Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label கேமரா. Show all posts
Showing posts with label கேமரா. Show all posts

கேமரா [புகைப்படக் கருவி] - குறுந்தொடர் - 3 16

அதிரைநிருபர் பதிப்பகம் | August 13, 2013 | , , ,

டிஜிட்டல் கேமரா இன்றைய காலகட்டத்தில் சாதாரணமாக அனைவரது கையிலும் இருக்கிறது முந்தைய காலங்களைப் போல் நிறைய செலவழித்து ஃபிலிம் வாங்கி, அதில் போட்டோ எடுக்கும்பொழுது இது சரியா வரவேண்டுமே என்ற புலம்பல்களெல்லாம் இன்றைய சூழலில் தேவை இல்லை. போட்டோ எடுத்ததும் உடணடியாக LCD / LED Screen-னில் பார்த்துவிட்டு சரி இல்லை என்றால் மறுபடியும் ஃபோட்டோ (இஷ்டத்துக்கு) எடுத்து தள்ளலாம்   பெரும்பாலான செல்போன்களில் கூட இந்த வகை கேமரா வந்துவிட்டது.என்பதை சென்ற பதிவிலும் பார்த்தோம்.


இந்த டிஜிட்டல் கேமரா எந்த அடிப்படையில் இயங்குகிறது என்பதை பற்றி கொஞ்சம் விலா வாரியா பார்ப்போம் (அது என்னங்க விலாவாரியா ) பொதுவாக  கேமராவில் இருக்கும்  லென்ஸை எப்படி பயன்படுத்துவது ஜூம் செய்வது போன்ற விவரங்களை பிறகு  நேரம் கிடைக்கும்போது  தனிப் பதிவாக பார்த்துக்கொள்வோம் (இப்படியே சொல்லிகிட்டே கடத்திடுவோம் ஏன்ன இதுவும் ஒரு ட்ரென்டுதானுங்க) தற்போது டெக்னிக் விஷயத்தை மட்டும் தெளிவாக பார்ப்போம்.

ஒளியானது லென்ஸ் மூலம் காமிராவிற்குள் சென்றதும்  அங்கு  என்ன நடக்கிறது என்பதை முதலில் பார்ப்போம்.

பழைய ஃபிலிம் போடும் கேமராவில் (அண்ணன் NAS அவர்களிடம் முன்பு ஒரு கேமரா இருந்தது அதை நாங்கள் செல்லமா நீராவி இன்ஜின் என்று கிண்டல் அடிப்போம்)  அங்கு ஒளி பிலிமில் பட்டதும் ரசாயன வினை நடக்கும். அதில் நாம் எடுக்கும் உருவம் பதிவாகும் என்ற தகவலை ஏற்கனவே சொல்லியிருந்தோம். இப்போது டிஜிட்டல் காமிராவில் உள்ளே  என்ன உருமாற்றங்கள் நடக்கிறது என்பதை வெளியே இருந்து பார்ப்போம்.

டிஜிட்டல் கேமராவில் ஃபிலிம் இருக்கும் இடத்தில் ஒரு செவ்வக வடிவில் சில்லு அதாங்க  "சிப்பு"(இந்த chip தாங்க  பிலிமுக்கு வச்சது ஆப்பு)  ஒன்று  இருக்கும். அதில் நெருக்கமாக பல வித ஒளியை உணரும் லைட் சென்சிடிவ்  புள்ளிகள் இருக்கும். இவற்றை ஆங்கிலத்தில் பிக்சல் (pixel) என்று சொல்வார்கள் இது கேமராவிற்கு கேமரா மாறுபடும்.

இவற்றில் ஒளி பட்டால் அதை மின்னூட்டமாக (charge) மாற்றும். இந்த புள்ளிகள், சி.சி.டி. என்ற மின்னூட்டமாக மாற்றும் சாதனங்கள் லென்ஸ் வழியே விழும் பிம்பம்  ஃபிலிமில் விழுவது போலவே மேற்சொன்ன சிப்பிலும் விழும். இந்த புள்ளிகள் அருகருகே இருப்பதால், பிம்பம் ஏறக்குறைய பிலிமில் இருப்பது போலவே இருக்கும். 5 மெகா பிக்சல் என்றால் சுமார் 50 லட்சம் புள்ளிகள் என்று அர்த்தம்  இதை மிகச் சிறிய அளவில் வைத்திருப்பதால் படம் நன்றாகவே வரும். 1 மெகா பிக்சல் அல்லது 2 மெகா பிக்சலில் 10 லட்சம் அல்லது 20 லட்சம் புள்ளிகள் இருப்பதால், கொஞ்சம் தெளிவில்லாமல்   வரும். பிக்சல் அளவு அதிகரிப்பதைப் பொருத்தே படத்தின் நுணுக்கமும் தெளிவும் கூடிக்கொண்டே போகும் (கேமரா வாங்கும் போது பிக்சல் கூடுதல்  உள்ள கேமரவா பார்த்து வாங்க வேண்டும் அதே நேரத்தில் அதற்குண்டான விலையையும் கொடுக்கனும் )

இறைவன் நமக்கு அளித்த கண்களில்  மிக மிக நுணுக்கமான 80 லட்சம் புள்ளிகள் இருக்கும் சில்லை விட சிறிய கண் திரையில் ஆட்டோமேடிக் லென்ஸ், ஒளி அதிகமானால் அல்லது குறைந்தால் சமாளிக்கும் திறமை, நிறம் அறிதல் என பல வகை விஷயங்களை செய்கிறது. நம் உடலில் இருக்கும் அனைத்து உறுப்புகளுமே சிறப்பானவை என்றாலும் மூளையும் கண்ணும் மிகவும் சிறப்பான அதேவேலை மிகவும் சிக்கலானவை. அதன் அருமை இம்மாதிரி நாம் செயற்கையாக செய்யும் பொருள்களின் விவரங்களைப் பற்றி யோசிக்கும் பொழுதும் வாசிக்கும் பொழுதும்  புரிய வரும்! 

ஒரு முறை போட்டோ எடுத்ததும் இந்த சில்லில் இருக்கும் மென்பொருள் அதில் இருக்கும் ஒவ்வொரு பிக்சலிலும் இருக்கும் மின்னூட்டத்தை குறித்துக் கொள்ளும் (பதிவு செய்து கொள்ளும் ) இதுதான் நமக்கு கிடைக்கும் படம். இதை மெமரி கார்டு  என்ற பகுதியில் சேமித்துக் கொள்ளும். அடுத்தடுத்த போட்டோ எடுக்கும் முன்பே முதலில் எடுத்த போட்டோவை மெமொரி கார்டுக்கு அனுப்பிவிட்டு  எல்லா பிக்சலிலும் மின்னூட்டத்தை பூஜ்யமாக்கி விடும். இது ஒரு ஃபோட்டோ எடுத்ததும் அடுத்த பிலிம் வருவது போல காலி சிலேட்  என்ற நிலைக்கு வரும். 

வீடியோ modeல், ஒரு விநாடிக்குள்24 இருந்து 25 அல்லது 30 போட்டோக்கள் எடுக்கப்பட்டு அவை அனைத்தும் சேமிக்கப்படும். ஒரு போட்டோ  எடுத்து உடனே சேமித்து எல்லா மின்னூட்டத்தையும் பூஜ்யம் ஆக்கும். உடனே அடுத்த போட்டோ, சேமிப்பு, காலி சிலேட் இப்படி ஒரு வினாடிக்கு  25 முறை இந்த செயல் நடக்கும் (கவனிக்கவும் வினாடிக்கு 25 முறை இந்த வேலை நடக்கும் )

இதுவரைக்கும் டிஜிட்டல் பத்தி கொஞ்சம் விளங்கி கொண்டோம் அப்படியோ கலர் எப்படி வருகின்றது என்பதையும் கொஞ்சம் கலர்ஃபுல்லா பார்த்து விடலாம். 

நம்ம  கண்ணுக்கு தெரியும் நிறங்கள் அனைத்தையும் சிவப்பு, பச்சை, நீலம் என்ற மூன்று வகை நிறங்களை வெவ்வேறு அளவில் கலந்து 'உருவாக்க முடியும். இதை ஆங்கிலத்தில்  Red, Green, Blue என்றும்  இதை சுருக்கமா RGB என்றும் சுருக்கமா சொல்வார்கள். பொதுவாக காமிராவில் ஒரு பொருளை போட்டோ எடுக்கும் பொழுது அதன்  ஒவ்வொரு பிக்சலிலும் இவ்வளவு சிவப்பு இவ்வளவு பச்சை இவ்வளவு நீலம் என்ற விவரம் முழுதும் பதிவாக வேண்டும். அதை எப்படி செய்வது?

இந்த புள்ளிகள் இருக்கும் சில்லில் ஒவ்வொரு புள்ளிக்கும் மேல் சிவப்பு அல்லது பச்சை அல்லது நீல நிறக் கண்ணாடி புள்ளியின் அளவே இருக்கும். ஒரு சிவப்பு கண்ணாடிக்கு ஒரு நீலக் கண்ணாடியும் இரண்டு பச்சை நிறக் கண்ணாடிகளும் இருக்கும்.

இதனால் நாம் ஒரு புள்ளி என்பது அங்கு   நான்கு புள்ளிகளால் உணரப்படும் இவை அனைத்தையும் சேர்த்தால்தான் அந்தந்த  புள்ளியில் இருக்கும் உண்மையான நிறம் வந்துவிடும் (இந்த புள்ளிகளுக்கும் அந்த மலையாள புள்ளிகளுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது )

கலர்  என்றதும்  நினைவுக்கு வருது  நாம்  காணும்  கனவுகள் யாவும் கருப்பு வெள்ளைதானாம் யாருக்கும் கலர் கனவுகள் வராதாம்! அப்படி யாராவது சிவப்பு கலர் புடவை உடுத்திக்கொண்டு என் கனவில் "பிரியாமானவர்களைக்" கண்டேன் என்று சொன்னால் அது மூளையின்  கற்பனை திறனே தவிர வேறெதுவும் கிடையாது அதுபோல்  நாம் பார்க்கும் அனைத்து பொருட்களும் நம் விழித்திரையில் தலை கீழாகவே  விழும் அதை  நேராக  சரி செய்து கொள்வது  நமது  மூளையின்  வேலை கேமாராவில்  நாம் பிடிக்கும் படங்களும்  பிலிம்  அல்லது டிஜிட்டல் சிப்பில்  தலைகிழாகவே  பதிவாகும்.

அடுத்த பதிவிலும் கலர் பார்க்கலாம் ! (1985-95 கலர் அல்ல)…
தொடரும்
Sஹமீது

கேமரா (புகைப்பட கருவி) - குறுந்தொடர் - 2 12

அதிரைநிருபர் பதிப்பகம் | August 01, 2013 | , , , , ,

கேமராவின் வகைகளையும் ஒவ்வொரு காலகட்டத்தில் அதன் வளர்ச்சியையும் பட்டியலிட்டால் குறுந்தொடர் நெடுந்தொடராக நீண்டு விடும் அதனால் ஃபிலிம் ரோலை சுருக்கிக் கொள்வோம். முன்னொரு காலம் புகைப்படம் (ஃபோட்டோ) எடுத்து விட்டு ஃபிலிம் ரோலை பிரிண்ட் போட்டு புகைப்படமாக பார்ப்பதற்கு சென்னை அல்லது துபாய்க்கு, சிங்கப்பூருக்கு அனுப்பி விட்டு (தோன கானா அவர்கள் நம்ம வீடு தேடிவரும் முன்  நாம் தோன கானா வீடு தேடி அலைந்தது பற்றி ஒரு தனி பதிவே போடலாம் ) அது பல நாட்கள் கழித்து துபாயில் இருந்து  பிரிண்ட் போட்டு திரும்பி வரும்போது (சில சமயங்களில் வராமலும் போகும்) நாம் எடுத்த ஃபோட்டோக்கள் நமேக்கே மறந்து போய் இருக்கும் வயல் வெளியில் எடுத்த ஃபோட்டோ அது திரும்பி வரும்போது அந்த வயல் மனைகட்டாகி வீடு கட்டப்பட்டிருக்கும்.

கல்யாணத்தில் எடுத்த ஃபோட்டோ திரும்பி வரும்போது கல்யாண மாப்பிள்ளை வாப்பாவாகி இருப்பார்  ஆனால் இப்போ நிலைமை தலைகீழ் அதற்கு காரணம் டிஜிட்டல் தொழில் நுட்பம் ஃபோட்டோ எடுத்த அடுத்த வினாடியே ஃபோட்டோவை பார்த்து விடலாம் (ஃபோட்டோ நல்லா இல்லாட்டி கமுக்கமா டெலிட்டும்  செய்துவிடலாம் ).


இந்த டிஜிட்டல் டெக்னாலஜில் ஃபிலிம் ரோல் பிரிண்ட் போடுவதற்கான செலவீனங்கள் கால விரயம்  எல்லாம் ஒழிந்து போய் விட்டன அது கூட ஃபிலிம் தயாரிப்பு கம்பெனிகளும் சேர்ந்து அழிந்து விட்டன (கோடக் கம்பெனி நஷ்ட்டத்தில் தள்ளாடுவதாக ஃபோட்டோவுடன் செய்திகள் வருகின்றன )


டிஜிட்டல் கேமராவில், அவ்வளவாக செலவுகள் கிடையாது (அதுக்கெல்லாம் சேர்த்துதான் கேமரா விலையில் கடுகு உளுதம் பருப்பெல்லாம் போட்டு தாளிச்சு தள்ளிர்ரானே). ஆயிரக்கணக்கில் படங்களை க்ளிக் செய்து தள்ளலாம். அதில் பிடித்த சில படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து அச்சிடலாம். (பெரும்பாலும் யாரும் பிரிண்ட் போடுவதில்லை) இல்லை என்றா ல் அப்படியே கேமராவில்  பார்க்கலாம் , கம்ப்யூட்டரில் பார்க்கலாம், சீரியல் ஓடாத நேரம் பார்த்து டிவியிலும் பார்க்கலாம் தப்பித் தவறி சீரியல் ஓடும் நேரம் டிவியில் பார்த்தால் அது என்னதான் நல்ல போட்டோவா இருந்தாலும் போட்டோ நல்லவே இல்லை என்ற டிஜிட்டல் சவுண்டில் ஒரு ஆடியோ சர்டிஃபிகெட் உடனே கிடைக்கும் இப்படி எல்லாம் தொந்தரவு இருக்கும் என்பதை அறிந்துதான் பாதிக்கப்பட்ட யாரோ ஒரு புண்ணியவான் இதற்கு என்றே விசேஷமாக வடிவமைக்கப்பட்ட ‘டிஜிட்டல் போட்டோ ஃப்ரேம்’ எல்லாம் வடிவமைத்து கொடுத்துவிட்டார்.


முக்கியமாக, டிஜிட்டல் போட்டோக்களை நாம் யாருக்கு வேண்டும் என்றாலும் உடனே அனுப்பலாம். குறிப்பாக அதிரை நிருபர் எடிட்டருக்கு டிஜிட்டல் கேமராக்களின் தேவை அதிகமாகி விட்டதால், இப்போது மொபைல் ஃபோனிலேயே ஒரு கேமராவையும் தூக்கி சொருகி விட்டார்கள் அதில் போட்டோ எடுத்து உடனுக்குடன் நாம் அனுப்பிக்கொள்ளலாம் (கேமரா மொபைலை வைத்துக்கொண்டு ஒருசிலர் செய்யும் அலப்பரை தாங்க முடியல)  இந்த டிஜிடல் தொழில் நுட்பம் பற்றி மற்றுமொரு தனி பதிவாக பிறகு பார்த்துக் கொள்வோம்.


ஜாலிக்காக ஃபோட்டோ எடுக்கிற கூட்டம் ஒரு பக்கம் குருட்டாம் போக்கில் ஃபோட்டோ எடுக்கும் கூட்டம் ஒருபக்கம் இதை ஒரு கலையாக நினைத்து அக்கறையோடு கற்றுக் கொண்டு ஃபோட்டோ எடுக்கும் கூட்டம் ஒருபக்கம். இதில் நீங்கள் எந்தப்பக்கம் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள் புகைப்பட தொழில் நுட்பம் பற்றி தெரிந்து கொள்ள விதவிதமான புத்தகங்கள், பயிற்சி வகுப்புகள், இன்டர்நெட் தளங்கள், போட்டிகள் என்று ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன. எது எப்படியோ போட்டோ எடுக்க முதலில் ஒரு நல்ல கேமரா தேவை  என்பது ரொம்ப முக்கியம்.


இந்த பதிவு சுருங்கிவிட்டதே என்று கவலை வேண்டாம் எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்டதால் இந்தப் பதிவும் சுருங்கிவிட்டதாக நினைத்துக் கொண்டல் கவலைகள் பிடறியில் கால் அடித்துக் கொண்டு ஓட்டமெடுக்கும் !
தொடரும்...
S.ஹமீது

கேமரா (நிழற்பட கருவி)..! - குறுந்தொடர் - 1 31

அதிரைநிருபர் பதிப்பகம் | July 22, 2013 | , , , ,


க்ளிக்.. கிளிக்… கிளிக்… முன்பெல்லாம் சுற்றுலா தளங்களில் ரொம்பப் பிரபலமாக கேட்கும் இந்த சத்தம், இப்போது எங்குபார்த்தாலும் கேட்க ஆரம்பித்து விட்டது. பொதுவான ஃபங்கஷனிலும் இந்தச் சத்தங்களை அடிக்கடி கேட்க வாய்ப்புகள் அதிகம். ஆனால் ஸ்மார்ட் மொபைல் ஃபோன்களின் வருகையால் எங்கு பார்த்தாலும் (தனிமையில் இருப்பவர்களும் தங்களின் முகத்துப் பக்கம் திருப்பிக் கொண்டு) கிளிக் என்ற சத்தம் கேட்கிறது.

நம்ம எல்லோராலும் இலகுவாக புரிந்து கொள்கின்ற, ஒரு சப்த மொழிதான் இந்த கிளிக் கிளிக்குடன் கூடிய அந்த பளிச் என்ற வெண்பளீர் ஒளியும் சேர்ந்தால் கேமராவில் பதியும் படம் பிரகாசமாக இருக்கும் என்பதில் எந்த வித ஐயமும் கிடையாது. இந்த கிளிக்கும் பளிச்சும் கேமராவின் முகவரி என்றால் அது மிகையாகாது.

தற்போது கேமராவில் ‘க்ளிக்’ சத்தம் வந்த காலம் எல்லாம் மலை ஏறி போய் போய்விட்டது. இன்றைய கேமராக்கள் 100% டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டு , சத்தமே இல்லாமல் நூற்றுக்கணக்கான புகைப்பட நகல்களை எடுத்து தள்ளி விடுகின்றன !

பிலிம் ரோல்

எந்தவகை கேமராவாக இருந்தாலும் நம் கண்ணில் படுகிற முதல் விஷயம் லென்ஸ்தான் (குவித் தகடு கண்ணாடி). அதுதான் கேமராவின் நெற்றிக்கண். ‘லென்ஸ்’ என்பது ஒரு வித்தியாசமான வடிவத்தில் தயாரிக்கப்படுகிற ஒரு வகை சிறப்புக் கண்ணாடிக் குவித் துண்டு. இதன் வேலை, ஒளியைக் குவித்து ஒரே இடத்திற்கு கொண்டு வந்து சேர்ப்பதுதான்.


கடை மற்றும் அலுவலக வாசல்களில் பொருத்தப்படும் . பெரிய கண்ணாடி. வழியாக வெளிச்சம் கடைக்குள் ஊடுருவி வந்து பரவலாக விழுகிறது. இதுக்குக் காரணம், அந்தக் கடையில் இருக்கிற கண்ணாடி, தட்டையான வடிவத்தில் இருப்பதால் இப்படி வெளிச்சத்தை பரவலாக பிரதிபளிக்கின்றது. இதற்கு   சமதள ஆடி என்று பெயர்  (ஆடி மாத தள்ளுபடி உண்டா என்று கிண்டல் அடிக்க கூடாது ) அதனால், சூரிய ஒளி அதைத் துளைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து பரவலாக வெளிச்சத்தை பாய்ச்சுகின்றது.

அதே கண்ணாடியைக் கொஞ்சம் மாற்றி வேறு வடிவத்தில் தயாரித்து. நடுவில் தடிமனாகவும் ஓரங்களில் மெலிதாவும் கிட்டத்தட்ட, ஒரு மினி இட்டலி ரேஞ்சுக்கு வடிவமைத்து இந்த ஸ்பெஷல் கண்ணாடி வழியாகச் சூரிய வெளிச்சம் நுழையு ம்போது, அது லேசாக வளைந்து, திரும்பி தலைகீழாய் பரவலாக இல்லாமல் ஒரே இடத்தில் குவிக்கப்படுகிறது. அதுதான் லென்ஸின் அடிப்படை நுட்பம்.

கேமராவுக்கு முன்னால் இருக்கிற லென்ஸும்(அதாங்க நெற்றிக்கண் ) கிட்டத்தட்ட இதே வேலையைத்தான் செய்கின்றது. நாம் எந்தப் பொருளைப் படம் எடுக்கின்றோமோ அந்த பொருளில் இருந்து வருகின்ற ஒளிக் கதிர்களை ஒரே இடத்தில், அதாவது கேமராவுக்குள்ளே இருக்கிற பின்பகுதியில் கொண்டு போய்க் குவிக்கின்றது.

அப்படி குவிக்கின்ற அந்த இடத்தில்தான் ஃபிலிம் ரோலின் ஒவ்வொரு பிரேமும் இருக்கும் அது ஒரு விசேஷமான பிளாஸ்டிக் தகடு. அதில் சிலரசாயனப் பொருள்கள் பூசப்பட்டிருக்கும். (அது பற்றி அண்ணன் NAS அவர்கள்தான் விவரம் தரணும்) இந்த ரசாயனங்களின் சிறப்பு அவற்றின் மேல் கொஞ்சம் வெளிச்சம் பட்டாலே போதும், அந்த வெளிச்சத்துக்கு ஏற்ற மாதிரி தன்னை மாற்றிக் கொள்ளும் பட்சோந்தி தனம் அந்த ரசயனங்களுக்கு உண்டு.

இதனால் நாம் போட்டோ எடுக்கும் பொருளில் இருந்து வருகிற வெளிச்சம் லென்ஸ் வழியாக ஊடுருவி இந்த ரசாயனங்களின் மீது விழும்போது, அந்த காட்சி அப்படியே ஃபிலிம் ரோலின் ஒரு பகுதியில் பதிவாகி விடுகிறது. இதே மாதிரி அடுத்தடுத்து நாம் எடுக்கும் ஒவ்வொரு போட்டோவு ம் இச்சுருளில் வரிசையாகப்  பதிவாகிக் கொண்டே வரும்.


போட்டோ எடுத்து முடித்ததும் கேமராவிலிருந்து ஃபிலிம் ரோலை வெளியோ எடுத்தால், வெளியோ  இருக்கிற அதிக வெளிச்சம் முழுவதும் பிலிம் ரோலில் பட்டு , இதற்க்கு முன் நாம் எடுத்த அனைத்து  படங்களும் அம்பேல்தான் இப்படி அம்போவான படங்களை எந்த சாப்ட் வேர் போட்டும் ரெக்கவர் பண்ண முடியாது.

அதனால், இதற்கென்று வடிவ மைக்கப்பட்ட டார்க் ரூம் அதாவது இருட்டு அறைகளில்தான் ஃபிலிம் ரோலைப் பிரித்து வெளியில் எடுப்பார்கள். சில விசேஷக் கெமிக்களில் முக்கி எடுத்து அந்த பிலிம் ரோலை டெவலப் என்று சொல்லக் கூடிய பணியை செய்வார்கள் அதன்மூலமாக நம் படங்கள் என்றும் அழியாத படிநெகடிவாக பாதுகாக்கப்படுகிறது.

அந்த ‘நெகட்டிவ்வை நாம் வெளிச்சத்தில் பார்த்தால், நமக்கு ஒன்றுமே புரியாது. தலை சுற்றும் (வாந்தி வருமா என்று கேட்கக் கூடாது ) அந்த ’நெகட்டிவ்வைச் சில விசேஷக் கருவிகளில் செலுத்தி, பாசிட்டிவாக மாற்றுவார்கள். அதாவது, கொஞ்சம் தடிமனான ஒரு காகிதத்தில் (இதில் இரு வகை காகிதங்கள் உண்டு ஒன்று கிளாசிக் இது

பளபளவென்று இருக்கும் மற்றொன்று மேட் பேப்பர் அது கொஞ்சம் சொரசொரப்பா இருக்கும் ) அழகாக அச்சடித்துத் தருவார்கள். அதைத்தான் நாம் போட்டோகிராஃப்’ புகைப்படம் என்று சொல்கிறோம்.

படச் சுருள் சுழலும்...
S.ஹமீது

அன்னாந்து பார்த்தது கேமரா ! 21

அதிரைநிருபர் பதிப்பகம் | July 05, 2013 | , , , , , ,

அட ! இதைத்தான் பார்த்துட்டோமேன்னு அலுப்புத் தட்டினாலும் பரவாயில்லைங்க. மெய்யாலுமே பாஸ் இது நானே என் சொந்தக் கைகொண்டு எடுத்த ஃபோட்டோங்க அதுவும் இடதுகை விரல்கள் கேமராவின் பாடியை(!!) பிடித்துக்கொள்ள வலதுகை விரல்கள் கொண்டு விழிலென்ஸை உருட்டி உருட்டி ஒரு நிலைக்குள் வந்ததும் ஆள்காட்டி விரல் கொண்டு கஷ்டப்பட்டு அழுத்தி எடுத்த படங்கள் !

அல்கைல் ரோட்டில் காலைநேரப் பயணத்தில் காரை ஓரம் கட்டி இந்த தூரம் சுருக்கி ரசித்து எடுத்த படம் !


ஒரு மீட்டிங் அட்டெண்ட் செய்துவிட்டு அல்புர்ஜ் கலிஃபா டவரிலிந்து வெளியில் வரும்போது அன்னாந்து பார்த்தேன் அட ! கேமராவும் கையில் இருந்தது... வானம் பார்த்தது கேமரா !


படம் எடுக்க D90 நிக்கானுடன் அங்கே நிக்கனும்னு நிற்கவில்லை எல்லாமே எதேச்சையாக நடந்த நிகழ்வுகள் !

நம்புங்க !

அபூஇப்ராஹீம்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு