Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label EA. Show all posts
Showing posts with label EA. Show all posts

ஜனநாயகத்தை விலைக்கு வாங்கிய பணநாயகம்... 19

அதிரைநிருபர் பதிப்பகம் | April 26, 2016 | , ,

தமிழகத்தைப் பொறுத்த வரை கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி ஒரே நாளில் அனைத்துத் தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நிறைவுற்றது. வாக்குப்பதிவு நடப்பதற்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்பாகவே வழக்கம் போல அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது பரப்புரை மற்றும் வாக்கு சேகரிப்புப் பணிகளை முடுக்கிவிட்டன. தெருவெங்கும் கட்சிக் கொடிகள், தெருமுனைகள் எங்கும் கூட்டங்கள், திரைப்பட நட்சத்திரங்கள் எல்லாம் சாக்ரடீஸ் மற்றும் அரிஸ்டாட்டில் போல பேசிய பேச்சுக்கள், கூடவே ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சி தலைவர்களின் அனல் பறக்கும் பரப்புரைகள். பேசத் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் வானூர்தியில் பறந்து , எழுதிவைத்தாவது படித்த தமிழக ஆளும் கட்சித்தலைவி ஒரு புறம்; மற்றொரு புறமோ தள்ளாத வயதில் தள்ளு நாற்காலியில் அமர்ந்தாவது தனது கட்சிக்காகப் பரப்புரை செய்த தமிழக முக்கிய எதிர்க் கட்சியின் தலைவர். அவருக்குத்துணையாக தமிழகமெங்கும் சுற்றி கவர்ச்சிகரமான – காட்டமான பிரச்சாரம் செய்து மக்களைக் கவர்ந்த திமுக வின் பொருளாளர் ஸ்டாலின், தேர்தலில் போட்டியிடாமல் நாடெங்கும் சென்று பிரச்சாரம் செய்த திரு. ஜி.கே. வாசன் போன்ற முக்கியத் தலைவர்களின் பரப்புரைகள் என்று ஜனநாயகத் திருவிழா பலவாறும் களைகட்டியது. கூடவே சோனியா, அத்வானி, ராகுல் காந்தி போன்ற தேசியத் தலைவர்களும் பங்கேற்ற நிகழ்வுகளும் நிகழ்ந்தன. 

இவர்களுடன் கூடவே கட்சிகளின் பல்வேறுதரப்பட்ட பேச்சாளர்களின் பொதுக் கூட்டங்கள் , தொண்டர்களின் கோஷங்கள், மோட்டார் சைக்கிள்களிலும் வாகனங்களிலும் அணி வகுப்புகள், வீதியெங்கும் வீட்டு சுவர்களில் உடமையாளரின் அனுமதி பெற்றும் பெறாமலும் வரையப்பட்ட கட்சிகளின் சின்னங்கள் என தமிழகமே அல்லோகலப் பட்டது. 

வெற்றி வாய்ப்புக்களுக்கான கருத்தாக்கங்கள் என்ன? கருத்துக் கணிப்புகள் என்ன? தொலைக் கட்சி விவாதங்கள் என்ன? முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் நிகழ்ந்த வம்புகள், வசவுகள் என்ன? பஜார் முதல் படித்துறை வரை பகிர்ந்து கொண்ட அரசியல் கருத்துக்கள் யாவை? ஆரூடங்கள் யாவை? அடிதடிகள் எத்தனை? 

தமிழகமே சுறுசுறுப்பாக ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வரும் ஜனநாயகத் திருவிழாவின் காவடி எடுக்கும் அனைத்துக் கட்சிகளுமே தங்களின் ஜனநாயகக் கடமையைச் செய்தன. இத்தகைய பல்வேறு தரப்பட்ட பரப்புரைகளின் தன்மைகளையும் பரிமாறப்பட்ட கருத்துக்களையும் எடுத்து வைக்கப்பட்ட விவாதங்களையும் உண்மைகளையும் மக்கள் அலசி ஆய்ந்து தங்கள் மனதில் ஒரு முடிவெடுத்து வாக்களிக்கும் தினத்தில் தாங்கள் முடிவு செய்த கட்சிக்கு வாக்களித்து ஆதரிப்பதே நடந்த அத்தனை ஆர்ப்பாட்டங்களுக்கும் பணிகளுக்கும் ஒரு முடிவாக இருந்து இருக்க முடியும். ஆனால் இந்த அனைத்து வகை ஜனநாயக் செயல் பாடுகளையுமே செல்லாக்காசாக்கி, இறுதி இரண்டு நாட்களில் இடுப்பை ஒடித்துப் போட்டது ஆளும் கட்சியினரால் அனைத்துத் தொகுதிகளிலும் வழங்கப் பட்ட காசு, பணம், மண்ணி! மண்ணி!. சட்ட ரீதியாக ஆளும் கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெளிப்படையாக இதை மறுக்க முற்படலாம். ஆனால் அவரவர் மனசாட்சியின்படி மறுக்கவோ மறைக்கவோ இயலாது. இது ஒன்றும் சிதம்பர ரகசியம் அல்ல; ஊர் அறிந்த ரகசியம். 

இவ்விதம் பணம் கொடுத்து வாக்குகளை திசை மாற்றுவது சரியான ஜனநாயக நடவடிக்கையா? மக்கள் சேவையே எங்களின் இலட்சியம் என்று மேடையில் வாய் கிழிய முழங்கி விட்டு திரைமறைவில் பணத்தை முதலீடாக்கி வெற்றி பெற நினைப்பது அரசியல் நாகரீகமா? அரசியல் நன்னடத்தையா? இதுதான் ஒரு பெரிய அரசியல் கட்சியின் அரசியல் பண்பாடா? அண்ணாவின் பெயரில் கட்சியை நடத்திக் கொண்டு எம்ஜியார் பெயரை என்றும் முழங்கிக் கொண்டு வலம் வரும் கட்சிக்கு இது மரியாதை தருமா? அப்படி என்றால் ஒன்றரை மாதங்கள் நடந்த ஜனநாயகப் பணிகளுக்கு அர்த்தம்தான் என்ன? பணக்கட்டுகள் இருந்தால் ஓட்டுக்களை வாங்கி வெற்றி பெற்று விடலாம் என்றால் தேர்தல் ஏன்? கோஷம் ஏன்? கொள்கைகள் ஏன்? தேர்தல் அறிக்கைகள் ஏன்? மக்களுடைய அரசியல் அறிவு அப்படி மழுங்கிவிட்டது என்று எடை போடுவது நியாயமா? இருநூறு ரூபாய் காசுக்காக இந்த மக்களை விலைக்கு வாங்கிவிட முடியும் என்று ஆளும் பொறுப்பில் இருந்த கட்சி நினைத்தது – அதற்காக பெரும் தொகையை ஒதுக்கி அதை விநியோகித்தது இந்திய அரசியல் வரலாற்றில் கழுவ முடியாத களங்கம். 

இந்த பணப்பட்டுவாடா மக்களின் மனதில் உண்மையில் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்கள் ஏற்கனவே செய்து வைத்திருந்த முடிவுகளின் பிரகாரம் வாக்களிக்கவிடாமல், வாக்குகளை திசை திருப்பியதா? இப்படிப்பட்ட அசாதாரணமான அரசியல் சூழ்நிலை ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு வழிவகுக்குமா? இப்படிப்பட்ட இழிவான செயலுக்கு பரிகாரங்கள் என்ன? இவற்றை மக்கள் ஏற்றுக் கொண்டார்களா? ஏற்றுக் கொள்வார்களா? ஆகிய கேள்விகளை இங்கு விவாதிக்கலாம். 

இந்த முறை நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் இதுவரை இல்லாத முறையாக தேர்தல் பிரச்சாரம் முடிவு பெற்ற நாளின் மாலை முதல் தேர்தல் ஆணையம், தமிழகமெங்கும் 144 தடை உத்தரவை – அமுல் படுத்தியது. தேர்தல் பரப்புரைகள் நடைபெற்ற காலங்களில் சட்டம் ஒழுங்குக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை என்றும் அமைதியாக அனைத்தும் நடந்தன என்றும் தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்த தேத்தல் ஆணையமும் அரசும் 144 தடை உத்தரவை அமுல் படுத்த வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்று நடுநிலையாளர்கள் முதல் ஆளும் கட்சியல்லாத அனைத்து எதிர்க் கட்சிகளுக்கும் ஆரம்பத்தில் புரியவில்லை. ஆனால் நடு இரவுகளில், வீடுகளைத் தேடி சில்லரையாக இரண்டு நூறு ரூபாய் நோட்டுகள் முதல் ஐநூறு ரூபாய்வரை அனைத்து பெரிய சிறிய ஊர்களுக்கும் கிராமங்களுக்கும் தாழ்த்தப் பட்ட பிற்படுத்தப் பட்ட மக்கள் வாழ்ந்துவரும் சேரிகளுக்கும் ரொக்கங்களாக வந்த பிறகுதான் இந்தத்தடையின் உண்மை நோக்கம் பற்றி ஒரு சந்தேகம் மக்கள் மனதில் தோன்றியது; ஓரளவுக்குப் புரிய ஆரம்பித்தது. இவ்விதம் வழங்கப் பட்ட தொகையின் மொத்த மதிப்பு சுமார் பதினைந்தாயிரம் கோடி ரூபாய் ஆக இருக்கலாமென்று பொருளியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகிறார்கள்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்த பிறகு வணிகர்களும் சாதாரண பொதுமக்களும் பணப்பரிவர்த்தனை விஷயத்தில் பட்ட பாடுகள் கொஞ்சநஞ்சமல்ல . ஒரு திருமணக் குடும்பம் , நகைகள் வாங்கக் கொண்டு சென்ற ரொக்கங்களைக் கூட பறிமுதல் செய்து தங்களது பலத்தைக் காட்டியது தேர்தல் ஆணையம். இன்றைய விலைவாசி உயர்வில் , ஒரு சாதாரண நடுத்தர வியாபாரி டாடா ஆஸ் அளவுள்ள வாகனத்தில் சரக்கு வாங்க நினைத்தால் கூட அந்த சரக்கின் மதிப்பு ஐம்பதினாயிரத்துக்கு மேலேதான் இருக்கும் . ஆனால் இத்தகைய சிறிய வணிக நடமாட்டங்களின் கூட பணப்பரிமாற்றத்துக்கு தடை செய்து பறிமுதல் செய்தது தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை. ஆனால் தேர்தலுக்கு இரண்டு தினங்களுக்கு முன்பாக கட்டுக் கட்டாக ஒவ்வொரு குக்கிராமத்துக்கும் பணம் கொண்டுவரப்பட்டு விநியோகிக்கப்பட்டதே அது எவ்வாறு சாத்தியப்பட்டது என்று சொல்ல தேர்தல் ஆணையம்தான் தார்மீகமாக கடமைப்பட்டு இருக்கிறது. 

தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் ஒரு வானளாவிய அதிகாரம் என்று வரையறுக்கபப்ட்டு இருந்தாலும் உண்மையிலேயே கிட்டத்தட்ட ஒரு வண்ணத்துப் பூச்சியின் வாழ்நாள் அதிகாரம்தான் என்று நாம் மனதில் வைக்க வேண்டும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வாக்களிப்பும் வாக்கெண்ணிக்கையும் முடிவடைந்ததும் ஒரு மாநிலத்தில் தேர்தல் ஆணையத்தின் நிர்வாக அதிகாரமும் முடிவுக்கு வந்துவிடும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் இருக்கும் காலம் வரைதான் ஒரு மாநிலத்தின் அனைத்து அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகள் உட்பட தேர்தல் ஆணையத்துக்கு கட்டுப் பட்டவர்கள். தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்ததும் அந்த அதிகாரிகள் அனைவரும் மீண்டும் மாநில ஆட்சியாளர்களுக்கு சலாம் அடித்தே ஆகவேண்டுமேன்பதே துரதிஷ்டவசமான ஆட்சிமுறை அமைப்பு. ஆகவே , தற்காலிகமாக தேர்தல் ஆணையத்துக்கு தலையாட்டும் அதிகாரிகள் கூட மனப்பூர்வமாக மனசாட்சிப் படி நியாயமாக நடக்க மாட்டார்கள். அப்படி நடந்தால், தமிழ்நாட்டில் என்ன தண்ணீர் இல்லாத காடுகளுக்குப் பஞ்சமா? இந்த அச்ச உணர்வு இருக்கும் மாநிலத்தின் நிர்வாக அதிகாரிகள் மற்றும் அவர்களுக்குக் கீழே உள்ளவர்கள் அனைவரும் தங்களின் கடமைகளை நியாயமாக நிறைவேற்றுவார்கள் என்று எதிர்பார்க்க இயலாது. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இதே நிலைதான் என்பதை நாம் அனைவரும் உணர்ந்தே இருக்கிறோம். 

வாக்குப் பதிவு தினத்தன்று வாக்குச் சாவடிக்குள்ளேயும் வெளியேயும் ஆளும் கட்சியின் அல்லரைகளின் அக்கிரமங்களைக் கண்டும் காணாமல் இருப்பதே அதிகாரிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்களுக்கு எழுதப் படாத உத்தரவு. இந்த நிலை இருக்கும்போது வாக்குச்சாவடிக்கு வெளியே வைத்துப் பணம் கொடுப்பதையும், வாக்களித்த பிறகு வாக்களித்த சின்னத்தைக் கேட்டு உருட்டி மிரட்டி பயமுறுத்தி உறுதி செய்துகொள்வதையும் தடுத்து நிறுத்த தேர்தல் ஆணையத்துக்குக் கூட வழியே இல்லை. தேர்தல் ஆணையத்துக்கென்று தனியாக காவல்படை இருந்தால் அல்லது வேறு மாநிலத்தில் இருந்து இராணுவம் அல்லது துணைப்படை வந்தால்தான் இந்தக் குறையை ஓரளவு நீக்க முடியும். அதைவிட்டுவிட்டு, மாநிலக் காவல்துறையை நம்பி தேர்தல் நடத்துவது பாலுக்குப் பூனையைக் காவலுக்கு வைத்தது போலத்தான் அமையும். 

தேர்தல் ஆணையத்திடம் சென்று எதிர்க் கட்சிகள் பணப்பட்டுவாடா தொடர்பான புகார்களை அளிக்கச் சென்றால் தேர்தல் ஆணையம் ஒற்றை வரியில் பதில் சொல்கிறது. தேர்தல் ஆணையம் சொல்லும் அல்லது கேட்கும் கேள்வி ஆதாரம் இருக்கிறதா என்பதுதான். கள்ளத்தனமாக வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப் போவது என்பது திருமண நிகழ்ச்சியோ அல்லது நிச்சயதார்த்தமோ அல்லது பூநீராட்டுவிழாவோ அல்ல என்பதை தேர்தல் ஆணையம் உணராமல் பணம் கொடுத்த புகாருக்கு ஆதாரம் இருக்கிறதா? வீடியோ அல்லது புகைப்பட ஆதாரம் இருக்கிறதா என்று கேட்கிறார்கள். இத்தனை மணிக்கு சுபயோக முகூர்த்தத்தில்தான் ஓட்டுக்குப் பணம் தரும் திருட்டு ஜனநாயக வியாபார்கள் வருவார்களென்று முன் கூட்டியே அய்யரை வைத்து நேரம் குறித்து இருந்தால் மட்டுமே ஆதாரம் தர இயலும். நாட்டில் பரவலாக நடக்கும் அத்துமீறலை அறியாமல் கூட ஒரு ஆணையம் இருக்குமென்றால் அது தேர்தல் ஆணையமே. கைப்புண்ணைப் பார்க்க கண்ணாடி கேட்கும் கேட்கும் ஆணையமும் அதுவாகவே இருக்க முடியும். 

படித்தவர்கள்- விழ்ப்புணர்வு பெற்றவர்கள் கூட உள்ளூர் ஆளும்கட்சியின் பிரமுகர்களுக்கு அஞ்சி புகார் தரவோ பிடித்துக் கொடுக்கவோ முன்வருவதில்லை என்பதுதான் இந்தப் பிரச்னையின் நிதர்சனம். எளிய மக்கள் யாராவது வீட்டுக்கு வந்து பணம் தருவதை மறுக்காமல் , வாங்கிக் கொள்ளவே நினைப்பார்களே தவிர தைரியமாக புகார் தர முன் வருவார்களா? இப்படிப் பட்ட பலவீனங்கள்தான் ஜனநாயகத்தை விலை பேசும் வியாபாரிகளுக்கு அத்துமீறும் துணிச்சலைத் தருகிறது. ஒருவேளை எதிர்க் கட்சிக்காரர்கள் புகார் அளித்துப் பிடித்துக் கொடுக்க முயன்றாலும் எளிய மக்களின் மனநிலை, பணம் தராத எதிர்க் கட்சிகளுக்கு எதிராகத் திரும்பும் சாத்தியமும் உண்டு. காரணம் இவர்களும் தராமல், தருபவர்களையும் தடுக்கிறார்கள் என்கிற ஏழைகளின் இயற்கையான மனோபாவம்தான். சமுதாயத்தில் இந்த நிலையில் இருப்பவர்களின் இந்த மனோநிலை வாக்குகளை எதிர்க் கட்சிகளுக்கு எதிராகத் திருப்பும் சக்தி படைத்தது. 

பொதுவாகப் பார்க்கப் போனால் பணம் கொடுத்தால் மக்களின் மனதை மாற்றிவிட முடியும் என்ற எண்ணம் ஆளும் பொறுப்பில் இருப்பவர்களுக்கு ஏற்படுவது இது முதல் முறையல்ல. இந்த முறை மிகவும் விரிவாக நடைபெற்றது என்பதுதான். இப்படிப்பட்ட தீய செயலுக்கான விதை, திருமங்கலத்தில் விதைக்கப்பட்டு - ஏற்காட்டில் வளர்க்கப் பட்டது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். 

இப்படிப் பணம் கொடுத்த காரணத்தால் மக்கள் மனம் மாறி வாக்களித்துவிடுவார்களா? என்ற கேள்விக்கு விட தேடினால் இதனால் ஏற்படும் விளைவை ஒட்டு மொத்தமாக ஒதுக்கிவிட முடியாது. காரணம் பணப்பட்டுவாடா ஒவ்வொரு பகுதிகளின் செயலாளர்களின் பொறுப்பிலேயே நடத்தப்பட்டு இருக்கிறது. பெரும்பானமையான கட்சிகளின் பகுதிச் செயலாளர்கள் இயல்பில் எவ்வளவு நல்லவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர்கள் மூலம் பணம் கொடுக்கப்பட்டபோது, ஒருவித அச்ச உணர்வு அப்பாவிகளின் மனதில் விதைக்கப்பட்டதை மறுக்க முடியாது. அதே நேரம் இவ்வளவு பணம் கொடுத்த பிறகும் அதன் பலன் கொடுத்தவர்களுக்குப் போய்ச் சேராவிட்டால் தேர்தல் முடிந்த பிறகு, அதன் பாதிப்புகள் அந்தந்தப் பகுதிகளில் அராஜகமாக உருமாற வாய்ப்புண்டு. இதை எளிய மக்கள் வாழும் பகுதியினர் உணர்ந்தே நடந்து கொள்வார்கள் என்று எதிர் பார்க்கலாம். பல இடங்களில் சமுதாயமாக வாழும் மக்களைக் கூட்டி விலை பேசியும் பட்டுவாடா நடந்து இருப்பதால் குறிப்பிட்ட சமுதாயம் வாழும் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் பதிவாகும் வாக்குகளை வைத்து எவ்வளவு வாக்குகள் எங்கிருந்து விழுந்தன என்று கண்டறியும் வசதியும் இருப்பதால் பணம் பெற்றவர்கள் பணத்துக்காக, மனசாட்சிக்கு எதிராக வாக்களிக்கும் வாய்ப்புண்டு. இந்த நிலை அப்பட்டமான ஜனநாயகத்தின் தற்கொலைக்கு சமம். இந்த தற்கொலைக்குத் தூண்டியவர்கள் ஜனநாயகத்தைக் கொலை செய்த குற்றத்துக்கு ஆளாவார்கள்.

அதே நேரம் ஏற்கனவே மக்களின் கோபத்துக்கு ஆளான கட்சிக்கு எதிராக அவர்கள் பணம் தந்தாலும் வாங்கிக் கொண்டு அவர்களுக்கு எதிராகவே வாக்களிக்கவேண்டுமென்று ஏற்கனவே ‘மைன்ட் செட்” செய்தவர்கள் – கட்சியின் தீவிர உறுப்பினர்கள் அல்லது ஆதரவாளர்களை இந்தப் பணம் மாற்றிவிட இயலாது. ஒரு இரு நூறு ரூபாய்க்கு மக்களின் மனதில் இவ்வளவு நாட்களாக இருக்கும் கோபம் மற்றும் ஆத்திரத்தை துடைத்துப் போட்டுவிடும் சக்தி இருக்கிறதா? என்கிற சிந்தனையும், இவ்வளவும் செய்து மக்களை துன்பத்தில் மிதக்கவிட்டு விட்டு கடைசி நேரத்தில் இரு நூறு ரூபாய் கொடுத்தால் எல்லாவற்றையும் மறந்து இவர்களுக்கு வாக்களித்து விடுவோமா என்று மக்கள் மனதில் கோபத்தைத் தூண்டி சொந்தக் காசிலே சூனியம் வைத்துக் கொள்ளும் போக்கும் இந்தப் பணத்துக்கு உண்டு. இப்படி பணம் கொடுத்தவர்களுக்கு வாக்களிக்கலாம் என்று நினைத்து இருந்தவர்களும் மாறி வாக்களித்திருக்கவும் வாய்ப்புண்டு. அத்துடன் ஒரே தெருவில் வேண்டியவர்களுக்குக் கூடுதலாகவும் வேண்டாதவர்களுக்கு சில இடங்களில் குறைவாகவும் கொடுத்த நிகழ்வுகளும் நிகழ்ந்திருப்பதால் அவனுக்கு நான் என்ன மட்டமா என்கிற மனோபாவத்திலும் வாக்குகளை மாற்றிப் போட வாய்ப்புண்டு என்பதையும் மறுக்க இயலாது. 

நல்லதோ கெட்டதோ கை நீட்டிக் காசு வாங்கிவிட்டோம் ஆகவே போட்டுத்தான் ஆகவேண்டுமென்று நினைத்து வாக்களித்தவர்களும் கணிசமாக இருந்து இருப்பார்கள். பாமர மக்களின் இந்த நாடித்துடிப்பு, இவ்வளவு பெரிய ஜனநாயக நாட்டில் ஜனநாயகத்தை விலைபேசி வாங்க நினைக்கும் பெருச்சாளிகள் அறியாதது அல்ல. ஆளும் வர்க்கத்துக்குத்தான் அதிகார போதை, கண்ணை மறைத்து நீதி நியாயங்களை காண முடியாமல் செய்துவிடும். ஆனால் அடித்தட்டு மக்கள், கடவுள் ! சாமி! பாவம்! பழி! என்கிற தர்மநியாங்களுக்குக் கட்டுப் பட்டவர்களாக இருப்பார்கள் என்பதால் வாக்களித்தபடி வாக்களிக்க வாய்ப்புண்டு. பல நேரங்களில் சாமி படங்களின் மீது சத்தியம் வாங்கிக் கொண்டும் பணம் தரப்படுவதுண்டு. 

இவ்வளவு விரிவான முறையில் பணபட்டுவாடா ஒரு பெரிய நெட் ஒர்க் ஆக நடைபெற்றது இதுவே முதல் முறை. இதன் வெற்றி தோல்வி இனி வரும் தேர்தல்களிலும் பயன்படுத்தப் படும் . ஜன நாயகம் என்கிற உயர்ந்த தத்துவம் என்கிற பூமாலை அதிகார போதை கொண்ட குரங்குகளின் கைகளில் சிக்கிச் சீரழிவதை நடுநிலையாளர்களால் பார்த்து ஆதங்கப்பட மட்டுமே முடியும். 

இப்படிப் பட்ட ஜனநாயகக் கொடுமையை நீக்க ஏதாவது வழி இருக்கிறதா என்று சிந்தித்தால் சில எண்ணங்கள் அல்லது ஆசைகள் நமது மனங்களில் அரும்பு விடலாம். 

முதலாவது தேர்தல் ஆணையம் என்கிற வண்ணாத்தி பூச்சியின் வாழ்வு காலம் ஒரு தேர்தல் முதல் அடுத்த தேர்தல் வரை என்கிற சட்ட திருத்தம் வேண்டும். 

முக்கியமாக சட்ட ஒழுங்குப் பாதுகாப்புக்கு தேர்தல் ஆணையம் மாநில காவல்துறையை நம்பி இருக்கும் நிலை மாற்றப் பட வேண்டும் .

அதே ரீதியில், தேர்தல் விதிகளின் நடைமுறைக் காலத்தில் மாநில அரசுக்கு உட்பட்ட நிர்வாகிகளைப் பயன்படுத்தும் முறைகள் மாற்றப்பட வேண்டும். உதாரணமாக, வாக்குச் சாவடிகளில் பணியாற்றுவோர் அதே மாநில அரசின் ஊழியர்களாக இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம். வெளி மாநிலங்களில் இருந்து ஊழியர்களைக் கொண்டுவரலாம். 

தேர்தல் என்றால் எப்படியாவது அந்தத் தேர்தலை நடத்தி முடித்துவிட்டால் போதும் என்கிற மனோநிலையில்தான் தேர்தல் ஆணையம் இருக்கிறது. காரணம் ஒரே தலைமை தேர்தல் ஆணையர் எல்லாவகையானப பணிகளையும் கவனிக்க இயலவில்லை. மத்தியில் இருப்பது போல் மாநிலங்களிலும் இரண்டு மூன்று தலைமை தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப் படலாம். ஒரே தலைமை தேர்தல் ஆணையரால் தனது சொந்த விருப்பங்களை மீறி கடுமையான நடவடிக்கைகளை எடுக்க முடியவில்லை -எடுக்கவில்லை என்பதே கடந்தகாலம் கற்றுத்தந்த வருத்தமான குறைபாடு. ஒரு சார்பாக தேர்தல் ஆணையம் நடக்கிறது என்கிற குறைபாட்டை இதன் மூலம் களைந்து தேர்தல் ஆணையம் தனது பத்தினித் தனத்தை நிருபிக்க முடியும். 

தேர்தல் பரப்புரைக்கான காலத்தை ஒன்றரை மாதங்களுக்கு முன்பே தொடங்குவதை தடை செய்து வாக்குப் பதிவு நடைபெற ஒரு வார காலம் முன்புதான் அரசியல் கட்சிகள் பரப்புரையைத் தொடங்க வேண்டுமென்ற விதியை அமுல் படுத்த வேண்டுமென்றும் இதனால் அரசியல் கட்சிகள் செய்யும் செலவையும் அத்துமீறல்களின் அளவையும் கட்டுப்படுத்த உதவுமென்று சில சமூக நலவிரும்பிகள் ஆலோசனை தருகிறார்கள். 

மேலும், இன்னொரு ஆலோசனையும் சமூக அரசியல்வாதிகளால் எடுத்து வைக்கப்படுகிறது. பரப்புரை செலவுகளை அரசே ஏற்று ஒரே மாதிரியாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்காகவும் செலவு செய்ய வேண்டுமென்றும் இதனால் கூடுதல் குறைவான சமத்துவமற்ற பிரச்சார செலவுகள் குறையுமென்றும் ஒரு கருத்து வைக்கப்படுகிறது. தேர்தல்களில் பணம் பெருமளவு விளையாடுவதையும் – கறுப்புப் பணம் பெருமளவு அங்கம் வகிப்பதையும் இந்த முறை கட்டுப் படுத்துமென்று அந்தக் கருத்து வலியுறுத்துகிறது. 

தேர்தலில் பணம் கொடுப்பவர்கள் கையும் களவுமாக பிடிக்கப்பட்டால் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு சட்டபூர்வமான சகல பாதுகாப்பும் வழங்குவதற்கும் பணம் கொடுத்த அல்லது பணம் கொடுக்க முயற்சித்த வேட்பாளரை போட்டியிலிருந்து உடனடி தகுதி நீக்கம் செய்யப்படுமென்றும் தேர்தல் ஆணையம் தனது விதிமுறைகளை வகுத்துக் கொள்ளவேண்டும் . இப்படி ஒன்றிரண்டு வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யபட்டால் அதன் மூலம் மற்றவர்களுக்கு அச்சமுண்டாக வாய்ப்புண்டு. அதை விட்டுவிட்டு தேர்தல் ஒழுங்காக நடைபெற்றது என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு விடுகிறது. ஆனால் இன்னொரு புறமோ தேர்தல் நடந்த ஒரே நாளில் 248 முறைகேடுகள் நடந்ததாக புகார் வந்துள்ளதாகவும் அதே தேர்தல் ஆணையம்தான் சொல்கிறது. மொத்தத்தில் தேர்தல் அமைதியாக நடந்தது ஆனால் இத்தனை புகார்கள் வந்தன என்று சொல்வது உடல் முழுதும் அடி ஆனால் உயிர் போகவில்லை என்று சொல்வது போலத்தான் தெரிகிறது. 

இப்போதுள்ள நடை முறையில் , தேர்தல்களின் ரிடர்நிங்க் ஆபீசர் என்கிற மாவட்ட தேர்தல் அதிகாரியின் தலைமைப் பொறுப்பு , அந்தந்த மாவட்ட ஆட்சித்த் தலைவர்கள் இடம் வழங்கப் பட்டு இருக்கிறது. மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அனைவரும் மாநில அரசுக்குக் கட்டுப்பட்டவர்களே . அதே போல் மாவட்ட காவல்துறைத் தலைவர்களும் மாநில அரசுக்குக் கட்டுப்பட்டவர்கள் மட்டுமல ஆட்சியாளரின் கடைக்கண் பார்வைக்கு காத்து இருப்பவர்களே. தேர்தல் நேரத்தில் தேர்தல் ஆணையத்தின் கட்டுப் பாட்டில் இவர்கள் எல்லாம் பணியாற்றுவது போல் தோன்றினாலும் உள்ளுக்குள் ஆட்சியில் இருக்கும் கட்சியின் ஆணைகளுக்கே உண்மையில் கட்டுப் பட்டவர்கள் ஆவார்கள். ஆளும் பொறுப்பில் உள்ளவர்கள் காலால் இடும் கட்டளைகளை தலையால் செய்யும் தன்மை கொண்டவர்களே. இதை மறுக்கவே இயலாது. தேர்தல் நேரத்தில் ஆளும் கட்சியை எதிர்த்துக் கொண்டு கடமை நேர்மை என்று வசனம் பேசினால் பிறகு அடுத்த இரண்டு வருடங்களுக்கு அவதிகளுக்குள்ளாக நேரிடும் என்பது ஐ ஏ எஸ், ஐ பி எஸ் படித்திருக்கும் அதிகாரிகளுக்குத் தெரியும். ஆகவே , தேர்தல் நேரத் தில்லுமுல்லுகளை உண்மையிலேயே ஒழிக்கவேண்டுமென்று தேர்தல் ஆணையம் நினைத்தால் ரிடர்நிங்க் ஆபீசர் மற்றும் சட்ட ஒழுங்கு போன்ற பொறுப்புக்களுக்கான அதிகாரிகளை இனி வரும் காலங்களில் தேர்தல் ஆணையமே தனது சொந்த அதிகாரிகளாக நியமித்துக் கொள்ள வேண்டும். மாநில அரசின் கட்டுப் பாட்டில் இருக்கும் அதிகாரிகளை இப்பொறுப்புக்களில் ஈடுபடுத்துவது நண்டைச் சுட்டு நரிக்கு வைப்பதற்கு ஒப்பானது. இதற்காக தேர்தல் ஆணையம் தனது மனித வளத்தின் எண்ணிக்கையை உயர்த்திக் கொள்ள வேண்டும். 

ஆக, பெருமளவில் ஒரு பெரிய தேர்தலில் ஜனநாயக செயல்பாடுகளை அர்த்தமற்றதாக ஆக்க ஒரு முயற்சி நடந்து இருக்கிறது. மக்கள் இதை எப்படி அணுகி இருக்கிறார்கள் என்பதை தேர்தல் முடிவுகளே சொல்லும்.

ஆபிரகாம் லிங்கன் ஜனநாயகம் என்றால் என்ன என்பதற்கு உலகப் புகழ் பெற்ற விளக்கம் ஒன்றைச் சொன்னார் என்பது நமக்குத் தெரியும் 

“Democracy is of the people, for the people and by the people “ என்பதே லிங்கனின் வாக்கு. அதாவது ஜனநாயகம் என்பது மக்களுடைய ஆட்சி , மக்களால் , மக்களுக்காக என்பதாகும். ஆனால் இன்றோ அது !

“Democracy off the people far the people and to buy the people “ என்று நாம் மாற்றிப் படித்துக் கொள்ள வேண்டிய நிலைமைகள்தான் உருவாகி ஜனநாயகம் என்கிற ஒரு உயர்ந்த இலட்சியம் உலகத்தின் பெரிய ஜனநாயக நாட்டில் கேலிக் கூத்தாக மாறிக் கொண்டு இருக்கிறது. 

அதிரைநிருபர் பதிப்பகம்

சுதந்திர தினம் - ஆகஸ்ட் 15 - காணொளி உரை…! 0

அதிரைநிருபர் பதிப்பகம் | August 15, 2014 | , , ,


இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் சுதந்திர தினத்தில் ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ளப்பட வேண்டிய வரலாற்றுக்கு சொந்தக்காரர்களான மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு, உண்மைகளை உரக்கச் சொல்லும் இந்த காணொளி உரையை மீள்பதிவாக பகிர்வதில் மகிழ்வடைகிறோம்.


அதிரைநிருபர் பதிப்பகம்
காணொளி பகிர்வு (நன்றி) : ADT

இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் – 33 15

அதிரைநிருபர் பதிப்பகம் | June 21, 2014 | , , , ,


ன் ட்டைனும் ருநாம்

உலகப் பொருளாதாரம்,  இன்றைய நவீன  உலகில் வட்டியை அடிப்படையாகக்கொண்டே இருக்கிறது என்பது நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய உண்மையாகும்.  வட்டி பல அரிதாரங்களைப் பூசி ஆலவட்டம் போட்டு வருகிறது. வட்டிக்கு கடன் வழங்கும் முறை காலப்போக்கில்  பல வடிவங்களைப் பெற்றுள்ளது அவற்றுள் Mortgage, Finance, Leasing, Hire  Purchase , Hypothecation,  போன்றன அவற்றில் சில வடிவங்களாகும். அவற்றுள் ஒரு வடிவமே Credit Card என வழங்கப்படுகின்ற கடன் அட்டை என்கிற நடைமுறையாகும் . 

இப்படி வட்டி போடும் நவரச வேடங்களில் கடன் அட்டை என்கிற வேடம் ஒரு கவர்ச்சிகரமான வேடமாகும் ; இடுப்பில் இரண்டு இன்ச் கச்சையும் மார்பில் மாராப்பும் இல்லாமல் மறைக்க வேண்டியதை மறைக்காமல் குலுக்கு ஆட்டமும் குத்தாட்டமும் ஆடி வல்லவர்களைக் கூட வளைத்துப் போடும் வன்மை நிறைந்த வட்டியின் வனப்பான  அவதாரமே கடன் அட்டை. இன்றைய தனிமனித பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது இந்தக் கவர்ச்சி உடை அணிந்த கடன் அட்டை கலாச்சாரம்தான். 

கடன் பற்றிய கடந்த அத்தியாயத்தில் ஒரு மனிதருக்கு அத்தியாவசியமான தேவை ஏற்படுகிற போது கடன் வாங்குவதில் தப்பில்லை என்கிற கருத்தை குறிப்பிட்டோம். ஆனால் தேவை ஏற்படாமலேயே கடன் வாங்கும் அளவுக்கு மனதை தயார்ப் படுத்துவதே கடன் அட்டையின் தனிப்பட்ட தன்மையாகும். அரை வயிறுக் கஞ்சியாவது குடிக்க வேண்டுமென்று அரிசியை கடன் வாங்கும் நிலைமையில் இருக்கும் ஒருவனிடம் கடன் அட்டை இருந்தால் அவன் ஐ பேடு வாங்கி மச்சினிக்குப் பரிசாக அனுப்பத துணிவான்.    

உலகத்தின் வரலாறுகளைப் பார்த்தால் ஒழுக்கத்தின் அழிவுகள் அனைத்துமே உருவாகும் பகுதி மேற்கத்திய நாடுகளே என்பதில் சற்றும் சந்தேகம் இருக்க இயலாது. நாகரிக வளர்ச்சி என்கிற பெயரில் மேற்கத்திய நாடுகளில் தோன்றத் தொடங்கிய   பழக்கங்களே மெல்ல மெல்ல  உலகெங்கும் பரவி குவலயத்தை ஆண்ட பல நாடுகளை குப்புறத் தள்ளிய வரலாறுகள் பல இருக்கின்றன. அவ்வகையில் மேற்கில் தோன்றிய ஒரு பழக்கமே கடன் அட்டை பயன் படுத்தும் கலாச்சாரமாகும்.  அத்துடன் அமெரிக்க மற்றும் யூத மூளைகள் ஒன்று சேர்ந்து ஈன்ற குழந்தையே இந்த கடன் அட்டை எனும் இந்த  ஈனக் குழந்தை.  

பொருளாதார நடவடிக்கைகளின் தொடக்கம் எது என்று பார்ப்போமானால் அது மனிதர்களுக்கு ஏற்படும் தேவையும் ஆசையும்தான்.  இந்தத் தேவைகளை அத்தியாவசியத் தேவை (Necessities)  என்றும் ஆடம்பரத்தேவை (Luxuries) என்றும்  பொருளாதார இயல் பகுத்து இருக்கிறது. கையில் உள்ள காசுக்குத் தகுந்தபடி தனது செலவினங்களைத் திட்டமிடும் மனிதன் முதலில் தனது அத்தியாவசியத்தேவைகளுக்கே அந்தக் காசை பயன் படுத்துவான். ஆடமபரத் தேவைகளையும் , ஆசைப்படும் தேவைகளையும் கையில் காசில்லாமலேயே நிறைவேற்றிக் கொள்ளும் நிலைமைகளை உருவாக்குவது கடன் அட்டை கலாச்சாரமாகும். 

இந்த கடன் அட்டையின் ஆபத்தை அறிந்தவர்கள் அவற்றைக் கண்டு ஒதுங்கிப் போனாலும் நிதி நிறுவனங்களும் வர்த்தக வங்கிகளும் வீட்டுக் கதவுகளைத் தட்டுவது மட்டுமல்லாமல் நேரில் சந்தைப்படுத்தும் விற்பனைப் பிரதிநிதிகளை நாம் வேலைபார்க்கும் அலுவலகத்துக்கும் அனுப்புவதுடன்  அலை பேசி மற்றும் இணைய தளங்களின் முகவரி  மூலமாகவும் கவர்ச்சியான விளம்பர  உக்திகளைக் கையாண்டு இவர்கள் விரிக்கும் வலையில் பல மான்களும் மீன்களும்  வீழ்ந்துவிடுகின்றன.  கடன் அட்டைகளை வைத்திருப்பதை ஒரு பெருமையாகக் கருதும் மனப்பான்மையிலும்  பலர் இந்த வலையில் வீழ்ந்துவிடுகின்றனர். 

உலகிலேயே  மிகவும் கொடியது என்ன வென்று கேட்டால் நல்லது போலத்தோன்றும் கெட்டதுதான். நல்லவர்கள் போலத் தோன்றும் கெட்டவர்களே உலகில் ஆபத்தானவர்கள். வெறும் பனை ஓலைதானே  என்று கை வைக்கப்போனால் அது பச்சைப் பாம்பாகி கண்களைக் கொத்திவிடும்  உதாரணம் இந்தக் கடன் அட்டைக்குக் கச்சிதமாகப்  பொருந்தும். 

உண்மையில் கடன் அட்டை என்பது நுகர்வோரை கடன்காரராக மாற்றும் ஒருவகையான சமூகக் கொடுமையாகும். சம்பாதிப்பதை உறிஞ்சும் அட்டைப் பூச்சியே இந்த கடன் அட்டை. பணம் இல்லாத நிலையில் மனோதத்துவரீதியாக ஒரு தைரியத்தைக் கொடுத்து செலவு செய்யத் தூண்டும் ஒரு இழைதான் இந்த கடன் அட்டை. தங்களின் பர்சுகளில் இருக்கும் கடன் அட்டைகளின் மதிப்பு ஏதோ ஒரு தனிமனிதன் தான் தேடி சேமித்து வைத்திருக்கும் செல்வத்தின் மதிப்பு அல்ல என்பதை உணராமல்  செலவழித்துவிட்டு அதிலிருந்து விடுபட முடியாமல் பல மில்லியன் மக்கள் இன்று உலகெங்கும்  பொருளாதார சிக்கலில் ஆழ்ந்து மூழ்கிவிட்டதாக ஒரு ஆய்வு சொல்கிறது.  ஒரு வகையில் இது ஒரு நாகரிகமான  அடிமை சாசனம். 

கடன் அட்டை கலாச்சாரத்தை ஆதரித்துப் பேசுவோர் கூறும் முதல் வாதம் பெரும் தொகைகளை ரொக்கமாக கைகளில் வைத்திருப்பது ஆபத்தானது. அதற்கு பதிலாக பெருந்தொகை மதிப்புக்கு ஒரு கடன் அட்டையை வைத்திருப்பது பாதுகாப்பானது என்பதாகும்.  ஆனால் உலகெங்கும் கடன் அட்டையின் இரகசிய சங்கேத வார்த்தைகள் திருடப்பட்டு பலரின் பணம் பதைக்கப்பதைக்க களவாடப்படும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றனவே! கூட்டம் கூட்டமாக இப்படிப்பட்ட கொள்ளைக் கும்பல் பிடிபடுகின்றனவே!  போலியாக கார்டுகள் தயாரிக்கப்பட்டு பல இலட்சங்கள் சுருட்டப்படுகின்றனவே ! ஆகவே திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.   

பணத்தைப் பாதுகாப்பதற்காக கடன் அட்டையைப் பயன்படுத்துவோர் காசோலைகளைப் (Cheques) பயன்படுத்தலாம் அல்லது (Traveller’s Cheques)  சுற்றுலா காசோலைகளைக்  கூட பயன்படுத்தலாம். மேலும் கிரெடிட் கார்டு என்கிற ஷைத்தானுக்கு ஒரு குணமுள்ள  சக்களத்தி உண்டு. அதன் பெயர் டெபிட் கார்டு (Debit Card). இந்த டெபிட் கார்ட் என்பது நமது கணக்கில் எவ்வளவு பணம் இருப்பு இருக்கிறதோ அந்த அளவுக்கு மட்டும் நம்மால் நுகர் பொருட்களையோ அல்லது சேவைகளையோ வாங்கிக் கொள்ள உதவும். பணத்தை ரொக்கமாக தூக்கி சுமக்க அஞ்சுவோர் இந்த டெபிட் கார்டுகளை பயன்படுத்தலாம். இப்படி டெபிட் கார்டுகளைப் பயன்படுத்திக் கொள்வதில் எவ்வித குற்றமோ தடையோ நாம் காண இயலாது. வெளியூர்களுக்குச் செல்பவர்கள் தங்களுடைய வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தி அதை தங்களது டெபிட் கார்டுகளில் வரவு வைத்துக் கொண்டு செல்லமுடியும். பாதுகாப்பாகவும் இருக்கும் ; தேவைக்கும் பயன் படுத்தலாம். 

கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தலாமென்று வாதிடுவோர் வைக்கின்ற இன்னொன்று வாதம் கடன் அட்டைகள் இருந்தால் அவைகளைப் பயன்படுத்துவதன்  மூலம் இணைய தளங்கள்  மூலம் பணம் செலுத்தி நாம் செல்ல முடியாத இடங்களில் இருந்து கூட நுகர் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதாகும்.  உதாரணமாக விமான டிக்கெட்டுகள் முதல் இரயில் மற்றும் பேருந்து  டிக்கெட்டுகள் வரை இவ்விதம் பெற்றுக் கொள்ளப்படுகின்றன. மேலும் இணைய தளங்கள் அல்லது தொலைக் காட்சிகள் மூலமாக  விளம்பரம் செய்யப்படும்  டெலி மார்கெடிங் மூலமாகவும் பொருட்களை வாங்க கடன் அட்டைகள்   பயன்படுத்துவது வசதியாக இருக்கிறது என்றும்  நகராட்சி வரிகள்,  தொலைபேசி,   மின்வாரியப்  பட்டியல் தொகைகளைக் கூட  செலுத்திவிட வசதியாக இருப்பதாகவும் வாதிடுகிறார்கள். ஆனால் மேற்கண்ட அனைத்து வசதிகளையும் நம்மிடம் நமது கணக்கில் இருக்கும் பணத்தின் அளவுக்கு டெபிட் கார்டுகள் மூலமும் நாம் பெற்றுக் கொள்ள இயலும்.இதன்மூலம் கடன் வாங்க வேண்டிய நிலைமையும் தவிர்க்கப்படும் ;  வட்டி எனும் வஞ்சகனின் ஆட்சியும் இம்முறையில் இல்லை. 

இஸ்லாமியப் பொருளாதாரத்தின் பார்வையில் கடன் அட்டைகளை நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டிய காரணங்கள் யாவை?  

பொதுவாக வட்டியுடன் தொடர்புடைய எவ்வித கொடுக்கல்வாங்களாக இருந்தாலும் அது இஸ்லாமியப் பொருளாதாரப் பார்வையில் அது தடுக்கப்பட வேண்டும்; தவிர்க்கப்பட வேண்டும் என்பதே கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதை தடுத்துக் கொள்ள வேண்டுமென்பதன் அடிப்படைக் காரணம். 

கடன் அட்டைகளை தேவைகளுக்காகப்  பயன்படுத்திக் கொண்டு பின் அவ்விதம் பயன்படுத்திய தொகைக்கான வட்டி கணக்கிடப்படும் தேதிக்கு  முன்பே  பணத்தை கடன் அட்டைகளை வழங்கும் நிறுவனத்திடம் செலுத்திவிட்டால் வட்டி இல்லாமல் தவிர்த்துக் கொள்ளலாமே! என்று சிலர் வாதிடுகிறார்கள். இந்த வாதம் இரு விதங்களில் தவறு என்று இஸ்லாமியப் பொருளாதார அறிஞர்கள் கூறுகிறார்கள். 

ஒன்று,  கிரெடிட் கார்டுகளை பெற்றுக் கொள்ளும் முன்பு அவற்றை வழங்கும் நிறுவனத்துடன் நாம் ஒரு ஒப்பந்தத்தை செய்து கொள்கிறோம். அந்த ஒப்பந்தத்தின் ஷரத்துக்களின்படி தாமதமாகும் நாட்களுக்கு குறிப்பிட்ட  சதவீதத்தில்  வட்டி செலுத்த நாம் ஒப்புக் கொண்டு கை எழுத்திட வேண்டும். இத்தகைய கையெழுத்திடும் ஒப்பந்தம் இஸ்லாமிய பொருளாதார விதிகளின்படி ஹராமானது/ விலக்கப்பட வேண்டியது. 

இரண்டாவதாக, நாம் கடன் அட்டைகளைப் பயன்படுத்தி வாங்கும் பொருள்கள் மற்றும் சேவைகளுக்குரிய பணத்தை வட்டி கணக்கிடபப்டும் தேதிக்கு முன்பே செலுத்திவிடுவோம் என்பதற்கு எவ்வித உத்திரவாதமும் கிடையாது. சில நேரங்களில் நமது பணக் கையிருப்பு எதிர்பாராதகாரனங்க்களால்  குறைவாக இருந்துவிட்டாலோ  அல்லது நமது கவனக் குறைவாலோ குறிப்பிட்ட தேதிக்குள் பணம் செலுத்தாவிட்டால் வட்டியின் வலையில் விழும் வாய்ப்புக்கள் அதிகம். ஒருமுறை வட்டி,  நமது வாழ்வில் அரங்கேற்றம் ஆகிவிட்டால் பலமுறை அது பாலச்சந்தர்  படம் போல நமது கதவுகளைத் தட்டும்.   ஆகவே நெருப்போடு  விளையாடுவதை தவிர்த்துக் கொள்வதே நல்லது. 

வட்டியைப் பற்றி இறைவன் தனது திருமறையிலும் பெருமானார் ( ஸல்) அவர்கள் தனது நபி மொழிகளிலும் தந்திருக்கும் எச்சரிக்கைகளை ஏற்கனவே தனி அத்தியாயத்தில் கண்டு இருக்கிறோம் . மீண்டும் கீழ்க்கண்டவற்றை நினவு படுத்திக் கொள்வோம். வட்டியோடு தொடர்புடைய கடன் அட்டையை வாங்குவதையும் பயன்படுத்துவதையும் தவிர்த்துக் கொள்வோம். 

“யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய்) எழ மாட்டார்கள்; இதற்குக் காரணம் அவர்கள், ‘நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே’ என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான் ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது – என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்” (அல்குர்ஆன் 2:275)

“வட்டி வாங்கிப் புசிப்பவன், அதனைப் புசிக்க வைப்பவன், அதற்காக (கணக்கு) எழுதுபவன், அதற்கு சாட்சியம் கூறும் இருவர் ஆகியோரைப் பெருமானார் (ஸல்) அவர்கள் சபித்துவிட்டு, அத்தனை பேரும் (குற்றத்தில்) சமமானவர்” என்பதை அறிவிப்பவர்  ஜாபிர் (ரலி), ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்.

இன்ஷா அல்லாஹ் அடுத்த அத்தியாயத்தில் பங்கு சந்தைகள்    பற்றிப் பார்க்கலாம்.
தொடரும்
இபுராஹீம் அன்சாரி

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு - காணொளி உரை…! 4

அதிரைநிருபர் பதிப்பகம் | June 13, 2014 | , , ,

அன்பிற்கினியவர்களுக்கு !

அதிரையில் ஸ்திரமான தாஃவாக் களம் அமைத்து மிகச் சிறப்புடன் செயல்பட்டு வரும் அதிரை தாருத் தவ்ஹீத் கடந்த மே-2014 பள்ளி விடுமுறையில் இருந்த மாணவ மணிகளுக்கென்று நடத்திய 'கோடகால பயிற்சி முகாம்' அனைவருக்கும் நினைவில் இருக்கலாம்.

அதிரைநிருபரில் அனைவரின் பேராதரவைப் பெற்று தொடராக பதிக்கப்பட்ட "மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள்" தொடர் வெளிவந்து கொண்டிருக்கும்போதே, அதிரை தாருத் தவ்ஹீத் சகோதரர்கள் வேண்டிக் கொண்டதன் படி கடந்த மே மாதம் 3ம் தேதி ஆரம்பித்த பயிற்சி முகாமில் ஒரு பகுதியாக எங்களது மூத்த பங்களிப்பாளர் சகோதரர் இப்ராஹீம் அன்சாரி அவர்கள் மே மாதம் 10 தேதி அன்று மாணவ மணிகளுக்கு (கூட்டாக) ‘சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம் வீரர்களின் தியாக வரலாறு’ என்ற தலைப்பில் சிறப்பானதொரு உரை நிகழ்த்தினார்கள்.

அதில் பங்கெடுத்த மாணவமணிகள் அனைவரின் ஆர்வமும், அவர்கள் அந்த உரையில் மோற்கோளிட்ட நிகழ்வுகளை குறிப்பெடுப்பதில் காட்டிய துடிப்பும் மகிழ்வை அளித்தது. 

அதிரை இளைய சமுதாயம் விழி கொண்டும் மொழி கொண்டும் தீர்க்கமான, தூய்மையான இறைகோட்பாட்டிற்குட்பட்டு நபிவழியில் வெற்றியடைய மனதார வாழ்துகிறோம்... இன்ஷா அல்லாஹ் !


அதிரைநிருபர் பதிப்பகம்
காணொளி பகிர்வு (நன்றி) : ADT


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு