தொடர் – 13.
நாம் இந்தத் தலைப்பில் பார்த்துவரும் வரலாற்று நாயகர்களில் இந்த வாரமும் ஒரு வீரத்திருமகனின் வரலாறைக் காண இருக்கிறோம். செக்கிழுத்த சிதம்பரனார் என்று கப்பலோட்டிய தமிழனாகிய வ.உ..சிதம்பரனாரைக் குறிப்பிடும் வரலாறு, அந்த தியாகங்களுக்கெல்லாம் சற்றும் குறையாத இன்னும் சொல்லப் போனால், அதைவிட ஒருபடி அதிகமான தியாகங்கள் செய்துள்ள இந்தப் பதிவின் நாயகர் மெளலானா ஹஜ்ரத் மொஹானி அவர்களைப் பற்றி குறிப்பிடாதது ஏன் என்ற ஆதங்கம் நம்மை ஆட்டிப் படைக்கிறது. இந்த திருமகனின் சரித்திரத்தைப் படிக்கும் போது இவ்வளவு பெரிய ஒரு தியாக சீலரின் வரலாறை நாம் தேடித்தான் படிக்க வேண்டிய அவலத்துக்குக் காரணம் அவர் முஸ்லிமாகப் பிறந்ததே என்று எண்ணும்போது, நெஞ்சு பொறுக்கவில்லை. சரி இனி வரலாற்றை பார்ப்போம்.
1929 ஆம் ஆண்டை இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு மறக்கவே முடியாது. அந்த வருடம் டிசம்பர் 29 ஆம் நாள் இன்று பாகிஸ்தானில் அன்று ஒன்றுபட்ட இந்தியாவில் இருந்த லாகூரில் திரண்ட காங்கிரஸ் மாநாட்டில்தான் இந்தியாவுக்கு முழுச் சுதந்திரம் தரவேண்டுமென்ற மாநாட்டுத் தீர்மானம் நிறைவேறியது.
ஆனால், 1921 ஆம் ஆண்டு அதாவது, லாகூர் தீர்மானம் நிறைவேற்றப் படுவதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பே அகமதாபாத்தில் கூடிய மாநாட்டில் , இத்தகைய தீர்மானத்தை தனி நபராக வடித்து , சுதந்திரம் எங்களது உயிரோடு ஓட்டிப் பிறந்த உரிமை என்கிற முதல் முழக்கத்தை முன்வைத்தவர் மெளலானா ஹஜ்ரத் மொஹானி அவர்களாவார்.
இதைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், முழுச் சுதந்திரம் என்றால் என்ன டொமினிக் அந்தஸ்து என்றால் என்ன என்பதை நாம் அறிய வேண்டி இருக்கிறது. முழுச் சுதந்திரம் என்பது ஆங்கிலேயன் தனது மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டு நாட்டை விட்டு வெளியேறுவது . டொமினிக் அந்தஸ்து என்பது ஆங்கிலேயருடைய ஆட்சியே நடக்கும் ஆனால் அதில் இந்தியரும் பங்கேற்று நிர்வாகத்தைப் பகிர்ந்து கொள்ளலாம் என்பதே ஆகும். இப்போது அஹமதாபாத்துக்குப் போகலாம்.
அஹமதாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரஸ் கட்சி மகாத்மா காந்தியின் தலைமையில் ஒரு தீர்மானத்தை முன் வைத்தது. அதன்படி மேல குறிப்பிட்டுள்ள டொமினிக் அந்தஸ்தை பிரிட்டிஷாரிடம் கோரிப் பெற வேண்டுமென்பதே அந்தத் தீர்மானம். அதாவது தேசப் பிதா என்று கூறப்படும் காந்தியின் கருத்து முழு சுதந்திரம் அல்ல டொமினிக் அந்தஸ்துதான். இதன் மூலம் ஆங்கிலேயருடன் சமமாக ஆட்சியில் சில காங்கிரஸ் தலைவர்களுக்கு இடம் கிடைக்குமென்று நம்பினார்கள் அதனால் அந்த முறையை ஆதரித்தார்கள்.
ஆனால் காங்கிரசின் இந்த அரைக் கிணறு தாண்டும் அரசியல் அறிவை எதிர்த்து ஒருவர் எழுந்து நின்றார். அவர்தான் மெளலானா ஹஜ்ரத் மொஹானி. மிகப்பெரும் தேசியத் தலைவர்களிலும் கிலாபத் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரும் ஆன நமது மெளலானா ஹஜ்ரத் மொஹானி அவர்கள் ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியா பெற வேண்டியது பிச்சைக்காரத்தனமாக கோரிப்பெறும் டொமினிக் அந்தஸ்து அல்ல. நமது மண்ணில் ஆதிக்கம் செலுத்தும் ஆங்கிலேயர் இம்மண்ணிலிருந்து முழுக்க முழுக்க வெளியேறி முழு தேசத்தையும் எவ்வித தலையீடும் இல்லாமல் ஆளுகின்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதே என்று ஆணித்தரமாக வாதிட்டார்.
வாதிட்டதுடன் அல்லாமல், தனது வாதத்தை ஒரு அரசியல் தீர்மானமாக வடித்து அதை முன் மொழிந்து பேசினார். மெளலானா ஹஜ்ரத் மொஹானி அவர்கள் எடுத்து வைத்த வாதங்களைக் கேட்ட மாநாட்டின் பிரதிநிகள் அந்தத் தீர்மானத்தை ஆதரிக்க தயாரானார்கள். ஆனால் அந்தத்தீர்மானம் நீர்த்துப் போனது காரணம் இப்படிப் பட்ட ஒரு ஆக்க பூர்வமான தீர்மானத்துக்கு வன்மையான எதிர்ப்பு வந்த திசை மகாத்மா – தேசத்தந்தை காந்தி இருந்த திசையாகும். காந்தி இதை எதிர்த்ததால் முழுச் சுதந்திரம் வேண்டுமென்ற தீர்மானம் நிறைவேற்ற முடியாமல் நீர்த்துப் போனது. ஆதரிக்க முன் வந்தோர் பின் வாங்கினார்கள். இந்த நிலையை உண்டாக்கியவர் காந்தி. (B.I.Grover, S.Grover, A NEW LOOK AT MODERN INDIAN HISTORY. & Young India May 4 1922,).
மெளலானா ஹஜ்ரத் மொஹானி அவர்கள் முன் மொழிந்த தீர்மானம் அன்றே நிறைவேறி இருந்தால் சுதந்திரமும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பே கிடைத்து இருக்கலாம் . அத்துடன் நாட்டை துண்டாடிய பிரிவினையும் நடைபெறாமல் போயிருக்கலாம். ஆனால் முன் மொழிந்தவர் ஒரு முஸ்லிம் தலைவர் என்பதால் நீ என்ன சொல்வது நாங்கள் என கேட்பது என்ற மனநிலை இன்று போல் அன்றும் இருந்தது என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம். ஆனால் சரித்திரத்தின் திசை மாறிய விளையாட்டு, அதே தீர்மானம் எட்டு ஆண்டுகள் கழித்து லாகூரில் அதே மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் வாயால் அந்த தீர்மானம் முன் மொழியப் பட்டது.
மெளலானா ஹஜ்ரத் மொஹானி அவர்களின் அரசியல் கணிப்புக்கு மேற்கண்ட சரித்திர சம்பவம் ஒரு சான்றாகும். இந்திய அரசியல் வானில் மெளலானா அவர்கள் ஒரு வளர் பிறையாக வளர்ந்து , காங்கிரஸ் இயக்கமும் கிலாபத் இயக்கமும் இணைந்து 1922-23 ல் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் ஒரு முன்னோடித்தலைவராகத் திகழ்ந்தார். இதனால் 1924 ல் சிறைக்கும் அனுப்பப் பட்டார். 1929 ல் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்றில் தொடர்புடைய நேரு அறிக்கை ( Nehru Report) எனப்படும் அறிக்கை ஒன்று வெளியிடப் பட்டது. அந்த அறிக்கையின் சாராம்சங்கள் மீது பல முஸ்லிம் சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் கடும் அதிருப்தி தெரிவித்தார்கள்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மறைக்க முடியாத சக்தியாகத் திகழ்ந்த அலி சகோதரர்களுடனும் முகமது அலி ஜின்னா அவர்களுடனும் இணைந்து முஸ்லிம்களின் சமூக முன்னேற்றத்துக்கான பல செயல்பாடுகளை மெளலானா அவர்கள் மேற்கொண்டார்கள். காங்கிரசில் இருந்த சில தலைவர்கள் முஸ்லிம் தலைவர்களை குறைத்து மதிப்பிட்ட பல சமயங்களில் மெளலானா சிங்கம் போல கர்ஜித்து எழுந்து நின்றார். ஒரு முறை சர்தார் படேல் இடம் முகத்துக்கு நேராக, ‘ நீங்கள் முஸ்லிம்களை அரசியல் அனாதைகளாக நினைக்காதீர்கள். அவர்களுக்கு எதிராக நடக்கும் எல்லாவகையான மனம்போனபோக்கிலான தப்பான நடவடிக்கைகளையும் எதிர்த்து என்றென்றும் நான் போராடுவேன் “ என்று எச்சரித்தார். `You should not think that Muslims are orphans today. I am here to defend their rights against all odds and will fight for them till death'. என்பது மெளலானா அவர்கள் முழங்கிய முழக்கமாகும்.
மெளலானா ஹஜ்ரத் மொஹானி அவர்கள் அடிப்படையில் ஒரு கவிஞர். உருது மொழியில் உணர்வுகளைத் தூண்டும் கவிதைகளைப் படைப்பதில் வல்லவர். தமிழில் ஒரு பாரதியாரைப் போல் கவிதையால் இவர் பாடாத துறைகளே இல்லை . காதலின் மெல்லிய உணர்வுகளை அவர் கஜல் கவிதைகளால் வெளிப் படுத்தினார். சமூக விழிப்புணர்வுக் கவிதைகளை விதைகளாகத் தூவினார். அதே அளவுக்கு அச்சமின்றி சுதந்திர உணர்வூட்டும் கவிதைகளை எழுதி வெளியிட்டார். மக்களிடம் இவருடைய கவிதையால் ஏற்பட்ட எழுச்சி இடி கண்டு ஆங்கில நாகம் நடுங்கியது.
மெளலானா ஹஜ்ரத் மொஹானி அவர்களின் கவி புனையும் திறமைக்கு ஒரு சான்றை வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டு வியக்கிறார்கள். பிரிட்டிஷ் அரசால் பலமுறை பல வருடங்கள் சிறைக்கு அனுப்பப்பட்ட மெளலானா ஹஜ்ரத் மொஹானி அவர்கள் ஒவ்வொரு முறையும் சிறையில் இருந்து வெளிவரும்போது, வந்தவுடன் ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிடுவார். அவரது கரங்களில் எவ்வித எழுதப் பட்ட காகிதமும் இருக்காது. காரணம் சிறையில் இவருக்கு எழுதுகோலோ காகிதமோ வழங்குவது தடை செய்யப் பட்டிருந்தது. தான் இயற்றிய கவிதைகளை தனது மனத்திலேயே வடித்து அதைத் மனப்பாடம் செய்து சிறையில் இருந்து வெளி வந்ததும் அதை உருவாக்கி வெளியிடும் ஆற்றல் எல்லாம் வல்ல இறைவன் இவருக்கு அளித்திருந்த தனி ஆற்றலாகும்.
உருது முஹல்லா ("Urdu-i-Mu`lla") என்கிற புகழ்பெற்ற தனது பத்திரிகையில் தானே எழுதி, அந்தப் பத்திரிகையை தேசவிடுதலை உணர்வைத்தூண்ட அர்ப்பணித்தார். அந்நாளில் கவிதை வடித்த பல கவிஞர்களை தனது பத்திரிகையில் அறிமுகப் படுத்தி ஊக்கப் படுத்தினார்.இதற்காக மெளலானா ஹஜ்ரத் மொஹானி அவர்கள் பெரும் வாழ்வு விலை கொடுக்க வேண்டி இருந்தது. அதைப் பின்பு சொல்கிறேன்.
மெளலானா ஹஜ்ரத் மொஹானி அவர்கள் 1923 –ல் கிலாபத் கமிட்டியின் தலைவராகவும் 1924 –ல் அகிலஇந்திய முஸ்லிம் லீக் மாநாட்டின் தலைவராகவும் இருந்து நாடெங்கும் சுற்றி தேச விடுதலைக்காக முழங்கினார். 1921 –ல் அகமதாபாத்தில் தான் முழங்கி தோற்கடிக்கப் பட்ட தீர்மானத்தை 1937-ல் லக்னோவில் நடைபெற்ற முஸ்லிம் லீக் மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றச் செய்தார்.
தனது பத்திரிகையான உருது முஹல்லா ("Urdu-i-Mu`lla") வில் பல விடுதலை உணர்வு ஊட்டிய பலரின் கவிதைகளை வெளியிட்டார் என்று முன்பு குறிப்பிட்டேன். அவ்விதம் வெளியிடப் பட்ட ஒரு கவிதை ஒரு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆங்கிலேயரிடம் சிலர் இதைப் போட்டுக் கொடுத்தார்கள். உடனே ஆங்கில அரசு மெளலானா அவர்களுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியது. பிரச்னைக்குரிய அந்தக் கவிதையை எழுதியது யார் என்பதை அரசுக்கு அறிவிக்க வேண்டுமென்று மெளலானாவை கட்டாயப் படுத்தியது. ஆனால் மெளலானா அரசின் அந்த நோட்டீசை தனது காலடியின் கீழ் போட்டு மிதித்தார். கவிதையைப் பிரசுரித்த பத்திரிகையின் ஆசிரியர் நான் அந்த முறையில் அதன் கருத்துக்களுக்கு நான்தான் பொறுப்பு. எந்தக் காரணம் கொண்டும் எழுதியவரை அடையாளம் காட்ட முடியாது. தேவைப்பட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கையை என் மீது எடுத்துக் கொள்ளுங்கள் என்று துணிவுடன் அரசுக்கு பதில் அளித்தார்.
அநேகமாக, ஆங்கிலேயர் ஆட்சியில் அச்சிட்ட குற்றத்துக்காக தண்டிக்கப் பட்ட முதல் இந்தியர் மெளலானா அவர்கள்தான் என்று வரலாறு குறிப்பிடுகிறது. உருது முஹல்லா பத்திரிகை உடனே தடை செய்யப்பட்டது. மெளலானா ஹஜ்ரத் மொஹானி அவர்கள் மீது வழக்குத் தொடரப் பட்டது. பத்திரிகையின் அச்சுக் கூடம் ஆங்கில அரசால் ஜப்தி செய்யப் பட்டது. மெளலானா குருவி போல் சேகரித்து வைத்திருந்த அவரது நூலகம் ஆங்கில அரசால் ஏலமிடப்பட்டது. அது மட்டுமல்லாமல் இன்றைக்கு ஆட்சியாளர்களுக்குப் பிடிக்காத அரசியல் தலைவர்களின் மேல் திருச்சியிலும் திண்டுக்கல்லிலும் நாகர் கோயிலிலும் நாகப்பட்டினத்திலும் வழக்குப் போட்டு அலைக்கழிக்கப் படுவதுபோல் மெளலானா ஹஜ்ரத் மொஹானி அவர்களும் பல ஊர்களுக்கு அலைக் கழிக்கப்பட்டார். இரக்கமற்ற ஆங்கில அரசு அவருக்கு பலமுறை சிறைத்தண்டனை வழங்கியது.
யாரோ எழுதிய கவிதைக்காக நீங்கள் ஏன் இவ்வளவு துன்பங்களை சுமக்க வேண்டுமென்று மெளலானாவிடம் கேட்கப்பட்டபோது “ அது யாரோ எழுதிய கவிதையாக இருந்தாலும் எனது தேச நலனுக்காக எழுதப் பட்ட கவிதை. என் தேச நலனை நாடும் வார்த்தைகளை சுமந்த கவிதை. அந்தக் கவிதையை எனது பத்திரிகையில் பிரசுரித்தற்காக நான் பெருமைப் படுகிறேன். அதற்காக எனக்கு இந்த தண்டனைகள் என்றால் நான் அவற்றை மகிழ்வோடு ஏற்றுக் கொள்ளவும் அதனால் வரும் துன்பங்களை தாங்கிக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன் “ என்று பதில் அளித்தார்.
மெளலானா அவர்கள் சிறைக்கு அனுப்பப்படும்போது அவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். குழந்தை பிறந்த பிறகு அக்குழந்தையைக் கணவரிடம் காட்ட வேண்டுமென்று அதிகாரிகளை அவரின் மனைவி அணுகியபோது மெளலானா அவர்களை எந்தச் சிறையில் வைத்து இருக்கிறார்கள் என்று கூட சொல்லாமல் அரசு அலைக்கழித்தது. பச்சிளம் குழந்தையைக் கைகளில் ஏந்திக் கொண்டு மெளலானா அவர்களின் மனைவி ஒவ்வொரு சிறைச்சாலையாக அலைந்தார். இறுதியில் அரக்க மனம் இளகியது. கணவரைக் கண்டார்.
தான் பெற்ற குழந்தையை சிறைக் கம்பிகளின் இடையே தனது கரங்களை நீட்டி வாங்கிக் கொண்ட மெளலானா குழந்தையின் மீது முத்தமாரி பொழிந்தார். ஆனால் ஆங்கில அரக்க அரசுக்கு இது கூட பொறுக்கவில்லை. தன் குழந்தையின் மீது சிறையில் வைத்து முத்தம் கொடுத்ததற்காக மெளலானா மீது சிறை விதிகளை மீறினார் என்ற புதிய குற்றம் சாட்டப் பட்டு மேலும் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப் பட்டது. அந்த தண்டனையின்போதுதான் சிறையில் செக்கு இழுக்கும் தண்டனையும் மெளலானாவுக்கு வழங்கப் பட்டது. செக்கு இழுத்த செம்மல் சிதம்பரனார் என்று மட்டும் பேசும் வரலாறு ஒரு இடைச் சொருகலாகக் கூட மெளலானா அவர்களின் தியாகத்தைக் குறிப்பது இல்லை.
சிறையில் மெளலானா அனுபவித்த கொடுமைகள் ஏராளம். அரசியல் குற்றத்துக்காக சிறையில் அடைக்கப் பட்ட மெளலானா அவர்கள் சாதாரண கிரிமினல் குற்றவாளியாகவே நடத்தப் பட்டார். ஒரு அரைக்கால் சட்டை, ஒரு பழைய மேல் சட்டை, ஒரு தொப்பி, போர்த்திக் கொள்ள சணலால் ஆன ஒரு சாக்கு ஆகியவையே மெளலானாவுக்கு வழங்கப்பட்டன. தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டு இருந்த மெளலானா அவர்களுக்கு ஒரு இரும்பால் ஆன கோப்பை மட்டுமே வழங்கப் பட்டது. அதிலேயே அவர் சாப்பிட்டுக் கொள்ள வேண்டும் நீர் பிடித்துக் குடித்துக் கொள்ள வேண்டும். அவரது மூக்குக் கண்ணாடி, சிறையில் பறிமுதல் செய்யப்பட்டது. தனது கரங்களால் சிறைவாசிகளின் உணவுக்காக பல மூட்டை கோதுமையை நோன்பு மாதத்தில் அரைத்துக் கொடுக்க வேண்டிய தண்டனைக்கும் ஆளானார். மெளலானாவின் முதுகில் பல சாட்டையடித்தழும்புகள் இருந்தன என்றும் ஒரு குறிப்புக் கூறுகிறது. ஆனாலும் கண்ணீர் விட்டே வளர்த்தோம் இப்பயிரை கண்ணீரால் காத்தோம் என்று மன உறுதியுடன் சுதந்திரப் பயிரை உள்ளத்தில் வளர்த்தார்.
தனது வாழ்நாள் முழுதும் ஒரு சுதந்திரப் போராளியாகவே வாழ்ந்த மெளலானா அவர்களின் உணர்வுகளை ஒடுக்க ஆங்கில அரசு எடுத்த எந்தவித நடவடிக்கைகளாலும் மெளலானாவின் முயற்சிகளை முறியடித்துப் போட இயலவில்லை. உதைக்க உதைக்க மேலெழும் பந்துபோல அவரது சுதந்திர வேட்கை இருந்தது. கஜல் பாடல்களை எழுதிக் கொண்டிருந்த மென்மையான கவிஞரின் நெஞ்சுக்குள் சுதந்திர உணர்வும் சமுதாய உணர்வும் ஒன்று சேர ஒரு பெரும் தியாகத்துக்கு இந்த நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மெளலானா அவைகளை சரித்திரம் மறந்தாலும் சமுதாயம் மறக்கக் கூடாது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு அமைந்த இந்திய அரசியல் சட்ட நிர்ணய சபையில் மெளலானா அவர்களும் ஒரு கண்ணியம் வாய்ந்த உறுப்பினராக பங்காற்றி டாக்டர் அம்பேத்கருடன் பல சட்ட நுணுக்கங்களை விவாதித்து இந்திய அரசியல் சட்டம் உருவாகவும் தனது பங்கை ஆற்றினார். மிக எளிய வாழ்வுக்கு சொந்தக் காரராக மெளலானா அவர்கள் வாழ்ந்தார்கள் என குறிப்புகள் கூறுகின்றன. தனது வீட்டுக்கு வேண்டிய தண்ணீர் வரை தனது கரங்களாலே தூக்கிக் கொண்டு வருவாராம். தனது விலை மதிப்பற்ற கவிதைத் தொகுதிகளில் இருந்து வரும் வருமானத்தின் பெரும் பகுதியை ஏழைகளுக்குப் பிரித்துக் கொடுப்பாராம். ஹஜ்ஜுக்கு செல்லும் போது கூட கப்பலில் மூன்றாம் வகுப்பில்தான் பயணம் செய்தாராம். அரபு நாட்டின் மன்னர்கள் செய்த விருந்து ஏற்பாட்டையும் மறுத்தாராம். ஒரு உண்மை முஸ்லிமாக உலக சுகங்களை விரும்பாத மனிதராக வாழ்ந்தார் என்று குறிப்பிடப் படுகிறார்.
Whenever he ascended the high pedestal of the Presidentship of All-India Muslim League or the All-India Khilafat Committee, he performed his duties like the early Caliphs treading on the footprints of the Holy Prophet. It may be said without fear of contradiction that Maulana Hasrat Mohani belonged to the illustrious tribe of great heroes of early Islam. என்று ஒரு வரலாற்றாசிரியர் குறிப்பிடுகிறார். இவ்வளவு பெருமைக்கும் உரிய பெருமகன், 1951 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் நாள் தனது உலக வாழ்வை லக்னோவில் நீத்தார். இன்னாலில்லாஹி வ இன்னா இலிஹி ராஜிஊன்.
மெளலானா ஹஜ்ரத் மொஹானி அவர்களை வரலாறு இப்படி புகழ்பாடுகிறது. ஆனால் அந்தப் புகழ், மதப் பூட்டுப் போட்டு பூட்டி வைக்கப்பட்டு இருக்கிறது. அவற்றைத்தேடி புறப்பட்ட வேளையில்தான், பாதையில் இந்த சரித்திர முத்துக்கள் கிடைத்தன.
"Hasrat was a great poet, a great politician, a great literature but above all he was a great man”
இன்ஷா அல்லாஹ் மீண்டும் சந்திக்கலாம்.
இபுராஹீம் அன்சாரி