திருச்சியின் சுகந்தம் அதன் எல்லையினை உணர்த்தியது.
சென்னையிலிருந்து இரவு கிளம்பிய பேருந்து, காலை சுமார் ஆறேகால் மணிக்கு திருச்சியின் எல்லையினை அடைந்தது.
பேருந்து ஓட்டுனர் இரவு விளக்கினை அணைத்துவிட்டு 'ஆல் இந்தியா ரேடியோ' வினைத் திருப்பிக்கொண்டிருந்தார்.
"ஸலாதுல்லாஹ்.... ஸலாமுல்லாஹ்...
அலா தாஹா ரஸூலுல்லாஹ்...
ஸல்லல்லாஹு அலா முஹம்மது
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்..."
பக்திப்பாடல் வரிசையில் காற்றில் கலந்து கொண்டிருந்தது இந்தப் பாடல்.
சக பயண நண்பரோடு, இரவெல்லாம் இஸ்லாம் பற்றியும், இறைத்தூதரைப்பற்றியும் வாதம், விவாதம் மற்றும் விளக்கங்கள் என நீண்டநேர சம்பாஷனை இரவின் இறுதிப்பகுதி வரை நீண்டது. அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த நண்பரின் தூக்கத்தை மெல்ல கலைத்தது பாடலின் சப்தம்.
"ஆங்... பாருங்க, உங்ககிட்ட கேட்கணும்ன்னு நினைச்ச விஷயங்களில் இதும் ஒன்று.... ஏன் உங்கள் இறைத்தூதருக்கு புகழ் பாடுகிறீர்கள்?, அவரின் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே எல்லா முஸ்லீமும் உருதில் புகழ் பாட்டு பாடுகிறீர்களே?, ஏதோ மந்திரம் சொல்கிறீர்களே?? இந்தப் பாடலின் வரிகள் கூட அவற்றை உறுதிப்படுத்துகிறதே?? தனிமனித புகழ்ச்சி இல்லை என்று சொல்லும் நீங்கள், எப்படி உங்கள் இறைத்தூதருக்கு மட்டும் புகழ்ச்சி கூடும்? அவரும் ஓர் மனிதர்தானே?" என்று கேள்விக் கணைகள் பாயத்தொடங்கின.
புன்னகையுடன் அவரின் கேள்விக்கு பதில் தந்தேன்.
"நிச்சயமாக புகழ் அனைத்தும் நம்மையெல்லாம் படைத்துப் பாதுகாக்கின்ற இறைவன் ஒருவனுக்கே என்பதில் இம்மியளவும் சந்தேகமில்லை. இதில் இருவேறு கருத்துக்கும் இடமில்லை, ஆனால், நீங்கள் எண்ணியவாறு, நபியவர்கள் பெயரைக் கேட்டவுடன் நாங்கள் (முஸ்லீம்கள்) சொல்வது எந்த ஒரு மந்திரமுமில்லை, புகழவுமில்லை. இது ஒரு நன்றிக்கடன் அவ்வளவுதான்"
'................' அவருடைய மௌனம் எனக்கு சம்மதமாய் தெரியவில்லை.
மௌனத்தைக் கலைத்து பேச ஆரம்பித்தேன்.
'நண்பரே!, நான் சொன்ன பதிலில் நீங்கள் திருப்தியானதாக நான் உணரவில்லை. நீங்கள் விரும்பினால், நீங்கள் பகிர்ந்துகொண்ட உங்கள் வாழ்க்கைச் சம்பவங்களிலிருந்தே விளங்க வைக்கிறேன்." என்றவுடன்..
சிறிது தயக்கத்துடன் தனது கைக்கடிகாரத்தினைப் பார்த்துவிட்டு, "...........ம், சொல்லுங்க..." என்றார்.
"இரவு பேசும்போது,நீங்கள் இளம்வயதில் வறுமை காரணமாக மும்பையிலிருந்து குடும்பத்தோடு தென்இந்தியா வந்ததாக சொன்னீர்கள். அப்படி இங்கு வந்தவுடன் யாரும் முன்வந்து பழகவில்லை, பேசவில்லை ஏன் குறைந்தபட்சம் ஒரு புன்னகை கூட இல்லை என்று வருத்தப்பட்டீர்கள்.
நண்பர்களில்லை, உறவினர்களில்லை. அண்டைவீட்டார்கள் கூட ஆறுவாரம் கழித்துத்தான் நாங்கள் வந்திருப்பதையே அறிந்து கொண்டார்கள் என்று ஆதங்கப்பட்டீர்கள்."
"ஆம் அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?" இலேசான கோபம் தெரிந்தது.
"நீங்கள்பட்ட துயரம், வேதனை, வலி ஆகியவற்றை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது.
பாருங்கள், எங்கள் இறைத்தூதர் போதித்திருப்பதை.." என்று பட்டியலிட ஆரம்பித்தேன்
• முன் பின் தெரிந்திராத அறிந்திராத நபருக்கும் முன்வந்து சலாம் (முகமன்) கூறுங்கள்.
• உன் சகோதரனுக்காக புன்முறுவல் செய்தும் தர்மமே.
• உனக்கு சமைக்கும் போது உன் அண்டை வீட்டாருக்கும் சிறிது சேர்த்துக்கொள்.
• அண்டைவீட்டார் பசியோடிருக்கும் போது தான் மட்டும் புசிப்பவன் நம்மைச்சார்ந்தவனல்லன்.
என்று அவர் போதித்த மனிதநேயப் பண்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம். ஒருவேளை இந்த போதனைகளை ஏற்றுக்கொண்ட ஒருநபர் உங்கள் அண்டைவீட்டுக்காரராய் இருந்திருந்தால், நீங்கள் சென்ற விரக்தியின் எல்லை என்னவென்றே அறியாதிருந்திருப்பீர்கள்.
பாசமிகு சகோதரத்துவம் உங்களுக்கு உத்வேகம் கொடுத்திருக்கும். புதியதோர் உறவு உங்களை சொந்தம் கொண்டாடியிருக்கும்.
'எப்படி சார் இப்படி சகமனிதர்களோடு பழகுவதைக்கூட தவிர்ப்பவர்களை மனிதர்களாக ஏற்றுக்கொள்ளமுடியும்?' என்று உங்களைப் போன்றோர்களின் ஆதங்கத்தினை உடைத்தெறியும் நற்பண்புகளை கற்றுக் கொடுத்தவர்தான் எங்கள் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள். உங்கள் பாஷையில் சொல்லப்போனால் எங்களை மனிதர்களாக மாற்றியவர்.
ஈருலக நாயகர் பெருமானார் (ஸல்) அவர்களின் மீது நன்றியின் பெருக்கால் இதயத்தின் ஆழத்திலிருந்து (எங்களை முழுமனிதானக்கிய) நபி (ஸல்) மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டும்" என்று அவருக்காக இறைவனிடத்தில் இறைஞ்சும் பிரார்த்தனைதான் இது.
சொல்லுங்கள், இது தனிமனித புகழ்ச்சியா? மந்திரமா?.......
அசைவற்று கேட்டுக்கொண்டிருந்த அந்த நண்பரின் உதடுகளை அசைத்த வார்த்தை என்ன தெரியுமா??
"ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்"....!!!!
அல்ஹம்துலில்லாஹ்..
-புதுசுரபி
அதிரைநிருபர் எவ்வகையிலும் இசை மற்றும் அதன் சாயல் தொடும் எதனையும் ஆதரிப்பதில்லை, மாற்றுமதச் சகோதரர்களிடம் இசை வடிவிலும் அறிமுகமான இஸ்லாம் பற்றிய தவறான புரிந்துணர்வை தடம் புரளாமல் கட்டுரையாளர் கையாண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சிறப்பையும் அவர்களுக்கு முஸ்லீம்கள் மத்தியில் இருக்கும் அளவிடமுடியாத நன்மதிப்பையும் எடுத்துரைத்து தெளிவுற வைத்த விதம் அற்புதம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நாடினால் இதனை செவியுற்ற மாற்றுமத சகோதரர் கலிமாவை முன்மொழியும் நாட்களும் வெகு தொலைவில் இல்லை இன்ஷா அல்லாஹ் !
-அதிரைநிருபர்-குழு
அதிரைநிருபர் எவ்வகையிலும் இசை மற்றும் அதன் சாயல் தொடும் எதனையும் ஆதரிப்பதில்லை, மாற்றுமதச் சகோதரர்களிடம் இசை வடிவிலும் அறிமுகமான இஸ்லாம் பற்றிய தவறான புரிந்துணர்வை தடம் புரளாமல் கட்டுரையாளர் கையாண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சிறப்பையும் அவர்களுக்கு முஸ்லீம்கள் மத்தியில் இருக்கும் அளவிடமுடியாத நன்மதிப்பையும் எடுத்துரைத்து தெளிவுற வைத்த விதம் அற்புதம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நாடினால் இதனை செவியுற்ற மாற்றுமத சகோதரர் கலிமாவை முன்மொழியும் நாட்களும் வெகு தொலைவில் இல்லை இன்ஷா அல்லாஹ் !
-அதிரைநிருபர்-குழு