தேசிய கீதம் பாடப்படும் போது எழுந்து நிற்காததற்காக ஒரு குடும்பம் தியேட்டரில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஒன்றும் இந்தியாவிற்கு புதிதல்ல... பல முறை நடந்தாலும் இஸ்லாமியர்களின் பெயர் வந்தால் மட்டும் பரபரப்பாகிவிடுகிறது.
இந்த சர்ச்சை குறித்து முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே சந்துரு , " தேசிய கீதம் பாடும்போது எழுந்து நிற்காதது குற்றமல்ல" என்று கருத்து தெரிவித்துள்ளார். அதற்கு கேரளாவில் நடந்த Bijoe Emmanuel V. State Of Kerala, வழக்கு எண்: 1987 AIR (SC) 748 -ஐயும் சுட்டிகாட்டினார்.
என்ன வழக்கு அது ? சற்று விரிவாக பார்க்கலாம்.
கேரளாவில் யெகோவாவின் சாட்சிகள் மதப்பிரிவைச் சார்ந்த பள்ளி மாணவர்கள் இந்திய தேசிய கீதம் பாட மறுத்ததற்காக பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டத்தை ரத்துசெய்து, அவர்களை மீண்டும் ஏற்றுக் கொள்ளுமாறு கேரள அரசுக்கும் பள்ளிக்கும் உச்சநீதிமன்றமே உத்தரவிட்டது. அமைப்புச் சட்டத்தின் பிரிவு 25-இல் உள்ளக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு, குடிமக்கள் தங்கள் விருப்பத்திற் கேற்ற மதத்தினைக் பற்றிக் கொள்ளலாம். எனவே உண்மையாக தம்மதப்பற்றிற்கு தடங்கலாய் விளங்கும் போது அம்மாணவரை தேசிய கீதத்தைப் பாட வற்புறுத்துதல் இந்திய அமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 19(1)(அ) மற்றும் 25(1)-க்கும் மாறானது. எனவே அம்மாணவர்களை கொடியை வணங்கவும் தேசிய கீதத்தை பாடவும் வற்புறுத்துதல், அமைப்பு சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு மாறானதாகும். ஆதலால் அம்மாணவர்களை அப்பள்ளி மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு, உச்ச நீதிமன்றம் இவ்வழக்கில் தீர்மானித்து, கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை ஒத்தி வைத்தது. உச்சநீதிமன்றம் மேற்கோளிட்ட வரிகள் மிகவும் கவனிக்கத்தக்கது.
'நமது பாரம்பரியம் சகிப்புத்தன்மையைப் போதிக்கிறது. நமது தத்துவம் சகிப்புத்தன்மையைக் கற்றுத்தருகிறது. நமது அரசியலமைப்புச் சட்டமும் சகிப்புத் தன்மையைக் கற்பிக்கிறது. நாம் அதை நீர்த்துப் போகச் செய்ய வேண்டாம்'
முஸ்லிம்களை பற்றி மட்டும் பேசுவோர் ஏன் இந்த வழக்கு பற்றி பேசுவதில்லை ?
அது போகட்டும்!
திரையரங்குக்குள் தேசிய கீதம் ஒலிக்கச் செய்வதே முதலில் சட்டவிரோதமான செயல் தான். The prevention of insults to national honour act, 1971 சட்டத்தின் படி தேசிய கீதம் மூடிய அறைக்குள்ளும் கூரையின் கீழும் பாடப்பட கூடாது என்ற சட்டத்தை எத்தனை பேர் அறிந்து வைத்துள்ளனர் ??
1971-ம் ஆண்டின் சட்டம் Section 3 ‘யாரெல்லாம் தேசிய கீதம் இசைப்பதற்கு இடையூறு செய்கிறார்களோ அவர்களெல்லாம் தண்டனைக்குரியவர்கள்” எனச் சொல்கிறது. எவ்விடத்திலும் எழுந்து நிற்பதை பற்றி குறிப்பிடவில்லை. காலங்காலமாக எழுந்து நிற்பதை மரியாதை என நம்பிக்கொண்டதன் விளைவாகவே இவையெல்லாம் தேசத்துரோகமாக பார்க்கப்படுகிறது. ஆனால் தேசிய கீதம் ஒலித்துக்கொண்டிருந்த போதே அதனை பாதியில் நிறுத்திவிட்டு அமெரிக்கர்களைப் போல் நெஞ்சில் கை கட்டி நிற்க வலியுறுத்தினார் சசிதரூர். அது வழக்காக வந்த போது அதில் உள்நோக்கமில்லை என விடுவிக்கப்பட்டார் என்பது வேறு விஷயம்
2001ம் ஆண்டு பீகாரில் பாட்னாவில் நடந்த குடியரசு தின விழாவில் தேசிய கீதம் பாடப்பட்ட போது லாலு-ராப்ரி தம்பதி எழுந்து நிற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது வழக்காக வந்த போது எழுந்து நிற்காதது குற்றமல்ல என தீர்ப்பு வழங்கி மனுவை தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பை எத்தனை பேர் அறிந்து வைத்துள்ளனர்?
சென்ற வருடமும் இதே போல் ஓர் சர்ச்சை உருவானது. சல்மான் என்ற 25 வயது இளைஞன் தன் நண்பர்களுடன் தியேட்டர்க்கு செல்ல, அங்கே தேசிய கீதம் ஒலித்த போது எழவில்லை என்பதற்காக காவிகளால் வாக்குவாதத்திற்குள்ளாகி பின்னர் போலிசாரால் இரவோடு இரவாக பிடிக்கப்பட்டு தீவிரவாதி போல் விசாரிக்கப்பட்டுள்ளார். சல்மான் மனித உரிமை ஆர்வலர், பல மனித உரிமை சார்ந்த மேடைகளிலும் பேசியுள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் ஆட்சியின் போக்கை குறித்து விமர்சித்துள்ளார். இது போதாதா? அவரை தேச துரோக வழக்கில் கைது செய்தது கேரள போலீஸ்.
ஆளுக்கொரு சட்டம், தகுதிக்கேற்ப நீதி , பகுதி வாரியாக குழப்பமான தீர்ப்புகள் என்ற நிலையில் தான் இந்திய திருநாட்டின் அரசியலமைப்பு உள்ளது. எதை புரிந்துகொள்ள, எதை கடைபிடிக்க????? எழுந்து நிற்பது தவறில்லை என ஒரு புறம் சொல்லிக் கொண்டே இன்னொரு பக்கம் தேச விரோதமாக பார்க்கிறார்கள். அதுவும் இஸ்லாமியர்களுக்கு மட்டுமே இந்த நிலை!
ஏன் இஸ்லாமியர்கள் மட்டுமா எழுந்து நிற்காமல் இருக்கிறார்கள். இன்று தேசிய கீதமொலிக்கும் ஒவ்வொரு தியேட்டர்களிலும் ஆய்வுப்பணி செய்து முடிவுகளை வெளியிடட்டுமே பார்க்கலாம்! கடந்த செப்டம்பர் மாதம் மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த வழக்குரைஞர் ஆர்.பாண்டிமகாராஜா என்பவர் பதிந்த வழக்கிற்கு தீர்ப்பு சொல்லப்பட்டது. திரையரங்குகளில் காட்சி துவங்கும் முன் தேசிய கீதம் ஒலிபரப்பும் போது மக்கள் எழுந்து நிற்பதில்லை என்றும் அதனால் திரையரங்குகளில் தேசிய கீதத்தை தடை செய்ய வேண்டுமென்றும் கூறியிருந்தார். எழுந்து நிற்காதது குற்றமல்ல என்றும், தேசிய கீதம் குறித்த விதிகள் தனியாக உள்ளது, அவை மீறுவதாக இருந்தால் மட்டும் தனிபட்ட நபரின் மீது வழக்கு தொடுக்கலாம் என கூறி மனுவை தள்ளுபடி செய்தது மதுரை நீதிமன்றம்.
இவ்வளவெல்லாம் சம்பவங்கள் அடுக்கி, விரிவாகச் சொல்லி என்ன உபயோகம் ? இஸ்லாமியர்களின் செயல்கள் மட்டும் எங்கு நிகழ்ந்தாலும் பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கப்படுகிறது !
ஆமினா முஹம்மத்

