அல்லாஹ்வின் திருப்பெயரால்..
அன்பான சகோதர சகோதரிகளே, கடந்த 27 வாரங்களாக ‘நபிமணியும் நகைச்சுவையும்’ என்ற மிக அற்புதமான தொடரை எங்கள் பிரியத்துக்குரிய இக்பால் M. ஸாலிஹ் காக்கா அவர்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் சிறப்புடன் எழுதி நிறைவு செய்துள்ளார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
நான் இந்தப் பதிவை ஒரு தொடராக எழுதுவதற்கு இக்பால் காக்காவின் நபிமணியும் நகைச்சுவையும் ஓர் உந்துதல் என்று சொல்லிக் கொள்வதில் மகிழ்கிறேன். நபிகளாருக்கும், அவர்களைத் தங்கள் உயிருக்கும் மேலாக மதித்து வாழ்ந்த சஹாபாக்களுக்கும் இடையே நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகளுக்கு மத்தியில் நிறைய நெகிழ்வூட்டும் சம்பவங்களை இக்பால் காக்கா ஆங்காங்கே சுட்டிக்காட்டியிருந்தார்கள். அவைகளைப் படிக்கும் போது கண்களில் கண்ணீர் வந்தது. நான் அடிக்கடி விரும்பிக் கேட்கும் மார்க்க சொற்பொழிவுகள் இரண்டு, அது நபிகளாரை(ஸல்) அழ வைத்த நிகழ்வுகளும், சத்திய சஹாபாக்கள் அல்லாஹ்வின் பொருத்தத்தை மட்டுமே நாடி அழுத நெகிழ்வூட்டும் நிகழ்வுகள் பற்றியவைகளாகும்.
இந்தச் சிறு தொடர் தொகுப்பு, மார்க்க சொற்பொழிகளில் அவ்வப்போது நான் செவியுற்றவைகளை வைத்தே எழுதுகிறேன். இதில் பகிர்ந்தளிக்கப்படும் தகவல்களுக்கு தேவையான மூலங்களை தொகுக்கும் அளவுக்கு நான் ஓரு தேர்ந்த மார்க்க ஆய்வாளன் அல்ல. பணிச்சுமைகளுக்கு மத்தில் இப்படி ஒரு பதிவைத் தொகுத்து வருகிறேன். நான் செவியுற்ற மார்க்க சொற்பொழிவுகளில் ஸஹீஹான ஹதீஸ்கள் மற்றும் சஹாப்பாக்களின் வரலாற்று தொகுப்புகளிலிருந்து பேசப்பட்டவைகள் என்ற நம்பிக்கையுடன் உறுதியாக சொல்ல முடியும். இங்கு குறிப்பிடும் தகவல்களில் தவறு இருப்பின் தயைகூர்ந்து அதற்கான ஆதாரத்துடன் சுட்டிக் காட்டுங்கள். நிச்சயம் திருத்தம் செய்கிறேன். இன்ஷா அல்லாஹ்.
அல்லாஹ் தனது திருமறை குர்ஆனில் நிறைய இடங்களில் “மக்கள் அழுவார்கள்” என்று சொல்கிறான். வரலாறுகளில் முஹம்மது நபி(ஸல்) அவர்களும், நபிமார்களும், சத்திய சஹாப்பாக்களும் தங்களுடைய தாடி நனையும் வரைக்கும் பல சந்தர்ப்பத்தில் அழுதிருக்கிறார்கள் என்று வாசித்திருக்கிறோம் மார்க்க சொற்பொழிவுகளில் கேட்டிருக்கிறோம்.
நாம் நம்முடைய வாழ்நாட்களில் பல சந்தர்பங்களில் அழுதிருக்கிறோம், அழுகிறோம், கண்ணீர் வடிக்கிக்கிறோம். அழவைக்கும் அளவுக்கு நம் உள்ளத்தில் தாக்கம் ஏற்பட்டால்தான், நம் கண்களிலிருந்து கண்ணீர் வரும். இதை எழுதும் நானாக இருந்தாலும், இதை படிக்கும் நீங்களாக இருந்தாலும் நம் வாழ்க்கையில் நிறைய கண்ணீர் சிந்தியிருக்கிறோம். இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.
துன்பங்கள் ஏற்படும்போது அழுவதுண்டு, நோய் ஏற்படும் போது அழுவதுண்டு, பெண் குமருகளைக் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்து அழுவதுண்டு, குழந்தைகளை வளர்த்து ஆளாக்கும் போது நம்முடைய மக்களுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்று எண்ணி அழுவதுண்டு, நண்பர்கள் வாழ்வில் நொடிந்து போனால் அவர்களுக்காக அழுவதுண்டு. ஆனால் அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் பல சந்தர்பத்தில் அழுதிருக்கிறார்கள், அவர்களோடு வாழ்ந்து மறைந்த சஹாபாக்களும் அழுதிருக்கிறார்கள். அவர்களின் அழுகை பற்றிய தொகுப்புகளே இந்த தொடர் பதிவு.
அல்லாஹ் தன்னுடைய இறைமறையில் கூறுகிறான்.
(நபியே!) “அதனை நீங்கள் நம்புங்கள், அல்லது நம்பாதிருங்கள்; (அதனால் நமக்கு கூடுதல், குறைவு எதுவுமில்லை.) நிச்சயமாக இதற்கு முன்னர் எவர் (வேத) ஞானம் கொடுக்கப்பட்டிருந்தார்களோ, அவர்களிடம் அது (குர்ஆன்) ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவர்கள் ஸுஜூது செய்தவர்களாக முகங்களின் மீது (பணிந்து) விழுவார்கள்” என்று (நபியே!) நீர் கூறும்.
அன்றியும், “எங்கள் இறைவன் மிகப் பரிசுத்தமானவன்; எங்களுடைய இறைவனின் வாக்குறுதி நிறைவேறி விட்டது” என்றும் அவர்கள் கூறுவார்கள்.
இன்னும் அவர்கள் அழுதவர்களாக முகங்கள் குப்புற விழுவார்கள்; இன்னும் அவர்களுடைய உள்ளச்சத்தையும் (அது) அதிகப்படுத்தும். குர் ஆன் (17:107, 108, 109)
அல்லாஹ் இங்கு அழுகை பற்றிய சம்பவத்தை எடுத்துக் கூறுகிறான். அல்லாஹ்வுடைய வேத வசனங்கள் ஓதப்பட்டால், அவற்றை செவியுறுகிறவர்கள் அந்த வசனங்களின் கனப்பரிமானத்தை எண்ணி சுஜூதில் விழுந்து அழுவார்கள் என்று கூறுகிறான். தமிழில் மொழிப்பெயர்ப்புடன் வெளிவராதா என்று ஏங்கிக்கொண்டிருந்த நம் சமூகத்துக்கு, பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்து விட்டது அல்லாஹ்வின் திருக்குர்ஆன். என்றைக்காவது தமிழில் திருக்குர்ஆனை அதன் அர்த்தம் பொதிந்த வசனங்களை படித்துவிட்டு நாம் சுஜூதில் விழுந்து அழுதிருக்கிறோமா?
மேற்சொன்ன இறைவசனத்தைத் தனக்கு நெருக்கமானவர்களுக்கும், முத்தக்கீன்கள், ஸாலிஹீன்கள் மற்றும் நபிமார்களின் பண்பாக அல்லாஹ் சுட்டிக்காட்டுகிறான், இறைவசனங்கள் அவர்களுக்கு நினைவூட்டப்பட்டால் அழுது சுஜூதில் விழுவார்கள் என்று அல்லாஹ் தன்னுடைய அருள்மறையாம் திருக்குர்ஆனில் சொல்லுகிறான்.
மக்காவிலும் இன்னும் பிற பள்ளிகளில் தொழுகையில் இமாம் ஓதும்போது அழுவார், ஏன் அழுகிறார்? குர்ஆன் வசனங்களை அர்த்தத்துடன் விளங்கி ஓதும் போது பயத்தில் ஏற்படும் அழுகை அந்த அழுகை. குர்ஆனை நாம் திறந்து ஓத ஆரம்பித்தவுடன் நாமும் அழவேண்டும், அதற்கான சந்தர்பத்தை உருவாக்க வேண்டும். அதற்கு நாம் குர் ஆனை பொருள் உணர்ந்து விளங்கி ஓதவேண்டும் அப்போது தான் இறைவசனங்களில் சொல்லப்பட்டுள்ளவைகளை எண்ணி பயத்தில் அழுகை வரும். ஆனால் நமக்கு குர்ஆனை திறந்தவுடன் நம்மில் பலருக்கு தூக்கம் மட்டும் உடனே வந்துவிடுறது என்பது ஒரு வேதனையான அன்றாட நிகழ்வு. நவுதுபில்லாஹ்!.
திருக்குர்ஆன் ஒரு நாவலோ, கதை புத்தகமோ, கவிதை தொகுப்போ, பாடல் இசை புத்தகமோ, கார்ட்டூன் கதை தொகுப்போ அல்ல. திருக்குர்ஆன் அல்லாஹ்வுடைய வார்த்தைகள். நம்மை படைத்த ரப்புல் ஆலமீன் நம்மிடையே பேசுகிறான் என்ற தூய எண்ணத்துடன் திருக்குர்ஆனை பொருள் உணர்ந்து ஓத ஆரம்பித்தாலே நம் உள்ளத்தில் பயம் எழும், எழுவேண்டும். இன்ஷா அல்லாஹ்..
மேலும் அல்லாஹ் கூறுகிறான்.. (நபியே!) நாம் ஒரு மலையின் மீது இந்த குர்ஆனை இறக்கியிருந்தோமானால், அல்லாஹ்வின் பயத்தால், அது நடுங்கிப் பிளந்து போவதாகக் கண்டிருப்பீர்; மேலும், மனிதர்கள் சிந்திக்கும் பொருட்டு இத்தகைய உதாரணங்களை நாம் அவர்களுக்கு விளக்குகிறோம். குர் ஆன் (59:21)
மலைகளை தகர்த்தெரியும் சக்தி குர்ஆன் வசனங்களுக்கு இருக்கிறது என்றால், அப்படி அதில் என்னதான் உள்ளது என்பதை பொருள் உணர்ந்து படித்தால் தானே அல்லாஹ்வின் வார்த்தையை நம்மால் உணர முடியும்.
சைத்தான் அல்லாஹ்வின் திருவேதத்தை நாம் ஓதுவதை விரும்பாதவன். நம்முடைய சிந்தனைகளுக்கு பல முட்டுக்கட்டை போட்டு நாம் குர்ஆன் ஓதுவதை தடுக்க பல வழிகளை கையால்வான். ஆனால், நாம் குர்ஆன் ஓதுவதற்கு முன்பு நம்மை தயார்படுத்த வேண்டும், முதலில் உளு செய்து, அல்லாஹ் நம்மிடம் போசப்போகிறான் என்ற தூய எண்ணத்துடன் குர்ஆனின் பக்கங்களை புரட்ட ஆரம்பித்தால், சைத்தான் தூர ஓடிவிடுவான். இதே திருக்குர்ஆன் தான் ஒரு காட்டுமிராண்டி சமுதாயத்தை, சாந்தமான அல்லாஹ்வின் நல்லடியார்களாக மாற்றியது. காரணம் என்ன? அம்மக்கள் திருக்குர்ஆனை செவியுற்றால் அச்சத்தால் அழுவார்கள் என்பதை பல வரலாற்று சம்வங்களில் காணமுடிகிறது.
- ஒரு நாளைக்கு எத்தனை முறை திருக்குர்ஆனை ஓதியுள்ளோம்?
- எத்தனை முறை பொருள் உணர்ந்து ஓதியுள்ளோம்?
- எத்தனை முறை பொருள் உணர்ந்து ஓதி அச்சம் ஏற்பட்டு அழுதுள்ளோம்?
- எத்தனை முறை இறை வசனத்தினால் ஏற்பட்ட அச்சத்தில் சுஜூதில் விழுந்து அழுதிருக்கிறோம்?
ஆனால் இன்று, நம்முடைய நிலை….
சினிமா கற்பனை காட்சிகளுக்காகவும், தொலைக்காட்சி சீரியல் கற்பனை கதைகளுக்காகவும் எத்தனை முறை ஒவ்வொரு நாளும் விம்மியிருப்போம். கிரிக்கெட் போன்ற விளையாட்டில் நாம் விரும்பும் விளையாட்டு வீரன் நான்றாக விளையாடினால் ஆனந்தத்தில் கண்ணீர், சரியாக விளையாடாவிட்டால் கவலையில் வருத்ததுடன் கண்ணீர் விட்டிருப்போம். சைத்தானின் கருவிகளிலிருந்து உருவாகும் இசையை மூலதனமாக கொண்டு நடத்தப்படும் சூப்பர் சிங்கர், மானாட மயிலாட போன்ற நிகழ்ச்சிகளில் தனக்கு பிடித்தவர் போட்டியில் வென்றால் ஆனந்த கண்ணீரும், தோற்றால் வருத்தமான கண்ணீரும் விட்டவர்கள் நம்மில் பலர் இருக்கிறோமா இல்லையா என்பதை இங்கு கொஞ்சம் சிந்தனை செய்து பாருங்கள்..
சித்திப்போமாக.. திருக்குர்ஆனை பொருள் உணர்ந்து படிப்போமாக, அவ்வாறு படிக்கும் போது அல்லாஹ்வின் அச்சத்தால் அழுது அவனுடைய சிஃபாத்துக்களை எண்ணி எண்ணி, அவனை நினைவு கூர்ந்து, அவனுக்கு நன்றி செலுத்துவோமாக.
இன்ஷா அல்லாஹ் வரும் பதிவுகளில், அல்லாஹ்வுக்காக மட்டுமே சிந்தப்படும் துளிகள் மிகச்சிறந்தது எது என்பது பற்றியும், நபி (ஸல்) அவர்கள் எந்த சந்தர்பங்களில் அழுதார்கள், நபிமார்கள் எந்த சந்தர்பங்களில் அழுதார்கள், நபிதோழர்கள் எந்த சந்தர்பங்களில் அழுதார்கள் என்பதை ஒவ்வொரு தொகுப்புகளாக இன்ஷா அல்லாஹ் பார்க்கலாம்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்
M.தாஜுதீன்

