Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நம்ம ஊர் 22

அதிரைநிருபர் | January 31, 2011 | , ,


நஞ்சையும், புஞ்சையும் கொஞ்சி விளையாடிய ஊர்.

நல்லவர்கள், பெரியவர்கள் பலர் அதிகம் வாழ்ந்த‌‌ ஊர்.

சொந்த,பந்த உறவு முறை கூறி உள்ளத்தில் மகிழ்ந்த ஊர்.

பெரும் தேவைகள் இன்றி வரும் வருமானத்தில் வாழ்ந்து காட்டிய ஊர்.

முற்போக்குச்சிந்தனையுடன் சில மூடப்பழக்க வழக்கங்களும் புழக்கத்தில் இருந்து வந்த‌ ஊர்.

சொந்தங்களை பிரிந்து வருடங்கள் பல வெளிநாட்டில் வேண்டா வெறுப்பாய் வாழ்ந்து காட்டிய‌ ஊர்.

பெரும்பாலும் வாலிபத்தை வெளிநாட்டிற்கே சொந்தமாக்கி நொந்து போன‌ கால‌த்தில் வ‌ந்து சேரும் ஊர்.

ப‌டிப்ப‌றிவு குறைவே ஆனாலும் இப்பாருல‌கை சுற்றிப்பார்க்க‌ விரும்பும் ஊர்.

தேவையின்றி வ‌ரும் தெரு ச‌ண்டைக‌ளை அவ்வ‌ப்பொழுது க‌ண்ட‌ ஊர்.

ப‌ல‌ க‌ட்சிக்காக‌ கொடி பிடித்து அத‌ன் மூல‌ம் எதையுமே சாதிக்க‌ இய‌லாமல் தளர்ந்து போன‌ ஊர்.

மின்வெட்டுக்க‌ளால் கின்ன‌ஸ் சாத‌னை தாண்டி சாத‌னை ப‌டைத்த‌ ஊர்.


ஒரு இறையில்ல‌ம் கட்டி முடிக்க‌‌ ப‌ல‌ அல்லல்களை சந்திக்கும் ஊர்.

அந்நிய‌ச்செலாவ‌ணியை நாடு ந‌ம‌க்கு என்ன‌ செய்த‌து என்று கேட்காம‌ல் நம் நாட்டிற்கு அள்ளித்த‌ரும் ஊர்.

அப்பாவிக‌ள் அதிக‌ம் வாழும் ஊர்.

க‌ல்விமான்க‌ளும், கொடை வ‌ள்ள‌ல்க‌ளும் ஒரு கால‌த்தில் க‌ம்பீர‌மாக‌ வாழ்ந்து ம‌றைந்த‌ ஊர்.

ம‌ண்ணில் நீர் வ‌ற்றாம‌ல் வ‌ருட‌ம் முழுவ‌தும் வாரி வ‌ழ‌ங்கிய‌ ஊர்.

ஊர் விரிந்து சில சமூகவிரோதிகளின் உள்ள‌ம் சுருங்கிய‌ ஊர்.

தேர்த‌ல் கால‌ங்க‌ளில் ஆசையுடன் திரும்பிப்பார்க்க‌ப்ப‌டும் ஊர்.

தேர்த‌ல் முடிந்த‌தும் அர‌சிய‌ல்வாதிக‌ளால் த‌லாக் சொல்ல‌ப்ப‌டும் ஊர்.

சுத்தம் செய்யப்படாத க‌ழிவு நீர் சாக்கடைக‌ளால் கொசுக்க‌ள் குதூக‌ல‌ம் காணும் ஊர்.

ஊர் ந‌ல‌னில் ஒரு சில‌ரே அக்க‌ரை காட்டும் ஊர்.


இன்ஷா அல்லாஹ் தொட‌ரும்..


--மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

பொறு! 35

அதிரைநிருபர் | January 30, 2011 | ,

அடுத்த உதயம் வரை
அஸ்தமன இருளைப் பொறு,
விருட்சம் விளையும் வரை
விழுந்த விதையைப் பொறு!

பூக்கும் காலம் வரை
பூங்கா மொட்டுகள் பொறு,
பூப்பூத்த காலங்களில்
பிள்ளைகளின் பிழைகள் பொறு!

கைகளில் கனியும் வரை
கிளையில் காயைப் பொறு,
கண்ணுக்குள் உனைக் காத்த
வயோதிகத் தாயைப் பொறு!

மரணத்தின் அருகில் வரை
மூத்தவர் முனகல் பொறு,
இறுதிநாள் இருக்கும் வரை
இதயத்தின் இச்சை பொறு!

திறக்காத கதவில்லை
திறக்கும் வரை திசைகள் பொறு,
திறக்க நீயும் முயன்றுவிட்டால்
திக்குகள் துளங்கும் பொறு!

பச்சைக்கு மாறும் வரை
'சிக்னலில்' சிகப்பைப் பொறு,
உனக்கான நேரம் வரை
உலகிலே காலம் பொறு!

கொள்கையில் நிலைக்கும் வரை
கொடிய உன் கோபம் பொறு,
தொட்டது துளங்கும் வரை
சுட்டுவர் சொற்கள் பொறு!

உண்மைகள் ஜெயிக்கும் வரை
உருப்படா பொய்யை பொறு,
நண்மைகள் நிலைக்கும் வரை
தீமையின் தீங்கைப் பொறு!

உழைக்கும் உடல் இருக்கும் வரை
தோளில் உன் சுமையைப் பொறு,
பிழைக்க வழி கிடைக்கும் வரை
படைத்தவனின் சோதனை பொறு!

நினைத்ததை முடிக்கும் வரை
நகைப்பவர் நக்கல் பொறு,
காரியம் கைகூடி
கயமையும் அழியும் பொறு!

பொறு!
புயலின் பொறுமையே
பூந்தென்றல்,
பூகம்பத்தின் பொறுமையே
பூமித்தாய்,
தீயின் பொறுமையே
தீபம்,
மனிதா உன்
மனதின் பொறுமையே
மனிதம்!

-Sabeer

மற்றும் ஓர் வாய்ப்பு ! 8

அதிரைநிருபர் பதிப்பகம் | January 29, 2011 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

அன்பின் அதிரைப்பட்டினத்து மாணவச் சமுதாயமே ! உங்களுக்கென்று ஒர் விழா எடுத்தோம் அதில் உங்களில் சிலர்தான் அதன் பலனைக் கண்டீர்கள் ஆனால் மீதமிருந்த பெரும்பாலான மாணவர்கள் உங்களின் பொறுப்புக்களை தட்டிக் கழித்து விட்டு அன்றைய சுயநலனுக்காக தேவைகளை ஏற்படுத்திக் கொண்டு ஒளிந்து கொண்டீர்களா ? அல்லது ஒதுங்கிக் கொண்டீர்களா ? சிந்தித்துப் பாருங்கள் !

படித்தவர்களும் பண்பாளர்களும் அவரவர் அனுபவங்களையும் அறிவுரைகளையும் உங்களுக்காக வழங்கிடத்தானே ஊரே கூடி ஒர் கூட்டு முயற்சியாக உங்களை ஓர் இடத்திற்கு வர அழைத்தோம் ஏன் இந்த மெத்தனம் இதனால் இவ்விழா நடத்தியவர்களுக்கு இழப்புகள் ஏதுமில்லை காரணம் அவர்கள் ஏற்கனவே எடுத்த முடிவுடன் தான் உங்களைக் களம் காண அழைத்தார்கள் இன்னும் அழைப்பார்கள், ஆனால் அந்த இரண்டு நாட்களின் அற்புதமான நேரத்தில் ஏற்பட்ட நிகழ்வுகளின் நிஜத்தினை அனுபவிக்க தவறிவிட்டீர்களே !.


இதுவரை நடந்தவை நடந்ததாக இருந்திடட்டும், இழந்த அந்த இரண்டு நாட்களின் பலன்களை கண்டிட உங்களுக்கும் இன்னும் ஒரு வாய்ப்பு நடைபெற்ற கல்வி விழிப்புணர்வு மாநாட்டு நிகழ்ச்சிகளின் காணொளித் தொகுப்பை குருந்தகடாக வெளியிட இருக்கிறோம் இதனைப் பெற்று என்னதான் அங்கே பேசினார்கள் எதைத்தான் எடுத்து வைத்தார்கள், யாருக்காக இவர்கள் களம் இறங்கி இருக்கிறார்கள் என்பதன் உண்மை நிலவரத்தை கண்டறியுங்கள், இந்தத் தொகுப்புகளின் குருந்தகடைப் (compact disc) பெற்றுக் கொள்ள adiraieducationalmission@gmail.com அல்லது adirainirubar@gmail.com  என்ற முகவரிகளில் ஏதாவது ஒன்றுடன் தொடர்பு கொண்டு அதனைப் பெற்றுக்கொள்ளுங்கள். அதோடு அவர்களால் தரப்படும் கருத்துக் கணிப்பு படிவத்தினையும் முறையாக பூர்த்தி செய்து எங்கே பெற்றுக் கொண்டீர்களோ அங்கே திருப்பிக் கொடுத்திடுங்கள் அல்லது எங்களது மின் அஞ்சலுக்கு அனுப்பித் தாருங்கள்.

இதுமட்டுல்ல நாங்கள் எடுத்த பணி இன்னும் இருக்கிறது இது தொடரத்தான் செய்யும் அதுவும் உங்களைப் போன்ற மாண்வச் சமுதாயத்துடன் கைகோர்த்து அதிரைப்பட்டினத்து நம் சமுதாயத்தின் மேம்பாட்டிற்கும், நலனுக்காகவும் இன்ஷா அல்லாஹ்.. !

வரும் காலங்களில் தொடர் நிகழ்வுகளாக உங்களுக்கும் ஊருக்கும் பலன் தரும் படிப்புகளைப் பற்றியும் அதற்கான வாய்ப்புகளைப் பற்றியும், ஆட்சி, அதிகாரம், நிர்வாகத்தில் கோலோச்சிட என்னவெல்லாம் நாம் செய்திட வேண்டும் என்ற வழிகாட்டல்கள் தொடரும் இதற்கான ஆதரவும் உங்களின் ஆர்வமான பங்களிப்பும் இனிவரும் நம் வீட்டுச் சகோதரர்களுக்கு வழிகாட்டியாகவும், நிம்மதியான வாழ்வாதாரமாகவும் அமையும் இன்ஷா அல்லாஹ்..

அதிரை கல்வி சேவையகம் adirai educational mission - AEM, இது நிதி நிறுவனமல்ல ஆனால் அதிரைப்பட்டினத்து சமுதாயத்தின் நலனுக்காக உயர் கல்விக்கும், அரசு வேலைக்கான ஆதரவான கல்விகளுக்காக நிதியும், நீதியுடனும் அல்லாஹ்வுக்கு அஞ்சியவர்களாகபலன்களின் நதிகளில் நீந்திட வழிகாட்டிடுவோம் இயன்றவரை கற்றுக் கொடுப்போம், அரசு பணிகளுக்கும் உயர் பதவிகளுக்கும் உங்களை உயர்த்திட உங்கள் யாவரின் ஆதரவும், ஆர்வமும், முயற்சியும், தெளிவான குறிக்கோலுடன் வாருங்கள் இந்த வாய்ப்பை பயண்படுத்திக் கொள்ளுங்கள் பயனைந்திடுங்கள் !

- அதிரைநிருபர் குழு

உலகம் 2010 - தொடர் 2 6

அதிரைநிருபர் | January 29, 2011 | ,

மனித நேயத்தின் வலிமையை உலகுக்கு உணர்த்தியது சிலியில் நடந்த சுரங்க விபத்து. ஆகஸ்ட் 5-ஆம் தேதி,2010. 700 மீட்டர் ஆழமுள்ள தாமிரக் கனிமச் சுரங்கத்தில் மும்முரமான பணியில் 33 பேர். திடீரென்று முழுவதுமாக மூடிக் கொண்டது சுரங்கம். அனைவரும் இக்கட்டான சூழலில். அவர்களை மீட்கப் போராடியது சிலி அரசாங்கம். ஒன்றல்ல, இரண்டல்ல. 68 நாட்கள் நீடித்தது அந்தப் போராட்டம்.



சிலி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் அற்புதமானவை. சிறுதுளை வழியாக சுரங்கத்துள் இருந்தவர்களுக்கு குடிநீர், திரவ உணவு, மருந்து மாத்திரைகள், உறவுகளின் அன்புக் கடிதங்கள், மனம் தளராமல் இருக்கும் உளவியல் ஆலோசனைகள் என எல்லாவற்றையும் உள்ளே அனுப்பி வைத்தது. மறுபுறம் முடுக்கி விடப்பட்டன மீட்புப்பணிகள். ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெரிய அளவிலான ஆழ்துளைகள் போடப்பட்டன. அவற்றின் வழியே இவர்களை வெளியே கொண்டுவரத் தனித்துவமான குழல்உறைகள் செய்தனர். மிகப்பெரும் சவாலை எதிர்கொண்டு சாதித்தது சிலி அரசு. தொழிலாளர்கள் மீது கரிசனம் கொண்டு சிலி அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் மெய் சிலிர்க்க வைத்தன.

*****

நியூசிலாந்தில் நடந்த சுரங்க வெடிவிபத்தில் 29 தொழிலாளர்கள் பலியாகினர். கிரேமவுத் எனுமிடத்தில் உள்ள பைக் ஆற்றின் அருகே நிலக்கரிச் சுரங்கம் உள்ளது. அங்கு தான் அந்த விபத்து நடந்தது. உதவிக் குழுவினர் விரைந்து சென்றும் எவரையும் உயிருடன் மீட்க முடியவில்லை.


விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டது அரசாங்கம். விபத்தில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு தேசிய துக்க தினம் அறிவிக்கப்பட்டது. நியூஸிலாந்தின் தேசிய கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டன.பாடசாலைகள், அரசு அலுவலகங்கள் இயங்கவில்லை.

*****

ஐஸ்லந்தில் உள்ளது எயா-ஃபியட்லா-யோக்குட் பனிமலை. திடீரென்று வெடித்துச் சிதறியது அதன் அடியில் உள்ள எரிமலை. அனல் தெறிக்கும் தீப்பிழம்பு எரிமலையிலிருந்து வெளி வந்தது. அதிலிருந்து கிளம்பிய புகை மற்றும் சாம்பல் காற்று மண்டலத்தை அடைத்தது. வானத்தில் 6 ஆயிரம் மீட்டர் முதல் 11 ஆயிரம் மீட்டர் உயரத்திற்குப் பரவியது சாம்பல். எரிமலை வெடிப்பால் கிளம்பிய 'லாவா' எரிமலைக் குழம்பு பனிமலையின் கட்டிகளை தண்ணீராக உருகி ஓடச் செய்தது.


சாம்பல் புகை காரணமாக ஐரோப்பாவிலிருந்து புறப்படும், அந்த வட்டாரத்துக்குச் செல்லும் விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டன. ஐரோ‌ப்‌பா‌வி‌ல் ம‌ட்டு‌மல்ல அமெ‌ரி‌க்கா உ‌ள்‌ளி‌ட்ட நாடுக‌ளிலு‌ம் ‌விமானச் சேவை ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டது. உலகம் முழுவதும் விமானப் போக்குவரத்துக்குக் கடும் பாதிப்பு. ஏராளமான பயணிகள் விமான நிலையங்களிலேயே தங்க நேரிட்டது. இயல்பு நிலை திரும்ப ஒரு வாரமாகியது. இருப்பினும் விமான நிறுவனங்களுக்கு மில்லியன் கணக்கான டாலர் இழப்பு.

*****

இந்தோனேசியாவுக்கு இவ்வாண்டு சோதனைக் காலம். ஆழிப் பேரலையின் ஊழித் தாண்டவம் ஒருபுறம். மெராப்பி எரிமலையின் நெருப்புச் சீற்றம் மறுபுறம். வேதனையின் பிடியில் தவித்துப் போயினர் இந்தோனேசிய மக்கள். அக்டோபரில் இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ராவை நில நடுக்கம் புரட்டிப் போட்டது. அதிர்வின் அளவு ரிக்டர் அளவுகோலில் ஏழு புள்ளி ஏழு. தொடர்ந்து எழுந்தது ஆழிப் பேரலை. அது சுருட்டிக் கொண்டு போன உயிர்களின் எண்ணிக்கை 600 க்கும் அதிகம். கடலுக்கருகே இருந்த பத்துக் கிராமங்கள் காணாமல் போயின. அலையின் ஆதிக்கம் தணிந்த பிறகு சிலர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

ஆழிப் பேரலையில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக போராடியது இந்தோனேசிய அரசாங்கம். பட்டகாலிலேயே படுவது போல வந்தது இன்னொரு சோதனை.


ஜோக் ஜாக்கர்தாவின் மெராப்பி எரிமலை தீக் கங்குகளைக் கக்கத் தொடங்கியது. அதன் தாக்கத்தால் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 70,000 க்கும் அதிகமான மக்கள் அந்தப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். நவம்பர் 5 ஆம் தேதி மீண்டும் சீற்றத்துடன் வெடித்தது மெராப்பி. அதிலிருந்து கிளம்பிய வெப்பப் புகை, சாம்பல், தீக்கனல் ஆகியன சுற்று வட்டாரத்தில் பெரும் சேதத்தை உண்டாக்கின.

எரிமலையின் சீற்றம் உச்சமடைந்த வேளையில் இந்தோனேசியாவுக்கான விமானப் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. ஜக்கர்தா, ஜோக் ஜக்கர்தா விமான நிலையச் சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டன. எரிமலையின் சீற்றம் தணிந்த பிறகு விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

*****

ஹைத்தியில் நிகழ்ந்த பூகம்பம் உலகத்தை உலுக்கியது. ஹைத்தியில் அடுத்தது சோம்பல் முறித்து பூமி. ரிக்டர் அளவுகோலில் ஆறு முதல் எட்டு புள்ளிகள் வரை பதிவாகின அதிர்வுகள்.


போர்டா பிரின்ஸ் நகரம் மயான பூமியாகக் காட்சியளித்தது. 200 ஆயிரத்துக்கும் அதிமானோரைப் பலி கொண்டது நிலநடுக்கம். காயமடைந்தோர் சிகிச்சைக்காக மருத்துவமனையின் வெளியே காத்துக் கிடந்தனர். போதுமான மருத்துவர்கள் இல்லாததால் மக்கள் தவித்துப் போயினர். ஆக மோசமான பேரழிவு என்று வரையறுத்தது உலக நிறுவனம். உலகின் பல்வேறு நாடுகளும் ஹைத்திக்கு உதவிக்கரம் நீட்டின.

*****


கம்போடியாவின் பாரம்பர்ய தண்ணீர்த் திருவிழா சோகமயமானது இவ்வாண்டு. தலைநகர் புநோம்பென்னில் நடந்தது அந்தத் திருவிழா. மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர் மக்கள். திடீரென்று கிளம்பியது ஒரு பீதி. விழா நடந்த இடத்திலுள்ள ஆற்றுப் பாலத்தில் மின்கசிவு என்பது செய்தி. அலறியடித்துக் கொண்டு ஓடியது கூட்டம். ஒவ்வொருவரும் முந்திச் செல்லும் முனைப்பில் கடும் நெருக்கடி. விளைவு 45 உயிர்கள் பலி. திருவிழா நடந்த ஆற்றுப் படுகை மயானக் கரையானது. கம்போடிய வரலாற்றில் நடந்த மிகப் பெரிய சோக நிகழ்வாக இதைப் பதிந்து கொண்டது காலம்.

*****

எப்போதும் மகிழ்ச்சியளிக்கக் கூடியது பயணம். ஆனால் மங்களூர் விமானத்தில் வந்தவர்களுக்கு அதுவே இறுதிப் பயணம். துபாயில் இருந்து வந்தது அந்த ஏர் இந்தியா விமானம். மங்களூர் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது விபத்து. ஓடுபாதையை விட்டு விலகி அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்தது விமானம். பலியானவர்களின் எண்ணிக்கை 158. எட்டுப் பேர் உயிர் தப்பினர்.


விமான நிலையத்தில் இருந்தும், மங்களூரில் இருந்தும் மீட்புப் படையினர் வருவதற்குள்ளாகவே பலர் உயிரிழந்தனர். பல உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்குக் கருகிவிட்டன. விமானி தொடர்ந்து பயணத்தில் இருந்ததால் அவருக்குப் போதிய ஓய்வு கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது. மங்களூரில் விமானம் தரையிறங்கிய போது அவர் ஓடுபாதையைக் கவனிக்கத் தவறி விட்டார். கறுப்புப் பெட்டியில் பதிவாகியிருந்த தகவல்களைக் கொண்டு அந்த விவரம் சேகரிக்கப்பட்டது.

*****

விக்கி லீக்ஸ் - இந்த ஒற்றைச் சொல் உலக நாடுகளை பதைபதைக்க வைத்துள்ளது. விக்கி லீக்ஸ் வெளியிடும் ஒரு செய்தி சரியா? பிழையா? என்று ஆராய்வதற்குள் அடுத்த சய்தி வந்து விழுகிறது. வல்லரசுகள் மட்டுமல்ல... மிகச் சிறிய நாடுகள் கூட கலங்கிப் போயிருக்கின்றன. ஆதாரப் பூர்வமான ரகசியச் செய்திகள் எங்கிருந்து கிடைக்கின்றன என்பது இமாலயக் கேள்வி.

முதலில் அமெரிக்க அரசின் பல ரகசிய ஆவணங்களை இணையம் வழியே கசியவிட்டது விக்கி லீக்ஸ். அதைத் தொடர்ந்து படிப்படியாக பல நாடுகளில் இரகசியத் தகவல் பரிமாற்றங்கள் வெளிவரத் தொடங்கின. இதனால் உலக நாடுகளுக்கிடையிலான உறவில் சலசலப்பு.

‘விக்கி லீக்ஸ்’ லாப நோக்கமற்ற ஒரு நிறுவனம். முக்கியமான செய்திகளையும், தகவல்களையும் சாதாரண மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் நோக்கில் அவ்விணையத்தளம் உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. அனைத்துலக நாடுகள் கம்பி வழிச் சேவை மூலம் ஆவணங்களைப் பரிமாறிக் கொள்வது வழக்கம். அப்படி ரகசியமாகப் பாதுகாக்கப்பட்ட ஆவணங்கள் பல படிப்படியாக இணையத்தில் வெளியிடப்படுகின்றன. அதில் முக்கிய அம்சம், தகவல்களும், செய்திகளும் ஆதாரத்துக்குரிய மூல ஆவணத்துடன் வெளியிடப்பட்டள்ளன.


ஜுலியன் அஸாஞ்ச் - விக்கி லீக்ஸ் இணையத் தளத்தின் நிறுவனர். அவரே அந்தத் தளத்தின் முதன்மை ஆசிரியர். சுவீடனில் தொடுக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு காரணமாக ஜுலியன் அஸான்ஞ்ச் அண்மையில் லண்டனில் கைது செய்யப்பட்டார். விசாரணைக்குப் பிறகு அவர் கடுமையான நிபந்தனைகளுடன் 312 ஆயிரம் டாலர் பிணையில் விடுவிக்கப்பட்டார். நீதிமன்றத்துக்கு வெளியே பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஜுலியன் அஸான்ஜ் ஆவணங்களை வெளியிடும் தம் பணி தொடரும் என்றார்.



விக்கி லீக்ஸ் இணையத் தளத்தை முடக்குவதில் கடும் முனைப்புக் காட்டியது அமெரிக்கா. தம் மீது குற்றம்சாட்ட அத்தனை ஆயத்தங்களையும் அமெரிக்கா செய்து வருவதாகச் சொன்னார் ஜுலியன் அஸான்ஜ். பாலியல் குற்றச்சாட்டுத் தொடர்பாக அவரை தன்னிடம் ஒப்படைக்கக் கோருகிறது ஸ்வீடன். இருப்பினும் இந்த விவகாரத்தில் ஒரு முடிவு வரவில்லை. விக்கி லீக்ஸ் எந்த நிமிடத்தில் யாரைப் பற்றிய செய்தியை வெளியிடும் என்பது புரியாத புதிராகத் தொடர்கிறது.

****

அமைதிக்காகப் பாடுபடும் நபர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் ஆண்டு தோறும் நோபெல் அமைதி பரிசு வழங்கப்படுகிறது. இவ்வாண்டு சீனாவச் சேர்ந்த கலை, இலக்கிய விமர்சகர் திரு. லியூ சியாவ் போவுக்கு (Liu Xiaobo) அந்தப் பரிசு அறிவிக்கப்பட்டது.
எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு அமைதிக்கான நோபெல் பரிசுக்காக 237 நியமனங்கள் குவிந்தன. அதில் திரு. லியூ சியாவ் போவின் பெயரும் இருந்தது. அந்தத் தகவல் வெளியானவுடனேயே அவருக்கு அமைதிக்கான நோபெல் பரிசு வழங்கப்படக் கூடாது என்று நார்வேயிடம் கேட்டுக் கொண்டது சீனா. இருப்பினும் திரு.லியூ சியாவ் போவுக்கு நோபெல் பரிசு வழங்கப்பட்டிருப்பதால் சீற்றமடைந்தது சீனா.
மனித உரிமைகள், கருத்துச் சுதந்திரம், நேர்மையான தேர்தல் போன்ற கோரிக்கைகள் அடங்கிய உரிமை ஆவணத்தை, (சார்ட்டர் 08) சாசனம் என்ற பெயரில் சக ஆதரவாளர்களுடன் இணைந்து உருவாக்கினார் திரு. லியூ.

சீன அரசியல், மக்களாட்சி முறைக்கு மாறுவதை இனியும் தள்ளிப்போட முடியாது என்பது சாசனத்தின் முக்கியச் சாராம்சம். அந்த உரிமைப் பிரகடனத்தில் ஆயிரக்கணக்கான சீனர்கள் கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்தனர். இந்தச் செய்கையை நேரடி மோதலாக எடுத்துக்கொண்டது சீன அரசாங்கம்.

2008 டிசம்பரில் அந்தப் பிரகடனம் வெளியிடப்பட இருந்த நிலையில் திரு. லியூ கைது செய்யப்பட்டார். இந்த சாசனத்தையும் (சார்ட்டரையும்) வேறு புரட்சிகர அரசியல் கட்டுரைகளையும் எழுதி, ஆட்சிக் கவிழ்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார் என்பது திரு.லியூ மீதான முக்கியக் குற்றச்சாட்டு. 2009 டிசம்பர் 25ல் பெய்ஜிங் நீதிமன்றம் அவருக்கு 11 ஆண்டுச் சிறைத் தண்டனை விதித்தது. அமைதிக்காக வழங்கப்படும் நோபெல் பரிசு சர்ச்சை அலைகளைக் கிளப்பியது வேடிக்கையான வினோதம்.

