Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label வெற்றி. Show all posts
Showing posts with label வெற்றி. Show all posts

பதினாறாவது பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு பார்வை. 21

அதிரைநிருபர் பதிப்பகம் | May 17, 2014 | , , , , , ,

கடந்த இரண்டு மாதங்களாக நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்த பாராளுமன்றத் தேர்தல் திருவிழாக் காட்சிகள், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதுடன் ஒரு முடிவுக்கு வந்துள்ளன. தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பு பல்வேறு விதமான கருத்துக்கள் வெளியிடப்பட்டன. பல்வேறு ஊடகங்களிலும் பிஜேபி அணியே வெல்லும் என்று கருத்துக் கணிப்புகள் சொல்லி இருந்தாலும் அது பற்றி பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. ஆயினும் பரவலாக எதிர் பார்க்கப்பட்ட அல்லது அரசியல் வல்லுனர்களால் சொல்லப்பட்டது என்னவென்றால் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை அமையாது ; இழுபறியாக இருக்கும்; மாநிலக் கட்சிகள் பெரும் வெற்றி பெற்று புதிய ஆட்சி அமைப்பதில் பெரும் பங்கு வகிக்கும்; பிஜேபி அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும் மற்ற கட்சிகளின் ஆதரவு தேவைப்படும் ; மூன்றாவது அணி அமையும்; என்றெல்லாம் பல்வேறுவகையான கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன; வெளியாயின.


ஆனால் அனைவரின் கணிப்பையும் தோல்வி அடையச் செய்து பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, 330 க்கு மேலும் பிஜேபி மட்டும் தனித்து அறுதிப் பெரும்பான்மை எண்ணாகிய 272 இடங்களையும் தாண்டி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் பத்தாண்டு காலமாக நாட்டை ஆண்ட காங்கிரஸ் அரசு பதவி விலகி பிஜேபி அரசு அமைய இருக்கிறது. முதலாவதாக வெற்றி பெற்ற கட்சிகளுக்கு நமது நல வாழ்த்துக்களையும் நல்ல எண்ணங்களையும் சிறந்த ஆட்சிக்கான எதிர்பார்ப்புக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். 

இந்தத் தேர்தல் முடிவுகள் இவ்விதம் அமைந்ததைப் பற்றி நாம் ஒரு கருத்து சொல்லப் போனால் 2014 தேர்தல் முடிவுகள்! இருபது ஆண்டுகால காங்கிரசின் கையாலாகாத்தனம்! சங் பரிவாரங்களின் நூறாண்டுகால சாதுரியம் ! என்றே சொல்வோம். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே இப்படி ஒரு பலத்துடன் ஆட்சிக் கட்டிலில் ஏறிவிட வேண்டு மென்றும் தனது சித்தாந்தங்களை செயல் படுத்திட வேண்டுமென்றும் ஆர் எஸ் எஸ் மற்றும் அதைச் சார்ந்த அமைப்புகள் செய்த பகீரத பிரயத்தனம் இன்று ஊடகங்களின் ஒட்டு மொத்த உதவியால் - காங்கிரஸ் கட்சியின் மோசமான தேர்தல் நிலைப் பாடுகளால் இன்று பிஜேபியால் வென்று எடுக்கபப்ட்டு இருக்கிறது. 

வெளிப்படையாகப் பார்க்கும் போது பாரதீய ஜனதா கட்சி முன்னிறுத்திய மதவெறிக் கொள்கைகள் வென்றது போலத் தோன்றினாலும், பத்தாண்டுகள் ஆண்டுவிட்ட ஒரு கட்சியை மாற்றிப் பார்க்க மக்களின் மனம் இயல்பாகவே விரும்பி இருப்பதும் ஒரு காரணம் என்பதை தள்ளிவிட முடியாது. ஒரு வகையில் பிஜேபியின் வெற்றிக்கு காங்கிரசின் மோசமான ஆட்சியையும் முழுமையான காரணம் என்பதை நடுநிலையாளர்கள் ஏற்கவே செய்வார்கள். காங்கிரஸ் செய்த தவறுகளின் விளைச்சலையே அரசியல் ரீதியில் பிஜேபி அறுவடை செய்து இருக்கிறது. “ In fact, the election results are the expression of anger of people against Congress and their disastrous policies “ என்றார் இடதுசாரி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி. ராஜா. 

தேர்தல் பரப்புரை காலங்களில் இன்று பிஜேபியால் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட நரேந்திர மோடி மீது பல புகார்கள் கூறப்பட்டன. பல எச்சரிக்கைகள் விடப்பட்டன. ஐயோ! இவரா! வேண்டாம் என்று பலரும் மக்களை நோக்கி வேண்டுகோள்கள் விடுத்தனர். ஆனால் அவை அனைத்தையும் மீறி இன்று நரேந்திர மோடியின் தலைமையில் புதிய அரசு அமைய இருக்கிறது. ஆனால் இப்படி நரேந்திர மோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காரணத்தாலேயே அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அவர் ஆண்ட குஜராத்தில் சிறுபான்மை மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், அடக்குமுறைகள், படுகொலைகள், சொத்துச் சூறையாடல்கள் ஆகிய குற்றச்சாட்டுகள் மறைந்துவிட்டதாகக் கருதிவிட முடியாது. அந்தக் குற்றச்சாட்டுகள் அப்படியேதான் இருக்கின்றன. ஒருவேளை இப்போது நரேந்திர மோடி இப்போது ஏற்க இருக்கும் புதிய பிரதமர் பொறுப்பின் மூலம் அந்தக் கலங்கங்களைக் களையும் விதத்தில் செயலாற்றினால் அவர் மீது நம்பிக்கை ஏற்பட ஒரு வாய்ப்புள்ளது. தரப்பட்டுள்ள பொறுப்பான பதவிக்கு ஏற்ப அவர் நடந்து கொள்ளவேண்டுமென்று விரும்புவோம். 

இந்த தேர்தல் முடிவுகள் சொல்லும் இன்னொரு விஷயம் என்னவென்றால் 1984 தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் ஆட்சியமைத்த கட்சிகள் தனிப்பெரும் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கவில்லை. பல மாநில உதிரிக் கட்சிகளின் ஆதரவிலும் அமைச்சரவையின் உள்ளிருந்தும் வெளியிலில் இருந்தும் ஆதரவு பெற்றே தந்து ஆட்சியை நடத்தி வந்தது. இதன் மூலம் ஆளும் கட்சி , தான் நினைப்பதை செயல்படுத்த இயலாத நிலைகள் பலமுறை ஏற்பட்டன. அதுமட்டுமல்லாமல் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் மிரட்டல்களுக்கும் ஆளாகி, அமைச்சரவையில் அவர்கள் கேட்கும் துறைகளையும் கொடுத்தே தீர வேண்டிய நிலைமைகளும் ஏற்பட்டன. அது மட்டுமல்லாமல் கூட்டணியில் இருந்த கட்சிகள் ஊழல் முதலிய தவறுகளைச் செய்யும் பொது அவர்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்க முடியாமலும் கூட்டணி தர்மங்கள் அரசின் கைகளைக் கட்டிப் போட்டன. 

ஆனால், இந்த முறை பிஜேபிக்கு மக்கள் அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் வலுவைக் கொடுத்து இருக்கிறார்கள். தங்களது கூட்டணியில் இருக்கும் எவரையும் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டுதான் ஆளவேண்டுமென்ற அவசியமில்லாமல் சுதந்திரமான அரசை அமைக்க மக்கள் பிஜேபிக்கு உத்தரவிட்டு இருக்கிறார்கள் என்பது ஒரு ஆரோக்கியமான நிலை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். எந்த நல்ல காரியத்தையும் செய்ய விடாமல் கூட்டணிக் கட்சிகள் முட்டுக் கட்டை போட்டன என்று பிஜேபியும் காரணம் சொல்லி தப்பித்துக் கொள்ள முடியாது. 

இந்த முறையும் ஆட்சியமைக்கப் பற்றாக்குறையான பாராளுமன்ற உறுப்பினர்கள்தான் பிஜெபிக்குக் கிடைக்குமென்றும் , அந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி பலவித பேரங்களை பேசி சொந்த நலனுக்காகவும் தங்கள் மீது இருக்கும் வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்ளவும் வகை ஏற்படுத்திக் கொள்ள தமிழகம் உட்பட்ட பல மாநிலங்களில் இருந்தும் அரசியல் வாதிகள் நினைத்து இருந்தனர். ஆனால் யாரிடமும் மண்டியிட வேண்டிய அவசியம் இல்லாமல் பிஜேபி மெஜாரிட்டி பெற்று இருக்கிறது. இவ்விதம் ஒரு பெரும்பான்மையை பிஜேபி பெறாவிட்டால் செல்வி ஜெயலலிதா போன்றோரின் பேரங்களுக்குப் பணிய வேண்டி இருக்கும்; டாக்டர் அன்புமணியை அமைச்சரவையில் சேர்க்க வேண்டி இருக்கும். இப்போது இந்த நிர்ப்பந்தங்கள்- நெருக்கடிகள் - மிரட்டல்கள் எதுவும் தேவை இல்லை என்பது பிஜேபிக்கு ஒரு பெரிய நிம்மதிப் பெருமூச்சாகும் இல்லாவிட்டால் வாஜ்பாய் காலம் போல அவதிப் பட்டு இருக்க நேரிட்டு இருக்கும். இப்படிப்பட்ட நிலைமைகளிலிருந்து நரேந்திர மோடி காப்பாற்றப்பட்டு இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

தேர்தல் கணிப்புகளைச் செய்த பல்வேறு வகையினர் கர்நாடகாவில் பிஜேபிக்கு பெரும் அளவுக்கு இடங்கள் கிடைக்காது என்று வாதிட்டனர். காரணம் அண்மையில்தான் அங்கு சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆகவே இப்போதும் காங்கிரசே அதிகம் வெல்லும் என்று ஆரூடம் கணிக்கப்பட்டது. ஆனால் அந்த ஆரூடம் பொய்யானது. அங்கு பிஜேபி பதினேழு இடங்களில் வென்றது பிஜேபிக்கு இன்ப அதிர்ச்சியாகும். 

அதே போல் பிஜேபி உடைய பெரும்பான்மை பலத்தை உ. பி மற்றும் பீகாரில் அது பெறப்போகும் இடங்களின் எண்ணிக்கைகளின் அளவு உருவாக்கும் என்ற கணிப்பின்படி இவ்விரு மாநிலங்களிலும் மிகப்பெரும் வெற்றியை பிஜேபி வென்றெடுத்துள்ளது. பீகாரைப் பொறுத்தவரை ஆளும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாக் கட்சிக்கே அதிக இடங்கள் கிடைக்குமென்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டே இடங்களைத்தவிர பாக்கியை பாரதீய ஜனதா அள்ளிச் சென்றது. இந்த இரு மாநிலங்களில் மட்டுமே பிஜேபிக்கு கிட்டத்தட்ட நூறு இடங்கள் கிடைத்துள்ளன. 

அதே போல் உ பி போன்ற பெரிய மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் சமாஜ்வாடியும் தனது இடங்களை பிஜேபியிடம் இழந்தது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. உ பி யில் எண்பது இடங்களில் காங்கிரஸ் பெற்றது இரண்டே இடங்கள் மட்டுமே . அவையும் சோனியாவும் ராகுல் காந்தியும் பெற்ற இடங்கள் மட்டுமே. 

தலை நகர் டில்லியில் அண்மையில் ஒரு பெரும் எழுச்சி நடத்தியதாக அறியப்பட்டு நாற்பத்தி ஐந்து நாட்கள் மாநிலத்தை ஆட்சியையும் செய்த ஆம் ஆத்மிக் கட்சி , நாடெங்கும் 400 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியது. டில்லியில் சட்டமன்றத்தில் வென்ற ஆம் ஆத்மிக் கட்சியால் ஒரு பாராளுமன்ற இடத்தைக் கூட வெல்ல முடியவில்லை. ஒட்டு மொத்த இந்தியாவில் இவர்கள் முன்னணி வகிப்பது நான்கே இடங்கள்தான்.

நாடெங்கும் இப்படி பிஜேபி அலையோ அல்லது மோடி அலையோ வீசி இருந்தாலும் கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பிஜேபி குறிப்பிட்ட வெற்றியை ஈட்ட இயலவில்லை. அங்கெல்லாம் அலைகளின் ஒலி கேட்கவில்லை. அந்த அலை எங்கே போனது என்றும் தெரியவில்லை. 

அதேபோல் இடதுசாரிகளும் தங்களின் வழக்கமான தளம் உள்ள மாநிலங்களில் போதுமான அளவு வெற்றி பெற இயலவில்லை. இதற்குக் காரணம் , இடது சாரிகளைப் பொறுத்தவரை காங்கிரஸ் மற்றும் பிஜேபி ஆகிய இரண்டு பெரிய கட்சிகளையுமே எதிர்த்தார்கள். இரண்டு பெரிய கட்சிகளையும் எதிர்க்கும் அளவுக்கு இடதுசாரிகளுக்கு பலம் இருக்கிறதா என்றால் இல்லை. இதை உணராமல் இரண்டு மலைகளுடன் மோதி தங்களின் வாக்குகளைப் பிரித்து, பிஜேபி வெற்றி பெற உதவினார்கள் என்றே சொல்ல வேண்டும். அத்துடன் இந்த தேர்தலில் மக்கள் எந்த சித்தாந்தங்களையும் விவாதித்து முன்னிலைபடுத்தி வாகளைக்கவில்லை. இதுவும் ஊடகங்கள் ஏற்படுத்திய ஆட்டைக் கழுதையாக்கிய விந்தை. 

தமிழகத்தைப் பொறுத்தவரை முன்பு சட்டமன்றத் தேர்தலில் செய்த அதே தவறை திமுக மீண்டும் செய்து ஒரு இடம் கூட வெற்றி பெற இயலாத நிலைக்குத் தன்னைத்தானே தள்ளிக் கொண்டது. கடைசி நேரத்தில் காங்கிரசை கழற்றி விட்டதற்கான விலையை திமுக கொடுத்து இருக்கிறது என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். அது மட்டுமல்லாமல் மயிலாடுதுறை போன்ற தொகுதிகளில் கூட்டணியில் இருந்தாலும் மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளருக்கு மனப்பூர்வமாக திமுகவினர் வேலை செய்யவில்லை ; வாக்களிக்கவில்லை என்கிற செய்திகளையும் கேட்கிறபோது அவர்களுக்கு இந்த தண்டனை தேவையானதே என்றே கருத வேண்டி இருக்கிறது. 

அதே நேரம் திமுகவின் இந்த தோல்வி, அதன் சூரியனின் அஸ்தமனமல்ல. இது போல பல வெற்றி தோல்விகளை சந்தித்தக் கட்சி; பெரும் தொண்டர் பலம் உள்ள கட்சி; மீண்டும் எழுந்து நின்று உதிக்கும் வல்லமையும் வாய்ப்பும் உள்ள கட்சி. சரியாக நடந்து கொண்டால் வரும் சட்டமன்றத்தில் பிரகாசிக்கும் வாய்ப்புள்ள கட்சிதான் திமுக. 

நன்கு ஆய்ந்து பார்த்தோமானால் அதிமுகவின் வாக்கு வங்கி அப்படியே உதவி இருக்கிறது. அதிமுகவுக்கு எதிரான வாக்குகள் பலவாறு சிதறி அதிமுகவை வரலாறு காணாத மாபெரும் வெற்றியைப் பெற வழிவகுத்து இருக்கிறது. அத்துடன் தேர்தலுக்கு இரு தினங்களுக்கு முன்பு தேர்தல் ஆணையத்தால் போடப்பட்ட 144 தடை உத்தரவும் அதைப் பயன்படுத்தி, பெருமளவில் பணப்பட்டுவாடா நடந்ததையும் வெட்கமின்றி தலைமை தேர்தல் ஆணையரே ஒப்புக் கொண்டார். நாமும் கண்ணால் பார்த்தோம். இந்த வெற்றியின் பின்னால் பணபலம் இருந்ததை மனசாட்சியுள்ளோரால் மறுக்க இயலாது. 

அத்துடன் பிஜேபி தலைமையில் தேமுதிக போன்ற அதிமுக எதிர்ப்புக் கட்சிகள் தமிழருவி மணியன் போன்ற அரசியல் முகவர்கள் மூலம் பேரம் பேசப்பட்டு தனி அணியாக உருவாக்கப்பட்டு, அதில் அடிப்படையில் வெட்டுப் பழி குத்துப்பழியாக அதுவரை அரசியல் நடத்திக் கொண்டிருந்த பாமகவும் இணைக்கப்பட்டது. இவர்களுடன் வைகோவுடைய மதிமுகவும் இணைந்து நின்றது. இந்த அணி அமைக்கப்பட்டதன் நோக்கமே அதிமுக மற்றும் பிஜேபியின் இரகசிய உடன்பாட்டின் ஒரு அங்கம் என்று ஒரு கருத்தும் நிலவுகிறது. இப்படி ஒரு அணியை அணையாக அமைத்து அதிமுகவுக்கு எதிரான ஓட்டுக்கள் திமுகவுக்கு விழாமல் தடுப்பதற்காகவே என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். இதை நம்பவும் இடமிருக்கிறது.

இருந்தாலும், தமிழக அரசியலில் சில தேவையற்ற தொங்கு சதைகள் வெட்டி வீழ்த்தப்பட்டு இருக்கின்றன. அடிப்படை எதுவுமில்லாமல் அரசியல் கட்சி தொடங்கி, குறிக்கோளே இல்லாமல் கட்சி நடத்தி, கூத்து அடித்துக் கொண்டிருந்த நடிகர் விஜயகாந்தின் கட்சி, வேரடி மண்ணோடு வீழ்த்தப் பட்டு இருப்பது தமிழக அரசியலில் ஒரு மகிழத் தக்க விஷயம். அதே போல் ஒரு திராவிடக்கட்சியாக பரிணமித்து ஒரு இந்துத்வா கட்சியுடன் கூட்டணிவைத்த மதிமுகவும் அடையாளம் தெரியாமல் வீழ்த்தப்பட்டு இருப்பதும் ஒரு நல்ல விஷயமாகவே தோன்றுகிறது. இப்படிப் பட்டியலில் உள்ள தேவையற்ற அரசியல் கட்சிகளை அடையாளம் இல்லாமல் ஆக்கிய தமிழக வாக்காளர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். இன்னும் இருக்கும் சிலரையும் வரும் தேர்தல்களில் புறக்கணித்து புறமுதுகிட்டு ஓட வைக்க வேண்டும்.

எப்படியானாலும் ஜனநாயக முறைப்படி வெற்றி பெற்றவர்களின் வெர்றியை அங்கீகரிக்கும் மரபுக்கு ஏற்ப நாமும் அவற்றை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். மக்கள் பெரும் நம்பிக்கையுடன் நாட்டுக்கு நல்லது நடக்க வேண்டுமென்ற ஆவலில் ஒரு மாற்றத்தை வேண்டி இவர்களுக்கு வாக்களித்து இருக்கிறார்கள். வெறும் மத நம்பிக்கைகளை மட்டும் வைத்து மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு அமைதியைக் குலைக்கும் முயற்சிகளை ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளில் புதிய அரசு ஈடுபடவேண்டும். அதற்கு மாநிலத்தில் வெற்றி பெற்றுள்ள அதிமுக அரசு உறுதுணையாக இருக்க வேண்டும். வெற்றி பெற்ற இருவரும் ஒத்துழைத்து இந்த மாநிலத்துக்கான மின்சாரம், நீர்-ஆதாரம், மீனவர்கள் பிரச்னைகள், இலங்கை தமிழர், கச்சதீவு உட்பட்ட பிரச்னைகளில் ஒன்றுபட்டு மக்கள் நலமுடன் வாழ எடுக்க வேண்டிய நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும். 

வளர்ச்சியின் நாயகன் என்று வடிவமைக்கப்பட்டுத்தான் பா.ஜ.க.பிரதம வேட்பாளரை முன்னிறுத்தினார்கள். இந்த வளர்ச்சியின் நாயகனின் முன் அவரது புதிய அரசுக்கு பல சவால்கள் காத்து இருக்கின்றன. புதிய அரசு எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் யாவை என்று தனிப்பதிவாக எழுதுவோம். இப்போது இந்திய தேர்தல் நடைமுறை அங்கீகரித்த வெற்றியை நாமும் ஏற்போம். அன்பும் அமைதியும் நிலவும் இந்த நாட்டில் தொடர்ந்து அமைதியும் சகிப்புத்தன்மையும் சகோதரத்துவமும் வேற்றுமையில் ஒற்றுமையும் நிலவச் செய்ய இறைவனை வேண்டுகிறோம்.

அதிரைநிருபர் பதிப்பகம்

சான்றோன் எனக்கேட்ட தந்தை! 33

அதிரைநிருபர் பதிப்பகம் | June 01, 2013 | , , , , , ,

"ஈன்ற பொழுதினும் பெரிது உவக்கும்-தன் மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய்."

என்ற குறள் வரியை நடைமுறையில் உணரும் பாக்கியத்தை அல்லாஹ் எனக்கு வழங்கியுள்ளான். அல்ஹம்துலில்லாஹ்!

நேற்று வெளியான SSLC தேர்வு முடிவுகள் வெளியானபிறகு எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற உந்துதலில் இதை எழுதுகிறேன்.

நமதூர் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவேண்டும் என்பதற்காகப் பலரும் பல வகையில் முயற்சி செய்து வருகின்றனர். Adirai Educational Trust கல்வி விழிப்புணர்வு மாநாடுகளை நடத்தியுள்ளது. அதுபோன்று அதிரை நிருபர் குழுவும் கல்வி விழிப்புணர்வு மாநாடுகளை நடத்தியுள்ளது.

மாநில அளவில் கல்வியில் சாதனை படைக்கும் மாணவர்களை அதிரையிலிருந்து உருவாக்க வேண்டுமெனில், தற்போது அதிக மதிப்பெண்களைப் பெறும் மாணாக்கர்களைப் பாராட்டி, விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று அதிரை எக்ஸ்பிரஸில் நானும் பொறுப்பேற்றிருந்தபோது மஷ்வரா செய்து, "அதிரை எக்ஸ்பிரஸ் கல்வி விருதுகள்" என்றொரு திட்டத்தை கடந்த ஆண்டு அறிவித்தோம்.

இதுபற்றிய அறிவிப்பு வெளிவந்தபோது மகள் சுஹைமாவிடம்,அடுத்த ஆண்டு உங்கள் பெயர் அதிரை எக்ஸ்பிரஸில் வருமா? என்று கேட்டேன். இன்ஷா அல்லாஹ் வரும் என்று பதில் அளித்தாள். அதன்பின்னர், என் வணிகச்சூழல் காரணமாக, மகளின் கல்வியில் அதிக அக்கரை காட்ட முடியவில்லை. மாறாக அவளது தாய்வழிப் பாட்டனார் மிகுந்த அக்கரை காட்டினார்.

இந்த ஆண்டு, தேர்வு முடிவுகள் வெளிவந்த பிறகு, மகளுக்குத் தொலைபேசினேன். "உங்க ஆசை நிறைவேறிடுச்சா வாப்பா? என்றாள். என் கண்கள் கலங்கின. அல்ஹம்துலில்லாஹ். முகநூல்,ட்விட்டர் போன்ற தளங்களிலும் இந்தத் தகவலைப் பகிர்ந்தபோது, முன்பின் தெரியாதவர்களும் வாழ்த்தி எனது மகிழ்ச்சியில் பங்கேற்றனர். ஜஸாகல்லாஹ்.

மாணவிகளில் என் மகள் முதலிடம் பெற்றது போன்று மாணவர்களில் என் காக்கா ஹாஃபிள் யஃகூப் ஹசன் அவர்களின் மகன் அப்துஷ் ஷகூர் முதலிடம் பெற்றது இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பொதுவாக அதிக மதிப்பெண் பெறுவது மாணவிகளைவிட மாணவர்களுக்கு சற்றே கடினம்தான். மாணவிகளைவிட குறைவு என்றாலும் அதிரை வரலாற்றில் இல்லாத அளவாக அதிகபட்ச மதிப்பெண்களை மகன் அப்துஷ் ஷகூர் பெற்றுள்ளார்.

காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்று முதலிடம் பெற்ற மாணவி யாஸ்மீன் என் அன்புச் சகோதரர் முபீன் அவர்களின் மகள் என்றறிந்து மிகவும் மகிழ்ந்தேன். யாஸ்மீனுக்கும் அவர்தம் பெற்றோருக்கும் வாழ்த்துகள்.

முதல் மதிப்பெண்களைப் பெற்றவர்கள் மட்டுமின்றி, முதலிடம் பெற வேண்டும் என்று மாணவ - மாணவிகளுக்கிடையே போட்டியை ஏற்படுத்திக் கொண்டு அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த என் மகளின் தோழிகளுக்கும் மகனின் தோழர்களுக்கும் வாழ்த்துகள்.

என் மக்கள் மட்டுமின்றி நமதூரின் கல்வி நிலையங்களில் பயின்று சாதிக்கும் அளவிலான மதிப்பெண்களைப் பெறுவதற்கு உந்துதலாக இருந்த அதிரை எக்ஸ்பிரஸ் நண்பர்களுக்கும் இத்திட்டத்தை செயல்படுத்தியபோது உற்சாகப்படுத்திய வாசகர்களுக்கும் பரிசுத் தொகையைப் பகிர்ந்தளிக்க முன்வந்தவர்களுக்கும் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடத்திய அதிரை நிருபர் குழுமத்ததாருக்கும் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களுக்கும் தொலைபேசி, மின்னஞ்சல் வழியாக வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டோருக்கும் நன்றியையும் துஆவையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அபூ சுஹைமா (என்ற) அப்துல் கரீம் 
S/o. முஹம்மது அலிய் ஆலிம்

முயலாமையைத் தோல்வியடைச் செய்வோம்! 8

அதிரைநிருபர் பதிப்பகம் | September 19, 2012 | , , , , ,

விரிக்காதவரைச்
சிறகுகள் கூடப் பாரம்தான்
விரித்து விட்டால்
வானம்கூட தொட்டுவிடும் தூரம்தான்

முறுக்காதவரை
மீசை கூட வேசம் தான்
முறுக்கி விட்டால்
வீரம் தானாய் பேசும்தான்

பெருக்காதவரை
வீடுகூட நரகம் தான்
பெருக்கிவிட்டால்
“பர்கத்” பொங்கும் சுவர்க்கம்தான்

படிக்காதவரைப்
பாடம்கூடச் சுமைதான்
படித்து விட்டால்
பாடம் சொல்லும் வாழ்க்கைப் பாடம்தான்

முடிக்காதவரைச்
செயல்கள்கூட முடக்கம்தான்
முடித்து விட்டால்
முயலாமைக்குத் தோல்வியே என்றாகும்!

உழாதவரை
நிலம் கூடப் புஞ்சைத்தான்
உழுது விட்டால்
புஞ்சையும்கூட நஞ்சைதான்

எழாதவரை
உடல்கூடப் பிணம்தான்
எழுந்து விட்டால்
பணம்தேடும் யாக்கைதான்

பிறக்காதவரைக்
குழந்தைகூடக் கருதான்
பிறந்து விட்டால்
கருகூட முழுமையான உருதான்

கறக்காதவரைப்
பால்கூட மடியில்தான்
கறந்துவிட்டால்
பாலும் பல்கிப்பெருகும் சத்தாகத் தான்

முயலாதவரைக்
கால்களும் முடமேதான்
முயன்று விட்டால்
உன்வாழ்வும் முன்னேற்றப் “படிக்கட்டில்” தான்!

அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்( பாடசாலை), அபுதபி (தொழிற்சாலை)
அலை பேசி: 00971-50-8351499 / 056 7822844
வலைப்பூந் தோட்டம்: http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com

மாணவப் பருவம் :: பசுமைப் பருவம் ! - விவாதக் களம் 21

அதிரைநிருபர் பதிப்பகம் | February 11, 2012 | , , , , , ,


சமீபத்தில் உலுக்கிய ஓர் சம்பவம் மாணவ சமுதாயத்திற்கும் ஆசிரியர்களுக்கும் இடையே இருக்கும் இடைவெளிதான் காரணம் என்று ஒருசாரார், இல்லை பெற்றோரின் வளர்ப்புதான் என்று மற்றொரு சாரார், அப்படியெல்லாம் இல்லை சுற்றுப்புற சூழல், சமுதாயத்தில் புரையோடியிருக்கும் அத்துமீறிய சினிமாக் கலாச்சாரம், தொலைக்காட்சித் தொடர்கள், அலைபேசிகளின் ஆளுமை, இணையம் என்று வேறொரு சாராரும் மாறி மாறி அலசுவதில்தான் தீவிரம் காட்டுகின்றனர்.

அங்கொன்றும் இங்கொன்றுமாக அதற்கான தீர்வாக தீர்க்கமாக சிலரும் யோசிக்கத்தான் செய்கின்றனர் அவ்வகையில், நல்ல அனுபவங்களை பகிர்ந்து கொள்வதில் நாம் பழக்கப்பட்டவர்களாக இருப்பதனால் இந்தப் பதிவை வாசிக்கும் ஒவ்வொருவரும் கடந்த காலங்களில் மாணவப் பருவத்தை கடந்து வந்தவர்கள் அல்லது இன்றைய மாணவமணிகளாக இருக்கலாம்.

பெற்றோர் ஆசிரியர், ஆசிரியர் மாணவர்கள் உறவுகள், மாணவர்களுக்குள்ளேயே நட்பு பாராட்டுவது, மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கான உறவு முறைகள் அன்று எப்படி இருந்தது, இன்று எப்படி இருக்கனும் என்று விவாதிக்கலாம்.

கவனிக்க! இது எந்த தரப்பையும் குற்றம் கண்டெடுத்து குத்திக் காட்டுவதற்கு அல்ல, நம்மை விட நல்ல கருத்துடைய அறிவுடைய சான்றோர் நம்மைச் சுற்றியிருப்பதனால் அவர்களின் கருத்துக்கள் இளம் பெற்றோர்களுக்கும், மாணவாமணிகளுக்கும் பயனளிக்கும் என்ற நன்னோக்கில்தான் இவ்விவாதம்.

தயைகூர்ந்து நடந்துவிட்ட அசம்பாவிதத்தை மீண்டும் இங்கே நினைவு படுத்தி விமர்சிக்காமல், ஆசிரியர் மற்றும் மாணவ சமுதாயத்தின் உறவுமுறைகள் எப்படி இருக்கிறது, அதனை எவ்வாறு பேணுவது, மார்க்கம் காட்டும் வழியில் நம் நடத்தைகள் எவ்வாறு இருக்கனும் என்று நளினமாக எடுத்து வையுங்கள்.

தனிமனித அல்லது பள்ளி நிர்வாகத்தினை குறைகூறும் களமாக இதனைக் கருதாமல், எம்மக்கள் என்றும் சிறந்த மக்களாக இருந்திட முயல்வோமே இன்ஷா அல்லாஹ்...

-அதிரைநிருபர் குழு

வாழ்த்தி வரவேற்போம்...... ! 4

அதிரைநிருபர் பதிப்பகம் | October 21, 2011 | , , ,


அதிரைப்பட்டினத்து மண்ணின் மைந்தர்களே, அஸ்ஸலாமு அலைக்கும்...

நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் நமதூரில் பேரூராட்சி தலைவர் பதவிக்காக போட்டியிட்ட நமதூரின் அன்புச்சகோதரர்கள் (பஷீர், அஸ்லம், அஜீஸ் மற்றும் முனாஃப்) நால்வரில் நம் விருப்பு, வெறுப்புகளைத்தாண்டி இறைவன் நாட்டத்தில் எவர் வென்று அரியணையில் அமர்ந்தாலும் அது நம் ஊர் நலனுக்கு நன்மையே என்ற நல்லெண்ணத்திலிருப்போம்.

அவர்களை நாம் குடும்பம், தெரு, சங்கம், அரசியல் கட்சி சார்பு போன்ற பல பிரிவினைகளைத் தாண்டி நாம் ஒரு நடுநிலையோடு பாராட்டும் அதேவேளையில் அவர்களின் பணி சிறக்க, ஊர் வளம்பெற நாம் ஒவ்வொருவரும் இறைவனிடம் இறைஞ்சியே ஆகவேண்டும். அவர்கள் மூலம் இனிவரும் நாட்களில் ஊர் நல்லது பலவற்றை இன்முகத்துடன் எதிர்பார்த்த வண்ணம் இருப்பது நம் எல்லோரும் அறிந்ததே.

என்ன செய்ய? நால்வரில் யாரேனும் ஒருவர் தான் வர இயலும் என்ற உண்மையான நிதர்சனம் நிலவி வருவதால் நாம் விரும்பிய ஒருவருக்கு வாக்களித்திருப்போம். இல்லையேல் நால்வரையும் நான்கு சமநிலை நாற்காலிகளில் அமர வைத்து அழகுபார்த்திருக்க மாட்டோமா என்ன?

இனி இறைவன் நாட்டத்தில் வென்று தலைவர் நாற்காலியில் அமர இருப்பவர்கள் கொஞ்சம் கவனத்துடன் கவனிக்க வேண்டியது சில:

அரசியல் கட்சிகள் போல் தாம் வென்று அரியணை ஏறிவிட்டோம் என்ற அகம்பாவத்தில், ஆணவத்தில் தோற்ற சகோதரர்களையும், அவர்கள் குடும்பத்தினரையும், அவர்கள் சார்ந்த தெருக்களையும், சங்கங்களையும் பழிக்கு பழி தீர்க்கும் நடவடிக்கையிலோ அல்லது அது போன்ற எண்ணம் சிறிதளவேனும் உள்ளத்தில் உருவாகிவிட வேண்டாம்.

ஊரின் எந்த மூலையாக இருந்தாலும் அது நம் எதிர்கால முன்னேற்றத்திற்கும் அடுத்த கட்ட நடவடிக்கைக்கும் (அது எம்.எல்.ஏ. தேர்வுக்கு கூட வழிவகுக்கலாம்) உறுதுணையாகவும், பக்கபலமாகவும் இருக்கும் என்ற தொலைநோக்கு பார்வையுடன் நல்ல பல நடவடிக்கைகள்/செயல்பட்டால் வெறுப்பான மக்களின் உள்ளங்களை கூட எளிதில் கவர்ந்து விடலாம். மக்களின் மனதை கவந்து விட்டால் இனி வெல்வதற்கு உலகில் வேறென்ன இருக்கிறது?

அரசின் அனைத்து திட்டங்களையும், உதவிகளையும் அவரவருக்கு குடும்பம், தெரு, கட்சி, சங்கம் பாகுபாடு பார்க்காமல் அனைவருக்கும் அல்லலின்றி கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும்.

நமக்கு அரசு அதிகாரத்தின் மூலம் என்ன சக்தியை நிர்ணயித்திருக்கிறதோ அதற்கு மேல் நாம் ஒன்றும் செய்வதற்கில்லை. தேவையான நேரத்தில் தன் அதிகாரத்தை உரிய முறையில் பயன்படுத்தி பலன்கள் பல நம்மூருக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

அநாவசியமாக வரும் மதக்கலவரங்கள், பூசல்களுக்கும் அதனால் வரும் பதட்டமான சூழ்நிலைகளுக்கும் உரிய காரணம் கண்டு பிடிக்கப்பட்டு உரியவர்களை தன் சமயோசித முயற்சியில் தயக்கமின்றி தொடர்பு கொண்டு ஊரில் மதநல்லிணக்கமும், அமைதியும் அன்றாடம் நிலவ ஆவண செய்ய வேண்டும்.

ஆணவத்தில் ஆள்வதை விட சாதாரன மனிதனாக இருந்து சாதனைகள் பல புரிந்திடல் வேண்டும்.

ஊரில் ஒரு பொதுவான நல்ல விளையாட்டுத்திடல் உருவாக்கி ஊரில் இருக்கும் சிறுவர்கள், வாலிபர்களுக்கு மாலைப்பொழுது ஒரு நல்ல பொழுதாக கழிய வழிவகை செய்து தர வேண்டும்.

வென்று விட்டோம் என்பதற்காக வாக்குகள் சரிவர கிடைக்காத தெருக்களுக்கு சென்று வீண் வம்புகளில் ஈடுபடாமலும், அங்கு சென்று எல்லோரும் எரிச்சல் அடையும் விதம் சப்தமாக வெடிவெடித்து மேலும் வெறுப்புகளை சம்பாதிக்காமல் பார்த்துக்கொள்ள வேனும்.

உண்மையான இஸ்லாம் மார்க்கம் பேணும் ஒரு முஸ்லிமாக இருந்தால் அது நம் சமுதாயத்திற்கு மட்டுமல்ல மாற்று மத சமுதாயத்தினர்களுக்கும் அது பாக்கியமாக அமைந்து விடும். காரணம், சரியாக மார்க்கம் பேணும் ஒருவர் நிச்சயம் ஒருபோதும் யாருக்கும் அநீதி இழைக்கமாட்டார் அவர் யாராக இருந்தாலும் சரி. அக்கம் பக்கம் உறவு பேணுவார். ஹராம், ஹலால் பேணுவார். தீயவைகளை ஒரு போதும் எங்கும் எப்பொழுதும் அனுமதிக்கமாட்டார். தவறை சுட்டிக்காட்ட ஒருபோதும் தயங்கமாட்டார். ஊர் நலனுக்காக தன் பதவியை துச்சமாக மதித்து அதை துறக்க என்றும் தயங்கமாட்டார் அதனால் அவருக்கு பேரிழப்பு வந்தாலும் சரியே. கடந்த கால இஸ்லாமிய நல் ஆட்சியாளர்களின் வாழ்க்கை வரலாறுகளை படித்தறிந்து அதையே தன் வாழ்க்கைக்கும் ஒரு முன்மாதிரியாக எடுத்துக்கொள்வார். எல்லாவற்றிற்கும் மேலாக தன்னை நொடிப்பொழுதும் படைத்த இறைவன் கண்காணித்துக்கொண்டிருக்கிறான் என்று உறுதியாக நம்பி அவனுக்கு பயந்து தவறுகள் செய்ய துணியமாட்டார். 

எனவே மாற்று மதசகோதர,சகோதரிகள் கூட எதற்கும் தயங்காமல், துணிவுடன் ஒரு உண்மையான இஸ்லாமியனுக்கு ஆதரவு கொடுக்க என்றும் தயக்கம் காட்டக்கூடாது. காரணம் அவன் இஸ்லாமியர்களை மட்டும் பார்க்கப்போவதில்லை நம் எல்லோரையும் படைத்த இறைவனுக்கே அஞ்சிக்கொள்பவனாக இருக்கிறான். நிச்சயம், மாற்றுமதத்தினர் என்பதற்காக ஒருபோதும் அவர்கள் மீது அநீதி செலுத்தமாட்டான்.

அவரவர் விருப்பு, வெறுப்புகளை மறந்து வென்று வருபவருக்கு என் இனிய வாழ்த்துக்களும், ஊர் நலன் சிறக்க, வலம் பெற, ஊரில் உள்ளவர்கள் எல்லா நலன்களும் பெற்று சந்தோசமாகவும், சகோதர மனப்பான்மையுடனும், அமைதியாகவும் வாழ்ந்து ஈருலக வெற்றிகள் பெற என் து'ஆவும் சென்றடையட்டுமாக...... ஆமீன்... !

- மு.செ.மு. நெய்னா முஹம்மது


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு