"நாளக்கி பெருநா, நம்மளுக்கு ஜோக்கு" (ஹஜ்ஜுப் பெருநாள் கால மலரும் நினைவுகளிலிருந்து) 11

அதிரைநிருபர் பதிப்பகம் | September 30, 2014 | , , , , ,


நானெல்லாம் சிறுவனாக இருந்து பள்ளி, பள்ளிக்கூட (வெள்ளி, சனி) விடுமுறை காலங்களில் சைக்கிள் டயரும், அதை விரட்ட கையில் ஒரு கம்பும் வைத்துக் கொண்டு தெருவைச் சுற்றி நண்பர்களுடன் விளையாடி வந்த காலம் அது. அப்பொழுதெல்லாம் ஊரிலிருந்து பறாக்கப்பலில் (விமானத்தில்) ஹஜ் செல்வது ரொம்ப, ரொம்ப அரிது. எங்கோ, யாரோ அதில் ஏறி பயணிப்பதாக கேள்விப்படுவதுண்டு. அக்காலத்தில் ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் பெரும்பாலும் பயன்படுத்துவது கப்பல் பயணம் தான். ஹஜ்ஜை இனிதே முடித்து அவர்கள் வீடு திரும்ப குறைந்தது மூன்று, நான்கு மாதங்கள் ஆகும். இன்று போல் நொடிப்பொழுதில் கையில் தவளும் நவீன அலைபேசி சாதனங்களும், உலகச் செய்திகளெல்லாம் கனவில் கூட தவளாத, விஞ்ஞான முன்னேற்றங்கள் அத்துனை சாத்தியப்படாத காலம் அது.

மூன்று, நான்கு மாத கால ஹஜ்ஜுப் பயணத்திற்காக சாமான், சட்டிகளுடன் மூட்டை,முடிச்சுகளுடன்,மருந்து மாத்திரைகளுடனும் சென்னை வரை அல்லது மும்பை வரை ரயிலில் பயணம் மேற்கொள்வர் நம் முன்னோர்கள்.அவர்கள் திரும்பி வரும் வரை அவர்களுக்கு ஏதேனும், எங்கேனும் சம்பவித்தாலும் அல்லது வீட்டிலுள்ளவர்களுக்கு ஏதேனும்  நடந்தேறி விட்டாலும் அவரவர் நேருக்கு நேர் முகத்தை பார்க்கும் வரை ஒன்றுமே தெரிய வாய்ப்புகள் இல்லாத காலம் அது. திரும்பும் பயணமா? அது ஒரு திரும்பா பயணமா? என்பதை யார்தான் துல்லியமாக கூறிவிட முடியும் படைத்தவனைத்தவிர? அதனால் அவர்களை சீரும், சிறப்புடன் வாழ்த்தி கண்களின் ஓரம் கண்ணீர் ததும்ப வழியனுப்பி வைக்க நமதூர் ரயில் நிலையம் வரை அவர்களை பைத்து சொல்லி அழைத்துச் சென்று கழுத்தில் மல்லிகைப் பூமாலையெல்லாம் அணிவித்து (பைத்தும், பூமாலையும் இங்கு ஒரு விவாதப்பொருளாக மாறி விட வேண்டாம். நடந்தவைகளை நினைவு படுத்துவதே இப்பதிவின் நோக்கமேயன்றி இங்கு கருத்துமோதலை ஏற்படுத்துவது நோக்கமல்ல) சங்கை செய்து, கூச்சிக்கு,சிக்கு,சிக்கென்று ஊரின் எல்லையிலிருந்து உற்சாக சங்கூதி ஒய்யாரமாய் கரும்புகையை கக்கிக்கொண்டு நமதூர் வழியே சென்னை எழும்பூர் வரை செல்லும் கம்பன் ரயிலில் அவர்களுக்காக து'ஆச்செய்து, அவர்களையும் து'ஆச்செய்யச் சொல்லி அனுப்பி வைக்கும் காலம் அது. குதிரை வண்டி, மாட்டு வண்டி, பால்காரன் என சலங்கை,மணி ஒலி அங்குமிங்கும் ஊரில் கேட்டுக் கொண்டிருந்த காலம் அது.

பிறகு காலம் கொஞ்சம், கொஞ்சமாக முன்னேறி விமானப் பயணங்கள் மூலம் ஹஜ்ஜுக் கடமைகள் நிறைவேற துவங்கி ஹஜ்ஜுக்குக்கு செல்பவர்கள் நமதூர் புஹாரி ஷரீஃப் (ஜாவியா) முடிவதற்கு முன்னரே ஹஜ்ஜை முடித்து காலை ஊர் திரும்பி செல்லும் வழியில் நமதூர் ஜாவியாவில் வீடு சேரும் முன் அவர்களை பரக்கத்திற்காக, ஊர், ஈருலக நலன்களுக்காக து'ஆச்செய்யச்சொல்லி சிறப்பு படுத்தும் நமதூர். (ஜாவியா மேட்டரும் இன்று நமதூர் வலைதளங்களில் விவாதப்பொருளாக மாற்றப்பட்டுள்ளதை காண முடிகிறது. இது கூடுமா? கூடாதா? பித்'அத்தா? இல்லையா? என்றெல்லாம் விவாத மேடைகளில் இதுபற்றி இன்று அனல் பறந்தாலும் ஊரில் பல ஏழைக் குடும்பங்களின் காலை வேளை உணவு அந்த 40 நாட்கள் முழுவதுமோ அல்லது ஓரளவுக்கேனுமோ பூர்த்தியாகிறது என்பது மட்டும் உண்மை என்பதை உணர முடிகிறது). சரி நம் நினைவுகளுக்குள் பயணிப்போம்.

எங்கோ பிறந்து வளர்ந்த செம்மறியாடுகள் தன் குடும்பம், பிள்ளை குட்டிகள் சகிதம் ஊர்த்தெருக்களில் கீதாரிகள் மூலம் பெரும் பேரணி போல் செல்லும். சில ஆடுகளின் மேல் விலாசங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். அது ஆட்டின் விலாசமா? அல்லது அதை வாங்கியவரின் விலாசமா? அந்த கீதாரிக்கே விளங்கும்.

துணிக்கடைகள் இந்த ஹஜ் மாதத்தில் மட்டும் துணிக்கடலாக உருமாறும். அதற்கான விளம்பர வாகனங்களின் சப்தமும் காதை பிளக்கும். நோட்டீஸும் ஆங்காங்கே கலியாண பத்திரிக்கை போல் வீடு வீடாக கொடுத்து செல்லப்படும். 

முடிவெட்டும் கடைகளும் கூட்டமாய், குதூகலமாய் தான் இருக்கும். ஹிப்பி, கிராப்பு, என்று அக்கால ஸ்டைலில் சிகை அலங்காரம் செய்து அந்நேர இளமை மகிழும்.

டைலர் கடைகளில் கூட்டம் அலைமோதும். இளைஞர்களின் மத்தியில் தெரு டைலரிடம் தைக்க கொடுப்பதா? எக்ஸ்போ டைலரிடம் கொடுப்பதா? எக்ஸ்பர்ட் டைலரிடம் கொடுப்பதா? அஹ்லன் டைலரிடம் கொடுப்பதா? பட்டுக்கோட்டை ரஹ்மான் டைலரிடம் கொண்டுபோய் தைக்க கொடுப்பதா? அல்லது சென்னையிலிருந்து கிரேஸி ஹார்ஸிலிருந்து ரெடிமேடாக வாங்கி வரச்சொல்வதா? அல்லது மாமா தந்த மார்டின் சட்டையை வைத்து வரும் ஹஜ்ஜுப் பெருநாளை சமாளிப்பதா? என்பதில் அதிகம் கன்ஃபூஸ் இருக்கும்.

தலையில் தொப்பியின்றி யாரும் காணப்பட மாட்டார். அதனால் கடைத்தெரு இலியாஸ், அன்சார் கேப்மார்ட்களில் வகை,வகையான, கலர்,கலரான தொப்பிகள் குவிந்து கிடக்கும். தலைக்கேற்ற தொப்பிகளை போட்டு பார்த்து வாங்கி மகிழ்வோம். மாப்ள தொப்பி, வெள்ளை தொப்பி, பின்னல் தொப்பி, ஓமன் தொப்பி, பங்களாதேஷ் தொப்பி என பலவகைகளில் விற்கப்படும். கடைசியில் இன்று அந்த கப்பல் போன்ற ஊதா தொப்பியே தலைமையிடத்தை மீண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஒரு காலத்தில் அந்த பெரிய கப்பல் போன்ற ஊதா தொப்பியின் இருபக்க இடுக்கில் அப்பாமார்கள் ஏதாவது எழுதி வைத்த கடுதாசியும், காசு, பணமும் செருகி வைத்திருப்பர். பேரப்பிள்ளைகளுக்கு உடனே கொடுக்க அக்காலத்தின் ஏ.டி.எம். மெஷின் போல் அது அவர்களுக்கு பயன்பட்டது.

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பெருநாளைக்கு எல்லாமே புதுசா இரிக்கணும்ண்டுதான் எல்லோரும் அன்று நினைப்போம். தெருவில் நடக்கும் பொழுது சரட், சரட் சப்தம் தந்து பிறரின் கவனத்தை சட்டென ஈர்க்கும் சிகப்பு பூ வைத்த அந்த சோலப்புரி செருப்பும் நம் கம்பீரத்தை கொஞ்சம் கூட்டியே காண்பிக்கும் காலம் அது. அப்பொழுதெல்லாம் சிக்ஸ்பேக் கலாச்சாரமும், அதன் மோகமும் இளைஞர் பட்டாளத்திடம் இருந்ததில்லை. மொத்தியா இருந்தாலும், ஒல்லிக்குச்சி போல் இருந்தாலும் கொஞ்சம் செவந்த தோலுக்கு மதிப்பு அதிகம் தான் அன்று. தோல் செக்கச்செவேண்டு இருந்தாலும், கன்னங்கரேண்டு இருந்தாலும் புத்திக்கூர்மையும், இறைவன் தந்த நல்அறிவும், ஆற்றலும், நேரான வழியில் கடின முயற்சியும் இருந்தால் எவருக்கும் ஏமாற்றமில்லா ஏற்றமே இருக்கும் இறைவனின் நாட்டத்தில்.

அப்பொழுதெல்லாம் அரஃபா ஒன்பதாம் நாள் சிறுவர்களாய் இருந்த நமக்கு அன்று நோன்பு வைக்க வேண்டும் என்ற மார்க்க விழிப்புணர்வு அத்துனை இருந்ததில்லை. அதனால் கண்டதையும் திண்டு திரிந்து வந்தோம். 

பெருநாள் இரவு ஆடவர், பெண்டிர் என ஊரே ஒரு விழாக்கோலம் பூண்டிருக்கும். சென்னையிலிருந்து பள்ளி, கம்பெனி விடுமுறையில் நிறைய பேர் குடும்பத்துடன் ஊர் வந்திருப்பர். அவர்களுக்கு என்னதான் சிங்கார சென்னையில் மெரீனா கடற்கரையும், நுனி நாக்கு இங்லீஸும் பரவசம் தரும் பழக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும் நம்மூர் கலாச்சாரம் ரொம்பவே அவர்களுக்கு பிடித்திருக்கும். எங்கு சென்றாலும் வேட்டி உடுத்திக்கொண்டு காற்றோட்டமாய், மரங்கள் சூழ்ந்த இடம், புளியமரங்கள் இருபக்கமும் அரண் போல் நின்று நிழல் தரும் சாலைகள்,சப்தமில்லாமல் சிற்றோடை போல் ஓடிக்கொண்டிருக்கும் ராஜாமட பாலம், செல்லும் வழியில் பசுமை போர்த்திய வயல்வெளிகளும், அதில் கூட்டமாய் வந்தமரும் வெண்கொக்கு, மடையான்களும், தென்னந் தோப்புகள், அதில் ஓடும் மோட்டர் பம்பு செட்டுகள், அதன் தொட்டியில் இறங்கி குளித்து கும்மாளமிடும் சுகம், இருபுறமும் கருவேல மரங்கள் வரவேற்கும் ரயில் ரோடு தாண்டிய குண்டும், குழியுமாய் உப்புக்காற்று வீசும் நமதூர் கடற்கரை சாலை, தெரு ஆச்சிகளின் பொட்டிக்குள் மறைந்திருக்கும் நா ஊறும் விலை/விளை பொருட்கள், கடைத்தெரு நொறுக்குத் தீணிகள், மெயின் ரோடு சூப்பு கடைகள், நீர் நிறம்பி குளிர்காற்றை கொஞ்சம், கொஞ்சமாய் தவணை முறையில் தந்து மகிழும் தெரு குளங்கள், இராக்கால நிலவு கார் மேகப்போர்வைக்குள் புகுந்து,புகுந்து உலகோடு கண்டு விளையாட்டு விளையாடுவதும், அதை அப்படியே தெருக்குளங்கள் தன் மேனியில் அழகுற படம் பிடித்து ஊருக்கு காட்டி மகிழ்வதும், அதை குளக்கரையில் நின்று நண்பர்களுடன் ரசிப்பதும் என இன்னும் தொலைந்து போன எத்தனையோ இன்பங்களை இலவசமாய் அனுபவிக்க எவருக்குத்தான் பிடிக்காது......

ஹஜ்ஜுப் பெருநாள் வரும் முன்னரே சொந்த, பந்தங்களின் சிறுவர், சிறுமியர்களுக்காக பெருநாள் காசு என்று சொல்லி குடும்பங்களில் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் சலவை/புது நோட்டுகள் சந்தோசமாய் கொடுத்து மகிழ்ந்து கொள்வர். அதை வைத்து வீட்டின் சிறுவர்களாய் இருந்த நாம் பாதி பணத்தை வீட்டில் கொடுத்தும் மீதி பணத்தில் நமக்கு விருப்பப்பட்ட விளையாட்டு சாமான்களையும், திண்பண்டங்களையும் வாங்கி மகிழ்வோம்.

பெருநாள் இரவு இறைச்சிக்கடை பெட்ரமாஸ் லைட்டு மேன்டிலின் வெளிச்சம் அதை காணும் நம் உள்ளத்திற்குள் ஊடுவி உற்சாக ஒளியேற்றி ஒரு பரபரப்பான பரவசத்தை நமக்கெல்லாம் தந்து மகிழும்.

ஹஜ்ஜுப் பெருநாளுக்கு ஒளிஹாவுக்காக ஊரெங்கும் ஆடுகளும், மதரஸா, பைத்துல்மால் போன்ற தொண்டு நிறுவனங்களில் அறுக்கப்பட்டு பகிரப்படும் மாட்டு கறிகளும் பரவலாக எல்லோர் வீடுகளிலும் குவிந்து குளிர்சாதனப் பெட்டி வசதியில்லா பெரும்பான்மையான வீடுகளில் அதை உடனே சுத்தம் செய்து கெட்டுப்போகாமல் இருக்க மசாலா தடவி உடனே சனலில் சாக்கு தைக்கும் ஊசி மூலம் ஒவ்வொன்றாக கோர்த்து மாலை போல் ஆக்கி அதை வெயிலில் துணிக் காயப்போடுவது போல் போட்டு வைப்பர். நன்கு காய்ந்ததும் அதை அப்படியே அடுப்பில் சுட்டோ, அம்மியில் தட்டியோ அல்லது எண்ணெய் ஊற்றி பொறித்தோ அதில் கூடுதலாக வெங்காயம், கேரட், மல்லி இலை, எலுமிச்சை போன்றவற்றை வேட்டிப்போட்டு கூடுதல் ருசியுடன் உண்டு மகிழ்வோம். அன்றெல்லாம் 80, 90 வயது அப்பாக்களை எல்லாத் தெருக்களிலும், வீடுகளிலும் பார்க்க முடிந்தது. கொலஸ்ட்ரால் பிரச்சினையில்லை, நடக்க முடியா முடக்கு வாதம் அதிகமில்லை, குழிக்குள் கொண்டு போய் சேர்க்கும் கேன்சரும் இல்லை, ஊரை பவனி வரும் லேன்சரும் இல்லை. ஆனால் இன்றோ நவீனங்கள் ஊரை நாலாப்புறமும் சூழ்ந்திருந்தாலும் 30 வயதை தாண்டியதும் உடல் கோளாறுகளும் மருத்துவ அறிவுரைகளும், மருந்து மாத்திரைகளும் நினைத்த எதையும் கவலையின்றி உண்டு மகிழ முடியாமல் ஸ்பீட் ப்ரேக் போட்டு ஏகத்துக்கும் வாயின் முன்புறம் செல்லும் முன் வேகத்தடை விதிக்கிறது.

நோன்பு பெருநாள் போல் ஹஜ்ஜுப்பெருநாளுக்காக பெருநாள் இரவு தெருப்பள்ளிகளில் நகரா அடிக்க மாட்டார்கள். குர்பானி கிடா அறுக்கும் முன்னர் பெருநாள் காலை பசியாற தேவையான கறிகளை வாங்க கறிக்கடை முன் கச்சல்கட்டியோ, கட்டாமலோ காத்துக்கிடப்பர்.

வெள்ளிக்கிழமை கூட கறி வாங்கி உண்டு மகிழ முடியா எத்தனையோ பல ஏழை,எளிய குடும்பங்களின் வீடுகளில் ஆடு,மாடு குர்பானி கறிகள் போதும், போதும் என்று சொல்லுமளவுக்கு பல வீடுகளிலிருந்து வந்து குமியும். அவர்கள் மனமும் குளிரும். வயிறும் நிறையும்.

அக்காலத்தில் கவாபுக்கும், நம் கல்புக்கும் நல்ல தொடர்பு இருந்து வந்தது. நாமும் வீடுகளில் சக வயது சிறுவர்களுடன் சேர்ந்து நான்கு செங்கல்லை எடுத்து சதுரமாய் அடுக்கி அதன் நடுவில் அடுப்புக்கரியை கொஞ்சம் போட்டு நெருப்பூட்டி அதன் நடுவில் குடைக்கம்பியில் மசாலா தடவிய கறியை வைத்து விசிறியில் வீசி அதை நன்கு வேகும் வரை சூடு காட்டி பிறகு தட்டையில் சூட்டோடு திண்டு மகிழ்வோம்.

கறிக்கடைகளிலும், டைலர் கடைகளிலும், இன்ன பிற பெருநாள் இரவு வேலைவெட்டிகளிலும் இரவின் பெரும் பகுதி கழிந்திருப்பதால் அசதியில் மீதி இரவில் நன்கு உறங்கி பெருநாள் காலை சுபுஹ் தொழுகை பள்ளியில் இமாம் ஜமாத்தோடு தொழுது விட்டால் அது ஒரு பெரும் சாதனை தான் அன்று. வீட்டில் எல்லோரும் ஒரே நேரத்தில் குளிக்க வேண்டி இருப்பதால் சுபுஹ் தொழுகை முடிந்ததிலிருந்து ஒவ்வொருவராய் குளிக்க ஆரம்பித்து ஒரு வழியாய் மெல்ல, மெல்ல எல்லோரும் பெருநாள் தொழுகைக்கு தயாராகி விடுவர். அதே சமயம் அடுப்பில் பசியாறவும் ரெடியாகிக் கொண்டிருக்கும்.

பள்ளியில் முன்னரே வந்தமரும் பெரியவர்களும், சிறியவர்களும் மைக்கில் தக்பீர் சொல்லிக்கொண்டிருப்பர். நாமும் இறைவனைப் புகழ்ந்தவர்களாய் மெல்ல, மெல்ல தக்பீரை முணு, முணுப்போம். சந்தோசம் ஊரெங்கும் காற்றில் கரைந்து கொண்டும், அந்த தியாகத்திருநாள் பெரும் ஆர்ப்பாட்டமும், ஆர்ப்பரிப்பும் இல்லாமல் அமைதியாய் எல்லோரிடமும் குடிகொண்டிருக்கும் அந்த அல்லாஹ்வே அவற்றை பின்னாலிருந்து இயக்கிக் கொண்டிருப்பான்....

பசியாற காரியங்களும், குடும்ப, நட்பு நல விசாரிப்புகளும் என பெருநாள் தினமும் நம்மை விட்டு அந்த நாள் சூரியன் போல் மெல்ல, மெல்ல மறைந்து கொண்டிருக்கும். தக்பீர் முழக்கம் மட்டும் மார்க்கம் கூறும் நல்வழியில் நம் பள்ளிகளில் இன்னும் இரண்டு நாட்களுக்கு தொடரும்.

ஹஜ்ஜுக்கு சென்று வந்தவர்கள் வீடுகளில் களரி என்னும் பசியாற,விருந்து உபசரிப்புகள் நடந்தேறும். "ஹஜ்ஜுக்கு போய்ட்டு வந்தவ்வோ" வீட்டுக்கு சென்று அவர்களை முசாபஹா செய்து வரும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஜம்ஜம் தண்ணீர், பேரிச்சம் பழமும், கொஞ்சம் நெருங்கியவர்களுக்கு அத்தரு, தொப்பி, தசுமணி, மக்கத்து மோதிரம் எல்லாம் கொடுத்துபசரிக்கப்படும். இந்த விஞ்ஞான முன்னேற்றம் அம்மி,குழவி,கொடக்கல்லை மட்டுமல்ல தசுமணியையும் விட்டு வைக்கவில்லை. காணாக்கி தொலைத்து விட்டது. எல்லாம் டிஜிட்டல் மயம். இப்படியே பலவிசயங்களை இங்கு எழுதிக் கொண்டிருப்பதால் கணிப்பொறியின் மை கறைகிறதோ? இல்லையோ? ஆனால் நம் காலம் கறைந்து கொண்டே இருக்கிறது.

காலமும், நேரமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. இவ்வுலகில் அவன் நாட்டத்தில் அந்த,அந்த நேரத்தில் வர வேண்டியது வந்து கொண்டும் போக வேண்டியது போய்க்கொண்டும் தான் இருக்கின்றன......

இந்த வருடம் பல சிரமங்கள்,உடல் நலக்குறைவுகள்,பிரச்சினைகள் என எல்லாவற்றையும் தாண்டி புனித ஹஜ் கடமையாற்ற மக்கமாநகரம், மதீனமாநகரம் வந்தடைந்துள்ள லட்சோப லட்ச ஹாஜிமார்களின் எல்லாப்பாவங்களையும் மன்னித்து அவர்களின் ஹஜ்ஜை மப்ரூரான ஹஜ்ஜாக்கி அவர்களின் ஹாஜ்ஜத்துக்களுடன் அகில உலக முஸ்லீம்களின் ஹாஜத்துக்களும், ஈருலக நலவுகளும் இனிதே நிறைவேறி அகிலமெங்கும் அமைதி நிலவ து'ஆச்செய்வோம்....

இந்த நல் நினைவுகளுடன் முன்கூட்டியே தெரிவிக்கப்படும் என் இனிய தியாகத்திருநாள் நல்வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும் இனிதாய், கனிவாய்  சென்றடையட்டுமாக.....

மு.செ.மு. நெய்னா முஹம்மது

விண்ணிலிருந்து மின்சாரம்...! 14

அதிரைநிருபர் பதிப்பகம் | September 29, 2014 | , , , , ,

சம்சாரம் இல்லாமல் இருந்து விடலாம் ஆனால் மின்சாரம் இல்லாமல் ஒரு நாள் கூட இருக்க முடியாது என்பது நிதர்சனம் அதற்கு காரணம் நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் மின்சாரத்தை சார்ந்தே உள்ளது ஒரு நாளைக்கு மின்தடை என்றாலே நம்மால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. அப்படிப்பட்ட மின்சாரத்தை தயாரிக்கும் முறைப் பற்றியும் அதனை தொடர்ந்து பெறுவதற்கான வழி வகைகளையும் கொஞ்சம் விலாவாரியா வித்தியாசமாக பார்ப்போம்.   


முதலில் அணு மின்சாரம் பற்றி பார்ப்போம் 

அணுக்கருவைப் பிளக்கும் போது (அதாவது நியூட்ரான்கள்  என்னும் அணுத்துகள்களை  மோதி பிளக்க செய்வது)  மிக அதிக அளவில் வெப்பம் வெளிப்படும் . அந்த வெப்பத்தைக்கொண்டு     கலனுக்குள் உள்ள நீரை கொதிப்படைய செய்து நீரை ஆவியாக்குவார்கள் இங்கே வெளிப்படும் அணுக்கதிர்கள்  வெளியே வராத அளவுக்கு   அணுக்கலனின் சுவர் மிகவும் தடிப்பாகவும் அணு கதிர் வீச்சை தாங்க கூடிய தன்மையிலும் அமைக்கப்பட்டிருக்கும் .

மேலும் அணுவை  பிளக்கும் போது ஏற்படும் கடும் வெப்பத்தினால் கொள்கலனில் உள்ள நீர் கொதித்து  நீராவி உருவாகும் நிலக்கரி எஞ்சினில் நீராவி வருவதை விட பலமடங்கு அதிகமான அழுத்தம் மிகுந்த அந்த நீராவி குழாய் மூலம் கொண்டு வரப்பட்டு   அந்த அழுத்தத்தின் மூலம்  பெரிய அளவில் உள்ள டர்பன்  என்று சொல்லப்படும் டைனமோ சுழற்றப்படும் அது சுற்றுவதன்  மூலம் மின்சாரம்  உற்பத்தி செய்யப்படும்.

இதில் உள்ள மிக பெரிய பிரச்னை என்னவென்றால் இதன் கழிவுகளில்(அணு கழிவு ) உள்ள அணுக்கதிர் வீச்சின்  தாக்கம் பல நூறு வருடங்களுக்கு மனித இனங்களுக்கு தீராத தெல்லை கொடுத்துக்கொண்டே இருக்கும் இந்த அணு மின் உற்பத்தி மனித குலத்திற்கு எப்போது வேண்டுமானாலும் பேரழிவை கொடுக்கும் என்பதால் இதன் வழியில் பெறப்படும் மின் சாரமும் நிரந்தரம் இல்லை 

அனல் மின் நிலையம்

அனல் மின்   நிலையங்களில் மின் உற்பத்தி செய்வதற்கு தேவையான நிலக்கரி பெருமளவில் ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இருந்து கப்பல் மூலம் இங்கு எடுத்து வரப்படுகின்றது இவ்வாறு இறக்குமதி செய்யப்படுகின்றன நிலக்கரி எரிக்கப்பட்டு அதன் மூலம் நீரை கொதிக்க வைத்து வரும் நீராவியின் அழுத்தத்தை கொண்டு டைனோமோ (டர்பன்) சுழற்றப்பட்டு மின் உற்பத்தி செய்யப்படுகின்றது இப்படி செய்யும் போது எரிக்கப்படும் நிலக்கரி புகை காற்றில் கலந்து காற்றை மாசுபடுத்திவிடுகின்றன அதனால்  அனல் மின் நிலையம் அருகே வசிக்கும் பொது மக்கள் பலவித நோய் களுக்கு ஆளாகின்றனர் மேலும் நிலக்கரி பூமியில் இருந்து நிரந்தரமாக கிடைக்குமா என்பது நிச்சயம் இல்லை ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள் தீர்ந்து போக கூடிய வாய்ப்புகள் உள்ளன ஆகையால்  நிலக்கரியை நம்பி பெறப்படும் மின்சாரமும் நிரந்தரம் இல்லை 

நீர்மின் நிலையம்

நீர் மின் நிலையங்கள் பெரும்பாலும் மலை பிரேதசங்களில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளனகாரணம் மலையின் மேல் பகுதியில் மழை நீரை தேக்கி வைத்து அந்த அழுத்தத்தில் இருந்து நீரை பைப் லைன் மூலம் மலை அடிவாரம் வரை கொண்டுவந்து அந்த நீரின் அழுத்தத்தின் மூலம் டைனோமோ சுழற்றப்பட்டு மின் உற்ப்பத்தி செய்யப்படுகின்றது இதற்க்கு மழை காலங்கில் கிடைக்கும் நீரை வைத்து மின் உற்பத்தி நடைபெறுகின்றன கோடைகாலங்களில் நீர் வரத்து இருக்காது ஆகையால் மின் உற்பத்தியும் இருக்காது.ஆகையால் நீர் மின்சக்த்தியாலும் நாம் நிரந்தரமாக மின் உற்பத்தியை பெற முடியாது.

காற்றாலை மின் உற்பத்தி 

தமிழகத்தின் மின்சாரத் தேவையில் பாதியளவை பூர்த்தி செய்வது காற்றாலைகள் மூலம் கிடைக்கும் மின்சாரம்தான்.ஏறத்தாழ 5,690 மெகாவாட் வரை மின்உற்பத்தி செய்யும் திறன் கொண்ட காற்றாலைகளில் சில சமயம் 5,000 மெகாவாட் வரை மின்சாரம் தான்  கிடைக்கும். காற்று அடிப்பது குறைந்து போனால் மின் உற்பத்தி  1,500 மெகாவாட் வரைதான் கிடைக்கும். காற்று அடிக்காத காலங்களில் மின் உற்பத்தி நின்று போய் விடும் ஆகமொத்தத்தில் இதிலும் நிரந்தர மின் உற்பத்தி நடைபெறுவது சாத்தியம் கிடையாது 


இப்படி ஒவ்வொன்றுக்கும் கொறை  கண்டு பிடிச்சா இதுக்கு தீர்வுதான் என்ன? மின்சாரம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க என்னதான் வழி இருக்கு. அதுக்கு ஒரு மெகா திட்டம் ஒன்னு இருக்கு அது பற்றி பார்ப்போம்.

மின் உற்பத்தி செய்வதற்கு அடிப்படை தேவை என்னவென்றால் டர்பன் எனும் டைனமோ சுழல வேண்டும் அதை சுழலவிட தேவையான விசையை தொடர்ந்து பெறுவதுதான் இங்கே சவாலான விஷயம் அதை எப்படி பெறுவது என்பதனை விரிவாக கீழே பார்ப்போம்.

இங்கே பூமியில் இருந்து கொண்டு ஒரு டைனமோவை நாம் சுழற்றி விட்டால் நாம் கொடுத்த விசை ஒரு சில நிமிடங்களில் பூமியின் இழுவிசை காரணமாக தீர்ந்து போய் விடும் அது தீர்ந்ததும் சுழற்றி விடப்பட்ட டைனமோ நின்று விடும் 

இதே டைனமோவை நாம் பூமியின் இழுவிசை தாண்டி கொண்டு போய் ஒரு சுத்து சுத்தி விட்டால் அது நாம் சுழற்றி விட்ட வேகத்தில் சுற்றிக் கொண்டே இருக்கும்  அதற்க்கு காரணம் அங்கு இழுவிசை கிடையாது இந்த அடிப்படையில் தான் ராக்கெட்டுகள் உந்தி தள்ளபட்ட வேகத்தில் எந்தவித எரிபொருளும் இல்லாமல் வேற்று கிரகங்களுக்கு நீண்ட தூரம் பயணிக்கின்றன 

நாம் இப்போ செய்ய வேண்டியது என்ன பூமிக்கு மேலே பூமியின் இழுவிசை தாண்டி ஒரு மி(வி)ன் நிலையம் அமைத்து (ஏற்கனவே விண்ணில் ஒரு சர்வதேச விண்நிலையம் உண்டு) அங்கு டைனமோக்களை அமைத்து அனைத்து டைனமோக்களையும் ஒருமுறை வேகமாக சுழற்றி விட்டுவிட வேண்டும் சுழற்றி விடப்பட்ட டைனமோ அதற்கு எதிர்விசையும் இழுவிசையும் இல்லாதால் அதன் சுழற்சி நின்று விடாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும். அப்படி சுழன்று கொண்டிருக்கும் டைனமோவில் இருந்து மின் உற்பத்தி ஆகிக்கொண்டே இருக்கும் 

அப்படி உற்பத்தி ஆகும் மின்சாரத்தை பூமிக்கு எப்படி கொண்டு வருவது கம்பி போட்டு போஸ்ட்டை எங்கே ஊண்டுவது என்ற கேள்வி வரும் அங்கே உற்பத்தியாகும் மின்சாரத்தை கம்பி மூலம் கடத்தி கொண்டு வருவது சாத்தியப்படாது அதற்கு மாற்று வழியுண்டு அதனை இங்கே தொடர்ந்து பார்ப்போம்.

விண்ணில் உற்பத்தியாகும் மின்சாரத்தை மைக்ரோ வேவ் ஒளிக் கற்றையாகவோ அல்லது லேசர் லைட் ஒளிக்கற்றையாகவோ மாற்றி அதை இங்கே பூமியில் ரிசீவர் மூலமாக பெற்று அந்த மின்சாரத்தை  மின்கம்பி மூலம் விநியோகிக்கலாம்.

இதையே இன்னும் டெவலப் செய்து வீட்டுக்கு வீடு  ரிசீவர் வைத்து தற்போது டிவி சேனல்களை பெறுவதுபோல் வீட்டுக்கு வீடு மின்சாரத்தை பெற்றுக் கொண்டால் மின்கம்பிகளுக்கு வழியனுப்பி (goodbye) வைத்து விடலாம் அதோடு இணைத்து மின் தடைகளுக்கும் ஒரு குட்பை சொல்லி விடலாம். கம்பியில் மரம் விழுந்து விட்டது போஸ்ட்டில் லாரி மோதிவிட்டது அதனால் மின்சாரம்  இல்லை என்ற ஜால் ஜாப்ப்பு வார்த்தைகளுக்கும் goodbye தான்.

எல்லாம் சரிங்க விண்ணில் அமைத்த டைனமோக்களையும் மற்ற இயந்திரங்களையும் பராமரிப்பு யார் செய்வது என்று கேட்டால் அதற்கும் ஒரு வழி உண்டு ஊரில் ஆங்காங்கே ஒன்றுக்கும் உதவாமலும், உழைக்காமலும் ஊதாரியாக திரிந்து கொண்டு தேவையற்ற வில்லங்கம் செய்பவர்களை பிடித்து இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு அங்கே அனுப்பி இயந்திரங்களை துடைக்கவும், பராமரிப்பு பணி செய்ய அங்கே அனுப்பி வைத்துவிட வேண்டும்.

Sஹமீது

தாமதிக்கப்பட்ட நீதிதான் ஆனால் மறுக்கப்பட்ட நீதியல்ல..! 21

அதிரைநிருபர் பதிப்பகம் | September 29, 2014 | , , , , ,

‘தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி’ என்று சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மற்றும் அவரது தோழிகள் இன்னும் வளர்ப்பு மகன் ஆகியோர் மீது கடந்த பதினெட்டு ஆண்டுகளாக மாநிலம் விட்டு மாநிலம் மாறி மாறி நடந்த சொத்துக் குவிப்பு வழக்கில் தரப்பட்டிருக்கிற தீர்ப்பு, தாமதிக்கப்பட்ட நீதிதான் ஆனால் மறுக்கப்பட்ட நீதியல்ல என்ற முடிவுக்கு நம்மை எண்ணத் தூண்டியுள்ளது.

இப்போது குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப் பட்டு சிறையில் அடைக்கபட்டிருப்பவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வரை தமிழகத்தின் ஒரு பெரும்பகுதி மக்களுக்கு எல்லாம் அவராகத் தெரிந்தவர்- அனைத்து அதிகாரங்களையும் தனது கரங்களில் வைத்திருந்தவர்- யாரை வேண்டுமானாலும் நடு இரவில் பதவி மற்றும் இடமாற்றம் செய்யும் அதிகாரம் படைத்தவராக இருந்தவர்- எவ்வளவு பெரிய படிப்புப் படித்தவரும் அவரது காலில் விழுந்து எழுந்தனர்- அவரிடம் பேசும்போது பேசப் பயன்படும் உதடுகளைக் கூட கைகள் கொண்டு மறைத்துக் கொண்டு பேசும் பழக்கத்தை கொண்டிருந்தார்கள்- நல்ல நிமிந்த முதுகுத் தண்டுகள் கூட அவரைக் கண்டதும் நாணல் குச்சிகள் போல வளைந்தன. எள் என்றதும் எண்ணெயாக மாற அவரைச் சுற்றி எண்ணற்றக் கூட்டம் எந்நேரமும் கூடி நின்றன.

இந்த வழக்கின் காலகட்டத்தை நினைத்துப் பார்த்தால் தலை சுற்றுவது இயல்பு. இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் இரண்டு முறைகள் இடைவெளிகளில் மீண்டும் மீண்டும் முதல்வராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இரண்டு நாட்களுக்கு முன்பு வரை தமிழகத்தின் தலைவிதியை எழுதிய அவரது விதியை பெங்களூர் நீதிமன்றம் மாற்றி எழுதிவிட்டது. 

வழக்கு- வழக்கின் போக்கு- வழக்கின் தீர்ப்பு – தீர்ப்பின் விளைவு ஆகியவைகளைப் பற்றி நமது பாணியில் சற்று அலசலாம். 

1991 – ஆம் ஆண்டு நமது நினைவுகளிலிருந்து மாறாது! நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். அந்தப் படுகொலையின் பழி திமுகவின் மேல் விழுந்ததன் காரணமாக அண்ணா திமுக அமோக வெற்றி பெற்றது. அதன் விளைவாக செல்வி ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்றார். அந்த 1991-96 க்கு இடைப்பட்ட ஐந்தாண்டு ஆட்சிகாலத்தில் முதல்வர் பதவிக்கு சம்பளமாக ஒரே ஒரு ரூபாய் மட்டுமே பெற்றுக் கொள்வேன் என்று அதிரடியாக அறிவித்து அனைவர் மனதிலும் ஒரு தேவதையாக எழுந்து நின்றார் ஜெயலலிதா. 

ஆனால் அந்த ஐந்து ஆண்டுகளில் சில கூடா நட்பு அவருக்கு கேடாய் முடிந்தது. ஜெயலிதாவின் பதவியைப் பயன்படுத்தி பலர் பல வழிகளில் சொத்துக்களை வாங்கிக் குவித்தனர். அவர்களது கரங்களில் கருவியாக செயல்பட்டார் ஜெயலலிதா. அதனால் பல அரசியல் நோக்கர்களும் அன்றைய செயல்பாடுகளை அருவருப்புடன் நோக்கினர். அத்துமீறிய செயல்பாடுகளுக்கு ஒரு பரிகாரம் காணவேண்டுமென்று சட்ட பூர்வமான நடவடிக்கைகளில் இறங்கினர். 

அதன் ஆரம்பமாக ஜெயலலிதா தனது வருமானத்திற்கு அதிகமாக ரூ.66 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 395.59 சொத்து குவித்ததாக அப்போதைய ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கடந்த 14-6-1996 அன்று சென்னை மாநகர‌ அமர்வு நீதிமன்றத்தில் புகார் அளித்தார். 27-6-1996 அன்று அவரது புகாரை விசாரிக்குமாறு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை மாநாகர அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அதைத் தொடர்ந்து சுப்ரமணிய சுவாமி தொடர்ந்த வழக்குக்கான நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் பொறுப்பு திமுக ஆட்சியிடம் வந்தது. திமுக புகுந்து விளையாடி பல விஷயங்களையும் ஆதாரங்களையும் வெளிக் கொண்டுவந்தது. இவ்வழக்கை விசாரிக்க தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி நல்லம்ம நாயுடு தலைமையில் 15 காவல் ஆய்வாளர்கள் விசாரணை அதிகாரிகளாக‌ நியமிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் ஆகியோர் இவ்வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். பல ஆவணங்கள் ஆதாரங்கள் இணைக்கப்பட்டன. 

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மீது அவர் முதல்வர் ஆவதற்கு முன்பாக (1-7-1991-க்கு முன்பு) அவருடைய சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரத்து 956.53 ஆகும். ஆனால் வழக்கு காலத்திற்கு பிறகு (1-7-1991 முதல் 30-4-1996 வரை) ரூ.66 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 395.59 ஆக சொத்து அதிகரித்துள்ளது. எனவே ஜெயலலிதா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளார். மேலும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சொத்து குவிக்க உடந்தையாக இருந்து கூட்டுசதி செய்துள்ளனர் என்பதே வழக்கின் அடிப்படை.

எனவே அவர் மீது ஊழல் தடுப்பு சட்டம் 13(1) ( ஈ) பிரிவில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது மற்றும் 13(2) அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த குற்றத்துக்கு உடந்தையாக இருந்தது மற்றும் ஊழல் தடுப்பு சட்டம் 120(பி) கூட்டு சதி தீட்டியது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையில் மீண்டும் ஒரு ஆட்சி மாற்றம் . 2001 ஆம் ஆண்டு மீண்டும் ஜெயலலிதா முதலமைச்சரானார். தானே மீண்டும் முதலமைச்சரானதும் இந்த சொத்துக் குவிப்பு வழக்க்கு சாவுமணி அடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் உச்ச கட்டமாக, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கின் சாட்சிகள் விசாரணை கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்ட நிலையில், 2001 ஆம் ஆண்டில் மீண்டும் ஜெயலலிதா முதல்வராக வந்ததையடுத்து ஏற்கனவே விசாரிக்கப்பட்ட 77 சாட்சிகளை மறுவிசாரணை என்ற பெயரில் நீதிமன்றத்திற்கு அழைத்து பிறழ் சாட்சியம் அளிக்க வைத்த நிகழ்வு அரங்கேறியது. அந்த காலகட்டத்தில் நீதிமன்றத்தில் நடைபெற்றவை விசாரணைகளல்ல . பல ஓரங்க நாடகங்கள். ஆட்சியில் இருப்போர் வளைக்க நினைத்தால் நிமிர்ந்து நிற்கும் நீதியும் வீதியில் கிடைக்கும் வேடிக்கைப் பொருளாகிவிடுமென்பதற்கு ஏற்ப நீதிமன்ற நடவடிக்கைகள் அமைந்தன. 2003-ம் ஆண்டு வரை இந்த விசாரணைகள் நடைபெற்றன.

அப்போது ஒரு திடீர் திருப்பமாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் புதுடில்லி உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். மனுவின் சாராம்சம் ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும் மாநிலத்தில் அவர் மேல் சாட்டப்பட்ட வழக்கை விசாரிப்பதனால் நேர்மையான - நியாயமான நீதி கிடைக்காது என்று அஞ்சுவதாகவும் எனவே வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டுமென்றும் உச்ச நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டதுதான். 

மனுவைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம், கடந்த 2003-ம் ஆண்டு நவம்பர் 18-ம் தேதி இவ்வழக்கை கர்னாடக மாநிலத்தின் பெங்களூருக்கு மாற்றி உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து தமிழில் இருந்த ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல், பிறழ் சாட்சிகளின் விசாரணை, குறுக்கு விசாரணை, குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலம் பதிவு செய்தல் மற்றும் இறுதிவாதம் ஆகியவை கடந்த 11 ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. இதற்கிடையில் இந்த வழக்கை இழுத்தடிக்க எவ்வளவு முயற்சிகள் செய்ய முடியுமோ அவ்வளவு அவ்வளவு முயற்சிகளையும் ஜெயலலிதாவும் அவருடன் சேர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்களும் செய்தார்கள். அவைகளைப் பட்டியலிட்டால் ஐம்பது அத்தியாயங்கள் எழுத வேண்டி வரும், உதாரணத்துக்கு சில மட்டும் , 

‘‘சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணையே நடைபெறாததால், நீதிமன்றத்தில் தனிமைச்சிறையில் அடைக்கப்பட்ட கைதி போல அமர்ந்திருக்கிறேன்’’ என்று இவ்வழக்கை விசாரிக்க ஏற்படுத்தப்பட்ட பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தின் முதல் நீதிபதியான பச்சாபுரே நீதிமன்றத்திலேயே வேதனையுடன் கூறினார். ‘‘மாதம் ஒரு ரூபாய் மட்டுமே ஊதியம் பெறும் ஒருவரால் 5 ஆண்டுகளில் ரூ.66 கோடிக்கு எவ்வாறு சொத்து சேர்க்க முடிந்தது என்ற எளிமையான இவ்வழக்கை ஜெயலலிதாவால் 16 ஆண்டுகளாக இழுத்தடிக்க முடிகிறது என்றால் அது இந்தியாவின் சாபக்கேடு’’ என்று இவ்வழக்கின் அரசுத் தரப்பு வழக்கறிஞராக உச்சநீதிமன்ற அறிவுரைப்படி நியமிக்கப்பட்ட ஆச்சாரியா கூறினார். இதிலிருந்தே இவ்வழக்கை சிதைக்க என்னென்ன முயற்சிகள் எடுக்கப்பட்டன என்பதை அறியலாம்.

அதுமட்டுமின்றி இவ்வழக்கின் நீதிபதியையும், அரசு வழக்கறிஞரையும் தமது விருப்பப்படி தான் நியமிக்க வேண்டும் என்று ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அதிசயமும் நடந்தது. இவ்வழக்கை மிகவும் நேர்மையாக நடத்திச் செல்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக அரசு வழக்கறிஞர் ஆச்சாரியா மீது அவதூறுகளை சுமத்தி, அவரைப் பதவி விலக வைத்த கொடுமையும் நடந்தது. ஆனாலும் வழக்கின் ஆதாரங்களைப் பார்த்து அதிர்ந்து போன உச்சநீதி மன்றம் உறுதியாக நின்றது. 

தடங்கலுக்கு வருந்துகிறோம் என்று அடிக்கடி அறிவிப்புகள் வந்தாலும் எல்லாவிதத் தடைகளையும் மீறி அனைத்து விசாரணைகளும் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி நிறைவடைந்ததால், செப்டம்பர் 20-ம் தேதி தீர்ப்பு வெளியாகும் என சிறப்பு நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா உத்தரவிட்டார். அதன் பிறகும் கூட விடுதலைப் புலிகளால் உயிருக்கு ஆபத்து என்ற காரணம் சொல்லி தீர்ப்பின் இடத்தை மாற்றச் சொல்லி தீர்ப்பை தாமதப் படுத்த ஜெயலலிதா மற்றொரு இறுதி நேர முயற்சியும் செய்தார். அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவைச் சார்ந்த சிலர் உச்ச நீதிமன்றத்திலும் அதே வகையில் மனு தாக்கல் செய்தனர். ஆனாலும் நீதிமன்றம் பரப்பன அக்ரகாரம் என்கிற பெங்களூரின் சிறை வளாகத்துக்கு மட்டுமே தீர்ப்புக் கூறும் இடத்தை மட்டும் மாற்ற சம்மதித்து ஒரே ஒருவாரம் மட்டும் தீர்ப்பைத் தள்ளிவைத்தது. அதன்படி நேற்று 27/09/2014 அன்று தீர்ப்பை வழங்கியது. 

குஜராத்தில் கொடுமைகளை நிகழ்த்திய அமீத் ஷாவை வழக்கிலிருந்து விடுவித்த சிவம் போல அல்லாமல்-பெஸ்ட் பேக்கரி வழக்கை விசாரித்த நீதிபதியைப் போலவும் அல்லாமல்- பால் தாக்கரேயை விசாரிக்கவே செய்யாத நீதியரசர் போலவும் அல்லாமல்- பாபர் மசூதி வழக்கை விசாரித்தவர்கள் போலவும் அல்லாமல்- அப்சல் குருவைத் தூக்குக் மேடைக்குஅனுப்பிய நீதிபதியைப் போலவும் அல்லாமல்- நீதிபதி குன்ஹா அவர்கள் இந்திய சரித்திரத்தில் இதுவரை யாரும் வழங்காத தீர்ப்பை எவருக்கும் அஞ்சாமலும் அதேநேரம் சட்டவிதிகளை மிஞ்சாமலும் வழங்கினார். இந்தியாவே அதிர்ந்தது.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஜெயலலிதா எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுகிறார். அதனால் அவரது முதல்வர் பதவியையும் இழக்கிறார். அவரது அமைச்சரவையில் இருக்கும் அனைத்து அமைச்சர்களும் உடனே பதவிகளை இழக்கின்றார்கள். தீர்ப்பை அடுத்து முதல்வர் ஜெயலலிதாவின் காரில் இருந்து தேசியக் கொடி அகற்றப்பட்டது. தீர்ப்பைக் கேட்க நீதிமன்ற வளாகத்துக்கு வந்த ஜெயலலிதா தனது காரில் தேசியக் கோடியை பறக்கவிட்டுக் கொண்டு வந்த “தெனாவெட்டை” அகில இந்தியாவும் தொலைக் காட்சிகளில் பார்த்து வியந்தது வேறு விஷயம்.

செல்வி ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. அரசியல்வாதி ஒருவருக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து தீர்ப்பு எழுதப்பட்டுள்ளது இதுவே முதல் முறை. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களுக்கு தலா ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் அனைவரும் பரப்பன அக்ரஹாரத்தின் மத்திய சிறையில் உடனே அடைக்கப்பட்டனர். தீர்ப்பின் எதிரொலியாக ஜெயலிதாவின் அரசியல் வாழ்க்கையில் 10 ஆண்டுகளுக்கு வார்டு உறுப்பினர் தேர்தலில் கூட போட்டியிட இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சராகப் பதவி ஏற்றபோது தமிழ்நாட்டை இந்தியாவின் முதல்நிலை மாநிலமாக மாற்றுவேன் என்று சப்தமிட்டு பதவியேற்ற செல்வி ஜெயலலிதா, முதல்வர் பதவியில் இருக்கும்போதே ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்ற நாட்டின் 'முதல்' முதல்வர் என்ற பெயரை எடுத்து சிறப்பு கவனம் பெற்றுள்ளார் என்பதை ஒரு தமிழன் என்கிற முறையில் வேதனயுடன் பதிவு செய்ய வேண்டி இருக்கிறது. 

இந்தத் தீர்ப்பின் மூலம் சட்டத்தின் மீதும், நீதிமன்றங்களின் மீதும் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பெருமளவில் அதிகரித்திருக்கிறது. ஊழல் மூலம் சொத்துக்குவிக்க நினைப்பவர்களுக்கு இந்த தண்டனையை அவர்கள் பாடமாக எடுத்துக் கொண்டால் சரியான பாடமாக அமையும். மாறாக, இந்த வழக்கில் ஜெயலலிதா தரப்பு செய்திருந்த கவனக் குறைவான அம்சங்களை சரிசெய்து ஊழல் மூலம் சொத்து சேர்க்க ஆரம்பித்தால் இந்திய மக்களை யாராலும் காப்பாற்ற இயலாது. 

சட்டமன்றத் தேர்தலிலும், உள்ளாட்சி மன்றத் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் மக்கள் மன்றத்தில் தனது செல்வாக்கை நிலை நிறுத்தி வெற்றி பெற்ற அமமையாரால் நீதிமன்றத்திலும் வெற்றிபெற்று வர முடியுமென்று அதிமுக தொண்டர்கள் மிகவும் நம்பிக்கையொரு இருந்தார்கள். இந்த வழக்கு ஒரு பொய் வழக்கு; இதற்கு முன் சில வழக்குகுகளில் தன்னை நிரபராதி என்று நிருபித்ததுபோல் இந்த வழக்கிலும் மீண்டு வருவார் என்று அதிமுகவின் உயிர்த் தொண்டர்கள் பட்டாசுக் கட்டுகளுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். 

ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. தங்களின் இதய தெய்வம் என்று அவர்கள் கொண்டாடிய அவர்களின் பெற்ற அம்மாவின் இடத்தில் இருந்த அம்மையாருக்கு சிறை என்றதும் அவர்களால் அந்த உண்மையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் பலர் அழுதனர். பல பெண்கள் மார்பில் அடித்துக் கொண்டு அழுதனர். உணர்ச்சிவசப்பட்ட தொண்டர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை வெறியாட்டங்களைத் தொடங்கினார்கள். பல இடங்களில் பேரூந்துகள் அடித்து உடைக்கப்பட்டிருப்பதுடன், பல பேரூந்துகள் தீ வைக்கப் பட்டன. அ.தி.மு.க. தலைமை அலுவலகம் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எதிர்க்கட்சித் தலைவர்களின் உருவபொம்மைகள் எரிக்கப்பட்டு வருகின்றன. கடைகளை அடைக்கச் சொல்லி அப்படி அடைக்காதவர்களை அடித்து உதைத்து பொருள்களை நொறுக்கினார்கள். அச்சப்பட்ட பொதுமக்கள் அலறி ஓடிய காட்சிகள் தொலைக் காட்சிகளில் காட்டப்பட்டன. பள்ளிகளுக்கு சென்ற குழந்தைகள் பாதிவழியில் வீடு திரும்ப முடியாமல் நின்ற பரிதாபங்களைக் காண முடிந்தது. ஆனால், இவற்றையெல்லாம் தடுக்க வேண்டிய காவல்துறையோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. . நகரங்களின் முக்கிய இடங்களில் கூட பாதுகாப்பிற்காக காவலர்களை காண முடியாமலிருந்தது.

காவல்துறையையும் ஒரேயடியாக குற்றமும் சொல்லிவிட இயலாது. காரணம் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தவர்களிடமிருந்து அவர்களுக்கு முறையான உத்தரவுகள் முன்கூட்டியே வழங்கபப்டவில்லை என்று கூறுகிறார்கள். தமிழகத்தில் பதற்றம் நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், பிளசன்ட் ஸ்டே வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்ட போது தருமபுரியில் வேளாண் பல்கலைக் கழக மாணவிகள் உயிருடன் கொளுத்தப்பட்டது போன்ற வன்முறைகள் எதுவும் நிகழாமல் தடுக்க ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும். 

நீதிமன்ற வளாகத்துக்கு வரமுன்பே காவல்துறையை கையில் வைத்திருந்த முதலமைச்சர் ஜெயலலிதா , இதற்கான உத்தரவுகளை பிறப்பித்துவிட்டு வந்திருக்க வேண்டும். அல்லது தீர்ப்பு வழங்கப்பட்ட உடனாவது தமிழக ஆளுனரும், தலைமைச்செயலாளர், காவல்துறை தலைமை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். என்ன செய்வது தீர்ப்பு வழங்கப்பட்ட நேரம் ஆளுநர் உண்டுவிட்டு உறங்கிக் கொண்டிருந்த நேரம். தமிழகம் தீப்பற்றி எரிந்த போது ஆளுநர் மாளிகையில் குறட்டை சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. அன்று மாலைதான் சாவகாசமாக காபி எல்லாம் குடித்துவிட்டு ஆளுநர் உயர் காவல்துறை அதிகாரிகளை சந்தித்தார் என்று செய்தி வந்தது. 

அதற்குள் துக்கம் தாளாமல் காஞ்சீபுரத்தில் ஒரு பேருந்து தீக்குளித்துக் கொண்டது. சாலையில் கிடந்த கற்கள் எல்லாம் அம்மா என்று கதறிக் கொண்டு போவோர் வருவோர் மீது பூச் சொரிய ஆரம்பித்தன. கந்துவட்டிக்கு வாங்கி சிறு கடை நடத்தியவர்கள் எல்லாம் தங்களின் உடைக்கபட்ட கடைகளைப் பார்த்து கண்ணீரை பூமாலையாக சூட்டினார்கள். 

இந்தத்தீர்ப்பு செல்வி ஜெயலிதாவின் அரசியல் வாழ்வை அஸ்தமிக்கச் செய்துவிடுமா என்றால் செய்யாது என்றுதான் சொல்ல வேண்டும். காரணம் மாபெரும் வெற்றிகளைப் பெற்ற அவரது கட்சி, அவரது கட்டுப் பாட்டில்தான் இருக்கிறது; இருக்கும். புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் கரங்களில் ஒரு ரிமோட் ஆகத்தான் செயல்படுவார் என்று கூறலாம். இதனால் அதிமுக அழியாது. ஆனால் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ள இந்த பின்னடடைவை தம்பி எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பிஜேபி போன்ற இதுவரை காலூன்ற முடியாத கட்சிகள் தமது மத்திய செல்வாக்கை வைத்து அதிமுக கட்சியினர் சிலரைத் தன்பக்கம் இழுக்க முயலலாம்.

இன்னொன்றையும் இந்த நேரத்தில் நாம் கூறியே ஆகவேண்டும். “அரசியல் பிழைத் தோர்க்கு ஆறாம் கூற்றாகும் “ என்ற சிலப்பதிகார வரிகளுக்கொப்ப அரசியல் பதவிகளைப் பயன்படுத்தி சொத்து சேர்த்தவர்களின் வரிசையில் நேற்று லாலு பிரசாத் – இன்று ஜெயலலிதா- நாளை இன்னும் சிலரும் வருவதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீதான வழக்குகளும் நல்ல முறையில் நடத்தப்பட்டு ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பைப் போல வழங்கப்பட்டு அவர்களது சொத்துக்களும் “நிதி”களும் நீதியாகப் பறிமுதல் செய்யப்பட வேண்டும். 

இன்று உலகத்தின் கண் முன் ஜெயலலிதாவின் குற்றம் நிருபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டு இருக்கிறார். இதற்கும் அப்பீல் இருக்கிறது. ஜாமீன் இருக்கிறது. 

“வெறும் வேடிக்கை மனிதரென நினைத்தாயோ “ என்று பாடிக் கொண்டும் 
“நான்தாண்டி காத்தி ! 
நல்ல முத்து பேத்தி !” என்றும்,

“வாடியம்மா வாடி!
வண்டாட்டம் வாடி! 
ஆத்தங்கரைப் பக்கத்திலே
காத்திருக்கேன் வாடி! “ என்றும் 

மூச்சடக்கி ஜெயலலிதா அரசியல் அரங்கில் கபடி ஆட மீண்டும் வருவார். 

ஜெயலலிதாவின் பலம் எம்ஜியார் என்ற தமிழக மக்கள் மனதிலிருந்து மாற்ற முடியாத முகவரி. அந்த முகவரிக்காக மக்கள் ஜெயலலிதாவை மன்னிக்கத் தயாராக இருப்பார்கள். அண்மையில் இதேபோல் ஊழல் வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவ் ஜாமீனில் வந்து சட்டமன்றத் தொகுதிகளில் அவரது கட்சியை வெற்றி பெற வைத்திருக்கிறார் என்பதை நாம் உதாரணமாக எடுக்கலாம். 

ஜெயலலிதா ஒரு போராடும் குணமுள்ள துணிச்சலான பெண்மணி. அவர் இன்னும் போராடுவார். இத்தோடு ஓய்ந்தார் என்று யாரும் கணக்குப் போட்டுவிடக் கூடாத ஒரு பெண் வேங்கைதான் அவர் என்பதையும் உணர வேண்டும். ஆனால் இதே முறையில் இன்னும் தீர்ப்பு வழங்கப் படவேண்டிய ராஜாதிராஜாக்களும் ராஜாத்திகளும் இனிய மொழி பேசும் கண்மணிகளும் கலாக்களும் தயாக்களும் வழக்கு மன்றங்களில் வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நாம் மறக்கக் கூடாது. சட்டம் அனைவருக்கும் தன் கடமையை இதே ரீதியில் செய்ய வேண்டும். ஊரை அடித்து உலையில் போட்ட ஒருவர்கூட தப்பித்து விடக் கூடாது. 

இந்த அலசல் கட்டுரையை நிறைவு செய்யும் முன்பு ஒரு ஆதங்கத்தை வெளிப்படுத்த விரும்புகிறோம். செல்வி ஜெயலலிதா அவர்களைப் பொறுத்தவை தனிப்பட்ட முறையில் ஒரு புத்திசாலி; எட்டு இந்திய மொழிகளை சரளமாகப் பேசக் கூடியவர். தோற்றாலும் துவண்டுவிடாமல் எழுந்து நிற்கும் ஆற்றலுடையவர். எவரையும் வசீகரம் செய்யும் இயல்புடையவர். இவ்வளவு நல்ல தன்மைகள் கொண்ட ஜெயலலிதா கூடா நட்பால் தனக்குத் தானே வழிகேட்டைத் தேடிக் கொண்டாரோ என்றுதான் எண்ண வேண்டி இருக்கிறது. காரணம், தனிப்பட்ட வாழ்வில் தாய் தந்தை அண்ணன் தம்பி குடும்பம் குழந்தை என்று யாருமே இல்லாதவர், இத்தனை கோடிகளை யாருக்காக சேர்த்துவைக்க, செய்யக்கூடாத செயல்களில் ஈடுபட்டுத் தேடினார் என்பது பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. 

ஜெயலலிதா மட்டும் இப்படிப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாமல் சேவை மனப்பான்மையில் தொண்டாற்றி இருந்தால் அன்னை தெரசா போன்றவர்களுடன் ஒப்பீடு செய்யும் அளவுக்கு அவர் உயர்ந்து இருக்க முடியும். உண்மைத் தொண்டாற்றுகிற ஒரு தலைவியாக அவர் வாழ்ந்து இருந்தால் தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு ஒரு வீட்டில் அவர் தங்கினாலே அவருக்குப் போதுமானதாக இருந்து இருக்கும். ஆனால் ‘மேய்கிற மாட்டை நக்குக்கிற மாடு கெடுத்தது போல்’ அதிகார போதையை அவருக்கு ஊட்டி இன்று ஒரு நல்ல சேவைத் தலைவியாகவும் உண்மையான புரட்சித் தலைவியாகவும் உருவெடுக்க வேண்டியவரை சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளியது விதியா அல்லது வீணர்களின் கைப்பாவையாக செயல்பட்ட சதியா? காலம் பதில் சொல்லும்.

இபுராஹீம் அன்சாரி

ஜெய்தைக் காணவில்லை! 12

அதிரைநிருபர் பதிப்பகம் | September 28, 2014 | , , ,

ஹாரிதாவுக்கு, அன்று வீட்டை விட்டு வெளியில் செல்லவேண்டிய கட்டாயம். வீட்டில் தன் இளவயது மகனும் அவரின் மனைவியும் மட்டுமே இருந்தனர். வெகு நேரம் சென்ற பின்னும், வெளியில் சென்ற ஹாரிதா வீடு திரும்பவில்லை!

‘என்னவாயிற்றோ?’ என்ற எண்ணத்தில் மூழ்கியிருந்த ஹாரிதாவின் மனைவி, தன் வீட்டைச் சூழ இருந்த வட்டாரத்தில் போய்ப் பார்க்கலாம் என்ற எண்ணம் எழவே, மகன் ஜெய்தைத் தூக்கிக்கொண்டு வெளியில் கிளம்பினாள்.

தான் தேடவேண்டிய இலக்கு எதுவென்று தெரியாத அளவுக்குத் தன் வீட்டை விட்டு வெகு தொலைவுக்குச் சென்றுவிட்டாள்!  பாலை வெளியில் எவ்வளவு தொலைவுக்கு வந்துவிட்டோம் என்று அத்தாய் அறிய முடியாத நிலை!

அப்போதுதான், எதிர்பார்க்காத அந்த நிகழ்ச்சி நடந்தது!  வீட்டுக்கு வெளியில் விளையாடும் சிறார்களைப் பிடித்துச் சென்று, அடிமைச் சந்தையில் விற்றுவிடும் கள்வர் கூட்டம் அவ்வப்போது அந்தப் பாலைவனத்துச் சிற்றூருக்கு வந்து செல்லும்!  சிறுவர் ஜெய்தைக் கண்டுவிட்டான் கள்வன் ஒருவன்.  குதிரையில் ஏறிவந்த அக்கள்வன்,   விரைந்து ஜெய்தின் தாயிடம் நெருங்கி, சிறுவன் ஜெய்தைக் கவர்ந்து சென்றான்!  ஆண்டு தோறும் மக்காவின் புறநகர்ப் பகுதியான ‘உக்காஸ்’ எனும் சந்தையில் சிறுவனை நல்ல விலைக்கு விற்றுவிட்டுத் தன் அடுத்த முயற்சிக்கு விரைந்தான் அக்கள்வன். 

வீடு திரும்பிய ஹாரிதா, தன் மகன் ஜெய்து பாலைவனத்துக் கொள்ளைக் கூட்டத்தாரால் பிடித்துச் செல்லப்பட்ட செய்தியைக் கேட்டு அதிர்ந்தார்! உக்காஸின் அடிமைச் சந்தையில் சிறுவன் விற்கப்பட்டிருப்பானோ என்ற ஐயத்தில், தன் தம்பியுடன் அங்கு வந்து சேர்ந்தார் ஹாரிதா. உக்காஸின் குறுக்கு நெடுக்கில் தேடியும், ஜெய்தைக் காணவில்லை.  ஒவ்வோர் ஆண்டும் இந்த முயற்சியில் ஈடுபட்டு ஏமாறிப் போவதுதான் ஹாரிதாவின் வழக்கமாகிப் போயிருந்தது.

இதற்கிடையில் ஜெய்து காணாமல் போய் பல்லாண்டுகள் கழிந்துவிட்டிருந்தன. தந்தை  தனது முயற்சியில் வெற்றி பெறுவாரோ தோல்வி அடைவாரோ, அவருக்குத் தெரியாது.  ஒவ்வோர் ஆண்டும் ‘உக்காஸ்’ சந்தைக்கு வந்து மகனைத் தேடிவிட்டு வெற்றுக் கையோடு திரும்புவார் ஹாரிதா. மக்காவாசிகள் யாரிடமாவது மடல் எழுதிக் கொடுத்தனுப்பலாமே என்று கருதி, எழுதத் தொடுத்தார் ஹாரிதா. பாலைவனத்து மக்களின் வழக்கமான ஆற்றாமைக் கவிதை, கவிஞரான  ஹாரிதாவின் வாய்மொழியாக வெளிப்பட்டது:    

தமிழ்க் கவிதையில் ஹாரிதாவின் ஆற்றாமையைக் கேளுங்கள்:

அழுதேன்  ஜெய்தின்  நினைவால்  யானோ
அறியேன்!  செய்வதை  அறியேனே!
வழுவே  யின்றி  உயிரோ  டிங்கே
வருதல்  உண்டோ  என்றறியேன்!
சத்திய  மாகத்  தெரியா  தெனக்குச்
             சங்கதி யைநீ கேட்டாலும்
நித்திய வாழ்வோ? நிலையறு வாழ்வோ?
நினைத்துப்  பார்க்க  நேரமிலை! 
கவியால்  உணர்த்த  முடியா  நிலையில்
கதியற்  றுள்ளேன்  என்செய்வேன்?
புவியோ  டெனது  வாழ்க்கை  முழுதும்
புலம்பல்  தானோ?  யானறியேன்!
பேரொளி  யோடு  சூரியன்  எழுந்த
பெற்றியில்  அவனின்  புகழ்வாழ்வை
நேரடி  யாகக்  கண்டு  மகிழ்ந்தேன்
நினைவில்  பசுமை  யாகிறது!
பறந்து  சென்ற  சுகந்த  மணமும்
பரிந்து  மேன்மை  யுற்றதுவே.
சிறந்த  நினைவோ  மறந்து  போகச்
சிதைந்து  விட்டதை  உணர்கின்றேன்.
மகனைத்  தேடி  அலைந்து  வந்தேன்
மண்ணும்  மலையும்  நீண்டிடவே
பகலும்  இரவும்  மாறிப்  போகப்
‘பாலைக்  கப்பல்’  அழுகிறதே!
இதுதான்  எனது  வாழ்வின்  கதியோ?
எவர்க்கும்  என்கதி  வேண்டாமே!
எதுதான்   நினைவில்  வந்து  புகுந்தே
இயலாய்  நின்று  முடிகிறது?
உன்னைப்  பிரிந்த  தோழரும்  உன்றன்
உடன்பிறப்  புகளும்  என்மகனே!
‘என்னே  செய்வோம்’ என்றே  ஏங்கி
இளைத்துப்  போனார்  அறியாயோ?

ஹாரிதா தமது ஆற்றாமையினைக் கவிதையாக மடல் எழுதி, தன் மகன் மக்காவில்தான் இருக்கக் கூடும் என்ற கணிப்பில், அம்மடலை மக்காவாசி ஒருவரிடம் கொடுத்தனுப்பி, ஜெய்திடம் சேர்த்துவிடுமாறு கூறினார். மக்காவின் அன்றாட நிகழ்வுகளை அறிந்திருந்த அவர், அன்னை கதீஜாவின்(ரலி) வீட்டில் இருந்த ஜெய்திடமே நேரில் கொடுத்துப் படிக்கச் சொன்னார்.

கண்களிலிருந்து நீர்த் திவலைகள் ஒழுக, அக்கவிதை மடலைப் படிக்கத் தொடங்கினார் ஜெய்து.  அதே வேளை, தான் வளரும் இல்லமோ புனிதத்தின் பிறப்பிடம்.  அதை விட்டு வேற்றிடத்திற்குச் செல்ல அவருக்கு மனமில்லை. அதுவே அவரது முடிவு.  தனக்கு வந்த தந்தையின் கவிமடலுக்கு, ஜெய்தும் தம் மறுமொழியாகக் கவிதையிலேயே மறுமடல் எழுதினார்:

எந்தையும் தாயும் என்னிலை யறிவீர்!
  விந்தையா யிறையின் வீட்டினை யடுத்த
பள்ளத் தாக்கில் பதிந்துவாழ் கின்றேன்.
உள்ளக் கவலை ஒதுக்குக! என்பால்
ஓடிக் களைத்தும் ஒட்டகை ஏறித்
தேடியும் வாரேல்! செல்வச் செழிப்புடன்
கோத்திரச் சிறப்பும் குலத்தின் உயர்வும்
  காத்திடும் வீட்டில் களிப்புடன் உள்ளேன்.

மக்காவின் ‘உக்காஸ்’ சந்தையில் அழகுச் சிறுவர் ஜெய்தை, ஹக்கீம் இப்னு ஹிஸாம் விலைக்கு வாங்கினார்.  நபி (ஸல்) அவர்களின் முதல் மனைவி கதீஜா (ரலி) அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர் ஆவார் ஹக்கீம்.  தம் சகோதரிக்குத் திருமணப் பரிசாக ஜெய்தை அன்பளிப்புச் செய்திருந்தார் ஹக்கீம்.

அன்னை கதீஜா(ரலி) – அண்ணல் முஹம்மது(ஸல்) தம்பதியரின் அன்பும் பரிவும் ஜெய்தின் உள்ளத்தைக் கவர்ந்து, ‘ஜெய்து என் மகன்’ என்று அண்ணல் நபி (ஸல்) அறிவிப்புச் செய்யும் அளவுக்கு, ஜெய்து அக்குடும்பத்தில் ஒருவரானார்.  அந்த நிலையில்தான் ஜெய்தின் தந்தை ஹாரிதாவும் அவரின் தம்பியும் நபியவர்களின் வீட்டைத் தேடி வந்தனர்.

அவர்களின் நோக்கம், ஜெய்தை அழைத்துச் செல்லலாம் என்பதே.  ஆனால், அக்குடும்பத் தலைவியும் தலைவரும் தன் மீது பொழியும் பாசமும் பரிவும் அச்சிறுவரின் இதயத்தில் ஆழப் பதிந்து, அறிவைப் பெருக்கிற்று. அதனால், பாசமிகு தாய்-தந்தையரை விடுத்து, நேசமிகு கதீஜா(ரலி)-முஹம்மத்(ஸல்) தம்பதியரைத் தேர்வு செய்து, நபித்தோழர்களுள் ஒருவரானார் ஜெய்து பின் ஹாரிதா (ரலி). 

அதிரை அஹ்மது

வரலாறுகள்! வழக்குகள்! வல்லரசுகள்! வடிக்கப்படும் இரத்தம்!

பாலஸ்தீனம்...

9

அதிரைநிருபர் பதிப்பகம் | September 27, 2014 | , , ,

தொடர் பகுதி - பத்து

ஒரு புறம் தோற்று முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டிருந்த சிலுவைப் போர்வீரர்கள். மறுபுறம் மதத்தைக்காக்க ஒன்று திரண்ட ஜெர்மன், பிரான்சு மற்றும் ஆங்கிலப் படைகள் என பல திசைகளிலிருந்தும் திரண்டு வந்த கிருத்துவப் படையினர் சலாஹுதீன் அவர்களைத் தோற்கடித்து பாலஸ்தீனத்தையும் ஜெருசலத்தையும் கைப்பற்ற பார் சிறுத்ததால் படை பெருத்ததோ! படை பெருத்ததால் பார் சிறுத்ததோ! என்று பரணி பாடினர்; ஒன்றுகூடினர்.

ஜெர்மன் சக்கரவர்த்தி ஃபிரடரிக் பார்பரொஸ்ஸா, பிரான்ஸ் மன்னன் பிலிப் அகஸ்டஸ், அரிமா இதயம் (LION HEART) படைத்த ஆங்கில மன்னன் ரிச்சர்ட் ஆகியோர் இந்த கிருத்துவ இன எழுச்சிக்கு தலைமை தாங்கினர். இப்படி உலகின் பல பாகங்களில் இருந்தும் சலாஹுதீன் அவர்களுக்கெதிராக இந்த மூன்று ‘பாண்டவர்’கள் ஒன்றிணைந்தனர். இந்தப் ‘பாண்டவர்’களை கச்சை கட்டி இறங்க வைத்தது அன்றைய போப்’பாண்டவர்’தான். மதத்தின் பெயரால் மத உணர்வைத் தூண்டி, இந்த இணைப்பை ஏற்படுத்துவது போப்பாண்டவருக்கு இலகுவாக இயன்றது. 

இந்தப் போரின் அரிச்சுவடி சிரியாவின் பகுதியிலிருந்த ஏக்ர் (Acre) என்ற நகரின் கோட்டையில் தொடங்கியது. கடல் மூலமாகவும் தரைவழியாகவும் ஐரோப்பியப் படை மற்றும் சிலுவைப் போர்ப்படை கோட்டையை சுற்றி வளைத்து உட்புகுந்தது. தரைவழித் தாக்குதலை மட்டுமே எதிர் நோக்கி இருந்த சலாஹுதீன் அவர்கள் சற்று தடுமாறித்தான் போனார். ஆனால் அல்லாஹ்வின் பார்வை அவர் பக்கம்தான் இருந்தது. ஆனால் அதற்குமுன் சலாஹுதீன் தான் வெற்றி பெற்ற நேரத்தில் , இறைவழியையும் நபி மொழியையும் பின் பற்றி பகைவர்களை பண்புடன் நடத்தி பத்திரமாக வெளியேற்றிய சலாஹுதீன் அவர்கள் படித்துக் கொடுத்த பாடம் மனிதப் பதர்களுக்கு முன், பயனில்லாமல் போனது. 

ஆம்! கோட்டைக்குள் புகுந்த கிருத்தவ வீரர்கள் பழிவாங்கும் போக்கில் கோட்டைக்குள் இருந்த முஸ்லிம்களை வரிசையாக நிற்கவைத்து தலைகளை சீவி குவியல் குவியலாகக் கொன்று குவித்தார்கள் படுகளத்தில் ஒப்பாரி இல்லை! ஆனால் அது படுகளம் அல்ல; கொடியவர்கள் கோலேச்சியக் கொலைக் களம். சரணடைந்த முஸ்லிம்களைக் கொல்வது கடைந்தெடுத்த கோழைத்தனம். நேருக்கு நேர் வாளெடுத்துப் போரிட்டு, தனது வீரத்தால் முஸ்லிம்களை வென்று, கொன்று இருந்தால் அதை வரலாறு கூட வரவேற்று இருக்கலாம். இவ்விதம் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை 3000 க்கு மேல் இருக்குமென்று Baha- ad- Din என்ற ஆசிரியர் குறிப்பிடுகிறார். 

முஸ்லிம்களைக் கொல்வதில் கூட பணக்காரன் ஏழை என்று பாகுபாடு வைத்துக் கொன்று குவித்தார்கள். பல வசதி படைத்த முஸ்லிம்கள் கிருத்துவர்களில் குத்தீட்டியிளிருந்து குனிந்து தப்பித்தார்கள் காரணம் அவர்களுடைய சொத்துக்கள் அனைத்தும் அவர்களின் உயிருக்குப் பகரமாக பறித்துக் கொள்ளப்பட்டன. இந்த சம்பவங்களை மிஷுதீன் என்கிற வரலாற்றாசியர் குறிப்பிடுகிறார். அது மட்டுமல்ல , ஏக்ர் (Acre) வில் இவ்வளவு அட்டூழியம் நடத்தி, அவர்கள் அந்தக் கோட்டையைக் கைப்பற்றி முஸ்லிம்களை கூட்டுக் கொலை செய்த வெற்றியை வெளிநாடுகளிலிருந்து விலைமாதர்களை வரவழைத்து அவர்களுடன் மது விருந்து படைத்துக் கொண்டாடினார்கள் என்ற வெட்ககரமான செய்தியையும் மிஷுதீன் குறிப்பிடுகிறார். 

இந்த ஆக்கிரமிப்பையும் அநியாயத்தையும் அழித்தொழிக்க சலாஹுதீன் அவர்கள் திட்டமிட்டுக் கொண்டிருந்த அதே வேளை, ஏற்கனவே உயிரைப் பணயமாக வைத்து தான் பிடித்து வைத்திருக்கும் ஜெருசலத்தை நோக்கியும் கிருத்துவப்படைகள் செல்ல எத்தனிக்கும் என்று கணக்குப் போட்ட சலாஹுதீன் அவர்கள் ஜெருசலத்துக்கான பாதுகாப்பையும் அதிகரித்து இருந்தார். இருந்தாலும் துணைக்கு ஒரு கரம் இருந்தால் நல்லது என்று எண்ணினார். அதனால் மொராக்கோவுக்கு தனக்கு உதவும்படி தூது அனுப்பினார். ஆனால் அங்கிருந்து அவருக்கு எவ்வித உதவியும் கிடைக்கவில்லை. 

இந்த நேரத்தில் ஒன்றைக் குறிப்பிட வேண்டும் சலாஹுதீன் அவர்கள் இப்படி சண்டைச் சிக்கலில் மாட்டிக் கொண்டிருந்த அந்த நேரம், மொராக்கோவிலிருந்தும் உதவி கிடைக்காத நேரம் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் தலைநகரமான பாக்தாத் இருந்தது. ஆனால் சலாஹுதீன் அவர்களுக்கு உதவ வேண்டுமென்ற எண்ணம் ஏனோ கலிபாவுக்கு உண்டாகவில்ல. இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியின் சுல்தானாகிய சலாஹுதீன் அவர்கள், ஒரு புறத்தில் எதிரிகளுடன் போராடிக் கொண்டு இருக்கிற நிலையில் பொறுப்பான கலிபா பொடுபோக்காக இருந்தார். ஆக, தலைமையின் தலையீடு இல்லாமலேயே ஒரு சிலுவைப் போரை தனியாக நின்று சலாஹுதீன் அவர்கள் சமாளித்தார்கள் என்பது சரித்திரத்தின் வியப்பான குறியீடு.

தான் நினைத்தபடியே பாலஸ்தீனத்தை நோக்கி ஜெருசலத்தைக் கைப்பற்றும் நோக்கத்துடன் ஒரு மிகப் பெரிய ஜெர்மானியப் படை, ஜெருசலத்தை நோக்கி முன்னேறுவதையும் அதைத் தலைமைதாங்கி நடத்தி வருபவர் ஜெர்மானிய சக்கரவர்த்தியாகிய ஃபிரடரிக் பார்பரொஸ்ஸாவே என்பதை அறிந்த சலாஹுதீன் அவர்கள் அதிர்ச்சி அடைந்தாலும் அதன் பின் நடந்த நடப்புகள் அல்லாஹ் அவரை நைல் நதியின் நட்டாற்றில் விட்டுவிடவில்லை என்று பாரோர்க்குப் பறை சாற்றியது. ஜெருசலமும் பாலஸ்தீனமும் அர்ப்பணிப்புகளின் நாயகன் சலாஹுதீனுக்கே என்று அல்லாஹ் விதி வகுத்து இருந்ததை ஜெர்மானிய சக்கரவர்த்தியல்ல அவரது பாட்டனே வந்தாலும் மாற்ற முடியவில்லை. 

படைகளை வழி நடத்திக் கொண்டிருந்த ஜெர்மானிய சக்கரவர்த்தி ‘பதறிய காரியம் சிதறும்’ என்ற பழமொழியின் இலக்கணத்துக்கு இலக்காகி நடு ஆற்றில் தலை குப்புற விழுந்தார். சலீஃப் என்ற ஆற்றில் விழுந்தவரைக் காப்பாற்ற முடியவில்லை. இதனால் அவரது படையும் நிலை குலைந்து போய், இறந்து போன சக்கரவர்த்தியின் மகன் தலைமையில் லெபனானின் டயர் நகரம் அடைந்தனர். எதிர்பாராத விதமாக மன்னனின் மகனும் இறந்துவிட எஞ்சிய சிறுபடை மட்டும் (Acre) ஏக்ர் வந்தடைந்தது. ஒரு வேளை திட்டமிட்ட படி முழு ஜெர்மானியப் படை பாலஸ்தீனம் வந்திருந்தால் சரித்திரம் அன்றே மாறி இருக்க வாய்ப்பிருந்தது. சூழ்ச்சிக்காரர்களிளெல்லாம் இறைவனே பெரிய சூழ்ச்சிக்காரன் என்று அறியாத போப்பாண்டவர் இன்னொருவரின் தலைமையில் பெரிய படையை அனுப்பினார். ஆனால் எந்தத் தண்ணீரிலும் அவர்களது பருப்பு வேகவில்லை. 

புதிதாக வந்த கிருத்தவ வீரர்களுடன் கூடவே போர் மிகவும் தீவிரமாக நடைபெற்றது; ஓராண்டு ஓடியும் போனது ஆனால் வெற்றி யாருக்கு என்று இன்னும் தீர்மானமாகாத போர் அது. இருதரப்பு வீரர்களும் சலிப்புற்ற நிலையில் ஒரு இடைக்காலப் போர் நிறுத்தம் ஏற்பட்டது. காலத்துக்கும் கரங்களில் வாளேந்தி ஓடிக் கொண்டும் போராடிக் கொண்டும் இருந்த சலாஹுதீன் அவர்களுக்கும் உடல் நலம் இல்லாமல் போனதால் சற்று ஓய்வும் தேவைப் பட்டது. மருத்துவர்கள் சொல்லியபோதேல்லாம் படுத்துப் பழகாத சலாஹுதீன் அவர்கள் தனது உடலே ஒய்வு தேவை என்று சொல்லியதால் , இடைக்கால போர் நிறுத்தத்துக்கு சம்மதித்து சற்று ஓய்வெடுத்தார். ஆனால் இந்த இடைக்காலம் எதிர்களுக்கு தங்களை சீர்படுத்திக் கொள்ளவும் புதிய வியூகங்கள் அமைப்பதற்கும் அவகாசம் அளித்தது. அதையும் அவர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

இப்போதும் கூட சலாஹுதீன் அவர்களின் இரக்க குணத்தை வரலாறு பதிவு செய்து இருக்கிறது. மீண்டும் போர் நடத்த இங்கிலாந்து மற்றும் பிரான்சு மன்னர்கள் முஸ்தீபுகள் செய்து கொண்டிருக்கும்போது அவர்கள் இருவருக்கும் விஷக் காய்ச்சல் ஏற்பட்டது. அவர்களின் விஷக் காய்ச்சலை முறிக்கும் மூலிகை மருந்துகள் லெபனானில் கிடைப்பதை அறிந்த சலாஹுதீன் அவர்கள் அந்த மூலிகைகளைப் பறித்து வரச் செய்து பகைவர்களுக்கு தனது அன்பளிப்பாக அனுப்பினர். போரின்போது தனது குதிரையை இழந்த இங்கிலாந்து மன்னர் ரிச்சர்டுக்கு இழந்த குதிரைக்கு பதிலாக வைத்துக் கொள்ளும்படி குதிரையும் அனுப்பினார். இப்படி ஒருவரை நாம் எங்காவது கண்டிருக்கிறோமா? மன்னர்கள் மருந்துகளை குடித்து மறுமலர்ச்சி பெற்றனர். அடுத்த நொடி சலாஹுதீனை அழிக்க ஆர்ப்பரித்துக் கிளம்பினர். நன்றியுணர்வும் போர்நிறுத்தமும் ஒன்றாக விடைபெற்றன.

புதிய பலத்துடன் சிலுவைப் போர் வீரர்கள் அவர்களுக்குத் துணையாக சில ஜெர்மானிய ஆங்கில பிரான்சுப் படைகள் ஆகியவர்களுடன் தொடர்ந்து போர்களையே சந்தித்துவந்த சலாஹுதீன் அவர்களின் வீரர்கள் மோதிய போது, தனது வீரர்களுக்கிடையே ஒருவித முணுமுணுப்புக் கேட்டதை சலாஹுதீன் அவர்களின் காதுகள் கவனித்தன. மேலும் கோட்டைக்குள் இருக்கும் எஞ்சிய முஸ்லிம்களையாவது காப்பாற்றி விட வேண்டுமென்ற போராட்டத்திலும் பெரிய முன்னேற்றம் ஏற்படாததால் இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த போரை நிறுத்துவதற்கான ஒரு ஒப்பந்தத்தை செய்துகொள்ள வேண்டிய நிலைமை சலாஹுதீன் அவர்களுக்கு ஏற்பட்டது. ஆகவே இனி யாரும் கொல்லப்பட மாட்டார்கள் என்கிற வாக்குறுதியின் பேரில் ஏக்ர் கோட்டையை மட்டும் கிருத்துவப்படைகளுக்கு விட்டுத்தர சலாஹுதீன் அவர்கள் சம்மதித்தார்கள். கொலை முதலியவற்றில் இனி ஈடுபடமாட்டோமென்று உறுதிகூறி கிருத்துவர்களும் இதற்கு உடன்பட்டார்கள். ஆனால் நடந்தது வேறு. முஸ்லிம்களின் சிகப்பு ரத்தம் சீறிக் கொண்டு பாய்ந்து வெள்ளமாக ஓடும்படி ஒரு படுபாதகத்தை சிலுவைப் போர் வீரர்கள் உடன்பாட்டுக்கு எதிராக அரங்கேற்றினார்கள். பெண்களை மானபங்கப் படுத்தினார்கள். இரக்கம் காட்டியதற்குப் பரிசு என்றுமே மறக்க முடியாத இரத்த வடுக்கள். 

ஆங்கில மன்னன் ரிச்சர்டு தலைமையில் முஸ்லிம்களுக்கு எழுத முடியாத இன்னல்கள் ஏற்படுத்தப்பட்டன. பல நாட்டுக் கிறித்துவபடைகள் ஒன்று திரண்டிருந்தாலும் அவர்களின் ஒழுக்ககேடும் கட்டுக் கோப்பு இல்லாத அமைப்பும் அரசர்களுக்கிடையான சுமுகமான உறவின்மையும் பிரான்சு முதலிய நாட்டின் அரசர்கள் நாடு திரும்பியதாலும் சிலுவைப் போர் வீரர்கள் நினைத்துத்திருந்தபடி ஜெருசலம் உட்பட அவர்கள் இழந்த எந்தப் பகுதியையும் அவர்களால் மீட்க முடியவில்லை. ‘எலிக்கு ஒரு மஞ்சள் துண்டு கிடைத்தால் அதை வைத்து மளிகைக் கடை வைக்க நினைத்தது போல்’ ஏக்ர் கோட்டையுடன்தான் அவர்கள் திருப்தி அடைய வேண்டி இருந்தது. ஜெருசல வெற்றி கிருத்தவர்களுக்கு பகல்கனவாகவே மாறிப் போனது. இதற்குக் காரணம் அவர்கள் எதிர்த்துத் திரண்டது இறைவனின் அருள்பார்வையை நிறையவே பெற்றிருந்த சலாஹுதீன் அய்யூபி (ரஹ்) அவர்களை என்பதை நாம் உணரவேண்டும்.

ஆகவே மூன்றாம் சிலுவைப் போரிலும் கிருத்தவர்கள் தோற்கடிக்கப்பட்ட பிறகு ரம்லாஹ் என்ற நகரில் ஏற்பட்ட ஒப்பந்தப்படி ( இந்த ரம்லாஹ் நகரில்தான் பாலஸ்தீனத்தின் போராளிகளின் தலைவர் யாசர் அரபாத்தின் அடக்கஸ்தலம் இருக்கிறது – இன்ஷா அல்லாஹ் பிறகு இவைகளைப் பார்க்கலாம்) 
  • சிலுவைப் போராளிகள் டயர் நகரத்திலிருந்து ஹைஃபா வரை கடற்கரை பகுதியில் தங்கி இருப்பார்கள்.
  • கிறிஸ்தவர்கள் ஜெருசலத்திற்கு வரி ஏதும் செலுத்தாமல் சென்று கட்டுப்பாடுகளின்றி வழிபாட்டுக்காக வருவார்கள்.
  • இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளும், எட்டு மாதங்களுக்கு மட்டுமே அமுலில் இருக்கும். 
முஸ்லிம்களும் கிருத்தவர்களும் யார் வேண்டுமானாலும் ஜெருசலத்துக்கும் ஏக்ருக்கும் தாராளமாக போய்வரவும் – தாராளமாக வணிகம் செய்துகொள்ளவும் வழி ஏற்படுத்திக் கொடுத்தார். பாலஸ்தீனத்திலும் மீண்டும் மக்கள் அமைதியாக வாழ்வைத் தொடர்ந்தனர். அங்கு நிலைமை சுமூகமாகி மக்கள் நிலையான தன்மையும், பாதுகாப்பும் பெற்றவர்களாக மகிழ்ச்சி அடைந்தனர். சலாஹுதீன் அவர்கள், ஜெருசலத்துக்கு கிறிஸ்தவர்கள் வந்து போவதற்கு வசதியாக எல்லைக் கதவுகளை திறந்து வைத்தார். மேலும், புனித யாத்திரை மேற்கொள்ளும் கிருத்தவர்களுக்கு உணவு அளித்து அவர்களுடன் நல்லுறவுடன் பேசினார். இது மேற்கத்திய, கிழக்கத்திய ஐரோப்பிய மன்னர்களுக்கு சகிப்புத்தன்மைக்கும், மன்னிப்பை நாடுவோருக்கும் , நல்லுறவை விரும்புவோருக்கும் இஸ்லாம் கற்றுத்தரும் பாடமாக அமையுமென்றும் இதுவே இஸ்லாமியர்களின் சிறந்த பண்பு என்பதையும் அவர்களுக்குப் புரிய வைக்கும் என்று மீண்டும் மீண்டும் நினைத்தார் ; செய்தார்.

ரம்லாஹ் ஒப்பந்தத்திற்கு பிறகு, சுல்தான் சலாஹுதீன் அவர்கள் ஜெருசலம் வந்து தொழுதுவிட்டு போருக்குப்பின் அந்தப் புனித பூமியின் நிலவரம் மக்களின் வாழ்க்கை ஆகியன குறித்து ஆராய்ந்தார். கடற்கரை நகரங்களுக்கும் பயணித்து போரின்போது சேதமடைந்த அரண்மனைகளையும், கோட்டைகளையும் பார்வையிட்டார். அங்கெல்லாம் நகரின் மறுசீரமைப்பு மக்களின் மறுவாழ்வு மற்றும் கல்வி நிலையங்களையும், மருத்துவமனைகளையும் செப்பனிட்டு , அக்குவேறு ஆணி வேராகக் கிடந்த அரசு நிர்வாகத்தையும் நேராக்கி சீராக்கினார்.

அதன்பிறகு, ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள விரும்பினார். ஆனால், சலாஹுதீன் அவர்களின் மகன்கள் அதைத் தடுத்தனர். காரணம், வழியில் எதிரிகளால் அவர் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படலாம் என அச்சம் தெரிவித்தனர். புனிதப்பயணத்தில் போர் நிகழக்கூடிய வாய்ப்புத் தரவேண்டாம் என்ற நல்லெண்ணத்தில் இந்த யோசனையை ஏற்கவேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது.

டமாஸ்கஸில் மறுசீரமைப்பை தொடங்கி, தேவையானவர்களுக்கு வசதி செய்து கொடுத்தும், படைவீரர்களுக்கு சொந்த ஊர் செல்ல விடுப்பு கொடுத்தும், மக்களின் குறைகளை அறிந்தும் நிவர்த்தியும் செய்தார். அழகிய டமாஸ்கஸ் அவருக்குப் பிடித்த நகரமாக இருந்தது. நீண்ட நாட்களாக போரினால் ஏற்பட்ட களைப்பைப் போக்கி புத்துணர்ச்சி பெற்றுக் கொண்டார். அந்த நேரம் தான் போக நினைத்துப் போகமுடியாமல் விட்ட ஹஜ் பயணத்தை நிறைவு செய்துவிட்டு மற்ற ஹஜ்ஜாஜிகள் திரும்பிவரத் தொடங்கி இருந்தார்கள். 

புனிதப் பயணம் முடித்து திரும்பும் ஹஜ்ஜாஜிகளை வரவேற்று அவர்களைத் தழுவச் சென்றார். ஆனால், திடீரென்று அவரால் நகரக்கூட முடியவில்லை. அங்கிருந்து திரும்பியவுடன் அவரை மஞ்சள் ஜுரம் தாக்கியிருந்தது. மருத்துவர்கள் கவனித்தாலும் நோய் தீவிரமடைந்தது. இறைவனின் நாட்குறிப்பின் நாட்டத்துக்குமுன் மருத்துவம் மண்டியிட்டது.

மக்களின் நேசத்துக்கு ஆளான அவரின் உடல்நிலையின் நிலவரம் மக்களுக்கு அறிவிக்கப்பட்ட போது, எங்கும் கவலையும், பயமும் படர்ந்து பரவியது. மக்கள் கூட்டம் கூட்டமாக டமாஸ்கஸின் அரண்மனை முன் கூடி எந்நேரமும் சலாஹுதீன் அவர்களின் உடல் நலத்துக்காக இறைவனிடம் கையேந்தி கண்ணீர் சிந்தி பிரார்த்தித்தனர். பத்தாம் நாள், ஊசி மூலம் இரண்டு முறை மருந்து செலுத்திய பிறகு, சிறிது முன்னேற்றமடைந்து புன்முறுவலுடன் கொஞ்சம் பார்லி நீர் அருந்தினார். 

ஆனாலும் சலாஹுதீன் அவர்களின் மூத்த மகன் அல் மாலிக் அல் அஃப்தல் நூருத்தீன் அலி, மரணத்துடன் போராடிக் கொண்டிருக்கும் தன் தந்தை அதிலிருந்து குணமாகப் போவதில்லை என்பதை நன்கு புரிந்து கொண்டார். அதனால் அமைச்சர்களின் ஆலோசனைப்படி, கூடியிருந்த மக்கள் முன்னிலையில், தன் தந்தை சலாஹுதீன் அவர்கள் எவ்வளவு காலம் உயிரோடு இருக்கிறாரோ அதுவரை அவரே சுல்தானாக இருப்பாரென்றும், அவருக்குப் பிறகு, தான் சுல்தானாக பொறுப்பேற்பதாகவும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். இந்த சம்பவத்தை அல் கதி இப்னு ஷத்தாத் “ அந் நவாதிர் அஸ் ஸுல்தானியா” என்ற நூலில் கண்களில் நீர் மல்க குறிப்பிடுகிறார். 

அவர் நோய்வாய்ப் பட்ட பனிரெண்டாம் நாள் இரவு மேலும் உடல் நலம் சீர் கெட்டு நினைவு இழக்கும் நிலைக்கு சென்றார். மரணப்படுக்கையின் அருகே அமர்ந்து மகத்தான இறைவனின் திருக்குர்ஆன் வாசகங்களை ஓதச் செய்தனர். “அல்லாஹ்வை தவிர இறைவன் வேறு இல்லை”. எனும் வரிகள் ஓதப்படும்போது நினைவிழந்த நிலையிலிருந்த சலாஹுதீன் அவர்களின் முகம் சற்று பிரகாசமானது. அன்றைய ஃபஜர் தொழுகைக்குப் பின் அவரின் உயிர் பிரிந்து சென்றது. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். 

சலாஹுதீன் அவர்களின் மரணம் உலக முஸ்லீம் சமுதாயத்திற்கு பெரும் அதிர்ச்சியைத் தந்தது. அந்த நாள், உலக வரலாற்றில் வருத்தத்தின் நாளாக இருந்தது. மக்கள் யாவரும் தங்களை நேர்வழியில் ஆட்சி செய்த சுல்தானை இழந்த சோகத்தில் இருந்தனர். துக்கமும், இருளும், அரண்மனையிலும், நாட்டிலும், உலகம் முழுவதும் பரவி இருந்தது. அவரின் ஐந்து மகன்களும் , இளவரசர்கள் என்றும் பாராமல் அரண்மனையைவிட்டுத் தெருவுக்குச் சென்று மக்களோடு நின்று அழுதனர். ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ இம்மாநிலத்தில் ? 

இஸ்லாமிய தேசங்களின் சரித்திர நாயகனை இறைவன் தன்னிடம் அழைத்துக் கொண்டான். இறக்கும் போது அவருக்கு 57 வயதுதான் ஆகி இருந்தது. சுல்தானின் உடல் ஊர்வலமாக சென்ற போது, ஊரெங்கும் அமைதி! அமைதி !அப்படியொரு அமைதி! இந்த சோகத்தில் சுல்தான் சலாஹுதீன் அவர்களின் எதிரிகளும் உளமார பங்கெடுத்தனர். அவரின் உடல் அஸர் தொழுகைக்கு முன் டமாஸ்கஸின் அரண்மனையிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.

மூன்று வருடங்கள் கழித்து அவர் மகன் அல் மாலிக் அல் ஃபத்ல் அவர்கள், அல் உமய்யாத் மசூதியை அடுத்துள்ள வேறு ஒருவருக்கு சொந்தமான ஒரு இடத்தை வாங்கி சமாதி எழுப்பி உடலை மாற்றி அடக்கம் செய்தார். 

 ஒரு சாம்ராஜ்யத்தைக் கட்டி ஆண்ட சுல்தான் விட்டுச் சென்றவை என்ன? இன்றைய ஆப்கானிஸ்தானைத் தொடர்ந்து , லெபனானின் திரிபோலி வரை இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் எல்லையைப் பரப்பிய இந்த தன்னிகரற்ற சாம்ராஜ்ஜிய மன்னனுக்கு சொந்தமாக ஒரு சதுர அடி நிலமில்லை; தோட்டமில்லை; பண்ணை வீடுகள் இல்லை. அவர் வசித்த இடத்தில் தேடிப் பார்த்தபோது அங்கு கிடைத்தது ஐம்பத்து ஏழு திர்ஹம் ஒரு தினார் மதிப்பிலான அளவில் சில நாணயங்கள் மட்டுமே. In Saladin’s possession at the time of his death were valued as one piece of gold and forty pieces of silver. He had given away his great wealth to his poor subjects, leaving nothing to pay for his funeral. என்ற வரலாற்றின் வரிகள் சலாஹுதீன் அவர்கள் வாழ்ந்த வாழ்வின் முடிவை உலகுக்குச் சொல்கிறது. நமது விழியோரமோ கண்ணீரால் கசிகிறது. 

பெருமானார் ( ஸல் ) அவர்கள் கூறினார்கள். “உங்களது சொத்து என்பது நீங்கள் உண்டு கழித்த உணவு, உடுத்திக் கழித்த உடைகள் , நீங்கள் செய்த தர்மம் மட்டும்தான். மற்றவை நீங்கள் மற்றவர்களுக்காக விட்டுச்செல்பவையாகும்“ (முஸ்லிம் 7422) என்ற ஹதீசுக்கு ஒப்ப வாழ்ந்துகாட்டி மறைந்த மன்னர் சலாஹுதீன் அவர்கள் விட்டுச் சென்றது ஐம்பத்தி ஏழு திர்ஹம் மட்டுமே . ஆனால் உலகம் உள்ளளவும் அவரை உலகம் நினைவில் கொள்ளும் வகையில் வாழ்வாங்கு வாழ்ந்த வெற்றி வீரராகவும் வள்ளலாகவும் சரித்திரம் அவரை சந்திக்கிறது. 

தனது ஆயுட்காலம் முழுதையும் சிலுவைப் போராளிகளை எதிர்க்கவும் எதிரிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு துரோகம் செய்து காட்டிக் கொடுத்துக் கொண்டிருத்த முஸ்லீம்களை சமாளித்துக் கொண்டும் தொடர் வெற்றிகளைப் பெற்றுக் கொண்டும் இஸ்லாம் கூறும் ஈகை மற்றும் இரக்கத்தை இன்னாருக்கும் இனியோருக்கும் செய்துகாட்டிய ஒரு சுல்தான் உலகில் இருந்தார் என்றால் சலாஹுதீன் அவர்கள் ஒருவர் தான் என்று உலகம் அவரைப் பதிவு செய்துகொண்டது. இஸ்லாமிய சரித்திர உலகில் கலிஃபாக்களுக்குப் பிறகு தனித்தன்மையுடன் விளங்கிய மாமன்னர் சுல்தான் சலாஹுதீன் அய்யூபி ( ரஹ் ) ஒருவர்தான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க இயலாது. இறைநம்பிக்கையும் இரக்கமும் செயல்திறனும் ஒருங்கே அமையப்பட்ட சலாஹுதீன் அய்யூபி (ரஹ்) அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக!

சலாஹுதீன் அவர்கள் மறைந்த இரண்டாண்டுகளுக்குப் பிறகு அவர் இல்லாத துணிச்சலில் நான்காவது சிலுவைப் போரை நடத்த ஐரோப்பியக் கிருத்துவ உலகம் மீண்டும் ஒன்று திரண்டது. 

இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து பார்க்கலாம்.

இபுராஹீம் அன்சாரி

ஆசிரியர் தினம் 2014 - காணொளி அணிவகுப்பு ! 3

அதிரைநிருபர் பதிப்பகம் | September 26, 2014 | , , ,

அதிரைநிருபர் சார்பாக இந்த வருடம் 2014 செப்டம்பர் மாதம் 7ம் தேதி அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினம் மற்றும் இலக்கிய மன்ற தொடக்க விழா நிகழ்வுகள் மிகச் சிறப்பாக நடைபெற்றதை அறிவீர்கள். பள்ளிக்கூட கல்வியறிவை புகட்டிய மற்றும் தொடர்ந்து புகட்டிக் கொண்டிருக்கும் ஆசிரியர் பெருமக்களை சிறப்பித்த அன்றைய அனைத்து நிகழ்வுகளின் காணொளி அணிவகுப்பு இங்கு பதிக்கப்பட்டுள்ளது.

அதிரைநிருபர் பதிப்பகம்
தலைமை ஆசிரியர் அவர்களின் தலைமையுரை

அதிரைநிருபரின் மூத்த பங்களிப்பாளர் இப்ராஹீம் அன்சாரி அவர்களின் வாழ்த்துரை

அதிரையின் நாவலர் எஸ்.எம்.நூர் முகமது அவர்களின் வாழ்த்துரை

கா.மு.மே.(ஆ) பள்ளி பயன்பாட்டிற்கான தண்ணீர் கிடைக்க ஆழ்துளைக் கினறு அமைக்கும் வேலைக்கான கொடை வழங்கும் நிகழ்வு...

ஆசிரியர் பெருமக்களை கவுரவிக்கும் நிகழ்வு

காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தஞ்சை கல்வி மாவட்ட அளவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் பள்ளி நிர்வாகத்தால் பரிசளித்து சிறப்பிக்கப்பட்ட நிகழ்வு.

நன்றி : media magic crew

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 88 4

அதிரைநிருபர் பதிப்பகம் | September 26, 2014 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!

''உங்கள் பெற்றோர்களின் பெயரால் நீங்கள் சத்தியம் செய்திட, அல்லாஹ் உங்களுக்கு தடை செய்து விட்டான். ஒருவர் சத்தியம் செய்தால், அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்யட்டும்!  அல்லது மவுனமாக இருக்கட்டும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)  அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1707 )

"நியாயமின்றி ஒரு முஸ்லிமின் சொத்தை அபகரிக்க, ஒருவர் சத்தியம் செய்தால், அவர் மீது கோபம் உள்ள நிலையில் அவர் அல்லாஹ்வை சந்திப்பார்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்பு அல்லாஹ்வின் வேதத்திலிருந்து இதற்குச் சான்றாக எங்களிடம் நபி(ஸல்) அவர்கள் (பின்வரும்) வசனத்தை ஓதினார்கள்.

"நிச்சயமாக அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கும், தங்களின் சத்தியங்களுக்கும் பதிலாக (உலகில்) அற்பப் பொருளை வாங்குகின்றவர்களுக்கு மறுமையில் எவ்வித பங்கும் கிடையாது. மேலும்  அவர்களிடம் அல்லாஹ்  பேசவும் மாட்டான். மறுமை நாளில் அவர்களைப் பார்க்கவும் மாட்டான். (பாவங்களை விட்டும்) அவர்களைப் பரிசுத்தப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்கு நோவினை தரும் வேதனை உண்டு.(அல்குர்ஆன் : 3:77)  (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்)  (ரியாளுஸ்ஸாலிஹீன்:1712 )

"தன் சத்தியத்தின் மூலம் ஒருவர் ஒரு முஸ்லிமின் உரிமையைப் பறித்தால், அல்லாஹ் அவருக்கு நரகத்தை அவசியமாக்கி விட்டான். மேலும் அவருக்கு சொர்க்கத்தை தடை செய்து விட்டான் என்று  நபி(ஸல்) கூறினார்கள். இறைத்தூதர் அவர்களே! (அந்த உரிமை) சிறிய அளவிலாக இருந்தால்...? என்று ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார். ''அராக்'' எனும் கருவேல மரத்தின் ஒரு குச்சியாக இருந்தாலும் தான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஉமாமா என்ற இயாஸ் இப்னு ஃதஹ்லபா அல்ஹாரிஸி  (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1713 )

"பெரும் பாவங்கள் என்பது, அல்லாஹ்வுக்கு இணை வைத்தல், பெற்றோரை நோவினை செய்தல், கொலை செய்தல், பொய் சத்தியம் செய்தல் ஆகியவையாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மற்றொரு அறிவிப்பில் (கீழ்கண்டவாறு) உள்ளது. ஒரு கிராமவாசி நபி(ஸல்) அவர்களிடம் வந்து

''இறைத்தூதர் அவர்களே! பெரும் பாவங்கள் என்ன?'' என்று கேட்டார். 

''அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்'' என்று நபி   ( ஸல் )  கூறினார்கள். 

''பின்பு எது?'' என்று கேட்டார் 

''பொய் சத்தியம் செய்தல்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.

''பொய் சத்தியம் செய்வது என்றால் என்ன?'' என்று நான் கேட்டேன். 

''ஒரு முஸ்லிமின் சொத்தை பொய் சத்தியம் செய்து அபகரித்தல்'' 

என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு அம்ரு இப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1714 )

"வியாபாரத்தில் அதிக அளவில் சத்தியம் செய்வதை உங்களுக்கு எச்சரிக்கிறேன். ஏன் எனில், பொருளை (விற்பனை) செல்லுபடியாக்கும். பின்பு அதனை அழித்து விடும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன். (அறிவிப்பவர்: அபூகதாதா  (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1721)

"அல்லாஹ்வின் பெயரால் ஒருவர் பாதுகாப்புக் கோரினால், அவருக்கு பாதுகாப்புக் கொடுங்கள். அல்லாஹ்வின் பெயரால் ஒருவர் கேட்டால், அவருக்குக் கொடுங்கள். உங்களை ஒருவர் அழைத்தால், அவருக்கு பதில் கூறுங்கள். உங்களுக்கு நல்லதை ஒருவர் செய்தால் அவருக்கு (நன்றி கூறும் முகமாக) பகரம் காட்டுங்கள். அவருக்கு நீங்கள் பகரம் செய்வதற்கு எதையும் நீங்கள் பெற்றுக் கொள்ளாவிட்டால், அவருக்குப் பரிகாரம் செய்து விட்டோம் என, நீங்கள் கருதும் வரை அவருக்காக துஆச் செய்யுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) அவர்கள் (அபூதாவூது, நஸயீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1723 )

"உம்மு ஸாயிப் (ரலி) (அல்லது உம்முல் முஸய்யிப் (ரலி) அவர்களின் வீட்டிற்கு வந்த நபி(ஸல்) அவர்கள், ''உம்மு ஸாயிபே! உமக்கு என்ன? ஏன் துடிக்கிறீர்'' என்று கேட்டார்கள். ''காய்ச்சல்தான். அதிலே அல்லாஹ் பரக்கத் செய்யாதிருப்பானாக'' என்று உம்மு ஸாயிப்(ரலி) கூறினார். ''காய்ச்சலைத் திட்டாதே! நெருப்பு உலை, இரும்பின் துருவை நீக்குவது போல், காய்ச்சல் மனிதனின் குற்றங்களை நீக்கி விடும்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)  அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1726)

காற்று அல்லாஹ்வின் கருணையில் உள்ளதாகும். அது நல்லதையும் தரும். (சில சமயம்) வேதனையையும் தரும். அதை (காற்று வீசுவதை) நீங்கள் கண்டால் அதை ஏசாதீர்கள். அல்லாஹ்விடம் அதில் நல்லதைக் கேளுங்கள். அதன் தீயதிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுங்கள்'' என்று நபி(ஸல்) கூறக் கேட்டேன். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (அபூதாவூது) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1728 )

"காற்று வீசினால், ''அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க ஃகய்ரஹா வஃகய்ரமா ஃபீஹா, வஃகய்ர மா உர்ஸிலத் பிஹி, வஊது பிக மின் ஷர்ரிஹா, வஷர்ரி மா ஃபீஹா, வஷர்ர மா உர்ஸிலத் பிஹி'' என்று நபி(ஸல்) கூறுவார்கள்.

பொருள் : இறைவா! இதில் நல்லதையும், இதில் ஏற்படும் நல்லதையும், இது அனுப்பட்டதின் நல்லதையும் உன்னிடம் நான் கேட்கிறேன். மேலும் இதில் தீயதையும், இதில் ஏற்படும் தீயதையும், இது அனுப்பப்பட்டதின் தீயதையும் விட்டும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.  (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1729 )

"காபிரே!" என ஒருவர் தன் சகோதரனைக் கூறினால், இது அவர்களில் ஒருவரிடம் வந்து சேரும். இவர் கூறியது போல் அவர் இருந்தால் (அவரிடம் போய் சேரும்). இல்லையென்றால், கூறியவரிடமே திரும்பி விடும்''  என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1732)

"காபிர் என ஒருவரை அழைத்தால், அல்லது 'அல்லாஹ்வின் பகைவரே! என்று கூறினால், (கூறப்பட்டவர் அவ்வாறு இல்லை எனில்) கூறியவரிடமே அது திரும்பாமல் இருப்பதில்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன். (அறிவிப்பவர்: அபூதர் (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1733 )

"குத்திக் காட்டுபவனாக, சபிப்பவனாக, கெட்ட வார்த்தை பேசுபவனாக, தீய சொல் கூறுபவனாக ஒரு மூஃமின் இருக்கமாட்டான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.

(அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1734 )

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

இன்ஷாஅல்லாஹ் வளரும்...

அலாவுதீன் .S


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

OUR YOUTUBE CHANNEL

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Labels

அதிரை (412) கவிதை (353) இபுராஹீம் அன்சாரி (206) Alaudeen.S (195) அதிரை அஹ்மது (180) அதிரை செய்திகள் (143) ஜாஹிர் ஹுசைன் (142) MSM (136) சபீர் (127) சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக் (117) அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து (113) இஸ்லாம் (103) தாஜுதீன் (94) ஷாஹுல் ஹமீது (89) அபுஇபுறாஹிம் (69) நபிமணியும் நகைச்சுவையும் (65) இக்பால் M.ஸாலிஹ் (62) j1 (59) கல்வி விழிப்புணர்வு (57) ரமளான் (55) அதிரைநிருபர் (52) விழிப்புணர்வு (47) கல்வி (45) உமர் தம்பி (43) P.பகுருதீன் (41) அதிரை மன்சூர் (41) அதிரை மெய்சா (40) இன்று (40) படிக்கட்டுகள் (40) அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (39) கண்கள் இரண்டும் (39) a1 (37) crown (37) அரசியல் (37) நாளை (37) நேற்று (37) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (35) அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் (34) ADT (33) அதிரை அஹ்மத் (33) பேறு பெற்ற பெண்மணிகள் (33) சாஹுல் ஹமீது (32) S.அலாவுதீன் (31) ie (30) p1 (30) பேசும் படம் (30) மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் (30) வாவன்னா (28) தேனீ (27) SMF (26) அதிரை முஜீப் (26) மருத்துவம் (26) வரலாறுகள் (26) வழக்குகள் (26) ஹஜ் (26) கவியன்பன் (25) தேர்தல் (24) k1 (22) அதிரை தாருத் தவ்ஹீத் (22) இப்னு அப்துல் ரஜாக் (22) தமிழகம் (22) தமிழ் (22) துபாய் (22) நூருத்தீன் (22) பெண்கள் (22) யுனிகோட் (22) h1 (21) இபுராஹிம் அன்சாரி (21) ஏடு-இட்டோர்-இயல் (21) நினைவுகள் (21) நோன்பாளிகளே (21) பாலஸ்தீனம் (21) அபூஇப்ராஹீம் (20) என் இதயத்தில் இறைத்தூதர் (20) ஜமீல் M.சாலிஹ் (20) Sஹமீது (19) இந்தியா (19) எச்சரிக்கை (19) சேக்கனா M.நிஜாம் (19) மழை (19) adirai (18) editorial (18) loan (18) அதிரை சித்தீக் (18) கந்தூரி (18) அபுல்கலாம் (17) இயற்கை இன்பம் (17) சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக் (17) நோன்பு (17) மரணம் (17) ரமழான் (17) ஹஜ் பெருநாள் (17) ஆசிரியர் தினம் (16) கவிதை ஓர் இஸ்லாமிய பார்வை - ஆய்வு (16) பழகு மொழி (16) புதுசுரபி (16) Zakir Hussain (15) harmys (15) அபு ஈஸா (15) அப்துல் ரஹ்மான் (15) அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா (15) வரலாறு (15) Sabeer (14) ஊடகம் (14) காணொளி (14) படிப்பு (14) பெருநாள் (14) ஷஃபி அஹ்மது (14) M.H.ஜஹபர் சாதிக் (13) shameed (13) அதிரை என்.ஷாஃபாத் (13) அப்பா (13) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் (13) கடன் (13) சத்தியமார்க்கம்.com (13) சிந்தனை (13) சிந்திக்க (13) MHJ (12) ஆரோக்கியம் (12) ஒற்றுமை (12) சகோதரியே (12) தண்ணீர் (12) தாருல் இஸ்லாம் ஃபேமிலி (12) பேரூராட்சி (12) மரபு (12) மு.செ.மு.சஃபீர் அஹமது (12) யாசிர் (12) ரஃபீக் (12) AM (11) s1 (11) அனுபவம் (11) ஆமினா முஹம்மத் (11) ஒரு புத்தகம் பிறக்கிறது (11) சரிதை (11) சென்னை (11) தொடர் (11) பேசும்படம் (11) மனு நீதி (11) முஹம்மது ஃபாருக் (11) Sabeer AbuShahruk (10) aknk (10) kavithai (10) அதிரை அஹமது (10) அதிரை ஷஃபாத் (10) அதிரைநிருபர் பதிப்பகம் (10) அமீரகம் (10) அமெரிக்கா (10) அலசல் (10) ஆய்வு (10) உதவி (10) ஏக்கம் (10) கலாம் (10) தொழில் முனைவோர் (10) படிகட்டுகள் (10) பெற்றோர் (10) முகம்மது அலி ஐ.பீ.எஸ் (10) முஹம்மது யாசிர் (10) விவாதக்களம் (10) SMS (9) அரும்புப் பாட்டு (9) ஊடக போதை (9) குறுந்தொடர் (9) சிந்திக்கத் தூண்டும் சித்திரங்கள் (9) சுகாதாரம் (9) ஜகாத் (9) துஆ (9) தேடல் (9) நோன்பு பெருநாள் (9) பரீட்சை (9) பிரார்த்தனை (9) பேட்டி (9) பேரன் (9) மனித குலம் (9) ரமழான் சிந்தனை (9) வினாடி வினா (9) வேலை (9) ஹதீஸ் (9) LMS (8) ZAEISA (8) msm rafiya (8) poem (8) அதிரைக்காரன் (8) அபூ ஆசிஃப் (8) அப்துல் காதர் (8) அஹ்மது இர்ஷாத் (8) இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளி (8) இளமை (8) இஸ்லாமியப் பெண்மணி (8) எழுத்துப் பிழைகள் (8) ஏற்றம் (8) கடற்கரைத் தெரு (8) கலைக்களஞ்சியம் (8) காது (8) சத்தியமார்க்கம் (8) செய்தி (8) தக்வா பள்ளி (8) தன்னம்பிக்கை (8) தொழுகை (8) நண்பர்கள் (8) நூல் வெளியீடு (8) பள்ளிவாசல் (8) பழைய நினைவுகள் (8) பாலஸ்தீன் (8) மரபு கவிதை (8) மலேசியா (8) மாணவர்கள் (8) மாலிக் (8) முகமது யாசிர் (8) வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் (8) விபத்து (8) விவாதம் (8) வேண்டுகோள் (8) ARH (7) MSM MEERASHA RAFIA (7) SKM ஹாஜா முகைதீன் (7) SKM-H (7) history (7) அப்துர்ரஹ்மான் (7) அப்துல் மாலிக் (7) அம்மா (7) அல்குர்ஆன் (7) அல்லாஹ் (7) உணவு (7) கட்டுரையாளர் (7) கண் (7) கம்பன் (7) கல்வியாளர்கள் (7) காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி (7) கால்பந்து (7) குழந்தை (7) சிந்திப்போம் (7) சின்னகாக்கா (7) சிரியா (7) தொண்டை (7) நன்றி (7) நபிமொழிகள் (7) பயணம் (7) பள்ளிக்கூடம் (7) மின்சாரம் (7) முஸ்லிம் (7) மொழி (7) விளக்கம் (7) ஸஹாபாக்கள் (7) 2012 (6) 2014 (6) A.R.அப்துல் லத்தீஃப் (6) AEAC (6) B. Ahamed Ameen (6) Dubai (6) M H Jahabar Sadik (6) N.ஜமாலுதீன் (6) Shahnaz Sabeer Ahmed (6) UAE (6) ashik (6) m2 (6) u1 (6) அதிரை தென்றல் (Irfan Cmp) (6) அதிரை நிருபர் (6) அலசல் தொடர் (6) ஆதங்கம் (6) இதிகாசங்கள் (6) இத்தியாதி இத்தியாதி (6) இப்ராஹிம் அன்சாரி (6) இப்ராஹீம் அன்சாரி (6) இரத்தம் (6) ஊழல் (6) ஓட்டு (6) கந்தூரி போதை (6) கல்லூரி (6) கிரவ்ன் (6) கோடைகால பயிற்சி (6) தடை (6) திருமணம் (6) நகைச்சுவை (6) நட்பு (6) நண்பன் (6) நானும் ஆஃப்ரிக்காவும் (6) நூலகம் (6) புத்தகம் (6) போதை (6) மக்கா (6) முதுமை (6) முஸ்லீம்கள் (6) முஹம்மத் ஆஷிக் (6) மூக்கு (6) வணக்கம் (6) வளைகுடா (6) விமர்சனம் (6) ஷிஃபா மருத்துவமனை (6) AEM (5) SKM - H (5) Sஹமீத் (5) m1 (5) moon (5) umar history (5) அதிரை ஈத்மிலன் (5) அதிரை ஹாலித் (5) அபூஇப்ராஹிம் (5) அறிவியல் (5) அழகு (5) அழைப்பு (5) ஆங்கிலப் புத்தாண்டு (5) ஆஸ்திரேலியா (5) இடஒதுக்கீடு (5) இயற்கை (5) இரவு (5) இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா (5) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (5) உறவு (5) கணினி (5) கண்டனம் (5) கனவு (5) கவிஞர் (5) கவிதை ஆய்வு (5) காலம் (5) குர்ஆன் (5) குழந்தைகள் (5) சட்டமன்றம் (5) சந்திப்பு (5) சபீர் அஹ்மது அபுஷாரூக் (5) சான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வரை (5) சேமிப்பு (5) தக்வா (5) தாய் (5) தொட்டால் தொடரும் (5) தொலைக்காட்சி (5) நாசர் மவ்லவி (5) நீதி (5) பழமை (5) பாசம் (5) பாபர் மஸ்ஜித் (5) பாலியலுக்கு பலியாகாதே (5) பெண்ணுரிமை (5) பொருளாதாரம் (5) போட்டி (5) போராட்டம் (5) மண்ணறை (5) மனைவி (5) மற்றும் (5) மாட்டுக்கறி (5) மாற்றி யோசி (5) முஹம்மது பாரூக் (5) மூடநம்பிக்கை (5) மூன்றாம் கண் (5) ரஃபியா (5) ரியல் எஸ்டேட் (5) வட்டார உரையாடல் (5) வாழ்க்கை (5) விருந்து (5) விழி (5) வெற்றி (5) வேலை வழிகாட்டி (5) ஸதக்கதுல்லாஹ் (5) 2013 (4) B. Ahamed Ameen (4) EA (4) M. தாஜுதீன் (4) MSM மீராஷா ரஃபியா (4) MSM(n) (4) adirainirubar (4) eo1 (4) syria (4) v1 (4) அதிரை அறிஞர் (4) அதிரை பைத்துல்மால் (4) அதிரை மீரா (4) அபுஇப்ராஹிம் (4) அபுநூரா (4) அரபி (4) அறிவுரை (4) அவதூறு (4) அஹ்மது ஆரிஃப் (4) ஆங்கிலம் (4) இன்றைய சவால் (4) இபாதத் (4) இபுறாஹீம் நபி (4) இமாம் ஷாஃபி ஸ்கூல் (4) இலக்கியம் (4) இலவசம் விலை போனதே (4) இஸ்லாமிய வங்கி (4) ஈகை (4) ஈகைத் திருநாள் (4) ஈத் பெருநாள் (4) ஊரில் மழையாமே (4) ஊர்வலம் (4) எதிர்ப்பு (4) கடிதம் (4) கட்சிகள் (4) கட்டுரை (4) கலக்கல் (4) கல்வி வழிகாட்டி (4) கா.மு.மே.பள்ளி (4) காது கொடுத்து கேளுங்கள் (4) குடும்பம் (4) குழந்தை வளர்ப்பு (4) குழந்தைகளுக்காக (4) கேமரா (4) கோரிக்கை (4) கோவை அய்யூப் (4) சஹாபாக்கள் (4) சிட்னி (4) சுதந்திரம் (4) செக்கடிக் குளம் (4) டி.வி. (4) டெல்லி (4) தனிமை (4) தமாம் (4) தமிழ்மாமணி (4) தமுமுக (4) திருச்சி (4) தெரு (4) தோல்வி (4) தோழன் (4) நடை (4) நபி முஹம்மது (ஸல்) (4) நம்பிக்கை (4) நிறைவு (4) நிலவு (4) நீர் (4) நேரம் (4) நோன்பு கஞ்சி (4) பயணங்களில் பரவசம் (4) பயன் தரும் பன்மொழித் தொடர்பு (4) பழக்கம் (4) பாங்கு (4) பாதுகாப்பு (4) பிறை (4) புன்னகை (4) புரளி (4) புறம் (4) பெண் (4) பெண்மை (4) பேயோடு ஒரு ஹாய் (4) மகன் (4) மது (4) மலேஷியா (4) மலை (4) மலையேறலாம் (4) மாற்றம் (4) யார் (4) ரமலான் (4) லஞ்சம் (4) லண்டன் (4) லெ.மு.செ.அபுபக்கர் (4) லைலதுல் கத்ர் (4) வரதட்சனை (4) வலைப்பூக்கள் (4) வாப்பா (4) வாழ்கை (4) வாழ்கைப் பயணத்தில் உறவுகள் (4) வாழ்வியல் (4) விலைவாசி (4) விளையாட்டு போட்டிகள் (4) வெளிநாடு (4) வெளிநாட்டு வாழ்க்கை (4) ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (4) ஷேக் முகைத்தீன் (4) ஹைதர் அலி ஆலிம் (4) -அபூஹாஷிமா (3) 1977 (3) 23 (3) AIM (3) CMN SALEEM (3) Darul Islam Family (3) Dhua (3) TAMS (3) aamf (3) abu easa (3) avnv (3) eye care (3) shafi ahamed (3) sv (3) tmmk (3) ஃபித்ரு (3) அகம் (3) அகல இரயில் பாதை (3) அச்சம் (3) அஜிஜுதீன் (3) அண்ணா (3) அதிராம்பட்டினம் (3) அதிரை வரலாறு (3) அன்புடன் மலிக்கா (3) அபு இஸ்மாயில் (3) அபுஈசா (3) அபுசாருக் (3) அபுபக்கர் (3) அப்துர் ரஹீம் ஜமீல் (3) அமைதி (3) அரஃபா (3) அரஃபாத் (3) அறிக்கை (3) அறிவிப்பு (3) அலாவுதீன் (3) அவசரம் (3) ஆம்புலன்ஸ் (3) ஆய்வுக் கட்டுரை (3) ஆவணப்படம் (3) ஆஷிக் அஹமது (3) இசை (3) இட ஒதுக்கீடு (3) இட ஒதுக்கீடும் (3) இன ஒதுக்கீடும் (3) இனிக்க (3) இன்று ஒரு தகவல் (3) இரயிலடி (3) இரயில் (3) இர்ஷாத் (3) இறைத்தூதர் (3) இலக்கணம் (3) இலங்கை முஸ்லீம்கள் (3) இலவசம் (3) இழப்பு (3) இஸ்மாயில் நபி (3) இஸ்லாமிய ஆட்சி (3) உரையாடல் (3) உலக செய்திகள் (3) உலகம் 2010 (3) உள்ளாட்சி தேர்தல் (3) ஊக்கம் (3) எம்.காம். (3) எம்ஜிஆர் (3) ஒடுக்கு இடர் (3) ஒளரங்கசீப் (3) கடல் (3) கடுதாசி (3) கமிட்டி (3) கருகும் காதல் (3) கருணாநிதி (3) கலந்துரையாடல் (3) கல்வித் தந்தை (3) கா.மு.கல்லூரி (3) காதிர் முகைதீன் (3) குடி (3) குணம் (3) குற்றாலம் (3) குளம் (3) குளிர் (3) குழப்பம் - ஆலோசனை - தீர்வு (3) கூடங்குளம் (3) கேள்விகள் (3) கொடைக்கானல் (3) சபிதா காதர் (3) சமோசா (3) சம்சுல் இஸ்லாம் சங்கம் (3) சவுதிஅரபியா (3) சஹன் (3) சாகுல் ஹமீத் (3) சாப்பாடு (3) சிக்கனம் (3) சிங்கப்பூர் (3) சுத்தம் (3) சுனாமி (3) செக்கடி மோடு (3) செலவு (3) ஜமீல் M.ஸாலிஹ் (3) டாக்டர் (3) த.மு.மு.க. (3) தந்தை (3) தமிழ் வளர்ந்த நினைவுகள் (3) தர்கா (3) தர்பியத் (3) தாய்மை (3) தினசரிகள் (3) திமுக (3) தியாகத் திருநாள் (3) திருக்குர்ஆன் (3) திறன் (3) தீவிரவாதம் (3) தொப்பி (3) தோழர்கள் (3) நடுத்தெரு (3) நபி (3) நாஞ்சிலன் (3) நிஜாம் (3) நினைக்க (3) நிம்மதி (3) நேர்மை (3) நேர்வழி (3) நோய் (3) படிப்பினை (3) பட்ஜெட் (3) பட்டம் (3) பணம் (3) பத்ரு யுத்தம் (3) பயணக் கட்டுரை (3) பயம் (3) பயான் (3) பயிற்சி முகாம் (3) பரிசு (3) பாராளுமன்றம் (3) பாலியல் வன்முறை (3) பினாங்கு (3) பிப்ரவரி 14 (3) புண்ணியவான் (3) பெண் கல்வி (3) பெருநாள் சந்திப்பு (3) பேய் (3) பொய் (3) மகள் (3) மதமாற்றம் (3) மதீனா (3) மதுவிலக்கு (3) மனது (3) மனிதம் (3) மனிதவளம் (3) மன்னிப்பு (3) மலரும் (3) மவுனம் (3) மஹர் (3) மாடு (3) மாட்டுகறி (3) மார்க்க சொற்பொழிவு (3) மார்க்கக் கல்வி (3) மின்னஞ்சல் (3) மு.செ.மு. (3) முகநூல் (3) முத்துப்பேட்டை (3) முன்னாள் மாணவர்கள் (3) முற்போக்கு கூட்டணி (3) முஸ்லிம் சாதனை (3) மூக்கு கண்ணாடி (3) மூளை (3) மெதுவடை (3) மெளனம் பேசியதே (3) மேகம் (3) மோடி (3) ரசனை (3) வட்டி (3) வதந்தி (3) வரவேற்பு (3) வலைக்காட்சி (3) வாக்கு கொடுத்தல் (3) வாங்க (3) வாடா (3) வாழ்த்து (3) வாவன்னாசார் (3) விடுதலை (3) விடுப்பு (3) விண்ணப்பம் (3) வித்தியாசமானவர்கள் (3) வின்வெளி (3) விருந்தோம்பல் (3) விவாதக் களம் (3) வேகம் (3) வேலை வாய்ப்பு (3) ஷேக் ஜலாலுதீன் (3) ஸஹாபிய பெண்கள் (3) ஹராம் (3) +2 தேர்வு முடிவுகள் (2) 06122010 (2) 10 வகுப்பு 2010 (2) 1995 (2) 80/90 (2) ABM (2) AET (2) December-6 (2) ECR சாலை (2) ENT (2) HAJ 2012 (2) IAS தேர்வு (2) IPL (2) KMHSc. (2) KVS. (2) Lives (2) M.Y.முஹம்மத் (2) Motor Bike Riders (2) NAS (2) Rafeeq (2) Risky (2) SELAMAT HARI RAYA (2) Shahnaz (2) Student (2) U.A.E. (2) affa (2) air india (2) alumni (2) an news (2) book (2) broad gauge (2) camera (2) cmp (2) cute (2) decision (2) diabetes (2) do not disturb (2) dua (2) eye (2) facebook (2) flash back (2) food (2) india (2) library (2) live (2) making of படிக்கட்டுகள் (2) marriage (2) mk1 (2) motivation (2) mychoice (2) networking (2) news (2) password (2) peer mohammed (2) politics (2) prayer (2) q12 (2) ramadan (2) shafi (2) silence please (2) tntj (2) walking (2) www.adirainirubar.in (2) yasir (2) youth (2) ஃபெஸ்டிவல் (2) ஃபோட்டோகிராஃபி (2) அ.ர.ஹிதாயத்துல்லாஹ் (2) அஃப்சல் ஹுசைன் (2) அசத்தல் மொழி (2) அசத்தல் மொழிகள் (2) அச்சு (2) அணு உலை (2) அதி அழகு (2) அதிமுக (2) அதிரை உலா (2) அதிரை எக்ஸ்பிரஸ் (2) அதிரை கல்விச் சேவையகம் (2) அதிரை பசுமை 2020 (2) அதிரை மொழி (2) அதிரைகாரன் (2) அதிரைத் தென்றல் (CMP Ifran) (2) அதிரைநிருபரின் நிழல்கள் (2) அதிரைபட்டினம் (2) அதிரைப்பட்டினம் (2) அதிரைமணம் (2) அதிரையின் முத்திரை (2) அது ஒரு அழகிய மழைக்காலம் (2) அநீதி (2) அந்நிய முதலீடு (2) அந்நியர் முதலீடு (2) அனைத்து முஹல்லா (2) அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (2) அபூ முஸ்அப் (2) அபூசுஹைமா (2) அபூஹாமித் (2) அபூஹாஷிமா (2) அப்துல் ரசீத் ஆலிம் (2) அமானிதம் (2) அம்மாபட்டினம் (2) அம்மார்(ரலி. அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (2) அரசியல் ஜெயலலிதா (2) அரசியல்வாதி (2) அரசு (2) அரசு வேலை (2) அர்த்தம் (2) அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (2) அறிந்தும் அறியாமலும் (2) அறிமுகம் (2) அற்புதம் (2) அலங்காரம் (2) அலி (2) அலுவலகம் (2) அலைபேசி (2) அல்மனார் செண்டர் (2) அழுத்தம் (2) அழைப்புப் பணியின் அவசியம் (2) அழைப்புப்பணி (2) அவனா யிராதே (2) ஆகாயம் (2) ஆசிட் (2) ஆசிரியர் பணி (2) ஆசை (2) ஆசைகள் (2) ஆடை (2) ஆட்டோ (2) ஆணாதிக்கம் (2) ஆராய்ச்சி (2) ஆஷிக் முஹம்மத் (2) இணையத்தில் வலைவீச்சு (2) இணையம் (2) இதுதான் இஸ்லாம் (2) இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு (2) இந்திய முஸ்லீம்கள் (2) இபுறாகீம் அன்சாரி (2) இப்போது எல்லோரும் எழுதலாம் (2) இயக்க மயக்கம் (2) இயக்கம் (2) இயற்கை சீற்றம் (2) இருதய சிகிச்சை (2) இறப்பது (2) இறுதி கடமை (2) இறைவனிடம் (2) இறைவன் (2) இறைவழிபாடு (2) இலக்கிய மன்றம் (2) இலங்கை (2) இலைகள் (2) இவனா யிரு (2) இவர்கள் (2) இவ்வுலகம் அழிவை நோக்கி செல்கிறதா? (2) இஸ்லாத்தில் குற்றவியல் சட்டங்கள் (2) இஸ்லாமிய வருடப்பிறப்பு (2) இஸ்லாமியப் பொருளாதரம் (2) ஈத்கா (2) ஈமான் (2) ஈழம் (2) உடற்பயிற்சி (2) உணர்ந்தவை (2) உண்மை வரலாறு (2) உண்மைகள் (2) உதவி திட்டம் (2) உன்னப்பனின் விண்ணப்பம் (2) உம்மா (2) உம்மு சுலைம்(ரலி) (2) உரிமை (2) உருவப்படம் வரைதல் (2) உலகம் 2011 (2) உளவு (2) உழைப்பில்லா உடல்களும் (2) ஊடக தீவிரவாதம் (2) ஊட்டி (2) ஊர் (2) ஊர் நலன் (2) எங்க சார் (2) எங்க டீச்சர் (2) எங்கே அமைதி (2) எண்ணங்கள் (2) எதற்காக? (2) எதிரிப்பு (2) எதில் கஞ்சத்தனம் (2) எத்தி வைப்பு (2) எத்தியோப்பியா (2) எந்தப் பாதை உங்கள் பாதை? (2) எனக்குத் தெரிந்த இஸ்லாம் (2) என்பது (2) எம்.ஃபில். (2) எழுத்து (2) எழுத்தும் (2) ஏன் ஹிஜாப் (2) ஏர் இந்தியா (2) ஏழை (2) ஐரோப்பா (2) ஒப்பந்தம் (2) ஒருங்கிணைந்த (2) ஒருங்குறி (2) ஒழுக்கம் (2) ஓடுகாலி (2) ஓர் இஸ்லாமிய பார்வை (2) கஞ்சி (2) கஞ்சி வருதப்பா (2) கடன் தள்ளுபடி (2) கடன் வாங்கலாம் வாங்க (2) கடற்கரை (2) கடற்கரைத் தெரு கந்தூரி (2) கடற்கரைத்தெரு புளியமரம் (2) கடவுச் சொல் (2) கடை (2) கணவன் (2) கண்டிக்கிறோம் (2) கண்தானம் (2) கதையல்ல நிஜம் (2) கந்தூரி தடை (2) கபுர் (2) கப்ரு (2) கருமையும் (2) கலரி (2) கலைஞன் (2) கல்யாணம் (2) கல்வி முறை (2) கல்வி விருது (2) கல்வியும் கற்போர் கடமையும் (2) கவனம் (2) கவிக்கோ அப்துல் ரகுமான் (2) கா.அப்துல் கபூர் எம்.ஏ. (2) காட்சி (2) காட்டுப் பள்ளி (2) காணொளி உரை (2) காதர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி (2) காமராசர் (2) காற்று (2) காலை (2) காவல்துறை (2) காவேரி (2) கி.பி: 2011 அது ஒரு மழைக்காலம் (2) கிரிக்கெட் (2) குகை (2) குஜராத் (2) குஞ்ஞாலி (2) குடி தண்ணீர் (2) குணக்குன்று (2) குத்துச் சண்டை (2) குப்பை தொட்டி (2) குறை (2) கூட்டணி (2) கேரளா (2) கையேந்துங்கள் (2) கொசு (2) கொடுமை (2) கொண்டாட்டம் (2) கொலை (2) கொழும்பு (2) கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (2) கோபம் (2) சத்தம் (2) சபுறு (2) சமச்சீர் கல்வி (2) சமரசம் (2) சமுதாய சீர்கேடு (2) சமூக மாற்றங்கள் (2) சம்சுல் இஸ்லாம் (2) சம்பாதித்தால் (2) சர்க்கரை (2) சவால் (2) சவால்கள் (2) சஹர் (2) சாத்தியமா? (2) சான்பிரான்சிஸ்கோ (2) சிகிச்சை (2) சிதறல்கள் (2) சித்தீக் பள்ளி (2) சிந்தனை துளி (2) சின்ன வயசு (2) சிராஜ் உத்-தெலா (2) சிரிப்பு (2) சிறப்பு (2) சிலந்தி வலை (2) சீனி (2) சுயம் அறிக (2) சுர்மா (2) செயற்க்கை கோள் (2) செய்திகள் (2) செய்யுமிடத்தில் (2) செய்வீர் (2) சேவை (2) சொத்து (2) சோதிடம் (2) சோம்பேறி (2) சோறு (2) ஜஃபருல்லாஹ் (2) ஜமாஅத் (2) ஜஹபர் சாதிக் (2) ஜாஃபருல்லாஹ் (2) ஜித்தா (2) ஞாபகம் வருதே (2) டாக்டர் அப்துல்லாஹ் (2) டிசம்பர் (2) தன்னபிக்கை (2) தன்னிலை சுகாதாரம் (2) தமிழ் நாடு (2) தமிழ்நாடு (2) தமிழ்நாட்டில் (2) தலைமை ஆசிரியர் (2) தலையங்கம் (2) தலைவர் (2) தலைவர்கள் (2) தவறு (2) தாகம் (2) தாக்குதல் (2) தான தர்மம் (2) தாய்மொழி (2) திக்ரு (2) திடல் தொழுகை (2) தினம் (2) தியாகப் பெருநாள் சிந்தனை (2) தியாகம் (2) திருட்டு தடுக்க (2) திருவிழா (2) திரை (2) திறமை (2) தீ (2) தீமை (2) துணைத் தலைவர் (2) தூண்கள் (2) தூய்மை (2) தென்றல் (2) தெளிவு (2) தேர்தல் களம் (2) தேர்வு (2) தொந்தரவு (2) தொன்னூறு (2) நடுப்பக்கத்தில் நட்சத்திரம் (2) நடுவுல கொஞ்சம் நட்சத்திரங்களைக் காணோம் (2) நபி(ஸல்) (2) நம்ம ஊர் (2) நம்மளுக்கு (2) நற் குணங்கள் (2) நலமில்லா நவீனமும் (2) நாட்டு நடப்பு (2) நாணம் (2) நாற்காலி (2) நாற்பது (2) நினனவுகள் (2) நினைவூட்டல் (2) நியூயார்க் (2) நிறம் மாறும் மனிதர்கள் (2) நிறைவுரை (2) நிலநடுக்கம் (2) நூருல் இப்னு ஜஹபர் அலி (2) நூல் (2) நெசவுத் தெரு (2) நெனப்பு (2) நேபாளம் (2) நேரலை (2) நேருக்கு நேர் (2) நேர்காணல் (2) பகதூர்ஷா ஜாஃபர் (2) பகுத்தறிவாளர்களின் மதம் (2) பக்கத்து ஊர் செய்திகள் (2) பக்கீர் முஹம்மது (2) பங்கு (2) பசுமை (2) பசுமை அதிரை 2020 (2) பட்டுக்கோட்டை (2) பணி (2) பண்பு (2) பதிவர்கள் (2) பயிற்சி (2) பரிவு (2) பரீட்சை நேரம் (2) பர்ஜ் கலிஃபா (2) பர்மா தேக்கு வீட்டுக்காரர் (2) பள்ளி (2) பஷீர் அஹம்து (2) பாடம் (2) பானு என்றென்றும் (2) பாம்பன் பாலம் (2) பாருக்குள்ளே நல்ல நாடு (2) பிடித்தது (2) பின்னூட்டம் (2) பின்னூட்டவாதி (2) பிரதமர் (2) பிரதர் (2) பிரியமில்லா பிரிவு (2) பிறப்பது (2) பிறமதம் (2) பிலால் (ரலி) (2) பிலிப்பைன்ஸ் (2) புகார் (2) புகைப் பிடித்தல் (2) புகைப்பட பொழுதுகள் (2) புகைப்படம் (2) புதிய பள்ளிவாசல் (2) புதிய மத்திய அரசு (2) புதுக்கிப்படாத திருமணங்கள் (2) புதுமை (2) புரிந்துணர்வு (2) புலவர் (2) பூகம்பம் (2) பெண்ணீயம் (2) பெண்ணுக்கு வீடு (2) பெண்ணுறிமை (2) பெண்ணே (2) பெரியவர்கள் (2) பேருந்து (2) பொட்டிக்கடை (2) பொற்காலம் (2) போடுங்கள் (2) போர் அடிக்குது (2) போஸ்டர் (2) மகளிர் (2) மடமை (2) மணமகன் (2) மணமகள் (2) மணிமாலை (2) மதச்சாயம் (2) மதிப்பு (2) மதிப்புரை (2) மதிப்பெண்கள் (2) மதீனாவில் நோன்பும் பெருநாளும் (2) மந்தி (2) மனசாட்சி (2) மனனம் (2) மனு (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா ? (2) மன்றம் (2) மயக்கம் (2) மரண அறிவிப்பு (2) மரபுக் கவிதை (2) மருதநாயகம் (2) மர்யம் ஜமீலா (2) மறந்தவைகள் (2) மறுமை நாள் (2) மலர் வனம் (2) மலேசியா பெருநாள் (2) மலேஷியாவில் ரமளான் (2) மாணவமணிகளுக்காக (2) மாணவிகள் (2) மாணவியின் (2) மாது (2) மானிடா (2) மாப்புளே (2) மாயை (2) மார்க்கம் (2) மாலை (2) மாவீரன் (2) மின்சாரவாரியம் (2) மீன்கள் (2) மீள்பதிவு (2) மு.செ.மு.நெய்னா முஹம்மது (2) மு.மேக்தா (2) முகமது பாரூக் (2) முசெமு (2) முஜாஹித் (2) முடிவுகள் (2) முத்தம் (2) முன்னோர்கள் (2) மும்பை (2) முஸ்தகீம் (2) முஸ்லிம்கள் (2) முஸ்லீம் (2) முஸ்லீம் குரல் (2) முஹம்மத் அலீய் (2) முஹர்ரம் (2) மூணுக்கு வந்த டவுட்டு (2) மூனாறு (2) மூளைக்கு வேலை (2) மெரினா (2) மை (2) மையம் (2) யா அத்தஹாக் (2) யார்தான் சொல்வது (2) யாவாரம் (2) ரமலான் சிந்தனை (2) ரமளானுக்கு பின் (2) ராமாயணம் (2) ரியாஸ் அஹ்மது (2) ரிலாக்ஸ் ப்ளீஸ் (2) ரேங்க் கார்டு (2) வங்கி (2) வயோதிகம் (2) வரமா (2) வருக (2) வர்த்தகம் (2) வறுமைக்கோடு (2) வலைப்பூ (2) வலைவீச்சு (2) வழமை (2) வழிமுறைகள் (2) வழியனுப்புதல் (2) வா.உ.சிதம்பரனார் (2) வாகனம் (2) வாங்கடா (2) வாநிலை (2) வாய்க்கால் (2) வாவன்னா சார் (2) விஞ்ஞானம் (2) விதை (2) விமான பயணமும் விபரீதமும் (2) விமானப் பயணம் (2) விமானம் (2) விரயம் (2) விளம்பரங்கள் (2) விவேகம் (2) வெண்மையும் (2) வெந்நீர் ஒத்தடம் (2) வெரசன (2) வெளிச்சம் (2) வெள்ளிநிலா (2) ஷஃபான் (2) ஷப்-ஏ-அராஅத்து (2) ஷவ்வால் (2) ஷஹ்லா (2) ஷாஃபி M.I. (2) ஸதக்கத்துல்லாஹ் (2) ஸனது (2) ஸூரத்துல் பகரா (2) ஸ்ரீலங்கா விமானம் (2) ஹசினா அப்துல் பாசித் (2) ஹஜ் 2011 (2) ஹஜ் பெருநாள் சந்திப்பு (2) ஹபீப் முஹம்மத் (2) ஹலால் (2) ஹாஜா முகைதீன் (2) ஹிதாயத்துல்லாஹ் (2) ஹைதர் அலி (2) “பசு” ‘மை’பூசி அடி‘மை’ ஆகும் இந்தியா. (2) 'e'மான் (1) 'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு (1) .அதிரை (1) 10 வகுப்பு CBSE (1) 100வது நாளில் (1) 10ம் வகுப்பு (1) 1435 (1) 1600 கோடி வழங்கிய வள்ளல் (1) 1930 (1) 1970 (1) 1980 (1) 1984 (1) 1987 (1) 1993 (1) 2002 (1) 2012-13 (1) 2015 (1) 2015-2016. பட்ஜெட் (1) 2050 (1) 25000 அடி (1) 5-ம் (1) 50 வது பதிவு (1) 6 (1) 6-ம் (1) AAF (1) ABC (1) ALM ஆண்டுவிழா (1) ATCO (1) AZHAR HUSSEIN (1) Abdul Rahman (1) Albaqavi.com (1) American Adirai Forum (1) American Adirai Forum [A A F] – இரண்டாவது அமர்வு (1) Any suspended coffee (1) B.ஜமாலுதீன் (1) BBC (1) Beware of killer offers in Dubai (1) Budget 2012 (1) CMN சலீம் (1) CMண் சலீம் (1) Cancer Awareness Program (1) Cataract (1) December (1) ETA (1) Easy life leads to lazy life (1) Engineering career (1) Final Year MBBS (1) GROUP-1 (1) Glaucoma (1) Gulfnews (1) HABIT (1) HAJ 2015 (1) I am the Greatest (1) IAS (1) IFT (1) India is my country (1) Islam (1) J.A.தாஜுதீன் (1) JMC (1) KMHSSc (1) KVS (1) LOGO (1) London (1) M S M(n) (1) M.B.B.S. (1) M.L.A ரெங்கராஜன் (1) M.S.முகமது மீராசாகிப் (1) MANAGEMENT CAREER (1) MBA (1) MEDICINE CAREER (1) MF (1) MKN Trust (1) MMS (1) MOTHER (1) MS அப்துல் கஃபூர் (1) MSM(r) (1) Moinudeen (1) Moorthy (1) Motion Sickness (1) Mujahid Razeen (Srilanka) (1) Munawar (1) Naming and Calling Spiritually and Personally (1) Nizar Ahamed (1) Nursery School (1) PJ (1) PhD (1) Right Understanding (1) S.H.அஸ்லம் (1) S.சித்தீக்.M.Tech (1) SIS (1) SSLC (1) SSLC. (1) School (1) Shahbaz Mohamed (1) Sports Day (1) Stop N Shop (1) Straight line Stationery (1) TNPSC (1) Truly Asia (1) U.Aboobacker (1) UAE National Day (1) Union Budget 2017 - 2018 (1) abdul khader (1) abu hanifa (1) ac (1) activities (1) adco (1) adirai businessman (1) adirai classified (1) adirai educational mission (1) adirai news (1) adirampattinam (1) afghan (1) after ramadan (1) ayda (1) back2School (1) beach street (1) boxer (1) burkhalifa (1) cbse சமச்சீர் கல்வி (1) cc Sabeer appa (1) channel (1) chennai (1) citizen of world (1) cobol (1) computer (1) convert to islam (1) country club (1) credit card (1) cults (1) current affairs (1) dad (1) dare to dream (1) dc (1) demonetization (1) different thinking (1) drop box (1) dynamic cellcom (1) e-தமிழர் (1) ecr (1) editor-choice (1) email (1) emirates ID (1) engineer (1) english (1) family card (1) family tree (1) folder (1) forward (1) friend request (1) friendship (1) gulf (1) haj 0215 (1) haji marra (1) health (1) history of Rasoolullah (1) homework (1) ibraheem ansari (1) incredible (1) indian muslims (1) influences (1) inneram (1) inter school quiz competition (1) islamic bank (1) islamic banking (1) kalaam (1) kaveri (1) kayal (1) lagoon (1) life (1) living (1) m.nainathambi (1) madina (1) magazine (1) makkah (1) media (1) medical (1) mens way (1) mirage (1) mmk (1) mms பஹுருத்தீன் (1) mnt (1) mohamed ali (1) mp (1) mpmv (1) msf (1) msm1 (1) mumbai (1) music (1) national flag (1) notice (1) online (1) our (1) pain worth it (1) parotta (1) peach n berry (1) photography (1) physical (1) picture of play (1) police (1) power (1) programming (1) publisher (1) queenie padilla (1) real estate 1 (1) sabee (1) sad (1) sbeer (1) sha an sha (1) shaficast (1) sham (1) sharing (1) sharjah (1) shirt (1) shirts (1) smart phones (1) son (1) sp பட்டினம் (1) speech (1) srilankan muslim (1) syed abdul hameed (1) syria children (1) tamil (1) thajudeen (1) thamemunansari (1) treatment (1) truly asia (1) tweet (1) update (1) urdu (1) version 4.01 (1) we support (1) welcome Ramadhan (1) wikileaks (1) y1 (1) youtube (1) ஃபஜர் தொழுகை (1) ஃபாரூக் (1) ஃபிலிம் (1) ஃபேக்புக் (1) ஃபேஸ்புக் (1) ஃபோட்டூன் (1) ஃபோட்டோ (1) ஃபோன் (1) ஃபோர்ட்டூன் (1) ஃப்ரெண்டு ரெகுஸ்ட் (1) அ.ர.முஹமது தஸ்தகீர் (1) அஇதிமுக (1) அகத்தின் அழகு (1) அகிலம் (1) அங்கீகாரம் (1) அசத்தல் (1) அசைவு (1) அஜினோமோட்டோ (1) அஜீஸ் (1) அஜ்மான் (1) அஜ்மாஸ் நோன்பு கஞ்சி (1) அட (1) அடப் பாவிங்களா ? (1) அடிக்கல் (1) அடிமை (1) அடிமை வணிகர் அந்-நுஐமான் (ரலி) (1) அடியேனின் அகரம் (1) அட்லாண்டா (1) அணிவகுப்பு (1) அணு (1) அணை (1) அண்ணன் (1) அண்ணன் தம்பி உறவு (1) அண்ணே ! (1) அதிகாரம் (1) அதிகாரி (1) அதிகாலை (1) அதிசயம் (1) அதியற்புதம் (1) அதிராம்பட்டினம் 2011 (1) அதிராம்பட்டினம் 2012 (1) அதிராம்பட்டினம்2011 [2] (1) அதிரை ஃபாரூக் (1) அதிரை அபூபக்கர் (1) அதிரை அஸ்ரப் (1) அதிரை அஸ்லம் (1) அதிரை ஆத்திச்சூடி (1) அதிரை இலக்கிய மாமன்றம் (1) அதிரை இஸ்லாமிக் மிஷன் (1) அதிரை கல்வி CD (1) அதிரை கல்வி அறக்கட்டளை (1) அதிரை கல்வி விழிப்புணர்வு (1) அதிரை கீழத்தெரு (1) அதிரை சித்தீக் பள்ளி (1) அதிரை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் (1) அதிரை தமுமுக (1) அதிரை பெருநாள் (1) அதிரை பெருமை (1) அதிரை பேரூராட்சி (1) அதிரை பொருட்காட்சி (1) அதிரை போஸ்ட் (1) அதிரை மாடு (1) அதிரை மாணவி (1) அதிரை வரலாற்றில் (1) அதிரை வள்ளல் (1) அதிரை வாசனை (1) அதிரைக் கடல் (1) அதிரைச் செய்தி (1) அதிரைமுஜீப் (1) அதிரையன் (1) அதிரையின் நிய்யத்து (1) அதிரையின் பூர்வ குடிமக்கள் (1) அதிரையின் விருந்து உபசரிப்புகள் (1) அதிரையில் (1) அதிரையில் பரவிவரும் அதிபயங்கர ஆபத்தான நோய் (1) அதிரையில் மழையாமே (1) அதிரையில் ஷவ்வால் நோன்பு - புறக்கனிக்கப்படுகிறதா (1) அதிர்ச்சிகள் (1) அது (1) அது ஒரு பொற்காலம் (1) அது ஒரு ஹஜ்ஜுப்பெருநாள் நேரம் (1) அந்த ஏழு நாட்கள் (1) அந்த திக் திக் நேரங்கள் (1) அந்தக் காலம் (1) அந்தரத்தில் (1) அந்தி (1) அனஸ்(ரலி) (1) அனுபவப் பாடம் (1) அனுமதி (1) அனைத்துத் தெருக்களும் அதிரையின் கருக்கள்.editorial (1) அன்னை (1) அன்னை ஆயிஷா சித்தீக்க(ரலி) (1) அன்னை கதீஜா மகளிர் கல்லூரி (1) அன்னையர் தினம் (1) அன்பளிப்புகள் (1) அன்பு (1) அன்புக் குறிப்புகள் (1) அன்புடன் புகாரி (1) அன்று பெய்தது மழை (1) அன்றைய நோன்பும் (1) அபராதம் (1) அபு பஜ்லு (1) அபு ஹனிஃபா (1) அபுமஹ்மூத் (1) அபுருமானா (1) அபுல் ஹசன் (1) அபுல்கலாம் ஆஷாட் (1) அபூ சுஹைமா (1) அபூ நூரா (1) அபூஇப்றாஹீம் (1) அபூபக்கர் (1) அபூபக்கர் ரழி (1) அபூஹனிஃப (1) அபூஹனிஃபா (1) அப்டேட் (1) அப்துர் ரஷீது ரஹ்மானி (1) அப்துர் ரஷீத் ரஹ்மானி (1) அப்துல் கறீம் (1) அப்துல் கலீம் (1) அப்துல் ஜப்பார் (1) அப்துல் நாசர் மதனி (1) அப்துல் ராஜிக் (1) அப்துல்லாஹ் (1) அப்பர் கோதையர் (1) அப்பா ஏசுவாஹ....(அதிரையின் மண் வாசனை) (1) அப்பாஸ் அலி (1) அமீரக தமிழ் மன்றம் (1) அமீருல் முஃமின் (1) அமெரிக்க அதிரையர்களின் கூட்டமைப்பு (1) அமெரிக்காவில் இறையில்லம் தீக்கிரை (1) அமைதியின் ஆளுமை (1) அமோஜான் (1) அம்மார்(ரலி. (1) அம்மாவைப் பிடித்த பேய் (1) அய்டா (1) அரஃபாத் 1987 (1) அரஅல (1) அரசினர் மேல்நிலை பள்ளி (1) அரசியலல்ல (1) அரசியல் களம் (1) அரசியல் முதல்வர் (1) அரசியல் வியாதிகளா? (1) அரசியல்வாதிகளா? (1) அரசு உதவிகள் (1) அரசு வேலை வாய்ப்பு (1) அரபிக் (1) அரபு நாடுகள் (1) அரபு நாட்டு பயணம் (1) அரபுலகம் (1) அரவணைக்க அருகதையற்றவர்களா அகதிகள் (1) அருட்பேறு (1) அருமறை (1) அரும்பு (1) அரும்பு பாட்டு (1) அரும்புப்பாட்டு (1) அரும்பேறு (1) அருளைச் சுமந்த ஹாஜிகளே...வருக (1) அருவி (1) அரேபியர்கள் (1) அர்-ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (1) அர்ப்பணிப்பு (1) அறிகுறிகள் (1) அறிந்து (1) அறியாமைக் காலம் (1) அறிவிப்பு சம்சுல் இஸ்லாம் சங்கம் (1) அறிவியல் பாங்கு (1) அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே (1) அற்பணிப்பு (1) அலகே ஆயுதம் (1) அலைகள் (1) அலைபாயுதே (1) அல்-கத்ர் (1) அல்ஜஸீரா (1) அல்மாஸ் (1) அல்ல (1) அல்லாஹ் யாரை நேசிக்கிறான் (1) அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் 99 (1) அல்லாஹ்வின் சக்தி (1) அல்லாஹ்வுக்கு நன்றி (1) அழகியல் (1) அழகு மொழி (1) அழகுக் குறிப்புகள் (1) அழிக்க திட்டம் (1) அழுகை (1) அழுவதற்கா (1) அழைப்பு பணி (1) அழைப்பு பணி மதமாற்றம் ஆகுமா (1) அவசர இழப்பு (1) அவசர உலகம் (1) அவன் (1) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும். சஹாபாக்கள் (1) அவலம் (1) அவளைச் சுற்றி (1) அவள் (1) அவஸ்தை (1) அவ்லியா (1) அஸார் (1) அஸ்மா(ரலி) (1) அஸ்மாவுல் ஹுஸ்னா அகவல் (1) அஸ்லம் (1) அஸ்லம் பாஷா (1) அஹமது பாக்கவி (1) அஹமது ஹாஜா (1) அஹமது ஹாஜி (1) அஹமதுல்லா ஷா (1) அஹ்மது (1) அஹ்மது அமீன் (1) அஹ்மது ஷஃபி (1) அஹ்மது ஹாஜா (1) அஹ்மத் தீதத் (1) ஆஃபியா புரூட் (1) ஆஃபீஸ் பாயும் - வெகேஷனும் (1) ஆஃப்பிரிக்கா (1) ஆகஸ்ட் (1) ஆக்ஃபோர்டு (1) ஆக்கமிடு அடுமடையா (1) ஆக்ரா (1) ஆசியாநெட் (1) ஆசிரியர்கள் (1) ஆசிரியைகள் (1) ஆசை கணவுகள் (1) ஆச்சர்யம் (1) ஆஞ்சியோ கிராஃபி (1) ஆடவரும் (1) ஆடு (1) ஆடையகம் (1) ஆட்சியதிகாரம் (1) ஆட்சியிழந்த கட்சி (1) ஆட்டம். (1) ஆட்டு மூளை (1) ஆண் (1) ஆண்கள் (1) ஆண்டவனே ஆள்பவனே (1) ஆண்டு விழா (1) ஆண்டுவிழா (1) ஆதரவு (1) ஆனந்தாவின் அபிநயம் (1) ஆனலைன் (1) ஆபூஇப்ராஹீம் (1) ஆப்பரேஷன் (1) ஆப்பிரிக்க (1) ஆப்பிள் (1) ஆப்ரேஷன் (1) ஆமினா முஹம்மது (1) ஆமை (1) ஆம் ஆத்மி (1) ஆயத்துல் குர்ஸி (1) ஆயிஷா பல் மருத்துவமனை (1) ஆய்ஷா ஃபாத்திமா (1) ஆரசியல் (1) ஆரிஃபா ஆலிமா (1) ஆர்நோத் வான் டோர்ன் (1) ஆர்வம் (1) ஆறிலிருந்து அறுபதுவரை (1) ஆறு (1) ஆலிம்சா (1) ஆளுக்கொரு சட்டம் (1) ஆளும் கட்சி (1) ஆளும் வளரனும் அறிவும் வளரனும் (1) ஆளூர் ஷாநவாஸ் (1) ஆவ்மியாக்கா (1) ஆஷி அஹ்மத் (1) ஆஷிக் அஹ்மத் (1) ஆஹா (1) இஃப்தார் (1) இக்கணம் (1) இக்றா (1) இங்கு எது முடியும் (1) இடர்கள் (1) இடி (1) இடியப்பம் (1) இடியாப்பம் (1) இடைத்த் தேர்தல் (1) இணைவத்தல் (1) இணைவைப்பு (1) இதயதளம் (1) இது எப்படி இருக்கு (1) இந்த வார செய்தி (1) இந்தக் காலம் (1) இந்தப் பாதை (1) இந்தவுளே (1) இந்திய அரசியல் (1) இந்திய ஊடகங்கள் (1) இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கு (1) இந்திய சுந்தந்திர தினம் (1) இந்திய ரூபாய் (1) இந்தியா சுதந்திர தினம் 1947 (1) இந்து (1) இந்துத்துவா (1) இந்தோனேஷியா (1) இந்நேரம் (1) இனப்படுகொலை (1) இனிக்கிறது (1) இனிமை (1) இனிய (1) இனிய திசைகள் (1) இன்டர்வியூ (1) இன்னுமா தயக்கம் (1) இன்பம் (1) இன்று 10.01.2011 (1) இன்று 18 02 2011 (1) இன்று இரு தகவல் (1) இன்று இரு தகவல்கள் (1) இன்று நாளை (1) இன்றும (1) இன்றைய வீம்பும் (1) இன்ஷூரனஸ் (1) இபுராகீம் அன்சாரி (1) இப்தார் நிகழ்ச்சி (1) இப்னு அப்பாஸ் (1) இப்ராஹீம் (1) இப்றாகிம் அன்சாரி (1) இமாம ஷாஃபி பள்ளி (1) இமாம் (1) இமாம் அபூஹனீஃபா (1) இமாம் புகாரீ (1) இமாம் ஷாஃபி (1) இம்தாதி (1) இயக்க வெறி (1) இயக்கங்கள் (1) இயற்கை இன்பன் (1) இயற்கை எங்கே (1) இரங்கற்பா (1) இரங்கல் (1) இரண்டாம் ஆண்டு (1) இரயில்வே (1) இரவேலர்கள் (1) இராஜமடம் (1) இராணுவம் (1) இராமநாதபுரம் (1) இருட்டு (1) இருதயம் (1) இருளும் ஒளியும் (1) இருவேறு துருவங்கள் (1) இர்ஃபான் (1) இறக்கை (1) இறக்கை கட்டிப் பறக்குதய்யா (1) இறப்பு (1) இறுதி மூச்சு (1) இறுதியாண்டு (1) இறை வசனங்கள் (1) இறைமறை (1) இறைமார்க்கம் (1) இறையச்சமுள்ள தந்தை (1) இறையச்சம் (1) இறையில்லத்தில் யாருடன் மல்லுக் கட்டுகிறார்கள் (1) இறைவனின் கூலிப்படைகள் (1) இறைவனுக்கு நன்றி (1) இறைவேதம் (1) இலக்கு (1) இலங்கை தமிழனின் இதையக் குரல் (1) இலட்சினை (1) இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் (1) இலவச மருத்துவ முகாம் (1) இலை (1) இல்ம் (1) இல்லறம் (1) இல்லல்லாஹ் (1) இல்லாள் (1) இளம் மனைவின் கடிதம் (1) இஸலாம் (1) இஸ்மாயில் ஸலஃபி (1) இஸ்லாத்திற்காக (1) இஸ்லாத்திற்கு எதிரான (1) இஸ்லாமிய தீவிரவாதம் (1) இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் (1) இஸ்லாமிய வரலாறு (1) இஸ்லாமிய வரலாற்று மின்னொளிகள் (1) இஸ்லாமியப் பாரவை (1) இஸ்லாம் மதத்திற்கு ஐரோப்பாவின் கடன் (1) ஈடிணையற்ற இறைவா (1) ஈத்மிலன் (1) ஈன்ற பொழுதின் (1) ஈமெயில் (1) ஈர நெஞ்சம் (1) ஈராக் (1) ஈர்ப்பு (1) உ.பியில் துவங்கவிருக்கும் போர் (1) உங்கள் ஓட்டு விறபனைக்கு அல்ல (1) உங்கள் வீட்டுத் திருமணத்தில் இது இருக்கா (1) உசுரு (1) உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு (1) உடல் ஆரோக்கியம் (1) உடல் பயிற்சி (1) உணர்வுகள் மூன்று (1) உண்டாயிருக்கேன் (1) உண்ணாவிரதம் (1) உண்மைச் சம்பவம் (1) உதவியது இஸ்லாம் (1) உன்டகலியான் அதிரையரின் உணவு (1) உன்னை அறி (1) உப்பு (1) உமர் (1) உமர் (ரலி) (1) உமர் கையாம் (1) உமர் ஷரீப் முப்தி (1) உமர்தம்பி (1) உம்மா'ன்டா சும்மாவா ? (1) உம்மி மக்தூம் (1) உம்ரா (1) உயர் கல்விக்கு உதவித் தொகை (1) உயிரெழுத்துகள் (1) உயிர் (1) உயிர்க் கொத்திப் பறவை (1) உரிமைகள் (1) உருகிய எதிர்ப்புகள் (1) உருகுதே அதிரை (1) உருக்கம் (1) உரைநடை (1) உர்து (1) உறவின் பிரிவு (1) உறவு வளர்ப்போம் (1) உறவுகள் எங்கே (1) உறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள் (1) உறுப்புகளின் நோய் (1) உலக அதிசயம் (1) உலகக் கோப்பை (1) உலகமயம் (1) உலகம் எப்படி உருவானது (1) உலகின் தலைசிறந்த பணக்காரர் (1) உலோகப்பறவை (1) உல்லாசம் (1) உளத்தூய்மை (1) உளவியல் (1) உளுச் செய்வது (1) உள்குத்து (1) உள்ளம் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சி த் தேர்தல் (1) உள்ளாட்சித் தேர்தல் (1) உள்ளே (1) உழை (1) உழைப்பு (1) உஸ்மான்(ரலி) (1) ஊடக (1) ஊடக தேர்தல் பிரச்சாரம் 2016 பதிலடி (1) ஊடக விபச்சாரம் (1) ஊடகங்கள் (1) ஊடங்கள் (1) ஊனம் (1) ஊராட்சி (1) ஊரோடு உறவாடு (1) ஊர் செய்தி (1) ஊர் நடப்பு (1) ஊர் நினைவுகள் (1) ஊர் பார்வை (1) ஊர்க்காரர் (1) ஊர்வன (1) எக்ஸ்க்யூமி (1) எக்ஸ்பிரஸ் (1) எங்க முதலாளி (1) எங்கவூர் மாப்பிள்ளை (1) எங்கே (1) எங்கே நேரம் (1) எங்கே வீழ்ந்தோம் (1) எங்ஙனம்? (1) எச்சில் (1) எஞ்சினியர் (1) எடு-இட்டோர்-இயல் (1) எண்ணமும் (1) எண்ணம் (1) எண்ணிலடங்கா (1) எண்ணெய் (1) எதிரி (1) எதுக்கும் நல்ல மனசு வேணும் (1) எத்தீம்கானா (1) எந்தையே (1) எனக்காக (1) எனதூர் (1) என் ஃப்ரண்டப் போல யாரு மச்சான் (1) என் கண்ணான வாப்பாவே (1) என் கனவு (1) என் கேள்விக்கென்ன பதில் (1) என் பார்வை (1) என் மொழி (1) என் வீட்டுத் தோட்டத்தில் (1) என்.ஷஃபாத் (1) என்கவ்ன்ட்டர் (1) என்ன (1) என்ன கொடுமை (1) என்னாட்டின் (1) என்னால் இயன்ற அறம் (1) என்னைக் கண்டெடுத்தேன் (1) எபிக் வெப் பிரவுசர். (1) எப்படி அவர்களை மன்னிப்பேன் (1) எப்படிப் பிறந்தாய் நீ (1) எப்படியும் மரணம் முடிவாகி விட்டது (1) எப்புடீ (1) எம்.ஃபில் (1) எரிகல் (1) எர்மைல் தவாலும் (1) எறச்சி (1) எலும்பு உறுதிதன்மை (1) எலும்பு கூடு (1) எல்லாப் புகழும் இறைவனுக்கு (1) எல்லை (1) எல்லைக் கோடு (1) எழுதியதல்ல (1) எழுது (1) எழுத்தியல் (1) எழுவதற்கா? (1) ஏகத்துவம் (1) ஏஞ்சலா கொலின்ஸ் (1) ஏனெனில் திமிர் (1) ஏப்ரல் 1 (1) ஏமாற்றமா (1) ஏர்வாடி (1) ஏற்ற நாடு (1) ஏற்றமா (1) ஏழை மாணவர்கள் (1) ஏழ்மை (1) ஐ.ஏ.எஸ். (1) ஐ.பி.எல். கிரிக்கெட் (1) ஐக்கியம் (1) ஐந்து (1) ஐஸிஐ (1) ஐஸ்கிரீம் (1) ஒத்தடம் (1) ஒத்துமை (1) ஒரு உரையாடல் With சீனிவாசன் சார். (1) ஒரு கோணல் பார்வை (1) ஒரு ச்சிக்குபுக்கு பாதை (1) ஒரு பிள்ளையின் ஏக்கம் (1) ஒற்றுமை அழைப்பு (1) ஒற்றுமையே பலம் (1) ஒற்றுமை் (1) ஒற்றையாய் (1) ஒலி (1) ஒளரங்கசீப் நான்மணி மாலை (1) ஒளி (1) ஒளி வீசுமுன் (1) ஓடி விளையாடு (1) ஓடை (1) ஓர் அன்னையால் தன் மகனை எப்படி விற்க முடியும் (1) ஓர் ஆய்வு (1) ஓர் பார்வை (1) ஓலை (1) ஔரங்கசீப் நான்மணி மாலை (1) கசையடி (1) கஜினி முகமது (1) கஜ்ஜாலி (1) கஞ்சத்தனம் (1) கடன் அட்டை (1) கடமை (1) கடமைகள் (1) கடற்படை (1) கடி (1) கடி ஜோக்ஸ் (1) கடைத்தெரு (1) கட்சி (1) கட்சிகளின் தந்திரம் சுதந்திர தினம் (1) கட்டிடம் (1) கட்டுபாடு (1) கட்டுப்பாடு (1) கட்டுரைகள் (1) கணகள் இரண்டும் (1) கணினி தமிழ் (1) கண் தானம் (1) கண் பாதுகாப்பு (1) கண் பார்வை விழிப்புணர்வு (1) கண் மருத்துவம் (1) கண்காட்சி (1) கண்ணீர் (1) கண்பார்வை (1) கண்புரை (1) கண்மணி அன்போடு நான் (1) கதைகள் (1) கத்தனா (1) கந்தவரு (1) கந்தூரி மடமை (1) கந்தூரி வழிகேடு (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கனவும் நனவும் (1) கன்னிப் பதிவு (1) கபுரை இடிக்க வேண்டுமா? (1) கமாலுதீன் மதனி (1) கம்பி (1) கம்பியில்லா தொடர்பு (1) கம்யூனிசம் (1) கம்ளைண்ட் (1) கயவர்கள் (1) கரகரப்பு (1) கரன்ஸிக் களேபரங்கள் (1) கருணை (1) கருத்தாய்வு (1) கருத்து முரண்பாடுகள் (1) கருப்பு எலி (1) கருமையும் வெண்மையும் (1) கரும்புகை (1) கருவளையம் (1) கருவேலமரம் (1) கர்ப்பினி பெண்களுக்கு (1) கர்ழன் ஹஸனா (1) கறி (1) கறை (1) கற்கை (1) கலக்குங்க (1) கலப்படம் (1) கலரிச் சாப்பாடு (1) கலவியின் அவசியம் (1) கலாச்சார (1) கலிஃபா டவர் (1) கலிஃபோர்னியா (1) கலிஃபோர்னியா மாகாணம் (1) கலெக்டர் (1) கலை (1) கலைஞர் (1) கல்ந்துரையாடல் (1) கல்லும் (1) கல்வி நேரமில்லை (1) கல்வி மாநாடு (1) கல்வி வளர்ப்போம் (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு நேரலை. கல்வி விழிப்புணர்வு (1) கல்விக் கூடம் (1) கல்வித்துறை (1) கல்வியாண்டு (1) கல்வியாளார்கள் (1) கல்வியும் கற்போரின் கடமையும் (1) கல்வியும் கற்போர் க்டமையும் (1) களஞ்சியம் (1) கள்ளக்காதல் (1) கழிப்பிடத்தில் (1) கவனமாக கேளுங்கள் (1) கவலை நேரத்திலும் கவிதையா (1) கவிக்கோ (1) கவிஞன் (1) கவிஞர்கள் (1) கவிதை கிரவ்ன் (1) கவிதை சபீர் அஹ்மது (1) கவிதை வாப்புச்சா (1) கவிதைக் காணொளி (1) கவிதைப் பேட்டி (1) கவிதையல்ல (1) கவிதையே தெரியுமா ? (1) கவிநடை (1) கவியனபன் (1) கவியுரையாடல் (1) கவுரவம் (1) காகிதம் (1) காக்கை (1) காசிருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா (1) காடுகள் (1) காணவில்லை (1) காதலர்கள் (1) காந்தி நாட்டு இஸ்லாமியன் (1) கானல் நீர் (1) கானா (1) கான் அகடமி (1) கான்சல (1) காப்பி அடிக்கிறது (1) காப்பீடு (1) காமெடி (1) காயல்பட்டினம் (1) காரை வீடுகள் (1) காற்றலை (1) காற்றாழையும் (1) காலண்டர் (1) காழ்ப்பு (1) காவந்து பண்ணும் கலை (1) காவல் (1) காவல் நிலையம் (1) காவி தீவிரவாதி (1) காவித்துறை (1) காஷ்மீர் (1) கிரடிட் கார்டு (1) கிரவ்னு (1) கிரஸண்ட் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (1) கிளாஃபத் (1) கிள்ளித் திரிந்த காலம் (1) கிழவி (1) கிழிந்தது. (1) கிஷார் முஹம்மது. (1) கிஸ்ஸாஸ் (1) கீற்று (1) கீழக்கரை (1) குஜராத் கலவரம் (1) குஜாராத் (1) குஞ்சுகளும் (1) குடியரசுதினம் (1) குடும்ப அட்டை (1) குடும்பங்களின் சந்திப்பு (1) குடும்பன் குறிப்புகள் (1) குடைக்குள் மொட்டு (1) குப்பகள் (1) குப்பை (1) குயினி படில்லா (1) குரல் (1) குருதி (1) குருவி (1) குருவியும் (1) குர்ஆன் ஓதுதல் (1) குர்ஆன் சுன்னா (1) குர்பானி (1) குறிக்கோள் (1) குறிப்புகள் (1) குறைபாடுகள் (1) குறைவற்ற செல்வ (1) குற்றாலம் 2011 (1) குல்ல்லா (1) குளச்சல் (1) குளுக்கோமா (1) குழந்தை தொழில் (1) குழப்பம் (1) கூக்குரல்கள் (1) கூட்டணிக் கொட்டகைகள் (1) கூட்டணிக் கொள்கைகள் (1) கூட்டுத் தொழுகை (1) கூறு (1) கேடி (1) கேட்ட நினைத்த'வைகள்' (1) கேன்ஷல்ல அனுப்பிடுங்க (1) கேன்ஸரிலிருந்து தப்புவது எப்படி (1) கேரளம் (1) கேள்வி (1) கைகள் (1) கைகாட்டி கலாசாரம் (1) கைது (1) கொக்கு (1) கொசு ஒரு தொடர்கதை. (1) கொசுத் தொல்லை (1) கொஞ்சூண்டு (1) கொடு (1) கொடுவா மீனு (1) கொண்டாட்டம் கிரவ்ன் (1) கொண்டாட்டம் மட்டுமா பெருநாள் (1) கொல்லைப்புர தட்சனைகள் (1) கோ எஜுகேசன் (1) கோடி (1) கோடு உயர்ந்தது! குன்றம் தாழ்ந்தது (1) கோடை கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2016 (1) கோனார் ஹாஜியார் (1) கோப்பு (1) கோலாலம்பூர் (1) கோளாறு (1) கோள் (1) கோழி (1) க்ளாஸிக் (1) ஙே (1) சகக்ரை (1) சகன் (1) சகோதரகள் (1) சகோதரன் (1) சகோதரி (1) சங்கங்கம் (1) சங்கமம் (1) சங்கை மிகு ரமலான் (1) சட்டங்கள் (1) சட்டசபை (1) சட்டப்பேரவை (1) சட்டம் ஒழுங்கு பிரச்சினை (1) சட்டை (1) சதகா (1) சத்துணவு (1) சந்தேகம் (1) சந்தை (1) சந்தோஷம் (1) சன்டிகார் (1) சபிர் (1) சப்பிடலாம் (1) சமச்சீர் (1) சமய நல்லிணக்கம் (1) சமாதானக் கூட்டம் (1) சமாதி (1) சமுதாயம் (1) சமூக பிணைப்பு (1) சமூகம் (1) சரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 1 (1) சரி (1) சரித்திரம் (1) சர்தார்ஜி (1) சர்வீஸ் (1) சலுகை (1) சல்மான் கான் (1) சவுதி (1) சவுதியில் நடப்பது என்னா? (1) சவூதிச் சிறுமி லமா அல்-காமிதி (1) சாக்கடை (1) சாச்சா (1) சாச்சி (1) சாஜிதா புக் செண்டர் (1) சாதனயாளார் (1) சாதனைச் செம்மல் (1) சாதனைப் பெண்மனி (1) சாதி (1) சாதி ஒழிப்பு (1) சாதிக் பாட்சா (1) சான வயல் (1) சானவயல் (1) சாபமா (1) சாபாமா? (1) சாம்பல் (1) சார் (1) சார் பதிவாளர் (1) சார்ஜா (1) சார்ந்திருப்பவர்கள் (1) சாலைகள் (1) சி.எம்.பி.லைன் (1) சிகரம் (1) சிகெரட் (1) சிட்டுக்குருவி (1) சித்தப்பா (1) சிநேகிதிகள் (1) சிந்தனை அபு ஈசா (1) சிந்தனை ஏற்றத் தாழ்வு (1) சிந்தனைக் கோளாறு (1) சிந்தனைத் துறை (1) சிந்தியுங்கள் (1) சினிமா (1) சினிமாவும் முஸ்லீம்களும் (1) சின்னச் சின்ன ஆசைகள் (1) சிப்பி (1) சிப்பிக்குள் சூரியன் (1) சிரித்து (1) சிறப்பு நிகழ்வுகள் (1) சிறப்புரை (1) சிறுகதை (1) சிறுபன்மையினர் கல்லூரி (1) சிறுபான்மை (1) சிறுவர்கள் (1) சிறை (1) சில நேரங்களில் சில மனிதர்கள் (1) சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1) சிவகங்கை (1) சீ (1) சீச்சீ இந்த பழம் புளிக்கும் (1) சீதனமும் (1) சீதனம் (1) சீனப் பெண் (1) சீனா (1) சீரியல் (1) சுகங்கள் (1) சுடச்சுட அதிரை (1) சுட்டெரிக்கும் சூடு (1) சுட்டெரிக்கும் பாலையில் (1) சுதந்திர தினம் (1) சுதந்திர தினம் யாருக்கு (1) சுத்தமின்மை (1) சுப்ஹு (1) சுப்ஹு தொழுகை (1) சுமைய தாவூத் (1) சுமையா (1) சுமையாகிப்போனது (1) சும்மாதான் (1) சுய விளக்க உரை (1) சுயநலம் (1) சுரண்டல் (1) சுற்றித் திரியும் வாலிபமே (1) சுற்றுபுற சூழல் பாதுகாப்பு (1) சுவனத்தென்றல் (1) சுவனப்பிரியன் (1) சுவர்க்கம் (1) சூசன் பஷீர் (1) சூடு பறக்கும் விவாதம் (1) சூது சூழ் உலகு (1) சூனியம் (1) சூனியம் வைக்கத் தூண்டியது யார் (1) சூரத்தல் இஃக்லாஸ் (1) சூரத்துல் ஃபாத்திஹா (1) சூரத்துல் பஜ்ர் (1) சூரா லுக்மான் (31:32) (1) சூரியன் (1) செண்டர் (1) சென்சார் (1) சென்னை பல்கலைக்கழகம் (1) சென்ற வாரம் (1) சென்றுவா ரமளானே (1) செப்டம்பர் (1) செம்மல் (1) செயற்கை கண் (1) செய்தி சேனல்கள் (1) செய்தியாளர் (1) செய்முறை (1) செல்போன் டவர் (1) செல்லப் பிராணிகள் (1) செல்லப்பிள்ளை (1) செல்லம் (1) செல்வம் (1) சேது சமுத்திர திட்டம் (1) சேனல்கள் (1) சேய் (1) சேர்மன் (1) சேறு (1) சைலன்ஸ் ப்ளீஸ் (1) சொந்தம் (1) சொர்க்கம் (1) சொல் மந்திரம் (1) சொல்வதொன்றும் செய்வதொன்றுமாய் (1) சோம்பேறித்தனம் (1) சோலை (1) சோலையும் பாலையும் (1) ச‌ம்பாத்திய‌ம் (1) ஜக்காத் (1) ஜக்காத் நிதிப் பங்கீடு (1) ஜனநாயகத்தை விலைக்கு வாங்கிய பணநாயகம் (1) ஜனாதிபதி யார் (1) ஜப்பான் (1) ஜமாத் (1) ஜமால் மதனி (1) ஜமால் முகம்மது கல்லூரி (1) ஜலீலா கமால் (1) ஜாஃபர் (1) ஜாபிர் (ரலி) (1) ஜாமாத் (1) ஜாஸ்மின் (1) ஜாஹிர் (1) ஜும்மா (1) ஜும்மா பள்ளி (1) ஜூஸ் (1) ஜெ (1) ஜெஜெ. சொத்து குவிப்பு (1) ஜெட் (1) ஜெட்லி (1) ஜெய்தைக் காணவில்லை (1) ஜெய்னுல் ஆபிதீன் (1) ஜெர்மனி (1) ஜைனப்(ரலி) (1) ஜ்ஃபருல்லாஹ் (1) ஞானப் பயணம் (1) டாக்கி (1) டாக்டர் சுமையா தாவூத் (1) டாலர் (1) டி.வி. எச்சரிக்கை (1) டிக்கெட் (1) டிஜிட்டடல் (1) டிஜிட்டல் (1) டிஜிட்டல் இந்தியா (1) டியூசன் (1) டிரஸ்ட் (1) டிஸெம்பர் (1) டிஸைன்ஸ் (1) டீக்கடை (1) டீக்கடை குழுமம் (1) டெலஸ்கோப் (1) டேரா (1) ட்விட் (1) த.மு.முக. (1) தஃபீக் சுல்தானா (1) தகப்பன் (1) தகர்ப்பதற்கா? (1) தகவல் (1) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (1) தகவல் தொடர்பு (1) தகுதிக்கேற்ப தண்டனை (1) தக்பீர் (1) தங்க முதலாளி (1) தங்கச்சி (1) தங்கப் பதக்கம் (1) தங்கை (1) தடசணையும் (1) தடம் (1) தடைகள் (1) தடைக் கல் (1) தண்டனை (1) தண்டவாளம் (1) தண்ணீர் தாகம் தீர்க்கவா (1) ததஜ (1) தந்தி டிவி. (1) தந்தை மகள் (1) தந்தை வழி உறவு (1) தந்தையர் தினம் (1) தந்தையெனும் பாசம் (1) தனித் தன்மை (1) தனித் தூது (1) தனித்தமிழ் (1) தன்னடக்கமும் மரியாதையும் (1) தன்னிலை மேம்படுத்தல் (1) தன்னிலை விளக்கம் (1) தன்னிலை விள்க்கம் (1) தன்மை (1) தப்லீக் (1) தமிழக முதல்வர் (1) தமிழக முஸ்லீம்களின் ஒற்றுமை (1) தமிழர்கள் (1) தமிழும் ஆங்கிலமும் பேசிக்கொண்டால் (1) தமிழ் தாவா (1) தமிழ் தாவா பிரிவு (1) தமிழ்நாடு அரசு (1) தமீமுல் அன்சாரி (1) தயபுள்ளயளுவோ (1) தரகர் தெரு (1) தரமற்ற தாரகை விருப்பம் (1) தரமிழந்து வருகிறதா (1) தரவிரக்கம் (1) தராவிஹ் தொழுகை (1) தரைமட்டம் (1) தர்ஜுமா (1) தர்பியா மையம் (1) தர்பிய்யா (1) தர்மம் (1) தர்ஹா (1) தற்கொலை தீர்வாகுமா (1) தலை (1) தலைசிறந்த சமுதாயம் (1) தலைமை உருவாக்கம் (1) தலைமைத் தேர்வு (1) தலைமைத்துவம் (1) தலைவரின் தகுதிகள் (1) தலைவர் யார்? (1) தலைவியாகி (1) தள விளக்கம் (1) தள்ளி வண்டி (1) தழுவல் (1) தவாப் (1) தவிர்த்திடுங்கள் (1) தவிர்ப்போம் (1) தவ்ஃபீக் (1) தவ்ஹீத் (1) தவ்ஹீத்கான் (1) தஸ்தகீர் (1) தஹ்ஸின் நிலோஃபர் (1) தா.பாண்டியன் (1) தாஃவா (1) தாஜூதீன் (1) தாஜ் மஹால் (1) தாஜ்மஹால் (1) தாத்தா (1) தாம்பத்யம் (1) தாயின் அறிவுரை கேட்போம் (1) தாய் பாசம் (1) தாரூத் தவ்ஹீத் (1) தாரை வார்க்கவா? (1) தாலிச்சா (1) தால் (1) தாவஆ பணி (1) தாவா (1) தாஹா சார் (1) தி ஹிந்து தமிழ் (1) திக் திக் (1) திக்ர் (1) திடீர் கல்லறை (1) திட்ட அறிக்கை (1) திப்பு சுலதான் (1) திப்பு சுல்தான் (1) திமிங்கலச் சாவுகள் (1) தியாகிககள் (1) தியாகிகள் (1) திரட்டி (1) திரவியம் (1) திராம்பட்டினம் (1) திரிபு (1) திரு(தொடண்)டர்) (1) திருடன் (1) திருடாதே (1) திருட்டு (1) திருத்தம் (1) திருப்பூர் to அதிரை (1) திருமணங்கள் (1) திருமணத்திற்கு கவுன்சிலிங் (1) திருமறை (1) திரைகடலோடி திரவியம் தேடு (1) திரைகடல் (1) திரையங்குகள் (1) திரையரங்கம் (1) திரையில் சிறை (1) திறந்த மடல் (1) தில்லு முல்லு (1) தீ தீயனைப்பு நிலையம் (1) தீதும் நன்றும் பிறர்தர வாரா (1) தீன் (1) தீன்குல ஹீரோக்களுக்கு (1) தீரன் திப்பு (1) தீரன் திப்பு சுல்தான் (1) தீர்ப்பு (1) தீவிர (1) தீவு (1) துக்ளக் (1) துடிக்கக் கொன்றனர் (1) துணை போகாதீர் (1) துபாய் - அதிரை (1) துரோகம் (1) துர்நாற்றம் (1) துலங்கும் (1) துளி உலகம் (1) துளியளவு (1) தூக்கமற்ற பொழுதுகளில் (1) தூதரகம் (1) தூரோகம் (1) தென் தமிழகம் (1) தெரு சங்கங்கள் (1) தேச பக்தி (1) தேசிய கொடி (1) தேசிய தினம் (1) தேடுகிறேன் (1) தேத்தண்ணி (1) தேனி (1) தேன் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் கருத்துக் கணிப்புகள் (1) தேர்வு அட்டவனை (1) தேர்வு பள்ளித் தேர்வு முடிவுகள் (1) தேர்வு முடிவுகள் (1) தையல் (1) தொட (1) தொடர் சொற்பொழிவு (1) தொடு (1) தொட்டி (1) தொண்டர் (1) தொனா (1) தொலைக் காட்சி (1) தொலைத்தது (1) தொழிலாளி (1) தொழில் நுட்பம் (1) தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம்அ (1) தோழி (1) தோழியர் (1) நகை (1) நக்கப்பா (1) நடிகையாயிருந்து (1) நடை பயிற்சி மேடை (1) நட்சத்திரமாக (1) நட்சத்திரம் (1) நட்புடன் ஜமால் (1) நண்டும் நரியும் (1) நந்தினி (1) நனா (1) நன்கொடை (1) நன்மையே வேண்டி. 4th year (1) நன்றியுரை (1) நன்றே (1) நபி பெருமானார் வரலாறுமுன்னுரை (1) நபி(ஸல்) வரலாறு (1) நபித் தோழர்கள் (1) நபித்தோழர் (1) நபிவழி (1) நமது கல்வி (1) நயவஞ்சத்திற்கு பகிரங்க எச்சரிக்கை (1) நரகம் (1) நலம் (1) நல்ல மனையாள் (1) நல்லது (1) நல்லாருக்கியாம்மா? (1) நல்லிணக்கம் (1) நல்லொழுக்கம் (1) நள்ளிரவு (1) நவீன மவ்லூது (1) நாக்கு (1) நாங்கள் அதிரை நிருபர் (1) நாங்கள்தான் (1) நாடி (1) நாடு (1) நாட்டாமை தீர்ப்பு (1) நானும் ஆஃப்ரிக்காவும் - தொடர்கிறது (1) நான் (1) நான் என்பது (1) நான் மிகச் சிறந்த மனிதன் (1) நான் முஸ்லிமாகிவிட்டேன் (1) நான் ரெடி நீங்க ரெடியா (1) நான்காம் ஆண்டிலும் (1) நான்காவதுத் தமிழ் (1) நான்றி ஆசான்களே (1) நாய்கள் (1) நாற்காலிகள் (1) நாளங்கள் (1) நாளை? (1) நாவு (1) நிகழ்சிகள் (1) நிகழ்வுகள் (1) நிசார் அஹ்மது (1) நிதானமும் (1) நிதி அமைச்சர் (1) நித்தியோன் முன் நான் (1) நினைவலைகள் (1) நினைவிருக்கா (1) நினைவு (1) நிருபர் (1) நிர்வாகம் (1) நிர்வாகிகள் (1) நிர்வாண பாரதம் (1) நிலத்தடி (1) நிலத்தடி நீர் (1) நிழற்பட கருவி (1) நிழலாடும் (1) நிழலின் அருமை (1) நீங்களுமா ஆலிம்ஸா இப்படி செய்தீர்கள் (1) நீங்களும் கிளிக்கலாம் (1) நீடூர் அலி (1) நீதம் (1) நீதித் துறை (1) நீதிமன்றம் (1) நுண்மென் (1) நுனிப்புல் (1) நூதன விளம்பரங்கள் (1) நெஞ்சில் உரமின்றி (1) நெய்னா முஹம்மது (1) நேசம் மாநபி (1) நேரான வழி (1) நேர்கானல் (1) நேறறு (1) நேறு (1) நைஜிரியா (1) நைஜீரியா (1) நொங்கு வண்டி (1) நோக்கம் (1) நோன்பு காலங்கள் (1) நோன்புக் கஞ்சி (1) நோன்புக்கு பிறகு (1) நோம்பு (1) நோம்பு கஞ்சி (1) நோம்பு கஞ்சி அரிசி (1) நோயற்ற வாழ்வு (1) ன் (1) ப.சிதம்பரம் (1) பகல் (1) பகிர்வு (1) பகுருதீன் (1) பகைமை (1) பகையன்று நகை (1) பக்கம் (1) பங்களாதேஷ் (1) பங்கு சந்தை (1) பசி போக்குமா? (1) பசிக்கட்டுகள் (1) பசியாறிட்டு சாப்பிடலாம் (1) பசுமை எங்கே (1) பஜக (1) பஜ்ஜி (1) பஜ்லுர் ரஹ்மான் (1) பஞ்ச் டயலாக் (1) படகு (1) படச் சுருள் (1) படம் சொல்லும் பாடம் (1) படிக்கச் சென்றனர் (1) படித்த (1) படித்தால் மட்டும் போதுமா (1) படை (1) படைத்தவனின் திருக்குர்ஆன் (1) படைத்தவனை நோக்கி (1) படைப்பாளி (1) படைப்பாளிகள் (1) படைப்புகள் (1) பட்ஜெட் 2013 (1) பட்ஜெட் 2013-2014 (1) பட்டதாரி (1) பட்டப்பெயர்கள் (1) பட்டான் (1) பட்டினி (1) பட்டேல் (1) பட்டோலை (1) பணத்தை பிணமாக்கிய மோடி (1) பணம் இங்கே (1) பணம் படுத்தும்பாடு (1) பணி வாழ்வும் பணி ஓய்வும் (1) பணிக்கர் (1) பண்புகள் (1) பதற்றம் (1) பதவி (1) பதவிகள் (1) பதில் (1) பதில் இல்லா கேள்விகள் (1) பதிவது எப்படி (1) பதிவர் உலகம் (1) பதிவிலக்கணம் (1) பதிவேடு (1) பத்தாம் வகுப்பு (1) பத்திரிகை (1) பந்தம் (1) பனி (1) பனிப் பொழிவு (1) பனிப்பொழுது (1) பம்முக்காலே (1) பயங்கரவாதம் (1) பயணிக்கும் பாதை (1) பயிலரங்கம் (1) பரபரப்பு (1) பரமக்குடி (1) பரிசுகள் (1) பரோட்டா (1) பர்ஜ்துபாய் (1) பர்தா (1) பர்மீய முஸ்லீம்கள் (1) பற (1) பறவைகள் (1) பற்றாக்குறை (1) பலம் (1) பல் (1) பல்கிஸ் (1) பல்வலி (1) பள்லிவாசல் நினைவுகள் (1) பள்ளி நினைவுகள் (1) பள்ளி விடுமுறையை எப்படி கழிப்பது (1) பழ மொழி (1) பழ மொழிகள் (1) பழகிய மொழியிலே (1) பழகுமொழி (1) பழைய குருடி கதவைத் திறடி (1) பழைய பேப்பர் (1) பஷீர் ஹாஜியார் (1) பஸ் (1) பஸ்ஸார் (1) பஸ்ஸுப் பயணம் (1) பஹ்ருதீன் அஹ்மது அமீன் (1) பாகிஸ்தான் (1) பாடப் புத்தகம் (1) பாடல் (1) பாட்டி சொன்னது (1) பாட்டி பேரன் உறவு (1) பாட்டு (1) பாபரி மஸ்ஜித் (1) பாரதமணி (1) பார்ட்னர் (1) பார்த்த (1) பார்த்தீனியம் (1) பார்வேர்டு (1) பார்வை (1) பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை (1) பாலைவனம் (1) பால் அருவி (1) பாஸ்வேர்டு (1) பாஸ்வேர்ட் (1) பி (1) பிகார் (1) பிசாசு (1) பிச்சைக்காரர்கள் (1) பிச்சைப் பாத்திரம் (1) பிஜே (1) பிஜேபியை ஆகாதவர்கள் ஆக்கிய பீஹாரிகள் (1) பிடி நழுவிய (1) பித்அத் (1) பித்ரா (1) பினாங்கு சபுறு மாப்புளே (1) பினாங்கு சபுறுமாப்புளே (1) பிரச்சாரம் (1) பிரச்சாரம். (1) பிரயாண வழியில் (1) பிரான்ஸ் (1) பிரி (1) பிரிட்டன் (1) பிரிவு (1) பிரெஞ்சு (1) பிரைல் எழுத்து (1) பிர்ண்டர்ஸ் (1) பிறகு (1) பிறப்பு (1) பிறர் சிரிக்க (1) பிற்பகலும் (1) பிலால் (1) பிலால் (ரழி) (1) பிலால் நகர் (1) பில்கிஸ் (1) பிள்ளைகள் (1) பிழையறப் பிழை (1) பீகார் (1) பீச் (1) பீர் முஹம்மது (1) புகாரி இமாம் (1) புகை (1) புகை வண்டி (1) புகைபப்டம் (1) புகைப்பிடித்தல் (1) புதிய தொடக்கம் (1) புதிய நினைவுகள் (1) புதிய நிர்வாகம் (1) புதிய நூல்கள் (1) புதிய பிரவுசர் (1) புதிய வேலை (1) புதியது (1) புதியதோர் உலகைச் செய்யும் (1) புதிய‌தோர் ஊர் (1) புதுமைப் பெண் (1) புத்தக காட்சி (1) புத்தக வெளியிடு (1) புனித மாதம் (1) புன்சிரிப்பு (1) புராணம் (1) புரிதல் (1) புரை (1) புரோகிதம் (1) புற்றுநோய் (1) புலவர் பஷீர் அஹ்மது (1) புவியீர்ப்பு (1) பூ (1) பூக்கள் (1) பூங்கா (1) பூஜை (1) பூரியான் ஃபாத்திஹா (1) பெங்களூரு (1) பெட்டகம் (1) பெட்ரோல் (1) பெண் இமைக்குள் ஆண்மை (1) பெண் உரிமை (1) பெண்களின் கருத்தென்ன (1) பெண்களுள் பேரறிஞர் (1) பெண்கள்ம் மார்கெட் (1) பெண்சுதந்திரம் (1) பெண்டிரும் (1) பெண்ணாய் பிறப்பதைப் போல்போ ரின்பம் வேறில்லை (1) பெண்ணினம் (1) பெண்ணியம் (1) பெண்மக்கள் (1) பெயரிலித் தோழர் (1) பெயர் கூறுமா..? (1) பெரிய கடிகாரம் (1) பெரியர்வர்கள் (1) பெரியார் (1) பெரியார்தாசன் (1) பெருநாள் ஒளி (1) பெருநாள் தக்பீர் (1) பெருநாள் தொழுகை (1) பெருநாள் வாழ்த்து (1) பெருபான்மை (1) பெருமை (1) பெருமை தீது (1) பெர்னாட்ஷா (1) பேகம் ஹஜரத் மஹல் (1) பேக்கரி (1) பேங்க் (1) பேச்சும் (1) பேச்சுலர் (1) பேப்பர் வேர்ல்டு (1) பேரண்டம் (1) பேரன்பு (1) பேராசிரியர் (1) பேராசிரியர் M H J அவர்களுக்கு (1) பேராவூரணி பலாப்பழம் (1) பேரிடம் (1) பேரிடர் (1) பேருராட்சித் தலைவர் (1) பேரூராட்சி தலைவர் (1) பேரூராட்சி மன்றத் தலைவர் (1) பொக்கிஷம் (1) பொடிசுகளின் த்லை நோன்பு (1) பொது அறிவு (1) பொது சிவில் (1) பொதுக்குழு (1) பொதுமக்கள் (1) பொதுவானவை (1) பொய் வழக்கு (1) பொய் வழக்குகள் (1) பொரிச்ச மீன் (1) பொருட்காட்சி (1) பொறாமை (1) பொறியியல் (1) பொற்காலம் 1977 (1) பொழுதுகள். (1) போக்கு (1) போடாதே தப்பு கணக்கு (1) போட்டி வலைப்பூ (1) போட்டிகள் (1) போதனை (1) போனஸ் (1) போராட்டும் (1) போற்றுவோம் (1) போலி (1) போலி ஆலிம் (1) போலி சான்றிதழ் (1) போலிகள் ஜாக்கிரதை (1) போலிகள் பயிரை மேயும் வேலிகள் (1) போலித் தொப்பிகள் (1) போலீஸ் (1) ப்ராப்ளம் (1) ப்ளஸ் 2 தேர்வு முடிவ்கள (1) ப்ளாக் ஹோல் (1) ப்ளாஸ்டிக் பை (1) ப்ளீஸ் (1) மகத்துவ மருதாணி (1) மகளிருக்கு மட்டும் (1) மகளெனப்படுவள் (1) மகுடம் (1) மக்கட்பேறில்லா மக்கட்கு (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள்தொகையா (1) மக்கா நேரலை (1) மக்தப் மதர்சா (1) மச்சான் (1) மச்சான்ஸ் (1) மடமையிலிருந்து விடுதலை பெறுவோம் (1) மணல் மேடு (1) மண் வாசனை (1) மண்சட்டி (1) மண்டல் கமிஷன் (1) மண்ணறை வாழ்க்கை (1) மண்ணின் மைந்தர்கள் (1) மண்வட்டு (1) மண்வாசனை (1) மதம் (1) மதராஸ் (1) மதவாதம் (1) மதியம் (1) மதீனா நேரலை (1) மதுக்கூர் (1) மதுப் பழக்கம் (1) மதுரை (1) மத்திய அரசு (1) மத்திய கிழக்கு (1) மத்ஹபு (1) மந்திரச் சொல் (1) மந்திரவாதி (1) மனப்பாடம் (1) மனமே தொட்டாசினுங்கிதானே. ஜாகிர் ஹுசைன் (1) மனம் திறந்து (1) மனம் மகிழுங்கள் (1) மனிக்பான் (1) மனித நேயம் (1) மனிதமும் (1) மனிதவளமா (1) மனிதவளமும் மண்ணின் மைந்தர்களும் (1) மனிதா திருடாதே (1) மனு நீதி மனித குலத்திற்கு நீதியா (1) மனுநீதி (1) மனோரா (1) மன்னித்தருள்வாய் இறைவா (1) மமக (1) மரண சிந்தனை (1) மரண தண்டனை (1) மரத்தடி (1) மரபணுக்கள் (1) மரபுகள் (1) மரமும் (1) மரம் வளர்ப்பது ஒரு அறம் (1) மருதாணி (1) மருத்துவ (1) மருத்துவ காப்பீடு (1) மருத்துவ முகாம் (1) மருத்துவக் கல்லூரி (1) மருத்துவமனை (1) மருத்துவர் ஜானகிராமன் (1) மருவண்டி (1) மர்பு கவிதை (1) மறக்க முடியவில்லை (1) மறக்க முடியா மனிதர் (1) மறக்க முடியாத மருத்துவர்கள் (1) மறுப்பு (1) மறுப்பும் (1) மறைந்த (1) மறைந்து வரும் மண்பாண்டப் பாத்திரங்கள் (1) மறைந்து வரும் வளர்ப்பு பிராணிகள் (1) மறைவான அழகே நிறைவானது (1) மலரும் நினைவு மொட்டுக்கள் (1) மலரும் நினைவுகள் (1) மலர்கள் (1) மலாலா (1) மலைமகன் (1) மலையேற்றம் (1) மல்லிபட்ணம் சாலமீது (1) மழலை (1) மழலைகள் (1) மழை இஸ்லாமியப் பெண்கள் (1) மழை வந்தாச்சு (1) மழைக்கு பயந்த மின்சாரம் (1) மவ்லாய (1) மவ்லீது (1) மவ்லூது (1) மவ்லூதுக்கு மகுடமா ? (1) மஸ்ஜிதுகள் (1) மஸ்ஜிதுல் ஹாரமில் (1) மஹ்பூப் அலி (1) மா (1) மாங்காய் (1) மாசு (1) மாடிவீடு (1) மாணவ (1) மாணவப் பருவம் (1) மாணவமணிகள் (1) மாணவராக வாழ்ந்த ஆசிரியர் (1) மாணவர்கள் போரட்டம் (1) மாணவி (1) மாண்பு (1) மாண்புமிகு மந்திருக்கு (1) மாத்தியோசி (1) மாநகர் (1) மாநிலங்கள் (1) மானம் ஒன்றே உயர் ஆயுதமாய் (1) மானிடா... மாடு வருகிறார் (1) மாப்பிள்ளை (1) மாப்பிள்ளைக் கடத்தல் (1) மாமன்னர் (1) மாமரன் (1) மாமழை (1) மாம்பழம் (1) மாயன் இன்னும் சாகவில்லை (1) மார்கெட் (1) மார்க்க அறிஞர்கள் (1) மார்க்க வரம்புக்கு உட்பட்டு (1) மார்க்க விரோதத்துக்கு துணை போகாதீர் (1) மார்க்க விரோதம் (1) மார்க்க(மான) விவாதம் (1) மாறுகண் (1) மாற்று திறனாளி (1) மாலைப் பொழுது (1) மாவு (1) மிக்க மேலானவன் (1) மிதிரிக்கட்டை நினைவிருக்கா? (1) மினா (1) மின் கம்பம் (1) மின் தடை (1) மின்அஞ்சல் குழுமம் (1) மின்சார வாரியம் (1) மின்னல் (1) மின்வாரியம் (1) மின்வெட்டு (1) மியாசி (1) மிருகங்களாகும் மனிதம் (1) மில்லினியர் (1) மிள்பதிவு (1) மீட்பு (1) மீரான் சாஹிப் (1) மீராஷாஹிப் UPSC (1) மீளுதல் (1) மு.செ.மு.சபீர் அஹமது (1) மு.செ.மு.முஹம்மது ஹனீஃபா (1) முஃஆத் (1) முஃப்தி அப்துல் கையூம் (1) முஅத்தின் (1) முஆத் (1) முகத்திரையும் (1) முகப்புத்தகம் (1) முகமது செயினுத்தீன் - திருவிதாங்கோடு (1) முகமூடிகள் (1) முகம்து அலி (1) முகம்மது புஹாரி (1) முகவரிகள் (1) முகாம் (1) முக்காடும் (1) முக்கிய சுட்டிகள் (1) முக்கோணங்கள் (1) முடி (1) முட்டையும் (1) முதற் குழந்தை (1) முதலாம் ஆண்டு (1) முதலீடுகள் (1) முதல் பட்டதாரி (1) முதல் பயணம் (1) முதல் பிறை (1) முதல் மதிப்பெண் (1) முதல் மிடறு (1) முதல் வகுப்பு (1) முதல்வர்கள் (1) முதியோர் (1) முதிர் கன்னி (1) முதிர் நிலா (1) முத்தலாக்கின் மூடுபொருள் (1) முத்து (1) முந்திய சுன்னத் (1) முந்துங்கள் (1) முனாகீனா (1) முனைவர் (1) முன் மாதிரி (1) முன்னேற்றப் பாதை (1) முன்னேற்றம் (1) முன்பதிவு (1) முன்மாதிரி வடிவங்கள் (1) முபாரக் (1) முயலாமை (1) முயலும் (1) முயல் (1) முராத் (1) முற்பகலும் (1) முற்பகல் (1) முல்லைப் பெரியார் (1) முல்லைப் பெரியாறு (1) முள் (1) முள்மகுடம் (1) முழக்கம் (1) முஸ்லி (1) முஸ்லிம்கள் பாகிஸ்தானையும் சவுதியையும் கொண்டாடுவது ஏன் (1) முஸ்லீம் பதிவர்கள் (1) முஸ்லீம் மக்கள் தொகை (1) முஸ்லீம் லீக் (1) முஹம்மது (1) முஹம்மது அபுபக்கர் (1) முஹம்மது அலியார் சார் (1) முஹம்மது ரஃபீக் (1) முஹல்லா (1) முஹல்லா சங்கங்கள் (1) மூன்றாமிடம் (1) மூன்றாம் ஆண்டு (1) மூன்றாம் உலகப்போர் (1) மூர்த்தி (1) மூலதனம் (1) மூவண்ணக் கொடி (1) மெடிக்கல் (1) மெட்ரிக் பள்ளிகள் (1) மெட்ரோ (1) மெய்யெழுத்துகள் (1) மெர்சினா (1) மெளன ஓலம்! (1) மெளலவி அப்துல் பாசித் புஹாரி (1) மெளலித் (1) மெஷின் (1) மேட்டூர் (1) மேலாளர் (1) மேலைநாடுகள் (1) மைக் டைசன் (1) மைக்ரோ (1) மைதா (1) மையல் (1) மையவாடி (1) மைல்கல் (1) மொழிப்பெயர்ப்பு (1) மொழியால் விழிபேசுகிறது (1) மோகம் (1) மோசடி (1) மோடியின் முதுகில் ஏறும் தோல்வி மூட்டைகள் (1) மோதினார் (1) மோமியாக்கா (1) யாசகம் (1) யாசீன் சுஃபியான் (1) யார் அங்கே ? எங்கே போனார்கள் (1) யார் திவிரவாதி (1) யார் வசம்.. (1) யுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர் (1) யூசுபும் மொம்மாலியாக்காவும் (1) யூசுப் எஸ்டஸ் (1) யூசுப் ரியாஸ் (1) யூனுஸ் (1) யோகம் (1) யோசனை (1) யோசனைகள் (1) யோசி (1) யோசிக்கிறார் (1) ரஃபீக் சுலைமான் (1) ரகசியங்கள் (1) ரசாயன (1) ரஜினி (1) ரமளான் காணொளி (1) ரயிலடி (1) ரயில் (1) ரஷ்யா (1) ரஸூல் (1) ராக்கெட் (1) ராஜா வீட்டு விருந்தும் கறி (1) ராடார் (1) ராணி (1) ராஷித் அலி (1) ரிட்டர்ன் டிக்கெட் (1) ரியர் எஸ்டேட் (1) ரிஸல்ட் (1) ரிஸான நபீக் (1) ருசிக்க மான்பு (1) ரூபாய் (1) ரெடிமேட் (1) ரெட்டைக் கிளவி (1) ரேவடி (1) ரேஷன் கார்டு (1) ரொட்டி (1) ரோடு (1) ரோமாபுரியின் ரோஜா மலர் (1) ரோஷம் (1) லகும் தீனுக்கும் வலியதீன் (1) லகூன் (1) லக்கேஜும் நானும் (1) லஞ்சத்தை ஒழிக்க முடியாதா (1) லட்சம் (1) லண்டடன் (1) லண்டனில் கந்தூரி (1) லலுபிரசாத் (1) லாயிலாஹ (1) லேசர் (1) லைஃப் டைம் - Talk (1) லைசன்ஸ் (1) லைப்ரரி (1) வகிடும் (1) வக்ஃபு வாரியம் (1) வக்ப் வாரியம் (1) வசதி (1) வட இந்திய (1) வடியுது (1) வடிவும் (1) வட்டாட்சியர் முடிவு (1) வட்டார வழக்கு மொழி (1) வட்டியில்லா வங்கிச் சேவையை நோக்கி (1) வட்டிலப்பம் (1) வணங்குவோம் (1) வண்கொடுமை (1) வண்டூருது (1) வண்ணப்படம் (1) வண்ணம் (1) வதந்தியைப் பரப்பாதீர் (1) வன்மம் (1) வன்முறை (1) வன்மையாக கண்டிக்கிறோம் (1) வப்பா (1) வயசு (1) வயது (1) வயர்லெஸ் (1) வயலும் வாழ்வும் (1) வரம்பு (1) வரவுக்கும் செலவுக்கும் (1) வரிவரியாய் (1) வருகம் (1) வருமுன் (1) வருமுன் காப்போம் (1) வரும் முன் காப்போம் (1) வர்த்தக (1) வறட்டி (1) வலக்கரம் (1) வலி வழிச் செய்திகள் (1) வலைஞர்கள் (1) வலைத்தளங்கள் (1) வளம் (1) வளர்க (1) வளர்கிறாய் மகனே (1) வளர்ச்சிப்பாதையில் மோடி அரசு (1) வளைகுட (1) வளைகுடா பாதிப்பு (1) வளைகுடா வெயில் (1) வள்ளுவ (1) வழக்கம் (1) வழக்காடல் (1) வழக்கு (1) வழக்குக் கூண்டில் வறுமைக் கோடு (1) வழிகாட்டி (1) வழிகேடு (1) வழிமுறை (1) வஸ்வாஸ் (1) வா (1) வாகனங்கள் (1) வாகிங்க் (1) வாக்காளப் பெருமக்களே (1) வாக்கி (1) வாசனை (1) வாதம் (1) வாதி (1) வாப்பா பாட்டு (1) வாப்பிச்சா (1) வாயோதிக வலிகள் (1) வாய் (1) வாய் துர்நாற்றம் (1) வாரப் பத்திரிகை (1) வாழப் பழகுங்கள் (1) வாழவேண்டும் (1) வாழ்க சனநாயகம் (1) வாழ்கையின் வலக்கரம் (1) வாழ்க்கைத் தரம் (1) வாழ்க்கையின் பதிவேடுகள் (1) வாழ்ந்திடாதே (1) வாழ்வதற்கா? (1) வாழ்வு (1) வாழ்வு சிதைந்தது! வளம் குறைந்தது (1) வாஸ்கோடகாமா (1) விகடன் (1) விசா (1) விசாலம் (1) விசிட் (1) விடியலை நோக்கி (1) விடிவு (1) விடுமுறைக் காலம் (1) விடைபெறு (1) விண் கல் வீண் பயமா (1) விண்ணுலிருந்து மின்சாரம் (1) விண்வெளி (1) விதவை (1) விதி எண் 110 (1) விதி மீறல் (1) வித்தியாசமான வணிகர் (1) வித்தியாசமானவர்கள்.-பகுதி 3 (1) வித்யா (1) வினிகர் (1) வினோதினி (1) விபரீதம் (1) வியக்க வைக்கும் பயணக் கண்டுபிடிப்புக்கள் (1) வியாதி (1) வியாபாரம் (1) வியாபாரி (1) விரக்தி (1) விருட்சம் (1) விருது (1) விரைவு (1) விரோதம் (1) விலகல் (1) விலங்கினம் (1) விலாசம் (1) விலை (1) விளக்கு (1) விளைநிலங்கள் (1) விழலுக்கு வீணாகும் சிந்தனைகள் (1) விழா (1) விழி மொழி (1) விழிப்புணர்வு பக்கங்கள் (1) விழுஞாயிறு (1) விஷ வாயு (1) விஷுவல் (1) விஸ்வரூபம் (1) வீச்சு (1) வீடு கட்டுபவர்களின் கவனத்திற்கு (1) வீட்டுக்கு ஓர் ஆசான் (1) வீட்டுப் பாடம் (1) வீண் விரயம் செய்யாதீர்கள் (1) வீரர் (1) வீழ்வது (1) வெறியாட்டம் (1) வெற்றிலை (1) வெலக்காத் தெரு (1) வெல்லெஜொ (1) வெளியூர் (1) வெளியூர்காரர் (1) வெளியே (1) வெள்ளம் (1) வெள்ளிக்கிழமை (1) வெள்ளெழுத்து (1) வேங்கை (1) வேட்டு (1) வேட்பாளர்களின் நேர்காணல். நேர்காணல் (1) வேண்டாம் (1) வேண்டாம் கொண்டாட்டம் (1) வேண்டுதல் (1) வேண்டும் (1) வேதம் (1) வேற்றுமை (1) வேலை தேடுவோர்க்கு (1) வேலை வரைகலை (1) வேவு (1) வேவ்ரைடர் விமானம் (1) வேஷம் (1) வைத்தியன் (1) ஷஃபி (1) ஷபான பாஸிஜ் (1) ஷபே பராஅத் (1) ஷமீம் (1) ஷார்ஜா (1) ஷாஹிபா சபீர் அஹ்மது (1) ஷேக் (1) ஷேக் அப்துல் ரஹ்மான் சுதைஸி (1) ஷேக் உசேன் (1) ஷேக்கனா M.நிஜாம் (1) ஷைத்தான் (1) ஸலவாத் (1) ஸாத் பின் முஆத் (1) ஸூரத்துல் அஃலா (1) ஸூரத்துல் கியாமா (1) ஸூரத்துல் ளுஹா (1) ஸ்டாம்ப் (1) ஸ்டேஷனரி (1) ஸ்டேஷன் (1) ஸ்பீடு (1) ஸ்பெஷல் (1) ஸ்மார்ட் (1) ஹஜ் பெருநாள் (1) ஹஜ் 2012 (1) ஹஜ் கமிட்டி (1) ஹஜ்ஜின் மகத்துவம் (1) ஹஜ்ரத் மொஹானி (1) ஹத்தனா (1) ஹந்தூரி (1) ஹனீபா சார் (1) ஹலோ... ஹலோ... நலமா (1) ஹாபிட் (1) ஹாபிழ் (1) ஹாபிழ் பராஆ (1) ஹார்ட் (1) ஹாலித் (1) ஹிஜாப் (1) ஹிஜாப் S.அலாவுதீன் (1) ஹிஜாப் ஒரு கவசம் (1) ஹூமர் (1) ஹைக்கூ (1) ஹைடெக் காலம் (1)