சாக்கடைச் சேறு கலந்து போடும் சோறு!
கடந்த இரண்டு வாரங்களாக இந்தியாவை உலுக்கிக் கொண்டிருக்கும் பிரச்னை உ பி மாநிலம் தாத்ரி என்ற கிராமத்தில் மாட்டுக் கறி வைத்திருந்தார் என்ற குற்றத்துக்காக ஒரு முஸ்லிமை அரக்கர்கள் அடித்துக் கொன்றதுதான். இந்தியாவே இந்தக் கொடூரத்தை விமர்சித்தது ; விசாரித்தது; விவாதித்தது. இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு எதிராக எழுந்த எதிர்ப்புக்குரல் இமயமலையில் கூட எதிரொலித்தது. நாம் இன்று இந்தத் தலைப்பில் பெரும்பகுதி பேசப் போவது முகமது அக்லக் என்ற ஏழையின் கொடூரக் கொலையைப் பற்றி அல்ல. அந்தக் கொலையைத் தொடர்ந்து நாட்டின் சில தலைவர்கள் தெரிவித்துள்ள சீண்டிவிடும் கருத்துக்கள் பற்றித்தான் அலச இருக்கிறோம்.
முதலாவதாக ஒரு இழவு விழுந்த வீட்டில் ஆறுதல் சொல்லும் பண்பாடும் கண்ணியமும் கலாச்சாரமும் அற்ற மகேஷ் சர்மா என்கிற ஒருவர்தான் இந்தியாவின் கலாச்சாரத்தை கட்டிக் காப்பாற்றும் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ள கலாச்சாரத்துறை அமைச்சர் என்று அறிகிறபோது “ பாரத நாடு பழம்பெரும் நாடு" என்று பாடிய பாரதி இப்போது இருந்தால் தற்கொலை செய்து கொள்வார்.
முகமது அக்லக் கல்லாலேயே அடித்துக் கொள்ளப்பட்டது ஒரு சாதாரண விபத்து, இத்தகைய சம்பவங்கள் நடப்பது தவிர்க்க முடியாதது என்பதுதான் அமைச்சரின் வாயிலிருந்து உதிர்ந்த மணிமொழிகள். அதுமட்டுமல்ல அதையும்தாண்டி அவர் சொல்லி இருப்பது முகமது அக்லக்கை கொன்றதை விடவும் கொடூரமானது. முகமது அக்லக்கை கொல்லத்தானே செய்தார்கள் அவருடைய வீட்டில் 17 வயது பெண் இருந்தாளே அவளை கற்பழிக்கவா செய்தார்கள்? என்றும் கேட்டிருக்கிறார். அமைச்சரின் இந்த இரண்டு கொடிய வார்த்தைகளும் அவர் வகித்துவரும் பதவிக்கும் அவர் பொறுப்பேற்றுள்ள துறைக்கும் இந்த நாட்டுக்கும் ஏற்பட்டுள்ள இழிவு என்றுதான் வேதனையுடன் குறிப்பிடவேண்டும்.
அடுத்ததாக, இந்தியாவின் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வண்டிய பொறுப்பில் இருக்கும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “ இது ஒரு சாதாரண உள்ளூர் சம்பவம் இதை அரசியலாக்குகிறார்கள் ஊடகங்கள் பெரிது படுத்துகின்றன" என்று கூறி இருக்கிறார். எது சாதாரண சம்பவம்?
சம்பவம் நடந்த தாத்ரியில் ஒரு இந்துக் கோயிலில் இந்து சகோதரார்கள் கைதட்டி பஜனைப் பாடல்கள் பாடிக் கொண்டு இருந்திருக்கிறார்கள். அப்போது அங்கு வந்த சில குண்டர்கள் நம்மை அவமானப்படுத்த வேண்டுமென்பதற்காகவே ஒரு முஸ்லிம் பசுவைக் கொன்று கறி சமைத்திருக்கிறான் அதற்கு நாம் பழி வாங்க வேண்டுமென்று உசுப்பேத்திவிடவும் பஜனையில் ஈடுபட்டிருந்த கூட்டம் வெறிகொண்டு அக்லக்கின் வீடு நோக்கிக் கிளம்பி அவர்கள் சொன்னது எதையும் காதிலே வாங்கிக் கொள்ளாமலேயே செங்கல்லால் அடித்தே அக்லக்கை கொன்று இருக்கிறது இப்படி ஊர் கூடி ஒருவரை அடித்துக் கொள்வது சாதாரண சம்பவமா? இதுபோல சம்பவங்கள் இந்தியா முழுதும் நடந்தால் மத்திய உள்துறை அமைச்சர் கைகளை கட்டிக கொண்டு சாதாரண சம்பவம் என்று சல்லாபக் கட்டிலில் சாய்ந்து படுத்திருப்பாரா?
நாடெங்கும் நடைபெற்ற விவாதங்களில் கலந்து கொண்டவர்களில் தமிழக பாரதீய ஜனதாக் கட்சியின் பொருளாளர் எஸ் ஆர் சேகர் என்பவரும் முக்கியமானவர். தாத்ரி படுகொலை பற்றி இவர் எடுத்துவைத்த வாதம் என்னவென்றால் பசுவதை தடை சட்டம் அமுலில் உள்ள மாநிலத்தில் சட்ட மீறுதல் நடந்திருக்கிறது அதனால் வெகுண்டேழுந்த மக்கள் இவ்வாறு செய்துவிட்டாகள் என்று சொல்லி இருக்கிறார். எஸ் ஆர் சேகர் கூறுவதை நாம் எஸ் ஸார் என்று சொல்ல முடியாது இருந்தாலும் ஒரு வாதத்துக்காக ஒப்புக் கொண்டு நாம் கேட்க விரும்புவது என்னவென்றால் பசுவதை சட்டம் அமுலில் உள்ள இடத்தில் அதை மீறினால் அதற்கு தண்டனை தருவதற்கு அந்த சட்டப்படித்தான் நடவடிக்கை எடுக்க வேண்டுமா அல்லது தடி எடுத்தவர்கள் எல்லாம் தண்டல்காரர்கள் ஆகவேண்டுமா? என்பதுதான். பல கொடிய குற்றங்களைச் செய்தவர்கள் மீதெல்லாம் வருடக்கணக்காக வழக்குகளை நடத்திக் கொண்டிருப்பானேன். ஒவ்வொரு குற்றவாளிகள் வீட்டுக்கும் ஆயிரம் அடியாட்களை அனுப்பி அடித்துக் கொல்ல வேண்டியதுதானே! இவர்களில் முதல் பட்டாளத்தை மத்தியப் பிரதேசத்துக்கு அனுப்பி வியாபம் ஊழலில் ஈடுபட்டவர்களை கொலை செய்த குற்றவாளிகளின் வீடுகளுக்கு அனுப்ப வேண்டியதுதானே. இரண்டாவது பட்டாளத்தை தேடப்படும் குற்றவாளியான லலித் மோடிக்கு உதவிய உன்மத்தர்களின் வீடுகளுக்கு அனுப்ப வேண்டியதுதானே. இந்த நாட்டில் வீதிக்கொரு சாதி ஆளுக்கொரு நீதி யென்று அட்டூழிய ஆட்சியை தொடர்ந்து நடத்த இயலுமென்று எண்ணிக் கொண்டு இவ்வாறெல்லாம் பேசுகிறார்களா?
அடுத்ததாக, தரங்கெட்ட பேச்சுக்களுக்காகவே நாட்டில் ஒரு விருது வழங்கப்பட வேண்டுமென்றால் தனது விலங்கினத் தோழர்களுடன் சேற்றில் புரளத் துடிக்கும் பாரதீய ஜனதாவின் தேசிய செயலாளர் ஹெச் ராஜாவுக்குத்தான் வழங்கப்பட வேண்டும். அந்த அளவுக்கு தரக்குறைவாகப் பேசுவதற்கு, அகில இந்தியாவிலும் இவரை விட்டால் ஆள்கிடைக்காது. இவரது அடக்க இயலாத நாவின் அத்துமீறலான பேச்சுக்கு ஆயிரம் உதாரணங்கள் உள்ளன. தந்தை பெரியாரை செருப்பால் அடிக்க வேண்டுமென்றார்; வை. கோ பத்திரமாக வீட்டுக்குப் போக இயலாது என்றார்; முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவது பரீட்சைகளில் காபி அடிக்கவே என்றார். இப்போதும் ஏதோ முஸ்லிம்களை அவமானப்படுத்துவதாக எண்ணிக் கொண்டு ஏற்கனவே தரம் தாழ்ந்து போயிருக்கும் இவர் இன்னும் தன்னையே தரம் தாழ்த்திக் கொண்டு ஓர் கருத்தை சொல்லி இருக்கிறார்.
ஹெச் ராஜா , அந்தக் கருத்தை சொல்ல வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது என்றால் மாட்டுக் கறி வைத்திருந்தார் என்ற குற்றத்துக்காக அநாதரவாக இருந்த முகமது அக்லக்கை அடித்துக் கொன்றீர்களே இதோ நாங்கள் மாட்டுக் கறி விருந்தே வைக்கிறோம் முடிந்தால் வந்து பாருங்கள் என்று நாடெங்கும் ஊடகங்களில் அழைப்பிதழ் கொடுத்து மாட்டுக் கறி பிரியாணி, கபாப், வறுவல், மசாலா போன்ற பல சுவைதரும் அயிட்டங்கள் பரிமாறப்பட்டன. தமிழ்நாட்டில் , தலைநகர் சென்னை முதல் திண்டுக்கல் , திருச்சி, மதுரை, சேலம் முதலிய பெரு நகரங்களிலிருந்து சிறிய கிராமம் வரை இத்தகைய விருந்துகள் நடத்தப்பட்டன. சமூக வலைதளங்களில் அவற்றின் வண்ணப்படங்கள் வெளியிடப்பட்டன.
இவைகளைப் பார்த்த ஹெச் ராஜாவுக்கு தானும் ஏதாவது சொல்லவேண்டுமென்று ஒரு அரிப்பு. நீங்கள் மாட்டுக் கறி விருந்து வைத்தால் நாங்கள் பன்றிக்கறி விருந்து வைப்போம் என்று சொல்லி இருக்கிறார். பன்றிக் கறி விருந்து வைக்கிறார் என்றால் முஸ்லிம்கள் கொதித்து எழுவார்கள் அதனால் கலகம் வரட்டும் என்று தப்புக் கணக்குப் போட்டு அந்த வார்த்தைகளை சொல்லி இருக்கிறார். தனது தொழிலில் இவர் ஒரு சார்டட் அக்கவுண்டன்ட் ஆனால் அரசியலில் அல்லது ஆன்மீகத்தில் இவர் போடும் கணக்கு தவறானது என்பதை ஹெச் ராஜா உணரவேண்டும்.
இஸ்லாம் பன்றிக் கறிக்கு எதிரானது ; இது பற்றி திருக் குர் ஆன் தடைகளை விதிக்கிறது அதனால் நாம் பன்றிக்கறி விருந்து வைப்போம் என்று தனது அரைகுறை அறிவை வைத்து சிந்தித்து இருக்கிறார். ராஜா அவர்களுக்கு சொல்லிக் கொள்வோம். ஆமாம் ! இஸ்லாம் பன்றிக்கறியை தடை செய்துதான் இருக்கிறது. ஆனால் அது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல ; ஒட்டு மொத்த மனித சமூகத்துக்கே அந்தத் தடை. காரணம் திருமறை குர் ஆன் அகில உலகத்துக்குமே அருட்கொடையாக அருளப்பட்டது. உலகமக்கள் நல்ல உடல்நலத்தோடு இருக்க வேண்டுமென்று அவர்களைப் படைத்த அல்லாஹ் காட்டிய வழி அது.
இஸ்லாத்தை பற்றிய தவறான புரிந்துணர்வில் இருக்கும் ராஜா போன்றவர்களுக்கு அன்புடனும் பண்புடனும் அவர்களுடைய தவறான புரிந்துணர்வை நீக்கும் நோக்கத்தில் கீழ்க்காணும் சில அறிவியல் ரீதியான உணமைகளை சொல்லிக் காட்டுவோம்.. காரணம் நாங்கள் கற்ற தாவா என்கிற அழைப்புப் பணியில் பிற மத சகோதரர்களுடைய தவறான புரிந்துணர்வை நீக்கும்வண்ணம் உண்மைகளைச் சொல்வதும் ஒரு அம்சம்
மனித குலத்துக்கு வழிகாட்ட திருமறை குர் ஆனை தந்து அருட் தூதர் மூலம் இறக்கி வைத்த இறைவன் கீழ்க்கண்ட தனது வசனங்களில் பன்றிக்கறியைத் தடை செய்து இருக்கிறான்.
- 1. "தானாகவே செத்ததும் இரத்தமும் பன்றியின் மாமிசமும் அல்லாஹ் அல்லாதவற்றுக்காக அறுக்கப்பட்டதையும் தடை செய்து இருக்கிறான்" (2: 173)
- 2. தானாக செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதவருக்காக அறுக்கப்பட்டதும் ,கழுத்து நெரித்து செத்ததும் அடிபட்டுச் செத்ததும் கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டபட்டு செத்ததும் விலங்குகள் கடித்து செத்தவையும் உங்களுக்கு விலக்கபட்டிருக்கின்றன. ( 5:3)
- 3. நபியே! நீர் கூறும் தானாக இறந்ததாக அல்லது ஒட்டப்பட்ட இரத்தமாக அல்லது பன்றிக் கரியின் மாமிசமாக உள்ளதைத் தவிர வேறு எதையும் உண்பவருக்கு அது உண்ணத் தடுக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டதில் நான் காணவில்லை . ஏனெனில், நிச்சயமாக அவை அசுத்தமானதாகும். ( 6 : 145)
- 4. நீங்கள் புசிக்கக்கூடாது என்று உங்களுக்கு அவன் தடுத்திருப்பவையெல்லாம் தானே செத்ததும், இரத்தமும், பன்றியின் இறைச்சியும் எதன் மீது அல்லாஹ் அல்லாத வேறு பெயர் கூறப்பட்டு அறுக்கபட்டதோ அதுவுமேயாகும். ( 16:115 )
மேற்கண்டவாறெல்லாம் , பன்றிக்கறியை திருமறையில் தடை செய்துள்ள இறைவனும் அதை எடுத்துச் சொல்லிய இறைத்தூதர் நபி ( ஸல்) அவர்களும் இந்தத் தடைக்கான காரணத்தைக் கூறவில்லை. தனது திருமறை முழுதும் மனிதனை சிந்தித்துப் பார்க்கச் சொன்னான்.
அதன்படி , ஆறறிவு படைத்த மனிதன் அறிவியல் ரீதியாக ஆராய்ந்தான். பன்றிகள் தனது மலத்தையும் மனிதர்களின் மலத்தை உண்பதாலும், சாக்கடைச சேற்றில் புரள்வதை தங்களின் உயிர்நாடியாக வைத்திருப்பதால் தான் பன்றியின் மாமிசம் அசுத்தமானதாக இருக்கலாம் அதனால் தடை செய்யப்பட்டு இருக்கலாம் என்று என்று சிலர் மேம்போக்காகக் கருதினர்.
இதுதான் காரணம் என்றால் மலத்தை உண்ணும் மாடு, கோழி போன்ற எத்தனையோ உயிரினங்களை ஏன் தடை செய்யவில்லை என்றும் மனிதன் தனக்குள் கேள்வியை எழுப்பிக் கொண்டான். சாக்கடையில் புரளும் பன்றிகள் மட்டுமல்ல மலத்தை உண்ணாத அளவில் சுகாதார சூழ்நிலையில் பண்ணைகளில் வளர்க்கப்படும் பன்றிகள் கூட தடை செய்யப்பட்டிருக்கிறதே ஏன் என்று அதையும் தாண்டி விரிவாக மனிதன் சிந்தித்தான்.
அந்த சிந்தனையின் பலனாக ஆய்வாளர்களுக்கு , அறிஞர்களுக்கு பல உண்மைகள் வெளிப்பட்டன. அவர்கள் கண்டு பிடித்த உணமைகளின் ஒட்டுமொத்த முடிவு பன்றியின் மாமிசம் மனித உடம்புக்கு ஒவ்வாதது; தீங்கு விளைவிப்பது ; கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டியது என்பதுதான்.
முதலாவதாக பாரதீய ஜனதாகட்சியின் தேசியச் செயலாளர் ஹெச் ராஜா அவர்கள் வாய்க்கொழுப்பெடுத்து , பன்றிக்கறி விருந்து வைப்பேன் என்று அறிவிக்கும் முன்பு அவர் விருந்து வைக்கத் தேர்ந்தெடுத்த மெயின் அயிட்டத்தில் ( பன்றிக் கறியின் ) அடங்கி இருக்கும் உட்கூறுகளின் அறிவியல் தன்மைகளை ஆராய்ந்தாரா?
மனிதன் சாப்பிடும் உணவுகளில் கொழுப்பு – கொலாஸ்டரால்- அவனது உடல் நலத்துக்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கிறது என்பதை மருத்துவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். இதயத்தின் இயக்கத்துக்கு கொழுப்பு கேடு விளைவிக்கிறது என்பது மருத்துவத்தின் முடிவு.
ஹெச் ராஜா அவர்கள் தனது சுய புரிதலுக்காக வேண்டுமானால் ஒரு சோதனைக் கூடத்துக்கு ஆட்டுக்க்கறி, மாட்டுக்கறி, பன்றிக்கறி ஆகிய மூன்றிலும் 100 கிராம் வீதம் எடுத்துப் போய்க் கொடுத்து அவற்றின் கொழுப்பின் அடக்க விகிதத்தை சோதித்துப் பார்க்கட்டும் 100 கிராம் ஆட்டிறைச்சியில் 17 கிராம் கொழுப்பும் 100 கிராம் மாட்டு இறைச்சியில் 5 கிராம் கொழுப்பும் 100 கிராம் பன்றி இறைச்சியில் 50 கிராம் கொழுப்பும் உள்ளது என்கிற உண்மையை அவர் தெரிந்து கொள்வார். அதாவது பாதிக்குப் பாதி கொழுப்பு பன்றி இறைச்சியில் உள்ளது. இஸ்லாம் ஏன் பன்றி இறைச்சியைத் தடை செய்துள்ளது என்பது அப்போதாவது அவருக்குப் புரியுமா? .
அடுத்து ஹெச் ராஜா அவர்கள் செல்ல வேண்டிய இடம் ஒரு கால்நடை மருத்துவமனை. அங்கு போய் அங்குள்ள மருத்துவரிடம் கால்நடைகளின் உடற்கூறு அமைப்பைபற்றி அவர் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். வியர்வைச் சுரப்பிகள் என்பவை இறைவனால் மனித உடலில் அமைக்கப்பட்டுள்ள அதிசயங்களில் ஒன்று. இவை கால்நடைகளுக்கும் உள்ளன.
உடல் சூடாகும்போது தானாகவே வியர்வை சுரந்து வெளியாகி உடல் சூட்டை தணிக்கும் அத்துடன் உடலுக்குத் தேவையற்ற உப்பு முதலிய ஒவ்வாதவைகளும் நீராக வெளியேற்றப்படும். அதனால்தான் வியர்வை நாறுகிறது. . பன்றிக்கு இந்த வசதி கிடையாது. அதாவது மிருகங்களில் பன்றிக்கு வியர்வை சுரப்பி கிடையாது. மனிதர்களும் பன்றி அல்லாத மற்ற உயிரினங்களும் 40 டிகிரி சென்டிகிரேட் அதற்கு மேலும் உடல் சூட்டை தாங்கிக் கொள்ள இயலும் காரணம் வியர்வை சுரப்பிகள் சுரக்கும் வியர்வையின் நீர்த்தன்மையால் உடல் குளிர்ந்து விடுகிறது. . . ஆனால் பன்றிக்கு 29 டிகிரி செண்டிகிரேடுக்கு மேல் உடல் சூட்டைத் தாங்க இயலாது. அதனால்தான் சோறு கண்ட இடம் சொர்க்கம் என்பது போல் சேறு கண்ட இடங்களிலும் சாக்கடைகளிலும் அவை படுத்துப் புரளுகின்றன.
இதற்கு அடுத்து ஹெச் ராஜா அவர்கள் செல்லவேண்டிய இடம் மைக்ரோ பையாலஜி என்கிற நுண்கிருமிகள் பற்றிய ஆய்வுக்கூடம்.
பன்றியின் இறைச்சியில் மனிதனுக்குக் கேடு செய்கின்ற நாடாப் புழுக்கள் என்ற நுண்கிருமிகள் உள்ளன என்று 2007- ல் கொலம்பியா பல்கலைக் கழகம் கண்டு பிடித்து இருக்கிறது. எவ்வளவு அதிகபட்ச வெப்பத்தில் சூடாக்கி சமைத்தாலும் இந்தப் புழுக்கள் சாவதில்லை. பெருங்குடல் புற்று நோய் போன்ற வியாதிகள் ஏற்பட இந்த நாடாப்புழுக்களே காரணமாகின்றன.. மூளைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், மஞ்சள் காய்ச்சல், இதய வீக்கம் உள்ளிட்ட 66 நோய்கள் பன்றி இறைச்சியை உண்பதால் ஏற்படுவதை மருத்துவ உலகம் கண்டறிந்துள்ளது.
பன்றி உணவை தடை செய்துள்ள அரபு முதலிய இஸ்லாமிய நாடுகளில் இதய வீக்கம் என்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களை விட, பன்றியை உணவாகக் கொள்ளும் ஐரோப்பாவில் இதய வீக்கம் உள்ளவர்கள் ஐந்து மடங்கு அதிகமாக உள்ளனர். என்று ஆய்வுகள் கூறுகின்றன.
பன்றி இறைச்சியை உண்பதால் "டேனியா சோலியம்" Taenia Solium (Pork Tapeworm) என்றவொரு புழு, நம் உணவுக்குழலின் அடிப்பாகத்தில் அட்வான்ஸ் தராமல் குடியேறி, அதே பகுதியில் தன் முட்டைகளை (Ova) இடுகிறது. இந்த முட்டைகள் தான் மிகவும் ஆபத்தானவை. இவை மனிதனின் இரத்த குழாய்களில் பயணிப்பதால் அதன் மூலம் எல்லா உறுப்புகளையும் சென்றடைந்து விடுகின்றன. மனித உடல் உறுப்புகளில் எந்த பகுதிக்கு இந்த முட்டைகள் பரவினாலும் அங்கே ஒரு பாதிப்பை ஏற்படுத்தி விடும். இதயம், மூளை, கண், நுரையீரல் என எல்லா இடங்களிலும் இந்த டேனியா சோலியத்தின் முட்டைகள் கைவரிசையைக் காட்டுகின்றன.
டேனியா சோலியம் என்ற புழுவைப் போன்றே இன்னுமொரு புழு உயிரினம் "ட்ரிசுரா ட்ரிசுராஸிஸ்" (Trichura Tichurasis) பன்றி மாமிசத்தின் மூலம் தான் இதுவும் மனித உடலில் பரவுகிறது .டேனியா சோலியமும் இந்த ட்ரிசுராவும் ஒரே மாதிரியான குணமுள்ள உறவினர்கள்தான்.
ஆனால் இந்த புழுக்களின் முட்டைகள், பன்றி இறைச்சியை நன்கு சமைப்பதால் இறந்து விடுகின்றன என்பது எல்லோர் மத்தியிலும் இருக்கும் பொதுவான தவறான கருத்து. .அமெரிக்காவில் பலமுறை நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ட்ரிசுராஸிஸ்-ஆல் பாதிக்கப்பட்ட 24 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் 22 பேர் பன்றிகறியை கருகக் கருக நன்கு சமைத்து உண்டவர்கள்தான். ஆகவே, இந்த புழுக்களின் முட்டை நீரின் கொதிநிலையில் இறப்பதில்லை.
பன்றிக் காய்ச்சல் என்று கேள்விப்பட்டு இருக்கிறோம். எங்காவது மாட்டுக் காய்ச்சல் , ஆட்டுக் காய்ச்சல் என்று கேள்விப்பட்டு இருக்கிறோமா? "இன்ஃபுளூயன்ஸா ஏ எச்1 என்1' வைரஸ்தான் பன்றிக் காய்ச்சலை ஏற்படுத்துகிறது. இதுதான் முதலில் "ஸ்வைன் ஃப்ளூ' என்று அழைக்கப்பட்டது. இந்த வைரஸ் முதன்முதலில் மெக்ஸிகோவில் கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது இந்தியா உள்பட 76 நாடுகளுக்குப் பரவியுள்ளது. வட அமெரிக்காவில் உள்ள பன்றிகளில் காணப்படும் வைரஸ் , இந்த வைரஸுடன் ஒத்திருப்பதால் முதலில் "ஸ்வைன் ஃப்ளூ' என அழைக்கப்பட்டது.
இன்னொரு செய்தியும் இருக்கிறது ஆனால் அதை ஹெச் ராஜா அவர்கள் தேவையானால் பயன்படுத்தலாம். அர்ஜென்டினாவில் அதிபர் மாளிகையில் வர்த்தகர்களின் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் அந்நாட்டின் அதிபர் கலந்துகொண்டு பேசும்போது தற்போது பாலின உணர்வைத்தூண்டுவதற்காக வயாகரா என்கிற மாத்திரை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பன்றியின் இறைச்சி அதைவிடச் சிறந்தது என்று பேசினார். அதை தனது சொந்த அனுபவத்தில் தானும் தனது கணவரும் உணர்ந்து இருப்பதாகப் பேசினார் அந்தப் பெண் அதிபர். ஒரு வேளை பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியில் தனது கட்சியின் உறுப்பினர்கள் இன்புற்று வாழ அந்தக் கட்சியின் தேசிய செயலாளர் பன்றிக்கறி விருந்தை ஏற்பாடு செய்வதில் யாருக்கும் மாறுபட்ட கருத்தில்லை. மனைவியைப் பிரிந்து இருக்கும் பிரதமர், அதில் கலந்துகொண்டால்தான் கஷ்டம்.
பன்றிக்கறி இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டு இருக்கலாம். அந்தத்தடை மனித குலத்தின் நன்மையைக் கருதிய தடை. ஆனால் இவ்வாறு இஸ்லாம் தடை செய்த பன்றிக்கறியை மற்ற மத சகோதரர்கள் சாப்பிடக் கூடாது என்றோ பன்றிகளை வளர்க்கக் கூடாது என்றோ எந்த முஸ்லிமாவது எப்போதாவது எங்காவது போராட்டம் நடத்தி இருக்கிறானா? பன்றிக்கறி சாப்பிடுபவன் வீட்டிலோ அல்லது கடைகளிலோ வன்முறையைப் பயன்படுத்தி தடுத்திருக்கிறானா? முஸ்லிம்களுக்கு தடை செய்யப்பட்டதை விட்டு அவன் விலகி இருக்கிறான். அவ்வளவுதான். இவ்வாறிருக்க முஸ்லிம்களுக்கு எதிராக சொல்வதாக நினைத்துக் கொண்டு திரு ராஜா சாக்கடையில் புரளும் தனது சக நண்பர்களை அறுத்து சோறு சமைத்து விருந்து வைக்க விரும்பினால் அது அவரது இஷ்டம். குடல் நோய் ஏற்பட்டு, மாரடைப்பு ஏற்பட்டு, காமக்கொடூரனாகி வாழ வேண்டுமென்றால் பன்றிக்கறியை பட்டி தொட்டி எங்கும் பரப்பிவைத்து அவர்கள் சாப்பிடட்டும். எந்த முஸ்லிமும் இதற்காக, அவர்களைப் பார்த்து பரிதாபப்படுவதைதவிர வேறு ஒன்றும் செய்யப்போவதில்லை. சீண்டுகிறேன் என்று சீரழிய வழி தேடுபவர்களைப் பார்த்து சிரிப்பதைத் தவிர ஒன்றுமில்லை. அறிவியல் ரீதியாக அல்லாஹ் வகுத்துத் தந்த ஹராம் ஹலால் பேணி , மறை
வழி நடப்பதைவிட ஒரு முஸ்லிமுக்கு வேறு ஒன்றுமில்லை.
இப்ராஹிம் அன்சாரி

