Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தக்வாப் பள்ளிக்குப் புதிய நிர்வாகம்! 24

அதிரைநிருபர் பதிப்பகம் | March 31, 2013 | , , ,


நான் இந்நாட்டின் பிரதமரானால்...’ என்ற தலைப்பைக் கொடுத்துப் பள்ளிக்கூடங்களில் மாணவர்களைக் கட்டுரை எழுதச் செய்வதுண்டு.  அது போன்று அன்று, இக்கட்டுரையின் பின்னணி.

நமதூர் ‘தக்வாப் பள்ளி’க்குப் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் முயற்சியில் கடந்த சில மாதங்களாகத் தமிழ்நாடு அரசு வக்பு வாரியம் ‘முயற்சி’ செய்துவந்தது.  அதற்காக விண்ணப்பம் செய்தவர்களுள் 29 பேரை வக்பு வாரியம் தெரிவு செய்து, (அப்பட்டியலில் இருந்து ஏழு பேரை மட்டும் நிர்வாகிகளாக அறிவிப்பதற்காக) அப்பெயர்ப் பட்டியலையும் வெளியிட்டிருந்தது.  

“நீங்களும் விண்ணப்பம் செய்யவேண்டும்” என்று சிலர் வற்புறுத்தியதால் நானும் விண்ணப்பித்திருந்தேன்.  அதனால் அந்த 29 பேரில் நானும் ஒருவன்.  கடந்த 06 / 03 / 2013 அன்று எங்கள் அனைவரையும் நேர்முக விசாரணை க்காகச் சென்னைக்கு அழைத்திருந்தார்கள்; சென்றோம்.  தனித்தனியாக நேர்முக விசாரணை நடைபெற்றது.  யார் யாரிடம் என்ன கேட்டார்கள் என்பது எனக்குத் தெரியாது.  அதனால் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளை மட்டும் நான் கூறமுடியும்.  என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளைப் பொருத்தவரை, இதைக் கேட்கவா இவ்வளவு தூரத்திற்கு வரச் செய்தார்கள் என்று எண்ணத் தோன்றியது.  கூடியிருந்த 25 அல்லது 30 அரசு ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்களுள் 4 பேர் மட்டும் என்னிடம் நான்கு கேள்விகள் கேட்டார்கள். 

கேள்வி ஒன்று :  நீங்கள் அதிராம்பட்டினவாசியா?

கேள்வி இரண்டு :  உங்கள் பெயர் என்ன?

கேள்வி மூன்று :  நீங்கள் ஏன் விண்ணப்பம் செய்துள்ளீர்கள்?
(இதற்கு நானளித்த பதில்: “வக்புச் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்;  துஷ்பிரயோகம் செய்யப்படக் கூடாது என்பதால்.”)

கேள்வி நான்கு :  நீங்கள் எப்போது உம்ரா செய்து திரும்பி வந்தீர்கள்?

(அதற்கு முந்திய உள்ளூர் விசாரணையில் நான் கலந்துகொள்ள முடியாததால், ‘உம்ரா’ பயணம் செல்வது பற்றி அவர்களுக்கு ஒரு கடிதம் கொடுத்திருந்தேன்.  அதனால் இந்தக் கேள்வியைக் கேட்டிருப்பார்கள் போல் தெரிகிறது.)

நேர்முக விசாரணைக்கு வந்திருந்த கூட்டத்தைப் பார்த்துவிட்டு, யாரோ என் காதில், “ஆளும் கட்சிக்குத்தான் சான்ஸ்” என்று அப்போது கிசுகிசுத்தது, இப்போது தெரிவு செய்யப்பட்டிருக்கும் பட்டியல் மூலம் ‘உண்மைதான்’ என்று நினைக்க வைக்கிறது. சரி, யார் வந்தால் என்ன?  நாம் தேர்ந்தெடுக்கப்பட்டு, செய்ய நினைத்திருந்த சீர்திருத்தங்களை, அவர்களும் செய்யட்டும் என்று அவர்களின் காதிலும் கவனத்திலும் போட்டுவைக்கலாமே என்ற எண்ணத்தில் கீழ்க்காணும் செய்திகளைப் பட்டியல் போடுகின்றேன்:
  • தக்வாப் பள்ளியானது, ‘துளுக்கா பள்ளி’ என்று அழைக்கப்பட்டுவந்த காலத்தில், அப்பள்ளிக்குரிய சொத்துக்களாக, கடைத்தெரு முழுதும் சுட்டிக்காட்டப்பட்டது!  ஆனால், அன்றைக்கு அதிரையை ஆட்சி செலுத்திவந்த குறிப்பிட்ட ஒரு குடும்பம், தன் இஷ்ட்டப்படி, தன் சொத்துகளாகக் கருதி, கடை வைத்திருப்போருக்கு விற்றதும் விட்டுக் கொடுத்ததும் ஏராளம்!  அவற்றில் வியாபாரிகள் கடைகளும் கட்டிடங்களும் கட்டிக்கொண்டு இன்றும் சுகித்து வருவது கண்கூடு.  தரை வாடகையாவது கொடுக்கிறார்களா என்பது சந்தேகம்.
  • கடைத்தெரு வெளிப்புறத்தில் இத்தகைய கொள்ளை நடப்பதை அறிந்தோ என்னவோ, மார்க்கெட்டின் உள்ளே மீன், காய்கறி, இறைச்சிக் கடைகள் வைத்திருப்போர், பள்ளியின் சார்பில் ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய் வசூலுக்குப் போகும் பள்ளி ஊழியரை ஏலனப்படுத்தி விரட்டிவிடும் சந்தர்ப்பங்களும் அடிக்கடி நடப்பது வழக்கமாம்.
  • இது போன்ற ஊழல்களைப் புதிய நிர்வாகம் களைந்து, இறையில்லத்தைத் திறம்பட நடத்திச் செல்லவேண்டும்.  அதற்கான பரிந்துரைகளாகக் கீழ்க்காணும் திட்டங்களைக் கூறி வைக்கிறோம்:

1. தற்போது புதிய கட்டிடங்களாக இருப்பவற்றைப் பட்டியல் போட்டு, அவ்விடங்களில் வியாபாரம் செய்துவருபவர்களுக்கு ‘நோட்டீஸ்’ கொடுத்து, உடனடியாக, ஒரு தொகையை தரை வாடகையாக வசூல் செய்யவேண்டும்.

2. மோசமான நிலையில் உள்ள கடைகளையும் கட்டிடங்களையும் இடித்துவிட்டு, பள்ளிவாசல் செலவில் புதிதாகக் கட்டி வாடகைக்கு விடவேண்டும்.

3. மார்க்கெட்டின் உள்புறம் முழுவதும் காலி செய்து, தற்காலிக இடத்தில் மார்க்கெட்டை அமைத்துக்கொடுத்துவிட்டு, நவீன வசதிகளுடன் தனித்தனிக் கடைகளைக் கட்டிக் கொடுத்து வாடகை வசூல் செய்யவேண்டும்.

4. மேற்காணும் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முன்னால், காவல்துறை மற்றும் வக்பு போர்டு ஆகிய அரசுத் துறைகளின் உதவியைக் கேட்டுப் பெறவேண்டும்.

இவையெல்லாம், நாம் நிர்வாகப் பொறுப்புக்கு வந்தால் செய்ய நினைத்தவை.  புதிய நிர்வாகம் இது போன்ற திட்டங்களைச் சவாலாக ஏற்றெடுத்து, தனது ‘சேவை மனப்பான்மை’யை நிரூபிக்குமா?

அதிரை அஹ்மது

இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் – தொடர் - 11 12

அதிரைநிருபர் பதிப்பகம் | March 30, 2013 | , ,


தொடர் : பதினொன்று
இஸ்லாமியப் பொருளாதாரத்தின் தனிச் சிறப்புகள்.

அண்மையில் கீழ்க்கண்ட  வரிகளைப் படிக்க நேர்ந்தது. இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகளின் அடித்தளம் இந்த வரிகளில் பொதிந்து இருப்பதாக எனக்குத் தோன்றியது.  

Money Says:- "Earn Me, Forget Everything".

Time Says:- "Follow Me, Forget Everything"..

Future Says:- "Struggle For Me, Forget Everything"...

ALLAH Says:- "Remember Me, I'll Give You Everything"....

இஸ்லாமிய பொருளாதார நடவடிக்கைகளை துவக்கிவைப்பது இறைவன் மீதும் அவனது படைப்பினங்களின் மீதும், மறுமையின் மீதும் , இறைவன் அனுப்பிய  தூதர்கள் மற்றும் அவர்களின் மூலம் அனுப்பப்பட்ட வேதங்கள் மீதும் மாறா நம்பிக்கை கொள்வது என்பதை கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். இந்த நம்பிக்கைகள் தான் இறைவனுடன் மனிதனுக்கு  ஏற்பட்ட ஒப்பந்தத்தின் மாற்ற முடியாத அம்சங்கள் என்பதையும் கண்டோம். இதையே ஒவ்வொரு முஸ்லிமும்  லா இலாஹா இல்லல்லாஹ் முகம்மதுர் ரசூலுல்லாஹ் உரத்த குரலில் ஓங்கி ஒலித்து அனுதினமும் அறிவிக்கிறோம். இந்த முழக்கம் முழங்கப் படும்போதெல்லாம்  ஐந்து நேரத்தொழுகையில் இதற்கு சாட்சியும் சான்றும் பகர்கிறோம். இதுவே இஸ்லாத்தின் முதல் முழக்கம் ; ஈமான் என்கிற இறை நம்பிக்கையின் அடிப்படை. 

இந்த இறை நம்பிக்கை என்கிற வாக்குறுதியின் சுனைகளிலேயே வாழ்வின் எல்லா நடைமுறைகளும் ஊற்றாகப் பிறக்கின்றன.  நாம் ஒப்புக் கொண்ட இந்த அடிப்படையில் அல்லாஹ்வின் வழிகாட்டுதல்களும் அண்ணல்  நபிகள் ( ஸல்) அவர்களின் வாழ்வு தந்த போதனைகளும் காட்டும் வழியில் நடைபோடுவதே நமது வாழ்வு முறைகள்.  

அல்லாஹ் தனது அருள் மறையில் கூறுகிறான் :

“இறைத் தூதர் எதை உங்களுக்குக் கொடுக்கிறாரோ அதைப் பெற்றுக் கொள்ளுங்கள். அவர் எதனைவிட்டும் உங்களைத் தடுக்கிறாரோ அதனைவிட்டு விலகி இருங்கள்” (அத்தியாயம் : 59: 10). 

இதுதான் இஸ்லாம் அமைத்துத் தந்த  சமுதாய மரத்தின் ஆணிவேர்.  இந்த சமுதாயத்தில் இருக்கும் ஒவ்வொரு தனி மனிதனின் நம்பிக்கைகள், நடவடிக்கைகள் , அன்றாட வாழ்வில் கடைப் பிடிக்கும் சட்டதிட்டங்கள் , நெறிமுறைகள்  அல்லாஹ் ஒருவன் அவன் வகுத்த வழியே பின்பற்றப் படவேண்டிய வழி என்பதாகவே அமையும்; அமையவேண்டும். நல்லவை எவை கேட்டவை எவை என்று அந்த இறைவன் வகுத்துத் தந்த வழியை மட்டுமே மேற்கொள்வதே இந்த சமுதாயத்தின் சிறப்பியல்பு. நமது சொந்த இலாபத்துக்காகவோ அல்லது நமது அறிவுக்கு மட்டும் எட்டக் கூடிய முடிவுகளை எடுப்பதோ இந்த சமுதாயத்தில் அனுமதிக்கப்படாதவை. எதைச்செய்தாலும் இதற்கு இறைவனின் ஒப்புதல் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு மேற்கொள்வதே இந்த சமுதாயத்தின் அடிப்படை. யாரை நம்பி நம்முடைய வாழ்வை ஒப்படைத்து இருக்கிறோமோ அந்த ஏக இறைவனும் அவனின் தூதரும் சொன்னவை நமது ஈருலக வாழ்வையும் ஏற்றம் செய்யத் தக்கவையாகும். வாழ்வின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள மனிதன் தன் உயிரைப் பணயம் வைக்கும் பொருள் தேடும் முறைகளுக்கும் இந்தக் கருத்துக்கள் பொருந்தும். 

உலக மார்க்கங்களில் இஸ்லாம் காட்டுகிற பொருளாதார வழிகள் மட்டுமே இஸ்லாத்தின் கொள்கைகளின் ரீதியாகவும் அதன் ஷரியத் எனும் சட்டத்துடனும் தொடர்பு கொண்டவை என்று அறிமுக அத்தியாயங்களில் குறிப்பிட்டிருக்கிறோம். ஆன்மீகம் என்கிற இறைவணக்கம்,  வழிபாடு ஆகியவைகளுக்கும் மனிதனின் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் இணைப்பை ஏற்படுத்தி வைத்திருப்பது இஸ்லாம். உதாரணமாக பத்து கோடி ரூபாய் பணம் இருந்தால் பத்து இடங்களில் வீட்டுமனை வாங்கிப்போடு- பலருக்கு வட்டிக்குக் கொடுத்து பணத்தைப் பெருக்கு  என்று மற்ற மார்க்கங்கள் வழி காட்டும்; பேராசை பிடித்த மனமும் சொல்லும்; ஆனால் இஸ்லாமோ பணம் படைத்தவர்கள் பத்து பேர்களுடைய பசியைப் போக்கும் வழியில் செலவிடத் தூண்டும். அந்த நன்மையின் கணக்கு இறைவனிடம் வரவு வைக்கப் படுமென்று எடுத்துக் கூறும். 

இஸ்லாமியக் கொள்கைகளுடன் இஸ்லாமியப் பொருளாதாரம் தொடர்புடையது இணைப்பு ஏற்படுத்தி இருப்பது என்பதற்கு இறைவனே இப்படிச்  சான்று தருகிறான். 

“மனிதனுக்கு தான் முயற்சி செய்ததைத் தவிர வேறு எதுவும் இல்லை! இன்னும் , அவனுடைய முயற்சி விரைவில் கவனிக்கப் படும். பின்னர் அதற்கான முழுக்கூலியும் அவனுக்கு வழங்கப்படும் . மேலும்,  இறுதியில் சேரவேண்டியது உம் இறைவனிடமேயாகும்”. ( அத்தியாயம்  53: 38-39). 

தன்னுடைய ஒவ்வொரு நடவடிக்கைகளும் இறைவனால் கண்காணிக்கப் படுகிறது என்று ஒவ்வொரு வினாடியும் நினைத்து நம்பி அடியெடுத்து வைக்க வேண்டியது இஸ்லாம் தரும் எச்சரிக்கை . இது ஒவ்வொரு இஸ்லாமியனும் கடைப் படிக்க வேண்டிய கடப்பாடு. 

இஸ்லாம் என்பதை ஒரு வாழ்க்கைப் பாதை என்று அறுதியிடும்  ஆய்வாளர்கள் இஸ்லாத்தின் கொள்கைகள் யாவையுமே  நடைமுறைக்கு ஏற்றதாய் , கடைப்பிடிக்க இலகுவானதாய் , மனித இயல்புகளுக்கு ஏற்றபடியே இறைவன் கட்டளைகளாக வழங்கி இருப்பதாகக் கூறுகின்றனர். அந்த முறையில் இறைவனின் கட்டளைகளுக்கு இணங்கி மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் இறைவனை வணங்கும் வழிபாட்டை ஒத்ததாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். அதாவது நமது பொருளாதார நடவடிக்கைகள் இறைவன் கட்டளை இட்ட ஹராம் ஹலாளைப் பேணி மேற் கொள்ளப் படும்போது  “இபாதத்” என்கிற உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகிறது. இறைவணக்கத்தையும் பொருளாதார நடவடிக்கைகளையும் இணைத்து வைத்திருக்கிற பெருமை இஸ்லாத்துக்கு உண்டு ; இஸ்லாத்துக்கே உண்டு. சாதாரணமாக அன்றாட உபயோகத்தில் உள்ள பொருள்களை , சாதனங்களை அல்லது பணிகளை ( Utilization of material,  commodities and services) வகைப் படுத்தி அவற்றைப் பயன்படுத்துவதில் மனித இனம் செய்யும் தேர்ச்சி இறைவனின் பொருத்தத்துக்கு ஏற்றபடி இருக்க வேண்டும் என்று சொல்லும் சிறப்புக்கு உரியது இஸ்லாம். இந்தப் பொருத்தம் மனித இனத்தின் மறுமைக்கே மார்க் போட்டு   வழிகாட்டும் என்பதே இஸ்லாம். இஸ்லாமியப் பொருளாதாரத்துக்கு உள்ள இத்தகைய சிறப்புத் தன்மை வேறெந்த சித்தாந்ததுக்கும் இல்லை. மற்றவை எல்லாம் வெந்ததைத் தின்று விதி வந்தால் சாகவே சொல்கின்றன.  

சில மதங்களைப் பின்பற்றுவோர் பாவசெயல்களில் தெரிந்தோ தெரியாமலோ ஈடுபட  நேரிட்டால் அந்தப் பாவங்களில் இருந்து தங்களை புனிதப் படுத்திக் கொள்ள ஏதாவது நதி அல்லது குளத்தில் குளித்தால் மட்டும் போதும் என்று கூறப்பட்டு இருக்கிறது. ஆனால் இஸ்லாம்தான் மனிதன் தான் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களுக்கு இறைவனிடம் இறைஞ்சி தொழுது து ஆச செய்து மன்னிப்புக் கோருவதுடன் தனது செல்வத்தில் ஒரு பகுதியை  செலவு செய்து தனது பாவத்துக்கு ஏற்றபடி இத்தனை ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டுமென்றோ,  இவ்வளவு மதிப்புள்ள உணவு தானியங்களை வறியவர்களுக்கு வழங்க வேண்டுமென்றோ , இத்தனை அடிமைகளை விடுதலை செய்ய வேண்டுமென்றோ வரையறுத்துக் கூறுகிறது.

உண்டியலில் பணம் போட்டு விட்டால் ஊரைக் கொள்ளையடிக்கலாம் என்று இஸ்லாம் தடை இல்லாச் சான்றிதழ் வழங்கி வழிவகுத்துக் கொடுக்கவில்லை. சதவீதக் கணக்கு வைத்து சாமிக்குப் படையல் போட்டால் சகலமும் சம்மதம் என்கிற சாத்திரம் இஸ்லாத்தில் இல்லை. அடிக்கிற கொள்ளையில் ஆண்டவனுக்கும் ஒரு  பங்குவைத்துக் கொடுக்கும் பழக்கம் இஸ்லாத்தில் இல்லை. 

இந்ததொடரின் இரண்டாம் அத்தியாயத்தில் கீழ்க்கண்ட வரிகளைக் குறிப்பிட்டு இருந்தேன். அவற்றை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளலாம். 

"சராசரி மனிதனை ஆசைதான் வாழ்வை நோக்கி இழுத்துச் செல்கிறது." என்று குறிப்பிட்டிருந்தேன். இந்த ஆசை,  மனிதனின் எண்ணத்தில் உருவாவதாகும். எண்ணத்தின் தூய்மை மனிதனின் செயல்களில் தூய்மையையும் இறைவனின் பொருத்தத்தையும் கொடுக்கும். 

எண்ணத்தைப் பொறுத்தே செயல்கள் அமைகின்றன என்று நபிமொழி கூறுகிறது. ஒவ்வொரு மனிதனும் எதை எண்ணி செயல்களைத் தொடங்குகிறானோ அதுவே அவனிடம் வந்தடையும். இறைவனுக்காகவும் இறைவனின் தூதருடைய வார்த்தைக்காகவும் யார் ஹிஜ்ரத் செய்கிறார்களோ அவர்களது ஹிஜ்ரத் அவ்வாறே அமையும் என்றும் யார் உலக இலாபங்களுக்காக அல்லது தான் விரும்பிய பெண்ணை மணம் முடிப்பதற்காக இருப்பிடம் துறந்து வெளியேறுகிறாரோ அவரது ஹிஜரத் அதற்கேற்றபடி அதற்காகவே அமையும்  என்றும்  நவிலப்பட்ட  நபி மொழி புகாரி , முஸ்லிமில் காணக்கிடைக்கிறது.   

ஏழைகளுக்கு உணவளிப்பது , இல்லாதோர்க்கு உதவுவது, ஏழைக் குமர்களை திருமணம் முடித்துக் கொடுப்பது, கல்விக்கு உதவுவது, நோயாளிகளைச் சென்று காண்பது, அனாதைகளை அரவணைப்பது  , ஒப்பந்தங்களை நிறைவேற்றுவது,   எடை மற்றும் நிறுவைகளில் நேர்மையைக் கடைப்பிடிப்பது, உணவுப் பொருட்களை பதுக்காமல் இருப்பது  போன்ற இன்னோரன்ன நல்ல எண்ணங்களால் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் காரணமாக செல்வம் செலவாகலாம். ஆனால் இவை போன்ற  யாவுமே  இறைவனுடைய மாறாத அன்பு என்கிற செலவாகாத  செல்வத்தை  சேர்த்துத் தருபவையாகும். 

அல் கஸல் அத்தியாயத்தில் (28 : 76- 78) ல் இறைவன் சுட்டிக்காட்டும் காரூன் உடைய வரலாறு சமுதாயத்துக்கு விடப்பட்ட எச்சரிக்கை. செல்வந்தனாக வாழ்ந்த காரூனை அவனது சமூகத்தார் எச்சரித்தார்கள். “நீ பூரித்துவிடாதே! ஏனெனில், பூரித்திருப்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. அல்லாஹ் உனக்கு வழங்கி இருக்கிற செல்வத்தின்  மூலம் மறுமையில் உனது வீட்டைப் பெற்றுக் கொள்ள அக்கறை கொள்; அல்லாஹ் உனக்கு உபகாரம் செய்திருப்பது போல் நீயும் உபகாரம் செய் . மேலும், பூமியில் அராஜகம் விளைவிக்க முயற்சிக்காதே! அராஜகம் விளைவிப்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை” என்று கூறப்பட்டதை அவன் அலட்சியம் செய்ததன் விளைவாக வசனம் (28 : 81-82)ல் கூறப்பட்டிருப்பது போல் “நாம் அவனையும் அவனுடைய வீட்டையும் பூமியில் புதைத்துவிட்டோம்!" என்றும் “அல்லாஹ் தன்னுடைய அடியார்களில் தான்              நாடுவோர்க்கு வாழ்வாதாரத்தை தாராளமாக வழங்குகிறான்; மேலும் தான் நடுவோர்க்கு அளவோடு கொடுக்கிறான்” என்கிற இறைவனின் வார்த்தைகளை நாம் செவியுற்று எண்ணம் மற்றும்   செயல்களில் தூய்மையான இறைவனின் கட்டளைகளை பேணி நடப்பதே பெரும்கடமை. 

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை ; பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது திருவள்ளுவர் வாக்கு.  எண்ணத்தில் தூய்மையும் இயக்கத்தில் இறைவனின் பொருத்தமும்  இல்லாவிட்டால் குவியல் குவியலாகக் கொட்டிக் கிடக்கும் பொருளாலும் பயன் இல்லை என்பதே இஸ்லாத்தின் வாக்கும் வழியும்.  
இன்ஷா அல்லாஹ் தொடரும்
இபுராஹீன் அன்சாரி

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 32 10

அதிரைநிருபர் பதிப்பகம் | March 29, 2013 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

உலக பற்றின்மையின் சிறப்பு உலக சுகங்களை குறைத்துக் கொள்ள ஆர்வமூட்டல், ஏழ்மையின் சிறப்பு

மனிதர்களே! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. இவ்வுலக வாழ்வு உங்களை ஏமாற்றி விட வேண்டாம். ஏமாற்றுபவன் (ஷைத்தான்), அல்லாஹ் விஷயத்தில் உங்களை ஏமாற்றி விட வேண்டாம். (அல்குர்ஆன்: 35:5)

மண்ணறைகளைச் சந்திக்கும் வரை அதிகமாகத் (செல்வத்தை) தேடுவது உங்கள் கவனத்தைத் திருப்பி விட்டது. அவ்வாறில்லை! அறிவீர்கள். பின்னரும் அவ்வாறில்லை! மீண்டும் அறிவீர்கள். அவ்வாறில்லை நீங்கள் உறுதியாக அறிவீர்களாயின் நரகத்தைக் காண்பீர்கள். பின்னர் மிக உறுதியாக அறிவீர்கள். பின்னர் அந்நாளில் அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள். (அல்குர்ஆன்: 102:1-7)

இவ்வுலக வாழ்க்கை வீணும், விளையாட்டும் தவிர வேறில்லை மறுமை வாழ்வு தான் வாழ்வாகும், அவர்கள் அறியக் கூடாதா? (அல்குர்ஆன் : 29:64)

''நபித்தோழர்கள் ஒரு நாள் நபி(ஸல்) அவர்களிடம் உலகைப் பற்றி நினைவு கூர்ந்தார்கள். அப்போது நீங்கள் கேட்க மாட்டீர்களா? நீங்கள் கேட்க மாட்டீர்களா? நிச்சயமாக எளிமையான தோற்றம், இறைநம்பிக்கையில் உள்ளதாகும். நிச்சயமாக எளிமையான தோற்றம், இறை நம்பிக்கையில் உள்ளதாகும் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஉமாமா என்ற இயாஸ் இப்னு தஹ்லபா அன்சாரீ ஹாரிஸீ(ரலி) அவர்கள் (அபூதாவூது) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 517)

நபி(ஸல்) அவர்கள் எங்களை (ஒரு போருக்கு) அனுப்பினார்கள். எங்களுக்கு அபூஉபைதா(ரலி) அவர்களை தலைவராக நியமித்தார்கள். குறைஷிகளின் படையை நாங்கள் சந்தித்தோம். பேரீத்தம்பழம் இருந்த ஒரு தோல் பையை எங்களுக்கு நபி(ஸல்) வழங்கினார்கள். அது தவிர வேறு எதுவும் எங்களிடம் இல்லை, அபூஉபைதா(ரலி) அவர்கள் ஒவ்வொரு பேரீத்தம் பழமாக எங்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ''அதைக் கொண்டு நீங்கள் எப்படி (பசி போக்கிட) செய்தீர்கள்? என்று கேட்கப்பட்ட போது, சிறுவர்கள் சாப்பிடுவது போல் அதை நாங்கள் சப்பிக் கொள்வோம். பின்பு அதைத் தொடர்ந்து தண்ணீரைக் குடித்துக் கொள்வோம். எங்களின் ஒருநாள் இரவு வரை எங்களுக்கு அது போதுமாகும். எங்களின் கம்புகளால்  நாங்கள் மரக்கிளையில் அடிப்போம். பின்பு உதிர்ந்த அதன் இலைகளை தண்ணீரில் ஊற வைத்து, அதை உண்போம். கடற்கரையில் நாங்கள் நடந்து கொண்டிருந்தோம். மணல் திட்டுப் போன்ற ஒரு பொருள் கடற்கரையில் எங்களுக்குத் தெரிந்தது. அந்த இடம் வந்தோம். அப்போது அது அன்பர் எனும் ''திமிங்கலம்'' ஆகும். ''இறந்து விட்டதே'' என்று கூறிய அபூஉபைதா(ரலி) அவர்கள், பரவாயில்லை, நாம் நபி(ஸல்) அவர்களின் தூதர்களாக இறைவழியில் உள்ளோம். எனவே நீங்கள் சாப்பிடுங்கள்' என்று அபூஉபைதா(ரலி) கூறினார்கள். அங்கே நாங்கள் ஒரு மாதம் தங்கி இருந்தோம். நாங்கள் முன்னூறு பேர். இருப்பினும் (அதைச் சாப்பிட்டு)குண்டாகி விட்டோம்.

நாங்கள் அதன் கண்ணை |நோண்டி, அதன் குழியில் உள்ள கொழுப்பை சேகரித்தோம். அதிலிருந்து காளைமாட்டைப் போல், அதன் இறைச்சி (யை வெட்டுவது) போல் வெட்டி எடுப்போம். அபூஉபைதா(ரலி) அவர்கள், எங்களில் பதிமூன்று நபர்களை தேர்ந்தெடுத்து: அதன் கண் குழியில் அவர்களை உட்கார வைத்தார்கள். அதன் விலா எலும்புகளில் ஒரு எலும்பை எடுத்து, அதை நட்டு வைத்து, பின்பு எங்களுடன் இருந்த பெரும் ஒட்டகையை, அதன் கீழே நடக்கச் செய்தார்கள். மீன் இறைச்சியிலிருந்து உப்புக் கண்டங்களையும் சேகரித்துக் கொண்டோம். மதீனாவிற்கு நாங்கள் திரும்பிய போது நபி(ஸல்) அவர்களிடம் வந்தோம். அவர்களிடம் நடந்ததைக் கூறினோம். அப்போது அவர்கள் ''இது அல்லாஹ், உங்களுக்கு அனுப்பிய உணவாகும். உங்களிடம் அதன் இறைச்சியில் ஒரு துண்டு இருந்தால், எங்களுக்கு நீங்கள் சாப்பிடத் தரலாமே'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்களிடம் நாங்கள் கொடுத்தோம் அதை அவர்கள் சாப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: அபூஅப்துல்லா ஜாபிர் இப்னு அப்துல்லா(ரலி)அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 518)

நாங்கள் அகழ்போரின் போது, அகழ் தோண்டிக் கொண்டிருந்தோம். அப்போது பெரும் பாறை ஒன்று தென்பட்டது. |உடனே நபித்தோழர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ''இது பெரும் பாறையாகும். அகழ் குழிக்குள் தென்படுகிறது'' என்று கூறினார்கள். ''நான் (|குழிக்குள்) இறங்குகிறேன் எனக் கூறிய நபி(ஸல்) அவர்கள், எழுந்து நின்றார்கள். அவர்களின் வயிறோ கல்லால் கட்டப்பட்டிருந்தது. மூன்று நாட்களாக எந்த உணவையும் நாங்கள் சுவைக்கவே இல்லை. நபி(ஸல்) அவர்கள் கோடாரியை, எடுத்து அடித்தார்கள். (அந்தப்பாறை) தூள்தூளாக ஆகிவிட்டது. இறைத்தூதர் அவர்களே! என் வீட்டிற்குச் செல்ல எனக்கு அனுமதி தாருங்கள்'' என்று கேட்டேன். (வீட்டிற்கு வந்து) என் மனைவியிடம், ''நபி(ஸல்) அவர்களை நான் பொறுத்துக் கொள்ள இயலாத நிலையில் கண்டேன். உன்னிடம் (உண்ண) ஏதேனும் உண்டா?'' என்று கேட்டேன். ''என்னிடம் தொலிக் கோதுமையும், ஒரு ஆட்டுக் குட்டியும் உள்ளது'' என என் மனைவி கூறினார்.

நான் ஆட்டை அறுத்தேன். தொலிக் கோதுமையை மாவாக அரைத்தேன். இறைச்சியை ஒரு சட்டியில் போட்டோம். பின்பு நபி(ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது மாவும் ஊறி இருந்தது. சட்டியும் அடுப்பில் இருந்தது. இறைச்சி வெந்த நிலையில் இருந்தது. ''என்னிடம் சிறிதளவு உணவு உள்ளது. இறைத்தூதர் அவர்களே! நீங்களும் மற்றும் ஓரிருவரும் வாருங்கள்''என்று கூறினேன். அந்த உணவு எவ்வளவு உள்ளது? என்று நபி(ஸல்)அவர்கள் கேட்டார்கள். அவர்களிடம் கூறினேன். ''தூய்மையான அதிகமான உணவு அது. நீ உன் மனைவியிடம் ''நான் வரும்வரை இறைச்சி சட்டியை அடுப்பிலிருந்து இறக்கி விட வேண்டாம் என்று கூறு'' என்று கூறிய நபி(ஸல்) அவர்கள், ''வாருங்கள் என்று (மக்களை நோக்கிக்) கூறினார்கள். உடனே முஹாஜிர்களும், அன்சாரிகளும் எழுந்தார்கள்.

மனைவியிடம் நான் வந்தேன். ''உனக்கு துன்பம்தான். நபி(ஸல்)அவர்கள் முஹாஜிர்களும், அன்சாரிகளும் மேலும்  அவர்களுடன் உள்ள அனைவரும் வந்து விட்டனர்'' என்று கூறினேன்.

''உங்களிடம் நபி (ஸல்) அவர்கள் விபரம் கேட்டார்களா?'' என மனைவி கேட்டாள். ''ஆம்'' என்றேன். அதற்குள் இறைத்தூதருடன் அனைவரும் வந்து விட்டார்கள். அவர்களை, ''உள்ளே வாருங்கள்! நெருக்கிக் கொள்ள வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் |கூறினார்கள். அவர்கள் ரொட்டியைப் பிய்த்து எடுத்து, அதில் இறைச்சியை வைத்தார்கள். அடுப்பையும் சட்டியையும் அதில் எடுத்ததும் மூடினார்கள். தன் தோழர்களுக்குக் கொடுத்தார்கள். ரொட்டியையும் எடுத்துக் கொண்டே இருந்தார்கள். இறைச்சியையும் வைத்துக் கொண்டே இருந்தார்கள். நபித்தோழர்கள் வயிறு நிறைய சாப்பிட்டார்கள். அதில் மீதமும் இருந்தது. நபித்தோழர் மனைவியிடம், ''இதை நீயும் சாப்பிடு. பிறருக்கும் அன்பளிப்புச் செய், மக்களை பசிப்பிணி பிடித்துள்ளது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 520)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
  
இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.

கல்வி 37

அதிரைநிருபர் பதிப்பகம் | March 28, 2013 | , , ,


திருமறை கூறும்
....திடமான கட்டளை
.திருநபி கூறும்
..."தொலைவான ஒட்டகம்"

அகிலத்தின் காட்சிகளை
.....அறிவிக்கும் முன்னோடி
அகிலத்தைக் காண்பதற்கு
...அணிகின்ற கண்ணாடி

சிந்தைப் பூட்டைச்
..சிறப்பாய்த் திறந்திட
விந்தை மிக்க
..விரைவுத் திறவுகோல்

சுரந்து வழியும்
...சுனைவழியின் தொடராம்
பரந்து விரியும்
....பகுத்தறிவின் சுடராம்

மிதக்கும் ஒளியாம்
..மின்னல் கீற்றாம்
செதுக்கும் உளியாம்
..சொர்க்கக் காற்றாம்

மூளையின் உணவாகும்
...முழுமையான கல்வி
மூளையே உணவாகும்
....முழுமையான கல்விக்கு!

உள்ளக் கிணற்றின்
...ஊற்றுக் குழியாம்
அள்ளக் குறையா
...ஆற்றுச் சுழியாம்

உலகம் சுற்றுவதும்
...உலகத்தைச் சுற்றி
பலனைக் கற்றுதரும்
...  பலமான கல்வி

மண்ணில் கைவைத்து
....மனிதன் கற்றது
விண்ணில் கால்வைத்து
..வியப்பைப்  பெற்றது

எல்லையும் வயதும்
...இதற்கு மட்டும்
இல்லையே மனிதா
...இறப்பில் முற்றும்

மரணம் முடிக்கும்;
....மடைமை ஒழிக்கும்;
இரந்தும் படித்தால்
...இயலாமை அழிக்கும்

செல்வமும் வீரமும்
....செழித்து வளர
கல்வியின் வீரியம்
....கடவுள் வரமாம்

சென்ற இடமெலாம்
.....செழித்திடும் வெற்றியாம்
வென்று பெறுபவர்
......வியத்தகு கல்வியால்

------
அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்
------
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை),
அபுதபி (தொழிற்சாலை) அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844 
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

நபிமணியும் நகைச்சுவையும்...! 23

அதிரைநிருபர் பதிப்பகம் | March 28, 2013 | , ,

தொடர் : 27 [நிறைவுறுகிறது]

அல்லாஹ்வின் மகிழ்வும் ஆனந்தப் பெருவாழ்வும்!

நீதித்திருநாளின் நிலையான பெருந்தலைவன், நிகரற்ற அன்புடையோன்  அல்லாஹ் (ஜல்) அருள்கின்றான்:

நிச்சயமாக, நல்லவர்கள் அந்நாளில் சுவர்க்கத்தின் பேரின்பத்தில் திளைத்து இருப்பார்கள். உயர்ந்த கட்டில்கள் மீது சாய்ந்த வண்ணம் சுவனபதியின் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் முகங்களைக் கொண்டே அவர்களுடைய சுகவாசத்தின் செழிப்பை நபியே நீர் கண்டறிவீர். முத்திரையிடப்பட்டிருக்கும் கலப்பற்ற மதுபானம் அவர்களுக்குப் புகட்டப்படும். அது கஸ்தூரியால் முத்திரையிடப்பட்டிருக்கும். போட்டியிட்டு ஆசைகொள்ள விரும்புவோர் அதனையே ஆசை கொள்ளவும். அதில் "தஸ்னீம்" என்ற வடிகட்டிய பானமும் கலந்திருக்கும். அது ஓர் அற்புதமான  நீரூற்று ஆகும். அல்லாஹ்வுக்குச்  நெருக்கமானவர்கள் அதன் நீருடன் மதுவை அருந்துவார்கள். (01) 

ஆள்பவனும் ஆற்றல் மிக்கவனுமாகிய அல்லாஹ் சுப்ஹானஹுத்தஆலா மேலும் சொல்கின்றான்: 

தங்கத்தட்டுகளும் கோப்பைகளும் அவர்களுக்கிடையே சுற்றிவந்து கொண்டிருக்கும். மனம் விரும்பக் கூடிய, கண்களுக்கு இன்பம் அளிக்கக் கூடிய அனைத்துப் பொருட்களும் அங்கு இருக்கும். அவர்களிடம் 'இங்கே நீங்கள் நிரந்தரமாகத் தங்கி இருப்பீர்கள். நீங்கள் உலகத்தில் செய்து கொண்டிருந்த நற்செயல்களின் காரணத்தால், இந்த சுவனத்திற்கு வாரிசாக நீங்கள் ஆக்கப்பட்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு இங்கே ஏராளமான கனிகள் உள்ளன. அவற்றை நீங்கள் மகிழ்வுடன் உண்பீர்களாக!' என்று கூறப்படும். (02)

இறைவனின் சிரிப்பில் எளியவனின் ஈடேற்றம்:

அல்லாஹ் (ஜல்)வால் ஆசீர்வதிக்கப்பட்ட அண்ணல்  நபி (ஸல்) அவர்கள் ஒரு சுவர்க்கவாசியின் நிலை குறித்து நவின்றார்கள்:

நரகவாசிகளில் இறுதியாக நரகத்திலிருந்து வெளியேறி  சுவர்க்கவாசிகளில் இறுதியாகச் சுவர்க்கத்தில் நுழைபவர் யார் என்பதையும் நான் நன்கறிவேன். நரகத்திலிருந்து கை கால்களால் தவழ்ந்தவராக  வெளியேறுகின்ற ஒரு மனிதரே அவர்! அவரிடம் அல்லாஹ் (ஜல்) 'நீ போய் சுவர்க்கத்தில் நுழைந்துகொள்!' என்பான். அவர் சுவர்க்கத்திற்குச் செல்வார். அது நிரம்பியிருப்பதைப்போன்று அவருக்குத் தோன்றும். உடனே அவர் திரும்பிவந்து "என் இறைவா! அது நிரம்பியிருக்கக் கண்டேன்' என்று கூறுவார். அதற்கு, அல்லாஹ்(ஜல்) இல்லை.  'நீ சென்று சுவர்க்கத்தில் நுழைந்துகொள்!' என்று மீண்டும் சொல்வான்.

அவர் சுவர்க்கத்திற்குச் செல்வார். அது நிரம்பியிருப்பதைப் போன்றே மறுபடியும் அவருக்குத் தோன்றும்! ஆகவே, அவர் திரும்பிவந்து 'என் இறைவா! அது நிரம்பியிருப்பதாகவே காண்கின்றேனே?' என்று கூறுவார். அதற்கு வல்லமையும் மாண்பும் நிறைந்த அல்லாஹ் கருணையாளன்  'நீ சென்று சுவர்க்கத்தில் நுழைந்துகொள். ஏனெனில்,உலகம் மற்றும் அதைப் போன்ற பத்து மடங்கு  இடம் சுவர்க்கத்தில் உனக்கு உண்டு!' என்று சொல்வான்.

அதற்கு அம்மனிதர், 'அரசருக்கெல்லாம் அரசன், பேரரசன் ஆகிய  நீ என்னைக் கேலி செய்கிறாயா? அல்லது என்னைக்  கண்டு  சிரிக்கின்றாயா?' என்று கேட்பார், என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சிரித்துக் கொண்டே கூறினார்கள்.

இதை எங்களுக்குக் கூறியபோது, 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப்பற்கள் தெரியச் சிரித்ததை நான் கண்டேன்'.

'இவரே சுவர்க்கவாசிகளில் தகுதியால் மிகவும்  குறைந்த அந்தஸ்து உடையவர் ஆவார்' என்று கூறப்பட்டு வந்தது. (03) 

உலகமெலாம் காக்கின்ற ஒப்பற்ற உயர்தலைவன் அல்லாஹ்வின் இத்தகைய எல்லை கடந்த கருணை குறித்து, கனிவுநிறைந்த கண்ணியத் தூதர்(ஸல்)  அவர்கள் ஹுனைன் யுத்தம் நிகழ்ந்த பொழுதினில் இவ்வாறு கூறினார்கள்:

போரில் பிடிபட்டவர்களுள் ஒரு தாய்மை நிறைந்த பெண்மணியின் மார்பில் இருந்து தாய்ப்பால் ஒழுகிக் கொண்டிருந்தது. எனவே, கண்ணில் காணும் குழந்தைகளை எல்லாம் தூக்கி தம் மார்போடு அணைத்து அவர்களுக்குப் பாலூட்டிக்கொண்டிருந்தார். இதைக் கவனித்த பேரறிஞர் பெருமானார் (ஸல்) அவர்கள் 'இந்தப் பெண், அந்தக் குழந்தைகளைத் தூக்கி நெருப்பில் போட்டுவிடுவாள்' என்று நம்புகிறீர்களா? என்று நபித்தோழர்களிடம் வினவினார்கள். அதற்கு ஒரு ஸஹாபி எழுந்து, 'அவளுக்கு அத்தகைய  ஒரு வாய்ப்பு கிடைத்தால்கூட ஒருக்காலும் அப்படி அவள் செய்யமாட்டாள் யா ரசூலல்லாஹ்' என்று பதிலளித்தார்.

ஞானமிகு தூதர்  (ஸல்) சொன்னார்கள்: அறிந்து கொள்ளுங்கள். இந்தப் பெண்ணின் அன்பைவிட, உங்களின் இறைவன் பன்மடங்கு தன்  அடியார்கள் மீது இரக்கம்  கொண்டவன். (04)

இதுபோன்ற இன்னொரு சமயத்தில்தான், 'அல்லாஹ்வின் தூதரே, நான் சுவர்க்கத்தில் நுழைவேனா?' என்று கேட்டு நின்ற ஒரு மூதாட்டியின் சுவனம் பற்றிய கேள்விக்கு;

'கிழவிகள் சுவனம் புகுவதில்லை!' என்ற அதிர்ச்சியான ஒரு பதிலை அவருக்கு அளித்தார்கள் அண்ணலார்! அது கேட்டு மிகுந்த மனவருத்தத்தோடு போய்க் கொண்டிருந்த அவரைத் திரும்ப வரவழைத்து,

'நீர் ஒரு கிழவியாக சுவனம் புகமாட்டீர்! ஓர் எழில்மிக்க இளநங்கையாகவே சுவர்க்கத்தின்  சிங்காரச் சோலைகளில், அதன் வண்ண மலர்க்கூட்டங்களில் நீர் மகிழ்ச்சியுடன் நுழைந்து செல்வீர்!' என்று அவரை மனம் குளிரச்  சிரிக்க வைத்தார்கள் வாய்மையின் அழைப்பாளர் வாஞ்சை நபி நாயகம் (ஸல்) அவர்கள். 

அத்துடன் அவருக்கு இந்த அருள்மறை கூறும் அழகிய வாக்கியங்களை ஓதிக்காட்டினார்கள்:

"நிச்சயமாக, சுவர்க்கத்தின் பெண்களாகிய அவர்களை புதிய ஓர் அமைப்பில் நாம் உருவாக்கியுள்ளோம். அவர்களை நாம் கன்னிகளாகவும் தன் கணவனையே காதலிப்பவர்களாகவும் மேலும், சமவயது உடையவர்களாகவும் நாம் ஆக்கி இருக்கின்றோம். (05) 

பொன்மனச்செம்மல் (ஸல்) அவர்களின் பூத்துக்குலுங்கும் புன்சிரிப்பைப் பற்றி; 

"வாளேந்தி வன்சமர் புரிந்தெல்லாம் சாதிக்கமுடியாத சாதனைகளைக் கூட சீர்திருத்தவாதிகளில் எல்லாம் சிரேஷ்டமானவராகிய நபிகள் நாயகத்தின் இனிய சொல்லும் புன்சிரிப்பும் சாதித்தது" என்ற வலிய உண்மையை ஓங்கி உரைத்தார் பகுத்தறிவுத் தமிழறிஞர் அண்ணாத்துரை. 

"இங்கிலாந்து மட்டுமல்ல! இந்த ஐரோப்பா முழுவதையும் அடுத்த நூறு ஆண்டுகளில் ஏதாவது ஒரு மதம் ஆட்சி செய்யக்கூடிய வாய்ப்பு உள்ளதா என்றால், நிச்சயமாக அது இஸ்லாம்'தான்" என்பதை ஆராய்ந்து முடிவாக எழுதினார் ஆங்கிலேய சிந்தனைச்சிற்பி ஜார்ஜ் பெர்னார்ட்ஷா.

மனிதகுலத்தின் மாணிக்கமாகிய மாண்பு நபி (ஸல்) அவர்கள், எப்போது 'ஓதுவீராக' என்ற விண்ணகத்திலிருந்த வந்த அந்த 'அசரீரி' யைக் கேட்டார்களோ, அப்போதிருந்தே தன் உயிர்காற்றின் ஒவ்வொரு சுவாசத்தையும் ஒப்பற்ற ஓரிறைக் கொள்கையாகவே வெளியிட்டார்கள்!

இந்த உம்மத்திலிருந்து வந்த தனியொரு மனிதனின் நேர்வழி என்பது, தனக்குக் கிட்டிய ஈடேற்றமாகவே உணர்ந்து அதைப் புளகாங்கிதம் கொண்டு வரவேற்று மகிழ்ந்தார்கள் நமக்கு இன்பநிலை பெற்றுத் தந்த அன்புநபி  (ஸல்) அவர்கள். இந்த ஒரே நோக்கத்திற்காகவே, தன் பாசத்திற்கும் நேசத்திற்கும் உரிய சிறிய தந்தை மாவீரன் ஹம்ஸா (ரலி) வை, மறைந்திருந்து கொன்ற வஹ்ஸீயையும் கூட மன்னித்து ஏற்றுக் கொண்டார்கள் அருள்வடிவான அண்ணல்  நபி (ஸல்) அவர்கள்.

இதன்விளைவாக, 'வீழ்ந்தவருக்குச் சுவர்க்கமும் வாழ்பவருக்கு வெற்றியும்' அந்த உத்தமத் திருநபியால் உறுதியானது! அகிலத்தின் வரலாற்றில் இதற்கு ஈடான இன்னொரு காட்சியை நாம் காணவே முடியாது! மனித சமூகத்தின் மீட்சியின்மீது இந்த அளவிற்குக் கருணையும் கனிவையும் வெளிப்படுத்தி நின்ற உயர்ந்த இலக்கணத்திற்கு உரியவரான இந்த மாமனிதரின் கால் தூசிக்குக்கூட மனித குலத்தின் வரலாறு படைத்தோர் என்ற வரிசையில் நிற்கும் வேறெந்த மனிதனும் நெருங்கி நிற்க முடியாது! (06)

ஏந்தல் நபி (ஸல்) அவர்களுக்கு, இரண்டாவதாக வந்த 'வஹீ'யில் 'எழுந்து நிற்பீர்! எச்சரிப்பீர்!' என்ற மேலோன் அல்லாஹ்வின் கட்டளையைக் கண்ட அந்தக் கணத்தில் எழுந்து நின்ற இறைத்தூதர் (ஸல்) அவர்களின் எச்சரிக்கைக் குரல் 'பாலைகளிலும் சோலைகளிலும் பனிபடர்ந்த நாடுகளிலும், காடுகளிலும் மேடுகளிலும் அதையும் தாண்டி நிற்கும் தீவுகளிலும்' தடையில்லாமல் தன் இலட்சியவாழ்வின் இறுதி நேரம்வரை மக்களை நல்வழிப்படுத்திய வண்ணம் ஒலித்துக் கொண்டே இருந்தது! இறுதிவரை இவ்வுலகில் சாதிக்க வந்த ஆதிக்க நாயகராகவே வரலாற்றில் மிளிர்ந்து நின்றார்கள் மணிமொழிபேசும் மன்னர் நபி (ஸல்) அவர்கள்! 

அந்த ஒப்பற்ற ஒரே இறைவனை மட்டுமே வணங்கி வழிபடும் அற்புதமான ஒரு சமுதாயத்தை உருவாக்கும் அரும் பணியில், தம் உன்னதமான அழைப்புப் பணியின் இறுதி இலக்கான 'ஏகத்துவம்' என்ற வெற்றிக் கனியை அந்த 23 ஆண்டுகளில் தம் கண்களாலேயே கண்டு, தம் கைகளாலேயே பறித்து, அதைப் பொக்கிஷமான ஒரு பரிசாக நமக்கு அளித்துச் சென்றார்கள் நம் சமுதாயக் காவலர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள். இந்த அரிய முயற்சியில் மூழ்கி நின்ற களப்பணிகளில் அண்ணல் அவர்கள் அடைந்த இன்னல்களை அவர்களே பின்வருமாறு கூறுகின்றார்கள்:

"அல்லாஹ்வுக்காக வேறு எவரும் பயமுறுத்தப்படாத அளவுக்கு நான் பயமுறுத்தப்பட்டேன்! அல்லாஹ்வுக்காக வேறு எவரும் துன்புறுத்தப்படாத அளவுக்கு நான் துன்புறுத்தப்பட்டேன்! இந்த உலகில் வேறு எந்த உயிர்ப்பிராணியும் தின்ன விரும்பாத, 'பிலால்' தனது அக்குளில் மறைத்து வைத்திருந்த உணவைக்கொண்டு முப்பது நாட்கள் தொடர்ச்சியாய்க் கழிந்திருக்கின்றன!" (07) 

இவ்வாறு தம் வாழ்வாதாரங்களை நமக்காகவே சுருக்கிக்கொண்டவராக, ஏழ்மையில் தூய்மையும் எளிமையில் இனிமையும் கண்டவராக, தியாகத் தலைவர் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் எதிர்கொண்ட ஒவ்வொரு இடரும் அல்லாஹ்வின் இத்தூய மார்க்கத்தை வளரச் செய்ததே தவிர, ஒருபோதும் அதைத் தளரச் செய்யவேயில்லை! 

வான்மறையை ஏந்தி வந்த வண்ண ஒளியாக, தேன் சுரக்கும் திருமறையாகவே வாழ்ந்து காட்டிய திருத்தூதராக, உள்ளங்களையே  ஊடுருவிச் சென்று தன் தோழமையால் தொட்டு வந்தவராக, உண்மையின் உணர்வலைகளை உசுப்பி எழுப்பியவராக, அறிவின் செறிவையே அடையாளம் கண்டவராக, அரிய குணங்களின் நிறைகுடமாய் நிமிர்ந்து நின்றவராக, ஆழ்ந்த ஞானத்தின் வெளிப்பாடாக ஒளிவீசி வந்தவராக, இனிய பண்புகளின் முழுமையானவராக, தன் இறுதி மூச்சுவரை தனது உம்மத்துகளைப் பற்றியே அக்கறையில் ஆழ்ந்திருந்தவராக, ஒரு கட்டுக் கோப்பான மாபெரும் சமுதாயத்தையே உருவாக்கிய மகத்தான சரித்திரத்தின் தலை நாயகராக, இவ்வாறான வேறு எந்த மனிதரோடும் ஒப்பிடமுடியாத இத்தகைய சத்திய சீலராக வாழ்ந்து காட்டிய, சாந்த நபியின் தனிப்பெரும் ஒப்பற்ற தியாகங்களைப் பற்றி எல்லாம்,

சற்றே 'நம் வாழ்வின், இரவின் இருள்களிலும் தனிமையின் வெறுமைகளிலும் பயணங்களின் ஓட்டங்களிலும் காத்திருப்புகளின் கண நேரங்களிலும் வசதிகளின் உச்சங்களிலும் கேளிக்கைகளின் கொண்டாட்டங்களிலும் கொஞ்சமாவது அல்லது ஒருநாளின் சில மணித்துளியிலாவது நாம் சிந்தனைக்குக் கொண்டுவந்து அவர்களின் 'அழகிய முன்மாதிரி' யை ஆராய்ந்து பார்த்து இருக்கின்றோமா? அல்லது ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் 10 முறையாவது அவர்கள் மீது அன்புடன் 'ஸலவாத்' சொல்லியாவது நன்றியுணர்வுடன் நடந்து கொள்கிறோமா என்பதையும் சற்றே உணர்ந்து நாள்தோறும் நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டியது இன்றைய சூழலும் இன்னும் இறுதிக் காலம் வரையிலும் அது ஒரு கட்டாயமும் நம் கடமையுமாகும்!

"நீங்கள் உண்மையாகவே உங்களைப் படைத்த அல்லாஹ்வை நேசிப்பவராக இருந்தால், என்னை முழுமையாகப் பின்பற்றுங்கள். அப்படியானால்தான் அல்லாஹ் உங்களை நேசிப்பான்" (08) 

என்று நமக்கு அறிவுறுத்துமாறு வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் (ஜல்), 'அகிலத்தின் அருட்கொடையாகிய' தன் தூதரின் மூலம் பிரகடனப் படுத்துகின்றான். அவ்வாறு அழகிய முன்மாதிரியாக பின்பற்றக் கூடிய எடுத்துக்காட்டாக எண்ணற்ற சம்பவங்கள் இறைத் தூதரின் அபூர்வமான குணங்களுக்கும் அற்புதமான நன்னடத்தைகளுக்கும் அழகிய சாட்சியங்களாக சரித்திரத்தை அலங்கரிக்கின்றன.

உலகில் தோன்றிய அத்தனைத் தலைவர்களும் மதவாதிகளும் தங்களைப் பின்பற்றியவர்களை 'தொண்டர்கள்' என்றும் 'சீடர்கள்' என்றும் பெயரிட்டு அழைத்தபோது, மானமிகு தூதர் (ஸல்) அவர்கள் மட்டுமே அவர்களுக்குச் சுயமரியாதையைச் சொல்லிக் கொடுத்து, சமத்துவம் வழங்கி சகோதர வாஞ்சையுடன் 'தோழர்கள்' என அழைத்தார்கள். ஆண்டான், அடிமை, உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேதம் நம்மில் கிடையாது என 'தோழமையுடன்' முழங்கினார்கள். இன்றைய கம்யூனிஸ்டுகள் "தோழரே" என்ற, பேச்சுக்கு மட்டும் பிரயோகிக்கும் அந்த வார்த்தையை முதன்முதலில் அறிமுகப்படுத்தி தன்மான வாழ்வுக்கு இலக்கணம் வகுத்து, அதை  நடைமுறையில் அமுலாக்கம் செய்தவர் இறைவனின் தூதாய் வந்த நம் இனிய நபிகள்'தாம்!

எனது சகோதரர் ஹுஸைன் (ரலி) எங்களின் தந்தை அலீய் இப்னு அபீதாலிப் (ரலி) அவர்களிடம் நானிலம் போற்றிடும் நாயகம் (ஸல்) அவர்கள், தம் தோழர்களுடன் நடந்து கொள்ளும் முறை யாது?  என்று வினவியபோது, அவர்கள் பின் வருமாறு கூறினார்கள்:

ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் எப்போதும் புன்சிரிப்போடும் நற்குணத்தோடும் எளிமையான சுபாவத்தோடும் இருப்பார்கள். கடுகடுத்தவர்களாகவோ இறுகிய மனம் படைத்தவர்களாகவோ அவர்கள் இருக்கவில்லை. கூச்சலிடுதல், கெட்ட செயல் புரிதல், அடுத்தவரிடம் குற்றம் கண்டுபிடித்தல், அடுத்தவர்களை வரம்புமீறிப் புகழ்தல், மனம் நோகும்படி கிண்டல் செய்தல், கஞ்சத்தனம் போன்ற எந்த வித இழிவான குணங்களும் அவர்களிடம் இருந்ததே இல்லை. அவர்களுக்கு விருப்பமில்லாத பேச்சுக்களை பிறர் பேசும்போது  அவற்றைக் கவனிக்காமல் விட்டுவிடுவார்கள். வேந்தர் நபி (ஸல்) அவர்களுக்கு விருப்பமில்லாத ஒன்றை மற்றரொருவர் பெற விரும்பினால் ,அதை அவர் பெறுவதைவிட்டும் நிராசை அடைந்து விட மாட்டார். அதைத் தருவதாக வாய்மை நபி (ஸல்) அவர்கள் வீணான வாக்களிக்கவும் மாட்டார்கள். சண்டையிடுதல், பெருமையடித்தல், வீண் பேச்சுப் பேசுதல் இவற்றை விட்டும் தன்னைத் தடுத்துக் கொள்வார்கள். அதைப் போன்று இத்தீய குணங்களை விட்டும் பிறரையும் நீங்கிக்கொள்ளச் செய்வார்கள். யாரையும் இழிவாகப் பேசமாட்டார்கள். பிறரைப் பற்றிப் புறம்பேச மாட்டார்கள். அடுத்தவர்களின் குறைகளைத் தேடித்திரிய மாட்டார்கள். நன்மை தரும் விஷயங்களைத் தவிர  வேறு எதையும் பேச மாட்டார்கள்!

பேரன்பாளர் பெருமானார் (ஸல்) அவர்கள் பேசினால், அவர்களின் தோழர்கள் தங்கள் தலைகளில் பறவைகள் அமர்ந்திருக்கின்றன என்பது போன்று ஆடாமல் அசையாமல் அமைதியாய் கவனிப்பார்கள். சுவர்க்கத்தின் சொல்லழகர் (ஸல்) ஒன்றை சொல்லிமுடித்து அமைதியான பின்பே தங்களுக்குள் மெதுவாகப் பேசத் துவங்குவர்! சத்தியத் தூதர்(ஸல்) முன் தோழர்கள் யாரும் சண்டையிட்டுக் கொள்ளமாட்டார்கள்! 

மடமை நீக்கிய மாண்பு  நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் யாரும் பேசத்தொடங்கினால், இனிய நபியவர்கள் இடையே குறுக்கிடாமல்,  அவர் முடிக்கும் வரை அங்கே அமைதி காப்பார்கள். முந்தியவர் பேசியதைத் தொடர்ந்து அடுத்தவர் பேசினாலும் அதையும் அமைதியுடன் கவனித்துக் கேட்பார்கள். உரையாடல்களுக்கிடையே தோழர்கள் சிரிப்பை வெளிப் படுத்தினால், நகைச்சுவையை ரசிக்கும் நம் நபிமணியும் சேர்ந்து சிரிப்பார்கள். அவர்கள் ஆச்சர்யப்பட்டால், அவர்களுடன் சேர்ந்து வேந்தர் நபியும் தம் வியப்பை வெளிப்படுத்துவார்கள்!

முற்றிலும் அந்நியர்கள் வந்து அவர்கள் சபையில் பேசும் கடுகடுப்பான வார்த்தைகளையும் இங்கிதமில்லாத கேள்விகளையும் பொறுத்துக் கொள்வார்கள். சமயங்களில் இத்தகைய இங்கிதமற்றவர்களைக்கூட நபித்தோழர்கள் கூட்டிவந்து விடுவார்கள்.அப்போதும்கூட பெருமான் நபியவர்கள் பொறுத்துக் கொள்வார்கள். 

தேவை வேண்டி நிற்பவர்களைக் கண்டால், அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கும்படிக் கூறுவார்கள். எவரும் தம்மை நன்றி தெரிவிக்கும் வகையில் அல்லாமல் அவர்களை அளவுக்கு மீறிப் புகழ்ந்து முகஸ்துதி செய்வதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். வரம்பு மீறி யாரும் பேசினால் அதைத் தடுப்பார்கள்  அல்லது எழுந்து விடுவார்கள்' என்று ஒரு சித்திரம் வடித்ததைப் போல் நம் முத்திரைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பற்றி அண்ணலின் இதயக்கனியாகிய அன்புப் பேரன் அழகின் அரசன் ஹஸன் இப்னு அலீய் (ரலி) அவர்கள் உரைத்தார்கள். (09)

அந்த அன்பும் மென்மையும் கனிவும் கண்ணியமும் ஊக்கமும் உத்வேகமும் பொறுமையும் நிலைகுலையாத உறுதியும் வலிமையும் எளிமையும் அல்லாஹ்வின் அருள்மீது அளவு கடந்த நம்பிக்கையும் கொண்ட அபூர்வமான அந்த மாமனிதரைத் தவிர  வேறு எந்த  மனிதன் மீதும்  அந்த வானம் இதுவரைக்கும் இறங்கிவந்து நிழலிட்டதில்லை!  இந்த பூமியும் இதுவரைத் தன் வழிமீது விழிகளைத் திறந்து விரிப்பாக்கி வைக்கவுமில்லை! அத்தனை கோடி மனிதர்களில் இருந்தெல்லாம் அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாமனிதர்! கருணையின் திறவுகோல்! சுவனத்தின் வழிகாட்டி! சத்தியத்தின் சான்று! அல்லாஹ்வின் மகிழ்வு! நம் ஆனந்தப் பெருவாழ்வின் ஆதார சுருதி! தரணி எல்லாம் போற்றிடும் எம் தங்கத் தலைவர்! இந்த உடம்பிலே ஒட்டி இருக்கும் உயிரென்ன? இந்த உயிரை விட மேலான வேறு ஏதாவது ஒன்று இருக்குமாயின் அதையும்விட நமக்கு மேலானவர்!

நிலவு போன்ற வட்ட முகமும், மென்மை தவழும் மென்னகைசிரிப்பும், அகலமான விரிந்த நெற்றியும், இரவின் இருளிலும் பிரகாசிக்கும் சௌந்தர்யமும், தலையின் மீது கறுப்புத் தலைப்பாகையும், காதுமடல் வரைத் தொங்கும் சுருட்டைமுடியும், கண்களா அவை காந்தங்களா என வியக்க வைக்கும் ஈர்ப்பு விழிகளும், அன்பில் இழைத்த மென்மைக் கன்னங்களும், கருவில்லைப்போல் நீண்ட இமைகளும், புன்னகை வாசம் பொழுதெல்லாம் வீசும் இதழ்களும், என்றுமே நிலைத்திருக்கும் அந்தக் கருணையின் வடிவமானவரை இப்போதே  காணக் கண்கள் தேடுகின்றன! 

அது சாத்தியமில்லை! எனினும், 'அண்ணல் நபியின் அழகிய முன்மாதிரி' நம் கண்முன்னே அற்புத வரலாறாக அவர்களின் ஒவ்வொரு அசைவுகளோடும் உயிரோடு நிற்கிறது! அந்தப் பன்முகத்திறன் கொண்ட பண்பாளர் நடந்து காட்டிய வழித் தடங்களின் சுவடுகளை நோக்கி நாம் நடக்கத் துவங்கி விட்டால், நபிமொழி ஒவ்வொன்றையும் நம் மனத்தினில் ஆழமாகப் பதித்துக் கொண்டால், அவற்றை நடைமுறைப்படுத்தி வாழத் துவங்கி விட்டால், நிச்சயமாக, மறுமையில் அந்த மாண்பாளர் நபியின் தோழமையை மகிழ்ச்சியோடு நாம் பெறலாம்!

"நம்முடைய அடியார்களிலிருந்து நாம் தேர்ந்தெடுத்துக் கொண்ட அவர்களுக்கு நாம் இவ்வேத நூலை உரிமைப் படுத்துகின்றோம் (10) 

என்ற தன் அன்புநேசராகிய அண்ணலாருக்கு அளவுகடந்த அருளாளன் அல்லாஹ் (ஜல்) அருள்மறை வசனத்தை இவ்வாறு அருளியபோது;

"இந்த மாநிலத்தின் முத்துக்களாகிய மக்களே, நற்செய்தி பெறுங்கள்! நீங்கள்தான் இந்த ஒட்டுமொத்த உலகத்தின் உன்னத பிரஜைகள்! முதன்முதலில் சுவர்க்கம் புகும் கூட்டத்தினர் நீங்களாகவே இருப்பீர்கள்!  ஓரிறைவன் என்ற தத்துவத்தில் உறுதியாய் நில்லுங்கள். திருக்குர்ஆனை உங்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காய்க் கொள்ளுங்கள். என் வழிமுறைகளையும்  நெறிமுறைகளையும் வழுவாது பின்பற்றுங்கள். இன்ஷா அல்லாஹ், சுலபமாகச் சுவர்க்கம் புகுவீர்கள்" என்றார்கள் அமைதி நயமெங்கும் அழகுபடப் பொங்கும் அண்ணல் நபி (ஸல்)  அவர்கள்.

மேலும் 'எனக்குப் பிறகு நீங்கள் துன்பங்களையும் தொல்லைகளையும் அனுபவிக்க நேரலாம். உங்களைவிட உவப்பானவர்களாக மற்றவர்கள் கருதப்படலாம். எனினும், என்னை சுவர்க்கத்தின் நீரோடை அருகே சந்திக்கும்வரை பொறுமை காத்திடுங்கள்' என்றார்கள். 

சுவர்க்கத்தின் நீரோடை (அல்கவ்ஸர்): 

ஒருநாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களுடன் இருந்தபோது, திடீரென உறங்கிவிட்டார்கள். சிறிது நேரத்திற்குப் பின் சிரித்தவர்களாக, தமது தலையை உயர்த்தினார்கள். அப்போது நாங்கள், "யா ரசூலல்லாஹ்! தாங்கள் சிரிப்பதன் காரணம் என்ன?" என்று கேட்டோம். 

அதற்கவர்கள், 'சற்றுமுன் எனக்கு அத்தியாயம் ஒன்று அருளப்பட்டது' என்று தொடர்ந்து எங்களுக்கு அதை ஓதிக்காட்டினார்கள்.

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

   إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ  فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ   إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ

(நபியே, நிச்சயமாக, உமக்கு 'அல்கவ்ஸரை' வழங்கியுள்ளோம். எனவே, உம்முடைய இறைவனைத்  தொழுது பலிப்பிராணியும் அறுத்து 'குர்பானி' கொடுப்பீராக! நிச்சயமாக, உம்முடைய பகைவன்தான் சந்ததியற்றவன்!) (11)

பின்னர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 'அல்கவ்ஸர்' என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள், 'அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அறிந்தவர்கள்' என்று பதிலளித்தோம்.


'அது ஒரு சுவர்க்க நதி! என் இறைவன் மறுமைநாளில் அதைத் தருவதாக எனக்கு வாக்களித்துள்ளான்! அதன் மகிழ்ச்சியினால்தான் நான் சிரித்தேன். அதில் அபரிமிதமான நன்மைகள் உள்ளன.  அது ஒரு நீர்த்தடாகம்! மறுமை நாளில் எனது உம்மத்தினர் தண்ணீர் அருந்துவதற்காக, அதை நோக்கி வருவர். அதன் குவளைகள் விண்மீன்களின் எண்ணிக்கை போன்றவை! 

அப்போது அவர்களில் ஓர் அடியார் நீர் அருந்தவிடாமல் தடுக்கப்படுவார். உடனே நான், 'யா அல்லாஹ்! அவர் என் உம்மத்துகளில் ஒருவரல்லவா?' என்பேன். அதற்கு, அனைத்தும் அறிந்தவனாகிய அல்லாஹ் (ஜல்) 'உமது சமுதாயம் உமக்குப் பின்னால் புதிது புதிதாக உருவாக்கி விட்டதை எல்லாம் நீர் அறிய மாட்டீர்!' என்று கூறுவான். (12)

அடக்கி ஆளும் அரசாங்கத்தின் அதிபதியாகிய வல்லமை நிறைந்த அல்லாஹ் (ஜல்) வின் வரவை எதிர் நோக்கி எல்லோரும் நிற்பது மட்டும் 500 ஆண்டுகள் போலான அந்த மகத்தான நீதித்திருநாளின் நெருக்கடியில்! பெரும்பெரும் நபிமார்களும் இறைநேசர்களும் தங்களின் முடிவு என்னவாகுமோ என்று தவித்துக்கொண்டும் அந்தப் பெரும் அமளிதுமளிகளில் அங்குமிங்கும் தத்தளித்துத் தடுமாறியும் திரியும் சூழ்நிலையில்! ஒவ்வொருவரும் தத்தம் ஆன்மாக்களைப் பற்றியே பரிதவித்து நிற்கும் வேளையில்! 

அந்த ஒரே 'ஓர் ஒளிபொருந்திய மனிதர்' மட்டும் 'தம் சமுதாய மக்களை'ப் பற்றிய கழிவிரக்கத்துடன் கவலைப்பட்டுக் காத்துநிற்கும் காட்சியை, அந்த அறிவெனும் சுடர் தாரகையை, அமைதியின் தனி ஜோதியை அங்கே நாம் காணலாம்!

பிரம்மாண்டமான அத்தனை மனிதக் கூட்டங்களுக்கும் மத்தியில், தொழுகைக்கு முன்னர்    'உலூ' எனும் அங்க சுத்தி செய்துகொண்ட காரணத்தால்,  தனியாக ஒளிவீசும் முகங்களை வைத்தே தன் உம்மத்துகளில் ஒவ்வொரு முஸ்லிமையும் சேயைக்கண்ட தாயைப்போல அடையாளம் கண்டு அழைக்கும் பேரன்பின் பிறப்பிடமாய்ப் பிறந்து வந்த எங்கள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கே நிற்பதைப்  பார்க்கலாம்!

தாகத்தில் தவித்துத் தன் தலைவனை நோக்கி ஓடிவரும் தன் உம்மத்தின் ஒவ்வொரு முஃமினையும் ஒரு தாய் போல அழைத்து, தாகம் தணித்து, ஆறுதல் அளித்து, அவனுக்கு மன்னிப்பும் வழங்குமாறு மாண்பாளன் அல்லாஹ்விடம் மன்றாடிக் கேட்டு, நல்லவர்களின் நந்தவனத்திற்குப் பரிந்துரையும் செய்யும் பண்பாளர் எங்கள் பெருமானார்(ஸல்) அவர்கள், விண்மீன்களுக்கு இடையே ஒரு வெண்ணிலவைப் போல அங்கே சுடர்விட்டுத் தெரிவதை நாம் காணலாம்!

ஆம்! அது ஓர் உன்னத சந்திப்பு...பொங்கிப் பிரவாகம் எடுத்து வரும் தடாகத்தின் நீர்க்கரையில்..பாலை விட வெண்மையான பளிங்கு வண்ண நிறத்தில் ஓடிவரும் ... தேனைவிட இனிமையான தெள்ளிய நீர்ச்சுவையில்... நட்சத்திரங்கள் போன்று மின்னும் தண்ணீர்க் குவளைகள் அருகில்... அந்த சலசலத்து ஓடும் அமுத நதிக்கரையில்... கஸ்தூரியைவிட நறுமணம் வீசிவரும் வசீகர வேளையில்.... அதே மாறாத இனிய மென்புன்னகையுடன் நமக்காகவே காத்திருக்கும் ...மகிமையும் மாட்சிமையும் நிறைந்த மங்காப் புகழ்பெற்ற நமது தங்கத்தலைவரின் பறந்து விரிந்து நிற்கும் நேசச் சிறகின் நிழலினில்… அவர்களை அன்புடன் நேசிக்கும் நாம் அனைவரும் ஒன்று கூடுவோம்.... இன்ஷா அல்லாஹ்!

اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلَاةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ
பரிபூரணமான இந்த அழைப்பின் இரட்சகனாகிய அல்லாஹ்வே! நிலையான தொழுகைக்கு உரியவனே! எங்களின் தலைவர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு 'வஸீலா' என்ற அந்தஸ்தையும் சிறப்பையும் வழங்குவாயாக! நீ வாக்களித்தவாறு 'புகழுக்குரிய இடத்தில்' அவர்களை எழுப்புவாயாக!

(இந்தப் பிரார்த்தனையை எவர் ஓதுகின்றாரோ அவருக்கு மறுமை நாளில் என் பரிந்துரை கிடைத்து விடுகின்றது). (13) 

 o o o 0 o o o 

(01) அல்குர்ஆன் 83:22
(02) அல்குர்ஆன் 43:68
(03) புஹாரி 6571: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
(04) புஹாரி 5999: உமர் ஃபாரூக் (ரலி)
(05) அல்குர்ஆன் 56:35
(06) ரஸூலே அஹ்மத் பக்கம் 152: அபுல்கலாம் ஆஸாத்
(07) ஷமாயில் திர்மிதீ 376: அனஸ் இப்னு மாலிக் (ரலி)
(08) அல்குர்ஆன் 3:31
(09) ஷமாயில் திர்மிதீ 350: ஹஸன் (ரலி)
(10) அல்குர்ஆன் 35:32
(11) அல்குர்ஆன் 108:1
(12) முஸ்லிம் 670: அனஸ் இப்னு மாலிக் (ரலி)
(13) புஹாரி 614: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

இக்பால் M.ஸாலிஹ்

பாலியலுக்கு பலியாகாதே! - தொடர்கிறது...2 8

அதிரைநிருபர் பதிப்பகம் | March 27, 2013 | ,

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ் பெயரால்..

நேர்வழி பெற்றோர் அனைவர் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாகட்டுமாக!

ஒழுக்கக் கேடுகளை விளைக்கும் ஊடகங்கள் தவிர்ப்போம்!

சமீபகாலமாக பாலியல் குற்றங்கள் வருந்தத்தக்க வகையில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தினம் ஒரு கற்பழிப்பு என்று தலைப்பு இல்லையே தவிற கற்பழிப்பு செய்தி இல்லாத தினங்களுமில்லை தினசரிகளுமில்லை. எங்கோ மேலை நாடுகளில் நடந்ததாக செவியுற்ற செய்தியெல்லாம் இன்று நம் நாட்டில் அதுவும் கலாச்சாரம் பேசும் நம் நாட்டில் நடக்கக் கேட்டு வியக்கும் வேலையில், இதில் மறைந்திருக்கும் எச்சரிக்கையும் மறுப்பதற்கில்லை. அதாவது நாளை நம்மைச் சுற்றியும் இது போன்று நடக்கலாம்! அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாத்து ஈருலகிலும் நம்மை கண்ணியப் படுத்துவானாக!

எனவே, பாலியலில் நாம் பலியாகி விடக் கூடாதெனில் பாலியல் குற்றங்களுக்கான காரண காரியங்கள் கண்டறிந்து அவை முழுமையாகத் தவிர்க்கப்பட வேண்டும். அதன் வாயில்கள் அனைத்தும் அடைக்கப்பட வேண்டும். நம்மையும் நம்மைச் சார்ந்தோரையும் பாதுகாப்பது நம் கடமை என்றெண்ணி நாம் களமிறங்க வேண்டும். அரசாங்கம் நம்மை பாதுகாக்கும் என்று யாரும் பொறுப்பற்றிருந்தால் வரும் வலியும் வேதனையும் சம்பத்தப்பட்டவரையே சாரும் என்பதை மறந்துவிடக் கூடாது.

பாலியல் குற்றங்களில் இருபாலரும் ஈடுபட்டாலும் பெரும் பாதிப்பைச் சுமப்பவள் பெண்ணாகவே இருக்கிறாள். குற்றம் அவள் இழைத்தாலும் அல்லது அவள் மீது குற்றம் இழைக்கப்பட்டாலும் சரியே. மேலும் அதன் பாதிப்பு அவளோடு நின்றுவிடாமல் மொத்தக் குடும்பத்தையும் பதம் பார்த்துவிடுகிறது. காரணம் பெண் ஒரு குடும்பத்தின் முக்கிய அங்கமாக இருப்பதே. இதயத்தின் நோய் ஏனைய உறுப்பையும் பாதித்தல் ஒன்றும் புதினமல்லவே. அதற்காக பெண் மட்டுமே ஒழுக்கமாக இருக்க வேண்டும், ஆண்கள் எப்படியும் இருக்கலாம் என்றும் அர்த்தமல்ல. ஆனால் பெண்ணால் விளைகின்ற தீமை ஒருபடி பாதிப்பை அதிகப்படுத்தி விடுகிறது.

இன்று பாரெங்கும் பரவிக்கிடக்கின்ற பாலியல் குற்றங்களில் ஊடகங்களின் பங்கு வெறும் வார்த்தைகளால் சொல்லிவிட்டுச் செல்லும் அளவிற்கு குறைவானதல்ல. பெண்களைக் காட்சிப் பொருளாக்கியதில் ஒலி ஒளி ஊடங்களுக்கு பெரும் பங்குண்டு. அவைகளே பெண்களின் அரை நிர்வாண ஆபாச காட்சிகளை மூலதனமாக்கி சந்தைப்படுத்தின. அதன் தாக்கம் மனோ ரீதியில் ஆண், பெண் என இரு பாலரிடமும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆடைக் குறைப்பு பெண்களின் முன்னேற்றத்தின் அடையாலமாக எடுத்துக் காட்டப்பட்டது. அச்சு ஊடகங்களும் அவர்கள் பங்கிற்கு அட்டையிலும் நடுப்பக்கத்திலும் பெண்களின் அரை நிர்வாணக் காட்சிகளைப் பிரசுரித்து காசு பார்த்தன. சபலமுடைய பலகீனமான ஆண்கள் ஆபாச அம்புகளால் வேட்டையாடப்பட்டனர்.

திரைப்படங்களிலும், சீரியல்களிலும், தொலைக்காட்சிகளின் சிறப்பு நிகழ்ச்சிகளிலும், நகைச்சுவை என்ற போர்வையிலும் இரட்டை அர்த்தமுடைய வசனங்கள் இடம்பெற்று நெஞ்சில் நஞ்சை விதைக்கின்றன. அவை பெரும்பாலும் பாலியல் ரீதியான மாற்று அர்த்தம் கொடுப்பதாகவே இருக்கிறது. அதைக் காண்பவர்களிடம் ஏற்படுகின்ற மாற்றம் வஞ்சகர்களுக்கு வாய்ப்பாக அமைந்துவிடுகிறது.  அதாவது அந்த இரட்டை அர்த்தமுடைய வசனத்தால் ஒரு பெண்ணிடத்திலே ஏர்படுகின்ற பிரதிபலிப்பு அவளின் மனநிலையை ஒருவாறு படம் பிடித்துக் காட்டுவதோடு அதுவே அவளுக்கு ஆபத்தையும் தேடித் தந்துவிடுகிறது. இதை நடைமுறைப்படுத்தி இரட்டை பொருள் தரும் வசனம் பேசி அதை ஆணோ பெண்ணே புரிந்துகொண்டு, என்ன எப்படி அசிங்கமாகப் பேசுகிறாய்? என்ற கேள்வி எழுந்தால் உன் புத்தி ஏன் இப்படிப் போகிறது!? நான் சாதாரன அர்த்தத்தில் தானே சொன்னேன் என்று சமாளிப்பத்தற்கும், சொன்ன வார்த்தையில் சறுக்கிக் குழைந்தால் அடுத்த கட்டம் நோக்கி அடியெடுத்து வைப்பதற்கும் வழிவகுத்துத் தருகிறது.

ஒருகாலத்தில் திரைப் படத்தில் வருகின்ற காட்சிகளில் கதாநாயகனும் கதாநாயகியும் ஒருவரை ஒருவர் தொடமலேயே நடித்திருப்பதைப் பார்க்கலாம். இன்று திரைத் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி? அதன் காட்சி அமைப்பில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றம் பாலியல் உணர்வுகளைத் தூண்டும் காட்சிகள் இல்லாத படங்களே இல்லை என்னும் அளவிற்கு சர்வ சாதாரனமாக ஆபாசக் காட்சிகள் இடம் பெருகின்றன. சமீபத்தில் முத்தக் காட்சியில் நடித்ததற்காக நடிகை அழுத செய்தி வெளியிடப்பட்டிருந்தது. நானும் சற்றே ஆச்சரியப்பட்டு செய்தியை வாசித்தால் உண்மையிலேயே முத்தம் கொடுக்க வைத்துவிட்டாரே என்று வருந்தி கால் மணி நேரம் அழுத நடிகை, காட்சி நன்றாக அமைந்திருக்கிறது என்று இயக்குனர் காட்டிய முன்னோட்டக் காட்சியைக் கண்டு அரை மணி நேரம் சிறித்தார் என்று எழுதப்பட்டிருந்தது. இது தான் இன்றைய திரைப் படங்களின் நிலை. இப்படி விளையாட்டாய் மனிதனின் சிந்தனையில் விஷத்தை விதைத்து விருட்சமாக்கி பாலியல் வன்கொடுமைகள் ஆலமாய் வேரூண்ட வழிவகை செய்திருக்கிறது இன்றைய தொ(ல்)லைக் காட்சி நிகழ்ச்சிகளும், திரைப் படங்களும்.

இதில் பெரும் கொடுமை என்னவென்றால் இந்த அசிங்கங்கள் குடும்ப சகிதம் எல்லோர் முன்னிலையில் அரங்கேற்றபடுவதே. நடுக் கூடத்திலிருக்கின்ற நவீன ஷைத்தான் தொலைக் காட்சிப் பெட்டி. வைக்கும் போது எல்லோரும் வக்கனையாய்ப் பேசுவார்கள். நாங்கள் சீரியல் பார்க்க மாட்டோம், சினிமா பார்க்க மாட்டோம், செய்திகளைப் பார்த்து நாட்டு நடப்புகளைத் தெரிந்துகொள்ள, என்றுதான் ஆரம்பமாகும். ஆனால் ரத்த நாளங்களில் ஒடிக்கொண்டிருக்கும் ஷைத்தான் நம்மை மிகைத்து விடுகிறான். விளைவு எழுதுவதற்குக் கூசுகின்ற ஆபாசக் காட்சிகள் அத்துனையும் அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, தாய், தந்தை, மாமன் என்று அனைவர் முன்னிலையிலும் அரங்கேற்றம் பெறுகின்றது. ஆரம்பத்தில் கொஞ்சம் இங்கும் அங்கும் நெகிழ்வார்கள். பின் நாளடைவில் பழகிப் போய் ஆரம்பத்தில் இருந்த வெட்கம் பிறகு இல்லாமலாகி சகஜ நிலையில் எல்லோரும் கண்டு மகிழும் நிலை ஏற்பட்டுவிடுகிறது.

வெட்கம் இறை நம்பிக்கையின் ஒரு கிளையாகும் என்று அல்லாஹ்வின் தூதர் சொன்னார்கள்.

என்று ஒருவன்/ஒருத்தி வெட்கம் களைந்தனரோ அவன்/அவள் எதையும் செய்யத் துணிவர். அதன் விளைவுகளே இன்றைய பிரச்சனைகள்…

இன்ஷா அல்லாஹ் தொடரும்
அபு நூரா

மாணவர்கள் போராட்டம் இனிக்குமா? கசக்குமா? - அலசல் ! 16

அதிரைநிருபர் பதிப்பகம் | March 26, 2013 | , , , , ,


மாணவர்களின் போராட்டம் பூதாகரமாய்  வெடித்தால் ஆட்சியாளர்களுக்கு அவதி; மக்களுக்கு பரபரப்பான செய்தி; ஊடகங்களுக்கு குதூகலம். 

1965. இந்தியை எதிர்த்து மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழக வரலாற்றில் ஒரு திருப்புமுனை. ஆட்சியில் இருந்தவர்கள் அடையாளம் தெரியாமல் தூக்கி வீசப்பட்டார்கள். அன்றைய மாணவர் போராட்டம் உணர்ச்சி பூர்வமானது. மாணவச் சமுதாயம் தமிழ் மொழிக்காக உயிர் கொடுக்கவும் மனக் குமுறலுடன் பொங்கி எழுந்த மாபெரும் வரலாறு அது. அந்தப் போராட்டத்தில் 80%  நியாயம் இருந்தது; 20% அரசியல் விளையாடியது. திரு . எம். பக்தவத்சலம் முதல்வராக இருந்து துருப்பிடித்த துப்பாக்கி ரவைகளைக் கொண்டு சுமார் இருபது மாணவர்கள் வரை கொன்று குவித்தார்.


இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெறத் தொடங்கிய உடனே தமிழ்நாடெங்கும் கல்லூரிகளும்   பள்ளிகளும்  காலவரையின்றி மூடப்பட்டன. இப்போதும் அப்படித்தான் மூடப்பட்டு இருக்கின்றன. கல்வி நிலையங்கள் மூடப்பட்டாலும் போராட்டம் தொய்வின்றி நடந்தது. நாடெங்கும் போராட்டம் பேயாட்டம் ஆடியது. வன்முறைகள் அரங்கேறின.  அர்ச்சுனன் என்கிற காவல்துறை ஆய்வாளர் வாயில்  பெட்ரோல் ஊற்றப்பட்டு வன்முறையாளர்களால் உயிரோடு எரிக்கப்பட்டார். பல இடங்களில் ரயில்கள் நிறுத்தப் பட்டன. எங்கு பார்த்தாலும் இந்தி எழுத்துக்கள் தார் பூசி அழிக்கப்பட்டன.                 

காஷ்மீரைத்தவிர்த்து இந்தியாவின் பிற மாநிலங்களின் அமைதி காப்பதில் அதுவரை  ஈடுபடுத்தப்படாத இந்திய  இராணுவம் , முதன் முதலாக தமிழகத்துக்கு வரவழைக்கப்பட்டது. 

தமிழ்நாடு முழுவதும் கடிதங்கள் பிரித்துப்  பார்க்கப் பட்டு  தணிக்கை செய்யப்பட்டன. இரயில நிலையங்களும்  அஞ்சல் அலுவலகங்களும், மத்திய அரசின் அலுவலகங்களும் காவல்துறையின் பாதுகாப்பில் இயங்கின. 

மாணவர் தலைவர்கள் என்று அடையாளம் காணப்பட்ட சில மாணவர்கள்  தேசியப் பாதுகாப்புச்சட்டத்தில்   கைது  செய்யப்பட்டு அவற்றுள் 10 பேர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப் பட்டனர்.  ( இவர்களில் பலர் பின்னாளில் அமைச்சர்களாயினர் –இதில் நினைவு கொள்ளத்தக்கவர்கள்  கா. காளிமுத்து, எஸ்.டி. சோமசுந்தரம் ஆகியோர்). 

வீரியம் நிறைந்த மாணவர்களின் போராட்டத்தின் காரணமாக  ஆட்சி சுக போகத்தை காங்கிரசார் இழந்தனர். அன்றைய அகில இந்தியக் காங்கிரஸ் தலைவராக இருந்த தியாகச் செம்மலான திரு. காமராஜர்  அவர்கள் தனது சொந்த ஊரில் சீனிவாசன் என்றழைக்கப் பட்ட ஒரு மாணவர் தலைவரால் பரிதாபமாகத் தோற்கடிக்கப்பட்டார். அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி ஆட்டம் காண்பதற்கு அச்சாரமாக இருந்தது அறுபத்தி ஐந்தாம் ஆண்டில் மாணவர்கள் நடத்திய போராட்டம். உலக வரலாற்றை பல உணர்வு மிக்க போராட்டங்கள்தான்  மாற்றியமைத்து இருக்கின்றன. பிரெஞ்சுப் புரட்சி முதல் ரஷ்யப் புரட்சிவரை இதற்கு சான்றுகள் ஏராளம். 

ஆட்சியை இழந்து போகிற  போக்கில் பக்தவத்சலம் புலம்பிவிட்டுப் போன ஒரு பொருத்தமான  வாசகம் இன்றும் பலரால் நினைவு கூறப்படுகிறது. அன்றைக்கு அவர் சொன்னது ஏதோ வயிற்றெரிச்சலில் சொன்னதாகவும் வேடிக்கையாகவுமே எடுத்துக் கொள்ளப் பட்டது. ஆனால் இன்று அந்த வாசகங்கள் உண்மையிலும் உண்மையாகத் தெரிகின்றன.  

அப்படி என்ன சொன்னார் பக்தவத்சலம்?     

“I accept the verdict of the people. But I am sure ,  virus spread all over Tamilnadu.” 

“மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் தமிழகம் முழுதும் விஷக்கிருமிகள் பரவிவிட்டன.” சொல்லப்பட்ட ஆண்டு  1967.  ஒரு சின்னத் திருத்தம் தமிழ்நாடு என்ற வார்த்தைக்கு இந்தியா என்று திருத்திப் படித்துக் கொள்ளலாம் என்கிற அளவுக்கு இன்றளவும் அந்த வார்த்தைகள் உண்மையாகிவிட்டன. . 

அப்படி ஒரு மாபெரும் சாதனை அந்நாள்  மாணவர்களின் போராட்டத்தால் விளைந்த வரலாற்று சம்பவம். இன்றுவரை அதே நிலை  தமிழகத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.  வேரூன்றி நிலைத்து நின்ற காங்கிரசை வேருடன் பிடுங்கி வீழ்த்திக் காட்டியது அந்தப் போராட்டம்.

இந்தப் போராட்டத்துக்குப் பிறகு மாணவர்கள் உள்ளூர் பிரச்னைகளுக்காக சிறு சிறு போராட்டங்கள் நடத்தி வந்திருக்கலாம். ஆனால் நாட்டு மக்களின் கவனத்தைக் கவரும் வண்ணம் அண்மையில் நடந்த ஒரு வரலாற்றில் இடம் பெற்ற மாணவர்களின் போராட்டம் தலை நகர்  டில்லியில் நடைபெற்றது. 

டில்லியில் ஒரு நடு நிசி இரவில் பொதுப்  பேருந்தில் வைத்து ஒரு மாணவி சில மனித மிருகங்களால் கற்பழிக்கப் பட்டு கொடூரமான முறையில்   அவரது இறுதி மூச்சு அடங்கியது. வேதனையிலும் வேதனையான இந்த நிகழ்வைக் கேள்வியுற்ற டில்லியின் மாணவர் கூட்டம் கொதித்தெழுந்தது. ( மாணவர்கள் மட்டும்தானா இல்லை கூலிப்படைகளும் கூட்டத்தில் சேர்ந்தனரா?) நாட்டின் பெண்மையே கற்பழிக்கப் பட்டுவிட்டது போல் உணர்ச்சிக் கொந்தளிப்புகள். பக்கம் பக்கமாகப் படங்கள். தொலைக் காட்சிகள் இருபத்திநாலு மணி நேரமும் நேரலையாக நிகழ்ச்சிகளை ஒளிபரப்பின. 

குடியரசுத்தலைவரின் மாளிகைக்குள் மாணவர்கள் நுழைய முயற்சி நடந்தது.  காவல்துறையின் பலம் கொண்டு அவை தடுக்கப்பட்டன. நட்ட நடு நிசியில் பிரதமர் வீட்டை விட்டு வெளியே வந்து மாணவர்களை சமாதானப் படுத்த நேரிட்டது. இதே நிலை சோனியா காந்திக்கும் டில்லியின் முதல்வரான ஷீலா தீட்சித்துக்கும் ஏற்பட்டது. சில ஊடகங்கள் இந்த நிகழ்ச்சியை ஒரு வரிச்  செய்தியாக்கின. அதே நாளில் ஒரு ஹரிஜனப் பெண் கற்பழிக்கப் பட்டு கொலை செய்யப்பட மற்றொரு செய்தியை வேண்டா வெறுப்புடன் ஒரு மூலையில் எட்டு வரியில் போட்டு பத்திரிகையில் செய்தி வெளியானது. ஆஹா ! என்ன பத்திரிகை     (அ) தர்மம்? இதைப் பற்றி ஒருவரும் மூச்சுவிடவில்லை. காரணம் கற்பழிக்கப் பட்டவள் ஒரு ஹரிஜனப் பெண் என்பதால் என்று ஒரு நீதிபதியே கண்டித்தார்.  

டில்லியில் நடந்த மாணவர்களின் போராட்டத்தில் உணர்ச்சியும் உண்மையும் ஒரு புறம இருந்தாலும் இந்தப் போராட்டத்தை தூண்டிவிட்டு அரசியல் இலாபம் பார்க்க சில குறிப்பிட்ட அரசியல் சக்திகள் தூபம் போட்டன என்பதை மறுக்கவோ  மறைக்கவோ  இயலாது. டில்லியில் இதைப் போல முன்பும் பல சம்பவங்கள் நடந்தன. நடந்து வருகின்றன. பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அன்று மட்டும் அரங்கேறவில்லை. வாசாத்தியில்,   திருக்கோயிலூரில், உத்திரப் பிரதேசத்தில்,  பீகாரில் என்று ஒரு நீண்ட பட்டியலே இருக்கிறது. நாதியற்ற பல மக்களுக்கு உயர்சாதியினரால் நிகழ்த்தப்பட்ட கொடுமைகளைத்  தட்டிக் கேட்க ஆள் இல்லை. அப்போதெல்லாம் இல்லாத மாணவர் போராட்டம் இப்போது ஏன் டில்லியில் ஏற்பட்டது? எல்லாம் அப்பட்டமான அரசியல். மாணவர்களைத் தூண்டிவிட்டு அதில் குளிர் காயலாம் ஆட்சியைக் கவிழ்ந்து போகும் அளவுக்கு குழப்பம் விளைவிக்கலாம் என்கிற காழ்ப்புணர்வில் விளைந்த தப்புக் கணக்கு. இத்தகைய கயமைத்தனத்தின் கடைசி வரி வரை சென்று விட்டது அரசியல் என்றுதான் சொல்ல வேண்டும்.  

இதே அரசியல்தான் இன்று மாணவர்களை போராட்ட வலைக்குள் தள்ளிவிட்டு தவணைமுறையில்  ஆறுதல் சொல்லி அழகு பார்க்கிறது. இதனால் இன்று தமிழகம் முழுதும் மீண்டும் மாணவர்களின் போராட்டக் குரல் இலங்கைத் தமிழர் பிரச்னையில் ஓங்கி ஒலிக்கத்தொடங்கி இருக்கிறது. ஆனால் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இணைந்திருந்த மாணவர்கள் ஒரே கருத்தால் ஒன்றி இருந்ததுபோல் இன்று நடைபெறும் போராட்டங்கள்  ஒரே மையக் கருத்தைக் கொண்டிருக்கவில்லை. ஒவ்வொரு போராட்டக் களத்தில் இருந்தும் வித்தியாசமான கோரிக்கைகள் வைக்கப் படுகின்றன. 

அமெரிக்கா  கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் 

இந்தியாவே கண்டனத் தீர்மானம் கொண்டு வரவேண்டும் 

தனி  ஈழம்தான் வேண்டும் 

ராஜபக்சேயை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும் 

ராஜபக்சேயை தூக்கில் இட வேண்டும் 

தனி ஈழத்துக்காக ஐ, நாவில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் 

தனி ஈழத்துக்காக இலங்கையிலேயே வாக்கெடுப்பு நடத்தப் பட வேண்டும் 

என்று பல வகையான கோஷங்கள் முன் வைக்கப்படுகின்றன. 

ஒரு பொது வேலைத் திட்டமாக இன்ன இன்ன கோரிக்கைகள் என்று அறுதி செய்யப்பட்டு அனைவராலும் ஒட்டுமொத்தமாக ஒரே குரலில்  பொதுவாக வைக்கப் படவில்லை.  அந்த அளவுக்கு மாணவர்களை அரசியல் கட்சிகள் சிந்திக்க விடவில்லை.   மாணவர்கள் ஒரே ரீதியாக சிந்திக்க விடாமல் செய்வது மாறுபட்ட எண்ணிலடங்கா அரசியல் கட்சிகள் மட்டுமல்ல ; சாதி வலையின் பின்னல்களும்தான். இன்று இராமேஸ்வரத்தில் மூட்டப்பட்டிருக்கும் கலவரத்துக்குக் காரணம் சாதி மோதலை உருவாக்கி மாணவர்களின் போராட்டத்தை மண்ணைக் கவ்வ வைக்க வேண்டுமென்பதே  என்று சில அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.    

ஒரு செய்தியை நாம்  சிந்தித்தால் சிரிப்பு வரும். மனித உரிமை மீறல்களை எதிர்த்து அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. அமெரிக்கா என்பது ஒரு நாடு அல்ல. உலகில் கொலம்பசால் தேடிக் கண்டு பிடிக்கப் பட்ட ஒரு  விஷ வித்து ; வேட்டையாடும் மிருகம் ; வட்டமிடும் கழுகு ; வாய் பிளந்து நிற்கும் ஓநாய் . சாத்தான் வேதம் ஓதுகிறதா? நரிக்கு நாட்டாண்மைப் பட்டமா? என்று உலகம் சிரிக்கிறது. நோக்கமே   தவறான இந்த தீர்மானம் இப்போது நிறைவேறி இருந்தாலும் இன்னும் கடுமையான வாசகங்களுடன்  இந்த தீர்மானம் நிறைவேறி இருக்க வேண்டுமென்று மாணவர் சமுதாயம் நினைக்கிறது. ஐ.நா விடம் கையேந்தி நிற்கிறது. 

ஐ. நா மட்டும் நடுநிலையாக எந்தக் காலத்தில் செயல் பட்டது.? ஒரு உதாரணத்தை சொல்ல விரும்புகிறேன். ஈராக்கிலே அமெரிக்க படையெடுப்பு நிகழ்த்தப் பட்டபோது அமெரிக்காவால் சொல்லப் பட்ட காரணம், ஈராக்கில்,  உயிரை அழிக்கக் கூடிய ஆயுதங்கள் கிடங்குகளில் குவித்து வைக்கப் பட்டிருப்பதாகவும் அவற்றைக் கண்டுபிடித்து அழிக்க வேண்டும் என்பதாகும். இதற்காக அமேரிக்கா சொன்னதை நம்பி ,  ஈராக்கின் மீது படையெடுக்க ஐ நா  தீர்மானம் போட்டு அனுமதி அளித்தது. ஆனால் போர் முடிந்து சதாம் உசேன் வீழ்த்தப் பட்ட பிறகு ஈராக்கில் , அமெரிக்கா அவிழ்த்துவிட்ட புளுகு மூட்டை போல் எவ்வித உயிர் கொல்லி  ஆயுதங்களும் இல்லை என்று நிரூபணம் ஆனது. இதைப் பற்றி ஐ. நா இதுவரை கேள்வி எழுப்பி இருக்கிறதா? இந்தியா மூச்சு விட்டு இருக்கிறதா? மற்ற நாடுகள் முனங்கிக் கூட உலகம் கேட்கவில்லை. 

சரி அது போகட்டும் அப்படி ஐ. நா தீர்மானத்தால் அனுமதியளிக்கப் பட்டு ஈராக்கில் நுழைந்த அமெரிக்க இராணுவம் நடத்திய மனித உரிமை மீறல்கள் எவ்வளவு? சிறையில் அடைக்கப் பட்ட இஸ்லாமியக் கைதிகளை செய்த  சித்ரவதை மனித உரிமைகளின் மறு பிறவியா? காஷ்மீரில் மீறப்படும் மனித உரிமைகள் எத்தனை? எத்தனை? லெபனானில், பாலஸ்தீனத்தில் , காசாவில் மனித உரிமைகள் இதே அமெரிக்காவின் செல்லப் பிள்ளையான இஸ்ரேலால் மீறப் பட்ட போது அமெரிக்கா வாய்க்காலில் மீன் பிடித்துக் கொண்டிருந்ததா? அரபு நாடுகள் கண்டனத் தீர்மானம் கொண்டுவரும் போதெல்லாம் தனக்கு இருக்கும் வீட்டோ அதிகாரத்தால் அநியாயங்களுக்கு அங்கீகாரம் வழங்கிய அமெரிக்காவுக்கு இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் பற்றி பேசும் தைரியம் எப்படி வந்தது? கம்போடியாவிலும் வியட்நாமிலும் அமெரிக்க ராணுவம் கபடி ஆடப் போயிருந்ததா? கபட நாடகத்தின் ஒரு சாட்சியே இந்தக்  காட்சி. 

நல்ல வேளை . இந்தியாவின் திராவிட மற்றும்  தமிழ் தேசிய இயக்கங்கள் கேட்டுக் கொண்ட இன அழிப்பு என்கிற வாசகம் அமெரிக்க தீர்மானத்தில் இடம் பெற்று கலங்கப் பட்டுவிடவில்லை. லெபனானில் நடு நிசியில்  நாடற்ற பாலஸ்தீன அகதிகள் முகாமில் புகுந்து வயிற்றில் இருந்த குழந்தைகள் வரை கொன்று குவித்த இஸ்ரேல் படைகளுக்கு ஆயுதம் வழங்கி வழி அனுப்பி வைத்த அமெரிக்க புண்ணிய புருஷர்கள் போடும் வேஷமே இலங்கைக்கு  எதிரான மனித உரிமை மீறல் தீர்மானம் என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.  .  

உலகெங்கும் அரசியல் பிரச்னைகளில் அழையாத விருந்தாளியாக மூக்கை நுழைத்து தனது சூப்பர் பவர் அதாரிடியை எப்பாடு பட்டாவது நிலை நாட்டிக் கொள்ள வேண்டுமென்பதே அமெரிக்காவின் நோக்கம். அது ஜார்ஜ் புஷ் ஆக இருந்தாலும் சரி – ஒபாமாவாக இருந்தாலும் சரி என்பதை மாணவர்கள் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். 

உலகெங்கும் இலட்சக் கணக்கான இளந்தளிர்களின்   உயிர்களை கொன்று குவித்து கும்மாளம் போட்ட ரத்தக் கரை படிந்த கரங்களுக்கு சொந்தக்காரனாகிய அமெரிக்க தீர்மானத்துக்கு இத்தனை  கூக்குரல்கள் போடுவது எத்தகைய உலக அரசியல் அறிவு என்று எவருக்கும் புரியவில்லை. உலக ரவுடியிடம் உண்மையின் தத்துவத்தை எதிர்பார்க்கலாமா? இதை ஏன் மாணவர் சமுதாயம் சிந்திக்கத்தவறியது?

மாணவர்களுடைய போராட்டம் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமென்றா அல்லது ஈழத்தமிழருக்காகவா? அமெரிக்காவுக்கு வெண்சாமரம் வீசுவதற்கு இந்தியாவை ஆளும் கட்சிக்கும் எதிர்க் கட்சிக்கும் போட்டா போட்டி காட்டா  குஸ்தி நடைபெறுகிறது. கடைசியில் அமெரிக்கா தாக்கல் செய்த தீர்மானத்தில் என்ன இருந்தது? அந்தத் தீர்மானம் ஒரு நீர்த்துப்போன நெருப்பு. அது உண்மையான நீராகவே இருந்தாலும் அள்ளிக் குடித்து தாகம் தீர்க்க உதவாத  கடலோரம் தெரியும் கானல் நீர். 

இந்தியாவுக்காக அமெரிக்கா வாக்களித்த அணுசக்தி  தீர்மானம் என்ன ஆனது? அணுசக்தி ஆனது. யுரேனியம் தருவதாக வாக்களித்த அமெரிக்கா அல்வாதானே  கொடுத்தது? இதைக் கேட்பதற்கு இந்திய அரசுக்கு தைரியம் இருந்ததா?

எனவே மாணவச் செல்வங்களே ஈழத்தமிழருக்காக ஆக்க பூர்வமாக எதுவும் செய்ய வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் அமெரிக்காவை சார்ந்திருக்கும் போக்கை கைவிடத் தயாராகுங்கள். எதைச் செய்தால் தாய் நாட்டுக்கு மரியாதை  என்று  சிந்தியுங்கள். இப்போது நீங்கள் நடத்தும் போராட்டத்துக்கு அமெரிக்காவைத் துணைக்கு அழைப்பீர்களானால் ஏமாந்து போவீர்கள். உங்களின் சக்தியை தனது அயோக்கியத்தனத்துக்கு ஆதரவாக்கிக் கொள்வதில் அமெரிக்காவுக்குத்தான் இலாபம். தமிழருக்கோ அல்லது ஈழத்தமிழருக்கோ அல்ல. அல்லவே அல்ல. 

இலங்கையில் அழிக்கப் பட்ட இனம் தமிழ் இனம். அதே நேரம் மற்றொன்றை மாணவர்களின் சிந்தனைக்குத் தர விரும்புகிறேன். இலங்கையில் வாழும் தமிழர்கள் மூன்று வகையினராக இருக்கிறார்கள். ஒன்று மலையகத் தமிழர்கள் ; இரண்டு இஸ்லாமியத் தமிழர்கள் ; மூன்று யாழ்ப்பாணப் பகுதியிலே வாழும் தமிழர்கள். இப்போது நடை பெற்ற இந்த இன அழிப்பு யாழ்ப்பாணப் பகுதிகளில்தான் பெருமளவு நடை பெற்றது. மற்ற பகுதிகளில் அவ்வளவாக பிரச்னை இல்லை என்று சொல்லப் படுகிறது. அதே நேரம் தமிழ் பேசும் முஸ்லிம்களை யாழ்ப்பாணப் பகுதியில் கோலேச்சிய விடுதலைப் புலிகள் இஸ்ரேலியர்களை விடக் கொடுமையாகக் கொலை செய்த காத்தான்குடி சம்பவத்தையும் ஒதுக்கி மறப்பதற்கில்லை. தமிழ் இனத்தை தமிழ் இனமே அழித்த சம்பவங்கள் எவ்வளவு திரை போட்டு மறைத்தாலும் வெளிவந்தே தீரும். ஆகவே இன்று இலங்கையில் மிச்சம் மீதி வாழ்ந்து கொண்டிருக்கும் மூவகை  தமிழ் சமுதாயத்துக்காக ஆக்க பூர்வமாக - அவர்கள் அமைதியாக வாழ என்ன வழி காணலாம் என்பது மட்டுமே இந்த மாணவர்களின் போராட்டங்களின் நோக்கமாக இருந்தால் அனைவருக்கும் நல்லது. 

கோஷம் போட்டு குதிப்பதைவிட்டு மாணவர்கள் ஒன்று இணைந்து ஆக்க பூர்வ வழிகளை அரசியலை புறந்தள்ளிவிட்டு ஆலோசித்து செயல்பட்டாலே நலம். விலையற்ற மாணவர்களின் எதிர்காலமும் இன்னுயிரும் எடுப்பார் கைப் பிள்ளைகளாக ஆகிவிடக் கூடாது. மாணவச் செல்வங்களின் எதிர்காலம் சிதைந்து விடக்கூடாது. இலங்கையில்  வாழும் நமது அனைத்து சொந்தங்களும் இனியாவது சுதந்திரமாய் வாழ வழி வகுப்பதை நோக்கமாகக் கொண்டதாக மாணவர்களின் போராட்டம்  இருக்க வேண்டும்.

முத்துப் பேட்டை P. பகுருதீன் B.Sc.,


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு