Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label விடுப்பு. Show all posts
Showing posts with label விடுப்பு. Show all posts

வளைகுடா விடுப்பு - பயனம் 4 15

அதிரைநிருபர் பதிப்பகம் | February 05, 2013 | , , ,


ஆட்டோவில் பயணித்துக் கொண்டிருக்கையில் இடையில் சிக்னலில் நிறுத்தத்திற்கான விளக்கு எரிந்ததால் ஆட்டோ நின்றது .

அஹமது ஆட்டோ ஓட்டுனரிடம் மீண்டும் பேச்சுக் கொடுத்தார் “என்னப்பா சென்னை வாழ்க்கையில் ஆட்டோ ஓட்டி குடும்பத்தை சமாளிக்க முடிகின்றதா?”

“பேஜார்தான் சார் வண்டி சொந்த வண்டியில்ல சார் நமக்கு சம்பளத்துக்கே கட்ட மாட்டிக்கீது சார்”

“வேறு தொழில் ஏதாவது செய்ய வேண்டியது தானே !?”

“வேற ஒன்னுந் தெரியாது சார்!”

“என்ன படிச்சிருக்கே?”

“டென்த் பாஸாகிட்டு பாலிடெக்னிக் (ஆட்டோ மொபைல்) படிச்சேன் சார் ஏ அப்பன் கஸ்மாலம் நீ பாலிடெக்னிக் படிச்சிட்டு ஆட்டோதானே ஓட்டப்போறே அத இப்பவே ஓட்டுன்னு வாடக ஆட்டோவ கையாண்ட கொடுத்துட்டான் சார், அப்ப ஓட்ட ஆரம்பித்தது ஓட்டிகினே இருக்கேன்.”

“வேற பொழுது போக்கு என்ன?”

“நல்லா கவித எழுதுவேன் சார்”

“அப்டியா!?”

“எங்க கவிதை ஒன்னு சொல்லேன்”

“பொம்னாட்டிங்க இருக்காங்க சார்”

“நல்ல எழுச்சியான கவிதை ஒன்னுசொல்லு!”

கேட்டுக்கோ சார்
விழுந்தால் விதையாகிடு
எழுந்தால் மரமாகிடு
கிடைத்தால் சிறப்பாக்கிடு
உயர்ந்தால் உருவாக்கிடு
படி..........

“சார் சிக்னல் விழுந்துச்சு, சார் அப்பால ஒரு சமயம் கெடச்சா சொல்றேன் வண்டி ஓட்றப்ப கவிதை சொன்னா டிஸ்ட்ரப்பாயிடுவேன் சார் சும்மா பேசிகினு வரலாம் சார்”

“ஒகே... ஒகே...”

“கவித சொல்ரப்ப நல்லா தமிழ் பேசுறே மத்த நேரத்துல சென்னை தமிழ் பேசுரியே?”

அதற்குள்  T-nagar வந்தடைந்ததும் ஆட்டோவிற்கு பணம் கொடுத்து விட்டு ஜவுளிக்கடை நோக்கி நடக்கலாயினர். அஹமதுவிற்கு காத்திருந்தது அதிர்ச்சி... 

ஆமினா பட்டென்று கண்ணில் பட்ட ஒரு ஜவுளிக்கடையில் ஏறினாள்.

“அது போத்தீசல்ல அங்கே இருக்கு” என்று அஹமது கையை படக்கென்று சுட்டிக்காட்ட

“தெரியுந் தெரியும்”

“அப்ப ஏன் இந்த கடைக்குப் போறே”

“இரண்டு மூனு கடை ஏறி வெலய விசாரித்தா தானே நல்லாருக்கும்”

‘பரவாயில்ல பொண்டாட்டி நமக்கு ஒத்துழைத்தால் உள்ளூர் வியாபாரத்திற்கு தோதா இருக்கும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார் அஹமது. (சுத்தவிடப் போகிறாள் மனைவி என்பதை அறியாது) கடைக்குள் நுழைந்ததும் நல்ல வரவேற்பு.

“சார், மேடம்,,, என்ன பாக்குறீங்க?”

“பட்டு பொடவ”

“முதல் மாடிக்கு போங்க” என்று வழிகாட்டி விட்டார்.

லிப்டில் மேலே சென்று பட்டு செலக்ஷனை அடைந்து பல வகைகளை பார்வையிட்டார்கள் புடவையை கடை காரர் காட்டிக் கொண்டிருக்கையிலே ஆமினாவின் கண்கள் வேறு திசைக்கு சென்றது.

“ஏமா நா காட்டிக்கிட்டு இருக்கையிலே எங்கோ பாக்குரீங்களே?”  அங்கிருந்த சேல்ஸ்மேன் கேட்டார்.

“இந்தக் கடை சரி வராதுங்க” கோபமாக வெளியேறினாள் ஆமினா.


இப்படியே பல கடைகள் ஏறி இறங்க கடைசியில் போத்தீசுக்கே பெப்பே அங்கும் கலர் சரியில்லை என்று வாங்காமல் திரும்பிவிட்டாள். அந்தகடையில் பாவப்’பட்டு’ ஜட்டியும் பனியனும் தனக்காக வாங்கினான் விலை 285 ரூபாய். கடைசியாக ஒரு பிரபல்யமான கடையில் எடுத்தாகி விட்டது பட்டுப்புடவை! 9200 ரூபாய்க்கு.

“உன் பட்டுப் புடவையின் விலை 12,200/- ரூவா” என்றார்.

சட்டென திரும்பிய ஆமினா “என்னங்க சொல்ரிய!?”

“ஆமா பஸ்சு ஆட்டோ மற்ற செலவுகள் 3,000/- உன் புடவை 9,200 மொத்தம் 12,200 தானே?”

“வல்லா-நாளையில அத யான்ங் என் பொடவை யோட சேக்கிரிய வேனுன்னா உங்க ஜட்டி பனியன் செலவோட 3,285/- ன்னு வச்சிக்குங்க நல்லா இருக்கே சமத்துதான்.”

கடையிலிருந்து வெளியேறினார்கள் ஆமினாவிடம் அஹமது பொறுமையாக கேட்டார். “ஏம்மா 7-8 கடை ஏறி இறங்கி ஒரு பட்டுப்புடவை எடுத்தியே? ஆதிகாலத்து மனுசிங்க [கற்காலம்] தன் ஆடைகளுக்கு வெறும் இலை தழைகளை தான் உடுத்தினாங்க தெரியுமா?”

“தெரியுந் தெரியும்… அந்த இலைகளுக்கு எத்தன மரங்கள் ஏறி இறங்கி இருப்பார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?” என்றதும் அஹ்மதுடைய நிலமையை நீங்களே யூகிச்சுக்கிடுங்க.
தொடரும்...
மு.செ.மு.சஃபீர் அஹமது

வளைகுடா விடுப்பு - பயணம் 3 21

அதிரைநிருபர் பதிப்பகம் | January 27, 2013 | , ,


காலைப் பசியாறிவிட்டு “வெளியில் போயிட்டு வாரேன்” என்று அஹமது தனது மனைவி மற்றும் தங்கையிடம் சொல்லிவிட்டு வெளியில் சென்றார். மச்சிமார்கள் இருவரும் ஊர் கதைகளையும் குடும்ப விசயங்களையும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

அடுத்து ஆமினா கேட்டாள் “மச்சி நீங்க பட்டுப்புடவை எடுத்து இருக்கீங்களாமே? காட்டுங்களேன் பார்க்கலாம்!”

பாத்திமாவோ அந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை சொலக்கென்றது ‘மச்சிக்கு எப்டி தெரியும்’ என்ற யோசனையோடு “எடுத்துக் கொண்டு வாரேன் மச்சி” என்று சொலேர்ப்பை வெளிக்காட்டாமல் பீரோவை நோக்கி நடந்தாள்.

புடவையை ஆமினாவிடம் கொடுக்க ஆமினா புடவை டிசைனை பார்ப்பதுபோல் புடவையின் விலை அட்டையை தேடினால் அது ஒளிந்திருந்த அந்த அட்டையை மடிப்பை லேசாக விலக்கிப் பார்த்து ‘அப்பாடா நாம் கேள்வி பட்டது சரிதான்’ என்று மனதை சமாதானப் படுத்திக்கொண்டாள்.


“மச்சி புடவை எந்த கடையில் எடுத்தது?”

“போத்தீஸ்லதான் மச்சி”

“என்ன விலை?”

“அதான் இப்ப பாத்திங்களே!?”

 “நா பாக்கலமா… பட்டு ஜரிகையைத்தான் தொட்டு பார்த்தேன்” என்று சமாளித்தாள்.

“எட்டாயிரம் மச்சி, புடவை நல்லாயிருக்கா?”

“ம்ம்..”

“ஆட்டுதலை தலை, கொடலு ஊர்லேந்து தருவிக்கிறீங்களே ஏன் இங்கே கிடைக்காதா?”

“கெடைக்குது…. வக்குன தலை கிடைக்குறது இல்ல, தோல உறிச்சி கொடுத்துடுரானுவ ருசியே இருக்குறது இல்ல அதான்”

“அப்ப கொடல?”

“எனக்கு கொடல சரியா கலுவத் தெரியாது அதுனால உம்மா சுத்தம் பன்னி அனுப்புவாஹ..”

“கொடுவா பிஸ்க்குக்கூட அனுப்பிக்கிறாஹளே” விடாக் கொண்டி கேல்விகளை கேட்டுக்கொண்டே இருந்தாள்.

பதிலுக்கு பாத்திமாவும் (கொடாக் கொண்டி) விடவில்லை பதில் சொல்வதை தொடர்ந்தாள்.

“அது உங்களுக்கு பொரிச்சிக் குடுக்கத்தான்” என்று சமாளித்தாள்.

மச்சிமார்கள் பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே வெளியில் சென்ற அஹமது திரும்பி வந்துவிட்டார்.

“என்னம்மா மச்சிமார்கள் இரண்டு பேரும் என்ன பேசிக்கிறிங்க?”

“சும்மா மதராஸ் எப்டியிருக்கு அதிராம்பட்டினத்துல நடந்த விசயங்களை பேசிக்கிட்டு இருந்தோம்” 

“சரி, மதராஸை சென்னைன்னு பேர் மாத்தி ரொம்ப நாளாச்சு இன்னும் மதராஸ்சுன்னே சொல்லிக்கிட்டு இருக்கியே?”

“நா சொல்லுறதுல உங்களுக்கு என்ன கஸ்டம்?”

“சரி சொல்லிக்கோ.”

“சரி எங்கே போய்ட்டு வர்ரீங்க?”

“ஃபிரண்ட்ஸை சந்திச்சேன் 10வது கூட பாஸ் பண்ணாதவங்கள் கூட நல்ல வசதியா இருக்கானுவ மாப்ள நீயும் சென்னையிலேயே செட்டில் ஆகுடா நிறைய வியாபாரங்கள் இருக்குன்னு சொல்றானுவ யோசனை பன்றேன்னு சொல்லிட்டு வந்தேன்.”

“ஆமாம் காக்கா நீங்க படித்தவர் ஏதாச்சும் வியாபாரம் பண்ணலாம்.”

“நீ என்னமா சொல்ற?” மனைவியை பார்த்து கேட்டார்.

“பாத்துமாவோட மாப்ளயும்தான் படிச்சவர்தான் இவ மட்டும் யான் லன்டனுக்கு அனுப்பிவச்சானு கேளுங்க?”

“இப்ப எதுக்கு தங்கச்சியோட சண்டைக்கு போர என் கேள்விக்கு பதில் சொல்” 

ஆனால் ஆமினா விடமிருந்து எந்த பதிலும் இல்லை. வியாபார சிந்தனை லேசாக மனதில் துளிர் விட்டு இருக்கிறது. வேறு ஒரு சமயத்தில் மனைவியிடம் பேசிக் கொள்ளலாம் என்று பேச்சை வேறு திசைக்கு திருப்பினான்.

“சாய்ங்காலம் ‘T’ நகர் போகலாமா?” என்று கேட்டார்.

“எதுக்கு காக்கா?” என்று தங்கை கேட்க…

“பெருநாள் வருதுல துணிமனி எடுக்கத்தான்”

“போகலாம் காக்கா”

“மருமகன் பள்ளி. சாரி காலேஜ் போயாச்சா?”

“ஆஆ போய்ட்டான்”

அசர் தொழுகையை முடித்துவிட்டு ஒரு ஆட்டோ பிடித்து T-நகர் சென்றார்கள். ஆட்டோ சென்ட்ரலை தாண்டியதும் ஒரு கார் அவர்களை ஓவர் டேக் எடுத்து சென்றது பளபள வென இருந்தது. அந்த வெளிநாட்டுக் காரின் பின்புற கண்ணாடியில் ‘மாஷா அல்லாஹ்’ என்று ஆங்கிலத்தில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. 

“காக்கா முன்னாடி போறது யார் கார் தெரியுமா? நம்ம பெரியப்பா கொளுந்தியா மொவன் யூசுப்ட கார்.”

“அப்டியா! நானும் கேள்விப்பட்டேன் நல்ல வசதியாமே?”

“சார்” இது ஆட்டோ ஓட்டுனரின் குரல்…

“என்னப்பா?”

“என்ன சார் ஒங்க சொந்தக்காரர்னு சொல்ரீங்க இது கூட தெரியாதா? இந்த சென்னையில அவருக்கு காரு, பஸ்ஸு, வேனுன்னு, மொத்தம் 10,000த்திற்கு மேல் ஓடுது சார்.”

“அது எப்டீப்பா உனக்குத் தெரியும்?”

“சார் அவருடய வண்டிகள்ல பூரா அவங்க கம்பனி பேர் போட்டு இருக்கும் சார் அதகூட பாருங்க MASHA ALLAH ஸ்டிக்கர் ஒட்டி இருக்கு பாருங்க” என்று சொல்லி முடிப்பதற்குள் அஹமது வாய் விட்டே சிறித்து விட்டார்.

“அது கம்பனி பெயர் இல்லப்பா இஸ்லாமியர்களாகிய நாங்கள் எங்களுக்கு கிடைத்த பரிசுகளை அதாவது வீடு, கார், பைக், இன்னும் இது போன்ற பொருள்களில் அல்லாஹ்வை புகழ்ந்து ‘மாஷா அல்லாஹ்’ என்று நன்றியை தெரிவிப்பதுண்டு அதன் பொருள் என்னவென்றால் ‘இறைவன் நாடியது நடந்தது”

அஹமதுவிற்குள் மீண்டும் துளிர் விட்ட சொந்த வியாபார ஆசை தன்னைவிட வயதில் 7 வருடம் குறைந்தவன் தான் யூசுப் 28 வயதிலேயே வியாபாரத்தில் முழு ஈடுபாடு 7-8 வருடம் ரொம்ப சிரமப்பட்டான். அதன் பிறகு நானும் வெளி நாட்டு சபுராளியாக ஆனதால் அவன் வளர்ச்சி தெரியவில்லை. பரவாயில்லை உழைப்புக்கேற்ற ஊதியம் மரம் வளர்த்ததின் பலன் எப்படியாவது மனைவியை ஒத்துக் கொள்ள வைத்து உள் நாட்டிலேயே தொழில் செய்திட வேண்டியதுதான் மனதிற்குள் நினைத்து கொண்டான்.
பயணம் தொடரும்...
மு.செ.மு.சஃபீர் அஹமது

வளைகுடா விடுப்பு - பயணம் தொடர்கிறது... 2 18

அதிரைநிருபர் பதிப்பகம் | January 14, 2013 | , ,


இதுவரை : 45 நாள் விடுப்பில் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாட அதிரைக்கு வந்துள்ளார் அஹமது….

ஊர் வந்த இரண்டாம் நாள் அமானிதம் என்று உம்மாவிடம் ‘பொய்’ சொல்லி எடுத்து வைத்த பார்சலை அன்று மாலை மனைவியிடம் வந்து தருகிறார் அஹமது. 

“என்னங்க இது?” என்று மனைவி கேட்க..

“பிரித்துத்தான் பாறேன்” என்று சஸ்பென்ஸ் வைக்க பார்சலை பிரித்த மனைவி பூரிக்கின்றாள் சந்தோசப் பார்வைகள் பறிமாறிக் கொண்டன.

“ஏங்க நான் ஒன்னு சொல்வேன் கேட்பிங்களா?”

“சொல்லு?”

“ஒன்னுமில்ல…..”

“அப்ப விடு”

“கிண்டல் பன்னாதீங்க”

“அப்படின்னா சொல்லு”

“மாப்பிள்ளையை லன்டனுக்கு அனுப்பி வச்சிட்டு மதராஸ்ல மகன படிக்க வக்கிறேன் என்கிற பெயர்ல மதராஸ்ல இருக்காஹலே ஒங்க தங்கச்சியை பார்த்துட்டு வரலாமா?”

“வேண்டாம்… வேண்டாம்… நான் திரும்ப துபை போறது சென்னை வழியாகத்தான் அப்ப போய்ப் பாத்துக் கொள்கிறேன்.”

“அப்ப நீங்க கொண்டுவந்த சாமான்களை தங்கச்சிக்கு கொடுக்கலையா?”

“அது தம்பி கொண்டுபோய் கொடுத்துடுவான்”. 

“என்ன பொறுப்பில்லாம இருக்கியலே, நீங்க போய் கொடுக்கிறதுதான் சரி தம்பிகிட்டெல்லாம் சரிவராது”.

“சரி விடு நானே போறேன்”.

“நானும் கூட வாறேன்”.

“நீ எதுக்கு?”

“மதராஸ்ல போத்தீஸ்ல ஒரு பட்டுப்புடவை எடுக்கலாம்னு ஆசையா இருக்குங்க”

“அதச்சொல்லு முதல்ல, தங்கச்சிக்க்கு சாமான்னு பேசும்போதே நெனச்சேன், அதான் நான் நிறைய புடவைகள் கொண்டு வந்திருக்கேன்ல?”

“அதுல 2 புடவையை உங்க தங்கச்சிக்கு கொடுத்து பெருநாளைக்கு உடுத்த சொல்லுங்க பார்க்கலாம்?”

“ஏன் உடுத்தவா மாட்டா?”

“அவ ஏற்கனவே 8,000 ருபாய்க்கு பட்டுப்புடவை எடுத்தாச்சு”

“அது எப்படி உனக்கு தெரியும்?”

“தெரியும் தெரியும்”

“சரி இப்ப என்னாங்குறே?”

“எனக்கும் அதுபோல் எடுக்கனும்”.

“ம்ம்ஹூம்ம்ம் முடியல வந்த இரண்டு நாள்ல கண்ணைக் கட்டுதே!!!

“சரி… சரி.. நாளைக்கே சென்னைக்கு 2 டிக்கட் எடுத்துடுறேன்” என வேகமாக முடிவெடுத்து விவேகத்தில் 2 டிக்கட் எடுத்தாகிவிட்டது.

துபையில் இருந்து தங்கச்சிக்காக கொண்டு வந்த சாமன்கள் போக வக்கிய ஆட்டுத் தலை, குடல், கொடுவா பிஸ்க் என்று உம்மாவின் அடிஸனல் அன்பு கட்டளையோடு அனைத்தையும் அள்ளிக் கொண்டு விவேகத்தில் ஏறியாச்சு.

“சுபுஹானல்லதி சஹ்ஹரலனா ஹாதா வமா குல்னா மினல் முக்ரினீன்” வன்டி புறப்பட்டது…


சிங்காரச் சென்னை ‘உங்களை இனிதே வரவேற்கிறது’ என்ற அறிவிப்பு பதாகையோடு மாசுபட்ட காற்றும், வாகனப்போக்குவரத்தின் சூழல் பஸ்ஸில் வந்த அசதி வந்து சேர்ந்தது அனைவரும் விரும்பிச் சொல்லும் மதராஸ்.

மனதைக் கொள்ளையடிக்கும் அதிரை மண்வாசனை சாயலான அந்த மண்ணடியை பார்த்ததும் சுபுஹுத் தொழுகைக்கு எழுந்தவர்களும் நடை பாதையை தூங்கப் பயன்படுத்திய தரைப்படை மைந்தர்களும், அதிகாலை டீ பிரியர்களும் பேருந்தில் பயணித்தவர்களை அழைத்துச் செல்ல வந்தவர்களைத் தவிர அந்த தெருவே சோம்பல் முறித்தது.

பயணப் பெட்டிகளை கையில் எடுத்துக் கொண்டு நடந்தே தங்கையின் வீட்டை வந்தடைந்தனர், இரண்டாவது மாடியிலிருந்து தங்கை பாத்திமா “காக்கா” என்று கொஞ்சம் சப்தமாக கூப்பிட அன்னார்ந்து பார்த்தார்… அருமை காக்கா கையை அசைத்து விட்டு மேல்மாடிக்கு சிரமப்பட்டு பயணப் பெட்டிகளையும் ஊரிலிருந்து எடுத்து வந்த அட்டைப் பெட்டிகளையும் தூக்கிக் கொண்டு ஏறினர். 

“ஒரு லிப்ட் கூட வைக்கமாட்டிக்கிறானுவ என்ன மதராஸோ?” துபை பெருமைகளை சொல்லிக்கொண்டே தங்கையின் அப்பர்ட்மென்ட் வந்தடைந்தார்.

“அப்பாடா” சோபாவில் அமர்ந்தார்.

“என்னம்மா நல்லாறிக்கியா…? மாப்ள போன்லாம் பன்றாரா? மருமகன் தூங்றானா? எத்ன மணிக்கு பள்ளிக்கூடம்?”

“பள்ளிக்கூடம் இல்ல காக்கா! காலேஜ் போறான்”.

“ஆமாமாம் பழய ஞாபகத்துல கேட்டுட்டேன்.”

“மச்சீ என்ன பேச மாட்டிக்கிறீங்க…”

“உங்க காக்கா எங்க பேசவுட்டாஹ வரிசையா கேள்வி கேட்டுக்கிட்டே இருக்காஹலே” என்றதும் மூவரும் சிரித்தனர்.

“இர்ரீங்க காக்கா தேத்தண்ணி போட்டு வச்சிட்டேன் கொண்டு வாறேன்” அடுப்படிக்குள் தங்கை நுழைகிறாள்.

டீயை குடித்து விட்டு உம்மா அனுப்பி வச்ச சாமான்களையும் தாம் கொண்டு வந்த சாமான்களையும் பிரித்து தங்கையிடன் கொடுக்கிறார். உம்மா தந்த சாமானை பிரித்து ஃபிரிட்ஜில் அடுக்கி விட்டு காக்கா தந்த சாமான்களை ஒவ்வொன்றாய் பார்க்கிறாள். பிறகு எதையோ தேடுகிறாள் காக்காவை பார்க்கிறாள் காக்கா கண் ஜாடை செய்கிறார், மனைவியை பார்த்து “ஏமா பாத்ரூம் போகனும்னியே போய்ட்டு வாயேன்” என்று ஞாபகப்படுத்த, மனைவியும் பாத்ரூம் சென்றுவிட தங்கையிடம் “அந்த சாமானை உம்மாட்ட கொடுத்துட்டு வந்திருக்கேன்” என்று சொன்னவுடன் தான் தங்கையின் முகத்தில் சிரிப்பே வந்தது….
தொடரும்
மு.செ.மு.சஃபீர் அஹமது


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு