இன ஒதுக்கீடும் இட ஒதுக்கீடும் - உரசும் உண்மைகள் ! 10

அதிரைநிருபர் பதிப்பகம் | January 30, 2014 | , , , , ,

குறுந்தொடர் - 1 / 3

கடந்த சில வருடங்களாக இட ஒதுக்கீடு என்ற சொற்றொடரை நிறையவே கேட்டு வருகிறோம். பெரும்பாலும் இஸ்லாமியர்கள் இதைப்பற்றி அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. (பாஸ்போர்ட் இருக்கும்போது ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும்?) ஆனாலும் ஒரு சில இஸ்லாமிய இயக்கங்கள் அரசு வேலை வாய்ப்புகளிலும், மேற்கல்வி பட்டறைகளிலும் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டுமென்று போராடிவருகின்றன. 

அரசும் ஓரளவு ஒதுக்கிக்கொடுத்தாலும் அது போதாது என்று உண்மையிலும் பெயரளவிலும் கூட இயக்கங்கள் போராடி வருகின்றன. அதேபோல் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களும் அவர்களுக்கான இயக்கங்களும் கூடவே போராடி வருகின்றன. இதைப்பற்றி சில கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதே இந்த ஆக்கத்தின் நோக்கம். 

முதலாவதாக இட ஒதுக்கீடு என்பது என்ன? அது ஏன் அவசியம்? 

இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை சமுதாயத்தின் அடித்தட்டு மக்களிடமிருந்து எழுந்து எழுச்சி பெறக்காரணமே இந்திய சமூக வாழ்வில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் நிலவி வந்த ஒருவகை இன ஒதுக்கீடுதான். அதாவது, இட ஒதுக்கீட்டுக்காக குரல் எழுப்பி, போராடுவதற்கு காரணம் இன ஒதுக்கீடாகும்.  

இந்தியாவில் ஆதிக்க சக்திகளாகத் திகழ்ந்த ஆரியர்களின் மனுதர்மங்களும், வர்ணாசிரமகொள்கைகளும் மனிதனின் பிறப்பிலேயே அவனது தரத்தை  ஒதுக்கீடு செய்தன. செய்யவேண்டிய தொழில்களை இவைகள் இனவாரியாக ஒதுக்கீடு செய்தன. தலையில் தோன்றியவன், வயிற்றில் தோன்றியவன், காலில் தோன்றியவன் என்று பிறப்பில் இன ஒதுக்கீடு செய்தன. 

தலையில் பிறந்தவன் என்று கற்பிக்கப்பட்டவன் தரணி ஆளவும், காலில் தோன்றியவன் என்று கற்பிக்கப்பட்டவன் கக்கூஸ் அள்ளவும்தான் என்று கடவுளின் பெயராலேயே தொழில்களை இனங்களுக்கிடையில் ஒதுக்கீடு செய்தன. 

ஒரே இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்களுக்குள் ஆண்டான் அடிமை வர்க்க பேதம் கற்பிக்கப்பட்டு அதை மக்களும் ஏற்றுக்கொண்டு கைபொத்தி, மெய்பொத்தி, தலை ஆட்டி வாழ்ந்து வந்த காரணத்தால் இனி இது பொறுப்பதற்கில்லை என்ற உணர்வு பெற்றவர்கள் சமூக நீதி வேண்டும் என்று போராடியதன் காரணமாக ஆங்கில ஆட்சியிலேதான் இந்த கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டு காலம் காலமாக ஒடுக்கப்பட்டவர்களை கைதூக்கிவிட வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் வழங்கப்பட தொடங்கப்பட்டது. 

ஆகவே ஆட்டிப்படைத்த ஆரிய மனுநீதி என்ற நஞ்சானது, மனிதனின் பிறப்பிலேயே கற்பித்த பேதம் என்கிற இன ஒதுக்கீடுதான் பேதங்களை மாற்றி சமூக நீதி வழங்குவதற்கும் ஓர் இட ஒதுக்கீடு தேவை என்று குரல் எழ காரணமானது.

மிக சுருக்கமாக புரிந்துகொள்ள வேண்டுமென்றால் ஆண்டாண்டு காலமாக அடக்கப்பட்ட- உரிமைகள் ஒடுக்கப்பட்ட மக்களையும், இதுவரை எல்லா உரிமைகளையும் கால்மேல் கால்போட்டு அனுபவித்து வந்த மக்களையும் ஒரே நிகராக கருத முடியாது – இதுவரை மேடாக இருந்ததை சமமாக்க வேண்டுமானால் மேட்டை வெட்டி பள்ளத்தில் போட்டாகவேண்டும் என்ற அடிப்படைதான் இட ஒதுக்கீடு.

கூனிக்குறுகி நின்றவனை கை கொடுத்து தூக்கிவிட்டு ஏணியில் ஏற்றி விடுவதுதான் இட ஒதுக்கீடு. ஆனாலும் சமூக நீதிக்கு தீர்வான இட ஒதுக்கீட்டை, தங்கள் முன்னேற்றத்துக்குத் தடையாக நினைக்கும் ஒரு சில சமூக விரோத மக்களைக் குறி வைத்துத்தான் இந்தக் கட்டுரையே எழுதப்படுகிறது!

அரபு நாடுகளின் பொருளாதார செழுமைக்குக் காரணம் எண்ணை வளம்; தென் ஆபிரிக்காவின் செழுமைக்குக் காரணம் தங்க வளம்; மலேசியாவின் செழுமைக்குக் காரணம் மண்ணின் வளம்; ஜப்பானின் செழுமைக்குக் காரணம் மனித மூளை வளம். ஐரோப்பிய நாடுகளின் செழுமைக்குக் காரணம் உலகைச் சுரண்டிய வளம்; ஆனால் இந்தியா, சீன நாட்டில் இருப்பதோ மனித வளம் மட்டுமே. இருக்கும் மனித வளத்தை பயன்பட வைத்து சீனா இன்று பொருளாதாரத்தில் கொடி கட்டி பறக்கிறது. 

சீனாவுக்கு அடுத்த மனிதவளத்தை பெற்றிருக்கும் இந்தியா ஏன் பின்தங்கி இருக்கிறது? ஒலிம்பிக் போட்டிகளில் சீனா தங்கங்களை வாங்கி குவிக்கிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக மக்கள் தொகையில் இருக்கும் இந்தியாவின் பெயரை ஒலிம்பிக் போட்டிகளின் பதக்கப்பட்டியலில் கண்ணில் விளக்கெண்ணெ ஊற்றித் தேடவேண்டி இருக்கிறது. காரணம் சீனா தனது மனிதவளத்தின் 89%  சதவீதத்தை உற்பத்திக்கு (PRODUCTIVITY) பயன்படுத்துகிறது. ஆனால் இந்தியாவில் பயன்படுத்தப்படும் மனிதவளம் வெறும் 22% தான். காரணம் எண்ணிக்கையில்தான் இரண்டாம் இடத்தில் இருக்கிறோம். ஆனால், மனிதவளத்தின் தரத்தில் எட்டாத தூரத்தில்  இருக்கிறோம். QUANTITY மட்டும்தான் இருக்கிறது QUALITY இல்லை.  

இப்படி தரமற்ற மனிதவளம் உருவாகிடக் காரணம் ஆரியர்கள்தான். அவர்களின் வர்ணாசிரமக் கொள்கைகள்தான். குறைந்த அளவு உள்ள ஒரு சமுதாயம் இருக்கும் வளங்களை எல்லாம் சுரண்டிக்கொண்டு அதிக அளவு இருந்த சமூகங்களை மேலே எழவிடாமல் தலையில் தட்டி அடக்கிவைத்ததுதான் காரணம். 

கல்வியை ஒரு குறிப்பிட்ட சமூகம்தான் கற்கவேண்டுமென்று கடவுளின் பெயரால் போதித்தார்கள். அரசராகவும், அமைச்சராகவும், ஆளும் வர்க்கமாகவும் ஆரியர்கள்தான் வரவேண்டுமென்று ஆண்டவன் கூறியிருப்பதாகப் புராணங்களை அவிழ்த்துவிட்டார்கள். அரியணைகளில் ஏறும் தகுதி அவர்களுக்கு மட்டுமே என்று ஆர்ப்பரித்தார்கள். ஆளும் பிரதிநிதிகளாகவும், ஆளுனர்களாகவும் அங்கவஸ்திரம் தரித்த துபாஷ்களாகவும், திவான்களாகவும் அவர்களுக்குள் அமர்த்திக்கொண்டார்கள். பல்லக்கில் அமரும் பவிசு தங்களுக்கே என்று பறித்துக்கொண்டார்கள்.

அரண்மனை சேவகர்கள், வீட்டு வேலைக்காரர்கள், துண்டு துணி துவைப்பவர்கள், கூட்டுபவர்கள், பெருக்குபவர்கள், மலம் அள்ளுபவர்கள், போர்வீரர்கள்,  விவசாயிகள் , பல்லக்கு தூக்கிகள் என்ற வேலைகளுக்கு பரமன் பாதத்திலே பிறந்த வர்க்கம் என்ற சூத்திரனை உருவாக்கி அடக்கி அறிவை பெருக்கவிடாமல் வைத்து இருந்ததால் மனிதவளத்தில் தரமற்ற  நிலை ஆயிரம் ஆண்டுகளாக இந்நாட்டில் நிகழக்காரணமாயிற்று. அந்த விளைவுகளின் தொடர்ச்சிதான் இன்றுவரை இந்திய மனிதவளம் சீனாவோடு ஒப்பிடுகையில் தரமற்று இருப்பதற்கு காரணம். 

ஆனால் இன்றும் கூட தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டுக்கு ஆதிக்க சக்திகளிடமிருந்து எதிப்புக்குரல் எழுகிறது. ஒரு செய்தியை குறிப்பிட விரும்புகிறேன். இன்றைய இந்தியாவில் இட ஒதுக்கீடு என்பது, நாம் கேட்பது, அரசால் தர முடிவது 12%  தொழில், பதவிகளிலிருந்து மட்டுமே. காரணம் ஏற்கனவே 88% தொழில்கள், பதவிகள் தனியார்களுக்கு தாரைவார்க்கப்பட்டுவிட்டது. அரசிடம் இட ஒதுக்கீட்டுக்காக தர முடிவது இந்த வெறும் 12 சதவீதத்திலிருந்துதான்.  எல்லோரையும் திருப்தி படுத்தியாக வேண்டும். 

இந்த குறைந்த சதவீதத்தைக்கூட தரவிடாமல் ஆதிக்க சக்திகள் இட ஒதுக்கீடுக்கு எதிராக திரளுகின்றன. ஆகவேதான் தனியார் துறைகளிலும் அரசின் அளவுகோள்படி இட ஒதுக்கீடு தரவேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.
குறுந்தொடர் - 2 / 3

நாகரிகம் வளர்ந்த நாடுகள் என்று கூறப்படும் மேலை நாடுகளில் கூட சமூக நீதிக்கான இட ஒதுக்கீடு உண்டு. உதாரணமாக அமெரிக்காவில் பல ஆண்டுகளாய் அடிமைகளாய் ஒடுக்கப்பட்டு நடத்தப்பட்ட கருப்பினத்தவருக்கு இட ஒதுக்கீடு உண்டு.

நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சம் மத்திய மாநில அரசுகளில் ‘குரூப் ஒன்று சர்வீசுகள்’ என்ற பகுப்பு கோலோச்சும் அரசுப்பதவிகளாகும். இந்த பதவிகளில் மக்கள்தொகையின் இன சதவீதத்துக்கு அப்பாற்பட்டு பெரும்பான்மையாக அமர்ந்து இருப்பவர்கள் யார்? தனியார் மற்றும் அரசுத்துறைகளில் துறைத்தலைவர்கள், இயக்குனர்கள்,முதன்மை செயலாளர்கள், அமைச்சர்களின் செயலாளர்கள் இப்படி அதிகாரத்தை வைத்திருக்கிற பதவிகள் இன்றும் யாரிடம் இருக்கின்றன. 

மேல்மட்ட சாதியினரிடமும், ஆண்டாண்டு காலமாக ஆளும் வர்க்கமாக இருந்தவர்களிடமும்தானே. அதாவது 75 சதவீத உயர் பதவிகள் மக்கள் தொகையில் 3 சதவீதமே இருக்கக்கூடிய உயர் சாதியினரிடம்தான் இன்றும் இருக்கிறது. சென்று பாருங்கள் தலைநகர் டில்லியில் மற்றும் மாநில தலைநகரங்களில் உண்மை தெரியும். அப்படியே மற்ற சாதியினர் இருந்தாலும் பார்பனீய மனப்பான்மை படைத்தவர்கள்தான் இருக்கிறார்கள். (பார்ப்பனர்கள் என்பது வேறு- பார்ப்பனீயம் என்பது வேறு) 

இந்த நிலையில் அடித்தட்டில் வாழும் தாழ்த்தப்பட்ட, இஸ்லாமியர் உட்பட்ட சிறுபான்மையினருக்கு தரப்படும் இட ஒதுக்கீட்டுக்கு மேல்தட்டு மக்களிடமிருந்து எதிர்ப்புக்குரல் கிளம்புவதுதான் பெரும் வேடிக்கை. சமுதாயத்தில் சமத்துவம்- பொருளாதாரத்தில் சமத்துவம்- வேலைவாய்ப்பில் சமத்துவம்-கல்வியில் சமத்துவம் போன்ற ஒரு மக்கள் அரசின் கோட்பாடுகளை ஒரு நலம்பேணு அரசு (WELFARE STATE) தனது மக்களுக்கு நடைமுறையில் தரவேண்டுமானால் நலிவுற்றோர்க்கு இட ஒதுக்கீடு அவசியம். 

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஷரத்துக்கள் 16 ன் படி State may discriminate the socially and educationally backward classes for public employments என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது அரசுக்கு தனது மக்களில் சமூகரீதியாகவும், கல்வியறிவு ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டுள்ளவர்களை அரசின் வேலைவாய்ப்பைப் பொறுத்தவரையில் பாகுபடுத்திக்கொள்ள அதிகாரம் உண்டு. இதை பாசிடிவ் டிஸ்கிரிமிநேஷன் (உடன்பாடான பாகுபாடு) என்று கூறுவார்கள்.

பலவருட போராட்டங்களுக்கு பிறகு மண்டல் கமிஷன் அமைக்கப்பட்டது. 1979 வருடம் மண்டல் கமிஷன் தங்களின் அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்தது. 

அதன் பரிந்துரையின்படி இந்தியாவின் 27% (1931-census)  உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசுப் பணிகளில் 27% க்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இதைக்கேட்டதும் கொந்தளித்த உயர் சாதியினரின் எதிர்ப்பால் முதுகெலும்பில்லாத அரசுகள் மண்டல் கமிஷன் தந்த அறிக்கையின் தலையில் கல்லைப்போட்டு அதை குளிர்சாதனப்பெட்டியில் வைத்தன.  1989- ல் அதை தோண்டி எடுத்த வி.பி.சிங் அரசு, தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டு சட்டத்தைக் தைரியமாக கொண்டுவந்தது. 

பிற்படுத்தப்பட்டோர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால் அது பொதுப் பட்டியலை பாதிக்கும் எனக் கருதிய பொதுப்பட்டியலை சேர்ந்தோர், பாரதீய ஜனதா கட்சி என்கிற ஒரு பிற்போக்கு மதவாத உயர்சாதியினரின் சுட்டுவிரலுக்கு ஊழியம் செய்யும் தேசியக்கட்சியின் மறைமுக ஆதரவோடு கடுமையாக எதிர்த்தனர்.

ஒரு கல்லூரி மாணவனுக்கு தீ வைத்து அவன் இதனை எதிர்த்து இறந்தான் என்று நாடகமாடினர். வி. பி. சிங் என்ற சிங்கம் பதவி இழந்தது. இட ஒதுக்கீடு நீதிமன்றத்தில் வழக்கானது. அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிகபட்சம்  ஐம்பது சதவீதத்திற்குள்ளாக நாட்டின் மொத்த இட ஒதுக்கீட்டையும் அடக்கிவிடவேண்டும் என்றும் மீதமுள்ள ஐம்பது சதவீதம் பொதுப்போட்டிக்கு விடப்படவேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஒரு உயர்ந்த நோக்கம், உயர்சாதியினரின் சகிப்புத்தன்மை இல்லாததாலும், ஆதிக்க சக்திகளாலும் இப்படி அடிக்கடி அல்லலுக்கு உள்ளானது. 

பிறப்பிலே, குடிக்கும் தண்ணீரிலே, நடக்கும் தெருவிலே, அணியும் ஆடையிலே ,உணவருந்தும் விடுதிகளிலே, பயணிக்கும் பேருந்துகளிலே, படிக்கும் பள்ளிகளிலே, எல்லாம் பாகுபாடுகள் என்று காலம் காலமாக காட்டிவிட்டு திடீரென்று எல்லோரும் சமம் என்று அறிவித்தால் மந்திரத்தால் மாங்காய் பழுத்துவிடுமா? மனமாற்றம் இல்லாமல் நிறைவேறிவிடுமா?

இட ஒதுக்கீடு மட்டும் எல்லா பிரச்னைகளையும் தீர்த்துவிடுமா? 

வெறும் வேலைவாய்ப்பும் , கல்வி வாய்ப்பும் மட்டும் அளித்ததால் சமுதாயம் திருந்திவிட்டதா? வன்கொடுமை சட்டம் அமுலில் இருக்கும்போது வன்கொடுமைகள் நடக்காமல் இருக்கிறதா? நாகரிகம் படைத்த சமுதாயம் என்று மார் தட்டிக்கொள்ளும் நாட்டில்தான் இன்றும் இப்போதும் கீழே பட்டியலிடப்படும் பாதகங்களும் நடைபெறுகின்றன. 
  • மனிதக்கழிவுகளை மனிதர்களே சுமக்கும் நிலை மாறவில்லை.
  • தோட்டிகள் என்று ஒரு சமுதாயத்தை முத்திரைகுத்தி வைத்திருப்பது மாறவில்லை.
  • தமிழ் நாட்டில் கீரிப்பட்டி , பாப்பாரப்பட்டி பஞ்சாயத்துகளில் தலித்துகள் தலைவர்களாக வர முட்டுக்கட்டை நீடிக்கிறது.
  • திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட சகோதரி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னும் அவரால் சுதந்திர தின கொடியேற்ற முடியவில்லை.
  • திண்ணியம் என்ற கிராமத்தில் சாதிக்கொடுமைகள் மனித மலத்தை வாயில் வைத்து திணித்து தண்டிக்கும் அளவு போய்விட்டது.
  • உணவுவிடுதிகளில் இரட்டை குவளை முறை இன்னும் மாறவில்லை.
  • உத்தபுரம் என்ற ஊரில் தாழ்த்தப்பட்டோருக்கென எழுப்பப்பட்ட சுவர் இடிக்கப்பட்டதில் எண்ணற்ற பிரச்னைகள்.
  • திருக்கோயிலூர் அருகே கற்பழிக்கப்பட்ட இருளர் இன மகளிருக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. அரசு அவர்களின் கற்புக்கு ஐந்து லட்சம் விலை வழங்கி வாய் அடைக்கப்பார்க்கிறது.

இப்படி இந்த பட்டியல் இன்னும் நீளும். 

ஆதிக்க சமுதாயம் நடத்தும் அடக்குமுறைகள் இன்னும் அடங்கவில்லை என்பதைத்தான் இவைகள் பறைசாற்றுகின்றன. 

முதலாவதாக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்கு சமூக அந்தஸ்து சரிசமமாக கிடைக்கவேண்டும் என்று எண்ணினால் இடஒதுக்கீடு மட்டும் அவர்களுடைய பிரச்னைகளை தீர்த்துவிடாது என்பதையும், பொருளாதார வளர்ச்சி மட்டும் அவர்கள் விரும்பும் சமூக நிலை உயர்வை கொடுத்துவிடாது என்பதையும் திண்ணமாகவும் தெளிவாகவும், தீர்க்கமாகவும் உணரவேண்டும். 

எடுத்துக்காட்டாக:-

நாட்டின் உயர் பதவி என்று கருதப்படுகிற உச்ச நீதிமன்றத்தில் புதிதாக பதவி ஏற்க வந்த உயர் சாதி நீதிபதி ஒருவர் ஏற்கனவே அந்த நாற்காலியில் இருந்து ஒய்வு பெற்றுப்போனவர் ஒரு தலித் இனத்தவர் என்பதால் பூசாரிகளை வைத்து மாட்டு மூத்திரம் தெளித்து நாற்காலிக்கு பரிகார பூஜை நடத்திய பிறகே பதவி ஏற்றார் என்பது பத்திரிக்கை செய்தி. 

ஜனாதிபதியாக கே.ஆர். நாராயணன் இருந்துவிட்டுப்போன பின்பு அதற்கு அடுத்துவந்தவரும் ஹோமம யாகம் நடத்தி தீட்டுக்கழித்துத்தான் ஜனாதிபதி மாளிகையில் பால் காய்ச்சினார்.   

கேரளத்தில் A.K.ராமகிருஷ்ணன் என்ற தலித்,  தபால் தந்தி துறையில் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆக இருந்து ஒய்வு பெற்றார். அவரின் அறைக்கு கோமியம், பசுவின் சாணம் ஆகியவை தெளிக்கப்பட்டு தீட்டு கழிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அவர் இருந்த அலுவலகம் முழுவதும் அதே சடங்கு செய்யப்பட்டுள்ளது. இந்த இணைப்பை பாருங்கள்.  . (http://scstemployees.blogspot.com/2011/04/sc-officer-room-cleansed-by-cow-dung.html)

இப்போது -  பல நாட்களாக மனதை அறுத்துக்கொண்டு இருக்கும் நான் எழுத நினைத்த விஷயத்துக்கு வருகிறேன்.

குறுந்தொடர் - 3/3 - நிறைவு

இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தாழ்த்தப்பட்டவர்களும் , இஸ்லாமியர் உட்பட்ட சிறுபான்மையினரும் கைகோர்த்து அரசியல் ரீதியாக இணைந்தால் ஆட்சிபொறுப்பும் அரசாலும் பொறுப்பும் அவர்களுக்கே வந்து சேரும் என்பது ஆக்கரீதியான உண்மை.  ஆனால் துரதிஷ்டவசமாக இவ்விரு சமுதாயத்தில்தான் சமுதாயத்துக்குள்ளே பிளவுகளும்,கட்சிகளும்,இயக்கங்களும் அதிகமாகிவிட்டன. தலித் இனங்களின் மக்களுக்கும், இஸ்லாமியருக்கும் பொதுவானதும், கட்டுக்கோப்பானதுமான சக்திவாய்ந்த சங்க்பரிவார் அமைப்புபோன்ற எதிரிகள் இருக்க, அவர்களுக்கு வெண்சாமரம் வீசி, இந்த இன மக்கள் அடித்துக்கொள்வது தங்களின் சொந்த இனமக்களுடனே என்பது மிகவும் வேதனை தரும் நிலைமையாகும். 

விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், தேவேந்திரகுல வேளாளர் சங்கம், வன்னியர் சங்கம், பாட்டாளி இயக்கம், பூவை செங்குட்டுவன், பொன் குமார் தலைமயில் உள்ள சிறு சிறு இயக்கங்கள் என்றெல்லாம் சிதறிக்கிடக்கும் தாழ்த்தப்பட்டோருடைய அமைப்புகளும், விவசாய அணிகளும், மீனவர் அமைப்புகளும், முஸ்லிம் லீக், தேசியலீக், தமிழ்நாட்டு லீக், த.த.ஜ. , இ.த.ஜ. , த. மு.க. , ம.நே.ம.க , பாபுலர், எஸ். டி. பி. ஐ. என்றெல்லாம் சிதறிக்கிடக்கும் இஸ்லாமிய இயக்கங்களும், தலித் கிருத்துவ அமைப்பு, நாடார் கிருஸ்துவ அமைப்பு என்றெல்லாம் சிதறிக்கிடக்கும் இதர சிறுபான்மை அமைப்புகளும் ஓர் அணியில் நின்றால் ஆண்டாண்டுகாலமாக ஆட்டிப்படைத்து வரும் ஆரிய விஷத்தை முறிக்கும் மருந்தாக அமையும்.  இந்த மாற்று அரசியல் புரட்சிதான் இதற்கு விடிவாக இருக்க முடியுமே தவிர நாலு அரசுப்பதவிகள் கிடைத்துவிட வழிவகுக்கும் இட ஒதுக்கீடு மட்டும் போதும் என்பது அழுகிற பிள்ளைக்கு ஐஸ் கிரீம் கொடுப்பதற்கு சமமானது. ஆதிக்க வர்க்கங்கள் பால் என்று காட்டுவது பால் அல்ல பாலிடால் என்று உணரவேண்டும். அதிகாரங்களை மீட்டெடுக்க அமைப்பும் குறிக்கோளும் ஆழமாக இருந்திட வேண்டும். 

தலித்துகள் அவர்களுக்கு சரிநிகர் சமூக அந்தஸ்தை தருகிற இறைவனின் மார்க்கமாகிய இஸ்லாத்தின் பக்கம் திரண்டு வரவேண்டும் என்று நான் வெளிப்படையாக அழைப்பு விட விரும்புகிறேன். 

அவர்கள் நினைத்துப்பார்க்க வேண்டும். பிறப்பிலேயே பேதம் கற்பித்த முந்தைய ஆரிய மனுதர்மம் சார்ந்த சமூக அமைப்புக்கும்,  இஸ்லாமிய இறைவேதம் வரையறுத்துச் சொல்கிற....
  • அவனே உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்தான் (4:1).
  • உங்களை அன்னையரின் வயிற்றிலிருந்து படைத்தான்.காதும், கண்ணும், இதயமும் வழங்கினான் (16:78-83).

என்கிற திருகுர்-ஆன் வசனங்களுக்கும் உள்ள வேறுபாட்டை அவர்கள் உணர்ந்து ஆராயவேண்டும். இஸ்லாம் கூறுகிற ஐந்து கடமைகளின் அடிப்படையே சமத்துவமும், சகோதரத்துவமும் என்பதை தலித் சமுதாயத்தினர் விளங்கிக்கொள்ள வேண்டும்.

தலித்துகள் தானாக விளங்கிக்கொள்வார்களா?

இஸ்லாமிய இயக்கங்கள் என்று கூறிக்கொண்டு சகோதர யுத்தம் நடத்துகிறவர்கள் இஸ்லாத்தை வளர்ப்பதில் இனி தங்கள் சக்திகளை செலவிடவேண்டும். கிருஸ்துவ அமைப்புகளைப் பாருங்கள். மனிதன் துன்பப்படுகிற இடங்களான மருத்துவமனைகளையும், சிறைக்கூடங்களையும் தேர்ந்தெடுத்து நோக்கிச் சென்று தங்கள் மதத்தை பரப்புகின்றனர். ஆனால் இஸ்லாமியர்களாகிய நாமோ மாறுபட்ட  இயக்கத்தில் இருப்பவர்களை எதிர்த்து வன்முறை ஏவுகிறோம்- வசைபாடும் சுவரொட்டிகளை ஒட்டுகிறோம். நன்மையை ஏவி தீமையை தடுக்கும் மார்க்க கடமையை மறந்தே போனோம்.  

இஸ்லாமிய இயக்கங்களில் சிதறிக்கிடந்து தங்கள் சக்திகளை வீணர்களை புகழவும், அவர்களுக்காக கோஷம் போடவும், கொடிப்பிடிக்கவும், நம்மைத்தாக்கி நாமே வெட்டிக் கொள்ளவும், சுட்டுக்கொள்ளவும்,  துணிந்து நிற்கும் அருமை இளைஞர்களே! இந்த நல்ல காரியத்துக்கு ஒன்று திரளுங்கள்! அல்லாஹ்வின் மார்க்கத்தை அடுத்தவர்களுக்கு எத்திவைப்பதில் அந்த சக்திகளை செலவழிப்போம்! மதமாற்றதடைச்சட்டம் என்பதெல்லாம் மண்ணோடு மக்கிப்போய் நெடுநாள் ஆகிவிட்டது.நம்மை ஆண்டாண்டு காலமாக அடக்கிவைத்திருக்கும் ஆதிக்க சக்திகளுக்கெதிராக – அதே பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் கை கோர்ப்போம். இது ஒரு துணிச்சலான நடவடிக்கையாக இருக்கும் அதுவும் காலத்தின் கட்டாயமான தேவையான நடவடிக்கையாக இருக்கும். 

அன்பார்ந்த விடுதலைச் சிறுத்தை, புதிய தமிழகம் மற்றும் கட்சிகளைச் சார்ந்த தலித் இன உண்மை தமிழ் சகோதரர்களே!

ஆண்டாண்டு காலமாக ஆரிய நச்சுப்பாம்புகளின் வர்ணாசிரம- வர்ணபேத- பிரித்தாள்கின்ற சூழ்ச்சிகளில் சிக்கி அடக்கப்பட்டு- ஒடுக்கப்ப்பட்டு- இடுப்பில் துண்டுகட்டி- பல்லக்குத்தூக்கிகளாக பழக்கப்பட்டுப்போன பழந்தமிழ் இனமே! 

ஆலயம் கட்டினாலும் அதில் நுழைய அனுமதி மறுக்கப்படும் அடக்குமுறைக்கு ஆளான இனமே!

தனி வீதி, தனித்தெரு, தனிக்குவளை, தனிக்குளம் என்று தடுத்துவைக்கப்பட்ட தமிழினமே!

தொட்டால் பாவம்! எதிரில் வந்தால் தீட்டு ! காலிலே பிறந்தவன் என்றெல்லாம் பிரித்துவைக்கப்பட்ட இனமே!

உங்களை இஸ்லாம் அழைத்துக் கொண்டே இருந்தது. எங்களுடன் அரசியலில் கைகோர்க்க மட்டுமல்ல... 

ஒரு தட்டில் நாம் அனைவரும் இருந்து உண்ணும் சமத்துவத்தை தர! உறவு முறை வைத்து அழைத்துக்கொள்ள! எங்கள் பெயரே உங்களுக்கும் சூட்டப்பட!  

ஏற்கனவே இஸ்லாத்தில் இருப்பவர்களை தொழுகைக்கு நீங்கள் அழைப்புவிட!அதை நாங்கள் முழுமனதோடு ஏற்றுக்கொள்ள! நாம் அனைவரும் ஒரே வரிசையில் நின்று இறைவனை தொழ! ஓர் குரலில் கலிமாவும் ஆமீனும் முழங்க!

வாருங்கள் கை கோர்ப்போம் சகோதரர்களே.!
உரசல் உறவுக்குள் அழைக்கிறது...
இபுராஹீம் அன்சாரி
காலச் சூழலுக்கேற்ப இது ஒரு மீள்பதிவு

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 27 8

அதிரைநிருபர் பதிப்பகம் | January 29, 2014 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..
முந்தைய பதிவில் சஹாபியப் பெண்களில் நீண்ட காலம் வாழ்ந்த அஸ்மா(ரலி) அவர்களின் வாழ்வின் நிகழ்வுகள் சிலவற்றைப் பார்த்தோம், அதிலிருந்து நிறைய படிப்பினைகளை அறிந்துக்கொண்டோம். அல்ஹம்துலில்லாஹ். 

நாம் நிறைய நபிமார்களின் வரலாறுகள் அறிந்திருப்போம், நபி(ஸல்) அவர்களின் வாழ்வின் ஏராளமான நிகழ்வுகள் நிறைய அறிந்திருப்போம், நிறைய நபித்தோழர்களின் வரலாறுகள் அறிந்திருப்போம். ஒரு முஸ்லீமாக இருந்து கொண்டு இவைகளை நாம் அறிந்திருப்பது எவ்வளவு அவசியமோ, இதுபோல் நபிமொழிகளைகளை தொகுத்தளித்த கண்ணியமிக்க மார்க்க மேதைகளான இமாம்களின் வாழ்க்கை வரலாறுகளை பற்றி அறிய வேண்டும். அவர்களின் வாழ்வின் நடைபெற்ற நிகழ்வுகளிலிருந்து நமக்கு நிறைய படிப்பினைகள் உள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை. 

இந்த தூய இஸ்லாத்தை நிலைநாட்ட தங்களின் உடலாலும், அறிவாலும், தியாகத்தாலும் அரும்பணிச் செய்த கண்ணியமிக்க இமாம் புகாரீ(ரஹ்) அவர்கள் வாழ்வு பற்றிய ஒரு சிறிய தொகுப்பு. இவைகளில் இருந்து நமக்கு என்ன படிப்பினை உள்ளது என்பதை பார்க்கலாம்.

இமாம் புகாரி அரபு நாடுகளில் பிறக்கவில்லை, அசல் அரபியும் அல்ல, அரபிகளில் வழித்தோன்றல்களில் வந்தவர்களும் அல்ல, அரபு அவர்களின் தாய்மொழியும் அல்ல. அவர்களின் பெயர் முஹம்மது பின் இஸ்மாயில் இப்னு இபுறாஹீம்) இன்றைய உஸ்பகிஸ்தான் நாட்டில் உள்ள ஒரு நகரான புகாரா என்ற பிரதேசத்தில் ஹிஜ்ரி 194ல் பிறந்தவர் என்பதால், இவர்களுக்கு புகாரி (புகாராவை சேர்ந்தவர்) என்று அழைக்கப்பட்டார்கள். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இஸ்லாத்தை பாதுகப்பதற்காக. ஒரு சில நல்ல மக்களை ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாக்கிக் கொண்டுதான் இருப்பான். 

அப்படிப்பட்டவர்களில் நபி(ஸல்) அவர்களுடைய அருமைத்தோழர்களுக்கு பிறகு அதீத ஞாபக சக்தியுள்ள, நல்ல அறிவாற்றல் உள்ள, இஸ்லாமிய விமர்சகர்களுக்கு தக்க பதில் அளிக்கக்கூடிய இமாம் புகாரி போன்ற மாமேதைகளை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உருவாக்கி இந்த தீனை நமக்கு பரிபூரணமாக கிடைக்க உதவி உள்ளான் என்று தான் சொல்ல வேண்டும்.

இமார் புகாரி அவர்களுக்கு இருந்த ஞாபகசக்தி போன்று இன்று ஒரு மனிதரைக்கூட காண இயலாது. இது அல்லாஹ் அவர்களுக்கு வழங்கி இருந்த மிகப்பெரும் கிருபை. அன்றைய காலம் கம்பூட்டர் காலமல்ல, இமாம் புகாரி இமாம் அவர்களின் மூளையும் உள்ளமும் கணினி மயமாக்கப்பட்டிருந்தது என்று தற்கால சந்ததிகளுக்கு புரியும்படி சொல்லுவதும் தவறில்லை என்று கருதுகிறேன். லட்சக்கணக்கான ஹதீஸ்களை மனனம் செய்திருந்தார்கள் இமாம் புகாரி அவர்கள். அவர்களில் தரம் பிரித்து, அறிவிப்பாளர் வரிசைகளில் குறைபாடுகள் இல்லாத, நம்பகமான 7,000ம் ஹதீஸ்களை நமக்கு மிகுந்த கவனத்துடன் தொகுத்து தந்துள்ளார்கள். இன்று திருக்குர்ஆனுக்கு அடுத்த நிலையில் இமாம் புகாரி அவர்கள் தொகுத்துத் தந்துள்ள புகாரி கிரந்தம் நமக்கு உள்ளது.

இமாம் புகாரி சிறுவயதில் இஸ்லாமிய அறிவாற்றல் மிக்கவராக இருந்துள்ளார்கள். பள்ளி பருவத்தில் ஆதாவது 10 வயதில் திருக்குர்ஆனும், பல நூறு ஹதீஸ்களையும் மனனம் செய்து விட்டார்கள். 16 வயதில் அப்துல்லாஹ் இப்னு முபாரக்(ரஹ்) ஹிஜ்ரி 180களில் வாழ்ந்த மார்க்க அறிஞர் அவர்களின் புத்தகங்கள், இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் ஆசிரியர் வகீஹ் பின் ஜர்ரா(ரஹ்) அவர்களின் புத்தகங்கள் அனைத்தையும் மனனம் செய்துவிட்டார்கள். பகுத்தறிவு ரீதியாக குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் ஒதுக்கிய முஹ்தஸிலாக்களின் புரட்டு வாதங்களையும் அறிந்து வைத்து அவர்களுக்கு தக்க பதில் கொடுக்கும் சிறப்பான அறிவாற்றல் உடையவர்களாக திகழ்ந்துள்ளார்கள் இமாம் புகாரி.  தந்தையை சிறுவயதில் இழந்த காரணத்தால், புகாரி இமாம் அவர்களின் தாயார் அவர்களை இஸ்லாமிய கட்டமைப்பில் வளர்த்துள்ளார்கள். 

இமாம் புகாரி அவர்களுக்கு 16 வயது இருக்கும்போது தன் தாயார் மற்றும் தன் சகோதரனுடன் சேர்ந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்கிறார்கள். மக்கா, மதீனா, பக்தாத் போன்ற நகரில் இருக்கும் மார்க்க அறிஞர்களிடம் மார்க்க அறிவு பெற்று தன் பிள்ளை மேலும் மார்க்க ஞானமுடையவராக வரவேண்டும் என்பதற்காக இமாம் புகாரி அவர்களை ஹஜ் முடிந்தவுடன், அவர்களின் தாயார் மக்காவில் விட்டுவிட்டு சொந்த நாட்டிற்கு தன்னுடைய மற்றொரு மகனாருடன் திரும்புகிறார்கள். 

சுப்ஹானல்லாஹ் தொலைதூர பிரதேசம் உஸ்பகிஸ்தானிலிருந்து ஹஜ் பயணம் வந்து மக்காவில் தன்னுடைய மகனை மார்க்க கல்வி கற்க விட்டுவிட்டு சென்றுள்ள அந்த தாயாரின் தியாகத்தை நினைத்தால் உண்மையில் மனம் உருகுகிறது. தன்னுடைய மகன் தீனுக்காக உழைக்க வேண்டும் என்று அந்த தாய் நினைக்கப் போய் இன்று எமக்கு இந்த இஸ்லாம் தூய வடிவில் கிடைப்பதற்கு ஷஹீஹான ஹதீஸ் தொகுப்பான புகாரி கிரந்தமும் ஓர் காரணம் தானே.

இமாம் புகாரி தன்னுடைய தாய் மக்காவில் விட்டுச்சென்ற பின்பு 16 வருடங்களாக நாடு நாடாக சுற்றி மார்க்க கல்வி கற்று ஹதீஸ்களை தொகுக்க ஆரம்பித்தார்கள். மக்கா, மதீனா, சிரியா, எகிப்த் ஜொர்டான், பாலஸ்தீன், லெபனான், கூஃபா பஸரா, பாக்தாத் என்று பல்வேறு பகுதிகளுக்கு சென்று மிகப்பெரும் மார்க்க மாமேதைகளிடம் ஹதீஸ்கள் கற்றுக் கொண்டு. அவைகளை தொகுக்க ஆரம்பித்தார்கள். குறிப்பாக அன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய இஸ்லாமிய அறிஞராக பாக்தாதில் இருந்த இமாம் அஹ்மது(ரஹ்) அவர்களிடம் ஹதீஸ்கள் கற்க கிட்டத்தட்ட ஏழு முறை வந்துச் சென்றுள்ளார்கள் இமாம் புகாரி அவர்கள்.

ஹிஜ்ரி 3ம் நூற்றாண்டில் இஸ்லாம் வளர்ந்த காலகட்டத்தில், ஹதீஸ்களை முழுமையாக தொகுக்கப்படாத அந்த காலகட்டத்தில், மக்கள் சிறு சிறு குழுக்களாக கொள்கை ரீதியாக பிளவுபட்டு பிறிந்து  இருந்தார்கள். குர்ஆன் சுன்னாவை முழுமையாக பின் பற்றும் கொள்கையில் உள்ளவர்களிடம் மட்டுமே இமாம் புகாரி அவர்கள் ஹதீஸ்களை கேட்டு தொகுத்துள்ளார்கள். கிட்டத்தட்ட 1080 பேர்களிடம் ஹதீஸ்கள் கேட்டுள்ளார்கள். அவர்கள் அனைவரும் அஹ்லுஸ் ஸுன்னத்துவல் ஜமாத் கொள்கையில் உள்ளவர்கள் என்று இமாம் புகாரி அவர்களே கூறியுள்ளது வரலாற்று ஏடுகளில் பதியப்பட்டுள்ளது. ஹதீஸ்களை தொகுத்த இமாம் புகாரி அவர்கள் கொள்கை ரீதியாக மாறுபட்டவர்களுக்கு மறுப்பு சொல்லும் விதமாக தன்னுடைய ஹதீஸ்களை வரிசைபடுத்தி தொகுத்துதந்துள்ளார்கள். 

உதாரணமாக ஷியாக்கள், முஹ்தசிலாக்கள், ஹாரிஜியாக்கள் போன்றவர்களின் வழிகேட்டுக் கொள்கைக்கு மறுப்பு சொல்லும் விதமாக ஒவ்வொரு தலைப்பிட்டு ஹதீஸ்களை தொகுத்துள்ளார்கள் என்பதை புகாரி கிரந்தத்திலிருந்து நாமும் அறிந்து கொள்ளலாம். நீண்ட தூர பயணம், தூக்கமின்மை, வெயில், மழை, குளிர் போன்றவைகளால் ஏற்பட்ட சிரமங்களை சகித்துக் கொண்டு எண்ணற்ற தியாகங்கள் செய்து தான் இமாம் புகாரி அவர்கள் ஷஹீஹான ஹதீஸ்களை நமக்கு தொகுத்து தந்துள்ளார்கள்.

இமாம் புகாரி அவர்கள் புகாரி கிரந்தம் மட்டும் எழுதவில்லை, மேலும் பல புத்தகங்கள் எழுதியுள்ளார்கள். இதில் மிகவும் குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டிய நூல் தான் தஹ்ரீஹ் என்ற புத்தகம். இதில் நிறைய ஹதீஸ் அறிவிப்பாளர்கள் பற்றிய சகல தகவல்களையும் பதிவு செய்கிறார்கள். இந்த தஹ்ரீஹ் என்ற நூலிருந்து தான் அநேக அறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மை அறியப்படுகிறது. 16 லட்சம் ஹதீஸ்களை சேகரித்துள்ளார்கள், அவைகளில் 7275 ஷஹீஹான ஹதீஸ்களை நமக்கு தொகுத்துத் தந்துள்ளார்கள். இவைகளை மூன்று முறை சரி பார்த்துள்ளார்கள். 

புகாரி கிரந்தத்தை தொகுத்த பின்னர், இமாம் புகாரி அவர்கள் தன்னுடைய ஆசான்களான இமாம் அஹ்மது இப்னு ஹம்பல் (ரஹ்), அலி இப்னு மதீனி(ரஹ்), இஸ்ஹாக் இப்னு ராஹவியா(ரஹ்) போன்ற ஹதீஸ் துறையில் நிபுனத்துவம் வாய்ந்தவர்களிடம் புகாரி கிரந்தந்ததை காட்டி, அதில் உள்ளவைகள் அனைத்தும் சரி என்பதை உறுதிபடுத்திக் கொண்டுள்ளார்கள். ஒவ்வொரு ஹதிஸையும் பதிவு செய்யும்போது ஒளு செய்துவிட்டு இமாம் புகாரி அவர்கள் இரண்டு ரக்காத் தொழுத பிறகே ஒவ்வொறு ஹதீஸையும் எழுதியுள்ளார்கள்.

இந்த மாமனிதர் எவ்வளவு சிரமத்துக்கு மத்தியில் தீனுக்காக எவ்வளவு தியாகங்கள் செய்துள்ளார்கள் என்பதை அறியும் போது உண்மையில் உள்ளம் பூரிப்பு அடைகிறது. இமாம் தம்முடைய இறுதி காலகட்டத்தில் தன்னுடைய சொந்த நாட்டிற்கு புகாராவுக்கு திம்பினார்கள். ஆனால் சேதனைகள் அவர்களுக்கு காத்திருந்த்து, ஒரு மார்க்க சட்டம் தொடர்பாக புகாராவின் ஆட்சியாளர் (அமீர்) அவர்களுடன் கருத்து முரண்பாடு ஏற்படுகிறது, அவர்களை புகாராவை விட்டு வேறு பிரதேசத்திற்கு செல்லுமாறு அமீரவர்களை உத்தரவிடுக்கிறார்கள். இதன் அடிப்படையில் பொறுமையுடன் ஹரம்தக் என்ற பிரதேசத்தில் குடியேறினார்கள். 

நல்லவர்களுக்கு சோதனை வரும் என்பதை இமாம் புகாரி அவர்கள் தெளிவாக அறிந்திருந்தார்கள். அந்த சோதனைகளை அல்லாஹ்விடமே விட்டு விட்டார்கள். ஹிஜ்ரி 256ஆம் ஆண்டு ஹரம்தக் என்ற இடத்தில் ஈதுல் ஃபித்ர் இரவு இஷா தொழுகைக்கு பிறகு இவ்வுலகை விட்டு பிரிந்து மரணம் மடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

நபி(ஸல்) அவர்களின் பொன்மொழிகளில் மிகவும் பிரபலமான நபிமொழி “ஒரு மனித மரணித்துவிட்டால், 3 விசயங்கள் மட்டுமே அவனுக்கு நன்மை தேடித்தரும், அதில் ஒன்று பிரயோஜனமான கல்வி” இந்த பணியை தான் இமாம் புகாரி(ரஹ்) அவர்கள் செய்து விட்டு சென்றுள்ளார்கள். திருக்குர் ஆனுக்கு பிறகு நம் அனைவருக்கும் நபிமொழிகளின் மூலம் வழிகாட்டுகிறது ஷஹீஹுல் புகாரி. இவைகளிலிருந்து நாம் பெறும் நன்மைகளில் இமாம் புகாரி அவர்களுக்கு நிச்சயம் பங்கு உண்டு என்பதில் நம் யாருக்கும் சந்தேகமில்லை.

இமாம் புகாரி போன்ற அறிஞர்களைப் பற்றி நாம் ஏன் தெரிந்துக் கொள்ள வேண்டும்? இந்த அறிஞர்கள் இஸ்லாத்திற்கு ஆற்றிய பங்களிப்பு என்ன? நமக்கு அவர்கள் விட்டுச் சென்றிருக்கிற முன்மாதிரிகள் என்ன? அவர்களின் தியாகங்கள் போன்ற‌வற்றை நாம் பெரும்பாலும் அறிந்து வைத்திருப்பதில்லை.

இஸ்லாமிய வரலாற்றில் சரியான ஹதீஸ் எது? பலஹீனமான ஹதீஸ் எது? இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் எது? அறிவிப்பாளர்களின் தரம் என்ன? போன்றவற்றையெல்லாம் ஆய்வு செய்து, ஸஹீஹான ஹதீஸ்களை கடுமையான உழைப்பிற்குப் பின் இந்த சமூகத்திற்கு விட்டுச் சென்ற இமாம் புகாரி போன்றவர்களின் வாழ்வு பற்றி நாம் அறிந்து வைத்திருப்பதும், இதனை நம்முடைய வருங்கால சந்ததிகளுக்கு எடுத்துரைப்பதும், ஞாபகமூட்டுவதும் நம்முடைய ஈமானிற்கு வலு சேர்க்கும் என்பது நிச்சயம் சந்தேகமில்லை. காரணம் இன்று ஒரு சிடி இரண்டு சிடி மார்க்க சொற்பொழிவு கேட்டவனெல்லாம் மார்க்கம் பேசி தர்க்கம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான். 

தூய இஸ்லாத்திற்காக அரும்பாடுபட்ட இமாம் புகாரி போன்றவர்களை எல்லாம் பெரிய அறிவாற்றல் உள்ளவரல்ல என்று தன் புத்திக்கு எட்டாத ஒரு சில விசயங்களை வைத்து தரம் தாழ்த்தி பேசுகிறான் இரண்டு சிடி கேட்டவன். இமாம் புகாரி போன்றவர்களின் வரலாறுகளை பற்றி அறியாமல் இருந்தால், இரண்டு சீடியில் பயான் கேட்பவர்கள் இமாம்களை தரக்குறைவாக பேசுவதை உண்மை என்று நம்பும் நிலை வருங்காலத்தில் எழலாம். அல்லாஹ் பாதுகாப்பானாக.

இமாம் புகாரி 10 வயதில் ஹாஃபிலானார்கள், ஆனால் இன்று 15 வயதில் திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்துள்ள பிள்ளைகளை காண்பது மிக மிக அறிதாகி வருகிறது. நம் பிள்ளை ஒரு சினிமா பாடல் படித்து விட்டால் நாம் ரொம்ப ஆர்வதுடன் அதனை கேட்டு, கவுரவத்துடன் சந்தோசப்படும் அளவுக்கு, நம் பிள்ளை ஒரு பெரிய குர்ஆன் வசனத்தை மனம் செய்து ஓதிவிட்டானே என்று என்றைக்காவது சந்தோசப்பட்டிருப்போமா?

சிறந்த அறிவாற்றல், ஞாபகசத்தியுள்ள தன்னுடைய பிள்ளையை தீனுக்காக சேவை செய்யும் நோக்கில் மார்க்க கல்வி படிப்பதற்காக அனுப்ப எத்தனை பெற்றோர்களுக்கு மனம் வரும்?

இப்படி கேள்விகளை நாம் அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

யா அல்லாஹ்! அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.
தொடரும்...
M.தாஜுதீன்

மாரடைப்புக்கு அருமருந்து இஞ்சி 9

அதிரைநிருபர் | January 28, 2014 | , , ,


மாரடைப்பைத் தடுக்கும் சக்தி இஞ்சிக்கு உள்ளதாக கண்டறியப் பட்டுள்ளது.

இதயத்துக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உள்ளது.

கொழுப்புச்சத்து உள்ள உணவை சாப்பிடும் பொழுது ஐந்து கிராம் அளவுக்கு இஞ்சியை சேர்த்துக்கொள்ள வேண்டும். கொழுப்பு சத்து நிறைந்துள்ள உணவை அடிக்கடி சாப்பிடுவது இரத்த நாள இயக்கத்தை நாளடைவில் வலுவிழக்கச் செய்துவிடும்.

இரத்தநாளங்களில் இரத்தக்கட்டு ஏதேனும் ஏற்படுமாயின் அதை சரிசெய்வது அவ்வளவு எளிதன்று. இதற்குக் கைகண்ட மருந்தாக இஞ்சி விளங்குகின்றது. இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி மாரடைப்பு நேராமல் இஞ்சி தடுக்கின்றது.” என்று இந்திய மருத்துவக் கழக இதழில் டாக்டர் SK வர்மா தெரிவித்துள்ளார்.

ஆரோக்கியமான 30 நபர்களிடம் இஞ்சியின் மருத்துவகுணத்தைக் குறித்து அறிய சோதனை நடத்தப்பட்டது. முதல் வாரத்தில் 50 கிராம் வெண்ணையும், 4 ரொட்டித்துண்டுகளும் அவர்களுக்குக் கொடுக்கபட்டன. அடுத்த வாரம் அதனுடன் ஐந்து கிராம் இஞ்சி சேர்த்து கொடுக்கப்பட்டது. அதற்கு அடுத்த வாரம் அவர்களின் இரத்தம் சோதிக்கப்பட்டது. அவர்களின் இரத்த நாளத்தின் முதல் வார இயக்கம் 18.8 சதவிகிதம் குறைந்து இருந்தது. ஆனால் அதற்கு அடுத்த வாரம் 6.7 சதவிகிதம் அதிகரித்து இருந்தது.

இதன் மூலம் இரத்தநாளங்களின் செயல்பாட்டிற்கும், இரத்த ஓட்டத்திற்கும் இஞ்சியின் பயன்பாடு தெளிவாக நிரூபிக்கப்பட்டது. மாரடைப்பு ஏற்படுவதற்கு, இரத்தநாளங்களில் ஏற்படும் அடைப்பும், அவற்றில் ஏற்படும் இரத்தக் கட்டும் மிக முக்கிய காரணம் ஆகும்.

கொழுப்புச் சத்து அதிகமாக உள்ள உணவுகளை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம். இதற்கு இரத்தநாளங்களின் சுவர்களில் கொழுப்பு படிந்து இரத்த நாளங்களை வலுவிழக்கச் செய்வதும், இரத்த ஓட்டத்தின் வேகத்தை அது பாதிப்பதும் காரணமாகும். மேற்கண்ட ஆய்வின் மூலம் இரத்தநாளங்களின் வலுவிற்கும், சரியான இரத்த ஓட்டத்திற்கும் இஞ்சி வெகுவாக உதவுகிறது என்பது நிரூபணமாகியுள்ளது.

இந்த இஞ்சியின் பலன்கள் இதோடு நின்றுவிடவில்லை. மேலும் பல நோய்களுக்கு அருமருந்தாக இது உள்ளது.

- சளிப்பிடித்தல் / ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது; தலைவலியைப் போக்குகிறது.

- இரத்தஓட்டம் சீராக இருக்க உதவுகிறது; கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது; மைய நரம்பு மண்டலத்தைத் தூண்டி

- இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது.

- மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது.

- செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது.

- மகளிரின் கருப்பைவலிக்கும் மாதவிலக்கு நேரங்களில் அடிவயிற்றில் உண்டாகும் வலிகளுக்கும் நன்மருந்தாக உள்ளது.

- தோலில் உண்டாகும் உலர்சருமம், காயங்கள், சிரங்குகள் போன்றவற்றிக்கும் இது நல்ல மருந்தாகும்.

- மூட்டுவலிக்கும் இது நன்மருந்தாக இருப்பதால் ஆஸ்பிரின் ஒவ்வாதவர்களுக்கு இது நல்லதொரு அருட்கொடையாகும்.

எனவே ஒவ்வொரு நாள் உணவிலும் இஞ்சியை சேர்த்துக்கொள்வது உடலுக்கு பாதுகாப்பானது என மருத்துவ ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இம்மருத்துவ குறிப்பு ஏற்கனவே மின்னஞ்சல் மூலமாக நமக்கு கிடைத்திருந்தாலும், நல்ல பயனுல்ல தகவல் என்பதால் இங்கு அனைவரின் பார்வைக்கு தருகிறோம். இச்செய்தியை மின்னஞ்சல் மூலம் பகிர்ந்துக்கொண்ட அஸ்கர் (மாதவலாயம்) அவர்களுக்கு மிக்க நன்றி.

தகவல்: அதிரை அஹ்மது
இது ஓர் மீள்பதிவு

கண்கள் இரண்டும் - தொடர் - 22 22

அதிரைநிருபர் பதிப்பகம் | January 27, 2014 | , ,


கருவளையம்: 

கருவளையங்களுக்கான காரணங்கள் பல. இதை ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை மேற்கொண்டால் சரியாக்கலாம்.  சருமத்தின் எல்லா இடங்களிலும் பரவியிருக்கும் ஹைப்போ டெர்மிஸ், கண்களைச் சுற்றியுள்ள பகுதியில் மிகக் குறைவு. பரம்பரை வாகு, தூக்கமின்மை, சரிவிகித உணவு உண்ணாதது, கம்பியூட்டர், டி.வி. முன் அதிக நேரம் இருப்பது போன்றவைகளாகும். 

“கண்களின் வார்த்தைகள் புரியாதா” என்று கண்கள் நமது உணர்ச்சிகளை வெளிகாட்டும் ஒரு உறுப்பாக இருக்கிறது. கண்களை பராமரிப்பது என்பது மிகவும் கவனமாக செய்யவேண்டிய ஒன்று. கண்களை சுற்றி இருக்கும் தோல் மிகவும் மென்மையானது. எந்த கெமிக்கலையும் உபயோகிக்கும் முன் அது தரமானதா என்று பரிசோதித்துவிட்டு கண்களுக்கு போடுவது மிகவும் அவசியம். கண்கள் என்றதும் கருவளையம்தான் பலருக்கு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. கண்களைச் சுற்றி கரு வளையம் ஏற்பட பல காரணங்கள் இருந்தாலும், அவற்றில் சரியான தூக்கம் இல்லாததே முழு முதற்காரணம் என்று சொல்லலாம். நல்ல தூக்கம் மிகவும் அவசியம். 

பகல் தூக்கத்தை விட இரவு தூக்கம் மிகவும் முக்கியம். இரவு தூக்கம் என்பது தொடர்ச்சியாக 8 மணி நேரமாவது இருக்குமாறு உங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளுங்கள்.     கருவளையம் வராமல் தடுக்க, தூங்கும் போது எந்த விதமான மன உளைச்சல்களும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.  உறங்கும் முன் சூடான பாலில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல தூக்கம் வரும். மனதையும், உடலையும் டென்ஷன் ஆக வைத்துக் கொள்ளாமல் ரிலாக்சாக இபேருப்பதும், நல்ல தூக்கத்திற்கு வழி செய்யும்.

பகல் நேரத்தில் உள்ளங்கைகளைக் குவித்து கண்களின் மேல் வைத்து மூடியபடி அடிக்கடி செய்யலாம். கண்களை வேகமாக மூடித் திறப்பது போலச் செய்வது, அதற்கு ஒருவித மசாஜ் மாதிரி அமையும்.  கண்களை இறுக மூடவும். பிறகு அகலமாகத் திறக்கவும். இதே போல 5 முறைகள் செய்யவும். புருவங்களைக் குறுக்காமல், கண் இமைகள் மட்டும் மூடி, மூடித் திறக்க வேண்டும். நெற்றி, முகத் தசைகள் சாதாரணமாக இருக்கட்டும். 

இந்தப் பயிற்சி கண்களைச் சுற்றியுள்ள தசைகளுக்கான அற்புதப் பயிற்சி. கருவளையங்களைப் போக்க இதைத் தொடர்ந்து செய்து வரலாம்.  கருவளையம் ரொம்பவும் அதிகமிருந்தால் பியூட்டி பார்லர்களில் செய்யப்படுகிற ஐ மசாஜ் பலனளிக்கும்.

கருவளையம் போக்குவதற்கு இயற்கை மருத்துவத்தில் தயிர் பரிந்துரைக்கப்படுகிறது. தயிர், கஸ்தூரி மஞ்சள், தூய சந்தனம் கலந்து தினமும் கண்ணுக்கு அடியில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து கழுவினால் கண்ணின் கருவளையம் நீங்கும். உருளைக்கிழங்கின் சாறும் நல்ல பலன் தரும். உருளைக்கிழங்கை கண்ணிற்கு மட்டுமல்ல முகத்திற்கு தடவினாலும் கருமை நீங்கி சருமம் வெளுப்பாகும். 

பன்னீரை பஞ்சில் தோய்த்து இரவு படுக்கும் முன் கண்ணில் வைத்துக் கொண்டால், நாளடைவில் கருமை நீங்கி கண்கள் பளிச்சென்று இருக்கும். அதே போல் தரமான Under Eye க்ரீம்களும் நல்ல பலனை தரும். வயதானால் வரக்கூடிய கருவளையத்திற்கும் இப்போது தரமான க்ரீம்கள் மார்க்கெட்டில் இருக்கின்றன. பிரபலமான பிராண்டுகளில் இருக்கும் க்ரீம்களாக வாங்குவது நல்லது. தரக்கட்டுப்பாடு, பரிசோதனை என்று எல்லா கட்டங்களையும் தாண்டி வருவதால் கெடுதல் விளைவிக்க வாய்ப்பில்லை.

பேஷியல் செய்யும்போது கண்களை சுற்றி உள்ள தசைகளை மெதுவாக மசாஜ் செய்து விடுங்கள். வட்ட வடிவத்தில் மசாஜ் செய்ய வேண்டும். குளிப்பதற்கு முன்பு, சிறிது ஆலிவ் ஆயில் அல்லது பேபி ஆயில் அல்லது விளக்கெண்ணெய் கொண்டு கண்களை சுற்றி மெதுவாக மசாஜ் செய்தால் கண்களுக்கு புத்துணர்ச்சியாக இருக்கும். இப்படி செய்வதால் கண்களின் சோர்வு மற்றும் கருவளையம் நாளடைவில் மறையும்.         

கண்களின் சோர்வு நீங்க மற்றுமொரு அருமையான இயற்கை மருந்து வெள்ளரிக்காய். இதன் சாறை கண்களை சுற்றி தடவி வந்தால் கண்களுக்கு குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் கிடைக்கும். அலோவேரா ஜெல்லும் கண்ணின் கருவளையத்திற்கு மிகவும் சிறந்த மருந்தாகும். அலோவேரா சூரியனால் ஏற்பட்ட கருமைக்கும் தீப்புண்ணிற்கும் கூட சிக்கிச்சையளிக்க பயன்படுகிறது. கண்ணாடி தொடர்ந்து அணிவதால் கருப்பான சருமத்திற்கும் அலோவேரா மற்றும் உருளைக்கிழங்கு நல்ல பலனை அளிக்கும்.

வெள்ளரிகாய், உருளைகிழக்கு, தக்காளி ஆகியவற்றை மெலிதாக கட் செய்து கண்களுக்கு மேல் வைக்கவும், இதனால் கண்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். 

வெள்ளை சாமந்திப் பூவின் இதழ்களைப் பிய்த்து அதை வெந்நீரில் போட்டு அப்படியே மூடி வைத்துவிட வேண்டும். அதில் பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்துக் கொண்டு ஓய்வெடுக்கலாம். இது கண்களுக்குக் குளிர்ச்சியைத் தருவதோடு கருவளையங்களை போக்கும்.  

கண்களை அழகாக வைத்திருக்க பால், பால்பொருட்கள், கீரை, முட்டை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறப் பழங்கள் மற்றும் காய்கள் உண்பதோடு போதிய அளவு தண்ணீர் குடிக்கவேண்டியதும் மிக முக்கியம்.

கருவளையங்களை தவிர்க்கும் வழி:

கண்களுக்குக் கீழ் ஏற்படும் கருவளையத்தைப் போக்க தினமும் உணவில் கீரை வகைகளைச் சேர்க்கவும். படுக்கும் முன் தினமும் வைட்டமின்ணி எண்ணெயை கண்ணைச் சுற்றி மசாஜ் செய்யவும். மலச்சிக்கலைத் தவிர்க்கவும். கண்களுக்குக் கீழ் வரும் கருவளையத்தைக் குறைக்க, தினமும் உருளைக் கிழங்கைத் துருவி சாறு எடுத்துப் பூசிக் காயவிட்ட பின் கழுவவும். பாதாம் பருப்பை ஊறவைத்து பால்விட்டு அரைத்து அந்த விழுதைக் கண்களைச் சுற்றிப் பூசி வந்தால் கருவளையம் குறையும்.

கண்ணின் கீழ் ஏற்படும் கருவளையங்களுக்கு, ரெட்டீன் - A (Retin - A) எனப்படும் ரெட்டினாயிக் அமிலம் கொண்ட புதிய மருந்து நல்ல பலன் தருகிறது. இது சூரிய ஒளியால் உண்டாகும் பாதிப்பை நீக்கி, சருமத்தின் மேற்புறமுள்ள பகுதிகளுக்கு இரத்தவோட்டத்தையும் அதிகரிக்கின்றது. 

தினசரி இரவு தூங்கச் செல்லும் முன் கண்களுக்கு கீழ்புறம் சிறிதளவு ரெட்டீன் -ஏ க்ரீம் தடவி வந்தால் போதும். க்ரீமின் அளவு அதிகமானால் முகத்தில் வீக்கத்தினையும், வறட்சியையும் ஏற்படுத்தக்கூடிய பண்பு இதற்கு உள்ளது. 

கூடிய வரைக்கும் வெயிலில் செல்லும் போது சருமத்தைப் பாதுகாக்கக் கூடிய (Sunscreen Ointment) க்ரீம்களைப் பயன்படுத்த வேண்டும். ரெட்டீன் -ஏ ஒரு சில மாதங்கள் சென்ற பின்னரே நல்ல பலனளிக்கிறது.

வேதிச் சிகிச்சை: 

வயதாக ஆக, கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் மெல்லிய கோடுகள் ஏற்படுகின்றன. பாதிக்கப்பட்ட இடங்களின் மேற்புறங்களில் ரெட்டினாயிக் அமிலக் கரைசலைத் தடவி வர கண்களைச் சுற்றிலும் ஏற்படும் கருவளையங்கள் காய்ந்து புண்கள் உரிவதைப் போன்று உதிர்ந்து விடுகின்றன. அப்பகுதியை நன்று ஆறியவுடன் பார்த்தால் மென்மையாகவும், வெண்மையாகவும் இருக்கும்.

கொலாஜென் சிகிச்சை (Collagen Treatment): 

சருமத்தை வழு வழுவென்று வைக்கக் கூடிய பண்பு கொலாஜென்னிற்கு உண்டு. இயற்கையில் கிடைக்கக் கூடிய இப்புரதமானது எல்லா உடல் திசுக்களிலும் காணப்படுகிறது. இச் சிகிச்சையில் கொலாஜென் ஊசி மூலமாக சுருக்கங்கள் தோன்றியுள்ள பகுதிகளில் செலுத்தப்பட்டு குழிவு ஏற்பட்டுள்ள இடங்களில் வைத்து நிரப்பப்படுகிறது. இச்சிகிச்சைக்கான செலவு சிறிது அதிகமானாலும், அடிக்கடி தேவைப்படுவதில்லை. குறுகிய கால சிகிச்சையே நல்ல பலனைத் தருகிறது.

இதை தொடர்ந்து அடுத்து பெறும்பாலான் மக்களின் குழப்பத்தை தீப்பதற்காக கண்தானம் பற்றி அடுத்த தொடரில் பார்போம். இது முக்கியமான சப்ஜக்ட் யாரும் படிக்க தவறவிடாதீர்கள்.
தொடரும்...
அதிரை மன்சூர்

மெளலவி அஹமதுல்லா ஷாவின் தலைக்கு விலை ! 17

அதிரைநிருபர் பதிப்பகம் | January 25, 2014 | , ,

தொடர் - 15
மாட்சிமை தங்கிய பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அறிவிக்கப்படும்  பொது அறிவிப்பு என்ன வென்றால், இந்த ஆட்சியை எதிர்த்து கிளர்ச்சிகளைத் தூண்டிவிடும் “மெளலவி” என்று அழைக்கப்படும் மெளலவி அஹமதுல்லா ஷா வை உயிருடன் பிடித்து அருகில் உள்ள பிரிட்டிஷ் இராணுவ நிலையத்திலோ முகாமிலோ ஒப்படைப்பவர்களுக்கு ரூபாய் 50,000/= பரிசாக வழங்கப்படும். அத்துடன் அவ்விதம் பிடித்துத் தருபவர்கள் இந்த அரசு இம்மாதம் முதல்தேதி வெளியிட்ட  பொது அறிவிப்பு எண் 476 – ல் கண்டுள்ள குற்றங்களை இழைக்காதவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு பொது மன்னிப்பும் வழங்கப்படும் “

The Imperial proclamation reads: "It is hereby notified that a reward of Rs.50,000 will be paid to any person who shall deliver alive, at any British Military post or camp, the rebel Moulvee Ahmed  Shah, commonly called "the Moulvee". It is further notified that, in addition to this reward, a free pardon will be given to any mutineer or deserter, or to any rebel, other than those named in the Government Proclamation No. 476 of the lst instant, who may so deliver up the said Moulvee"

என்று ஒரு அறிவிப்பு நாடெங்கும் அறிவிக்கப்பட்டது. இப்படி தலைக்கு விலை வைக்கப்பட்ட மெளலவி யார் ? இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அவரது தியாக வரலாற்றின் சோகம் சொட்டும் கதை என்ன? இது ஒரு சூடான ரத்தம் சொட்டிய கதை! ஒரு மாவீரனுக்கு ஏற்பட்ட வதை!

மெளலவி அஹமதுல்லா ஷா!

அவருடைய தந்தை உத்தரப்பிரதேசத்தின் பைசாபாத் (பாபர் மசூதி இருக்கும் அயோத்தியின் அருகில் உள்ளது)  நகரில் இருந்து வணிக நிமித்தமாக சென்னையில் குடி இருந்த போது வீரமிக்க இந்த மெளலவி அவர்களை பிறத்தாட்டும்  பெருமையை  அன்றைய மதராஸ் பட்டணம் (சென்னை) பெற்றுக் கொண்டது. இப்படி சென்னையில் பிறந்து உத்தரப் பிரதேசத்தில் வளர்ந்தவர். மேலே காட்டப்பட்டுள்ள பொது அறிவிப்பே,   மெளலவி அஹமதுல்லாஹ் ஷா அவர்கள் எந்த அளவுக்கு அந்நிய ஆதிக்க சக்தியை எதிர்த்து அவர்களின் பூனைக் கண்களில் தனது விரலை விட்டு ஆட்டிப் போராடி இருப்பார்   என்பதை நமக்குப் புரியவைக்கும்.  எந்த அளவுக்கென்றால் இந்து மகா சபையின் நிறுவனர் போன்ற பிற  மதத்தவரும் கூட  புகழ்ந்து தள்ளும் வண்ணம் மெளலவி அவர்களின் தியாக வரலாறு நிமிர்ந்து நின்றது.

” His actions and deeds, before and during the revolt, extracted praise even from Vinayak Damodar Savarkar. "The life of this brave Mohammadan shows that a rational faith in the doctrines of Islam is in no way inconsistent with or antagonistic to, a deep and all-powerful love of the Indian soil," wrote Savarkar. இதோ விநாயக் தாமோதர சவர்க்காரே  கூறுகிறார் “ இந்த முஸ்லிமின் வாழ்க்கை  எடுத்துக் கூறுவது என்னவென்றால் ஒரு வீரம் செறிந்த – இந்த மண்ணின் மேல மாறாத அன்பு கொண்டவராக போராட,   இவர் பிறந்து வளர்ந்த கட்டுப்பாடுகள் நிறைந்த  இஸ்லாமிய மதம் என்றுமே ஒரு தடையாக இருந்ததில்லை. “ என்று கூறுகிறார்.

இந்தத் தொடரில் ஏற்கனவே பேகம் ஹஜரத் மஹால் அவர்களைப் பற்றி கண்டு இருக்கிறோம். பேகம் ஹஜரத் மஹால் நேபாளத்துக்கு தப்பிச் சென்ற பின்னர்  அவரது சாம்ராஜ்ஜியமான  அவாத் ஆங்கில ராஜ்ஜியங்களுடன் இணைக்கப்பட்டது. அவ்வாறு இணைக்கப் பட்டவற்றுள், பைசாபாத் அருகில் ஒரு தாலுகாவை ஆண்ட மெளலவி அஹமதுல்லாஹ் ஷாவின் தாலுகாவும் ஒன்று. இப்படி தனது தாய் மண்ணை அந்நியர்கள் ஆக்கிரமிப்பதை எதிர்த்து அன்று தொடங்கிய  மெளலவி அஹமதுல்லாஹ் ஷாவின் போராட்டம், 1858 ஆம் ஆண்டு, ஜூன் மாதம்  5 ஆம் தேதி நம்பவைத்துக் கழுத்தறுக்கப்பட்டு அவரது தலை துண்டிக்கபட்ட தினம் வரைத் தொடர்ந்தது.

மெளலவி அஹமதுல்லாஹ் ஷா அவர்களைப் போலவே ஆட்சி பறிக்கப்பட்ட பலர்  ஆமாம் சாமி போட்டுக் கொண்டு ஆங்கிலேயர் விரட்டிய ஆட்டுமந்தைகளாக மாறிப்போன நேரத்தில் தன்னை ஆட்சி இழக்கச் செய்த ஆங்கிலேயரைப் பற்றி நாடெங்கும் சுற்றி இரகசியப் பிரச்சாரம் செய்தார். இதுவே அவரது வாழ்வின் குறிக்கோளாகத் திகழ்ந்தது. ஒரு பக்கீர் போல வேஷமிட்டுக்கொண்டு ஆக்ரா, டில்லி, மீரட், பாட்னா, கல்கத்தா  உள்ளிட்ட  பல பெரு நகரங்களுக்குச் சென்று புரட்சிக்காக மறைமுகப் பிரச்சாரம் செய்தார். இதற்காக இவர் கையாண்ட யுக்தி “சப்பாத்தித்  திட்டம்” என்று வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது.

ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் மக்களை மனத்தளவில் தயாராக்க, ஆர்ப்பாட்டமின்றி  அமைதியாக தனித்தனியே மக்களை சந்திக்கும் திட்டத்துக்கு கை கொடுத்தது சப்பாத்தித் திட்டம்.  ஒரு கையை விட்டு மறுகைக்கு சப்பாத்தி கை மாறும்போது கூடவே புரட்சிக்கான தகவலும் பரிமாறப்படும். புரட்சியின் அவசியத்தை வலியுறுத்திய துண்டுப் பிரசுரங்களும் பரிமாறப்படும்.  வட இந்திய மக்களிடம்  எதிர்பாராத அளவில் எழுச்சியை ஏற்படுத்தியது இத்திட்டம் என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். "Wherever this political saint went there was seen an extraordinary awakening among the people… He was loved by the masses in Oudh" என்று குறிப்பிடப்படுகிறது.

மெளலவி அஹமதுல்லாஹ் ஷா அவர்கள் எந்த அளவு உணர்வுமிக்க வீரராக இருந்தாரோ அந்த அளவு உணர்ச்சிகள கொப்பளித்து கிளம்பும் அளவுக்கு எழுத்தும் திறமையும் பெற்றிருந்தார் என்பது சிறப்பு. அவரது பேனா முனையில் இருந்து தெறித்து விழுந்த தேசவுணர்வினைத் தூண்டும் வார்த்தைகளும் வாதங்களும் அந்நிய சக்திகளுக்கெதிராக மக்களை ஜாதி மத வித்தியாசமின்றி ஒன்றிணைத்தன. மெளலவி அஹமதுல்லாஹ் ஷா அவர்களின் இந்த நடவடிக்கை ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளருக்கு தாங்க முடியாத தலைவலியாக மாறியது. கண்ட இடத்தில் கைது செய்யும்படி உத்தரவிடப் பட்டு கைது செய்யப்பட்டார். அவர் மேல் ஒரு கண்துடைப்பு வழக்கு  விசாரணை நடத்தப் பட்டு பைசாபாத் சிறையில் அடைத்துப் பின் அவரை தூக்கிலிடவும்  உத்தரவிடப் பட்டது. ஆனால் அரசு அன்று கொல்லும் இறைவன் நின்று கொல்வான் என்பதற்கு ஏற்ப மெளலவி அஹமதுல்லாஹ் ஷா அவர்களின் ஆயுள் இன்னும் இந்த உலகில் இருப்பதற்கு விதித்திருந்த இறைவன் சிப்பாய் கலகத்தின் மூலம் அந்த சிறப்பை நல்கினான்.

சிப்பாய் கலகத்தின் ஒரு அங்கமாக சிறைகள் உடைபட்டன. மன்னர் பகதூர்ஷா மற்றும் பேகம் ஹஜரத் மஹால் ஆகியோர் முன்னின்று நடத்திய சிப்பாய் கலகத்தின் சிறை உடைப்புகளுக்கு மெளலவி அஹமதுல்லாஹ் ஷா அவர்கள் அடைபட்டு இருந்த பைசாபாத் சிறையும் தப்பவில்லை. சிறையில் இறந்து பறந்து சென்ற சிறைப் பறவை பேகம் ஹஜரத் மஹால் இடம் அடைக்கலமானது. பேகத்தின் படைப் பிரிவுக்கு மெளலவி அஹமதுல்லாஹ் ஷா அவர்கள் தலைமை தாங்கி ஆங்கிலப் படைகளை சிதற அடித்தார்.

லக்னோவில் சர் ஜேம்ஸ் அவுட்ராம் உடைய தளங்களின் மீது கடும் தாக்குதல்களைத் தொடுத்தார். ஆலம்பாக்கில் உள்ள பிரிட்டிஷ் ராணுவ வீரர்களுக்கு கான்பூரில் இருந்து ஆயுதங்கள் கொண்டு செல்வதை மெளலவி அஹமதுல்லாஹ் ஷா அறிந்துகொண்டார். அந்த ஆயதங்களை எப்படியும் தடுத்து நிறுத்திக் கைப்பற்ற வேண்டுமென்ற நோக்கத்துடன் 1858 ஆம் ஆண்டு ஜனவரி,  15 ஆம் நாள் கான்பூரை  நோக்கித் தனது படையை நடத்தினார்.  ஆங்கில மேஜரின் படை உத்வேகத்துடன் வந்த மெளலவி அஹமதுல்லாஹ் ஷா அவர்களின் படையால் தடுக்கப் பட்டது. இரு தரப்புக்கும் போர் மூண்டது. அந்தப் போரில் மெளலவி அஹமதுல்லாஹ் ஷா அவர்களின் கையில் தோட்டா பாய்ந்து காயம் அடைந்தார்.

காயம் அடைந்தாலும் ஏற்கனவே தூக்கு தண்டனை விதிக்கப் பட்டவர் என்பதால்  துரோகிகளின் கைகளில் சிக்கிவிடாமல் பாதுகாப்பாக ஒரு வண்டியில் வைத்து அவரது விசுவாசமிக்க வீரர்களால் லக்னோவுக்குக் கொண்டு வரப்பட்டார். கையில் காயம் பட்டாலும் சிங்கத்தால் கூண்டுக்குள் உறங்க இயலவில்லை. பிப்ரவரி 15 அன்று மீண்டும் போர்முனைக்கு வந்துவிட்டார். கான்பூரில் இருந்த மேஜர் அவுட்ராம் உடைய படைகள் இருந்த பகுதிக்கு ஆங்கிலப் படைத்தளபதி கோலின் வர இருப்பதாக ஒரு தகவல் அவருக்குக் கிடைத்தது. கோலின் வந்து சேரும் முன்பு அவுட்ராமை ஒழித்துவிடவேண்டுமென்று ஒற்றைத் திட்டத்துடன் தன் தாக்குதலைத் தொடர்ந்தார். ஆனால் மெளலவி அஹமதுல்லாஹ் ஷா அவர்களின் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. மெளலவி அஹமதுல்லாஹ் ஷா அவர்களை அங்கு வைத்து கைது  செய்ய ஆங்கிலேயருக்கு  ஒரு வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால் அதிலிருந்தும் போக்குக் காட்டிவிட்டு ,  பாரி  என்ற இடத்துக்கு யாருமறியாவண்ணம்  தப்பினார்.

இப்படி கூட்டில்  இருந்த இந்தக் குருவி கொய்யாக்குப் போனது - கொய்யாக்கு வரலே வேற எங்கே போனது என்று ஆங்கிலேயர்கள் தலையை உடைத்துக் கொண்டார்கள்.  அந்தக் குருவி ஆலமரம் போனதா - அல்லது அரசமரம் போனதா என்று குழம்பிக் கொண்டிருந்தார்கள்.

தொடர்ந்து, மெளலவி அஹமதுல்லாஹ் ஷா அவர்களின் மாறுபட்ட  திட்டங்களும்  அவர் தலைமையில் படைகள் தாக்கும் போர் யுக்திகளும்  ஆங்கிலேயரை அலற வைத்தன. அவர்களது படைத்திட்டத்தில் பல சிக்கல்களையும் எப்படி எதிர்கொண்டு மேற்செல்வது என்ற குழப்பத்தையும் ஏற்படுத்தியதால் பரங்கியர்கள் தங்களின் தலைகளைப் பிய்த்துக் கொண்டார்கள். இதனால்தான்  ஆங்கில வரலாற்றாசிரியர் ஹோம்ஸ் இவரைப் புகழ்ந்து குறிப்பிடும்போது “மெளலவி அஹமதுல்லாஹ் ஷா அளவிடமுடியாத சாமர்த்தியமும் உத்வேகமும் அமையப் பெற்றவராக  இருக்கிறார். ஓர் உயர்ந்த இலட்சியத்துக்காக போராடும் ஆற்றல் படைத்தவர் என்பதை நிருபிக்கும் இவர் ஒரு பெரும் இராணுவத்தையே வழிநடத்தும் வல்லமை பெற்றவர்” என்று குறிப்பிடுகிறார். நாம் இந்தத் தொடரின் தொடக்கத்தில்  குறிப்பிட்ட பொது அறிவிப்பு இந்தக் காலகட்டத்தில்தான் ஆங்கிலேயரால் அறிவிப்புச் செய்யப்பட்டது. எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் இந்த சுதந்திர வேட்கை கொண்ட புலி ஆங்கிலேயரின் எந்தப் பொறியிலும் சிக்காமல் அவர்களுக்கு உறங்காத இரவுகளை பரிசாக அளித்தது.

அயோத்தி பகுதியில் பாவன் என்ற சிற்றரசு இருந்தது, இதை ஆண்டு கொண்டிருந்தவர் ஜகன்னாத சிங்  என்பவராவார். இந்த மன்னர் ஜகன்னாத சிங் மெளலானா அவர்களுக்கு தனது அரண்மனைக்கு விருந்தினராக வரும்படி இரகசிய அழைப்புகள் அனுப்பிக் கொண்டு இருந்தார். இப்போது இருக்கும் சூழ்நிலையில் பாவன் அரசரின் ஆதரவு தனக்கு இருந்தால் நல்லது என்ற நல்ல எண்ணத்தோடும் நன்னம்பிக்கையோடும் ஒரு போர் யானையின் மீதேறி மெளலவி அஹமதுல்லாஹ் ஷா அவர்கள் அவரை நோக்கிச்  சென்றார்கள். ஆனால் அந்த அழைப்பின் பின்னணியில் சூழ்ச்சிவலை விரிக்கப் பட்டிருந்த விபரத்தை மெளலவி அஹமதுல்லாஹ் ஷா அறியவில்லை. மெளலானா பயணம் செய்த யானை பாவண் நாட்டு அரண்மனையின் கோட்டைக்குள் நுழைந்தது.

யானையின் மீது வந்த மெளலவி அஹமதுல்லாஹ் ஷா அவர்களைப் பார்த்ததும் கோட்டைக் கதவுகள் மூடப்பட்டன. கோட்டைச் சுவர்களின் மீது காவலர்கள் புடை சூழ மன்னர்  ஜகன்னாத சிங் நின்று கொண்டிருந்தார். மெளலவி அஹமதுல்லாஹ் ஷா அவர்களுக்கு ஏதோ ஒரு சந்தேகப் பொறி தட்டியது. சதிவலையில் அகப்பட்டுக் கொண்டோமோ என்று எண்ணி அதை உணர்ந்து உடனே தப்பிக்க வேண்டுமென்று தனது  யானைப் பாகனை உடனே உஷார்ப்படுத்தி மூடப்பட்ட கோட்டையின் கதவுகளை யானையின் தலையைக் கொண்டு மோதித் திறக்க முயற்சி செய்தார். ஆனால் இறைவனின் கட்டளை வேறுவிதமாக இருந்தது. முயற்சி முழுமை அடையும் முன்பு,   ராஜாவின் தம்பி பலதேவ் சிங் உடைய கரங்களில் இருந்த துப்பாக்கியில் இருந்து பறந்து வந்த குண்டுகள்  மெளலவி அஹமதுல்லாஹ் ஷா அவர்களின் வீர உடலை சல்லடையாக்கியது.  குண்டுகளை மார்பில் தாங்கிக் கொண்டே  லாயிலாஹா  இல்லல்லாஹ் என்று முழங்கிய வண்ணம் மண்ணில் வீழ்ந்தார் மெளலவி அஹமதுல்லாஹ் ஷா.

ஆங்கிலேயர் அறிவித்து இருந்த ஐம்பதினாயிரம் ரூபாய்க்காக ஆசைப்பட்ட ஒரு அரக்கக் கூட்டம் அந்நிய ஆக்கிரமிப்பாளருடன் கை கோர்த்து ஒரு வீரமகனை ஆசை காட்டி மோசம்  செய்து சுட்டு வீழ்த்தியது.  அது மட்டுமல்ல, வீழ்ந்து கிடந்த வீரமரணம் அடைந்த மெளலவி அஹமதுல்லாஹ் ஷா அவர்களின் தலையை மட்டும் தனியாக வெட்டி தங்களின் கைகளில் எடுத்துக் கொண்டு அங்கிருந்து 13  மைல் தூரத்தில் முகாமிட்டு இருந்த ஆங்கிலேய அரக்கர்களிடம் ஓடினர் இந்த ஓநாய்கள்.

தாங்கள் வலைவீசித் தேடிக் கொண்டிருந்தவரின் தலை,  தங்களின் கரங்களில் தரப் பட்டபோது ஆங்கிலேயர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கொடுமையிலும் கொடுமையாக அந்த வீரமகனின் தலையை ஒரு கம்பில் குத்தி, ஒரு காவல் நிலையத்தின் வாசலில் நாலு பேர் கூடி நின்று  பார்க்கும்படி நட்டு வைத்தனர். இதன்மூலம், இத்தனை நாள் தாங்கள் பட்ட அவமானத்துக்கு ஆறுதல் தேடிக் கொண்டனர். இந்தப் பாவிகளின் கொடூரம் இத்துடன் நிற்கவில்லை. மார்க்கம் படித்த  மெளலவி அஹமதுல்லாஹ் ஷா அவர்களின் எஞ்சிய உடலை துண்டு  துண்டாக வெட்டி, தீயில் இட்டுப் பொசுக்கினார்கள்.  

தான் பிறந்த நாட்டின் சுதந்திரத்துக்காக போராடி தனது தலையை இழந்த ஒரு மார்க்க மேதையின் உடல் அடக்கம் கூட அவர் கடைப் பிடித்த மார்க்கத்தின் நெறிமுறைப் படி  நடத்தக் கூட  முடியாத அளவுக்கு கொடுமை  கோபுரத்தின் உச்சியில் ஏறிக் கொண்டு கோலோச்சியது. அல்லாஹ் அந்தப் பாவிகளுக்கு உரிய தண்டனையை வழங்கப் போதுமானவன். ஆனாலும் எஞ்சி இருந்த தலை மட்டும் அஹமத்பூர் ஜகான் ஆசாத் மஹல்லாவில்  நல்லடக்கம் செய்யப்பட்டது. இதைப் போல தலை மட்டுமே அடக்கம் செய்யப் படும் நிலைக்குத் தள்ளப் பட்டவர்கள் வரலாற்றில் வேறு யாரும் உலகின் எந்த மூலையிலும் இருந்தது உண்டா?

ஆங்கிலேயர் அறிவித்தபடியும் தங்களுக்கு விசுவாசமாக நடந்து கொண்டதையும் பாராட்டி ராஜா ஜகன்னாத சிங் என்கிற காட்டிக் கொடுத்த கருப்பு ஆட்டுக்கு  ஆங்கில அரசு 50,000/= ரூபாய் வெகுமதியை விழா எடுத்துக் கொண்டாடி கொடுத்தது. ஒரு தனி மனிதனுடைய தலைக்கு இதுவரை இவ்வளவு பெரும் தொகை அன்றைய காலகட்டத்தில்,  விலையாகக் கொடுக்கப் படவில்லை என்று வரலாறு வருத்தத்துடன் குறித்து வைத்து இருக்கிறது.

மெளலவி அஹமதுல்லாஹ் ஷா அவர்களின் கொடுமையான கொலையை விவரிக்கின்ற அதே ஆங்கிலப் படைத் தளபதிகளுள் ஒருவராகிய மனசாட்சி படைத்த  மலிசன் (George Bruce Malleson (8 May 1825 – 1 March 1898) was an English officer in India and an author) அவர்கள் இதைக் குறிப்பிடும்போது, “ஒரு உறுதியான  நாட்டுப் பற்றுடைய வீரன் தனது நாட்டில் அத்துமீறி புகுந்து அடக்கியாளும் அந்நிய சக்திகளை எதிர்த்து திட்டம் தீட்டி போரிட்ட காரணத்தால் துரோகிகளின் கரங்களால் சதி செய்யபப்ட்டு கொல்லப் படுவானாகில் அப்படிக் கொல்லப் படுபவன்தான் உண்மையான நாட்டுப் பற்றுடையவன். அப்படித்தான் மெளலவி அஹமதுல்லாஹ் ஷா கொல்லப்பட்டார் “ என்று பொருள்பட  விவரித்து வியந்து புகழ்மொழிகளைப் பொழிகிறார்.

"Thus died the Moulvee Ahmed Oolah Shah of Faizabad. If a patriot is a man who plots and fights for the independence, wrongfully destroyed, for his native country, then most certainly, the Moulvee was a true patriot," wrote Malleson.

He had not stained his sword by assassination; he had connived at no murders; he had fought manfully, honourably, and stubbornly in the field against the strangers who had seized his country; and his memory is entitled to the respects of the brave and true hearted of all the nations.

மெளலவி அஹமதுல்லாஹ் ஷா அவர்களின் மறுமை வாழ்வை எல்லாம் வல்ல இறைவன் வளப்படுத்தி வழங்குவானாக!
இன்ஷா அல்லாஹ் தொடரும்.
------------------------------------------------------------------------------------
எழுத உதவியவை : தியாகத்தின் நிறம் பச்சை- பேராசிரியர் மு. அப்துல் சமது . 
எரிமலை- வி. டி. சவர்க்கர்
History of the Indian Mutiny  -1857- 80.  George Bruce Malleson.
------------------------------------------------------------------------------------
இபுராஹீம் அன்சாரி

நேற்று! இன்று ! நாளை! – தொடர் 26 26

அதிரைநிருபர் பதிப்பகம் | January 23, 2014 | , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும். 

அன்பான சகோதரர்களே! தொடரின் ஆரம்பமாக, இந்தத் தொடரை கடந்த இருபத்தி ஐந்து வாரங்களாகப் படித்துவரும் உங்கள் அனைவருக்கும் ஜசாக் அல்லாஹ் ஹைரன். நெஞ்சார்ந்த நன்றி. தொடரலாம். 

அனைத்துக் கட்சிகளின் சார்பாக இப்படி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டால் எப்படி இருக்கும் ?

காங்கிரஸ்: அய்யாங்கோ! அம்மாங்கோ! எங்க பஜாருக்கு வாங்க! ஒன்று எடுத்தால் இன்னொன்று இனாம்! எங்களோடு கூட்டணி அமைக்க வாங்க! கொலைகார பஜாருக்குப் போய் கூட்டணி அமைக்காதீங்க! எங்க கட்சி நூறாண்டுகள் கடந்த கட்சி! அறுபத்தி அஞ்சு வருஷம் ஆண்டிருக்கோம். காந்தியும் நேரும் இருந்த கட்சி. மவுலானா அபுல் கலாம் ஆசாத் தலைமை ஏற்ற கட்சி! நாற்பத்திமூனு வயது இளைஞர் ராகுல் காந்தி தலைமையில் வாங்க! வாங்க! உட்கார்ந்து பேசலாம். முதுகுக்கு முட்டுக் கொடுக்க தலையணைகள் உள்ளன. 


பா .ஜ. க : மாதாஜி! பாபாஜி! ஆவோ ஜல்தி! ஒண்ணா இருந்து கூடிப் பேசி கூட்டணி அமைக்கலாம். ஊழல காங்கிரஸ் பக்கம் போகாதீங்க. எங்க பக்கம்தான் உங்களுக்கு நல்ல டீ கிடைக்கும். எடியூரப்பா இருக்கிறார் என்று கவலை வேண்டாம். நீங்கள் எங்களுடன் கூட்டணி சேர்ந்தால் எலும்புக் கூடு மாலை போட்டு வரவேற்போம். சிட்பண்டு நடத்தி எப்படி தப்பிப்பது என்று சொல்லித் தருவோம். வாங்க! வாங்க! (இரண்டாவது வாங்க என்பதற்கு வேறு அர்த்தம் உண்டு அது நாங்கள் பெரிய கம்பெனிகளில் இருந்து கணக்கில் காட்டப்படாமல் நாங்க வாங்கும் தொகையிலிருந்து உங்களுக்கும் தரப்படும்!) 


உதிரிக் கட்சிகள் : இவ்வளவு நாள் காங்கிரசும் பிஜேபி யும் ஆண்டது போதாதா? மக்கள் மாண்டது போதாதா? வாங்க! வாங்க! மூன்றாவதாக நாம் கூட்டணி அமைப்போம். நம்ம கூட முலாயம் சிங் யாதவும் மாயாவதியும் கருணாநிதியும் ஜெயலலிதாவும் லல்லுவும் நிதிஷ் குமாரும் மம்தாவும் ஜெகன்மோகனும் சந்திரபாபு நாயுடுவும் இருக்காங்க! இவர்கள் எல்லோரும் ஒருத்தரை ஒருத்தருக்குப் பிடிக்காது என்று கவலை வேண்டாம். எல்லோருக்கும் பிடிக்கும் ஒரு "வஸ்து" பத்திரமாக "பெட்டி"யில் இருக்கிறது. வேண்டுமானால் விஜயகாந்த் இருக்கவே இருக்கிறார். வாங்க! வாங்க!

கம்யூனிஸ்டுகள்: வாருங்கள் தோழர்களே! ஊழற்ற ஆட்சியை இந்தியாவில் அமைப்போம் ! ஜெயலலிதாவை பிரதமாராக்குவோம். பெங்களூரை மறப்போம்! திரிபுராவை மறப்போம்! கேரளத்தை மறப்போம்! மேற்கு வங்கத்தை மறப்போம்! புத்ததேவ் பட்டாச்சார்யாவும் அச்சுதாநந்தனும் நமக்கு வேண்டாம்! போயஸ் தோட்டத்தை நினைப்போம்!

=)0(==)0(==)0(==)0(==)0(==)0(==)0(==)0(==)0(==)0(==)0(==)0(==)0(==)0(=

இவைகளப் பார்த்த படித்த மக்கள்: அஞ்சு வருஷத்துக்கு ஒரு தடவை வர்ற திருவிழா வருது! கொஞ்சம் பணம் வரும் . நாலஞ்சு நாளக்கி பிரியாணிப் பொட்டலம் வரும். எல்லாரும் ஜனநாயகத்தைக் கூறு போட ஆரம்பிச்சிட்டாங்க. அகப்பட்டது மிச்சம். யாரு துட்டு கூடுதலாக் கொடுக்குறாங்க்களோ அவங்களுக்குப் போட்டுட வேண்டியதுதான். 

பார்த்தீர்களா இன்றைய ஜனநாயகத்தின் தலைவிதியை? ஜனநாயகம் என்கிற உயர்ந்த தத்துவம் என்கிற பூமாலை அரசியல் அளப்பறை என்கிற குரங்குகளின் கைகளில் . கொள்கை வேண்டாம், ஒத்த கருத்துக் கூட வேண்டாம் ஆனால் கூட்டணியாகச் சேரலாம் என்கிற தத்துவம் . அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது நிரந்தப் பகைவனும் கிடையாது என்று வசதிக்கு ஏற்ப ஒரு தத்துவம் . ஜனநாயகம் என்கிற குதிரையை குரங்காக்கும் தத்துவம். அதற்கு அடுத்த தத்துவம் கொச்சை மொழியில் கவுண்டமணி பாஷையில் “ இதெல்லாம் சகஜமப்பா”. மிஞ்சிப் போனால் உயர்ந்த பட்ச தத்துவம் அரசியல் ஒரு சாக்கடை என்று யாரோ ஒரு மேல்நாட்டு அறிஞன் சொன்னது.

ஹோட்டலில் சாப்பிடப் போனால் வாழை இலையில் கூட்டு வைப்பார்கள். ஆங்கில் காய்கறிகளும் நாட்டுப் புறக் காய்கறிகளும் ஒன்றோடு ஒன்று சம்பந்தமில்லாமல் இருந்தாலும் சமைக்க வசதியாக இருக்கும். சாப்பிடவும் சுவையாக இருக்கும். இந்த ஹோட்டல் கூட்டு, உணவுக்கு ருசியானது. ஆனால் இந்த அரசியல்வாதிகளின் கூத்து அதாவது கூட்டணி நாட்டுக்கு நலமானதா? ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கி அரசியலை பலகீனமாக்கி, அசிங்கத்தை அனைத்துக் கட்சியினரும் இன்னும் அசிங்கப் படுத்தியே வருகிறார்கள். தாமும் தமது சந்ததிகளும் பிழைக்க, அடாதுடி செய்தாவது ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துவிடவேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டு காய்களை நகர்த்தி வருகின்றனர். 

அன்பர்களே! இன்றைய அரசியல் நிலையில் வரும் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது – தனியாக ஆட்சி அமைக்க முடியாது என்கிற சூழ்நிலையில் “பண்ணைக் கட்சிகள்” என்று அழைக்கப்படுகிற பெரிய கட்சிகள் உதிரிப் பூக்களை தாங்கள் அமைக்கும் கூட்டணி மாலையில் கதம்பமாக சேர்ந்து கொள்ளும்படி அழைக்கின்றன. அதற்கான விலையை அவர்கள் தரவும் இவர்கள் பெறவும் தயாராகி இருக்கின்றனர். 

சிறிய கட்சிகளோ, வந்த வாய்ப்பையும் அத்துடன் வரும் பெட்டியையும் விட்டுவிடக் கூடாது என்று உடனே ஒப்புக் கொண்டுவிடுகின்றனர். இதற்கு உதாரணம் பிஜேபி யுடன் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி அறிவிப்பு. இவ்விரு கட்சிகளும் கூட்டணி சேர்வது தென்னை மரத்தில் தேங்காய் காய்ப்பதற்கு பதில் தேள் காய் காய்ப்பதற்கு ஒப்பானது. இதற்கு முன் திராவிட முன்னேற்றக் கழகம் பிஜேபியுடன் சேரவில்லையா என்று ஒரு கேள்வி நமக்குள் எழலாம். ஆனால் அன்றைக்கு ஒரு குறைந்த பட்ச செயல்திட்டம் வகுக்கப் பட்டது. அதன்படி இராமர் கோயில் அது இது என்று மூச்சுக்கூட விடமுடியாமல் இருந்தது. 

இன்று மதிமுக பிஜேபியுடன் சேர்வதற்காக எந்த சேது சமுத்திரத்திட்டத்துக்காக பல முறை குரல் கொடுத்து முன்னாள் பிரதமர் வாஜ்பாயிடம் எடுத்துச் சொல்லி அந்தத் திட்டம் துவங்க உறுதுணையாக இருந்த வைகோ தான் பெற்ற அந்தப் பிள்ளையை வங்காள விரிகுடாவில் வைத்துக் கழுத்தறுத்துக் கொலை செய்து இந்தக் கூட்டணியில் இணைந்துள்ளார். அதுமட்டுமல்ல தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் காரணமாக ஏற்படும் சுற்றுச் சூழல் கேடுகளை எதிர்த்து பல போராட்டங்களை நடத்தியவர் வைகோ. இன்று வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு வாயடைத்துப் போயிருப்பதாக பேசிக் கொள்கிறார்கள். 

மேலும் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தமிழர்களுக்கு எதிராகப் பேசிவந்த பிஜேபியின் முக்கிய தலைவர் சுப்ரணியன் சுவாமி. தமிழர்களைக் கொன்ற ராஜபக்சேக்கு பாரத ரத்னா வழங்க வேண்டுமென்றும் பேசியவர் . வைகோ எப்படி யாருமறியா வண்ணம் யாழ்ப்பாணம் சென்று பிரபாகரனை சந்தித்து வந்தாரோ, அப்படி சுப்ரமணிய சுவாமியும் சென்று ராஜபக்சேயுடன் கலந்துரையாடிவிட்டு வந்தவர். அப்படிப்பட்ட சுவாமி முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருக்கும் பிஜேபியுடன் , பிரபாகரன் இன்னும் உயிரோடு இருக்கிறார் வரவேண்டிய நேரத்தில் வருவார் என்று “கேப்பையிலே நெய்வடியும்” கருத்துக்களை காய்ச்சித் தந்து கொண்டிருக்கும் வைகோ கூட்டணி சேர்ந்து இருக்கிறார். 

இதில் இன்னொரு முக்கிய விஷயம் மதிமுக வும் பாட்டாளி மக்கள் கட்சியும் தேச விரோதக் கட்சிகள் அதனுடன் கூட்டணி வைப்பது கூடாது என்று சுப்ரமணியம் சுவாமி சொல்வதையும் மீறி தமிழக பிஜேபி தலைவர் பொன். ராதா கிருஷ்ணன் , மதிமுகவுடன் கூட்டணி உறுதியாகிவிட்டது என்று அறிக்கைவிடுகிறார். வைகோ அதை ஆமாம் என்கிறார். அநேகமாக முதன்முதலில் அறிவிக்கப் பட்ட கூட்டணி இதுதான். விந்தையிலும் பெரிய விந்தையடி சிந்திக்க முடியாத எங்குமே காணாத விந்தையிலும் பெரிய விந்தையடி என்று பழைய பாடல் ஒன்று உண்டு. அதுதான் இது.

இது ஒரு பக்கம் . இன்னொரு பக்கம் என்ன வென்றால் கம்யூனிஸ்டுகள் சொல்லும் கதை இருக்கிறதே அது அரபியனின் ஆயிரத்தொரு இரவுகளின் கதைகளையும் விக்கிரமாதித்தன் கதைகளையும் விஞ்சிவிடும். அதாவது ஜெயலலிதா தான் அடுத்த பிரதமராக வரவேண்டுமென்பது தமிழக கம்யூனிஸ்டுகள் ஊடகங்கள் எங்கும் முழங்கி வரும் முழக்கமாகும். ஆனால் அகில இந்திய கம்யூனிஸ்டுகளின் தலைவரான பிரசாந்த் கரந்தோ அல்லது சீதாராம் யச்சூறியோ இதைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் மூன்றாவதாக ஒரு அணி அமையும் அதுவே ஆட்சியையும் அமைக்குமென்று சொல்கிறார்கள். தமிழக கம்யூனிஸ்டுகள் ஜெயலலிதா அடுத்த பிரதமாராக வரவேண்டுமென்று சொல்வது ஏனென்றால் அவர்களின் கருத்துப்படி, காங்கிரஸ் ஆட்சி ஊழல் மிகுந்த ஆட்சியாகிவிட்டது- அந்நிய முதலீடுகளுக்கு வழி திறந்து விட்டது–விலைவாசி ஏறிவிட்டது – ஆகவே காங்கிரஸ் ஆட்சி தொலைய வேண்டுமென்று கூறுகிறார்கள். ஒப்புக்கொள்ளப்பட வேண்டிய வாதம்தான். ஆனால் ஊழல் மிகுந்த காங்கிரஸ் ஆட்சியை நீக்கிவிட்டு அதற்கு பதில் அவர்கள் கொண்டுவர வேண்டுமென்று நினைப்பது யாருடைய ஆட்சியை? ஒரு ரூபாய் சம்பளத்திலேயே அறுபத்து ஆறு கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக வழக்கு நடைபெற்று – வருடக் கணக்காக இழுத்தடிக்கப்பட்டு தீர்ப்புக்காக காத்து இருக்கும் அம்மையார் ஜெயலலிதாவை அல்லவா?

மன்மோகன் சிங்குக்குஅல்லது காங்கிரஸ் கட்சிக்கு மற்றும் மோடிக்கு எதிராக ஒரு மாற்றுப் பிரதமரை கொண்டுவரவேண்டுமென்று தமிழக கம்யூனிஸ்டுகள் நினைக்கும் பட்சத்தில் அவர்களின் நினைவுக்கு கேரளத்தின் அச்சுதனந்தனோ, பரதனோ, வங்காளத்தின் குருதாஸ் குப்தாவோ, புட்ட தேவ பட்டச்சரியாவோ, சீதாராம் யச்சூறியோ, பிருந்தா அல்லது பிரசாந்த் கரந்தோ நினைவுக்கு வராமல் போனது என்? அவர்களெல்லாம் அரசியலில் பழம் தின்று கோட்டை போட்டவர்கள் அல்லவா? கம்யூனிஸ்டுகளின் கண்ணை மறைப்பது எது? அதிமுக கூட்டணியால் கிடைக்கும் ஒரு இடம்தானே! அது கூட நிச்சயம் இல்லையே! ஆகவே இதுவும் ஒரு விந்தைக் கூட்டணி. ஆனால் இன்னும் அறிவிக்கப் படவில்லை. 

இந்திய நாட்டின் அரசியல் பலகீனப் பட்டதற்கு முதல் காரணம் காங்கிரஸ். இப்படிப் பட்ட பலகீனத்தை காங்கிரசுக்குத் தேடி வைத்தவர் இந்திரா காந்தி. உதாரணம் காமராசரை ஒழிக்க முதலில் திமுகவுடன் கூட்டு. பிறகு திமுகவை ஒடுக்க எம்ஜியார் காலத்தில் அதிமுகவுடன் கூட்டு. அதைத் தொடர்ந்தவர் ராஜீவ காந்தி பின் அவரது வம்சாவழிகள். 

இந்திய நாட்டின் அரசியல் பல்கீனப்பட்டதற்கு இரண்டாவது காரணம் பிஜேபி. உத்தரப் பிரதேசத்தில் மாயாவதியுடன் பார்ட்னர்ஷிப் ஆட்சி. பீகாரில் நிதிஷ் குமாருடன் பயமுறுத்தும் ஆட்சி என்றெல்லாம் பலவாறு சத்தீஸ்கர் , ஜார்கண்ட் போன்றவற்றில் பிஜேபி செய்த அரசியல், கடந்த காலங்களில் ஜனநாயகத்தை பயமுறுத்தும் அரசியல். 

நமது நாட்டின் அரசியலில் இன்று காங்கிரசின் பலம் என்ன? தென்னாட்டைப் பொருத்தவரை கேரளத்தில் விட்டது பாதி தொட்டது பாதி. கர்நாடகத்தில் தப்பிப் பிழைத்து எடியூரப்பா தயவால் மாநில ஆட்சியைப் பிடித்தது. இப்போது பிஜேபியின் மோடி முன்னிறுத்தப் படுவதன் சதிகளின் ஒரு அங்கமாக எடியூரப்பா மீண்டும் பிஜேபியுடன் இணைந்தது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். தலை தப்பினால் கர்நாடகத்தில் தம்பிரான் புண்ணியம். ஆந்திரத்தில் “ சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி “ என்கிற கதை. தெலுங்கானா அமைக்கிறேன் என்று புலிவாலைப் பிடித்த கதை. ஜெகன் மோகன் ரெட்டியை கைது செய்து பிறகு பேரம் பேசி வெளியில் விட்டு அவர் இன்று காங்கிரசுக்கு எதிராகப் போர்க்கொடி பிடித்து இருக்கிறார். தெலுங்கு தேசம் பிஜேபியுடன் பேசி வருகிறது. தெலுங்கு தேசக் கலவரத்தில் மத்திய அமைச்சராக இருந்த சிரஞ்சீவி ராஜினாமா செய்துவிட்டார். தமிழ்நாட்டில் நமக்கெல்லாம் தெரிந்த கதை. காங்கிரஸ் அனாதையாக விடப் பட்டு இருக்கிறது. 1967- ல் தோற்கடிக்கப்பட்ட காங்கிரஸ் நாற்பத்தியேழு ஆண்டுகளுக்குப் பின்பும் அரசியல் உலகில் அனாதையாக ஆனது மற்றொரு விந்தை. 

அதே நேரம் தென்னாட்டில் பிஜேபியின் நிலைக்கு ஒரு பெரிய சைபர் போடவேண்டும். கர்நாடகத்தில் ஆட்சியை மட்டுமல்ல ஆபாசமான நடத்தைகளால் அரசியல் மரியாதையும் இழந்துவிட்டது. கர்நாடகத்தைப் பொருத்தவரை பிஜேபிக்கு பாரதீய ஜல்சாப் பார்டி என்று பெயர் வைத்துவிட்டார்கள். ஆந்திரத்தில் இவர்கள் பெயருக்குப் போடும் கடிதம் முகவரியில் யாருமில்லை என்ற குறிப்புடன் திரும்பி வந்துவிடுகிறது. கேரளத்தில் பெயரை சொன்னாலே தலையைத் தொங்கப் போடுமளவுக்கு அங்கு கிருத்தவ மற்றும் முஸ்லிம்களின் சிறுபான்மையினரின் கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது. தமிழகத்தில் ஏதோ தங்களுக்குப் பெரும் ஆதரவு இருக்கிறது – மோடி அலை வீசுகிறது என்றெல்லாம் காசுக்கு ஆள் பிடித்துக் கூட்டம் கூட்டிக் காட்டி கோமாளி வேஷம் போட்டு உதிரிக்கட்சிகளை ஒரு கொள்கை இல்லாமல் கோட்பாடு இல்லாமல் உசுப்பிவிட்டுக் கொண்டு இருக்கிறது. மேடையில் மைக் பிடித்துப் பேசக்கூட ஆள் பிடிக்கவேண்டிய நிலை . ஆனால் கார்பரேட் முதலாளிகளின் தயவில் ஊடகங்களில் பேச்சுக்கள் பெரும் பேச்சுக்களாக இருக்கின்றன. மதுரை முனியாண்டி விலாசுக்குக் கூட ஊருக்கு ஊர் ஹோட்டல் இருக்கிறது பிஜேபிக்கு ஒரு பெட்டிக் கடை கூட இல்லை. தொலைக் காட்சிப் பெட்டியில் நடக்கும் விவாத அரங்கினில் சவுண்டு ராஜன்களின் சத்தம் போட்டும் வானதிகளின் வார்த்தைஜாலமும் ஏதோ இன்றே நரேந்திரமோடி பிரதமர் பதவியில் வந்து உட்கார்ந்துவிட்டதைப் போல அலறுகிறார்கள். இவையெல்லாம் அமெரிக்க டாலர்களின் அனுசரணையில் பத்திரிகைகளிலும் பல்லிளிக்கும் இதர விளம்பர ஊடகங்ளும் அரசியல் விளையாட்டு நடத்த உதவுமேயன்றி ஓட்டு வந்து விழாது.

மதிமுகவை மாய்மாலம் செய்த பிஜேபி பாமக மீது பாசமழை பொழிந்து வருகிறது. கொங்கு நாடு முன்னேற்றக் கட்சி மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சி என்கிற கடிதத்தாள் கட்சிகளையும் நோக்கி வலை வீசி இருக்கிறது. தேமுதிகவின் கடைக்கண் பார்வைக்குக் காத்துக் கிடக்கிறது. ஒரு தேசியக் கட்சி – நாட்டை ஆண்ட கட்சி இவை போன்ற வலைவீசித்தேடவேண்டிய நிலையில் இருக்கும் இந்திய ஜனநாயகக் கட்சி போன்ற கட்சிகளுக்கும் வலைவீசுவதற்கு பிஜெபிதான் வெட்கப் படவேண்டும். காரணம் கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவியைத்தூக்கி மனையில் வைக்க வேண்டுமென்ற ஆவல். நிராசையாகப் போக இருக்கும் நீர்க்குமிழி ஆசை. 

வடநாட்டை எடுத்துக் கொண்டால் காங்கிரசை நான்கு மாநிலங்கள் ஏற்கனவே சட்டமன்றத் தேர்தலில் “தலாக்” சொல்லிவிட்டன. காஷ்மீரில், இராணுவ அத்துமீறல்கள் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சிக் கூட்டணிக்கு எப்படி மீண்டும் வாக்கு கிடைக்கு மென்று புரியவில்லை. திரிபுரா, பீகார், மேற்கு வங்கம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், உத்தரப் பிரதேசம் , அசாம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் தனித்து நிற்கவே முடியாது. வலுவான கூட்டணி தேவை. இதே நிலைதான் பிஜேபிக்கும். 

கோவா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான் , அருணாசலப் பிரதேசம் , நாகாலாந்து , இமாச்சலம், டில்லி ஆகிய மாநிலங்களில் பிஜேபிக்கு சற்று வெற்றி கிட்ட வாய்ப்புண்டு. மஹாராட்டிரத்தில் சரத் பவாரை சார்ந்து இருந்தால் மட்டுமே காங்கிரசுக்கு ஓரளவு வாய்ப்பு உண்டு. உத்தரகாண்டத்தில் வாய்ப்புகள் சமநிலையாக இருக்குமென்று சொல்லப்படுகிறது. குஜராத்? வட்டிக்கடை அதிபர்களும் பெரும் முதலாளிகளும் கோடி கோடியாகப் பணமும் கொட்டிக் கிடக்கும் குஜராத்தில் – முஸ்லிம்களும் அஞ்சி முடங்கிக் கிடக்கும் நிலையில் – தனது மாநிலத்தவர் பிரதமர் என்ற உணர்வில பிஜேபி மீண்டும் வெற்றி பெறும்.

ஆக, கூட்டிக் கழித்துப் பார்த்தால் இரண்டு பெரிய கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்காது. மோடி பிரதமர் என்கிற பிஜேபியின் கனவு தவிடு பொடியாகும். டில்லி பஹூத் தூர் ஹை பாய் என்று நாடே சொல்லும். மதசார்பற்ற மாநிலக்கட்சிகளின் ஆதிக்கமே ஓங்கும். மத சார்பற்ற மாநிலக் கட்சிகள்ஆன மாயாவதியின் பி எஸ் பி, முலாயம் சிங்கின் சமாஜ்வாடி, உமர் பாரூக்கின் தேசிய மாநாடு, நிதிஷ் குமாரின் ஜனதா தளம், லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் , மம்தாவின் திருநாமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தேர்தலில் தாங்கள் தனித்து நின்றாலும் தேர்தலுக்குப் பிறகு காங்கிரசுக்கு ஆதரவு தரும் வாய்ப்பே அதிகம். கம்யூனிஸ்டுகள் கூட தேர்தலுக்குப் பிறகு ஒரு ஆட்சி அமைய வேண்டுமென்ற அடிப்படையில் பிஜேபிக்கு ஆதரவு தருவதைவிட காங்கிரசுக்கே குறைந்த பட்ச செயல் திட்டத்தில் வெளியில் இருந்து ஆதரவுதரும். 

ஆக ஒட்டு மொத்த இந்தியாவில் பிஜேபி மட்டும் தனது சொந்த பலத்தில் மட்டும் தனித்தே விடப்படும். அப்படி ஒரு நெருக்கடியில் ஆதரவுக் கரம் வருமென்றால் முன்பு சாப்பாடு போட்ட சகோதரியின் கரமாகவும் இருக்கலாம் அல்லது வழக்குகள் காரணமாக தமிழினத் தலைவரின் கரமாகவும் இருக்கலாம். 

சரி, நம்ம ஊர் “ பண்ணைக் கட்சி”களின் விஷயம் என்ன? இங்கு அதிமுக யாரோடும் கூட்டணி இல்லை என்று அறிவித்துவிட்டது. இப்போதே செலவு பண்ண ஆரம்பித்துவிட்டது என்று தமிழ்நாட்டின் சுவர்களைப் பார்த்தாலே தெரியும். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் திருஷ்டிக்கு பூசணிக்காய் வைக்கத்தேவை இல்லாத வேலைகளை இலவசமாக அதிமுக செய்து கொண்டு இருக்கிறது. பல தலித் அமைப்புகளும் சாதி அமைப்புகளும் அதிமுகவுக்கு கேளாமலேயே ஆதரவை அறிவித்து இருக்கின்றன. ஜெயலலிதாவால் ஏழரை லட்சம் தொண்டர்கள் உள்ள அமைப்பு என்று ஏற்கனவே “ஐஸ் “ வைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் ஜெயலலிதாவை அவ்வப்போது சந்தித்து மாதத்துக்கொரு திரு- குரான் கொடுத்து வரும் இந்திய தவ்ஹீத் ஜமாத்தும் அதிமுகவை ஆதரிக்க துரதிஷ்டவசமாக வாய்ப்புள்ளது.

திமுகவோ , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அறிவித்து இருக்கிறது. மேலும் தேமுதிகவின் இணைப்புக்கு ஆசைப்பட்டுக் கொண்டு இருக்கிறது. தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்தால் திமுக கூட்டணி வலுவாகும். 

அதே நேரம் தமிழ்நாட்டில் , இப்போது டில்லியில் புயலைக் கிளப்பிக் கொண்டு இருக்கும் ஆம் ஆத்மி கட்சியும் டில்லியின் புகழோடு தமிழ்நாட்டில் கால் ஊன்ற ஊருக்கு ஊர் அலுவலகத்துக்கு இடம் தேடி வருகிறது. நான்கு சதவீத வாக்களர்கள் இவர்களுக்கு இப்போது ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக ஒரு சர்வே சொல்கிறது. இதனால் இன்னும் முடிவு எடுக்காமல் மதில் மேல் பூனையாக உள்ள தேமுதிக ஆம் ஆத்மியுடன் கூட்டுச் சேரும் ஒரு முடிவு எடுத்தாலும் வியப்பில்லை என்று ஒரு கருத்தும் நிலவுகிறது. அப்படி தேமுதிக ஆம் ஆத்மியுடன் சேராவிட்டால் அந்தத் திண்ணையில் தான் உட்கார்ந்து தன்னை கங்கையில் மூழ்கியது போல புனிதப் படுத்திக் கொள்ளலாமா என்றும் பாட்டாளி மக்கள் கட்சி சிந்தித்து வருவதாகவும் தெரிகிறது. 

இன்னும் பல கூத்துக்களும் கொடுமைகளும் சதிகளும் பார்க்க இருக்கிறோம். அவற்றுள் தமிழக முஸ்லிம் சமுதாயம் தொடர்புடைய முக்கியமான அரசியல் முடிவு எதிர் வரும் ஜனவரி 28- ஆம் தேதி தெரிந்த பிறகு அதன் சாதக பாதகங்களை அதன்பின் விமர்சிக்கலாம். 

இன்ஷா அல்லாஹ் தொடரும்.
ஆக்கம் : முத்துப் பேட்டை P.பகுருதீன் B.Sc;
உருவாக்கம்: இப்ராஹீம் அன்சாரி

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 26 8

அதிரைநிருபர் பதிப்பகம் | January 22, 2014 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்.
முந்தைய பதிவில் உத்தம நபியின் உன்னத சஹாபியப் பெண் தோழியர்களில் மிக முக்கியமானவர்களாகிய அஸ்மா(ரலி) அவர்கள் பற்றிய வரலாற்றுத் தகவல்களை நாம் கண்டோம். அதில் தொகுக்கப்பட்டச் சம்பவங்களிலிருந்து நாம்  படிப்பினைப் பெற்றோம். இந்தப் பதிவிலும் நபித்தோழியர்களில் நீண்ட காலம் வாழ்ந்து மரணித்த அதே அஸ்மா(ரலி) அவர்களின் வாழ்வில் மேலும் கூடுதல் சம்பவங்களைப் பற்றிப் பார்ப்போம்.

அல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபையால், புத்திக்கூர்மையுள்ள அஸ்மா(ரலி) அவர்களின் சாதுர்யத்தால் மக்காவில் எந்த கயவர்களின் கண்ணிலும் தென்படாமல், நபி(ஸல்) அவர்களும் அபூபக்கர்(ரலி) அவர்களும் ஏனைய தோழர்களும் மதீனாவுக்கு வந்தடைந்து விட்டார்கள்.

அஸ்மா (ரலி) அவர்களின் கணவர் ஜுபைர்(ரலி) அவர்கள் இளைஞராக இருக்கும்போதே தூய இஸ்லாத்தை ஏற்றவர். இஸ்லாத்தை ஏற்ற ஒரே காரணத்திற்காக வசதி வாய்ப்புள்ள தன்னுடைய குடும்பத்தவர்களால் அடித்து துன்புறுத்தப்பட்டார்கள், முதல் ஹிஜ்ரத் (அபிசீனியா) பயணத்தில் பங்கெடுத்த அந்த சொற்பமானவர்களில் ஜுபைர்(ரலி) அவர்களும் ஒருவர். பணக்கார குடும்பத்தில் பிறந்த ஜுபைர்(ரலி) ஏழை முஸ்லீமான அவர்களையே தன்னுடைய வாழ்க்கைத் துணையாகக் கிடைத்தது மக்கத்துச் செல்வந்தர் அபூபக்கர்(ரலி) அவர்களின் மூத்த மகளார் அஸ்மா(ரலி) அவர்களுக்கு.

சிறிது காலம் கடந்து நபி(ஸல்) அவர்களின் அழைப்பை ஏற்று நபி(ஸல்) அவர்களின் அருமை மனைவி அன்னை ஆயிஷா(ரலி) அவர்களும், அஸ்மா(ரலி) அவர்களும் குடும்பத்தவர்களும் மதீனாவுக்கு ஹிஜ்ரத் மேற்கொண்டார்கள். செல்வந்தர் வீட்டு ஏழை கணவருடன், மக்கமா நகரின் தன் குடும்பத்துக்கு உள்ள அத்தனை சொத்துக்களையும் துறந்து இந்த தூய இஸ்லாத்திற்காக தான் வாழ்ந்த அந்த மக்கா நகரத்தை விட்டு தியாகம் செய்து வந்த தியாகிகளில் அஸ்மா(ரலி) அவர்களும் ஒருவர். இது மட்டுமல்ல இந்தத் தியாகி அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்(ரலி) அவர்களை கருவுற்றிருந்த நிலையில் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்தார்கள். அன்றைய காலகட்டத்தில் ஹஜ் அல்லது உம்ரா செய்தவர்ர்களுக்கு தெரிந்திருக்கும் மக்காவிலிருது மதீனாவுக்கு பயணம் என்பது அவ்வளவு எளிதானது அல்ல என்பது. இன்றோ வாகனப் போக்குவரத்து வசதிகள் உள்ளது. ஆனால் அன்றோ மலைகளும், பாறை கற்களும் (ஹர்ரா போன்ற பகுதிகள்) உள்ள அந்தக் கடின பாதைகளில் இந்த கர்பினித்தாய் அஸ்மா(ரலி) அவர்கள் நடந்து அல்லாஹ்வுக்காக தியாகம் செய்து ஹிஜ்ரத் செய்துள்ளார்கள் என்றால், உண்மையில் அந்த நிறைமாத கர்ப்பினித்தாய் அஸ்மா(ரலி) அவர்களின் அந்த ஹிஜ்ரத் பயணத்தை, இன்று ஓர் உடல் வலிமையுள்ள எந்த ஒரு ஆண் மகனாலும் நிகழ்த்த முடியாது அல்லாஹ் நாடினால் மட்டுமே முடியும்.

மதினாவில் குஃபா பள்ளியை அடைந்தவுடன் அஸ்மா(ரலி) அவர்களுக்கு ஓர் அழகிய ஆண் குழந்தை பிறக்கிறது. பத்து மாதம் சுமந்த குழந்தை மட்டுமல்ல, ஹிஜ்ரத் செய்த அந்த 11 நாட்கள், மலைகளையும், கற்களையும், வெயிலையும், பகலையும், இரவையும் கடந்து, நிம்மதியையும், தூக்கத்தையும் தியாகம் செய்து நாடுவிட்டு நாடு வந்து மிகவும் சிரமத்துக்கு மத்தியில் பாதுகாத்து சுமந்த குழந்தையல்லவா அந்தக் குழந்தை, அருமை நபியின் ஆருயிர் தோழர் அபூபக்கர்(ரலி) அவர்களின் பேரப்பிள்ளையல்லவா அந்தக் குழந்தை. அந்தத் தியாகத்தாய் அஸ்மா(ரலி) அவர்கள் அந்த மகனை நபி(ஸல்) அவர்களிடம் தூக்கிச் சென்று பெயர் வைக்க சொன்னார்கள். மனிதருள் புனிதர் நபி (ஸல்) அவர்கள் மகிழ்வோடு குழந்தையை வாங்கி, மடியில் வைத்துக் கொண்டு ஆனந்தத்துடன் குழந்தையைப் பார்த்த நபி(ஸல்) அவர்கள் ‘அப்துல்லாஹ்’ என்று பெயர் சூட்டினார்கள். 

மதீனா பேரிச்சப்பழத்தினை தன் வாயில் மென்று, தன் உமிழ் நீருடன் கலந்த சிறிய பேரிச்சப்பழத்தை அந்த குழந்தை அப்துல்லாஹ் அவர்களுக்கு ஊட்டினார்கள் பூமான் நபி(ஸல்) அவர்கள். பிறகு குழந்தைக்காக நற்பாக்கியம் வேண்டி இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்கள். அந்த அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்(ரலி) அவர்கள் தான் முதன் முதலில் ஹிஜ்ரத்துக்கு பிறகு மதீனாவில் பிறந்த முஸ்லீம் குழந்தை, மேலும் முதலாவதாக மதீனாவில் பிறந்த முஹாஜிர் குழந்தை, முதலாவது நபி(ஸல்) அவர்களால் பெயர் சூட்டப்பட்ட குழந்தை, முதலாவது மதீனாவில் நபி(ஸல்) அவர்களின் மடியில் இருந்த குழந்தை, முதலாவது நபி(ஸல்) அவர்களால் பிறந்தவுடன் பேரீத்தம்பழம் ஊட்டப்பட்ட குழந்தை என்ற பெயருக்கு சொந்தக்காரராக நம் அஸ்மா(ரலி) அவர்களின் அருமை மகனார் அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்(ரலி) என்று வரலாற்றில் அறியப்படுகிறார். இந்த அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) அவர்கள் சிறுவயதிலிருந்தே மார்க்கப்பற்றுள்ளவராக வளர்க்கப்பட்டார்கள்.

அந்த தியாகத் தாய்க்கு மதினாவில் வறுமை வாட்டியது. நபி(ஸல்) அவர்கள் ஜுபைர் (ரலி) அவர்களுக்கு ஒரு பேரித்தம்பழ தோட்டம் ஒன்றை கொடுத்தார்கள். அது மதீனாவிலிருந்து சுமார் ஒன்பது மைல் தொலைவில் இருந்தது.  தினமும் அங்கு சென்று பேரீச்சங் கொட்டைகளைப் பொறுக்கி, ஒன்று சேர்த்து மூட்டையாகக் கட்டி தலையில் சுமந்து கொண்டு தன் கணவருக்கு உதவி செய்தவர்களாக இருந்தார்கள் அஸ்மா(ரலி) அவர்கள். கணவன் படும் கஷ்டத்தில் தானும் பங்கெடுத்து தானும் குடும்பத்திற்காக தியாகம் செய்ய தகுதி படைத்தவர் என்பதை நிருபித்த பெண்மணி அஸ்மா(ரலி) அவர்கள். அஸ்மா (ரலி) அவர்கள் துன்பங்கள் எதிர்ப்பட்ட அத்தனை சந்தர்ப்பங்களிலும் கொஞ்சமும் பொறுமையை கைவிட்டார்களில்லை! பதறிப் பரிதவிக்கவில்லை! நிராசை அடைந்து விதியை நொந்து கொள்ளவில்லை! விளைவு? அத்தகைய பொறுமைக்கான பலன் கைமேல் கிடைத்தது! ஆம்! அஸ்மா (ரலி) அவர்களை வளமான வாழ்வு தேடி வந்தது! அவர்கள் செல்வந்தர் ஆனார்கள்! அவர் மீதும் அவரின் கணவர் மீதும் அல்லாஹ்வின் அருட்கொடைகள் கொட்டின. ஜுபைர் (ரலி) அவர்களுக்கு வியாபாராத்தில் நிறைய இலாபம் கிடைத்தது. இறைவன் அவர்களின் வாழ்கையை வளப்படுத்தினான்!

அஸ்மா (ரலி) அவர்களின் குடும்பம் எண்ணற்ற கஷ்ட - நஷ்டங்களையும் துன்ப துயரங்களையும் பொறுமையோடு தாங்கி வந்த பிறகு இப்போது பொருளாதாரத்தில் பிரமிக்கத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதெனில் அது எப்படிச் சாத்தியமாயிற்று? தவறான வழி சம்பாத்தியமா? இல்லை! அவர்களின் கணவர் ஜுபைர் (ரலி) அவர்கள், ‘நான் நபி (ஸல்) அவர்களின் உயிர்த் தோழர் மட்டுமல்ல, அவர்களின் நெருங்கிய இரத்த பந்தமுடைய - புனிதமான உறவு முறையுடைய குடும்பத்தைச் சார்ந்தவனும் ஆவேன்” என்று மக்களிடம் பிரபலப்படுத்திக் கொண்டு, பணம் வசூலித்துப் பணக்காரர் ஆனாரா? இல்லவே இல்லை! நீதி நேர்மையையும் கடினமான உழைப்பையும் அஸ்திவாரமாகக் கொண்ட வாணிபத்தின் வாயிலாக செல்வம் ஈட்டினார்கள்! நபித் தோழர்களில் அப்துல் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களைப் போன்றவர்கள் எப்படி வியாபாரம் செய்து இலட்சாதிபதி ஆனார்களோ அப்படித்தான் ஜுபைர் (ரலி) அவர்களும் சம்பாதித்தார்கள்!

முஸ்லிம்கள் வாழ்ந்த வாழ்க்கையின் இலக்கணம் இதுதான். அவர்களின் வாழ்கையை கடின உழைப்பும் முயற்சியும் அலங்கரித்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் இறையச்சமும் நீதி தவறாத் நெஞ்சுரமும் அதற்குத் தூய்மையையும் புனிதத் தன்மையையும் வழங்கிக் கொண்டிருக்கும்.

இதன் காரணமாகத்தான் ஜுபைர் (ரலி) - அஸ்மா (ரலி) தம்பதிகளிடத்தில் ஆணவமோ அகங்காரமோ பிறரை இழிவாய் கருதும் மனநிலையோ எள்ளவும் காணப்படவில்லை! மரியாதைக்குரிய அஸ்மா (ரலி) அவர்கள் ஏழ்மையின்போது கடைப்பிடித்த பொறுமையையும் எளிமையையும் இப்போதும் கடைப்பிடித்தார்கள்! முரட்டு ஆடைகளை அணிபவராகவும் காய்ந்த ரொட்டிகளை உண்பவராகவும்தான் இருந்தார்கள்!

தர்மம் செய்வதில் அஸ்மா(ரலி) அவர்கள் சலைத்தவர்கள் அல்ல என்பதை வரலாற்றில் அறியலாம், அஸ்மா (ரலி) அவர்கள் தயாள குணமும் தாராள மனப்பான்மையும் பெற்றிருந்தார்கள். அல்லாஹ் வழங்கிய செல்வத்திலிருந்து ஏழை எளியவருக்கு ஈந்து மகிழும் நிலையை அடைந்தார்கள். தன்னிடம் ஏதாவது ஒரு பொருள் அதிகம்  இருந்தால் அதனை அன்றைய தினமே தர்மம் செய்துவிடுவார்கள். 

வறுமைப்பட்ட கணவருக்கு வாழ்க்கைப்பட்டோமே, இப்போது ஏழ்மையோடு எதிர்நீச்சல் போடவேண்டியதுள்ளதே| என்று மனம் வெதும்பி விதியை நொந்து கொண்டிருக்கும் பெண்மணிகளுக்கு  கண்மணி அஸ்மா (ரலி) அவர்கள் வரலாறு மிகப்பெரும் படிப்பினை.

அஸ்மா(ரலி) அவர்களின் தாயார் கதீலா பின்த் அப்துல் உஸ்ஸா என்பவர் தம் மகளைப் பார்ப்பதற்காக மதீனா வருகின்றார். அவர் இணைவைப்புக் கொள்கையிலேயே இருந்தார். இஸ்லாத்தை பிடிவாதமாய் ஏற்றுக் கொள்ள மறுத்தார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தம் தாயாரைச் சந்திப்பதில் அஸ்மா (ரலி) அவர்களுக்கு அளவிலா மகிழ்ச்சிதான்! ஆர்வமிகுதியால் அவருடைய உள்ளம் துடிக்கின்றது. விழிகளில் பிரகாசம் மின்னிட இதழ்களில் புன்னகை மலர்ந்திட கரங்கள் கட்டித் தழுவத் துடிக்கின்றன. ஆனால் தன்னுடைய தாய் இணை வைப்பாளர், அவர் கொண்டு வந்திருக்கும் அன்பளிப்பை வாங்கலாமா என்பதை அறிந்துக்கொள்ள நபி(ஸல்) அவர்களிடம் கேட்டு அனுப்பினார்கள். நபி(ஸல்) அவர்கள் அனுமதி அளித்தார்கள். தம்முடைய தாயாரை நல்ல முறையில் வரவேற்று அன்பளிப்புகளை ஏற்று உபசரித்தார்கள்.

அஸ்மா (ரலி) அவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நம் அனைவருக்கும் நல்லதொரு படிப்பினை இருக்கின்றது. கொள்கையில் மாறுபட்டிருக்கும் நம்முடைய உறவினர்களை விட்டு, கொள்கை மாறுபாட்டிற்காக மட்டும் நம்முடைய தொடர்பை துண்டித்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அப்படிச் செய்வது தவறாகும். அதுவும் இஸ்லாத்தின் பக்கம் அழைப்பு விடுக்க வேண்டிய பொறுப்புடைய முஸ்லிம்கள் அப்படிச் செய்வது அறவே கூடாது. இரத்த பந்தமுடைய அனைத்து உறவினர்க்கும் அவர்களுக்குரிய உரிமைகளையும் கடமைகளையும் வழங்கத்தான் வேண்டும்.

ஆனால் நம்முடைய கொள்கைக்கு யார் கேடு விளைவிக்க முற்படுகின்றார்களோ, நம்முடைய உயிருக்கும் உடமைக்கும் இழப்பை ஏற்படுத்த முயல்கின்றார்களோ அத்தகையவர்களுடன் மட்டும்; அவர்கள் எவ்வளவுதான் நெருக்கமானவர்களாய் இருப்பினும் நட்பு ரீதியிலான தொடர்பை நீடிக்கச் செய்ய நமக்கு உரிமை இல்லை! இந்தத் தெளிவான கோட்பாட்டை அஸ்மா (ரலி)யின் வரலாறு நமக்கு வழங்குகின்றது!

நபித்தோழர்களின் ஆட்சி காலத்தில் நடைபெற்ற போர்களில் அஸ்மா(ரலி) அவர்கள், ஜுபைர் (ரலி) அவர்களும், அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்(ரலி) அவர்களும் போர்களில் கலந்து கொள்ளும் நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டார்கள். அன்றைய காலகட்ட விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்ற நேரம். போரின் உச்சக்கட்டம், மரணம் தன்னை நெருங்கி வருகிற இந்த சூழலில் 100 வயதுடைய கண் தெரியாத தன் தாயாரிடம் செல்கிறார்கள்.

போரின் போக்கு எவ்வாறு உள்ளது என்பதையும் எதிர்ப்பட்டுள்ள நிலைமைகளையும் விவரித்துவிட்டு, இப்போது என்ன செய்யவேண்டும் என்று ஆலோசனை கோரினார் தாயாரிடம்!

மகனாரின் இந்தக் கேள்விக்கு சித்தீகுல் அக்பரின் மூத்த புதல்வி அளித்த பதில் வார்த்தைகளை வரலாறு பொன் எழுத்துக்களால் பதிவு செய்து வைத்துள்ளது. அவை இதோ :-

“அன்பு மகனே! எது உனக்கு நன்மை அளிக்கக் கூடியது என்பதை நீயே நன்கு அறிவாய். நீ சத்தியத்தின் பக்கம்தான் இருக்கின்றாய் என்பதில் உனக்கு உறுதி இருந்தால், நீ நிலைகுலையாதிருக்க வேண்டும். நீ ஆண்மகனைப் போன்று போரிடு! உயிருக்கு அஞ்சி எவ்வித இழிவையும் சுமந்து கொள்ளாதே! வாளேந்திப் போரிட்டு கண்ணியமாக மரணிப்பது, இழிவுடன் இன்பமாய் வாழ்வதை விடச் சிறந்ததாகும். நீ வீரனாக மரணம் அடைந்தால் அப்போது நான் மகிழ்வேன். ஆனால் அழிந்து போகும் இந்த உலகை வணங்கி வழிபடுவாயானால் உன்னை விடவும் கெட்டவன் வேறு யார் இருக்க முடியும்? அதாவது, தானும் அழிந்து அல்லாஹ்வின் அடியார்களையும் அழிவில் சேர்க்கக் கூடிய அளவுக்கு கேடுகெட்டவன் அப்போது நீயாகத்தான் இருக்க முடியும்! எனவே, நாம் மட்டும்தானே தன்னந்தனியாக எதிர்க்கின்றோம், ஆகவே இப்பொழுது கீழ்படிந்து செல்வதைத் தவிர வேறு வழி இல்லை என்று நீ கருதுவாயானால் - இவ்வாறு கருதுவது உன் சான்றோரின் போக்கு அல்ல! நீ எது வரையில் உயிர் வாழ்ந்திடுவாய்? என்றாவது ஒருநாள் மரணம் அடையத்தானே போகிறோம்! எனவே நற்பெயருடன் மரணமாகு, அப்பொழுதான் பெருமைப்படுவேன்!”

அன்னை அஸ்மா (ரலி) அவர்களின் இந்த வார்த்தைகளை மீண்டும் ஒரு முறை கவனமாய் படித்துப் பாருங்கள். இப்பொழுது போரில் இறங்குவதெனில், அது மரணத்தை வலிந்து அழைப்பதற்கு சமமாகும் என்பதையும் - தம்முடைய அன்பு மகனார் கண்ணெதிரிலேயே மரணப்படுகுழியில் விழப் போகின்றார் என்பதையும் அறிந்த ஒரு தாயார் அளித்த அறிவுரையாகும் இது!

அவருடைய மகனார் எப்படிப்பட்ட புகழுக்குச் சொந்தக்காரர்? அவருடைய கல்வி ஞானத்தையும் சிறப்பையும் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) மற்றும் இப்னு உமர் (ரலி) போன்றோர்களே புகழ்ந்துள்ளார்கள்! அன்று வீரத்திற்கும் விவேகத்திற்கும் அவருக்கு நிகர் அவராகவே திகழ்ந்தார்! அப்படிப்பட்ட உயர் சிறப்புக்குரிய மகனார்...! 

தாயார் என்றால் இப்படி அன்றோ திகழ்ந்திட வேண்டும்! அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) அவர்கள் தாயாரின் இத்தகைய துணிவான சொற்களைக் கேட்டதும் மனம் நெகிழ்ந்து பணிவுடன் வேண்டினார்கள்.

“என் அன்புத் தாயே,  நம் தேசத்து மக்கள் என்னைக் கொன்று எனது உடலைப் பலவிதமாகக் கோரப்படுத்தி விடுவார்களோ எனும் அச்சம் எனக்கு உள்ளதே!”

“மகனே, உன்னுடைய எண்ணம் சரிதான்! ஆனால் ஆட்டை அறுத்த பிறகு அதனுடைய தோலை உரிப்பதனாலோ அதன் சதைகளைக் கைமாவாகக் கொத்துவதனாலோ அதற்கு எந்த வேதனையும் ஏற்படாதே!”

உண்மையில் அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) அவர்கள் எதற்காக இவ்வாறு கேட்டார்களெனில் தம்மைக் கொன்று உடலைச் சிதைத்து விடுவார்களோ எனும் அச்சத்தினால் அல்ல, வயது முதிர்ந்த தமது தாய் எவ்வாறு இந்தத் துக்கத்தை தாங்கிக் கொள்கின்றார்கள் என்பதைப் பார்ப்பதற்காகத்தான்!

அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) அவர்கள் தம் தாயார் திருப்தியுடன் இருப்பதை அறிந்ததும் உடனே அவரின் கரங்களைப் பிடித்து முத்தமிட்டவாறு – “என் அன்புத் தாயே! நானும் இவ்வாறுதான் சிந்தித்துக் கொண்டிருக்கின்றேன். அதாவது சத்தியத்திற்கு எதிரில் இந்த உலகம் சாதாரணமானதுதான். மேலும் இஸ்லாத்திற்கும் அதன் கொள்கை கோட்பாடுகளுக்கும் உறுதியும் வலிமையும் சேர்ப்பதற்காகத்தான் இப்பணிகளையெல்லாம் நான் ஆற்றியுள்ளேன்!”

இதன் பிறகு அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) அவர்கள் தம் தாயாருக்கு அந்தப் போரின் காரணங்களை விவரித்தார். மேலும் அந்த போர் சத்தியத்தின் அடிப்படையிலானது என்பதை விளக்கினார். இறுதியில் பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு தம் அன்னையை வேண்டிக் கொண்டபோது அந்த வீரத்தாய் கூறினார்.

“மகனே, இன்ஷா அல்லாஹ் எனது பொறுமை மக்களுக்கு ஒரு முன் மாதிரியாக அமையும் என்று நான் எண்ணுகிறேன். நீ என் முன்னிலையில் சத்தியத்திற்காக உயிரை விடுகின்றாய் எனில் உனது தியாகம் எனக்கு நன்மை கிடைப்பதற்குக் காரணமாகவும் அமையும்! மேலும் நீ வெற்றி அடைந்தாலோ நான் பெருமகிழ்ச்சி அடைவேன். இப்போது அல்லாஹ்வின் பெயரை மொழிந்தவாறு புறப்படு, என்ன நடக்கிறது என்று பார்!”

இதனைக் கேட்டதும் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் தம் தாயை கட்டித் தழுவினார்கள். அஸ்மா (ரலி) அவர்கள் பார்வை இழந்திருந்திருந்தார்கள். தம் அன்பு மகனை ஆரத் தழுவியபோது அவருடைய உடலின் மீது உருக்குக் கவசம் இருப்பதை கரங்கள் உணர்த்தின.

“மகனே, யார் சத்தியத்திற்காக உயிரை தியாகம் செய்ய விரும்புகின்றார்களோ அவர்கள் கவசம் அணிந்து கொள்வதில்லை. எனவே அதனைக் கழற்றிவிடு. உடுப்பை வரிந்து கட்டிக்கொண்டு எதிரிகள் மீது தாக்குதல் தொடு!”  என்று அறிவுறுத்தினார்கள்!

அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) அவர்கள் அவ்விதமே செய்தார்கள். வீரத்துடன் போரில் குதித்து தியாக மரணத்தை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார்கள்!

அல்லாஹ்வுக்காக வீரமரணம் அடைந்த தன்னுடைய அருமை மகனின் இழப்பை பொருந்திக்கொண்ட அந்த தியாகத் தாய் அஸ்மா(ரலி) அவர்கள், சில நாட்களில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

நம்மில் எத்தனை பேருக்கு இந்த தியாகத் தாயின் வரலாறு தெரியும்?

நம்மில் எத்தனை பேர் இந்த தியாகத் தாயின் பெயரை நம் பிள்ளைகளுக்கு வைத்திருக்கிறோம்?

கர்பினியாக இருந்த அந்த தாய் அஸ்மா(ரலி) அவர்கள் பட்ட கஷ்டங்களுக்கு மத்தியில் ஈமானில் உறுதியாக இருந்துள்ளார்கள். ஆனால் இன்றைய தாய்மார்கள் அஸ்மா(ரலி) அவர்கள் பட்ட கஷ்டங்களில் 1 % கஷ்டமேனும் பட்டிருப்பார்களா? இவர்களுடைய ஈமான் என்ன நிலையில் உள்ளது?

தன் கணவன் முஸ்லீம் ஆனால் வறுமையில் உள்ளார், தானும் முஸ்லீம் அவருடைய வறுமையில் தானும் பங்கெடுத்தார்களே அஸ்மா(ரலி). அந்த தியாகப் பெண்மணியை போன்று கணவன்மார்களின் வறுமையில் பங்கெடுக்கும் நம் பெண்கள் எத்தனை பேர்?

தள்ளாத வயதிலும் தன்னுடைய மகன் தீனுக்காக உழைக்க வேண்டும், தீனுக்காக உயிர் விட வேண்டும் எண்ணினார்கள் அஸ்மா(ரலி). இது போல் இருக்கும் இன்றைய தாய்மார்கள் எத்தனை பேர்?

வசதியான தந்தைக்கு பிறந்த அஸ்மா(ரலி) அவர்கள் தன் சொத்தை பிறந்த பூமியிலேயே விட்டுவிட்டு, கர்பினியாக ஹிஜ்ரத் செய்து, மதீனாவில் வறுமையில் கணவனோடு வாழ்ந்து, அவருக்கு உறுதுனையாக இருந்து, மகனை ஈமான் உள்ளவராக வளர்த்து, தீனுக்காக போராடி தன் மகனை வீர மரணமடைய உணர்வூட்டி, நீண்ட நாட்கள் வாழ்ந்து மரணித்த இந்த தியாகத் தாயின் வாழ்விலிருந்து நமக்கு நிறைய படிப்பினை உள்ளது.

யா அல்லாஹ்! அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் எங்கள் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.
தொடரும்...
M.தாஜுதீன்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

OUR YOUTUBE CHANNEL

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Labels

அதிரை (412) கவிதை (353) இபுராஹீம் அன்சாரி (206) Alaudeen.S (195) அதிரை அஹ்மது (180) அதிரை செய்திகள் (143) ஜாஹிர் ஹுசைன் (142) MSM (136) சபீர் (127) சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக் (117) அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து (113) இஸ்லாம் (103) தாஜுதீன் (94) ஷாஹுல் ஹமீது (89) அபுஇபுறாஹிம் (69) நபிமணியும் நகைச்சுவையும் (65) இக்பால் M.ஸாலிஹ் (62) j1 (59) கல்வி விழிப்புணர்வு (57) ரமளான் (55) அதிரைநிருபர் (52) விழிப்புணர்வு (47) கல்வி (45) உமர் தம்பி (43) P.பகுருதீன் (41) அதிரை மன்சூர் (41) அதிரை மெய்சா (40) இன்று (40) படிக்கட்டுகள் (40) அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (39) கண்கள் இரண்டும் (39) a1 (37) crown (37) அரசியல் (37) நாளை (37) நேற்று (37) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (35) அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் (34) ADT (33) அதிரை அஹ்மத் (33) பேறு பெற்ற பெண்மணிகள் (33) சாஹுல் ஹமீது (32) S.அலாவுதீன் (31) ie (30) p1 (30) பேசும் படம் (30) மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் (30) வாவன்னா (28) தேனீ (27) SMF (26) அதிரை முஜீப் (26) மருத்துவம் (26) வரலாறுகள் (26) வழக்குகள் (26) ஹஜ் (26) கவியன்பன் (25) தேர்தல் (24) k1 (22) அதிரை தாருத் தவ்ஹீத் (22) இப்னு அப்துல் ரஜாக் (22) தமிழகம் (22) தமிழ் (22) துபாய் (22) நூருத்தீன் (22) பெண்கள் (22) யுனிகோட் (22) h1 (21) இபுராஹிம் அன்சாரி (21) ஏடு-இட்டோர்-இயல் (21) நினைவுகள் (21) நோன்பாளிகளே (21) பாலஸ்தீனம் (21) அபூஇப்ராஹீம் (20) என் இதயத்தில் இறைத்தூதர் (20) ஜமீல் M.சாலிஹ் (20) Sஹமீது (19) இந்தியா (19) எச்சரிக்கை (19) சேக்கனா M.நிஜாம் (19) மழை (19) adirai (18) editorial (18) loan (18) அதிரை சித்தீக் (18) கந்தூரி (18) அபுல்கலாம் (17) இயற்கை இன்பம் (17) சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக் (17) நோன்பு (17) மரணம் (17) ரமழான் (17) ஹஜ் பெருநாள் (17) ஆசிரியர் தினம் (16) கவிதை ஓர் இஸ்லாமிய பார்வை - ஆய்வு (16) பழகு மொழி (16) புதுசுரபி (16) Zakir Hussain (15) harmys (15) அபு ஈஸா (15) அப்துல் ரஹ்மான் (15) அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா (15) வரலாறு (15) Sabeer (14) ஊடகம் (14) காணொளி (14) படிப்பு (14) பெருநாள் (14) ஷஃபி அஹ்மது (14) M.H.ஜஹபர் சாதிக் (13) shameed (13) அதிரை என்.ஷாஃபாத் (13) அப்பா (13) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் (13) கடன் (13) சத்தியமார்க்கம்.com (13) சிந்தனை (13) சிந்திக்க (13) MHJ (12) ஆரோக்கியம் (12) ஒற்றுமை (12) சகோதரியே (12) தண்ணீர் (12) தாருல் இஸ்லாம் ஃபேமிலி (12) பேரூராட்சி (12) மரபு (12) மு.செ.மு.சஃபீர் அஹமது (12) யாசிர் (12) ரஃபீக் (12) AM (11) s1 (11) அனுபவம் (11) ஆமினா முஹம்மத் (11) ஒரு புத்தகம் பிறக்கிறது (11) சரிதை (11) சென்னை (11) தொடர் (11) பேசும்படம் (11) மனு நீதி (11) முஹம்மது ஃபாருக் (11) Sabeer AbuShahruk (10) aknk (10) kavithai (10) அதிரை அஹமது (10) அதிரை ஷஃபாத் (10) அதிரைநிருபர் பதிப்பகம் (10) அமீரகம் (10) அமெரிக்கா (10) அலசல் (10) ஆய்வு (10) உதவி (10) ஏக்கம் (10) கலாம் (10) தொழில் முனைவோர் (10) படிகட்டுகள் (10) பெற்றோர் (10) முகம்மது அலி ஐ.பீ.எஸ் (10) முஹம்மது யாசிர் (10) விவாதக்களம் (10) SMS (9) அரும்புப் பாட்டு (9) ஊடக போதை (9) குறுந்தொடர் (9) சிந்திக்கத் தூண்டும் சித்திரங்கள் (9) சுகாதாரம் (9) ஜகாத் (9) துஆ (9) தேடல் (9) நோன்பு பெருநாள் (9) பரீட்சை (9) பிரார்த்தனை (9) பேட்டி (9) பேரன் (9) மனித குலம் (9) ரமழான் சிந்தனை (9) வினாடி வினா (9) வேலை (9) ஹதீஸ் (9) LMS (8) ZAEISA (8) msm rafiya (8) poem (8) அதிரைக்காரன் (8) அபூ ஆசிஃப் (8) அப்துல் காதர் (8) அஹ்மது இர்ஷாத் (8) இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளி (8) இளமை (8) இஸ்லாமியப் பெண்மணி (8) எழுத்துப் பிழைகள் (8) ஏற்றம் (8) கடற்கரைத் தெரு (8) கலைக்களஞ்சியம் (8) காது (8) சத்தியமார்க்கம் (8) செய்தி (8) தக்வா பள்ளி (8) தன்னம்பிக்கை (8) தொழுகை (8) நண்பர்கள் (8) நூல் வெளியீடு (8) பள்ளிவாசல் (8) பழைய நினைவுகள் (8) பாலஸ்தீன் (8) மரபு கவிதை (8) மலேசியா (8) மாணவர்கள் (8) மாலிக் (8) முகமது யாசிர் (8) வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் (8) விபத்து (8) விவாதம் (8) வேண்டுகோள் (8) ARH (7) MSM MEERASHA RAFIA (7) SKM ஹாஜா முகைதீன் (7) SKM-H (7) history (7) அப்துர்ரஹ்மான் (7) அப்துல் மாலிக் (7) அம்மா (7) அல்குர்ஆன் (7) அல்லாஹ் (7) உணவு (7) கட்டுரையாளர் (7) கண் (7) கம்பன் (7) கல்வியாளர்கள் (7) காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி (7) கால்பந்து (7) குழந்தை (7) சிந்திப்போம் (7) சின்னகாக்கா (7) சிரியா (7) தொண்டை (7) நன்றி (7) நபிமொழிகள் (7) பயணம் (7) பள்ளிக்கூடம் (7) மின்சாரம் (7) முஸ்லிம் (7) மொழி (7) விளக்கம் (7) ஸஹாபாக்கள் (7) 2012 (6) 2014 (6) A.R.அப்துல் லத்தீஃப் (6) AEAC (6) B. Ahamed Ameen (6) Dubai (6) M H Jahabar Sadik (6) N.ஜமாலுதீன் (6) Shahnaz Sabeer Ahmed (6) UAE (6) ashik (6) m2 (6) u1 (6) அதிரை தென்றல் (Irfan Cmp) (6) அதிரை நிருபர் (6) அலசல் தொடர் (6) ஆதங்கம் (6) இதிகாசங்கள் (6) இத்தியாதி இத்தியாதி (6) இப்ராஹிம் அன்சாரி (6) இப்ராஹீம் அன்சாரி (6) இரத்தம் (6) ஊழல் (6) ஓட்டு (6) கந்தூரி போதை (6) கல்லூரி (6) கிரவ்ன் (6) கோடைகால பயிற்சி (6) தடை (6) திருமணம் (6) நகைச்சுவை (6) நட்பு (6) நண்பன் (6) நானும் ஆஃப்ரிக்காவும் (6) நூலகம் (6) புத்தகம் (6) போதை (6) மக்கா (6) முதுமை (6) முஸ்லீம்கள் (6) முஹம்மத் ஆஷிக் (6) மூக்கு (6) வணக்கம் (6) வளைகுடா (6) விமர்சனம் (6) ஷிஃபா மருத்துவமனை (6) AEM (5) SKM - H (5) Sஹமீத் (5) m1 (5) moon (5) umar history (5) அதிரை ஈத்மிலன் (5) அதிரை ஹாலித் (5) அபூஇப்ராஹிம் (5) அறிவியல் (5) அழகு (5) அழைப்பு (5) ஆங்கிலப் புத்தாண்டு (5) ஆஸ்திரேலியா (5) இடஒதுக்கீடு (5) இயற்கை (5) இரவு (5) இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா (5) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (5) உறவு (5) கணினி (5) கண்டனம் (5) கனவு (5) கவிஞர் (5) கவிதை ஆய்வு (5) காலம் (5) குர்ஆன் (5) குழந்தைகள் (5) சட்டமன்றம் (5) சந்திப்பு (5) சபீர் அஹ்மது அபுஷாரூக் (5) சான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வரை (5) சேமிப்பு (5) தக்வா (5) தாய் (5) தொட்டால் தொடரும் (5) தொலைக்காட்சி (5) நாசர் மவ்லவி (5) நீதி (5) பழமை (5) பாசம் (5) பாபர் மஸ்ஜித் (5) பாலியலுக்கு பலியாகாதே (5) பெண்ணுரிமை (5) பொருளாதாரம் (5) போட்டி (5) போராட்டம் (5) மண்ணறை (5) மனைவி (5) மற்றும் (5) மாட்டுக்கறி (5) மாற்றி யோசி (5) முஹம்மது பாரூக் (5) மூடநம்பிக்கை (5) மூன்றாம் கண் (5) ரஃபியா (5) ரியல் எஸ்டேட் (5) வட்டார உரையாடல் (5) வாழ்க்கை (5) விருந்து (5) விழி (5) வெற்றி (5) வேலை வழிகாட்டி (5) ஸதக்கதுல்லாஹ் (5) 2013 (4) B. Ahamed Ameen (4) EA (4) M. தாஜுதீன் (4) MSM மீராஷா ரஃபியா (4) MSM(n) (4) adirainirubar (4) eo1 (4) syria (4) v1 (4) அதிரை அறிஞர் (4) அதிரை பைத்துல்மால் (4) அதிரை மீரா (4) அபுஇப்ராஹிம் (4) அபுநூரா (4) அரபி (4) அறிவுரை (4) அவதூறு (4) அஹ்மது ஆரிஃப் (4) ஆங்கிலம் (4) இன்றைய சவால் (4) இபாதத் (4) இபுறாஹீம் நபி (4) இமாம் ஷாஃபி ஸ்கூல் (4) இலக்கியம் (4) இலவசம் விலை போனதே (4) இஸ்லாமிய வங்கி (4) ஈகை (4) ஈகைத் திருநாள் (4) ஈத் பெருநாள் (4) ஊரில் மழையாமே (4) ஊர்வலம் (4) எதிர்ப்பு (4) கடிதம் (4) கட்சிகள் (4) கட்டுரை (4) கலக்கல் (4) கல்வி வழிகாட்டி (4) கா.மு.மே.பள்ளி (4) காது கொடுத்து கேளுங்கள் (4) குடும்பம் (4) குழந்தை வளர்ப்பு (4) குழந்தைகளுக்காக (4) கேமரா (4) கோரிக்கை (4) கோவை அய்யூப் (4) சஹாபாக்கள் (4) சிட்னி (4) சுதந்திரம் (4) செக்கடிக் குளம் (4) டி.வி. (4) டெல்லி (4) தனிமை (4) தமாம் (4) தமிழ்மாமணி (4) தமுமுக (4) திருச்சி (4) தெரு (4) தோல்வி (4) தோழன் (4) நடை (4) நபி முஹம்மது (ஸல்) (4) நம்பிக்கை (4) நிறைவு (4) நிலவு (4) நீர் (4) நேரம் (4) நோன்பு கஞ்சி (4) பயணங்களில் பரவசம் (4) பயன் தரும் பன்மொழித் தொடர்பு (4) பழக்கம் (4) பாங்கு (4) பாதுகாப்பு (4) பிறை (4) புன்னகை (4) புரளி (4) புறம் (4) பெண் (4) பெண்மை (4) பேயோடு ஒரு ஹாய் (4) மகன் (4) மது (4) மலேஷியா (4) மலை (4) மலையேறலாம் (4) மாற்றம் (4) யார் (4) ரமலான் (4) லஞ்சம் (4) லண்டன் (4) லெ.மு.செ.அபுபக்கர் (4) லைலதுல் கத்ர் (4) வரதட்சனை (4) வலைப்பூக்கள் (4) வாப்பா (4) வாழ்கை (4) வாழ்கைப் பயணத்தில் உறவுகள் (4) வாழ்வியல் (4) விலைவாசி (4) விளையாட்டு போட்டிகள் (4) வெளிநாடு (4) வெளிநாட்டு வாழ்க்கை (4) ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (4) ஷேக் முகைத்தீன் (4) ஹைதர் அலி ஆலிம் (4) -அபூஹாஷிமா (3) 1977 (3) 23 (3) AIM (3) CMN SALEEM (3) Darul Islam Family (3) Dhua (3) TAMS (3) aamf (3) abu easa (3) avnv (3) eye care (3) shafi ahamed (3) sv (3) tmmk (3) ஃபித்ரு (3) அகம் (3) அகல இரயில் பாதை (3) அச்சம் (3) அஜிஜுதீன் (3) அண்ணா (3) அதிராம்பட்டினம் (3) அதிரை வரலாறு (3) அன்புடன் மலிக்கா (3) அபு இஸ்மாயில் (3) அபுஈசா (3) அபுசாருக் (3) அபுபக்கர் (3) அப்துர் ரஹீம் ஜமீல் (3) அமைதி (3) அரஃபா (3) அரஃபாத் (3) அறிக்கை (3) அறிவிப்பு (3) அலாவுதீன் (3) அவசரம் (3) ஆம்புலன்ஸ் (3) ஆய்வுக் கட்டுரை (3) ஆவணப்படம் (3) ஆஷிக் அஹமது (3) இசை (3) இட ஒதுக்கீடு (3) இட ஒதுக்கீடும் (3) இன ஒதுக்கீடும் (3) இனிக்க (3) இன்று ஒரு தகவல் (3) இரயிலடி (3) இரயில் (3) இர்ஷாத் (3) இறைத்தூதர் (3) இலக்கணம் (3) இலங்கை முஸ்லீம்கள் (3) இலவசம் (3) இழப்பு (3) இஸ்மாயில் நபி (3) இஸ்லாமிய ஆட்சி (3) உரையாடல் (3) உலக செய்திகள் (3) உலகம் 2010 (3) உள்ளாட்சி தேர்தல் (3) ஊக்கம் (3) எம்.காம். (3) எம்ஜிஆர் (3) ஒடுக்கு இடர் (3) ஒளரங்கசீப் (3) கடல் (3) கடுதாசி (3) கமிட்டி (3) கருகும் காதல் (3) கருணாநிதி (3) கலந்துரையாடல் (3) கல்வித் தந்தை (3) கா.மு.கல்லூரி (3) காதிர் முகைதீன் (3) குடி (3) குணம் (3) குற்றாலம் (3) குளம் (3) குளிர் (3) குழப்பம் - ஆலோசனை - தீர்வு (3) கூடங்குளம் (3) கேள்விகள் (3) கொடைக்கானல் (3) சபிதா காதர் (3) சமோசா (3) சம்சுல் இஸ்லாம் சங்கம் (3) சவுதிஅரபியா (3) சஹன் (3) சாகுல் ஹமீத் (3) சாப்பாடு (3) சிக்கனம் (3) சிங்கப்பூர் (3) சுத்தம் (3) சுனாமி (3) செக்கடி மோடு (3) செலவு (3) ஜமீல் M.ஸாலிஹ் (3) டாக்டர் (3) த.மு.மு.க. (3) தந்தை (3) தமிழ் வளர்ந்த நினைவுகள் (3) தர்கா (3) தர்பியத் (3) தாய்மை (3) தினசரிகள் (3) திமுக (3) தியாகத் திருநாள் (3) திருக்குர்ஆன் (3) திறன் (3) தீவிரவாதம் (3) தொப்பி (3) தோழர்கள் (3) நடுத்தெரு (3) நபி (3) நாஞ்சிலன் (3) நிஜாம் (3) நினைக்க (3) நிம்மதி (3) நேர்மை (3) நேர்வழி (3) நோய் (3) படிப்பினை (3) பட்ஜெட் (3) பட்டம் (3) பணம் (3) பத்ரு யுத்தம் (3) பயணக் கட்டுரை (3) பயம் (3) பயான் (3) பயிற்சி முகாம் (3) பரிசு (3) பாராளுமன்றம் (3) பாலியல் வன்முறை (3) பினாங்கு (3) பிப்ரவரி 14 (3) புண்ணியவான் (3) பெண் கல்வி (3) பெருநாள் சந்திப்பு (3) பேய் (3) பொய் (3) மகள் (3) மதமாற்றம் (3) மதீனா (3) மதுவிலக்கு (3) மனது (3) மனிதம் (3) மனிதவளம் (3) மன்னிப்பு (3) மலரும் (3) மவுனம் (3) மஹர் (3) மாடு (3) மாட்டுகறி (3) மார்க்க சொற்பொழிவு (3) மார்க்கக் கல்வி (3) மின்னஞ்சல் (3) மு.செ.மு. (3) முகநூல் (3) முத்துப்பேட்டை (3) முன்னாள் மாணவர்கள் (3) முற்போக்கு கூட்டணி (3) முஸ்லிம் சாதனை (3) மூக்கு கண்ணாடி (3) மூளை (3) மெதுவடை (3) மெளனம் பேசியதே (3) மேகம் (3) மோடி (3) ரசனை (3) வட்டி (3) வதந்தி (3) வரவேற்பு (3) வலைக்காட்சி (3) வாக்கு கொடுத்தல் (3) வாங்க (3) வாடா (3) வாழ்த்து (3) வாவன்னாசார் (3) விடுதலை (3) விடுப்பு (3) விண்ணப்பம் (3) வித்தியாசமானவர்கள் (3) வின்வெளி (3) விருந்தோம்பல் (3) விவாதக் களம் (3) வேகம் (3) வேலை வாய்ப்பு (3) ஷேக் ஜலாலுதீன் (3) ஸஹாபிய பெண்கள் (3) ஹராம் (3) +2 தேர்வு முடிவுகள் (2) 06122010 (2) 10 வகுப்பு 2010 (2) 1995 (2) 80/90 (2) ABM (2) AET (2) December-6 (2) ECR சாலை (2) ENT (2) HAJ 2012 (2) IAS தேர்வு (2) IPL (2) KMHSc. (2) KVS. (2) Lives (2) M.Y.முஹம்மத் (2) Motor Bike Riders (2) NAS (2) Rafeeq (2) Risky (2) SELAMAT HARI RAYA (2) Shahnaz (2) Student (2) U.A.E. (2) affa (2) air india (2) alumni (2) an news (2) book (2) broad gauge (2) camera (2) cmp (2) cute (2) decision (2) diabetes (2) do not disturb (2) dua (2) eye (2) facebook (2) flash back (2) food (2) india (2) library (2) live (2) making of படிக்கட்டுகள் (2) marriage (2) mk1 (2) motivation (2) mychoice (2) networking (2) news (2) password (2) peer mohammed (2) politics (2) prayer (2) q12 (2) ramadan (2) shafi (2) silence please (2) tntj (2) walking (2) www.adirainirubar.in (2) yasir (2) youth (2) ஃபெஸ்டிவல் (2) ஃபோட்டோகிராஃபி (2) அ.ர.ஹிதாயத்துல்லாஹ் (2) அஃப்சல் ஹுசைன் (2) அசத்தல் மொழி (2) அசத்தல் மொழிகள் (2) அச்சு (2) அணு உலை (2) அதி அழகு (2) அதிமுக (2) அதிரை உலா (2) அதிரை எக்ஸ்பிரஸ் (2) அதிரை கல்விச் சேவையகம் (2) அதிரை பசுமை 2020 (2) அதிரை மொழி (2) அதிரைகாரன் (2) அதிரைத் தென்றல் (CMP Ifran) (2) அதிரைநிருபரின் நிழல்கள் (2) அதிரைபட்டினம் (2) அதிரைப்பட்டினம் (2) அதிரைமணம் (2) அதிரையின் முத்திரை (2) அது ஒரு அழகிய மழைக்காலம் (2) அநீதி (2) அந்நிய முதலீடு (2) அந்நியர் முதலீடு (2) அனைத்து முஹல்லா (2) அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (2) அபூ முஸ்அப் (2) அபூசுஹைமா (2) அபூஹாமித் (2) அபூஹாஷிமா (2) அப்துல் ரசீத் ஆலிம் (2) அமானிதம் (2) அம்மாபட்டினம் (2) அம்மார்(ரலி. அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (2) அரசியல் ஜெயலலிதா (2) அரசியல்வாதி (2) அரசு (2) அரசு வேலை (2) அர்த்தம் (2) அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (2) அறிந்தும் அறியாமலும் (2) அறிமுகம் (2) அற்புதம் (2) அலங்காரம் (2) அலி (2) அலுவலகம் (2) அலைபேசி (2) அல்மனார் செண்டர் (2) அழுத்தம் (2) அழைப்புப் பணியின் அவசியம் (2) அழைப்புப்பணி (2) அவனா யிராதே (2) ஆகாயம் (2) ஆசிட் (2) ஆசிரியர் பணி (2) ஆசை (2) ஆசைகள் (2) ஆடை (2) ஆட்டோ (2) ஆணாதிக்கம் (2) ஆராய்ச்சி (2) ஆஷிக் முஹம்மத் (2) இணையத்தில் வலைவீச்சு (2) இணையம் (2) இதுதான் இஸ்லாம் (2) இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு (2) இந்திய முஸ்லீம்கள் (2) இபுறாகீம் அன்சாரி (2) இப்போது எல்லோரும் எழுதலாம் (2) இயக்க மயக்கம் (2) இயக்கம் (2) இயற்கை சீற்றம் (2) இருதய சிகிச்சை (2) இறப்பது (2) இறுதி கடமை (2) இறைவனிடம் (2) இறைவன் (2) இறைவழிபாடு (2) இலக்கிய மன்றம் (2) இலங்கை (2) இலைகள் (2) இவனா யிரு (2) இவர்கள் (2) இவ்வுலகம் அழிவை நோக்கி செல்கிறதா? (2) இஸ்லாத்தில் குற்றவியல் சட்டங்கள் (2) இஸ்லாமிய வருடப்பிறப்பு (2) இஸ்லாமியப் பொருளாதரம் (2) ஈத்கா (2) ஈமான் (2) ஈழம் (2) உடற்பயிற்சி (2) உணர்ந்தவை (2) உண்மை வரலாறு (2) உண்மைகள் (2) உதவி திட்டம் (2) உன்னப்பனின் விண்ணப்பம் (2) உம்மா (2) உம்மு சுலைம்(ரலி) (2) உரிமை (2) உருவப்படம் வரைதல் (2) உலகம் 2011 (2) உளவு (2) உழைப்பில்லா உடல்களும் (2) ஊடக தீவிரவாதம் (2) ஊட்டி (2) ஊர் (2) ஊர் நலன் (2) எங்க சார் (2) எங்க டீச்சர் (2) எங்கே அமைதி (2) எண்ணங்கள் (2) எதற்காக? (2) எதிரிப்பு (2) எதில் கஞ்சத்தனம் (2) எத்தி வைப்பு (2) எத்தியோப்பியா (2) எந்தப் பாதை உங்கள் பாதை? (2) எனக்குத் தெரிந்த இஸ்லாம் (2) என்பது (2) எம்.ஃபில். (2) எழுத்து (2) எழுத்தும் (2) ஏன் ஹிஜாப் (2) ஏர் இந்தியா (2) ஏழை (2) ஐரோப்பா (2) ஒப்பந்தம் (2) ஒருங்கிணைந்த (2) ஒருங்குறி (2) ஒழுக்கம் (2) ஓடுகாலி (2) ஓர் இஸ்லாமிய பார்வை (2) கஞ்சி (2) கஞ்சி வருதப்பா (2) கடன் தள்ளுபடி (2) கடன் வாங்கலாம் வாங்க (2) கடற்கரை (2) கடற்கரைத் தெரு கந்தூரி (2) கடற்கரைத்தெரு புளியமரம் (2) கடவுச் சொல் (2) கடை (2) கணவன் (2) கண்டிக்கிறோம் (2) கண்தானம் (2) கதையல்ல நிஜம் (2) கந்தூரி தடை (2) கபுர் (2) கப்ரு (2) கருமையும் (2) கலரி (2) கலைஞன் (2) கல்யாணம் (2) கல்வி முறை (2) கல்வி விருது (2) கல்வியும் கற்போர் கடமையும் (2) கவனம் (2) கவிக்கோ அப்துல் ரகுமான் (2) கா.அப்துல் கபூர் எம்.ஏ. (2) காட்சி (2) காட்டுப் பள்ளி (2) காணொளி உரை (2) காதர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி (2) காமராசர் (2) காற்று (2) காலை (2) காவல்துறை (2) காவேரி (2) கி.பி: 2011 அது ஒரு மழைக்காலம் (2) கிரிக்கெட் (2) குகை (2) குஜராத் (2) குஞ்ஞாலி (2) குடி தண்ணீர் (2) குணக்குன்று (2) குத்துச் சண்டை (2) குப்பை தொட்டி (2) குறை (2) கூட்டணி (2) கேரளா (2) கையேந்துங்கள் (2) கொசு (2) கொடுமை (2) கொண்டாட்டம் (2) கொலை (2) கொழும்பு (2) கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (2) கோபம் (2) சத்தம் (2) சபுறு (2) சமச்சீர் கல்வி (2) சமரசம் (2) சமுதாய சீர்கேடு (2) சமூக மாற்றங்கள் (2) சம்சுல் இஸ்லாம் (2) சம்பாதித்தால் (2) சர்க்கரை (2) சவால் (2) சவால்கள் (2) சஹர் (2) சாத்தியமா? (2) சான்பிரான்சிஸ்கோ (2) சிகிச்சை (2) சிதறல்கள் (2) சித்தீக் பள்ளி (2) சிந்தனை துளி (2) சின்ன வயசு (2) சிராஜ் உத்-தெலா (2) சிரிப்பு (2) சிறப்பு (2) சிலந்தி வலை (2) சீனி (2) சுயம் அறிக (2) சுர்மா (2) செயற்க்கை கோள் (2) செய்திகள் (2) செய்யுமிடத்தில் (2) செய்வீர் (2) சேவை (2) சொத்து (2) சோதிடம் (2) சோம்பேறி (2) சோறு (2) ஜஃபருல்லாஹ் (2) ஜமாஅத் (2) ஜஹபர் சாதிக் (2) ஜாஃபருல்லாஹ் (2) ஜித்தா (2) ஞாபகம் வருதே (2) டாக்டர் அப்துல்லாஹ் (2) டிசம்பர் (2) தன்னபிக்கை (2) தன்னிலை சுகாதாரம் (2) தமிழ் நாடு (2) தமிழ்நாடு (2) தமிழ்நாட்டில் (2) தலைமை ஆசிரியர் (2) தலையங்கம் (2) தலைவர் (2) தலைவர்கள் (2) தவறு (2) தாகம் (2) தாக்குதல் (2) தான தர்மம் (2) தாய்மொழி (2) திக்ரு (2) திடல் தொழுகை (2) தினம் (2) தியாகப் பெருநாள் சிந்தனை (2) தியாகம் (2) திருட்டு தடுக்க (2) திருவிழா (2) திரை (2) திறமை (2) தீ (2) தீமை (2) துணைத் தலைவர் (2) தூண்கள் (2) தூய்மை (2) தென்றல் (2) தெளிவு (2) தேர்தல் களம் (2) தேர்வு (2) தொந்தரவு (2) தொன்னூறு (2) நடுப்பக்கத்தில் நட்சத்திரம் (2) நடுவுல கொஞ்சம் நட்சத்திரங்களைக் காணோம் (2) நபி(ஸல்) (2) நம்ம ஊர் (2) நம்மளுக்கு (2) நற் குணங்கள் (2) நலமில்லா நவீனமும் (2) நாட்டு நடப்பு (2) நாணம் (2) நாற்காலி (2) நாற்பது (2) நினனவுகள் (2) நினைவூட்டல் (2) நியூயார்க் (2) நிறம் மாறும் மனிதர்கள் (2) நிறைவுரை (2) நிலநடுக்கம் (2) நூருல் இப்னு ஜஹபர் அலி (2) நூல் (2) நெசவுத் தெரு (2) நெனப்பு (2) நேபாளம் (2) நேரலை (2) நேருக்கு நேர் (2) நேர்காணல் (2) பகதூர்ஷா ஜாஃபர் (2) பகுத்தறிவாளர்களின் மதம் (2) பக்கத்து ஊர் செய்திகள் (2) பக்கீர் முஹம்மது (2) பங்கு (2) பசுமை (2) பசுமை அதிரை 2020 (2) பட்டுக்கோட்டை (2) பணி (2) பண்பு (2) பதிவர்கள் (2) பயிற்சி (2) பரிவு (2) பரீட்சை நேரம் (2) பர்ஜ் கலிஃபா (2) பர்மா தேக்கு வீட்டுக்காரர் (2) பள்ளி (2) பஷீர் அஹம்து (2) பாடம் (2) பானு என்றென்றும் (2) பாம்பன் பாலம் (2) பாருக்குள்ளே நல்ல நாடு (2) பிடித்தது (2) பின்னூட்டம் (2) பின்னூட்டவாதி (2) பிரதமர் (2) பிரதர் (2) பிரியமில்லா பிரிவு (2) பிறப்பது (2) பிறமதம் (2) பிலால் (ரலி) (2) பிலிப்பைன்ஸ் (2) புகார் (2) புகைப் பிடித்தல் (2) புகைப்பட பொழுதுகள் (2) புகைப்படம் (2) புதிய பள்ளிவாசல் (2) புதிய மத்திய அரசு (2) புதுக்கிப்படாத திருமணங்கள் (2) புதுமை (2) புரிந்துணர்வு (2) புலவர் (2) பூகம்பம் (2) பெண்ணீயம் (2) பெண்ணுக்கு வீடு (2) பெண்ணுறிமை (2) பெண்ணே (2) பெரியவர்கள் (2) பேருந்து (2) பொட்டிக்கடை (2) பொற்காலம் (2) போடுங்கள் (2) போர் அடிக்குது (2) போஸ்டர் (2) மகளிர் (2) மடமை (2) மணமகன் (2) மணமகள் (2) மணிமாலை (2) மதச்சாயம் (2) மதிப்பு (2) மதிப்புரை (2) மதிப்பெண்கள் (2) மதீனாவில் நோன்பும் பெருநாளும் (2) மந்தி (2) மனசாட்சி (2) மனனம் (2) மனு (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா ? (2) மன்றம் (2) மயக்கம் (2) மரண அறிவிப்பு (2) மரபுக் கவிதை (2) மருதநாயகம் (2) மர்யம் ஜமீலா (2) மறந்தவைகள் (2) மறுமை நாள் (2) மலர் வனம் (2) மலேசியா பெருநாள் (2) மலேஷியாவில் ரமளான் (2) மாணவமணிகளுக்காக (2) மாணவிகள் (2) மாணவியின் (2) மாது (2) மானிடா (2) மாப்புளே (2) மாயை (2) மார்க்கம் (2) மாலை (2) மாவீரன் (2) மின்சாரவாரியம் (2) மீன்கள் (2) மீள்பதிவு (2) மு.செ.மு.நெய்னா முஹம்மது (2) மு.மேக்தா (2) முகமது பாரூக் (2) முசெமு (2) முஜாஹித் (2) முடிவுகள் (2) முத்தம் (2) முன்னோர்கள் (2) மும்பை (2) முஸ்தகீம் (2) முஸ்லிம்கள் (2) முஸ்லீம் (2) முஸ்லீம் குரல் (2) முஹம்மத் அலீய் (2) முஹர்ரம் (2) மூணுக்கு வந்த டவுட்டு (2) மூனாறு (2) மூளைக்கு வேலை (2) மெரினா (2) மை (2) மையம் (2) யா அத்தஹாக் (2) யார்தான் சொல்வது (2) யாவாரம் (2) ரமலான் சிந்தனை (2) ரமளானுக்கு பின் (2) ராமாயணம் (2) ரியாஸ் அஹ்மது (2) ரிலாக்ஸ் ப்ளீஸ் (2) ரேங்க் கார்டு (2) வங்கி (2) வயோதிகம் (2) வரமா (2) வருக (2) வர்த்தகம் (2) வறுமைக்கோடு (2) வலைப்பூ (2) வலைவீச்சு (2) வழமை (2) வழிமுறைகள் (2) வழியனுப்புதல் (2) வா.உ.சிதம்பரனார் (2) வாகனம் (2) வாங்கடா (2) வாநிலை (2) வாய்க்கால் (2) வாவன்னா சார் (2) விஞ்ஞானம் (2) விதை (2) விமான பயணமும் விபரீதமும் (2) விமானப் பயணம் (2) விமானம் (2) விரயம் (2) விளம்பரங்கள் (2) விவேகம் (2) வெண்மையும் (2) வெந்நீர் ஒத்தடம் (2) வெரசன (2) வெளிச்சம் (2) வெள்ளிநிலா (2) ஷஃபான் (2) ஷப்-ஏ-அராஅத்து (2) ஷவ்வால் (2) ஷஹ்லா (2) ஷாஃபி M.I. (2) ஸதக்கத்துல்லாஹ் (2) ஸனது (2) ஸூரத்துல் பகரா (2) ஸ்ரீலங்கா விமானம் (2) ஹசினா அப்துல் பாசித் (2) ஹஜ் 2011 (2) ஹஜ் பெருநாள் சந்திப்பு (2) ஹபீப் முஹம்மத் (2) ஹலால் (2) ஹாஜா முகைதீன் (2) ஹிதாயத்துல்லாஹ் (2) ஹைதர் அலி (2) “பசு” ‘மை’பூசி அடி‘மை’ ஆகும் இந்தியா. (2) 'e'மான் (1) 'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு (1) .அதிரை (1) 10 வகுப்பு CBSE (1) 100வது நாளில் (1) 10ம் வகுப்பு (1) 1435 (1) 1600 கோடி வழங்கிய வள்ளல் (1) 1930 (1) 1970 (1) 1980 (1) 1984 (1) 1987 (1) 1993 (1) 2002 (1) 2012-13 (1) 2015 (1) 2015-2016. பட்ஜெட் (1) 2050 (1) 25000 அடி (1) 5-ம் (1) 50 வது பதிவு (1) 6 (1) 6-ம் (1) AAF (1) ABC (1) ALM ஆண்டுவிழா (1) ATCO (1) AZHAR HUSSEIN (1) Abdul Rahman (1) Albaqavi.com (1) American Adirai Forum (1) American Adirai Forum [A A F] – இரண்டாவது அமர்வு (1) Any suspended coffee (1) B.ஜமாலுதீன் (1) BBC (1) Beware of killer offers in Dubai (1) Budget 2012 (1) CMN சலீம் (1) CMண் சலீம் (1) Cancer Awareness Program (1) Cataract (1) December (1) ETA (1) Easy life leads to lazy life (1) Engineering career (1) Final Year MBBS (1) GROUP-1 (1) Glaucoma (1) Gulfnews (1) HABIT (1) HAJ 2015 (1) I am the Greatest (1) IAS (1) IFT (1) India is my country (1) Islam (1) J.A.தாஜுதீன் (1) JMC (1) KMHSSc (1) KVS (1) LOGO (1) London (1) M S M(n) (1) M.B.B.S. (1) M.L.A ரெங்கராஜன் (1) M.S.முகமது மீராசாகிப் (1) MANAGEMENT CAREER (1) MBA (1) MEDICINE CAREER (1) MF (1) MKN Trust (1) MMS (1) MOTHER (1) MS அப்துல் கஃபூர் (1) MSM(r) (1) Moinudeen (1) Moorthy (1) Motion Sickness (1) Mujahid Razeen (Srilanka) (1) Munawar (1) Naming and Calling Spiritually and Personally (1) Nizar Ahamed (1) Nursery School (1) PJ (1) PhD (1) Right Understanding (1) S.H.அஸ்லம் (1) S.சித்தீக்.M.Tech (1) SIS (1) SSLC (1) SSLC. (1) School (1) Shahbaz Mohamed (1) Sports Day (1) Stop N Shop (1) Straight line Stationery (1) TNPSC (1) Truly Asia (1) U.Aboobacker (1) UAE National Day (1) Union Budget 2017 - 2018 (1) abdul khader (1) abu hanifa (1) ac (1) activities (1) adco (1) adirai businessman (1) adirai classified (1) adirai educational mission (1) adirai news (1) adirampattinam (1) afghan (1) after ramadan (1) ayda (1) back2School (1) beach street (1) boxer (1) burkhalifa (1) cbse சமச்சீர் கல்வி (1) cc Sabeer appa (1) channel (1) chennai (1) citizen of world (1) cobol (1) computer (1) convert to islam (1) country club (1) credit card (1) cults (1) current affairs (1) dad (1) dare to dream (1) dc (1) demonetization (1) different thinking (1) drop box (1) dynamic cellcom (1) e-தமிழர் (1) ecr (1) editor-choice (1) email (1) emirates ID (1) engineer (1) english (1) family card (1) family tree (1) folder (1) forward (1) friend request (1) friendship (1) gulf (1) haj 0215 (1) haji marra (1) health (1) history of Rasoolullah (1) homework (1) ibraheem ansari (1) incredible (1) indian muslims (1) influences (1) inneram (1) inter school quiz competition (1) islamic bank (1) islamic banking (1) kalaam (1) kaveri (1) kayal (1) lagoon (1) life (1) living (1) m.nainathambi (1) madina (1) magazine (1) makkah (1) media (1) medical (1) mens way (1) mirage (1) mmk (1) mms பஹுருத்தீன் (1) mnt (1) mohamed ali (1) mp (1) mpmv (1) msf (1) msm1 (1) mumbai (1) music (1) national flag (1) notice (1) online (1) our (1) pain worth it (1) parotta (1) peach n berry (1) photography (1) physical (1) picture of play (1) police (1) power (1) programming (1) publisher (1) queenie padilla (1) real estate 1 (1) sabee (1) sad (1) sbeer (1) sha an sha (1) shaficast (1) sham (1) sharing (1) sharjah (1) shirt (1) shirts (1) smart phones (1) son (1) sp பட்டினம் (1) speech (1) srilankan muslim (1) syed abdul hameed (1) syria children (1) tamil (1) thajudeen (1) thamemunansari (1) treatment (1) truly asia (1) tweet (1) update (1) urdu (1) version 4.01 (1) we support (1) welcome Ramadhan (1) wikileaks (1) y1 (1) youtube (1) ஃபஜர் தொழுகை (1) ஃபாரூக் (1) ஃபிலிம் (1) ஃபேக்புக் (1) ஃபேஸ்புக் (1) ஃபோட்டூன் (1) ஃபோட்டோ (1) ஃபோன் (1) ஃபோர்ட்டூன் (1) ஃப்ரெண்டு ரெகுஸ்ட் (1) அ.ர.முஹமது தஸ்தகீர் (1) அஇதிமுக (1) அகத்தின் அழகு (1) அகிலம் (1) அங்கீகாரம் (1) அசத்தல் (1) அசைவு (1) அஜினோமோட்டோ (1) அஜீஸ் (1) அஜ்மான் (1) அஜ்மாஸ் நோன்பு கஞ்சி (1) அட (1) அடப் பாவிங்களா ? (1) அடிக்கல் (1) அடிமை (1) அடிமை வணிகர் அந்-நுஐமான் (ரலி) (1) அடியேனின் அகரம் (1) அட்லாண்டா (1) அணிவகுப்பு (1) அணு (1) அணை (1) அண்ணன் (1) அண்ணன் தம்பி உறவு (1) அண்ணே ! (1) அதிகாரம் (1) அதிகாரி (1) அதிகாலை (1) அதிசயம் (1) அதியற்புதம் (1) அதிராம்பட்டினம் 2011 (1) அதிராம்பட்டினம் 2012 (1) அதிராம்பட்டினம்2011 [2] (1) அதிரை ஃபாரூக் (1) அதிரை அபூபக்கர் (1) அதிரை அஸ்ரப் (1) அதிரை அஸ்லம் (1) அதிரை ஆத்திச்சூடி (1) அதிரை இலக்கிய மாமன்றம் (1) அதிரை இஸ்லாமிக் மிஷன் (1) அதிரை கல்வி CD (1) அதிரை கல்வி அறக்கட்டளை (1) அதிரை கல்வி விழிப்புணர்வு (1) அதிரை கீழத்தெரு (1) அதிரை சித்தீக் பள்ளி (1) அதிரை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் (1) அதிரை தமுமுக (1) அதிரை பெருநாள் (1) அதிரை பெருமை (1) அதிரை பேரூராட்சி (1) அதிரை பொருட்காட்சி (1) அதிரை போஸ்ட் (1) அதிரை மாடு (1) அதிரை மாணவி (1) அதிரை வரலாற்றில் (1) அதிரை வள்ளல் (1) அதிரை வாசனை (1) அதிரைக் கடல் (1) அதிரைச் செய்தி (1) அதிரைமுஜீப் (1) அதிரையன் (1) அதிரையின் நிய்யத்து (1) அதிரையின் பூர்வ குடிமக்கள் (1) அதிரையின் விருந்து உபசரிப்புகள் (1) அதிரையில் (1) அதிரையில் பரவிவரும் அதிபயங்கர ஆபத்தான நோய் (1) அதிரையில் மழையாமே (1) அதிரையில் ஷவ்வால் நோன்பு - புறக்கனிக்கப்படுகிறதா (1) அதிர்ச்சிகள் (1) அது (1) அது ஒரு பொற்காலம் (1) அது ஒரு ஹஜ்ஜுப்பெருநாள் நேரம் (1) அந்த ஏழு நாட்கள் (1) அந்த திக் திக் நேரங்கள் (1) அந்தக் காலம் (1) அந்தரத்தில் (1) அந்தி (1) அனஸ்(ரலி) (1) அனுபவப் பாடம் (1) அனுமதி (1) அனைத்துத் தெருக்களும் அதிரையின் கருக்கள்.editorial (1) அன்னை (1) அன்னை ஆயிஷா சித்தீக்க(ரலி) (1) அன்னை கதீஜா மகளிர் கல்லூரி (1) அன்னையர் தினம் (1) அன்பளிப்புகள் (1) அன்பு (1) அன்புக் குறிப்புகள் (1) அன்புடன் புகாரி (1) அன்று பெய்தது மழை (1) அன்றைய நோன்பும் (1) அபராதம் (1) அபு பஜ்லு (1) அபு ஹனிஃபா (1) அபுமஹ்மூத் (1) அபுருமானா (1) அபுல் ஹசன் (1) அபுல்கலாம் ஆஷாட் (1) அபூ சுஹைமா (1) அபூ நூரா (1) அபூஇப்றாஹீம் (1) அபூபக்கர் (1) அபூபக்கர் ரழி (1) அபூஹனிஃப (1) அபூஹனிஃபா (1) அப்டேட் (1) அப்துர் ரஷீது ரஹ்மானி (1) அப்துர் ரஷீத் ரஹ்மானி (1) அப்துல் கறீம் (1) அப்துல் கலீம் (1) அப்துல் ஜப்பார் (1) அப்துல் நாசர் மதனி (1) அப்துல் ராஜிக் (1) அப்துல்லாஹ் (1) அப்பர் கோதையர் (1) அப்பா ஏசுவாஹ....(அதிரையின் மண் வாசனை) (1) அப்பாஸ் அலி (1) அமீரக தமிழ் மன்றம் (1) அமீருல் முஃமின் (1) அமெரிக்க அதிரையர்களின் கூட்டமைப்பு (1) அமெரிக்காவில் இறையில்லம் தீக்கிரை (1) அமைதியின் ஆளுமை (1) அமோஜான் (1) அம்மார்(ரலி. (1) அம்மாவைப் பிடித்த பேய் (1) அய்டா (1) அரஃபாத் 1987 (1) அரஅல (1) அரசினர் மேல்நிலை பள்ளி (1) அரசியலல்ல (1) அரசியல் களம் (1) அரசியல் முதல்வர் (1) அரசியல் வியாதிகளா? (1) அரசியல்வாதிகளா? (1) அரசு உதவிகள் (1) அரசு வேலை வாய்ப்பு (1) அரபிக் (1) அரபு நாடுகள் (1) அரபு நாட்டு பயணம் (1) அரபுலகம் (1) அரவணைக்க அருகதையற்றவர்களா அகதிகள் (1) அருட்பேறு (1) அருமறை (1) அரும்பு (1) அரும்பு பாட்டு (1) அரும்புப்பாட்டு (1) அரும்பேறு (1) அருளைச் சுமந்த ஹாஜிகளே...வருக (1) அருவி (1) அரேபியர்கள் (1) அர்-ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (1) அர்ப்பணிப்பு (1) அறிகுறிகள் (1) அறிந்து (1) அறியாமைக் காலம் (1) அறிவிப்பு சம்சுல் இஸ்லாம் சங்கம் (1) அறிவியல் பாங்கு (1) அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே (1) அற்பணிப்பு (1) அலகே ஆயுதம் (1) அலைகள் (1) அலைபாயுதே (1) அல்-கத்ர் (1) அல்ஜஸீரா (1) அல்மாஸ் (1) அல்ல (1) அல்லாஹ் யாரை நேசிக்கிறான் (1) அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் 99 (1) அல்லாஹ்வின் சக்தி (1) அல்லாஹ்வுக்கு நன்றி (1) அழகியல் (1) அழகு மொழி (1) அழகுக் குறிப்புகள் (1) அழிக்க திட்டம் (1) அழுகை (1) அழுவதற்கா (1) அழைப்பு பணி (1) அழைப்பு பணி மதமாற்றம் ஆகுமா (1) அவசர இழப்பு (1) அவசர உலகம் (1) அவன் (1) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும். சஹாபாக்கள் (1) அவலம் (1) அவளைச் சுற்றி (1) அவள் (1) அவஸ்தை (1) அவ்லியா (1) அஸார் (1) அஸ்மா(ரலி) (1) அஸ்மாவுல் ஹுஸ்னா அகவல் (1) அஸ்லம் (1) அஸ்லம் பாஷா (1) அஹமது பாக்கவி (1) அஹமது ஹாஜா (1) அஹமது ஹாஜி (1) அஹமதுல்லா ஷா (1) அஹ்மது (1) அஹ்மது அமீன் (1) அஹ்மது ஷஃபி (1) அஹ்மது ஹாஜா (1) அஹ்மத் தீதத் (1) ஆஃபியா புரூட் (1) ஆஃபீஸ் பாயும் - வெகேஷனும் (1) ஆஃப்பிரிக்கா (1) ஆகஸ்ட் (1) ஆக்ஃபோர்டு (1) ஆக்கமிடு அடுமடையா (1) ஆக்ரா (1) ஆசியாநெட் (1) ஆசிரியர்கள் (1) ஆசிரியைகள் (1) ஆசை கணவுகள் (1) ஆச்சர்யம் (1) ஆஞ்சியோ கிராஃபி (1) ஆடவரும் (1) ஆடு (1) ஆடையகம் (1) ஆட்சியதிகாரம் (1) ஆட்சியிழந்த கட்சி (1) ஆட்டம். (1) ஆட்டு மூளை (1) ஆண் (1) ஆண்கள் (1) ஆண்டவனே ஆள்பவனே (1) ஆண்டு விழா (1) ஆண்டுவிழா (1) ஆதரவு (1) ஆனந்தாவின் அபிநயம் (1) ஆனலைன் (1) ஆபூஇப்ராஹீம் (1) ஆப்பரேஷன் (1) ஆப்பிரிக்க (1) ஆப்பிள் (1) ஆப்ரேஷன் (1) ஆமினா முஹம்மது (1) ஆமை (1) ஆம் ஆத்மி (1) ஆயத்துல் குர்ஸி (1) ஆயிஷா பல் மருத்துவமனை (1) ஆய்ஷா ஃபாத்திமா (1) ஆரசியல் (1) ஆரிஃபா ஆலிமா (1) ஆர்நோத் வான் டோர்ன் (1) ஆர்வம் (1) ஆறிலிருந்து அறுபதுவரை (1) ஆறு (1) ஆலிம்சா (1) ஆளுக்கொரு சட்டம் (1) ஆளும் கட்சி (1) ஆளும் வளரனும் அறிவும் வளரனும் (1) ஆளூர் ஷாநவாஸ் (1) ஆவ்மியாக்கா (1) ஆஷி அஹ்மத் (1) ஆஷிக் அஹ்மத் (1) ஆஹா (1) இஃப்தார் (1) இக்கணம் (1) இக்றா (1) இங்கு எது முடியும் (1) இடர்கள் (1) இடி (1) இடியப்பம் (1) இடியாப்பம் (1) இடைத்த் தேர்தல் (1) இணைவத்தல் (1) இணைவைப்பு (1) இதயதளம் (1) இது எப்படி இருக்கு (1) இந்த வார செய்தி (1) இந்தக் காலம் (1) இந்தப் பாதை (1) இந்தவுளே (1) இந்திய அரசியல் (1) இந்திய ஊடகங்கள் (1) இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கு (1) இந்திய சுந்தந்திர தினம் (1) இந்திய ரூபாய் (1) இந்தியா சுதந்திர தினம் 1947 (1) இந்து (1) இந்துத்துவா (1) இந்தோனேஷியா (1) இந்நேரம் (1) இனப்படுகொலை (1) இனிக்கிறது (1) இனிமை (1) இனிய (1) இனிய திசைகள் (1) இன்டர்வியூ (1) இன்னுமா தயக்கம் (1) இன்பம் (1) இன்று 10.01.2011 (1) இன்று 18 02 2011 (1) இன்று இரு தகவல் (1) இன்று இரு தகவல்கள் (1) இன்று நாளை (1) இன்றும (1) இன்றைய வீம்பும் (1) இன்ஷூரனஸ் (1) இபுராகீம் அன்சாரி (1) இப்தார் நிகழ்ச்சி (1) இப்னு அப்பாஸ் (1) இப்ராஹீம் (1) இப்றாகிம் அன்சாரி (1) இமாம ஷாஃபி பள்ளி (1) இமாம் (1) இமாம் அபூஹனீஃபா (1) இமாம் புகாரீ (1) இமாம் ஷாஃபி (1) இம்தாதி (1) இயக்க வெறி (1) இயக்கங்கள் (1) இயற்கை இன்பன் (1) இயற்கை எங்கே (1) இரங்கற்பா (1) இரங்கல் (1) இரண்டாம் ஆண்டு (1) இரயில்வே (1) இரவேலர்கள் (1) இராஜமடம் (1) இராணுவம் (1) இராமநாதபுரம் (1) இருட்டு (1) இருதயம் (1) இருளும் ஒளியும் (1) இருவேறு துருவங்கள் (1) இர்ஃபான் (1) இறக்கை (1) இறக்கை கட்டிப் பறக்குதய்யா (1) இறப்பு (1) இறுதி மூச்சு (1) இறுதியாண்டு (1) இறை வசனங்கள் (1) இறைமறை (1) இறைமார்க்கம் (1) இறையச்சமுள்ள தந்தை (1) இறையச்சம் (1) இறையில்லத்தில் யாருடன் மல்லுக் கட்டுகிறார்கள் (1) இறைவனின் கூலிப்படைகள் (1) இறைவனுக்கு நன்றி (1) இறைவேதம் (1) இலக்கு (1) இலங்கை தமிழனின் இதையக் குரல் (1) இலட்சினை (1) இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் (1) இலவச மருத்துவ முகாம் (1) இலை (1) இல்ம் (1) இல்லறம் (1) இல்லல்லாஹ் (1) இல்லாள் (1) இளம் மனைவின் கடிதம் (1) இஸலாம் (1) இஸ்மாயில் ஸலஃபி (1) இஸ்லாத்திற்காக (1) இஸ்லாத்திற்கு எதிரான (1) இஸ்லாமிய தீவிரவாதம் (1) இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் (1) இஸ்லாமிய வரலாறு (1) இஸ்லாமிய வரலாற்று மின்னொளிகள் (1) இஸ்லாமியப் பாரவை (1) இஸ்லாம் மதத்திற்கு ஐரோப்பாவின் கடன் (1) ஈடிணையற்ற இறைவா (1) ஈத்மிலன் (1) ஈன்ற பொழுதின் (1) ஈமெயில் (1) ஈர நெஞ்சம் (1) ஈராக் (1) ஈர்ப்பு (1) உ.பியில் துவங்கவிருக்கும் போர் (1) உங்கள் ஓட்டு விறபனைக்கு அல்ல (1) உங்கள் வீட்டுத் திருமணத்தில் இது இருக்கா (1) உசுரு (1) உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு (1) உடல் ஆரோக்கியம் (1) உடல் பயிற்சி (1) உணர்வுகள் மூன்று (1) உண்டாயிருக்கேன் (1) உண்ணாவிரதம் (1) உண்மைச் சம்பவம் (1) உதவியது இஸ்லாம் (1) உன்டகலியான் அதிரையரின் உணவு (1) உன்னை அறி (1) உப்பு (1) உமர் (1) உமர் (ரலி) (1) உமர் கையாம் (1) உமர் ஷரீப் முப்தி (1) உமர்தம்பி (1) உம்மா'ன்டா சும்மாவா ? (1) உம்மி மக்தூம் (1) உம்ரா (1) உயர் கல்விக்கு உதவித் தொகை (1) உயிரெழுத்துகள் (1) உயிர் (1) உயிர்க் கொத்திப் பறவை (1) உரிமைகள் (1) உருகிய எதிர்ப்புகள் (1) உருகுதே அதிரை (1) உருக்கம் (1) உரைநடை (1) உர்து (1) உறவின் பிரிவு (1) உறவு வளர்ப்போம் (1) உறவுகள் எங்கே (1) உறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள் (1) உறுப்புகளின் நோய் (1) உலக அதிசயம் (1) உலகக் கோப்பை (1) உலகமயம் (1) உலகம் எப்படி உருவானது (1) உலகின் தலைசிறந்த பணக்காரர் (1) உலோகப்பறவை (1) உல்லாசம் (1) உளத்தூய்மை (1) உளவியல் (1) உளுச் செய்வது (1) உள்குத்து (1) உள்ளம் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சி த் தேர்தல் (1) உள்ளாட்சித் தேர்தல் (1) உள்ளே (1) உழை (1) உழைப்பு (1) உஸ்மான்(ரலி) (1) ஊடக (1) ஊடக தேர்தல் பிரச்சாரம் 2016 பதிலடி (1) ஊடக விபச்சாரம் (1) ஊடகங்கள் (1) ஊடங்கள் (1) ஊனம் (1) ஊராட்சி (1) ஊரோடு உறவாடு (1) ஊர் செய்தி (1) ஊர் நடப்பு (1) ஊர் நினைவுகள் (1) ஊர் பார்வை (1) ஊர்க்காரர் (1) ஊர்வன (1) எக்ஸ்க்யூமி (1) எக்ஸ்பிரஸ் (1) எங்க முதலாளி (1) எங்கவூர் மாப்பிள்ளை (1) எங்கே (1) எங்கே நேரம் (1) எங்கே வீழ்ந்தோம் (1) எங்ஙனம்? (1) எச்சில் (1) எஞ்சினியர் (1) எடு-இட்டோர்-இயல் (1) எண்ணமும் (1) எண்ணம் (1) எண்ணிலடங்கா (1) எண்ணெய் (1) எதிரி (1) எதுக்கும் நல்ல மனசு வேணும் (1) எத்தீம்கானா (1) எந்தையே (1) எனக்காக (1) எனதூர் (1) என் ஃப்ரண்டப் போல யாரு மச்சான் (1) என் கண்ணான வாப்பாவே (1) என் கனவு (1) என் கேள்விக்கென்ன பதில் (1) என் பார்வை (1) என் மொழி (1) என் வீட்டுத் தோட்டத்தில் (1) என்.ஷஃபாத் (1) என்கவ்ன்ட்டர் (1) என்ன (1) என்ன கொடுமை (1) என்னாட்டின் (1) என்னால் இயன்ற அறம் (1) என்னைக் கண்டெடுத்தேன் (1) எபிக் வெப் பிரவுசர். (1) எப்படி அவர்களை மன்னிப்பேன் (1) எப்படிப் பிறந்தாய் நீ (1) எப்படியும் மரணம் முடிவாகி விட்டது (1) எப்புடீ (1) எம்.ஃபில் (1) எரிகல் (1) எர்மைல் தவாலும் (1) எறச்சி (1) எலும்பு உறுதிதன்மை (1) எலும்பு கூடு (1) எல்லாப் புகழும் இறைவனுக்கு (1) எல்லை (1) எல்லைக் கோடு (1) எழுதியதல்ல (1) எழுது (1) எழுத்தியல் (1) எழுவதற்கா? (1) ஏகத்துவம் (1) ஏஞ்சலா கொலின்ஸ் (1) ஏனெனில் திமிர் (1) ஏப்ரல் 1 (1) ஏமாற்றமா (1) ஏர்வாடி (1) ஏற்ற நாடு (1) ஏற்றமா (1) ஏழை மாணவர்கள் (1) ஏழ்மை (1) ஐ.ஏ.எஸ். (1) ஐ.பி.எல். கிரிக்கெட் (1) ஐக்கியம் (1) ஐந்து (1) ஐஸிஐ (1) ஐஸ்கிரீம் (1) ஒத்தடம் (1) ஒத்துமை (1) ஒரு உரையாடல் With சீனிவாசன் சார். (1) ஒரு கோணல் பார்வை (1) ஒரு ச்சிக்குபுக்கு பாதை (1) ஒரு பிள்ளையின் ஏக்கம் (1) ஒற்றுமை அழைப்பு (1) ஒற்றுமையே பலம் (1) ஒற்றுமை் (1) ஒற்றையாய் (1) ஒலி (1) ஒளரங்கசீப் நான்மணி மாலை (1) ஒளி (1) ஒளி வீசுமுன் (1) ஓடி விளையாடு (1) ஓடை (1) ஓர் அன்னையால் தன் மகனை எப்படி விற்க முடியும் (1) ஓர் ஆய்வு (1) ஓர் பார்வை (1) ஓலை (1) ஔரங்கசீப் நான்மணி மாலை (1) கசையடி (1) கஜினி முகமது (1) கஜ்ஜாலி (1) கஞ்சத்தனம் (1) கடன் அட்டை (1) கடமை (1) கடமைகள் (1) கடற்படை (1) கடி (1) கடி ஜோக்ஸ் (1) கடைத்தெரு (1) கட்சி (1) கட்சிகளின் தந்திரம் சுதந்திர தினம் (1) கட்டிடம் (1) கட்டுபாடு (1) கட்டுப்பாடு (1) கட்டுரைகள் (1) கணகள் இரண்டும் (1) கணினி தமிழ் (1) கண் தானம் (1) கண் பாதுகாப்பு (1) கண் பார்வை விழிப்புணர்வு (1) கண் மருத்துவம் (1) கண்காட்சி (1) கண்ணீர் (1) கண்பார்வை (1) கண்புரை (1) கண்மணி அன்போடு நான் (1) கதைகள் (1) கத்தனா (1) கந்தவரு (1) கந்தூரி மடமை (1) கந்தூரி வழிகேடு (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கனவும் நனவும் (1) கன்னிப் பதிவு (1) கபுரை இடிக்க வேண்டுமா? (1) கமாலுதீன் மதனி (1) கம்பி (1) கம்பியில்லா தொடர்பு (1) கம்யூனிசம் (1) கம்ளைண்ட் (1) கயவர்கள் (1) கரகரப்பு (1) கரன்ஸிக் களேபரங்கள் (1) கருணை (1) கருத்தாய்வு (1) கருத்து முரண்பாடுகள் (1) கருப்பு எலி (1) கருமையும் வெண்மையும் (1) கரும்புகை (1) கருவளையம் (1) கருவேலமரம் (1) கர்ப்பினி பெண்களுக்கு (1) கர்ழன் ஹஸனா (1) கறி (1) கறை (1) கற்கை (1) கலக்குங்க (1) கலப்படம் (1) கலரிச் சாப்பாடு (1) கலவியின் அவசியம் (1) கலாச்சார (1) கலிஃபா டவர் (1) கலிஃபோர்னியா (1) கலிஃபோர்னியா மாகாணம் (1) கலெக்டர் (1) கலை (1) கலைஞர் (1) கல்ந்துரையாடல் (1) கல்லும் (1) கல்வி நேரமில்லை (1) கல்வி மாநாடு (1) கல்வி வளர்ப்போம் (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு நேரலை. கல்வி விழிப்புணர்வு (1) கல்விக் கூடம் (1) கல்வித்துறை (1) கல்வியாண்டு (1) கல்வியாளார்கள் (1) கல்வியும் கற்போரின் கடமையும் (1) கல்வியும் கற்போர் க்டமையும் (1) களஞ்சியம் (1) கள்ளக்காதல் (1) கழிப்பிடத்தில் (1) கவனமாக கேளுங்கள் (1) கவலை நேரத்திலும் கவிதையா (1) கவிக்கோ (1) கவிஞன் (1) கவிஞர்கள் (1) கவிதை கிரவ்ன் (1) கவிதை சபீர் அஹ்மது (1) கவிதை வாப்புச்சா (1) கவிதைக் காணொளி (1) கவிதைப் பேட்டி (1) கவிதையல்ல (1) கவிதையே தெரியுமா ? (1) கவிநடை (1) கவியனபன் (1) கவியுரையாடல் (1) கவுரவம் (1) காகிதம் (1) காக்கை (1) காசிருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா (1) காடுகள் (1) காணவில்லை (1) காதலர்கள் (1) காந்தி நாட்டு இஸ்லாமியன் (1) கானல் நீர் (1) கானா (1) கான் அகடமி (1) கான்சல (1) காப்பி அடிக்கிறது (1) காப்பீடு (1) காமெடி (1) காயல்பட்டினம் (1) காரை வீடுகள் (1) காற்றலை (1) காற்றாழையும் (1) காலண்டர் (1) காழ்ப்பு (1) காவந்து பண்ணும் கலை (1) காவல் (1) காவல் நிலையம் (1) காவி தீவிரவாதி (1) காவித்துறை (1) காஷ்மீர் (1) கிரடிட் கார்டு (1) கிரவ்னு (1) கிரஸண்ட் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (1) கிளாஃபத் (1) கிள்ளித் திரிந்த காலம் (1) கிழவி (1) கிழிந்தது. (1) கிஷார் முஹம்மது. (1) கிஸ்ஸாஸ் (1) கீற்று (1) கீழக்கரை (1) குஜராத் கலவரம் (1) குஜாராத் (1) குஞ்சுகளும் (1) குடியரசுதினம் (1) குடும்ப அட்டை (1) குடும்பங்களின் சந்திப்பு (1) குடும்பன் குறிப்புகள் (1) குடைக்குள் மொட்டு (1) குப்பகள் (1) குப்பை (1) குயினி படில்லா (1) குரல் (1) குருதி (1) குருவி (1) குருவியும் (1) குர்ஆன் ஓதுதல் (1) குர்ஆன் சுன்னா (1) குர்பானி (1) குறிக்கோள் (1) குறிப்புகள் (1) குறைபாடுகள் (1) குறைவற்ற செல்வ (1) குற்றாலம் 2011 (1) குல்ல்லா (1) குளச்சல் (1) குளுக்கோமா (1) குழந்தை தொழில் (1) குழப்பம் (1) கூக்குரல்கள் (1) கூட்டணிக் கொட்டகைகள் (1) கூட்டணிக் கொள்கைகள் (1) கூட்டுத் தொழுகை (1) கூறு (1) கேடி (1) கேட்ட நினைத்த'வைகள்' (1) கேன்ஷல்ல அனுப்பிடுங்க (1) கேன்ஸரிலிருந்து தப்புவது எப்படி (1) கேரளம் (1) கேள்வி (1) கைகள் (1) கைகாட்டி கலாசாரம் (1) கைது (1) கொக்கு (1) கொசு ஒரு தொடர்கதை. (1) கொசுத் தொல்லை (1) கொஞ்சூண்டு (1) கொடு (1) கொடுவா மீனு (1) கொண்டாட்டம் கிரவ்ன் (1) கொண்டாட்டம் மட்டுமா பெருநாள் (1) கொல்லைப்புர தட்சனைகள் (1) கோ எஜுகேசன் (1) கோடி (1) கோடு உயர்ந்தது! குன்றம் தாழ்ந்தது (1) கோடை கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2016 (1) கோனார் ஹாஜியார் (1) கோப்பு (1) கோலாலம்பூர் (1) கோளாறு (1) கோள் (1) கோழி (1) க்ளாஸிக் (1) ஙே (1) சகக்ரை (1) சகன் (1) சகோதரகள் (1) சகோதரன் (1) சகோதரி (1) சங்கங்கம் (1) சங்கமம் (1) சங்கை மிகு ரமலான் (1) சட்டங்கள் (1) சட்டசபை (1) சட்டப்பேரவை (1) சட்டம் ஒழுங்கு பிரச்சினை (1) சட்டை (1) சதகா (1) சத்துணவு (1) சந்தேகம் (1) சந்தை (1) சந்தோஷம் (1) சன்டிகார் (1) சபிர் (1) சப்பிடலாம் (1) சமச்சீர் (1) சமய நல்லிணக்கம் (1) சமாதானக் கூட்டம் (1) சமாதி (1) சமுதாயம் (1) சமூக பிணைப்பு (1) சமூகம் (1) சரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 1 (1) சரி (1) சரித்திரம் (1) சர்தார்ஜி (1) சர்வீஸ் (1) சலுகை (1) சல்மான் கான் (1) சவுதி (1) சவுதியில் நடப்பது என்னா? (1) சவூதிச் சிறுமி லமா அல்-காமிதி (1) சாக்கடை (1) சாச்சா (1) சாச்சி (1) சாஜிதா புக் செண்டர் (1) சாதனயாளார் (1) சாதனைச் செம்மல் (1) சாதனைப் பெண்மனி (1) சாதி (1) சாதி ஒழிப்பு (1) சாதிக் பாட்சா (1) சான வயல் (1) சானவயல் (1) சாபமா (1) சாபாமா? (1) சாம்பல் (1) சார் (1) சார் பதிவாளர் (1) சார்ஜா (1) சார்ந்திருப்பவர்கள் (1) சாலைகள் (1) சி.எம்.பி.லைன் (1) சிகரம் (1) சிகெரட் (1) சிட்டுக்குருவி (1) சித்தப்பா (1) சிநேகிதிகள் (1) சிந்தனை அபு ஈசா (1) சிந்தனை ஏற்றத் தாழ்வு (1) சிந்தனைக் கோளாறு (1) சிந்தனைத் துறை (1) சிந்தியுங்கள் (1) சினிமா (1) சினிமாவும் முஸ்லீம்களும் (1) சின்னச் சின்ன ஆசைகள் (1) சிப்பி (1) சிப்பிக்குள் சூரியன் (1) சிரித்து (1) சிறப்பு நிகழ்வுகள் (1) சிறப்புரை (1) சிறுகதை (1) சிறுபன்மையினர் கல்லூரி (1) சிறுபான்மை (1) சிறுவர்கள் (1) சிறை (1) சில நேரங்களில் சில மனிதர்கள் (1) சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1) சிவகங்கை (1) சீ (1) சீச்சீ இந்த பழம் புளிக்கும் (1) சீதனமும் (1) சீதனம் (1) சீனப் பெண் (1) சீனா (1) சீரியல் (1) சுகங்கள் (1) சுடச்சுட அதிரை (1) சுட்டெரிக்கும் சூடு (1) சுட்டெரிக்கும் பாலையில் (1) சுதந்திர தினம் (1) சுதந்திர தினம் யாருக்கு (1) சுத்தமின்மை (1) சுப்ஹு (1) சுப்ஹு தொழுகை (1) சுமைய தாவூத் (1) சுமையா (1) சுமையாகிப்போனது (1) சும்மாதான் (1) சுய விளக்க உரை (1) சுயநலம் (1) சுரண்டல் (1) சுற்றித் திரியும் வாலிபமே (1) சுற்றுபுற சூழல் பாதுகாப்பு (1) சுவனத்தென்றல் (1) சுவனப்பிரியன் (1) சுவர்க்கம் (1) சூசன் பஷீர் (1) சூடு பறக்கும் விவாதம் (1) சூது சூழ் உலகு (1) சூனியம் (1) சூனியம் வைக்கத் தூண்டியது யார் (1) சூரத்தல் இஃக்லாஸ் (1) சூரத்துல் ஃபாத்திஹா (1) சூரத்துல் பஜ்ர் (1) சூரா லுக்மான் (31:32) (1) சூரியன் (1) செண்டர் (1) சென்சார் (1) சென்னை பல்கலைக்கழகம் (1) சென்ற வாரம் (1) சென்றுவா ரமளானே (1) செப்டம்பர் (1) செம்மல் (1) செயற்கை கண் (1) செய்தி சேனல்கள் (1) செய்தியாளர் (1) செய்முறை (1) செல்போன் டவர் (1) செல்லப் பிராணிகள் (1) செல்லப்பிள்ளை (1) செல்லம் (1) செல்வம் (1) சேது சமுத்திர திட்டம் (1) சேனல்கள் (1) சேய் (1) சேர்மன் (1) சேறு (1) சைலன்ஸ் ப்ளீஸ் (1) சொந்தம் (1) சொர்க்கம் (1) சொல் மந்திரம் (1) சொல்வதொன்றும் செய்வதொன்றுமாய் (1) சோம்பேறித்தனம் (1) சோலை (1) சோலையும் பாலையும் (1) ச‌ம்பாத்திய‌ம் (1) ஜக்காத் (1) ஜக்காத் நிதிப் பங்கீடு (1) ஜனநாயகத்தை விலைக்கு வாங்கிய பணநாயகம் (1) ஜனாதிபதி யார் (1) ஜப்பான் (1) ஜமாத் (1) ஜமால் மதனி (1) ஜமால் முகம்மது கல்லூரி (1) ஜலீலா கமால் (1) ஜாஃபர் (1) ஜாபிர் (ரலி) (1) ஜாமாத் (1) ஜாஸ்மின் (1) ஜாஹிர் (1) ஜும்மா (1) ஜும்மா பள்ளி (1) ஜூஸ் (1) ஜெ (1) ஜெஜெ. சொத்து குவிப்பு (1) ஜெட் (1) ஜெட்லி (1) ஜெய்தைக் காணவில்லை (1) ஜெய்னுல் ஆபிதீன் (1) ஜெர்மனி (1) ஜைனப்(ரலி) (1) ஜ்ஃபருல்லாஹ் (1) ஞானப் பயணம் (1) டாக்கி (1) டாக்டர் சுமையா தாவூத் (1) டாலர் (1) டி.வி. எச்சரிக்கை (1) டிக்கெட் (1) டிஜிட்டடல் (1) டிஜிட்டல் (1) டிஜிட்டல் இந்தியா (1) டியூசன் (1) டிரஸ்ட் (1) டிஸெம்பர் (1) டிஸைன்ஸ் (1) டீக்கடை (1) டீக்கடை குழுமம் (1) டெலஸ்கோப் (1) டேரா (1) ட்விட் (1) த.மு.முக. (1) தஃபீக் சுல்தானா (1) தகப்பன் (1) தகர்ப்பதற்கா? (1) தகவல் (1) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (1) தகவல் தொடர்பு (1) தகுதிக்கேற்ப தண்டனை (1) தக்பீர் (1) தங்க முதலாளி (1) தங்கச்சி (1) தங்கப் பதக்கம் (1) தங்கை (1) தடசணையும் (1) தடம் (1) தடைகள் (1) தடைக் கல் (1) தண்டனை (1) தண்டவாளம் (1) தண்ணீர் தாகம் தீர்க்கவா (1) ததஜ (1) தந்தி டிவி. (1) தந்தை மகள் (1) தந்தை வழி உறவு (1) தந்தையர் தினம் (1) தந்தையெனும் பாசம் (1) தனித் தன்மை (1) தனித் தூது (1) தனித்தமிழ் (1) தன்னடக்கமும் மரியாதையும் (1) தன்னிலை மேம்படுத்தல் (1) தன்னிலை விளக்கம் (1) தன்னிலை விள்க்கம் (1) தன்மை (1) தப்லீக் (1) தமிழக முதல்வர் (1) தமிழக முஸ்லீம்களின் ஒற்றுமை (1) தமிழர்கள் (1) தமிழும் ஆங்கிலமும் பேசிக்கொண்டால் (1) தமிழ் தாவா (1) தமிழ் தாவா பிரிவு (1) தமிழ்நாடு அரசு (1) தமீமுல் அன்சாரி (1) தயபுள்ளயளுவோ (1) தரகர் தெரு (1) தரமற்ற தாரகை விருப்பம் (1) தரமிழந்து வருகிறதா (1) தரவிரக்கம் (1) தராவிஹ் தொழுகை (1) தரைமட்டம் (1) தர்ஜுமா (1) தர்பியா மையம் (1) தர்பிய்யா (1) தர்மம் (1) தர்ஹா (1) தற்கொலை தீர்வாகுமா (1) தலை (1) தலைசிறந்த சமுதாயம் (1) தலைமை உருவாக்கம் (1) தலைமைத் தேர்வு (1) தலைமைத்துவம் (1) தலைவரின் தகுதிகள் (1) தலைவர் யார்? (1) தலைவியாகி (1) தள விளக்கம் (1) தள்ளி வண்டி (1) தழுவல் (1) தவாப் (1) தவிர்த்திடுங்கள் (1) தவிர்ப்போம் (1) தவ்ஃபீக் (1) தவ்ஹீத் (1) தவ்ஹீத்கான் (1) தஸ்தகீர் (1) தஹ்ஸின் நிலோஃபர் (1) தா.பாண்டியன் (1) தாஃவா (1) தாஜூதீன் (1) தாஜ் மஹால் (1) தாஜ்மஹால் (1) தாத்தா (1) தாம்பத்யம் (1) தாயின் அறிவுரை கேட்போம் (1) தாய் பாசம் (1) தாரூத் தவ்ஹீத் (1) தாரை வார்க்கவா? (1) தாலிச்சா (1) தால் (1) தாவஆ பணி (1) தாவா (1) தாஹா சார் (1) தி ஹிந்து தமிழ் (1) திக் திக் (1) திக்ர் (1) திடீர் கல்லறை (1) திட்ட அறிக்கை (1) திப்பு சுலதான் (1) திப்பு சுல்தான் (1) திமிங்கலச் சாவுகள் (1) தியாகிககள் (1) தியாகிகள் (1) திரட்டி (1) திரவியம் (1) திராம்பட்டினம் (1) திரிபு (1) திரு(தொடண்)டர்) (1) திருடன் (1) திருடாதே (1) திருட்டு (1) திருத்தம் (1) திருப்பூர் to அதிரை (1) திருமணங்கள் (1) திருமணத்திற்கு கவுன்சிலிங் (1) திருமறை (1) திரைகடலோடி திரவியம் தேடு (1) திரைகடல் (1) திரையங்குகள் (1) திரையரங்கம் (1) திரையில் சிறை (1) திறந்த மடல் (1) தில்லு முல்லு (1) தீ தீயனைப்பு நிலையம் (1) தீதும் நன்றும் பிறர்தர வாரா (1) தீன் (1) தீன்குல ஹீரோக்களுக்கு (1) தீரன் திப்பு (1) தீரன் திப்பு சுல்தான் (1) தீர்ப்பு (1) தீவிர (1) தீவு (1) துக்ளக் (1) துடிக்கக் கொன்றனர் (1) துணை போகாதீர் (1) துபாய் - அதிரை (1) துரோகம் (1) துர்நாற்றம் (1) துலங்கும் (1) துளி உலகம் (1) துளியளவு (1) தூக்கமற்ற பொழுதுகளில் (1) தூதரகம் (1) தூரோகம் (1) தென் தமிழகம் (1) தெரு சங்கங்கள் (1) தேச பக்தி (1) தேசிய கொடி (1) தேசிய தினம் (1) தேடுகிறேன் (1) தேத்தண்ணி (1) தேனி (1) தேன் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் கருத்துக் கணிப்புகள் (1) தேர்வு அட்டவனை (1) தேர்வு பள்ளித் தேர்வு முடிவுகள் (1) தேர்வு முடிவுகள் (1) தையல் (1) தொட (1) தொடர் சொற்பொழிவு (1) தொடு (1) தொட்டி (1) தொண்டர் (1) தொனா (1) தொலைக் காட்சி (1) தொலைத்தது (1) தொழிலாளி (1) தொழில் நுட்பம் (1) தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம்அ (1) தோழி (1) தோழியர் (1) நகை (1) நக்கப்பா (1) நடிகையாயிருந்து (1) நடை பயிற்சி மேடை (1) நட்சத்திரமாக (1) நட்சத்திரம் (1) நட்புடன் ஜமால் (1) நண்டும் நரியும் (1) நந்தினி (1) நனா (1) நன்கொடை (1) நன்மையே வேண்டி. 4th year (1) நன்றியுரை (1) நன்றே (1) நபி பெருமானார் வரலாறுமுன்னுரை (1) நபி(ஸல்) வரலாறு (1) நபித் தோழர்கள் (1) நபித்தோழர் (1) நபிவழி (1) நமது கல்வி (1) நயவஞ்சத்திற்கு பகிரங்க எச்சரிக்கை (1) நரகம் (1) நலம் (1) நல்ல மனையாள் (1) நல்லது (1) நல்லாருக்கியாம்மா? (1) நல்லிணக்கம் (1) நல்லொழுக்கம் (1) நள்ளிரவு (1) நவீன மவ்லூது (1) நாக்கு (1) நாங்கள் அதிரை நிருபர் (1) நாங்கள்தான் (1) நாடி (1) நாடு (1) நாட்டாமை தீர்ப்பு (1) நானும் ஆஃப்ரிக்காவும் - தொடர்கிறது (1) நான் (1) நான் என்பது (1) நான் மிகச் சிறந்த மனிதன் (1) நான் முஸ்லிமாகிவிட்டேன் (1) நான் ரெடி நீங்க ரெடியா (1) நான்காம் ஆண்டிலும் (1) நான்காவதுத் தமிழ் (1) நான்றி ஆசான்களே (1) நாய்கள் (1) நாற்காலிகள் (1) நாளங்கள் (1) நாளை? (1) நாவு (1) நிகழ்சிகள் (1) நிகழ்வுகள் (1) நிசார் அஹ்மது (1) நிதானமும் (1) நிதி அமைச்சர் (1) நித்தியோன் முன் நான் (1) நினைவலைகள் (1) நினைவிருக்கா (1) நினைவு (1) நிருபர் (1) நிர்வாகம் (1) நிர்வாகிகள் (1) நிர்வாண பாரதம் (1) நிலத்தடி (1) நிலத்தடி நீர் (1) நிழற்பட கருவி (1) நிழலாடும் (1) நிழலின் அருமை (1) நீங்களுமா ஆலிம்ஸா இப்படி செய்தீர்கள் (1) நீங்களும் கிளிக்கலாம் (1) நீடூர் அலி (1) நீதம் (1) நீதித் துறை (1) நீதிமன்றம் (1) நுண்மென் (1) நுனிப்புல் (1) நூதன விளம்பரங்கள் (1) நெஞ்சில் உரமின்றி (1) நெய்னா முஹம்மது (1) நேசம் மாநபி (1) நேரான வழி (1) நேர்கானல் (1) நேறறு (1) நேறு (1) நைஜிரியா (1) நைஜீரியா (1) நொங்கு வண்டி (1) நோக்கம் (1) நோன்பு காலங்கள் (1) நோன்புக் கஞ்சி (1) நோன்புக்கு பிறகு (1) நோம்பு (1) நோம்பு கஞ்சி (1) நோம்பு கஞ்சி அரிசி (1) நோயற்ற வாழ்வு (1) ன் (1) ப.சிதம்பரம் (1) பகல் (1) பகிர்வு (1) பகுருதீன் (1) பகைமை (1) பகையன்று நகை (1) பக்கம் (1) பங்களாதேஷ் (1) பங்கு சந்தை (1) பசி போக்குமா? (1) பசிக்கட்டுகள் (1) பசியாறிட்டு சாப்பிடலாம் (1) பசுமை எங்கே (1) பஜக (1) பஜ்ஜி (1) பஜ்லுர் ரஹ்மான் (1) பஞ்ச் டயலாக் (1) படகு (1) படச் சுருள் (1) படம் சொல்லும் பாடம் (1) படிக்கச் சென்றனர் (1) படித்த (1) படித்தால் மட்டும் போதுமா (1) படை (1) படைத்தவனின் திருக்குர்ஆன் (1) படைத்தவனை நோக்கி (1) படைப்பாளி (1) படைப்பாளிகள் (1) படைப்புகள் (1) பட்ஜெட் 2013 (1) பட்ஜெட் 2013-2014 (1) பட்டதாரி (1) பட்டப்பெயர்கள் (1) பட்டான் (1) பட்டினி (1) பட்டேல் (1) பட்டோலை (1) பணத்தை பிணமாக்கிய மோடி (1) பணம் இங்கே (1) பணம் படுத்தும்பாடு (1) பணி வாழ்வும் பணி ஓய்வும் (1) பணிக்கர் (1) பண்புகள் (1) பதற்றம் (1) பதவி (1) பதவிகள் (1) பதில் (1) பதில் இல்லா கேள்விகள் (1) பதிவது எப்படி (1) பதிவர் உலகம் (1) பதிவிலக்கணம் (1) பதிவேடு (1) பத்தாம் வகுப்பு (1) பத்திரிகை (1) பந்தம் (1) பனி (1) பனிப் பொழிவு (1) பனிப்பொழுது (1) பம்முக்காலே (1) பயங்கரவாதம் (1) பயணிக்கும் பாதை (1) பயிலரங்கம் (1) பரபரப்பு (1) பரமக்குடி (1) பரிசுகள் (1) பரோட்டா (1) பர்ஜ்துபாய் (1) பர்தா (1) பர்மீய முஸ்லீம்கள் (1) பற (1) பறவைகள் (1) பற்றாக்குறை (1) பலம் (1) பல் (1) பல்கிஸ் (1) பல்வலி (1) பள்லிவாசல் நினைவுகள் (1) பள்ளி நினைவுகள் (1) பள்ளி விடுமுறையை எப்படி கழிப்பது (1) பழ மொழி (1) பழ மொழிகள் (1) பழகிய மொழியிலே (1) பழகுமொழி (1) பழைய குருடி கதவைத் திறடி (1) பழைய பேப்பர் (1) பஷீர் ஹாஜியார் (1) பஸ் (1) பஸ்ஸார் (1) பஸ்ஸுப் பயணம் (1) பஹ்ருதீன் அஹ்மது அமீன் (1) பாகிஸ்தான் (1) பாடப் புத்தகம் (1) பாடல் (1) பாட்டி சொன்னது (1) பாட்டி பேரன் உறவு (1) பாட்டு (1) பாபரி மஸ்ஜித் (1) பாரதமணி (1) பார்ட்னர் (1) பார்த்த (1) பார்த்தீனியம் (1) பார்வேர்டு (1) பார்வை (1) பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை (1) பாலைவனம் (1) பால் அருவி (1) பாஸ்வேர்டு (1) பாஸ்வேர்ட் (1) பி (1) பிகார் (1) பிசாசு (1) பிச்சைக்காரர்கள் (1) பிச்சைப் பாத்திரம் (1) பிஜே (1) பிஜேபியை ஆகாதவர்கள் ஆக்கிய பீஹாரிகள் (1) பிடி நழுவிய (1) பித்அத் (1) பித்ரா (1) பினாங்கு சபுறு மாப்புளே (1) பினாங்கு சபுறுமாப்புளே (1) பிரச்சாரம் (1) பிரச்சாரம். (1) பிரயாண வழியில் (1) பிரான்ஸ் (1) பிரி (1) பிரிட்டன் (1) பிரிவு (1) பிரெஞ்சு (1) பிரைல் எழுத்து (1) பிர்ண்டர்ஸ் (1) பிறகு (1) பிறப்பு (1) பிறர் சிரிக்க (1) பிற்பகலும் (1) பிலால் (1) பிலால் (ரழி) (1) பிலால் நகர் (1) பில்கிஸ் (1) பிள்ளைகள் (1) பிழையறப் பிழை (1) பீகார் (1) பீச் (1) பீர் முஹம்மது (1) புகாரி இமாம் (1) புகை (1) புகை வண்டி (1) புகைபப்டம் (1) புகைப்பிடித்தல் (1) புதிய தொடக்கம் (1) புதிய நினைவுகள் (1) புதிய நிர்வாகம் (1) புதிய நூல்கள் (1) புதிய பிரவுசர் (1) புதிய வேலை (1) புதியது (1) புதியதோர் உலகைச் செய்யும் (1) புதிய‌தோர் ஊர் (1) புதுமைப் பெண் (1) புத்தக காட்சி (1) புத்தக வெளியிடு (1) புனித மாதம் (1) புன்சிரிப்பு (1) புராணம் (1) புரிதல் (1) புரை (1) புரோகிதம் (1) புற்றுநோய் (1) புலவர் பஷீர் அஹ்மது (1) புவியீர்ப்பு (1) பூ (1) பூக்கள் (1) பூங்கா (1) பூஜை (1) பூரியான் ஃபாத்திஹா (1) பெங்களூரு (1) பெட்டகம் (1) பெட்ரோல் (1) பெண் இமைக்குள் ஆண்மை (1) பெண் உரிமை (1) பெண்களின் கருத்தென்ன (1) பெண்களுள் பேரறிஞர் (1) பெண்கள்ம் மார்கெட் (1) பெண்சுதந்திரம் (1) பெண்டிரும் (1) பெண்ணாய் பிறப்பதைப் போல்போ ரின்பம் வேறில்லை (1) பெண்ணினம் (1) பெண்ணியம் (1) பெண்மக்கள் (1) பெயரிலித் தோழர் (1) பெயர் கூறுமா..? (1) பெரிய கடிகாரம் (1) பெரியர்வர்கள் (1) பெரியார் (1) பெரியார்தாசன் (1) பெருநாள் ஒளி (1) பெருநாள் தக்பீர் (1) பெருநாள் தொழுகை (1) பெருநாள் வாழ்த்து (1) பெருபான்மை (1) பெருமை (1) பெருமை தீது (1) பெர்னாட்ஷா (1) பேகம் ஹஜரத் மஹல் (1) பேக்கரி (1) பேங்க் (1) பேச்சும் (1) பேச்சுலர் (1) பேப்பர் வேர்ல்டு (1) பேரண்டம் (1) பேரன்பு (1) பேராசிரியர் (1) பேராசிரியர் M H J அவர்களுக்கு (1) பேராவூரணி பலாப்பழம் (1) பேரிடம் (1) பேரிடர் (1) பேருராட்சித் தலைவர் (1) பேரூராட்சி தலைவர் (1) பேரூராட்சி மன்றத் தலைவர் (1) பொக்கிஷம் (1) பொடிசுகளின் த்லை நோன்பு (1) பொது அறிவு (1) பொது சிவில் (1) பொதுக்குழு (1) பொதுமக்கள் (1) பொதுவானவை (1) பொய் வழக்கு (1) பொய் வழக்குகள் (1) பொரிச்ச மீன் (1) பொருட்காட்சி (1) பொறாமை (1) பொறியியல் (1) பொற்காலம் 1977 (1) பொழுதுகள். (1) போக்கு (1) போடாதே தப்பு கணக்கு (1) போட்டி வலைப்பூ (1) போட்டிகள் (1) போதனை (1) போனஸ் (1) போராட்டும் (1) போற்றுவோம் (1) போலி (1) போலி ஆலிம் (1) போலி சான்றிதழ் (1) போலிகள் ஜாக்கிரதை (1) போலிகள் பயிரை மேயும் வேலிகள் (1) போலித் தொப்பிகள் (1) போலீஸ் (1) ப்ராப்ளம் (1) ப்ளஸ் 2 தேர்வு முடிவ்கள (1) ப்ளாக் ஹோல் (1) ப்ளாஸ்டிக் பை (1) ப்ளீஸ் (1) மகத்துவ மருதாணி (1) மகளிருக்கு மட்டும் (1) மகளெனப்படுவள் (1) மகுடம் (1) மக்கட்பேறில்லா மக்கட்கு (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள்தொகையா (1) மக்கா நேரலை (1) மக்தப் மதர்சா (1) மச்சான் (1) மச்சான்ஸ் (1) மடமையிலிருந்து விடுதலை பெறுவோம் (1) மணல் மேடு (1) மண் வாசனை (1) மண்சட்டி (1) மண்டல் கமிஷன் (1) மண்ணறை வாழ்க்கை (1) மண்ணின் மைந்தர்கள் (1) மண்வட்டு (1) மண்வாசனை (1) மதம் (1) மதராஸ் (1) மதவாதம் (1) மதியம் (1) மதீனா நேரலை (1) மதுக்கூர் (1) மதுப் பழக்கம் (1) மதுரை (1) மத்திய அரசு (1) மத்திய கிழக்கு (1) மத்ஹபு (1) மந்திரச் சொல் (1) மந்திரவாதி (1) மனப்பாடம் (1) மனமே தொட்டாசினுங்கிதானே. ஜாகிர் ஹுசைன் (1) மனம் திறந்து (1) மனம் மகிழுங்கள் (1) மனிக்பான் (1) மனித நேயம் (1) மனிதமும் (1) மனிதவளமா (1) மனிதவளமும் மண்ணின் மைந்தர்களும் (1) மனிதா திருடாதே (1) மனு நீதி மனித குலத்திற்கு நீதியா (1) மனுநீதி (1) மனோரா (1) மன்னித்தருள்வாய் இறைவா (1) மமக (1) மரண சிந்தனை (1) மரண தண்டனை (1) மரத்தடி (1) மரபணுக்கள் (1) மரபுகள் (1) மரமும் (1) மரம் வளர்ப்பது ஒரு அறம் (1) மருதாணி (1) மருத்துவ (1) மருத்துவ காப்பீடு (1) மருத்துவ முகாம் (1) மருத்துவக் கல்லூரி (1) மருத்துவமனை (1) மருத்துவர் ஜானகிராமன் (1) மருவண்டி (1) மர்பு கவிதை (1) மறக்க முடியவில்லை (1) மறக்க முடியா மனிதர் (1) மறக்க முடியாத மருத்துவர்கள் (1) மறுப்பு (1) மறுப்பும் (1) மறைந்த (1) மறைந்து வரும் மண்பாண்டப் பாத்திரங்கள் (1) மறைந்து வரும் வளர்ப்பு பிராணிகள் (1) மறைவான அழகே நிறைவானது (1) மலரும் நினைவு மொட்டுக்கள் (1) மலரும் நினைவுகள் (1) மலர்கள் (1) மலாலா (1) மலைமகன் (1) மலையேற்றம் (1) மல்லிபட்ணம் சாலமீது (1) மழலை (1) மழலைகள் (1) மழை இஸ்லாமியப் பெண்கள் (1) மழை வந்தாச்சு (1) மழைக்கு பயந்த மின்சாரம் (1) மவ்லாய (1) மவ்லீது (1) மவ்லூது (1) மவ்லூதுக்கு மகுடமா ? (1) மஸ்ஜிதுகள் (1) மஸ்ஜிதுல் ஹாரமில் (1) மஹ்பூப் அலி (1) மா (1) மாங்காய் (1) மாசு (1) மாடிவீடு (1) மாணவ (1) மாணவப் பருவம் (1) மாணவமணிகள் (1) மாணவராக வாழ்ந்த ஆசிரியர் (1) மாணவர்கள் போரட்டம் (1) மாணவி (1) மாண்பு (1) மாண்புமிகு மந்திருக்கு (1) மாத்தியோசி (1) மாநகர் (1) மாநிலங்கள் (1) மானம் ஒன்றே உயர் ஆயுதமாய் (1) மானிடா... மாடு வருகிறார் (1) மாப்பிள்ளை (1) மாப்பிள்ளைக் கடத்தல் (1) மாமன்னர் (1) மாமரன் (1) மாமழை (1) மாம்பழம் (1) மாயன் இன்னும் சாகவில்லை (1) மார்கெட் (1) மார்க்க அறிஞர்கள் (1) மார்க்க வரம்புக்கு உட்பட்டு (1) மார்க்க விரோதத்துக்கு துணை போகாதீர் (1) மார்க்க விரோதம் (1) மார்க்க(மான) விவாதம் (1) மாறுகண் (1) மாற்று திறனாளி (1) மாலைப் பொழுது (1) மாவு (1) மிக்க மேலானவன் (1) மிதிரிக்கட்டை நினைவிருக்கா? (1) மினா (1) மின் கம்பம் (1) மின் தடை (1) மின்அஞ்சல் குழுமம் (1) மின்சார வாரியம் (1) மின்னல் (1) மின்வாரியம் (1) மின்வெட்டு (1) மியாசி (1) மிருகங்களாகும் மனிதம் (1) மில்லினியர் (1) மிள்பதிவு (1) மீட்பு (1) மீரான் சாஹிப் (1) மீராஷாஹிப் UPSC (1) மீளுதல் (1) மு.செ.மு.சபீர் அஹமது (1) மு.செ.மு.முஹம்மது ஹனீஃபா (1) முஃஆத் (1) முஃப்தி அப்துல் கையூம் (1) முஅத்தின் (1) முஆத் (1) முகத்திரையும் (1) முகப்புத்தகம் (1) முகமது செயினுத்தீன் - திருவிதாங்கோடு (1) முகமூடிகள் (1) முகம்து அலி (1) முகம்மது புஹாரி (1) முகவரிகள் (1) முகாம் (1) முக்காடும் (1) முக்கிய சுட்டிகள் (1) முக்கோணங்கள் (1) முடி (1) முட்டையும் (1) முதற் குழந்தை (1) முதலாம் ஆண்டு (1) முதலீடுகள் (1) முதல் பட்டதாரி (1) முதல் பயணம் (1) முதல் பிறை (1) முதல் மதிப்பெண் (1) முதல் மிடறு (1) முதல் வகுப்பு (1) முதல்வர்கள் (1) முதியோர் (1) முதிர் கன்னி (1) முதிர் நிலா (1) முத்தலாக்கின் மூடுபொருள் (1) முத்து (1) முந்திய சுன்னத் (1) முந்துங்கள் (1) முனாகீனா (1) முனைவர் (1) முன் மாதிரி (1) முன்னேற்றப் பாதை (1) முன்னேற்றம் (1) முன்பதிவு (1) முன்மாதிரி வடிவங்கள் (1) முபாரக் (1) முயலாமை (1) முயலும் (1) முயல் (1) முராத் (1) முற்பகலும் (1) முற்பகல் (1) முல்லைப் பெரியார் (1) முல்லைப் பெரியாறு (1) முள் (1) முள்மகுடம் (1) முழக்கம் (1) முஸ்லி (1) முஸ்லிம்கள் பாகிஸ்தானையும் சவுதியையும் கொண்டாடுவது ஏன் (1) முஸ்லீம் பதிவர்கள் (1) முஸ்லீம் மக்கள் தொகை (1) முஸ்லீம் லீக் (1) முஹம்மது (1) முஹம்மது அபுபக்கர் (1) முஹம்மது அலியார் சார் (1) முஹம்மது ரஃபீக் (1) முஹல்லா (1) முஹல்லா சங்கங்கள் (1) மூன்றாமிடம் (1) மூன்றாம் ஆண்டு (1) மூன்றாம் உலகப்போர் (1) மூர்த்தி (1) மூலதனம் (1) மூவண்ணக் கொடி (1) மெடிக்கல் (1) மெட்ரிக் பள்ளிகள் (1) மெட்ரோ (1) மெய்யெழுத்துகள் (1) மெர்சினா (1) மெளன ஓலம்! (1) மெளலவி அப்துல் பாசித் புஹாரி (1) மெளலித் (1) மெஷின் (1) மேட்டூர் (1) மேலாளர் (1) மேலைநாடுகள் (1) மைக் டைசன் (1) மைக்ரோ (1) மைதா (1) மையல் (1) மையவாடி (1) மைல்கல் (1) மொழிப்பெயர்ப்பு (1) மொழியால் விழிபேசுகிறது (1) மோகம் (1) மோசடி (1) மோடியின் முதுகில் ஏறும் தோல்வி மூட்டைகள் (1) மோதினார் (1) மோமியாக்கா (1) யாசகம் (1) யாசீன் சுஃபியான் (1) யார் அங்கே ? எங்கே போனார்கள் (1) யார் திவிரவாதி (1) யார் வசம்.. (1) யுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர் (1) யூசுபும் மொம்மாலியாக்காவும் (1) யூசுப் எஸ்டஸ் (1) யூசுப் ரியாஸ் (1) யூனுஸ் (1) யோகம் (1) யோசனை (1) யோசனைகள் (1) யோசி (1) யோசிக்கிறார் (1) ரஃபீக் சுலைமான் (1) ரகசியங்கள் (1) ரசாயன (1) ரஜினி (1) ரமளான் காணொளி (1) ரயிலடி (1) ரயில் (1) ரஷ்யா (1) ரஸூல் (1) ராக்கெட் (1) ராஜா வீட்டு விருந்தும் கறி (1) ராடார் (1) ராணி (1) ராஷித் அலி (1) ரிட்டர்ன் டிக்கெட் (1) ரியர் எஸ்டேட் (1) ரிஸல்ட் (1) ரிஸான நபீக் (1) ருசிக்க மான்பு (1) ரூபாய் (1) ரெடிமேட் (1) ரெட்டைக் கிளவி (1) ரேவடி (1) ரேஷன் கார்டு (1) ரொட்டி (1) ரோடு (1) ரோமாபுரியின் ரோஜா மலர் (1) ரோஷம் (1) லகும் தீனுக்கும் வலியதீன் (1) லகூன் (1) லக்கேஜும் நானும் (1) லஞ்சத்தை ஒழிக்க முடியாதா (1) லட்சம் (1) லண்டடன் (1) லண்டனில் கந்தூரி (1) லலுபிரசாத் (1) லாயிலாஹ (1) லேசர் (1) லைஃப் டைம் - Talk (1) லைசன்ஸ் (1) லைப்ரரி (1) வகிடும் (1) வக்ஃபு வாரியம் (1) வக்ப் வாரியம் (1) வசதி (1) வட இந்திய (1) வடியுது (1) வடிவும் (1) வட்டாட்சியர் முடிவு (1) வட்டார வழக்கு மொழி (1) வட்டியில்லா வங்கிச் சேவையை நோக்கி (1) வட்டிலப்பம் (1) வணங்குவோம் (1) வண்கொடுமை (1) வண்டூருது (1) வண்ணப்படம் (1) வண்ணம் (1) வதந்தியைப் பரப்பாதீர் (1) வன்மம் (1) வன்முறை (1) வன்மையாக கண்டிக்கிறோம் (1) வப்பா (1) வயசு (1) வயது (1) வயர்லெஸ் (1) வயலும் வாழ்வும் (1) வரம்பு (1) வரவுக்கும் செலவுக்கும் (1) வரிவரியாய் (1) வருகம் (1) வருமுன் (1) வருமுன் காப்போம் (1) வரும் முன் காப்போம் (1) வர்த்தக (1) வறட்டி (1) வலக்கரம் (1) வலி வழிச் செய்திகள் (1) வலைஞர்கள் (1) வலைத்தளங்கள் (1) வளம் (1) வளர்க (1) வளர்கிறாய் மகனே (1) வளர்ச்சிப்பாதையில் மோடி அரசு (1) வளைகுட (1) வளைகுடா பாதிப்பு (1) வளைகுடா வெயில் (1) வள்ளுவ (1) வழக்கம் (1) வழக்காடல் (1) வழக்கு (1) வழக்குக் கூண்டில் வறுமைக் கோடு (1) வழிகாட்டி (1) வழிகேடு (1) வழிமுறை (1) வஸ்வாஸ் (1) வா (1) வாகனங்கள் (1) வாகிங்க் (1) வாக்காளப் பெருமக்களே (1) வாக்கி (1) வாசனை (1) வாதம் (1) வாதி (1) வாப்பா பாட்டு (1) வாப்பிச்சா (1) வாயோதிக வலிகள் (1) வாய் (1) வாய் துர்நாற்றம் (1) வாரப் பத்திரிகை (1) வாழப் பழகுங்கள் (1) வாழவேண்டும் (1) வாழ்க சனநாயகம் (1) வாழ்கையின் வலக்கரம் (1) வாழ்க்கைத் தரம் (1) வாழ்க்கையின் பதிவேடுகள் (1) வாழ்ந்திடாதே (1) வாழ்வதற்கா? (1) வாழ்வு (1) வாழ்வு சிதைந்தது! வளம் குறைந்தது (1) வாஸ்கோடகாமா (1) விகடன் (1) விசா (1) விசாலம் (1) விசிட் (1) விடியலை நோக்கி (1) விடிவு (1) விடுமுறைக் காலம் (1) விடைபெறு (1) விண் கல் வீண் பயமா (1) விண்ணுலிருந்து மின்சாரம் (1) விண்வெளி (1) விதவை (1) விதி எண் 110 (1) விதி மீறல் (1) வித்தியாசமான வணிகர் (1) வித்தியாசமானவர்கள்.-பகுதி 3 (1) வித்யா (1) வினிகர் (1) வினோதினி (1) விபரீதம் (1) வியக்க வைக்கும் பயணக் கண்டுபிடிப்புக்கள் (1) வியாதி (1) வியாபாரம் (1) வியாபாரி (1) விரக்தி (1) விருட்சம் (1) விருது (1) விரைவு (1) விரோதம் (1) விலகல் (1) விலங்கினம் (1) விலாசம் (1) விலை (1) விளக்கு (1) விளைநிலங்கள் (1) விழலுக்கு வீணாகும் சிந்தனைகள் (1) விழா (1) விழி மொழி (1) விழிப்புணர்வு பக்கங்கள் (1) விழுஞாயிறு (1) விஷ வாயு (1) விஷுவல் (1) விஸ்வரூபம் (1) வீச்சு (1) வீடு கட்டுபவர்களின் கவனத்திற்கு (1) வீட்டுக்கு ஓர் ஆசான் (1) வீட்டுப் பாடம் (1) வீண் விரயம் செய்யாதீர்கள் (1) வீரர் (1) வீழ்வது (1) வெறியாட்டம் (1) வெற்றிலை (1) வெலக்காத் தெரு (1) வெல்லெஜொ (1) வெளியூர் (1) வெளியூர்காரர் (1) வெளியே (1) வெள்ளம் (1) வெள்ளிக்கிழமை (1) வெள்ளெழுத்து (1) வேங்கை (1) வேட்டு (1) வேட்பாளர்களின் நேர்காணல். நேர்காணல் (1) வேண்டாம் (1) வேண்டாம் கொண்டாட்டம் (1) வேண்டுதல் (1) வேண்டும் (1) வேதம் (1) வேற்றுமை (1) வேலை தேடுவோர்க்கு (1) வேலை வரைகலை (1) வேவு (1) வேவ்ரைடர் விமானம் (1) வேஷம் (1) வைத்தியன் (1) ஷஃபி (1) ஷபான பாஸிஜ் (1) ஷபே பராஅத் (1) ஷமீம் (1) ஷார்ஜா (1) ஷாஹிபா சபீர் அஹ்மது (1) ஷேக் (1) ஷேக் அப்துல் ரஹ்மான் சுதைஸி (1) ஷேக் உசேன் (1) ஷேக்கனா M.நிஜாம் (1) ஷைத்தான் (1) ஸலவாத் (1) ஸாத் பின் முஆத் (1) ஸூரத்துல் அஃலா (1) ஸூரத்துல் கியாமா (1) ஸூரத்துல் ளுஹா (1) ஸ்டாம்ப் (1) ஸ்டேஷனரி (1) ஸ்டேஷன் (1) ஸ்பீடு (1) ஸ்பெஷல் (1) ஸ்மார்ட் (1) ஹஜ் பெருநாள் (1) ஹஜ் 2012 (1) ஹஜ் கமிட்டி (1) ஹஜ்ஜின் மகத்துவம் (1) ஹஜ்ரத் மொஹானி (1) ஹத்தனா (1) ஹந்தூரி (1) ஹனீபா சார் (1) ஹலோ... ஹலோ... நலமா (1) ஹாபிட் (1) ஹாபிழ் (1) ஹாபிழ் பராஆ (1) ஹார்ட் (1) ஹாலித் (1) ஹிஜாப் (1) ஹிஜாப் S.அலாவுதீன் (1) ஹிஜாப் ஒரு கவசம் (1) ஹூமர் (1) ஹைக்கூ (1) ஹைடெக் காலம் (1)