Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label பின்னூட்டவாதி. Show all posts
Showing posts with label பின்னூட்டவாதி. Show all posts

அறிவியல் பாங்கு 1

அதிரைநிருபர் பதிப்பகம் | June 07, 2016 | , ,

கீழக்கரை ஜும்மா பள்ளி - 

கிபி 630 ல் கட்டப்பட்ட பள்ளிவாசல். தமிழகத்தின் முதலாவது பள்ளிவாசல். பின்னர் இஸ்லாம் பரவ பரவ சில நூறு வருஷங்களில் காயல்பட்டினம், ஏர்வாடி, மதுரை, அதிரை, நாகூர் என பல ஊர்களில் பள்ளிவாசகள் முளைத்தன.

கடிகாரம் - 
கிபி 1510 ல் உருவாக்கப்பட்டு... சிறிது சிறிதாக செம்மைப்படுத்தப்பட்டு... மணி, நிமிடம், வினாடி எல்லாம் பகுக்கப்பட்டு, 1656 ல் பெண்டுலம் சேர்க்கப்பட்டு உலகளவில் பலரால் ஏற்கப்பட்டது. அதன்பின் இந்த கடிகாரம் செய்யப்பட்டு... சந்தைக்கு விற்பனைக்கு வந்து உலகெங்கும் செல்வந்தர்களின் வீட்டில் இன்றியமையாத கெளரவ பொருளாக இன்னும் இன்னும் அதிக பிரபலமானது.


இனி சிறுகதைக்குள் செல்வோம்.

தலைப்பு :  அறிவியல்பாங்கு

சுமார் 300 ஆணடுகளுக்கு முன்னால் தமிழகத்தில் நடந்திருக்க அதிக வாய்ப்புள்ள 'உண்மைச்சம்பவமாக' இருந்திக்க வேண்டியது. ஆதாரமில்லை என்பதால்... கற்பனைக்கதை ஆனது. கதையே கற்பனை எனும்போது, கதையில் வரும் பெயர்கள் அனைத்தும் கற்பனையே.

---------------------o0o--------------------

முஹம்மத் அபூபக்கர் காகா... பலநூறு வருஷமாக இயங்கிவரும் அப்பள்ளியின் மோதினார், இவர்தான்.

சுமார் 40 வருஷமாக அங்கே பாங்கு சொல்கிறார். அவருக்கு அப்படி ஒரு கணீர் குரல். அவ்வூரிலேயே அப்படியொரு பெருங்குரல் உச்சஸ்தாயி தம்கட்டல் வேறு எவருக்கும் இல்லை எனலாம். தனது குரலால் மட்டுமல்ல... பாங்கு சொல்ல துல்லியமாக நேரத்தை கணக்கிடுபவர் என்றும் அவ்வூரில் மட்டுமின்றி சுற்றுப்புற ஊர்களிலும் இவர் பலராலும் வியந்து பாராட்டப்பட்டவர்.

இரவில் சீக்கிரம் உறங்கி, விடியும் முன்னரே, தஹஜ்ஜத் தொழ எழுந்து விடுவார். எழுந்த உடனே ஒழு செய்துவிட்டு... அவர் பள்ளியின் மினாரா மேடைக்குத்தான் ஏறுவார். அது 50 படிகள் உயரே கட்டப்பட்டது. அதிலிருந்து பார்த்தால்... கிழக்கும் மேற்கும் தொடுவானம் வரை மிகத்தெளிவாக தெரியும். இதிலே ஏறித்தான் ஏகப்பட்ட முறை, ரமளான், ஷவ்வால் பிறைகளை கண்டு அறிவித்துள்ளார்.

சுபுஹில், அதில் ஏறி, ஏதேனும் வெள்ளை கீற்று கிழக்கே தெரிகிறதா எனப்பார்ப்பார். இல்லை எனில், மினாராவிலேயே தஹஜ்ஜத் தொழுவார். அங்கே உச்சியில் ஒருவர் தொழுது கொள்ள மண்டபத்தில் மேடை போன்ற இடம் இருந்தது. ஒவ்வொரு இரண்டிரண்டு இரக்கத்து முடிந்தவுடன் ஒருமுறை கிழக்கே பார்ப்பார். மெலிதாக வெளிச்சம் தெரிய ஆரம்பித்தால், (கருப்பு நூலில் இருந்து வெள்ளை நூல் தெளிவாகும் போல் தெரிந்தால்...) வித்ர் ஒரு இரக்கத் தொழுது விட்டு... முடிந்தவரை மிகச்சத்தமாக மினாராவில் இருந்து ஸுபுஹ்க்கு பாங்கு சொல்வார்.

அத்தெருவில் மட்டுமின்றி, பக்கத்து தெருவிலும் கூட, பலரையும் அவரின் குரல் அதிகாலை தொழத்துயில் எழுப்பும்.

அபூபக்கர் காகா, மற்ற தொழுகைகளுக்கு பாங்கு சொல்வதும் மிகவும் அலாதியானது. பள்ளிக்குள்ளே ஒரு இரும்பு கம்பத்தை நட்டு வைத்திருப்பார். அதன் நிழல் அதன் அடியிலேயே விழுவதுக்காக காத்திருப்பார். பின்னர்... ஒழு செய்துவிட்டு... வந்து பார்ப்பார். அவர் எதிர்பார்த்த படியே... நிழலானது மேற்குப்புறமாக சற்று நகர்ந்து இருக்கும். மினாராவில் ஏறி ளுஹர்க்கு பாங்கு சொல்வார்.


இப்படித்தான்... அசர் வக்துக்கு, அவர் நட்டுவைத்த கம்பத்தின் அதே அளவுக்கு மேல்திசை தரையில், ஒரு கல் வைத்திருப்பார். இந்த கம்பத்தின் நிழலானது சிறிது சிறிதாக வளர்ந்து... அந்த கல்லை தொடும். அவ்வளவுதான்... உடனே... மினாரா ஏறி அசர்க்கு பாங்கு சொல்வார்.

பஜ்ர் போலவே... சூரியன் மறைவுக்காக மினாராவில் ஏறிநின்று காத்திருப்பார். முழுதாக சூரியன் தொடுவானில் இறங்கி அந்தி சாய்ந்து மறைந்தததும் மக்ரிப் பாங்கு சொல்வார்.

அதேபோல... இஷா...வுக்கும் மினாராவில் ஏறி, மேற்கே செவ்வான வெளிச்சமே இன்றி முழுதாக இருட்டாகி விட்டதா...என்று பார்த்துவிட்டு இஷாவுக்கு பாங்கு சொல்வார்.


இதுதான் இவரது தினசரி வாழ்க்கை. பெரும்பாலும்... பள்ளியின் முதல் சப்பிலும்... மினாராவிலுமே கழிந்தது. ஆம், மோதினார்களுக்காகவே கட்டப்பட்டவை மினாராக்கள். இன்று பள்ளிக்குள்ளே மைக்கில் பாங்கு சொல்லும் மோதினாரின் பாங்கொலியை, பெருக்கித்தரும் ஒலிபெருக்கிகளின் தாங்கிகளாக உள்ளன மினாராக்கள்..!

சரி அது போகட்டும்.

இப்போது, அவ்வூருக்குள்... நமது கதாநாயகன்... ஐரோப்பாவில் தமது சொந்த மரக்கலம் மூலம் வியாபாரம் செய்யச்சென்ற முஹம்மத் அலி மரைக்காயர் பெரும் செல்வத்துடன் திரும்பி வந்தார். இவர் மிகவும் நல்லவர். ஒரு தொழுகை விட மாட்டார். மிகப்பெரிய பணக்காரரான இவரை பலரும் விரும்பினர். காரணம்... இவர்... மக்களுக்கு வாரி வாரி வழங்கும் வள்ளல் மட்டுமில்லை. குர்ஆன், ஹதீஸ் ஆகியவற்றை கற்ற ஆலிம். ஆம், இவருக்குஅரபி தெரியும். பாரசீகம் சென்று பாக்தாத் பல்கலைக்கழகத்தில் அரபி படித்து பட்டம் பெற்றவர். ஊரில் இருந்தால், ஒவ்வொரு வக்துக்கும் பள்ளிக்கு வந்துதான் தொழுவார். நேர்மையானவர். கல்விஞானி. மிகுந்த இறையச்சம் கொண்டவர்.

இப்பேற்பட்ட பிரபலம் ஊருக்குள் வந்தால்... அது சாதாரண செய்தியா..? ஊரெல்லாம் ஒரே பேச்சு. இம்முறை ஒரு வித்தியாசம். அது, எது பற்றி எனில், அவரிடம்... ஒரு அதிசயப்பொருள் இருந்தது. ஏகப்பட்டோர் அதை சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர். அப்பொருளை தன் வீட்டு வாசலில் பார்வைக்கு வைத்திருந்தார்.

ஆறடி உயரமும்... ஒன்றரை அடி அகலமும் கொண்ட அக்கருவியின் மேல்ப்புறம்... வெள்ளை யாக.. வட்டவடிவில் தட்டு போல இருந்தது. அதில், 1..2...3... என்று 12 வரை சுற்றிலும் ரோமானிய எண்களால் குறிக்கப்பட்டு இருந்தது. ஒவ்வொரு எண்ணுக்கு இடையே நான்கு சிறு கோடுகள் இருந்தன. 5, 10, 15... 60 வது கோடுகள் எல்லாமே மிக தடிமனாக பெரியாத வரையப்பட்டு இருந்ததன. அதில்... நடுவே இணைக்கப்பட்ட இரு முட்கள் இருந்ததன. ஒன்று சிறியதாகவும்... மற்றொன்று பெரியதாகவும். திடீரென பார்ப்பவருக்கு எதுவும் நகரவில்லை. அசையாமல் இருப்பதாகவே தோன்றும்.


அந்த வெள்ளை தட்டுக்கு கீழே பெரிய அறை இருந்தது. உள்ளே ஒரு வஸ்து... ( அதை பெண்டுலம் என்றார்... மரைக்காயர்...) சதா இடதும் வலதும் ஆடிக்கொண்டே இருந்தது. அதெப்படி... நிற்காமல் தொடர்ந்து ஆடிக்கொண்டே இருக்கிறது என்று அதிசயித்தனர் மக்கள்.

அது...60 முறை...ஆடியவுடன்... மேலே வெள்ளை தட்டின் மீதுள்ள பெரிய முள் ஒரு சிறு கோட்டுக்கு நகர்ந்தது. இதைக்கண்டு... சுற்றி இருந்த மக்கள் "ஹோ..ஹே...." என்று இரைச்சலுடன்.... ஆர்பரித்தனர்.

தொடர்ந்து மக்கள் எண்ணிக்கொண்டே இருந்தனர்... எதுவரை எனில்... பெரிய முள் 12 என்ற எண்ணிற்கு வரும் வரை. அட... இப்போது... இன்னொரு அதிசயம்... அனைவரும் எதிர்பார்த்த அந்த அதிசயம் நடந்தே விட்டது. ஆம்... அந்த சிறிய முள் மெதுவாக நகர்ந்து... அடுத்த எண்ணிற்கு சென்று நின்று கொண்டது.

இதுபற்றி எல்லாம் மரைக்காயர் மக்களுக்கு விளக்கி சொல்லிக்கொண்டு இருந்தார். பின்னர்... அபுபக்கர் காகா... பாங்கு சொல்லும் சத்தம் கேட்டவுடன்... மக்களுடன் சேர்ந்து பள்ளிக்கு விரைந்தார்.

சில நாட்களுக்கு பிறகு மிக அதிக விலைக்கு வாங்கிய, அந்த ஊரிலேயே படு உயர்ந்த தொழில்நுட்பப்பொருளான கடிகாரத்தை பள்ளிக்கு நன்கொடையாக அளித்தார். பலர் 'இது எதுக்கு பள்ளிக்கு..?' என்று விமர்சித்தனர். ஆனால்... 'பாங்கு சொல்ல இது அபூபக்கர் காகாவுக்கு பயன்படும்' என்றார் மரக்காயர். ஆனால், அபூபக்கர் காக்காவுக்கு இந்த மெஷின் பற்றி எவ்வளவு படித்துக்கொடுத்தாலும் புரியவே இல்லை. தொடர்ந்து கண்ணில்படும் அனைவருக்கும் கடிகாரம் பற்றி வகுப்பெடுத்தார் மரக்காயர்.

சிறிது காலம் கழித்து ஐப்பசி அடைமழைக்காலம் வந்தது. மப்புபோட்டு... பகலிலேயே இரவு போன்ற... தோற்றம் அளித்தது. சூரியனையே பகலில் பல மணி நேரம் காண முடியவில்லை. அவ்வளவு கார்முகில் சூழ்ந்து அடைமழை பொழிந்தது. வெள்ளத்தில் நடக்கையில் ஏதேனும் குழியில் விழுந்து விடுவோமோ என்று... மக்கள் பலர் பஜ்ர், மக்ரிப், இஷா போன்ற இருட்டு நேர தொழுகைகளை வீட்டிலேயே தொழுது கொண்டனர்.

ஆனாலும்...நம்ம மோதினார் அபுபக்கர் காகா... அரிக்கேன் விளக்கு ஏந்திச்சென்று பள்ளியின் மினாரா மீதேறி, பாங்கு சொல்ல தவறவுமில்லை. நம்ம முஹம்மத் அலி மரக்காயர் பள்ளிக்கு சென்று தொழத்தவறவும் இல்லை. பொதுவாக மழைக்காலத்தில் கடல் வணிகம் செய்ய போக மாட்டார். ஊரில்தான் இருப்பார்.
.
இந்த காலத்தில் தான்... மரக்காயரின் இந்த புதிய அறிவியல் கருவியினால் ஊருக்குள் புதிதாக சில பிரச்சனைகள் ஆரமபித்தன. முதலில்... பிரச்சனை முளைத்த இடம்... பள்ளிவாசல். பிரச்சனை மரைக்காயருக்கும் மோதினாருக்கும் இடையே. விஷயம் பஞ்சாயத்துக்கு வந்தது.

ஊரில் சுமார் 50 குதிரை கோச் வண்டிகளை பாண்டிய நாடு மட்டுமின்றி, சோழநாடு சேரநாடு களுக்கும் கூட...சுங்கம் கட்டிவிட்டு... பல்வேறு நாடுகளுக்கு போக்குவரத்தில் வாடகைக்கு விட்டு மற்றும் நூற்றுக்கணக்கான குதிரைகளை பாண்டிய மன்னர் படைக்கு ரெகுலராக சப்ளை செய்யும் கவர்மென்ட் காட்ராக்ட் எடுத்த குதிரைப்பண்ணை அதிபரான தனவந்தர் இப்ராஹீம் ராவுத்தர்தான் அவ்வூரின் பஞ்சாயத்து தலைவர்.

பள்ளிவாசலில் கூடிய பஞ்சாயத்து இதுதான்.

அதாவது, மோதினார் அபூபக்கர் காகா மீது... ,  மரைக்காயர் குற்றச்சாட்டு வைக்கிறார். என்ன குற்றச்சாட்டு..? நேரத்தில் துல்லியமானவர் என்று ஊரே மெச்சும் அபுபக்கர் காகா மீது...

"இவர், சரியான நேரத்தில் பாங்கு சொல்வதில்லை. உதாரணமாக... மக்ரிப்... இஷா போன்ற வக்துக்கு நிறைய நேரங்கள் முந்தியே பாங்கு சொல்கிறார். லுஹர், அசர், வக்துகளின் பாங்குகள் முன்னும் பின்னுமாக அமைகின்றன. இம்மாதம், சுபுஹுக்கு அடிக்கடி பாங்கு மிகவும் தாமதமாக சொல்கிறார்" என்றார்.

மொத்த பஞ்சாயத்தும்... நம்ப முடியாமல் மரக்காயரை பார்த்தன. இவருக்கு ஏதோ மறை கழண்டு விட்டதாக பலரும் உணர்ந்தனர். இருந்தாலும்... பஞ்சாயத்து தலைவர், ராவுத்தர் கேட்டார்.

"அதெப்படி மரக்காயர் சொல்றீங்க. குற்றச்சாட்டுக்கு ஆதாரம் என்ன...?" என்றவுடன்...

கூட்டத்தினரை சற்று விலக்கிவிட்டு... தனது "#கடிகாரம்" என்ற அந்த கருவியை காண்பித்தார்.

"பாருங்கள்... இதுதான் கடிகாரம். நேரத்தை துல்லியமாக் காட்டக்கூடியது. ஒருநாளுக்கு 24 மணி நேரம். இரண்டு முறை சிறிய முள் முழுதாக சுற்றினால் ஒருநாள்.  இதிலே அரை நாள் உள்ளது. அதாவது, 12 மணி நேரம். ஒருமுறை பெரிய முள் முழுதாக சுற்றினால் அது, ஒரு மணி நேரம் எனப்படும். ஒரு மணிக்கு 60 நிமிஷம். இது பெண்டுலம். இது 60 முறை இருபக்கமும் ஆடினால் அது ஒரு நிமிஷம். நான் என்ன செய்தேன் எனில், 12 மணியை நண்பகலாக்கிக்கொண்டு, கடந்த சில மாதங்களாக நமதூர் நேரத்தை சூரிய உதயம், அஸ்தமம் கொண்டு நான் கணக்கிட்டு வருகிறேன். சாசரியாக இவ்வாரம், 6:20 மணிக்கு சூரிய உதயமாகிறது. 6:10 மணிக்கு சூரியன் மறைகிறது.

அதன்படி,

முந்தாநாள்... பஜ்ர் 5:00 க்கு பாங்கு சொன்னார். நேற்றோ... 6:10 மணிக்கு பாங்கு சொன்னார். இன்று... 5:30 க்கு சொன்னார். இப்படி ஒவ்வொரு நாளும் இந்தளவுக்கு முன் பின்னே பஜ்ர் வக்த் நேரம் மாற வாய்ப்பே இல்லை. ஏனெனில்... சூரிய உதயம் இப்படி எல்லாம் மாறாது. கோள்கள் அதனதன் வரையறையில் துல்லியமாக இயங்குவதாக அல்லாஹ் சொல்கிறான். கோடை- குளிர் காலங்களுக்கு ஏற்ப, அரை அல்லது ஒரு நிமிடம் மட்டுமே தினமும் உதய - அஸ்தமன நேரம் மாற வாய்ப்புள்ளது. இதுகூட, 6 மாதம் கழித்து பழைய படி திரும்பி விடும் என்று எதிர்பார்க்கிறேன். இது தற்போது எனது ஒருவருஷ ஆய்வில் உள்ளது. எனவே, நான் சொல்லவருவது... இவரால், நாம் தவறான நேரத்தில் தொழுகிறோம். இந்த அறிவியல் கடிகாரத்தின் படி பாங்கு சொன்னால் வக்த் நேரத்தவறை தவிர்க்கலாம். இதை நான் எவ்வளவு சொல்லியும் இவர் கேட்பதாக இல்லை. இதுதான் அறிவியல்."  
அங்கிருந்த எல்லோருக்கும் இவர் சொல்வதே விளங்கவில்லை. பலர் சிரித்தனர்.

ஆனாலும் மரக்காயர் தொடர்ந்தார். "அடுத்து... ளுஹர் மற்றும் அசர் தொழுகைக்கான பாங்குகளை சூரியன் வானில் ஒளிர்ந்து கொண்டு இருந்தால், சரியான நேரத்தில் பாங்கு சொல்கிறார். ஆனால், கார்மேகம் திரண்டு... மப்பு போட்டு சூரியனை மேகம் மறைத்து மழை பெய்து கொண்டிருந்தால்... தவறான நேரத்தில் பாங்கு சொல்கிறார். அதுவும், அரை நாழிகை... ஒரு நாழிகை... அளவுக்கு முன்னே பின்னே பாங்கு சொல்கிறார்.
இதெல்லாம் கூட பரவாயில்லை. போன வாரம், ஆஷுரா நோன்பு அன்று, மக்ரிபுக்கு 45 நிமிஷம்... எப்படி சொல்வது என்றால்... அதாவது... அடுப்பு மூட்டி, விறகை பற்றவைத்து... சட்டியில் தண்ணீர் கொதிவந்து...அரிசி போட்டு, வெந்து... சோறு வடித்து... பரிமாறும் நேரம் அளவுக்கு.....முன்னதாக பாங்கு சொல்லி... அன்று பலரின்... ஆஷுரா நோன்பையே பாழ்படுத்தி விட்டார். இவர் பாங்கை கேட்டு... என் வீட்டில் பெண்கள் நோன்பு திறந்து விட்டனர். ஆனால், உண்மை அறிந்த நான் திறக்கவில்லை. எனக்கு தெரியும்... இன்னும்ம் நோன்பு திறக்க நேரம் உள்ளது என்று. இவரிடம் ஓடிவந்து...கேட்டால், சூரியன் மறைந்து விட்டதாக சொல்கிறார். இல்லை, மேகத்துக்கு பின்னே சூரியன் மறையாமல் உள்ளது என்கிறேன் நான். மாலை 5:25 க்கு மறைந்திருக்க சாத்தியமே இல்லை".

இங்கே, உடனே இடை மறித்தார்... நம்ம மோதினார் அபூபக்கர் காகா.

"நிறுத்துங்க மரக்காயர் தம்பி... அதெப்படி 'சாத்தியமே இல்லை' என்று சொல்கிறீர்கள்..? பறவை போல மேகத்துக்கு மேலே பறந்து பார்த்து விட்டு வந்தா சொல்கிறீர்கள்...? சூரியன் மறைந்திருக்க வில்லை என்று உங்களால் அல்லாஹ்மீது சத்தியம் செய்ய முடியுமா..? கொஞ்சம் நம்பும்ம்படி பேசுங்கள் மரைக்காயரே. ஆலிமாச்சேன்னு... உங்களை பெரிய மனுஷனாக மதிச்சுத்தான் இந்த கூட்டத்தை கூட்டியுள்ளோம். எவனோ கண்டுபிடித்த கருவியின் மீது ஈமான் கொண்டு, எங்களை கேவலப்படுத்தி விடாதீர். நான் இறையச்சத்துடன் சூரியன் மறைந்து விட்டது என்று உறுதி செய்த பின்னரே பாங்கு சொன்னேன்."

"இல்லை காகா, எனது கடிகாரம் சரியாக ஓடிக்கொண்டுள்ளது. அதன்படிதான் உங்களின் வக்த் பாங்கு தவறு என்கிறேன். மேலும், புகழ்பெற்ற பாக்தாத் இஸ்லாமிய பல்கலைக்கழக அறிஞர்கள் கூட ஏகமனதாக ஒன்று கூடி, முடிவெடுத்து, இதனடிப்படையில் தான் பாராசீகத்தில் பாங்கு சொல்லப்படுகிறது. கலீபா கூட.. விரைவில் இதை ஆமோதிக்க இருக்கிறார் என்று என்னிடம் துருக்கியில் ஒரு கல்லூரி பேராசிரியர் சொன்னார். கடிகார அறிவியல் அடிப்படையில் நாம் மார்க்கத்தை இன்னும் சிறப்பாகவும் சரியாகவும் பின்பற்றலாம். இஸ்லாமிய உலகில் இன்று பலரும்  'அறிவியல் பாங்கு' ஐ ஏற்று வருகிறார்கள். நாம் ஏன் இன்னும் இதில் பின்தங்கி இருக்கவேண்டும்..? அறிவியலில் முனேற்றம் காண வேண்டாமா..? அதன் மூலம் மார்க்கத்தை இன்னும் எளிமையாக பின்பற்ற நமக்கு இந்த கருவி உதவும். இக்கருவி, அபூபக்கர் காகாவின் வேலைப்பளுவை மிக மிக எளிதாக்குமே அன்றி, இன்னும் வக்த் நேரத்தை தவறின்றி மிகவும் துல்லியமாக்குமே அன்றி, மார்கக்த்தை ஒருக்காலும் மாற்றிவிடாது. இதை நாம் நன்கு புரிந்து கொள்ளவேண்டும். சுமார், இரண்டு மாதகாலம், நான் என்வீட்டில் வைத்து... பாங்கு நேரங்களையும் சூரியன் நிலைகளையும் நன்கு ஒப்பிட்டு, தெளிவாக ஆராய்ந்து விட்டுத்தான் பள்ளியில் கொண்டு வந்து வைத்தேன். வக்த் அறிய பயன்படுமே என்ற இந்த நல்ல எண்ணத்தில் தான்... இவ்வளவு பெருந்தொகை போட்டு வாங்கிய இந்த பொக்கிஷத்தை சோழனிடமோ பாண்டியனிடம் கூட இல்லாத பொக்கிஷத்தை... நம் பள்ளிக்கு வக்ப் பண்ணினேன். இதைப்பின்பற்றி பாங்கு சொல்வதும்... சூரியனின் ஓட்டத்தை பின்பற்றி அதிகாலை வெளிச்சம், சூரிய உதயம், பொருளின் நிழல், சூரிய அஸ்தமனம், செவ்வான வெளிச்சமின்றி இருளாதல்... இப்படி... நேரில் கண்டுவிட்டு பாங்கு சொல்வதும் ஒன்றுதான். ஒன்றுதான். ஒன்றுதான். என்று... இதை பயன்படுத்திக்கொள்ள மறுக்கும் அபூபக்கர் காகாவுக்கும், மற்றும் இமாம்சாப் அப்துல் காதற் ஆபீசாவுக்கும் எவ்வளவோ இதை புரிய வைத்தும் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். இதுபற்றி... நான் உங்களுக்கு மட்டுமல்ல... பஞ்சாயத்தில் எவருக்கும் பொறுமையாக விளக்கத் தயாராக உள்ளேன் ராவுத்தர் பாய்..."

ராவுத்தர், இமாமாக உள்ள அப்துல் காதற் ஆபீஸாடன் கலந்தாலோசித்தார். அவர், தமது ஆசிரியரான, அப்துல் ரஹ்மான் லெவ்வை அவர்களை கலந்தாலோசித்தார். பின்னர் லெவ்வையின் சில மாணவர்கள், ராவுத்தரிடம் பேசினார்கள்.

பின்னர் ராவுத்தர் தீர்ப்பளித்தார்.

"போதும் மரக்காயர். உங்கள் விளக்கம் இனி தேவை இல்லை. எவனோ, ஐரோப்பியன் கண்டுபுடிச்ச கடிகாரத்தை வைத்தெல்லாம்... மார்க்கத்தில் நாம் பாங்கு சொல்ல முடியாது. இதில், உங்கள் கருத்தை நமதூர் உலமா சபை நிராகரிக்கிறது. அதை உலகின் மற்றவர்கள் செய்கிறார்கள் என்கிறீர்கள். அது உண்மையா என்று தெரியாது. உண்மை என்றாலும்... கிலாபத்தின் கீழ் வராத நாம் அவர்களை பின்பற்ற தேவை இல்லை. நாம் நபிவழியை மட்டுமே பின்பற்றுகிறோம். சமீபத்தில் பல கலீபாக்கள் நபிவழியில் ஆட்சி செய்யவில்லை எனற வரலாறை எல்லாம் நீர் அறியாதவரல்லர். ஆக, அவர்கள் செய்வது போல நாம் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. நபி எதை நமக்கு சொன்னார்களோ அதை செய்வோம். மாற்ற வேண்டாம். பிலால் ரலி அவர்கள் எதனடிப்படையில் பாங்கு சொன்னார்கள்..? அப்துல்லாஹ் இப்னு உம்முமக்தூம் ரலி அவர்கள் எதனடிப்படையில் பாங்கு சொன்னார்கள்..? பின்னர் வந்த சஹாபாக்கள் எல்லாம் எப்படி பாங்கு சொன்னார்கள்..? அதன்படித்தான்... நபிவழியில் நம் அபுபக்கர் காகா பாங்கு சொல்கிறார். நீங்கள்.. புதிய பித்அத்தாக இந்த 'நாசமாப்போன முசீபத்தை' ஐரோப்பிய சந்தையில் இருந்து கப்பலில் தூக்கி கொண்டுவந்து... அதை பள்ளியில் வைத்து... வக்பு செய்யிறேன்னு சொல்லி... உங்களின் பணத்திமிரை எங்களுக்கு காட்டுகிறீர்களா..? ஏன், நாங்களும் இதை சீமையிலிருந்து தருவிக்க முடியாதா..? எங்களிடம் பணம் இல்லையா..? முடியும். இதனால் என்ன பயன்..? பயனே அற்ற இதுபோன்ற ஆடம்பரப்பொருட்களை வாங்குவதில் செலவழிக்கும் உங்கள் காசை... சதகா - தான தருமம் தந்தாலாவது... நாப்பது ஏழைகள் வாழ்க்கை வளம் பெரும். இன்றே இதை இங்கிருந்து எடுத்துக்கொண்டு ஓடுங்கள். வீணாக, மார்க்கத்தில் குழப்பத்தை உருவாக்கும் பித்னா பசாதாக மாறிவிடாதீர்கள். இதுவரை நடந்ததை மன்னிக்கிறோம். இனி... இதுபோல ஒரு கருவியை பள்ளிவாசலுக்குள் கொண்டு வரக்கூடாது என்று தீர்ப்பளிக்கிறேன்..! ஒவ்வொரு முஸ்லிமுக்கும் குர்ஆன் சுன்னாதான் முக்கியம். நவீன பித்அத்கள் அதன் புனிதத்தன்மையை கெடுக்க ஒருக்காலும் அனுமதிக்க மாட்டோம். அநியாயமாக அபூபக்கர் காகாவின் இறைப்பணியின் மீது ஆதாரமின்றி களங்கம் கற்பித்து அவதூறு கூறிய குற்றத்துக்கு, நமது பள்ளிக்கு, நீங்கள் 7 ரூபியாக்கள் அபராதம் செலுத்த கட்டளை இடுகிறேன். இத்துடன் இந்த சபை கலைகிறது..... அஸ்ஸலாமு அலைக்கும்..!"

--------------------o0o------------------------

இன்று உலகின் அல்மோஸ்ட் அனைத்து பள்ளிவாசலின் மோதினார்களும் கடிகாரத்தை பார்த்துத்தான் பாங்கு சொல்லிக்கொண்டுள்ளார்கள். அல்மோஸ்ட் உலகின் எல்லா பள்ளிவாசல்களிலும் கடிகாரம் தொங்கிக்கொண்டுள்ளது. இதில், இன்னும் ஒருபடி மேலே போய், பாங்கு சாப்ட்வேர் போட்டு... டிஜிட்டல் கடிகாரமே (மொபைல், கம்ப்யூட்டர், வாட்ச், வால்கிளாக், என்று....) உலகெங்கும் இப்போது பாங்கு சொல்லிக் கொண்டுள்ளது.


எனினும்... அக்காலத்தில் கடிகாரமே இன்றி... தினமும் ஐவேளை சூரியனை கவனித்து கவனித்து அளந்து அளந்து ஆய்ந்து ஆய்ந்து பாங்கு சொன்ன உலகின் அனைத்து மோதினார்கள் மீதும் இறைவனின் பேரருளும் பெரும் கிருபையும் இறங்கி அவர்களின் உழைப்புக்கான நற்கூலியை பன்மடங்காக்கி மறுமையில் தந்து, மேலும் உயர்வான அந்தஸ்து வழங்கிட இருகரம் ஏந்தி பிரார்த்திக்கிறேன்... இறைவா..!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~

மக்கள்தொகையா? மனிதவளமா? 6

அதிரைநிருபர் பதிப்பகம் | May 23, 2015 | , , ,

இந்திய வரலாற்றில் 1985, செப்டம்பர் – 26’ம் தேதி ஓர் அதிசயம் நிகழ்ந்தது. அது என்ன?


இவையால்தான் அது இங்கே இல்லை... 

அவை இல்லை என்பதால்தான் இது எல்லாம் இங்கே இருக்கு...

என்பது தவறான புரிதல்.

ஓர் ஏழை எளியவனுக்கு, தன் வீட்டின் வாசலுக்கு முன்னாலுள்ள ஒரு பெரிய பாறாங்கல், இலகுவாக சென்றுவர இடைஞ்சலாக இருக்கிறது, . அதை அப்புறப்படுத்த இவனுக்கு போதிய பலமில்லை. அண்டை அயலாருடன் நட்புறவு பேணாததால் உதவுவார் எவருமில்லை. இப்படி ஆண்டுகள் உருண்டோட... ஒருநாள், அவ்வழியே வந்த ஒரு நிலவியல் விஞ்ஞானி ஒருவர், அந்த கல்லை சோதித்துவிட்டு, அது முழுக்க முழுக்க தங்கம் என்கிறார். மேலும், “இந்த பொக்கிஷத்தை விளங்காமல் ‘மதிப்பற்றது’ என்று தவறாக எண்ணி இத்தனை காலம் வெளியே போட்டுள்ளாயே, வீட்டினுள்ளே பத்திரப்படுத்தி உபயோகித்து செல்வந்தன் ஆக வேண்டியதுதானே?” என்கிறார்.

ஒரு நிமிஷம் எண்ணிப்பாருங்கள், அந்த ஏழை மனநிலையில்... இது போன்ற ஓர் அதிசயம்தான் 1985, செப்டம்பர் – 26 அன்று நடந்தது. அதுதான் என்ன?

மக்கள்தொகையில், 1950-ல் சுமார் 37 கோடியாக இருந்த நாம், 1960 –ல் சுமார் 45 கோடியாக மாறியபோது, அரசு “முக்கனிகள் மூன்றே நன்று” என்று பிரச்சாரம் செய்தும், 1970-ல் சுமார் 56 கோடியானோம். சளைக்காத அரசு “நாம் இருவர் நமக்கு இருவர்” என்றது. ம்ஹூம்... 1980-ல் சுமார் 70 கோடியாகிவிட்டோம். ‘விடமேட்டேண்டா’ என்று அரசும் “ஒளிமயமான வாழ்வுக்கு ஒன்றே நன்று” என்று சொல்ல ஆரம்பித்தது. அவ்வளவுதான் ஊடகங்களும், மக்களும், “அப்போ 1990-ல ஒண்ணுமே பெத்துக்க வேணாம்-னு சொல்லுவாகளோ” என்று கவலையுடன் கிண்டலடித்தன. இக்கிண்டலை மக்கள் மறந்துவிட்டாலும், துறை சார்ந்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளை உறுத்தி இருந்திருக்கும்போல..! உடனே ரூம்போட்டு சில ஆண்டுகள்(?) யோசித்ததன் விளைவுதான் 1985, செப்டம்பர்–26 ல் நடந்த அதிசயம். அது என்னன்னா...

‘அதை’, இந்த அதிகாரிகள் 'இரும்புமனுஷி' இந்திராகாந்தியிடம் சொல்ல பயந்தார்களா அல்லது அவர் ஏற்றுக்கொள்ளவில்லையா என்று தெரியவில்லை. ஆனால், பைலட்டாக இருந்து ‘திடீர் பிரதமரான’ ராஜீவ்காந்தியிடம் ‘அது’ சொல்லப்பட்டபோது அவர் அதை புரிந்து வரவேற்று உடனடி செயல்திட்டம் நிறைவேற உறுதுணையாற்றி அந்த அதிசயம் சாத்தியமாக கையொப்பமிட்டது என்னவோ பிரதமர் ராஜிவ்காந்திதான். அதன் விளைவாக, 1985, செப்டம்பர் – 26 அன்றுதான்...  

....அதுவரை ‘கல்வி அமைச்சகமாக’ இருந்து வந்தது... ‘மனித வள மேம்பாட்டு அமைச்சகமாக’ ஏற்றம் பெற்றது.

‘சரி, இதிலென்ன அதிசயம்?’ என்கிறீர்களா? இல்லை. என்ன காரணத்துக்காக மாற்றப்பட்டது என்பதில்தான் அதிசயம் அடங்கி உள்ளது. அதாவது... அன்றுவரை 'நாட்டு முன்னேற்றத்துக்கு பெரும் இடைஞ்சலாக இருக்கிறது' என்று கருதப்பட்ட இந்திய ‘மக்கள்தொகை என்ற பாறாங்கல்’... 'இல்லை அது நம் நாட்டின் ஒரு பொக்கிஷ வளம் என்ற.... தங்கமலை’ என்று உணரப்பட்டது.  


----இந்த மனமாற்றத்தைத்தான் அதிசயம் என்கிறேன்.

“அதெப்படி மக்கள்தொகை, ‘மனிதவளம்’ என்ற ‘நாட்டின் ஒரு வளம்’ என்று கருதப்படும்?” என்று நீங்கள் நினைக்கலாம். ஒரு குட்டிக்கதை பார்ப்போம்.

ஒரு பெற்றோர்–(A) இருக்கின்றனர். அவர்களுக்கு ஐந்து பிள்ளைகள். வறுமையாலோ, கல்வி பற்றிய விழிப்புணர்வு இல்லாததாலோ, பெற்றோரின் அறியாமையாலோ, சரியான வழிகாட்டப்படாததாலோ, பிள்ளைகளின் முயற்சியின்மை மற்றும் தவறினாலோ... அவர்களின் ஐந்து பிள்ளைகளுமே கல்வி அறிவற்றவர்களாக வளர்ந்து விட்டனர்.

இன்னொரு பெற்றோர்-(B) இருக்கின்றனர். ஓரளவு நடுத்தர வர்க்க அளவுக்கு செல்வம் இருந்ததாலோ, கல்வி பற்றிய விழிப்புணர்வு ஊட்டப்பட்டதாலோ, பெற்றோரின் கடும் உழைப்பினாலோ, சரியான வழிகாட்டலாலோ, பிள்ளைகளின் கடும் முயற்சியாலோ அவர்களின் ஐந்து பிள்ளைகளுமே கல்வி அறிவு பெற்றவர்கள் மட்டுமல்ல, நல்ல உயர்படிப்பு படித்து விஞ்ஞானியாக, மாவட்ட ஆட்சி அதிகாரியாக, மருத்துவராக, பொறியியல் வல்லுனராக, கல்லூரி பேராசிரியராக... என்று ஐவருமே பிரம்மானடமாய் உயர்ந்து விட்டனர்.

இன்னொரு பெற்றோர்–(C) பற்றி கடைசியில் பார்ப்போம்.

ஆக, 

முதல் பெற்றோர்–(A) நாட்டுக்கு விட்டது ‘மக்கள்தொகை’.! 

இரண்டாம் பெற்றோர்-(B) நாட்டுக்கு ஈந்தது ‘மனிதவளம்’.!

இப்போது புரிந்திருக்குமே?

'ஹலோ..'  

கொஞ்சம் பொறுங்க... ' 

ஒரு நிமிஷம்'  

பொறுக்க மாட்டீங்களே... அப்படி என்னதான் கேட்கனும்கறீங்க? சரி.. கேளுங்க.

“அவனவன் ஏழையாக சோத்துக்கே 'ததுங்கினத்தோம்' போடும்போது நாட்டுக்கு மனிதவளம் எப்படி கொடுக்க முடியும்?” 

---மிகச்சரியான கேள்வி...! 

இது நிச்சயமாக அரசே தீர்க்க வேண்டிய பிரச்சினை. அந்த ‘பெற்றோர்(A)-யின் பிள்ளைகளை எப்படி மனிதவளமாக மாற்றுவது’ என்பதுதான் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் முக்கிய பணி. அதற்கு அவர்கள் கையில் எடுத்த ஆயுதங்கள்தான் இலவச கல்வி, கட்டாய ஆரம்ப கல்வி, மதிய உணவு, சத்துணவு, முதியோர் கல்வி, இலவச பஸ்/ரயில் பாஸ், ஸ்காலர்ஷிப், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, அஞ்சல்வழிகல்வி, மாலை கல்லூரி, பகுதிநேர கல்வி, தொலைதூர கல்வி, கல்வியை முழுத்தனியார் மயமாக்காமை, தாய்மொழிவழிக்கல்வி, அறிவொளி இயக்கம், அரசு மாணவர் விடுதி, ஆசிரியர்களுக்கு நல்ல ஊதியம், குறிப்பாக கல்லூரி பேராசிரியர்களுக்கு யுஜிசி பே ஸ்கேல், இவ்வருடம் இயற்றப்பட்ட (6-14 வயது குழந்தைகளுக்கான) கல்வி உரிமை சட்டம் என்று இப்படி நிறைய சொல்லலாம்.

இவை எல்லாமே அன்று யோசித்ததன் விளைவுதான். அதாவது... மேம்பட்ட, தரமான, நவீன, சிறந்த கல்வி அறிவு ஒன்றுதான் மக்கள்தொகையை அது எவ்வளவு பெருகினாலும் மனிதவளமாக மாற்றிவிடும் என்ற முடிவு எடுத்ததன் விளைவுதான்.... இன்று நாம் காணும் இந்தியாவிற்கும் எண்பதுகளின் ஆரம்பத்தில் இருந்த இந்தியாவிற்கும் உள்ள வித்தியாசம். ‘வேலையில்லாத்திண்டாட்டம்’ என்ற ஒரு சொல்லை கேட்பது இப்போது அரிது. அதுதான் முக்கிய வித்தியாசம். எழுபதுகளில் பத்தில் எட்டு சினிமாக்கள்/நாவல்கள்/சிறுகதைகள் அதைப்பற்றித்தான் பேசும். இப்போது ஒன்று கூட அதைப்பற்றி பேசுவதில்லை. எல்லாருக்கும் வேலை கிடைத்துவிட்டதா? இல்லை.! ‘அதெல்லாம் கிடைத்துவிடும்... இது ஒரு பெரிய முக்கிய பிரச்சினை இல்லை’ என்ற அளவுக்கு வேலை வாய்ப்புக்கள் அதிகரித்து இருப்பதே, மக்களுக்கு தன்னம்பிக்கை தந்துவிட்டது. 

ஆக, Population Census-2010 -ல் மக்கள்தொகை அதிகரித்தால் ரொம்ப கவலை பட வேண்டியதில்லை. 

எத்தனையோ நாடுகள், மக்கள்தொகையை 'பெருக்க' எப்படியல்லாமோ முயற்சி எடுக்கின்றன தெரியுமா?

ரஷ்யாவில் அடுத்த பத்துவருஷ குறிக்கோள் மக்கள்தொகையையை எப்படி பெருக்குவது என்பதுதான்..!

சுவீடனில், சம்பளத்துடன் கூடிய 'மெட்டர்நிடி லீவ்' 16  மாதங்கள்..!

குழந்தை பெற்றால்... பிரான்ஸ்,இத்தாலி,ஜெர்மனி,போலந்து போன்ற நாடுகள், போனஸ் தருகின்றன...! அதுவே, ஜப்பானில்  இன்செண்டிவ் தருகிறார்கள்.

சிங்கப்பூரிலோ, முதல் குழந்தைக்கு 3000 டாலர். இரண்டாவதுக்கு... 9000 டாலர். அடுத்ததுக்கெல்லாம் 18000 டாலர் அரசு தருகிறதாம்.

ஆக, குழந்தையற்றவர்களுக்குத்தான் குழந்தையின் அருமை தெரியும். மக்கள்தொகை குறைந்து வரும் நாட்டுக்குத்தான் அதன் அருமை புரியும்.

'மக்கள்தொகைப்பெருக்கம்' என்றாலே அதன் தீமைகள் பற்றி மட்டுமே கேட்டும், பேசியும், படித்தும் எழுதியும் வந்து இருக்கிறோம். அதனால் ஏற்பட்ட நன்மைகள்தான்... மிக மிக அதிகம்...! ஆமாம்..! இப்போது நம் கண் முன்னே பார்த்துவரும் அனைத்து நவீன முன்னேற்றங்களும் மக்கள் தொகைப்பெருக்கத்தால் விளைந்தவையே என்பதை எப்படி மறந்தோம்? ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்புகளுமே மக்கள்தொகையின் தாக்கத்தால் வந்த அத்தியாவசிய தேடல்தானே? தரைவழி, கடல்வழி, ஆகாயவழி வாகனங்கள், அச்சு இயந்திரம், தொலைத்தொடர்பு சாதனங்கள், தகவல்தொழில்நுட்பம், இணையம், விவசாயபுரட்சி (ஒரே நாளில் விதைத்து முளைத்து அறுவடை செய்யும் ஒரு புதுரக நெல்லும் வருங்காலத்தில் வரலாம் -- அது அப்போதைய மக்கள்தொகை பெருக்கத்தையும் அரிசியின் தேவையையும் பொறுத்தது)... என்று எல்லாமே மக்கள் தொகைப்பெருக்கத்தின் விளைவுகள்தான்.

இப்போது அந்த மூன்றாவது பெற்றோர்-(C) பற்றி பார்ப்போம்.

---இவர்களின் முந்தைய தலைமுறையே மனிதவளமாக மாறிவிட்டது. தற்போது நிறைய சம்பாதிக்கும் இவர்கள் பெரும்பணக்காரர்கள் அல்லது ‘கிம்பளம் வாங்கி கொழுத்த அப்பர் மிடில் கிளாஸ்’. இவர்கள் தங்களின் வாழ்க்கையை மிக மிக சொகுசாக, எல்லா விஷயங்களையும் மகிழ்ச்சியாக அனுபவித்து எந்த கவலையும் இன்றி பங்களாவில் வாழ்பவர்கள். இவர்களின் குழந்தைகளை கண்டிக்காமல், செல்லம் கொடுத்து வளர்ப்பார்கள். அவர்களோ, இந்த கட்டுப்பாடற்ற சுதந்திரத்தால், வீட்டில் பெற்றோர்கள் வேலைக்கு சென்றுவிட ஆபாசப்படம் பார்ப்பது, விபச்சாரம் செய்வது, ஓரினச்சேர்க்கை புரிவது, தினப்படி கிடைக்கும் கொழுத்த பாக்கெட் மணியால்... ஸ்கூலை கட்டடித்துவிட்டு சினிமா போவது, சிகரட், தண்ணி, போதை வஸ்து என்றும், இருபாலரும் இணைந்து படிக்கும் ‘மினிஸ்கர்ட் காவென்ட் பள்ளி’களில் ஆண்-பெண் நட்பு ‘கட்டாயமாகி’விட்ட இந்நாளில் கேர்ள்/பாய் ஃபிரன்டு என்று பைக்கில் வைத்துக்கொண்டு, பீச், தியேட்டர், டிஸ்கோத்தே, பார்ட்டி, ஹோட்டல், லாட்ஜ் என்று சுற்றி விட்டு வீட்டுக்கு எப்பவாவது தலையை காட்டுவது... என்று கண்காணிப்பின்றி-கண்டிப்பின்றி வளரும் குழந்தைகள், நாளை ஒருநாள், மருத்துவமனையில் எயிட்ஸ் வந்தோ, கர்ப்பக்கலைப்புக

்கோ வந்து படுத்துக்கொள்ளும் போதுதான் மேற்படி பெற்றோர்கள் தலையில் அடித்துக்கொண்டு அழுகிறார்கள். ஆனால், என்னபயன்? அவர்கள்தான் எப்போதோ தங்கள் மனிதவளத்தை... மக்கள்தொகையாக மாற்றி விட்டனரே..!

தங்கள் வேலையை சரியாக செய்யாமல் சொகுசு அனுபவிப்பதிலும் எந்நேரமும் காசு சேர்ப்பதிலுமே குறியாக இருந்த இப்பெற்றோருக்கு என்ன தண்டனை? மனிதவளத்தை மக்கள்தொகையாக மாற்றும் இப்பெற்றோரை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஏன் கண்டுகொள்ள வில்லை? இதுபோன்ற பெற்றோர் & பிள்ளைகள் இருக்கும் குடும்பங்கள்தானே இப்போது பல்கி பெருகி வருகின்றன? நிலத்தடி தண்ணியைவிட டாஸ்மாக் தண்ணிதானே ஆறாக ஓடுகிறது தமிழ்நாட்டில்? முதலிரவுக்கு முன்பே ‘அதுபோல சில இரவுகளை’ பார்த்த மணமக்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறதே? இதை இப்படியே கண்டும்காணாமல் விட்டால் நம் எதிர்கால இந்தியா இருண்ட இந்தியாவாகவல்லவா ஆகிவிடும்? இதனை எப்படி யார் தடுப்பது?

"மனிதவளத்தை மக்கள்தொகையாக மாற்றும் மேற்படி தீய காரணிகள் எல்லாமே இஸ்லாமிய மார்க்கப்படி நமக்கு ஹராம்... அதன் பக்கம் கூட நாம் செல்வதில்லை..". என்று முஸ்லிம்கள் நினைப்பீர்கள் என்றால்..., "அவற்றுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... அப்புறம் எதற்கு அத்தீய பக்கம் பற்றி இவ்வளவு கவலை நமக்கு...?” என்று அத்தீமைகளை பல காரணங்களால் வெறுத்த மற்றவர்கள் நினைப்பீர்கள் என்றால்...,ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்: பூவுடன் சேர்ந்த நார் மணக்குமோ மணக்காதோ (அது வாசமுள்ள பூவா என்பதை பொருத்தது)... நிச்சயமாக நெருப்புடன் சேர்ந்த நார் பற்றி எறியும்... அப்போது அதன் அருகிலே பூவாவது... மொட்டாவது...? எனவே, பிள்ளைகள் மீது விழிப்புடன் இருங்கள் பெற்றோர்களே...!

‘பல குடும்பக்கட்டுப்பாட்டு நடவடிக்கை’களையும் தாண்டி(!?), கருவுற்று பிறந்த குழந்தைகளை ‘மக்கள்தொகை’யாக  நினைக்காதீர்கள். அதை ‘மனிதவளமாக’ மாற்ற முயற்சி செய்யுங்கள். அதற்காக கடுமையாக உழையுங்கள். தேவைக்கு பொருளீட்டுங்கள். போதவில்லை என்றால், அதிக ஊதியத்திற்கான பணியில் உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். அதேநேரம் குழந்தைகளையும் கவனித்து கல்வியறிவு ஊட்டி வளருங்கள். உங்கள் குழந்தைகள் மனிதவளமாவதும் மக்கள்தொகையாகிப்போவதும் உங்கள் முயற்சியிலும் உழைப்பிலும் உள்ளது என்பதை மறந்து விடாதீர்கள், பெற்றோர்களே..!

முஹம்மத் ஆஷிக்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு