Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label வேலை. Show all posts
Showing posts with label வேலை. Show all posts

புதுமைப் பெண்... 0

அதிரைநிருபர் பதிப்பகம் | September 19, 2016 | , , , , ,

கல்லூரி மாணவி சுமையா அவர்கள் கட்டுரைப் போட்டிக்காக எழுதிய கட்டுரையின் பதிப்பு

நோக்கம் : 
  •  அருகிவரும் துறையில் சாதித்த பெண்களை அடையாளப்படுத்துவது 
  •  அதன்மூலம் இழந்துக்கொண்டிருக்கும் மரபை மீட்டெடுப்பது

முன்னுரை :

‘பெண்ணுரிமைச் சங்கம்’ அமைத்து வரதட்சணைக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள், உயர்கல்வி கற்று வெளிநாடுகளில் பெரும் நிறுவனங்களில் அமர்ந்தவர்கள், முற்போக்கு, தனிமனித சுதந்திரம், நவ நாகரீகம் என்ற பெயரில் அரைகுறை ஆடைகளுக்கு ஆதரவாக களமிறங்குபவர்கள் இவர்கள் மட்டும்தான் அந்த ‘பாரதிகண்ட புதுமைப்பெண்கள்’ என்று நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். அது நம் தவறல்ல  மீடியாக்கள் அப்படி ஆக்கிவிட்டன. 

உயற்கல்வி கற்பதும், பெரும் நிறுவனங்களை கட்டி மேய்ப்பதும், மேற்கத்திய வாழ்க்கை வாழ்வதும் தான் புதுமைப்பெண்ணுக்கான அடையாளம் என்றால் "புதுமைப்பெண்" என்ற வார்த்தையே மிகச்சாதாரண ஒன்றாக மாறிவிடும். காரணம் கல்வியிலும், கார்பரேட் நிறுவனங்களிலும் சாதிக்கும் பெண்கள் இன்று பெருகிவிட்டார்கள் என்பது நிதர்சனம். 

என் அகராதியில் புதுமைப்பெண் என்பவள் வேறு, தான் அடியெடுத்து வைக்கும் துறை தனக்கு மட்டுமே பயனளிக்கும் விதத்தில் குறுகிய வட்டத்துக்குள் இல்லாமல், பரந்து விரிந்ததாகவும் அத்தியாவசிய தேவைகளில் அனைவருக்கும் வழிகாட்டும் விதத்திலும் இருக்க வேண்டும். 

ரியல் எஸ்டேட்டின்  ஆக்கிரம்பிப்புகள் முதற்கொண்டு இன்னும் பற்பல காரணிகளால் மிகப்பெரும் சவால்களை சந்திக்க வேண்டிய நிலையில் இருந்தும்கூட, தற்கால தேவையை உணர்ந்து உயிர்களுக்கு உணவளிக்கும் விவசாயத்தை கட்டிகாப்பதென்பது  போற்றுதலுக்குரிய செயல். அப்படியான துறையில்   ஆண்களே  தங்கள்  நம்பிக்கைகளை தகர்த்துக்கொண்டு  வெளிநாடுகளுக்கு பயணிக்க,  சத்தமில்லாமல்   சாதித்த எத்தனையோ புதுமை பெண்களை இவ்வுலகம் அறியாமலே இருந்துவருகிறது. அத்தகைய புதுமைப் பெண்களை பற்றிதான் இங்கே காணப்போகிறோம்.

மரபு :

விவசாயம். எம் தேசத்தின் அடையாளம். அனைத்தும் வியாபாரமாகவும், கார்பரேட்மயமாகவுமாகி வரும் இக்காலத்தில் பெரும் போராட்டங்களுக்கு மத்தியில் நடைபோட்டு வரும் ஓர் உன்னதமான சேவை விவசாயம்.இந்த விவசாயம் முழுக்க முழுக்க பெண்களின் உழைப்பைக் கொண்டே கட்டமைக்கப்பட்டது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? 

ஆண்கள் வேட்டையாட கூடியவர்களாகவும், போர் வீரர்களாகவும், இருந்த ஆதிகாலத்தில் பெண்கள் தாங்கள் தங்கியிருந்த இடத்திலேயே பயிர் செய்யக்கூடியவர்களாக இருந்து வந்தார்கள். பெண்களே வேளாண் நாகரீகத்தின் ஆதாரம் எனுமளவுக்கு விவசாயத்தில் ஈடுபட்டு வந்தனர்.பெண்களின் உழைப்பால் குடும்பம் அழகுபெறுவது போன்றே விவசாயமும் வளர்ச்சியடைந்தது.இன்றும் தினக்கூலிக்கு விவசாயத்தில் ஈடுபடக்கூடியவர்களில் 80% பேர் பெண்கள் என்பது வியப்பான உண்மை. எனினும் அவர்களில் 15% பேருக்கே சொந்தமாக நிலம் இருக்கின்றது. மீது 65% பெண்களும் யாருக்கோ உரிய நிலத்தில் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

வேளாண் நாகரிகம் உருவாகி கிட்டத்தட்ட 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகிறது.அதற்காக அதிகம் உழைத்தவர்கள் பெண்களாக இருந்தும்கூட இதுவரை பெண்களுக்கு நிலம் சொந்தமாகவில்லை என்பது கசப்பான உண்மை.இருந்தாலும் கூட விவசாயத்தை உயிர்மூச்சாகக் கொண்டு அதில் சாதிக்கும் மிக அரிதான பெண்களைதான் நான் புதுமைப்பெண்களாக பார்க்கிறேன்.

முயற்சியே முன்னேற்றம்:

‘கோழி கூவி விடியவா போகுது’ என்று கேலி செய்தவர்களையெல்லாம் கணக்கில்கொள்ளாமல் கம்பீரமாக விவசாயத்தில் இறங்கிய காட்டு மன்னார்குடியை சேர்ந்த திருமதி ரங்கநாயகிக்கு தண்ணீர் வடிவில் வந்தது சோதனை. தனது நிலம் மட்டுமல்லாமல் வடம்பூர் பகுதியில் உள்ள சுமார் 1,400 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலத்துக்குத் தேவையான தண்ணீர் 9.5 கி.மீ. தொலைவில் உள்ள வீராணம் ஏரியிலிருந்து ராதா வாய்க்கால் மூலம் வந்து சேர வேண்டிய கட்டாயம் இருந்தது.

ஆனால் ராதா வாய்க்காலோ வழக்கம்போல அரசியல்வாதிகளின் ஆக்கிரமிப்பில் ! அதை மீட்க தனியொருப் பெண்ணாய் ரங்கநாயகி மேற்கொண்ட போராட்டங்கள் எண்ணற்றவை. இருப்பினும் விடாமுயற்சியோடு போராடிய ரங்கநாயகியின் முயற்சிக்குத் தோள்கொடுக்கத் தொடங்கினர் வடம்பூர் கிராம மக்கள். அதன் விளைவாக ராதா வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, தற்போது தடையின்றித் தண்ணீர் வரத் தொடங்கியுள்ளது. இதனால் தற்போது கடலூர் மாவட்ட வேளாண்மை அலுவலர்கள், மற்றும் விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் மத்தியில் திருமதி ரங்கநாயகி ‘ராதா வாய்க்கால் ரங்கநாயகி' என்றே பெயர் பெற்றுவிட்டார்.  மேலும் ரங்கநாயகியின் விவசாய ஈடுபாட்டைப் பாராட்டி எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை 2010-ம் ஆண்டு விருது வழங்கிக் கவுரவித்துள்ளது இந்த புதுமைப் பெண்ணை! 

தன்னைப் பார்த்து ஏளனம் செய்தவர்களைப் பற்றி ரங்கநாயகி கவலைப் படவில்லை. மாறாக அந்த ஏளனப் புன்னகையை ஆச்சரியக்குறியாக மாற்றக் கடுமையாக உழைத்தார். அதில் வெற்றியும் கண்டுவருகிறார் என்பதை ‘தி இந்து’ நாளேடு வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது.

சரி, உயர்கல்வி கற்காத கிராமிய பெண் விவசாயத்தில் ஈடுபாடு செலுத்தியது ஒன்றும் ஆச்சர்யம் இல்லையே என்று நீங்கள் நினைத்தால் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ஒரு எம்.பி.ஏ பட்டதாரி வேளாண் துறையில் நிகழ்த்திய சாதணையை கொஞ்சம் கேளுங்கள்.

தலைமுறைகள் கடந்த… :

 பாட்டன், பூட்டன், தந்தை இவர்கள் அனைவரும் பரம்பரையாகச் செய்துவந்த விவசாயத்தை (பெண்ணாக பிறந்ததால்) நாம் ஏன் கைவிட வேண்டும் என்ற கேள்வி  வேறொரு தளத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறது கவுண்டன்பாளையத்தை சேர்ந்த திவ்யாவை. எம்.பி.ஏ., முடித்துவிட்டு மாதம் கிட்டத்தட்ட எண்பதாயிரம் ரூபாய் சம்பாதித்த திவ்யாவை விவசாயத்தை நோக்கித் திருப்பியது எது தெரியுமா?  தான் படித்த எம்.பி.ஏ படிப்பெல்லாம் தன் தந்தையின் விவசாய வருமானத்தில் தான், எனவே நாமும் விவாயத்தில் ஏதேனும் சாதிக்கனும் என்ற உணர்வுதான்.

‘ஏசி ரூமில் அமர்ந்து வேலை பார்த்த நீ சேற்றில் இறங்க போறீயா?” என்ற வீட்டாரின் கேள்விகளையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு களத்தில் இறங்கிய திவ்யாவின் மனதில் பல கேள்விகள்.நம் அடிப்படைத் தேவையான உணவைத் தருவது விவசாயம்தான். ஆனால், 

நம் நாட்டில் விவசாயிகளின் நிலை என்ன? ஒரு காலத்தில் ஒட்டுமொத்த சமூகமும் விவசாயத்தைத் தொழிலாகச் செய்துகொண்டிருந்த நிலை மாறி, இன்று ஏன் அனைவரும் விவசாயத்தை விட்டு வெளியேறுகின்றனர்? விவசாயிகள் கொத்துக் கொத்தாகத் தற்கொலை செய்துகொண்டு மாண்டுபோவது எதனால்? மேக் இன் இந்தியா, க்ளீன் இந்தியா என திட்டங்களை அறிவிக்கும் அரசாங்கம், இது விவசாய இந்தியா என்பதை மறந்து விவசாயிகளை கைவிட்டது ஏன்.? உற்பத்தி குறைவதும், விவசாயப் பொருட்களின் விலை சரிவதும் என்ன கணக்கு? இப்படி தன் மனதுக்குள் ஆயிரம் கேள்விகளை சுமந்தவராக விடை தேடிப் புறப்பட்டார்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒவ்வொரு கிராமமாகச் சென்று விவசாயிகளைச் சந்தித்த பிறகு இக்கேள்விகளுக்கான பதில் கிடைத்தது. நம் பாரம்பரிய விவசாய முறையை மறந்ததும், ரசாயன உரங்களால் மண்ணின் வளம் மங்கியதும்தான் விவசாயத்தின் சரிவுக்கான முக்கிய காரணங்கள். சுற்றுச்சூழல் பாதிப்பால் பருவ மழை பொய்த்துப்போவது, விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைக்காதது, கிடைத்தாலும் அவர்களுக்குப் போதிய கூலி தர முடியாதது என்று ஏகப்பட்ட சிக்கல்கள். இதற்கெல்லாம் தீர்வு சொல்லும்படி ஓர் அமைப்பு இருக்க வேண்டும் என்பதற்காக, ‘அக்ரோ க்ரீன் பயோலைஃப்’என்ற விவசாய ஆலோசணை மையத்தைத் தொடங்கினார் திவ்யா. நான்கு மாதம் ஒரு பயோடெக் கம்பெனியில் வேலை பார்த்திருந்ததால், விவசாயத்தைப் பற்றியும் விவசாயிகளின் நிலை பற்றியும் ஓரளவுக்கு மட்டுமே தெரிந்து வைத்திருந்த திவ்யா,  தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் ஆறு மாதங்கள் பயிற்சி எடுத்துக்கொண்டு தன் வேளாண் அறிவை மேலும் மெருகேற்றிக்கொண்டார்.

தன் கடின முயற்சியின் மூலம் தன்னை போன்று வேளாண் துறையில் ஆர்வமாயிருக்கும் பெண்களை ஒன்றிணைத்து தான் ஆரம்பித்த அக்ரோ க்ரீன் பயோலைஃப்’ விவசாய ஆலோசணை மையத்திற்கு இந்தியா முழுவதும் உள்ள தொழில்நுட்ப நிபுணர்களை ஆலோசகர்களாக அமர்த்தியுள்ளார்.

தற்போது இரண்டாயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்களை கொண்ட இந்த ஆலோசணை மையத்தின் முன்னோடி, விவசாயத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள், முறையான திட்டமிடுதல் மற்றும் ஆலோசனைகள் மூலம் அமல்ப்படுத்தப்பட்டு வருகிறது. அதில் முக்கிய அம்சமாக மண் வளத்தையும், உணவு பொருளின் சத்துக்களையும் கெடுக்கும் செயற்கை உரங்களுக்கு மாற்றாக மிக குறைந்த விலையில் இயற்கை உரங்களை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளார்.மண்ணில்லா விவசாயத்துக்குக் கைகொடுக்கும் தென்னை நார் கழிவு, பலவிதமான இயற்கை உரங்கள், விதைகளையும் விற்பனை செய்கின்றனர். தென்னை நார் கழிவிலிருந்து பல்வேறு அளவிலும் வடிவிலும் செய்யப்படுகிற செங்கல் போன்ற கட்டிகள் 100 ரூபாயிலிருந்து கிடைக்கின்றன.பூச்சிவிரட்டிகள்கூட இயற்கைப் பொருட்களை கொண்டே தயார்செய்து செயற்கை உரத்திற்கு மாற்றாக இயற்கை உரத்தைக் கொண்டு விவசாயத்தை பெருக்கியதன் மூலம், மண் வளத்தை பாதுகாக்கும் முன்னோடியாய் விவாச முறையை மீட்டெடுத்து, வேளாண் துறையில் அமைதியான புரட்சியே செய்துவருகிறார் இந்த புதுமைப் பெண். 

முடிவுரை :

மேற்கத்திய வாழ்க்கை வாழவும், ஐடி நிறுவனங்களில் சாதிக்கவும் ஆட்கள் ஏராளம் உள்ளனர். இன்னும் சொல்லப்போனால் கணினியை, சம்பாதிக்கவே எல்லோரும் கல்வி கற்பதால் அந்த துறைகளில் வேலையில்லா திண்டாட்டம் வரும் அளவுக்குதான் மக்கள் அவற்றின் பக்கமே ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் எல்லோருக்கும் உணவளிக்கும் விவசாயத்தை காப்பாற்றதான் ஆட்கள் பற்றாக்குறை ஆகிவருகிறது. இப்படியாக தொடர்ந்தால் அடுத்த தலைமுறையினர் எதை உண்பார்கள் என்பதை சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.  அப்படியாக சிந்திக்க நாம் தவறிய போது பெண்ணாய் இருந்தும்  தன்னால் முடியும் என்றதோடல்லாமல் எல்லோரும் புறக்கணித்த உன்னதமான துறையை தேர்ந்தெடுத்து  சாதித்த இவர்கள்  இருவரும் தான் உண்மையில் புதுமைப் பெண்கள். இவர்களைபோன்ற பெண்கள்  பற்றி அதிகமதிகம் பேசுவதன் வாயிலாக இன்னும் பலரை ஊக்கப்படுத்தி இத்துறையில் காலூன்ற வைக்க முடியும் என்ற நம்பிக்கையுடனே இக்கட்டுரை வடித்தேன்.  அத்தகைய நம்பிக்கையுடனே முடிக்கிறேன் . 

சுமையா

கேன்ஷல்ல அனுப்பிடுங்க... 7

அதிரைநிருபர் பதிப்பகம் | January 21, 2016 | , , , , ,



வருடம் 2000 !

காலை 06:30 வாக்கில் தங்குமிடத்திலிருந்து வேலைக்கு நடந்து சென்று கொண்டிருக்கும்போது...

அருகில் ஒரு குரல், ஃப்ளாஸ்கில் விழுந்த சில்வர் ஸ்பூன் போன்ற ஒலியெழுப்பியது...

`தம்பி என்னை எப்படியாவது ஊருக்கு அனுப்பிடுங்க...`

`என்னாச்சு`

`முடியல... ஊரில நல்லா டிஸ்ட்ரிபூஷன் வியாபரம் செய்துகிட்டு இருந்தேன்...`

கண்ணீர், விழியிலிருந்து வெடித்துச் சிதறியது அங்கே அணைபோட ஆனையிடவும் இயலவில்லை, சாலையில் நடந்து செல்கிறோம் என்றா அந்த கண்ணீருக்கு தெரியும், தார் சாலையிலும் சொட்டுகள் முட்டியது.

`ஏன் பாய் அழறீங்க, இது ரோடு கம்பெணியாட்கள் பார்க்கிறார்கள்`

`முடியல இங்கே படுகின்ற கஷ்டம் வாழ்நாளில் படவே இல்லையே தம்பி, புள்ளைங்க படிப்பு இருக்கே....`

`என்னதான் கஷ்டம் ? என்னிடம் சொல்ல வேண்டியதுதானே சரி செய்றேனே...`

`வந்ததுலேயிருந்து லோடிங்லேயும், பாத்ரூம் கழுவுறதுலேயும் வேலைக்கு போட்டாங்க, ஊர் ஞாபகமா வருது...`

`என்ன பாய் வந்து ஆறு மாசத்துக்கு மேல ஆச்சு பழகியிருக்கனுமே... இங்கே இன்னுமா மாத்தாம வச்சிருக்கானுங்க...`

`நீங்க சொன்னா மாத்திடுவாங்கதான் தம்பி, ஆனா முடியல போயிடுறேன். தயவு செய்து கேன்சல் செய்து அனுப்புங்க`

`இருங்க இருங்க, மதியம் ப்ரேக்கில் ஆஃபிஸ்ல வந்து பாருங்க... பேசி முடிவு பன்னிக்கலாம்`

அன்று எதிர்பாராத வெளிவேலை ஒன்று இருந்ததால் வெளியில் சென்றுவிட்டு நாள் முழுவதும் திரும்பவில்லை அடுத்த நாள்தான் அலுவலகம்.

அடுத்த நாள் அலுவலகத்தில் இருந்து கொண்டு அவர் மைக்ரோ ஃபோனில் அழைக்கப்படுகிறார்.

`என்ன முடிவோட இருக்கீங்க ?`

`தம்பி இன்னும் கொஞ்ச நாள் இருந்து பார்க்கிறேன்`

`என்னாச்சு, ஒரு நாளில் மாற்றம் ?`

`ராத்திரிபூரா சிந்திச்சு பார்த்தேன் வீட்டுச் சூழல் கண்ணுல சுத்துனுச்சு தாங்க முடியல இன்னும் ஒரு ஆறு மாசம் இருக்கலாம்னு முடிவு பன்னேன்`

`சரி, நாளையிலேயிருந்து உங்க வேலைய மாத்தியிருக்கு அது கஷ்டமா இருக்காது`

`சரி தம்பி`

வருடம் 2013 நடுவில்...

`என்னோட பையன் விசிட்டில் வந்திருக்கான் தம்பி`

`அப்படியா சந்தோஷம், என்னா படிச்சிருக்கான் ஏன் அதுக்குள்ள இங்கே வரவச்சீங்க`

`அவன் ஆசைப்பட்டான், பி.இ. படிச்சிருக்கான்`

`மாஷா அல்லாஹ், விசிட் நீங்களா எடுத்தீங்க?`

`இல்லே தம்பி, என்னோட மச்சினன் தான் எடுத்தான் விஷாக்கு காசு நாந்தான் கொடுத்தேன், அவனோட மகளுக்குத்தான் மகனை பேசி வைத்திருக்கோம்`

`ஓ... அப்படியா..`

`ஏதாவது தெரிந்த இடம் இருந்தா வேலைக்கு சொல்லுங்க தம்பி`

`இன்ஷா அல்லாஹ் !`

மூன்று வாரம் ஓடிவிட்டது.

`தம்பி மகனுக்கு வேலை கிடைத்து விட்டது`

`அல்ஹம்துலில்லாஹ்`

`நல்ல வேலை படிப்பு ஏத்த வேலை`

`அப்படியா, நல்லது....`

`முடிச்சுட்டு போகலாம்னு இருக்கேன் தம்பி`

`ஏன் இன்னும் கொஞ்சம் இருக்கலாமே....?`

`இப்படித்தான் தம்பி பத்து வருசத்துக்கு முன்னாடி சொன்னீங்க இப்போ எல்லாமே மாறிப் போச்சு`

`இப்போ நீங்க திருப்தியாகத்தான் ஊருக்கு போக முடிவெடுத்தீங்களா?`

`ஆமா தம்பி நிறைய பட்டாச்சு பார்த்தாச்சு, மகளுக்கு தங்கச்சியோட நாத்தனார் மகனைத்தான் பேசி வச்சிருக்கோம் அத விவரமா சுறுக்க பேசி முடிக்கனும்`

`மாஷா அல்லாஹ்`

விஷா கேன்ஷல் செய்து இங்கிருந்து சென்ற நான்கு மாதம் கழித்து கல்யாண பத்திரிகை கைக்கு கிடைக்கிறது. அவருடைய மகளின் கல்யாணம் !

அபுஇப்ராஹிம்

வேலை நேரமும் கல்வியும்..! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | August 30, 2013 | , , , , ,

இன்று முன்னேறிய நாடுகளை கவனித்தால் ஒரு முக்கியமான செய்தி நமக்கு புலப்படும். இந்த நாடுகளில் பள்ளி கூடங்கள் எல்லாம் அதிகாலை 7 மணிக்கு தொடங்கி விடும். அதுபோல் அரசு அலுவலகங்கள் 8 மணிக்கு தொடங்கி விடும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிகூடம் அனுப்பிவிட்டு தாங்கள் வேளைக்கு செல்வதற்கும் வசதியாக இருக்கும் .

குழந்தைகளும் அதிகாலை படிப்பை தொடங்குவதால் படித்தவை அனைத்தும் மனதில் நிற்கும் நன்றாக படிக்கும் குழந்தைகள் பிற்காலத்தில் வாழ்கையில் நல்ல முன்னேற்றமும் தகுதியும் அடைவதால் வீட்டிற்கும் நாட்டிற்கும் நல்ல முன்னேற்றம் கிடைகின்றது .

அதை விட முக்கியமான விஷயம் அதிகாலையில் எழவேண்டும் என்பதால் இரவில் சீக்கிரம் தூங்கி விடுவார்கள். மானாட மயிலாட ஆட்டம் போன்ற மட்டமான TV நிகழ்ச்சிகள் பார்த்து மூளை மழுங்கடிக்கபடுவது தவிர்க்கப்படுகின்றன. அதிகாலையில் எழுந்து பள்ளிக்கூடம் செல்வதால் 7 மணிக்கு ஸ்கூல் என்றால் 6:30 க்கு வீட்டில் இருந்து கிளம்ப வேண்டும் இவர்கள் 5 மணிக்கு எல்லாம் எழுந்து ரெடியாக வேண்டும் 5 மணிக்கு எழுந்தால் இறை வணக்கமான சுபுஹு தொழுகை நிறைவேறிவிடும்.

குழந்தைகளுக்கு படிப்பு படிப்பு என்று படிப்பை மட்டும் சொல்லிக் கொடுக்காமல் படிப்பினுடன் சேர்ந்து வெளிப்பழக்க வழக்கங்களையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். உதரணத்திற்கு சாப்பாட்டு நேரத்தில் திடீர் விருந்தாளி வந்து வந்து விட்டால் மேலும் உடனே சமைக்க நேரமிருக்காது, இருக்கும் உணவை பகிர்ந்து உண்பதற்கு பழகி கொடுக்க வேண்டும் (யார் வந்தால் என்ன, எனக்குள்ள கொள்ளளவு என்னவோ அதை புல் செய்து கொள்வேன் என்ற சிந்தனையை இளைய வயதிலேயே எழாமல் இருக்க நல்ல புத்திமதிகளை புரியும்படி சொல்ல வேண்டும்).

நமது ஊரில் வங்கிகள்: 10 மணிக்கு வங்கிகள் திறக்கப்படுகிறது அங்கு வேலை செய்வோரின் முகத்தை பார்த்தால் தூங்கி வழிந்து கொண்டுதான் இருக்கும். போட்டிருக்கும் சட்டை காலர் அழுக்கு பிடித்தே இருக்கும் அல்லது காலர் பிய்ந்து போயிருக்கும் இந்த இரண்டில் ஒன்று இல்லை என்றால் இவர் பேங்க்கில் வேலை செய்பவர் இல்லை என்று அர்த்தம்.

நாம் போய் கவுண்டரில் ஏதாவது விபரம் கேட்டால் அண்ணார்ந்து பார்க்கவே ஐந்து நிமிடம் ஆகும் நாம் கேட்டதற்கு பதில் அந்த நாலாவது சீட்டில் போய் கேளுங்கள், இங்கே வந்து களுத்தை அறுக்குரியலே என்று சிடு சிடுப்பார். அந்த நாலாவது சீட்டுக்கு போன அங்கு ஆளே இருக்க மாட்டார், என்னவென்று கேட்டால் லீவுலே போயிருக்கார் என்பார்கள் சரி மனேஜரை பார்க்கலாமென்று போனால் லாக்கருக்கு போனவர் இன்னும் வரவில்லை என்று நம்மை மதிக்காமல் பியுன் சொல்லிவிட்டு போய்க்கொண்டு இருப்பான். லாக்கருக்குல போனவரு அவருடைய டூட்டி டைம் முடிஞ்சிதான் வெளியோ வருவாரு போல.

இதெல்லாத்தையும்விட கேஷ் கவுண்டரில் உள்ளவர் பணம் தரும்போது என்னவோ அவர் வீட்டு பணத்தை நமக்கு சும்மா எலக்சன் நன்கொடையா தருவது போல் பல அலப்பறை செய்து விட்டுதான் பணத்தை கையில் கொடுப்பார். இவர்களிடம் ஒரு சிரிப்பையோ அல்லது கனிவான வார்த்தையையோ நாம் எதிர்பார்த்தால் நாம் ஏமாந்து தான் போகணும். இங்கு கொடுமை என்னவென்றால், இவர்கள் வாங்கும் சம்பளம் நம் பணம் என்பது நமக்கே தெரியாது, அவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது.

அடுத்து பத்திரப்பதிவு அலுவலகம்: அதே 10 மணி அதே அலுக்கு சட்டை தரையை சீய்க்கும் எட்டுமுழ வேஷ்டி. இவர்களுக்கு சம்பளத்தை விட கிம்பளம் ஜாஸ்தி அதிலும் அதிரைப்பட்டினம் என்றால் சொல்ல வேண்டியது இல்லை ஊரில் மழை பெய்கிறதோ இல்லையோ இங்கு பணமழைதான் தினமும் .

கை நாட்டு எடுத்து விட்டு கை விரல் துடைக்க ஒரு துணி ஒன்று கொடுப்பார்கள் அதில் விரல் துடைத்தால் அந்த விரலை அன்றே அறுத்து எரிந்து விடவேண்டியதுதான், அவ்வளவு துர்நாற்றம் அந்த துணியில்.

பத்திர பதிவு ஆபிசர்: ஓ அந்த இடமா வேலிவ் கூடுதல் ஆச்சே! எக்ஸ்ட்ரா இன்னும் பத்திரம் ஒரு 50 THOUSAND ஆகும் நீங்க ஒன்னு பண்ணுங்க பத்திர எழுதரிடம் 15000 கொடுத்திருங்க பாக்கியா நான் பாத்துக்கொள்கின்றேன் என்பார் நமக்கு இதே எல்லாம் கேட்டு தலைசுத்தும் பணத்தை கொடுத்தமா வேலைய முடிச்சமான்னு வீடு வந்து சேருவோம் . இவ்வளவு பணத்தை வாங்கும் அந்த பத்திர பதிவு ஆபிசர் கை நக அழுக்கை பார்தா முழுசா மூணு நாளைக்கு சோறு சாப்பிட மனசு வராது...

மேலே கண்ட அனைவரும் நன்கு படித்து பட்டம் வாங்கியவர்கள் தான் ஆனால் இவர்கள் நடை முறை கல்வியை பயில மறந்தவர்கள் .

நாம் என்ன செய்ய வேண்டும்
  • நாம் நம் பிள்ளைகளுக்கு ஐவேளை தொழுகையையும், நல்ல படிப்பையும், ஹராம் ஹலாலையும், சுத்தம், நேர்மையும், நல்ல பழக்க வழக்கங்களையும், எல்லோரையும் மதிக்கவும் கற்றுகொடுக்க வேண்டும் .
இங்கு வரும் நாம் சகோதரர்கள் அவரர்களுக்கு தெரிந்த நல்ல விசயங்களை நம் மாணவ செல்வங்களுக்கு கட்டுரை மற்றும் பின்னுட்டம் மூலம் அறியத்தரவும்.

மற்றும் ஒரு சுவாரஸ்யமான சிந்தனை தூண்டும் பதிவில் சந்திக்கலாம்.

Sஹமீது
இது ஒரு மீள்பதிவு

ஒன்றாக இருந்தார் ஒற்றையாக பார்சல் செய்யப்பட்டார் ! 22

அதிரைநிருபர் பதிப்பகம் | April 05, 2013 | , , , , ,


எங்கள் அனைவருக்குமே பேரதிர்ச்சிதான், என்னுடைய முதலாளிக்கு தகவல் கொடுத்தேன் அவரும் இதனை அவரின் மனைவிக்கு தெரிவித்து விடு ஆனால் நீ ஃபோனில் பேச வேண்டாம் ஃபிலிப்பினோ மொழி பேசும் உன்னோட அசிஸ்டெண்டை பேசச் சொல் என்றார். அதற்கான காராணம் எடுத்துச் சொல்லும்போது அவர்கள் மொழியில் தகவல் சொன்னால் அவர்களை சமாதானப் படுத்தலாம் என்றார்... ஆனால், மாறாக அங்குதான் வெடித்தது வினை !

அவரின் மனைவி திருப்பி கேட்டிருக்கிறார் “நேற்று வரை நன்றாக இருப்பதாக டாக்டர்களும் நர்சுகளும் சொன்னார்கள் ஏன் கம்பெனியில் இருப்பவர்களும் சொன்னார்கள் திடீரெண்டு என்ன ஆச்சு ? ஏன் உங்கள் கம்பெனி முதலாளி எனக்கு இந்த தகவலை சொல்லாமல் வேறு ஒருவரிடம் சொல்லச் சொல்கிறார்” என்று வெடித்தார், கதறினார்.

அந்த களோபரத்தினை தொடர்ந்து நானும் 10 நிமிடம் கழித்து ‘சார்ல்டன்’ மனைவியிடம் பேசினேன், முடிந்தவரை சூழலை எடுத்துச் சொன்னேன் அவரால் இழப்பை பொறுக்க முடியாமல் வார்த்தைகளை கொட்டினார் பொறுமை காத்தேன்.

இதற்கு முன்னர் எங்கள் கம்பெனியில் நிகழ்ந்த ஐந்து இறப்புகளை சந்தித்து இருந்ததால் எவ்வாறான நடைமுறைகளை கையாள வேண்டும் என்பதை ஏற்கனவே தெரிந்து இருந்ததால் அலைச்சல் குறைவே இருந்தாலும் மன உலைச்சல் அதிகம் இந்த விஷயத்தில். 

நானும் கம்பெனி பி.ஆர்.ஓ.வும் பெல்ஹோல் மருத்துவமனைக்கு தேவையான டாகுமெண்ட்களை சேகரித்துக் கொண்டு மதியம் 02:30 மணிக்கு சென்றடைந்தோம், அதற்குள் அவரின் உடலை ஐஸ்பெட்டியில் வைத்து பூட்டி விட்டனர். உடணடியாக பார்க்க வேண்டும் என்றதும் எங்களுக்கு திறந்து காட்டினார்கள்.

போலீசுக்கு மதியமே தகவல் கொடுக்கப்பட்டது அவர்களும் பார்த்து விட்டுச் சென்றிருக்கின்றனர், எங்களின் வருகைக்காக காத்திருந்ததால் மீண்டும் போலீஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் எங்களிடம் அடையாளம் சரியா ? இவர்தானா என்று உறுதி செய்து கொண்டதும் அருகில் இருக்கும் பரஹா அரசு மருத்துமனைக்கு வரச் சொன்னார்கள், பெல்ஹோலில் கொடுத்த இறப்பு அறிவிப்பு சான்றிதழுடன் அங்கே சென்றதும் அவர்கள் வழக்கமாக கொடுக்கும் (அரபி மொழியில்) கிளியரன்ஸ் லெட்டரை தயார் செய்து தந்தார்கள்.  அதற்கு முன்னர் உடலை எங்கு அனுப்ப இருக்கிறோம் என்றும் கேட்டுக் கொண்டார்கள். (அதில் பெல்ஹோல் மருத்துவமனைக்கு, ஃபிலிப்பைன்ஸ் கான்சுலேட்டுக்கு, இறப்பு / பிறப்பு சான்றிதழ் வழங்கும் அலுவலகத்திற்கு, துபாய் ஹெல்த் அத்தாரிட்டி சோனாப்பூர்க்கு, அடுத்து ஏர்லைன்ஸ்க்கு)

பெல்ஹோல் மருத்துவமனையில் அவர்களுக்கான போலீஸ் லெட்டரைக் கொடுத்ததும், அலுவலகத்திற்கு செல்லுங்கள் என்றனர் அங்கே சென்றதும் ஐ.பி.பில்லிங்க் செக்ஷனுக்கும் செல்லுங்கள் என்றனர் (இன் பேஷண்ட் பில்லிங்). அனைத்து முஸ்தீபுகளையும் தாண்டி அரை மணிநேரம் காக்க வைத்த அவர்கள் 68 பக்கங்கள் அடங்கிய பிரிண்ட் அவுட்டை எடுத்து கடைசிப் பக்கத்தில் கையெழுத்துப் போடச் சொன்னார்கள். அது என்ன வென்று பார்க்கலாம் என்று ஒவ்வொன்றாக திருப்பிப் பார்த்தால், அவர் அங்கு அட்மிட் ஆனதிலிருந்து ஐஸ் பெட்டிக்குள் அடைக்கும் வரையிலான பில்.

தொகை மிகப் பெரியதாக இருந்தது, ஏன் எதற்கு எப்படி என்று கேள்விகள் கேட்டுக் கொண்டே அந்த பில்லிங்க் ஸ்டாஃப்போடு பேசிக் கொண்டிருக்கும்போதே நர்ஸ் வந்தார் "சீக்கிரம் பணத்தை செலுத்தி விட்டு கிளியரன்ஸ்ஸை எடுத்துக் கொண்டு எம்.ஐ.சி.யூ.வுக்கு வாருங்கள்” சென்று சொல்லிவிட்டுச் சென்றார்.

கூட்டிக் கழித்து இன்சூரன்ஸ் அப்ரூவல் செய்தது போக மீதம் இன்னும் திர்ஹம் 9,400 செலுத்தி விட்டால் கிளியரன்ஸ் தருவோம் என்றார்,  சரி இதற்கு மேல் என்ன செய்ய முடியும் என்று அந்த தொகையை கட்டிவிட்டு மாளிகைக் கடை சிட்டு போல் ஒரு பேப்பரில் எழுதி கொடுத்தார் ‘ஒகே’ என்று அதில் அவரின் கையெழுத்தும் அந்த மருத்தவமனையின் தலையெழுத்தையும் அச்சடிக்கப்பட்டிருந்தது.

அந்த துண்டுச் சீட்டை எடுத்துக் கொண்டு எம்.ஐ.சி.யூ.க்கு சென்றதும் 'ஜஸ்ட் வெயிட்” என்றார்கள் காத்திருந்தோம். 'சார்ல்டனின்' உடமைகளை ஒவ்வொன்றாக பிரித்து பிரித்து எழுதிக் கொண்டு தனித் தனி பிளாஸ்டிக் பையில் போட்டுக் கொடுத்தார்கள். எங்கே கிளியரன்ஸ் என்றதும், காத்திருங்கள் போலீஸ் ஆம்புலன்ஸை அழைத்திருகிறோம் என்றனர். எனக்கோ அதற்குமேல் பொறுமை காக்க முடியவில்லை "இறப்புக்கான காரணம் -  என்ன வென்று சர்டிபிகெட் தருவதற்கு ஏன் இந்த இழுத்தடிப்பு என்று சத்தம் போட்ட சிறிது நேரத்திலேயே எல்லாமே ரெடி என்றனர்.

மீண்டும் போலிஸுக்கு தகவல் கொடுத்து அவர்களும் வந்தனர் ஆம்புலன்ஸோடு (ஏன் தகவல் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை) அவர்கள் வந்ததும் நேரடியாக போஸ்ட்மார்ட்டம் செய்யும் கிஸ்ஸஸ் மருத்துவமனைக்குத்தான் எடுத்து செல்வார்கள் என்று எனக்கு தெரியும், இருந்தாலும் இது மருத்துவமணையில் இயற்கை(!?) மரணம் ஏன் போஸ்ட்மார்ட்டம் என்று ஆட்சேபனை தெரிவித்தேன் அப்போதுதான் போலீஸ் மீண்டும் முதல் மரண அறிவிப்பு சான்றிதழை மீண்டும் வாசித்து பார்த்தார் அவரும் நான் சொல்வதையே சொல்லிவிட்டு போலீஸ் ஆம்புலன்ஸில் எடுத்து செல்ல மாட்டோம் முனிசிபாலிட்டி ஆம்புலன்ஸில்தான் எடுத்துச் செல்ல வேண்டும் என்று சொல்லிவிட்டு அவர்கள் திரும்பிச் சென்றனர்.

பெல்ஹோல் மருத்துவமனை அலுவலர்களோ எங்களிடம் ஒரே ஒரு ஐஸ் பெட்டிதான் இருக்கிறது இடமில்லை எப்படியாயினும் இன்றே பாடியை எடுத்துச் செல்லுங்கள் என்று வற்புறுத்தினர். நாளை வரை இங்கேயே இருக்கட்டும் என்று சொன்னேன் காலையில் Death Certificate  இறப்பு சான்றிதழ் பெற்றதும், கான்சுலேட் என்.ஓ.சி.யும் பெற்று அதன் பின்னர் பாடியை சோனாப்பூருக்கு எடுத்துச் செல்கிறோம் என்றேன். பாடி இங்கு இருக்கும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் நீங்கள் சார்ஜ் கட்டணும் என்றானர். நாங்களும் சரியென்று சொல்லிவிட்டு வந்துவிட்டோம் அன்று இரவு 10:30 இருக்கும்.

அடுத்த நாள் பிப்ரவரி 24ம் தேதி, காலை 07:30 மணிக்கு துவங்கியது அன்றைய அலைச்சலின் அடுத்தக்கட்டும், நானும் என்னுடைய கம்பெனி பி.ஆர்.ஓ.வும் முதலில் இறப்புச் சான்றிதழ் வாங்குவதற்கு அல்பர்ஹா கவர்மெண்ட் ஹாஸ்பிடலுக்குச் சென்றோம் தேவையான ஆவணங்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு அங்கே ஒரு மணி நேரத்தில் வேலைகள் முடிந்தது. அதற்கிடையில் சார்ல்டன் மனைவிக்கும் குழந்தைக்கும் விஷா அப்ளை செய்ய நண்பரின் டிரவால்ஸில் ஏற்பாடு செய்துவிட்டு நகர்ந்தோம்.

கிடைத்த இறப்புச் சான்றிதழ் அரபியில் இருப்பதால் அதனை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ய மற்றொரு இடத்திற்கு சென்று அதனையும் பெற்றுக் கொண்டோம். பிலிப்பைன்ஸ் கான்சுலேட்டுக்கு சென்றோம் திர்ஹம் 100 கட்டி அவர்களிடம் ஒரு NOCஐ பெற்றுக் கொண்டதும், பாஸ்போர்ட்டையும் உடணடியாக கேன்ஷல் செய்து (பாஸ்போர்ட்டின் அட்டை முதல் இரண்டு பக்கங்களில் ஓட்டை போட்டு) கொடுத்தார் அந்த ஃபிலிப்பினோ ஆபிசர்... !

அங்கிருந்து நேராக அல்முசினா / சோனாப்பூர் என்ற இடத்தில் இருக்கும் துபாய் ஹெல்த் அத்தாரிட்டி மருத்துவமனைக்குச் சென்று அங்கே பாடி ஸ்டோரேஜுக்கு இடம் இருக்கிறதா என்று விசாரிக்கச் சென்றோம் (அங்கு இடம் இல்லை என்றால், கிஸ்ஸஸில் இருக்கும் போலீஸ் மார்சுவரியில்தான் இடம் பார்க்கனும்). நல்ல வேலை இடமிருந்தது, அங்கிருந்து அனுமதி வாங்கிக் கொண்டு முனிசிபாலிட்டி ஆம்புலன்ஸுக்குரிய தொகையை அங்கேயே கட்டிவிட்டு மீண்டும் பெல்ஹோல் மருத்துவமனைக்கு வந்தோம்.

நேரம் மதியம் 03:30 மணி, நாங்கள் மருத்துவமனையை அடைந்த அரை மணிநேரத்தில் ஆம்புலன்ஸும் வந்தது அடுத்து என்ன பாடியை ஆம்புலன்ஸில் ஏற்றி அல்-முஹ்சினா / சோனாப்பூர் மார்சுவரிக்கு அனுப்ப வேண்டும். ஆனால், மருத்துவமனை பெண் அலுவலர் மீண்டும்  ஓடி வந்தார் பாடியை ரிலீஸ் செய்ய ஸ்டோரேஜுக்கு பணம் கட்ட வேண்டும் அதன் பின்னர்தான் ரிலீஸ் செய்வார்கள் என்றார் (என்னடா கொடுமையிது !) வேறு வழி !?

முந்தைய நாள் (அதாவது அனைத்து தொகையும் செட்டில் செய்த பின்னர்) இரவு 07:30 மணியிலிருந்து அடுத்த நாள் மாலை 04:00 மணிவரை ஒரு மணிநேரத்திற்கு திர்ஹம் 100 என்று நன்றாகவே கணக்கு செய்து கட்டச் சொன்னார்கள், அங்கே திர்ஹம் ஐம்பது குறைவாக இருந்தது அந்த ரிசிப்டில் டிஸ்கவுண்ட் திர்ஹம் 50/= (ஸ்பெஷல்) கையில் எழுதிக் கொடுத்தார்.

அங்கிருந்து பாடியை ஏற்றிக் கொண்டு ஆம்புலன்ஸ் கிளம்பியது மாலை 5:00 மணியாகிவிட்டது.  மீண்டும் ஜெபல் அலி அலுவலகம் வந்து அடுத்த நாட்கள் செய்ய வேண்டிய பணிகளை நெறிப்படுத்தி விட்டு வீட்டுக்கு வந்தேன் இரவு 10:30 மணி.

அடுத்த நாள் ஃபிப்ரவரி 25ம் தேதி, விசா கேன்சலேஷன் 09:00 மணிக்கே செய்து கொண்டு அவரின் பாஸ்போர்ட்டை எடுத்துக் கொண்டு, நேராக பிலிப்பைன்ஸ் கான்சுலேட்டுக்கு சென்று அங்கே அவர்கள் கேட்ட அனைத்து ஆவணங்களையும் கொடுத்து விட்டு அவரது மனைவிக்கும் மகனுக்கும் ஏற்பாடு செய்திருந்த விஷாவுக்கும் NOC வாங்கி விசாவை பிலிப்பைன்ஸுக்கு அனுப்பிவிட்டு காத்திருன்தோம் ஃபேமிலி வருகைக்காக.

பிலிப்பைன்ஸில் இருக்கும் பயணச் சடங்குகளை முடித்துக் கொண்டு 27ம் தேதிதான் சார்ல்டன் மனைவி மட்டும் வந்தார். அன்று மதியம் 2:00 மணிக்கு அவரை அழைத்துக் கொண்டு மார்சுவரிக்கு சென்று இறந்தவரின் உடலை பார்க்கச் சென்றோம். அவர் இறந்தவரின் (சார்ல்டன்) உடலை கட்டிப் பிடித்து நிறைய ஃபோட்டோ எடுத்துக் கொண்டார் (விளக்கம் மிக நீண்டதாக கொடுத்தார் ஃபோட்டோக்களை ஏன் எடுத்தேன் என்று). அன்று மாலையே அவரை ஜெபல் அலிக்கு அழைத்து வந்து அவரின் கணவருடைய உடமைகளை அவரை வைத்தே பேக் செய்து மொத்த 7 பாக்ஸ் மொத்தம் 382 கிலோ அவரே அனைத்து பெட்டிகளிலும் அவரது முகவரியை எழுதினார்.

அடுத்த நாள் 09:00 மணிக்கு அவரை எங்களது தலைமை அலுவலகத்திற்கு அழைத்து வந்து, அவரது கணவருக்கு சேர வேண்டிய அனைத்து வகையான செட்டில்மெண்டை பணமாகவே கொடுத்து விட்டு கையெழுத்தும் வாங்கிக் கொண்டோம். அன்றே அவர் மீண்டும் மருத்துவம் செய்த டாக்டரை சந்திக்க வேண்டும் என்று அடம் பிடித்தார் அவரை பெல்ஹோல் மருத்துவமனைக்கு அழைத்து சென்று டாக்டரை பார்க்க வைத்து (அது ஒரு பெரிய கதை) அவரை அங்கிருந்து டாக்ஸியில் அனுப்பி விட்டு நான் வீடு திரும்பும் போது மணி இரவு 8:00.

சனிக்கிழமை மார்ச் 2 2013, சார்ல்டன் மனைவி திரும்பிச் செல்வதற்கான டிக்கெட்டை ரீகன்பாஃர்ம் செய்து விட்டு (மார்ச் 3ம் தேதி காலை 10:00மணிக்கு) அந்த டிக்கெட் நகலை எடுத்துக் கொண்டு மீண்டும் சோனாப்பூர்.

அங்கே பாடி பேக்கிங்கிற்கும் அவர்களின் சேவைக்கான கட்டணம் திர்ஹம் 1010/- (மூன்று நாட்களுக்கு தாக்குப்பிடிக்கும் ஊசி, மருந்து தெளிப்பு) மற்றும் பெட்டிக்கு (மரப்பெட்டி) திர்ஹம் 1,500/- என்று கட்டணங்களை செலுத்திவிட்டு எல்லாம் ரெடியாக பகல் 01:30 மணியாகிவிட்டது. அடுத்து ஆம்புலன்ஸ் (மீடும் திர்ஹம் 210/-  மார்சுவரியிலிருன்து எமிரேட்ஸ் ஸ்கை கார்கோ (துபாய் கார்ஜோ வில்லேஜுக்கு) எடுத்துச் செல்ல கட்டணத்தையும் செலுத்தியாகிவிட்டது.

ஆம்புலன்ஸ் அரைமணி நேரத்திற்குள் பாடியை எமிரேட்ஸ் கார்கோவில் இறக்கி வைத்து விட்டு சென்றது. அடுத்து என்ன நேரடியாக அங்கே இருக்கும் போலிஸ் அலுவலகத்தில் அவர்களுக்கு தேவையான ஆவணங்களை கொடுத்து விட்டு, NOC (ஸ்டாம்புதான்) அடித்துக் கொண்டு, மீண்டும் பாடி வைக்கப்படிருந்த அந்த மேற்கூறையுடன் இருந்த பக்கவாட்டில் திறந்த வெளித் திண்ணைக்கு வந்து அங்கிருந்த எமிரேட்ஸ் ஸ்டாஃபிடம் அனைத்து ஆவணங்களை காட்டியதும் அவர் பாடிக்கு எடை போட்டார். அப்புறம் அதனை ஸ்கேனிங்க் உள்ளே அனுப்பிவிட்டு எடையை எழுதி சீல் அடித்து தந்தார்.

ஸ்கேனிங் உள்ளே சென்றதும் அங்கே உள்ளே இருந்த போலீஸ் அந்தப் பெட்டியை சரிபார்த்து உள்ளே இருப்பது அவர்தானா என்று என்னிடம் கேட்டுவிட்டு மற்றொரு கையொப்பம், மொபல் நம்பர் வாங்கிக் கொண்டார்.

கட்டணங்கள் செலுத்த எமிரேட்ஸ் அலுவலகம், அங்கே அனைத்து ஆவணங்களையும் கொடுத்ததும் எடைக்கு எவ்வளவு என்று சொன்னதும் அந்த தொகையை கட்டிவிட்டு அவர்கள் கொடுத்த ஏர்வே பில்லை வாங்கிக் கொண்டு, பாடியுடன் செல்லும் அவரது மனைவியின் டிக்கட்டோடு கார்கோவை புக்கிங்க் செய்துவிட்டு அங்கிருந்து நகரும்போது மாலை 6:00 மணி.

அடுத்த நாள் அதிகாலை 06:30 மணிக்கு டெர்மினல் - 3 சார்ல்டன் மனைவியிடம் அவருக்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் கொடுத்து அனுப்பிவைக்க அங்கே சென்றதும் மீண்டும் ஒரு குண்டை தூக்கிப் போட்டார்....

ஊருக்கு சென்றதும் அவரது கணவரைப் புதைக்க இடம் வாங்க வேண்டும் அதற்கு யார் பணம் தருவார்கள் என்று !

இத்தோடு போதும் தானே.... (இதனை வம்பு செய்து வாசிக்க வைத்த வசை என்னோடு போகட்டும்)

அபூஇப்ராஹீம்

ஒன்றாக இருந்தார் ஒற்றையாக பார்சல் செய்யப்பட்டார் ! 8

அதிரைநிருபர் பதிப்பகம் | March 17, 2013 | , , , , ,


2002ம் வருடம் ஏப்ரல் மாதம் 12ம் தேதி தனது பணியைத் தொடங்கினார், முதல் வேலையாக என்னிடமே அனுப்பி வைக்கப்பட்டார் அவருக்கான வேலையின் பொறுப்புகளை பொறுமையாக எடுத்துரைத்தேன் அவரும் கேள்வி மேல் கேள்வி கேட்டு ஒவ்வொன்றாக தெரிந்து கொண்டார். அதோடு இல்லாமல் அனைத்தையும் குறிப்பெடுத்துக் கொண்டார்.

அவருக்கான வேலை புரடெக்ஸன் ப்ளேனிங் அதாவது உற்பத்திற்கான கால அளவை நிர்ணயிப்பது, வேலையாட்கள் பணியமைப்பை திட்டமில், உற்பத்திக்கான பொருட்களை முன்கூட்டியே தயார் செய்ய திட்டமிடுதல் என்பதாகும். அவர் ஃபிலிப்பைன்ஸ் நாட்டைச் சார்ந்தவர், பார்ப்பதற்கு குள்ளமாக இருப்பார் நல்ல ஆங்கிலப் புலமை எழுத்தில் இருக்கும். நாளடைவில் டைரி, மற்றும் அச்சுக்கு செல்லும் அனைத்து ஆங்கில எழுத்துருக்களையும் புரூஃப் பார்ப்பதற்கும் பணிக்கப்பட்டார்.

உடன் வேலை செய்யும் அனைவரையும் மரியாதையாகவே அழைத்துப் பழகியவர், அதனையே அவரும் எதிர்பார்ப்பார். லேபராக இருந்தாலும் மேலாளராக இருந்தாலும் அவர்களின் பிறந்த நாள், கல்யாண நாள், குழந்தை பிறந்த நாள் என்று அவருக்கு தெரியவரும் பட்சத்தில் கட்டாயம் பரிசுப் பொருட்களை வாங்கிக் கொடுப்பதற்கு தவறமாட்டார். அதோடு ஈத் (பெருநாட்கள்) தேசிய தினம், கிருஸ்துமஸ், என்று எது வந்தாலும் அவரிடமிருந்து அவரோடு நெருக்கமாக இருப்பவர்களுக்கு பரிசுப் பொருட்கள் நிச்சயம் கிடைக்கும்.

வேலையில் இருக்கும்போது ஏதாவது கொரித்துக் கொண்டோ சாப்பிட்டுக் கொண்டோ இருப்பார், அதனால் மற்றவர்களுக்கு ஏதும் சிரமங்கள் இல்லாவிடினும் அவரின் தொடர் செயல்களால் அதனை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

ஒவ்வொரு மாதமும் சம்பளம் வாங்கிய முதல் வாரத்தில் ஷாப்பிங் செல்வது அவரின் வழக்கம். நிறைய பரிசுப் பொருட்களும் ஆடைகளும் வாங்கி 71x45x71cm என்ற கொள்ளலவு கொண்ட பாக்ஸில் மாதம் ஒரு பார்சல் பிலிப்பைன்ஸுக்கு அவரால் அனுப்பப்படும் அதில் அவரின் வீட்டார் அனைவருக்கமான பரிசுப் பொருட்கள் நிரம்ப இருக்கும்.

கம்பெனியில் (தொழிற்சாலையில்) நடக்கும் முக்கிய நிகழ்வுகளில் அவரின் பங்கு அதிகமாக இருக்கும், விழாவானாலும், பிரெசெண்டேஷன் ஆனாலும், இன்னும் முக்கிய நிகழ்வுகளானாலும்.

சில சமயங்களில் வேலையில் நடக்கும் கோபதாபங்களில் அவரும் அதிகம் பாதிக்கப்படிருக்கிறார், 'யாருக்கு யார் ?' என்று அவரால் அடிக்கடி எனக்கு மின்னஞ்சலில் கேட்கப்படும் கேள்வி, பல விஷங்களை அவர் என்னோடு வாதிடும்போது தெரியவரும். என்ன இவன் இவ்வளவு பீடிகை போடுகிறானே என்று நெளிய வேண்டாம்.

அவருடைய பெயர் 'சார்ல்டன்'

கடந்த சில நாட்களாக அதிகமாக இருமிக் கொண்டே இருந்தார், பலமுறை அவரிடம் டாக்டரிடம் செல்லும்படி தனிப்பட்ட முறையில் அறிவுறுத்தி வந்தேன், அவரும் இன்று நாளை என்று சொல்லிக் கொண்டே இருந்தார். அதற்கு முன்னர் அவரின் ஆரோக்கியம் பற்றி சின்ன குறிப்பு கடந்த மூன்று வருடங்களாக ஹைபர்டென்ஷன், சுகர் இருப்பதாகவும் தொடர்ந்து ட்ரீட்மெண்ட் எடுத்து வந்தார்.

கடந்த ஃபிப்ரவரி மாதம் 11ம் தேதி காலை வழக்கம்போல் வேலைக்கு வந்தார் அவரின் முகத்தில் வாட்டம் தெரிந்தது அவரிடம் "என்ன சார்ல்டன்?" என்றேன். "உடல்நிலை சரியில்லை" என்றார், உடனடியாக டிரைவரை அழைத்து அவர் எங்கு வழமையாக மருத்துவத்திற்கு செல்வாரோ அங்கே அழைத்துச் செல்லும் படி சொல்லிவிட்டு நானும் என்னுடைய வேலையைப் பார்த்துக் கொள்ள தொடர்ந்தேன்

அடுத்த நாள் 12ம் தேதி, அவர் வேலைக்கு வரவில்லை நானும் ஒருவேளை மெடிக்கல் லீவாக இருக்கும் என்று என்னுடைய அசிஸ்டெண்டிடம் என்ன வென்று விசாரிக்கச் சொல்லியிருந்தேன். அவரும் விசாரித்து விட்டு இன்று மெடிக்கல் லிவு என்றார்.

பிப்ரவரி 13ம் தேதியும் அவர் வேலைக்கு வரவில்லை, நானே அவரின் மொபைலுக்கு ஃபோன் செய்தேன், பதில் இல்லை... அன்று மதியம் சுமார் 2:30 மணிக்கு டேரா பெல்ஹோல் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலிருந்து எனக்கு அழைப்பு வந்தது கம்பெனியிலிருந்து யாராவது அங்கு வரவேண்டும் என்றும் அவருக்கு உடணடியாக ஆப்ரேஷன் செய்ய வேண்டும் அதற்காக இன்சூரன்ஸ் அப்ருவல் இன்னும் வரவில்லை அது வந்தாலும் வராவிட்டாலும் கம்பெனியிலிருந்து அவர்கள் குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யச் சொன்னார்கள்.

அன்று மாலையே அங்கு செல்லலாம் என்று இருக்கும்போது, ஒரு மணிநேரம் கழித்து 'சார்ல்டனே' என்னிடம் மொபைலில் பேசினார், ஆப்ரேஷன் இன்று இல்லை பிறகு செய்ய விருப்பதாக டாக்டர் சொல்லியிருக்கிறார் என்றார். "இப்போது நீ வரவேண்டாம் நாளை அல்லது மறுநாள் மருத்துவமனையிலிருந்து நான் திரும்பி விடுவேன்" என்று தெளிவாகச் சொன்னார்.

அடுத்த நாள் 14ம் தேதி காலை 11:30 மணிக்கு மீண்டும் மருத்துவமனையிலிருந்து ஃபோன் வந்தது, அவர்கள் என்னிடம் உடணடியாக டெபாசிட் செய்யுங்கள் அப்போதுதான் தொடர்ந்து சிகிச்சை அளிக்க முடியும் என்றனர். நானும் எனக்கிருக்கும் அனுமதியைப் பயன்படுத்தி அவர்கள் சொன்ன தொகையை ரொக்கமாக எடுத்துக் கொண்டு மாலை 4:30 மணியளவில் அங்கு சென்றேன். முதலில் 'சார்ல்டனை' பார்க்கலாம் என்று விசாரித்தேன் அவரை ICUவில் வைத்திருப்பதாகச் சொன்னார்கள். எனக்கு சுல்லென்றது 'என்னடா நேற்று பேசும்போது நாளை அல்லது மறுநாள் திரும்பி விடுவேன்' என்று சொன்னார் இப்போது ICU என்றதும் அதிர்ச்சியாக இருந்தது.

அங்கு சென்று பார்த்ததும் அதிர்ந்தே விட்டேன் அவரின் நிலையைக் கண்டதும், ஒரு குழந்தையைப் போல் பிதற்றிக் கொண்டிருந்தார். அந்த அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாமல் அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரை பார்க்க வேண்டும் என்று அங்கிருந்த நர்ஸிடம் சொன்னதும் அவரும் இரண்டாவது மாடிக்குச் சென்று பார்க்கச் சொன்னார். டாக்டரை பார்த்ததும் அவர் ஒவ்வொன்றாகச் சொல்லச் சொல்ல உறைந்து போய்விட்டேன்.

அன்றே அவரின் சொந்தக்காரர்கள் யாரும் இருக்கிறார்களா என்று விசாரிக்க ஆரம்பித்தேன் யாரும் சிக்கவில்லை, உடணடியாக அவரின் மனைவிக்கே (பிலிப்பைன்ஸ்க்கே) தகவல் கொடுத்தேன், அதோடு மருத்துவமனை தொலைபேசி, டாக்டர் பெயர், நர்ஸ் பெயர் அனைத்தையும் கொடுத்தேன். அன்றிருலிந்து அவரின் மனைவியும் காலை, மாலை என்று இரண்டு நேரமும் ஃபோன் போட்டு பேசி வந்திருக்கிறார்.

இருமல், மயக்கம் என்று சொல்லித்தான் அங்கே அட்மிட் ஆனார், அடுத்த நாள் கிட்னியில் கல் இருப்பதாகச் சொல்லி ஆபரேஷன் என்றனர், அதன் பின்னர் ஹார்ட் வீக்காக இருக்கிறது ஆப்ரேஷன் செய்ய முடியாது அதனை பிறகு செய்யலாம், முதலில் ஹார்ட்டுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றனர். அடுத்து மூன்று விதமான MRI எடுத்தனர், அப்புறம் CT-Scan எடுத்தனர்.

அன்றிலிருந்து நான் அதிகாலை 6:30 மணிக்கும் மாலை 5:00 மணிக்கும் தினமும் அவரைப் இருமுறை பார்க்கச் சென்று வந்தேன், அவரின் உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. ஒவ்வொரு நாளும் அவரின் சுயநினைவுகள் மறைந்து கொண்டே சென்றது. ஆரம்பத்தில் என்னோடு நன்றாக பேச ஆரம்பித்தவர் அடுத்து மெல்லிய புன்னைகயை காட்டினார், அதன் பின்னர் "yeah" என்று சத்தம் மட்டுமே அவரால் எழுப்ப முடிந்தது.

ஃபிப்ரவரி 19ம் தேதி காலை 10 மணியளவில் மருத்துவமனையிலிருந்து மீண்டும் ஃபோன், மேலும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் சொல்லி அதனை உடணடியாகச் செலுத்துங்கள் மற்றுமொரு ஸ்கேனிங் இன்றே செய்ய வேண்டும் அவசரம் என்றனர். நானும் இன்ஷூரன்ஸில் பேசுகிறேன் முதலில் ஆன்லைன் ரெகுஸ்ட் செய்யவும் என்றேன் அவர்களும் அதனையும் செய்து வைத்திருக்கிறோம் இருந்தாலும் நீங்கள் இந்த தொகையையும் டெபாஸிட் செய்யுங்கள் என்றனர்.

வேறு வழி, அவர்கள் சொன்ன தொகையை டெபாஸிட் செய்து விட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கும் மற்றொரு மருத்துவரை சந்திக்கச் சென்றேன், அவரோ இன்று இரவு மற்றொரு ஸ்கேனிங்க் செய்ய இருக்கிறோம் "we suspect there is bleeding" என்றார் என்னடா இவர் மொட்டையாகச் சொல்கிறாரே என்று விளக்கமாகக் கேட்டேன். அவரோ "சார்ல்டன் மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டிருக்கிறது, அதனால்தான் நினைவு மாறி மாறி வருகிறது" என்று சொன்னவர். "அதனைச் சரி செய்து விட்டோம்" என்றார்.

நானும் நிம்மதிப் பெருமூச்சுடன் எனது இருப்பிடம் திரும்பி வந்தேன்.

பிப்ரவரி 20ம் தேதி காலை 06:30 மணிக்கு அவரை பார்க்கச் சென்றபோது அதே நிலையில்தான் இருந்தார். ஐந்து நிமிடங்கள் அங்கிருந்த நர்ஸிடம் விபரங்களை கேட்டுவிட்டு அலுவலகம் வந்து கொண்டிருந்தேன் மீண்டும் அலைபேசியில் அழைப்பு வந்தது அதில் டாக்டர் பேசினார் "தயவு செய்து அவரின் குடும்பத்திற்கு தகவல் கொடுங்கள் சார்ல்டன் நிலமை இன்னும் இரண்டோ மூன்றோ நாட்கள்தான் என்ற குண்டை போட்டார்" எனக்கோ காரை ஓட்ட முடியாமல் தடுமாறிவிட்டேன். அப்புறம் சுதாகரித்துக் கொண்டு அலுவலகம் வந்து சேர்ந்ததும் என்னுடைய முதலாளியிடம் கலந்து பேசினேன். உடணடியாக சார்ல்டன் மனைவியை இங்கு வரவைக்க ஏற்பாடு செய்ய முடிந்தால் அதனைச் செய் எதனை பற்றியும் யோசிக்க வேண்டாம் உன்னுடைய முடிவுக்கே விட்டுவிடுகிறேன் என்று சொல்லிவிட்டார்.

அதற்குள் அவரின் மனைவியும் அன்று காலை மருத்துமனையில் நர்சுடன் பேசியிருக்கிரார் அவர்களும் இதே தகவலை அவரிடம் சொல்ல, அதனைத் தொடர்ந்து சார்ல்டன் மனைவி எனக்கு ஃபோன் செய்து உடணடியாக விஷா ஏற்பாடு செய்யும்படி கெஞ்சினார். நானும் 'சரி' என்று சொல்லி அவரிடம் பாஸ்போர்ட் காப்பியை அனுப்பச் சொல்லிவிட்டேன் அவரும் தனது மகனோடு வருவதாக சொன்னார்.

ஃபிப்ரவரி 21ம் தேதியும் அதே கவலையுடனே கழிந்தது, பாஸ்போர்ட் காப்பி கேட்டு இன்னும் வரவில்லையே என்று மீண்டும் ஃபோன் செய்தால் மாலைக்குள் அனுப்பி விடுகிறேன் என்று சொன்னார் ஆனால் வெள்ளிக்கிழமைதான் எனக்கு மின்னஞ்சலில் வந்தது.

வெள்ளிக்கிழமை, ஃபிப்ரவரி 22ம் தேதி காலை மருத்துவமனை சென்ற என்னை மிகச் சரியாக அடையாளம் கண்டு கொண்டு சார்ல்டன் புன்னகைத்தார் நான் சொல்வதை அவர் கேட்பது போன்று தலையசைத்தார் அப்போதுதான் சொன்னேன் "உங்கள் மனைவியும் குழந்தையும் வருகிறார்க்ள் விஷா ஏற்பாடு செய்கிறேன்" என்றேன் அப்போது "தேங்க்ஸ்" என்று மெல்லிய உதடு அசைப்பாக காற்று மட்டும் அவரின் வாயிலிருந்து வந்தது.

சனிக்கிழமை ஃபிப்ரவரி 23ம் தேதி காலை நான் நேரடியாக அலுவலகம் சென்றுவிட்டேன் எனக்கு ஒரு அவசர வேலை இருந்ததால். காலை 9:00 மணியளவில் டாக்டரிடம் பேச வேண்டும் என்று என்னுடைய முதலாளி சொன்னார் உடணடியாக டெலிஃபோனில் பேசுவதற்கு ஏற்பாடு செய்தேன். அப்போது டாக்டர் எங்கள் முதலாளியிடம் அரபியில் நிறை விஷயங்களை சொல்லியிருக்கிறார், அவரும் அதனைக் கேட்டுவிட்டு அதிர்ச்சியில் அப்படியே மவுனமாக இருந்தார் சிறிது நேரம். 

சரியாக 12:15 மணிக்கு டாக்டர் மீண்டும் ஃபோன் செய்தார் "he is no more" என்றார்.... !

அபூஇப்ராஹீம்

என்னத்தக் கிழிக்கிறிய ? 44

அதிரைநிருபர் பதிப்பகம் | February 02, 2012 | , , , ,


வழக்காடல் அல்ல இது
வலக்கரம் பிடித்து
வாழ வந்தவளோடு
உவகையான ஓர்
ஊடலாடல்

மனைவி சொல்லே மந்திரம்
மனைவி இல்லையேல்
மனிதா நீ எந்திரம்

எல்லாம் சரி
என் இனியவளே
இல்லம் விருத்தியாக்கும்
இன்முகத்தவளே !

செல்வது தெரியும்
அன்பே - நான்
மீள்வதும் தெரியும்...
அலுவலில் நான் படும்
அவஸ்தைகள் தெரியுமா
கொம்பு முளைத்த
முதலாளியோடு -என்
ஜல்லிக்கட்டுப் புரியுமா

மூச்சுக்கு மூனுதரம்
முறைவைத்து அழைப்பவன்
முதலாளி ஆனதனால் - தலை
முட்டி முட்டி வலிக்குதடி

காஃபி கலந்து அதில்
காதல் மலாய் மிதக்க
கண்களைப் பார்த்துக்கொண்டே
கைகளில் தருபவளே

கணவன் கஷ்டமெல்லாம்
கனவிலும் காண்பதரிது
கண்களுக்கு மேல் சற்று
கைவைத்து நீவி விடு

காகிதங்கள் கிலோக்கணக்கில்
கணக்கிட்டுத் தரவேண்டும்
கையெழுத்துப் போட மட்டும்
கற்றிருப்பான் முதலாளி

கணக்குப் பண்ணத் தெரியும்
கணக்கைப் பண்ணத் தெரியாது
கணக்குப் பிள்ளை கர்மத்தையும் - உன்
கணவன் நானே பார்க்கவேண்டும்

ஆங்கிலத் தட்டச்சுவில்
ஆயிரம் பிழை இருக்கும்
ஒப்பனை செய்வதன்றி
ஒன்றுமறியாக் காரியதரிசி

பூரிக்குக் கிழங்கிலிட
பூண்டுரித்துத் தராததால்
என்ன கிழிச்சீங்க என்று
ஏளனம் செய்பவளே

சுமாராகச் சமைத்துவைத்து
சுடாமல் பரிமாறி
சும்மாத் தொணதொணக்கும்
சுந்தர முகத்தவளே

ஒருநாள் பொழுதேனும்
ஓய்வெனக்குத் தரவேண்டும்
அலுவலகம் வந்திருந்து - என்
அவஸ்தைக ளறியவேண்டும்.

-சபீர்

திரை கடல் ஓடும் முன் திட்டமிடுங்கள் ! 13

அதிரைநிருபர் பதிப்பகம் | February 01, 2012 | , , , , , ,


திரை கடல் ஓடியும் திரவியம் தேடு" என்பது பழமொழி ! 

நமது சமுதாயத்தில் கல்வி பயிலுபவர்களும் சரி அல்லது பாதியிலே நிறுத்திவிட்டு எனக்கு கல்வியே வேண்டாம்(?) என கூறுபவர்களும் சரி, இவர்கள் பதினெட்டு வயதை கடந்தவுடன் முதலில் ஆயத்தமாவது "பாஸ்போர்ட்" எடுப்பதற்கே ! 

"பாஸ்போர்ட்" எடுத்தவுடன் முதலில் அவர்கள் நாடிச்செல்வது நமது தரகர்களையே, இவர்கள் வளைகுடா நாடுகள், கிழக்காசிய நாடுகள், அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து ஆகிய நாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி அவர்களிடம் கணிசமான தொகையை பேசிவைத்துக் கொண்டு அதில் அட்வான்ஸாக ஒரு குறிப்பிட்ட பணத்தையும் பெற்றுக்கொள்கிறார்கள். பணத்தைக் கொடுத்தவர்களோ வருட கணக்கில் காத்துக்கிடக்க வேண்டும். 

பணத்தை பெற்றுக்கொள்ளும் இவர்கள், போலியாக ஆவணங்களைத் தயார் செய்து விசாக்களைப் பெறுகிறார்கள். அதுவும் டூரிஸ்ட் விசா, செங்கன் விசா (Schengen)  (இக்கட்டுரையின் கீழே செங்கன் விசாவைப் பற்றி விளக்கியுள்ளேன்.)

இவ்விசாவைக் கொண்டு பயணமாகி அங்கே வசிக்கும் தங்களால்...

1. சுதந்திரமாக பணி செய்ய முடிகிறதா ? 
2. குடும்பத்தை பிரிந்து வருட கணக்கில் நிம்மதியாக இருக்க முடிகிறதா ?
3.ஹலாலான பணிகளைத் தேர்ந்தெடுப்பது எவ்வளவு கஷ்டம் என உணர்கிறிர்களா ?
4. விசாவுக்காக பெற்ற கடன்களை அடைத்து விட்டீர்களா ?
5. நன்கு கல்வி கற்கவில்லையே, பாதியிலே படிப்பை நிறுத்திவிட்டேனே என வருந்துகிறீர்களா ?
6. ஒரு முறை சென்றுவிட்ட தங்களால் திரும்ப அதே நாட்டிற்கு செல்ல முடியுமா ?

சகோதரர்களே சிந்தியுங்கள் !

வளைகுடா , கிழக்காசிய போன்ற நாடுகளுக்குச் செல்வோரும் போதிய அனுபவம் இன்மையால் அவர்கள் பணிபுரியும் இடங்களில் பல சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது. மேலும் தரகர்கள் சொல்லி அனுப்பிய வேலை ஓன்று ஆனால் அங்கே தரக்கூடிய வேலைகளோ வேறொன்று !

இத்தரகர்களின் மோசடி வளையத்திற்குள் சிக்கிக்கொள்ளாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமாய் தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

என்னதான் தீர்வு ?

1. இளைய தலைமுறையினர் தங்களின் படிப்புகள் முடித்தவுடன் அரசு வேலை வாய்ப்பு அலுவலங்களில் முறையாக பதிவு செய்வதை தங்களின் கடமைகளாக பின்பற்ற வேண்டும்.

2. மேலும் தாங்கள் பயின்ற படிப்பு சம்பந்தமான துறைகளின் அலுவலகங்கள் மற்றும் தொழிற்கூடங்களில் பயிற்சிகள் மேற்க்கொள்ள வேண்டும்.

3. மேலும் நமது அரசு வழங்குகின்ற “ சிறு தொழில்கள் தொடங்குவதற்க்கான பயிற்சிகள் ” மூலம் பங்குபெற்று புதிய தொழில்களைத் தொடங்க முயற்சிக்கலாம்.

4. மேலும் நமது நாட்டிலேயே ஏராளமான தொழில்கள் உள்ளன. இவற்றின் ஏதாவது ஒன்றினை தேர்ந்தெடுத்து முறையாக தொடங்க முயற்சிக்கலாம்.

5. நமது நாட்டில் அரசு, அரசு சார்ந்த மற்றும் தனியார் போன்ற அலுவலகம் மற்றும் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளுக்கு முயற்சி செய்யலாம்.

6. இளைய தலைமுறையினர் வெளிநாடுகளுக்கு செல்லும் முன் தங்களின் ஆங்கில மொழி பேசும் திறமை மற்றும் வேலை அனுபவங்களையும் நன்கு வளர்த்துக் கொள்ள வேண்டும். 

7. விசாக்கள் பெறுவது எப்படி ? என்று அந்தந்த நாட்டின் ஒவ்வொரு வலைத்தளங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளதை பின்பற்றலாம். இதனால் செலவுத் தொகைகள் மிச்சமாகும்.

8. மேலும் வெளிநாடுகளில் வசிக்கக்கூடிய நமது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர்களின் நல்ல ஆலோசனைகளையும் கேட்டு தெளிவு பெறலாம்.

9. நாம் பயணம் செய்யும் ஒவ்வொரு விமான நிலையத்தைப் பற்றியும், அந்த நாட்டின் சட்ட திட்டத்தைப் பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது. 

10.செலவிற்குத் தேவையான பணம் அமெரிக்க டாலர்களில் (  Traveller Cheque  or  CASH  ) வைத்திருப்பது நல்லது.

11.ஏதாவது பிரச்சனை வந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்களை எழுதி வைத்து, தொடர்பு கொள்ள இலகுவாக ரோமிங் வசதிகளுடன் கூடிய அலைபேசியை வைத்துக்கொள்வது நல்லது.

12.இமிக்ரேஷன் கவுன்டரில் விமான நிலைய அதிகாரிகளின் சோதனையின் போது அவர்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு மன தைரியத்துடன் தெளிவாக, சுருக்கமாக, நாகரிகமான முறையில் பதில் அளியுங்கள். பயப்பட வேண்டாம் அவர்களும் நம்மைப்போல மனிதர்களே !

“செங்கன் விசா “ (Schengen)  என்றால் என்ன ?

ஐரோப்பியா யூனியன் நாடுகள் தங்களின் சுற்றுலாத் துறையின் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலா பயணிகளுக்காக உருவாக்கப்பட்டதே “ செங்கன் விசா “  இச்சுற்றுலா விசாவில் இக்கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ள ஐரோப்பிய நாடுகளுக்கு பயணங்கள் மேற்கொள்ளலாம்.  

இவ்விசாக்களை எவ்வாறு பெறுவது ?

இந்தியாவில் மும்பை மற்றும் பெங்களூரில் உள்ள துணை தூதரகங்களில் அதற்குரிய விண்ணப்ப கட்டணத்தினை செலுத்தி கீழ்க்கண்ட “ டாக்குமெண்ட்ஸ் ” களை இணைத்து தாக்கல் செய்யலாம்.

தேவையான “ டாக்குமெண்ட்ஸ் ” கள் :-

1.“செங்கன் விசா" விண்ணப்ப படிவத்தில் நம்மைப்பற்றிய தகவல்களை அதில் பூர்த்தி செய்து இருக்க வேண்டும் 

2. நமது பாஸ்போர்ட்டின் முதல் மற்றும் கடைசி பக்க தெளிவான நகல்கள் (செல்லுபடியாகும் கால அளவு குறைந்தபட்சம் ஆறு மாதங்களாக இருக்குமாறு கண்காணிப்பது அவசியம் )

3. இரண்டு நம்முடைய புகைப்படங்கள் (அதில் ஒன்றரை விண்ணப்ப படிவத்தில் ஒட்டவும் மற்றொன்றை அதில் இணைத்து (stapled) கொடுக்கவும் )

4. உறுதி செய்யப்பட்ட விமான டிக்கட்டுகளின் நகல்.

5. நாம் தங்கக் கூடிய இடத்தின் ( HOTEL ) உறுதி செய்யப்பட்ட ரசீதுகள்.

6. ட்ராவல் / மெடிக்கல் இன்சூரன்ஸ் செய்து இருக்க வேண்டும்.

7. நிறுவனங்களின் நிர்வாகியாக இருக்கும் பட்சத்தில், கடந்த மூன்று ஆண்டுகாளாக நாம் செலுத்திய வருமான வரிகள் மற்றும் வங்கி கணக்கின் மூன்று மாத காலம் நாம் செய்து கொண்ட வரவு செலவுகளின் விவரங்கள் ஆகியவைகளை அதில் இணைக்க வேண்டும்.

8. நிறுவனங்களில் பணிபுரிபவர்களாக இருக்கும் பட்சத்தில், தங்கள் பணிபுரியும் நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட கடிதம் மற்றும் மூன்று மாத நாம் பெற்ற சம்பள ரசீதுகள் ஆகியவைகளை அதில் இணைக்க வேண்டும்.

குறிப்பு : 
1. மற்ற நாடுகளுக்கு ( America, Canada, England, Australia, New Zealand ) பயணம் மேற்கொள்பவர்களும் இம்முறையை பின்பற்றலாம்.

2. “செங்கன் விசா" வில் பயணம் மேற்கொள்வோர். அந்நாடுகளில் நிரந்தரமாக தங்கி பணிபுரிவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் சிக்கனமான பயணம் இனிதாக அமைய என் வாழ்த்தும் துவாவும் !

இறைவன் நாடினால்! தொடரும்...
-சேக்கனா M.நிஜாம்

அர்ப்பணிப்பும் - அங்கீகாரமும்! அனுபவம் பேசுகிறது.... 17

அதிரைநிருபர் பதிப்பகம் | December 24, 2011 | , , , ,


உத்தியோகம் புருஷ லட்சணம் என்று கூறுவார்கள்.

எவ்வினையோருக்கும் இம்மையில் அல்லாஹ்வின் நாட்டப்படி நம்மை இயக்குதற்கு இன்பம் பயக்கும் ஓர் வேலை என்பதும் –  அவசியமே!.

ஆகவே! வேலைதான் அவர்களுக்கு சமுக அந்தஸ்தையும் அடையாளத்தையும் கொடுக்கும். அந்த வேலைதான் வாழ்வாதாரத் தேவைகளை நிறைவேற்றிட அவசியமானது. அதுமட்டுமல்லாமல் பரந்து விரிந்த இந்த உலகத்தில் ‘தான்’ ஒரு உபயோகமான நிலையில் இருக்கிறோம் என்ற மன திருப்தியை அவரவர்களுக்கு தருவதும் வேலைதான். நாம் வெறுத்து ஒதுக்கும் வரதட்சனை என்றொரு விலை நிர்ணயம் செய்திடும் காரணிகளில் இந்த வேலை என்றொரு செயல்பாட்டிற்கும் பங்குண்டு. மகளுக்கு திருமணம் செய்ய தேடும் புதிய மாப்பிள்ளைக்கு அவரின் வேலை நிலை அதன் உறுதி இவற்றை முன்னிருத்தியே பார்க்கிறார்கள். ஒவ்வொருவரும் ஏதாவது வேலையில் இருந்து பொருள் ஈட்டுவது அவரவர் சார்ந்திருக்கும் சமூகத்திற்க்கும் சமுதாயத்திற்கும் பெருமை சேர்ப்பதாகும். அவ்வகையில் நிலையான வேலை வேண்டும் என்றும் அதனையும் ஒரு குறிக்கோளாக வைத்தே படிக்கிறோம் –  பட்டம் வாங்குகிறோம், கடல் கடக்கிறோம், பெற்றோரை, மனைவி, மக்களை சுற்றம், நட்பை பிரிகிறோம்.

வேலையில் திறமை காட்டுவதன் அடிப்படையில்தான் (DELIVERING EXCELLENCE) நமக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும் .

பெரும்பாலோர் தங்களுக்கு வேலை ஒன்று கிடைத்து அதில் அமர்ந்துவிட்டால் போதும் என்று அந்த நிலையோடு நிறுத்திக் கொள்கிறார்கள். தங்களின் வேலையில் தேவையான திறமை காட்டுவதற்கோ அதிலிருந்து அடுத்தடுத்த மேற்படிகளுக்கு செல்வதற்காக தங்களுடைய தகுதிகளை உயர்த்திக்கொள்ள வேண்டுமென்று மனதளவில்கூட நினைத்து சிறு முயற்சிகள் எடுப்பதில்லை.

பணிக்கால மூப்பின் அடிப்படையில் சட்டத்திற்கும் ஒழுங்கு முறைகளுக்கும் உட்பட்டு வருடா வருடம் கிடைக்கும் ஊதிய உயர்வும் பதவி உயர்வுமே போதும் என்று திருப்தி அடைந்து விடுகிறார்கள். அரசு வேலையில் அமர்ந்து விட்டவர்களுக்கு வேண்டுமானால் இந்த எண்ணம் வழிமுறையாக பின்பற்றிக் கொண்டிருக்கலாம் அதுவும் சில நேரங்களில்தான். ஆனால் தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் அளக்கப்படும் என்பதை அவர்கள் உணரவேண்டும் ..

எனக்கு தெரிந்து இந்திய அஞ்சல் மற்றும் தந்தி துறையில் அலுவலராக பணிக்கு சேர்ந்து தனது ஐம்பத்தி ஐந்தாவது வயதில் தலைமை அலுவலராகி 58 வது வயதில் ஒய்வு பெற்றவரை தெரியும். அதே நேரத்தில் கடைநிலை தபால்காரராக பணியில் சேர்ந்து 5 வருடத்தில் அலுவலராகி 10 வருடத்தில் தலைமை அலுவலராகி 15 வருடத்தில் மாவட்ட பிரிவு நிர்வாகியாகி 52 வயதில் மாவட்ட நிர்வாகியாகி ஒய்வு பெற்றவரையும் கேள்விப்பட்டு இருக்கிறேன்.

சிலரோ கடமைக்கென்றே வேலை செய்வார்கள், ஆனால் அந்த வேலையை திருந்த செய்ய மாட்டார்கள். வேலையை திருந்தவும் சிறப்புறவும் செய்பவர்களே கவணிக்கப்படுகிறார்கள், பதவி உயர்வும் பெறுகிறார்கள். அதையும் விட செய்யும் வேலையை நமக்கென்று பொறுப்பில் இருக்கும் மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும்படி செய்வதும் ஒரு கலையே. இதனை ACCURACY, PERFORMANCE & PRESENTATION என்று கூறலாம். ஈடுபட்டு இருக்கும் வேலைக்குத் தகுந்தாற்போல் கல்வித்தகுதிகளை அந்த வேலைகளை செய்தபடியே மேம்படுத்திக்கொள்வதும் ஒரு இன்றியமையாத தன்மையாகும். அதை CAREER DEVELOPMENT  என்று கூறலாம்.

ஒரு மரம் வெட்டுபவன் ஒரு எஸ்டேட்டில் வேலைக்கு சேர்ந்தான். நல்ல உரம்பாய்ந்த உடல் தகுதி உள்ளவன். வேலைக்கு சேர்ந்த முதல் வாரம் 20 மரங்களை வெட்டி அடுக்கினான். அடுத்தவாரம் அவனால் 15 மரம்தான் வெட்ட முடிந்தது. அதற்கு அடுத்தவாரம் 10  மரங்களே வெட்ட முடிந்தது. நேராக தனது முதலாளியிடம் சென்றான், பிரச்னையை சொன்னான். “தன்னால் எவ்வளவு உழைத்தும் முன்பு போல் அதிக மரங்கள் வெட்ட முடியவில்லை” என்றான். முதலாளியோ சிரித்துக் கொண்டே அவன் கையில் இருந்த கோடாரியை வாங்கி பார்த்தார். அது கூர் தீட்டப்படாமல் மழுங்கி இருந்தது. மரம் வெட்டியிடம் இவ்வாறு கூறினார். கோடாரியின் முனை தீட்டப்படாத காரணத்தால் உன்னால் முன்புபோல் அதிகமாக மரம் வெட்ட முடியவில்லை . அவ்வப்போது கோடாரியை கூர் தீட்டி மரம் வெட்டு என்றார். அதன்படி செய்ததால் அவனால் மீண்டும் 20   மரம் வெட்ட முடிந்தது.

மரம் வெட்டும் தொழிலாளிக்கு எடுத்துரைக்கப்பட்ட்து போன்றே மற்ற பணியில் உள்ள அனைவருக்கும் பொருந்தும். கோடாரியை அடிக்கடி கூர் தீட்டிக் கொள்வதுபோல் தனது துறை சம்பந்தப்பட்டவைகளில் அடிக்கடி நமது அறிவை கூர் தீட்டிக் கொள்ளவேண்டும். அன்றாடம் படும் அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளவேண்டும் இதைத்தான் பட்டறிவு என்று கூறுவார்கள்.

இளநிலை பட்டதாரியாகி வேலையில் சேர்பவர்கள் தான் சார்ந்து இருக்கும் துறை சம்பந்தப்பட்ட முதுகலை படிப்பினை அஞ்சல் வழியாக கற்கலாம். அத்துடன் துறை சம்பந்தப்பட்ட போட்டி தேர்வுகளுக்கும் தயார்படுத்தி அதில் கலந்து கொள்ளலாம். பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு தங்கள் செலவிலேயே பயிற்சிகளை அதாவது GLOBAL ENGLISH TRAINING , ORACLE,  PREMVIERA, ACONEX , QUALITY CONTROL, QUALITY ASSURANCE, HEALTH & SAFETY, ENVIRONMENTS போன்ற வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்கிறார்கள்.  ஆனால் நம்மில் பலர் அவ்வகையாக தேடிவரும் வாய்ப்புகளில் பங்கெடுப்பது இல்லை. அங்கே தோற்றுவிட்டால் என்ன செய்வது என்ற பய உணர்வும், உறுதியான தன்னம்பிக்கையின்மையும் காரணமாக இருக்கிறது.

கட்டிட பொறியாளர்கள் பலருக்கு AUTOCAD  பயன்கள் அதன் அத்தியாவசியங்களை உணர்ந்திருந்தும் அதனை முறையாக பயன்படுத்த தெரிந்திருக்காது. அதனால் அவர்களுக்கு வேலையில் உயர்வும் தடைபடும். சிவில் மட்டும் தெரிந்து பணியில் சேர்பவர்கள் அதை தொடர்ந்து மெக்கானிகல், எலெக்ட்ரிகல், உள் அரங்க வடிவமைப்பு, பிளம்பிங்க் போன்றவைகளையும் அதன் மென்பொருள் பயன்பாடுகளையும் கற்று தெரிந்து கொண்டு மேம்படுத்திக் கொள்வது அவரவர் வாழ்வில் தங்கப்பதக்கத்தில் முத்துக்கள் பதித்தது போலாகும்.

அலுவலகத்தில் தேநீர் பரிமாறிக்கொண்டும் –  அலுவலக கழிவறைகளை சுத்தம் செய்து கொண்டிருந்த ஒருவர் தனது முயற்சியால் கூட இருந்தவரிடம் கேட்டு கேட்டு கணினியின் செயல் பாடுகளை சிறுக சிறுக கற்று,  இன்று ACONEX, PREMVIERA  போன்ற மென்பொருள் பயன்பாடுகளை கற்றுத் தேர்ந்த ஆவனக்கோப்பு பொறுப்பாளராக அதாவது டாகுமென்ட் கண்ட்ரோளராக (Document Controller) பணிபுரிகிறார். (ஜாபர் சாதிக்)

அதேபோல் பத்தாவது மட்டும் படித்த ஒருவர் – கட்டிடத் தொழிலாராக வந்தவர் - இன்று நிறுவனம் நடத்திய ORACLE TRAINING - ல் துணிவுடன் பங்கேற்று நேரகண்காணிப்பாளராக (TIME–KEEPER)  பிளந்து கட்டுகிறார். (ராமமூர்த்தி)

எடுபிடி உதவியாளராக (HELPER) பணியில் சேர்ந்த பலர் எனக்கு தெரிந்து ஒரு தனிப்பட்ட தொழிலை தெரிந்தவர்கூடவே இருந்து கற்றுக்கொண்டு கொத்தனார்களாக, பிளம்பர்களாக, உருவெடுத்து விட்டதுடன் அதில் திறமையும் காட்டி வருகிறார்கள். (எவ்வளவோ பேர்கள்)

அடிப்படைக் கல்வி அறிவு அவ்வளவாக பெற்றிராத ஒருவர் தனது பணியின் ஈடுபாடும், அர்ப்பணிப்பு, ஒழுங்கு, நேரம் தவறாமை, அனுபவங்களை கல்வியகாக போற்றியதன் காரணமாக உதவி கட்டிட பொறியாளராக உயர்வு பெற்றுள்ள உண்மை கதையும் உண்டு.  (கார்த்திக்).

பரவலாக பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை புடம்போட்டு எடுக்கவும் – வெளிநாடுகளுக்கு மேற்கல்வி, கூடுதல் மேம்பாட்டு பயிற்சிகள் கற்றுவரவும் அனுப்புகிறார்கள். இதற்காக வருடத்துக்கு இவ்வளவு என்று நிதி ஒதுக்குகிறார்கள்.

இன்றைய காலத்தில் கணினியினால் நிகழும் அதிவேக மாற்றங்களும் தொழில்நுட்பங்களும் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. இன்று உள்ள எந்த செயல்பாடும் நாளைய தினம் புதியதாக உருமாற்றம் பெற்று வருகிறது. ஆகவே மாற்றங்களை,  வளர்ச்சிகளை தொடர்ந்து கவனித்து வருபவர்களே –  அதற்காக தங்களை தயார் படுத்திக் கொள்பவர்களே உயர்வான மாற்றங்களுக்கு வழி வகுத்துக்கொள்வார்கள். அப்படி சுய முயற்சி, அதோடு விடா முயற்சியும், செய்யும் தொழிலில் திறமை, அர்ப்பணிப்பு, உடையவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்குவது மனிதவள மேம்பாட்டுதுறைகளின் தலையாய பணிகளில் ஒன்றாகும். (RECOGANIZE AND REWARD).

அடைகாக்கப்படும் முட்டையிலிருந்து கோழிக்குஞ்சுகூட தன் தோட்டை இளம் அலகால் கொத்தி கொத்தித்தான் உடைத்துக்கொண்டு வெளிவருகிறது. இன்றைய உலகில் ஏற்றம் பெற எல்லா வசதிகளையும் பெற்றுள்ள நாம் முயன்றால் முடியாதது இல்லை - இறையருளால்.

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.

- இப்ராகிம் அன்சாரி

இப்படியுமா இருப்பாய்ங்க !? 10

அதிரைநிருபர் பதிப்பகம் | May 20, 2011 | , ,

ஆர்ப்பரிக்கும் சூடு அளவுக்கு ஏற்ப புழுதிக் காற்று அணிந்திருக்கும் மேலாடையின் கழுத்துப் பகுதிப் பக்கம் அழுக்கென்று ஏதும் படியாத வேர்வை இப்படியாகத்தான் இன்றைய பொழுதோடு உழன்றோடினேன்.

நிற்க !

நேற்றைய முன் தினம் எனக்கு ஒரு அவசரத் தேவையிருந்ததால் அலுவலகத்திலிருந்து சீக்கிரமே வீட்டுக்கு கிளம்பிவிட்டேன், அதன் பின்னர் எங்கள் அலுவலகத்திலிருக்கும் ஸ்கேனர் மற்றும் ஃபேக்ஸ் மெஷின் திடீரென்று வேலை நிறுத்தம் செய்து மல்லுக் கட்டியிருக்கிறது அதனை இணைத்திருக்கும் நெட்வொர்க்கிலும் வேலை செய்யவில்லை. வழக்கமாக இப்படியாக ஏதும் நிகழ்ந்தால் சட்டை பொத்தான் தைக்க வீட்டில் வைத்திருக்கும் ஊசி நூல் போல் என்னை அவ்வப்போது கூப்பிட்டு குத்திப் பார்க்க வைத்து விடுவார்கள் அதென்னமோ கைவைத்ததும் சிக்கலுக்கு விக்கல் வந்து ஓடிடும், ஆனால் அன்று நான் இல்லாததால் சொந்தமென்று சொல்லி முதலாளியால் சேர்க்கப்பட்ட ஒரு மேலாளர் அதனை தட்டிப் பார்த்திருக்கிறார் குட்டிப் பார்த்திருக்கிறார் வேலை நிறுத்தம் வாபஸ் இல்லை என்று தெரிந்ததும் அதனை சர்வீஸ் செய்ய அந்தக் கம்பெனியினுடைய இன்ஜினியரை அழைத்திருக்கார் அவரும் நாளை வருவதாகவும் சொல்லிவிட்டார்.

சரி !

அடுத்த காலை வழக்கமாக வேலைக்குச் சென்ற நான் முதலில் என் கண்ணில் பட்டது அந்த ஸ்டிக்கர் "தொடாதே" அதாவது do not touchன்னு ஒரு பஞ்ச் இருந்திச்சு என்ன இது என்று அருகிலிருந்தவரிடம் கேட்டேன் அவரும் "நேற்றையிலிருந்து வேலை நிறுத்தம் செய்கிறது பேச்சுவார்த்தைக்கு பிரதிநிதி இன்று வருவாராம்" என்றார் என்னை ஒரு மாதிரியாக பார்த்துக் கொண்டே!

நானும் அமைதியாக வழக்கமான வேலையில் ஈடுபட கவனத்தை மாற்றிக் கொண்டு சென்றேன் என் இருக்கைக்கு. காலை பதினொன்று மணிக்கு வந்தார் அந்த பழுதுபார்க்கும் பொறியாளர் !!! அவரின் முதல் வருகை என்பது எனக்குத் தெரியும் இருப்பினும் மவுனம் காத்திருப்போம் என்று இருக்கைக்கு திரும்பாமல் அவரருகில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

முதலில் அவர் செய்தது ஆன் செய்திருந்த அந்த ஃபேக்ஸ் மெஷினை ஆஃப் செய்தார் அப்புறம் சொருகியிருந்த அனைத்து கேபிள்களை கழட்டினார்... கழட்டிய கேபிளின் நுனியை வாயருகில் கொண்டு வந்து ஃப்பூ ஃப்பூ ஃப்பூ என்று ஊதினார் அப்புறம் ஒவ்வொன்றாக திரும்பவும் உருவிய இடத்திலேயே சொருகினார் அதனைத் தொடர்ந்து ஃபேக்ஸ் மெஷினை ஆன் செய்தார். ம்ம்ம்ம்ம்ஹும் மல்லுக்கட்டிய மெஷின் மறியலை திரும்பப் பெறவில்லை.

அவரும் சற்று யோசித்து விட்டு தனது லேப்டாப்பை எடுத்தார் அவசரமாக ஆன் செய்தார், அதிலிருந்து ஒரு யுஎஸ்பி கேபிளை எடுத்து மெஷினோடும் லேப்டாப்போடும் இணைத்துக் கொண்டார், நானும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தேன் அவரது லேப்டாப்பில் இருக்கும் ஃபோல்டர்களை திறப்பது மூடுவதும் அதனுள்ளே இருக்கும் ஃபைல்களை மாறி மாறி காப்பி பேஸ்ட் செய்து கொண்டிருந்தார். அதன் பின்னர் மீண்டும் ஃபேக்ஸ் மெஷினை ஆன் செய்தார் எந்த முன்னேற்றமும் இல்லை...

உடனே சர்வீஸ் ரிப்போர்ட் புக்கை எடுத்தார் நிறைய எழுதினார் அப்புறம் மேனேஜரிடம் சென்று கையெழுத்து வாங்கி விட்டு சென்றும் விட்டார். ஆனால் மெஷின் வேலை செய்யவில்லை என்று அலுவலகத்தில் முடிவும் செய்யப்பட்டுவிட்டது.

நானும் சாதரணமாக ஃபோக்ஸ் மெஷின் பக்கம் சென்றேன் பளிச்சென்று தெரிந்த error என்ன வென்று தெரிந்ததும் மூன்றடுக்கு தகடுபோலிருந்த டிரேயில் ஒன்றை கழட்டிவிட்டு அங்கிருந்து சிறிய காகிதத் துண்டு ஒன்றை வெளியில் எடுத்து விட்டு மீண்டும் மாட்டினேன் மெஷின் வேலை செய்யத் துவங்கியது.

அப்புறம் அந்த சர்வீஸ் ரிப்போர்ட்டை வாங்கிப் பார்த்தேன் அதில் எழுதியிருந்தது "system error, hardware problem, parts need to change" என்று பட்டியல் நீண்டது அதாவது மாசா மாசம் தஞ்சாவூர் பட்டுக்கோட்டைக்கு போயி டாக்டரிடம் வாங்கி வரும் மருந்துச் சீட்டில் எழுதியிருக்கும் மாத்திரைகள் போல் நீண்ட லிஸ்ட் !

ஆனா ஒரு விஷயம் புரிந்தது ! களிமண்ணு வைத்தும் அடுக்குமாடிகள் கட்டலாம் அங்கே மழை பெய்யாத வரை என்று !

இப்படியுமா இருப்பாய்ங்க !?

- அபுஇபுறாஹிம்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு