தத்தளிக்கிறது என்தலைநகர்
தவிதவிக்கிறது என்
தமிழினம்
குடியிருப்புகளுக்குள் புகுந்தும்
குடிசைகளை விழுங்கியும்
குடிகெடுக்கிறது கனமழை,
குடிக்க மட்டும்
குவளை நீர்கூட
குடத்தில் இல்லை
தார்ச்சாலையெல்லாம்
நீர்ச்சாலையாகிவிட
மிதக்கிறது மாநகர்
வருடம் முழுதும்
வறண்டுகிடந்த
வாய்க்கால்களும் கால்வாய்களும்
குளங்களும் குட்டைகளும்
ஏரிகளும் ஆறுகளும்
தாகம் தீரக்
குடித்து முடித்து
கொப்பளித்த தண்ணீரில்
குலைகிறது தலைநகர்
நகரை
நீர் வார்த்து மூழ்கடித்தபின்
நிவாரணம் எனும் பெயரில்
நிர்வாணப் படுத்தும்
நிர்வாகம்
வடிகால்களைச் சீரமைத்து
நீர்நிலைகளைத் தூர்வாரி
தமிழகத்தைத் தயார்படுத்தத்
தவறிய அரசாங்கம்
சோற்றுப்பொட்டங்களைக் கொண்டு
ஓட்டுவங்கியைத் தக்க வைக்கும்
தண்ணீர்ப் பற்றாக்குறையில்
தகித்திருந்த தமிழகம்
உபரிநீரை வெளியேற்றும்
உதவாக்கரை நிர்வாகம்
உச்சகட்டச் சீர்கேடு
போக்குவரத்துத் துண்டிக்கப்பட
போசனத்துக்கு வழியில்லையே
வான் வழி மீட்புக்குழு
ஏன் வரவில்லை
பேரிடர் மேலாண்மைப் படை
தயார் நிலையில் உள்ளனவாம்
பிணங்களைப் பொருக்கவா
தலைவர்கள்
'வலியுறுத்திக் கொள்வதில்'
சோலியாயிருக்க
தொண்டர்கள் மீள
வழி மூடிக்கிடக்க
விழி நீரும் சேர்ந்தே
வெள்ளமாய் ஓடுகிறது
நீர்மேலாண்மை
மழைநீர் சேகரிப்பு
எல்லாம்
ஏட்டுச்சுரைக்காயாக
ஏமாற்ற...
தமிழகம் எப்போதும்
தள்ளாடியே சீவிக்கிறது
'தண்ணி'யில் அல்லது
தண்ணீரில்!
அல்லாஹ் காப்பாற்று!
சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக்

