Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கோடு உயர்ந்தது! குன்றம் தாழ்ந்தது ! 0

அதிரைநிருபர் பதிப்பகம் | December 29, 2016 | ,

இந்தக் கட்டுரையின் தலைப்புக்கு சொந்தக்காரர் அறிஞர் என்று தமிழகம் அடைமொழி சூட்டி அழைக்கும் அண்ணா அவர்களாவார்கள். இந்தக் கட்டுரையின் பேசு பொருளுக்கு இதைவிட சிறந்த தலைப்பு எனக்குத் தென்படவில்லை. ஆகவே அண்ணா அவர்களிடமிருந்து இதைக் கடன் வாங்கிவிட்டேன். ஏற்கனவே அவரது இதயம் கடன் வாங்கப்பட்டு இருக்கிறது என்ற செய்தியும் உங்களுக்கெல்லாம் தெரிந்ததுதானே!

1970 களில் தமிழக அரசு தலைமைச் செயலக வட்டாரங்களில் ஒரு நகைச்சுவையான நிகழ்வை பரவலாக கிசு கிசு என்று பேசிக் கொள்வார்கள் . அந்த நேரத்தில் ஆளும்கட்சியின் அமைச்சர்களின் கல்வித் தரத்தை விமர்சிக்க எதிர்க் கட்சி மேடைகளில் கூட இந்த நிகழ்வு பேசப்படும்; கைதட்டி ரசிக்கப்படும். நாமும் அதைப் பகிர்ந்து ரசிக்கலாம்.

விஷயம் இதுதான்.

ஐந்தாம் வகுப்புக் கூட தேறாத ஒருவருக்கு, கட்சிக்காக கடுமையாக உழைத்தவர் என்ற முறையில் அமைச்சர் பதவியை வழங்கினார். அன்றைய முதல்வர்.

அமைச்சர் தனது அறையில் வந்து அமர்ந்தார். எப்போதும் திரைப்படப் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருக்கும் பழக்கம் உடைய அவருக்கு ஒரு கையடக்கமான சிறிய ட்ரான்சிஸ்டர் இருந்தால் நல்லது என்று தோன்றியது.

தனது பி. ஏ யை கூப்பிட்டார். பி.ஏ ஒரு புதிய I A S அதிகாரி.

“ஒரு சின்ன ரேடியோ வேணும். என்ன வாங்கலாம்?”

“ பிலிப்ஸ் ரேடியோ வாங்கலாம் சார். அதுதான் நல்ல குவாலிடியாக இருக்கும் “

“ சரி ! ஒரு பிலிப்ஸ் ரேடியோ வாங்கிட்டு வரச் சொல்லுங்க! இந்தாங்க பணம். “

I A S அதிகாரி பணத்தைப் பெற்றுக் கொண்டு போனார். சற்று நேரத்தில் ட்ரான்சிஸ்டர் வந்ததது. அதைப் பெட்டியை திறந்து அதை மின் இணைப்பில் பொருத்தி அமைச்சரே இயக்கினார்.

ரேடியோவில் அப்போது செய்திகள் சொல்லும் நேரம். ரேடியோ இப்படி சொல்லியது .

“ இது ஆல் இந்தியா ரேடியோ ! “ 

இதைக் கேட்டதும் அமைச்சருக்கு முகம் சிவந்தது. ரேடியோவை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு மீண்டும் பி ஏ யைக் கூப்பிட்டார்.

“ஏன்யா ! நான் உம்மை என்ன ரேடியோ வாங்கிவரச் சொன்னேன்? நீர் என்ன வாங்கி வந்திருக்கிறீர்?”

“பிலிப்ஸ் ரேடியோ வாங்கச் சொன்னீங்க! அதுதான் இது. “

“ யாரைய்யா ஏமாத்தறீங்க? இது ஒன்னும் பிலிப்ஸ் ரேடியோ இல்லே”

“இல்லே சார் இது பிலிப்ஸ்தான் “

“யோவ் ! அவனே சொல்றான் இது ஆல் இந்தியா ரேடியோன்னு நீர் திரும்பவும் பிலிப்ஸ் பிலிப்ஸ் என்கிறீர். உடனே இதைக் கொண்டு போய் திருப்பிக் கொடுத்துட்டு உண்மையான பிலிப்ஸ் ரேடியோவோட வாரும்! “

விழிகள் பிதுங்க தலையில் அடித்துக் கொண்டே புதிய I A S அதிகாரி முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டே ரேடியோவைத் தூக்கிக் கொண்டு மாண்புமிகு அமைச்சரின் அறையைவிட்டு வெளியே வந்தார்.

கடைசியில் முதல்வர் தலையிட்டு விபரம் கூறி புரியவைத்தார் என்பதுதான் அந்த செய்தி. நகைப்பிக்கிடமான அந்த செய்தியை இன்று நினைத்துப் பார்க்கும் தருணம் வந்து இருக்கிறது.

I A S, I P S, I F S, போன்ற தேர்வுகளுக்கு தங்களை ஆட்படுத்திக் கொள்பவர்கள் பொதுவாக சிறந்த அறிவாளிகளாக இருப்பார்கள். சிறுவயது முதலே ஆரம்பக் கல்வி வகுப்பில் இருந்தே முதலிடம் பெற்று சிறந்து விளங்குவார்கள். விளையும் பயிர் முளையிலேயே தெரியும்.

எவ்வளவு பெருமை வாய்ந்த படிப்புகளும் பதவிகளும் இருந்தாலும் I A S - I P S - I F S ஆகிய தேர்வுகளில் வெற்றி பெற்று பதவிகளில் அமர்பவர்களுக்கு இருக்கும் பாங்கும் மதிப்பும் அளப்பரியது.

பிறப்பிலேயே அறிவாளிகளாக அல்லது வளர்க்கப்படும்போது அறிவாளிகளாக வளர்க்கப்படும் I A S - I P S - I F S ஆளுமை பெற்றவர்களுக்கு எந்த அளவு அறிவு இருக்கிறதோ, நிர்வாகத் திறன் இருக்கிறதோ, அதே அளவு நாட்டின் நலனிலும் அவர்களுக்கு பொறுப்பும் இருக்க வேண்டும் என்றும் நன்னடத்தை உரியவர்களாகவும் இருக்க வேண்டுமென்றும் நாட்டு நலனின் அக்கறை உடையவர்களாகவும் இருக்க வேண்டும் என்றும் இந்த நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் கல்வியறிவில்லாத மக்கள் எதிர்பார்ப்பது இயல்பு. அவர்கள் சொன்னால் சரியாக இருக்கும் என்று கண்ணை மூடிக் கொண்டு நம்பும் இயல்பே மக்களுடையது.

கடுமையான போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று தங்களின் அறிவுத்திறமையை நிருபிப்பவர்களே I A S - I P S - I F S போன்ற தகுதிகளைப் பெற்றுக் கொள்கிறார்கள். இத்தகைய தேர்வில் கலந்து கொள்ளும் பலர் பலவித தரங்களிலும் நிலைகளிலும் சோதிக்கப்பட்டு, வடிகட்டப்பட்டே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். Civil Services Examinations எனப்படும் கடினமான இத்தேர்வுகளை Union Public Service Commission (UPSC) என்கிற அமைப்பே நடத்துகிறது.

எடுத்துக்காட்டாக, 2015 ஆம் ஆண்டு ஏறக்குறைய பத்து இலட்சம் பேர் கலந்து கொண்ட தேர்வுகளில் 180 பேர்கள் மட்டுமே தகுதி பெற்றார்கள் என்ற மலைக்கவைக்கிற புள்ளிவிபரம் இந்தத் தேர்வுகளில் தேர்வானவர்களின் அறிவுத்திறமைகளை பறை சாற்றும்.

ஆனாலும்,

ஜனநாயகம் என்கிற அருமையான கருவி, எவ்வாறு பல அற்புதங்களை நிகழ்த்துகிறதோ அவ்வாறே சில ஆபத்துக்களையும் நிகழ்த்துகிறது. அந்த ஆபத்துக்களின் ஒரு அச்சமூட்டும் அம்சம்தான் ஐந்தாம் வகுப்புக் கூட படிக்காதவர்கள், குற்றப் பின்னணி உள்ளவர்கள், பேட்டை ரவுடிகள், கட்டைப் பஞ்சாயத்துக்காரர்கள் இடும் உத்தரவுக்கு I A S, I P S, I F S படித்தவர்கள் தலையாட்டும் நிலைமையும். சுயநல அரசியல்வாதிகளின் கரங்களில் சிக்கி உயர் படிப்புப் படித்த I A S, I P S, I F S அதிகாரிகள் பணியாற்றுவது – இட்டதை செய்வது – எடுப்பார் கைப்பிள்ளை ஆவது போன்ற நிலைமைகள் சமூகஅரசியல், நிர்வாகம் ஆகிய உயர்ந்த இலக்குகளின் மீது தடவி வைக்கபட்டிருக்கும் சகதிச் சான்றுகள். இன்றைய நிர்வாக அமைப்பில் அகற்ற இயலாத அசிங்கங்கள். பல்வேறு அரசுத் திட்டங்களில் ஆளும்கட்சி மற்றும் அரசு அதிகாரிகளின் கூட்டணி கொடி கட்டிப் பறக்கிறது.

இதைக் குறிப்பிடும் நேரத்தில் மீண்டும் அறிஞர் அண்ணா அவர்களை நினைவு கூற வேண்டியவர்களாகிறோம். 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்று அண்ணா அவர்கள் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டதும் மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் மாநாட்டைக் கூட்டினார்.

அந்த மாநாட்டில் அண்ணா அவர்கள் பேசும்போது I A S, I P S அதிகாரிகளைப் பார்த்து இவ்வாறு கூறினார். “ இன்று நான் இந்த மாநிலத்தின் முதலமைச்சராகி இருக்கிறேன். நீங்கள் எல்லோரும் அரசியலில் ஈடுபட்டு முதலமைச்சராகவேண்டும் என்று முயற்சி செய்தால் உங்களில் ஒருவர் முதல்வராகவும் இன்னும் சிலர் அமைச்சர்களாகவும் வந்துவிட முடியும். ஆனால் முதலமைச்சராகிய நான் எவ்வளவு முயற்சி செய்தாலும் உங்களைப் போல I A S, I P S அதிகாரியாக ஆக இயலாது; இயலவே இயலாது “ என்று கூறி பலத்த கைதட்டல்களைப் பெற்றுக் கொண்டார். இது சரித்திரம்.

அண்ணா அவர்களுடைய மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் அரசாண்ட கட்சிகள் எவ்வளவுதான் பல்வேறுவகையான நலத் திட்டங்களைத் தீட்டி நடைமுறைப் படுத்தி இருந்தாலும் சர்க்காரியா கமிஷன் என்றும் சொத்துக் குவிப்பு வழக்கு என்றும், அமைச்சர்களின் மீது வருமானத்துக்கு அதிகமான சொத்து, செம்மண் முதலிய கனிம வளக் கொள்ளை போன்ற வழக்குகள் ஆகியவையும் இருபிறவிகளாக இணைந்து வளர்ந்ததையும் நாம் புறந்தள்ளிட இயலாது. இந்த ஊழல்களில் எல்லாம் உயர் படிப்புப் படித்த அரசு அதிகாரிகளின் கரங்களும் இணைந்து இருந்தன என்பதையும் மறுக்க இயலாது.

படிப்பில் சிறந்து விளங்கிய காரணத்தால், பதவிபெற்று அறிவுசார்ந்த மேன்மையுடைய I A S, I P S அதிகாரிகள், தங்களுடைய ஆசை அவர்களுடைய அறிவின் கண்களை மறைத்துவிட்ட காரணத்தால் மக்கள் விரோத செயல்களிலும் இலஞ்ச லாவண்யங்களில் ஈடுபடும் முதல் அமைச்சர் உட்பட்ட அமைச்சர்களுடைய நடவடிக்கைகளுக்கு தாங்களும் ஒத்துழைப்பு கொடுப்பது ஒரு பக்கம், அவ்வாறே ஆளும் வர்க்கமும் நிர்வாக வர்க்கமும் இணைந்து ஊழல் செய்யும்போது ஏற்படும் சட்ட பூர்வ பிரச்னைகளில் இருந்து அமைச்சர்களை தற்காத்துக்கொள்வது எப்படி என்கிற வழிகளையும் சொல்லித்தருபவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதைக் கடந்தகால வரலாறுகளில் இருந்து நாம் கவனிக்கும்போது I A S, I P S அதிகாரிகளைப் பார்த்து படித்தால் மட்டும் போதுமா ? என்றே வினா எழுப்ப வைக்கிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் 23/06/2015 ஆம் தேதி வெளியான தகவல் இவ்வாறு சொல்கிறது.

100 IAS officers came under the CBI scanner in the last five years for their alleged involvement in various corruption cases with the Central Government according sanction to prosecute 66 of them.

The CBI has sent requests seeking sanction to prosecute 100 IAS officers, 10 CSS Group A officers and nine CBI Group A officers since 2010. Minister of State for Personnel, Public Grievances and Pensions, Jitendra Singh said a written response in the Rajya Sabha.

2010, ஆம் ஆண்டிலிருந்து 100 IAS அதிகாரிகளின் மீது பல்வேறுவகையான ஊழல் மற்றும் விதிமீறல்கள் தொடர்பான வழக்குகளை CBI ஆய்வு செய்தது. அவற்றுள் 66 வழக்குகள் மீது மேல் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது என்று மத்திய துணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துபூர்வமான தனது பதிலில் பாராளுமன்ற மேலவையில் தெரிவித்து இருக்கிறார்.

இது மட்டுமல்லாமல் இன்னொரு தகவலையும் நாம் காண நேரிட்டது. அது இதுதான்

Press Information Bureau 

Government of India
Ministry of Personnel, Public Grievances & Pensions
23-April-2015 17:13 IST

Corruption Cases Against IAS/IPS/IRS Officers 
According to the information made available by the Central Bureau of Investigation (CBI), it had registered 74 cases of Prevention of Corruption Act against IAS/IPS/IRS officers during the last three years i.e. 2012, 2013, 2014 & 2015 (31.03.2015). 

இவற்றிலிருந்து என்ன தெரிகிறது என்றால் படிப்பு வேறு; பண்பு வேறு என்பதுதான். படித்தவர்கள் தவறு செய்ய மாட்டார்கள் என்கிற பொது விதி அல்லது நம்பிக்கை குழி தோண்டி புதைக்கபட்டிருக்கிறது என்கிற நிதர்சனம்தான்.

தன்னலம் கருதி அத்துமீறல்களில் ஈடுபடும் அதிகாரிகளைத் தவிர அடிப்படைக் கல்வியறிவு இல்லாமல் அமைச்சர்களாக ஆக்கப்படுபவர்களுக்கு தவறான வழிகளை சொல்லிக் கொடுத்து ஊழலில் திளைக்க நீரூற்றி வளர்ப்பதும் இத்தகைய IAS / IPS / IRS அதிகாரிகள்தான்.

தவறான புரிதல்களில் இருந்து அடிப்படைக் கல்வி அறிவு இல்லாமல் ஜனநாயக முறையில் அமைச்சர்களாக ஆகி வருகிறவர்களுக்கு நல்ல வழி காட்ட வேண்டிய பொது நலனும் பொறுப்பும் இததகைய அதிகாரிகளுக்கு இருக்கிறது. ஆனால் எத்தனை பேர்கள் இவ்வாறு நல்வழியில் நடப்பதற்கு துணை நிற்கிறார்கள் என்பது கேள்விக்குறி.

அமைச்சர்களுக்கும் அதிகாரத்தலைமைக்கும் தவறான வழிகளைக் காட்டுவது, அமைச்சர்களும் அதிகாரத் தலைமையும் தாங்களாகவே தவறுகளை செய்யத் துணியும்போது தைரியம் கொடுத்து துணை நிற்பது, தவறுகளை சுட்டிக் காட்டி திருத்துவது போன்ற பொறுப்புகளை மறந்து தாங்கள் கற்ற கல்விக்கு இழுக்குத் தேடுவதாகவே பலரின் செயல் அமைந்து இருக்கிறது.

அப்படியானால் ஒழுங்கான, உருப்படியான, நேர்மையான அதிகாரிகளே இல்லையா ? இப்படி ஒட்டு மொத்தமாக அனைவரையும் குற்றம் சாட்டுவது சரியா என்ற கேள்வி எழலாம். எத்தனையோ நேர்மையான முத்துக்கள் போன்ற சிறந்த அதிகாரிகள் இருக்கவே செய்கிறார்கள். ஆனால் அரசியல்வாதிகளோடு அவர்கள் ஒத்துழைக்காவிட்டால் அத்தகைய அதிகாரிகளின் திறமைக்கேற்ற துறைகள் அவர்களுக்கு வழங்கப் படுவதில்லை. ஒரு அரசில் மிகப் பெரிய பொறுப்பில் இருந்து பல நல்ல காரியங்களை செய்த அதிகாரி, அடுத்த ஆட்சி மாறும்போது எங்கேயாவது தண்ணி இல்லாத காட்டுக்குத் தூக்கி அடிக்கப்படுகிறார். இதனால் நமக்கு ஏன் வம்பு என்று தங்களை காப்பாற்றிக் கொள்ளும் ஒரு நிர்ப்பந்தத்துக்கு அதிகாரிகள் ஆளாக்கப்படுகிறார்கள்.

அண்மையில் தமிழக தலைமைச் செயலாளர் திரு. ராம் மோகன்ராவ் அவர்களின் வீடு வருமானவரி, அமலாக்கத்துறை, சி பி ஐ ஆகிய மத்திய அரசின் அதிகாரிகளால் சோதனை இடப்பட்டது. இந்திய வரலாற்றில் முதன்முறையாக தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் உடைய அறை மத்திய ரிசர்வ் காவல் துறையின் துணையுடன் நாடே பதைத்து நிற்க சோதனையிடப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் தலைமைச் செயலாளர் உடைய மகனுடைய வணிக நிறுவனங்களும் சோதனைக்குள்ளாக்கப்பட்டன. இந்த வலையில் பல கொழுத்த மீன்களும் அகப்பட்டு அதிர்ச்சிக்குள்ளானோம். பலகோடிகள் அவர்களது வீடுகளிலும் அலுவலகங்களிலும் இருந்து தோண்டி எடுக்கப்பட்டன. இவைகள், அதிகாரவர்க்கங்கள் மக்களின் வயிற்றில் மண்ணை அடித்து சுய இலாபத்துக்காக சேர்த்துவைத்துகொண்ட அசிங்கமான அடையாளங்களுக்கும் சேகர் பாபு போன்ற சுரண்டல் பேர்வழிகளுடன் அதிகாரவர்க்கங்கள் கைகோர்த்துக் கொண்டு கொண்டாடிய ஊழல் திருவிழாவுக்கும்  அங்கு கைப்பற்றப் பட்டவை சான்று பகர்கின்றன.

ஆலமரமாய் கிளைகள் பரப்பி இருக்கும் இத்தகைய ஊழல் சாம்ராஜ்யத்தின் விரிவாக்கத்துக்கு வைட்டமினாகவும் உரமாகவும் திகழ்ந்தவர்கள் அந்த ஊழல்களைத் தடுத்து நிறுத்த தார்மீக பொறுப்பு எடுத்து இருக்க வேண்டிய அரசு அதிகாரிகளே. ஆனால் தேர்தலில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கின்றன. ஆட்சியின் திட்டங்களில் அதிகார வர்க்கங்களுடன் அதிகாரிகள் கூட்டணி அமைக்கிறார்கள்.

“அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்“ என்று புறநானூறு கூறுகிறது. நாடு, அறிவுடையோரை அடையாளம் கண்டு, அவர்களை தத்தமது துறைகளில் பயிற்றுவித்து, அவர்களுக்கு அளவில்லாத சலுகைகள் மற்றும் ஊதியங்களை வழங்கி, கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு செய்கிறது. அதற்காக அவர்களிடம் இருந்து நன்னடத்தை, நற்பண்பு,ஒழுக்கம், ஊழலற்ற தன்மைகள், பொறுப்புணர்வு, பொதுநலன் ஆகிய தன்மைகளைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மங்கை சூதகமானால் கங்கைக்குப் போகலாம். ஆனால் கங்கையே சூதகமானால் இந்த நாட்டை யார்தான் காப்பாற்ற முடியும்.

அரசு அதிகாரிகளின் ஊழல் கூட்டணியால் நாட்டு நலம் என்கிற குன்றம் தாழும்; கூட்டுச்சதி, ஊழல் போன்ற கோடுகள் உயரும்.

இபுராஹீம் அன்சாரி

கரன்ஸிக் களேபரங்கள் 0

அதிரைநிருபர் பதிப்பகம் | December 27, 2016 | , ,


கையில் இருந்த
காசை
வெறும்
காகிதம் என்றது
முட்டாள்களின்
முக்கிய அறிவிப்பு

செல்லாத நோட்டுகளைக்
கொடுத்துவிட்டு
இல்லாத நோட்டுகளை
வாங்கிக் கொள்ள
வங்கிச் செல்ல
அங்கோ
வாக்காளப் பெருமக்கள்
போர்க்காலக் கைதிகள்போல்
வரிசையில் நீள்கின்றனர்

பணம் மாற்ற வழி செய்யாமல்
பணம் அற்றப் பரிவர்த்தனைக்கு
பாரதத்தை மாற்றும்
மந்திரப் பிரதமர்
கள்ளநோட்டுக் கனவில்
வில்லனாகிப் போனார்

மேல்ச்சட்டை இல்லாத
மேனி இளைத்தோர்
காசட்டை இல்லாததால்
கஞ்சிக்கு வழியின்றி
காய்ஞ்சித் தவிக்கின்றனர்

பால் வாங்கப் பணமில்லை
பள்ளிப்
பரீட்சைக்குக் கட்டப் பணமில்லை

சில்லறையில்லாத் திண்டாட்டத்தில்
இந்தியா
கல்லறைக்குள் ளானதுபோல்
மூச்சு முட்டுகிறது

கருப்புப் பணம்
காத்து வைத்திருப்போரை
காத்துக் கருப்பும் அண்டாது

வேர்த்துழைத்துச்
சேர்த்தப் பணம்
வெற்றுப் பணம் என்றானதுவே

மோடி
அழைத்துச் செல்லும்
வளர்ச்சிப் பாதை
பாரதத்தைப்
பாதாளத்தை நோக்கி
நகர்த்துகிறது

 சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

மோடியின் முதுகில் ஏறும் தோல்வி மூட்டைகள்... 2

அதிரைநிருபர் பதிப்பகம் | December 17, 2016 | ,

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் என்று ஆர் எஸ் எஸ் பிதாமகன்களால் முன்மொழியப்பட்டு மக்களின் முன் நிறுத்தப்பட்ட நரேந்திரதாஸ் தாமோதரதாஸ் மோடி, அன்று அடையாளப் படுத்தப்பட்டது எவ்வாறு தெரியுமா? அவருக்கு வழங்கப்பட்ட அடைமொழி என்ன தெரியுமா? “வளர்ச்சியின் நாயகன்” என்றுதான் அறிமுகம் செய்தார்கள்; அடைமொழி தந்தார்கள். 

சுதந்திரம் பெற்ற இத்தனை ஆண்டுகளில் வளராமல் சவலைப் பிள்ளையாய் தவழக்கூட சக்தி இழந்து தரையில் கிடக்கும் இந்தியாவுக்கு காம்ப்ளான் கொடுத்து தூக்கி நிறுத்தி பல்வேறு துறைகளிலும் வளரவைக்கும் ஒரு வராது வந்த மாமணி என்று வர்ணிக்கப்பட்டவர்தான் நரேந்திர மோடி. 

அதற்கேற்றபடி அவரை முன்னிலைப் படுத்தி ஊளையிட்ட ஊடகங்கள். கார்பரேட் கம்பெனிகளின் காசுகளைப் பயன்படுத்தி கணக்கின்றி அள்ளிவிடப்பட்ட விளக்கமான விளம்பரப் பதாகைகள், மக்களின் மனங்களில் ஒரு அவதார புருஷராகவே கட்டமைக்கப்பட்ட கோயபல்ஸ் பிரசாரங்கள் ஆகிய யாவும் எதிர்பாராத வெற்றியை அவருக்குக் கொடுத்து அவரே எதிர்பாராத வெற்றியை அவருக்குக் கொடுத்து ஆட்சியையும் அமைக்க வைத்தது.

இப்போது தனது ஆட்சியின் காலத்தில் இரண்டரை ஆண்டுகள் என்கிற பாதி தூரத்தைக் கடந்துவிட்ட மோடியையும் அவரது ஆட்சியையும் நிற்கவைத்து அளவெடுத்து அளந்து பார்ப்போமானால்நா ம் காண்பது சொல்லாதை செய்ததும் செய்யாததை சொல்வதும், வார்த்தை அலங்காரங்களும் , வகையற்ற திட்டங்களும், திட்டமிடாத செயல்பாடுகளும், பொறுப்பற்ற தன்மைகளும் என்பன போன்ற எதிர்மறையான செயல்பாடுகள் அவரது முதுகில் தோல்வியின் மூட்டைகளை தூக்கி அடுக்கிவைத்துக் கொண்டே போகின்றன. 

இந்த ஆட்சியையும் பிரதமரையும் 

ஆப்பசைத்த குரங்கு என்று நாம் கொச்சைப் படுத்த விரும்பவில்லை; அவசரகதியில் அள்ளித் தெளித்த கோலம் என்று விமர்சிக்க விரும்பவில்லை ; செய்வதறியா சிறுபிள்ளை என்று சிறுமைப்படுத்த விரும்பவில்லை. ஆனால் அவ்வாறெல்லாம் சொன்னால் என்ன தவறு என்றே கேட்கவைக்கிறது மோடியின் செயல்பாடுகள். 

இப்போது முதலில் இருந்து வருவோம். இவர் ஆட்சிக்கு வரும் முன்பு தேர்தல் அறீக்கை என்று ஒன்றைக் கொடுத்தார். அதிலே மணலைக் கயிறாகத் திரிப்பதைத் தவிர மற்ற எல்லாவற்றையும் சொன்னார். 

குறிப்பாக சிலவற்றை மட்டும் எடுத்துக் கொள்வோம். அந்த சிலவற்றிலும் சிறிதளவாவது இந்த இரண்டரை வருட ஆட்சியில் நிறைவேறி இருக்கிறதா என்ற சிந்தனையை மக்கள் முன் வைப்போம். 

முதலாவதாக மக்கள் நலத்திட்டங்கள் என்று அவர்கள் ஆசைகாட்டிய மற்ற எல்லாவற்றையும் இப்போதைக்கு விட்டுவிடுவோம் அவர்கள் தங்களது தேர்தல் அறிக்கையில் சொன்ன முதல் இரண்டு வெத்துவேட்டு விஷயங்களை மட்டுமாவது எடுத்துக் கொள்வோம். 

The Party reiterates its stand to explore all possibilities within framework of Constitution to facilitate construction of Ram Temple in Ayodhya. 

Reiterating its stand on Article 370 and discussing with all stakeholders for abrogation of the Article.

அதாவது அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, காஷ்மீரில் ஆர்டிகிள் 370 ஆவது பிரிவை நீக்குவது பற்றி விவாதிப்பது. ஆகிய இவ்விரண்டு விஷயங்கள் பற்றிக் கூட இந்த அரசு அச்சத்தின் காரணமாக ஒன்றும் செய்யவில்லை. இது ஒன்றும் நமக்கு வருத்தம் தரும் விஷயங்கள் அல்ல.. ஆனாலும்நா ம் சொல்ல வருவது என்னவென்றால் இந்த இரண்டு விஷயங்களும் பிஜேபியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது மக்களின் மனங்களை மதரீதியில் பிரிக்கவே தவிர மோடியல்ல மோடியின் தாத்தாவே வந்தாலும் அவைகள் நிறைவேறாது; நிறைவேற்ற முடியாது .

நிறைவேற்ற இயலாதவை ஏன் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றன என்றால் அரசியல் பித்தலாட்டத்தின் அரிச்சுவடி என்று ஒன்று எழுதப்படவேண்டும் Communal Polarization என்கிற ஒன்றை ஏற்படுத்தி மக்களைப் பிரிக்கவேண்டுமல்லவா அதனால்தான். 

தொலையட்டும். அடுத்ததைப் பார்ப்போம் !...

அடுத்தது என்று ஒரு மேலோட்டமாக ஒரு துறையைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்ல இயலவில்லை. ஒரு பெரிய பட்டியலே போட வேண்டி இருக்கிறது. கீழ்க்காணும் பட்டியல் “ ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் “ என்ற முறையில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. 

இந்தப் பட்டியலில் காணப்படுபவை யாவும் கவர்ச்சிகரமான மோடியின் வாக்குறுதிகள். ஆனால் அவற்றுள் இந்த இரண்டரை ஆண்டுகால ஆட்சியில் மருந்துக்குக் கூட தொட்டுக்கூட பார்க்கப்படவில்லை என்பதுதான் வெட்கக்கேட்டிலும் வெட்கக்கேடான உண்மை.

பட்டியலைப் பாருங்கள் . பிஜேபியின் தேர்தல் அறிக்கையிலும் தேர்தல் நேரத்தில் மேடைகளிலும் முழங்கப்பட்டதைத்தவிர கடந்த இரண்டரை ஆண்டுகளில் ஏதாவது செயல்வடிவம் பெற்று இருக்கிறதா என்ற கோணத்தில் இவற்றை எண்ணிப்பாருங்கள்.

இதுவே அந்த தேர்ந்தெடுக்கப்பட்ட புளுகு மூட்டையின்ப ட்டியல் : 

விலைவாசிகள் ஒரே ஸ்திரத்தன்மையாக இருக்கும்படி வைத்துக்கொள்ள அதற்காக தனி நிதி ஒதுக்கீடு ( Price Stabilization Fund ). 

நாடு முழுதுக்கும் பொதுவான ஒற்றை விவசாய விளைபொருள்களின் சந்தையை அமைப்பது ( National Agriculture Market. ).

குறிப்பிட்ட பயிர்களையும் காய்கறிகளையும் உற்பத்தி மற்றும் நுகரும் பகுதிகளுக்கு தேவையான ஆதரவுகளை விரிவுபடுத்துவது. 

பாரம்பரியம் சார்ந்த விவசாயத் தொழிலாளர்களை விவசாயக்கூலிகளாக மட்டும் பயன்படுத்தாமல் சுற்றுலா போன்ற புதிய துறைகள் மற்றும் விவசாய துணைத்தொழில்களிலும் ஈடுபடுத்துவது 

குடியிருப்பு வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வாய்ப்புகளை மேம்படுத்துதல் ( upgradation of infrastructure and housing)

இளைஞர்களின் சுய வேலைவாய்ப்பை ஊக்குவித்தல் அதற்காக பயிற்சியளித்து நாடெங்கும் தேவையான இடங்களில் அவர்களை நியமித்தல் 

பொதுவான விழிப்புணர்வின் மூலம் இலஞ்ச லாவண்யங்களை ஒழித்தல், இணைய தள மேம்பாடு மூலம் அரசு நிர்வாகத்தை நடத்தல் , வரிவிதிக்கும் முறைகளை எளிமைப்படுத்தி உயர்ந்தபட்ச பலனடைதல் (Eliminating corruption through public awareness, e-governance, rationalization and simplification of tax regime.)

மத்திய மாநில அரசுகள் தங்களின் கரங்களை இணைத்துப் பிணைத்துக்கொண்டு, ஒட்டு மொத்த தேச நலனுக்கு பாடுபடுதல் 

பிரதமரும் மாநில முதல்வர்களும் வேறுபாடு இல்லாமல் சம அந்தஸ்தில் கலந்து ஒட்டுமொத்த நாட்டின் முன்னேற்றத்துக்காக உழைக்கும் டீம் இந்தியா என்ற அமைப்பை நிறுவுதல்

மாநிலங்களுக்கு கட்டுப்பாடற்ற நிதி சுய நிதி அமைப்புகளை ஏற்படுத்துவதுடன் மாநிலங்களுக்கிடையேயான கருத்துமாறுபாடுகளை தீர்ப்பதற்காக பிராந்திய குழுக்களை அமைத்தல் ( fiscal autonomy of states)

மாநில அரசுகளை உள்நாட்டு வர்த்தக காரியங்களுடன் அயல் நாட்டு வர்த்தகங்கள் மட்டும் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ள இணைத்துக் கொள்வது 

சிறிய மாநிலங்களை அமைப்பது 

நாட்டின் நதிகள் அனைத்தையும் தூய்மைப் படுத்த மக்களின் பங்களிப்புடன் திட்டங்களை மேற்கொள்வது (massive Clean Rivers Programme)

அண்டை நாடுகளுடன் உறவுகளைப் பேணுவதுடன் அதே நேரம் தேவைப் பட்டால் நாட்டின் இறையாண்மையைக் காக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் 

தீவிரவாதத்தை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளுக்காக ஒரு திட்டமிடப்பட்டமுறைகளை மேற்கொள்வதுடன் ஏற்கனவே காங்கிரஸ் அரசால் தீவிரவாதிகள் என்று பிடிக்கப்பட்டவர்கள் மீது விருப்பு வெறுப்பற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது. (anti-terror mechanism) 

புலனாய்வுத்துறை அமைப்புகள் அரசியல் அமைப்புகளின் தலையீடுகளில் இருந்து அப்பாற்படுத்துவது (intelligence agencies from political intervention and interference)

பாதுகாப்புத் துறைகளில் அந்நிய முதலீடுகளை வலிமைப்படுத்தி வரவேற்பது (FDI in selected defence industries.)

தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தப் பட்டியல் போதுமா? இன்னும் வேண்டுமா? மேலே கண்டவை பொதுவாக அறிவிக்கப்பட்டவை. ஆனால் சில அறிவிப்புக்கள் மக்களைக் கவரும் விதத்தில் அரிதாரம் பூசி அறிவிக்கப்பட்டன. அவ்வாறு ஜோடனை செய்து முகங்களில் வண்ணக்கலவை அடித்து அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் சில இதோ !

விவசாயிகள் தங்களின் விளைபொருள்களின் உற்பத்திக்காக செய்யும் செலவுகளை கணக்கிட்டு அதிலிருந்து ஐம்பது சதவீதம் அவர்கள் இலாபம் அடையும் வகையில் விளைபொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்படும் என்றார்.

வீழ்ந்து கொண்டிருக்கும் டாலருக்கு எதிரான இந்தியாவின் பணமதிப்பை தூக்கி நிறுத்தி இந்தியாவின் பணமதிப்பைக் கூட்டுவேன் என்றார். 

இலங்கைப் பிரச்னையில் தமிழ் மீனவர்களின் நலன் காக்கப்படும் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் மீனவர்களை இலங்கைப் படை கைது செய்யாமல் காக்கப்படும் என்றார். 

வீழ்ந்து கொண்டிருக்கும் கச்சா எண்ணெயின் விலையை அனுசரித்து மிக மலிவான விலையில் எரிபொருள் விலைகள் மத்திய அரசால் நிர்ணயம் செய்யப்படும் என்று அறிவித்தார். 

ஆனால் நடந்தவைகள் என்ன ? 

“ நெஞ்சில் உரம் இன்றி நேர்மைத் திறன் இன்றி வஞ்சனை சொல்வாரடி அவர் வாய்ச்சொல்லில் வீரரடி” 

என்ற பாரதியாரின் பாடல் வரிகளின் இலக்கணத்துக்கு இலக்கியமாகவே மோடி அரசின் செயல்பாடுகள் ஆட்சிக்கு வரும் முன் அளித்த வாக்குறுதிகளுக்கு முழுக்க முழுக்க மாறாகவே அமைந்தன. 

வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா! மார்பு துடிக்குதடி என்று மோடியைப் பார்த்து நாம் பாடினாலும் தப்பில்லை. 

முதலாவதாக திட்டக் கமிஷன் ஊற்றி மூடப்பட்டது அதற்கு பதிலாக ஏதோ ஒரு வாயில் நுழையாத நிதி ஆயுக் என்ற இழவுப் பெயர் சூட்டப்பட்டது. 

இரயில்வே பட்ஜெட்டை அறிவிப்பதற்கு முன்பே ரயில்வே கட்டணங்களை 10% உயர்த்தி மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர வழிவகை செய்தது மோடி இழைத்த மன்னிக்க இயலாத குற்றம். பிளாட்பாரம் டிக்கெட்டுகள் மூன்று ரூபாயாக மதிப்பில்லாமல் இருந்தன அவற்றை பத்து ரூபாயாக உயர்த்தி மதிப்பைக் கூட்டினார் என்றுதான் சொல்ல முடியும். 

‘பிரிமியம் ரயில் திட்டம்’ என்ற ஒன்றை அறிவித்து அதன் விளைவாய் பிரிமியம் ரயில் கிளம்புவதற்கான நேரம் நெருங்க, நெருங்க அதில் பயணிக்க டிக்கட் கேட்கும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப (கூட்ட நெரிசலுக்கேற்ப) ரயில்வே கட்டணத்தை பன்மடங்கு உயர்ந்து கொண்டே போகும் திட்டம் பொதுமக்களின் அடிமடியில் கைவைக்கும் மோடி வேலை. பிளாக் மார்கெட்டில் டிக்கெட் விற்பவர்களுக்கும் இந்த அரசுக்கும் வித்தியாசம் இல்லை என்றே மோடி அறிவிக்காமல் அறிவித்துள்ளார். 

தொழிலாளர் நலனுக்காக வாய் கிழிய வாக்குறுதி அளித்த மோடி அரசு, தொழிற்சாலை ஆய்வாளர்கள் முன்னறிவிப்பின்றி தொழிலகங்களை ஆய்வு செய்வது கூடாது என்றும், தொழில் நிறுவன நிர்வாகங்கள் தொழிற்சாலை சட்டங்கள் கடைப்பிடிப்பது குறித்து நற்சான்றிதழ் அளித்தால் போதும் என்றும் அறிவித்து அதிர்ச்சி அளித்தது. இதன் காரணமாக தொழிலாளருக்கு எதிரான முதலாளிகளின் கொட்டத்தை அடக்க வழி இல்லாமல் அடைத்தது மோடி அரசு. 

பன்னாட்டு நிறுவனங்கள் தொடங்கும் தொழிற்சாலைகளுக்கு தொழிலாளர் நல சட்டங்களில் இருந்து விதிவிலக்கு அளிக்க மோடி அரசு எடுத்துள்ள முடிவும், அதன் பின்னால் இருக்கும் மேக் இன் இந்தியா திட்டமும் விளம்பரத்துக்கும் மேடையில் முழங்கவும் உதவியதே தவிர நாட்டின் தொழிலாளர்களின் நலத்தை உயர்த்த முனையவில்லை. 

“ஊரான் வீட்டு நெய்யே! என் பொண்டாட்டி கையே! “என்று கிராமங்களில் சொல்வார்கள். தொழிலாளர் வைப்பு நிதியிலிருந்து 7- லட்சம் கோடி ரூபாயை எடுத்து ஏழைகளுக்கு வீடுகட்டி கொடுக்கப் போவதாக அறிவித்து இருக்கும் மோடி அரசைப் பற்றி நினைக்கும்போது இதுவே நினைவுக்கு வருகிறது. தொழிலாளர்கள் தங்களது உழைப்பின் ஒரு பகுதியாக சேர்க்கும் வைப்பு நிதியை வள்ளல் போல் வாரி கொடுப்பதன் மூலம் பெருமளவிலான ஊழல் பணத்தை அரசியல்வாதிகள், அதிகாரிகள் வாரிச் சுருட்டப் போகிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை. இது ஒரு தோல்வியில் முடியும் திட்டம் என்பதில் சந்தேகமே கிடையாது. 

உணவு மான்யத்தைக் குறைப்பதற்கான வழிகளைக் கண்டறிய சாந்தகுமார் கமிஷன் என்ற ஒரு கமிஷனை அமைத்து ஏறக்குறைய நாற்பது சதவீதம் உணவு மானியம் குறைக்கபட்டிருப்பதும், ஏழைகளின் எரிபொருளான மண்ணெண்ணையைக் கூட இந்த மோடி புயல் விட்டு வைக்கவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மைகள். 

அளவற்ற இணையதள சேவை ரூ 98/= ஆக இருந்தது. அதை ரூ. 246/= ஆக உயர்த்திக் காட்டினார்.

அலைபேசி அழைப்புகளுக்கு , நிமிடத்துக்கு 30 பைசா, பிச்சைக் காசாக இருந்ததை, உயர்த்தி நிமிடத்துக்கு ரூ .1/= ஆக ஆக்கிகாட்டினார் இந்த ஏழைப் பங்காளன். 

வளர்ச்சியின் நாயகன் நரேந்திர மோடியின் ஆட்சியில்தான், வயது முதிர்ந்தோர், மாற்று திறனாளிகள், கைம்பெண்கள் ஆகியோருக்கு மாதந்தோறும் இரு நூறு ரூபாய் வழங்கும் தேசிய சமூக உதவி திட்டம் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

“தேசிய மருத்துவ விலை நிர்ணய அமைப்பின்” விலைக் கட்டுப்பாட்டு அதிகாரத்தை மோடி அரசு பறித்துவிட்டதால் உயிர் காக்கும் மருந்துகளின் விலை மிக கடுமையாக 14 மடங்காக உயர்ந்துள்ளது.

புற்று நோய்க்கான ‘கியாவக்’ என்ற மருந்தின் விலை 8,500 ரூபாயிலிருந்து 1,08,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. இச்செயல் உலகிலேயே எந்த நாட்டிலும் நடைபெறாத கொடூரமான அராஜகமாகும். உயர் அழுத்த ரத்தக்கொதிப்புக்கான ‘பிளேவிக்ஸ்’ மாத்திரை 147 ரூபாயிலிருந்து 1,615 ரூபாய் வரை உயர்ந் துள்ளது. வெறிநாய்க்கடிக்கான மருந்தின் விலை 2,670 ரூபாயிலிருந்து 7,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. வெறிநாய்கள் ஆட்சியில் இந்த விலை உயர்வு இயல்புதான். 

மருந்து தயாரிக்கும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிக்க வசதியாக தேசிய மருந்து விலை நிர்ணய அமைப்பின் கட்டுப்பாட்டிலிருந்த 108 மருந்துகளின் விலைக் கட்டுப்பாடு மோடி அரசால் நீக்கப்பட்டது.

நாட்டில்தான் விவசாயம் செய்து பிழைக்க இயலவில்லை. கடலுக்குச் சென்று மீன் பிடித்தாவது வாழலாம் என்ற மீனவர்களின் நினைப்பிலும் மண்ணை அள்ளிப் போட்ட அரசு மோடி அரசு, மீனவர்களின் வயிற்றில் அடிக்க மீனாகுமாரி என்ற ஒருவரின் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு கமிஷன் நீலப் புரட்சி என்று ஒரு திட்டத்தை அறிவித்தது. அதன்படி 12 மைல்களுக்கு அப்பால் சென்று ஆழ்கடல் மீன் பிடிக்க இயலாது. ஆழகடலில் வேறு யார் மீன் பிடிப்பார்கள் என்று கேட்டால் மோடியின் பெரியப்பா மகன்களான பெரிய முதலாளி முதலைகளும் சித்தப்பா மகன்களான பன்னாட்டு நிறுவனங்களும்தான்.

கச்சா எண்ணெய் விலை பாரல் 119 டாலராக இருந்தபோது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 67 ஆக இருந்தது. இப்போது கச்சா எண்ணெய் விலை 30 டாலராக இறங்கிய போதும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 60/= க்குத் தந்துகொண்டு இருக்கிறார். 

மோடியே உனது பருப்பு வேகாது என்றார்கள். பார்த்தார். அன்று கிலோ ரூ. 70/= க்கு விற்ற பருப்பு இப்போ என்ன விலை தெரியுமா? ரூ. 150/= இப்போ என் பருப்பு வேகுதா? என்று நம்மைப் பார்த்து கேட்கிறார். 

சேவை வரி 12.36% ஆக இரத்த சோகை பிடித்து இருந்ததாம் அதை 14.5% ஆக்கி அதன் ஹீமொகுலோபினைக் கூட்டினார்.

இயல்புக்கும் இயற்கை விதிகளுக்கும் அரசியல் சட்ட நடை முறைகளுக்கும் மாறாக நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை அவசர சட்டம் மூலம் நிறைவேற்ற மூன்று முறை அதை பயன்படுத்திய அரசுதான் இந்த மோடி அரசு. கடைசியில் அந்த திட்டத்தை வாபஸ் பெற்று மூக்குடைபட்டது இந்த மோடி அரசு. 

உற்பத்தி வரி மோடியின் ஆட்சியில் 12.36% தெரியுமா? ஆனால் அப்போ வெறும் 10% தான். 

அட! சொல்ல மறந்துட்டேனே! ரூபாய்க்கு எதிரான டாலரின் மதிப்பு அப்போ ரூ 58.50/= தான் இப்போ மோடியின் இரண்டரை ஆண்டு ஆட்சியில் எகிறி எகிறி ரூ. 68.50/= ஆக ஆகிவிட்டது. இந்தியாவின் பணமதிப்பு பாரெங்கும் பட்டொளிவீசிப் பறக்கிறது. 

ரூ. 100 கோடி அளவுக்கு எரிவாயு மானியத்தை வேண்டாமென்று விட்டுக் கொடுக்க வைத்தார் இதில் வெட்கக்கேடு இதை விளம்பரப்படுத்துவதுதான். இதற்காக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த விளம்பரம் செய்த வகையில் ரூ. 250 கோடி செலவானது என்று கணக்குகள் இந்தக் கண்மூடித்தனமான ஆட்சியைக் காட்டிக் கொடுக்கின்றன.

தூய்மை பாரத விளம்பரங்களுக்காக ரூ. 250 கோடிகளை செலவழிக்கச் செய்த காரணத்தால் தெருக்கூட்டிய கூலியாட்களுக்கு ரூ 35 கோடிவரை கொடுக்க அரசிடம் பணம் இல்லாமல் போனது கேவலத்திலும் கேவலம்.

தாய்ச்சபையாம் ஆர் எஸ் எஸ்ஸை மறக்க முடியாமல் , அவர்களுடைய ஆலோசனைக்குழு நடத்துகிற கிசான் தொலைக்காட்சிக்கு ரூ. 100 கோடி மட்டுமே கொடுத்துதவி கொல்லைப்புற வழியாக தீயசக்திகளுக்கு உதவ இயன்றது. 

விவசாயிகளுக்கான மானியங்களை கண்டுகொள்ளாமல் ஆட்டையைப் போட்டது மோடி அரசு. 

30% என்று இருந்த பெரு நிறுவனங்கள் மீதான வரி 25% என்று குறைக்கப்பட்டது மோடி ஆட்சியில்.

யோகாதினத்துக்காக ரூ. 500 கோடியும் ஹரியானாவில் மாநிலப்பள்ளிகளில் யோகாவை பயிற்றுவிப்பதற்காக வருடக்கட்டணமாக மாட்சிமை தாங்கிய பதஞ்சலி. பாபா ராம்தேவ் அவர்களுக்கு ரூ. 700 கோடியை மனமாரக் கொடுத்து நாட்டின் கடைத்தேங்காயை எடுத்து வழிப்போக்கர்களுக்கு வைத்துக் கொள் என்று கொடுத்தது மோடி அரசு. 

அவசியமில்லாத பேச ஆள் இல்லாத சமஸ்கிருதத்தை வளர்ப்பதற்காக, அவசியமான ஆரம்பக் கல்வி பயிற்றுவிப்பதற்கு நாட்டில் போதிய பணமில்லாத காரணத்தால் வருடாந்திர பட்ஜெட்டில் 20% த்தை குறைத்து குற்றமிழைத்தது மோடி அரசு. 

கொட்டிக் குவிக்கும் கார்பரேட் கம்பெனிகளுக்கு ரூ. 64,000 கோடிவரை வரிச்சலுகை அளித்த மோடிக்கு ரூ 15,000 கோடிவரை விவசாயிகளுடைய கடனைத் தள்ளுபடி செய்ய இயலவில்லை. 

மாணவர்களின் கல்விக்கடனை வசூலிக்க ரிலையன்ஸ் போன்ற கார்பரேட் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டு ஏழை மாணவர்களை மானம் கெட்டவர்களாகவும் கடன்காரர்களாகவும் சித்தரித்து கோடிகளை கொண்டுபோன லலித் மோடிக்கும் விஜய் மல்லையாவுக்கும் பட்டுக் கம்பளம் விரித்து பறந்து போக பாதை காட்டியது மோடி அரசு.

2002 ஆம் ஆண்டு மோடி குஜராத்தின் முதல்வராக ஆனபோது அதானி குழுமத்தின் வணிக மதிப்புகள் இன்றைய தேதியில் இருபது மடங்கு ஆக ஆகியிருக்கிறது. சர்வம் மோடி மயம். யாமிருக்க பயமேன் என்ற மோடியின் ஜி பூம் பா தான் காரணம். இதன் பலிகடாக்கள் ஏழை மக்களே.

ஆஸ்திரேலியாவில் G 20 நாடுகளின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்ற மோடிஜி அங்கே குவின்ஸ்லாந்தில் உள்ள கார்மைக்கேல் நிலக்கரி சுரங்கத்தை அதானிக்கு வாங்கி தருவதற்கும், அங்கே வெட்டி எடுக்கப் படும் நிலக்கரியை ஏற்றுமதி செய்வதற்காக ரயில் வழித்தடம் மற்றும் துறைமுக வசதிகளை அந்த மாநில அரசை கொண்டே ஏற்பாடு செய்து தருவதையும் அவரது பயணத்தின் முக்கிய குறிக்கோளாகவும் நிகழ்ச்சியாகவும் மேற்கொண்டார்.

அச்சுரங்கத்தை வாங்குவதற்காக “பாரத ஸ்டேட் வங்கி” அதானிக்கு 6200 கோடி ரூபாயை கடனாக கொடுப்பதாக அறிவித்தது. இத்தனை பெரிய தொகையை அதுவும் வெளிநாட்டில் சொத்து வாங்குவதற்காக வேறு எந்த முதலாளிக்கும் எந்த இந்திய வங்கியும் கொடுத்ததில்லை. ஆக அந்த வகையில் பாரதநாட்டின் பிரதமர் ஒரு தனிப்பட்ட அதானி நிறுவனத்துக்கு நிதி பெற்றுத்தருகிற ஒரு தரகராகவும் அவர்களின் பொருளை உலகெங்கும் சந்தைப் படுத்தும் விற்பனைப் பிரதிநிதியாகவும் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்.

சீர்மிகு திறமையான இந்தியா திட்டத்துக்கு ரூ. 200 கோடியை விளம்பரத்துக்காக மட்டும் ஒதுக்கிவிட்டு, இளைஞர்களின் தலையில் கைவைப்பதற்காக, பாரத மாதாக்கு ஜே! போடாத வலுவான காரணத்துக்காக இளைஞர்களின் கல்வி உதவித்தொகையான ரூ. 500 கோடியை ஒரே வெட்டில் வெட்டியது மோடி அரசு. . 

ரயில்வேக்கு சொந்தமான நிலங்களை கண்ணியமிகு அதானி அவர்களுக்கு ஒதுக்கி ஒப்பந்தப் புள்ளி போட்டதில் 22,000 கோடி ரூபாய் நாட்டுக்கு நஷ்டம் ஏற்பட மோடி அரசு காரணமானது. 

மேலும் ரூ 9,000 கோடியுடன் மல்லையாஜி நாட்டைவிட்டுப் போனது பெரிய விஷயமே அல்ல. காரணம் கணக்கிட்டால் இது ஒவ்வொரு இந்தியருக்கும் வெறும் ரூ. 75 மட்டுமே மல்லையாஜியின் செயல் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று வயிற்றெரிச்சல் உண்டாக்கும் வகையில் வாய்திறந்து பேசியது மோடி அரசு.

பதவிக்கு வந்த 2014 முதல் ஆகஸ்டு 2016 வரை மோடிஜியாகிய இந்த ஏழைத்தாயின் மைந்தன் ஆகிய மோடி வெறும் ரூ. 11000000000 மட்டுமே செலவழித்து இருக்கிறார். இந்தியாவில் இருந்ததைவிட ஏர் இந்தியாவில் பறந்த நாட்களே பதவிக்காலத்தில் அதிகம். 

கும்பி வேகுது! குடல் கருகுது! உனக்கு குளுகுளு ஊட்டி ஒரு கேடா? என்று அன்றொரு ஆட்சியாளரைப் பார்த்து அண்ணா கேட்டார். மயிலாடும் பாறையிலே நான் ஆடிருக்கேன்! மதுரை மேனாட்டு வாசலிலே மெடலு வாங்கிருக்கேன்! . நா போகாத ஊருமில்லே! நான் பார்க்காத ஆளுமில்லே! என்று பாடிக் கொண்டு குத்தாட்டம் போடத் தகுதி படைத்தவர்தான் மோடி. 

‘எனது அரசு ஒரு அடி முன்னெடுத்து வைத்தால், இந்திய நாட்டில் உள்ள அனைத்து மக்களும் ஒரு அடி முன்னேறுவார்கள்’ என்று தேர்தலுக்கு முன் முழங்கினார். இன்று இரண்டரை ஆண்டுகளில் மோடி அரசு எத்தனையோ அடிகளை முன்னெடுத்து வைத்துள்ளது. மோடி அரசு எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியாலும் பெருமுதலாளிகள் அடிகளாக அல்ல பல அடி பாய்ச்சலாக முன்னேறுகிறார்கள் என்பதுதான் உண்மைக்கும் மேலான உண்மை. 

உழைக்கும் மக்களுக்கு எதிராக சுரண்டல் பொருளாதரத்தை நோக்கி , உலக மயமாக்கல், தனியார் மயமாக்கல், தாராளமயமாக்கல் ஆகிய மோடி மற்றும் ஜேட்லியின் பொருளாதார கொள்கைக்கு எதிராக ஓரணியில் உழைக்கும் மக்கள் திரள்வதை தடுக்கவும் அவ்வப்போது கார்ப்பரேட் முதலாளிகளின் சுரண்டல் நலனுக்காக கொண்டுவரப்படும் ஒவ்வொரு சட்டத்தின் போதும், அச்சட்டத்திற்கு எதிராக மக்கள் அணிதிரள்வதை திசை திருப்பவும் “இந்துத்துவா பாசிசம்” மோடி அரசால் அவரது ஆசியுடன் அவரது அடிவருடிகளால் கட்டமைக்கப்படுகிறது.

சுரண்டலுக்கு அடிப்படையாக உள்ள உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், பொருளாதார கொள்கைக்கு எதிராக மக்கள் எழுச்சி ஏற்பட்டு விடாமல் தடுக்கத்தான் “பகவத் கீதையை தேசிய நூலாக்குவது”, “மாட்டுக்கறி உண்ணத்தடை”, “அரசு அலுவலகங்களில் மாட்டு மூத்திரத்தை கிருமி நாசினியாக தெளிக்கச் சொல்வது”, “ சம்ஸ்கிருத வாரம்” “ பள்ளிகளில் கட்டாய யோகா” ஆகியவை மோடி அரசால் முன்னிலைப் படுத்தப் படுகின்றன. இவையாவும் அரசு நடத்தத்தெரியாமல் சிதைந்து கொண்டிருக்கும் மோடியின் அவல முகத்தை மறைக்கப் போடப்படும் திரைகளே அன்றி வேறில்லை. 

தொழிலாளர்கள், விவசாயிகள், அறிவுத் துறையினர், சிறு, குறு தொழிற் சாலைகளை வைத்திருக்கும் தொழில் முனைவோர், வணிகர்கள், பெண்கள், தலித்துகள், பழங்குடியினர், மீனவர்கள், மதச்சிறு பான்மையினர் என அனைவரின் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் பலிகொடுத்து கொண்டே இருப்பவர்தான் இந்தியா நாட்டின் பிரதமர் மோடி என்பதும் அவர் காலடி எடுத்து வைக்கும் அனைத்துத் துறைகளிலும் தோல்விகளையே சந்தித்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான் நடுநிலையில் நின்று நாம் எழுதும் தீர்ப்பு. 

நரேந்திர மோடிக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் இப்போது சந்தி சிரித்துக் கொண்டு இருக்கும் செலவாணி நோட்டுகளை செல்லாததாக ஆக்கிய விவகாரத்தை இந்த ஆய்வில் நாம் கையில் எடுக்கவில்லை. காரணம் அது ஒரு நீண்ட ஆய்வு இன்னொரு வாய்ப்பில் அதையும் நாம் எடுத்துப் பேசுவோம்; இன்று ராகுல் காந்தி, செல்லாத நோட்டு விவகாரத்தில் பிரதமர் மோடி நேரடியாக தொடர்பு கொண்ட ஒரு பெரிய ஊழல் இருக்கிறது என்று சொன்ன விபரங்கள் உட்பட நாம் இறைவன் நாடினால் அலசுவோம். 

இபுரஹிம் அன்சாரி M.Com.,
மதச்சாயம் பூசி மறைக்கப்ப்ட்ட வரலாறு - நூல் ஆசிரியர்

பசுமை அதிரை 2020 19

அதிரைநிருபர் பதிப்பகம் | December 14, 2016 | , , ,


நெஞ்சிலாடும் ஊஞ்சல் கட்ட
நிழல்மரங்கள் அறுகுமுன்பே
பிஞ்சுமரம் கொஞ்சமேனும்
பசுமைக்காக நடுதல் வேண்டும்

சருகெனவே கருகிவரும்
சுற்றுவட்டப் பச்சையெல்லாம்
சொந்தஊரின் செழிப்புக்கண்டு
சொர்க்கமென்று வியக்க வேண்டும்

காவியாலும் காக்கியாலும்
காணுமெங்கும் குறுதி நிறம்
கண்குளிர மண்மிளிர
களையெடுத்து மரம் வளர்ப்போம்

இணக்கமனம் வணக்கத்தளம்
இடித்துடைத்தல் வெறி போதை
இளங்கன்று இடங்கண்டு
இட்டு வளர்த்தல் கர சேவை

பசுமேய பசுமையாகப்
பச்சிலைகள் பதியம்போட்டு
புல்வெளியில் பொதுவழியை
பகுத்துப் பாதைப் பண்செய்வோம்

நஞ்சையென்றும் புஞ்சையென்றும்
நன்மை நட்டு நிலமெல்லாம்
நன்றியோடு இன்றியமையா
நன்னீர்ப் பாய்ச்ச வழிசெய்வோம்

முகிழ்கருக்க மழைமுகிழ்க்க
முடிந்தவரை மரம்வளர்ப்போம்
முகம்நகைக்க அகம்நிறைய
முழுமனதாய் முயன்றிடுவோம்

நாடுசெழிக்க காடுவளர்த்தல்
நல்லதொரு மதியாகும்
நாலுகன்றை நாளும்விதைத்தால்
நமக்குப் பசுமை விதியாகும்

பசியறிய ருசியறிய
பட்டினிதான் வழியாகும்
பசுமை அதிரை 2020 க்கு
பாடு பட்டாலே பலனாகும்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
theme painting: ஷாஹிபா சபீர் அஹ்மது


WE SUPPORT

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு ஒரு கடிதம்... 7

அதிரைநிருபர் பதிப்பகம் | December 09, 2016 | , , , ,

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு ஒரு கடிதம்.

தமிழக முதல்வர் மாண்புமிகு ஒ. பன்னீர் செல்வம் அவர்களுக்கு

தமிழ்நாட்டில் வாழும் ஒரு சாதாரண குடிமகனின் சில வேண்டுகோள்கள்.இவை எண்ணற்ற பலரின் இதயத்துடிப்பாகவும் இருக்கலாம்.  

முதலாவதாக, தங்களை ஆளாக்கிய அம்மையார் அவர்களை இழந்து வாடும் உங்களுக்கும் உங்கள் அமைச்சரவை அன்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். 

இரண்டாவதாக, எவ்வளவுதான் வேதனைகள் உங்களின் உள்ளத்தில் இருந்தாலும் அதே உள்ளத்தின் ஒரு ஓரத்திலாவது ஒரு மாநில முதல்வராகும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்து இருப்பது பற்றி மகிழ்ச்சியும் குடிகொண்டிருப்பது மனித இயல்பு . இதற்கு நீங்களும் விதிவிலக்காகி இருக்க மாட்டீர்கள். 

ஆகவே, தமிழக  முதல்வராக  மூன்றாம் முறையாக பதவி ஏற்கும் உங்களைப் பாராட்டுகிறோம்; வாழ்த்துகிறோம்.

ஆனாலும் , அதே நேரம் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறோம். இதற்கு முன் நீங்கள் முதல்வராக பதவி ஏற்ற சந்தர்ப்பங்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் இன்று நீங்கள் அந்தப் பதவியை ஏற்று இருப்பதிலும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. 

அரசியல் சட்டத்தின் தேவைகளை நிறைவேற்ற மட்டும் நீங்கள் இம்முறை முதல்வராகவில்லை. இந்த மாநிலத்தில் வாழும் ஒவ்வொரு மக்களின் தேவைகளையும் உளப்பூர்வமாக தீர்த்துவைக்கும் பொறுப்பில் இந்த மக்களின் எதிர்காலம் உங்களின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் உணரவேண்டும்

கடந்த இரு முறைகள் நீங்கள் ஒரு கருவியாக மட்டுமே  இருந்தீர்கள். இந்த முறை நீங்கள் கருவியாக அல்ல ஒரு கருவாக ஆகி இருக்கிறீர்கள். 

கடந்த முறைகளில் நீங்கள் சாலையோரம் கட்டிவைக்கப்பட்ட சுமைதாங்கியாக மட்டும் வாய்மூடி இருந்தீர்கள். ஆனால் இப்போது மாநிலத்தின் சுமைகளே  உங்கள் தலையின் மீதுதான் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த  வேறுபாடுகளை நீங்கள் உணராதவர் அல்ல என்ற நம்பிக்கை எங்களுக்குண்டு. 

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

நீங்கள் இன்று ஏற்றுக் கொண்டு இருக்கும் பொறுப்பு கிளிராட்டினத்தை வைத்து விளையாடும் குழந்தைத்தனமானது அல்ல. நெருப்பு வளையத்துக்குள் நீந்திக் கடக்கும் ஒரு அபாய விளையாட்டாகும். 

உங்களுக்கு முன் இன்று நீங்கள் அமர்ந்து இருக்கும் நாற்காலியில் அமர்ந்து இருந்தவர்கள் மனிதப் படைப்பில் சாதாரணமானவர்கள் அல்ல. 

மூதறிஞர் என்று புகழப்பட்ட இராஜாஜி அவர்கள் அமர்ந்து இருந்த- 

செயல்வீரர் ஓமந்தூரார் அமர்ந்து இருந்த- 

கர்மவீரர் காமராஜர் அமர்ந்து இருந்த- 

சட்டம் பயின்ற  பக்தவத்சலம் அமர்ந்து இருந்த- 

பேரறிஞர் அண்ணா அவர்கள் அமர்ந்து இருந்த- 

கலைஞர் கருணாநிதி அவர்கள் அமர்ந்து  இருந்த – 

புரட்சித்தலைவர் எம்ஜியார் அவர்கள் அமர்ந்து இருந்த – 

புரட்சித் தலைவி அம்மா ஜெயலலிதா அவர்கள் ஆகியோர்  அமர்ந்து இருந்த நாற்காலியாகும். 

மேலே குறிப்பிட்டு இருக்கிற முன்னாள் முதல்வர்கள் அனைவரும் பெற்றிருந்த தகுதிகளை நீங்களும் பெற்றிருந்த காரணத்தால்தான் நீங்களும் இந்தப் பதவியில் இன்று அமர்ந்து இருக்கிறீர்கள் என்று நாங்கள் சொன்னாலும் நீங்களே அதை மனதார ஒப்புக் கொள்ள மாட்டீர்கள். 

ஆனாலும், இன்று உங்களுக்கு தரப்பட்டிருக்கிற இந்த வாய்ப்பைக் கொண்டு நீங்களும் அந்த ஆளுமையும் ஆட்சித் திறனும் மக்கள் நேசமும் நெஞ்சுரமும் மிக்க முன்னாள் முதல்வர்களில் ஒருவராக உங்களையும் உருவாக்கிக் கொள்ள  முடியும். தமிழ் உலகம் உள்ளவரை எவ்வாறு காமராசர் பெயரும், இராஜாஜி  பெயரும் , அண்ணா பெயரும், கலைஞர் பெயரும், எம்ஜியார் பெயரும் , ஜெயலலிதா பெயரும் அழியாதோ – நிலைத்து நிற்குமோ அதே வரிசையில் உங்கள் பெயரையும் நிலைத்து நிற்கும்படிச் செய்துகொள்ளும் செயல்பாடு உங்களிடமிருந்துதான் இனி வெளிப்பட வேண்டும். 

மிகப் பழைய உதாரணங்களை விட்டுவிடலாம். 

கலைஞர் அவர்கள் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்ற செய்தி வெளியானபோது திரைப்படங்களுக்கு கதைவசனம் எழுதுபவர் எப்படி ஒரு மாநிலத்தின்  முதல்வராக செயலாற்ற முடியும் என்று கேட்டவர்கள் ஏராளமாக  இருந்தனர். இத்தனை ஆண்டுகள் ஆட்சி , வெற்றி, தோல்விகளுக்குப் பின்னர் கலைஞர் அவர்களை அரசியல் சாணக்கியர் என்று நாடே தூக்கிவைத்துக் கொண்டாடுகிறது. 

அதே போல் , மக்கள் சக்தியை மட்டுமே நம்பி எம்ஜியார் அவர்கள் ஆட்சிக்கு வந்த  போது இவருக்கு என்ன தெரியும் நடிகர்தானே ஒரு திரைப்படத்தை வெற்றியாகவும் இலாபகரமானதாகவும் வேண்டுமானால் இயக்க அவருக்குத் தெரியும். ஆனால் ஒரு நாட்டை ஆள இயலாது என்று கருத்துத் தெரிவித்த அறிவுஜீவிகள் இருந்தார்கள். ஆனால், அவரும் சிறந்த ஆட்சியையும் நிர்வாகத்தையும் வாழ்நாள் சாதனைகளையும் செய்தார் என்று காலம் கணக்குப் போட்டுக் காட்டுகிறது. 

ஜெயலலிதா போன்ற  எட்டு மொழிகளை சரளமாகப் பேசத் தெரிந்த பெண்மணி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது கூட ஏளனமாகவும் இழிவாகவும் கேலியாகவும் பேசினார்கள். என்ன தெரியும் இவருக்கு என்று எள்ளி நகையாடினார்கள். ஆனால் என்ன நடந்தது நாட்டிலே என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 

இப்போது நீங்கள் முதல்வராக ஆகி இருக்கிறீர்கள். உங்களை எடுப்பார் கைப்பிள்ளை, சாவி கொடுத்தால் ஓடும் பொம்மை, ரப்பர் ஸ்டாம்பு என்றெல்லாம் இன்று வர்ணிப்பவர்கள் உண்டு என்பதை நீங்களும் அறிந்தே இருப்பீர்கள்.

உங்களைப் பற்றி,  நீங்கள் முழு அதிகாரம் பெற்ற முதல்வராக பதவி ஏற்றுள்ள  இந்த நிலையில் உங்களின் திறமைகளையும் குறைத்து மதிப்பிடுபவர்கள் இருக்கவே செய்வார்கள். ஒருவகையில் அது இயல்பானதும் பழக்கப்பட்டதும்தான்.  ஆனால் உங்களுடைய திறமைகளை நிருபிப்பது இனி உங்கள் கைகளில்தான் இருக்கிறது. 

யாருடைய கைப்பாவையாகவும் மாறாமல் தமிழ்நாட்டின் அடிப்படை உரிமைகளான சமநீதி சமூகம், இட ஒதுக்கீடு, பெண்ணுரிமை, காவிரி, முல்லைப் பெரியார், மாநில சுயாட்சி போன்ற  திராவிட  இயக்கங்களின் உயிர் மூச்சான கொள்கைகளை தொடர்ந்து கட்டிக் காக்கும் விதத்தில் எவ்வித மிரட்டலுக்கும் வேறு யாருடைய சொந்த இலாபத்துக்கும் நீங்கள் ஆளாகாமல்,  அஞ்சாமல் நேர்மையாக நீதியாக ஆட்சி செய்தால் மக்கள் சக்தி உங்கள் பக்கம் தொடர்ந்து நிற்கும்.
உங்களின் தலைவி முன்னெடுத்துவைத்த மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்காத உங்களின் தொடர் முடிவுகள் உங்களையும் ஒரு சிறந்த  முதல்வராக இந்த தமிழ்நாட்டும் உலகமும் ஏற்றுக்கொள்ளும். 

இளமைக்காலம் தொட்டு நீங்கள் அரசியலில் ஏற்று நடத்திய பல்வேறு பொறுப்புக்களில் இருந்து நீங்கள் கற்றுக் கொண்டவைகளும் நிதியமைச்சராகவும் அவை முன்னவராகவும் பணியாற்றி நீங்கள் பெற்றிருக்கும் அனுபவங்களும் உங்களுக்கு கை கொடுக்கும். 

உங்களுடைய தன்னம்பிக்கையும் திறமைகளை வெளிக்கொணர்ந்து செயல்படும் பாங்கும் வெளிப்படத் தொடங்கும் போது உங்களைப் பற்றி இந்த ஆரம்ப காலத்தில்  வெளிவந்து கொண்டிருக்கும் விமர்சனங்கள் அடையாளம் இன்றி அடிபட்டுப் போகும். 

மீண்டும் வாழ்த்துக்கள். இறைவன் உங்களுக்கு அருள்வானாக! 

இபுராஹிம் அன்சாரி

தேசியத் தினம் 45 26

அதிரைநிருபர் பதிப்பகம் | November 30, 2016 | , , , , , , ,


ஷேக்குகள் எழுவரின்
போஷாக்குக் குழந்தை
அமீரகம்!

இந்தக்
கூட்டமைப்பின் வெற்றி
ஒற்றுமைக்கான அங்கீகாரம்
உலகுக்கான முன்னுதாரணம்

இந்த ஒற்றுமை
நாற்பத்திஐந்து ஆண்டுகாலப்
பத்தியம்
நன்மையைத் தேடித்தந்த
வைத்தியம்

தொழுகைக்குப் பிறகும்
தோளோடு தோள் நின்றதால்
தோல்வி யறியாத
தேசமாகிப்போனது அமீரகம்

ஒன்றுமில்லாதத் துவக்கம்
என்றுமில்லாத வளர்ச்சி
எனினும்...
மாய மந்திரமல்ல
நேயம், தந்திரமல்ல!

அமீரகம்...
ஊரில்
ஊதாரியாகத் திரிந்த
உதவாக்கரைப் பலருக்கு
உலகத்தைக் காட்டியது

உழைப்பை மதித்தது
ஊதியம் கொடுத்தது
திறமையைக் கண்டெடுத்துத்
திரவியம் தந்தது

வாழ்க்கையில்
பிந்திய மனிதர்களின்
இந்திய வயிற்றுக்கு
பந்தியே வைத்தது!

அரசியல் தலைவன் என்னும்
அடர்த்தியான விஷத்தையும்
தல தளபதி யென்னும்
மதிமயக்கும் யுக்தியையும்
நம்நாட்டில் விட்டுவிட்டு
உழைத்து வாழ
உகந்த இடம் அமீரகம்!

சுதந்திர நாட்டில்
சுகாதாரச் சீரழிவு
ஷேக்குகள் நாட்டிலோ
சீக்குகள் மிகக்குறைவு

இயற்கை வளமிருந்தும்
எல்லைகளகன்ற இடமிருந்தும்
எம் நாட்டிலோ
எல்லாத் துறைகளிலும்
கையூட்டு
பொதுப் பணிகளில்
சதவிகித வெட்டு
இருபத்தியோராம் நூற்றாண்டிலும்
இருள்சூழ மின்வெட்டு

எந்த வளமும்
இல்லயெனினும்
யானைப் பலம்
அமீரகத்திற்கு

ஊழலால் உழன்று
உதவியின்றி மிரண்டு
அலைகழிக்கப்பட்ட இந்தியனை
அரவணைத்தது அமீரகம்

வகைக்கேற்ப அவரவர்க்கு
வருமானத்தை வழங்கியது
வாழ்க்கையை
வரையறுத்துத் தந்தது

படிக்காதவருக்கும்
துபை என்னும் அடைமொழி
படித்தெடுத்தப் பட்டம்போல்
பெயரோடுச் சேர
ஊர் மதித்தது

இந்தியாவில்
கனவுகளில் மட்டுமே வாய்த்த
காட்சிகளெல்லாம்
நனவானது அமீரகத்தில்

நம்நாட்டு முன்னோரும்
நானும்
பின் வருவோரும்
உண்ணவும் உடுக்கவும்
உறையுள் உருவாக்கி உய்க்கவும்
உதவி இத்தேசம்

நபிமொழி உணர்ந்து
நாகரிகத்தைச் சற்றே
நன்முறைப்படுத்தி
எல்லைமீறலைக் கொஞ்சம்
இழுத்துப் பிடித்தால்
நானிலத்தில் நிகரின்றி
நிமிர்ந்து நிற்கும் இந்நாடு.

நம்
நாட்டுப்பற்றுக்கு நடுவில்
கொஞ்சம்
நன்றிக்கடன் பட்டு
வாழ்த்துவோம் அமீரகத்தை1

....ஈஷி பிலாதி... எமராத்தி!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

பயணம் ஒன்று... பாதைகள் வேறு! - [ஏன் இஸ்லாம் ?] 12

அதிரைநிருபர் பதிப்பகம் | November 28, 2016 | , , ,

பயணம் ஒன்று... பாதைகள் வேறு!
(ஏன் இஸ்லாம்?)

வா சகோதரி
வந்திங்கு அமர்
வாழ்வியல் தத்துவத்தின்
வாஸ்தவம் உணர்!

படைப்பினங்களுடன் இணங்கு
படைத்தைவனை மட்டும் வணங்கு
மனிதன் படைத்ததை
மக்கள் வணங்குவது
பகுத்தறிவுக்குப்
பங்கமல்லவா?

படைக்க ஒரு கடவுள்
பரிபாளிக்க ஒன்றெனும்
நூரிறைக் குழப்பம் உகந்ததா
ஓரிறைக் கொள்கை உயர்ந்ததா?

உலகைப் படைத்தவனே
உன்னையும் என்னையும் படைத்தான்
விண்ணையும் மண்ணையும் படைத்தான்

வணக்கத்துக் குரியவன் ஓருவன்
வழிகாட்டத் தந்தது குர்ஆன்
உறுதியாய் வாழ்ந்து காட்டிடவே
இறுதியாய் வந்தவர் இறைத்தூதர்!

தோளோடு தோள்சேர்ந்துத் தொழுவதே
திருத்தூதர் காட்டிய வழிபாடு
எளியவன் வலியவன் பாராத
ஏற்றமிகு சமன்பாடு இறைஇல்லம்!

ருசித்துப் பழகிய நாவும்
பசித்து நிறைகின்ற வயிறும்
கசிகின்ற மணத்தோடு இரைஇருக்க
புசிக்காமல் துதிப்பர் இறையை

பொறுமை புகட்டும் நோன்பைப்
பிடிப்பதும்
பொருளைப் புரிந்து திருமறை
படிப்பதும்
நல்லறம் கொன்டு ஷைத்தானை
அடிப்பதும்
நன்னீர் ஓடும் நதிகளைக்கொண்ட
சொர்கத்திலோரிடம்
பிடிக்கும்!

ஏழைக்குக் கொடுக்காமல் செல்வம்
பேழைக்குள் பதுக்கினால் பாவம்
கணக்கிட்டுக் கொடுக்காமல் போனால்
கைக்கெட்டும் தூரம்தான் நரகம்.

ஆரோக்கிய உடலும் அமைந்து
பார்மெச்சும் செல்வம் இருந்தால்
மரணிக்கும் நாளுனக்கு வருமுன் - புனிதப்
பயணம் மேட்கொள்தல் கடமை.

எத்தனை வழியுண்டு ஈடேற
எதனால் ஏற்கனும் இஸ்லாம்?

இஸ்லாத்தில்தான்...
பாதை பண்பட்டிருப்பதால்
பயணம் இலகுவாகும்!
பெண்கள்...
போகப்பொருளாக வல்ல
பொக்கிஷமாகப்
பாதுகாக்கப்படுவர்!

புர்கா என்றொரு திரை எதற்கு?

தெருச்சரக்கா பெண்மை
திறந்து கிடக்க?
தீயவர் கண்கள்
தீண்டிக் கெடுக்க?
நட்சத்திர அந்தஸ்தல்லவா
நங்கையர்க்கு தீனில்?!
புஷ்பமல்லவா
பொத்திவைத்துப் பாதுகாக்க?!
தீபமல்லவா
கடுங் காற்றினின்றும்
காத்துக்கொள்ள?!

பெண்கள் பணிக்குச் செல்ல தடையா?

தடையில்லைப் பெண்ணே...
உடைதனைப் பேணி
அன்னிய ஆடவரிடமிருந்து
விலகி உழைத்தல்
நடைமுறைச் சாத்தியமெனில்!

அங்கங்கள் மறைத்தல்
அடிமைப் படுத்துவதா?
பெண்மையெனும் தன்மையே
பெண்ணுக்குச் சிறப்பென்ற
சீர்திருத்தம் செப்பினால்
பெண்ணுரிமைப் பறிப்பதாய்
பிதற்றுதல் நேர்மையா?!

ஒருவனுக்கு ஒருத்திதானே சரி?

பலதார மணம்
கடமையல்ல பெண்டிரே,
சின்னவீடு வப்பாட்டி
கள்ளத்தொடர்பு கண்றாவி...
தவிர்க்கமுடியாவிடில்
மறுபடி நீயும்
மணந்துகொள் என்பது
நேர்வழியல்லவா?

மனைவியர் மட்டுமல்ல,
மதிகெட்டு மாந்தரிடம்
மயங்கிச் சிக்குவரும் பெண்டிரே!
மறுமணம் அவளுக்கு
கவுரவம் அல்லவா?!

ஒற்றை நோக்கு
இஸ்லாத்தில் இல்லை
அத்தனை கோணங்களுக்கும்
மொத்தத் தீர்வே இஸ்லாம்!

பாதை மாறினால்
பயணம் முடிந்தாலும்
எட்டவியலாது இலக்கை!

கலிமாச் சொல்
கண்ணியம் கொள்
காட்டிய பாதை செல்
காலத்தை வெல்!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 062 8

அதிரைநிருபர் பதிப்பகம் | November 25, 2016 | ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

லுஹாத் தொழுகையின் சிறப்பு

''ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்குமாறும், லுஹா நேரத்தில் இரண்டு ரக்அத் தொழுமாறும், தூங்கும் முன் வித்ருத் தொழுமாறும் என்னிடம் என் நேசர் நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்தினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1139)

''ஒருவர் தன் ஒவ்வொரு மூட்டுக்களுக்கும் காலையிலேயே தர்மம் செய்ய வேண்டும். ஒவ்வொரு தஸ்பீஹும் ''சுப்ஹானல்லாஹ்வும்'', தர்மம் ஆகும். ஒவ்வொரு ''அல்ஹம்துலில்லாஹ்''வும் தர்மமாகும். ஒவ்வொரு ''லாயிலாஹ இல்லல்லாஹ்'' கூறுவதும் தர்மமாகும். ஒவ்வொரு ''அல்லாஹு அக்பரும்' தர்மமாகும். நல்லதை ஏவுவது தர்மமாகும். கெட்டதை தடுப்பதும் தர்மமாகும். இவை அனைத்துக்கும் பகரமாக லுஹா நேரத்தில் இரண்டு ரக்அத் தொழுவது போதுமாகும் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூதர் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1140)

''நபி(ஸல்) அவர்கள், லுஹா நேரத்தில் நான்கு ரக்அத் தொழுவார்கள். அல்லாஹ் நாடிய அளவுக்கு (சில நேரம்) அதிகமாக்கிக் கொள்வார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1141)

சூரியன் உதயமாகி உயர்வதில் இருந்து உச்சியிலிருந்த சாயும்வரை 'லுஹா' தொழுகை தொழுவது கூடும்.

''சிலர் லுஹாத் தொழுகையை தொழக் கண்டேன். ''இந்த நேரம் அல்லாத நேரத்தில் லுஹாத் தொழுவது மிகச் சிறந்தது என்பதை அவர்கள் அறிந்து கொள்வது நல்லது. ஏன், எனில் நபி(ஸல்) அவர்கள், ''இறைவனிடம் மீளும் மக்கள் (லுஹாவை) தொழுவது, ஒட்டகக் குட்டிகள் சூடு பொறுக்காமல் கரிந்து விடும் (பகல்) நேரம் ஆகும்'' என்று கூறினார்கள் என நான் அவர்களிடம் கூறினேன். (அறிவிப்பவர்: ஸைத் இப்னு அர்கம் (ரலி) அவர்கள் (முஸ்லிம்)   (ரியாளுஸ்ஸாலிஹீன்:1135)

பள்ளிவாசலுக்குரிய காணிக்கைத் தொழுகை தொழுதிட ஆர்வமூட்டுதல்!மேலும் பள்ளிவாசலில் எப்போது நுழைந்தாலும் இரண்டு ரக்அத் தொழும் முன் உட்காருவது கூடாது. அந்த இரண்டு ரக்அத், பள்ளிவாசல் காணிக்கை தொழுகையாகவோ, அல்லது பர்லான தொழுகையாகவோ, அல்லது வழமையான சுன்னத், மற்றும் நபிலான தொழுகையாகவோ இருந்தாலும் சரியே!

''ஒருவர் பள்ளிவாசலுக்குள் நுழைந்தால், இரண்டு ரக்அத் தொழும்வரை உட்கார வேண்டாம்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: கதாதா (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்)    (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1144)

''பள்ளியில் நபி(ஸல்) அவர்கள் இருந்தபோது அவர்களிடம் வந்தேன். ''இரண்டு ரக்அத் தொழுவீராக!'' என்று அப்போது நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1145)

உளு செய்தபின் இரண்டு ரக்அத் (தொழுவது) விரும்பத்தக்கது

''பிலாலே! இஸ்லாத்தில் நீர் செய்கின்ற சிறந்த செயல் பற்றி என்னிடம் கூறுவீராக ஏன் எனில், சொர்க்கத்தில் எனக்கு முன்பு உம் செருப்பு சப்தத்தைக் கேட்டேன்'' என்று நபி(ஸல்) அவர்கள் பிலாலிடம் கூறினார்கள். ''இரவிலோ, பகலிலோ எப்போது உளு செய்தாலும் அந்த உளுவுக்குப் பின் இரு ரக்அத் நபில் தொழாமல் நான் இருந்ததில்லை.  இதைவிட வேறு சிறந்த செயல் செய்ததில்லை'' என்று பிலால் (ரலி) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)   அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1146)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...

வானத்தின் மீதும் தாரிக் மீதும் சத்தியமாக! (அல்குர்ஆன்: 86:1)

தாரிக் என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்? (அல்குர்ஆன்: 86:2)

அது ஒளி வீசும் நட்சத்திரம். (அல்குர்ஆன்: 86:3)

ஒவ்வொருவர் மீதும் கண்காணிப்பாளர் இல்லாமல் இல்லை. (அல்குர்ஆன்: 86:4)

மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதைச் சிந்திக்கட்டும். (அல்குர்ஆன்: 86:5)

குதித்து வெளிப்படும் நீரிலிருந்து படைக்கப்பட்டான். (அல்குர்ஆன்: 86:6)

அது முதுகுத் தண்டுக்கும் முன் பகுதிக்கும் இடையிலிருந்து வெளிப்படுகிறது. (அல்குர்ஆன்: 86:7)

இவனை மீட்பதற்கு அவன் ஆற்றலுடையவன்.
(அல்குர்ஆன்: 86:8)

அந்நாளில்  இரகசியங்கள் வெளிப்படுத்தப்படும்.
(அல்குர்ஆன்: 86:9)

அவனுக்கு எந்த வலிமையும் எந்த உதவியாளரும் இருக்க மாட்டார்கள். (அல்குர்ஆன்: 86:10)

திருப்பித் தரும் வானத்தின் மீது சத்தியமாக!
(அல்குர்ஆன்: 86:11)

பிளக்கும் பூமியின் மீது சத்தியமாக! (அல்குர்ஆன்: 86:12)

இது தெளிவான கூற்றாகும். (அல்குர்ஆன்: 86:13)

இது கேலிக்குரியதல்ல. (அல்குர்ஆன்: 86:14)

அவர்கள் கடும் சூழ்ச்சி செய்கின்றனர். (அல்குர்ஆன்: 86:15)

நானும் கடும் சூழ்ச்சி செய்கிறேன். (அல்குர்ஆன்: 86:16)

எனவே(என்னை) மறுப்போருக்கு அவகாசம் அளிப்பீராக! சொற்ப அவகாசம் அளிப்பீராக! (அல்குர்ஆன்: 86:17)

(அல்குர்ஆன்: 86: 1 -17 அத்தாரிக் - விடிவெள்ளி)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
 இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு