ஞாபகம் வருதே - 1 [நிகழ்விடம் கோலாலம்பூர்]
ஒருநாள் காலை மணி 7.3o நான் தங்கி இருந்த வீட்டிலிருந்து பைக்கில் என் கடைக்குப் போனேன். நான் போன வழி கொஞ்சம் சுற்றுப்பாதை; அதோடு அந்த வழியில் காலை வேளையும் மாலை வேளையும் போக்குவரத்து அதிகம் இருக்கும் என்பதால் நான் அந்த வழியில் செல்வதில்லை. ஏனோ எனக்கே தெரியவில்லை அன்று மட்டும் ஏதோ யோசனையில் என்னையும் அறியாமல் அந்த வழியில் பைக்கை விட்டேன். போகும் போது கொஞ்சதூரத்தில் ரோட்டோரம் ஒரு இந்தியர் ஒருபைக்கைத் தள்ள முடியாமல் சிரமப்பட்டுத் தள்ளிக் கொண்டு போனார். பைக்கின் பின்பக்க கேரியரில் நிறைய செய்தி பத்திரிகை கட்டுகள் இருந்தது.
முன் பக்கத்திலும்கூட பத்திரிகை கட்டுகள் இருந்தது. அவர்அருகில் சென்று "ஏன் பைக்கைத் தள்ளிக் கொண்டு போகிறீர்கள்? ரிப்பேரா?’’ என்றேன்.
"இல்லே! பெட்ரோல் முடிஞ்சு போச்சுங்க! போடப் போறேன்!’’ என்றார்.
பெட்ரோல் பங்க் இருக்கும் இடம் கொஞ்சதூரம். போகும் வழியில் ஒரு உயரமான மேட்டில் பைக்கை ஏற்றி இறக்க வேண்டும். பைக்கிலும் முன்னும் பின்னும் நியூஸ் பேப்பர் கட்டுகள் வேறு. அவருக்கோ வயசு நாற்பத்து ஐந்து அல்லது ஐம்பது இருக்கலாம். ’பைக்கை பெட்ரோல் பங்குக்கு தள்ளிக் கொண்டு போவது சிரமம்’ என்று நினைத்தேன்.
"நீங்கள் கொஞ்ச நேரம் இங்கேயே நில்லுங்கள். நான் போய் பெட்ரோல் வாங்கிவர்றேன்’’ என்றேன். 50/# ரிங்கிட்டை என்னிடம் கொடுத்து நாற்பது ரிங்கிட்டுக்கு எண்ணெய் வாங்கினால் போதும்!’’ என்றார் [# மலேசிய நாணயத்தின் பெயர்] ”பணத்தை வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் கொண்டு வந்ததும் வாங்கிக் கொள்கிறேன். அதுவரை ஓரமாக பைக்கை போட்டு விட்டு அந்த மரநிழலில் நில்லுங்கள்!” என்று சொல்லி விட்டு அங்கிருந்து புறப்பட்டேன். பத்து பதினைந்து நிமிசம் கழித்து எண்ணெயுடன் அங்கு சென்றேன். எண்ணெயை வாங்கி ஊற்றியபின் என் கையில் கேனை கொடுத்து 50# ரிங்கிட் நோட்டை என்னிடம் தந்தார்.
பாக்கி 10# ரிங்கிட்டை திரும்பக் கொடுத்தேன். அதை அவர் வாங்காமல் “’ஒன்றும் தப்பாய் எடுத்துக் கொள்ளதீர்கள். நீங்கள் எண்ணெய் வாங்க போன பெட்ரோல் செலவுக்காக இதை வைத்துக் கொள்ளுங்கள்” என்றார் .
‘’இது மனிதனுக்கு மனிதன் செய்யும் சாதாரண உதவிதான். இது ஒன்றும் பெரிய உதவியல்ல! வைத்துக் கொள்ளுங்கள்” என்று பாக்கியை அவரிடமே கொடுத்து விட்டு புறப்படுங்கள், பேப்பர் போடணும் நேரமாகிறது” என்றேன்.
“அல்ஹம்துலில்லாஹ்! சமயத்தில் அல்லாஹ் உங்களை இங்கே அனுப்பி எனக்கு உதவி இருக்கிறான். இங்கே நான் உதவி தேடி நிற்பதை எத்தனையோ பேர் வேடிக்கை பார்த்துக் கொண்டேதான் போனார்கள். ஆனால், யாருமே உதவ முன்வரவில்லை. நீங்களும் எனக்கு உதவாமலிருந்தால் என் பேப்பர் டெலிவரி இன்னும் லேட்டாகும்! வாடிக்கைகாரர்கள் திட்டுவார்கள்” என்றார்.
“அல்ஹம்துலில்லாஹ்” என்று அவர் உச்சரித்ததை கேட்டு நான் திடுக்கிட்டேன். வைத்த கண் வாங்காமல் அவரையே பார்த்தேன். காது குத்தியதுக்கான துவாரம் அவர் காதில் இருந்தது. நான் ஒரு இஸ்லாமியன் என்று தெரிந்து கொண்ட அவர் என்னை திருப்தி படுத்த அவர் செவிவழி கேட்ட திருகுர்ஆன் வாசகங்களை என்னிடம் ஒப்பிக்கிறாறோ?” என்ற சந்தேகம் எனக்கு வந்தது. என் முகபாவனையிலிருந்து என் எண்ணத்தை புரிந்து கொண்ட அவர்” நானும் ஒரு முஸ்லிம்தான். முன்பு நான் ஒரு இந்து. என் இருபத்து ஐந்து வயதில் நான் இஸ்லாத்திற்கு மாறினேன்.
அதற்கு முன் நான் கொள்ளை, வழிப்பறி திருட்டு குற்றங்களுக்கு அடிக்கடி சிறை சென்றேன். ஒரு மலாய்க்கார சிறை அதிகாரி எனக்கு புத்திமதிகள் கூறியும் இஸ்லாமிய போதனைகளை அடிக்கடி எனக்கு சொன்னார். திருட்டு வழிப்பறி போன்ற கிரிமினல் வாழ்க்கையை விட்டு நல்லவழிக்கு வர என்னை தூண்டினார். நான் சிறையில் இருந்தபோது என்னிடம் கடுமையாக அவர் நடந்து கொள்ளவில்லை. அவரின் அன்பும் போதனையும் என் வாழ்க்கை திசையை மாற்றியது. இஸ்லாத்திற்கு மாறி வந்தேன்.
என்னை அவர் ஒரு மனிதனாக்கினார். இப்பொழுது என் பெயர் இலியாஸ் பின் அப்துல்லா. முன்பு காளிமுத்து!” என்று தன் அடையாளக் கார்டை காட்டினார்.
’’பேப்பர் போடணும்! நேரமாகுது, உங்கள் நேம்கார்டை கொடுங்கள். ஒரு நாளைக்கு உங்கள் இடத்திற்கு வந்துநான் இஸ்லாத்திற்கு மாறிய சூழலையும் சொல்கிறேன்’’என்றார்.
’’அஸ்ஸலாமு அலைக்கும்’’ சொல்லி அங்கிருந்து பறந்தார்.
இது நடந்து மூன்று மாதத்தில் நான் வியாபாரம் செய்த இடமும் தங்கும் இடமும் மாறியது. பழைய இடத்துக்கு அவர் வந்தாரா? இல்லையா என்பது தெரியவில்லை! அவர் முழுக்கதையும் கேட்க வாய்ப்பு இல்லாமல்போனது.
அன்று காலை நான் வெகுதொலைவில் உள்ள ஊர்களுக்குச் சென்று என் வாடிக்கையாளர்களிடம் சப்ளை செய்த புத்தகங்களுக்குப் பணம் வாங்க வேண்டும். ஆனால், எதிர்பாராமல் இங்கே எனக்கு வேறு ஒரு வேலை வந்து விட்டதால் வெளியூர் போகும் வேலையை என்னிடம் வேலை செய்யும் மலாய்க்கார பையனிடம் கொடுத்தேன். நேற்று வேனுக்கு 35# ரிங்கிட்டுக்கு பெட்ரோல் போட்டு கொஞ்ச தூரமே ஓடியதால் மீதமுள்ள எண்ணெய் அந்த ஊருக்கு கிட்டத்தட்ட போகவர போதும். இருந்தாலும் போகுமிடத்தில் ஏதும் முன்பின் எதிர்பாராமல் ஆகலாம்’ என எண்ணி அவனிடத்தில் 50# ரிங்கிட் கொடுத்து “பத்து ரிங்கிட் உன் சாப்பாட்டுக்கு எடுத்துக் கொள். பாக்கி பணத்தில் எண்ணெய் போட்டுக் கொள்!’’ என்று சொல்லியனுப்பினேன்.
ஏற்கனவே வேனில் போகவர ஓரளவு எண்ணெய் இருக்கிறது. அப்படியே அது போதாமல் போனாலும் திரும்ப வர இன்னும் ஐந்து ரிங்கிட்டுக்கு போட்டால் போதும். பெரும்பாலும் மலேசியாவில் டிரைவர்கள் முப்பது ரிங்கிட்டுக்கு பெட்ரோல் போட்டு நாற்பது ரிங்கிட்டுக்கு பில் கொண்டு வருவார்கள். இவனும் அப்படிப்பட்ட ஆசாமியா என்பதை தெரிந்து கொள்ள ஏற்கனவே வேனில் பெட்ரோல் இருப்பதை அவனிடம் காட்டிக் கொள்ளாமல் அவன் திருடுகிறானா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ள இந்த தந்திரத்தைக் கையாண்டேன்.
முப்பது ரிங்கிட்டு எண்ணெய் போட்டு நாற்பது ரிங்கிட்டுக்கு பில் கொண்டு வரும் திருட்டுத்தனத்தை மனசாட்சியின் கண் கொண்டு பார்த்தால் அது திருட்டுமல்ல; பொய்யுமல்ல; மனசாட்சிக்கு எதிரானதுமல்ல என்று எண்ணத் தோன்றுகிறது*. ஏனெனில் ’சைலாக்’ போன்ற ரத்தம் குடிக்கும் தமிழ் முஸ்லிம் முதலாளிகளுக்கு அப்படி செய்வதில் தவறில்லைதான்; ஏனெனில் ஒரு நாளைக்கு காலை எட்டு மணியிலிருந்து இரவு ஒன்பது-பத்து வரை [சில கடைகளில் காலை ஆறு மணிக்கே வேலை தொடங்கும்] வேலையாட்களின் ரத்தத்தை உறிஞ்சி குடித்து [Sunday & public Holiday மட்டும் ’பெரிய’ மனசு பண்ணி அரை நாள் லீவு கொடுக்கும் ’தர்மவான்’ முதலாளிகளுக்கு இப்படி செய்வதில்’ தவறில்லையோ என்று ஆதங்கமாக இருக்கும்.!’ (இருப்பினும் ஒரு தவறுக்கு பதில் தவறு தீர்வாகாது;மார்க்கமும் அனுமதிக்காது*).
முப்பது ரிங்கிட் பில்லை நாற்பது ரிங்கிட்டாக மாற்றி பில்லுக்கு பத்து ரிங்கிட் கமிஷன் அடித்தால் தான் சம்பளகாரன் பிழைப்பு ஒருவழியாய் ஓடியடையும். ஆனால், நான் அவர்களைப் போல் வேலை செய்யும் ஆட்களின் ரத்தத்தை பிழிந்து குடிக்கவில்லை. காலை 8.30 மணிக்கு வேலை தொடக்கம். ஒரு மணி நேரம் சாப்பாட்டுக்கு. மணி 2 to 5.30 வரை வேலை. சனிக்கிழமை பகல் ஒரு மணியோடு வேலை முடிந்தது.
நான் வெளியூருக்கு அனுப்பிய மலாய்கார பையன் வேலைகளை முடித்து கோலாலம்பூர் திரும்பிவர அதிகபட்சம் மாலை மணி 6.30 அல்லது இன்னும் அதிகமானால்கூட மணி 7.30குள் வந்தாக வேண்டும். ஆனால் கடிகாரமோ எட்டு, எட்டரை, எட்டே முக்கால், என்று முள்ளை ‘டிக்-டிக்’ என்று நகர்த்தி தன் கடமையில் கண்ணா இருந்தது. கடிகார முள் ஓட ஓட என் நெஞ்சுக்குள் பீதியும் படபடப்பும் அதிகரித்தது.
துணை யாருமில்லாமல் ஒரே ஒருவன் மட்டுமே போயிருக்கிறான். விபத்து ஏதும் ஏற்பட்டு விட்டதோ? உயிருக்கு ஏதும் ஆபத்தோ?’’ என்ற அச்சம் என்னை அலைக் கழித்தது. என் கவலையறியாத கடிகாரமோ கொஞ்சங்கூட இரக்கமே இல்லாமல் தன் கருமமே கண்ணா இருந்தது. கொந்தளிக்கும் கடலில் சிறு துரும்பென என் மனமோ தத்தளித்து- தடுமாறியது. மணி பத்தரை. கடை வாசலில் ஒரு வேன் வந்து நின்றது. ஆவலோடு உற்றுப் பார்த்தேன். அது என் வேன் அல்ல.
வேன் கதவை திறந்து கொண்டு ’’பாரூக் அண்ணன்!’’ என்று ஒருவர் என்னை கூப்பிட்டுக் கொண்டே இறங்கினார். அது எங்கேயோ நான் கேட்ட பழக்கமான குரல். நான் வெளியே வந்து பார்த்த போது நீண்டகாலம் என் கடை அருகில் மளிகைக்கடை வைத்திருந்தவர் வந்து கொண்டிருந்தார். தற்போது வெகுதூரத்தில் சூப்பர் மார்கெட் வைத்திருக்கிறார். ஊர் வேதாரணியம் அருகில் உள்ள தோப்புத்துறை. நான் சொந்த தொழில் ஆரம்பித்தபோது எனக்கு பலவகையில் உதவியவர். தற்போது நான் வைத்திருக்கும் Vanகூட முன் பணம் கட்டாமலே வாங்கித் தந்து உதவியவர். எங்கோ பிறந்தவர்! எங்கோ வளர்ந்தவர்! பிழைக்கப் போன நாட்டில் அறிமுகமாகி சொந்த சகோதரன் போல் எனக்கு பலதடவை கைகொடுத்து உதவிய மனிதன்!
‘’பாரூக் அண்ணன்! நான் கிள்ளான்# [கிள்ளளான் கோலாம்பூருக்கு கிழக்கே சுமார் 40km தூரமுள்ள துறைமுக நகர்] போய் விட்டு வரும் வழியில் ஒரு வேன்ரோட்டு ஓரத்தில் நிற்பதை பார்த்தேன். கொஞ்ச தூரம் வந்தபின்’ அது உங்கள் வேனாக இருக்கலாமோ? ஏதும் ரிப்பேறோ?’ நீங்கள் தான்தனியே நிற்கிறீர்களோ?’’ என்ற சந்தேகம் வந்தது.
உங்கள் வேன் நின்ற இடத்திலிருந்து நான் வெகுதூரம் வந்து விட்டதால் வேகமாக கார்களும் லாரியும் போகும் அந்த ஹைவேயில் ரிவர்சில் போக முடிவில்லை. வெகுதூரம் போய் U-டேர்ன் எடுத்து அங்கே போனேன். உங்கள் பையன் நின்று கொண்டிருந்தான்”
அவனிடம் “என்ன விஷயம்? ஏன் இந்நேரத்தில் இங்கே நிற்கிறாய்? ஏதும் ரிப்பேரா?’ ’என்றுகேட்டேன். ’’ இல்லை! எண்ணெய் முடிஞ்சு போச்சு!’’ என்றான்.
“வரும் வழியில் தான் நிறைய பங்க் இருக்கிறதே! போட்டால் என்ன? காசு இல்லையா?’’ என்றேன்.
“காசு தந்து இருக்கிறார் போட மறந்து போச்சு’’என்றான்.
காசை வாங்கி எண்ணெய் வாங்கிக் கொடுத்தேன்.
‘’நேரமாகி விட்டதால் கடைக்கு வந்து கணக்கு கொடுத்து விட்டு என் வீட்டுக்கு திரும்ப பஸ் இல்லை. நான் வேனிலேயே வீட்டுக்கு போகிறேன். நாளைக்கு வருகிறேன் எனக்காக கடையில் காத்திருப்பார் சொல்லி விடுங்கள்.” என்றான்.
“அதோடு இந்த பையை உங்களிடம் கொடுக்கும்படி தந்தான். வசூல் செய்த பணம் இதில் இருக்கிறதாம்’’ என்றான்.
இதைக் கேட்ட என் மனம் அமைதியானது.
“உங்களுக்கு ரெம்போ சிரமம் தந்துவிட்டேன். எனக்காக ரொம்ப சிரமம் எடுத்து இருக்கிறீர்கள். இந்த உதவியை நான் மறக்கமுடியாது. ரொம்போ நன்றி!’’ என்றேன்.
“என்ன ஃபாரூக் அண்ணன்! நன்றி கின்றி’ என்றெல்லாம் பெரிய பெரிய வார்த்தைகள் சொல்கிறீர்கள்? மனிதரா பிறந்து விட்டு இன்னொரு மனிதருக்கு இதெல்லாம் செய்யாமல் வேறு எதைத்தான் அங்கே அள்ளிக் கொண்டு போகப் போகிறோம்?’’என்றார்.
’’அஸ்ஸலாமு அலைக்கும் போய் வருகிறேன்’’ என்று போய் விட்டார்.
அன்று காலை பேப்பர் காரருக்கு நான் செய்த உதவியின் பிரதிபலிப்பே இன்று இரவு அந்த தோப்புத்துறை காரரை அல்லாஹ் அனுப்பி உதவி இருக்கிறான்.
புகழ் அனைத்தும் அல்லாவுக்கே.!
இந்நினைவு என் மனம் விட்டு நீங்காத பசுமரத்து ஆணி போல் பதிந்து விட்டது.
S.முஹம்மது ஃபாருக்