எழும்பூர் இரயில் நிலையம்
எட்டுமணி இராப் பொழுது
எங்களூர் கம்பன் ரயில்
எட்டு பத்துக்கு எடுக்கத்தயார்
வசந்த பவன் தயிர்சாதம்I
வாழையிலைப் பொட்டலத் துள்
வாங்கி வைத்த வார இதழ்
வாசிக்க கை இருப்பில்
மேற்படுக்கைக் கேட்டு வாங்கும்
மாணவப் பருவம் அது
மேற்படி ரயில் பயணம்
மறவாத இன்ப வடு
ரயில் கிளம்பும் முன்னரே
உயிர் போகும் ஊர்நோக்கி
தயிர் சாதம் உண்டபின்னே
துயில் நாடி கண்சொக்கும்
தாள கதி தாலாட்ட
தூக்கம் கனா வந்துசேறும்
பாலச் சத்தம் தட்டியெழுப்ப
பக்கம் புரண்டு படுக்கை தொடரும்
திருத்துறைப்பூண்டி காஃபி ருசி
அடியக்காமங்கலத்தில் எழுப்பிவிடும்
முத்துப்பேட்டை நிலையம் முதல்
வாசலில் நின்றால் வயல் விரியும்
சுந்தரம் தம்பிக்கோட்டை மரவகாடு
அப்பக்கம் உப்பள வெண்மை
இப்பக்கம் தென்னையின் பசுமை
இடையிடையே மாவும் பலாவும்
கேசம் கலைக்கும் எதிர்க்காற்றில்
வாசம் இருக்கும் ஈரமண்ணின்
விரல்கள் துலாவி முடி ஒதுக்க
தலைமுடிக்குள் நிலக்கரி துகள்கள்
சங்கிலிப் பாலம் தொட்டுவிட்டால்
சந்தோஷ பலம் கூடிவிடும்
அதிராம்பட்டினம் நிலையத்துள்
ரயில் நுழைய மனம் மகிழும்
ஊரின் உயிரனங்களில்
ஒன்றாகவே கம்பன் ரயில்
உறவொன்று இறந்ததுபோல்
துக்கம் காக்கிறது ரயில் நிலையம்
நிஜ ரயில் கனவாகிட
பொம்மை ரயில் பிள்ளைகளுக்கு
தடதடக்கும் ஊர் எல்லையோ
தண்டவாளம் புதைந்த மயானமாய்!
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்


