
காணாமல் போன
சாலமீது
சட்டென்று நேரில் வந்து நின்றதும்
திக்கென்றது
வழக்கமான சுறுசுறுப்பும்
வாட்டசாட்டமான தோற்றமும்
வகைமாறி
கட்டுக் குழைந்து
கண்கள் பஞ்சடைந்து
பார்க்கப் பரிதாபமாக...
என்னாயிற்று சாலமீதுக்கு?
மல்லிபட்டிணம் சாலமீது
பூர்வீகம் அதிரைதான்
அப்பாவி அவர்தம்
சொந்தபந்தங்கள்
சொத்துபத்துகளை அபகரித்து
கைவிட்டுவிட
மல்லிபட்னம் சாலமீதானார்
என்பது செவிவழிச் சேதி
வரையறுத்துச் சொல்லிவிட முடியாத
ஒழுங்கான பட்டியலுக்குள் வராத
பொருட்கள் அடங்கிய
அழுக்கு மூட்டை ஒன்றும்;
வெளுத்துச் சாயம்போன
ஊதா நிற
மாப்பிள்ளைத் தொப்பியும்;
சுயமாக ஒட்டுப்போட்ட
நைந்துபோன வேட்டி சட்டையும்;
தடித்த
மேல் ஸ்தாயி
மழலைக் குரலும்
சாலமீதுவின் அடையாளங்கள்
ரொட்டி சால்னா
சோறு ஆணம்
சிங்கிள் டீ
சில்லறை என
ஏதாகிலும் கொடுத்தால்
தடித்த குரலில்
மெளலீது
திக்ர்
ஈ எம் ஹனீஃபா என்று
கலந்துகட்டிப் பாடியும்
காது பொத்தி
கால் உதைத்து
நிலம் அதிர
குதித்துக் குதித்து ஆடியும் காட்டும்
சாலமீது
ஹந்தூரி
பெருநாட்கள்
நோன்பு மாதத்திலும்
கொடிமர மேடையிலோ
பெரிய புளிய மரத்தடியிலோ
ரயிலடி பெஞ்சிலோ
மூட்டையைப் பிரித்து
சோலியாயிருக்கும்
சுறுசுறுப்பான சாலமீது
திரும்பி வந்ததிலிருந்து
அடிவயிற்றில் வலிப்பதாகச் சொல்லி
பாட்டு ஆட்டம் இரண்டிலும்
வேகம் குறைந்து போனது
எப்போ பார்த்தாலும்
சுணக்கமாகவே இருந்தது
என்ன நடந்தது
என்று சொல்லத்தெரியாத
சாலமீதுவை
யாரோ
ஆஸ்பத்திரிக்கு அழைத்துப்போய்
ஐந்து கிலோ அரிசியும்
அம்பது ரூவா பணமும்
ஒரு
ஆர்லிக்ஸ் போத்தலும்
தந்ததாகச்
சாலமீது சொன்னபோது
மனசு வலித்தது;
சாட்டையால் அடிக்க வேண்டும்போல்
சமூகத்தின்மீது
சினம் கூடியது!
சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்