Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஏர் இந்தியா எனும் வெங்காய லாரி ! 4

அதிரைநிருபர் பதிப்பகம் | July 11, 2017 | , , , , , ,

மீள் பதிவு

அந்த மறக்கமுடியாத அனுபவம் நடந்த வருடம்  யுவ வருடம் [ஆங்கிலம் 1995]. வருடங்கள் 'மல்லாக்க" படுத்து ஒடி விட்டாலும் இன்னும் ஞாபகத்தில் அந்த சம்பவங்கள் இன்னும் புல் முளைத்திருக்கிறது. [பசுமையாக இருக்கிறது என்பது ஒல்ட் ஸ்டைல்]  எங்கள் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் செய்த மடத்தனமான முடிவால் 500 பேரை சென்னைக்கு செமினாருக்கு அழைத்து செல்ல ஏர் இந்தியாவை திரைவு செய்தார்கள்.

எனக்கு கிடைத்த டிக்கட் நான் ஒரு போட்டியில் வென்றதால் நான் ரொம்ப பேசாமல் பின்தொடர வேண்டியிருந்தது. நானும் 7 வருடம் ஊர்போகாமல் இங்கு வெட்டிகிழித்ததால் ஆசையில் ஊர்போக நினைத்தேன்.

அப்போது இங்கு [ கோலாலம்பூரில் ] பழைய ஏர்போர்ட் இருந்தது. இப்போது உள்ள புதிய ஏர்போர்ட் அப்போது இல்லை.

அப்போதைக்கு எங்கள் வீட்டில் இருந்து ஏர்போர்ட் போக 15 நிமிடம் போதும் [இப்போது உள்ள ஏர்போர்ட் போகும்போது 'கட்டுச்சோறுடன் இரால் மொச்சைக்கொட்டை ஆனமும் " இருந்தால் தேவலாம் என்கிற மாதிரி அவ்வளவு தூரம்.]

Subang Airport- [OLD AIRPORT]   இப்போது இந்த ஏர்போர்ட் தரைமட்டமாக  உடைத்துவிட்டார்கள்

இரவு 9 மணிக்கு விமானம் என்பதாலும் குரூப் செக்-இன் என்பதாலும் 5 மணிக்கே ஏர்போர்ட் வந்துவிடவும் என ட்ராவல் ஏஜன்சி ஆள் சொன்னபோது ஏதோ ரைட் பிரதர்ஸ் இப்போதுதான் இந்த விமானத்தை கண்டு பிடித்திருக்கிறார்கள் இதை விட்டால் வேறு விமானமே உலகத்தில் இல்லை என்ற மாதிரி இருந்தது. செக்-இன் முடிந்து காத்திருக்கும் இடத்தில் நாங்கள் எல்லோரும் காத்திருந்தோம். 9 மணிக்கு வர வேண்டிய விமானம் கொஞ்சம் லேட், ஆஸ்திரேலியாவிலிருந்து வரும்போது லேட், சிங்கப்பூரிலிரிந்து இன்னும் புறப்படவில்லை என்று ஏர் -இந்தியா ஆட்கள் காரணங்களை அடுக்கிகொண்டே போனார்கள். இரவு 12 மணி வரை வராததால் 'சரி வீட்டுக்கு போகிறோம் விமானம் வந்த பிறகு சொல்லுங்கள்' என்றதற்கும், ‘இமிகிரேசன் உங்கள் பாஸ்போர்ட்டில் ஸ்டாம்ப் செய்து விட்டதால் நீங்கள் வெளியேர முடியாது என்று கதை அளந்தார்கள். நாங்கள் என்ன கேனயனா?..எங்கள் இமிகிரேசனில் நாங்களே பேசிக்கொள்கிறோம் என்று என்னுடன் வந்தவர்கள் கொதித்து விட்டார்கள். ஏர்-இந்தியாவை சேர்ந்தவர்கள் என்னிடம் ' சார் கொஞ்சம் எடுத்து சொல்லுங்களேன்' என்றவுடன் "ஏன் ...இமிகிரேசன் ஸ்டாம்ப் என்ன வெங்களத்திலும் பித்தளையிலும் உருக்கியா பாஸ்போர்ட்டில் ஸ்டாம்ப் செய்திருக்கிறார்கள். இல்லை இது என்ன ஆயுள் தண்டனையா என கேட்டவுடன் , அப்போது காணாமல் போன ஏர்-இந்தியா ஆட்களை இந்த 17 வருடமாக இன்னும் பார்க்கவில்லை.

எல்லோரும் பசி , பசி என்று கதறியதால் ட்ராவல் ஏஜன்சி காரனின் கருணையில் ஆளுக்கு ஒரு டோக்கன் மாதிரி கொடுத்து சாப்பிட சொன்னார்கள். போய் பார்த்தால் அகதிகளை பார்க்கிற மாதிரி நம்மை பார்த்து டோக்கனை வாங்கி கொண்டு  1 டோனட் , ஒரு காப்பி , ஒரு வர பிஸ்கட் போட்டார்கள் [கொடுத்தார்கள் என்பது அதீத மரியாதை ]

அதை வாங்கி வைத்து கொண்டு ஒருத்தன் ரொம்ப நேரம் உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தவுடன் எதை முதலில் சாப்பிடுவது என கேட்டவுடன் எனக்கு தோன்றியது இது என்ன சரஸ்வதி சபதமா 'கல்வியா செல்வமா வீரமா" நு "சாய்ஸ் பாட்டுப்பாட"....இந்த மூன்றையும் சாப்பிட்டால்தான் உனக்கு பசி அடங்கும் ஏனெனில் இப்போது இரவு மணி 1:00 என்றவுடன், அவன் பிறந்ததிலிருந்து சாப்பிட்ட அத்தனை நல்ல உணவுகளையும் சொல்லி சாவு ஒப்பாரி மாதிரி பாடி அழுதுவிட்டான். அவனைப் பார்த்தால் கார்ட்டூன் படத்தில் சண்டை வந்தாலும் கண்ணை மூடிக்கொள்ளும் பயந்த சுபாவம் உள்ளவன் மாதிரி தெரிந்தது.

எல்லோரும் பல கதைகளை பேசி பிறகு எங்கள் கண் முன்னாலேயே சூரியனும் உதித்து நேற்று இரவு வர வேண்டிய விமானம் அடுத்த நாள் காலை 9:30 க்கு கோலாலம்பூர் வந்தது. பிறகு நாங்கள் புறப்பட்டு சென்னை சென்றோம்
_______________________________________________________________________.

இடைவேளை

என்னோடு வந்தவர்களில் 90 % சென்னைக்கு முதன்முதலாக வருபவர்கள். எனவே யாரோ ஒரு நாதாரி நான் சென்னையில் படித்தேன் என்ற உண்மையை சொல்ல நான் தங்கியிருந்த சிந்தூரி ஹோட்டலுக்கு [க்ரீம்ஸ் ரோடு- அப்போலோ பக்கத்தில்] எனக்கு டெலிபோன் போட்டு எக்சேஞ் ரேட் கேட்பதிலிருந்து எந்த பாத்ரூமில் ஒன்னுக்கு போகலாம் என்பது வரை அத்தனை பேரும் எனக்கு டெலிபோன் போட்டே சாகடித்து விட்டார்கள்.

இதில் கொடுமை என்னவென்றால் சிலருக்கு ப்ரசிடன்ட் ஹோட்டல் , சிலருக்கு இன்னொரு ஹோட்டல்  என்று பிரிந்திருக்க ஞாயமான அளவுக்கான ஆட்கள் நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு தங்களை மாற்றி கொடுக்க சொல்ல ட்ராவல் ஏஜன்சிக்காரன் 'நிறுத்த சொல்லுங்க... எல்லோரையும் நிறுத்த சொல்லுங்க" என்று மணிரத்னம் மாதிரி என்னிடம் கெஞ்ச ஆரம்பித்து விட்டான்.

இதெல்லாம் ஜூஜுபி மேட்டரானாலும், க்ளைமாக்ஸ்தான் ஒரு திரைப்படத்தின் க்ளைமாக்ஸை விட பெரியது. நாங்கள் மலேசியாவுக்கு செல்லும் ஏர்-இந்தியா விமானம் சரியான நேரத்தில் புறப்பட்டது. இது ஏர்-இந்தியா தானா என்ற சந்தேகம் இருந்தது. இருப்பினும் விமானம் பறக்கும்போது வெளியே போர்டு போட்டிருக்கிறதா என்று பார்க்க இது என்ன பாய்ன்ட் டு பாய்ன்ட் பஸ்ஸா என்று எந்த முயற்சியும் எடுக்க வில்லை. விமான பணிப்பெண்கள் எல்லாம் ஹிந்தி சீரியலில் அம்மா வேடத்தில் நடிக்கும் ஆட்கள் மாதிரி இருந்ததால் காதோரத்தில் நரைத்த ஆண்கள் கூட  ஆன்டி... ஆன்டி என்றழைத்தார்கள். ஏர்-இந்தியா விமானப் பணிப்பெண்களை வேலைக்கு சேர்க்கும் பழக்கத்தை வெகு நாட்களுக்கு முன் கைவிட்ட மாதிரி தெரிந்தது.

சரியாக 1 1/2 மணிநேரம் பயணித்த விமானத்தில் உள் விளக்குகள் லேசாக மங்கத்தொடங்கியது. பிறகு மொத்தமாக இருட்டானது. மழைகாலத்து சேற்றில் டைனமோ வைத்த சைக்கிள் ஒட்டும்போது விட்டு விட்டு வரும் வெளிச்சம் மாதிரி "அப்பப்ப" வெளிச்சம் வந்து போனபோது கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற மாதிரி. ஒருபக்க எஞ்சினில் உள்ள ஜென்ரேட்டர் வேலை செய்ய வில்லை என்பதை ஏதோ பொண்ணு பார்க்க போன இடத்தில் கேசரிக்கு முந்திரிபருப்பு சரியாக வறுக்கவில்லை என்பது மாதிரி   கேப்டன் சொன்னவுடன் ஆழ்ந்த சயனத்தில் இருந்த பயணிகள் விழித்து என்னிடம் கேட்டனர். [வந்த கடுப்பில் ஏன்டா நானா ஜென்ரேட்டரை பிடித்து ஆஃப் செய்தேன்னு கேட்கலாம் போல் இருந்தது] இதில் சிலர் ஏரோநாட்டிகள் எஞ்ஜினியர் கேள்வியெல்லாம் கேட்டனர்.  

அவையாவன: "இந்த விமானம் என்ன ரகம்? எந்தனை எஞ்சினில் இயங்குகிறது? எத்தனை பவர் சப்ளை சோர்ஸ் ?"

நல்ல வேலையாக தற்போது விமானம் ஸ்டேன்ட்பை பவர் சோர்சில் இயங்குகிறது இதுவும் அப்பீட் ஆகிவிட்டால் நாம் கடலில் லேன்ட் ஆக 45 நிமிடம்தான் என்று சொன்னால் நிறைய பேருக்கு "சங்கேமுழங்கு" பாட்டு ரீ-ரிக்கார்டிங்கில் ஒலிக்கும் என்பதால் நான் மெளன விரதம் இருந்துவிட்டேன்.

விமானம் திரும்பவும் 1 1/2 மணி நேரம் பறந்து சென்னையில் [புறப்பட்ட இடத்துக்கு] வந்து சேர்ந்தது. விமானத்தில் எலக்ட்ரிக் வேலை செய்ய வில்லை எனவே ஏர்கண்டிசனும் படுத்து விட்டது இந்த லட்சனத்தில் 3 மணி நேரத்து மேலாக பயணிகளை கீழே இறங்க விடாமல் ரிப்பேர் பார்க்கிறேன் என்று தொடர்ந்தாற்போல் ஏதோ மட்டையடித்தார்கள். இந்நேரத்துக்கு சண்டி மாட்டுக்கு மூக்கில் மூக்குப்பொடி போட்டாவது குடியானவன் மாட்டை கிளப்பி இருப்பான். ஏர் இந்தியா எஞ்ஜினை மாட்டுடன் ஒப்பிட்டால் மாடு கோவிச்சுக்கும்.

வெயிட்டிங் ஏரியாவில் உட்காருங்கள் என்று இன்னும் 4 மணி நேரம் காக்க வைத்து கடைசியாக பம்பாயிலிருந்து வேறு விமானம் நாளைக்கு வரும் அதில் அனுப்புகிறோம் என்று ஹோட்டல் தருகிறோம் என்று சொன்னார்கள். பிறகு ஒரு வேனில் மூட்டை அடைப்பதுபோல் அடைத்து ஹோட்டலுக்கு அனுப்பினார்கள்.
 
2 பேர் தங்கும் ஹோட்டலில் 6 பேர் தங்கினோம். நான் தரையில் படுத்து தூங்கினேன் [ஒரு தலையனை விரிப்பு கூட கிடையாது] அடுத்த நாள் வழக்கம்போல் காலை 9 மணிக்கு ஏர்போர்ட் வர  சொன்னவர்கள் மாலை 3 மணிக்கு வேன் அனுப்பி இரவு 8 மணிக்கு புறப்பட்டு மலேசியா  வந்து சேர இரவு 2.00 ஆனது.

இதில் கொடுமை என்னவென்றால் எல்லோரும் இந்தியாவை விட்டு வெளியாவதால் முன்னாடியே இந்திய ரூபாயை செலவளித்து விட்டார்கள். ஏர்-இந்தியாவும் சாப்பாட்டுக்கு என்று எதுவும் செய்யவில்லை.

விமானம் கோலாலம்பூரில் தரையிறங்கியதும் ஒருவர் சொன்னது...' விமானம் நிற்கும் முன் கதவை திறந்து குதிக்க வேண்டும் போல் உள்ளது.

ZAKIR HUSSAIN
…………………………………………………………………………………………………………
N.B:  என்னதான் இருந்தாலும் ஏர்-இந்தியாவை இப்படி குறை சொல்லக்கூடாது என்று எழுத நினைக்கும் "தேசபக்தர்களுக்கு" . நான் எழுதிய நிகழ்வு 1995 ல் நடந்தது. 

இந்த லின்க்கை படித்து பாருங்கள் http://tamil.oneindia.in/news/2012/08/13/tamilnadu-air-india-passengers-stranded-at-chennai-airport-159529.html

இது 3 நாளைக்கு முன் நடந்தது . உண்மையில் இந்த ஆக்கம் பாதியில் எழுதிமுடித்த நிலையில் வந்த செய்தி . பொதுவாக நம்மடவர்கள் சொல்வது நம் நாட்டு மக்கள் தொகை அதிகம் , மற்ற நாடுடன் ஒப்பிட முடியாது... பிறகு ஏன் "நாசாவில் அதிகம் இந்தியர்கள்- மைக்ரோசாஃப்டில் இந்தியர்கள்- வான சாஸ்திரத்தில் முன்னேடி இந்தியர்கள் "என்று இ-மெயில் அனுப்பிக் கொண்டிருக்கிறோம்.?....

நாம் எப்போது திருந்துவோம்???? !!!!

இறக்கை கட்டிப் பறக்குதய்யா ! - அருண்ஜெட்லி பட்ஜெட். 0

அதிரைநிருபர் பதிப்பகம் | February 13, 2017 | , ,

Union Budget 2017 - 2018

வழக்கத்துக்கு மாறான நடைமுறைகளைக் கொண்டுவருவதே வாடிக்கையாகிவிட்ட இன்றைய மத்திய அரசின் ஆட்சியில், 2017- 18 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையும் பிப்ரவரி ஒன்றாம்தேதியே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

பலவகைகளில் பார்த்தால் இந்த  பட்ஜெட் சில தனித்தன்மைகளைக் கொண்டிருப்பதை தொடக்கத்திலேயே சுட்டிக் காட்டலாம். முதலாவதாக , ரயில்வேக்கான தனி பட்ஜெட் போடும் நடைமுறை மாற்றப்பட்டு ஒன்றிணைக்கப்பட்ட ஒற்றை பொது பட்ஜெட் ;         ஜி எஸ் டி என்ற  சரக்கு மற்றும் சேவை வரிகளுக்கான மாற்றங்கள் மாநிலங்களுக்கிடையே விவாத நிலையில் இருக்கும் நிலையில் போடப்பட்டுள்ள  பட்ஜெட்; பண மதிப்பு நீக்கத்துக்குப் பிறகு அதாவது ஒரு பொருளாதாரப் புயல் அடித்துக் கொண்டு இருக்கும்போதே  போடப்பட்ட பட்ஜெட்; இவைகளுடன் நாம் முன்னரே குறிப்பிட்டபடி பிப்ரவரி மாதக் கடைசிக்கு பதிலாக தொடக்கத்திலேயே சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட். 

இந்த பட்ஜெட்டுக்குப் பிறகு இந்த அரசுக்கு தனது அரசின் ஆயுள் காலத்தில் சமர்ப்பிக்க, இன்னும் ஒரே ஒரு முழுமையான பட்ஜெட்டே மிச்சம் இருக்கிறது ( 2018-19 ) என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். 2020 ஆம் ஆண்டு மே மாதத்தில் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்பதால் அப்போது சமர்க்கபடும் பட்ஜெட் ஒரு இடைக்கால பட்ஜெட்டாகமட்டுமே இருக்கும். இந்தக் கருத்தை கவனப் படுத்துவதோடு அருண் ஜெட்லி அவர்களின் இந்த பட்ஜெட் பற்றி சுருக்கமாக விமர்சிக்கலாம். 

முதலில் , இந்த பட்ஜெட்டில் கருத்தைக் கவரும் சில குறிப்புகள்    இருக்கின்றனவா என்று பார்த்தால் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில குறிப்பிடத்தக்க குறிப்புகள் தென்படுகின்றன என்றுதான் சொல்லவேண்டும். 

அவற்றுள் முதலாவதாக இதுவரை இரண்டரை இலட்சம் ரூபாய்க்கு மேல், ஐந்து இலட்சம் வரை வருமானம் ஈட்டும்  தனிநபர் வருமானவரிக்கான அளவு,  இந்த விலைவாசி ஏற்றத்தில்- பணவீக்கச் சூழலில் -  இன்னும் சற்று அதிகப் படுத்தப்படும் என்ற பரவலான  எதிர்பார்ப்பில் ஏமாற்றத்தைத் தவிர, பயன் ஒன்றும் இல்லை என்பதாகும். ஆயினும் இதுவரை ரூபாய் இரண்டரை இலட்சம் முதல் ஐந்து இலட்சம்  வரை வருமானம் ஈட்டுவோருக்கு விதிக்கப்பட்ட பத்து சதவீத வரி ஐந்து சதவீதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது இது சற்றே ஆறுதல் தரும் செய்திதான்.

அடுத்ததாக, ரூபாய் ஒரு கோடிக்குள் வருமானம் உள்ளவர்களுக்கு 10 % மும் ஒரு கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு   15% சர்சார்ஜ் என்று புதிதாக போடப்பட்டிருப்பதும்  அரசுக்கு வருமானத்தை கூடுதலாக ஈட்டித்தரும் என்று கூறப்பட்டாலும், இன்னும் அதிகமான வரி ஏய்ப்புகளுக்கே வழி  வகுக்கும் என்று தோன்றுகிறது. 

தொடர்ந்து,  50 கோடிக்கு அதிகமாகாமல் மொத்த விற்றுமுதல் அதாவது TURN OVER  செய்யும் கம்பெனிகளுக்கு  30% சதவீதத்தில் இருந்து  25% சதவீதமாக வருமானவரி குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் பணமில்லா பரிவர்த்தனையை பாலூட்டி வளர்ப்பதற்காக 3. 00. 000/= ரூபாய் வரை மட்டுமே ரொக்கமாக பரிவர்த்தனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த அளவை மீறினால் மொத்தப் பணத்துக்கும் அபராதம் கட்டவேண்டும் என்று அபாயச் சங்கும் ஊதப் பட்டு இருக்கிறது. 

மாதம் ரூ. 50,000/= க்கு மேல் வாடகையாகத் தரவேண்டிய நிலையில் உள்ளவர்கள் இனி இடத்தின் சொந்தக்காரர்களிடம் இருந்து டி டி எஸ்        ( TAX DEDUCTION AT SOURCE)  ,  என்ற முறையில் 5%  பிடித்தம் செய்து கொடுக்க வேண்டும். தனது வாழ்நாள் உழைப்பில் வாடகைக்கு விடுவதற்காக கட்டிடங்கள் கட்டி விட்டுள்ள ஓய்வு பெற்றவர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு இந்த  முறையில் இழப்பு ஏற்படும்; மன உளைச்சல் ஏற்படும்.   மூத்த குடிமக்களுக்கு இந்த  முறையில் இருந்து விதிவிலக்கு அளிப்பதை அரசு பரிசீலிக்கலாம். 

இந்த பட்ஜெட்டில் இன்னொரு வித்தியாசமான அணுகுமுறையாக  நாம் காண்பது அரசியல் கட்சிகள், தனிநபர்களிடமிருந்து  பெறும் நன்கொடைகள் பற்றிய உச்சவரம்பாகும். தனிநபர்களிடம் இருந்து ரூ. 2000/= க்கு மேல் நன்கொடையாகப் பெறக்கூடாது என்று விதி வகுத்திருக்கிறது இந்த பட்ஜெட். ஆற்றில் போவதை அய்யா குடி! அம்மா குடி!  என்று அள்ளிக் குடித்துக் கொண்டு இருந்ததை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயன்று இருப்பதை பாராட்டலாம் என்று நினைத்தாலும் , நடைமுறையில் எந்த அளவுக்கு இதை சாத்தியமாக்கப் போகிறார்களோ என்று ஒரு சந்தேகக் கண்ணுடன்தான் இதைப்பார்க்க வேண்டி இருக்கிறது. தங்களுக்குத் தெரிந்தவர்களின் பெயர்களை எல்லாம் போட்டு இரசீது போட நமது அரசியல் கட்சிகளுக்கு சொல்லியா  கொடுக்க வேண்டும்? ஊதித்தள்ளிவிடுவார்கள். 

ரயில்வே பட்ஜெட் என்று தனியாக  பட்ஜெட்  போட்ட காலங்களில் ஒவ்வொரு வருடமும் புதிய புதிய இரயில் சேவைகள் அறிமுகமாகும்; புதிய இரயில் பாதைகள் அறிவிக்கப்படும். ஆனால் இந்த ஒருங்கிணைந்த பட்ஜெட்டில் புதிய ரயில் திட்டங்களோ பாதைகளோ அறிவிக்கப்படவில்லை. ரயில் கட்டணங்கள் இப்போது உயர்த்தப்படவில்லையே தவிர ஐந்து மாநிலத் தேர்தல்கள் நிறைவுற்ற பிறகு கட்டணங்கள் உயர்த்தப்படாது என்று சொல்ல இயலாது. 

IRCTC என்கிற  ரயில் முன்பதிவு சேவைகளுக்கு இப்போது வசூலிக்கப்பட்டு வரும் சேவைக் கட்டணங்கள் இரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இது யானைப் பசிக்கு சோளப்பொறி என்றுதான் எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் IRCTC பங்குச் சந்தையில் பட்டியல் இடப்பட்டு ஒரு நிறுவனமாக ஆக்கப்பட்டு பங்குவர்த்தகம் செய்யும் என்பது ஒரு புதிய அறிவிப்புதானே தவிர,  இதில் என்ன  புரட்சி செய்ய நினைக்கிறார்கள் என்பது அவர்களுக்கு வெளிச்சம்.  

அத்துடன் புதிய மெட்ரோ இரயில் சேவைகளிலும் வழித்தடங்களிலும்  தனியார்துறையையும் இணைத்துக் கொண்டு திட்டங்கள் போடப்படும் என்ற அறிவிப்பு இந்த அரசின் தனியார்மயமாக்கும் தாகத்துக்கு தண்ணீர் தருவதாகும். மெல்ல மெல்ல இரயில்வேத் துறை தனியார்மயமாவதற்கான முதல் கதவை  இத்தகைய நுழைவு மூலம் திறந்துவிட மத்திய அரசு நினைக்கிறது என்றே நினைக்கவேண்டி இருக்கிறது.    

நாட்டின் மூலத்  தொழிலும் முதுகெலும்புத் தொழிலுமான விவசாயத்தை ஊர்விலக்கு செய்து இருப்பது போல இந்த பட்ஜெட் பிரேரணைகள் ஒதுக்கிவைத்து இருக்கிறது என்று வேதனையுடன் குறிப்பிடவேண்டி இருக்கிறது. விவசாயத்தின் முதல்தேவையான தண்ணீர் இல்லாமல் மழை இல்லாமல் நாடு முழுதும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில், வரலாறு காணாத அளவுக்கு விவசாயிகள் நாடெங்கும் பரவலாக விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கும் சூழலில் வருடாந்திர மத்திய அரசு இவைகளைக் கண்டுகொள்ளவில்லை என்பது ஒரு பெரிய குறைமட்டுமல்ல; குற்றமும் ஆகும். 

நதிநீர்  இணைப்பு பற்றி வாயளவில் பந்தல் போடுகிற அரசும், பிரதமரும் வாய்ப்புகள் வருகிறபோது அந்தப் பணியை தொடங்கிவைப்பதற்காகக் கூட நிதி ஒதுக்கவில்லை என்பதும், வறட்சி நிவாரணத்துக்காக நிதி ஒதுக்கவில்லை என்பதும், விவசாயக் கடன்களை ரத்துசெய்வதற்காக நிதி ஒதுக்கப்படவில்லை என்பதும் ,  தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளையும் அவர்களது தற்கொலைக்கான காரணங்களைக் களையும்வகையில் அடிப்படைகளை கண்டுகொள்ளவில்லை என்பதும், நிலச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படாததுடன் விவசாயிகளிடம் இருக்கும் நிலத்தையும் கையகப்படுத்தவும் அரசு முயல்கிறது என்பதும், விவசாய உற்பத்திக்காக புதிய நவீன முறைகளை அமுல்படுத்த ஆர்வம் தரவில்லை என்பதும் நாம் வைக்கும் கடுமையான விமர்சனங்கள் ஆகும்.

வெறுமனே கிசான் கார்டுகளை( KISAN CARD)  ரூபே ( RU PAY) கார்டுகளாக  மாற்றி விவசாயிகளின் கைகளில் கொடுப்பது அவர்களுக்கு நாக்கு வழிக்க உதவுமே தவிர, நாற்று நட உதவாது. 

நவீன விவசாயம் என்ற பெயரில் மரபணுமாற்ற பயிர்களை உற்பத்தி செய்து மக்களின் பொது நலன்களுக்கும் ஆரோக்கியத்துக்கும்  குந்தகம் விளைவிக்க அரசே துணைபோகும் திட்டங்களே அதிர்ச்சி அளிப்பதாகும்.  

நாடெங்கும் 5 இலட்சம் குளங்களை வெட்டப் போவதாக ஒரு அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் காணப்படுகிறது. இருக்கும் குளங்கள் வருடாந்திரப் பராமரிப்பு இல்லாமல் தூர்ந்து போய் கிடக்கின்றன; பல குளங்கள் தனியாரால் மட்டுமல்ல அரசாலும் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கின்றன. நீர் மேலாண்மையில் குளங்களைப் பராமரிப்பதாக அரசு சொன்னால்,  அதை ஓரளவு ஏற்றுக் கொள்ள இயலும். ஆனால் புதிய  குளங்கள் வெட்டுவதாகச் சொல்வது அந்தத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை, அரசியல்வாதிகள்  வேட்டுவிடுவதற்காக இருக்குமோ என்ற  ஐயத்தைக் கிளப்புகிறது. 

பிஜேபியின் தேர்தல் அறிக்கையிலும் பின்னர்  மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்    பிரச்சாரங்களிலும் வேலைவாய்ப்புகள் உருவாவதைப் பற்றி வாய்கிழியப் பேசிய பிரதமரும் அரசும் வேலைவாய்ப்பை உருவாக்க இந்த பட்ஜெட்டில் குறிப்பிட்டு சொல்லும்படியாக ஒன்றுமே செய்யவில்லை. 

இன்று உலகெங்கும் உள்ள பல நாடுகள் ,அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள புதிய ஆட்சி மாற்றம்,  அவ்வப்போது கொக்கரிக்கும் கொள்கை பற்றி கவலைப் பட்டு வருகின்றன. அதாவது அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கே வேலை என்றே முழங்கப் படுகிறது. அவ்விதம் ஒரு அதிர்ச்சி அளிக்கப்படுமானால்,  இன்று அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெற்றுள்ள பல இந்தியர்கள் நாட்டுக்குத்  திரும்பி வர நேரிடலாம்; அத்துடன் புதிய H B 1 விசாவும் வழங்கப் படுவதில் சிக்கல் ஏற்படும் என்றும் பொருளாதார வல்லுனர்கள் கணிக்கிறார்கள்.  இந்த மாற்றங்கள் ஏற்பட்டால் அதனால் வேலைவாய்ப்பில் இந்தியர்களுக்கு ஏற்படும் தாக்கத்தை தணிக்க இந்த அரசு என்ன பரிகாரம் வைத்திருக்கிறது என்பதுதான் இருட்டறையாக இருக்கிறது. இந்த இருட்டறைக்கு இந்த பட்ஜெட் ஒரு சிறிய  மெழுகுவர்த்தி கூட  ஏற்றிவைக்கவில்லை. 

DEMONISATION என்கிற செல்லாத நோட்டு அறிவிப்பு என்கிற ஆழ்கடலில் இருந்த அரக்கனை வெற்றிலை பாக்குவைத்து அழைத்துவந்து நாட்டில் உலவவிட்டதன் காரணமாக இந்த பட்ஜெட் ஆண்டில் என்னென்ன பொருளாதார தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை இந்த பட்ஜெட்டால் கணக்கிட  இயலவில்லை. இதனால் நாட்டின் ஒட்டு மொத்த  GDP என்கிற நாட்டின் மொத்த வளர்ச்சி வீதம் 1 முதல்  2 சதவீதம் வரை குறையும் என்று பொருளியல் வல்லுனர்கள் கணக்கிட்டு இருக்கிறார்கள்.  1 சதவீதம் என்பது ரூ 1,50,000 கோடி யாகும். வளர்ச்சி வீதத்தில் இவ்விதம் குறைவு ஏற்படுவதற்கு பட்ஜெட்டில் பரிகாரம் கண்டு இருக்கவேண்டும் . ஆனால் பூசி மெழுகப்பட்டு இருக்கிறதே தவிர , உருப்படியான  பிரேரணைகள் காணப்படவில்லை. 

இதைக் குறிப்பிடக் காரணம் ,    செல்லாத நோட்டு அறிவிப்பு என்கிற புயல் ஏற்படுத்திய சேதங்கள் எவ்வளவு என்கிற  அளவீடு இந்த பட்ஜெட்டால் சொல்ல இயலவில்லை. காரணம், (Demonisation  not estimated &  growth rate not accurate) அதாவது செல்லாத நோட்டு அறிவிப்பு சரியாக திட்டமிடப்படாததாலும் இலக்கு நிரணயிக்கப் படாததாலும் வளர்ச்சிவிகிதம் சரியான அளவில் இல்லாததாலும்  உற்பத்தி இழப்பு, சம்பளம் மற்றும் கூலி இழப்பு ஆகியவற்றால் ஏற்றுமதி இழப்பு வாங்கும் சக்தி குறைவு ( Loss of Production , Loss of Wages& Salary , Loss of Export, Loss of Purchasing Power ) ஆகிய  ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கைகளுமே ஸ்தம்பித்துவிட்டது.   இந்த பட்ஜெட் விமர்சனத்தில் நாம் குறிப்பிடுவது என்னவென்றால் சரி செய்யவே இயலாத இழப்புகளை ஏற்படுத்திவிட்ட செல்லாத நோட்டு விவகாரத்தில் வந்தது எவ்வளவு, வராதது எவ்வளவு என்ற (Survey)   துல்லிய கணக்கைக் கூட தருவதற்கு இந்த பட்ஜெட் அருகதையற்றுப் போய்விட்டது என்பதைத்தான். 

முதலீடுகள்,  40 சதவீதத்தில் இருந்து  29 சதவீதமாக குறைந்துவிட்டது என்பதை இந்த பட்ஜெட் வெளிப்படையாக, ஆனால் வெட்கமில்லாமல் ஒப்புக் கொள்கிறது. 

ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருப்பதாலும் ஜி எஸ் டி  வரி இனி வர இருப்பதாலும் புதிய வரிகள் விதிக்கப்படவில்லை. உற்பத்தி வரி மட்டும்  30 சதவீதத்தில் இருந்து   20 சதவீதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. அதானிகளும் அம்பானிகளும் 

“ நன்றி சொல்ல  உனக்கு வார்த்தை இல்லை எனக்கு “ என்று பாடவே இந்த  ஏற்பாடு என்று சந்தேகிக்க வேண்டி இருக்கிறது.  

எண்ணெய் விலையை நிர்ணயிப்பதில்  நிறுவனங்களின் கரங்களில் இருக்கும் அதிகாரத்தைப் பிடுங்க இந்த  பட்ஜெட் வழி வகுக்கவுமில்லை; அதைப் பற்றி சிந்திக்கவுமில்லை. உற்பத்தி செலவில் , வாழ்க்கை செலவில், விலைவாசிகளில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தும் எண்ணெய் விலை கொள்கையைப் பற்றி கண்டுகொள்ளாமல் , அந்த  மாட்டை தோட்டம் மேய விட்டு இருக்கும் இந்த மாட்டுக்காரவேலனாகிய மத்திய அரசு,  அடுத்த பட்ஜெட்டிலாவது இதுபற்றி ஆலோசிக்க வேண்டும்.     

பொதுச் செலவுகளை திட்டம், திட்டமில்லாத செலவுகள் என்று இருமுனைகளாக பிரித்து செலவிடுவது இந்த  பட்ஜெட் முதல் நிறுத்தப்பட்டு இருக்கிறது. இதற்குக் காரணம் பண்டித ஜவஹர்லால் நேருகாலத்தில் இருந்தே நடைமுறையில் இருந்த  பொருளாதார திட்டங்களை வகுத்துக் கொடுக்கும் திட்டக் கமிஷன் ( Planning Commission)  கலைக்கப்பட்டு அந்த இடத்தில் “நிதி ஆயோக்” என்ற ஆலோசனைக் குழுவை  உருவாக்கி , திட்டமிட்ட பொருளாதார கொள்கைகளுக்கு மத்திய அரசு மூடுவிழா நடத்தி இருப்பதுதான்.  இதன் உள்நோக்கம் மத்திய அரசு,  தனக்கு வேண்டிய மாநில அரசுகளுக்கு வாரி வழங்கவும் வேண்டாத மாநிலங்களை வஞ்சிக்கவும்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 

பட்ஜெட் என்பது ஒரு அரசின் குறிப்பிட்ட ஆண்டின் செயலபாடுகள் பற்றிய  ஒரு முன்னோட்டம். பட்ஜெட்டைப் பார்த்துத்தான் எந்த ஒரு அரசும் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் என்னவெல்லாம் செய்ய இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள இயலும். பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்பவர்கள் பட்ஜெட்டின் அடிப்படையில்தான் தங்களின் செயல்பாடுகளை வடிவமைத்துக் கொள்வார்கள். துரதிஷ்டவசமாக இந்த பட்ஜெட் காலம் வரும் நேரத்தில் இந்த அரசு எடுத்த சில திட்டமிடாத நடவடிக்கைகள் காரணமாக பட்ஜெட்டின் உண்மையான  நோக்கம் நிறைவேறுவதில் இடையூறுகள் ஏற்பட்டுவிட்டன. 

பட்ஜெட் என்கிற  ஆங்கில வார்த்தையை  BUDGET என்று எழுதலாம். இந்த வார்த்தையை இரண்டாகப் பிரித்தால் BUD
GET என்று பிரியும். BUD  என்றால் மொட்டு என்று பொருள். GET என்றால் அந்த மொட்டு மலர்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம். ஒரு வருடத்தின் பொருளாதார மலர்  எப்படி மலரப் போகிறது என்ற பார்வையே   பட்ஜெட் என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில் திரு. அருண் ஜெட்லி தந்துள்ள இந்த வருட பட்ஜெட் ஒரு மணம் வீசாமலேயே மலர் போன்ற தோற்றத்தில் உருவாக்கப்பட்ட காகிதப்பூ . இந்த காகிதப் பூ ஒரு காட்சிப் பூ மட்டுமே. இந்த காகிதப் பூவில் மகரந்தம் இல்லை; இந்த காகிதப்பூவில் தேன் இல்லை; இந்தக் காகிதப் பூவை நோக்கி வண்டுகள் வராது.

மொத்தத்தில் ஆண்டொன்று போனது; வளர்ச்சியோ வளமையோ இல்லாத ஒரு பட்ஜெட்டும் வந்து போகிறது   அவ்வளவே.

அதிரை - இப்ராஹீம் அன்சாரி M.Com.,

நடிகையாயிருந்து... தலைவியாகி ! 0

அதிரைநிருபர் பதிப்பகம் | February 11, 2017 | , ,

ம்முவுக்கும் எவிடாவுக்கும் நிறையவே தொடர்பு இருந்தது.... 

ஆரம்ப கால அவமானங்களிலும் சரி, சமகாலத்தின் விமர்சனங்களிலும் சரி, இறந்த பின் கொண்டாடப்பட்டதாகினும் சரி... எல்லாவற்றிலும் பத்தில் ஒன்பது பொருத்தம் இருந்தது. மிச்சம் ஒரு பொருத்தத்தில் தான் இருவரும் வித்தியாசப்பட்டனர்!

அம்முவின் அம்மா எப்படி  இரண்டாம் மனைவியோ அதுபோலவே எவிடாவின் அம்மாவும் 2ம் மனைவி!  வசதியாக இருந்த குடும்பம் தந்தையின் மறைவுக்கு பின் எப்படி திக்கு தெரியாத திசைக்கு பயணப்பட்டுக்கொண்டு சென்றதோ விதி அது போலவே அம்மு எவிடா வாழ்க்கையிலும் விளையாடி தீர்த்தது ! ஆனாலும் அவர்களே எதிர்பார்த்திருக்காத பல திருப்பங்களை தந்தது . இருவரும் நடிப்புத் துறைக்கு வந்ததும் பாதி திட்டமிட்ட நிகழ்வுகள் தான். சந்தர்ப்பங்கள் கை கூடின... அரசியலின் பிரவேசமும் அப்படி தான்! நாடே இவர்களின் பக்கம் பார்வையை செலுத்தியது.

மக்கள் ஓர் நடிகையை தலைவியாக்கி ஆட்சி அதிகாரம் கொடுத்தது "அம்மா" என வாயாற அழைத்து மகிழ்ந்தது இந்தியாவில் மட்டும் நிகழ்ந்த அத்திபூத்த சம்பவமல்ல... அர்ஜென்டினா மக்களாலும் ஓர் நடிகை  'நாட்டின் தாய்' என்னும்  உயர்ந்த அந்தஸ்து கொடுக்கப்பட்டு கொண்டாடப்பட்டார். எவிடா என செல்லமாக அழைக்கப்பட்டவரான இவா பெரோன்... அம்மு என செல்லமாக அழைக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கும் தான் எத்தனை விஷயங்களில் ஒத்து போகின்றன ?

இனி, இவா - ஜெயலலிதா என்றே அழைத்துக்கொள்வோம்.

ஜெ பற்றி நமக்கு நன்றாய் தெரியும். இவாவின் வாழ்க்கையும் கிட்டதட்ட அதே போல் அமைந்ததுதான் பெரும் ஆச்சர்யம். இவா வின் அம்மா இரண்டாம் மனைவி ஆனதால் தனக்கான உரிமைகளை இழந்து நின்றார். இரண்டாம் தாரத்தின் மனைவிக்கு பிறந்த குழந்தைகளும் சூழலின் புயலில் வெவ்வேறு திசைக்கு அழைக்கழிக்கப்பட்டனர்.   

அழகு, திறமை என அனைத்தும் ஒருங்கே பெற்ற ஜெயலலிதாவிற்கு அம்மா நடிகை என்ற  அடையாளத்தால் வாய்ப்புகள் தேடி வந்துகொண்டே இருந்தன.  நடிகையாகவேண்டும் என தன் முகத்தை ப்லாஸ்டிக் சர்ஜரி செய்து அழகாக்க முயன்ற ஈவா  ,   ஊசலாடிய உயிருக்கு உதவ தன் பணத்தையெல்லாம் கொடுத்து அடுத்தொன்னும் செய்ய இயலா நிலையில் வாய்ப்பு தேடினார். இருவருக்கும் அதிஷ்ட்டம் வந்தது. வாய்ப்பு கிடைத்து. வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்தினார்கள். தனது துறையில் ஜொலித்தார்கள்.

தாய்க்கு பின் அதற்கு ஈடான, அவ்விடத்தை நிரப்பும் எந்த உறவும் ஜெயலலிதா பெற்றிருக்கவில்லை. அதனால் தானோ என்னவோ தனக்கு ஏற்பட்ட தனிமையின் நீட்சியாய் அவரின் அணுகுமுறைகள் அமைந்திருந்தன. ஈவாவோ தந்தைக்கும் தாக்கும் பிறகும் காதலால் ஆசீர்வதிக்கப்பட்டாள்.  தனிபட்ட வாழ்க்கையில் தோல்வி கண்ட நிலையில் ஜெ அரசியல் பிரவேசம் கண்டார்.  ஈவாவோ அரசியல்வாதியான பெரோனின் கரம்பிடித்தாள். பல விமர்சனங்கள் கண்டபோதும் அரசியலில் இரு ஆளுமைகளும் அடைந்தது உச்சமே! இருவரை தவிர்த்த அரசியல் பக்கங்கள் பூர்த்தியிட முடியாதவை. காலம் கடந்த பின்னும் அவர்கள் கொண்டு வந்த சட்டங்களும் பெற்று தந்த உரிமைகளும் அவர்களின் பெயரை சொல்லிக்கொண்டே இருக்கும் ! 

நடிகை என்பதையும் மீறி அவர்களிடமிருந்த ஆளுமைத்திறன் மட்டுமே அவர்களின் பெயரை வரலாற்றில் பொதிக்க காரணமாய் இருந்தது. ஒருவரின் புறத்தோற்றமும் தொழிலும் அவரைப்பற்றிய மதிப்பீடுகளுக்கு  முழுமை தந்துவிடாது. நிகழ்கால விமர்சனங்களும்  கூட எதிர்கால புகழை மட்டுப்படுத்திவிடாது ! 

ஆமினா முஹம்மத்

அரவணைக்க அருகதையற்றவர்களா அகதிகள் ? 0

அதிரைநிருபர் பதிப்பகம் | February 04, 2017 | ,


அதென்னவோ தெரியவில்லை . உலகம் இப்போதெல்லாம் ஒரு தினுசான மனநிலை கொண்டவர்களையே ஆளும் பொறுப்பில் அமர்த்துகிறது.

அமெரிக்காவின் அதிபர் டொனால்டு டிரம்ப் 7 இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த  அகதிகளை அமெரிக்காவில் அனுமதிக்க தடைவித்து  உத்தரவிட்டு இருக்கிறார். ஏமன், சூடான்,ஈராக், லிபியா, ஈரான் ,சோமாலியா, சிரியா ஆகிய நாடுகளே தடை செய்யப்பட்டுள்ள நாடுகள்.

அகதிகள் குடியேற்றம் என்கிற மனிதாபிமானம் சார்ந்த முறையின் அடித்தளத்தையே இந்த  முடிவு ஆட்டி அசைத்து  இருக்கிறது. காரணம், உலகில் எங்கெல்லாம் அரசியல் காரணங்களால் மக்கள் வாழ முடியாத நிலை ஏற்படுகிறதோ   , அந்தநாடுகளின் மக்கள் தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள புலம் பெயர்ந்து பல நாடுகளுக்கும் சென்று குடியேறுவது காலம்காலமாக கடைப்பிடிக்கப்படுகிற நடைமுறை.  

இத்தகைய குடியேற்றங்களின் வரலாறு நெடியது;  நீண்டது. வரலாற்றின் பக்கங்களைப் புரட்டினால் உலகின் எல்லா நாடுகளிலும் இருந்தும் பல்வேறு காலகட்டங்களில் அல்லல்களுக்கு  ஆளான மக்கள் , அகதிகளாக குடிபுகுந்து இருக்கிறார்கள் என்பதைக் காணலாம்.  

பாலஸ்தீனத்தின் வரலாறைப் படிக்கும்போது பல்வேறு காலகட்டங்களில் யூதர்கள் உலக நாடுகள் அனைத்துக்கும் அகதிகளாகச் சென்று இருக்கிறார்கள் என்பதை அறியலாம்.

பின்னர் இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்டபோது பாலஸதீன மக்கள் பல்வேறு அரபுனாடுகளுக்கும் உலக நாடுகளுக்கும் அகதிகளாகச் சென்று குடியேறினார்கள்.

பாகிஸ்தானுக்கும் வங்க தேசத்துக்கும் போர் நடைபெற்ற போது கூட்டம் கூட்டமாக மக்கள் அருகில் இருந்த இந்தியாவுக்குள் குடி புகுந்தார்கள். அதனால் ஏற்பட்ட எதிர்பாராத செலவுகளை சரிக்கட்டுவதற்காக,  அகதிகள் புனர்வாழ்வு ( Refugees Relief Fund) தபால் தலை ஐந்து பைசா கட்டணம் வைத்து வசூலிக்கப்பட்டதை பலர் மறந்து இருக்க இயலாது.    

இலங்கையில் இனப் பிரச்னை ஏற்பட்ட போது புலம் பெயர்ந்த தமிழர்கள் இன்று உலகம் முழுதும் பரவி வாழ்ந்து வருகிறார்கள்.

அவ்வளவு ஏன்? அமெரிக்காவே உலகம் முழுதும் இருந்து வந்து குடியேறிய மக்களின் கூட்டம் நிரம்பிய நாடுதானே. ஆய்ந்து பார்த்தால் இதே டொனால்ட் டிரம்ப்  உடைய முன்னோர்கள் கூட  வேறு நாடுகளில் இருந்து அகதிகளாக அமெரிக்காவில் புகுந்தவர்களாகவே  இருப்பார்கள். இன்று அமெரிக்கா கண்டுள்ள  வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் தங்களின் இரத்தத்தை வேர்வையாக வடித்தவர்கள் உலகம் முழுதும் இருந்து அகதிகளாக அமெரிக்காவில் குடியேறியவர்கள்தான் என்ற  உண்மையை டொனால்ட் ட்ரம்ப் மறுப்பாரானால் அவர் எந்த   நாட்டின் அதிபராக இருக்கிறாரோ அந்த நாட்டின் ஆரம்பகால வரலாறையே அறியாதவராகத்தான் இருப்பதாகக் கொள்ள வேண்டும். அதற்குப் பின் அறிவுபூர்வமான எதையும் அவர் இடமிருந்து எதிர்பார்க்க இயலாது.

மனிதாபிமானம் இல்லாமல் இன்று அமெரிக்க அதிபர் எடுத்துடுள்ள  முடிவு யாருக்கு எதிராக என்றால் உண்மையிலேயே உலக மக்களின் அரவணைப்பும் ஆதரவும் தேவைப்படும் மக்களைக் கொண்ட நாடுகளை எதிர்த்துத்தான் என்ற உண்மை  மிகவும் வேதனையில் ஆழ்த்துவதாகும். எந்த மக்களுக்கு உதவிகள் தேவையோ அந்த மக்களைச் சேர்ந்த நாட்டின் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு இருக்கிறது.

உலகெங்கும் உள்நாட்டு அரசியல் பிரச்சனைகளால் வாழவழியற்ற அகதிகள் சமுதாயம் உருவாகிற சூழல்களில் எல்லாம் அகதிகளை அரவணைப்பதில் ஜெர்மனி, சுவிஸ், அமெரிக்கா, கனடா,    பிரிட்டன், ஆகிய நாடுகள்      குறிப்பிடத் தகுந்தவைகளாகும். இப்போது உதவிக்கரம் தேவைப்படும் சூழலில் உள்ள நாட்டு மக்களுக்கு ஆதரவளிக்க  அமெரிக்கா தனது கரத்தை சுருட்டிக் கொண்டிருப்பதன் பின்னணியில் தீவிரவாதம் என்கிற புஸ்வானம்தான் காரணமாக சொல்லப்படுகிறது. 

ஆனால் , ஆப்கான், பாகிஸ்தான் முதலிய நாடுகள் டொனால்ட் ட்ரம்ப் உடைய தடைப் பட்டியலில் காணப்படாதது அவரது உள்நோக்கத்தை சந்தேகிக்க வைக்கிறது.

டொனால்ட் ட்ரம்ப், தனிப்பட்ட முறையில் ஒரு பெரிய வர்த்தக நிறுவனங்களின் இயக்குனர். இன்று அவரது தடைப் பட்டியலில் உள்ள நாடுகளைத் தவிர்த்து மற்ற நாடுகளில் எல்லாம் அவரது வணிகத்தின் வலை விரிக்கப்பட்டு இருக்கிறது என்றும் தடைப் பட்டியலில் உள்ள நாடுகளில் டொனால்ட் ட்ரம்ப் உடைய நிறுவனங்கள்  இயங்கவில்லை என்றும் நாமல்ல, INDEPENDENT  என்கிற  பத்திரிக்கை இவ்வாறு  குறிப்பிடுகிறது.

“As controversy rages about President Donald Trump’s travel ban, critics have pointed out that the seven predominantly Muslim countries whose citizens have been barred have one thing in common – they are not among the places where the tycoon does business.”

அதே பத்திரிக்கை மேலும் குறிப்பிடுகிறது

“ The executive order Mr Trump signed blocks entry for the next 90 days to travellers from Syria, Iran, Iraq, Yemen, Sudan, Somalia and Yemen but excluded from the list are several wealthier Muslim majority countries where the Trump Organisation has business interest, including Saudi Arabia, Lebanon, Turkey, the UAE, Egypt and Indonesia.”

வந்தாரை வரவேற்ற அமெரிக்காவில் தற்போது விசா தடை செய்யப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வரவேண்டாம் என்று தடுக்கப்படுவது முஸ்லிம்கள் மட்டுமே என்பதும் கிருத்தவ சகோதரர்களுக்கு அந்தத்தடை இல்லை என்பதும் நாகரிகத்தை நோக்கி நகரும் உலகின் உள்ளத்தை  உலுக்கிப் பார்க்கிறது.

முஸ்லிமகள்தான் தீவிரவாதத்தை உலகில் பரப்புகிறார்கள் என்கிற அவதூறுக்கு அடியுரம் இடுவதைப் போல இருக்கிறது டொனால்ட் ட்ரம்ப் உடைய செயல்.

முதல் உலகப் போரையும் இரண்டாம் உலகப் போரையும் நடத்தியவர்களும் தூண்டியவர்களும்  முஸ்லிம்களா? ஹிரோஷிமா நாகசாகியில் அணுகுண்டை வீசியவர்கள் முஸ்லிம்களா? வட அமெரிக்காவில் 100 மில்லியன் இந்தியர்களைக் கொன்றவர்கள் முஸ்லிம்களா? தென் அமெரிக்காவில் 50 மில்லியன் இந்தியர்களைக் கொன்றவர்கள் முஸ்லிம்களா? 180 மில்லியன் ஆப்ரிகர்களை அடிமைகளாக இழுத்துச் சென்று அவர்களில் 88% சதவீத மக்களை இறந்து விட்டார்கள் என்று நடுக்கடலில் வீசி எறிந்துவிட்டு கைகளை டிஷ்யூ பேப்பரில் துடைத்தது முஸ்லிம்களா? ஈராக்கில் புகுந்தவர்கள் யார்? இஸ்ரேலில் பாலஸ்தீனியர்களை குழிதோண்டிப் புதைப்பவர்கள் யார்? ஆப்கானில் நாட்டாண்மை  செய்து வருபவர்கள் யார்? உலக அரசியல் வன்முறைகளுக்கு காரணமாக முஸ்லிம்களை சொல்வது இட்டுக்கட்டிய சொத்தைவாதம் . வரலாறு இவ்வாறு இருக்க முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துவது யாரை திருப்தி படுத்த?

நினைத்துப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது . இந்தியா போன்ற வளரும் நாடுகள்தான் MAKE IN INDIA என்ற கோஷத்தை முன் வைக்கிறது. ஆனால் முன்னேறிய அமெரிக்காவும் அதே  போல ஒரு கோஷத்தை அமெரிக்கர்களுக்கே வேலை என்றெல்லாம் முன்வைப்பது,  மோடியின் நாற்றம் அமெரிக்காவரை வீசுகிறதே என்று வியப்பாக இருக்கிறது.

உலகச் சந்தைப் பொருளாதாரத்தை , உலகமயமாக்கல் தத்துவத்தை , முதலாளித்துவ முன்னெடுப்பை உலகுக்கே சொல்லித்தந்து முன்வரிசையில் நின்றுகொண்டிருந்த அமெரிக்கா தனது வானளாவிய தந்துவங்களை ஒரு தகரப் பெட்டியில் அடைத்ததுபோல் அமெரிக்கர்கள் அமெரிக்கர்களுக்கே வேலை என்றெல்லாம் தனி அடையாளம் காண  ஆரம்பித்து இருப்பது டொனால்ட் ட்ரம்ப் நடத்தும் அரசியல், இதுவரையில் ஆனந்தராகம்  இசைத்த  கச்சேரியில்  அபஸ்வரமாக ஒலிக்கவில்லையா?

பொதுவுடைமைத் தத்துவத்தை சொல்லிக் கொண்டிருந்த சீனா போன்ற நாடுகள் உலகமயமாக்கல், உலகச் சந்தை என்று பேசத் தொடங்கி இருக்கும் இந்தக் காலத்தில்  முதலாளித்துவ சித்தாந்தங்களுக்கு மூலகாரணமான அமெரிக்கா,  தன்னை ஆளவந்த டொனால்டு ட்ரம்ப் உடைய காரியங்களால் தனது அடையாளத்தையும் மூல முகவரியையும் தொலைக்கத் தொடங்கி இருக்கிறது என்றுதான் துரதிஷ்டவசமாக  சொல்ல வேண்டி இருக்கிறது.

“பேய் அரசாள வந்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் “ என்ற  பாரதியாரின் பாடல் வரிகளை இந்தியாவில் ஏற்கனவே கண்டு வருகிறோம். இப்போது அந்தப் பட்டியலில் அமெரிக்காவும் இணைந்திருப்பது உலகில் சாத்தான்களின் கைகள் ஓங்கி வருகின்றன என்பதை சொல்லாமல் சொல்கிறது. இறைவன்தான் இந்த  உலகைக் காப்பாற்றவேண்டும்.

அதிரை இப்ராஹீம் அன்சாரி. M.Com;

Any suspended coffee 3

அதிரைநிருபர் பதிப்பகம் | January 31, 2017 | ,

முழுதாக படித்துவிட்டு முடிந்தால் ஷேர் செய்யுங்கள் அல்லது... கடைசியாக சொல்கிறேன்...

கடைசி இரண்டு பதிவுகளில் விளையாடிக்கொண்டு இருந்தது என்னை நானே ஆசுவாசப்படுத்திக்கொள்ள ஒரு சின்ன ப்ரேக்.

இன்று நானும் அவளும் என பதிவுகள் இட்ட போது சில நண்பர்கள் "நீயுமா" என கோபப்பட்டனர்.

சரி பார்ப்போம்

ஃபேஸ்புக் என்பது வெறும் அரட்டை அடிக்கும் தளம் மட்டும் அல்ல என்பது சமீப கால வெள்ள நிவாரண பணிகளில் இருந்து ஜல்லிக்கட்டு வரை அனைவருக்கும் தெரிந்ததே.

இரண்டு நாள் முன்பு சேட்டு டீக்கடை என்ற தலைப்பிட்டு என் அனுபவம் ஒன்றை எழுதி இருந்தேன்.

அதில் ஒரு தோழியின் கமெண்ட் பார்த்ததும் வியந்து என்ன பதில் சொல்வது எனத்தெரியாமல் நேற்றுதான் பதில் அளித்தேன்.

இதோ அவர் இட்ட கமெண்ட்... அப்படியே காபி செய்கிறேன்



//////

(என் நண்பர் வெளிநாடு சென்றிருந்த போது ஒருRestaurantல் நண்பருடன் காபி அருந்திக் கொண்டிருந்தார்.

அப்பொழுது ஒரு பெண் counter ல் பணம் செலுத்தும் போது five coffee,, two suspended என்று கூறினார்.

அடுத்து வந்த இளைஞர் ten coffee five suspended என்று கூறிவிட்டு 10 காபிக்கு பணம் செலுத்தி விட்டு 5 காபி மட்டும் வாங்கிக் கொண்டார்.

பின்னால் வந்தவர் five meals two suspended என்று கூறிவிட்டு இரண்டு உணவு மட்டும் வாங்கிச் சென்றார்.

என் நண்பருக்கு ஒன்றும் புரியவில்லை.

என்ன இது? என்று கேட்டார்.

பொறுங்கள் என்றார் அவர் நண்பர்.

சிறிது நேரம் கழித்து ஒரு முதியவர் கிழிந்த ஆடைகளோடு counter ஐ நெருங்கினார்.

Any suspended coffee என்று கேட்டார்.

Counter ல் இருந்த பெண் Yes என்று கூறிவிட்டு சூடான ஒரு கப் காப்பியை அந்த முதியவருக்கு கொடுத்தார்.

என் நண்பருக்கு மெய் சிலிர்த்தது. என்ன ஒரு மனித நேயம்.

வறுமைக்கோட்டில் உள்ள முகம் தெரியாதவர்களுக்கு நேர்மையான உதவி.

இன்னும் ஒரு சிறப்பு என்னவென்றால், இந்த பழக்கம் நேபாள் நாட்டிலிருந்து உலகம் முழுவதும் பரவியிருக்கிறது.,,

பிறர் துன்பம் கண்டு மனம் கசிவோர் எல்லாம் சிறந்தவர்களே.

நாமும்ஏன்இதைப்பின்பற்றக்கூடாது?)//////

இது அவர் அவருடைய தோழி ஒருவர் பதிவாக இட்டதாக என் பதிவில் இட்டு இருந்தார்.

நடுவில் ஆங்கிலம் கலந்து இருந்தாலும் சுலபமாக புரிந்து கொள்ள முடியும் இதை...

காரணம் கண்களால் படிக்காமல் உணர்வால் பார்த்தால் எல்லாமே புரியும்.

இதை படித்தவுடன் எனக்கு நேற்று ஒரு யோசனை வந்தது.

இதை ஏன் நான் இருக்கும் சேலத்தில் இந்த பழக்கத்தை கொண்டுவரக்கூடாது என்று...

நேற்று மதியம் என் அம்மாவின் கண் அறுவைசிகிச்சை முடிய நான் இன்று மதியத்திற்குள் நான் அடிக்கடி செல்லும் அறிமுகமான தேநீர் கடைகளில் அமர்ந்து கல்லாவில் இருந்தவர்களிடமும் அக்கடை முதலாளிகளிடமும் பேசி விளக்கினேன்.

என்ன விளக்கினேன்?

இந்த கமெண்டை எடுத்து படித்து காட்டியே வெளிநாடுகளில் இது போல காஃபி ஷாப்களில் காஃபியோ தேநீரோ உணவோ அருந்துபவர்கள் தான் இரண்டு காஃபி வாங்கினால் ஐந்து காஃபிக்கான காசை கொடுத்து அந்த suspended என்ற மூன்று காஃபிகளை எளிய மக்களுக்கு காஃபியோ தேநீருக்காகவோ கை நீட்டுபவர்களுக்கு கொடுக்கும் வழக்கம் இருப்பதை எடுத்து சொன்னேன்.

மிக பொறுமையாக கேட்டு என்னை மனதார பாராட்டினர்.

அவர்கள் என் காசை ஏமாற்ற மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருந்து இருக்கிறது.

நேற்று முதல் ஐந்து கடைகளில் ஆறு தேநீர் அருந்தி பதினைந்து தேநீருக்கான காசை கொடுத்தேன்.

மிக கண்ணியமான வழக்கமாக வரும் வாடிக்கையாளர்களிடம் யாரையும் வற்புறுத்தாமல் இதை பற்றி சொல்லி செய்ய சொல்லி வேண்டுகோள் வைத்தேன்.

நிச்சயமாக செய்வதாக உறுதி அளித்தவர்கள் என் அலைபேசி எண்ணை வாங்கிக்கொண்டு நேற்று மாலையும் இன்று காலையும் எனக்கு பேசி அந்த நான் கொடுத்த காசுக்கான தேநீரை எளிய மக்களுக்கு கொடுத்ததாக சொன்னார்கள்.

இதை நான் தொடர்வேனா நாளை எனக்கு ஒரு பிரச்னை என்றால் இது மறந்து என் கவலையில் மூழ்கி இதை மறந்துவிடுவேனா என்று எனக்கு தெரியாது.

அனைவருக்கும் அள்ளிக்கொடுக்க நான் ஒன்றும் கோடீஸ்வரனும் கிடையாது ஆனால் கிள்ளிக்கொடுக்க முடியும் என்னால்....

இப்போது ஒரு தீக்குச்சியை பற்ற வைக்கிறேன்.

இது தொடருமா என்றும் எனக்கு தெரியாது.

இன்னொரு விஷயம்,

நான் பிறந்து வளர்ந்த சேலம் செவ்வாய் பேட்டை பகுதியில் நிறைய வெள்ளி நகை கடைகள் தங்க அடகு கடைகள் ஆசாரி பட்டறைகள் வெள்ளியின் தரம் பார்த்து சான்றிதழ் கொடுக்கும் ரிஃபைனரிகள் என நிறைய இருக்கும்.

அங்கு பல வருடங்களாகவே நிறைய கடைகளில் மதியம் சரியாக பனிரெண்டு மணிக்கு கடைகளில் நுழையும் இடத்தில் ஒரு ஓரமாக மதிய உணவு பொட்டலங்கள் வைக்கப்பட்டு இருக்கும்.

ஒவ்வொரு கடையின் முதலாளியின் பண வசதிக்கு ஏற்ப உணவு பொட்டலங்களின் எண்ணிக்கை இருக்கும்.

யார் வேண்டுமானாலும் யாரிடமும் கை ஏந்தாமல் அதை எடுத்து செல்லலாம்.

ஒரு கடையில் தீர்ந்தால் இன்னொரு கடையில் நிச்சயமாக உணவு இருக்கும்.

இந்த கடைகளின் முதலாளிகள் பல்வேறு மொழி இனம் மதம் என வேறுபட்டு இருந்தாலும் ஒரு தார்மீகமாக செயலாக இதை செய்கிறார்கள்.

இது சேலம் வாழ் நாண்பர்களுக்கு தெரிந்த விஷயம்.

இப்போது என் வேண்டுகோள் என்னவென்றால் ஃபேஸ்புக் நண்பர்கள் ஏதாவது கடை வைத்து வியாபாரம் செய்து கொண்டு இருந்தால் மதியம் ஒரு ஐந்து உணவு பொட்டலங்களை மனம் இருந்தால் சேலம் வாழ் மக்கள் போல இல்லாதவர்களுக்கு கொடுங்கள்.

அதேபோல தேநீர் கடை சிறிய அளவிளான உணவு விடுதி வைத்து இருப்பவர்கள் தன் கடைக்கு வரும் மிக தெரிந்த வாடிக்கையாளர்களிடம் முதலில் சொன்ன suspended விஷயத்தை சொல்லி ஒற்றை தேநீருக்கான காசை வாங்கி இல்லாதவர்களுக்கு கொடுங்கள்.

அதே போல என் ஃபேஸ்புக் நண்பர்கள் என் மீது கொள்ளை மரியாதை கொண்டவர்கள் முடிந்தால் உங்கள் ஊரில் இருக்கும் தேநீர் கடையோ உணவு விடுதியோ அங்கு suspended காசை கொடுத்து அந்த கடை உரிமையாளரிடம் இதை பற்றி விளக்குங்கள்.

ஆனால் நிறைய பேர் மற்றவர்களுக்கு தெரிவிக்காமல் விளம்பரம் இல்லாமல் எளிய மக்களுக்கு உதவுவதும் எனக்கு தெரியும்.

இந்த விஷயங்களை பற்றி நான் நேரில் பார்க்கும் நண்பர்களிடம் எதுவும் பேசவில்லை.

காரணம் அவர்களால் தவிர்க்க இயலாமல் இதை ஏதோ காரணத்திற்காக செய்ய முடியாது போனால் நாளை என் முகம் பார்க்க தயங்குவார்கள் என்பதால் இங்கு ஃபேஸ்புக்கில் நான் முகம் பார்க்காத பலரிடம் ஒரு வேண்டுகோளாக இதை கேட்கிறேன்.

ஆயிரக்கணக்கான ரூபாய்களோ நூறு ரூபாயோ ஒரு கோப்பை தேநீருக்கான எட்டு ரூபாயோ அது அவரவர் வசதியை பொறுத்தது.

"மனம் இருந்தால் மார்க்கம் உண்டு" என்பது பெரியோர் வாக்கு.

எதை எதையோ வெளிநாடுகளை பார்த்து காப்பி அடிக்கிறோம் இதையும் அடிக்கலாமே?

இதில் யாரும் யாரையும் ஒருங்கிணைக்க தேவையில்லை யாரும் யாரிடமும் காசு பறிமாற்றம் செய்யும் சிக்கல்கள் இல்லை.

அவரவர் ஊர் அவரவர் மக்கள் அது சேலமோ சென்னையோ தூத்துக்குடியோ எந்த ஊராக வேண்டுமானாலும் இருக்கட்டும்.

அந்த ஊரில் இருக்கும் என் நண்பர்கள் இதை செய்தால் நான் மகிழ்வேன் என்பதை விட செய்து பாருங்கள்.

இரவு "நான் எதையோ சாதிச்சுட்டேன்டா" என்ற பெருமிதம் உள்ளுக்குள் பொங்க ஒரு நிம்மதியான உறக்கம் நிச்சயம் உண்டு.

நான் தொடங்கி வைக்கிறேன் இதை.....

நேரமும் கொஞ்சம் பணமும் இதற்காக ஒதுக்கும் நண்பர்கள் இதை செயலாக்கலாம்.

இப்பதிவை ஷேர் செய்வதை விட என் பெயர் இன்றி எடிட் செய்து அப்படியே காப்பி எடுத்து என் பெயர் தவிர்த்தும் அவரவர் சுவர்களில் முடிந்தால் பதியுங்கள்

ஷேர் செய்தால் அது போகும் ரீச் என்பது மிக குறைவு என்பதால் காப்பி எடுத்து போட்டுக்கொள்ளுங்கள்.

அவரவர் பெயரில் கூட போட்டுக்கொள்ள அனுமதி அளிக்கிறேன்.

என் சக மனிதர்கள் மீதான நம்பிக்கையுடன் என் சக மனிதர்கள் மீதான மகா தோழமையுடன் ராஜ் !

நன்றி : சபிதா காதர்
இது ஒரு முகநூல் பகிர்வு

பணத்தை பிணமாக்கிய மோடி. 4

அதிரைநிருபர் பதிப்பகம் | January 14, 2017 | , ,

கடந்த வாரம் புதுச்சேரிக்கு பேருந்தில் பயணித்துக் கொண்டு இருந்த போது, வழக்கம் போல ஜன்னல் ஓரம் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்றேன். சீர்காழியைத் தாண்டி ஆனைக்காரன்சத்திரம் என்கிற ஊர் வந்த போது காலை மணி ஏழரை. அந்த ஊரில் நெடுஞ்சாலையோரம் இந்தியன் வங்கி அமைந்து இருக்கிறது. நாங்கள் பயணித்த பேருந்துக்கு பாதை கிடைக்காத விதத்தில் சாலையை ஆக்கிரமித்து, அந்த இளம் காலை நேரத்திலேயே வங்கியின் வாசலில் ஆண்களும் பெண்களுமாக – அனைவருமே தோற்றத்தில் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அடங்கிய குறைந்த பட்சம் இருநூறு முதல் முன்னூறு பேர்கள் வரிசையில் நின்று கொண்டு இருந்தார்கள். பல ஊர்களிலும் அண்மைக்காலமாக அன்றாடம் நாம் காணும் காட்சிதான் இது. நாமும் நேற்றுவரை இவ்வாறு நின்றுவிட்டுத் தான் இன்று பயணிக்கிறோம். 

பேருந்து ஓட்டுனர் தொடர்ந்து ஒலி எழுப்பிக் கொண்டே இருந்தார். சாலையை அடைத்துக் கொண்டிருந்த ஏக்கம் நிறைந்த மக்களின் கூட்டம் சற்று ஒதுங்கி வழிவிட்டது. பயணம் தொடர்ந்தது. பேருந்து கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தின் மீது பயணிக்கத் தொடங்கியது. அந்த நேரம் பேருந்தில் ஒலித்த இந்த பழைய பாடல் வரிகள் , நமது காதுகளில் நுழைந்து, இதயம் புகுந்து , இன்றைய நாட்டின் நிலையின் உயிரில் கலந்த உறவானது. 


பாடல்வரிகள் இவைதான். குலேபகாவலி என்ற பழைய திரைப்படத்தில் வருவது 

“ சொக்காப் போட்ட நவாபு 
செல்லாது உங்க ஜவாபு 
நிக்காஹ் புருஷன் போலே வந்து 
ஏமாந்தும் என்ன வீராப்பு? “ 

மனம் ஏனோ அந்தப் பாடல்வரிகளை வைத்து, இன்றைய நாட்டின் நிலையை ஒப்பிட, தனது மனக்கதவை மெல்லத் திறந்து அந்த பாடல் வரிகளுக்கு பதவுரை எழுதியது. 

பாடல் வரிகளின் பதவுரை இதுவே. 

சொக்காப் போட்ட நவாபு = பத்து இலட்ச ரூபாய் மதிப்புக்கு கோட்டு சூட்டு போட்ட பிரதமர் மோடி என்கிற நவாப்பே! 

செல்லாது உங்க ஜவாப்பு = நீங்கள் இப்படி மக்களை கஷ்டப்படுத்திவிட்டு அளக்கிற அளப்பெல்லாம் செல்லுபடியாகும் காலம் மலையேறிவிட்டது. 

நிக்காஹ் புருஷன் போல வந்து = கறுப்புப் பணத்தை ஒழிக்கிறேன் என்று பெரிய பந்தாவோடு வந்து 

ஏமாந்தும் என்ன வீராப்பு? = சொன்னதை செய்ய முடியாமல் தோல்வியையும் ஒப்புக் கொள்ளாமல் வாய்ச்சவடால் பேசிக் கொண்டு பாய் அவுர் பெஹ்னோ என்று அளந்து விடுவதில் எதற்கு இந்த வெட்டி பந்தா? 

என்றே மனது இன்றைய நாட்டின் நிலையை ஒப்பிட்டது. ஏன்? 

நமக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ ஏழரை என்பதை சனியன் என்றும் அந்த சனியனுக்கு அடுத்தவீட்டில் இருக்கும் எட்டை இராசி இல்லாத எண் என்றும் கூறுவார்கள். 

கடந்த நவம்பர் மாதம் எட்டாம் தேதி அதே போல இந்த நாட்டு மக்களின் தலையில் ஒரு இடியாக இறங்கியது. இடியை இறக்கியவர் வளர்ச்சியின் நாயகன் என்று வக்கற்றவர்களால் வாய்கிழிய புகழப்படும் நரேந்திர மோடியாவார் . 

“பொருளாதார அவசர நிலை “ என்று பொருளாதார மேதைகளால் வர்ணிக்கப்படும் செல்லாத நோட்டுக்கள் பற்றிய அறிவிப்பை அதாவது நவம்பர் 8 நள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பித்துக்குளி பிரதமரால் அறிவிக்கப்பட்டது. ஜாக்கிசானுடைய ஒரே அடியில் எதிராளி வீழ்வது போல் 14 அல்லது 15 லட்சம் கோடி ரூபாய் , அதாவது பண புழக்கத்தில் இருந்த செலவாணியில் 86 சதவீதம் பயனற்றது ஆகிப் போனது. மக்கள்       பதைபதைத்தனர். பிரதமரின் இந்தச் செயல் மற்றும் அறிவிப்பு இயங்கிக் கொண்டு இருக்கும் மனித உடலில் இருந்து 85 சதவீத இரத்தத்தை உறிஞ்சி எடுத்துவிட்டு ஓடு பார்க்கலாம் என்று சொன்ன உணர்வைத்தான் காட்டியது. 

ஆசைகாட்டி மோசம் செய்வதில் ஆஸ்கார் அவார்டு வாங்கத் தகுதி பெற்ற பிரதமர் தனது வரலாற்றுச்சிறப்பு மிக்க இந்த பொருளாதார முடிவுக்கு நான்கு நோக்கங்களைக் குறிப்பிட்டார். அந்த நோக்கங்களை நோக்கிய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட தாக்குதல்     ( Surgical Strike ) என்றும் தம்பட்டமும் அடித்துக் கொண்டார். 

கருப்புப்பணம் ஒழிப்பு 
கள்ளப்பணம் அகற்றல் 
தீவிரவாதம் ஒழித்தல்
ஊழலை ஒழித்தல் 

ஆகிய நான்கும்தான் மோடி அவர்கள் அறிவித்த தொலைகாட்சி அறிவிப்பில் ஆதியில் சொல்லப்பட்ட காரணங்கள். அத்துடன் வங்கிகள் இரண்டு நாட்கள் இயங்காது என்றும் பிறகு சனி , ஞாயிறு உட்பட வேலை செய்து மக்களின் தேவைகளுக்கு பணியாற்றும். மக்கள் தங்களிடம் இருக்கும் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்ட நோட்டுகளை தங்களின் கணக்கிலும் போடலாம்; மாற்றியும் கொள்ளலாம். இரண்டு மூன்று தினங்களில் நாடெங்கும் ஏடிஎம்கள் இயங்கத் தொடங்கும். புதிதாக இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வரும் என்றெல்லாம் புருடா விட்டார். மக்களும் நம்பினார்கள். பலர் இந்த நடவடிக்கையை வரவேற்றார்கள். அரசியல் கட்சித் தலைவர்களும் நல்ல தொடக்கம் என்று தொடக்கத்தில் வரவேற்றார்கள். கழுத்தறுருக்கும் கத்தியை பிரதமர் மறைத்து வைத்திருந்தது அப்போது தெரியவில்லை. 

அந்தக் காலங்களில் கோயில் திருவிழாக்கள் போன்றவற்றில் நாடகங்கள் போடுவார்கள். நாடகத்தின் தொடக்கத்தில் ஒரு கோமாளி வந்து இப்படிப் பாட்டுப் பாடியே நாடகத்தைத் தொடங்கிவைப்பார். “ நாட்டுக்கு சேவை செய்ய நாகரிகக் கோமாளி வந்தேனய்யா! ஆட்டமாடி, பாட்டுப்பாடி ஆனந்தம் அள்ளித்தர வந்தேனய்யா” என்றுதான் கோமாளிப் பாட்டுடன் நாடகம் தொடங்கும். செல்லாத நோட்டு அறிவிப்பு என்கிற இந்த நாடகமும் இப்படித்தான் நாட்டுக்கு சேவை செய்ய என்று பிரதமரால் பாட்டுப் பாடி தொடங்கி வைக்கப்பட்டது. 

ஆனால் மக்களின் துயரங்களுக்கு தூபம் போட்ட திட்டம் இது என்பதை உணர ஆரம்பித்த நேரத்தில் நாடு முழுதும் அனைத்துக் கட்சிகளும் தங்களது எதிர்ப்பை காட்டத் தொடங்கின. பாராளுமன்றத்தின் இரு அவைகளும் எல்லா நாட்களும் முடங்கின. நாட்டு மக்கள் பிச்சைக்காரர்கள் போல் நடத்தப்பட்டார்கள். வங்கிகளின் வாசல்களில் விடியற்காலையிலேயே கூட்டம் வரிசையில் நிற்கத் தொடங்கியது. கூட்ட நெரிசலில் மற்றும் மன உளைச்சலில் சிக்கி ஏறக்குறைய நூற்றுக்கும் மேலானோர் தங்களது உயிரை வங்கிகளின் உள்ளேயும் வெளியேயும் விட்டனர். 

நாட்டின் நாடித்துடிப்பை அறிய இயலாத பிரதமர் நடிப்பில் நவரச நாயகனாகி, செல்லாத நோட்டு அறிவிப்பு வெளியான அடுத்த நாள் கோவா மாநிலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நடிப்பின் உச்சத்துக்கே போனார். அவரது கண்களில் கண்ணீர் கசிந்தது என்றால் நாம் உணர்ந்துகொள்ளலாம். அவரது குரல் தழுதழுத்தது என்றால் நாம் அறிந்து கொள்ளலாம். குரல் தழுதழுக்க கண்ணீர் வழிந்தோட, நாட்டுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டார். தான் எடுத்து இருக்கும் இந்த வரலாற்று சிறப்புமிக்க பொருளாதார நடவடிக்கையின் பலன்கள் மக்களுக்கு நடைமுறையில் சென்றடைய ஐம்பது நாட்கள் அவகாசம் தேவை என்று முழங்கினார். 

அதையும் விட ஒரு படி மேலே சென்று ஐம்பது நாட்களுக்குள் இப்போது ஏற்பட்டுள்ள பிரச்னைகள் யாவும் தீராவிட்டால் என்னை உயிரோடு தீ வைத்துக் கொளுத்துங்கள் என்றார். அதையும்விட ஒரு படி மேலே சென்று நானே தூக்குப் போட்டுக் கொண்டு செத்துவிடுவேன் என்றார். இந்தக் கட்டுரை எழுதப்படுவதற்காக கடந்த ஐம்பது நாட்களாக நாமும் காத்து இருந்தோம். ரோஷக்கார பிரதமர், யாருடைய கட்டாயமும் இல்லாமல் தானே முன்வந்து தான் சொன்ன தனக்குத்தானே தண்டனை தரும் காட்சிளையாவது அரங்கேற்ற தப்பித் தவறி முயற்சித்து விடுவாரோ என்று நாடே அச்சத்துடன் எதிர்பார்த்தது. தனது பதவியை வகிக்க தாம் தகுதி இழந்துவிட்டோம் என்பதையாவது உணர்ந்து தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய முன்வருவாரா என்ற பேராசை அல்ல குறைந்த பட்சம் மக்கள் மன்றத்தில் மன்னிப்பாவது கோருவாரா என்று அரசியல் நாகரிகம் தெரிந்தவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால்?????

இந்திய நாட்டின் பொருளாதார வரலாற்றை சற்றுப் புரட்டிப் பார்த்தால், DEMONITISATION எனப்படுகிற புழக்கத்தில் இருக்கும் செலவாணி நோட்டுகளை செல்லாதாக ஆக்குவது என்பது பல முறை நடைபெற்று வந்திருக்கும் செய்திகளை நாம் காணலாம். 

ஆங்கிலேயர் ஆட்சியிலேயே , 1946 ஆம் ஆண்டு  1000 மற்றும் 10,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டன. ஆனாலும் 1954 ஆம் ஆண்டு 1000, 5000, 10,000 ஆகிய மதிப்புள்ள நோட்டுகள் வெளியிடப்பட்டன. 1978 ஆம் ஆண்டு கலக்கல் நாயகன் என்று அறியப்பட்ட மொரார்ஜிதேசாய் அரசு அந்த நோட்டுக்களை மீண்டும் செல்லாது என்று அறிவித்தது. மொரார்ஜி தேசாய் அரசு இவ்வாறு அறிவித்த நேரத்தில் நாட்டின் மிக மிகப் பெரும்பான்மையான மக்கள் 1000, 5000, 10,000 மதிப்புள்ள நோட்டுக்களை கண்ணால் கூட கண்டது இல்லை. மேல்தட்டு வர்க்கம் மட்டுமே இதனால் பாதிக்கப்பட்டது . அரிசிக்கு அலையும் அன்னம்மாவும் சில்லரைசெல்வுக்கு அலையும் சின்னம்மாவுக்கும் இந்த செய்தியே தெரியாது. 2014 ஆம் ஆண்டில் கூட ஒரு மெளனமான நடவடிக்கையாக 2005 ஆம் ஆண்டு அச்சிடபப்ட்ட 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து அரசால் திரும்பப் பெறப்பட்டன. 

இப்போது நடைபெற்றது போல மூன்று மணிநேர அவகாசத்தில் நாட்டின் பொருளாதார குரல்வளை நெரிக்கபட்டது முன்னெப்போதும் நிகழ்ந்ததே இல்லை. திரைமமறைவான பல காரணங்களால் வரலாற்றிலேயே இது மாபெரும் ஊழல் என்று பல தலைவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். 

ஆனால் வெளிப்படையாக , அரசியல்ரீதியாக நாம் கண்டதை மட்டுமே இங்கு குறிப்பிட விரும்புகிறோம். அதற்கு நாம் கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் அன்றைய பிரதம பதவி வேட்பாளராக முன்மொழியப்பட்ட இன்றைய பிரதமர் மோடி அவர்கள் செய்த பரப்புரையை நினைவூட்ட விரும்புகிறோம். இன்று கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக ரூபாய் நோட்டுகளை செல்லாத நோட்டுகள் என்று அறிவிக்கும் பிரதமர் , அன்று கருப்புப் பணத்தை மீட்டு எடுப்பது பற்றி கடுமையாகப் பேசினார். என்ன பேசினார் என்பதை நான் அனைவரும் அறிவோம். 

96 சதவீதம் கறுப்புப் பணம் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டிருப்பதாகவும் அவற்றை மீட்டெடுத்து நாட்டு மக்கள் ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கிலும் தான் மீட்டு வரும் தொகையைப் பகிர்ந்து 15 இலட்சம் பணம் போடுவேன் என்றார். நாடு நகைத்தது என்றாலும் நம்பிய மக்கள் பலர் அவருக்கு வாக்களித்தனர். இன்றோ தனது வாக்குறுதியை வசதியாக மறந்துவிட்ட பிரதமர், மக்களின் மனதை விட்டு தான் சொன்ன ஆசை வார்த்தைகளை அழிக்க புழக்கத்தில் இருக்கும் பணத்தை ஒழித்து கருப்புப் பணத்தை ஒழிக்கப் போகிறேன் என்கிறார். மக்களை எப்போதும் பரபரப்பிலும் படபடப்பிலும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டுமென்ற ஹிட்லரின் பாசிசத்தின் ஒரு முறையாகவே இந்த செயலை நாம் பார்க்க வேண்டி இருக்கிறது. 

புழக்கத்தில் இருக்கும் பணத்துக்கெல்லாம் கருப்புப் பணம் என்று பட்டம் கட்டும் செயலை , பொருளாதாரத்தில் அரிச்சுவடி படித்துக் கொண்டு இருக்கும் தற்குறி கூட சொல்லமாட்டான். அவ்வாறு பதுக்கபட்ட பணம் வெறும் நான்கு சதவீதம்தான் என்றும் மிச்சம் கறுப்புப் பணம் என்று காட்டப்படுவது எல்லாம் வெளிநாடுகளில் முதலீடாகவும், சொத்துக்களாகவும், தங்கமாகவும், வெளிநாட்டுக் கரன்சிகளாகவும் , பங்கு சந்தை மூலதனமாகவும் பதுக்கபட்டுள்ளன என்பதையே பொருளாதார மேதைகள் சுட்டிக் காட்டுகிறார்கள். Black Money is not in stock but in flow என்பது அடிப்படைப் பொருளாதார அறிச்சுவடி. 

கருப்புப் பணம் என்று பிரதமரால் பட்டம் கட்ட பணம் எவரெவர் வீட்டுக் கட்டில் மெத்தைகளிலோ அடுக்கிவைக்கபட்டிருப்பது போலவும் ஒரு தட்டுத்தட்டினால் அல்லது ஒரு ‘சிகப்பு ஹிட்’ வாங்கி அடித்தால் பூச்சிகள் வெளிவருவதுபோல் பணக்கட்டுகள் வெளிவந்துவிடும் என்றும் பிரதமர் நினைத்து இவ்வளவு பெரிய வரலாற்றுப் பிழையை செய்து, ஏழை மற்றும் நடுத்தரவர்க்கத்தினரின் வயிற்றில் அடித்து இருக்கிறார். 

செல்லாத நோட்டு அறிவுப்புக்காக பிரதமர் சொன்ன நான்கு காரணங்களும் பொய்த்துப் போய்விட்டன யென்பதை புள்ளிவிபரங்கள் புட்டுப் புட்டு வைக்கின்றன. 

முதலாவதாக பதினைந்து இலட்சம் கோடி பணத்தில் ஏறத்தாழ ஐந்து இலட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் என்றார். ஆனால் நேற்றுவரை பதினாலு இலட்சம் கோடி ரூபாய்வரை வங்கிகளில் மக்கள் டெபாசிட் செய்து இருக்கிறார்கள். இதில் எங்கிருந்து வருகிறது கறுப்புப் பணம்? வங்கிகளில் டெபாசிட் செய்த தொகை எல்லாமே கறுப்புப் பணம் என்று பிரதமர் மார் தட்டிக் கொள்ள இயலுமா? அப்படியானால் மகளுடைய திருமணம், மருத்துவச் செலவு, மகனின் படிப்பு , வெளிநாட்டு விசா என்றெல்லாம் தேவை ஏற்படும் என்று நினைத்து நான்கு ஐந்து வருடங்களாக சிறுகச் சிறுக சேமித்து வைத்த நடுத்தர வர்க்கத்தினரும் ஏழைகளும் தங்களின் உழைப்பினால் உருவாக்கிய செல்வம் ஒரே இரவில் செல்லாமல் ஆக்கப்படும் நிர்ப்பந்தத்துக்கு பயந்து பொழுது விடிந்த உடன் வங்கியில் அவற்றை செலுத்திவிட பதறிப்போய் வந்தார்களே அந்தப் பணம் எல்லாம் கருப்புப் பணமல்ல வியர்வை வாடையைச் சுமந்த கற்புடைய பணம். 

கள்ள நோட்டுகளின் புழக்கத்தை ஒழிக்க என்று சொன்னதும் இப்படித்தான் புஸ் வானமாகிவிட்டது. எப்படிஎன்றால் புழக்கத்தில் இருக்கும் பணத்தில் நானூறு கோடி கள்ளப்பணம் அல்லது கள்ள நோட்டு என்றார்கள். ஆனால் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தில் அவ்வாறு பத்தாயிரம் ரூபாய் கூட கண்டுபிடிக்கப்படவில்லை என்பதே வங்கி ஊழியர்களின் சங்கம் அறிவிக்கும் உண்மை. 

மூன்றாவதாக, தீவிரவாதம் மற்றும் நான்காவதாக ஊழலை ஒழிக்க என்று சொன்னதும் ஒரு ஹம்பக் தான். தீவிரவாதிகள் இந்த அறிவிப்புக்குப் பிறகு மூன்று முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தினார்கள். வெற்று முழக்கம் செய்ததைத்தவிர இந்த தேசபக்தர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. 

ஊழலை ஒழித்து விட கங்கணம் கட்டிய பிரதமர் கட்சியின் தலைவர் இயக்குனராக இருக்கும் குஜாராத்தில் உள்ள ஒரு கூட்டுறவு அமைப்பில் இந்த அறிவிப்பு வெளியாக ஒரு வாரம் முன்பு ஐநூறு கோடி ரூபாய்கள் முதலீடு செய்யப்பட்டதற்குப் பெயர் ஊழலா? இல்லை உத்தமபுத்திரன் படப்பாடலா? மேற்குவங்கத்தில் பாஜக மாநிலக்கட்சி இந்த அறிவிப்பு வெளியாக முன்பு எண்ணூறு கோடி ரூபாய்களை முதலீடு செய்ததற்கு பெயர் பெயர் என்ன ஊழலா? இல்லையா?

சேகர் ரெட்டி வீட்டில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட பணத்தில் 33 கோடி புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் ராம்மோகன்ராவ் வீட்டில் 18 இலட்சம் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப் பட்டனவே , டெல்லியில் ரோஹித் என்பவர் வீட்டில் 30 இலட்சம் விமானநிலையத்தில் 54 இலட்சம் இவை எல்லாம் என்ன? ஊற்றுப் பெருக்கா அல்லது ஊழல் பெருக்கா ? இந்த ஊழலில் எல்லாம் யார் ஈடுபட்டார்கள் என்பதன் ரிஷி மூலம், மத்திய அரசுக்குத் தெரியாதா? அப்படித் தெரியாவிட்டால் உளவுத்துறையும், அமலாக்கத்துறைரையும் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? 

இன்னும் சொல்வோம். யார் யாரிடம் கருப்புப்பணம் குவிந்து இருக்கிறது அவை எங்கேயெல்லாம் இருக்கிறது என்பது மத்திய அரசுக்குத் தெரியும். அவர்களின் பட்டியல் நிதித்துறையிடம் இருக்கிறது. அங்கெல்லாம் சோதனைபோட்டு, இருக்கும் பணத்தையும் வெளிநாட்டு முதலீடுகளையும் பறிமுதல் செய்து அள்ளி இருக்க இயலும். அதைவிட்டுவிட்டு அன்றாடங்காய்ச்சிகளின் வாழ்வில் அர்த்தமில்லாமல் விளையாடி இருக்கிறார் திருவாளர் மோடி. 

புகழ்பெற்ற பொருளாதார மேதைகள் என்று உலகமே ஒப்புக் கொண்ட தலைசிறந்த பொருளாதார அறிஞரான கவுசிக் பாஸு, ( Kaushik Basu) நோபல் பரிசு பெற்றவரும் பொருளாதார வல்லுனருமான, பால் குருக்மான்( Paul Krugmaan ), நோபல் பரிசு பெற்ற புகழ்வாய்ந்த அமர்தியா சென்( Amartiya Sen) , போர்பஸ் என்கிற உலகப் பொருளாதரத்தை அளந்து அளவிடுகிற அமைப்பின் தலைவர் ஸ்டீவ் போர்ப்ஸ் ( Steve Forbes) போன்றவர்கள் எல்லாம் மோடியின் அரசு எடுத்த இந்த நடவடிக்கையைப் பார்த்து கேலிச்சிரிப்பு சிரிக்கிறார்கள். 

DEMONITISATION எனப்படுகிற புழக்கத்தில் இருக்கும் செலவாணி நோட்டுகளை செல்லாதாக ஆக்குவது என்கிற முடிவை எடுத்த அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் உயர்மதிப்புக் கொண்டவை என்று அவைகளை செல்லாது என்று அறிவித்துவிட்டு அவைகளைவிட அதிக மதிப்புடைய, அளவில் குறைந்த, எடையில் குறைந்த  2000 ரூபாய் நோட்டுக்களை அச்சிட்டதே , “முதல் கோணல் முற்றும் கோணல்” என்பதற்கு அதுவே உதாரணமாக ஆகிவிட்டதே. இத்தகைய ஒரு புத்திசாலித்தனமற்ற முடிவை அரசு மேற்கொண்டதன் பின்னணி என்ன? யாருக்கு உதவ ? என்றே பொருளாதாரம் புரிந்தவர்கள் வியந்து கேட்கிறார்கள். அரசின் இந்த மாறுபாடான முடிவில் பொருளாதார சூதாட்டமும் அரசியல் சூதாட்டமும் இருக்கிறது என்றே அறிவாய்ந்தோர் கணிக்கிறார்கள். புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை கடத்தவும் பதுக்கவும் குறைந்த இடவசதியே போதும் என்று அத்தகையோரின் முயற்சிக்கு அரசே பாதை போட்டுக் கொடுத்து இருக்கிறது என்று சந்தேகப்பட்டால் அதில் குற்றம் என்ன காண முடியும்? 

ஒரு முக்கிய முடிவை எடுக்கும்போது அந்த முடிவின் தாக்கத்தால் ஏற்படும் விளைவுகளை எவ்வாறு சந்திப்பது, எவ்வாறு நீக்குவது , எவ்வாறு பரிகாரம் காண்பது என்பதற்கான எவ்வித முன்னேற்பாடுமே செய்யாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பிரதமர் மோடி செய்து இருக்கிற இந்த அஜால் குஜால் வேலை நாட்டுமக்களை நடுத்தெருவில் நிறுத்தி இருக்கிறது. 

பிரதமரின் நடிப்பு, பிஜேபி கட்சியினரின் தொலைக் காட்சி விவாதங்களின் காட்டுக்  கூச்சல் இவைகளை மீறி கடந்த ஐம்பது நாட்களுக்கும் மேலாக அடித்தட்டு மக்கள், சிறுவணிகர்கள், பொதுமக்கள், உழைப்பாளிகள் படும் கஷ்டங்கள் சொல்லி மாளாதவை. இதயமே இல்லாதவர்களால் எடுக்கப்பட்ட இந்த இடுப்பை ஒடிக்கும் நடவடிக்கையின் விளைவுகள் விபரீதமானது. 

நாடே நிலைகுலைந்து போய் இருக்கிறது. பொருளாதார நடவடிக்கைகள் முடங்கிப் போய் கிடக்கின்றன. கட்டிட வேலைகள் கால்வாசியோடு நிற்கின்றன. தொழிற்சாலைகள் இயங்கவில்லை. விவசாய விளைபொருட்கள் விற்பனை இல்லை. அரசு அலுவலகங்களில் வேலை செய்ய ஆட்கள் இல்லை; அனைவரும் மணிக்கணக்கில் வங்கி வாசலில் நிற்கிறார்கள். நாட்டின் மனித வளம் சோம்பிப் போய் உற்பத்தி இன்றி உறங்கிக் கொண்டு இருக்கிறது; மனிதவேலை நாட்கள் மக்கிப் போய் மந்தமடைந்துவிட்டது. இந்த காரணங்களால் எதிர்கால இந்தியா அனுபவிக்கப் போவது கொடுக்க இருக்கும் விலை மிகப் பெரிதாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது. உற்பத்தி இல்லாமலும் விற்பனை இல்லாமலும் நுகர்வோர் இல்லாமலும் ஏற்பட்டுள்ள தேக்கத்தால் GDB என்கிற நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி 3% வரை குறையும் என்று அளவிடப்பட்டு இருக்கிறது. “வளர்ச்சியின் நாயகன்” என்று வரவழைக்கப்பட்ட நரேந்திரமோடியின் திட்டமிடாத பொருளாதார நடவடிக்கை, நாட்டின் வளர்ச்சிக்கு பாதாள படுகுழி வெட்டி விட்டது. இனி விட்ட இடத்தில் இருந்து தொடர்வது கடினமாக இருக்கும் என்றே முன்னாள் நிதியமைச்சர்கள், பொருளியல் வல்லுனர்கள் ஆகியோர் கணிக்கிறார்கள்.  

நாட்டின் பணசுழற்சிக்கு பொறுப்பு வகிக்க வேண்டிய ரிசர்வ் வங்கி நேரத்துக்கொரு அறிவிப்பை வெளியிட்டு மக்களைக் குழப்புகிறார்கள். காலையில் காபி குடித்துவிட்டு அவர்கள் போடும் உத்தரவுகள் மதிய உணவுக்கு முன்பே மாற்றப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் மாறுபட்ட டிசைன் டிசைனான அறிவிப்புகள் மக்களுக்கு ஆறுதல் தருவதற்கு பதிலாக, குழப்பத்தையே தந்தன. மக்களுக்குத் தருவதாக அறிவிக்கப்பட்ட தொகைகள் நாள் முழுதும் கால்கடுக்க வங்கிவாசலில் நின்ற பிறகு , இராமயணத்தை நினைவூட்டி    “ இன்று போய் நாளை வா! “ என்கிறார்கள். ஆனால் அவசரத்தேவைக்காக, வங்கியின் வாசலில் பத்து சதவீத கழிவில் மக்கள் பணம் பெற்றுக் கொண்ட காட்சிகளையும் காண முடிந்தது. 

நாடே அல்லோகலப் பட்டுக் கொண்டு- அன்றாட செலவுகளுக்கு அலறிக் கொண்டு வங்கி மற்றும் ஏ டி எம் வாசல்களில் உயிரைப் போக்கிக்கொண்டு இருந்த நேரத்தில்,  மோடி மன்னர் பிடில் வாசித்துக் கொண்டு ஜப்பானில் புல்லட் ரயிலில் பயணம் செய்துகொண்டு அழுக்குப் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டுக் கொண்டிருந்தார். அவரது அடிவருடிகளோ, நாட்டில் ஊழலை ஒழிப்பதற்காகவும் , கருப்புப்பணத்தை குழி தோண்டி புதைப்பதற்காகவும் கள்ளப்பணத்தை           வேரறுப்பதற்காகவும் மோடிஜி மேற்கொண்டுள்ள போரில் மக்கள் மகிழ்ச்சியுடன் தியாகம் செய்துகொண்டிருப்பதாக கண்களை மூடிக்கொண்டு, கதை அளந்துகொண்டிருந்தார்கள். இன்னொருவர் வேதனை ; இவர்களுக்கு வேடிக்கை; இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை என்று எம்ஜியார் பாணியில்தான் பதில் சொல்லவேண்டி இருக்கிறது. 

“வினாச கால விபரீத புத்தி “ என்று சமஸ்கிருதத்தில் ஒரு ஸ்லோகம் உண்டு. அழியும் காலம் வரும்போது அறிவு கெட்டுப்போகும் என்பது அதன் அர்த்தம். அதே போல் மக்கள் வயிறு எரிந்து வரிசையில் நின்று கொண்டிருக்கும்போது கருப்புப்பணம் வைத்து இருந்தவர்கள்தான் வங்கிகளின் வாசலில் வரிசையில் நிற்கிறார்கள் என்று வாய் கூசாமல் பேசினார் பிரதமர். மக்களின் நாடித்துடிப்பை அறியாத எவரும் ஆட்சியில் நீடிப்பது அர்த்தமில்லாமலே போகும். 

உயர் மதிப்புள்ள செலவாணிகளை செல்லாததாக ஆக்குகிறேன் என்று சொல்லிவிட்டு அதைவிட உயர் மதிப்புள்ள நோட்டை வெளியாக்கியதில் குருட்டுப் பொருளாதார அறிவுதான் மோடி அவர்களின் அறிவுக்கு பதம். அவ்வாறு வெளியாக்கிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கு சில்லறை கிடைக்காமல் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டும் காட்சிப் பொருளாக உண்மையான செல்லாத நோட்டாக மக்களின் கைகளில் இருந்தது மட்டுமே மோடி அவர்களின் நிர்வாக அறிவுக்கு பதம். போதுமான சில்லறை நோட்டுகளை அச்சடித்துத் தயாராக வைத்துக் கொள்ளாததும் , ஏடிஎம் இயந்திரங்களின் வடிவமைப்பை சரிசெய்துகொள்ளாததும் அனுபவமின்மைக்குப் பதம். 

பொருளாதாரமேதை என்று இன்று வரலாறு ஒப்புக் கொள்ளும் திரு. மன்மோகன்சிங் அவர்கள் பிரதமராக இருக்கும்போது 2011 ஆம் ஆண்டு , M.B. ஷா அவர்கள் தலைமையில் கள்ளப் பொருளாதாரம் , இணைப் பொருளாதாரம், கருப்புப்பணம் ஒழிப்பு ஆகிய குறிக்கோள்களின் அடிப்படையில் ஒரு ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. அந்த ஆய்வுக்குழு கறுப்புப் பணத்தை ஒழிக்க ஒருங்கிணைந்த வங்கிச் சேவை அமைக்கப்படவேண்டும் என்றும் அதற்காக ஆதார் அட்டை போன்ற அடையாளங்கள் அறிமுகப்படுத்தப்படவேண்டும் என்றும் பரிந்துரைகளை செய்தது. அன்றைய மன்மோகன் அரசும் அவற்றை ஏற்று ஆதார்கார்டுகளை அறிமுகம் செய்யத் துவங்கிய நேரத்தில், அதை எதிர்த்து பாராளுமன்றத்தை முடக்கியவர்கள்தான் பிஜேபியினர். இன்று அதே ஆதார் கார்டு, ஒருங்கிணைந்த வங்கிச்சேவை ஆகியவற்றை தலையில் சுமந்து கூவிக்கூவி விற்கத்தொடங்கி இருக்கிறார்கள். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டது போலவே மோடி அரசின் செல்லாத நோட்டு நடவடிக்கை, ஒரு சட்டபூர்வமான கொள்ளை (Legal Looting ); பரந்த ஊழலுக்கு துணைநின்ற நிர்வாகச்சீர்கேடு ( Administrative collapse causing widespread corruption )

இந்த கார்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே பலனளிக்கும் திட்டத்தை மோடி   அறிவித்ததன் பின்னணியில் இந்திய நாடே இதுவரை சந்திக்காத மாபெரும் ஊழல் இருக்கிறது அதன்விபரங்கள் வெளிவரும் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் திரு. ராகுல் காந்தி கூறி இருப்பதையும் ஒன்றுமில்லை என்று நாம் ஒதுக்கிவிட இயலாது.  

ஒரு நாட்டின் பிரதமர் மக்கள் மன்றத்தில் ஒரு திட்டத்தை அறிவிக்கிறார். அந்தத் திட்டத்தின் வெற்றி தோல்வி பற்றி மக்கள் தெளிவுற தெரிந்து கொள்வதற்கும் அந்தத் திட்டத்தின் நன்மைகளை மக்களுக்குக் கொண்டு வந்து சேர்ப்பதற்கும் தனக்கு ஐம்பது நாள் அவகாசம் தேவை என்றும் அதற்குள் பாழ்பட்ட நிலைமைகளை சரிசெய்யாவிட்டால் தன்னை தீயில் இட்டுக் கொளுத்தும்படியும் உணர்ச்சிவசப்பட்டு கண்களில் நீர்வடிய மக்களின் முன் மண்டி இட்டுக் கேட்டார். 

மன்னிக்கும் மனப்பான்மைக்கும் சகிப்புத்தன்மைக்கும் பெயர்பெற்ற இந்திய மக்கள் ஐம்பதுனாட்களின் முடிவில், அந்த கடந்த ஐம்பது நாட்களில் மக்கள் பட்ட துயரத்தை மனதில் கொண்டும் தான் அளித்த வாக்குறுதியின் நாணயத்தின் அடிப்படையிலும் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி கடந்த ஆண்டில் பட்ட கஷ்டங்களை நீக்கும் வண்ணம் பிரதமர் மறுவாழ்வு அளிக்கக்கூடிய திட்டங்களை அறிவிப்பார் என்று வாயைப் பிளந்து கொண்டு உட்கார்ந்து இருந்தார்கள். 

ஆனால் காத்திருந்து காத்திருந்து காலங்கள்தான் போனது. காரியம் ஒன்றும் ஆகவில்லை. கடந்த ஐம்பது நாட்களுக்கான கணக்குகளை பிரதமர் நாட்டுமக்களிடம் சொல்லுவார் என்றும் சலுகைகள் அறிவிக்கப்படும் என்றெல்லாம் ஏங்கி இருந்தமக்கள் முன்னே தோன்றிய பிரதமர் கங்கை சென்று குளித்தாலும் நீங்காத பாவத்தை ஏழை நடுத்தரமக்கள் மீது ஏவி விட்ட பிரதமர் அதைப்பற்றி எல்லாம் கண்டு கொள்ளாமல் சட்டையில் உள்ள தூசியைத் தட்டிவிட்டது போல், பட்ஜெட் உரை ஆற்றுவது போல் பழங்கதைகளைப் பேசி பற்றி எரியும் பிரச்னையை திசைதிருப்பி , ஆசை வார்த்தைகளை மீண்டும் அள்ளிவிட்டுவிட்டு நமஸ்தே என்று கூறி நாற்காலியில் அமர்ந்துகொண்டார். செல்லாத நோட்டுகள் பற்றிய அறிவிப்பை வெளியிட்ட போது கருப்புப்பணம் என்று 18 முறை தனது மார்பில் அடித்துக் கொண்டு பேசிய பிரதமர், அதற்கான பரிகாரங்கள் தீர்வுகள் ஆகியவற்றை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட உரையில் ஒரு இடத்தில் கூட அவைபற்றிக் குறிப்பிடவில்லை. தன்னை தீயில் இட்டுக் கொளுத்துங்கள் என்ற அளவுக்குப் பேசிய பிரதமர் அதைப்பற்றியும் வாயே திறக்கவில்லை. மக்களின் இறுதி நம்பிக்கைக்கும் தனது இறுக்கமான உதடுகளால் இறுதி மரியாதையை வருடத்தின் இறுதியில் செலுத்திச் சென்றார் பிரதமர். 

பிரதமர் பேசாவிட்டால் என்ன? நாம் பேசுவோம். உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் இருந்து செல்லாததாக ஆக்கியது ஒரு புஸ் வானம் என்று பேசுவோம். நாம் பேசாவிட்டாலும் இதோ இந்த புள்ளிவிபரங்கள் பேசுகின்றன. 

உச்ச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த உறுதிச் சான்றுகளில் 3 முதல் 4 இலட்சம் கோடிவரை கறுப்புப் பணம் அரசுக்கு வரும் என்று கணக்கிட்ட மத்திய அரசுக்கு படுதோல்வியும் பட்டை நாமமும் சாத்தப்பட்டது. எவ்வாறு என்றால் , ரிசர்வ் வங்கியின் பொருளாதார மதிப்பீட்டின் பிரகாரம் 15.44 இலட்சம் கோடி ரூபாய் புழக்கத்தில் இருப்பதாகவும் அதிலேதான் 3 முதல் 4 இலட்சம் கோடி வங்கிக்கு வராது என்றும் கணக்கிடப்பட்டது. ஆனால் கடந்த 28 டிசம்பர் வரை வங்கிகளில் மக்கள் செலுத்திய பணம் 14.92 இலட்சம் கோடி ரூபாய் ஆகும். ஆக இனி வரவேண்டியது கிட்டத்தட்ட    0. 50 இலட்சம் கோடி மட்டுமே. இந்தப் பணம் கூட அடுத்த இரண்டு நாட்களில் வங்கிகளுக்கு வந்து இருக்கலாம். ஆகவே , இந்த செல்லாத நோட்டு சிகிச்சை தோல்வியில் முடிந்து இருக்கிறது என்பதை ரிசர்வ் வங்கியின் இந்தப் புள்ளி விபரங்கள் நாம் புரிந்துகொள்ளும் வகையில் எடுத்துச் சொல்கின்றன. 

மக்களின் பணத்தை மல்லையாக்களுக்கு வாரி வழங்கிவிட்டு அவற்றை வராக்கடன் என்றும் அறிவித்துவிட்டு நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வங்கிகளுக்கு மக்களின் கைகளில் இருக்கும் பணத்தைக் கொண்டு வந்து மீண்டும் அந்தப் பணத்தை கார்பரேட் கம்பெனிகளுக்கு வழங்கும் பொருளாதார சதியில்தான் பிரதமரும் நிதி அமைச்சகமும் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்பது கடந்த ஐம்பது நாட்களின் செயல்பாட்டால் நிருபணம் ஆகிவிட்டது. மக்களின் மனமும் ஊனம் ஆகிவிட்டது. நாட்டின் பொருளாதாரம் நொண்டியாகிவிட்டது. 

ஆகவே, “முள்ளு முனையிலே மூணு குளம் வெட்டினேன்; இரண்டு குளம் பாழ்; ஒன்றில் தண்ணியே இல்லை” என்று பாடும் நாட்டுப்புறப்பாடலின் இலக்கணத்துக்கு இலக்கியமாக ஒரு மாபெரும் நாட்டின் பிரதமரின் அறிவிப்பு அமைந்துவிட்டது. பெண்கள் கும்மியடித்துப் பாடும் அந்தப் பாடல், இன்று நாடெங்கும் நடுத்தெருவில் நிற்கும் மக்கள் நெஞ்சில் அடித்துக் கொண்டு பாடும் ஒப்பாரிப்பாடலாக மாறிவிட்டது. இந்த ஒப்பாரி எப்போது ஓயும் என்றே தெரியாமல் திரிசங்கு சொர்க்கத்தில் மக்களை வைத்திருப்பதே வளர்ச்சியின் நாயகனின் சாதனை. 

குறிப்பு: 
இந்த பணஒழிப்பு பசப்பு நாடகத்தின் நடுவே பணமில்லா பரிவர்த்தனை என்கிற வில்லியையும் அறிமுகப்படுத்த இந்த அரசு முயல்கிறது. அதுபற்றிய விளக்கமான ஆய்வுக் கட்டுரை இன்ஷா அல்லாஹ் விரைவில். 

அதிரை இபுராஹீம் அன்சாரி M.com.,


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு