கடற்கரையின் காற்றில்
ஒரு வண்ண மயில்
தோகையை விரித்து
அற்புத எண்ணங்களை
ஓவியமாக இறகுகளில் வரைந்து
விரித்து ஆடியது ஒரு நிகழ்வு எனில்......
கடற்கரையின் காற்றுக்கு அருகிலுள்ள கருமேகமே நினைவுகளாகும்...
***************

அங்குமிங்கு அலைமோதி ,
தப்படித்து ,குவியல் குவியலாய்
ஒரே இடத்தில் கூடுவது என்பது நிகழ்வு எனில்.....
தரையில்,மலையின் மேலே நீராவது மேகங்களின் நினைவாகும்...
******************
மலையின் மேலே
அழகாய் தவழ்ந்து ,
மேற்படும் நினைவுகளாம்
இலைகளின் அசைவுகளும் ,பூச்சொரிவுகளும் ,
பறவை ,விலங்குகளின் விளையாட்டையும் ,
தன் மீது வீழும் சருகுகள் ,பூக்கள் என
யாவயும் படம்பிடித்து தவழும் நீரோடை என்பது நிகழ்வு எனில் .....
சற்று தொலைவில் மலையின் நுனியில் ஓரம் சென்று பிரம்மாண்ட அருவியாய் மாறுவது அதன் நினைவாகும் ...
***********
ஆர்ப்பரிக்கும் அலப்பறையில்
நெஞ்சு புடைத்து ,
ஆனந்த திமிரில் சந்தோஷ சிதறல்களாய்
கொட்டும் அருவி என்பது நிகழ்வு எனில்....
எதார்த்தம் அறிந்து தரையில் ஆறாக மாறுவது அருவியின் நினைவுகளாகும்..
**************
திக்கு திசை தெரியாமல் ,
பின்புலத்தில் அருவியின் தைரியம் என
மார்தட்டி எதிர்படும் தடைகளை உடைத்து ,மிதித்து
செல்லும் ஆறு ஒரு நிகழ்வு எனில் ..............
சுடும் பிரதேசத்தின் வெயிலினால்
சுட்டு புடமெடுத்த மணல் பருக்கைகளை மின்னிடும்
வைரமாக்குவது ஆற்றின் நினைவுகளாகும் ...........
******************
ஆற்று நீரின் உறவால்
மின்னிடும் மணல் பருக்கையின்
பிம்பங்கள் ஒரு நிகழ்வு எனில் ............
வளமொங்கும் பயிர்களை வளர்த்து
மீந்தும் நீரை வழியனுப்புவது மணல் பருக்கையின் நினைவாகும் ....
*************
கடத்தி வரப்பட்ட நீரின்
ஆற்றுப் படுகையில் காய்ந்து ,
பூக்கள் இழந்து நிற்கும் செடிகள் என்பது நிகழ்வு எனில் ......
பருவக்காற்றில் அசைந்தாடும் பூக்களின்
பிம்பங்களை தன மீது சுமந்து ,செடிகளின்
பார்வைக்கு விருந்தாக்க முனைவது ஆற்றின் நினைவுகளாகும் ..
******************
இல்லாத எல்லைகளை தொட்டு
முடித்து,
ஆற்றின் அடைக்கலம் கடல் என்பது நிகழ்வு எனில் ...........
அதன் நினைவுகள் ..???
முதலிலிருந்து படியுங்கள்
---Harmys---