மருமகள் கொடுமை...
கவியன்பன் காக்கா அவர்கள் கூறியது போன்று, ‘மாமியார் கொடுமையினால் மனநிலை பாதிக்கப்பட்ட மருமகளும் உண்டு’. மாமியார்களின் கொடுமைகளுக்குட்பட்டு அடங்கி இருந்த காலம் மலையேறி போய் விட்டது என்று தான் சொல்ல வேண்டும். மகன் இறந்தாலும் பரவாயில்லை மருமகள் விதவையாக வேண்டும் என்று நினைக்கும் .மாமியார்களும் உண்டு.
நவீன யுகத்தில் மருமகளின் ஆதிக்கமே அதிகம் காணப்படுகிறது எனவே மருமகளின் கொடுமைகள் எது போன்ற மாமியாரிடம் நடக்கிறது என்பதை காண்போம். கணவனை இழந்தவர். ஒரே மகனின் தாய் மற்ற உறவுகளின் ஆதரவில்லா பெண் போன்றவர்கள் மீது தான் மருமகளின் கொடுமை பாய்கிறது. மருமகள் கொடுமை என்று வந்து விட்டால் அறிமுகமில்லாத வீட்டில் பெண் எடுத்தாலும் சரி, நெருங்கிய சொந்தத்தில் பெண் எடுத்தாலும் சரி, கொடுமை என்று வந்தது விட்டால் மாமியார் மிக கொடுமையான சூழலுக்கு தள்ளப்படுகிறாள்.
இதனை இருவேறு சம்பவங்கள் மூலம் விளக்க விரும்புகிறேன் நமதூரில் நண்பகல் 11மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அங்காடி பொருள் விற்பனை செய்யும் கிராமத்து பெண்ணுக்கு நிகழ்ந்த சம்பவம். நாம் செல்லமாக ஆச்சி என்றழைப்போம் வயதானவர்கள் விலைக்காரி என்றழைப்பார்கள். மரவள்ளி கிழங்கு நிலக்கடலை மற்றும் கிராமங்களில் மட்டும் கிடைக்கும் அரிதான பொருள்கள் எடுத்து வந்து விற்பனை செய்பவர் .குறிப்பிட்ட வீட்டு வாசல் அருகில் தனது வியாபாரத் தளமாக வைத்து விற்பனை செய்யும் அந்த உழைக்கும் பெண்ணிற்கு பின்னால் ஒரு சோக கதை.
கணவனை இழந்த பெண் .தனது ஒரு மகனுடன் வாழ்கை போராட்டத்தை துவக்கினாள். தனது வாழ்க்கை சூன்யமானாலும் பரவாயில்லை தனது மகன் படித்த பட்டதாரியாகி அவன் வாழ்வில் வளமாகி தன்னையும் காப்பான் தனது வாழ்விற்கு ஆதாரமாகுவான் என்ற நம்பிக்கையில் அதிரைக்கு வந்து வியாபாரம் செய்து வந்தார். நல்ல வருமானம் மகனை எந்த குறையில்லாமல் வளர்த்தார். காலங்கள் கடந்தன மகன் கல்லூரிக்கு சென்றான், ஆச்சிக்கு பெரும் நிம்மதி இன்னும் சில காலம்தான் பிறகு ஒய்வுதான் பெற்ற பிள்ளைகள் இருந்தால் வளர்ப்பதில் இனிமையாக காலத்தை கழிக்க வேண்டியதுதான் என்று தனக்கு தானே சொல்லி கொண்டாள்.
மழை காலங்களில் அதிரைக்கு வரும்போது ஆற்றுக்கு குறுக்கே இடுப்பளவுக்கு தண்ணீர் செல்லும் ஆற்று தண்ணீரை கடந்து வரும் அவலம் இனி இருக்காது என்று ஆனந்தம் கொண்டாள் ஆச்சி. கல்லூரி சென்ற மகன் .படிப்புடன் காதலையும் சேர்த்து கொண்டான் வசதியான பெண் பெண் தரப்பு காதலை ஏற்க கல்லூரி படிப்பு முடிந்த கையோடு மாலையை மாற்றி கொண்டான். இது ஆச்சிக்குதெரியாது, ஊர் வந்த மகனை வாஞ்சையாய் வரவேற்றாள்.
படித்த மேதையாய் தனது இனத்துக்கே பெருமை சேர்த்தவன் என்று பெருமிதம் கொண்டாள்.
“ஐயா!... நம்ம துயரமெல்லாம் நீங்கி போச்சு என்றாள்”. வெல்லாந்தியாய்.
“இனி அங்காடி பெட்டிக்கு வேலையில்லை என்றாள்” மகிழ்ச்சியாய்.
அவள் நம்பிக்கை நொறுங்கும் விதமாய் தனது காதல் மணம் புரிந்ததை மகன் சொன்னதும், இடிந்து போய் வீட்டின் மூளையில் சாய்ந்தால். அவளை அரவணைப்பது போல் ஒரு உணர்வு திரும்பி பார்த்தல் அவள் நம்பிக்கையற்று மூளையில் சாய்ந்த போது மூலையில் இருந்த அங்காடி பெட்டி தான் அரவணைத்தது.
ஆச்சிக்கு அங்காடி பெட்டி அரவணைத்தது போல் இருந்தது என்னவோ புத்துணர்வு பெற்றவளாக மீண்டும் எழுந்தவளாக உணர்வு பெற்றாள். கணவனை இழந்து கை குழந்தையோடு தவித்தபோது உறவினர் கை கொடுத்து உதவாத போது தென்ன தோப்பு குடியிருப்பு மட்டும் கிடைத்தது. மகன் ஐந்து வயது வரை மகனைப் பாதுகாக்க வேண்டும் என்பதால் வெளி வேலைக்கு செல்லாமல் காலம் கடத்தி வந்தாள். மகன் பள்ளி கூடம் செல்ல ஆரம்பித்ததும் பட்டணம் வந்து அங்காடி பெட்டியில் வியாபாரம் செய்து தனது வாழ்வாதாரத்தினை பெருக்கியதோடு தன் மகனையும் ஆளாக்கியது எல்லாம் நொடி பொழுதில் நினைவுக்கு வந்து திரும்பியது.
“ஐயா..! நம்ம சாதி சனம் நம்மை கவனிக்கவில்லை, நீ யாரை கல்யாணம் செய்தாலும் பரவாயில்லை எங்கே இருந்தாலும் நல்ல இருப்பா. எனக்கு .பட்டன வாழ்கை சரிபட்டு வராது, நான் எப்போதும் போல் இங்கேயே இருந்து விட்டு போகிறேன்” என்று சொல்லி மகனை சென்னைக்கு வழியனுப்பி வைத்தாள்.
ஆச்சி.. ஆச்சி...! அன்பாய் உரிமையாய் அழைக்கும் சிறு பிள்ளைகளின் குரல் தனக்கு ஆறுதல் அளிக்கும் என்பதை அறிந்த ஆச்சி அங்காடி பெட்டியுடன் அதிரைக்கு கிளம்பினாள்…
ஆச்சிக்கு மனதில் ஏற்பட்ட ரணம், அதிரைக்கு வந்து அங்காடி வியாபாரம் செய்ததில் மனத்துக்கு இதமாக இருந்தது. வாடிக்கையாக வரும் பிள்ளைகளின் அன்பான அழைப்பான 'ஆச்சி... அச்சி…' என்றழைக்கும் போதெல்லாம் தான் பெற்ற பிள்ளை செய்த காரியம் மனதை விட்டு மறைந்தது என்றே சொல்லலாம்.
நாட்கள், மாதங்களாக மாதம் வருடமாய் கரைந்தது மகன் என்ற பந்தமே மறந்துபோன நிலை, மகன் பற்றி செய்தியை சென்னை சென்று வந்த அவனது தோழன் சொன்ன செய்தி கேட்டு அதிர்ந்து போனாள் ஆச்சி...
தொடரும்…
அதிரை சித்தீக்