கடந்த 10 வருடங்களுக்கு மேலாக மருத்துவக் காப்பீடு என்பது அவசியமாக கருதப்பட்டு அனைத்து பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது இதை அமீரகத்தில் கட்டாயமகாவே ஆக்கியிருக்கிறார்கள்.

இது ஒருபக்கம் இருந்தாலும், சாதாரன மிகக் குறைந்த மாதச் சம்பளம் வாங்கும் தொழிலாளிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றால் மிகையில்லை ! ஒருதடவை மருத்துவமணைக்குச் சென்று விட்டால் ஊரில் சாமியாரிடம் மாட்டிய பக்தை கதைதான் இங்கேயும் தொடரும் மருத்துமணை விசிட்டுகள்.
இந்த மருத்துவக் காப்பீட்டு அட்டையினால் பயன் என்ன என்று கேட்பவர்களை விட பயனடைந்த தொழிலாளிகளும் நிறைய உண்டு. ஒவ்வொரு காப்பீட்டு நிறுவனமும் பலவகையான திட்டங்களுடனும் சலுகைகளுடனும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை அளித்து வருகின்றது.
இங்கு குறைந்த பட்சமாக எவ்வகை சிகிச்சைகள் மருத்துவக் காப்பீட்டினால் வழங்க வேண்டும் என்று அரசும் வரையறை செய்தும் அறிவித்து இருக்கிறது. காப்பீட்டு அட்டையை கையில் கொடுத்து விட்டதால் சில நிறுவனங்கள் தங்களது பணியாளர்களைப் பற்றி கவலை கொள்வதும் இல்லை, அதோடு சில மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் அட்டைகளின் தரம் பிரித்து ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட "cap" அதிகபட்ச அனுமதி என்று தொகையை நிர்ணயமும் செய்துவிடுவதால் அதற்குமேல் அந்த தொழிலாளிகளால் மருத்துவ உதவிகள் பெற இயலாது. வேலை செய்யும் நிறுவனமும் இலகுவாக கையை விரித்து விடும் காப்பீடு இல்லை என்றால் எங்களால் ஒன்றும் செய்ய இயலாது என்றும் தொழிலாளர்களின் தேவைகளும் சில இடங்களில் மறுக்கப்படுகிறது.
2013ம் வருடக் கடைசியை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஏராளமான மருத்துவ காப்பீட்டுக்கென நிறுவனங்கள் படையெடுப்பர். ஏற்கனவே மருத்துவ காப்பீடுகள் எடுத்து இருக்கும் நிறுவனங்களை வெளியில் செல்ல விடாமல் தன்னகத்தே வைத்திருக்க போட்டியும் அதற்கான ஆயத்தங்களும் தொடரும்.
சமீபத்திய நடப்புகளிலிருந்து...
2013-2014ம் வருடத்திற்கான புதுப்பிக்கப்பட்ட காப்பீட்டுக்கான தொகையில் 150% விகிதம் அதிகமாக இருந்தது காரணம் நடப்பு வருடத்தில் அதிகமாக மருத்துவக் காப்பீட்டு வசதி பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதே அவர்களின் வாதமாக இருக்கிறது.
ஆச்சர்யமும் அதிர்ச்சியுமாக இருந்தது அவர்கள் சுட்டிய தொகை, பிரிமியம் மொத்த தொகையில் 5 மடங்குக்கு மேல் பயன்படுத்தப்படிருப்பதாக அவர்கள் மொத்தமாக கணக்கு கொண்டு வந்தார்கள்.
சரி, ஒவ்வொரு பயனாளிகளின் பட்டியலைக் கொடு என்றால் அது ரகசியம் தர இயலாது என்று அடம்பிடித்தார்கள், அப்படியென்றால் புதுப்பிக்க மாட்டோம் வேறு காப்பீட்டு நிறுவனத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றதும், இறங்கி வந்து மிக மிக ரகசியம் என்று சொல்லி 570 பக்கங்கள் அடங்கிய ஸ்டேட்மென்டை கொடுத்தனர்.
திர்ஹம் பத்தாயிரத்திற்கு மேல் பயன்படுத்தியவர்கள் எத்தனை பேர் என்று தேடியதில் 13 நபர்களே, அதில் ஒருவர் கடந்த ஃபிப்ரவரி மாதம் 24ம் தேதி மருத்துமவமனையில் இறப்பெய்து விட்டார்.
அந்த பதிமூன்றில் அனுமதிக்கப்பட்ட காப்பீட்டுக்கான அதிகபட்சத் தொகையை எட்டாதவர்கள் 7 நபர்கள் மீதமிருந்த 6 நபர்களில் அதாவது அனுமதிக்கப்பட்ட காப்பீட்டின் அதிகபட்சத் தொகையை எட்டியவர்கள் அதற்கு மேல் பயன்படுத்தியவர்களின் லிஸ்டை கையில் வைத்துக் கொண்டு ஒப்பீடு செய்யும்போது மேலும் அதிர்ச்சிகள்.
மருத்துவமனையில் வழங்கிய ஃபைனல் பில் அதில் மொத்த தொகை, பின்னர் கழிவு (discount) கடைசியில் நிகர தொகை (net amount payable) என்று கொடுத்த பில்லும், காப்பீட்டு நிறுவனம் சமர்பித்த ஸ்டேட்மென்ட்டில் (பட்டியல்) குறிப்பிட்டிருக்கும் தொகைக்கும் வித்தியாசம் இருந்தது.
மருத்துவமனையின் மொத்த தொகை (gross amount) காப்பீட்டு நிறுவனம் செலுத்திய தொகையாக அந்த மொத்த தொகையை (gross amount) கணக்கில் கொண்டு வந்திருக்கிறது இது ஒரு பில்லின் நிலை என்றால் இனி மற்றவைகளைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை !
ஏன் இப்படி என்று கேட்டால், அதற்குத்தான் சொன்னோம் இது ரகசியமாக இருக்கனும்னு சொல்கிறார்கள் !
ஒரே ஒரு பில்லில் மட்டும் 35% க்கு மேல் வித்தியாசம் என்றால் மற்றதை யூகித்துக் கொள்ள வேண்டியதுதான் !?
இப்போ சொல்லுங்க இவர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா ?
மருத்துவமனைகளையும் சேர்த்துதான் இந்தக் கேள்வி !!!
அபூஇப்ராஹீம்