இணையம் கொடுக்கும் சுகம் இன்றைய இளைய தலைமுறைய மட்டுமல்ல ஏனையோரையும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்திலிருந்து பின்னுக்கு இழுத்து விட்டது என்று ஒருசாரார் சாடினாலும். இன்னும் புத்தகப் பிரியர்களும் அதன் பலன்களை உணர்ந்தவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டுதான் செல்கிறது என்பதை கடந்த சென்னை புத்தக காட்சியில் நிருபிக்கப்பட்டிருக்கிறது.
வாசிக்கும் பழக்கம் இயல்பிலே வளர்த்து கொண்டவர்கள் புத்தகங்களை தேடிச் செல்வார்கள். கடந்த மே மாதம் ஊரில் இருக்கும்போது அறிஞர் அதிரை அஹ்மது அவர்கள் எனக்கு இரண்டு புத்தம் புதிய புத்தகங்களை தந்தார்கள். அந்த இரண்டு புத்தகங்களில் ஒன்றை கையில் வைத்திருக்கும்போதே கம்பிரமாக இருப்பது போன்ற புத்துணர்வு கொடுத்தது, உடணடியாக வாசிக்க வேண்டும் என்று ஆவல் ஏற்பட்டது. மற்றொரு புத்தகம் நம் குழந்தைகளோடு உறவாடும் உணர்வு தந்தது.
அவ்வாறான உணர்வுகளை தூண்டிய புத்தகங்களில் ஒன்று "அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம்" மற்றொன்று "நபி(ஸல்) வரலாறு நம் குழந்தைகளுக்கு".
அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் - இது ஒரு பாடப் புத்தகமென்றே சொல்லலாம், இதன் ஆசிரியர் 'மிர்ஸா யாவர் பெய்க்'.
(தமிழாக்க பதிப்பில் 256 பக்கங்கள் கொண்ட பாடத்தில்) ஒவ்வொரு அத்தியாயமும் ரத்திணச் சுருக்கமாக தலைப்பின் கருவை சுமந்து செல்கிறது.
அடையாளம் தெரியாமலும் பலஹீனமாகவும் ஒடுக்கப்பட்டும் இருந்த மக்களை உலகம் வியக்கக் கூடியவர்களாகவும், பலமானவர்களாகவும் நபி(ஸல்) அவர்கள் ஒரே தலைமுறையில் மாற்றிக் காட்டினார்கள். இதனை எவ்வாறு சாதித்தார்கள் என்பதை தெரிந்து கொண்டால் இவ்வுலகில் சாதிக்கலாம்.
அறிஞர் அதிரை அஹ்மது அவர்கள் ஆங்கில மூலத்திலிருந்து அழகிய தமிழ் நடையில் மொழியாக்கம் செய்து தந்துள்ளார்கள். தனது அறிமுகவுரையில் "வாசகர்களின் புரிதலையும் தேவையையும் கருத்துள் கொண்டு, வழக்கமான மொழி நடையைச் சற்றே தளர்த்தி இந்த நூலை மொழியாக்கம் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்கள், மேலும் இந்நூலின் பேசுபொருளின் மீது ஆழ்ந்த கவனம் செலுத்தி, இதனை ஒரு பாடநூலாக கருதி படிக்கத் தொடங்குவோர், எதிர்காலத்தில் தம்மைத் தலைமைத்துவத்திற்கு ஆயத்தம் செய்வர்" என்ற நம்பிக்கையையும் பதிந்துள்ளார்கள்.
இந்நூலில்...
- தலைவரின் தகுதிகள்
- தலைமைத்துவத்தை நோக்கி
- 'தவ்பா' மனம் வருந்திப் பிரார்த்தித்தல்
- பொறுமையும் நன்றியுடைமையும்
- அல்லாஹ்வின் மீது அன்பு
- அசாதாரண குறிகோள்
- தன்னிகரற்ற தற்பொறுப்பு
- தலைசிறந்த சமுதாயம்
- தலைமை உருவாக்கம்
- 'இறுதியில் வெற்றி'யில் இணைந்திருப்பது
- தனித் தன்மை
- தூதுச் செய்தியின் மீது உறுதியான நம்பிக்கை
- நபிமார்களின் அழைப்பு பணி
- முன்னணி தலைவர்
- விட்டுக் கொடுக்க வேண்டுமா ?
- 'ஹிஜ்ரா'வின்போது தலைமைத்துவப் பண்புகள்
- 'ஹிஜாஸ்' பகுதியும் அதன் மக்களும்
- குறிக்கோளுக்கு முதலிடம்
- மக்கா வெற்றி
- சொன்னதைச் செயலில் காட்டுதல்
- 'பத்ரு'க் களத்தில் படிப்பினைகள்
- 'ஹுதைபிய்யா' உடன்படிக்கை
- பெருந்தன்மையும் மன்னிப்பும்
- மாற்றமும் ஏற்றமும்
- சகோதரத்துவப் புத்தமைப்பு
- தலைமைக்கு முன்னுரிமை
- அனைவருக்கும் பொதுவான அதிகாரம்
- மதீன ஒப்பந்தம்
- ஆவணத்தின் அடிப்படையில்
- தோல்வியின் காரணமென்ன
- தலைமைத் தேர்வு
- தலைவர் எதிர்கொள்ளும் சவால்கள்
என்ற தலைப்புகளில் அருமையான எழுத்து நடையில் நம்மை அழைத்துச் செல்கிறது இந்த பயனுள்ள நூல் !
மேலான்மைத் துறையில் இருக்கும், மேலும் சாதிக்கத் துடிக்கும் சகோதரர்களுக்கு இதில் படிப்பினைகளும் ஆலோசனைகள் நிரம்பி இருக்கிறது.
விலை : ரூ 130/-
இலக்கியச் சோலை - பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளார்கள்.
அபூஇப்ராஹீம்

