கண்மணி குளிரோடு
கணவன் எனும் உன்னவன்
கணினியில் கலந்தாடி
காலந்தள்ளும் கோலமின்று
பனிப் பொழிவின் மிகுதி
பகுதியெங்கும் வெண்மணல்
மிகுதியான உன் நினைவால்
மீதி தள்ளுவதில் வெந்தனல்
இலைகள் கூட தாங்காது
குளிரால் உதிர்ந்தது போல்
இளமைகளில் சில
இழந்து விட்ட உணர்வு
மலரும் கனியுமிலா
மரம்போல உள்ளம் மட்டும்
பரந்து கிடக்கு - நாளை
வரும் நாட்களை எண்ணி
தனிமையெனும் கடும்பிடியில்
இனிமையெனும் எதுவுமற்று
பனிபொழிவு போல வெண்
மனதாய் மட்டும் இருக்கு
உன்னை விட்ட இப்பிரிவு
உறக்கமின்றி கனக்கும் இதயம்
ஏன் இந்தச் சதி வலையில்
அதிரையே அகப்பட்டதோ
காலம் செய்த கோலமிதை
கடத்தச் செய்யும் வினையோ
கஷ்டமான ஒன்றாய் கோடைக்
கதிரவன் சுடுவது போல
கடந்ததை எண்ணிட
கனத்திடும் இதயம்
கனவில் நினைத்திட
கண் விழிப்பில் மனக்காயம்

“உ”. க்கள் மூன்றின் அருமை கருதி
வெற்று மனிதனாய் வருந்தி
வெள்ளந்தியாய் நாட்கடத்தி
வெளியேறிடும் நாளை எண்ணி
ஒன்று மட்டும் தென்படுகிறது
உடல் மட்டும் தொலைவாகி
உள்ளம் மட்டும் நெருக்கமாகி
கள்ளமில்லா எண்ணம் வருகிறது
நெஞ்சை நெகிழும் இப்பிரிவில்
தஞ்சை தரணியைக் கொண்ட நமக்கு
செட்டியா குளக் காட்சி கூட
ஊட்டி விடுகிறது கண்ணுக்கு விருந்தாகி
கடல் கடந்த வாழ்வில்
கப்பலேறிய கடித காலத்தில்
கைபேசி கிடைத்த இத் தருணத்தில்
கைமாறு செய்வது எங்ஙனம்?
M.H,ஜஹபர் சாதிக்


