிம்மதிப் பெருமூச்சுடன் எனது இருப்பிடம் திரும்பி வந்தேன்.

பிப்ரவரி 20ம் தேதி காலை 06:30 மணிக்கு அவரை பார்க்கச் சென்றபோது அதே நிலையில்தான் இருந்தார். ஐந்து நிமிடங்கள் அங்கிருந்த நர்ஸிடம் விபரங்களை கேட்டுவிட்டு அலுவலகம் வந்து கொண்டிருந்தேன் மீண்டும் அலைபேசியில் அழைப்பு வந்தது அதில் டாக்டர் பேசினார் "தயவு செய்து அவரின் குடும்பத்திற்கு தகவல் கொடுங்கள் சார்ல்டன் நிலமை இன்னும் இரண்டோ மூன்றோ நாட்கள்தான் என்ற குண்டை போட்டார்" எனக்கோ காரை ஓட்ட முடியாமல் தடுமாறிவிட்டேன். அப்புறம் சுதாகரித்துக் கொண்டு அலுவலகம் வந்து சேர்ந்ததும் என்னுடைய முதலாளியிடம் கலந்து பேசினேன். உடணடியாக சார்ல்டன் மனைவியை இங்கு வரவைக்க ஏற்பாடு செய்ய முடிந்தால் அதனைச் செய் எதனை பற்றியும் யோசிக்க வேண்டாம் உன்னுடைய முடிவுக்கே விட்டுவிடுகிறேன் என்று சொல்லிவிட்டார்.

அதற்குள் அவரின் மனைவியும் அன்று காலை மருத்துமனையில் நர்சுடன் பேசியிருக்கிரார் அவர்களும் இதே தகவலை அவரிடம் சொல்ல, அதனைத் தொடர்ந்து சார்ல்டன் மனைவி எனக்கு ஃபோன் செய்து உடணடியாக விஷா ஏற்பாடு செய்யும்படி கெஞ்சினார். நானும் 'சரி' என்று சொல்லி அவரிடம் பாஸ்போர்ட் காப்பியை அனுப்பச் சொல்லிவிட்டேன் அவரும் தனது மகனோடு வருவதாக சொன்னார்.

ஃபிப்ரவரி 21ம் தேதியும் அதே கவலையுடனே கழிந்தது, பாஸ்போர்ட் காப்பி கேட்டு இன்னும் வரவில்லையே என்று மீண்டும் ஃபோன் செய்தால் மாலைக்குள் அனுப்பி விடுகிறேன் என்று சொன்னார் ஆனால் வெள்ளிக்கிழமைதான் எனக்கு மின்னஞ்சலில் வந்தது.

வெள்ளிக்கிழமை, ஃபிப்ரவரி 22ம் தேதி காலை மருத்துவமனை சென்ற என்னை மிகச் சரியாக அடையாளம் கண்டு கொண்டு சார்ல்டன் புன்னகைத்தார் நான் சொல்வதை அவர் கேட்பது போன்று தலையசைத்தார் அப்போதுதான் சொன்னேன் "உங்கள் மனைவியும் குழந்தையும் வருகிறார்க்ள் விஷா ஏற்பாடு செய்கிறேன்" என்றேன் அப்போது "தேங்க்ஸ்" என்று மெல்லிய உதடு அசைப்பாக காற்று மட்டும் அவரின் வாயிலிருந்து வந்தது.

சனிக்கிழமை ஃபிப்ரவரி 23ம் தேதி காலை நான் நேரடியாக அலுவலகம் சென்றுவிட்டேன் எனக்கு ஒரு அவசர வேலை இருந்ததால். காலை 9:00 மணியளவில் டாக்டரிடம் பேச வேண்டும் என்று என்னுடைய முதலாளி சொன்னார் உடணடியாக டெலிஃபோனில் பேசுவதற்கு ஏற்பாடு செய்தேன். அப்போது டாக்டர் எங்கள் முதலாளியிடம் அரபியில் நிறை விஷயங்களை சொல்லியிருக்கிறார், அவரும் அதனைக் கேட்டுவிட்டு அதிர்ச்சியில் அப்படியே மவுனமாக இருந்தார் சிறிது நேரம். 

சரியாக 12:15 மணிக்கு டாக்டர் மீண்டும் ஃபோன் செய்தார் "he is no more" என்றார்.... !

அபூஇப்ராஹீம்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு