Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label டெல்லி. Show all posts
Showing posts with label டெல்லி. Show all posts

நேற்று ! இன்று ! நாளை ! 10

அதிரைநிருபர் பதிப்பகம் | February 14, 2015 | , , , , , ,

டில்லியில் ஆட்சி மாற்றமா? அரசியல் மாற்றமா?

வானத்தில் வால் நட்சத்திரம் தோன்றினால் ஆட்சியாளர்களுக்கு ஆபத்துவருமென்பது காலம்காலமாக மக்களிடையே நிலவி வரும் நம்பிக்கை. அது மூட நம்பிக்கைகளில் முதல் நம்பிக்கை என்பது ஒரு புறமிருக்க, இன்று கெஜ்ரிவால் என்கிற வால் நட்சத்திரம் தலைநகர் டில்லியில் தோன்றியதன் விளைவாக காங்கிரஸ் மற்றும் பாஜக போன்ற ஆட்சியாளர்களுக்கு பெரும் குடைச்சலைக் கொடுத்துவிட்டது. ஆம் ஆத்மிக் கட்சி என்பது யானையின் காதுக்குள் புகுந்த சிற்றெறும்பாக மாறி விட்டது. 

பழுத்த பழங்களைத் தாங்கிய புளிய மரத்தைப் பிடித்து உலுக்கினால் பொல பொலவென்று பழங்கள் உதிர்ந்து கொட்டுவதுபோல் தலைநகர் டில்லியில் வாழும் அரசியல் அறிந்த மக்கள், தேர்தல் களத்தை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டனர். இந்த உலுக்கால் குலுங்கிப் போய் நிற்கும் பழம் பெருச்சாளிகளைவிட கலங்கிப் போய் நிற்பவர்களே அதிகம். இந்தக் குலுக்களின் அதிர்வலையில் இரண்டு பழம் பெருச்சாளிகளைக் காணவே காணோம்.

இந்த மரம் உலுக்கப்படும்போது , ஆம் ஆத்மி என்கிற சாதாரண மனிதன் ஏந்தி நின்ற துணியில் 67 பழங்களும் ரத கஜ துரக பதாதிகள் மற்றும் கார்பரேட் கம்பெனிகளின் துணையுடன் நின்ற பாஜக என்ற அரசியல் மலைமுழுங்கி, ஏந்தி நின்ற துணியில் 3 பழங்களும் விழுந்தன. ‘காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி’ என்ற நிலையில் காங்கிரஸ் ஏந்தி நின்ற துண்டில் மரத்தின் சருகான இலைகள் கூட உதிர்ந்து விழாமல், “ யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க என் காலம் வெல்லும் வென்றபின்னே வாங்கடா வாங்கடா வாங்க” என்று துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டது, இந்தியாவைக் கட்டியாண்ட காங்கிரஸ். 

கொஞ்சம் வரலாற்றை திரும்பிப் பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது. டில்லியில் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பிஜேபிக்கு 32 இடங்களும் முதன்முதலாக அடையாளப்படுத்தும் விதத்தில் ஆம் ஆத்மிக்கு 29 இடங்களும் அன்று ஆட்சியில் இருந்த காங்கிரசுக்கு எதிர்காலத் தோல்வியை அடையாளப்படுத்தும் விதத்தில் 8 இடங்களையும் டில்லி மக்கள் வழங்கினர். காங்கிரசின் ஆதரவுடன் வேண்டாவெறுப்புடன் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தது. ஆட்சிக்கு வந்த ஆம் ஆத்மியை ஆதரவு தந்தவர்கள் என்ற பெயரில் காங்கிரசும் ஆட்சிக்கு வரப் போகிறோம் என்கிற மமதையில் பிஜேபியும் தொல்லைகள் கொடுக்க ஆரம்பித்தன. அரவிந்த் கேஜ்ரிவால் தனது முதலமைச்சர் பதவியை விட்டு விலகினார். அன்றே அவருக்கு ஆதரவாக , பொதுமக்கள் தங்களது ஆதரவை அரவிந்த் கேஜ்ரிவாலின் அரசியல் வங்கிக் கணக்கில் செலுத்த ஆரம்பித்து விட்டனர். 

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் டில்லியைப் பொருத்தவரை மொத்தம் 7 இடங்களையும் ஒட்டு மொத்தமாக பாஜக கைப்பற்றியது. 2013 சட்டமன்றத் தேர்தலில் 33.7 சதவீதம் மட்டுமே பெற்ற பாஜக 46 சதவீத வாகுகளைப் பெற்று ஏழு இடங்களையும் பெற்று 13 சதவீத வாக்குகளை அதிகம் பெற்றது. இந்த அதிக வாக்குகளும் வளர்ச்சியும் பாஜகவின் ஆணவக் கணக்கைத் தொடங்கிவைத்தது. ஆனால் இப்போது நடைபெற்றுள்ள 2015 தேர்தலில் 32.3 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று தனது சரிவுக் கணக்கை சந்தித்து மூன்று இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. 

வளர்ச்சியின் நாயகன் என்று வர்ணிக்கப்பட்டவரும் அவரது விளம்பர யுக்திகளும் அரசு இயந்திரங்களும் அமைச்சர் பெருமக்களும் ஆர் எஸ் எஸ் மற்றும் அவர்களின் அடிவருடிகளும் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி, உலகத்தில் யாருமே உளறமுடியாத வார்த்தைகளை எல்லாம் உளறி இனவெறியையும் மதவெறியையும் தோண்டியும் தூண்டியும் பெற்றது மூன்று இடங்கள் மட்டுமே.

காங்கிரசின் நிலையை நாம் பெரிதாக எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை. அவர்கள் தேர்தலுக்குப் பொறுப்பாளராக நியமத்த அஜய் மக்கன் அசத்தும் மக்கானாக இல்லாமல் ஒரு அசந்த மாக்கானாகவே செயல்பட்டார். காங்கிரசின் துணைத்தலைவர் ராகுல் காந்தி தனது லூசான சட்டையை இழுத்து இழுத்து விட்டுக் கொண்டு கூட்டங்களில் பேசும்போதே காங்கிரசுக்கு இந்தத் தேர்தலிலும் வாக்குகள் கிடைக்காது என்பது தெரிந்துவிட்டது. அரசியலில் இன்னும் பாடம் படிக்க வேண்டிய மாணவராகவே ராகுல் காந்தி பத்திரிகைகளுக்கும் மக்களுக்கும் இன்னும் தென்படுகிறார். இத்தனை பாரம்பரியம் மிக்க குடும்பத்திலிருந்து வந்த இவரது அரசியல் பிளைட், டேக் ஆப் ஸ்டேஜுக்கு வர இன்னும் தாமதமாகிறது. மேலேகிளம்புமா அல்லது பிரியங்கா காந்தி வந்து பைலட் சீட்டில் உட்கார வேண்டுமா என்பது தெரியவில்லை. போகட்டும். 

ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் உடைய அணுகுமுறை தனிப்பட்ட ரீதியாக இருந்தது. எளிமை, இனிமை என்கிற வகையில் அவர் மப்ளரைக் கட்டிக் கொண்டு மக்களைக் கவர்ந்தார். வீட்டுக்கு வீடு சென்றார். மற்ற கட்சிகள் பணக்காரர்களையும் உயர்சாதிக்காரர்களையும் தேடிப் போய் வாக்குக் கேட்டபோது , சேரிகளையும் எளிய மக்கள் வாழும் குடியிருப்புகளையும் தேடித் தேடிப் போய் வாக்கு சேகரித்தார் கெஜ்ரிவால். 

1989 ஆம் ஆண்டு சிக்கிம் மாநிலத்தில் சிக்கிம் கனசங்க் பரிஷத் மாநில சட்டமன்றத்தின் மொத்தத் தொகுதிகளான 32 தொகுதிகளையும் வெற்றி கொண்டது. அதன்பின் இந்திய தேர்தல் சரித்திரத்தில் இப்போது எதிர்க் கட்சிகளுக்கு பேர் சொல்ல மூன்று பிள்ளைகளை மட்டும் விட்டு விட்டு ஆம் ஆத்மி டில்லியில் பெற்றுள்ளது. ஏற்கனவே 49 நாட்கள் தான் புரிந்த ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்களுக்காக அரவிந்த் கெஜ்ரிவால் நாட்டிய அடிக்கல், ஒரு அரண்மனையாக மாறவேண்டுமென்றே மக்கள் இவ்வளவு பெரிய ஆதரவை அவருக்கு அளித்து இருக்கிறார்கள். மேலும் காங்கிரசுக்கு அளிக்கும் வாக்குகள் விழலுக்கு இழைத்த நீர் என்று வாக்குகள் பிரிந்து போகாமல் அவற்றைத் திரட்டி ஆம் ஆத்மிக்கு அளித்து அருமையாக திட்டமிட்டு வாக்களித்து இருக்கிறார்கள். 

நாட்டின் மற்ற இடங்களில் நடைபெறும் தேர்தலுக்கும் டில்லி பிரதேசத்தில் நடைபெறும் தேர்தலுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. டில்லி பன்னாட்டு தூதராலயங்களால் சூழப்பட்ட இடம் என்பது நாம் சொல்லித் தெரிய வேண்டியதல்ல. தேர்தல் நடைமுறைகளும் தேர்தல் முடிவுகளும் அனைத்து நாடுகளாலும் அங்குலம் அங்குலமாக கவனிக்கப்படும். பதவி ஏற்ற நாளிலிருந்து வெளிநாடுகளிலேயே அதிகம் சுற்றி வந்த வளர்ச்சியின் நாயகன் மோடியின் முகத்தில் இப்போது வழியும் அசடை பன்னாட்டுத் தூதராலயங்கள் தங்களின் நாடுகளுக்குப் படம் பிடித்துக் காட்டிவிட்டன. கட்டிக் கொடுத்த சோறும் சொல்லிக் கொடுத்த சொல்லும் எத்தனை நாளுக்குத் தாக்குப் பிடிக்கும்? எல்லோரையும் எல்லாக் காலத்திலும் ஏமாற்றிக் கொண்டே இருக்க இயலாது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கும் மோடிக்கும் உணர்த்தி விட்டன. அவர்கள் உணர்ந்தார்களா என்பதை காலம்தான் சொல்லும்.

ஆர் எஸ் எஸ் அடிவருடிகளுக்கு ஆசீர்வாதம் செய்து நாட்டை பிளவுபடுத்தும் கருத்துக்களுக்கு முதல் அடியை டில்லி மக்கள் தொடங்கி வைத்து இருக்கிறார்கள். இது ஒரு அரசியல் அடி . அதிலும் அரிச்சுவடியான அடி. இந்த அடியைத் தொடங்கிவைத்துள்ள தலைநகரின் குடிமக்களுக்கு நாடே நன்றி செலுத்துகிறது. 

மதக் கலவரங்களைத் தூண்டும் விதத்தில் சிறுபான்மை மற்றும் தாழ்த்தப் பட்டோருக்கு எதிரான விஷக் கருத்துக்கள் இந்த எட்டு மாதங்களுக்கு இடையில் எவ்வாறெல்லாம் தூவப்பட்டன என்பதை நாடே அறியும் . 

இந்துக்கள் நான்கு குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஒரு சாமியார் சொன்னார். விட்டேனா பார்! என்று இன்னொரு சாமியார் போதாது போதாது பத்து குழந்தைகள் பெற வேண்டுமென்றார். குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் சங்கதிகள் பற்றி சாமியார்கள் பேசுவது கண்டு தலைநகரில் வாக்காளர்கள் முகம் சுளித்தனர். வாக்களிக்கும்போது பாஜகவின் சின்னத்தை சுளித்துக் கழித்தனர்.

பகவத் கீதையை நாட்டின் புனித நூலாக அறிவிக்கவேண்டுமென்று நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் சொன்னார். பாராளுமன்றம் ஸ்தம்பித்தது. பார்த்துக் கொண்டிருந்த தலைநகரத்து மக்கள் தக்க சமயத்தில் பதில் தந்தார்கள். 

தேசத் தந்தை காந்தியை சுட்ட கோட்சேயை தேசபக்தன் என்றார்கள். கோட்சேக்கு நாடெங்கும் சிலை வைக்க வேண்டுமென்றார்கள். தலை நகரின் மக்கள் இந்த அருவருப்பான சொற்களுக்கு பதிலளிக்கக் காத்திருந்தனர். தருணம் வந்தது தண்டனை தந்தார்கள். 

இராமனைக் கடவுளாக ஏற்றவர்கள்தான் நாட்டின் உண்மையான தகப்பனுக்குப் பிறந்தவர்கள்; மற்றவர்கள் தவறாகப் பிறந்தவர்கள் என்று நாட்டு மக்களின் தன்மானத்தை சுரண்டிப் பார்த்தார்கள். தலைநகரின் மக்கள் சாட்டையால் அடித்து இருக்கிறார்கள். 

இராமனைக் கடவுளாக ஏற்றுக் கொள்ளாதவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறட்டுமென்று முழங்கினார்கள். யார் நாட்டைவிட்டு வெளியேற வேண்டுமென்று ஜனநாயக முறையில் மக்கள் அறிவித்து இருக்கிறார்கள். 

ஆட்சிக்கு வந்த இரண்டு வாரங்களில் உலகெங்கும் இருக்கும் கறுப்புப் பணத்தைக் கைப்பற்றி இந்திய மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் பதினைந்து இலட்சம் என்று பறையறிவித்துவிட்டு ஆட்சிக் கட்டில் ஏறியதும் பதுங்கியவர்களுக்கு, மக்கள் தேர்தலில் படுகுழிவெட்டி இருக்கிறார்கள்.

இந்தியாவில் இருக்கும் அனைவரும் இந்துக்கள், அனைவரும் தாய் மதத்துக்கு திரும்ப வேண்டும் , போன்ற பொறுப்பற்ற கோஷங்கள், ஆக்ராவில் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்களை இந்துக்களாக்கிய தவறான செயல்கள், தலைநகரில் பல தேவாலயங்களை தாக்கியது, பொருளாதார மந்தம், வானில் ஏறிய விலைவாசி அங்கேயே சுழன்று கொண்டிருப்பது, இஸ்ரேல் போன்ற பாசிச நாடுகளுடன் நேசம் காட்டும் வெளிநாட்டுக் கொள்கை , ஒபாமா காட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டது, ஆஸ்திரேலியாவுக்கு அதானியை அழைத்துப் போய் அவருக்கு ஆறாயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றுத் தந்தது, அமித்ஷா போன்ற அடையாளம் காணப்பட்ட குற்றவாளிகளைத் தப்பிக்கவிட்டதுடன் அவரைத் தலைவராகவும் ஆக்கியது , மேக் இன் இந்தியா என்று சொல்லிவிட்டு பத்து லட்சம் ரூபாய் பெறுமான கோட்டும் சூட்டும் லண்டனில் தைத்து வந்து ஒருநாள் கூத்துக்கு மொட்டை அடித்த விஷயம் இவைகள் எல்லாம் மக்கள் மன்றத்தில் மணலை அள்ளி அடித்த வேளையில் பிரதமர் பாராளுமன்றத்துக்கே வராமல் பாதாம்கீர் குடித்துக் கொண்டிருந்தது ஆகிய அனைத்தும் மக்களால் கவனிக்கப்பட்டன; பாஜாக பாசாகாது என்று மக்கள் சவுக்கடி கொடுத்து யமுனை நதியின் சாக்கடையில் தள்ளிவிட்டார்கள். 

முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கு, ஒரு முன்னாள் ஐ. பி. எஸ் பெண் அதிகாரியைத் தேடிப் பிடித்ததில் ஆரம்பித்தது பாஜகவின் சறுக்கல் அல்ல கிறுக்கல். பதவி ஆசையில் மோடியைத் தேடி வந்த கிரண்பேடி, தான் போட்டி இட்ட தொகுதியிலேயே மண்ணைக் கவ்வி இருப்பதை ஆள்பிடிக்கும் பாஜகவுக்குக் கிடைத்த மரணஅடி என்றுதான் கூற வேண்டும். கிரேன்பேடி தேர்தலில் மட்டுமா தோற்றார்? Indian Police Service-ல் பாசானவர், Indian Political Service- லும் தோற்றார். ஊழலை ஒழிக்கும் இயக்கமான அண்ணா ஹசாரே நடத்திய இயக்கத்தில் இணைந்து தன்னை வெளிப்படுத்திய கிரேன்பேடி ஊழலில் திளைக்கத் தொடங்கி இருக்கும் பாஜகவில் சேர்ந்த பாசாங்கை மக்கள் ஆரம்ப நிலையிலேயே அழித்துவிட்டார்கள். இனி கிரேன்பேடியை Crane வைத்துத் தூக்க இயலுமா என்பது வினாக்குறிதான்.

2014 ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி தனது முதலமைச்சர் பதவியை விட்டு விலகிய கெஜ்ரிவால் 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி மீண்டும் முதலமைச்சராக கனத்த பெரும்பான்மையுடன் பதவியேற்கிறார். இவரை வா! ராஜா! வா! என்று இந்திய நாடே வாழ்த்தி வரவேற்கிறது. ஒரு முன்னாள் அரசு அதிகாரி என்ற முறையிலும் படித்த இளைஞர் என்ற முறையிலும் டில்லி மட்டுமல்ல ஒட்டுமொத்த நாடே இவரிடமிருந்து பல நன்மைகளை எதிர்பார்க்கிறது. இவரது செயல்பாடுகளின் வெற்றியில் இவரது எதிர்காலமும் இருக்கிறது. 

டில்லி ஒரு மத்திய அரசின் நேரடிப் பார்வையில் இருக்கும் ஒரு மாநிலம்தான். முழு மாநில அந்தஸ்து பெற்ற மாநிலமல்ல. ஆகவே ரசம் வைக்க வேண்டுமென்றாலும் உப்புக்கும், புளிக்கும் மத்திய அரசிடம்தான் கேட்க வேண்டும். டில்லியை சுற்றியுள்ள மாநிலங்கள்தான் டில்லிக்கு தேவைப்படும் நீர், மின்சாரம் போன்றவற்றைத் தந்து உதவ வேண்டும். டில்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் உ. பி தவிர மற்ற மாநிலங்களில் பாஜக ஆட்சிதான் நடைபெறுகிறது. மத்தியில் பாஜக; சுற்றிலும் தோல்வியால் கருகி, கருவிக் கொண்டிருக்கும் பாஜக.

ஆகவே அரவிந்த் கேஜ்ரிவால் உடைய கரங்களில் தரப்பட்டிருப்பது செங்கோல் அல்ல ; சர்க்கஸில் கம்பி மேல் நடப்பவர்கள் கைகளில் வைத்திருப்பார்களே அந்த வகை அடையாளக் கோள்தான். ஒரு துடைப்பத்தை மந்திரக் கோலாக வைத்து மாபெரும் சாதனைகளை அவர் நிகழ்த்திக் காட்ட வேண்டும். ஆண்டாண்டுகாலமாக ஆண்ட காங்கிரசுக்கும் இன்னும் இந்த நாட்டை நாம்தான் ஆள்வோமென்று ஆணவ எண்ணம் கொண்ட பாஜகவுக்கும் எதிர்காலங்களிலும் இந்தியா முழுதும் இதுபோல் உருவாகும் புதிய மாற்று அரசியல் சக்திகளுக்கு தன்னுடைய செயல்பாடுகளின் நிருபணத்தால், ஆம் ஆத்மி தலைமை தாங்காவிட்டாலும் வழிகாட்டியாகத் திகழவேண்டும். 

புதிதாகத் தோன்றும் கட்சிகள் பெரும் வெற்றியை ஈட்டுவது இந்திய வரலாற்றில் புதிதல்ல. அசாம் கன பரிஷத் இப்படித்தான் வென்றது. இன்று அதன் அட்ரசைத் தேட வேண்டி உள்ளது. தமிழ்நாட்டில் ஊழலை எதிர்த்து கட்சி ஆரம்பித்த எம்ஜியார் பெற்ற வெற்றியும் இந்தக் கணக்கில் வரும். ஆனால் இன்று அதே கட்சியின் முதல்வர்தான் ஊழல் குற்றவாளியாகி பதவி இழந்து நிற்கிறார். இதே போல் புதிதாக கட்சியை ஆரம்பித்த என் டி ராமராவும் தெலுங்கு தேசத்தில் பெரும் வெற்றியைப் பெற்றவர்கள்தான். பாண்டிச் சேரியில் என் . ஆர் காங்கிரசும் இவ்வாறு பெரும் வெற்றி பெற்ற கட்சிகளின் பட்டியலில் அடங்கும். ஆனால் போகப் போகத் தெரியும் இந்த பூவின் வாசம் புரியும் என்ற நிலையில் அவர்களது தொடக்கம் தந்த வெற்றியையோ புகழையோ அவர்களால் தக்க வைத்துக் கொள்ள இயலவில்லை. இந்த வரலாறுகளை கெஜ்ரிவால் கவனத்தில் கொள்ள வேண்டும் . 

ஒருபுறம் வேடன் ; மறுபுறம் நாகம்; இரண்டுக்கும் நடுவே அழகிய கலைமான் என்கிற நிலையில் பதவி ஏற்கும் அரவிந்த் கேஜ்ரிவால் தனது மிதமிஞ்சிய உற்சாகத்தின் காரணமாக ஏற்படும் உணர்வுகளைக் கட்டுப் படுத்திக் கொண்டு தனது நல்லாட்சியால் புகழ் பெற வேண்டும். கெஜ்ரிவாலின் தவறுகள் ‘புதிய பேயை விட பழைய பூதமே பரவா இல்லை’ என்கிற எண்ணத்தை மக்களுடைய மனதில் தப்பித் தவறிக் கூட தோற்றுவித்துவிடக் கூடாது. அவ்விதம் ஒரு தோற்றம் துரதிஷ்டவசமாக உண்டாகிவிடுமானால் ஜனநாயகத்தின் மீதும் மாற்று அரசியல் மீதும் நாட்டு மக்கள் வைத்த நம்பிக்கை நசிந்துவிடும். 

நல்லதையே நினைப்போம்! நாடு வாழ வாழ்த்துவோம்! இறைவனை இறைஞ்சுவோம்!

ஆக்கம் : முத்துப் பேட்டை பகுருதீன் B.Sc.
கலந்தாய்வு & உருவாக்கம் : இப்ராஹீம் அன்சாரி

நேற்று ! இன்று ! நாளை ! - தொடர் -14 38

அதிரைநிருபர் பதிப்பகம் | October 17, 2013 | , , , , , , ,

அந்த சமதளமில்லாத  சந்நியாசி மடத்தில் கவலை தோய்ந்த முகத்துடன், கிராம நகர பஞ்சாயத்துத் தலைவர்கள் , ஒன்றியம், மாவட்ட, நகராட்சி, மாநகராட்சி, வட்டம், குறுகிய வட்டம், பெருகிய வட்டம் ( உடம்பாலும் ) , சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் என சுதந்திர  இந்தியாவை வாழ்விக்க வந்த மகான்கள் அத்தனை பேரும் கூடி இருந்தனர். எல்லோருடைய முகத்திலும் ஏதோ ஒன்றைப் பறிகொடுத்துவிட்டது  போன்ற ரேகைகள் முகங்களில் ஓடின.  ஒரு நிற்க முடியாத வயதான எம்.பி. எம்பி எம்பிப் பேசினார். அவர்தான் தலைமை வகித்ததுபோல் இருந்தது அந்தக் கூட்டத்துக்கு.

“அன்பான அரசியல் சட்டக் காவலர்களே ! ஜனநாயகம் என்கிற பெயரில் நாம் நடத்திக் கொண்டிருக்கிற சர்க்கஸ் சர்வாதிகாரத்துக்கு இன்றைக்கு சாவுமணி அடிப்பதற்கு சமயம் வந்துவிட்டது போல் எனது வழுக்கை மண்டைக்குத் தோன்றுகிறது. காரணம் லஞ்சமும் லாவண்யமும் ஊழலும் அரசியல் தளபதிகளாகிய நமது பிறப்புரிமை. அதைப் பறிக்கும் வண்ணம் இன்றைக்கு ராகுல் காந்தி என்கிற திருமணம் கூட ஆகாத ஒரு சிறுவர்   ஊழல் ஒழிப்பு அம்பினை நம் மீது ஏவி விட்டார் . நீங்களும் நாங்களும் எவ்வளவுதான் ஊழலை  ஒழிப்போம் என்று பேசினாலும் கட்சிப் பாகுபாடு இல்லாமல் ஊழலில் வரும் லஞ்சத்தை ஒருவருக்கும் தெரியாமல் பங்கு போட்டு, பொதுமக்கள்  முன்னால் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசி   நம்மை ஊழலுக்கு எதிரிகள் என்று காட்டிக் கொண்டிருந்த வித்தை இனி பலிக்காது போலத் தெரிகிறது. இனியும் இதைப் பொறுத்துக் கொண்டு வாய்மூடி நாம் மவுனம் காக்க வேண்டுமா? “ என்று கேட்டார். 

உடனே காவித்துண்டு முதல் காக்கித்துண்டு வரை போர்த்தி இருந்த போர்வைகளை விலக்கிக் கொண்ட கூட்டத்தினர், “ பொறுக்க மாட்டோம்! பொறுக்க மாட்டோம்!. இதனை நாள் நாம் பொறுக்கித் தின்றதை  தடுக்க நினைத்து சட்டம் போடுவதைப் பொறுக்க மாட்டோம் “ என்று ஏகக் குரலில் முழங்கினர். அந்த மடமே அதிர்ந்தது. தலைவரின் முகத்தில் மகிழ்ச்சி ரேகைகள். பாராளுமன்றத்தில் அடிக்க வரும் அம்பிகள் நகராட்சி கூட்டங்களில் நாற்காலியை எடுத்து வீசும் வீராப்புப் பிடித்த வேங்கைகள் தங்களின் தலைக்கு ஒரு கத்தி வருகிறது என்ற உடன் எப்படி ஒற்றுமையைக் காட்டுகிறார்கள் என்று புளகாங்கிதம் அடைந்தார். அந்த மகிழ்ச்சி அடங்குமுன்னே மீண்டும் தலைவர்” நம்மில் ஐம்பதுபேர் உடனே  தலைநகர் டில்லி சென்று நமது எதிர்ப்பை  பிரதமரிடம் சொல்லி,  நமக்கு வர இருக்கும் ஆபத்தை தடுத்து நிறுத்த முயலவேண்டும் அத்துடன் ஒவ்வொரு அரசாங்க வேலைக்கும் இவ்வளவு லஞ்சம் என்று வரையறுத்து அதற்கு ஏற்றாற்போல் ஒரு சட்டம் அதுவும் அவசரமாக இயற்ற வேண்டும் என்று கேட்கவேண்டும் என்ன சொல்கிறீர்கள்?” என்று ஆவேசம் முழங்கக் கேட்டார். உடனே பாரத மாதாக்கு ஜே! என்கிற  கோஷம் விண்ணில் உள்ள மேகத்துடன் மோதி ஒரு மின்னலும் வெட்டியது. இடியும் இடித்தது.

டில்லி புறப்பட குழுவினர்  ரயில் நிலையம் வந்தனர். ஆனால் படுக்கை மற்றும் இருக்கை வசதி கிடைக்கவில்லை. உடனே டிக்கெட் பரிசோதகரைக் கண்டனர். அவரோ ஒரு இடத்துக்கு நூறு ரூபாய் தந்தால்  ஒதுக்கித்தருகிறேன் என்று  இவர்களை ஓரமாக ஒதுக்கிக் கொண்டுபோய் காதில் பவ்யமாய் சொன்னார். காசு கைமாறியது. இருக்க இடம் கிடைத்தது. உடனே ஓர் நகராட்சி உறுப்பினர், “வெற்றி! வெற்றி! ஆரம்பமே வெற்றி! கொடுக்க வேண்டியதைக் கொடுத்துப் பெற வேண்டியதைப் பெற்றோம் “ என்று முழங்கினார். மற்றவர்களும் ஆஹா! இது நல்ல சகுனம் லஞ்சத்துக்கான குறிக்கோள் நோக்கிய நமது   பயணம் லஞ்சம் கொடுத்து ஆரம்பமாகிறது என்று மகிழ்ந்தனர். ரயில் டில்லி நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. 

அனைவரும் டில்லி சென்று அடைந்தனர். பிரதமரின் இல்லம் தேடி ஜப்பானில் கல்யாணராமன்கள் அலைவது போல் அலைந்து பிரதமரின் இல்லம் சென்றடைந்தார். ஆனால் கொடுமை! கொடுமை! என்று கோயிலுக்குப் போனால் அங்கு ரெண்டு கொடுமை ஆட்டம் போட்டு வந்தது என்பது போலவும் , ராவுத்தரே  கொக்காகப் பறக்கிறார் குதிரை கோதுமை ரொட்டி கேட்டதாம் என்பது போலவும் , சாமியே சைக்கிளில் போகும்போது பூசாரி புல்லட் கேட்டது போலவும்  பிரதமர் கன்னத்தில் கைவைத்துக் கண்கலங்கி அமர்ந்திருக்க, அவர் அருகே அத்வானிஜி நான்கு பேர் கட்டுகிற  வேட்டியை தான் ஒருவர் மட்டும் சுற்றி சுற்றி கோவணம் போல் கட்டிக் கொண்டு தனது கையையும் கட்டிக் கொண்டு  உட்கார்ந்து இருந்தார். அவருக்கு அடுத்து ராஜ்நாத் சிங்  சிகப்புக் குடைமிளகாய் அளவுக்கு நெற்றியில் ஒரு கோட்டுடனும் அமர்ந்து இருந்தார். அவரது நீண்ட மூக்கு சிவந்து இருந்தது. இரவு முழுதும் அழுது இருப்பார் போல. அவரது காலுக்கடியில் யார் அட நம்ம இல. கணேசன். !  திரும்பிப்பார்த்தால் தம்பித்  துரை , டி ஆர் பாலு , கனிமொழி, சரத் யாதவ், ராம்விலாஸ் பஸ்வான், பாரூக் அப்துல்லாஹ், ராசா, சுரேஷ் கல்மாடி, மஹாரஸ்டிரா முதல்வர், சிபு சோரன், பங்காரு லட்சுமணன், மது கோடா என்று அத்தனை உலக உத்தமர்களும் மனிதப் புனிதர்களும் ஒன்றாக உட்கார்ந்து இருந்தார்கள்.   ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டமே அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. சபாநாயகர் மீரா குமார் மட்டும் மிஸ்ஸிங். அதனால் “பைட் ஜாயியே ! பைட் ஜாயியே!” என்கிற குரல் கேட்கவில்லை. 

பிரதமர் எழுந்து பேச ஆரம்பித்தார். அப்போது பழக்க தோசத்தில் ஒரு பிஜேபி உறுப்பினர் எழுந்து மேஜையைத் தட்டினார். உடனே அத்வானி அவரது கையைப் பிடித்து இழுத்து “சும்மா இரு! இது பாராளுமன்றக் கூட்டமல்ல! நமது அனைவரின் வயிற்றுப் பிழைப்புக்கான வழிகாண நடத்தப்படும் அனைத்துக் கட்சிக்கூட்டம்!  நமது எதிர்காலத்தை நிர்ணயிக்கும்  கூட்டம்” என்று எச்சரித்தார். பிரதமர் பேசாமல் உட்கார்ந்துவிட்டார்.  உடனே சுஷ்மா சுவராஜ்  பேச ஆரம்பித்தார். “ நாம் எல்லோரும் ஒருங்கிணைந்துதான் லஞ்ச லாவண்யங்களுக்காக  தண்டிக்கப் பட்ட எம்பி எம் எல் ஏ க்களின் பதவியைப் பறிக்கக்கூடாது என்று சட்டம் போட முடிவு செய்தோம். அதை நாங்கள் தாமதிக்க நினைத்தாலும் அரசு அவசர சட்டம் போட்டது. தனிப்பட்ட முறையில் நாங்களும் மனதளவில் அதை வரவேற்கிறோம்.  ஆனால் மேடைகளில் இதை எதிர்த்து முழங்குவோம். ஆனால் நம் எல்லோர் வாயிலும் மேல் மண்ணை தடவிவிட்டு கீழ்மண்ணை அள்ளிப் போட்டு விட்டாரே ராகுல் காந்தி? இதற்கு என்ன செய்யப் போகிறீர்கள் ?” என்று ஆக்ரோஷமாகக் கேட்டார். இதனால் அவரது ஒருகை கம்பளி ஜாக்கெட் கூட  அழுதது போல இருந்தது. 

அடுத்து கவிஞர் கனிமொழி பேசத்தொடங்கும்போது தான் இதுபற்றி  ஒரு கவிதை வாசிக்க விரும்புவதாகக் கூறினார். கவிதை தமிழில் இருந்தாலும் கூடியவர்களின் ஒரே பொது மொழி ஊழல்  என்பதால்  அனைவரும் “அச்சா! பஹூத் அச்சா!” என்று வரவேற்றனர். கனிமொழி கவிதை வாசித்தார் “ நாளை நமதே! இந்த நாடும் நமதே! லஞ்சம் என்ற கொள்கையில் பூத்த அன்பு மலர்களே! கமிஷன் என்கிற வாழ்வாதாரத்தில் தழைத்த இனிய உறவுகளே! நாளை நமதே! இந்த லஞ்ச லாவண்யமும் நமதே! என்று பாடினார். அனைவரும் கைதட்டினர். ஆனாலும் எல்லோரும் கைதட்டி ஓய்ந்த பின்னரும் ஒருவரின்  கை மட்டும் தட்டும் ஓசையை நிறுத்தவில்லை. சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.எல்லோரும் திரும்பிப்பார்த்தால் அப்படித் தட்டும் கைகள் டி ஆர் பாலுவின் கைகள். உடனே தயாநிதி மாறன்  அவரைக் கிள்ளி கை  தட்டுவதை நிறுத்தச் சொன்னார். நான் கனிமொழியின் கவிதைக்கு கை தட்டுவது தலைவர் வரை எட்டிவிட்டதா என்று பார்வையாலேயே கேட்ட டி ஆர் பாலுக்கு” ஆம் “ என்று தலை  அசைத்தார் இளங்கோவன்.  எம் எம் எஸ் அனுப்பி இருப்பாராக்கும். 

கூட்டத்துக்கு சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த பங்காரு லட்சுமணன் தான் ஏற்கனவே  சில நாட்கள் சிறையில் வசித்துவிட்டதாகவும் அதற்காக தனக்கு ஒரு குறிப்பிட்ட சதவீதம் வாழ்வாதார நஷ்ட ஈடாக வழங்க வேண்டுமென்றும் ஒரு கோரிக்கையை வைத்தார். அதே கோரிக்கையை ஆ.ராசா வழி மொழிந்தார்.      

அடுத்து,  எல்லா நாடாளுமன்றக் கட்சித்தலைவர்களும் பேச ஆரம்பித்தனர். டி ஆர் பாலு பேசும்போது கனிமொழி அம்மா என்று குறிப்பிட்டார். உடனே தம்பித்துரை காட்டமாக எழுந்தார். “ அம்மா என்பது தமிழ்வார்த்தை! அதுதான் உலகின் முதல் வார்த்தை!  தமிழில் அப்படி ஒரு வார்த்தை என்றால் அது எங்கள் அம்மாதான். இப்போது புதிதாக ஒரு அம்மாவைத் திணிப்பது எங்களின் அடிப்படை உரிமையில் கைவைப்பதாகும்” என்றார். உடனே அருகில் அமர்ந்து இருந்த கம்யூனிஸ்ட் ராஜா , “எவ்வளவு நாள் நீங்கள் அம்மா! அம்மா! என்றே சொல்லிக் கொண்டு இருப்பீர்கள்.? கனிமொழியை  அம்மா என்றால் நீங்கள் உங்கள் அம்மாவை உம்மம்மா என்று கூப்பிடுங்கள் அல்லது பெரியம்மா என்று கூப்பிடுங்கள் . ஒரு காலத்தில் சின்ன அண்ணி பெரிய அண்ணி என்று கூப்பிடவில்லையா அது போல நினைத்துக் கொள்ளுங்கள் ” என்றார். இதைக் கேட்ட தம்பித்துரைக்கு தலை  சுற்றி முதுகுப்பக்கம் வந்தது. ஆனாலும் ஒரு தைரியம்,  தமிழ்நாட்டுக்குத் திரும்பும்போது அமைச்சர் பதவியைப் பறிப்பதுபோல் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ஓரிரவில் பறிக்க முடியாது என்கிற தைரியம்தான் அது. இருந்தாலும் அம்மாவுக்கு சென்னைக்கு ஒரு போன் அடித்து நடப்பை சொல்லிவிடுவோமென்று நைசாக வெளிவந்து போயஸ் தோட்ட அம்மாவுக்கு பவ்யமாக ஒரு அழைப்புவிடுத்தார். போனை எடுத்த அம்மா, “ யோவ் போனை வை ! நானே பெங்களூர் பீவர் பிடித்துப் போய் இருக்கிறேன். நீ வேறு. ஊருக்குவா பேசிக்கொள்ளலாம்”  என்று போனை கட் செய்துவிட்டார். 

கூட்டத்தில் திடீரன்று ஒரு சலசலப்பு ஏற்பட்டது. என்னவென்று பார்த்தால் ராகுல் காந்தி அரங்கினுள் நுழைந்து  கொண்டு இருந்தார். இதைப் பார்த்த அத்வானி தனது லங்க்கோட்டை சரிசெய்துகொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தார். எல்லோரும் ராகுல்! ராகுல்! என்று குசுகுசுவென்று பேச ஆரம்பித்தனர். பிரதமருக்கு நிலக்கரியின் நிறத்தில் வியர்க்க ஆரம்பித்தது. சுரேஷ் கல்மாடிக்கு விளையாட்டு அரங்கங்கள் சிறு சிறையின் தனிநபர் செல்லாகத் தென்படத் துவங்கியது. கனிமொழிக்கு சோற்றுக்கு பதில் களி உருண்டை தென்பட்டது. ரசீத் மசூதுக்கு சிறைக் கம்பிகளின் எண்ணிக்கை தென்பட்டது. மற்றவர்களும் கூட்டிக் கழித்து ஒரு கணக்குப் போட்டு எத்தனை வருடம் என்று பார்க்கத் தொடங்கினர். குறிப்பாக பங்காரு லட்சுமணன் 7 X 365 – 155 என்று கணக்குப் போட்டார். 

அப்போது என்  மேல் யாரோ வருடுவதுபோல் உணர்ந்தேன். திடீரென்று விழித்தேன்.  வேறு யாருமல்ல என் பேத்திதான். அப்பா சுபுஹுக்கு பாங்கு சொல்லிவிட்டார்கள் எழுந்திருக்கலையா என்று கேட்டாள். அப்போதுதான் தெரிந்தது. நான் கண்டது யாவும் கனவு என்று. ஆனால் ஒரு நிம்மதி, இவை கனவல்ல நாட்டில் நிகழும் நிகழ்வுகளின் ஒரு சாயல்தான்; சாம்பிள்தான் என்று ஆறுதல்படுத்திக் கொண்டு பள்ளியை நோக்கி விரைந்தேன். 

தொழுதுவிட்டு வந்ததும் சில சிந்தனைகள் ஏற்பட்டன. முதலில் ராகுல் காந்தியைப் பாராட்ட வேண்டும். ஒரு நியாயமான காரணத்துக்காக, ஒரு அரசின் அமைச்சரவையும் எதிர்க் கட்சிகளும் கூடி முடிவெடுத்து குடியரசுத்தலைவரின் மாளிகை வரை சென்ற அவசர சட்டத்தை தனது சமுதாய அக்கறை என்கிற ஆயுதம் மூலம் அதை  சாம்பலாக்கி ஊதித்தள்ளிய காரணத்துக்காக ராகுலைப் பாராட்ட வேண்டும் என நினைக்கிறேன். அதுமட்டுமல்ல கடந்த காலத்தில் லக்னோவில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் அவர்களுடன் சென்று அமர்ந்து கொண்டு நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன் என்று சொல்லிய வரலாற்றுக்கும் இவர் சொந்தக்காரர். சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த திரு. மன்மோகன் சிங்கை அவமதித்துவிட்டதாக அவதூறு கிளப்பப் பட்ட காரணத்தால் பஞ்சாப் சென்று அந்த மக்களை தற்போது சந்தித்து அவர்களின் மனப் புண்ணை ஆற்றி இருக்கிறார் ராகுல் காந்தி. எதிர்காலத்தில் இவர் எப்படி உருவெடுப்பாரோ தெரியாது . ஆனால் அவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் சில செயல்கள் நம்பிக்கையை ஊட்டுகின்றன என்று மட்டும் சொல்வேன். 

இது ஒரு பக்கம் இருக்கட்டும், நாம் மீண்டும் நமது மக்கள் பிரதிநிதிகளின் பக்கம் கவனத்தைத் திருப்புவோம். ஒவ்வொரு பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களும் மக்களின் காசில் கொழிக்கிறார்கள் ; குளிக்கிறார்கள்; செழிக்கிரார்கள்.  பல கோடி ரூபாய்கள் இவர்களுக்கான சம்பளம் மற்றும் சலுகைகளுக்காகவும் வசதிகளுக்காகவும் செலவழிக்கப் படுகின்றன. பொதுமக்களுக்கு இலவசமாக அரிசியும் மின்சாரமும் கொடுப்பதைப் பற்றி கண்டித்துப்  பேசுகிறோம். ஆனால் இந்த எம்பி மற்றும் எம் எல் ஏக்கள் அனுபவிக்கும் இலவசங்களை நினைத்தாலே தலை சுற்றுகிறது. ஐந்து நட்சத்திர விடுதியில் தங்குவதில் இருந்து, இலவச இரயில் மற்றும் விமானப் பயணம் வரை தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பெற்று சுகிக்கிரார்கள்.    உயர்ந்த ஊதியம், ஒய்வுகால ஊதியம் தவிர எங்கு போனாலும் ஓசியில் சாப்பாடுவரை இவர்களுக்குக் கிடைக்கிறது. மக்கள் தொண்டர்கள் என்று பட்டத்தைப் போர்த்திக் கொண்டு மக்களின் பணத்தை கொள்ளையடிப்பது ஒன்றே இவர்களின் நோக்கமும் கொள்கையுமாக இருக்கிறது. எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல என்பதுதான்  பொதுவான ஆனால் வேதனையான உண்மை.

ஒரு புறம்  ஏழைகள் கொளுத்தும் வெயிலில் நாள் முழுதும் மேனியில் ஆடை கூட இன்றி வெப்பத்தையே ஆடையாக்கிகொண்டு கோவணத்தைக் கட்டிக் கொண்டு உழைக்கிறார்கள். ஆனால் அவர்களின் பிரதிநிதிகள் குளிர்சாதன வசதியை வீணடிக்காமல் வாழ்கிறார்கள்.   இந்த மக்களின் பிரதிநிதிகள் சுல்தான்கள் போல சுகபோகத்தை  கலப்படமில்லாமல் அனுபவிக்கிறார்கள். இவர்களுக்கு இந்த அலாவுதீனின் விளக்கு ஜனநாயகம் என்கிற பெயரில் கிடைத்தது. 

அதுதான் போகட்டும் எங்கே எதற்கு எந்த வேலையை செய்ய அனுப்பப்பட்டார்களோ அங்கு போய் பேண்டை அவிழ்த்துக் காட்டுகிறார்கள் ; பேயாட்டம் ஆடுகிறார்கள்; ஒரு குண்டூசி பிரச்னைக்காக நாடாளுமன்றத்தை முடக்கிப் போடுகிறார்கள். பாராளுமன்றம் நாளை முதல் தொடங்குகிறது என்று அறிவிப்பு வந்தால் நாளை முதல் சந்தை ஆரம்பிக்கிறது என்று விளங்கிக்  கொள்ள வேண்டிய நிலை ஆகிவிட்டது.    அது கூட நீ அடிப்பது போல் அடி நான் அழுவது போல அழுகிறேன் என்று அனைவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டியே அதிகம். பல அரசின் திட்டங்களில்  கூட்டுக் கொள்ளைதான் அதிகம். பங்குகள் சரியாகப் பகிரப் பட்டால் பாராளுமன்றம் பதமாகப் போகும் இல்லாவிட்டால் பாதகமாகப் போகும். 

எனக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது . ஒருத்தியைப் பார்த்து இன்னொருத்தி , “ நீ விபச்சாரி “ என்று திட்டினாளாம். உடனே மற்றவள் , “ நீ மட்டும் என்ன ஒழுங்கா? “ என்று கேட்டாளாம். பிறகு இருவரும் சரி! சரி! வா போகலாம் ஆள் காத்திருக்கிறது  என்று சொல்லிக் கொண்டார்களாம். இது போல்தான் இன்று ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சிகளின் அணிகள் இருக்கின்றன. 

கோடி கோடியாய் கொள்ளை அடித்ததாக குற்றம் சாட்டப்பட்ட சில  அரசியல்வாதிகள்  கைது செய்யப் பட்டால் சில நாட்களில் ஜாமீனில் வெளியே வந்து விடுகிறார்கள்.  இப்படி ஜாமீனில் வெளியே வருபவர்கள் ஏதோ செவ்வாய் கிரகத்தில் ஒரு வீடுகட்டிவிட்டு வந்தவர்கள் போலவும், நெல்சன் மண்டேலா போல் காந்தியடிகள் போல் சுதந்திரப் போராட்டத்தில் சிறை சென்று மீண்டவர்கள் போலவும்  அவர்களுக்கு  மேளதாளங்கள், தாரை தப்பட்டைகள் வானவேடிக்கைகள் முழங்க விமான நிலையத்தில் தரப்படும் வரவேற்பும் வரிசையாக நின்று மாலை அணிவித்தலும் கண்டு நாகரிக உலகம் நாணித் தலை குனிகிறது. போதாக்குறைக்கு அவர்களை வாழ்த்தி ஓட்டப்  படும் சுவரொட்டிகள், பிளாக்ஸ் போர்டுகள் அவற்றில் உள்ள வாசகங்களைப் படிக்கும்போது காறித் தான் துப்பவேண்டும்போல் இருக்கிறது. இன்னும் வழக்கே முடியவில்லை ஜாமீனுக்கே இந்த  ஆர்ப்பாட்டம் என்றால் வழக்கு முடிந்து நிரபராதி என்று தீர்ப்பு வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம்.           

லஞ்சம் ஒழியப் போவதுமில்லை கருவைக் காடு அழியப் போவதுமில்லை. 

இன்ஷா அல்லாஹ் தொடரும்.
ஆக்கம்: P. முத்துப் பேட்டை  பகுருதீன் B.Sc;
உருவாக்கம் : இப்ராஹீம் அன்சாரி

பாலியலுக்கு பலியாகாதே ! - தொடர் - 4 12

அதிரைநிருபர் பதிப்பகம் | May 06, 2013 | , , , , ,

கவனமாக இருங்கள்!

பாலியல் வன்முறைகளுக்கெதிராக என்னதான் மக்கள் ஆர்பரித்தெழுந்தாலும், நாடு தழுவிய போராட்டங்களை நடத்தினாலும், குழு அமைத்து ஆய்வு செய்தாலும், சட்டத்திருத்தம் கொண்டு வந்தாலும், ஆயுள் தன்டனை, ஆண்மை நீக்கம் என்று அரட்டிக் கொன்டாலும் அன்றாடம் நடக்கும் பாலியல் குற்றங்கள் குறைந்த பாடில்லை. மாறாக அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. சத்திய மார்க்கம் தளத்தில் வெளியான ஒரு கட்டுரையில், ஊடகங்களில் "இன்றைய வன்புணர்வுச் செய்திகள்" என்று தனிப்பக்கங்கள் ஒதுக்குமளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது” என்று தனது வருத்தத்தைப் பதிவு செய்திருந்தார் KATKA கட்டுரையாளர். 

இந்தியாவின் தலை நகரான டெல்லி பாலியல் குற்றங்களுக்கும் தலை நகரமாக முன்னேற்றம் அடைந்துள்ளதை எண்ணி வருந்தாமல் இருக்க முடியாது. பாலியல் குற்றங்களுக்கு கலாச்சார சீர்கேடு ஒரு முக்கிய காரனமாக இருந்தாலும், மக்களின் கவனக்குறைவும் ஒரு முக்கிய காரனியாக இருக்கிறது என்றால் அது மிகையாகாது.

பாலியல் குற்றங்கள் பெரும்பாலும் அறிமுக மற்றவர்களால் நிகழ்த்தப் படுவதில்லை. மாறாக நன்கு அறிமுக மானவர்களாலேயே அரங்கேற்றப் படுகிறது. அறிமுக மற்றவர்களால் ஏற்படுத்தப்படும் பாலியல் குற்றங்கள் வெகு சொற்பமே. அது ஒரு சதவிகிதம் கூட இருக்காது என்பதை உறுதியாகச் சொல்லலாம். ஆனால் பெரும்பாலான பாலியல் குற்றங்கள் நெருங்கிய உறவினர்களால், அண்டை வீட்டினரால், நண்பர்கள், காதலர்கள், சகமாணவர்கள், சகபணியாளர்கள், மேலதிகாரிகள், முதலாளிகள் என அன்றாட வாழ்கையில் தொடர்புள்ளவர்களாலேயே அரங்கேற்றப் படுகிறது.

பெரும்பாலான பாலியல் குற்றங்கள் வழக்கு மன்றங்களுக்கு வருவதில்லை என்று புள்ளி விவரங்கள் தெறிவிக்கின்றன. இதற்கு பல்வேறு காரணங்களிருப்பினும் அறிமுகமானவர்களால் குற்றங்கள் இழைக்கப்படுவதும் ஒரு முக்கிய காரணமாகும். மேலும் அறிமுகமானவர்களால் இழைக்கப்படும் பாலியல் வன்முறைகள் நன்கு திட்டமிடப்பட்டே அரங்கேற்றப்படுவதால் அதிலிருந்து தப்பிப்பதும் முடியாமலாகிவிடுகிறது.

சமீபத்திய செய்தியிகளிலிருந்து சில உங்கள் சிந்தனைக்காக!

காதலர்கள் வீட்டிலிருந்து வெளியேறி கோவிலிலே தாளிகட்டிக்கொள்கிறார்கள். பிறகு பதிவுத்திருமனம் செய்துகொள்ளலாம் என்று காரில் ஏற்றி, குலிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து காரிலேயே தன் உறவினர்களோடு சேர்ந்து கற்பழித்திருக்கிறான் ஒரு கபோதி.

இரவில் குப்பைத்தொட்டியில் குழந்தை அழும் சப்தம் கேட்க, குழந்தை மீட்கப்பட்டு காவல் துறையிடம் ஒப்படைக்கப்படுகிறது. காலையில் பத்தாம் வகுப்பு படிக்கும் தன் மகளோடு சென்று குழந்தை எங்களுடையது தான் என்று கேட்க, எழுதி வாங்க்கிக்கொண்டு குழந்தை ஒப்படைக்கப்படுகிறது. அங்கே காவல் நிலைய வியரனையில் அந்த தாய் சொன்ன செய்தி – இக்குழந்தை என் மகளுடையதுதான். பள்ளி விடுமுறையில் தன் அத்தை வீட்டுக்குச் சென்றிருந்தபோது அத்தை மகனோடு உறவு ஏற்பட்டிருக்கிறது. அதனால் என்ன செய்வதென்று தெரியாமல் குப்பையில் போட்டுவிட்டோம். 

9ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் கோவை மாவட்டம் ராமநாதபுரத்திலுள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்று வருகிறார். அங்குகிருந்த 59 வயதான அந்த மாணவியின் உறவினரும், அவருடைய நண்பரும் அந்த சிறுமியை சுமார் ஓராண்டு காலமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி வந்துள்ளனர். அதனால் அந்த சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டவே, அவர்களுடைய 70வயது நண்பரான, ஓய்வுபெற்ற மருத்துவரின் உதவியை நாடியுள்ளனர். அதனைத் தொடர்ந்து அந்த 70 வயதான மருத்துவரும், இன்னும் இருவரும் சேர்ந்து அந்த சிறுமிக்கு தொடர்ந்து வன்கொடுமை இழைத்துள்ளனர். அதனால், பாதிப்படைந்த சிறுமி கோவை மாநகராட்சி காவல் துறை ஆணையரிடம் புகாரளிக்கிறார். விசாரணையில் சிறுமியை மிரட்டியும், மயக்க மருந்து அளித்தும் அவர்கள் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. 

இப்படி ஏராளமான காட்டுகளை சுட்டிக் காட்டிக்கொண்டே இருக்கலாம். இதுபோன்ற வன்முறைகளில் பெறியவர்களும் சிறுவர்களும் பாதிக்கப்பட்டாலும் பெரியவர்களின் இழப்பு அவர்களின் நடத்தையின் காரணமாக அவரவர்கள் தேடிக்கொள்வதே அதிகம். ஆனால் பாவம் குழந்தைகள் என்ன குற்றம் செய்தார்கள். இந்தக் காமுகர்களின் கழுக் கண்கள் அவர்களுக்கு விளங்குமா? இந்த அநியாயத்தை பாருங்கள்

டெல்லி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி கடந்த 15-ம் தேதி வீட்டினருகே விளையாடிக்கொண்டிருந்தவள் காணாமல் போய் 17-ம் தேதி அச்சிறுமியின் வீட்டிற்குக் கீழுள்ள மற்றொரு வீட்டில் உடல் முழுதும் காயங்களுடன் கண்டுபிடிக்கப்படுகிறாள். கீழ் வீட்டுக்காரனின் மனைவி தாய்வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில் அந்த மிருகம் இக்கொடுமையைச் செய்துள்ளதாக செய்திகள் தெறிவிக்கின்றன. 

இரண்டு நாள் அந்தக் காமுகனின் கொடுஞ்சிறையில் அந்த பிஞ்சு எத்துனை வேதனையை, இன்னல்களைச் சந்தித்திருக்கும். அந்தக் குழந்தையின் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும். காப்பாறுவோர் எவரும் உண்டா என்று அந்தப் பிள்ளை எவ்வளவு ஏங்கியிருக்கும். நினைக்கும் போதே உள்ளம் நடுங்குகிறது. பிறருடைய வேதனைகளை நாம் யூகிக்கத்தான் முடியும். உண்மையில் முழுமையாக உணரமுடியாது. ஆனால் சம்மந்தப்பட்டவர்கள் அதை உணரும்போது அவர்களின் உள்ளம் வெடித்துச் சிதறிவிடாதா?

இது போன்ற நிகழ்வுகள் தொடர்வது சட்டமும் ஒழுங்கும், குற்றவாளிகளைக் காப்பதற்கே, குடிமக்களைக் காப்பதற்கல்ல! என்ற எண்ணத்தையே ஏற்படுத்துகின்றன.

நம்மைக் காப்பாற்ற யாரும் வருவார்களென்று இருக்காமல் நம்மையும் நம்மைச் சுற்றியிருப்போரையும் நாம்தான் காக்க வேண்டும் என்று கவனமாக இருந்தால் இறையருளால் இயன்றவரை அனேக ஆபத்துக்களிலிருந்த்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். அரசாங்கம் சட்டம் இயற்றி நம்மை காப்புற்றும் என்று எண்ணியிருந்தால் ஏமாந்து போய்விடுவோம்.
  • நம்மைச் சுற்றி நடப்பதைக் கண்கானியுங்கள்!
  • பிள்ளைகள் அதிகநேரம் ஃபோனிலே பேசினால் விசாரியுங்கள்!
  • பிற வீடுகளுக்கு தகுந்த பாதுகாப்பு இல்லாமல் பிள்ளைகளை அனுப்பாதீர்கள்!
  • கனவன் மனைவி மட்டும் (பெரிவர்கள் இல்லாமல்) இருக்கும் வீடுகளுக்கு தகுந்த பாதுகாப்பு இல்லாமல் டியூசனுக்கு அனுப்பாதீர்கள்!
  • பருவப் பெண்களுக்கு சக பருவப் பெண்களையே பாதுகாப்பெனக் கருதாதீர்கள்!
  • வீட்டிற்கு வரும் உறவினர்களானாலும் கண்கானியுங்கள்!
  • மூத்த அன்னியப் பெண்களோடு பிள்ளைகள் பழகுவதற்கு அனுமதிக்காதீர்கள்!
  • பாலியல் தொல்லைகள் பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் உண்டு என்பதை அறிந்துகொள்ளுங்கள்!
  • கண் பார்வையிருந்து குழந்தைகள் சற்றே மறைந்தாலும் உடனே அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ளுங்கள்!
எத்துனைக் கோரச் சம்பவங்கள் நிகழ்ந்தாலும் வாசிப்போருக்கும், செவியேற்போருக்கும் செய்தி. ஆனால் பாதிப்புக்குள்ளானோருக்கு? சிந்தித்துணரும் மக்களுக்கு இதில் படிப்பினைகள் இருக்கின்றன. என்ன நடந்தாலும் அரசாங்கம் ஒன்றும் பெரிய தீர்வுகளைக் கொண்டுவரப்போவதில்லை. மக்களின் கோபத்தைக் குறைக்க ஒரு குழு அமைக்கும். தவிற பெரிய மாற்றங்கள் எதையும் கொண்டுவரப்போவதில்லை. கற்பழிப்புக் குற்றங்கள் இல்லாமலாக்க கற்பழிப்பு குற்றமில்லை என்று சட்டம் இயற்றச் சொல்லும் கோமாளிகளே பெரும்பாலும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொண்டு நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்.

எல்லாம் வல்ல ஏக இறைவனான அல்லாஹ் நம் அனைவரையும் துற்பாக்கியங்களிலிருந்து தூரமாக்கி ஈருலக வாழ்வையும் அழகாக்கித் தருவானாக! மேலும் நரக நெருப்பின் வேதனையிலிருந்தும் நம்மை பாதுகாப்பானாக!

இன்ஷா அல்லாஹ் தொடரும்
அபு நூரா

ஜனாதிபதி யார் ? - விவாதக்களம் 21

அதிரைநிருபர் பதிப்பகம் | June 18, 2012 | , , ,


பிரதமர் பதவியிலிருந்து லோக்கல் பஞ்சாயத்து போர்டு தலைவர் பதவி வரைக்கும் அலசுவதில் நம்மவர்களுக்கு சொல்லவே வேண்டியதில்லை, அப்புறமென்ன இன்னும் ஒரே ஒரு பதவி மட்டும்தான் மீதி இருக்கு அதற்கு யாரை உட்காரவைக்கலாம் !?

டெல்லி அம்மையார் 'கை'காட்டிவிட்டார் ஒருவரை, தமிழக அம்மா சுட்டிக் காட்டுகிறார் மற்றொருவரை, பெங்கால் அம்மா சுத்தி சுத்தி ஒருவரையே காட்டுகிறார் !

தமிழக தாத்தாவோ தனது வார்த்தை ஜாலத்தால், பத்திரிகையாளர்கள் மத்தியில் 'கலகமே' உருவாக்கிவிட்டார், பின்னர் அது திசை திருப்பப் படுவதாகவும் சொல்லிவருகிறார் !

இதற்கிடையில் ஆளும்கட்சி எதைச் சொன்னாலும் எதிர்ப்பதற்கென்றே இருக்கும் எதிர்கட்சியோ மற்றொரு எதிராளியை தேடுகின்றனர் இன்னும் முடிவுக்குள் வந்ததாகவும் தெரியவில்லை.

சரி, இவர்கள் கெடக்கட்டும் நீங்க என்ன நினைக்கிறீங்க ? தகுதின்னு பேசினா எல்லோருக்குமே மைனஸ் மார்க்குகள் அதிகம் கொடுப்பீங்க அதிலே யாருங்க மிகக் குறைவான மைனஸ் மார்க்கோடு ஜெயிப்பாங்க ?

சலசலப்பு இல்லாம மேடையேறி உங்க கருத்தை சொல்லிட்டு போங்களேன் !

வாருங்கள் விவாதிக்கலாம்.

-அதிரைநிருபர்-குழு


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு