(ஊரில் என் நண்பர் எஸ். அப்துல் கபூர் அவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது, அவர் யு. ஏ. இ யில் இருந்தபோது நடந்ததாக ஓர் உண்மை நிகழ்வைப் பற்றி விவரித்தார்.)
ஷார்ஜா ஷேக்கிடம் யு. ஏ. இ. அரபி ஒருவர் சமையல்காரராகப் பணியாற்றினார். அவரிடம் சில கொழுத்த மாடுகள் இருந்தன. கேரளத்து சமையல்காரர் ஒருவரும் அவரிடம் வேலை பார்த்துவந்தார். அரபிக்கோ மாட்டில் பால் கறப்பது புதிய அனுபவம். அதனால் சமையல்காரரைப் பால் கறக்கப் பணித்தார் அந்த ‘அர்பாபு’. இரண்டு மூன்று நாட்கள் பயந்து பயந்து பால் கறந்தார் அந்த மலையாளி.

அரபியும் உடன்பட்டார். அதற்கு அடுத்த வாரமே, மதுரை ஜில்லாவின் சிவகங்கையைச் சேர்ந்த கோனார் ஒருவர் அங்கு வந்து சேர்ந்தார். அன்றிலிருந்தே அவருடைய காலை – மாலைப் பணி தொடர்ந்தது. அவர் பால் கறக்கும் லாவகத்தைப் பார்த்துப் பூரித்துப் போனார் அரபி.
“அச்சா ஹே!” என்று பாராட்டி மகிழ்ந்தார். மலையாளியையும் பாராட்ட மறக்கவில்லை. காலையும் மாலையும் பால் கறப்பது மட்டும்தான் அந்த ‘இந்து’க் கோனாருக்கு வேலை. பலதியா வேலையும் செய்துவந்தார்.
ஒரு நாள் சமையல் அறையில் புகுந்த அர்பாப், “கோனார், ஹமாரே சாத் கானா காஏகா?” என்று கையை வாயில் வைத்து சைகை காட்டினார். கோனார் புரிந்துகொண்டு, மலையாளியைப் பார்த்தார். அவனோ, ‘வேண்டாம்’ என்று சைகை காட்டுமாறு அவருக்குக் கட்டளையிட்டான். அன்றைய தினம் இந்த நிகழ்ச்சியோடு முடிந்தது.
கோனாரின் பணியையும் பணிவையும் தினமும் கண்டு மகிழ்ந்த அரபி, தான் சாப்பிடும்போதெல்லாம் கோனாரையும் அழைக்கத் தவறுவதில்லை. கோனாரும் பவ்வியமாகத் தவிர்த்துவந்தார். அவருக்கு முதல் ’எஜமான்’ மலையாளிதான் என்று கருதியிருந்ததால், ‘அர்பாப்’ கூப்பிட்டபோதெல்லாம், கோனார் மலையாளியைப் பார்ப்பார். அப்போது மலையாளி, நாக்கைக் கடித்துத் தலையை ஆட்டித் தன் பக்கம் கோனாரைக் கூப்பிட்டு, தனித் தட்டில் சாப்பாட்டைப் போட்டுக் கொடுத்துவிடுவான்.
ஒரு நாள், அரபி வலுக்கட்டாயமாகக் கோனாரின் கையைப் பிடித்து இழுத்துத் தன்னுடன் விரிப்பில் இருக்கச் செய்தார். “அர்பாப்! அவன் காஃபிர்!” என்றான் மலையாளி. “கியா ஃபரக் ஹே? ஓ ஆத்மி நை?” என்று கேட்டு வாயடைக்க வைத்தார் ‘அர்பாப்’. அன்று கோனாருக்கு ராஜ மரியாதை! ஆனால் அவரின் உள் மனத்திலோ உறுத்தல். ஒரு வழியாக அன்றைய தினம் கழிந்தது.
“இனிமேல் நீ அர்பாபோடு சேர்ந்து சாப்பிடக் கூடாது” என்று எச்சரிக்கை செய்துவைத்தான் மலையாளி. கோனாருக்கோ குழப்பம். ‘அரபி முதலாளி அன்போடு கூப்பிட்டுத் தன்னுடன் சாப்பிடச் சொல்கிறார். ஆனால், இந்த மலையாளியோ தடை செய்கிறான்!’ புரியவில்லை நம் கோனாருக்கு. ஒரு நாள் முதலாளியிடம் கேட்டுவிட்டார், அரைகுறை அரபியிலும் இந்தியிலும். முதலாளியின் முகம் சிவந்தது! உடன் எழுந்து சென்று சமையல்கார மலையாளியின் கன்னத்தில் ஓர் அறை விட்டார்! “ஓ ஆத்மி நை? ஓ பி இன்சான்! தும் பி இன்சான்!”
இந்த நிகழ்வைக் கண்கூடாகக் கண்ட கோனாருக்கு இன்ப அதிர்ச்சி! இஸ்லாம் எங்கே, எதில் இருக்கிறது என்ற நினைவு துளிர்விடத் தொடங்கியது. அடுத்த நாள் அர்பாபிடம் தன் திடமான தீர்மானத்தை வெளியிட்டார் கோனார்.
“நல்லா யோசிச்சுக்கோ. ஒரு நாள் தீர்மானம் மட்டும் போதாது. உன் மனைவி மக்கள் ஊரில் இருக்கிறார்கள். அவர்கள் நிலை என்ன என்று பார்த்துக்கொள்” என்று உபதேசம் செய்தார் அர்பாபு, இந்தியில்தான்.
“நான் இன்றைக்கே இஸ்லாத்தில் சேரவேண்டும்.” கொள்கையில் உறுதியானார் கோனார். சம்மந்தப்பட்ட அரசு அலுவலகத்திற்குக் கூட்டிச் சென்றார் அர்பாப். அங்குள்ளவர்கள் அவருக்கு ‘ஷஹாதா’ சொல்லிக்கொடுத்து, “ஒரு வருஷம் விடாமல் ஒரு பள்ளியில் ஐந்து வேளையும் தொழுது, அந்தப் பள்ளி இமாமிடம் சான்றிதழ் வாங்கிவந்தால், ‘இப்ராஹீம்’ என்று பெயர் மாற்றம் செய்து தருகிறோம்” என்றார்கள்.
அப்பணியை நிறைவு செய்து, சான்றிதழ் பெற்ற பின்னர் நம் ‘கோனார்’ செய்த அடுத்த பணி என்ன தெரியுமா? அவ்வாண்டின் ஹஜ்ஜை நிறைவேற்றி ‘ஹாஜியார்’ ஆனார்!
இதற்கிடையில் இரண்டு வருடங்கள் சென்றுவிட்டன. ஊருக்குப் போகும் தவணையும் வந்தது. மனைவிக்குக் கடிதம் எழுதினார். தான் இப்போது முஸ்லிமாக இருப்பதால், இருவருக்கும் இடையில் இருந்த திருமண பந்தம் முறிந்துவிட்டது என்றும், தாம் ஊர் வருவதற்குள் அவளும் பிள்ளைகளும் உள்ளூர் ஜமாஅத்தின் முன்னிலையில் இஸ்லாத்தைத் தழுவி இருக்க வேண்டும் என்றும், ஊர் வந்த பின்னர் திருமண பந்தத்தைப் புதுப்பிக்கவேண்டும் என்றும் அறிவித்திருந்தார். அவர் விருப்பப்படியே, காரியங்கள் நடந்தேறின.
சில நாட்களின் பின் பாய் பயணமானார் பம்பாய் வழியாக. சென்னைக்கு வந்து, அங்கிருந்து ரயிலில் சிவகங்கை வந்தவருக்கோ ஆச்சரியம்! முஸ்லிம் ஜமாத்தின் பெருங்கூட்டம் அங்கே கூடியிருந்தது, மாலைகள் சகிதம்! ‘நாரே தக்பீர்! அல்லாஹு அக்பர்!’ அர்த்தம் தெரியாமல் அங்கு வந்த முஸ்லிம்கள் கோஷமெழுப்பினர்.
முஸ்லிம்களின் இன்முகங்களும், கட்டித் தழுவல்களும், அன்று யாருக்குமே கிடைக்காத வரவேற்பும், இப்ராஹீம் பாயை மகிழ்ச்சியின் எல்லைக்கே இழுத்துச் சென்றது!
கோனார் புதிய உலகத்திற்கே போனார்!
அதிரை அஹ்மது