Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

உலகின் முதல் மனிதர் பேசிய மொழி தமிழா? - 1 38

அதிரைநிருபர் பதிப்பகம் | March 31, 2012 | , , , ,



உலகின் முதல் மனிதர் ஆதம் நபி (அலை) அவர்கள் பேசிய மொழி தமிழா? - (1)

“ஆதம் (அலை) அவர்கள் இப்புவிக்கு வந்திறங்கிய பின்னர் எந்த மொழியில் பேசியிருப்பார்கள்?” - இப்படி ஒரு கேள்வி தேவையா?

மார்க்கத்தின் அடிப்படையில் இது போன்ற கேள்விகள் ஒரு வகையில் தேவையற்றவை என்று அறிஞர்கள் சிலர் கருதுகின்றனர்.  காரணம், இம்மையிலும் மறுமையிலும் நன்மையை அளிக்கக் கூடியதாக இந்தக் கேள்வி இருந்திருப்பின், அல்லது ஆதம் (அலை) அவர்கள் எந்த மொழியில் பேசினார்கள் என்பது முக்கியமான ஒரு செய்தியாக இருந்திருப்பின், அதனை அல்லாஹ் அல்குர்ஆனிலேயே அறிவித்திருப்பான். எனவே, இது தேவையற்ற ஒரு கேள்வி என்பது அந்த அறிஞர்களது கூற்று. 

அவர்களின் கூற்றுப்படி இக்கேள்வி தேவையற்றதாக இருந்தாலும், இறைவனின் பிரதிநிதியாகத் திகழும் மனித குலத்தின் வரலாற்றை ஆராயும் வகையில் இந்தக் கேள்விக்கு ஒரு முக்கியத்துவம் இருக்கின்றது.

ஏனெனில், மனிதன் ‘குரங்கில் இருந்து தோன்றினான் என்று டார்வின் போன்ற மேற்கத்திய ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதனையே, எல்லாப் பாடப் புத்தகங்களிலும் போதிக்கின்றனர். குறிப்பாகப் பள்ளிக்கூடங்களுக்குச் செல்லும் நம் குழந்தைகளும் அதனையே கற்கின்றனர். குரங்கிலிருந்து தோன்றிய கதை ஒரு புறமிருக்க, இப்போது, ‘மனிதன் எலியில் இருந்து தோன்றினான்’ என்றுகூடக் கூற ஆரம்பித்துள்ளனர்.  பார்க்க:  http://nikalvu.com/postid272/


அல்லாஹ்வின் அருள்மறை அல்குர்ஆனோ, மனிதனைப் படைக்கும் முன்னர், அந்த வல்லமை மிக்க படைப்பாளன், மனிதப் படைப்பை வானவர்களிடம் அறிவித்தது பற்றி இவ்வாறு விவரிக்கின்றது:

وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَنْ يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ [البقرة: 30].

“உம் இறைவன் வானவர்களிடம், ‘நான் இப்பூமியில் ஓரு பிரதிநிதியை  உண்டாக்கப் போகிறேன்’ என்று கூறியபோது, ‘பூமியில் குழப்பம் விளைவித்து, இரத்தத்தை ஓட்டக்கூடியவர்களையா நீ ஆக்கப் போகிறாய்? நாங்கள் (இப்போது) உன்னை உன் புகழால்  துதிக்கொண்டும், உன்னைத் தூய்மைப் படுத்திக்கொண்டும் இருக்கின்றோமே?’ என்று வானவர்கள் கூறினர். அதற்கு அவன், ‘நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன்’ என்று கூறினான்.”  (அல்குர்ஆன், 2-30)

وَعَلَّمَ آدَمَُ الأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلاَئِكَةِ فَقَالَ أَنْبِئُوْنِيْ بِأَسْمَاءِ هؤُلاَءِ إِنْ كُنْتُمْ صَادِقِيْنَ ( 31 ) قَالُوْا سُبْحَانَكَ لاَ عِلْمَ لَنَا إِلاَّ مَا عَلَّمْتَنَا إِنَّكَ أَنْتَ الْعَلِيْمُ الْحَكِيْمُ ( 32 ) قَالَ يَا آدَمُ أَنْبِئْهُمْ بِأَسْمَائِهِمْ فَلَمَّا أَنْبَأَهُمْ بِأَسْمَائِهِمْ قَالَ أَلَمْ أَقُلْ لَكُمْ إِنِّيْ أَعْلَمُ غَيْبَ السَّمَاوَاتِ وَالأَرْضَ وَأَعْلَمُ مَا تُبْدُوْنَ وَمَا كُنْتُمْ تَكْتُمُوْنَ ( 33 )  (البقرة:31-33)


“அதுமட்டுமின்றி, அந்த முதல் மனிதருக்கு அனைத்துப் (படைப்புகளின்) பெயர்களையும் கற்றுக் கொடுத்தான். அதன் பின்னர், அவற்றை வானவர்களின் முன்னர் நிறுத்தி, ‘இவற்றின் பெயர்களைக் கூறுங்கள்’ என்றான். அவ்வானவர்கள், ‘இறைவனே, நீ மிக்க தூய்மையானவன். நீ கற்றுத் தந்ததைத் தவிர வேறு எந்த அறிவும் எங்களுக்கு இல்லை. நிச்சயமாக, நீயே மிகைத்தவனாகவும், நுண்ணறிவாளனுமாகவும் இருக்கிறாய்’ என்றனர். (அல்லாஹ்,) ‘ஆதமே, இவற்றின் பெயர்களை நீர் இவர்களுக்குக் கூறும்’ என்றான். அவர் அவற்றின் பெயர்களை அவர்களிடம் கூறியதும், ‘நான் வானங்கள் மற்றும் பூமியின் மறைவான விஷயங்கள் அனைத்தையும் அறிவேன் என்றும், நீங்கள் வெளியாக்கி வைப்பதையும், நீங்கள் மறைத்து வைப்பதையும் நான் அறிவேன் என்று உங்களுக்குக் கூறவில்லையா?’ என்று அல்லாஹ் கூறினான்.” 
(அல்குர்ஆன், 2-31,32,33)

அல்லாஹ் முதல் மனிதராகிய ஆதமுக்கு அனைத்துப் படைப்பினங்களின் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான் என்பதன் பொருள், வானங்கள், பூமியில் உள்ள அனைத்தைப் படைப்பினங்கள் பற்றிய அறிவையும் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தான் என்பதாகும் என்று அருள்மறை ஆய்வு அறிஞர்கள் கூறுகின்றனர்.

வல்ல இறைவன் முதல் மனிதராகிய ஆதம் (அலை) அவர்களுக்கு அனைத்துப் படைப்புகள் பற்றிய அறிவை அளித்ததுடன், அவர்களின் இனமாகிய மனித இனத்தின் உருவத்தையும் உடல் அமைப்பையும் மற்ற அனைத்துப் படைப்புகளை விட மிக அழகானவையாக ஆக்கி வைத்தான்.  அல்லாஹ்வின் அருள்மறை,

وَصَوَّرَكُمْ فَأَحْسَنَ صُوَرَكُمْ     


“உங்களுக்கு உருவம் அளித்தான். இன்னும், அந்த உருவத்தை மிக அழகானதாக ஆக்கினான்” (அல்குர்ஆன்-64:4) என்றும்,

لَقَدْ خَلَقْنَا الإِنْسَانَ فِيْ أَحْسَنِ تَقْوِيْمٍ 

“இன்னும் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் நாம் படைத்தோம்” (அல்குர்ஆன்-95:4) என்றும் மனிதனின் தோற்றத்தைச் சிறப்பித்துக் கூறுகின்றது. 

இப்படியெல்லாம், அல்குர்ஆன் மனிதனின் படைப்பின் ஆரம்பத்தைப் பற்றி உயர்வாகக் கூறியிருக்க, டார்வின் போன்ற ஆராய்ச்சியாளர்கள் கருதுவது போல், மனிதன் குரங்கிலிருந்தும் எலியில் இருந்தும் தோன்றியிருப்பின், முதல் மனிதனின் ஆரம்ப மொழி கீச், கீச்சென்று கத்தும் குரங்கின் மொழியா? அல்லது சிக் சிக்கென்று கத்தும் எலியின் மொழியா? என்ற கேள்வியும் எழுகின்றது. 

நவீன ஆராய்ச்சியாளர்கள் கூறும் இந்தக் கருத்து, மனிதனின் தோற்றத்தைப் பற்றி அல்குர்ஆன் கூறும் கருத்துகளுக்கு மாற்றமாக உள்ளது. குர்ஆனுடைய அறிவைக் கற்றுக்கொள்வது கட்டாயக்  கடமையாகும். அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: طلب العلم فريضة على كل مسلم – “(அடிப்படையான மார்க்க) அறிவைத் தேடுவது முஸ்லிமான ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்.”          (பைஹகீ)

கடமையான ஒன்றை நிறைவேற்ற உதவும் மற்றொன்றும்  கடமைதான். அதன்படி, கடமையான அறிவைப் புரிந்து கொள்ளவும் நிலை நாட்டவும் உதவும் பிற அறிவுகளை அறிந்துகொள்வதும் கடமையாகும்.

எனவே, இந்த அடிப்படையில், முதல் மனிதராகிய ஆதம் (அலை) அவர்கள் எந்த மொழியில் பேசியிருப்பார்கள் என்று ஆராய்வதும் தேவையான ஒரு கேள்வியாகத்தான் உள்ளது. 

இக்கேள்வியை, மனித இனத்தின் வரலாறு மற்றும் அதன் துவக்கத்தை அல்குர்ஆனின் அடிப்படையில் விளங்கும் நோக்கத்திலும், மனிதன் குரங்கு அல்லது எலியிலிருந்து தோன்றி இருப்பான் எனும் குர்ஆனுக்கு மாற்றமான கருத்துகள் தவறானவை என்று விளங்கிக் கொள்ளும் நோக்கத்திலும் நாம் ஆராய்வதில் தவறு ஏதும் இல்லை என்பது எனது கருத்து. பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

اِنَّمَا الاَعْمَالُ بِالنِّيَّاتِ

“செயல்கள் அனைத்தும் அவற்றின் எண்ணங்களின் அடிப்படையில் தான் அமைந்துள்ளன.”  
– புகாரி, முஸ்லிம்

- இன்னும் வரும் இன்ஷா அல்லாஹ்..
- அஃப்ளலுல் உலமா
- அஹ்மது ஆரிஃப், எம்.காம்., எம்.ஃபில்.
- இயக்குநர், அரபிக் இன்ஸ்டிட்யூட் ஆஃப் காமர்ஸ், சென்னை-60092.


விலாசம்.. ! 22

அதிரைநிருபர் பதிப்பகம் | March 30, 2012 | , , , , ,

ஊருன்னு இருந்தால் அதில்
ஆறிருக்கனும்
உறவுன்னு சொல்லிக் கொள்ள
ஆளிருக்கனும்

ஊருணியில் சுத்தமான
நீரிருக்கனும்
ஊருக்கார சனங்க நெஞ்சில்
நீரிருக்கனும்

பேருன்னா பெருமையாக
பிறர் மதிக்கனும்
யாருன்னா இன்னாரென
ஊர் மெச்சனும்

சோறுன்னா சுயமாக
உழைத்து உண்ணனும்
மோரு மட்டுமானால்கூட
நீராடி யருந்தனும்

சேருன்னா சொந்தபந்தம்
சார்ந்து நிற்கனும்
சேறு மிதி உழவனையும்
யாரும் மதிக்கனும்

பாருன்னா பரந்தவொரு
பார்வை பார்க்கனும்
நேருக்கு நேரா நின்னு
தீர்வு காணனும்

பாருக்குள்ளே பெரிய ஆளா
தேர்ந் திருக்கனும்
நாருபோல நாலுபூவைக்
கோர்க்க உதவனும்

போருன்னா தீயவற்றை
வேரறுக்கனும்
வீரமுன்னா தோள்புடைத்து
மார் நிமிர்த்தனும்

ஏறுன்னா இமயத்தையும்
மீறி ஏறனும்
ஊறிப்போய் உறுதியான
நாராய் இருக்கனும்

'ஓர்’ன்னா ஓரிறையைக்
கூர்ந்து ஓர்க்கனும்
நூறுமுறை கேட்டாலும்
மா றாதிருக்கனும்!

-சபீர்

லைஃப் டைம் ஜிம்(மென்ற) - Talk ! 35

அதிரைநிருபர் பதிப்பகம் | March 29, 2012 | , ,


பயணத் தொடர் – பயண அனுபவம் என்றெல்லாம் ஏராளமாக வாசித்து இருக்கிறேன் தொடர்ந்து ஆங்காங்கே வாசித்தும் வருகிறேன். ஆனால், ஒருநாள் கூட இப்படி ஒரு விபரீதமான எண்ணம் வந்ததே இல்லை இந்த அதிரைநிருபர் தளத்தில் தொட்டதெல்லாம் ஸாரி தட்டியதெல்லாம் துலங்கும் தூண்டில்கள் ஏராளம் போடப்பட்டிருப்பது அதில் சிக்கியவர்களுக்கு நன்றாகவே தெரியும். அந்த அற்புதமான சூழல்களை ஆனந்தமாக அனுபவித்து வருவார்கள்.

என்னைப் பொறுத்த மட்டில் ஊர்களைச் சுற்றும் ஒருவனாக(!!?) நான் இல்லாவிட்டாலும் எந்த ஊருக்குச் சென்றாலும் அந்த சுவடுகளை அப்படியே மனத்தளவிலும் எனது மூன்றாம் கண்கள் ஊடேயும் சேமிப்பதில் தவறுவதில்லை. அவ்வாறு நாம் மட்டுமே சேமித்து அதனை பாதுகாப்பதில் என்ன பயன் !? என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது அதிரைநிருபர் போன்ற சிறப்பான மேடையுடன் கணினித் திரையில் கண்கொள்ளாக் காட்சிகள் படைக்கும் தளம் இருக்கவே இருக்கிறது நாம் கடைபோட என்று இங்கேயும் கடைவிரித்து விட்டேன்… வியாபர நோக்கில் அல்ல !

சென்ற முறை நான் ஊர் சென்ற போது ஒரு சிம் கார்டு (ஜிம் கார்டு என்போரும் ஜெல் போனில் பேசுகிறார்கள்) வாங்கினேன்.


அது லைஃ ப் கார்டு என்று சொல்லித் தலையில் கட்டியிருந்தார்கள், இந்த முறை (நான்கு மாதம் கழித்து) ஊர் சென்றதும் திருச்சி ஏர்போர்டில் ஜிம்மை அதாங்க, சாரி சிம்மை மாட்டினால் சிம்(முன்னு) பல் இளித்து விட்டது (கோபால் பல்பொடி எங்கே என்று). சிம்முக்கு லைஃப் என்றாலே நான்கே மாதம்தான் என்று அவர் கையில் அடித்துச் சொல்லாத அர்த்தமும் புரிந்தது. நான் நம்முடைய லைஃப் (வரைக்கும் உள்ள) கார்டு என்று நினைத்தது தவறு என்றும் புரிந்து கொண்டேன். வண்ணத்துப்பூச்சிக்கு வாழ்நாள் 21 நாள்தான் என்று படித்தது நினைவு வந்தது (harmys please confirm).  அதே போல் சிம்முக்கு நாலுமாதம்தான் லைஃப் போலிருக்கிறது என்று மனதை தேற்றிக்கொண்டேன்.

திருச்சி ஏர்போர்ட்டில் இருந்து அதிரைக்குள் நுழைந்ததும் முதல் வேலையாக  சிம்(முஞ்சி) கார்டு வாங்கிய கடைக்கு சென்று கேட்டால், அவரும் கூலாக “வேற ஒன்னு வாங்கிப் போடுங்க காக்கா” என்று கடைக்காரர் சொன்னார். (அடிக்கடி சிம் மாற்றுவதற்கு அசத்தல் காக்காவிற்கு யார் பதில் சொல்வதாம்) சரி பயணங்கள் எல்லாமே இனிப்பதில்லையே இளிக்கவும் செய்யுமே (அனுபவம்தான்) என்று வேறொரு சிம்(மு) கார்டு வாங்கிக் கொண்டுதான்  வீட்டுக்குள்ளேயே நுழைந்தேன். நம் நாட்டில் (அட! நம்ம இந்தியாவில்) பத்து பைசா இருபது பைசா முப்பது பைசாக்களெல்லாம் பயன்படுவது மொபைல் ஃபோனில் மட்டும்தான். வேறு எங்கும் இந்த பைசாகளுக்கு மதிப்பு  கிடையாது. 

ஊரில் பொறடியை சொறிந்துகொண்டு சுகம் விசாரிக்க வருபவர்கள் கூட ஒரு மினிமம் கலெக்ஷன் காஸ்ட் என்று வைத்து இருக்கிறார்கள் (ஆளை பொறுத்து அவர்கள் டார்கெட் மாறும்). ஒரு ரூபாய் கொடுத்தால் அதை திருப்பித் திருப்பிப் பார்த்துவிட்டு நம்மிடமே தந்து விடுகிறார்கள்.(தூக்கி வீசாத குறைதான்).  ஆனால், ஃபோன் ரொம்ப சீப்பாக இருப்பதால் யாரும் போனில் பேசும்போது விசயத்தை சுருங்க சொல்வதில்லை கம்பனுக்காக அகல இரயில் பாதைக்கு போட்ட பட்ஜெட் ஒதுக்கீடு போல் நீட்டி, அளந்து, முழக்கியோ நம் நேரத்தையும் வீணாக்கி விடுகின்றனர். 

இந்தியாவில் மொபைல் போனுக்கு கட்டணத்தை அதிகரிக்க வேண்டும், யாரை பார்த்தாலும் ஃபோன் பேசிக் கொண்டேதான் இருக்கிறார்கள். பேசுவது எல்லாம் வெட்டி பேச்சுக்கள், குறிப்பாக பகல் நேரங்களில் நெட் ஒர்க் பிசிபிசி என்று வரும். காரணம் பலவீடுகளில் சமையல் ரெசிபியை செல்போன்கள்தான் ஒலிபரப்புகின்றன. வெந்தயம் போட்டியா? கறிவேப்பிலையை கிள்ளிப்போடு – புளியை கடைசியில் ஊத்து தேங்காய் பால் தலைப்பால் ஊத்தணும் என்பதுதான் அந்த நேரங்களின் பிசிக்கு காரணம். நல்லவேளை சுவையும் மனமும் மொபைலில் அறிய முடியாமல் போனது.


இதை ஏன் கேட்கிறீங்க இங்கே மேலே பாருங்க பைக்கில் போகும் போதும் தலை சோல்டரில் கவிழ்ந்து கிடக்குது. இரச்சிகடையில இருக்கிற தலை மாதிரி !? தோள்பட்டைக்கும் தலைக்கும் இடையே ஃபோன் மாட்டிக்கொண்டு முழிபிதுங்கி அவஸ்த்தைப்படுகிறது. மொபைல் ஃபோனை கண்டு பிடித்தவன் கூட இப்படி எல்லாம் வைத்துக்கொண்டு பேசுவார்கள் என்று கனவில் கூட நினைத்து பார்த்து இருக்க மாட்டார்.  சலூனில் ஷேவிங்க் பண்ணும்போது ஒருகையில் பிளேடு மாட்டிய கத்தி, மறு கையில் செல்போன் – அதுவும் ஃபோனில் யாரோடும் அவர் கோபமாக கையை அசைத்து அசைத்து பேசும்போது கத்தி கத்தி (என்று) சொன்னாலும் ஃபோனில் போடும் சண்டை எல்லாம் நினைவில் வந்து போகின்றது.

அத்துடன் மொபைல் ஃபோனைவைத்து ஃபோட்டோ எடுக்கும் பழக்கமும்(!!?) அதிகரித்துவிட்டது (எனக்கு போட்டியாக !!). முன்பெல்லாம் சுற்றுலாத் தளங்களுக்கு செல்ல நேரிட்டால்தான் அந்த இடங்களை அங்கே செய்யும் சேட்டைகள் அல்லது மறக்கவியலாத சூழலை ஃபோட்டோ எடுப்பார்கள். ஆனால் இப்போ எந்தந்த வலைத்தளங்களில் பதியலாம் என்று அயர்ந்து உரங்கும் பூனையிலிருந்து அடுப்பங்கரையில் ரெடியாகும் வட்டிலப்பம் வரையில் படமெடுக்க மொபைல் ஃபோன். என்ன்ங்க இப்போது வீட்டில் கொல்லையில் வாழைமரம் குலைபோட்டால் போட்டோ, முருங்கை மரம் காய் காய்த்தால் போட்டோ. மசுக்குட்டியைக்கூட மொபைலில் போட்டோ எடுக்கிறார்கள். இதல்லாமல் மொபைல் படக் கலை என்று யாரும் பேரு வச்சுடாதீங்க ! இதுல வாய்ஸ் ரெகார்ட் வேறு அல்லோலப்படுகின்றது.

அடுத்துதாக யாரை பார்த்தாலும் மொபைல் போனுக்கு அடுத்ததாக கையில் இருப்பது லேஅவுட். கண்ணில் பட்டவரை முதலில் நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் என்று தப்பித்தவறி கேட்டுவிடக் கூடாது அப்படி கேட்டு விட்டால் அதன் பிறகு கையில் உள்ள லே அவுட் தான் பேசும். “நான்” என்று ஆரம்பிக்கும் அவர் என்ன பொம்புளை புள்ளையை பெத்துகிட்டு இன்னும் மனை வாங்காமல் இருக்கிறீர்கள் என்ற அதிரையின் அக்கறைகள் வார்த்தைகளில் தெறித்து வரும். இவர்கள் சொல்லும் வார்த்தைகளைக் கேட்டால் நாம்தான் அடுத்த மைசூர் மகாராஜா என்பதுபோல் ஒரு மாயபிம்பம் மனதில் ஓடும். அடுத்த இலக்கு கொட நாடுதான் என்ற பின்னி திரை விரியும். கழுகுக்கு மூக்கில் வியர்ப்பதுபோல் வெளிநாட்டில் இருந்து யார் வந்தாலும் இவர்களுக்கு வியர்த்துவிடும். இன்னும் சொல்லப் போனால் நாம் இங்கு டிக்கெட் எடுப்பதற்கு முன் அவர்களுக்கு நம் வருகை தெரிந்து விடுகின்றது . உப்பளத்தில் விளைவது உப்பு என்று மட்டும் உள்ளூரில் பிறந்த நமக்கு தெரியாவிட்டால் அதை எல்லாம் கூட வளம் கொழிக்கும் பூமி என்று  நம் உச்சந்தலையில் வைத்துக் கட்டிவிடுவார்கள். 

இப்போது இந்த ரியல் எஸ்டேட் புரோக்கர்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு விகிதாச்சாரம் ஆண்களை விட கூடுதலாகி விட்டது  இவர்களும் களத்தில் இறங்கி அடுப்பங்கரை வரை வந்து ஆசைகாட்டும் பெண்களும் அதிகரித்து விட்டார்கள்.  உடல் உழைப்பு இல்லாமல் தூக்கினார் போல வரும் ஒரு பெரும்தொகை கமிசன் என்று கைமாறுகிறது. ஆனால் இவர்கள் எல்லோரிடமும் காணப்படும் பொதுவான அம்சம் வாங்க “தம்பி டீ குடிக்கலாம்” என்று வலிய உபசரித்து அழைப்பார்கள். கடைசியில் காசு நாம்தான் அழுதாக வேண்டும். சில சமயம் ஒரு டீலிங்குக்குப் பின்னால் ஓன்பது பேர் இருக்கிறார்கள். பத்திரம் முடிந்ததும் பழைய நாகரத்தினம் சார் வீட்டு வாசலில் நின்று எல்லோருக்கும் ஆளுக்குக் கொஞ்சம் என்று பிரித்துக்கொண்டு “கொடுவாப்பிசுக்கு” வாங்கப் போய்விடுவார்கள். சொத்து விற்பவரும் வாங்குபவரும் கொடுவாபிசுக்கு வாங்கும் முன்னும் பின்னும் யோசிக்கின்றார்கள் ஆனால் இந்த ப்ரோகேர்கள் வீட்டில் தினமும் கொடுவா பிசுக்குதான். கொஞ்சம் கூடுதல் நேரம் இது போன்ற புரோக்கரிடம் பேசினால் நம் மூளை கொதித்து காது வழியாக வழிந்து வந்து விடும். 

ஊருக்கு சென்று வருபவர்கள் உங்களின் ஆறாவது அல்லது இப்போது புதிதாக சொல்கிறார்களே ஏழாவது அறிவை பயன்படுத்தி, மாலை வேளைகளில் இப்படிக் கூட்டம் கூட்டமாக மெயின் ரோட்டில் நின்று அதுவும் ஒரு பைக் போகக்கூட இடம் இல்லாமல்- பேட்டரி தீரும்வரை ஹாரன் அடித்தாலும் நகராமல் ஆணி அடித்தது போல் நின்று என்னதான் பேசுகிறார்கள் என்று யாராவது சொல்லுங்கள். குறிப்பாக பழைய அண்ணாசிலை, தைக்கால் ரோடு முக்கத்தில் இருந்து, பழைய போஸ்டாபீஸ்களும் ரோடுவரை இந்தக் கூட்டம் நின்று பேசிக் கொண்டே இருக்கிறது. இந்த சாயங்கால சட்டசபை கலைக்கப்பட்டால்தான் அந்த இடங்களில் நடக்கும் பைக் சறுக்கல்களும் விபத்துக்க தவிர்க்கப்படும்.

ஒருநாள் பட்டுக்கோட்டை போய் இருக்கும்போது பைக் ரிப்பேர் ஆகிவிட்டது. ஸ்பேர் கிடைக்கவில்லை. தஞ்சையில் இருந்து வாங்கி மாட்டி அடுத்தநாள் தருவதாக மெக்கானிக் கூறிவிட்டார். சரி என்று ஒண்ணாம் நம்பர் பஸ்சில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது இரு நடுத்தர வயது நண்பர்கள் பேசிக்கொண்டு வந்ததை கேட்கும் பொன்னான வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் பேசியதில் சில வார்த்தைகள் எனக்கு விளங்கவில்லை. இதைப்படிக்கும் யாராவது “தலைக்குமேல் தொட்டிருக்கும் அடைப்புக்குள்” இருக்கும் வார்த்தைகளை விளங்கினால் சொல்லுங்கள்.

  • என்னப்பா ஆயிரம் ரூபா கைமாத்துக் கேட்டேன் ஒன்னும் சொல்லாமல் இப்படி “பாளிஸ்டரா” ஒதுங்கிட்டியே!  
  • இங்கிருந்து மல்லிபட்டினம் எத்தனை “கிலோ மீட்டு?”
  • ஹோட்டல் வேலை என்றால் நிறைய “கிப்ஸ்” கிடைக்கும்னு சொல்றாங்களே! ஆனலும் வேண்டாம் என்று அவன் “பெட்ரோல் பேங்க்கிலே “ வேலை செய்யுறான். 
  • நேற்று ராத்திரி வீட்டில் சிக்கன் “ஸ்பிரே.”யோட ஹாப் பாய்ளும் 
  • என்னப்பா உங்க அப்பாவுக்கும் சித்தப்பாவுக்கும் ஏதோ தகராறு என்கிறார்களே யாராவது ஒருவர் "காம்போசிஷன் " செய்து வச்சா என்ன?

அடுத்து ஒருநாள் முத்துப்பேட்டையில் இருந்து பட்டுக்கோட்டை வரும் வழியில் தாலுக்கா அலுவலகம் அருகே வரும்போது ஒரு வாலிபர்  லிஃப்ட் கேட்டார்.

நானும் பைக்கை நிறுத்தி “எங்கு போகணும் என்று கேட்டேன்”.

“ராஜாமடம் போகணும்” என்றார். நான் அதிரை போகின்றேன் அங்கே இறக்கி விடாவா?” என்றேன்.

“சரி” என்று சொல்லி பைக்கில் ஏறி அமர்ந்தவரிடம்…

“எங்கு வேலை செய்கின்றிர்கள்?”  என்றேன்.

“வேலைக்குத் தான் இண்டர்வியூ வந்து விட்டு போகிறேன்” என்றார்.

நானும் விடாமல் “என்ன வேலை?” என்றேன்.

அவரும் இறுக்கமாகச் சொன்னார் “தலையாரி வேலைக்கு 30 ஆட்கள் தேவையாம், மொத்தம் 230  பேர்கள் இண்டர்வியூ வந்தார்கள்” என்றார் .

நனோ “படிப்பு தகுதி என்னவாம்?” என்றேன்.

“பத்தாம் வகுப்பு தேறி இருக்க வேண்டும்” என்றவர் தொடர்ந்து “நான் எம்ப்லாய்மெண்ட் அலுவலகத்தில் பதிவு செய்து இருந்தேன் அங்கிருந்துதான் எனக்கு கடிதம் அனுப்பி இங்கு வரச்சொல்லி இருந்தார்கள்” என்றார். 

நம் ஊரில் மோட்டார் சைக்கிள் இல்லாத வீடே கிடையாது. ஆனால், படித்த யாரும் இதுபோல் எம்ப்லாய்மெண்ட் அலுவலகத்தில் எண்ணிக்கை எடுக்கும் அளாவுக்கு கூட பதிவு செய்து இருப்பதாக தெரியவில்லை.

தலையாரி என்றதும் என் நினைவுக்கு வந்தது இந்தியாவில் அடிமைத்தனம் தொடங்கும் இடம் இந்த V.A.O அலுவலகம்தான். இங்கு பார்த்தால் ஒரு பாழடைந்த டேபிள் (வெள்ளைக்காரன் விட்டு விட்டுப் போனதா?) ஒரு ஓட்டை நாற்காலி அதுவும் காலுக்கு பல சப்போர்ட் கொடுத்து ரீ-ப்பேர் பலகை அடித்து இருக்கும். இதில் தான் V .A .O . அமர்ந்து இருப்பார் அவருக்கு உதவியாக இரண்டு தலையாரிகள் தரையில்தான் அமர்ந்து இருக்க வேண்டும்.  இவர்கள் தரையில் உட்கார்ந்த இடத்தை பார்த்தால் தலைக்கு  தேய்த்த எண்ணை சுவற்றில் ஒட்டி, ஒட்டி தலை சைசுக்கு பலவித அஜந்தா ஓவியங்களை காணலாம் . V .A .O இல்லாத நேரத்தில் இந்த தலையாரிகளின் அல்லபறை பேச்சு இருக்கே அது I A S . I  P  S .  ரேஞ்சுக்கு இருக்கும் என்பது வேறு விசயம்.  சரி விசயத்திற்கு போவோம் .

நானும் தொடர்ந்து விடாமல் “இண்டர்வியூவில் என்ன கேள்வி கேட்டார்கள் என்றேன்.”

அவரோ “கல்லணையை கட்டியது யார்?  தஞ்சை பெரிய கோயிலை கட்டியது யார்? (ஆகா சூப்பர் கேள்வி)” என்றார்

அட! நானோ “என்னது ஒன்றாம் இரண்டாம் வகுப்பில் கேட்கும் கேள்வியல்லவா என்றேன்.” 

அதற்கு அவர் “ஆமாம் ஆனால் கடைசி கேள்விக்கு மட்டும் என்னால் மட்டும் அல்ல அங்கு வந்த அனைவராலும் பதில் சொல்ல முடியவில்லை” என்றார். 

விழி தூக்கி ஸாரி புருவம் உயர்த்தி “அப்படி என்ன கேள்வி என்றேன்.” 

இறுக்கம் தளர்ந்து சற்றே கோபமான முகத்தோடு “இந்த வேலை உனக்கு வேண்டும் என்றால் ஒன்னரை இலட்சம் தரனும் என்றார்கள்!!!. ஏழு ஆயிரம் மாதச் சம்பள வேலைக்கு ஒன்னரை லட்சம் கொடுத்து சேர்ந்தால் நாங்கள் அந்த ஒன்னரை லட்சம் பணத்தை எப்படி நேர்மையாக சம்பாதிப்பது?” என்று கேட்டார்.  

இவரின் இந்த கேள்விக் கனையும் நியாம்தானே ! இதற்கு பதில் சொல்லத்தான் என்னாலும் முடியவில்லை (!!). தெள்ளத் தெளிவாக ஒன்று மட்டும் புரிந்தது வேலையில் சேர இதுபோன்ற லஞ்சத்திற்கு விதை விதைக்கப்படும் இடம் இம்மாதிரியான வேலைக்கு சேருமிடமாக இருப்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை !

-Sஹமீத்

வழக்குக் கூண்டில் - வறுமைக்கோடு... ! - குறுந்தொடர் - 1 18

அதிரைநிருபர் பதிப்பகம் | March 28, 2012 | , ,


குறுந்தொடர்- 1. 
வழக்குக் கூண்டில் வாய்பொத்தி நிற்கும் வறுமைக்கோடு.

அண்மைக் காலமாக இந்திய அரசின் திட்ட கமிஷனின் அளப்பறிய கடாட்சத்தாளும் கருணையாலும் "வறுமைக்கோடு"என்ற வார்த்தையைக் கேட்டு வருகிறோம். கடந்த வாரம் ஊடகங்களிலும், பாராளுமன்றத்திலும் (வழக்கமான சந்தைக்கடை கூச்சலுடன்)இந்த வார்த்தை எதிரொலித்தது. வறுமைக்கோட்டுக்கு கீழே என்றும், வறுமைக்கோட்டுக்கு மேலே என்றும் வார்த்தை சிலம்புச்சண்டைகள் நாடெங்கும் அரங்கேறின. இதைப்பற்றி சில கருத்துக்களை இந்த பதிவில் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 

கோடுகளைப்பற்றி நாம் பேசப்போனால் சின்ன வயதில் நாம் அடித்து விளையாடிய நொண்டிக்கோடு விளையாட்டில் இருந்து, பூப்பந்து, கால்பந்து, கிரிக்கெட்,டென்னிஸ் ஆகிய இன்னபிற விளையாட்டுகளின்  மைதானங்களின் கோடுகளிலிருந்து ,  நாடுகளுக்கிடையே போடப்படும் எல்லைக்கோடுகள் வரையும், பூமிப்பந்தின் மேல் இருப்பதாக புவி இயலில் படித்த பூமத்திய ரேகை, கடக ரேகை மற்றும் மகர ரேகை வரை நமக்குத் தெரியும். அண்ணன்மாரே! தம்பிமாரே! வறுமையும் நமக்குத்தெரியும், புரியும். கொடிது! கொடிது! வறுமை கொடிது! அதனினும் கொடிது இளமையில் வறுமை! என்று ஒளவையார் பாடியதாக ஆறாம் வகுப்பிலேயே மனப்பாடப்பகுதியில் படித்து இருக்கிறோம். ஆனால் வறுமைக்கோடு தெரியாதே!

வறுமைக்கோடு என்பது என்ன? பொருளாதாரக் கண்ணோட்டத்தில் வறுமையையும்,வறுமைக்கோட்டையும் விளக்குவதானால் முதலில் வறுமை என்பதை சுருக்கமாக இப்படி விளக்கலாம். 

உயிர்வாழத்தேவைப்படும் குறைந்தபட்ச அத்தியாவசியமான பொருள்களையோ, சேவைகளையோ அல்லது சாதனங்களையோ பெறமுடியாத நிலையில் இருப்பவர்களை வறுமையில் அல்லது ஏழ்மையில் இருப்பவர்களாக விளங்கலாம். STATE OF ONE WHO LACKS AN USUAL AND SOCIALLY ACCEPTABLE AMOUNT OF MONEY, SERVICES OR MATERIAL IN HIS POSSESSION. 

இதில் குறைந்தபட்சத்தேவை என்பதை வரையறுக்கும் அளவுகோலுக்கு பொருளாதார மேதைகள் வறுமைக்கோடு POVERTY LINE  என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள். இந்த அளவுகோலுக்கு அதிகமாக துய்ப்பவர்களுக்கு வறுமைக்கோட்டுக்கு மேல் இருப்பவர்கள் ABOVE POVERTY LINE என்றும் , இந்த அளவுகோல் அளவு கூட துய்க்க/பெற முடியாதவர்களுக்கு வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்பவர்கள் BELOW POVERTY LINE  என்றும் அழைக்கப்படுகிறார்கள். 

எந்த ஒரு பொருளாதார அளவுகோலுக்கும் ஒரு அடிப்படை (BASE) இருக்கும். அந்த அடிப்படையை வைத்தே பொருளாதார புள்ளி விவரங்கள் அளவிடப்பட்டு வளர்ச்சிக்கான திட்டங்கள் தீட்டப்படும். இந்த அடிப்படை என்பது உயிரற்ற உடலுக்கு ஊதிவிடும் சுவாசம் போன்றது.  இந்த அடிப்படையைத் தேர்வு செய்வது என்பது மிக மிக முக்கியம்.  ஏணி வைத்து ஏற வேண்டிய உயரத்துக்கு ஏணி வைத்து ஏறவேண்டும். கால் பெருவிரலை ஊன்றி உன்னி ஏறவேண்டியதுக்கு பெருவிரலின் சக்தியே  போதும். இமய மலை ஏறவேண்டி இருக்கும்போது ஏணியைக்கொண்டுபோனால் எதுவும் நடக்காது. கையால் எடுக்க முடிந்த காரியத்துக்கு கேட்டர்பில்லர்(CATERPILLAR) தேவை இல்லை. உங்கள் ஜேப்பில் உள்ள பணத்தை எடுக்க ஜெ சி பி(JCB) தேவையா?. 

அதனால்
- அளவுகோலை உண்டாக்க அடிப்படை (BASE).
-அதன் மூலமான புள்ளி விபரங்கள் (FACTS).
-அந்த புள்ளிவிபரங்களை உள்ளடக்கிய திட்டம் (PLAN).
- திட்டத்தின் அடிப்படையில் செயல் (EXECUTION).

ஆகியன தேவை. இந்த அடிப்படைதான் நாம் போடும் திட்டத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும். இது ஒரு நாட்டுக்கு மட்டுமல்ல ஒரு வீட்டுக்கும் பொருந்தும் .

வறுமைக் கோட்டுக்கான அடிப்படை என்ன?எதைவைத்து வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்களைக் கணக்கிடுவது? ஆகிய கேள்விகளுக்குரிய விடை நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. ஆனால் இந்தியா எடுத்துக்கொண்ட அடிப்படை இமயமலை ஏறுவதற்கு ஏணி கொண்டுபோன கதையாக இருக்கிறது என்பதுதான் இந்த ஆக்கத்தின் ஹை லைட். 

வறுமைக்கோட்டின் அடிப்படை பிலிப்பைன்ஸ் நாட்டில் அந்நாட்டு மக்களின் வாங்கும் சக்தியாகும். அமெரிக்காவில் ஒரு வருடத்தில் – ஒரு குடும்பத்தின் மொத்த வருமானம் அடிப்படையாகும். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் HDI  என்று அழைக்கப்படும் HUMAN DEVELOPMENT INDEX  என்பதை அடிப்படையாக வைத்துள்ளது. இந்த HUMAN DEVELOPMENT INDEX  என்ற அடிப்படையே  உலகில் பரவலாக பெரும்பான்மை நாடுகளால் பின்பற்றப்படுகின்ற அடிப்படையாகும்.  இலங்கை போன்ற நாடுகள் தங்களது அரசியல், இன , மொழி அடிப்படையில் வித்தியாசமான அணுகுமுறைகளைக் கையாளுகின்றன. மக்கள் நலம் பேணாத அரசுகள் உள்ள நாடுகள் இது பற்றி கண்டு கொள்வதே இல்லை. அங்கேயெல்லாம் வந்தானுக்கு வந்தான் போனானுக்கு போனான். 

ஏழ்மையில் உழலும் மக்களை நோக்கிய அரசின் உதவும் கரங்களை நீளச்செய்யும் இந்த வறுமைக்கோடு நிர்ணயம் இந்தியாவைப் பொறுத்தவரை கேலிக்கூத்து ஆக்கப்பட்டிருக்கிறது. அதாவது இந்திய திட்ட கமிஷனின் அறிவிப்பின் பிரகாரம் இந்தியாவில் வசிக்கும் எந்த ஒரு குடிமகனும் அவன் நகர்ப்புறத்தில் வசித்தால் ஒரு நாளைக்கு Rs. 29/=  ம் கிராமப்புறத்தில் வசித்தால் Rs. 22/= ம் ஈட்ட முடிந்தால் அவன் வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ளவன் ; அவனை வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பவன் என்று கருதி அரசின் நலத்திட்டங்களின் பயன்களை அவனுக்கு வழங்கவேண்டியதில்லை என்று கூறாமல் கூறி இருக்கிறது. அதாவது ஒரு நாளைக்கு Rs. 29/=  சம்பாதித்தால் இந்திய அரசின் திட்ட கமிஷனின் பார்வையில் அவன் பணக்காரன். இந்த அளவுகோல் எவ்வளவு தவறானது என்று ஒரு பொருளாதாரம் படித்தவனிடம் கேட்க வேண்டியதில்லை. ஒரு பொட்டுக்கடலை விற்பவன் கூட கூறிவிடுவான். 

திட்ட கமிஷனின் இந்த கூற்றைப் பார்க்கும்போது இது திட்ட கமிஷனா? அல்லது நாம் திட்டுவதற்கான கமிஷனா என்று கேட்கத்தோன்றுகிறது. (இவ்வளவு நாள் இப்படி கலவாணிப் பயல்களோடவா சகவாசம் வைத்து இருந்தோம்?) எந்தப் பொருளாதார கோட்பாட்டின் அடிப்படையில் இப்படி ஒரு நகைப்புக்குரிய அளவுகோலை வைத்து நிர்ணயம் செய்தீர்கள் என்று கேட்டால் அவர்கள் சொல்லும் பதில் இன்னும் நகைப்புக்குரியது. அதாவது கிராமப்புறத்தில் உள்ளவர்கள் உயிர்வாழ 2400  கலோரி சக்தியும் , நகர்ப்புறத்தில் உள்ளவர்கள் உயிர்வாழ 2200 கலோரி சக்தியும் போதுமாம். இந்த அளவு கலோரி உள்ள உணவுகளை இந்த Rs. 22/= & Rs. 29/= ல் பெற்றுக்கொள்ள முடியுமாம். 

இந்த அளவு கலோரி உணவு உண்ட இந்த வறுமைக்கோடு என்ற பாவப்பட்ட ஜீவன்,  இந்த விவாதம் நடக்கும் நமது வழக்கு மன்றத்தில் வாய் பொத்தி நிற்கிறது காரணம் தளர்ச்சி. பேசக்கூட முடியவில்லை. 

இந்த விவாதம் பொருந்துமா? 

இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து பார்க்கலாம். 

-இபுராஹீம் அன்சாரி

கவிதை – ஓர் இஸ்லாமியப் பார்வை – 12 10

அதிரைநிருபர் பதிப்பகம் | March 27, 2012 | , ,

நபிவரலாற்றினை ஆழமாக ஆய்வு செய்யும்போதுதான், இஸ்லாமிய இலக்கியத்தின் விரிவும் விளக்கமும் தெரிய வருகின்றன.   அரபியில் நபிவரலாற்றைத் தொகுத்தவர்களுள் குறிப்பிடத் தக்கோர் மூவர்.  அவர்கள் – முஹம்மத் இப்னு ஸஅத், முஹம்மத் இப்னு இஸ்ஹாக், அப்துல் மலிக் இப்னு ஹிஷாம் ஆகியோர் ஆவர்.  இவர்களுள் மூன்றாமவரான இப்னு ஹிஷாம் அவர்கள் தமது நபிவரலாற்றுத் தொகுப்பைக் கவிதைகளால் விரவச் செய்து, ஒரு கவிதைக் காப்பியமாகவே படைத்துள்ளார்.  இந்த அறிமுகத்தோடு, சென்ற பகுதியின் தொடரைப் பார்ப்போம்:

‘மூத்தா’ப் போர் நபித் தோழர்களுள் பன்னிருவரின் இறப்பிற்குக் காரணமாக அமைந்துவிட்டிருப்பினும், அது முஸ்லிம்களுக்கு வெற்றியாகவே கருதப்பட்டது.  மாவீரர் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களின் போர் வியூகத்தால் இஸ்லாமியப் படை ஓரளவிற்கு வெற்றியை உறுதி செய்துவிட்டு, மதீனாவுக்கு வந்து சேர்ந்தது. 

“..... பின்னர் அக்கொடியை ‘சைஃபுல்லாஹ்’ (அல்லாஹ்வின் வாள்) பற்றிப் பிடித்தது.  அவரின் கைகளில் முஸ்லிம்களுக்கு அல்லாஹ் வெற்றியை அளித்தான்!” என்று நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள்.

(சஹீஹுல் புகாரீ – 1246, 2798, 3063, 3630, 3757, 4262).

இதனடிப்படையில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றே திரும்பினார்கள் என்றாலும், மக்கத்துக் குறைஷிகளோடு கைகோர்த்து நின்று, அவர்களுக்கு முஸ்லிம்கள் பற்றிய இரகசியத் தகவல்களைக் கொடுத்துக்கொண்டிருந்த நயவஞ்சகர்கள், “படை வீரர்கள் தம்  உயிருக்கு அஞ்சி மூத்தாவிலிருந்து புறமுதுகிட்டு வந்துவிட்டார்கள்” என்று பொய்த் தகவலைப் பரப்பினார்கள்!

ஆனால், முஸ்லிம் படை வீரர்கள் இறப்பிற்கு அஞ்சா இதயம் கொண்டவர்கள் என்பதை, மதீனாவுக்குத் திரும்பி வந்த படை வீரர் ஒருவரின் கீழ்க்காணும் துயர்க் கவிதை மெய்ப்பித்து, நயவஞ்சகர்களின் நாவுகளை அடக்கிற்று:

كفى حزنا اني رجعت وجعفر
وزيد و عبدالله في رمس أقبر
قضوا نحبهم لما مضوا لسبيلهم
وخلفت للبالوى مع المتغبر
ثلاثة رهط قدموا فتقدموا
إلى ورد مكروه من الموت أحمر

இதன் தமிழ்க் கவியாக்கம்:

அந்தோ! என்கை சேதமே! அழுது
வந்தேன் திரும்பி! வாடுகின் றேனே!
தோழர் மூவர் ஜஅஃபர் ஜெய்தும்
வீழா வீரர் ரவாஹா மைந்தரும்
என்னை முந்தி இறப்பை எய்தி
விண்ணைச் சேர்ந்து விழைந்ததைப் பெற்றார்
இறையின் பாதை இதுதா னென்று
முறையாய்த் தெரிந்த மூவரும் தத்தம்
கடமை முடித்துக் கதிபெற் றார்கள்
கடையன் யானோ கதியற் றிங்கே
புழுதி படிந்த புண்ணுட லோடும்
அழுது வடிந்தே அரும்பதி வந்தேன்
முப்படை யோரை முன்னின் றவர்தான்
தப்பித மின்றித் தணித்தவர் மதீனா
திரும்பிடக் கூறினார் திடந்தோள் வீரர்
விரும்பிடா விடினும் வீடுவந் தடைந்தே
மாற்றார் கைகளில் மாண்டிடா நிலையைத்
தோற்றார் என்னல் துர்ச்செய லன்றோ?

கையறு நிலை போல் கவிதை பாடிய அன்புத் தோழரின் உணர்வைக் கண்டு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நயவஞ்சகர்களைக் கடுமையாகச் சாடினார்கள்.  (சான்று: சீறத் இப்னு ஹிஷாம்)

(ஆய்வு இன்னும் தொடரும், இன்ஷா அல்லாஹ்....)
-அதிரை அஹ்மது

முதல் "கணினித் தமிழ்ப் படைப்பாளரு"டன் ஒரு சந்திப்பு! 33

அதிரைநிருபர் பதிப்பகம் | March 27, 2012 | , , , ,


இந்தப் பதிவை நீங்கள் உங்கள் கணினித்திரையிலோ அல்லது பிரிண்ட் எடுத்தோ வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள் எனில் அதற்குப் பின்னணியில் மூலகாரணமாக இருந்த ஒருவரைப் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். 1980களின் இறுதியில் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் இயங்குதளம் பயன்பாட்டிற்கு வந்து கொண்டிருந்த காலகட்டத்தில் பெரும்பாலான கணினிகளில் ஆங்கிலம் கோலோச்சியபோது,சவூதி அரேபியாவிலுள்ள தமாம் மாநிலத்தின் சட்டத்துறையில் அலுவலச் செயலாளராக பணியாற்றியவரின் முயற்சியால் அது முதன்முதலாக சாத்தியமானது என்பது பலருக்கும் வியப்ளிக்கும் செய்தியாகவே இருக்கக்கூடும்.

பிரபல மார்க்க அறிஞர் இக்பால் மதனீ அவர்கள் தலைமையிலான குழு, திருக்குர்ஆனைத் தமிழில் மொழியாக்கம் செய்ததைத் தமிழில் தட்டச்சு செய்யும் பணிக்கு உதவியாக கணினியையும் பயன்படுத்த முனைந்தபோது, கணினிகளில் தமிழ் உள்ளீடு செய்யும் வசதிகள் அக்காலகட்டத்தில் இருந்திருக்கவில்லை. MS-Windows V-1 இல் BITMAP EDITOR என்ற மென்பொருள் உதவியால் சுயமாக தமிழ் எழுத்துருக்களை வரைந்து,மற்றொரு மென்பொருள் உதவியால் WINDOWS இயங்குதளத்தில் செயல்படும் கணினிகளில் வாசிக்கும்வகையில் மாற்றப்பட்டு உருவான முதல் எழுத்துருக்களுக்கு TOPAZ, DIAMOND, SAPPHIRE  என்ற பெயர்களிட்டு அழகு தமிழ் கணினியில் முதல் அங்கீகாரம் பெற்ற பெரும் பேறு இவராலேயே கிடைத்தது.

இந்தத் தகவலை துபாயிலிருந்து வெளியாகும் கல்ஃப் ந்யூஸ் (20.11.1993) ஆங்கில நாளிதழ், "Tamil in MS Windows" என்ற தலைப்பில் செய்தியாக வெளியிட்டுப் பாராட்டி இருந்தது. மற்றும் "விண்டோஸில் பவனிவரும் தமிழ்" எனும் தலைப்பில் (ஜென்னி) ஒரு கட்டுரையைத் தமிழ்க் கம்ப்யூட்டர் இதழ் (28.8-10.9.1995) வெளியிட்டது. MS WINDOWSல் இயங்கக் கூடிய பல எழுத்துருக்கள் இப்போது புழக்கத்தில் வந்து விட்டன.ஆனால்90 களின் தொடக்கத்தில் எம் எஸ் விண்டோஸில் இயங்கக் கூடிய எல்லா மென்பொருளையும் தமிழில் காட்டச் செய்தவர் அவர்!.

1995களில் இணையம் பரவலாகப் புழக்கத்திற்கு வரத்தொடங்கியபோது, பல்துறை எழுத்தாளர் சுஜாதா போன்றோர் "மின்னம்பலம்" என்ற தமிழ் இணைய தளத்தில் எழுதி வந்தார்கள்.இங்கொன்றும் அங்கொன்றுமாக ஓரிரு தமிழ் தளங்களே இருந்தன. கணினியில் தமிழ் வாசிக்க அதற்கான எழுத்துருவைத் தரவிறக்கம் செய்தபிறகு, கணினியில் தேவையான மாற்றங்களைச் செய்தால்தான் அந்தந்த நாடுகளுக்கேற்பத் தமிழைத் தெளிவாக வாசிக்க முடியும்.

இந்தச்சூழலில்தான் அகிலத்திற்கே அருட்கொடையாக வந்த திருக்குர்ஆன் தமிழிலும் இணையவலம்வர வேண்டும் என்ற முயற்சியில் இறங்கி, http://sites.google.com/site/tamilquraan2/ 'இணையத்தில் இறைமறை' என்ற முதல் இஸ்லாமியத் தளம் மட்டுமின்றித் திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பும் முதல்முதலாய் இணையத்தில் இவரால் வலம் வந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

இவை மட்டுமின்றி, தமிழகத்தில் வெளியாகும் தினமணி போன்ற நாளிதழ்களில் அவ்வப்போது வெளிவரும் சில கட்டுரைகளில் இஸ்லாத்திற்குப் புறம்பான குற்றச்சாட்டுகளுக்கு "அதி.அழகு" என்ற பெயரில் (முஸ்லிம் பெயரில் எழுதப்படும் வாசகர் கடிதங்கள் புறக்கணிக்கப்பட்டதால்) வாசகர் கடிதமாகவும், கட்டுரையாகவும் அனுப்புவதும் இவரது பொழுதுபோக்கு.

கணினி மற்றும் இணைய வல்லுனர்களை உலகத் தரப்படுத்த வழங்கப்படும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் MCSE சான்றிதழைத் தமது 50+ வயதில் பெற்று, நவீன கல்விக்கு வயது ஒரு தடையில்லை என்பதற்கு முன்மாதிரியாக விளங்கினார். அதிரையர்களின் மின்மடல் குழுமங்களில்,பகிர்ந்து கொள்ளப்பட்ட உரையாடல்களில் சமூக அக்கரை கலந்த கருத்துக்கள் நறுக்குத் தெரித்தாற்போல் 'நச்'சென்று இருக்கும்.

தமிழ் மொழியில் மட்டுமின்றி ஆங்கிலம்,அரபி, உர்தூ, மலையாள மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.தாம் பெற்ற கல்வி ஞானத்தைத் தம்மைச் சுற்றியுள்ளவர்களும் கற்றுபயன்பெற வேண்டுமென்ற ஆவலில் ஷார்ஜாவின் மஸ்ஜித் அல் ஃகலஃப் பழைய கட்டிடத்தில் குர் ஆன் ஓதுவிக்கும் பணியிலும் இளைஞர்களின் பேச்சுத்திறனை வளர்க்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தார். துபையில் யில் இஸ்லாமிய வினாக்களுக்கு விடையளிக்கும் பொறுப்பும் ஏற்றிருந்தார்.சத்தியமார்க்கம்.காம் தளத்தில் பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார். 2010 கோவையில் நடந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் அதிரையின் அருந்தவப் புதல்வர்களில் ஒருவரான மர்ஹூம்.உமர்தம்பி (தமிழ் ஒருங்குரி எழுத்துக்களை உருவாக்கிய கணிமைக் கொடையாளர்) அவர்களுக்கு  இணைய மாட்டில் அரங்கம் அமையப் பெறவும் அதோடு சிங்கப்பூர் தமிழ் சங்கம் "தமிழ் இணைய அறிஞர்" என்ற விருது கிடைப்பதற்கான முயற்சிகளில் இவரது அர்ப்பணிப்பும் ஈடுபாடும் நிச்சயம் நன்றிக்குரியவை. 

தமிழகத்தின் பிரபல சமுதாய மற்றும் மார்க்க அறிஞர்கள் இக்பால் மதனீ, கமாலுத்தீன் மதனீ,அப்துல்காதிர் மதனீ, அப்துஸ் ஸமது மதனீ, பி.ஜைனுல் ஆபிதீன், மர்ஹூம்.காயல் S.K.   , காயல் ஹாமித் பக்ரீ, பேரா.ஜவாஹிருல்லாஹ், S.M. பாக்கர் என அமைப்புப் பேதமின்றி அனைவருடனும் தொடர்பிலிருந்ததோடு அதிரையின் மார்க்க வழிகாட்டி அமைப்பான 'தாருத் தவ்ஹீதை' உருவாக்கிய மூத்த தவ்ஹீத் பிரச்சாரர். பிரபல எழுத்தாளர் அதிரை அஹமது, "தோழர்கள்" நூருத்தீன் ஆகியோருடனும் தொடர்பிலிருந்து பல்துறை சிந்தனையாளர்களுடன் நட்பிலிருப்பது தற்காலத்தில் அரிய விசயமாகும்.
==================
இத்தனை சிறப்புகளையும் பெற்றிருந்தாலும் கொஞ்சம்கூடப் பெருமையின்றி எளிமையாக,குடத்திலிட்டவிளக்காக, தேனீயாய் உழைத்து ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள ஷார்ஜா எக்ஸ்போ சென்டர் கணினிப்பிரிவில்உயர்பொறுப்பில் இருந்து, இம்மாதம் மார்ச்-2012 முதல் ஓய்வு பெற்றுள்ள நமது மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய கடற்கரைத்தெரு @ ஹாஜா நகர் ஜமீல் காக்கா அவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள அதிரைவாசிகள்,மற்றும் பல ஊர்களைச் சேர்ந்த நண்பர்கள்,அபிமானிகள் இணைந்து இன்ஷா அல்லாஹ் மார்ச்-30,2012  (வெள்ளிக்கிழமை) அன்று துபாய் மம்சார் பூங்காவில் "அதி.அழகுடன் ஓர் அழகிய மாலை" என்ற சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம். 

இச்சந்திப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் nainathambi@live.in / adiraiwala@gmail.com ஆகிய மின்மடல் முகவரியில் அல்லது 055-4212 575  /  050-4737200 என்ற செல்பேசி எண்களில் மார்ச்-28 ,2012 க்குள் தொடர்பு கொள்ளலாம். 

-அதிரைநிருபர் குழு

சகோதரியே! - 2 36

அதிரைநிருபர் பதிப்பகம் | March 26, 2012 | , , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால் ...

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)    - (இறைவனின் சாந்தியும், சமாதானமும் தாங்கள் அனைவர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!).

அறிமுக உரையில் பதிவு மிக குறைவாக இருந்ததாக சகோதரர்கள் வருத்தப்பட்டு அடுத்த அத்தியாயம் நீண்ட..... பகுதியாக வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அதன்படி இந்த அத்தியாயம் நீண்டதாகவே வருகிறது.

9 மாதங்கள்  முடிந்து 10வது மாதம் நெருங்கியது. . .

மருத்துவமனை:
10வது மாதம் பிரசவ வலி ஏற்பட்டவுடன் மருத்துவமனைக்கு வந்துவிட்டார்கள். உறவுகள் அனைவரும் ஆண் குழந்தையை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறார்கள். நானோ அபுதாபியில் (வளைகுடா வாழ் சகோதரர்களுக்கு மனைவியின் பிரசவ நேரத்தில் அருகில் இருக்கும் வாய்ப்பு கனவாகவே போய் விட்டது) சுகப்பிரசவமாகி தாயும், சேயும் நலமாக இருக்க வேண்டும் என்ற துஆவுடன் காத்திருக்கிறேன்.
  
குழந்தை பிறந்தது:
மாஷா அல்லாஹ்! குழந்தை பிறந்து விட்டது. என் மைத்துனரிடம் இருந்து செல்பேசி அழைப்பு வந்தது. குழந்தை பிறந்த செய்தியைச் சொல்லாமல்; மச்சான் அல்ஹம்துலில்லாஹ்! சொல்லுங்கள் என்று சொன்னார். நானும் அல்ஹம்துலில்லாஹ்! என்று சொன்னேன். மச்சான் உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்று சொன்னார் மீண்டும் அல்ஹம்துலில்லாஹ்! சொன்னேன். (நான் வெறுப்படைந்து விடுவேன் என்று நினைத்து முதலில் அல்ஹம்துலில்லாஹ்! சொல்லுங்கள் என்று சொல்லியிருப்பார் என்று நினைத்துக்கொண்டேன்). வல்ல அல்லாஹ்வின் அருளால் எனக்கு மகள் பிறந்த செய்தி கேட்டு மகிழ்ச்சியே!.

மச்சான்;  குழந்தையை நர்ஸ் கொண்டு வந்து கொடுத்தவுடன் பிஸ்மி சொல்லி வாங்கினேனா பிறகு திரும்பிப் பார்க்கிறேன் ஒருத்தியும் வார்டில இல்லை என்று என் மனைவியின் சகோதரி என்னிடம் சொன்னார்கள். என்ன காரணம் ஆண் குழந்தை பிறக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்த உறவுகளுக்கு பெண் குழந்தை பிறந்த செய்தி கேள்விப்பட்டு மனைவியின் சகோதரியில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் கண் கலங்கி வார்டை விட்டு வெளியேறி விட்டார்களாம். ஆண் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்த்த என் மனைவிக்கும் வருத்தம்தான்.

(என்ன காக்கா உங்களுக்கு ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசையே இல்லையா? என்று கேட்பது காதில் விழுகிறது). ஆண் குழந்தை அதிகம் உள்ள வீட்டில் பெண் குழந்தை வேண்டும் என்று ஆசைப்படுவதும், பெண் குழந்தை அதிகம் உள்ள வீட்டில் ஆண் குழந்தை வேண்டும் என்று ஆசைப்படுவதும் இயல்பானதுதான். நானும் விதிவிலக்கில்லை. ஆசை இருந்தாலும், இந்த பிரசவத்தில் ஆண் குழந்தைதான் பிறக்கும் என்ற எதிர்பார்ப்பு இல்லாததால் எனக்கு வருத்தம் ஏற்படவில்லை.

சமுதாயத்தின் பார்வையில்: 
என் மனைவியிடம்:  ஏம்புள்ளே எத்தனை பிள்ளைங்க உனக்கு? மூன்று பிள்ளைங்க; ஆண் எத்தனை? பெண் எத்தனை? மூன்றும் பெண் பிள்ளைகள். அல்லாஹ்வே! மூன்றும் பெண்ணா? பாவம்புள்ளே? நீ!. ஒரு ஆம்பளபிள்ளை இருந்தா  உதவியா இருந்திருக்கும். மக்களின் கேள்விகளால் தாயான (உறுதியான) பெண்ணுக்கும் சில நேரங்களில் மனதில் கலக்கம் ஏற்பட்டு விடுகிறது.

இந்தச் செய்தியை என் மனைவி, என்னிடம் சொன்ன பொழுது உணவு அளிப்பவன் வல்ல அல்லாஹ்! பாவப்படும் மக்கள் அல்ல! அதனால் இப்படி கேட்பவர்களின் பேச்சை பொருட்படுத்த வேண்டாம், வல்ல அல்லாஹ்விடமே நம்பிக்கை வை என்று சொன்னேன்.

குழந்தை வழங்குவது பற்றித் திருமறையில்:
வல்ல அல்லாஹ் தன் திருமறையில் குழந்தைகள் தருவது அவனுடைய விருப்பத்தில் உள்ளது என்பதைப் பற்றித் தெளிவாக விளக்குகிறான் :

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான்.
(அல்குர்ஆன் : 42:49)

அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு  வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன், ஆற்றலுடையவன்.
(அல்குர்ஆன் : 42:50)

மூன்றாவதாகப் பிறந்த மகளின் செயல்பாடுகள்:
மூன்றாவதும் பெண்ணா? என்று எந்தக்குழந்தை பிறந்தவுடன் வருத்தப்பட்டார்களோ? அந்த மகள் இந்த வருடம் நான்காம் வகுப்பில் படித்துக் கொண்டு இருக்கிறார். என்னோடு சில நேரங்களிலும்,  என் மனைவியோடு சில நேரங்களிலும் சேர்ந்து தொழுது தொழுகையை கற்றுக் கொண்டார். தொழுகைக்குரிய சூராக்களை மனனம் செய்து வைத்துள்ளார். ஓதுவது, தொழுவது (எல்லா நேரத்தொழுகையையும் பாங்கு சொன்னவுடன் தொழுது விடுவது), பயான் கேட்பது, நோன்பு வைப்பது, ஹதீஸ்களை சொல்வது என்று உறவுகளின் மனதில் இடம் பிடித்து விட்டார். (மூன்று மகள்களுமே மார்க்கத்தில் ஈடுபாடுடையவர்களாக இருக்கிறார்கள். அல்ஹம்துலில்லாஹ்!). 

பயானில் கேட்ட விஷயங்களை மனதில் உள்வாங்கி வீட்டில் சரியாக அதன்படி நடக்கிறார்களா? என்று கண்காணிக்கிறார். உதராணத்திற்கு: நான் அபுதாபி திரும்பி வர ஏற்பாடு செய்துக் கொண்டு இருந்தேன். இந்த நேரத்தில் ஒரு மௌத்திற்குச் செல்ல வேண்டும். நல்ல மழை பெய்து கொண்டு இருந்தது (வெளிநாட்டில் இறந்து போனவர் இன்று வரும் நாளை வரும் என்று எதிர்பார்த்த மையத், ஒரு வழியாக ஊர் கொண்டு வந்து விட்டார்கள்). ஏர் டிக்கெட் மற்ற பொருள்கள் வாங்க வெளியில் செல்ல வேண்டும், எனக்கு நேரமும் இல்லை.

இறந்தவர் வீட்டிற்குச் சென்று விட்டு பள்ளி வரை செல்வதா? அடக்கம் செய்யும் இடம் வரை செல்வதா? (மையத்தை விரைந்து அடக்கம் செய்யும் பழக்கம் நம்மிடம் இல்லை) வீட்டில் நடந்த உரையாடலை கவனித்த என் மகள் என்னோடு வாசல் வரை வந்து டாடி! எதுவரை செல்லப்போகிறீர்கள்? பள்ளி வரை சென்றால் ஒரு நன்மைதானே! கிடைக்கும். மையத் அடக்கும் இடம் வரை சென்று வந்தால்தானே இரண்டு நன்மை உங்களுக்கு கிடைக்கும் என்றார். மையத் அடக்கும் வரை இருந்து விட்டுப் பிறகுதான்  என் வேலைகளைப் பார்க்கச் சென்றேன்.

மாஷா அல்லாஹ்! நாம்  ஒன்றை எதிர்பார்ப்போம் வல்ல அல்லாஹ் ஒன்றைத் தருவான். வல்ல அல்லாஹ் நமக்கு வழங்குவது நிச்சயம் நன்மையைப் பெற்றுத்தரும்.

மையத்தில் கலந்து கொள்வதுப் பற்றிய ஹதீஸ்:
'நம்பிக்கை கொண்டவராகவும், நன்மையை எதிர் பார்த்தவராகவும் ஒரு முஸ்லிமின் ஜனாஸாவைப் பின்தொடர்ந்து சென்று அதற்காகப் பிரார்த்தனைத் தொழுகை நடத்தப்பட்டு, அது அடக்கம் செய்யப்படும் வரை அதனுடன் இருந்தவர் நிச்சயமாக நன்மையின் இரண்டு குவியலைப் பெற்றுத் திரும்புவார். ஒவ்வொரு குவியலும் உஹது மலை போன்றதாகும். அதற்காகப் பிரார்த்தனை தொழுகையை மட்டும் முடித்துவிட்டு அதனை அடக்கம் செய்யும் முன்னர் திரும்பி விடுகிறவர் ஒரு குவியல் நன்மையை மட்டும் பெற்றுத் திரும்புவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) அவர்கள் (புகாரி: எண் : 47).

கட்டுரையின் தலைப்பைத் தேர்ந்தெடுத்தின் நோக்கம்:

என் உடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரிகள். என் குடும்பத்தில் எல்லோருக்கும் பெண் மக்கள், என் சகோதரர்கள்: சபீர், ஜலாலுக்கு மூன்று பெண் மக்கள். இப்படி என் குடும்பத்தில் பெண் மக்களே அதிகம். என் நண்பர்களின் வீடுகளிலும் பெண் மக்களையும், சகோதரிகளையும் அதிகமாகப் பார்த்து வருகிறேன்

குடும்ப உறவுகள் நாளுக்கு நாள் தேய்ந்து வருகிறது. குடும்பத்தின் முக்கியத்தூணாக ஒரு பெண்தான்  இருக்கிறார். கணவன் மனைவிக்கிடையேயும் சகிப்புத்தன்மை கேள்விக்குறியாகி அதிகமான விவாகரத்துக்களும் ஏற்படுகிறது. அதனால் நமது சமுதாயத்தில் பெண்கள் படும் சிரமங்களையும், கேள்விப்பட்ட உண்மை நிகழ்வுகள், நிகழ்வுகளின் பாதகங்களையும், மேலும் பிள்ளைகள் வளர்ப்பு முறைகளையும்,  கற்பனைகளை கலக்காமல்,  பொய்கள் இல்லாமல் இஸ்லாத்தின் எல்லைக்குள் நின்று அலசுவதே சகோதரியே! தொடரின் நோக்கம். 

இத்தொடரில் ஓர் ஊரை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல், ஒட்டு மொத்த சமுதாயத்தில், அறியாமையால் ஏற்பட்ட தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டு (எங்களுக்குத்தான் தெரியுமே? என்று நினைப்பீர்கள்! தெரிந்ததாக இருந்தாலும் மீண்டும் மீண்டும் சொல்வதால் தவறுகள் திருத்தப்பட்டு மக்கள் நேர்வழி பெறலாம்) மார்க்கத்தின் அடிப்படையில் நாம் எவ்வாறு நம்மை சீர்படுத்திக்கொள்வது என்பதைப்பற்றி என்னால் முடிந்தளவு விளக்க இருக்கிறேன்.

இந்தத் தொடரில் வரப்போகும் விஷயங்கள் தாங்கள் கேள்விப்பட்டதாகவும், படித்ததாகவும் இருக்கலாம். அடுத்தவர்களின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள், அனுபவங்கள் மூலம் நாம் படிப்பினை பெற வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. தாய்மார்கள், சகோதர, சகோதரிகள், (ஆண் பிள்ளைகள், பெண் பிள்ளைகள்) மேலும் எனக்கும் சேர்த்து (கீழ்க்கண்ட குர்ஆன் வசனப்படி) விழிப்புணர்வு தொடராக வருவதற்கு முயற்சி செய்கிறேன். இன்ஷா அல்லாஹ்!.

நீங்கள், மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையை தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்! (அல்குர்ஆன் : 3:110)

இன்ஷாஅல்லாஹ் வளரும் ...
குறிப்பு:
வாசகர்களுக்கு ஒரு கேள்வி?: அடுத்த அத்தியாயம் வரதட்சணையைப்பற்றி வரப்போகிறது. வரதட்சணை (கைக்கூலி) வாங்குவதில் கடற்கரை அருகில் இருக்கும் ஊர்கள் முன்னணியில் உள்ளதா? மற்ற மாவட்ட ஊர்கள் முன்னணியில் உள்ளதா?.

இன்ஷாஅல்லாஹ் வளரும் ...
-S.அலாவுதீன்

இன ஒதுக்கீடும் இட ஒதுக்கீடும் - உரசும் உண்மைகள் ! - நிறைவு! 25

அதிரைநிருபர் பதிப்பகம் | March 25, 2012 | , , , ,

குறுந்தொடர் - நிறைவு

இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தாழ்த்தப்பட்டவர்களும் , இஸ்லாமியர் உட்பட்ட சிறுபான்மையினரும் கைகோர்த்து அரசியல் ரீதியாக இணைந்தால் ஆட்சிபொறுப்பும் அரசாலும் பொறுப்பும் அவர்களுக்கே வந்து சேரும் என்பது ஆக்கரீதியான உண்மை.  ஆனால் துரதிஷ்டவசமாக இவ்விரு சமுதாயத்தில்தான் சமுதாயத்துக்குள்ளே பிளவுகளும்,கட்சிகளும்,இயக்கங்களும் அதிகமாகிவிட்டன. தலித் இனங்களின் மக்களுக்கும், இஸ்லாமியருக்கும் பொதுவானதும், கட்டுக்கோப்பானதுமான சக்திவாய்ந்த சங்க்பரிவார் அமைப்புபோன்ற எதிரிகள் இருக்க, அவர்களுக்கு வெண்சாமரம் வீசி, இந்த இன மக்கள் அடித்துக்கொள்வது தங்களின் சொந்த இனமக்களுடனே என்பது மிகவும் வேதனை தரும் நிலைமையாகும். 

விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், தேவேந்திரகுல வேளாளர் சங்கம், வன்னியர் சங்கம், பாட்டாளி இயக்கம், பூவை செங்குட்டுவன், பொன் குமார் தலைமயில் உள்ள சிறு சிறு இயக்கங்கள் என்றெல்லாம் சிதறிக்கிடக்கும் தாழ்த்தப்பட்டோருடைய அமைப்புகளும், விவசாய அணிகளும், மீனவர் அமைப்புகளும், முஸ்லிம் லீக், தேசியலீக், தமிழ்நாட்டு லீக், த.த.ஜ. , இ.த.ஜ. , த. மு.க. , ம.நே.ம.க , பாபுலர், எஸ். டி. பி. ஐ. என்றெல்லாம் சிதறிக்கிடக்கும் இஸ்லாமிய இயக்கங்களும், தலித் கிருத்துவ அமைப்பு, நாடார் கிருஸ்துவ அமைப்பு என்றெல்லாம் சிதறிக்கிடக்கும் இதர சிறுபான்மை அமைப்புகளும் ஓர் அணியில் நின்றால் ஆண்டாண்டுகாலமாக ஆட்டிப்படைத்து வரும் ஆரிய விஷத்தை முறிக்கும் மருந்தாக அமையும்.  இந்த மாற்று அரசியல் புரட்சிதான் இதற்கு விடிவாக இருக்க முடியுமே தவிர நாலு அரசுப்பதவிகள் கிடைத்துவிட வழிவகுக்கும் இட ஒதுக்கீடு மட்டும் போதும் என்பது அழுகிற பிள்ளைக்கு ஐஸ் கிரீம் கொடுப்பதற்கு சமமானது. ஆதிக்க வர்க்கங்கள் பால் என்று காட்டுவது பால் அல்ல பாலிடால் என்று உணரவேண்டும். அதிகாரங்களை மீட்டெடுக்க அமைப்பும் குறிக்கோளும் ஆழமாக இருந்திட வேண்டும். 

தலித்துகள் அவர்களுக்கு சரிநிகர் சமூக அந்தஸ்தை தருகிற இறைவனின் மார்க்கமாகிய இஸ்லாத்தின் பக்கம் திரண்டு வரவேண்டும் என்று நான் வெளிப்படையாக அழைப்பு விட விரும்புகிறேன். 

அவர்கள் நினைத்துப்பார்க்க வேண்டும். பிறப்பிலேயே பேதம் கற்பித்த முந்தைய ஆரிய மனுதர்மம் சார்ந்த சமூக அமைப்புக்கும்,  இஸ்லாமிய இறைவேதம் வரையறுத்துச் சொல்கிற....
  • அவனே உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்தான் (4:1).
  • உங்களை அன்னையரின் வயிற்றிலிருந்து படைத்தான்.காதும், கண்ணும், இதயமும் வழங்கினான் (16:78-83).

என்கிற திருகுர்-ஆன் வசனங்களுக்கும் உள்ள வேறுபாட்டை அவர்கள் உணர்ந்து ஆராயவேண்டும். இஸ்லாம் கூறுகிற ஐந்து கடமைகளின் அடிப்படையே சமத்துவமும், சகோதரத்துவமும் என்பதை தலித் சமுதாயத்தினர் விளங்கிக்கொள்ள வேண்டும்.

தலித்துகள் தானாக விளங்கிக்கொள்வார்களா?

இஸ்லாமிய இயக்கங்கள் என்று கூறிக்கொண்டு சகோதர யுத்தம் நடத்துகிறவர்கள் இஸ்லாத்தை வளர்ப்பதில் இனி தங்கள் சக்திகளை செலவிடவேண்டும். கிருஸ்துவ அமைப்புகளைப் பாருங்கள். மனிதன் துன்பப்படுகிற இடங்களான மருத்துவமனைகளையும், சிறைக்கூடங்களையும் தேர்ந்தெடுத்து நோக்கிச் சென்று தங்கள் மதத்தை பரப்புகின்றனர். ஆனால் இஸ்லாமியர்களாகிய நாமோ மாறுபட்ட  இயக்கத்தில் இருப்பவர்களை எதிர்த்து வன்முறை ஏவுகிறோம்- வசைபாடும் சுவரொட்டிகளை ஒட்டுகிறோம். நன்மையை ஏவி தீமையை தடுக்கும் மார்க்க கடமையை மறந்தே போனோம்.  

இஸ்லாமிய இயக்கங்களில் சிதறிக்கிடந்து தங்கள் சக்திகளை வீணர்களை புகழவும், அவர்களுக்காக கோஷம் போடவும், கொடிப்பிடிக்கவும், நம்மைத்தாக்கி நாமே வெட்டிக் கொள்ளவும், சுட்டுக்கொள்ளவும்,  துணிந்து நிற்கும் அருமை இளைஞர்களே! இந்த நல்ல காரியத்துக்கு ஒன்று திரளுங்கள்! அல்லாஹ்வின் மார்க்கத்தை அடுத்தவர்களுக்கு எத்திவைப்பதில் அந்த சக்திகளை செலவழிப்போம்! மதமாற்றதடைச்சட்டம் என்பதெல்லாம் மண்ணோடு மக்கிப்போய் நெடுநாள் ஆகிவிட்டது.நம்மை ஆண்டாண்டு காலமாக அடக்கிவைத்திருக்கும் ஆதிக்க சக்திகளுக்கெதிராக – அதே பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட அனைவருடனும் கை கோர்ப்போம். இது ஒரு துணிச்சலான நடவடிக்கையாக இருக்கும் அதுவும் காலத்தின் கட்டாயமான தேவையான நடவடிக்கையாக இருக்கும். 

அன்பார்ந்த விடுதலைச் சிறுத்தை, புதிய தமிழகம் மற்றும் கட்சிகளைச் சார்ந்த தலித் இன உண்மை தமிழ் சகோதரர்களே!

ஆண்டாண்டு காலமாக ஆரிய நச்சுப்பாம்புகளின் வர்ணாசிரம- வர்ணபேத- பிரித்தாள்கின்ற சூழ்ச்சிகளில் சிக்கி அடக்கப்பட்டு- ஒடுக்கப்ப்பட்டு- இடுப்பில் துண்டுகட்டி- பல்லக்குத்தூக்கிகளாக பழக்கப்பட்டுப்போன பழந்தமிழ் இனமே! 

ஆலயம் கட்டினாலும் அதில் நுழைய அனுமதி மறுக்கப்படும் அடக்குமுறைக்கு ஆளான இனமே!

தனி வீதி, தனித்தெரு, தனிக்குவளை, தனிக்குளம் என்று தடுத்துவைக்கப்பட்ட தமிழினமே!

தொட்டால் பாவம்! எதிரில் வந்தால் தீட்டு ! காலிலே பிறந்தவன் என்றெல்லாம் பிரித்துவைக்கப்பட்ட இனமே!

உங்களை இஸ்லாம் அழைத்துக் கொண்டே இருந்தது. எங்களுடன் அரசியலில் கைகோர்க்க மட்டுமல்ல... 

ஒரு தட்டில் நாம் அனைவரும் இருந்து உண்ணும் சமத்துவத்தை தர! உறவு முறை வைத்து அழைத்துக்கொள்ள! எங்கள் பெயரே உங்களுக்கும் சூட்டப்பட!  

ஏற்கனவே இஸ்லாத்தில் இருப்பவர்களை தொழுகைக்கு நீங்கள் அழைப்புவிட!அதை நாங்கள் முழுமனதோடு ஏற்றுக்கொள்ள! நாம் அனைவரும் ஒரே வரிசையில் நின்று இறைவனை தொழ! ஓர் குரலில் கலிமாவும் ஆமீனும் முழங்க!

வாருங்கள் கை கோர்ப்போம் சகோதரர்களே.!
உரசல் உறவுக்குள் அழைக்கிறது...
-இபுராஹீம் அன்சாரி

பழகு மொழி - 03 13

அதிரைநிருபர் பதிப்பகம் | March 25, 2012 | , , ,

தொடர் - 3 

(1):1:2 மெய்யெழுத்துகள்


'புள்ளி எழுத்து' என்று வழக்கிலும் 'ஒற்று' என்று இலக்கியத்திலும் குறிப்பிடப் படுபவை மெய்யெழுத்துகளாகும். மெய்யெழுத்தின் மாத்திரை அரையாகும். மெய்யெழுத்து இனங்கள் மூவகைப் படும்:

(1):1:2:1 வல்லினம்

க்,ச்,ட்,த்,ப்,ற் ஆகிய ஆறும் வன்மையுடன் ஒலிப்பதால் வல்லினம் என்றானது.

(1):1:2:2 
மெல்லினம்

ங்,ஞ்,ண்,ந்,ம்,ன் ஆகிய ஆறும் மென்மையாக ஒலிப்பதால் மெல்லினம் என்றானது.

(1):1:2:3 
இடையினம்

ய்,ர்,ல்,வ்,ழ்,ள் ஆகிய ஆறும் வன்மைக்கும் மென்மைக்கும் இடைப்பட்டு ஒலிப்பதால் இடையினம் என்றானது.

குறிப்பு: ா என்று நாம் எழுதும் துணையெழுத்து/துணைக்கால், ஓர் ஒற்றை(புள்ளியை)த் தாங்காது. ர் என்று எழுதுவது பிழையாகும்; உயிர் மெய்யெழுத்துக்கு மட்டுமே ஒற்றை/புள்ளியைத் தாங்கும் வலுவுண்டு.

எனவே, ''வுக்கு மேல் புள்ளியிட்டு, ர் என்று எழுத வேண்டும்.

தற்போது நம் பயன்பாட்டில் உள்ள யுனிகோடு எழுத்துருவில் இவ்வசதி இல்லையென்பதால் நாம் அதன் வழியிலே தொடர்ந்து செல்வோம். யுனிகோடில் திருத்தம் வரக்கூடும்.

வாசகர்களுக்காகக் கடந்த வாரம் வினவப் பட்ட வினா:

"மழை நீர் உயிர் நீர்; மழை நீரை சேமிப்போம்" என்ற விளம்பரத்தில் உள்ள பிழை என்ன? காரணத்துடன் விளக்குக!

கடந்த வார வினாவுக்கான விடை:

'நீரை' எனும் சொல், 'நீர்' எனும் சொல்லோடு '' எனும் இரண்டாம் வேற்றுமை இணந்த சொல்லாகும் (நீர்+ஐ=நீரை).

இரண்டாம் வேற்றுமைச் சொல் இணைந்த (முன்மொழிச்) சொல்லை அடுத்து வரும் தமிழ்ச்சொல் (வருமொழி), (க்+உயிர், ச்+உயிர், த்+உயிர், ப்+உயிர் ஆகிய வல்லினத்தில் தொடங்கினால் முன்மொழியில், வருமொழியின் முதல் எழுத்தின் உயிர் மெய் (புள்ளி/ஒற்று) எழுத்து ஒன்று புதிதாக உருவாகி, முன்மொழியின் இறுதியில் இணைந்து கொள்ளும். இதை வலி மிகுதல் எனக் கூறுவர். பிற்பாடு வரவிருக்கின்ற வேற்றுமைப் பாடத்தில் அவற்றை விரிவாகப் பழகவிருக்கிறோம்.

எனவே, "நீரை சேமிப்போம்" என்று பிழையாக எழுதாமல் நீரை
ச்சேமிப்போம் என எழுதப் பழகுவோம்.

வாசகர்களுக்கான இவ்வாரக் கேள்வி:

சென்னை ப்ராட்வேயில் மாநகராட்சி நிர்வகிக்கும் ஒரு பூங்கா "ஸ்ரீராமுலு பூங்கா" ஆகும். அதில் ஓர் அறிவிப்பு:


"எதிரிலுள்ள ஹோட்டலின் கழிவு நீர் சுத்தம் செய்யப் பட்டு இந்த பூங்காவில் பயன்படுத்தப் படுகிறது"

மேற்காணும் அறிவிப்பில் உள்ள பிழை யாது?


- தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.
-ஜமீல் M.சாலிஹ்


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு