Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in
Showing posts with label ஜமாஅத். Show all posts
Showing posts with label ஜமாஅத். Show all posts

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 059 11

அதிரைநிருபர் பதிப்பகம் | October 21, 2016 | , , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

(ஜமாஅத்) கூட்டுத் தொழுகையின்  சிறப்பு

''கூட்டுத் தொழுகை என்பது, தனித்துத் தொழுவதைவிட தகுதியால் 27 மடங்கு சிறந்ததாகும் என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1064)

''ஒருவர், மற்றவருடன் கூட்டாகத் தொழுவது, தன் வீட்டில், தன் கடையில் தனித்துத் தொழுவதை விட 25 மடங்கு கூடுதல் நன்மையாகும். ஒருவர் அழகிய முறையில் உளுச்செய்து, பின்பு தொழுகைக்காகவே தவிர வேறு எதற்குமின்றி பள்ளிவாசலுக்கு வந்தால், அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஒரு பதவி உயர்த்தப்படாமல் இருப்பதில்லை. அவர் தொழுது விட்டதும் தான் தொழுத இடத்தில், தன் உளூ முறியாமல் அவர் அமர்ந்திருந்தால், வானவர்கள் அவருக்காக,  ''இறைவா! இவரை மன்னிப்பாயாக! இறைவா! இவருக்கு அருள்புரிவாயாக!'' என்று கூறி பிரார்த்திருப்பார்கள். அவர் (மறு) தொழுகையை எதிர்பார்த்திருக்கும் வரை இது நீடிக்கும் என்று  நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1065)

''நபி(ஸல்) அவர்களிடம் ஒரு குருடர் வந்தார், ''இறைத்தூதர் அவர்களே!  பள்ளிவாசலுக்கு என்னை அழைத்து வருபவர் எவருமில்லை'' என்று கூறிய அவர், தன் வீட்டிலேயே தொழுது கொள்ள தனக்கு சலுகை அளிக்கும்படி நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார். உடனே அவருக்கு சலுகை அளித்தார்கள். அவர் திரும்பியபோது அவரை அழைத்த நபி(ஸல்) அவர்கள், ''தொழுகைக்காக பாங்கு சப்தத்தைக் கேட்கிறீரா?'' என்று கேட்டார்கள். ''ஆம்'' என்றார். ''அப்படியானால் (பள்ளிக்கு வருவது மூலம்) பதில் கூறுவீராக'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1066)

''என் உயிரை தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக, விறகு கொண்டு வர நான் கட்டளையிட்டுவிட்டு, பின்பு தொழுவதற்காக பாங்கு கூற கட்டளையிட்டு, அதன்பின் ஒருவரை மக்களுக்கு  இமாமத் செய்யச் சொல்லிவிட்டு (தொழுகைக்கு வராத) ஆண்களிடம் நான் சென்று அவர்களை அவர்களின் வீட்டோடு எரித்து விட விரும்புகிறேன்'' என்று நபி(ஸல்)கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)  அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1068)

''நாளை (மறுமையில்) அல்லாஹ்வை முஸ்லிமாக ஒருவன் சந்திக்க விரும்பினால் பாங்கு கூறி அழைக்கப்பட்டதும், ஐந்து நேரத் தொழுகைகளைப் பேணட்டும். நிச்சயமாக அல்லாஹ், உங்களின் நபிக்கு நேரான வழி முறைகளை கடமையாக்கி உள்ளான். நிச்சயமாக இவைகளும் நேரான வழிமுறைகளில் உள்ளவைகளே. தொழுகைக்கு வரப் பிந்தியவர் தன் வீட்டில் தொழுதவர் போல், உங்கள் வீடுகளிலேயே நீங்கள் தொழுதால், உங்கள் நபியின் வழிமுறையை விட்டவர்களாவீர்கள். உங்கள் நபியின் வழிமுறையை நீங்கள் விட்டுவிட்டால், நீங்கள் வழி தவறியவராவீர்கள்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். நயவஞ்சகத்தனம் தெளிவாக அறியப்பட்ட நயவஞ்சகரைத் தவிர  வேறு எவரும் தொழுகைக்கு வராமல் இருந்ததில்லை. (எங்கள் காலத்தில்) இரண்டு மனிதர்களின் தோள்களுக்கிடையே தொங்கியவராக கொண்டு வரப்பட்டு முதல் வரிசையில் நிறுத்தப்படுவார் (என்ற நிலை இருந்ததது). (அறிவிப்பவர்: இப்னுமஸ்ஊத் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1069)

''ஒரு கிராமத்தில், காட்டில் மூன்று (முஸ்லிம்) நபர்கள் இருந்து, அவர்களிடையே தொழுகை பேணப்படவில்லையானால், அவர்களை ஷைத்தான் சூழ்ந்து கொள்ளாமல் இருப்பதில்லை. எனவே, ஜமாஅத்தை பேணிக் கொள்ளுங்கள். ஏனெனில் பிரிந்து நிற்கும் ஆட்டைத்தான் ஓநாய் சாப்பிடும் என்று  நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூதர்தாஉ (ரலி) அவர்கள் (அபூதாவூது) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1070)

''ஜமாஅத்துடன் இஷாவை ஒருவர் தொழுதால், பாதி இரவு வரை அவர் வணங்கியவர் போலாவார். ஜமாஅத்துடன் சுப்ஹைத் தொழுதால் அவர் இரவு முழுதும் வணங்கியவர் போலாவார்''என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (அறிவிப்பவர்: உஸ்மான் இப்னு அஃபான் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1071)
     
''ஜமாஅத்தில் இஷாத் தொழுகைக்காக ஒருவர் கலந்து கொண்டால், அவருக்கு பாதி இரவு வரை வணங்கிய நன்மை கிடைக்கும். ஜமாஅத்தில் இஷா, சுப்ஹு ஆகிய தொழுகைகளைத் தொழுதால், அவருக்கு இரவு முழுதும் நின்று தொழுத நன்மை கிடைக்கும் என்று நபி(ஸல்) கூறினார்கள்.   (அறிவிப்பவர்: உஸ்மான் இப்னு அஃபான் (ரலி) அவர்கள் (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1071)

''இஷா மற்றும் சுப்ஹுத் தொழுகையின் மாண்பை மக்கள் அறிந்து கொண்டால், அவர்கள் தவழ்ந்தேனும் அந்த இரண்டு தொழுகைக்கும் வருவார்கள்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1072)

''நய வஞ்சகர்களுக்கு சுப்ஹு, இஷாத் தொழுகைகளை விட கடுமையானதாக வேறு எதுவும் இல்லை. அவ்விரண்டிலும் உள்ளதை (சிறப்பை) அவர்கள் அறிந்து கொண்டால், தவழ்ந்தேனும் (சுப்ஹு, இஷா) அவ்விரண்டுக்கும் வருவார்கள்''என்று  நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (அபூதாவூது) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1073)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...

மிக உயர்ந்த உமது இறைவனின் பெயரைத் துதிப்பீராக! (அல்குர்ஆன்: 87:1)

அவனே படைத்தான் ஒழுங்குற அமைத்தான். (அல்குர்ஆன்: 87:2)

அவனே நிர்ணயித்தான். வழி காட்டினான். (அல்குர்ஆன்: 87:3)

அவனே மேய்ச்சலுக்குரியதை வெளிப்படுத்தினான். (அல்குர்ஆன்: 87:4)

பின்னர் அவற்றை உலர்ந்த கூளங்களாக்கினான். (அல்குர்ஆன்: 87:5)

(முஹம்மதே) உமக்கு  ஓதிக் காட்டுவோம். நீர் மறக்க மாட்டீர். (அல்குர்ஆன்: 87:6)

அல்லாஹ் நாடியதைத் தவிர. அவன் பகிரங்கமானதையும், மறைவானதையும் அறிகிறான். (அல்குர்ஆன்: 87:7)

(முஹம்மதே) எளியதை உமக்கு மேலும் எளிதாக்குவோம். (அல்குர்ஆன்: 87:8)

அறிவுரை பயன் தருமானால் நீர் அறிவுரை கூறுவீராக! (அல்குர்ஆன்: 87:9)

(இறைவனை) அஞ்சுபவன் படிப்பினை பெறுவான். (அல்குர்ஆன்: 87:10)

துர்பாக்கியசாலி அதிலிருந்து விலகிக் கொள்வான். (அல்குர்ஆன்: 87:11)

அவனே பெரும் நெருப்பில் கருகுவான். (அல்குர்ஆன்: 87:12)

பின்னர் அதில் சாகவும் மாட்டான். வாழவும் மாட்டான். (அல்குர்ஆன்: 87:13)

தூய்மையாக வாழ்பவன் வெற்றி பெற்றான். (அல்குர்ஆன்: 87:14)

தனது இறைவனின் பெயரை நினைத்து தொழுதான். (அல்குர்ஆன்: 87:15)

ஆனால் நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையே தேர்வு செய்கிறீர்கள். (அல்குர்ஆன்: 87:16)

மறுமையே சிறந்ததும், நிலையானதுமாகும். (அல்குர்ஆன்: 87:17)

இது முந்தைய வேதங்களிலும், இப்ராஹீம், மூஸாவுடைய வேதங்களிலும் உள்ளது. (அல்குர்ஆன்: 87:18,19)

(அல்குர்ஆன்: 87:1-19 அல்அஃலா- மிக உயர்ந்தவன்)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...

தீர்ப்பு நாளை பொய்யெனக் கருதியவனைப் பார்த்தீரா? (அல்குர்ஆன்: 107:1)

அவனே அனாதையை விரட்டுகிறான். (அல்குர்ஆன்: 107:2)

ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டுவதில்லை. (அல்குர்ஆன்: 107:3)

தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்குக் கேடு தான். (அல்குர்ஆன்: 107:4,5)

அவர்கள் பிறருக்குக் காட்டுவதற்காகத் தொழுகின்றனர். (அல்குர்ஆன்: 107:6)

அற்பமானதையும் (கொடுக்க) மறுக்கின்றனர். (அல்குர்ஆன்: 107:7) (அல்குர்ஆன்: 107:1-7 அல் மாவூன்- அற்பப் பொருள்)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.

கடற்கரைத் தெரு தர்கா ட்ரஸ்டிகளுக்கும் கந்தூரிக் கமிட்டியினருக்கும் ADTயின் கடிதம் 14

அதிரைநிருபர் பதிப்பகம் | November 22, 2013 | , , , , , , ,

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்!

அஸ்ஸலாமு அலைக்கும்.

கடற்கரைத் தெரு ஜமாஅத், கடற்கரைத் தெரு தர்கா ட்ரஸ்டிகள் மற்றும் கந்தூரிக் கமிட்டியினரைச் சந்தித்து, கந்தூரியின் தீமைகளை விளக்கிக் கடிதங்கள் கொடுப்பது எனும் அதிரை தாருத் தவ்ஹீத் ஆலோசனை அமர்வுத் தீர்மானத்தின்படி, முதலாவதாக கடற்கரைத் தெரு ஜமாஅத்தார்களுக்கு 3.11.2013இல் ஒரு கடிதம் கொடுத்தோம்.

கடற்கரைத் தெரு தர்கா ட்ரஸ்ட்டின் முன்னாள் தலைவராக இருந்தவரான சகோ. அலாவுத்தீன் சென்ற ஆண்டு கபுருக்கு சந்தனம் பூசுவதற்குப் போய் உயிர் நீத்துவிட்டதால் அன்னாரின் சின்னவாப்பா சகோ. அஹ்மது ஹாஜா அவர்கள் தர்கா ட்ரஸ்டுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவரது உடல்நலக் குறைவால் தர்கா சம்பந்தப்பட்ட எதிலும் தலையிடாமல் இருந்து வருகிறார்.

எனவே, தர்கா ட்ரஸ்ட்டின் செயலாளரான சகோ. அபுல் ஹஸன் அவர்களை, அவருடைய 'ஹஸன் ஹார்ட்வேர்' கடையில் கடந்த 17.11.2013 ஞாயிற்றுக்கிழமை மாலை ஐந்து மணியளவில் நான், தாருத் தவ்ஹீதின் அமீர் அஹ்மது காக்கா, பொருளாளர் நிஜாமுத்தீன் ஆகிய மூவரும் சென்று சந்தித்து இணைப்பில் உள்ள கடிதத்தைக் கொடுத்தோம்.

சகோ. அபுல் ஹஸன் அவர்கள் ஏறத்தாழ இருபது நிமிடங்கள் பேசினார். அதில் நமக்கு அறிவுரைகளும் ஆலோசனைகளும் அடங்கியிருந்தன. அதிர்ச்சி அளிக்கும் தகவல்களும் இடம்பெற்றன. அவற்றின் சுருக்கம்:

* "நாகூரிலும் முத்துப்பேட்டையிலும் இன்னும் பல பெரிய ஊர்களிலும் கந்தூரிகள் நடக்கின்றன. இந்தச் சின்னக் கிராமத்தில் நடைபெறும் கந்தூரியை எடுக்கக்கூடாது என்று ஏன் சொல்கின்றீர்கள்? அங்கே போய் சொல்வதுதானே?" என்ற கேள்வியை முன்வைத்தபோது நான் குறுக்கிட்டு, "எல்லா ஊர்களிலும், நாகூரிலும் பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டுதானிருக்கிறது. நாகூர் பிரச்சாரத்திற்கு நானும் போயிருக்கிறேன்" என்று சொன்னேன்.

* "எனக்கு ஒன்றும் தெரியாது; உங்களுக்கும் ஒன்றும் தெரியாது. முன்னோர்கள் 570 வருசத்துக்கு முந்தி கந்தூரி எடுத்திருக்கிறார்கள். அது, அப்படியே தொடர்ந்து வருகிறது" என்று முன்னோர்களை உயர்த்திப் பேசிவிட்டு, "தர்கா என்பது இறைவனை வணங்கும் இடம்" என்ற அதிர்ச்சியான தகவலைச் சொன்னார். "அல்லாஹ்வை தர்காவில் தொழ முடியாதே. எப்படிச் சொல்கிறீர்கள் காக்கா?" என்று நான் கேட்டதற்கு, "அப்படித்தான் நான் படித்திருக்கிறேன். எனக்குப் படித்துத் தந்தவர் அப்படித்தான் சொல்லித் தந்தார்" என்று விளக்கினார். முன்னோர்களின் வழிவந்த உஸ்தாதின் மார்க்க அறிவே இப்படி என்றால் அந்தக் காலத்து முன்னோர்கள் மார்க்கத்தை எப்படி விளங்கி இருப்பார்கள் என்று எண்ணிப்பார்க்கவே முடியவில்லை. அல்லாஹ்வின் (2:170) வார்த்தைகள் எத்துணை சத்தியமானவை என்று வியக்காமலும் இருக்க முடியவில்லை.

* தர்காவுக்குச் சம்பந்தமில்லாத ஒரு பெண்ணின் வீட்டில் ஐந்து பவுன் நெக்லஸ் காணாமல் போய்விட்டதாம். "இன்னார் வீட்டு தர்வாஜாவில் அது தொங்கிக் கொண்டிருக்கிறது. போய் எடுத்துக்கொள்" என்று கனவில் வந்து சொன்னாராம் ஜொகராம்மா. "கனவு கண்ட பெண், ஐந்து பவுன் நகையையும் விற்று, கபுர் கட்டினார். சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் குடும்பம். இந்தக் காலத்தில் ஐந்து பவுன் என்ன விலை? அதை விற்று அவர் கபுர் கட்டினால் உங்களுக்கென்ன?" என்ற கேள்வியை வைத்தார். உண்மைதான். அவருடைய கேள்வியில், "ஆலிம்கள் பெருத்த ஊர்; ஆறு குத்பா நடக்கும் ஊர். யாருமே வாய் திறந்து பேசாமல் இருக்கும்போது நீங்கள் மட்டும் குதிப்பது ஏன்?" எனும் உப கேள்விகள் பொதிந்திருந்தன. "கழிப்பிடத்தில் முளைக்கும் திடீர் கப்ரு என்று நோட்டீஸ் போட்டீர்களே என்ன நடந்தது? நோட்டீஸைப் படித்துவிட்டு, நீங்கள் கொடுத்த விளம்பரத்தால் நிறைய பேர் வர ஆரம்பித்துவிட்டார்கள்" என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

* கந்தூரியில் நடைபெறும் குத்துப்பாட்டு, கச்சேரிகளில் தமக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவை கந்தூரி கமிட்டியாரால் செய்யப்படுபவை என்றும் தெளிவாக்கினார். "கந்தூரி கமிட்டியார் யார் காக்கா?" என்று நான் கேட்டதற்கு, "இதுவரைக்கும் யாரெனத் தெரியவில்லை. என்னிடம் வந்து பர்மிஷன் கேட்பார்கள். நான் சரி என்பேன். அவ்வளவுதான்" என்று கூறினார்.

* "ஏழைச் சிறுவர்களுக்கு கத்னா செய்து வைக்க முன்வாருங்கள். ஏழைக் குமருகளுக்குக் கல்யாணம் செய்து வையுங்கள். அதை விட்டுவிட்டு கந்தூரியை நிறுத்து என்றால் நின்றுவிடுமா?" என்று ஆலோசனை வழங்கினார்.

* பேச்சு வாக்கில், "நாங்கள் ஹாஷிமிகள்" என்பதாக எனக்குப் புதுத் தகவல் ஒன்றையும் தெரிவித்தார். அந்த நேரத்தில் ஹாஷிமிகளான அபூஜஹ்லும் அபூதாலிபும் என் நினைவில் வந்தனர். இந்த ஹாஷிமி விபரத்தை 'ஸில்ஸிலா'வைப் படித்துப் பார்த்து உறுதி செய்துகொள்ள வேண்டும், இன்ஷா அல்லாஹ். ஏனென்றால், ஹாஷிமிகளுக்கு தானமோ தர்மமோ கொடுப்பது முஸ்லிம்கள் மீது ஹராமாக்கப்பட்டது. வாங்குவதும் ஹாஷிமிகளுக்கு ஹராமாக்கப்பட்டதாகும்.

மக்ரிபுக்கு நேரமாகிவிட்டதால் விடைபெற்றோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்டவேண்டும்.

தொடர்புடைய சுட்டிகள் : -

ஜமீல் M.ஸாலிஹ் - SEC-ADT






உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு