முஸ்லிம்களின் கல்வி மீதான ஆர்வம் குறைந்து போனதற்கு உரிய காரணங்களை விவாதிக்கும் போது ஒரு கருத்தை வலியுறுத்திச் சொல்லியே ஆக வேண்டும். எண்ணூறு ஆண்டுகள் இந்த நாட்டை ஆண்ட மொகலாய மன்னர்கள் முஸ்லிம்களின் கல்வி மறுமலர்ச்சிக்காக பெரிதாக ஒன்றும் கிழித்துவிடவில்லை என்பதே அது. பிறகு அந்த ஆட்சியையும் ஆங்கிலேயர்களால் பறித்தெடுக்கப்பட்டு விட்டதால் வெள்ளையருக்கு எதிரான ஒரு உணர்வும் வேட்கையும்தான் முஸ்லிம்களின் நெஞ்சங்களில் முதலிடம் பெற்றது. படிக்க வேண்டும் -முன்னேற வேண்டும் - பதவி பெற வேண்டும் ஆளும் வர்க்கமாக ஆகவேண்டுமென்று எண்ணங்கள் அவர்களின் இதயங்களில் அரும்பவில்லை. அதன் விளைவுதான் முஸ்லிம்களே முன்னின்று நடத்திய சிப்பாய்க் கலகமும், மாப்பிள்ளைமார் புரட்சியும், இன்னும் பிற சிறு சிறு போராட்டங்களும் ஆகும். இதனால் முஸ்லிம்களுக்கு பிரிட்டிஷார் மீது ஒருவித வெறுப்பும், பிரிட்டிஷாருக்கு முஸ்லிம்கள் மீது ஒரு வெறுப்பும் அவர்களின் கல்வியை மற்றும் மொழியையும் படிக்கும் வெறுப்பில் போய் முடிந்தது.
உத்தரப் பிரதேசத்தில் இன்றும் இருக்கும் புகழ்பெற்ற தேவ்பந்த் அரபுக் கல்லூரியின் மார்க்க அறிஞர்கள் “ ஆங்கிலம் படிப்பது ஹராம் “ என்று மார்க்கத் தீர்ப்பான பத்வா வழங்குமளவுக்கு அந்த வெறுப்பு விதைகளைத் தூவி நட்டு வளர்ந்த்தது. (காலத்தின் ஒரு கோலம இன்று அதே தேவ்பந்த் கல்லூரியில் பயின்ற சென்னை மக்கா மசூதியின் இமாம் மவுலானா சம்சுதீன் காசிமி , முஸ்லிம்களின் பின் தங்கிய கல்வியின் நிலையைப் போக்க இல்மி (ILMI ) என்று ஒரு இயக்கத்தை இன்று தொடங்கி இருக்கிறார். )
தோப்பில் மீரான் என்றொரு தென் தமிழகத்தின் தேங்காய்ப்பட்டினத்து நாவலாசிரியர் மண்ணின் கதைகளை மணத்துடன் பரிமாறுபவர் என்று இலக்கிய உலகில் தொடர்புடைய நண்பர்கள் அறிவார்கள். ‘இலக்கியம் என்பது ஒரு காலத்தின் கண்ணாடி’ என்று கூறுவார்கள். அந்த வகையில் இலக்கியங்கள் வெளிப்படுத்தும் மக்களின் வார்த்தைகள் வரலாற்றையும் வெளிப்படுத்தும். தோப்பில் மீரான் எழுதிய நாவல்களில் மக்கள் உரையாடிக் கொள்வதாக வரும் சில வார்த்தைகள் மக்களின் மனநிலையைக் காட்டும். அவற்றில் சில
"அரபி அல்லாஹ்க்கா பாசே – இங்கிலீஷ் நஸ்ராநிக்கா பாசே" ( அரபி அல்லாஹ்வுடைய மொழி – ஆங்கிலம் கிறிஸ்தவர்களின் மொழி )
"ஆங்கிலப் பள்ளிக் கூடத்தில் படிச்சா நரகம்தான் கிடைக்கும்"
"உலகம் அழியப் போகும் நாளின் அறிகுறிதான் ஆங்கிலக் கல்வி"
என்றும் கூற வைத்து இப்படிப்பட்ட நம்பிக்கைகள் முஸ்லிம்களின் இதயங்களில் நங்கூரம் பாய்ச்சி நின்று கொண்டு இருந்த நிலைமைகளை தோப்பில் மீரான் கோடிட்டுக் காட்டுகிறார். இப்படிப் பட்ட மனோநிலை அரபி மற்றும் பார்சி கூடவே உருது போன்ற மொழிகளைப் படிக்க முஸ்லிம்களைத் தூண்டியதே அல்லாமல் “ சீனா சென்றேனும் சீர்கல்வி பெருக” என்ற அரேபிய பழமொழியை மறக்கடித்தன. எந்த மொழியையும் கற்காதே என்று இஸ்லாம் தடைப் பட்டியல் இட்டு இருக்கிறதா? அன்னத்தில் வின்னத்தைக் கலக்கும் சமுதாய விரோதிகள் அப்போதே இருந்து இருக்கிறார்கள்.
இவ்வாறு பிரிட்டிஷார் மீதான் வெறுப்பின் காரணமாக, ஆங்கில மொழியும் அந்த மொழி மூலமான உலகக் கல்வியும் நமது சமுதாயத்தால் புறக்கணிக்கப் பட்டன. இதன் விளைவாக பல்வேறு கல்வியின் பரிணாமங்களின் துறைகளைக் கற்கும் வாய்ப்பை முஸ்லிம்கள் இழந்தனர்.
அலிகரில் முஸ்லிம் பல்கலைக் கழகத்தை தோற்றுவித்த சர். செய்யத் அகமது கான் போன்றோர் முஸ்லிம்கள் முன்னேற வேண்டுமானால் நவீன ஆங்கிலக் கல்வியைப் பெற்றுக் கொள்ள முனைப்புக் காட்ட வேண்டுமென்று பரப்புரை செய்தனர்; வலியுறுத்தினர். பலருடைய எதிர்ப்பையும் மீறி சர். செய்யத் அகமது கான் அவர்களால் தொடங்கப் பட்ட அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகம் தொடங்கப் பட்ட பின்னரும் கூட அதில் சேர்ந்து படிக்க பல முஸ்லிம்கள் தயங்கினார்கள். காரணம் அலிகரில் படிப்பது நரகத்துக்குப் பாதை வகுத்துவிடுமென்ற பலரின் தவறான பரப்புரையே காரணம். அலிகர் பல்கலைக் கழகத்தின் நோக்கம் நிறைவேறி அது தன் வெற்றியைக் கண்ட பின்னரும் கூட பல பகுதிகளிலும் தயக்கமே காணப்பட்டது. இந்த நிலையில் முஸ்லிம்களின் கல்வி நிலை மீது இன்னொரு இடி இறங்கியது.
1920 ஆம் ஆண்டு நாகபுரியில் நடைபெற்றது காங்கிரஸ் மாநாடு. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய மைல் கல்லாக இந்த மாநாடு இருந்தது. காரணம் இந்த மாநாட்டில்தான் ஆங்கிலேயருக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்குவது என்று தீர்மானிக்கப் பட்டது. ஒத்துழையாமை இயக்கத்தின் நடைமுறைப் படுத்தப்பட வேண்டிய வைகளாக பதினோரு வழிமுறைகள் காந்தியால் அறிவிக்கப் பட்டன. அவற்றின் ஒன்று ஆங்கிலக் கல்வியைப் புறக்கணிக்க வேண்டும் என்பதுமாகும். காந்தி முதல் நேரு வரை பாரிஸ்டர் பட்டம் பெற்ற பின்னர் இந்த அறிவிப்பு ஒரு வேடிக்கையான அம்சம்.
இதற்குத் தலையாட்டி பலியானோரில் அதிகம் பேர் முஸ்லிம்களே என்பதே வேதனையான உண்மை. காரணம் இந்த ஒத்துழையாமை இயக்கத்தின் அம்சங்களை நடைமுறைப் படுத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டது கிலாபத் இயக்கம் . முஸ்லிம்கள் மட்டுமே பெருமளவில் பங்கு வகித்து, தன் வாயில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட நிலையை ஏற்படுத்தியது கிலாபத் இயக்கம் ஏற்படுத்திய உணர்வுப் பெரு ஆழி அலைகள்.
1920 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் நாள் ஒன்றுபட்டிருந்த சென்னை ராஜதானியின் பல பகுதிகளிலும் கிலாபத் குழுக்கள் ஏற்படுத்தப் பட்டன. பள்ளிகள் , கல்லூரிகள், நீதிமன்றங்கள், அலுவலகங்கள் ஆகியவற்றை முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும் என்று தீர்மானித்தனர். அந்த தீர்மானத்தை உணர்வுடன் நடை முறையும் படுத்தினர். இதே போல் தீவிரமாக சுதந்திர வேட்கையுடன் கல்வியையும் சேர்த்துப் புறக்கணித்த வேறு ஒரு சமுதாயம் இருந்து இருக்குமா என்பது சரித்திர சந்தேகம்.
கிலாபத் இயக்கத்தின் தலைவராக இருந்த மெள லானா முகமது அலி அவர்கள் 1921 – ஆம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற கிலாபத் இயக்கத்தின் தலைமை உரையில் முஸ்லிம்கள் பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றுவது ஹராம் என்று முழங்கினார். ராணுவத்தில் பணியாற்ற வேண்டுமானால் அதற்கு ஏற்ற படிப்புகளைப் படித்து இருக்க வேண்டும். முஸ்லிம்கள் படிப்பை புறக்கணித்ததால் ராணுவம் என்கிற ஒரு பெரும் வேலைவாய்ப்புத் துறையிலே அவர்களது வாடை கூட வீசாமல் போனது.
26/01/1921 அன்று சென்னையில் இருந்து வெளியான உருது நாளேடான ‘கெளமி ரிப்போர்ட்’ என்கிற பத்திரிகை , ‘ஒவ்வொரு முஸ்லிம் இளைஞன் மற்றும் மாணவனின் கடமை’ என்கிற தலைப்பிட்டு, ‘ “தங்களைப் படைத்த இறைவன் மற்றும் இறை தூதருக்காக, முஸ்லிம் இளைஞர்கள் எவ்வித இலாப நஷ்டமும் பாராமல் கிலாபத் இயக்கத்தில் ஈடுபட்டு பிரிட்டிஷ்காரர்களின் கல்வியைப் புறக்கணிக்க வேண்டும் “ என்று படித்துக் கொண்டிருந்த முஸ்லிம் மாணவர்களை இன்று சில இயக்கங்கள் மூளைச் சலவை செய்வது போல் செய்தன.
இதற்கு மாறாக, முஸ்லிம் மாணவர்கள் கிலாபத் இயக்கத்தில் ஈடுபடுவதும் அவர்களை ஈடுபடுத்துவதும் அவர்களது கல்வியைப் பாதிக்கும் எனவே அவ்வித பங்கேற்பையும் அதற்கான அழைப்பையும் முஸ்லிம் மாணவர்கள் புறக்கணித்துவிட்டு படிக்கச் செல்ல வேண்டுமென்று உருது நாளேடான ஜார்தா – இ- ரோஜ்கார் தலையங்கம் ( 12/02/1921) தீட்டி எச்சரித்தது. இதையேதான் அண்மையில் ஒரு இயக்கம் இட ஒதுக்கீடு கேட்டு நடத்திய போராட்டத்தில் மாணவர்களை விலகி இருக்கும்படி நாமும் சொன்னோம். அதற்காக நியாயமற்ற முறையில் தரம் குறைந்து விமர்சிக்கப்பட்டோம்.
இவை போன்ற அரசியல் மற்றும் இயக்க உணர்வுகளால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டது. பலர் படிப்பை பாதியில் விட்டனர். 1920-21 ஆம் கல்வியாண்டில முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சியினை சென்னை மாகாண நிர்வாக அறிக்கை குறிப்பிடும்போது “1920-21–ல் சென்னை மாகாணத்தில் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை முன்பு இருந்ததைவிட 4,420 குறைந்தது. இதற்கு, கிலாபத் இயக்கத்தின் தாக்கமே காரணம் “ என்று குறிப்பிடுகிறது.
ஒரு வேதனையான உதாரணத்தைச் சொல்லலாம். 1921-ல் கிலாபத் இயக்கத்தின் தீவிரம் காரணமாக வாணியம்பாடியைச் சேர்ந்த முஸ்லிம்கள் , பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களை ஊரை விட்டு விலக்கி சமுதாயப் புறக்கணிப்பு செய்வது என்று கூட தீர்மானித்தனர் என்று ஒரு குறிப்பு இந்த துரதிஷ்டத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இதன் காரணமாக வாணியம்பாடி இஸ்லாமியா உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை 75 % குறைந்தது.
1920 – ஆம் ஆண்டு, வாணியம்பாடி முஸ்லிம் கல்விச் சங்கம் , இஸ்லாமியா கல்லூரியை நிறுவியது. சென்னை முகம்மதன் கல்லூரிக்குப் பிறகு இது இரண்டாவது கல்லூரி. 1920 ஆம் ஆண்டில் சென்னை மாகாண கல்வித்துறையின் இயக்குனரின் அறிக்கையில் வாணியம்பாடிக் கல்லூரியைப் பற்றி குறிப்பிட்டு கடைசியில் ஒரு செய்தியைச் சொ௦ல்கிறார். அந்தச் செய்தி, "கிலாபத் நாட்களில் வாணியம்பாடிக் கல்லூரி நின்று தழைக்குமென்று கல்வித்துறை நம்பவில்லை" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டு இருந்தது. இந்தக் குறிப்பு அன்றைய நிலையை சொல்லாமல் சொன்னது.
வாணியம்பாடி இஸ்லாமியாக் கல்லூரி தொடங்கப் பட்ட நேரத்தில் முஸ்லிம் அல்லாத மாணவர்களின் எண்ணிக்கை கல்லூரியின் மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்குதான் இருக்க வேண்டுமென்று அரசு விதி வகுத்து இருந்தது. ஆனால் சோகத்திலும் சோகம் கிலாபத் இயக்கத்தில் முஸ்லிம் மாணவர்கள் ஆங்கில முறைக் கல்வியை புறக்கணித்த காரணத்தால் விதிகளை மீறி பிற மத மாணவர்கள் அதிகம் சேர்க்கப் பட்டனர்.
காந்திஜி முன் மொழிந்த ஒத்துழையாமை இயக்கத்தை உயிரோட்டமுடையதாக ஆக்குவதற்கு தோளோடு தோளாக நின்ற கிலாபத் இயக்கத்தின் தாக்கம் , முஸ்லிம்களின் சுதந்திர தாகம் அவர்களின் கல்வியை பலி கொண்டது. முஸ்லிம்களின் கல்வி பின்னடைவை சந்தித்தது. காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் வரை தங்களின் படிப்பைப் பாதியில் விட்டனர். சுதந்திர போராட்டத்துக்கும் முஸ்லிம்களின் கல்வி உணர்வு காவு கொடுக்கப்பட்டது. அதே நேரம் மற்றவர்கள் கல்வியில் முஸ்லிம்களைவிட முன்னேறினார்கள்.
இன்னும் அதிகமான கல்வி நிறுவனங்கள் நிறுவ வேண்டுமென்ற ஆவலும் செயல்பாடும் மிக தாமதமாகவே முஸ்லிம்களுக்கு மூளையில் உரைத்தன. அதன் பின்புதான் திருச்சியில் ஜமால் முகமது, அதிராம் பட்டினத்தில் காதிர் முகைதீன், உத்தம பாளையத்தில் ஹாஜி கருத்த ராவுத்தர், சென்னை புதுக் கல்லூரி, மதுரையில் வக்பு போர்டு, பாளையங்கோட்டையில் சதக்கத்துல்லா அப்பா ஆகிய கல்லூரிகள் துவங்கின. பெண்களுக்காக, ஜஸ்டிஸ் பஷீர் அஹமது சயீத் அவர்களால் சென்னையில் S I E T கல்லூரியும் தொடக்கமாக துவங்கி வைக்கபப்ட்டன. இந்தக் கல்லூரிகளைத் துவக்கிய பெருமக்களுக்காக நாம் அனைவரும் துஆச் செய்வது நமது சமுதாயக் கடமை. அண்மையில்தான் வணிக நோக்கோடு கீழக்கரை, இராஜகிரி முதலிய பல ஊர்களிலும் முஸ்லிம்களால் கல்லூரிகள் நடத்தப்படுகின்றன. ஆனாலும் அவற்றில் எவ்வளவு முஸ்லிம்கள் பயில்கின்றார்கள் அவை எவ்வாறு நமது கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றன என்பது விவாதத்துக்கு உரியது.
ஆயினும் இன்னும் கல்வியில் தொடர்ந்து பின் தங்கியே இருக்கிறோம் என்பதை நாம் இன்னும் உணரவேண்டும். இதைப் பற்றி இன்னும் விவாதிக்கலாம். இன்ஷா அல்லாஹ்.
ஆக்கம் : P. முத்துப் பேட்டை பகுருதீன் B.Sc;
உருவாக்கம்: இப்ராஹீம் அன்சாரி

