Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பிரதர் என்ன நினைக்கிறார்னா? 12

அதிரைநிருபர் பதிப்பகம் | August 31, 2016 | , , , ,

முன்குறிப்பு: இந்த பதிப்பால் நம் ஊரில் உள்ள கொசுக்கள் செத்து மடிந்து விடும் என்றோ, அல்லது பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறையும் என்றோ நான் நினைக்கவில்லை...எனவே நானே சொல்கிறேன் இந்த பதிப்பால் ஊருக்கு எந்த பயனும் இல்லை. [அப்பாடா... யாராவது இதனால் என்ன பயன் என்று கேட்கும் ஒரு பின்னூட்டம் மிச்சம் செய்ய நம்மால முடிந்தது]
  
கோபம் புருச லட்சனம்????

மனைவியிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வந்த நண்பர் [ஏறக்குறைய 400 கி.மீ பயணம் செய்து] " நம்ம அருமை தெரியனும்னா இப்படி செஞ்சாத்தான் தெரியும்...என்ன சொல்றீங்க?' 

'அது சரி நீங்க என்ன செஞ்சீங்க.. அருமை தெரிய"நு சொல்லவே இல்லையே...'

மொபைலெ ஸ்விச் ஆஃப்  செஞ்சிட்டேன். நான் இங்கேதான் இருக்கேன்னு யார்ட்டையும் சொல்லலே.... நான் இல்லாமெ கஷ்டப்படட்டும், மார்க்கெட்லெ கறி வாங்குறதைலேருந்து சம்பாதிச்சு கொட்டுற வரைக்கும் நம்ம மாதிரி ஆம்பிள்ளைங்கதான்... ஆனால், வீட்டிலெ இருந்து சீரியல் பார்த்துக்கிட்டு டெலிபோனில் ஊருக்கும், பக்கத்து வீட்டு பொம்பளைங்க கூட பிசாது பேசுர பொம்பளைங்களுக்கு இவ்வளவு திமிர் இருக்கும்னா.. எனக்கு எவ்வளவு இருக்கும்?,

நண்பரை ஆசுவாசப்படுத்த கூல்ட்ரிங் ஆர்டர் செய்து விட்டு நான் இளநீர் மட்டும் குடித்தேன்...

' நீங்க ஏன் பெப்சி / கோக் குடிக்கலெ"- நண்பர்.

'முடிந்த அளவு இயற்கையா இருந்து பழகிட்டேன்...' இப்போவெல்லாம் இயற்கையான உணவுகள்தான் ரொம்ப காஸ்ட்லி ஆயிடுச்சி... இல்லே'

"ஆமா... அது சரி நான் கோவிச்சிட்டு வந்ததெ பத்தி என்ன நினைக்கிறீங்க?."..

" உங்க குடும்பம் கொஞ்ச நாளைக்கு நிம்மதியா இருக்கும்"

"என்ன இப்படி சொல்லிட்டீங்க"

'ஏன்னா நீங்க நினைக்கிறது என்னன்னா... நீங்க இல்லாமெ உங்க மனைவி பிள்ளைங்க ரொம்ப கஷ்டப்படுவாங்கன்னுதானே... எனக்கு என்னவோ அவங்க பகல் சாப்பாடு கூட ஒரு கறி/ரசத்தோடு சிம்பிளா வேலையில்லாமெ இருந்துட்டு சீரியல் பார்த்துட்டு... ராத்திரிக்கு பிஸ்ஸா/மெக்டோனால்ட் ஹோம் டெலிவரிக்கு ஆர்டர் கொடுத்திட்டு எல்லா சீரியலும் உங்களோட ' ரிமோட்டெ கண்ட எடத்துலெ போடாதீங்க.. பேனை போடு, கிச்சன் லைட் ஏன் தேவை இல்லாமெ எரியுது" போன்ற பிக்கல் பிடுங்கல் இல்லாமல் நிம்மதியாக இருப்பார்கள் என்பதெ என் கணிப்பு.

மனுசன் அடுத்த நிமிடமே திரும்பிப்போக முடிவெடுத்தார். இது மாதிரி ஆட்களுக்கு புத்தர் மாதிரி அறிவுரை எல்லாம் சொன்னால் திருந்த மாட்டாப்லெ.... உங்க வீட்டிலெ எல்லாரும் சந்தோசமா இருக்காங்கன்னு சொன்னா பொறுத்துக்கொள்ள முடியாது...

நீதி: கோபிச்சுட்டு வீட்டை விட்டு போகுமுன் யோசிங்கப்பா...

பிரதர் என்ன நினைக்கிறார்னா?

இது நடந்து சில வருடங்கள் இருக்கும். மலேசியாவின் east coast பகுதியான Kota Bharuலிருந்து கஸ்டமரை 'கண்டுக்கிட்டு" திரும்பி வரும்போது எனக்கு மிகவும் பிடித்த Kuantan என்ற ஊரில் நுழையும்போது சரியாக லுஹர் தொழுகை நேரம் வரும். அங்குள்ள பெரிய பள்ளியில் தொழுதுவிட்டு பக்கத்திலேயே ஸ்டாலில் சாப்பிட உட்கார்ந்தால் பல முகங்களை பார்க்கலாம். பார்க்கிங் பிரச்சினையும் அதிகம் இருக்காது.


என்னை நோக்கி ஒருவர்  காலில் பேன்டேஜுடன் நடந்து வந்து...

"பிரதர், ஒரு வெள்ளி இருக்குமா? நான் ஜி.ஹெச் போகனும் , காலுக்கு இன்னைக்கு ட்ரஸ்ஸிங் அப்பாயின்ட்மென்ட்"...

'அப்படியா... உட்காருங்க... லன்ச் சாப்டாச்சா... உட்காருங்களேன் ஒன்னா சாப்பிடலாம்.. அவர் எதிர்பார்க்கவில்லை என நினைக்கிறேன். நன்றி கண்ணில் தெரிய.. 


"பிரதர் ...இதுவரை யாரும் என்னை சாப்ட்டியானு கேட்டமாதிரி தெரியலே.. என்னமோ தெரியலெ நீங்க கேட்ட உடனேயே சாப்ட உட்கார்ந்துட்டேன்... அதுக்காக என்னையெ தப்பா நினைக்க மாட்டீங்களே?"...


தப்பா நினைக்க என்ன இருக்கு... அது சரி ஒரு வெள்ளி கேட்டீங்களே போதுமா?

"போதும்...பஸ்ஸுக்குத்தான்...ஜி.ஹெச் நாலே எல்லாம் ஃப்ரீதான்.

நான் கொஞ்சம் அதிகமாக பணம் கொடுத்து ' செலவுக்கு வச்சிக்கோங்க... தேவைப்படும்'

அதற்கு பிறகு அவர் சொன்னதுதான் க்ளைமாக்ஸ்..

"பிரதர்... உங்களை பார்த்தால் நல்ல மனுசனா தெரியுது.. உங்களுக்கு ஒன்னு சொல்ரேன்..... யாருக்கு இது மாதிரி உதவி செஞ்சாலும்.. இந்த முஸ்லீம்களுக்கு மட்டும் உதவி செஞ்சிடாதீங்க...கெட்டவைங்க அவனுக."

நான் சிரித்தேன்... வேண்டுமென்றே "ஏன் என்று கேட்கவில்லை... பொங்கி... கொடுத்த காசை திருப்பி கொடுனு சின்ன புள்ளத்தனமாகவும் நடக்கவில்லை.

பிறகு என் பெயர் என்ன என கேட்டார்... அங்குதான் ட்விஸ்ட் கிளைமாக்ஸ்...' "என் பெயர் ஜாகிர் ஹுசேன்".... அவர் முகத்தில் ஈ, கொசு, மரவட்டை எதுவும் ஆடவில்லை..... [ஈ ஆடவில்லைனு எழுதினால் ரொம்ப ரிப்பீட் சென்டன்ஸ்னு நானே எடிட் செஞ்சுடுவேன்னு பயம்தான்']

என் பெயர் கேட்ட பிறகு ஒரு ஜவுளிக்கடை அளவுக்கு சாரி சொன்னார்...

'பரவாயில்லை... யாரோ ஒருவர் உங்களை மனம் நோக வைத்திருக்க வேண்டும்... துரதிஸ்டவசமாக அவர் முஸ்லீமாக இருந்திருக்க வேண்டும்.. அதுதான் முஸ்லீம்களின் மீது உங்களுக்கு இவ்வளவு கடுப்பு" மனிதர்கள் செய்யும் தவற்றுக்கு இஸ்லாம் என்ன செய்யும்...

இது நாள் வரை நான் நடந்து கொண்டதும் பேசியதும் சரி என்கிறேன்...

நான் கொஞ்சம் அவரிடம் கடுமையாக நடந்து இருந்தால் அவர் போய் இன்னொரு "பிரதரை" உருவாக்கிவிடுவார் என்பது மட்டும் நிச்சயம்.
_______________________________________________________________________________
பட்ஜட் ஏர்லைனும் பாடாவதி கவனிப்பும்

பட்ஜட் ஏர்லைன் வந்த பிறகு நேராக திருச்சி போய் இறங்கிடலாம்னு போன வருடம் ஊர் வந்த போது ஏற்பட்ட சில அனுபவங்கள் உண்மையில் மறக்க முடியாதது. கோலாலம்பூர் ஏர்போர்ட்டில் ஏறக்குறைய ஞாயமான கிலோ மீட்டர் நடக்க வைத்தார்கள். நேராக நடந்தால் 100 மீட்டரில்  இருக்கும் விமானத்துக்கு பக்கவாட்டு குறுக்கு வாட்டு என ஏறக்குறைய வை. கோ. போன நடைபயணத்தை விட அதிகமாக இருந்தது.

சின்ன வயதில் இருந்து அதிக வெயிட் தூக்கி அனுபவம் இல்லாததால் ' "கையிலெ எவ்வளவு வேனும்னாலும் வச்சிக்கலாம் , பேக் பெரிசா தெரியக்கூடாது" என ஏவியேசன் ரூல்ஸ் தெரிந்தமாதிரி பேசிய குடும்பத்தினரின் சொல்கேட்டது எவ்வளவு தவறு என்று அப்போது தெரிந்தது. இதில் என் மகன் வேறு' வாப்பா... நம்மலெ போர்ட்டரா யூஸ்பன்னிட்டாங்க" நு சொல்லும்போது  ஒப்பாரி வச்சி அழனும்போல இருந்தது ஏனோ உண்மை.

இமிகிரேசன் எல்லாம் முடிந்து வெயிட்டிங் லான்ச்சில் இருக்கும்போது ஒருவன் தன் மொபைலில் திருச்சிக்கு ஏர்போர்ட்டுக்கு ஆள் அனுப்பிட்டீங்களானு கேட்டு காட்டு கத்து கத்தியது பேசாமல் போனை ஆஃப் செய்து விட்டு கத்தியிருந்தால் கூட திருச்சியில் இருக்கும் ஆட்களுக்கு காதில் விழுந்திருக்கும்.

மலிவு விலை விமான டிக்கட் என்று மக்களையும் மிகவும் மலிவாக நடத்துவதுதான் காலக்கொடுமை. திருச்சிக்கு இருக்கும் ஒரே டைரக்ட் ஃபிளைட் என்பதை தவிற வேறு எதுவும் விசேசம் இல்லாமல் 'ஜன்னல் ஒர சீட்டுக்கு பணம் , சாப்பாட்டுக்கு பணம், 150 மிலி மினரல் வாட்டருக்கு 75 ரூபாய் என்று பிடிங்கி எடுத்ததை நினைக்கும்போது... இந்த விமானம் நடத்தும் ஆப்பரேசன் சீஃப் நம் ஊரில் இருக்கும் வரதட்சினை வாங்கும் மாப்பிள்ளை வீட்டார்களிடம் ட்ரைனிங் எடுத்திருக்க வேண்டும், என்று சூடம் அனைத்து சத்தியம் செய்யலாம். [ அ.நி அமீர் ! "சூடம்... ஒரு ஃப்லோவில் எழுதியது... சூடத்துக்கும் மார்க்கத்துக்கும் சம்பந்தமில்லையே காக்கா என நெறிச்சுடாதீங்க ஸாரி எடிட் செஞ்சிடாதீங்க... அப்புறம்  நாம் தடுமல் வந்தால் 'விக்ஸ்' கூட போட முடியாது... ஏன்னா சூடம் இருக்குலே..]


அப்புறம் விமானத்தில் "சொல்லு கேட்காத பக்கி" யை ஒருவர் கூட்டிக்கொண்டு வந்து அவன்  போட் சத்தத்தில் விமான கேப்டனே,  கேப்டன் விஜய்காந்த் மாதிரி துப்பாக்கியை தூக்கிட்டு வந்திடுவாரோனு பயமா இருந்தது.]

திருச்சியில் விமானத்தை விட்டு இறங்கியதும் கொஞ்ச தூரத்தில் நாம் காரில் ஏறிச்செல்லும் சூழல் மட்டும் மனதுக்கு சந்தோசமாக இருந்தது

ZAKIR HUSSAIN

பயம்... பயம்... பயம்...! 23

அதிரைநிருபர் பதிப்பகம் | August 30, 2016 | , , , ,

நான் சிறு பிள்ளையாக இருக்கும் சமயம் என் வீட்டில் மட்டுமல்ல என்னைபோன்று சிறுவர்கள் இருக்கும் வீட்டிலெல்லாம் அவர்களுக்கு தாய்மார்கள் சோறூட்ட அன்புடன் அம்புலிமாவை (நிலாவை) காட்டி ஊட்டுவார்கள். அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு சற்று பயம் காட்டும் விதமாக மாக்காண்டி, பூச்சாண்டி,பேயி, சாக்குமஸ்தான், பிள்ளை பிடிப்பவன் என்று ஏதேதோ சொல்லி அச்சத்துடன் உணவை ஊட்டி விடுவார்கள். உணவுடன் பயத்தையும் உண்டு வளர்ந்தோம்.

அதனால் ஒரு அச்ச உணர்வுடனேயே சிறுவயதில் வளர்க்கப்பட்டோம் இருளைக்கண்டால் பயம், தனிமையில் செல்ல பயம், சமீபத்தில் மரணமடைந்தவர்கள் வீட்டருகே செல்ல பயம், உச்சி பொழுதில் பயம், சூரியன் மறைந்தால் பயம் உதயம் இப்படி பயம் அன்றாடம் நம் வாழ்வில் கலந்து விட்ட ஒன்றாகவே நாம் வளர்க்கப்பட்டோம்.

அந்த பக்கம் செல்லாதே, இந்தப்பக்கம் செல்லாதே, அந்த மரத்தடியில் உண்டு, இந்த குளக்கரையில் உண்டு, அது ஒரு பேய் வீடு என்று யாரும் அறியா, ஊர்ஜிதம் செய்யப்படாத மர்மக்கதைகள் பல சொல்லி நாம் சிறுவயதில் அச்சத்துடன் வளர்த்தெடுக்கப்பட்டோம்.

மீன் சாப்பிட்டு விட்டு கை, வாயை நன்கு கழுவி நறுமணம் பூசாமல் வெளியில் செல்வதனாலும் மற்றும் இரவில் மல்லிகைப்பூ நறுமண சென்ட் பூசி தனியே செல்வதனாலும் பேய் எளிதில் நம்மை பிடித்து விடும் என்று பயமுறுத்துவார்கள். அதனால் மீன் சாப்பிட்டு பின் வெளியில் கிழம்பும் சமயம் பாண்ட்ஸ் பவுடரை நன்றாக பூசி சென்றோம். என்ன செய்வது? யார்ட்லி பவுடர் எல்லாம் அப்பொழுது புழக்கத்தில் இல்லை.

ஆனால் இது வரை யாரும் பேய், பிசாசுகளை நேரில் கண்டிருக்கிறார்களா? என்றால் தெளிவான பதில் இதுவரை இல்லை. ஆனால் அது பற்றிய கதைகளும், மர்மங்களும், அச்சங்களும் மர்மப்புதையல் போல் இன்றும் பொதிந்து கிடக்கிறது நம்மிடையே கேரளாவைப்போல்.

சிலர் அதன் சப்தத்தை கேட்டிருக்கிறேன் அல்லது தூரத்தில் நெருப்பெறிய கண்டிருக்கிறேன் அல்லது ஒரு ஒளியைப்போல் கண்டிருக்கிறேன், நிழலைப்போல் கண்டிருக்கிறேன் என்று எதேதோ அச்சத்திற்கு தகுந்த வடிவம் கொடுத்து நம்மிடம் சொல்லி எல்லோரையும் உரைய வைத்து விடுவார்கள்.

இரவு ஒன்பது மணிக்கெல்லாம் ஊர் ஓசையின்றி அடங்கிப்போகும் நம்மூர் போன்ற சிற்றூர்களில், கிராமப்புறங்களில் வாழும் மக்களிடம் தான் இது போன்ற இனம்புரியாத அச்சம் நிலவி வருவது இயற்கை. ஒரு சில தைரியமான ஆண்களும், பெண்களும் அங்கொன்றும், இங்கொன்றுமாக இருக்கத்தான் செய்கிறார்கள். போக்குவரத்து இரவு பகலாய் ஓடிக்கொண்டிருக்கு மின்விளக்கு வெளிச்சம் அதிகம் உள்ள நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கு இது போன்ற அச்ச உணர்வு இயற்கையில் இருப்பதில்லை. இரவு ஒரு மணிக்கு கூட தனியே வெளியில் சென்று வந்து விடுவார்கள்.

ரமளான் மாதத்தில் அல்லாஹ்வே குர்'ஆனில் அட்டூழியம் புரியும் சைத்தான்கள் கட்டப்பட்டுவிடும் என்று குறிப்பிட்டு சொல்வதால் நம் மக்கள் ரமளானில் மட்டும் ஆண்களும், பெண்களும் இரவு நேரங்களில் பயமின்றி வெளியில் சென்று வர அச்சப்படுவதில்லை. சிறுவயதில் ரமளான் அல்லாத காலங்களில் இஷா தொழுகை முடிந்து நண்பர்களுடன் தெரு முனையில் சிறிது உரையாடி விட்டு சந்தில் (முடுக்கு) உள்ள வீட்டிற்கு திரும்பி வர யாராவது பெரியவர்கள் சந்தில் செல்கிறார்களா என்று காத்துக்கிடந்து அல்லது தெரிந்த ஆயத்தை பயத்துடன் ஓதி வேகமாக வீடு திரும்பிய‌ அனுபவமும் உண்டு. அடுத்த சந்தில் வீடு உள்ள ஒரு நண்பன் தனிமையில் இரவில் வீடு செல்லும் பொழுது நாகூர் ஈ.எம். ஹனீஃபா பாடல்களை (இறைவனிடம் கையேந்துங்கள்....) சப்தமாக பாடிக்கொண்டு வேகமாக ஓடி செல்வான் என நண்பன் ஒருவன் சொல்ல அறிந்தேன். இப்பொழுது நினைத்தால் சிரிப்பு தான் வரும் அந்த நேரத்தில் வரவழைக்கப்படும் தைரியம் அலாதியானது தான்.என் சொந்தக்கார‌ வீட்டின் முன் நன்கு குலை,குலையாக காய்த்து நிழல் தந்து கொண்டிருந்த மாமரத்தில் பேய் இருப்பதாக பல பேர் சொல்லி அதை அவ்வீட்டினர் வெட்டிவிட்டனர். பிறகென்ன மாங்காய் ஊறுகாயாக இருந்தாலும், மாம்பழமாக இருந்தாலும் காசு கொடுத்து தான் இனி அவர்கள் வெளியில் வாங்க வேண்டும்.

என்ன தான் தைரியமாக பகலில் பேய்,பிசாசு சமாச்சாரத்தில் வியாக்கியானம் படித்தாலும் எவரேனும் இரவில் நான் மைத்தாங்கரையில் (மையவாடி) தனியே பாய் போட்டு படுத்து வருவேன். இரவில் குளக்கரையில் தனிமையில் படுத்துறங்குவேன் என்று வீராப்பு பேசி சவால் விட்டு அதில் வெற்றி கண்டவர்கள் யாரேனும் என் வாழ்நாளில் நான் கண்டதில்லை. நீங்கள் கண்ட யாரேனும் உண்டா?

நடு இரவில் நாய் ஊளையிட்டாலே பேய் வருவதற்கு அறிகுறி என்பார்கள். (பேய் வருவதற்கு முன்னரே நாயிக்கு எஸ்.எம்.எஸ். எப்படி கொடுக்கின்றது என்று தெரியவில்லை).

ஊரில் சில பெரியவர்கள் நம் கண்ணுக்கு புழப்படாத குர்'ஆனில் சொல்லப்பட்டுள்ள ஜின்களை தன் வசப்படுத்தி அதை தனக்கு பணிவிடைகள் செய்ய பணித்திருந்தார்கள் என சிலர் கூறக்கேட்டிருக்கிறேன். அதில் நல்ல ஜின்களும் உண்டு, பிறருக்கு கேடு விளைவிக்கும் கெட்ட ஜின்களும் உண்டு என்று சொல்வார்கள். இதில் உள்ள மர்மங்களையும், மாச்சரியங்களையும் இதையெல்லாம் படைத்து அதன் கட்டுப்பாட்டை தன் வசம் வைத்துள்ள வல்ல ரஹ்மானே நன்கறியக்கூடியவன்.

முப்பத்தாறு வருட உலக அனுபவத்தில் பல அச்சங்களையும், அதனால் வரும் பயங்களையும் சொல்லக்கேட்டிருக்கிறேன் அதனால் அஞ்சியும் இருக்கிறேன். ஆனால் அதன் உண்மைக்கருவை இதுவரை எங்கும் நான் கண்டதில்லை. அதைக்காண முயற்சி எடுக்க விரும்பவும் இல்லை அதற்கு போதிய தைரியமும் மனவசம் இல்லை.

இரவில் ஆவுசம் (பேயின் ஒரு வகை) கத்தியதை கேட்டிருக்கிறேன் என்று என் நண்பன் ஒருவன் சொல்லவும் கேட்டிருக்கிறேன். இந்த மர்ம முடிச்சுகளுக்கெல்லாம் தெளிவான தீர்வு நிச்சயம் இறைவேதத்தில் இல்லாமல் இல்லை என்பதை நாம் அறிவோம்.

கல்லூரி படிக்கும் சமயம் ஒரு நாள் சுபுஹ் பாங்கு சொல்லியதும் எழுந்து தொழுவதற்காக தனியே மரைக்காப்பள்ளி சென்று கொண்டிருந்தேன். செல்லும் வழியில் சில வீடுகளில் பெண்கள் அதிகாலையில் எழுந்து வீட்டின் முன் சுத்தம் செய்து பெருக்கி தெரு குழாயில் வரும் தண்ணீரையும் பிடித்துக்கொண்டிருப்பர். அவ்வாறு சற்று தூரத்தில் அவர்கள் இருக்கும் சமயம் நான் தனியே நடந்து சென்று கொண்டிருந்தேன். திடீரென என்னால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. கால்கள் ஒன்றோடொன்று பிண்ணிப்பிணைந்து கயிறால் கட்டியது போல் என்னால் நகர முடியாமல் போனதை உணர்ந்தேன். தூரத்தில் உள்ள பெண்கள் என்னை பார்த்து எதுவும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக அப்படியே கைலியை கட்டுவது போல் அங்கேயே நின்று விட்டேன். சிறிது நேரத்திற்கு பின் என் நடையை தொடர்ந்தேன் பள்ளியை நோக்கி. அந்த நேரம் எனக்கு உடல் நலக்குறைவு எதுவும் இல்லை. நன்றாகத்தான் உறங்கினேன் பிறகு விழித்தெழுந்தேன். எனக்கறியாமல் வந்த உடல்நலக்குறைவா? இல்லை தீய (சைத்தான்) சக்தி ஏதும் என்னை குறிக்கிட்டதா? என்பதை இன்றும் என்னால் ஊர்ஜிதம் செய்ய இயலவில்லை. அல்லாஹ்வுக்கே எல்லாம் வெளிச்சம்.

என் நண்பன் ஒருவன் ஒருநாள் சுபுஹ் தொழுகைக்காக பாங்கொலி கேட்காமல் எப்பொழுதும் போல் எழுந்து செக்கடிப்பள்ளி சென்றிருக்கிறான். அவன் செல்லும் பொழுது வழியில் யாரும் இல்லை. பள்ளியும் வந்து விட்டது. ஆனால் பள்ளியின் வாயில்கள் பூட்டப்பட்டிருக்கின்றன. காரணம் ஒன்றும் அறியாதவனாய் கேட்பதற்கு யாரும் அங்கில்லாமல் வீடு திரும்பி விட்டான். கடைசியில் வீட்டில் கடிகாரத்தை எதார்த்தமாக பார்த்திருக்கிறான் மணி இரவு ஒன்று தான் ஆன‌து. அச்சத்தில் அப்படியே உறங்கி இருப்பான்.

இன்னொருவர் இரவில் வெளியூர் சென்று தனியே வீடு திரும்பும் பொழுது யாரோ அவர் பெயரை எங்கிருந்தோ கூப்பிட்டது போல் இருந்ததாக‌ ஒரு பிரம்மை அவருக்கு. உடனே அதிர்ச்சியில் மூன்று நாட்கள் கடும் காய்ச்சலில் அவதிப்பட்டதாக கேள்விப்பட்டேன்.

நான் கல்லூரி படிப்பு முடித்ததும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் திருப்பூரில் ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்தேன். விடுமுறையில் ஊர் வரும் பொழுது பஸ்ஸில் இரவில் திருப்பூரிலிருந்து புறப்பட்டு தஞ்சாவூருக்கு அதிகாலை ஒன்றரை மணிக்கு வந்திறங்குவேன். பிறகு தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டை, பிறகு பட்டுக்கோடையிலிருந்து அதிரைக்கு சுமார் அதிகாலை மூன்றரை மணிக்கு வந்திறங்குவேன். சேர்மன் வாடி வந்திறங்கியதும் சந்தோசத்துடன் பயமும் என்னை பற்றிக்கொள்ளும். எப்படி தனியே வீடு செல்வது? செக்கடி மோடு வழியே செல்வதாக இருந்தால் குளக்கரையில் ஒருவர் சமீபத்தில் அகால மரணமடைந்துள்ளார். சரி வேறு வழியை தேர்ந்தெடுத்து வாய்க்கால் தெரு பக்கம் செல்லலாம் என்றால் அங்கு ஒரு பெண்ணும் சமீபத்தில் அகால மரணமடைந்துள்ளார். பிறகு எப்படி வீடு செல்வது? சுபுஹ் பாங்கு சொல்லும் வரை சேர்மன் வாடியில் உள்ள ஹாஜியார் கடையில் உட்கார்ந்து இருந்து விட்டு பிறகு பாங்கு சொன்னதும் வீட்டு பெரியவர்கள் வீட்டை திறந்து பள்ளிக்கு செல்ல வெளியில் வரும் சமயம் அவர்களுடன் மெல்ல,மெல்ல எப்படியோ சிரமப்பட்டு வீடு வந்து சேர்வேன். திக், திக் என்று தான் இருக்கும். அந்த நேரம் இடையில் ஒரு பூனை குறிக்கிட்டாலும் எமக்கு ஒரு டைனோசரே குறிக்கிட்டு சென்றது போல் பகீரென்றிருக்கும். இதெல்லாம் என் வாழ்வில் மறக்க இயலா பயம் கலந்த மலரும் நினைவுகள்.

ஒரு முறை மரைக்காப்பள்ளியில் இயங்கி வரும் மத்ரஸத்துந்நூர் ஹிஃப்ள் மத்ரஸாவில் அக்கம் பக்கத்து ஊரில் உள்ள சில மாணவர்கள் ஓதிக்கொண்டிருந்தனர். மத்ரஸாவிற்கு பக்கத்திலேயே அவர்கள் தங்க அறைகளும் ஒதுக்கப்பட்டிருந்தது. ஒரு கோடை காலத்தின் இரவில் பழைய‌ மரைக்காப்பள்ளியின் வராண்டாவில் படுக்க மாணவர்கள் சென்றிருக்கிறார்கள். அதில் ஒரு மாணவன் பள்ளியின் உள் கதவின் குறுக்கே படுத்துறங்கி இருக்கிறான். ஒரு மூலையில் நம் ஊரைச்சார்ந்த ஒரு நபரும் படுத்துறங்கி இருக்கிறார். நடு இரவில் பள்ளியின் கதவறுகே படுத்துறங்கிய அந்த மாணவன் அவனறியாது "ஓ வென ஓலமிட்டவனாக" தண்ணீர் ததும்பிக்கொண்டிருக்கும் அருகில் உள்ள ஹவுதில் விழுந்து அதனுள் இருக்கும் பாசிக்குள் புதைந்து விட்டான். உடனே திடுக்கிட்டு எழுந்த அந்த நபர் ஓடிச்சென்று அல்லாஹ் அக்பர் என்று சொல்லி ஹவுதுக்குள் புதைந்திருப்பவனை தைரியத்தை வரவழைத்து உள்ளே இறங்கி வெளியே கொண்டு வந்திருக்கிறார். மறுநாள் காலையில் நானே அந்த மாணவனிடம் நடந்த சம்பவத்தை பற்றி கேட்டேன். அவன் என்ன நடந்தென்று அவனுக்கே தெரியாமல் போனதை அச்சத்துடன் சொன்னான். அல்லாஹ் பாதுகாத்தான் அந்த நேரம் யாரும் அவனை கவனிக்கவில்லை எனில் அவன் இறந்திருக்கக்கூடும். அந்த நாள் முதல் பள்ளியின் குறுக்கே படுத்துறங்குவதால் வரும் விபரீதங்களை அறிந்து கொண்டேன்.

இப்பதிவு யாரையும் அச்சமூட்டி தேவையற்ற பயத்தை ஊட்டுவதற்காக அல்ல. கண்டதற்கெல்லாம் பயந்து, பயந்து வாழ்வில் நல்ல பல வாய்ப்புகளையும், உரிமைகளையும், உடமைகளையும் மற்றும் பெற வேண்டியவைகளை அநியாயமாக நாம் இழந்திருக்கிறோம் என்று சொல்ல வந்தேன். இருளால் நமக்கு வரும் இரவு பயங்களால் சில சமூக விரோதிகளும், திருடர்களும், தவறான தொடர்புள்ளவர்களும் தங்கள் தீய செயல்களை அரங்கேற்றிக்கொள்ள வாய்ப்பாக‌ பயன்படுத்திக்கொள்ள‌ நாம் அனும‌திக்க‌ கூடாது.

இதுவ‌ரை வாழ்நாளில் பேய்பிடித்த‌ ம‌னித‌ர்க‌ளை பார்த்திருக்கிறேன். ஆனால் அவ‌ர்க‌ளை பிடித்த‌ பேயை ஒரு த‌ட‌வை கூட‌ பார்த்த‌தில்லை. அத‌னால் பிடிக்காத‌ பேயை நீங்க‌ள் பார்த்திருக்கிறீர்க‌ளா? என்று யாரும் கேட்டுவிடாதீர்க‌ள்.

இன்றைய சிறுவர்களுக்கு பயம் காட்ட பூச்சாண்டி போல் வேசமிட்டு திடீர் அச்சமூட்ட முயன்றாலும் "என்னா இது ஜெட்டிக்ஸ்லெ வர்ர மாதிரி இருக்கு, ஹாரி பாட்டர்லெ வர்ர மாதிரி இருக்கு" என்று அலட்சியமாக சொல்லி விடுவார்கள் பயமின்றி. வாழ்வில் என்ன தான் தைரியமான ஆளாக இருந்தாலும், சரியான பயந்தாங்கொல்லியாக இருந்தாலும் ஒரு நாள் எல்லாவற்றையும் தனியே தவிக்க விட்டு விட்டு இவ்வுலகை விட்டு இருண்ட கபுர் குழிக்குள் செல்லத்தான் போகிறோம். இறைவ‌ன‌ன்றி வேறு எவ‌ர் எம்மை பாதுகாத்திட‌ இய‌லும்?

நிச்சயம் இது போன்ற சம்பவங்கள் உங்கள் வாழ்நாட்களில் குறிக்கிட்டிருக்கலாம். இங்கு எழுதுங்கள் நாமும் தெரிந்து கொள்வோம்.

மலரும் நினைவுகள் ப‌ல‌ வித‌ம் ஒவ்வொன்றும் ஒரு வித‌ம்.

மு.செ.மு.நெய்னா முஹம்மது
இது MSM கைவண்ணத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு மீள்பதிவு !

ஃபோட்டோ ஃபெஸ்டிவல் ! - பேசும் படம் தொடர்கிறது... 27

அதிரைநிருபர் பதிப்பகம் | August 29, 2016 | , , , , ,


நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடரலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது அப்படியே ஊர்பக்கம் நெனப்பை சுற்ற விட்டேன். அட ! நம்ம தலைப்பு ! 'ஃபோட்டோ ஃபெஸ்டிவல்' ன்னு வச்சுடலாமேன்னு முடிவு செய்துட்டேங்க. இங்கே ஆட்டம் பாட்டம் என்று எதுவும் இருக்காது உத்திரவாதம் தருகிறேன். ஆனால் பின்னூட்டம் இருக்கும் என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.


எப்போது ஊருக்கு போனாலும் ஒரு பசுமை காட்சியை சுட்டு அதிரை நிருபருக்கு அனுப்பிவிட வேண்டும் என்ற நோக்கில் சுட்டதுதான் இந்த பசுமைக் காட்சியமைப்பு. 


மனிதனின் சாதனைகளில் இதுவும் ஒன்று. பிரமாண்ட மிருகத்தை பிடித்து வந்து பிச்சை எடுக்க பழக்கிக் கொடுத்து மட்டுமல்லாமல் அதற்கு சமய சாயமும் பூசி விட்டார்கள்.
 

MSM 'மின்' ஆதங்கத்தை போக்கவே இந்த சிட்டுக்குருவி போஸ்.


அந்தக்காலத்து டெக்னாலஜி இந்தக்காலம் வரை தாக்கு 'பிடி'க்கின்றது  இன்னும் ஆச்சர்யமே !


இந்த பாம்பன் பாலத்தில் ரயில் செல்வதை பார்த்தால் அண்ணன் NAS அவர்களின் நினைவு வரும் காரணம் இந்த பாலத்தில் ஓடும் இரயிலில் நான்  முதன்  முதலாக அண்ணன் NAS கூட பயணம் செய்தது (ஆனால் இந்த ரயில் அல்ல).


நாங்கள் மீனுக்கு வலை வீசுகின்றோம் எங்களுக்கு சிங்கள கடற்படை வலை வீசுகின்றது (உலகில் இந்திய ராணுவம் நான்காவது இடத்தில் இருக்காமே உண்மையா ?).


மாதத்தில் ஒரு நாள் இது போன்ற இடத்தில் ஒரு பொழுதை தனிமையில் கழிக்க வேண்டும் (மொபைல் போன் இல்லாமல் )


பூனே முன்பெல்லாம் "பசுமை" பள்ளத்தாக்காக இருக்கும். ஆனால், இப்போது வெறும் பள்ளத்தாக்காய் இருக்கிறது.


நான் எந்த கட்சியிலேயும் இல்லீங்க, இது எதார்த்தமா எடுத்த படமுங்கோ !


பலா பழத்தில் "ஈ மொய்ப்பது போல் என்ற பழமொழியை மாற்றி பலா பழத்தில் எறும்பு மொய்ப்பது போல் என்று மாற்றிவிட வேண்டியதுதான் இதுக்கப்புறம். 

Sஹமீது

பட்டப் பெயர்கள் 8

அதிரைநிருபர் பதிப்பகம் | August 28, 2016 | ,

நபிமணியும் நகைச்சுவையும் - 13

வல்லமையும் மாண்பும் மிக்க ‘அல்லாஹுத்தஆலாவின் பெயர்’ கொண்டே நாம் அனைத்தையும் துவங்க வேண்டும் எனக் கட்டளையிடப் பட்டிருக்கின்றோம். அவனே, மனித இனத்தின் தந்தையை அழகிய உருவத்தில் படைத்து அவருக்கு “ஆதம்” (மனிதன்) எனப் ‘பெயர்’ வைத்து அழைத்தான்.(1) மற்றும், அவன்தான் ஆதம் நபியவர்களுக்கு  அனைத்துப் பொருட்களின் ‘பெயர்களையும்’ கற்றுக் கொடுத்தான். (2) 

பொதுவாக, பெயர் என்பது ஒருவரை ஒருவர் அடையாளப்படுத்திக் கொள்ள அவசியமாகிறது. அதில் சிலருக்கோ, இட்ட பெயரைவிட ‘பட்டப் பெயரே’ நிலைத்தும் போய்விடுகிறது.

அகிலங்களுக்கெல்லாம் அருட்கொடையான தன் அன்புத் தூதரை "நற்செய்தி சொல்பவர்" என்றும்  "மகத்தான நற்குணம் உடையவர்" என்றும் "அகிலத்தாருக்கெல்லாம் அழகிய முன்மாதிரி" என்றும்  தன் அருள்மறையிலே அளவற்ற அருளாளன் அல்லாஹ் (ஜல்) அழைக்கின்றான்.

உத்தமத் தூதரின் ஊர்க்காரர்கள், "அல்-அமீன்” (நன்நம்பிக்கையாளர்) என்ற பட்டமளித்தனர். முஃமீன்களின் அன்னை கதீஜா (ரலி), "யா அபல்காசிம்” (காசிமின் தந்தையே) என்று பிரியமுடன் அழைத்தார். "என் உயிரினும் மேலானவரே!" என்றும் "என் தாய் தந்தையைவிட மேலானவரே" என்றும் சத்திய ஸஹாபாக்கள் போற்றி அழைத்து மகிழ்ந்தனர்.
                              
எனக்கு ஐந்து பெயர்கள் உள்ளன. நான் ‘முஹம்மது’ (புகழப்பட்டவர்) ஆவேன். நான் ‘அஹ்மது’ (அல்லாஹ்வை அதிகமாகப் புகழ்பவர்) ஆவேன். நான் ‘மாஹீ’ (அழிப்பவர்), என் மூலமாக அல்லாஹ் இறைமறுப்பை அழிக்கின்றான். நான் ‘ஹாஷிர்’ (ஒன்று திரட்டுபவர்), மக்கள் எனக்குப் பின்னால் ஒன்று திரட்டப் படுவார்கள். நான் ‘ஆகிப்’ (இறைத்தூதர்களில் இறுதியானவர்) ஆவேன் என்று ஏந்தல் நபியவர்கள் இனிதாய்  இயம்பினார்கள். (3) 

கெட்ட செயலால் கெட்ட பெயரும்  நற்செயலால் நற்பெயரும் பெற்றுக் கொண்ட இரு நபர்களை இப்போது காண்போம்:

ஹிமார்: காத்தமுன் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் 'அப்துல்லாஹ்' என்றொருவர் இருந்தார்.  அவர் நாயகம்  (ஸல்) அவர்களைத் தம் நகைச்சுவைப் பேச்சால் சிரிக்க வைப்பார். வஹீ மூலம் மது அருந்துவது முற்றிலும் தடை செய்யப் பட்ட பிறகும், தொடர்ந்து மது அருந்தியதால் அவர் 'ஹிமார்' (கழுதை) என்ற ‘புனைப்பெயரில்’ மக்களால் அழைக்கப்பட்டு வந்தார். பலமுறை, மது அருந்திய குற்றத்தை ஒப்புக் கொண்டு, அதற்கான தண்டனையும் பெற்றுள்ளார். ஒருநாள், போதையிலிருந்த அவர், நடுநிலை பேணும் நாயகம் (ஸல்) அவர்களின் சபைக்குக் கொண்டு வரப்பட்டார். திருந்தாத அவரை அடிக்கும்படி நீதி நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவர் அடிக்கப்பட்டார். அப்போது அங்கிருந்த மக்களில் ஒருவர், 'இறைவா! இவர் மீது உன் சாபம் உண்டாகட்டும்! மது குடித்த குற்றத்திற்காக, இவர் எத்தனை முறைதான்  இச்சபைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளார்!' என்று கூறினார். அப்போது, அருள்வடிவேயான அண்ணல் நபி (ஸல்) அவர்கள், 'இவரைச்  சபிக்காதீர்கள். ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! இவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறார் என்றே நான் அறிந்துள்ளேன்' என்று இரக்கத்துடன் இயம்பினார்கள்.(4)

தாத்துந் நிதாக்கைன்: உலக வரலாற்றில், பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் படவேண்டிய உன்னத நிகழ்வான ‘ஹிஜ்ரா’வின்போது, இம்மாநிலம் தனக்கொரு மணி விளக்காய் வந்த மாண்பு நபி (ஸல்) அவர்களும் அவர்தம் அணுக்கத் தோழர் அபூபக்ரு (ரலி) அவர்களும் மதீனா செல்ல முடிவெடுத்த சமயம், நான் அவர்கள் இருவருக்கும் பயண உணவை தயாரித்தேன். ஆனால், உணவுப் பாத்திரத்தைக் கட்டிக் கொடுப்பதற்குக் கயிறு எனக்குக் கிட்டவில்லை! என் தந்தை அபூபக்ரு  (ரலி) யிடம், 'இதைக் கட்டுவதற்கு என்னிடம் என் இடுப்புக் கச்சுத் தவிர வேறெதுவும் இல்லையே" என்றேன். அவர்கள், 'அப்படியென்றால் அதை இரண்டாகக் கிழி" என்றார்கள். அவ்வாறே, என் இடுப்புக் கச்சை இரண்டாகக் கிழித்துப் பயண உணவை நான் கட்டி முடித்தேன். இதனால் நான், 'இரண்டு கச்சுடையாள்’ (தாத்துந் நிதாக்கைன்) என்று ‘புனைப் பெயர்’  சூட்டப்பட்டேன் என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் சகோதரி, அஸ்மா பின்த் அபூபக்ரு (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.(5)

சிந்தனைச் சிற்பி செம்மல் நபியவர்கள் ஒரு சில பெயர்களை மாற்றி அமைத்த சம்பவங்களைக் காண்போம்:

ஜமீலா: நபித் தோழர் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுவதாவது; என் தந்தை உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்களுக்கு “ஆஸியா” (பாவி) என்ற பெயருடைய  ஒரு புதல்வி இருந்தார். அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஜமீலா” (அழகி) என்று ‘மாற்றுப் பெயர்’ சூட்டினார்கள். (6)

ஜைனப்: முதலில் எனக்கு “பர்ரா” (நல்லவள்) என்ற பெயரே  இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே எனக்கு “ஜைனப்” (அழகிய தோற்றமுள்ள நறுமணச் செடி) எனப் பெயர் மாற்றினார்கள்.

முஃமின்களின் அன்னை ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களுக்கும் “பர்ரா” என்ற பெயரே இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவருக்கும் ‘ஜைனப்’ என்றே பெயர் சூட்டினார்கள்.

(‘பர்ரா’ என்ற பெயர் பற்றிய பிறிதொரு அறிவிப்பாவது; ‘உங்களை நீங்களே பரிசுத்தப் படுத்திக் கொள்ளாதீர்கள். உங்களில் நல்லவர் யார் என அல்லாஹ்வே நன்கறிந்தவன்’ என்று நபிகள்  நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்).(7)  

தம்  அருமைத் தோழர்கள் சிலரை நபி (ஸல்) அவர்கள் சில செல்லப் பெயர்களிட்டு அழைத்தார்கள். அந்த செல்லப் பெயர்களால் அழைக்கப்படுவதால் பூரிப்பும் புளகாங்கிதமும் ஸஹாபாக்களுக்கு ஏற்பட்டதே தவிர, ஒருபோதும் அந்தப் பெயர்கள் தோழர்களுக்கு வருத்தமேற்படுத்தியதேயில்லை!

அபூ துராப்: ஒருமுறை உத்தமத் திருநபி (ஸல்) அவர்கள் தம் அருமை மகள் பாத்திமாவின் வீட்டுக்குக்கு வருகை தந்து, "உன் கணவர் எங்கே?" என்று வினவினார்கள். "தந்தையே! எனக்கும் அவருக்கும் ஒரு சிறிய விவாதம் நிகழ்ந்தது. எனவே, என் மீது கோபமாக அவர் வெளியேறி விட்டார்" என பதில் கிடைத்தது. ஆளை அனுப்பித் தேடியதில் மஸ்ஜித் நபவியில் கண்டதாகத் தகவல் கிடைத்தது. போய்ப் பார்த்தால், அலீய் (ரலி) அவர்கள் தங்களின் மேனியிலிருந்து மேல் துண்டு கீழே விழுந்து கிடக்க, உடம்பில் மண் படிந்த நிலையில் ஒருக்களித்துப் படுத்திருந்தார்கள்.  அதைப் பார்த்ததும் அண்ணலார் அவர்கள் மனம் நெகிழ்ந்து, அவர் மீது படிந்திருந்த மண்ணைத் தட்டித் துடைத்து விட்டவாறே,  "எழுந்திரும்!  அபூதுராப் (மண்ணின் தந்தையே). எழுந்திரும்!" என்றார்கள். அவர் உறக்கம் கலைந்தது. அழகிய அழைப்பால் வருத்தம் மறைந்தது. அன்றிலிருந்து அந்தச்  செல்லப்பெயர் நிலைத்துப்போனது. அவருக்கும் அது மிகப் பிடித்துப்போனது.(8)

ஒருவர் மிக விரும்பும் ஒன்றின் பெயரோடு 'அபூ' சேர்த்துச் செல்லப் பெயராக்கி விளிப்பது அரபியர் வழக்கம். ஆடுகளை அதிகம் நேசிப்பவர் 'அபுல்கனம்' என்றும் வல்லூறுகளை நேசிப்பவர் 'அபூஸகர்' என்றும் விளிக்கப்படுவது அரபுகளின்  மரபு. ஐக்கிய அமீரகங்களின் தலைநகர், மானின் தந்தை (அபூதபி) என்பவரின் பெயரால் விளங்குகிறது. தற்போது இணையத்தில் உலவும் தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் கூட 'அபூ' எனும் சொல்லோடு, தாம் அதிகம் நேசிக்கும் மகன்/மகளின் பெயரைப் புனைந்துகொண்டு எழுதுகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. (உதாரணமாக, அபுஇப்ராஹீம், அபுஷாஹ்ருக், அபுபிலால்).

அபூபக்ரு (ரலி): இவர்களுக்கு பெற்றோர் வைத்த பெயர் அப்துல் கஅபா.  அன்பு நபி  (ஸல்) அவர்கள், தம் அருமைத் தோழருக்கு ‘அப்துல்லாஹ்’ எனப் பெயரிட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் இறைச் செய்தியை மக்களுக்கு எடுத்துச் சொல்லத் துவங்கியபோது, வேறு எவரும் உண்மைப்படுத்தாத அளவிற்கு சத்தியத் தூதர்  (ஸல்) அவர்களை அதிகம் உண்மைப்படுத்தியதால், அல்-சித்தீக் (அதிகம் உண்மைப்படுத்துபவர்) என்ற காரணப் பெயரும் அபூபக்ரு (ரலி) அவர்களுக்கு வழங்கப்பட்டது.

அபூபக்ரு என்பதும் அவர்களின் காரணப் பெயராகும். இல்லறத்தை நல்லறமாய்க் காட்டிய நபியவர்கள், முஃமின்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களை மணந்த பின்னர், அபூபக்ரு (கன்னியின் தந்தை) என கண்ணியமாக அழைக்கப்பட்டார்கள்; அப்பெயரே நிலைத்துப் போனது.(9)

அபூஹுரைரா (ரலி): கைபர் யுத்தம் நிகழ்ந்த சமயத்தில் பனீ-தவ்ஸ் கிளையிலிருந்து வந்து நபிமணி (ஸல்) அவர்களைச்  சந்தித்து இஸ்லாத்தைத் தழுவிக்கொண்டதும், ‘அப்துஷ் ஷம்ஸு’ என்ற இயற்பெயரைப் பெற்றிருந்த அவர் ‘அப்துர்ரஹ்மான்’ என அழைக்கப்பட்டார். அபாரமான நினைவாற்றல் கொண்டிருந்த அவர், திண்ணைத் தோழர்களுள் ஒருவராகத் தம்மையும் இணைத்துக்கொண்டார். அல்லாஹ்வின் தூதரை அதிகம் அண்மியிருந்ததால், அண்ணலின் அங்க அசைவுகளையும் அவர்கள் உதிர்த்த பொன்மொழிகளையும் உள்வாங்கிக்கொண்டு, பிற்காலத்தில் இவர் அறிவித்த ஹதீஸ்கள் ஆயிரக் கணக்கானவை  என்று வரலாற்றுக் குறிப்பேடுகள் கூறுகின்றன.

பூனைகள் மீது அவர் அதிகம் விருப்பங்கொண்டிருந்ததால், புவி போற்றும் பெருமானார் (ஸல்), அவரைப் "பூனைத் தோழன்" (அபூஹிர்!) எனச் செல்லமாய் அழைத்தார்கள். அப்துஷ்ஷம்ஸு அத்தவ்ஸீ, அப்துர்ரஹ்மான் அத்தவ்ஸீ என்றெல்லாம் குறிப்பிட்டால் நாமெல்லாம் விளங்காமல் விழிப்போம். "அபூஹுரைரா" என்றாலோ... 'அட, நம்ம அபூஹுரைரா' என்று சட்டெனப் புரிந்துகொள்ளும் அளவுக்கு அண்ணலின் அழைப்பு, உலகப்புகழ் வாய்ந்ததாக அமைந்துபோனது. 

இருசெவிச் சிறுவன்: அனஸ் இப்னு மாலிக் (ரலி) சிறு பிராயத்திலிருந்தே நபி (ஸல்) அவர்களின் ஊழியத்தில் இருந்தார். ஓர் இனிய நாளில் அவரை “யா தல் உதுனைன்!” ("ஓ! இரண்டு காதுகள் கொண்டவரே!") என அண்ணலார் அவரை அன்புடன் அழைத்தார்கள் என நபி மொழிக் குறிப்புகள் கூறுகின்றன.(10)

அபூருகத்: அந்த அன்சார் சிறுவனுக்கு வெறும் பதினாறு வயது! பெயர் ‘ஸைத் இப்னு  ஸாபித்’. ஆர்வத்தில் அவரும் அறப்போரில் கலந்து கொண்டார். கடின வேலைகளுக்கு மத்தியில் போர்க் களத்திலேயே சிறிது கண்ணயர்ந்து போனார். அவர் நண்பரான ‘உமரா’ என்பவர் விளையாட்டாக ஸைத் உடைய மண்வெட்டியையும் கடப்பாரையையும் எடுத்து ஒரு மறைவான இடத்தில் ஒளித்து வைத்துவிட்டார். தூக்கம் கலைந்து எழுந்தபோது தன்  உபகரணங்கள் காணாதது அறிந்து சங்கடத்தில் நின்றார் ஸைத்! சஹாபாக்களில் சிலர் சற்று நேரம் அவரைத் தேடிஅலையவைத்து சிறிது நேரம் கழித்து, ஸைதின் பொருட்களை எடுத்துக் கொடுத்து அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி, அவருடன் விளையாட்டாகச் சிரித்து மகிழ்ந்தனர்!

அப்போது அங்கு வந்து, அவருக்கு நிகழ்ந்ததை  அறிந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள், அன்புடன் ஸைதை நோக்கி  "யா அபூருகத்" (தூக்கத்தின் தலைவனே!) என்று அழகாக அழைத்தார்கள்! இதே ஸைத் இப்னு ஸாபித் (ரலி) அவர்கள்தாம், அருள்மறை ஏந்திவந்த அண்ணல் நபிக்கு அருளப்படும் 'வஹீ''யை உடனுக்குடன் பதிவு செய்துகொள்ளும் பெரும் பேற்றைப் பிற்காலத்தில் பெற்றவர்! அருள்மறை பற்றிய ஆழ்ந்த ஞானமும் அது அருளப்பட்ட காலமும் அறிந்திருப்பதில் முதலிடம் வகித்த முக்கியமானவர் என்பதால், அருள்மறையை ஒன்று திரட்டித்  தொகுத்து அளிக்கும் அரிய பொறுப்பை அமீருல் முஃமினீன் உதுமான் (ரலி) அவர்கள், இவர் வசமே ஒப்படைத்தார்கள்!

நிற்க, அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தன் அருள்மறையாம் குர்ஆனிலே பட்டப்பெயர் குறித்துக் கூறுவதைக் காண்போம்.
بسم الله الرحمن الرحيم

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا يَسْخَرْ قَوْمٌ مِنْ قَوْمٍ عَسَىٰ أَنْ يَكُونُوا خَيْرًا مِنْهُمْ وَلَا نِسَاءٌ مِنْ نِسَاءٍ عَسَىٰ أَنْ يَكُنَّ خَيْرًا مِنْهُنَّ ۖ وَلَا تَلْمِزُوا أَنْفُسَكُمْ وَلَا تَنَابَزُوا بِالْأَلْقَابِ ۖ بِئْسَ الِاسْمُ الْفُسُوقُ بَعْدَ الْإِيمَانِ ۚ وَمَنْ لَمْ يَتُبْ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَِ

முஃமின்களே! ஒரு சமூகத்தார்  இன்னொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில், (பரிகசிக்கப்படுவோர்) இவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்.  (அவ்வாறே) எந்தப் பெண்களும் மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) ஏனெனில் அவர்கள் இவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப் பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.(11)

அறிக; கெட்ட பெயர் வைத்து அதனைப்  ‘பட்டப் பெயர்’ என அழைக்கும் அசிங்கமும் அவலமும் குறிப்பாக, வாய் கிழிய மார்க்கம் பேசும் நம் சமூகத்தில்தான் அதிகம் என்பது  ஒரு வெட்கக் கேடான, வேதனை நிறைந்த விஷயமாகும். இந்த கணத்திலிருந்து ஒவ்வொரு முஸ்லிமும் சக மனிதனை அவன் விரும்பாத கெட்ட பெயர் வைத்து கூவி அழைக்கும் இந்த ஈனச்செயலை  உடனடியாக நிறுத்த வேண்டும். அவன்தான் உண்மையாகவே அல்லாஹ்வை அஞ்சிய அடிமை. நபிபெருமானை நேசிக்கும் நல்லதொரு முஸ்லிம். அடையாளம் சொன்னால்தான் விளங்குமென்றால் நபியவர்கள் சூட்டியது போல் நல்ல பெயர் சூட்டலாம் அல்லது ‘அவருடைய  தந்தையின் மகன் (தாஜுத்தீன் இப்னு மஹ்மூத்)’ அல்லது ‘அவருடைய மகனின் தந்தை (தாஜுத்தீன் அபுஅஹ்மத்)’ என்பவை போல எழுதலாம்.

oooooo 000 oooooo
ஆதாரங்கள்:
(1) அல்குர்ஆன் 95:4
(2) அல் குர்ஆன் 2:31
(3) புஹாரி 3532 : ஜுபைர் இப்னு முத்இம் (ரலி)
(4) புஹாரி 6780 : உமர் இப்னு அல்கத்தாப் (ரலி)
(5) புஹாரி 3907 : இப்னு அப்பாஸ் (ரலி)
(6) முஸ்லிம் 4333 : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)
(7) முஸ்லிம் 4336 : ஜைனப் பின்த் உம்மு ஸலமா (ரலி)
(8) புஹாரி 6280 : ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி)
(9) அல்இஸாபாஹ் 2/188 
(10)அபுதாவூத் 4984 : அனஸ் இப்னு மாலிக் (ரலி)  
(11)அல்குர்ஆன் 49:11
தொடரும் இன்ஷா அல்லாஹ்...
இக்பால் M. ஸாலிஹ்

கவிதை – ஓர் இஸ்லாமியப் பார்வை ! 51

அதிரைநிருபர் | August 27, 2016 | , , , ,

(2007 ஆம் ஆண்டில் சென்னையில் நடந்த அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில்இயற்றியளித்த ஆய்வுக் கட்டுரை. வலைத்தள வாசகர்களின் வசதியைக் கருதி, சில தகவல்களை விடுத்தும், சில தகவல்களை எடுத்தும் உருவாக்கப்பட்டது, இத்தொடர்.)

உம் இரட்சகனின் பாதைக்கு மக்களை நுண்ணறிவைக் கொண்டும் அழகிய நல்லுரையைக் கொண்டும் அழைப்பீராக!” (அல்குர்ஆன்-16:125) எனும் இறைவசனத்தில் இடம்பெற்றுள்ள ஹிக்மா’ (நுண்ணறிவு) என்ற சொல்லையும், “இன்ன மினஷ் ஷிஅரி ஹிக்மா” (திண்ணமாக, கவிதைகளில் நுண்ணறிவு பொதிந்துள்ளது. - இப்னு மாஜா) என்ற நபிமொழியையும் பொருத்திப் பாருங்கள்.

உண்மையும் அழகுணர்வும் நிறைந்த சொற்களால் வாழ்க்கையைச் சொல்லோவியமாகத் தீட்டிக் காட்டுவதே கவிதைஎன்று கூறுகின்றார் இலக்கிய மேதை ஒருவர். (இலக்கியக் கலை பக்கம் 46) “ஊடுருவி நிற்கும் உண்மைப் பொருளை உணர்த்த வல்லது கவிதைஎன்பர் ஆய்வாளர்கள்.

ஓரிறைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட இஸ்லாம் எனும் வாழ்க்கை நெறியில் கவிதைக்கென்று ஒரு கட்டுப்பாடான இலக்கணமே வகுக்கப்பட்டுள்ளது. ஏனெனில், ‘கவிதைகளெல்லாம் பொய்என்ற பொதுவான கருத்தை மக்கள் கொண்டிருப்பதாலும், கற்பனைகளையே மூலதனமாகக் கொண்டு முற்காலக் கவிஞர்கள் கவி பாடியதாலும், இஸ்லாமியத் திருமறை குர்ஆன், “கவிஞர்களை வழிகேடர்கள்தாம் பின்பற்றுவர்” (26:224) என்று கூறுகின்றது.

என்றாலும், இறைவன் அல்லாஹ் இறக்கிய வேதமும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பேசிய மொழியும் அரபியாக இருப்பதால், குர்ஆனிய வசனங்களும் நபிமொழிகளும் சில இடங்களில் கவிதையின் இலக்கியத் தரத்தில் அமைந்திருக்கக் காண்கின்றோம். அரபி இலக்கியத்தில், இஸ்லாத்திற்கு முந்திய ஜாஹிலிய்யாஎனும் அறியாமைக் காலத்திலிருந்தும், கவிதைகள் மலிந்து கிடக்கின்றன. இம்ரஉல் கைஸ்,

உமைய்யத் இப்னு அபிஸ்ஸல்த், லபீத் போன்ற புகழ் வாய்ந்த கவிஞர்கள் அன்று இருந்துள்ளனர். ஆனால், அத்தகைய கவி வல்லாரையும் மலைக்க வைக்கும் விதமாக, “மா ஹாதா கலாமுல் பஷர்என்று கூற வைத்தது அல்குர்ஆன்!

மக்காவில் தொடக்கமாக இறங்கிய இறைவசனங்கள் மக்கத்து இலக்கிய விற்பன்னர்களுக்கும் அறிவில் முதிர்ந்த குறைஷியருக்கும் வாயாப்புக் கொடுக்கும் விதத்தில், இனிய ஓசையுடன் கவிதைகளைப் போன்று அமைந்திருப்பதை நாம் காண முடிகின்றது. இதற்குச் சான்றாக, அன்றாடத் தொழுகைகளில் நாம் ஓதும் சிறு சிறு அத்தியாயங்கள் ஓசை நயத்துடன் உள்ளதை நாம் உணரலாம்.

இஸ்லாத்தின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் நல்ல கவிஞர்களை ஊக்கப் படுத்தியுள்ளார்கள்! சிறந்த கவிதைகளைச் செவி மடுத்துப் பாராட்டியும் உள்ளார்கள்! கவிஞர்களைக் கவி பாடத் தூண்டியும் உள்ளார்கள்! ஏன், அவர்களே சில வேளைகளில் கவி பாடியும் உள்ளார்கள்! நபிமொழி இலக்கியங்களையும் நபி வரலாற்றையும் நன்கு ஆராய்பவர்கள் இதற்கு ஏராளமான சான்றுகளை அவற்றில் காண முடியும்.

மாநபியவர்கள் மக்கத்துக் குறைஷிகளின் கொடுமைகளைத் தாங்க முடியாமல் மதீனாவுக்குப் புலம் பெயர்ந்து சென்றபோது, மதீனாவில் அவர்களை எதிர்கொண்டு அன்பாதரவுடன் சிறுவர் சிறுமியர் கூடிப் பாடிய இசைப் பாடல் நாம் அனைவரும் அறிந்த ஒன்றல்லவா? அது இதோ:

தலஅல் பத்று அலைனா, மின் தனிய்யாத்தில் வதாஇ
வஜபஷ் ஷுக்று அலைனா, மா தஆ லில்லாஹி தாஇ
அய்யுஹல் மபுஊது ஃபீனா, ஜுர்த்த மன் இலைஹி தாஇ

* சான்றுகள்: பைஹகீ, அபூதாவூத்

இந்த வாழ்த்துக் கவிதை வரிகளைக் கீழ்க் கண்டவாறு தமிழ்க் கவிதை வடிவில் ஆக்கலாம்:

எங்கள் மீதே ஒளிவீச எழுந்து வந்த வெண்ணிலவு
மங்கா தனியத் துல்வதாவின் மருங்கி ருந்து வந்ததுவே.

அல்லா வின்பால் அழைப்பாளர் அழைக்கும் போது நாங்களெலாம்
வல்லா னுக்கே நன்றியினை வழங்கக் கடமைப் பட்டுள்ளோம்.

இறைவ னனுப்பிய தூதரிலே இறுதித் தூதாய் வந்தவரே!
குறையில் லாவும் நேர்வழியில் கூடி யுமக்குக் கீழ்ப்படிவோம்.

இறை உவப்பையும் நபி நேசத்தையும் இதயத்தில் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் இது போன்ற கவிதை வரிகளில் இன்பத்தைக் காண்பார்கள் என்பதில் ஐயமுண்டோ?

தாரகுத்னிஎன்ற நபிமொழித் தொகுப்பில் இடம்பெறும் நபிமொழிப் பகுதியொன்று நற்கவிதைகளுக்குக் கட்டியம் கூறுவதைப் பாருங்கள்:

கலாமுன் ஃப ஹசனுஹு ஹசனுன்; வ கபீஹுஹு கபீஹுன்.

(நற்கருத்துடைய சொற்கள் கவிதைகளாகும். தீய கருத்துள்ளவை தீயவையாகும்.)

*** இன்னும் தொடரும், இன்ஷா அல்லாஹ்

அதிரை அஹமது

பெரும் மதிப்பிற்குரிய பேராசிரியர் M H J அவர்களுக்கு... 5

அதிரைநிருபர் பதிப்பகம் | August 26, 2016 | , , ,

பெரும் மதிப்பிற்குரிய பேராசிரியர் M H J அவர்களுக்கு,

தங்களுக்கு அறிவுரை கூறும் அளவுக்கு எனக்கு அனுபவம் உள்ளதாக நான் நினைக்கவில்லை, இருப்பினும்  பலரின் ஆதங்கத்தை உங்கள் பார்வைக்கு கொண்டு வர விழைந்ததன் வெளிப்பாடே இந்த கடிதம்.   இறுதி நேரத்தில் மறுப்பு தெரிவிக்கும் சாத்தியக் கூறுகள் குறைவானதே என்பதை அறிவேன், இருப்பினும்  நிகழ்ச்சியின் பாதகத் தன்மையை முன்கூட்டியே எடுத்துரைக்க விரும்பியதே இக்கடிதத்தின் நோக்கம். 

புதிய கல்விக் கொள்கை   குறித்து  தந்தி தொலைகாட்சி நடத்தும் மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் தாங்கள் கலந்துகொள்ள விருப்பதாக அறிந்தேன்.  காவி மயம் என்ற தலைப்பில்  தாங்களும்,  காவியம் என்ற தலைப்பில் பாஜக மற்றும் இந்துமக்கள் கட்சியை சேர்ந்தவரும்  பேசவிருப்பதாகவும் அறிந்தேன். 

இருதரப்பிலும் பேச்சாளர்களாக தலா மூவர் என்ற அடிப்படையில் விவாத நிகழ்ச்சி நிகழ்த்துவதே  மறைமுக கருத்து திணிப்புக்கான   முயற்சிகள் என்பது அப்பட்டமாக தெரிகிறது. தாங்கள் எப்படி சம்மதித்தீர்கள்.  புதியக் கல்வி கொள்கை குறித்து  எத்தனையோபேரை அழைக்க முடியும் என்ற போதும்  ஓர் முஸ்லிமை கொண்டு எதிர்கருத்து கூற வைப்பதன் சூழ்ச்சியை நீங்கள் உணரவில்லையா? 

உங்கள் கல்வியின் மூலம் நீங்கள் பெற்ற அறிவாற்றல் பற்றியும், பல மேடைப்பேச்சுக்களின் வாயிலாக உங்களின் வாதத்திறமை பற்றியும் நாம் அறிவோம். எதிர்தரப்பினரின் கருத்துக்களை கோபம் கொள்ளாமல், தர்க்க ரீதியில் தகர்த்தெறிக்கும் திறன் அல்லாஹ் உங்களுக்கு நிரப்பமாய் தந்துள்ளதையும் அறிவோம். இருந்தபோதும் கூட பேச்சாளர்களுக்கு ஒதுக்கப்படும் நேரம் குறித்து பல நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்ட உங்களுக்கே தெரியும். அப்படியிருக்க,  நேர அடிப்படையில் குறைவான கருத்துக்கள் உங்கள் தரப்பிலிருந்தும், அதிகபட்ச கருத்துக்கள்  காவியமயம் என்ற தரப்பிலும் பேச வைப்பதன் மூலம் மக்கள் மனதில் உளவியல் ரீதியாய்  தந்தி தொலைகாட்சியினரும் பாண்டே வகையறாக்களும்  புகுத்தவிருக்கும் தாக்கங்கள் பற்றி நீங்கள் சிந்திக்கவில்லையா?

கல்வியாளர் என்ற அடிப்படையில் உங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தால், பாஜகவும் ஹிந்துத்துவாவின் உறுப்பினருக்கும் அங்கு என்ன வேலை ? புதியக் கல்வி கொள்கைக என்பது எதனைச் சார்ந்தது என்றே தெரியாத பாமர மக்களும் நடுத்தர வர்க்கத்தினருக்குமே இன்னும் அதனைப் பற்றிய புரிதலை ஏற்படுத்தாத நிலையில்,  சாதக பாதகங்களை அலசுவதற்கு தகுதியான நபர்களைக் கொண்டு நடத்தப்பட வேண்டிய நிகழ்ச்சியினை மதசண்டையாக உருமாற்றும் பாண்டேயின் சதியினை தெரிந்தே  ஏற்பது  வேதனையளிக்கிறது.  புதியக்கல்வி கொள்கையை "இந்து-முஸ்லிம்" பிரச்சனையாக மட்டுமே  சித்தரிக்க முயலும் இது போன்ற நிகழ்ச்சிகளில் தெரிந்தே நாம் பலிகாடாவாவது வருத்தமளிக்கிறது.

இனி என்ன செய்ய! நேரம் குறைவு தான்.  வாக்களித்ததை நிறைவேற்றும் நிலையில் நாம் இருக்கிறோம்.  இருப்பினும் உங்கள் எதிர்ப்பை  சுட்டி காட்ட இன்னும் உங்களுக்கு வாய்ப்பிருப்பதாகவே கருதுகிறேன். தயவு செய்து   மதச்சாயத்தை வெளுக்க, நடுநிலையாளர்களை பேசுவதன் அவசியத்தை உணர்ந்து , நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுங்கள்.

உங்களால் முடியும் என்று கருதியே இந்த மடல்...  எல்லாவற்றிற்கும் மேல் அல்லாஹ்வின் நாட்டம்.

ஆமினா முஹம்மத்

கேன்ஸரிலிருந்து தப்புவது எப்படி? Cancer Awareness Program 0

அதிரைநிருபர் பதிப்பகம் | August 25, 2016 | , ,

ந்த நூற்றாண்டில் மனித சமூகத்துக்குப் பெரும் சவாலாக உள்ள நோய்களுள் மிக முக்கியமானது ‘கேன்ஸர்’ எனும் புற்றுநோயாகும். இந்தியாவில் ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

புற்றுநோய் என்றால் என்ன?

மனித உடலின் வளர்ச்சிக்கும் இயக்கத்துக்கும் இன்றியமையாதவையாகத் திகழும் ‘செல்கள்’ எனும் உயிரணுக்களைச் செயற்படவிடாமல் தடுக்கும் நோயைத்தான் புற்றுநோய் என்கின்றோம்.  


கேன்ஸர் எனும் புற்று நோயின் உற்பத்தியைப் பற்றிக் கட்டாயம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு குழந்தை பிறந்து வளர்கிறதென்றால் குறிப்பிட்ட கணக்கில் அக்குழந்தையினுள் செல்கள் பிறந்து, தன் பணியினை முடித்துக்கொண்டு உயிரிழந்துவிடும். உயிரிழந்த செல்கள் அழிந்துகொண்டிருக்கும்போதே புதிய செல்கள் பழைய செல்களின் அளவைவிடக் கூடுதலாகப் பிறந்துவிடும். பழைய செல்களின் இறப்பும் அவற்றின் அழிவும் புதிய செல்களின் உற்பத்தியும்தான் குழந்தையையும் அதன் தலை முடியையும் நகங்களையும் விரைந்து வளர்க்கின்றன. பழைய செல்களின் இறப்பைவிட, புதிய செல்கள் குறைவாக உற்பத்தி ஆவதையே நாம் ‘முதுமை’, ‘நினைவாற்றல் குறைவு’, ‘தடுமாற்றம்’ என்கின்றோம்.

ஆரோக்கியமான உடல் நலம் உள்ள ஒருவருக்கு, எத்தனை செல்கள் புதிதாகப் பிறக்கின்றன தெரியுமா?

ஒரு வினாடிக்கு சுமார் 20,00,000 (2 மில்லியன்) செல்கள்! வளரும் இளைஞர் ஒருவரின் உடலில் அழியும் செல்களை ஈடுகட்டவும் புத்தியக்கத்திற்கும் பிறப்பெடுக்கும் செல்களின் ஒரு நாள் எண்ணிக்கை சுமார் 222-242 பில்லியன். உயிரை இழந்து அழியும் செல்களின் ஒரு நாள் எண்ணிக்கை 50-70 பில்லியன்.

இவ்வாறாக, உயிரிழந்து அழியவேண்டிய செல்கள், அழிந்துவிடாமல் சிலரின் உடலில் தங்கிவிடுகின்றன. வீணான, தேவையற்ற இந்த செல்கள்தாம் ‘கேன்ஸர் செல்கள்’.
  • கேன்ஸர் எனும் புற்று நோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் யாவை?
  • எந்த வகையான உணவுப் பொருட்களைத் தவிர்த்துக்கொண்டால் …?
  • எந்தப் பொருட்களைப் பயன்படுத்தாவிட்டால் …?
  • எந்த வகை வாழ்க்கை முறைக்கு மாறிவிட்டால் … புற்று நோயிலிருந்து தப்பிக்கும் சாத்தியங்கள் உள்ளன?

என்பது குறித்து ஆழமான விழிப்புணர்வு முகாம் ஒன்றை அதிரை தாருத் தவ்ஹீத் ஏற்பாடு செய்துள்ளது. அதன் விபரங்கள்:

இடம் : பவித்ரா திருமண மண்டபம், ECR, அதிராம்பட்டினம்.

காலம் : 29.8.2016 திங்கட்கிழமை, காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை

காணொளி விளக்கம் : 
டாக்டர் M. முஹம்மது இப்ராஹீம். MS., MRCS (UK)., DNB., FMAS., FAIS.

நிகழ்ச்சியின் இறுதியில் புற்று நோய் குறித்த உங்கள் ஐயங்களைக் கேள்விகளாகக் கேட்டுத் தெளிவடையலாம்.

சிறந்த கேள்விகள் கேட்கும் மூவரைத் தேர்ந்தெடுத்து,  பரிசுகள் வழங்கப்படும்.

பெண்களுக்குத் தனி இட வசதி உண்டு.

டாக்டரிடம் தனியாகச் சிறப்பு ஆலோசனை பெற முன் பதிவு செய்துகொள்ளுங்கள்: 9043727525.


அதிரை தாருத் தவ்ஹீத்

வாயில பஞ்ச் - காதுல பஞ்சு… 41

அதிரைநிருபர் பதிப்பகம் | August 24, 2016 | , , , ,

தாய்மொழியால் தனக்கென்றே இருக்கும் தனித்துவத்தால் தலை நிமிர்ந்து எவ்வகைச் சூழலையும் எதிர்கொள்ளும் பக்குவம் அதிரைநிருபருக்கு இருப்பதை அனைவரும் நன்கறிவீர்கள் ! 

சரி மேட்டருக்கு வருவோம், தனிமை அல்லது மல்லாக்க படுத்து யோசிக்கும் போது என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் சிந்தனையில் மின்னி மறையும், சந்தோஷங்கள், பஞ்ச் டையலாக் (!!?) அல்லது வெறுப்பேற்றும் சூழல் என்று இவைகளை சந்தித்திருக்காமல் யாரும் இருந்திக்க முடியாது.

அவ்வகையில் எப்போதாவது காத்திருக்கும்போது , தூரமாக பயணம் செய்யும் போது சிந்திக்கும், நினைக்கும் கேள்விகள் உங்களுக்கும் இதுபோல் யோசிக்க தோன்றும்... கமென்ட்ஸில் கலக்கலாமே...!
  • ஆத்திரம் அவசரத்துக்கு உதவும் என கிரடிட் கார்டு எடுத்தால் சூப்பர் மார்க்கெட்டில் உள்ள அத்தனை பொருட்களும் ஆத்திர(ம்) அவசரமாகி விடுகிறது.
  • பிச்சை எடுக்கும் வயதானவரின் அவலத்தை கூட ஃபேஸ் புக்கில் "லைக்" போடும் மடமை எப்போது ஒழியும்?
  • மிருகங்களை வதைக்காதீர்கள் என்று கொடி பிடித்த அதே ஆட்கள் எப்படி "லேம்ப் சாப்"  பில் பெப்பர் தூவி சாப்பிடுகிறார்கள் என்று தெரியவில்லை.
  • வாரம் ஒருமுறை மட்டும் பள்ளிவாசலுக்கு வரும் ஆட்கள் எப்படி ஒரு மார்க்க விவாதம் என்றால் இப்படி அருவியாய் கொட்டுகிறார்கள்?
  • முன்னேர வாய்ப்பு ஒரு முறைதான் வரும் என்றார் நண்பர்... அது எப்போதுன்னு தெரிஞ்சா நான் ஏன் இப்படி இருக்கேன் என்கிறார்கள் பெரும்பாலானவர்கள்.
  • எந்த ஊர்லதான் கிடைக்கிறாங்களோ இந்த அழும் பெண்கள்… சீரியலுக்கு என்றே 'பெத்து" வளர்க்கிறாங்களா?
  • பெரியவங்க சொல் கேட்காட்டியும் உருப்பட முடியாது என்று சொல்லும் பெரியவர்களே... நீங்கள் உங்கள் பெரியவர்களின் சொல்லை 100% கேட்டீர்களா?... நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்.?
  • வாங்கும் அல்வாவில் மேற்பரப்பில் மட்டும் முந்திரி பருப்பு...அல்வாவுக்கே அல்வாவா?
  • ஷேர் பன்ன அதே வீடியோவெ எத்தனை தடவை ஃபேஸ் புக்கில் அப்லோட் செய்து சாவடிக்கனும்னு ஒரு கணக்கே இல்லையா?
  • பசித்த போது சாப்பிடகூட முடியாத  ஓய்வில்லாத  வேலை- ஓய்வு காலத்தில் விரும்பியதை சாப்பிட முடியாத நிலை.
  • ஊரில் உள்ள நண்பரிடம் பேசியபோது அவர் கேட்ட கேள்வி.  “இப்போது பள்ளிவாசல் எல்லாம் சர்ச் மாதிரி ஒரே நாற்காலி மயம், காலை மடக்கி தொழ முடியவில்லை என்பது அவர்களது வாதம், இருப்பினும் எந்த விருந்திலும் சகனுக்கு சம்மளம் போட்டு அவர்களால் எப்படி உட்கார முடிகிறது. ?”
படித்ததில் பிடித்தது :
  • நாம மத்தவங்களுக்கு உதவத்தான் பிறந்து இருக்கோம்.... சரி ... அப்ப மத்தவங்க எதுக்குப் பிறந்து இருக்காங்க?
  • நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் அவள் மாம்பழம் வேணுமென்றாள். நல்ல வேளை... நகைக்கடையில நீ நிக்கலை!
  • மயிலே மயிலே இறகு போடுன்னா அது போடாது! ஏன் அப்படி சொல்றே? மயிலுக்கு தமி்ழ் தெரியாது!
ZAKIR HUSSAIN

எப்படி அவர்களை மன்னிப்பேன் ? 4

அதிரைநிருபர் பதிப்பகம் | August 23, 2016 | , , ,

பில்கிஸை நீங்கள் மறந்திருக்கக் கூடும்! பலருக்கு இப்பதிவே முதல் அறிமுகமாகவும் இருக்கலாம்...  மறந்தவர்களுக்கு நினைவூட்டலாகவும், புதியவர்களுக்கு சுருக்கமான அறிமுகத்துடனும் கட்டுரையை துவக்கலாம்..

"ஐந்து மாத கர்ப்பிணியான பில்கிஸ் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டார். ஒருவரால் அல்ல.. இருவரால் அல்ல... முன்னதாக பில்கிஸ் கையில் இருந்த மூன்று வயது குழந்தையும் தூக்கி எறிந்து பாறாங்கல்லில் மோத வைத்து சாகடித்தனர்"

கற்பனை செய்து பாருங்கள்! கொடூரமாய் இருக்கிறதல்லவா? நல்லவேளை நமக்கேதும் இப்படியொன்று நிகழவில்லை என்ற   பெருமூச்சு வெளிப்படுகிறதா?  நம்மைப்போல் ஓர் பாதுகாப்பான சூழலில் , அழகான வாழ்க்கையில் , இயற்கையின் வனப்பைபோலவே செழிப்பமாய் இருந்த குடும்பம் தான் பில்கிஸ் உடையது! கோரச் சம்பவம் நடக்கும் வரை அவரை யாருக்கும் தெரியாது... அவர் தனக்கான நியாயத்தை கேட்டு வாதாடி நிற்கவில்லை எனில்  14க்கும் மேற்பட்ட குடும்ப உறவினர்கள் மண்ணோடு புதைக்கப்பட்டது போல் நமக்கும் தடயம் கிடைக்காது போயிருக்கும் !


பில்கிஸ்க்கு நேர்ந்த அவலம் எதனால்? 

அவர் முஸ்லிம் பெண்மணி என்ற ஒரே காரணத்தினால் !!! ஆம்... அவ்வடையாளத்தை தவிர்த்து அவரை பாலியல் வன்முறைக்குள்ளாக எந்த முகாந்திரமும் அந்த நாசக்காரர்களுக்கு தெரிந்திருக்கவில்லை! 

சினிமாக்களில் மட்டுமே பார்த்திருக்க முடிந்த கற்பனைக்கும் எட்டாத கொடூரங்களை ஒரே நாளில் சந்தித்த , 'வாழும் துயரம்' அவர்.

பிப்ரவரி 27, 2002ல் கோத்ரா ரயிலில் பற்றிய தீ கலவரமாக உருவெடுத்து ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை காவு வாங்கியது. தனக்கு நேர்ந்த கொடுமையை சொல்வதற்கு பலர் உயிரோடு இல்லை, பலர் உயிருக்கு பயந்து சொல்லத்தயாராய் இல்லை! ஆனால் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காய் படிப்பறிவற்ற ஓர் இளம்பெண் துணிந்து வந்தார்.  

அதனை அவர் சொல்லக் கேட்போம்... 

"என் கணவர் வேலையில்லாதவராக அப்போது இருந்தாலும் , வசதிக்கொண்ட வீட்டில் திருமண வாழ்க்கை சுகமாக சென்றுக்கொண்டிருந்தது. எங்களுக்கு 3 வயதில் ஓர் மகள் இருந்தாள். பெயர் சாலிஹா. நான் 5 மாத குழந்தையை வயிற்றில் சுமந்தவளாக இருந்தேன்.

பிப்ரவரி 28! சரியாக கோத்ரா சம்பவத்திற்கு அடுத்த நாள் எங்கள் கிராமத்தின் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளில் இந்துத்துவாவினரால் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அது கலவரமாக மாறிப்போக பல முஸ்லிம் வீடுகள் தீக்கிரையாகின. நாங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தப்பிச் செல்ல நாடிய போது ஊர்த்தலைவர் தடுத்து "யாராலும் உங்களுக்கு தீங்கு ஏற்படுத்த முடியாதென்று" உறுதி கூறினார்.

ஆனால் ,

அதன் பின்னர் கலவர கும்பல் எங்கள் இல்லங்களை நோக்கி கற்களை வீசத்தொடங்கினர். அதிலிருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தோம். அப்போது நான் செருப்பு கூட அணிய அவகாசம் பெற்றிருக்கவில்லை. உறுதி கொடுத்த ஊர் தலைவர் வீட்டில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் , குழந்தைகள் ஒன்று கூடினோம். ஆனாலும் பாதுகாப்பற்றவர்களாய் உணர்ந்தோம். நாங்கள் தப்பி வேறிடம் செல்பதற்குரிய எல்லா வழிகளும் கலவரக்காரர்களால் அடைக்கப்பட்டிருந்தன. 28ம் தேதி நள்ளிரவில் எங்கள் வீடுகள் திட்டமிட்டு எரிக்கப்பட தொடங்கின. நாங்கள் உங்களை கொல்வோம், நாங்கள் உங்களை வெட்டியே தீருவோம் எனும் கோஷங்கள் உரக்க ஒலித்தன. 

எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவைப்பட்டது. அதற்காக கிராம ஆண்கள் காவல்நிலையத்தில் உதவி கேட்டனர். ஆனால் எங்களுக்கு பாதுகாப்பு மறுக்கப்பட்டது. வேறு வழியில்லாமல் பல முஸ்லிம்கள் தங்கள் உயிரைக்காப்பாற்றிக்கொள்ள காடுகளுக்கு சென்று சில நாட்கள் மறைந்து வாழ்ந்தனர்.

அன்றைய நாள் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை உண்ண உணவின்றி அருந்த நீருமின்றி உயிருக்கு பயந்து எங்கள் கிராமங்களிலேயே பல்வேறு இடங்களில் ஒளிந்துக்கொண்டே இருந்தோம். ஆனால் அசாதரண சூழல் திணிக்கப்பட்ட நிலையில் அது சாதாரண விஷயமாக இருக்கவில்லை. எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களுக்கெல்லாம் மிரட்டல் விடுக்கப்பட்டது. அவர்களை வெளியே அனுப்பவில்லை எனில் உன் வீட்டையும் கொளுத்துவோம் என்று ஆவேசமாக அவர்கள் கத்தியதால் பலரும் அடைக்கலம் கொடுக்க அஞ்சினர். 

மிரட்டலுக்கு அஞ்சிய , உறுதி அளித்த எங்கள் ஊர் தலைவரும் அவர் வீட்டிலிருந்து எங்களை வெளியேற்றிவிட்டார். எங்கள் வீடுகளுக்கே செல்லலாமென நினைத்தால் , அது ஏற்கனவே தீக்கு இரையாகியிருந்தது. மீண்டும் காவல்துறை அதிகாரிகளிடம் பாதுகாப்பு கோரினோம். அவர்களோ எங்களை அக்கிராமத்தை விட்டு வெளியேறிச்செல்ல அறிவுறுத்தினர்.

இரவாகியிருந்தது. அருகிலிருக்கும் கிராமத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ பிஜல்பாய் தாமோர் வீட்டுக்கு அடைக்கலம் தேடி சென்றோம். துரதிஷ்டவசமாக அவர் அப்போது ஊரிலில்லை. அவர் மகனும் கூட எங்களை ஆசுவாசப்படுத்த குடிக்க நீரும் சில திண்பண்டங்களையும் கொடுத்துவிட்டு அங்கிருந்து செல்லும்படி சொல்லிவிட்டார். 

வேறு வழியில்லை! வேறிடம் செல்ல வேண்டும். இன்னுமொரு கிராமத்திற்கு சென்றால் அங்குள்ள முஸ்லிம்கள் உயிருக்கு பயந்து எங்கோ தப்பியோடியிருந்தனர். அங்கிருந்த பள்ளிவாசல் அன்றைய இரவுக்கு பாதுகாப்பு கொடுத்தது.

ஷாமின்! என் ஒன்றுவிட்ட சகோதரி... நிறைமாத கர்ப்பிணி. திடீரென பிரசவ வலி ஏற்பட மருத்துவ உதவியும் கிடைக்காத அந்த நேரம் செய்வதறியாது திகைத்தோம். அவள் பள்ளிவாசலிலேயே தன் குழந்தையை பிரசவித்தாள்.

பள்ளிவாசல் அமைந்திருந்த நாங்கள் தங்கியிருந்த கிராமம் ஏற்கனவே இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாக்கப்பட்டதால் அங்கிருப்பது பாதுகாப்பற்றது என எண்ணி குத்ரா எனும் கிராமத்திற்கு பழங்குடியினர் உதவியுடன் சென்றோம்.

எங்கள் கிராமத்திலிருந்து 500 முஸ்லிம்கள் தப்பி வந்தோம். 17 உறுப்பினர்கள் மட்டும் குத்ராவில் தங்கிக்கொண்டோம். ஷாமினால் பயணிக்க முடியவில்லை. ஈன்றெடுத்த வேதனை அவளை சோர்வாக்கியிருந்தது. ஆகையால் இக்கிராமத்திலேயே 3 நாள் வரை மறைந்திருக்க எண்ணினோம். எங்கள் அடையாளங்களை மறைக்க பழங்குடியினர் அவர்களின் துணிகளை எங்களுக்கு அணியவைத்தனர். ஷாமின் மீதான இரக்கத்தால் எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தனர். இல்லையேல் அதுவும் கிடைத்திருக்காது. 

ஆனால் அதுவும் எளிதானதாக இருக்கவில்லை. முஸ்லிம்களை அவர்கள் தங்களுடன் வைத்துள்ளார்களா என பல விசாரணைகளுக்கு உள்ளாகினர். எனவே அதிகாலை 4 மணிக்கு மாறுவேடத்தில் அங்கிருந்து புறப்பட்டோம்.


உயிருக்காய் பயந்தோடிய நாட்கள் எல்லாம் கண்ணீர் மட்டுமே சுமந்திருந்தோம். அடுத்த நொடி என்ன ஆபத்திருக்கிறது என்பதை அறியாத படபடப்புகள் கொடூரமானவை. எதுவும் சிந்திக்க முடியவில்லை! சிந்தனையெல்லாம் எப்படி உயிரை காப்பாற்றுவதிலேயே இருந்தது.

இரு நாட்களுக்கு பிறகு பழங்குடியினரின் வழிகாட்டல் உதவியுடன் சபர்வாட் கிராமத்திற்கு சென்றோம். இங்கிருந்து ,மானாபாய் எனும் நீண்டநாள் நண்பரை சந்தித்து உதவி பெற நினைத்தோம். அவர் இருக்கும் பகுதி பனிவேலா. அங்கு செல்லும் வழியில் ஒரு குக்கிராமத்தில் ஓய்வெடுத்துக்கொண்டோம். அது இரு மலைகளுக்கு இடைபட்ட இடம் . குருகிய சாலை வழியே செல்லக்கூடிய பகுதி.

நாங்கள் சாலை வழியே சென்ற போது திடீரென ஒரு நபர் என் மாமாவை தாங்கினான். கீழே சரிந்த அவர் ஒரு மணி நேரத்திற்கு பின்பே சுயநினைவு பெற முடிந்தது. விரைவிலேயே சில நபர்கள் சூழ்ந்துக்கொண்டனர். அவர்களை முன்பே எனக்கு தெரியும். ஆம்! அவர்கள் என் சொந்த கிராமத்தை சேர்ந்தவர்கள். சற்று முன்னர் நாங்கள் தங்கிய சபர்வாட் கிராமத்தினர் தான் நாங்கள் எங்கேசெல்கிறோம் என்ற தகவலை இவர்களுக்கு கொடுத்துள்ளார்கள். இவ்வெறியர்கள் டாட்டா ஸ்மோவில் வந்திருந்தனர்.

"முஸ்லிம்கள் இங்கேயிருக்கிறார்கள்! கொல்லுங்கள்! கொல்லுங்கள்" எனும் ஆவேச குரல்களை எழுப்பினர்.

அவர்கள் சபர்வாட் மற்றும் பனிவேலா கிராமத்திலிருந்த வெறிபிடித்த மக்களை திரட்டி வந்திருந்தனர். தொடர் ஓட்டத்தின் காரணமாக எங்கள் உடல் சோர்ந்திருந்தது, உதவிக்கு ஆள் இல்லாத நிலை உள்ளத்தையும் சோர்வடைய செய்திருந்தது. எங்களால் இனி அவர்களுடன் சண்டையிட முடியாது! அதற்குரிய சக்தியையும் இழந்துவிட்டோம். ஆனாலும் ஆளுக்கொரு திசையாக ஓட்டம் பிடிக்க நினைத்தோம்! பயனில்லை- சுற்றிவளைக்கப்பட்டோம். நாங்கள் 17 நபர்கள் தான்... நான்கு ஆண்கள் மட்டுமே எங்களில் உண்டு! எட்டு பெண்களும் மீதமுள்ளவர்கள் சிறு குழந்தைகளாகவும் இருந்தனர். அவர்களிலோ 25க்கும் மேற்பட்ட வெறியர்கள் இருந்தனர்.

அவர்கள் எம் பெண்களின் ஆடைகளை கிழித்தெறிந்து பாலியல் தொல்லைக்கு ஆளாக்கினர். நிர்வாணமாக்கப்பட்ட பெண்கள் கூட்டத்தினர்க்கு முன் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டனர்.

அவர்களின் வெறி 2 நாட்களுக்கு முன் பிறந்த குழந்தையையும் விட்டுவைக்கவில்லை! ஷாமின் 2 நாள் வயது குழந்தையை கொடூரமாக கொன்றனர். என் தாய்மாமா, என் தந்தையின் தங்கை மற்றும் அவரின் கணவரையும் அடித்துக்கொன்றனர். வன்புணர்வுக்காளான பெண்களையும் கொன்றனர்.

அதன் பின் என்னிடம் வந்தனர். நான் என் 3 வயது மகளை கையில் ஏந்தியிருந்தேன். என்னிடமிருந்து வலுக்கட்டாயமாக அவளை பறித்துக்கொண்ட அந்த வெறியர்கள், தன் வெறியின் விசைக்கேற்ப அவளை தூக்கி வீசினர். அவளின் பிஞ்சு தலை பாறையில் மோதிய போது என் இதயமே சுக்குநூறாய் உடைந்தது. அவள் இறந்து போனாள். நான்கு பேர் என் கை மற்றும் கால்களை பிடித்துக்கொள்ள பலபேர் ஒருவர் பின் ஒருவராக என்னை வன்புணர்வுக்குள்ளாக்கினர். அவர்களின் வெறி அடங்கிய பின்பும் கூட கண்மூடித்தனமாக என்னை உதைத்தும் அடித்தும் துன்புறுத்தினர். என் கழுத்துப்பகுதியினை காலால் அழுத்தியிருந்தான் ஒருவன். கற்கள் கொண்டு தாக்கப்பட்டேன். இரும்பு தடியால் என் தலையில் தாக்கிய போது நினைவிழந்து போனேன். நான் இறந்துவிட்டதாக நினைத்த அந்த வெறியர்கள் என்னை புதருக்குள் தூக்கி வீசினர்.

எங்களை தாக்கிய போது அவர்கள் உதிர்த்த முறைகேடான வார்த்தைகளை என்னால் எப்போதும் திருப்பிச்சொல்ல முடியாத அளவுக்கு கேவலமானவை. " கோத்ராவில் எங்கள் மக்கள் கொன்றதற்காக உங்களை கொல்வோம்! எந்த ஒரு முஸ்லிமையும் உயிருடன் விட்டு வைக்க மாட்டோம்" என ஆக்ரோஷமாக கத்தினர்.

என் கண் முன்னே என் அம்மா, என் தங்கை மற்றும் என் 12 உறவினர்களும் கொல்லப்பட்டன்னர். தன் துன்பத்தை கத்தி சொல்ல முடியாத மிருகங்களை துன்புறுத்தி துடிதுடிக்க வைத்து கொல்லப்படுவதை போலவே என் உறவினர்கள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இத்தனைக்கும் 28ம் தேதி காலையில் என் கணவரும் இன்னும் சில உறவினர்களும் பிஜேபி ஊழியர் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட கிராமத்தினர்க்கான மீட்டிங்கில் எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் படி கெஞ்சியுள்ளார். இப்போது எங்களை வன்புணர்வுக்கு ஆளாக்கி கொன்றவர்கள் அப்போது அக்கூட்டத்தில் இருந்தவர்கள் தான்!

17 பேரில் 2 குழந்தைகளும் (சதாம் -வயது 7, ஹுசைன் -வயது 5) நானும் மட்டும் பிழைத்துக்கொண்டோம்! அவர்கள் இருவரும் எப்படி தன்னை காத்துக்கொண்டார்கள் என எனக்கு தெரியவில்லை.

நாங்கள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட போது சுற்றி நின்று வேடிக்கை பார்த்த பொதுமக்களில் எவரும் ஹிந்து பெண்கள் இல்லை. அவர்கள் அனைவரும் நடுத்தர வயது ஆண்கள் மட்டுமே. நாங்கள் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட போது இவர்களெல்லாம் ஆபாச வார்த்தைகளில் கத்திக்கொண்டிருந்தார்கள். அவர்கள் என்னை வன்புணர்வுக்கு உள்ளாக்கிய போது நான் ஐந்து மாத கற்பிணி என கூட என்னால் சொல்ல முடியாத அளவுக்கு அவர்களின் கால்கள் என் கழுத்திலும் , வாயிலும் மிதிப்பட்டிருந்தது.

ஹிந்துக்களில் சாதி பேதமின்றி இந்த கொடூரத்தில் பங்காற்றினர். என் கிராமத்தை சேர்ந்தவர்களும் அதில் ஒரு பகுதியினர் தான்! எப்படி என்னால் அவர்களை அடையாளம் காண முடியாமல் போகும் ? அவர்கள் என் கிராமத்தை சேர்ந்தவர்களே!

இரண்டு மணி நேரத்திற்கு பின் என் கண்களை திறந்த போது என் உலகம் சிதைக்கப்பட்டதை கண்டேன். என்னால் நிற்க கூட முடியவில்லை! ஆனால் அவர்கள் கையில் மீண்டும் சிக்க விரும்பவில்லை. நிர்வாணத்தை மறைத்துக்கொள்ள கந்தல் துணியேனும் கிடைக்குமா என தேடியலைந்தேன். மேலங்கி கிடைத்தது. என்னை சுற்றி என் உறவினர்களின் பிணங்கள் இருந்தது. மண்ணில் சரிந்திருந்த அந்த உடல்களை பார்க்கவும் என்னால் முடியவில்லை.

ஓர் இரவும் கழிந்து, அடுத்த நாள் பகல் பொழுதும் கழிந்தது. தண்ணீர் தாகமும் பசியும் என்னை மேலும் துன்புறுத்தியது. என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை! தாகத்திலேயே செத்துவிடுவேனோ என எண்ணத்தோன்றியது. அதனால் மலைப்பாங்கான அந்த இடத்தை விட்டு கீழிறங்கி உணவும் உடையும் கிடைக்குமா என தேடியலைய ஆரம்பித்தேன்.

சில தொலைவில் அடிகுழாய் ஒன்றை பார்த்தேன். அது அந்த பகுதியில் வாழும் பழங்குடியினர்க்கு சொந்தமானது. என்னை கண்டதும் நான் ஒரு முஸ்லிம் என அறிந்து என்னை தாக்க வந்தனர். அதிலிருந்து என்னை காத்துக்கொள்ள நான் முஸ்லிம் இல்லை என்றும் உங்களை சேர்ந்தவள் தான் என்றும் பொய் சொன்னேன் அவர்கள் மொழியிலேயே. அவர்கள் நம்பினார்கள். எனக்கு நீரும் உடையும் கொடுத்தனர்.

கொஞ்சம் உறங்கினேன். அப்போது தான் போலிஸ் வேன் அந்த பகுதிக்கு வந்து தேட ஆரம்பித்தது. ரந்திக்புர் கிராமத்திலிருந்து வந்த குடும்பத்தினர் கொல்லப்பட்டதை குறித்து அவர்கள் அங்கே கேட்டார்கள்.

போலிஸ்காரர்கள் எனக்கு பாதுகாப்பு தருவார்கள் என நம்பினேன். அவர்களும் என்னை அவர்கள் கொண்டு வந்த வண்டியின் பின்புறம் ஓய்வெடுத்துக்கொள்ள சொன்னார்கள். உயிர் பிழைத்தது என் அதிஷ்ட்டம் என்றார்கள். அவர்களுடன் அங்கிருந்து புறப்பட்டேன். லிம்கேதா விற்கு அழைத்து சென்றனர். எனக்கு உணவு கொடுத்த பின் என் கதையை கேட்டார்கள். ஆனால் என் புகாரை ஏற்றுக்கொள்வதற்கு பதிலாக அவர்கள் என்னை பயம் காட்டினர்.

ஒருவேளை இந்த வன்புணர்வு சம்மந்தமான குற்றச்சாட்டை சொன்னால் என்னுடல் இருக்கும் மோசமான நிலையில் என்னை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவார்கள் என்றும் விஷ ஊசி செலுத்தி என்னை மருத்துவர்கள் கொல்வார்கள் என்றும் கூறினர். நான் பயந்தேன் , எனினும் நான் சொன்னவற்றை ஒன்று விடாமல் புகாராக ஏற்றுக்கொள்ளச் சொன்னேன். ஆனால் அவர்களோ நான் சொன்னவற்றுக்கு புறம்பாக 500 பேர் சேர்ந்த மக்கள் குழு என்னையும் உறவினரையும் அடித்துவிட்டதாக கதை கட்டி எழுதினர். சக்தி முழுவதும் இழந்த என்னால் என் புகார் குறித்து போலிஸாருடன் முறையிட முடியவில்லை.. இவர்களிடம் அது பயனளிக்காது என்பதையும் அறிந்துக்கொண்டேன். ஆகையால் என் எண்ணத்தை கைவிட்டு என்னை கோத்ரா முகாமிற்கு அழைத்துச்செல்லும்படி வேண்டுகோள் விடுத்தேன்! நான் என் உறவினர்களை பார்க்க விரும்பினேன்.

நான் படிக்காதவள். நான் சார்ந்த அமைப்பு பெண்களை பள்ளிக்கு செல்வதை அனுமதிக்காத தப்லீக் ஜமாத்தை சேர்ந்தது. ஆனாலும் கற்பழிப்பு நடத்தப்பட்ட ஐந்து நாட்களுக்கு பிறகு, மெடிக்கல் செக்கப் செய்ய முடிவெடுத்தேன். நான் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டதை உறுதி செய்யும் சான்றிதழை பெற்றேன். 

என் அம்மா, என் 2 சகோதரர்கள், இரு சகோதரிகள் மற்றும் என் மூன்று வயது மகள் கொல்லப்பட்டனர். ஆனாலும் என்னால் அந்த குற்றவாளிகளை அடையாளம் காட்ட முடியும். அந்த மிருகங்களை பல வருடங்களுக்கு முன்பிருந்தே எனக்கு நன்கு தெரியும். நாங்கள் ஊரில் பால் விற்று வந்தோம். எங்களிடம் பால் வாங்கிச்செல்லும் வாடிக்கையாளர்கள் அவர்கள். ஒருவேளை அது அவர்களுக்கு அவமானமாக இருந்தால் அதற்காக அவர்கள் இவ்வாறு என்னை செய்திருக்க வேண்டியதில்லை. இந்நிகழ்வுகளுக்கெல்லாம் பிறகு என் தந்தை மனநிலை குன்றியவராகிவிட்டார். எண்ணிப்பார்க்க முடியாத திருப்பங்களுடனும் மோசமான சொற்ப நாட்களுக்குள்ளும் நான் அனாதையாக்கப்பட்டுவிட்டதால் சக்தி முழுவதும் இழந்துவிட்டேன் ! ஆனாலும் இதனை பாதியிலேயே நான் கைவிடுவதாக இல்லை! எப்படி என்னால் அவர்களை மன்னிக்க முடியும் ? "

முடித்தார். பத்திரிக்கையாளர் ஷீலா பட்-இடம் தனக்கு நேர்ந்தவற்றையெல்லாம் விவரித்தார் பில்கிஸ். அதன் பின்னர் தான் பலரின் கவனத்திற்கு இக்கொடூரம் சென்றது. 

எதிர்பார்த்த படியே மோடியின் காவல்துறை 2003ல் இந்த வழக்கை "சம்பவம் உண்மைதான். ஆனால் கண்டுபிடிக்க இயலாதவை" என கூறி முடிவுக்கு கொண்டு வந்தது. இதுபற்றி சகோதரி பில்கிஸ் குறிப்பிடுகையில் " இருமுறை புகார் அளித்தேன். முதலாவதாக லிம்கேதா வில், அடுத்ததாக நான் தங்கியிருந்த கோத்ரா முகாமில் . அவர்கள் என் கைரேகையை பெற்றுக்கொண்டார்கள். ஆனால் படிப்பறிவற்றவளாக இருந்ததால் அதில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பதை நான் அறியவில்லை"

அதன் பின் பில்கிஸ் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை அணுக அஃது அஹ்மதாபாத் சுப்ரிம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. பின்னர் இவ்வழக்கு சிபிஐ க்கு மாற்றப்பட்ட பின் உண்மைகள் வெளிவர ஆரம்பித்தன. மருத்துவர்களும் போலிஸும் இந்நிகழ்வுக்கு துணை புரிந்ததும், தடயங்களை அழித்ததும் அம்பலமானது. 2 மருத்துவர்கள், 6 போலிஸ் உட்பட 20 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. சிபிஐ தன் அறிக்கையில் இந்நிகழ்வு குஜராத் போலிஸ்ஸின் ஒட்டுமொத்த தோல்வியையும் அவர்களின் உடந்தையையும் சுட்டிக்காட்டியது. இந்த வழக்கு போக்கின் காரணமாக பில்கீஸ் அச்சுறுத்தல்களை சந்திக்க நேர்ந்ததன் காரணமாக அவருக்கு CISF பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. சம்பவம் நடந்தது முதல் வழக்கு முடியும் வரையில் 20க்கும் அதிகமான இடங்களுக்கு பாதுகாப்பு கருதி மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பில்கிஸ் குஜராத் க்கு வெளியே வழக்கு விசாரணை நடத்தும்படி சுப்ரிம் கோர்டில் மனு கொடுத்தார். அவரின் கோரிக்கையை ஏற்று இவ்வழக்கு மும்பைக்கு மாற்றப்பட்டது. "நீதியின் மீதான நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுக்க வைத்தது" என இம்முடிவு குறித்து கூறினார்.

இதற்கிடையில் போலிஸாரால் பில்கீஸ் உறவினர்கள் புதைக்கப்பட்ட பனிவேலா கிராமத்தை ஏய்ம்ஸ் மருத்துவமனையின் டாக்டர் தோஹ்ரா குழு ஆய்வு செய்த போது அங்கே 60 கிலோ உப்பு கிடைத்தது. உடலை சீக்கிரமாக மக்கச்செய்வதற்காக திட்டமிட்டு போலிஸார் இவ்வாறு செய்தது நிரூபணமானது. மண்ணின் ஈரப்பதம் காரணமாக அவர்களின் எண்ணம் நிறைவேறவில்லை. பில்கிஸ் சொன்ன அடையாளங்கள் வயதும் மருத்துவகுழு ஆராய்ச்சி முடிவோடு ஒத்துப்போனது. 8 பேரின் உடல்கள் மட்டும் கிடைத்தன. மீதம் ஆறுபேர் காணாதவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். மருத்துவக்குழுவின் அறிக்கை இவ்வழக்கின் போக்கை மேலும் வலுவாக்கியது.

ஆறுவருட போராட்டத்தின் பயனாக , பில்கிஸ் வைத்திருந்த நம்பிக்கையை காக்கும் வண்ணம் சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு தீர்ப்பளித்தது. பிடிபட்ட 20 பேரில் 12 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். அவர்களுக்கு 2008, ஜனவரி 18ல் ஆயுள் தண்டனை விதித்தது. ஒருவர் விசாரணையின் போதே இறந்துவிட்டிருந்தார். 7 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுவிக்கப்பட்டனர்.

நீதி கிடைத்த போதும் விடுவிக்கப்பட்ட ஆறுபேருக்காக தன் ஆதங்கத்தையும் சகோதரி பதிவு செய்தார். அந்நபர்களுக்கும் தண்டனை பெற்றுத்தருவதில் உறுதியாய் உள்ளார். இனிவரும் காலங்களில் அடுத்தடுத்த கேஸ்களுக்கும் சிபிஐக்கு தன் முழு ஒத்துழைப்பு தருவதாக கூறினார். இத்தீர்ப்பு பற்றி ப்ரஸ் மீட்டிங்கில் பேசியபோது " இது என் தனிபட்ட போராட்டமல்ல. பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பல பெண்களுக்கான போர். பாலியல் வன்முறை திட்டமிடப்பட்டு எங்கள் சமுதாயப் பெண்கள் மீது நடத்தப்பட்டது. என்னுடைய இப்போராட்டம் பாதிப்படைந்த பல பெண்களுக்கு சக்தியை கொடுக்கும். அவர்கள் தண்டிக்கப்படுவதால் மட்டுமே வெறுப்பு ஓய்ந்து விடாது. ஆனால் நீதி இன்னும் சாகவில்லை என்பதற்கான சிறிய அறிகுறிதான் இது..!" என்றார். உண்மை தான் ! எவ்வித பணபலமும் இன்றி, எந்த ஒரு அதிகார வர்க்கத்தின் ஆதரவும் இன்றி தனித்து போராடி தனக்காக நீதியை தனியாளாய் நிலைநாட்டிய பில்கிஸ்ஸின் செயல் ஒவ்வொரு பாதிப்படைந்தவர்களுக்கும் ஒரு முன்மாதிரி தான்.

மோடிக்கு பெரும் தலைவலி என்றே தான் எண்ணத்தோன்றும் சகோதரி பில்கிஸ் அவர்கள் தரும் பதிலடிகளைப்பார்த்தால்! முதலமைச்சர்க்கான தேர்தல் சமயத்தில், "நீங்கள் ஓட்டுப்போடுவீர்களா?" என கேட்கப்பட்ட போது, "நான் ஏன் ஓட்டளிக்க வேண்டும் ?, பல கொடுமைகள் எனக்கு நிகழ்த்தியதோடு என் குடும்பத்தாரை என் கண் முன்னே கொடூரமாய் கொன்றார்கள். இவற்றுக்கு பின்னாவது குஜராத் அரசு என்னை பாதுகாத்திருக்க வேண்டும், எனக்கு நீதி பெற்றுத் தந்திருக்க வேண்டும். இவையெல்லாம் செய்ய வக்கற்ற அரசு இயந்திரத்திற்காகவா நான் ஓட்டளிக்க வேண்டும். முடியாது. நான் விரும்பவுமில்லை" என்றார் காரமாக.

இப்படியான விரக்தியாளர்களை தான் இந்த மதவாத அரசு உருவாக்கியுள்ளது. உங்களுக்கு நீதி கிடைக்க வேண்டி மோடியின் ஆதரவுக்காக அவரை சென்று சந்திப்பீர்களா என கேட்டபோது " தன் சொந்த மாநிலத்தில் எனக்கு நீதியும் பாதுகாப்பும் தர முடியாத நபரை நான் எப்போதும் சந்திக்க விரும்பவில்லை. நான் அவரை நம்பப்போவதுமில்லை " என்ற அவரின் ஒவ்வொரு சொல்லும் மோடியின் ஒவ்வொரு பிம்பத்தையும் உடைத்துக்கொண்டே வந்தன.

இன்று இவரை நாம் மறந்திருக்கலாம், இவருக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை மக்கள் புறக்கணித்திருக்கலாம். நமக்கொரு துன்பம் நிகழாத வரை அத்துன்பத்தின் ரணங்கள் நமக்குப் புரியப்போவதில்லை! ஆனால் அவருக்கான அநீதிகளை ஒதுக்கிவிட்டு கொடூரனை ஆட்சிகட்டிலில் அமர வைக்க துடித்த ஒவ்வொரு சாமானியனும் குற்றவாளிகளே தான். வெட்கபட வேண்டும் நாம்...

மூன்று பெண்குழந்தை ஒரு ஆண் குழந்தையுடன் 20க்கும் மேற்பட்ட முறை வீடும் ஊரும் மாறி மாறி அலைகழிக்கப்பட்டும், அவ்வபோது போலிஸ் நெருக்கடிகளோடும் , இதற்கு சாவே மேலோ என்ற சிந்தனையில் அடிக்கடி வயப்பட்டும் கூட "வாழ்வதற்காய் போராட வேண்டுமெனில் போராடத் தயங்கமாட்டேன்" என திடமாய் வாழ்நாளை கழித்துக்கொண்டிருக்கிறார்...  14 வருடத்தில் ஏதேதோ நடந்துவிட்டது! குற்றவாளிகளெல்லாம் சுதந்திரமாய்... பில்கிஸ் மட்டும் கேள்விக்குறியாய்......... டெல்லி மாணவி நிர்பயா இறந்ததே நலம் தான்! இந்தியாவில் நீதி வேண்டுவோர் தான் குற்றவாளிகள். 

சகோதரி பில்கிஸ்ஸின் நல்வாழ்வுக்காய் பிரார்த்திப்போம்.

ஆமினா முஹம்மத்

reference :
http://www.rediff.com/news/2004/feb/26guj.htm
Tehelka Magazine, Vol 5, Issue 4, Dated Feb 02, 2008
http://articles.economictimes.indiatimes.com/2008-01-22/news/27701050_1_bilkis-bano-shailesh-bhatt-ramesh-chandana
http://archive.indianexpress.com/news/the-meticulous-seven-and-a-sevenday-hunt-for-proof/264049
http://wayback.archive.org/web/20080323094551/http://www.deccanherald.com/archives/aug092004/n14.asp
http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-sundaymagazine/importance-of-being-bilkis/article1436970.ece


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு