தொடர்கிறது… 2
உறைந்த கடப்பாசியை கீரி விட்டது போன்ற சுர்ரென்ற உணர்வு, அங்கே கண்ட காட்சி மரத்தில் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர். எந்த விதமான உடல் மறைக்கும் ஆடைகளின்றி குப்புற படுத்துக்கிடந்தார்.
மேலும் நம்மை நோக்கி டேய் “வாங்கடா உங்களுக்கெல்லாம் பைத்தியம் பிடித்துள்ளது அதற்கு மருந்து என்னிடம் உள்ளது வாங்கடா” என்று மீண்டும் அழைத்தார்.
அவரின் நிலையை கண்டு மனம் கனத்தது. மேலும் நடந்து போகும்போது ஒரு இளம் பெண்ணின் குரல் ஓங்கி ஒலித்தது “எவிடாடா வந்து”என்று மலையாளத்தில் விளித்ததும், இந்த அர்த்த ராத்திரியில் ஒரு இளம் பெண்ணின் மலையாளக் குரல் கேட்டதும் அடிமனம் ஆட்டம் கண்டது.
‘நெருக்கமான நண்பர்களுக்குள்’ இன்னும் ‘நெருக்கம்’ ஏற்பட்டது பயத்தால் சத்தம் போட்ட மலையாள ஸ்திரியிடம் கண்டது ‘நடையா’ அல்லது ‘ஓட்டமா’ என்று பட்டிமன்றமே வைக்கலாம் அந்த அளவிற்கு இருந்தது அந்த நடை ஓட்டம். தர்காவை சுற்றி வலம் வந்து கொண்டிருந்த அந்த இளம் பெண் இடையிடையே தர்கா சுவற்றில் ஓங்கி ‘பளீர் பளீர்’ என அடித்துக்கொண்டு சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தார்.
நாங்கள் அருகாமையில் பள்ளிவாசலுக்கு வந்ததும் ஒளு செய்து விட்டு இரண்டு ரக்காத் தொழுதுவிட்டு “யாஅல்லாஹ்! இந்த மக்களுக்கு நல்வழி காட்டுவாயக!” என்று எங்களின் பிரார்த்தனையை அல்லாஹ்விடம் மன்றாடிவிட்டு கனத்த மனதுடன் பள்ளிவாசலிருந்து வெளியேறி அந்த தர்காவை மெல்ல பயத்துடன் கடந்து, எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.
அதிகாலையே ! குற்றாலம் சென்றடைந்தோம், அங்கு சென்றடைந்ததும் தான் தெரிந்தது தொலைக்காட்சி செய்திகளில் அருவிகளில் நீர் கொட்டுகின்றது என்று பொய்(ச்செய்தியாக) சொன்னது புரிந்தது. அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் வெளியில் காட்ட வெட்கப்பட்டுக்கொண்டு அங்கே ‘குளித்தவர்கள்’ போல் தங்களை பாவ்லா(!!?) செய்து கொண்டு கால்வெட்டிய கால் சட்டையுடன் (!!!) திரிந்தனர்.
இங்கே ஒரு விசயத்தை குறிப்பிட வேண்டும் ‘சுற்றுலா பயணிகள் அரைக்கால் டிராயரையும் “T ஷர்ட்டும்” போட்டதும்’ மனதில் ‘ஜேம்ஸ் பாண்ட்’ என்ற எண்ணம் வந்து பல ‘ஜீரோ’த்தனமான வேலைகளை ஆரம்பித்து விடுகின்றனர். நடுரோட்டில் வாகனங்களுக்கு வழி விடாமல் நாங்கள் ஆடு-மாடுகளுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை அவ்வப்போது நிருபித்த வண்ணம் ரோட்டில் குடி-நடை போட்டனர்.
இதையெல்லாம் விட கொடுமை குடி(மக்களின்) நாற்றம் இவைகள் அனைத்தையும் சகித்துக் கொண்டுதான் குற்றாலம் சென்றடையனும். நாம் வழக்கம் போல் இட்லி கடையை தேடிப்போய் காலை பசியாறிவிட்டு, இனி இங்கே குளிக்க வழியில்லை என்றதும் ‘அப்பர் கோதையர்’ போகலாம் என்று முடிவு செய்து இன்னோவா அப்பர் கோதையர் நோக்கி பயணமானது. இந்த அப்பர் கோதையார் செல்ல குற்றாலத்திலிருந்து பாபநாசம் வழியாக அம்பாசமுத்திரம் போய்தான் அங்கு செல்ல வேண்டும்.
குற்றாலத்தில் இருந்து அம்பாசமுத்திரம் சுமார் 55 கிலோ மீட்டர் இருக்கும் அங்கிருந்து ‘மணி முத்தாறு அருவி’ சுமார் 10 கிலோ மீட்டர் இருக்கும். அங்கிருந்து அப்பர் கோதையார் கிட்டத்தட்ட 15 கிலோ மீட்டார் தூரம். 'மணி முத்தாறு அருவி' வரைதான் ஃபாரெஸ்ட் அனுமதி கொடுப்பார்கள். நாம் “ஃபாரெஸ்ட் செக்-போஸ்ட்டில் அப்பர் கோதையார் போக வேண்டும்” என்றதும் அங்கு போக அனுமதி இல்லை என்றனர். நாமோ நம்மூர் கல்லூரி பேராசியரின் பெயரை சொன்னதும். “ஓ! (ஏற்கனவே இவருக்கும் அவருக்கும் நல்ல பழக்கம் உண்டு) அவர் உங்களுக்கு தெரிந்தவரா?” என்று கேட்ட அலுவலர் உடனே அவருக்கு போன் செய்து பேசிவிட்டு போனை நம்மிடம் கொடுத்தார்.
நாம்முடைய பேராசிரியரிடம் பேசும்போது “நீ எப்போ சவுதியிலேயிருந்து வந்தே?” என்றார்”,
“மூன்று நாள் ஆச்சு சார்” என்றதும்.. போனை ஆபிசரிடம் கொடுக்க சொன்னார்.
இருவரும் பேசி முடித்ததும் ‘அப்பர் கோதையார்’ போக உடனே கடிதம் ரெடி செய்து கொடுத்தனர்.
நமது கார் செக்-போஸ்ட்டை தாண்டி மணிமுத்தாறு அருவி அருகே உள்ள செக்-போஸ்ட் வந்ததும் பர்மிசன் கடிதத்தை காட்டி விட்டு அனுமதி கிடைத்ததும், ‘அப்பர் மலை’ ஏற்றத்தில் ஏற தொடங்கிய அரைமணி நேரத்தில் மாஞ்சோலை என்ற எஸ்டேட் வந்தது. இந்த மாஞ்சோலை பிரச்சனையால் திருநெல்வேலியில் பல வருடங்களுக்கு முன்பு பல உயிரிழப்புகள் நிகழ்ந்தது நினைவிருக்கலாம்.
வண்டியை நிறுத்திவிட்டு அங்கு விளைந்த “டீ தூளில்” ருசியாக டீ குடித்ததும் இரவு முழுதும் கார் ஓட்டி கலைத்த உடம்புக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைத்தது. புத்துணர்ச்சி மேலோங்க காரும் செங்குத்தான மலை(!!!) ஏறத்தொடங்கியது. புறப்பட்ட சிறிது நேரத்தில் ஆங்காங்கே கருங்குரங்குகள் தென்பட ஆரம்பித்தது. குரங்கை தெளிவாக புகை படம் எடுக்க முடியவில்லை காரணம் மரத்துக்கு மரம் தாவிக்கொண்டே இருந்தது. குரங்கு மட்டும் என்னவாம்
“ஏம்ப எங்களையும் போட்டோ எடுப்பா!!” என்று போஷா கொடுக்கும்.
அப்பர் கோதையாரின் உச்சிக்கு சென்று ‘அப்பர் கோதையாரின்’ இயற்கை காட்சிகளை நண்பர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு அங்கு 1942ல் கட்டிய ‘மரப்பாலம்’ இன்றும் வாகனங்கள் போய் வருகின்றது. அதையும் ஃபோட்டோ எடுத்துக் கொண்டு பகல் சாப்பாடு சாப்பிடாமல் (சாப்பாடு கிடைக்கவில்லை அதுதான் உண்மை) ‘டீ வடை’ சாப்பிட்டதோடு கார் கீழிறங்க தொடங்கியது. வழியில் மஞ்சோலை டீ எஸ்டேட்டில் ஆர்கானிக் ‘டீ’த்தூள் (இயற்கையான உரத்தில் விளையும் ‘தேயிலை’) வாங்கிக் கொண்டு கிழே உள்ள மணி முத்தாறு அருவியில் அலுப்பு தீர குளித்து விட்டு மாலை ஐந்து மணிக்கெல்லாம் குற்றாலம் நோக்கி புறப்பட்டோம்.
புறப்பட்ட சிறிது நேரத்தில் எல்லோருக்கும் பசி (குடலை உருவ ஆரம்பித்து விட்டது ) கார் நேராக செங்கோட்டை ரோட்டில் உள்ள ரஹ்மத் “நாட்டுக்கோழி” கடையை நோக்கி சீறிப்பாய்ந்தது.
பயணம் தொடரும்.. .
Sஹமீது