****



Currency War என்னும் நாணயப் போர் பற்றி இவ்வாண்டு அதிக விவாதம். உலகின் மற்ற நாடுகளின் நாணயத்துக்கும், சீன நாணயத்துக்கும் இடையே ஒரு வேறுபாடு உண்டு. சீன நாணயத்தின் மதிப்பை நிர்ணயிப்பது அந்நாட்டின் அரசாங்கம். மற்ற நாடுகளில் அப்படியல்ல. நாணயத்தின் மதிப்பை நிர்ணயிக்கும் சீனாவின் போக்கு தங்களுக்குப் பாதகம் என்றது அமெரிக்கா. அதை ஒப்புக் கொள்ள மறுத்தது சீனா. உலக நாடுகள் நாணயப் போர் பற்றிக் கவலைப் பட்டுக் கொண்டிருந்த நிலையில் G - 20 நாடுகளின் அமைச்சர் நிலைக் கூட்டம் நடந்தது. நாணயப் போர் பற்றிய பீதியைப் போக்க சில முடிவுகள் அங்கே முன்மொழியப்பட்டன. ஆனாலும் சர்ச்சைகள் ஓயவில்லை.

****

தொடரும்...

-- ஸதக்கதுல்லாஹ்

வயசு 25

ZAKIR HUSSAIN | January 28, 2011 | , ,

நோய்கள் மக்களை காவு வாங்குவதை விட மெடிக்கல்பில்கள் அதிகம் காவு வாங்குவதாக ஊரெங்கும் பேச்சு.ஆனா காலா காலமா அதுக்காக என்ன செய்ரோம்னா துப்பரவா ஒன்னும் இல்லீங்க.ஒரே குடும்பத்திலெ இருக்கிற ஏற்றதாழ்வு ஏழையா இருக்கிற நோயாளியோட பில்லை கட்டுவதற்கு மனசு வராமெ பணவசதி உள்ளவர்கள் "ஜெயிக்கிர குதிரையிலெதான் பணம் கட்டுவேன்ற மாதிரி "அவருக்குதான் வயசாயிடுச்சில அப்புரம் என்ன" என்று ஒதுங்கிக்க்கொள்ளும்போது அந்த ஏழை நோயாளியின் மனசு என்ன பாடுபடும். எழை சொல்தான் அம்பலம் ஏறாதே என்று மெளனிச்சுதான் போயிடுதில்லெ.

இத்தனைக்கும் அந்த நோயாளியும் தனது இளமையில் குடும்பத்துக்கு உழைச்சவர்தான்....எங்கே மதிப்பு இருக்கு. மதிப்பு சம்பாதிக்கிற வரைக்குதான்ற "முக்கிய விதி' தெரியாமலேயே வயசான பெறவு தெரிஞ்சு வருத்தப்படறவங்கதான் இப்போ பெருவாதியா இருக்காங்க.

சென்டிமென்ட்ல காசையும் இளமையும் தொழச்சிட்டு வயாசான பொரவு தெரிஞ்சு ....ச்சே என்னடா பெரிய தப்புபண்ணிட்டோமேனு தேம்பி மனசுக்குள் அழும்போது 'ஒன்னும் கவலைப்படாதே" வாழ்க்கைனா எல்லாம் சேர்ந்ததுதான்னு சொல்ல பக்கத்திலெ ஒருத்தரும் இல்லாத மாதிரி பொட்டவெளியில தனியா நிக்கிறாப்ல ஒரு தாய் மடி கேட்கும்ல.

பொண்டாட்டிக்காக அம்மாவிடம் சண்டை பல வருசம்...அம்மாவுக்காக பொண்டாட்டிகிட்டே சண்டை பல வருசம்...இடையில் சொந்த புத்தி எங்கெ தொலைஞ்சது?

திருச்சி தஞ்சாவூர்னு பொட்டுக்கு திருகாணி மாத்துரேன்னு போயி இந்த நகையை வாங்கிட்டேனு செல்லமாக நொந்துகொள்ளும் [ அல்லது "கொல்லும்"] பொம்பளைங்க இருக்கும் வீட்டிலேயும் மூலையில் முடங்கிப்போன நோயாளிகள். பாயும் தலகானியும் மூத்திர வாடையுடன். எங்கே போனது மனிதம்...கல்யாணம் சுன்னத் காதுகுத்திலெயெல்லாம் மாமன் மச்சான் மாப்பிள்ளைனு சொன்ன எல்லோரும் எங்கே வருமையும் நோயும் மூப்பும் வந்த உடனேயே சொல்லி வச்சாப்லெ காணாமெ போயிடுறாங்க...

மல்லியப்பூ மாதிரி மனசு உள்ளவங்கல்லாம் சம்பாதிக்கிற காலத்தில காசு கேட்டுவந்த உறவுகளெ 'நெசம்னு' நம்பித்தான் ஏமாந்துபோயிட்டாங்க. வந்தவுகளும் இந்த மனுசனுக்கு கொடுத்த மரியாதெ என்ன தெரியுமா..ஒரு ஏ.டி.எம் மிசினுக்கு கொடுத்த மரியாதெதான். பட்டனெ அழுத்தினா காசு தரப்போவுது...பொழைக்கிற காலத்துலெ கொஞ்சம் சூதானமா இருக்காமெ போனவைங்க எல்லாம் கெளரவத்தும் பசிக்கும் எடையிலெ இப்படி சர்க்கஸ் குறங்கா போச்சு அன்னாட பொழப்பு. நீங்க கொடுக்கும்போது அதிகமா மறுப்பு சொல்லாமெ வாங்கிகிர்ரவங்கள்ளெ அனேகப்பேர் நொந்துபோயிருப்பவர்கள்தான்.

ஏழை மனசு அறிய ஏழையா இருக்கனும்னு அவசியம் இல்லே.

ஊர் என்ன சொல்லும்னு கவலைப்படுற விசயங்கள்னு சிலதுகள் இருக்கத்தான் செய்கிறது..அது சமூகம் சார்ந்த அவமானங்கள் மட்டும்தான். அதை வீட்டுட்டு உழைக்காத, உடம்பு வளையாத உறவுக்கெல்லாம் அள்ளி எறெச்சிட்டு அதற்க்கு பெயர் 'ஒத்தாசை-உதவி' என நாமாவே தவறான பெயர் வைத்து கொள்கிறோம்...அதற்க்கு பெயர் ;'கடைந்தெடுத்த.. கேனத்தனம்'

இது வெளங்கும்போது வயசாகி மெடிக்கல் ரிப்போர்ட் எல்லாம் ரொம்ப ஹைலைட் செய்ற ரீடிங் இருக்களாம்

வாங்காமெ வெலெ ஏறிப்போன தோப்புக்கும் வயலுக்கும் வக்கெனெ சொல்லும் சிறுசுங்க சாதிச்சதுதான் என்ன?

சரி எதுதான் வாழ்க்கையிலெ சரி , தப்பு ... எதுவுமில்லெ விட்டுதள்ளுங்க.. மத்தவன்வாழ்க்கெயெ பாத்து கத்துக்கிட்டவன் புத்திசாலி... தன் வாழ்க்கையிலெ பட்டுதெறிஞ்சவன் முட்டாள்.

எப்போதும் நான் நெகடிவ் விசயங்களெ எழுதிறதில்லே... ஆனால் தெரியாமல் பாசிட்டைவா மட்டும் எழுதிட்டு வாழ்க்கையிலெ 'இதுவும் இருக்கு'னு சொல்லாம இருக்கிறது தார்மீகமா தப்பு.

மேலெ உள்ள ஒரு போட்டொவெ பார்த்து 15 நிமிசத்துலெ எழுதுனதான் இது...

-- ZAKIR HUSSAIN

மற்றுமோர் விழிப்புணர்வு. 17

அதிரைநிருபர் | January 27, 2011 | ,


அதிரையில் அமர்க்களமான முறையிலே கல்வி விழிப்புணர்வு தந்த சாதனையாளர்களை பாராட்டிக் கொண்டிருக்கும் இதே வேளையில் ஜித்தா - சவூதி அரேபியாவில் மாணவச் செல்வங்களுக்கான அறிவுத்திறன் ,ஞாபக சக்தி , தனித்திறமை போன்றவற்றிர்க்கான அருமையான ஆளுமை விழிப்புணர்வு CHILDREN PROGRAM ஒன்று ஜெத்தா தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது .

மக்கா மதீனாவைச்சேர்ந்த துறை நகரமாகிய ஜித்தாவில் கணிசமான நம் சமுதாய குடும்பங்களும் ,மாற்று மதத்தினரும் சேர்ந்து நிறைய குடும்பங்கள் இங்கு வசித்தும், சிறார்கள் இங்குள்ள பள்ளிகளில் பயின்றும் வருகின்றனர்.இந்தியக் குழந்தைகளில் குறிப்பாக தமிழ் குழந்தைகள் அதிலும் குறிப்பாக எம் சமுதாய  குழந்தைகளை மேம்படுத்த வேண்டும் " என்பது எமது அவா! (இந்தியத் தூதரகத்தில் நடத்துவதால் மதப் பற்றை காண்பிக்க இயலாது). போட்டிகளில் ஒன்று Dhum sheraat ,Who am I -தனித்திறமை , table topic (சீட்டுக் குலுக்களில் கிட்டும் தலைப்பில் 2 நிமிடப்பேச்சு ), மேலும் திரையில் 10 -15 பொருட்களை காண்பித்து விட்டு சற்று நேரத்தில் விளக்கை அனைத்து விட்டு சிறிது நேரத்தில் என்னென்ன - எத்தனை பொருட்கள் கண்டாய் ..? என குழந்தைகளிடம் வினவ அதிகமான பொருட்களை கூறும் குழந்தைக்குப்பரிசு.

TONGUE TWISTING (உதாரணம்-சாச்சாக்கு தச்ச சட்டை சாச்சிக்கு ஏத்த சட்டை ), திருக்குர்-ஆன் ஆயத்துக்களை ,திருக்குறள் அத்தியாயங்களை அதி வேகமாக ஒப்புவித்தல் போன்றவையாகும்.

மின்னஞ்சலில் போட்டி அறிவிப்பு பார்த்ததிலிருந்து பெற்றோர்களிடமிருந்து ஆர்வ மிகு அலைபேசி அழைப்புக்கள். மூன்று தினங்களுக்கு முன் போட்டிக்கான தெரிவும் ஒத்திகையும் நடந்தது .குழந்தைகைகளும் பெற்றோர்களும் முண்டியடுத்தி -நெட்டித்தள்ளிக் கொண்டு பெயர் கொடுத்தனர்.(படம் பார்க்க).





அதெல்லாம் இருக்கட்டும் ! வந்துள்ள விண்ணப்பங்களில் 80 சதவிகிதத்தினர் மாற்று மதத்தினர்.நம்மவர்களில் இருவர் தொலைபேசியில் 'எங்கே ஃ புட் ஆர்டர் கொடுத்துள்ளீர் ' என கேட்டு தெரிந்து கொண்டனர். சமுதாய சொந்தங்களே! கொஞ்சம் சிந்தியுங்கள். இது போன்ற மாணவர்களுக்கான ஏற்பாடானாலும் சரி ,பெரியவர்களுக்கான பெர்சனாலிட்டி ப்ரோக்ராம்,பப்ளிக் ஸ்பீகிங், ,கோல் செட்டிங் -கேரியர் டெவலப்மென்ட் ப்ரோக்ரம் எதுவானாலும் சரி 'நம்மடவன்' (ஒருமையில் விளிப்பதற்கு மன்னிக்கவும்-ஆத்திரத்தை இப்படித்தானே ஆதங்கமாக வடிக்க முடியும் ) எவ்வளுவு சிரமப்பட்டு ,அனுமதி பெற்று, உணவும் ஏற்பாடு செய்து இலவசமாக தரும் போதும் அதை பயன் படுத்திக் கொள்வதுமில்லை. அதற்கு ஆதரவு தருவதுமில்லை. நம்ப மாட்டீர்கள் நான்கைந்து அமைப்பாளர்கள் பெயருடன் இந்த குழந்தைகள் ப்ரோக்ராம் பற்றிய அறிவுப்பு மின்னஞ்சல்கள் மூலம் வெளியிட்ட பத்தாவது நிமிடம் ஒரு தாயிடமிருந்து தொலைபேசி அழைப்பு,உரையாடல்........

ஹலோ .....வணக்கங்கே..

எஸ். ..வாழ்க வளமுடன்! யார் பேசிறீங்க ,,?

அண்ணே ! எம் பேரு ரமா ..நான் மெயில் பாத்தேங்க ..

சந்தோசம்!

என்கொழந்தையும் கலந்துக்குன்னும்க..

நல்லதுங்க. அப்ளைப் பண்ணுங்க.

அண்ணே ...ஒரு சின்ன ரிகுவஸ்டுன்னே..எங்க புள்ளை எத்தனை போட்டிகளில்

கலந்துக்கலாம்..?

அத்தனைப் போட்டிகளிலும் கலந்துக்கலாம் அம்மா!

நன்றிங்க!

இது போன்ற ஒரு தொலைபேசி அழைப்புக் கூட நம் சமூகத்து தாயிடமிருந்தோ-தந்தையிடமிருந்தோ வந்ததாகத் தெரிய வில்லை இது போன்ற இன்று நல்ல நம் சமுதாயத் தலைமுறையினரை உருவாக்கினால் தானே நாளை அவர்களை திறமையுள்ள தலைவர்களாக / அதிகாரிகளாக /ஆட்சியாளர்களாக /நம் மீது பழி சுமத்துபவர்களுக்கு பதிலடி கொடுப்பவர்களாக / ஒவ்வொரு நிறுவத்தின் உயர் பதவி வகிப்பவர்களாக நாம் காண முடியும் .ஈசிச்சேரில் சாய்ந்து நம் முதுமைக் காலத்தை நம் நாட்டில் ஈசியாக / பாதுகாப்பாக கழிக்க முடியும்?

வாழ்க வளமுடன்.

--ராஃ பியா

தெரு 8

அதிரைநிருபர் | January 27, 2011 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...


நல்லதொரு நிலவொளியில்
வெண்மை கலந்த மணலில்
அகலமான தெருவில்
காலார நடந்தது அந்தக்காலம்!

முன்னோர்கள் சொன்னார்கள்
இரட்டை மாட்டு வண்டி பூட்டி
மாட்டின் கழுத்து மணி
சத்தம் கேட்க கம்பீரமாக
தெருவில் வலம் வந்தது அந்தக்காலம்!

தொலைக்காட்சி இல்லாத காலம்
தெருவில் அமர்ந்து படிப்பதுடன்
தெருவில் வட்டமிட்டு அமர்ந்து
வீட்டுப்பெண்கள் நல்லதையும்,
புறமையும் பேசியது அந்தக்காலம்!
தெருவில் குழந்தைகள்
ஓடி பிடித்து
ஒளிந்து விளையாடியது
சண்டை போட்டது அந்தக்காலம்!

காலை எழுந்தவுடன் பெண்கள்
வாசலில் தண்ணீர் தெளித்து
பெருக்கி தூய்மைபடுத்தியது
அந்தக்காலம்!

ஆனால்
கழிவுநீரும், பாறாங்கல்லும்
வீட்டுப்படிகளும், மாடிப்படிகளும்
கழிவுநீர் தொட்டிகளும்
என்ற ஆக்கிரமிப்பால்
தவளைப்போல் தாவி தாவி
செல்வது இந்தக்காலம்!

இப்பொழுதும் காலை விடிகிறது
தெருவை சுத்தப்படுத்தி
தன் வீட்டு வாசல் குப்பையை
அடுத்த வீட்டு வாசலில்
ஒதுக்கி வைப்பது இந்தக்காலம்!

வீட்டின் கழிவுகளை
வாசலில் கொட்டி வைத்து
மனிதர்கள் தாண்டி செல்வதை
கண்டு ரசிக்கும் பெண்களை
கொண்டது இந்தக்காலம்!

12 அடி வாகனமும்
சிறிய வாகனங்களும்
செல்ல முடியாத தெருவாக
தெருவையே வெளி
வாசலாக்கிய பேராசை
படைத்த மனிதர்களை
கொண்டது இந்தக்காலம்!

மனிதா! உனது இடத்தில்
2அடி 3அடி பக்கத்து வீட்டுக்காரன்
எடுத்துக்கொண்டான் என்றால்
உன் ஆயுள் முழுதும்
நீதிமன்ற வாசலில் காத்திருக்கிறாய்!

மனிதா!
தெரு என்பது அனைத்து
மனிதர்களுக்கும் பொதுவானது!
பட்டா போட்டுக்கொள்ள இல்லை
என்பதை எந்தப்பள்ளியில்
உன்னை சேர்த்து தெளிவுபடுத்த!

கொம்பு உள்ள ஆடு
கொம்பு இல்லா ஆட்டை
முட்டினாலும் கொம்பு
இல்லா ஆட்டுக்காக
வல்ல அல்லாஹ்
நீதி வழங்கும் நாள்
மறுமை நாள்!

மனிதா எனக்கும் உனக்கும்
வழக்கு ஒன்று இருக்கிறது!
என் இடத்தை அபகரித்த
உனக்கு இறுதிநாளின்
அதிபதியின் நீதிமன்றத்தில்
நீதி அளிக்கப்படும்!

மனிதா!
என்னை தட்டிக் கேட்க
யாரும் உண்டோ என்ற
ஆணவத்தில் அலைகிறாய்!

எந்த சிபாரிசும், எந்த ஆணவமும்
எந்த ஆள் பலமும், பணபலமும்
உன்னை காப்பாற்ற முடியாத
மறுமை நாளுக்காக
பொறுத்திரு மனிதா!
தெருவை அபகரித்த
உன் செயலுக்கு சரியான
தீர்ப்பு வழங்கப்படும் நாள்
வெகுதூரத்தில் இல்லை!

ஒவ்வொருவரும், தாம் செய்த நன்மையையும், தீமையையும் கண் முன்னே பெற்றுக் கொள்ளும் நாளில் தமக்கும் தமது(தீய) செயல்களுக்குமிடையே மிகப் பெரிய இடைவெளி இருக்க வேண்டும் என ஆசைப்படுவர். (அல்குர்ஆன் : 3:30).

ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே. கியாமத் நாளில் தான் உங்களின் கூலிகள் முழுமையாக வழங்கப்படும். (அல்குர்ஆன் : 3:185).

-- S.அலாவுதீன்

மானிடம் 14

அதிரைநிருபர் | January 26, 2011 | , , ,

சுட்டெரிக்கும் கோடையில்
போகும் பாதையில்
ஒரு குழாயடி
சந்தோசம்....
உடல் வியர்க்கிறது
மூளை குளிக்கச்சொல்லுகிறது
குளிக்கமட்டுமே சொல்கிறது
மனமோ குளித்தால் தண்ணீர்
போகும் பாதையை பாத்திகட்டி
அருகில் உள்ள செடிகளுக்கு
வழியமைத்து குளிக்கச்சொல்லுகிறது .......

வழிதவறிய காட்டில்
ஒரு மாமரம் ..
மூளை மாங்காயைப் பறித்து
பசியாற சொல்கிறது
பசியாற மட்டுமே சொல்கிறது
மனமோ பசியாறிவிட்டு
சிறிது தொலைவில் மாங்கொட்டையை
மண்ணில் புதைக்கச்சொல்லுகிறது
மீண்டும் ஒரு மரம் வளர .........

அவசரமாக நடக்கையில்
பாதையில் வாழைப்பழத் தோல்
கண்ணில் படுகிறது ..
மூளை அதை ஓராமாக காலால் தள்ளிவிடச்சொல்லுகிறது
காலால் தள்ளிவிட மட்டுமே சொல்லுகிறது
மனமோ அதை கையில் எடுத்து
எதிரே வரும் ஆட்டிற்கோ ,மாட்டிற்கோ
கொடுக்கச்சொல்லுகிறது ....

வீட்டின் வாயிற்படியில்
ஒரு யாசகன் ...
மூளை சில்லறையை கொடுக்கச்சொல்லுகிறது
சில்லறையை மட்டுமே கொடுக்கச்சொல்லுகிறது
மனமோ யாசகனை உள்ளே அழைத்து
சுத்தம் செய்ய தண்ணீர் கொடுத்து
உணவு பரிமாறி வழியனுப்ப சொல்லுகிறது ....

முன்பெல்லாம் மூளையோடு
மனதும் சரிவர இணைந்து இருந்தது
இப்போ
மனதை தொலைத்து விட்டு
மூளையோடு மட்டும்
அப்படி எங்குதான்
தொலைகிறது இந்த மானிடம் ?

---அப்துல் ரஹ்மான்
----harmys

அதிரைமணம் திரட்டி – ஓர் அலசல் 19

அதிரைநிருபர் | January 25, 2011 | , , ,


அல்லாஹ்வின் திருப்பெயரால்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பான அதிரைப்பட்டினம் சகோதர சகோதரிகளே, உங்கள் அன்பு ஆதரவுடன் கடந்த 2010, மே மாதம் 30ம் தேதி முதல் அதிரையின் வலைப்பூக்களின் திரட்டியான அதிரைமணம் http://adiraimanam.blogspot.com/ இணையக்கடலில் மிதந்து உலகெங்கும் பிரிந்து கிடக்கும் நிறைய அதிரை மனங்களை இணைத்து வருகிறது என்பது உலகமறிந்ததே.

அதிரைமணம் திரட்டியில் 95% அதிரை வலைப்பூக்களும், மற்றவை நம் நட்புவட்டாரத்தின் வலைப்பூக்களும் அலங்கரித்து நம் வாசக நெஞ்சங்களின் அறிவு பசியை தீர்த்துவருகிறது என்றால் மிகையில்லை.

ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை அதிரைமணம் அதிக வாசகர் வட்டத்தைப் பெற்றிருக்கிறது மேலும் அதிரைமணத்திற்கு அதிரைவாசிகள் மட்டுமல்ல மற்ற ஊர் அன்பர்களும் தொடர்ந்து வருகை தருகிறார்கள் என்பதை நமக்கு வரும் மின் அஞ்சல்களும், மற்றும் அதிரைமணத்தின் இலட்சினையை (logo) தங்களின் வலைப்பூகளின் முகப்பில் பெருந்தன்மையுடன் வைத்திருக்கும் அதிரை வலைப்பூக்களுமே சாட்சி. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

அதிரைநிருபர் குழுவின் அங்கமான அதிரைமணம் திரட்டி மற்ற அதிரை வலைப்பூக்களை போட்டி வலைப்பூக்கள் என்று ஒதுக்கிடாமல் அனைவரும் நம் சகோதரர்கள் என்று எண்ணி ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை தன் நிலைப்பாட்டில் உறுதியுடன் இருந்து எந்த பாகுபாடும் இல்லாமல் அதிரை வலைப்பூக்கள் அனைத்தையும் தன் முகப்பில் வைத்து சமூக அக்கறை உணர்வை நிலைநிறுத்தி வருகிறது.

அதிரைப்பட்டினத்தின் திறமைமிக்க எழுத்தாளர்களை இவ்வுலகுக்கு அடையாளம் காட்டுவதற்காகவும் மற்றும் தனித் தனியாக வலைப்பூக்கள் வைத்து எழுதி வந்தவர்களை ஒன்றாக ஒரே தளத்தில் காட்டவேண்டும் என்ற நோக்கத்தில் அதிரைமணம் திரட்டி உருவாக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனைத்து அதிரை வலைப்பூக்களிலும் நிறைய பதிவுகள் அன்றாடம் வெளிவந்தது, ஆனால் இன்றைய சூழலில் ஒரு சில வலைப்பூக்கள் மட்டுமே அன்றாடம் தொடர்ந்து பதிவுகள் பதிந்து வருகிறார்கள். இது மிகவும் வருத்தப்படவேண்டிய தகவலே. நிறைய திறமையாளர்கள் நம்மூரில் இருக்கிறார்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. தங்களின் எழுத்துத் திறனை நல் வழிகளில் உபயோகித்து நம் சமூகத்திற்கு ஏதாவது ஒரு வழியில் நன்மைகள் செய்திட முயன்றிடலாமே. மாதக் கணக்கில் புதுப்பிக்கப்படாத வலைப்பூக்களை அதனை நிர்வகிப்பவர்கள் புதுப்பிக்க அன்புடன் வேண்டுகிறோம், குறைந்தபட்சம் வாரத்திற்கு ஒரு பதிவு அல்லது மாதமிரு பதிவுகளாவது பதியவேண்டுகிறோம். மாதக்கணக்கில் ஒரு பதிவுகூட இல்லாமல் இருக்கும் வலைப்பூக்கள் வரும் மே மாதம் 2011 முதல் நீக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த முடிவு எழுத்தாளர்களை ஊக்கப் படுத்துவதற்காக மட்டுமே தவிர அவர்களின் ஆர்வத்தை குறைப்பதற்காக அல்ல என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். அதிரைமணம் தறவிறக்கம் ஆவதற்கு அதிக நேரம் எடுப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்படுகிறது.

அன்பார்ந்த அதிரை வலைப்பூக்களின் எழுத்தாளர்களே, வலைப்பூக்களை நிர்வகிக்கும் அதிரைச் சகோதரர்களே முன்வாருங்கள் சமூக ஒற்றுமையை நிலை நிறுத்த குழப்பம் இல்லாத உங்கள் சமூக விழிப்புணர்வு ஆக்கங்களை உங்களது வலைப்பூக்களிலே பதியுங்கள் அல்லது சகோதர வலைப்பூக்களிலும் பதியுங்கள், நம் சமுதாயத்தை தட்டி எழுப்புங்கள். உங்களை ஊக்கப்படுத்துவதில் அதிரைமணம் என்றைக்கும் முன்னின்று வழிநடத்தும். வாருங்கள் உங்கள் அறிவுத் திறனை, உங்களின் எழுத்தாற்றலால் நம் சமுதாயத்தின் நண்மையை நாடி இறைவனுக்கு பயந்து செயலாற்றுங்கள். சொந்த வலைப்பூவை வைத்து பராமரிப்பதற்கு நேரமில்லை என்றால் உங்கள் எழுத்துப்பணியை மட்டும் விட்டுவிடவேண்டாம் மற்ற வலைப்பூ சகோதரர்களுடன் ஒன்று சேர்ந்து இறையச்சத்துடன் உங்கள் எழுத்துச்சேவையை தொடரலாமே.

வாசகர்களின் கருத்துக்களால் தான் இன்று அதிரைமணம் ஒரு நல்ல முன்னேற்றத்தை அடைந்து வருகிறது. சரி,இப்போது சொல்லுங்கள் அதிரைமணம் திரட்டி எப்படி உள்ளது ? உங்களின் பார்வையில் ! இனி இதில் என்ன மாற்றம் செய்யலாம்? அதிரைமணத்தில் இணைக்கப்படுள்ள அதிரை-டிவி வலைத்தளத்தில் இஸ்லாமிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பயன்தரக் கூடியதாக உள்ளதா? மற்றும் இந்திய, உலக செய்திகளை அறிந்து கொள்ள மற்ற செய்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உபயோகமாக உள்ளதா? அன்பு கூர்ந்து உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

முகப்புப் பகுதியில் உள்ள அதிரை செய்தி, இஸ்லாம் செய்தி, தமிழக செய்தி, இந்திய செய்தி போன்ற பகுதிகள் இன்னும் காலியாகவே உள்ளது, கல்வி விழிப்புணர்வு மாநாட்டு ஏற்பாடு வேலைகளால் கடந்த சில மாதங்களாக நம் அதிரைநிருபர் மற்றும் அதிரைமணம் இணைந்து இருந்ததால் அதிரைமணத்தின் மெருகேற்றுவதில் கவனம் செலுத்த முடியவில்லை. இன்ஷா அல்லாஹ் இனி அதிரைமணம் வெகு விரைவில் புதிய பகுதிகள் சேர்க்கப்படும், பழையவைகள் நீக்கப்படும்.

அதிரைமணத்துக்கு தொடர்ந்து வாருங்கள் சங்கமிக்கும் மனங்களுக்கு உங்கள் ஆதரவை தாருங்கள், உங்களுக்கு என்று ஒரு நல்ல வாசகர் வட்டங்களை உருவாக்கிக்கொண்டு நற்செய்திகளை பகிர்ந்து விழிப்புணர்வுகள் மீண்டும் மீண்டும் ஏற்படுத்தி வாருங்கள், அதிரைமணமும் அதற்கு துணை நிற்போம் என்பதை உறுதியுடன் தெரிவித்து எழுத்தாளர்களுக்கு நம்பிக்கையூட்டுகிறோம்.

அதிரைமணம் தொடர்பான இந்த ஆக்கம் முழுக்க முழுக்க நம் அதிரை வலைப்பூ ஆர்வளர்களை ஊக்கப்படுத்துவதற்காக மட்டுமே எழுதப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். உங்களின் ஆக்கங்கள், ஆலோசனைகள், கருத்துக்கள், விமர்சனங்களை எங்கள் மின்னஞ்சல் adiraimanam@gmail.com அல்லது adirainirubar@gmail.com என்ற முகவரிகளுக்கு அனுப்பலாம்.

அதிரைமணம், அதிரை வலைப்பூக்களின் தரவரிசைகளை (RANK) ஒவ்வொரு நாளும் உயர்த்திக் கொண்டிருக்கிறது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இனி நம் அடுத்த பதிவில் அதிரை வலைப்பூக்களின் உலக மற்றும் இந்திய தரவரிசைப் பட்டியலை வெளியிடுகிறோம்.

இணையத்தால் நல்ல இதயங்களை இணைப்போம். மார்க்க விசயங்களிலும், கல்வியிலும், சுகாதாரத்திலும் அதிகம் அதிகம் தொடர்ந்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்தி கூட்டாக இணைந்து அதிரைப்படினத்தில் சமூக ஒற்றுமைப் புரட்சி நிகழ்ந்திட எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் துனையிருப்பானாக. ஆமீன்.

தொடர்ந்து இணைந்திருங்கள்..

-- அதிரைநிருபர் குழு

கேள்விப்பட்டதும்; பகிர்ந்து கொண்டதும். 22

அதிரைநிருபர் | January 24, 2011 | ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

அல்ஹம்துலில்லாஹ்  ஜனவரி 14 மற்றும் 15ம் தேதி நமதூரில் முதலாம் கல்வி விழிப்புணர்வு மாநாடு சிறப்பாக நடந்தேறியது கண்டு நமக்கெல்லாம் மட்டற்ற மகிழ்ச்சியும் இறைவனுக்கே எல்லாப்புகழும்.

அதில் பல உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து வந்திருந்த அறிஞர்கள் மற்றும் கல்வி, அறிவியல் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு தம் சிறப்புப்பேச்சால் நம்மையும், நம் இளைய சமுதாயத்தையும் சிந்திக்க வைத்து மேற்கொண்டு நாம் செய்ய வேண்டிய பல வழிமுறைகளையும் அழகுடன் சொல்லிச்சென்றுள்ளார்கள். அவர்களின் நல்ல பல எண்ணங்களையும், எதிர்கால எதிர்ப்பார்ப்புகளையும் அல்லாஹ் நிறைவேற்றித்தர போதுமானவன்.

ஆனால் இக்கல்வி மாநாடு சிறப்புடன் நமதூரில் நடந்தேறிட வித்திட்டவர்கள், பல்வேறு வழிகளில் அதற்கு உதவிய சமூக ஆர்வலர்கள், ஆதரவு கரம் நீட்டியவர்களுக்கு பல இயக்க சிந்தனைவுள்ளவர்கள் ஏதேதோ பல காரணங்களும், குற்றச்சாட்டுகளும் கூறி மாநாட்டிற்கு சரிவர ஒத்துழைப்பு கொடுக்காம‌ல் இது யாருக்கோ புக‌ழ்பாட‌ ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ மாநாடு என்று க‌ருதிக்கொண்டு அவ‌ர்க‌ளில் ப‌ல‌ர் இத‌ற்கு ஆத‌ர‌வுக்க‌ர‌ம் நீட்டாம‌ல் ஒதுங்கிப்போன‌து நிச்ச‌ய‌ம் நாம் வ‌ருந்த‌த்த‌க்க‌ செய‌ல‌ன்றி வேறென்ன‌வாக‌ இருக்க‌ முடியும்?

ப‌ல‌ இய‌க்க‌ சிந்த‌னைக‌ளால் ந‌ம் ப‌குத்த‌றிவை உற்ப‌த்தி செய்யும் மூளை இய‌ங்காம‌ல் இருந்து விட‌க்கூடாது எச்ச‌ம‌ய‌மும்.

நிச்ச‌ய‌ம் ந‌ம‌தூரில் அண்மையில் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ மாநாடு எல்லா துறைகளிலும் பின் தங்கி போய் இருக்கும் ந‌ம் ச‌முதாய‌த்தின் க‌ல்லாமையை இல்லாமை ஆக்குவ‌த‌ற்காக‌ ஏற்ப‌டுத‌ப்ப‌ட்ட‌ ஒரு சிறு விழிப்புண‌ர்வு முய‌ற்சி தான்.

இது கூட‌ ந‌ம் பழ‌ம்பெரும் க‌ல்லாமையை புதிதாக நம்மூரில் மாநாடு ந‌ட‌த்தி விழிப்புண‌ர்வு மூல‌ம் ந‌ம் ம‌க்க‌ளை ப‌டிப்பின் ப‌க்க‌ம் திசை திருப்ப‌ முயற்சிக்கிறார்க‌ள் இது ந‌ம் பார‌ம்ப‌ரிய‌த்திற்கும், ஊர் வழக்கத்திற்கும் வேட்டு வைக்கும் செய‌ல் என்று கூறி யாரேனும் காவ‌ல்துறையிட‌ம் சென்று புகார் கொடுத்திருந்தாலோ அல்ல‌து நீதி ம‌ன்ற‌த்தில் இதனை எதிர்த்து வ‌ழ‌க்கு தொடுத்திருந்தாலோ ஆச்ச‌ரிய‌ப்ப‌டுவ‌த‌ற்கில்லை. (காரணம் ச‌மீப‌த்தில் ந‌ட‌ந்த‌ ஒரு ச‌ம்ப‌வம்: சென்னையில் ந‌டைப்ப‌யிற்சியில் சென்று கொண்டிருந்த‌ ஒரு வ‌க்கீலை வ‌ழியில் ஒரு சேவல் கொத்தி விட்ட‌தாக‌ அவ‌ர் காவ‌ல் துறை சென்று வ‌ழ‌க்கு தொடுத்து பின்னர் காவ‌ல் துறையும் அந்த‌ சேவலை கைது செய்து பின்ன‌ர் சேவ‌லின் உரிமையாள‌ர் நீதிம‌ன்ற‌த்தில் அப‌ராத‌ம் செலுத்தி அந்த சேவலை மீட்டுச்சென்ற‌தை ப‌த்திரிக்கையில் ப‌டித்திருப்பீர்க‌ள்).

என‌வே நாம் தான் ப‌ல‌ வ‌ச‌தி, வாய்ப்புக‌ள் இருந்திருந்தும் ச‌ரி வ‌ர‌ ப‌டிக்க‌ வில்லை. ப‌டிப்பில் ஆர்வ‌முள்ள‌ இளைய‌ ச‌முதாய‌த்தின‌ர்க‌ளுக்கு வ‌ழி விட்டு அவ‌ர்க‌ளுக்கு ஆத‌ர‌வுக்க‌ர‌ம் நீட்டுவோம் எல்லாக்க‌ருத்து வேறுபாடுக‌ளையும் க‌லைந்து விட்டு.

இது போன்ற‌ க‌ல்வி விழிப்புண‌ர்வு மாநாடுக‌ளால் அதை ந‌ட‌த்தும் யாரும் பெரும் புக‌ழ் அடைந்து நாளை நாடாளு ம‌ன்ற‌த்திற்கு போய் ஜொலிக்க‌ப்போவ‌தில்லை. நிச்ச‌ய‌ம் அம்மாநாடுகளால் ப‌ல‌ அறிஞ‌ர்களும், கல்விமான்களும் எதிர்காலத்தில் இறைவன் நாட்டத்தில் உருவாக்க‌ப்ப‌ட்டு அவ‌ர்க‌ள் செல்லும் துறைகளிலெல்லாம் ஜொலிக்க‌ வேண்டும் என்பது தான் அத‌ன் நோக்க‌ம‌ன்றி வேறெதுவும் இருக்க‌ இய‌லாது.

நிச்ச‌ய‌ம் க‌ல்விக்கு ம‌திப்பும், ம‌ரியாதையும் செய்த‌வ‌ன் ஒரு போதும் ம‌திப்பிழ‌ந்து போவ‌தில்லை உல‌கில்.

அரைகுறை க‌ல்வியால் அருகில் வ‌ந்த‌ அழ‌கான, அந்தஸ்தான‌ வாய்ப்புகள் பலவற்றை ந‌லுக‌ விட்ட எத்தனையோ மனிதர்களுக்குத் தெரியும் கல்வியின் உண்மையான‌ ம‌திப்பும், ம‌ரியாதையும் என்ன‌வென்று. கண்ணீரின்றி உள்ளத்துக்குள் அழுவதைத்தவிர வேறென்ன செய்து விட முடியும் அவர்களால்?

என‌வே இதுபோன்ற‌ க‌ல்வி விழிப்புண‌ர்வு மாநாடுகள் யாராலும், எங்கு ந‌ட‌த்த‌ப்ப‌ட்டாலும் ந‌ம்மால் இய‌ன்ற‌ள‌வு அதில் ந‌ம் ச‌மூக‌த்துட‌ன் க‌ல‌ந்து கொள்ள‌ முய‌ற்சிப்போம் இன்ஷா அல்லாஹ் வாழ்வில் மேன்மைய‌டைவோம்...

-- மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து

அட இது நம்ம தமிழ் 11

அதிரைநிருபர் | January 23, 2011 | ,

அன்பானவர்களே,

தமிழ் வலைப்பூக்கள் பல இவ்வுளகில் வந்து நம் செந்தமிழை சாகடித்து வாழவைத்துக் கொண்டிருக்கிறது என்றால் மிகையில்லை. ஆனால் தமிழ் இலக்கணம், மரபு கவிதை, புதுக்கவிதை, எழுத்துச்சீர்த்திருத்தம் என்று நம் தாய்மொழி தமிழை வாழவைக்க போட்டிப்போடும் இந்த காலத்தில் இன்னும் நமக்கு தெரியாதவைகள் நம் தமிழில் உள்ளது என்பதை அறிந்துக்கொள்ளலாமே. இதோ உங்கள் பார்வைக்காக.














































































நம்ம தமிழ் எப்படி இருக்கு? இன்னும்  இருந்தால் தெரியப்படுத்துங்களேன் பின்னூட்டத்தில், தெரிந்துக்கொள்ள வசதியாக இருக்குமே...

-- மு செ மு நெய்னா முகம்மது

அதிரைக் கல்வி விழிப்புணர்வு மாநாட்டுத் தீர்மானங்கள்; 2011 ஜனவரி 14 / 15 6

அதிரைநிருபர் | January 23, 2011 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

அஸ்ஸலாமு அலைக்கும்..

அன்மையில் நடந்து முடிந்த அதிரை கல்வி விழிப்புணர்வு மாநாட்டின் தீர்மானங்கள் உங்களை அனைவரின் பார்வைக்காக மீண்டும் தருகிறோம்.

-- அதிரைநிருபர் குழு

தீர்மானங்கள்

• பொதுவாகக் கல்வியை உலகக் கல்வி, மார்க்கக் கல்வி என்று பிரிக்காமல், சமூகத்திற்குப் பயன்படும் எந்தக் கல்வியையும் கல்வியாகவே கருதி, அதன் முன்னேற்றத்திற்கும் விழிப்புணர்வுக்கும் தேவையான முயற்சிகளில் 'அதிரை எஜுகேஷனல் மிஷன்' (AEM) பாடுபடும்.

• அதிரையின் எதிர்கால முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, இஸ்லாமியப் பிரச்சாரகர்கள் தாம் செய்யும் ஜுமுஆ பிரசங்கங்களில் கல்வியின் இன்றியமையாத் தன்மையையும் தேவையையும் பற்றி விரிவாகப் பேசவேண்டும் என்று மார்க்க அறிஞர்களையும் வெள்ளி மேடையின் பள்ளிப் போதகர்களையும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

• அதிரை மாணவ மாணவியரிடம் கல்வியின் பரிணாமங்கள் பலவற்றை அறிமுகம் செய்தும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அவர்களின் கவனத்தைத் திருப்பச் செய்தும், கல்வியின் நோக்கமே ஒழுக்கம்தான் எனும் அடிப்படையில், அவர்களிடம் ஒழுக்க மாண்புகளை ஓங்கச் செய்தும் 'அதிரை கல்விச் சேவையகம்' (AEM) பாடுபடும்.

• மாணவர்களின் வீணான வேகத்தைக் குறைத்து, விவேகத்தைக் கூட்டி, மார்க்கம், சமுதாயம், மொழி, நாடு ஆகியவற்றின் மீது அவர்களுக்குள்ள கடமைகளை உணரச் செய்து, அவர்களைத் தூய்மை என்னும் அச்சில் வார்த்தெடுக்கும் வகையில், சமூக நல்லிணக்கமும் புரிந்துணர்வும் கொண்ட விவேகமுள்ளவர்களாக மாணவ மாணவியரை உருவாக்க, அவர்களுக்குப் பயிற்சியளிக்கும் எல்லா விதமான வழிகளிலும் AEM துணை செய்யும்.

• சமூகம் மற்றும் நாடு எதிர்கொள்ளும் சவால்களை அறியச் செய்து, மாணவ மாணவியர்களின் உரிமைகளையும் கடமைகளையும் அறியச் செய்து, அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு நமது இந்த அமைப்பு பாடுபடும்.

• கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் மாணவ மணிகளுக்கு முறையான வழிகாட்டல்களை அவ்வப்போது வழங்கி, அவர்களின் எதிர்கால வாழ்க்கையை வளமுள்ளதாக ஆக்கிக்கொள்ள அவர்களுக்கு உறுதுணையாக நிற்கும்.

• ஒவ்வோர் ஆண்டும் இது போன்ற மாநாடுகளையும், கோடைக்காலப் பயிற்சி முகாம்களையும் நடத்தி, மாணவ மாணவியரைப் பக்குவப் படுத்தும்.

• தேர்வுகளில் தோல்வியுற்ற (dropout) மாணவ மாணவியரை அடையாளம் கண்டு, கல்வி விற்பன்னர்களைக்கொண்டு அவர்களுக்கு ஊக்கப் பயிற்சிகளையும் பாடப் பயிற்சிகளையும் அளித்துக் கைதூக்கி விடும். இதற்காகவும், இன்னும் இது போன்ற கல்விச் சேவைகளுக்காகவும், Institute of Adirai Educational Mission எனும் பெயரில் கல்விப் பயிற்சியகம் ஒன்றை நிறுவ, இந்த எழுச்சி மாநாட்டைக் காரணமாக்கிச் சேவை புரியத் தொடங்கும்.

• தொலைதூரக் கல்வி நிலையங்களில், வீட்டில் இருந்துகொண்டே படிக்கும் வசதியை, குறிப்பாகப் பெண்களுக்கு, இவ்வமைப்பு நமதூரில் ஏற்படுத்திக் கொடுக்கும்.

• உடற்குறையுற்ற மாற்றுத் திறனாளிகளுக்குக் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் அரசு மற்றும் தனியார் உதவிகள் தொடர்பான ஏற்பாடுகளில் உதவியாக இருந்து, அவர்களின் எதிர்கால வளவாழ்வுக்குத் துணை நிற்கும்.

• படிப்பு நிறைவுற்ற மாணவர்களுக்கு, அரசு அல்லது தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகளுக்குத் தம்மை ஆயத்தப் படுத்திக்கொள்ளும் வகையில், நுழைவுத் தேர்வுக்கும் நேர்காணலுக்குமான பயிற்சிகளை அளிக்கும்.

• தகுதியும் திறமையும் வாய்ந்த மாணவ மாணவியரை அடையாளம் கண்டு, அவர்களை மருத்துவம், பொறியியல், சட்டம் சார்ந்த படிப்புகளில் தொடர ஆர்வமூட்டி, அதற்கான முன்னேற்பாடுகளில் முனைப்போடு செயல்படும்.

• UPSC, (Union Public Service Commission) TNPSC (Tamil Nadu Public Service Commission) ஆகிய அரசுத் தேர்வுகளை எழுத மாணவர்களை ஊக்கப்படுத்தி, அதற்கான பயிற்சிகளையும் அளிக்கும்.

• அதிரையின் எல்லாக் கல்வி நிலையங்களிலும் தொடக்க வகுப்புகளில் கணினியுடன் தொடர்புடைய பயிற்சியைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகின்றது.

• மாணவ மாணவியரின் ஆங்கில அறிவை விரிவாக்கும் விதத்தில் தனிப் பயிற்சிகளுக்கான வாய்ப்பு வசதிகளை நமது பயிற்சியகம் அமைத்துக் கொடுக்கும்.

• ஊரின் ஒதுக்குப் புறத்தில் அமைந்துள்ள அரசு நூலகத்தை ஊரின் மையப் பகுதிக்கு மாற்ற நூலகத் துறையை இம்மாநாடு கேட்டுக்கொள்கின்றது; அல்லது, புதிதாக ஒரு கிளை நூலகத்தை ஊரின் மையப் பகுதியில் ஏற்படுத்தித் தர அரசின் நூலகத் துறையைக் கேட்டுக்கொள்கின்றது.

• தற்போது மாணவர்களிடமிருந்து பெறும் கருத்துக் கணிப்புப் படிவங்களைக் கோப்புகளில் பாதுகாத்து, அவைகளை ஆராய்ந்து அவர்களின் படிப்பு முடிந்தவுடன், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் அவர்களுக்கு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்க அவ்வத்துறைகளை நமது அமைப்பு வலியுறுத்திப் பாடுபடும்.

இன்ஷா அல்லாஹ்!

-- AEM - ADIRAI EDUCATIONAL MISSION


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு