Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கோனார் ஹாஜியார்! 17

அதிரைநிருபர் பதிப்பகம் | July 14, 2013 | , , , , ,

(ஊரில் என் நண்பர் எஸ். அப்துல் கபூர் அவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது, அவர் யு. ஏ. இ யில் இருந்தபோது நடந்ததாக ஓர் உண்மை நிகழ்வைப் பற்றி விவரித்தார்.)  

ஷார்ஜா ஷேக்கிடம் யு. ஏ. இ. அரபி ஒருவர் சமையல்காரராகப் பணியாற்றினார்.  அவரிடம் சில கொழுத்த மாடுகள் இருந்தன.  கேரளத்து சமையல்காரர் ஒருவரும் அவரிடம் வேலை பார்த்துவந்தார்.  அரபிக்கோ மாட்டில் பால் கறப்பது புதிய அனுபவம்.  அதனால் சமையல்காரரைப் பால் கறக்கப் பணித்தார் அந்த ‘அர்பாபு’.  இரண்டு மூன்று நாட்கள் பயந்து பயந்து பால் கறந்தார் அந்த மலையாளி.

மூன்றாவது நாள் ‘அர்பாபிடம்’ போய் நின்று தலையைச் சொரிந்தார்.  ‘என்ன?’ என்பது போல் பார்த்த அரபியிடம், ஒரு நல்ல யோசனையைக் கூறினார் மலையாளி.  ‘இந்த வேலைக்கு அண்ணாச்சிதான் லாயக்கு’ என்று நினைத்தாரோ என்னவோ, தன் பரிந்துரையை அர்பாபிடம் சொன்னார்:  “எங்க நாட்டில் மாட்டில் பால் கறக்க என்றே சிலர் இருக்கிறார்கள்.  பலதியாவில் எனக்குத் தெரிந்த ஒருவர் வேலை பார்க்கிறார்.  ஊரில் அவருக்குப் பால் கறப்பதுதான் தொழில்.

அரபியும் உடன்பட்டார்.  அதற்கு அடுத்த வாரமே, மதுரை ஜில்லாவின் சிவகங்கையைச் சேர்ந்த கோனார் ஒருவர் அங்கு வந்து சேர்ந்தார்.  அன்றிலிருந்தே அவருடைய காலை – மாலைப் பணி தொடர்ந்தது. அவர் பால் கறக்கும் லாவகத்தைப் பார்த்துப் பூரித்துப் போனார் அரபி.

“அச்சா ஹே!” என்று பாராட்டி மகிழ்ந்தார்.  மலையாளியையும் பாராட்ட மறக்கவில்லை.  காலையும் மாலையும் பால் கறப்பது மட்டும்தான் அந்த ‘இந்து’க் கோனாருக்கு வேலை.  பலதியா வேலையும் செய்துவந்தார்.  

ஒரு நாள் சமையல் அறையில் புகுந்த அர்பாப், “கோனார், ஹமாரே சாத் கானா காஏகா?” என்று கையை வாயில் வைத்து சைகை காட்டினார்.  கோனார் புரிந்துகொண்டு, மலையாளியைப் பார்த்தார்.  அவனோ, ‘வேண்டாம்’ என்று சைகை காட்டுமாறு அவருக்குக் கட்டளையிட்டான். அன்றைய தினம் இந்த நிகழ்ச்சியோடு முடிந்தது.

கோனாரின் பணியையும் பணிவையும் தினமும் கண்டு மகிழ்ந்த அரபி, தான் சாப்பிடும்போதெல்லாம் கோனாரையும் அழைக்கத் தவறுவதில்லை.  கோனாரும் பவ்வியமாகத் தவிர்த்துவந்தார்.  அவருக்கு முதல் ’எஜமான்’ மலையாளிதான் என்று கருதியிருந்ததால், ‘அர்பாப்’ கூப்பிட்டபோதெல்லாம், கோனார் மலையாளியைப் பார்ப்பார்.  அப்போது மலையாளி, நாக்கைக் கடித்துத் தலையை ஆட்டித் தன் பக்கம் கோனாரைக் கூப்பிட்டு, தனித் தட்டில் சாப்பாட்டைப் போட்டுக் கொடுத்துவிடுவான்.  

ஒரு நாள், அரபி வலுக்கட்டாயமாகக் கோனாரின் கையைப் பிடித்து இழுத்துத் தன்னுடன் விரிப்பில் இருக்கச் செய்தார்.  “அர்பாப்!  அவன் காஃபிர்!” என்றான் மலையாளி.  “கியா ஃபரக் ஹே?  ஓ ஆத்மி நை?” என்று கேட்டு வாயடைக்க வைத்தார் ‘அர்பாப்’.  அன்று கோனாருக்கு ராஜ மரியாதை!  ஆனால் அவரின் உள் மனத்திலோ உறுத்தல்.  ஒரு வழியாக அன்றைய தினம் கழிந்தது.  

“இனிமேல் நீ அர்பாபோடு சேர்ந்து சாப்பிடக் கூடாது” என்று எச்சரிக்கை செய்துவைத்தான் மலையாளி.  கோனாருக்கோ குழப்பம்.  ‘அரபி முதலாளி அன்போடு கூப்பிட்டுத் தன்னுடன் சாப்பிடச் சொல்கிறார்.  ஆனால், இந்த மலையாளியோ தடை செய்கிறான்!’ புரியவில்லை நம் கோனாருக்கு.  ஒரு நாள் முதலாளியிடம் கேட்டுவிட்டார், அரைகுறை அரபியிலும் இந்தியிலும்.  முதலாளியின் முகம் சிவந்தது!  உடன் எழுந்து சென்று சமையல்கார மலையாளியின் கன்னத்தில் ஓர் அறை விட்டார்!  “ஓ ஆத்மி நை?  ஓ பி இன்சான்! தும் பி இன்சான்!”

இந்த நிகழ்வைக் கண்கூடாகக் கண்ட கோனாருக்கு இன்ப அதிர்ச்சி!  இஸ்லாம் எங்கே, எதில் இருக்கிறது என்ற நினைவு துளிர்விடத் தொடங்கியது.  அடுத்த நாள் அர்பாபிடம் தன் திடமான தீர்மானத்தை வெளியிட்டார் கோனார்.

“நல்லா யோசிச்சுக்கோ.  ஒரு நாள் தீர்மானம் மட்டும் போதாது.  உன் மனைவி மக்கள் ஊரில் இருக்கிறார்கள்.  அவர்கள் நிலை என்ன என்று பார்த்துக்கொள்” என்று உபதேசம் செய்தார் அர்பாபு, இந்தியில்தான்.

“நான் இன்றைக்கே இஸ்லாத்தில் சேரவேண்டும்.” கொள்கையில் உறுதியானார் கோனார்.  சம்மந்தப்பட்ட அரசு அலுவலகத்திற்குக் கூட்டிச் சென்றார் அர்பாப்.  அங்குள்ளவர்கள் அவருக்கு ‘ஷஹாதா’ சொல்லிக்கொடுத்து, “ஒரு வருஷம் விடாமல் ஒரு பள்ளியில் ஐந்து வேளையும் தொழுது, அந்தப் பள்ளி இமாமிடம் சான்றிதழ் வாங்கிவந்தால், ‘இப்ராஹீம்’ என்று பெயர் மாற்றம் செய்து தருகிறோம்” என்றார்கள்.

அப்பணியை நிறைவு செய்து, சான்றிதழ் பெற்ற பின்னர் நம் ‘கோனார்’ செய்த அடுத்த பணி என்ன தெரியுமா?  அவ்வாண்டின் ஹஜ்ஜை நிறைவேற்றி ‘ஹாஜியார்’ ஆனார்!

இதற்கிடையில் இரண்டு வருடங்கள் சென்றுவிட்டன.  ஊருக்குப் போகும் தவணையும் வந்தது.  மனைவிக்குக் கடிதம் எழுதினார்.  தான் இப்போது முஸ்லிமாக இருப்பதால், இருவருக்கும் இடையில் இருந்த திருமண பந்தம் முறிந்துவிட்டது என்றும், தாம் ஊர் வருவதற்குள் அவளும் பிள்ளைகளும் உள்ளூர் ஜமாஅத்தின் முன்னிலையில் இஸ்லாத்தைத் தழுவி இருக்க வேண்டும் என்றும், ஊர் வந்த பின்னர் திருமண பந்தத்தைப் புதுப்பிக்கவேண்டும் என்றும் அறிவித்திருந்தார்.  அவர் விருப்பப்படியே, காரியங்கள் நடந்தேறின.  

சில நாட்களின் பின் பாய் பயணமானார் பம்பாய் வழியாக.  சென்னைக்கு வந்து, அங்கிருந்து ரயிலில் சிவகங்கை வந்தவருக்கோ ஆச்சரியம்!  முஸ்லிம் ஜமாத்தின் பெருங்கூட்டம் அங்கே கூடியிருந்தது, மாலைகள் சகிதம்!  ‘நாரே தக்பீர்!  அல்லாஹு அக்பர்!’ அர்த்தம் தெரியாமல் அங்கு வந்த முஸ்லிம்கள் கோஷமெழுப்பினர். 

முஸ்லிம்களின் இன்முகங்களும், கட்டித் தழுவல்களும், அன்று யாருக்குமே கிடைக்காத வரவேற்பும்,  இப்ராஹீம் பாயை மகிழ்ச்சியின் எல்லைக்கே இழுத்துச் சென்றது!  

கோனார் புதிய உலகத்திற்கே போனார்!

அதிரை அஹ்மது

17 Responses So Far:

Ebrahim Ansari said...

//முஸ்லிம்களின் இன்முகங்களும், கட்டித் தழுவல்களும், அன்று யாருக்குமே கிடைக்காத வரவேற்பும், இப்ராஹீம் பாயை மகிழ்ச்சியின் எல்லைக்கே இழுத்துச் சென்றது! // அந்த இப்ராஹீம் பாயை மட்டுமா? மாஷா அல்லாஹ்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

நல்ல அர்பாப்!
அதிர்ஸ்டமுள்ள கோனார்
கோனார்க்கு கிடைத்த பாக்கியம் அங்கு போனோர்க்கெல்லாம் கிடைக்க வேண்டும். இன்சா அல்லாஹ்!

ZAKIR HUSSAIN said...

இந்த அழகான பதிப்பில் இடைவெளியில் வரும் ஹிந்திக்கு தமிழ் மொழிபெயர்ப்பு இருந்தால் நல்லது.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//இடைவெளியில் வரும் ஹிந்திக்கு தமிழ் மொழிபெயர்ப்பு இருந்தால் நல்லது.//

அதை கழகக் கண்மணிகளே ! மறந்துட்டாங்க காக்கா... !

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
அருமை சாச்சாவின் ஆக்கம் கானாத ஏக்கம் தீர்ந்தது!
கோனாரிடம் பால் கறந்து பெற்ற முதலாளி விரும்தோம்பலில் அவரை அன்பின் பால் கவர்ந்தார்!அதன் முடிவு இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்பட்ட அந்த கோனார் முதலாளி மனம் கோனார் ஆனார்!அவரும் தூய இஸ்லாத்தின் பால் கலந்தார். தூய பால்வெள்ளை மனம் கொண்ட முதலாளியின் நடவடிக்கை இன்சாஅல்லாஹ் நன்மையை சுரந்துகொடுக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் உண்டா?

Abdul Razik said...

மாஷா அல்லாஹ் அழகிய அரிய தகவல். ஜாபர் சொல்வதைப்போல் கோனாருக்கு கிடைத்த பரக்கத்தைப் போல அங்கு போனோருக்கும் கிடைக்கட்டும்.

Anonymous said...

'''உண்டுக் கிடலாம் திண்டுக் கிடலாம், உடுத்திக்கிடலாம் கிளஞ்சுக் கிடலாம் தாயா-பிள்ளையா இருந்துக் கிடலாம். ஆனா மாப்புள்ளே-பொண்ணு சம்பந்தம் மட்டும் நமக்குள்ளே வேண்டாம். நீங்க வேறு நாங்க வேறு ''மாப்பிள்ளை-பொண்ணு சம்பந்தம் கேட்டு போன ஒரு இஸ்லாமியரிடம் இன்னொரு இஸ்லாமியர் சொன்ன பதில். இது No.One. No Two ''எங்களிடம் சம்பந்தம் கேட்கிறீயளே ? உங்க ரத்தமும் எங்க ரத்தமும் கையை கிளிச்சு பாத்தா ஒன்னா இருக்குமா?'' இப்படியும் ஒரு Blood Test வசனம் பேசும் இஸ்லாமியார்கள் வாழும் ஊருக்கு மிகவும் தேவையான கோனார் ஹாஜியார் கட்டுரை.!"

ஒரு ஏழை இஸ்லாமியனோடு சகனில் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட மறுக்கும் Capitalist இஸ்லாமியர்கள் வாழும் ஊருக்கு அந்த அரபியின் ''ஒ ஆத்மினை? ஓபி இன்சான்! தும்பி இன்சான்!''' ஒருசவால்!.
.
கோனார் ஹாஜியாருக்கு ஒரு அன்பான வேண்டுகோள்! உங்கள் ஜாகையே சிவாகங்கை சீமையோடு வைத்து கொள்ளுங்கள். அதிராம்பட்டினதிற்கு வந்தால் ''நாரே தக்பிர் அல்லாஹு அல்லாஹு அக்பர்'' முழகத்துடன் வரவேற்பு கிடைக்கலாம், கிடைக்கும்'' ஆனால் சகனில் சாப்பிட இடம் கிடைக்காது சம்மதமா? Welcome to Islam Konaர Hajiyar!

Assalamuallikkum

S.முஹம்மதுபாரூக்.அதிராம்பட்டினம்

sabeer.abushahruk said...

கோனார் ஹாஜியார் இஸ்லாத்தின் சகோதரத்துவத்துக்கு ஓர் ஆணித்தரமான எடுத்துக்காட்டு. மதிப்பிற்குரிய அஹ்மது காக்காவின் எழுத்தை வாசிக்கக் காத்துக்கிடந்ததற்கு மிகவும் அருமையான படைப்பு இந்தப் பதிவு.
 
ஜாகிருக்காக:  “ஹமாரே சாத் kகானா kகாஎகா?” “என்னுடன் உணவு உண்பாயா?”
                        “க்யா ஃபரக் ஹே? ஓ அத்மி நை? “என்ன வித்தியாசம்? அவர் மனிதன் இல்லையா?”
                        “ஓ பி இன்சான்; தும் பி இன்சான்” “அவனும் மனிதன்; நீயும் மனிதன்”

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Adirai Ahamed,

Thanks a lot for sharing the real story.

Dear brothers and sisters,

The article shows real example of how our manners and conducts that inspire the souls of others for becoming and practicing Islam.

Actually every one of us can behave and reflect true compassion and humanity towards fellow human beings(regardless of religions and race). Those noble acts could touch the hearts and unit all of us into global peaceful(in another term Islamic) community.

Thanks and best regards,

B. Ahamed Ameen from Dubai,
www.dubaibuyer.blogspot.com

Shameed said...

கோனார் தமிழ் உரை பற்றி அறிந்த எங்களுக்கு கோனார் ஹாஜியார் பற்றி அறியத்தந்த அதிரை அஹ்மத் காக்கா அவர்களுக்கு என்றென்றும் நன்றியும் துவாவும்

Unknown said...

பொதுவாகவே மலையாளிகள் என்றாலே அடுத்தவர் முன்னேற்றத்திற்கு ஒரு
தடைக்கல்லாக இருப்பார்கள் என்ற செய்தி நாம் காது பட கேட்டதாக இருந்தாலும் இந்த சம்பவம் அதை மெய்ப்பிக்கும் விதமாகத்தான் இருக்கின்றது.

உண்மையில் இந்த மலையாளி அந்த கோனார் இடம் ஒரு நல்ல மனதோடு நடந்து இருந்து அந்த அரபி முதலாளியிடம் இவரைப்பற்றி ஒரு நல்ல அபிப்பிராயத்தை ஏற்ப்படுத்தி இருந்தால் கன்னத்தில் வாங்கிய அறை மிச்சமானதோடு ஒரு இறை நிராகரிப்பாளர் இஸ்லாத்திற்கு வருவதற்கு தூண்டுகோலாக இருந்த ஒரு நன்மையையும் கிடைத்திருக்கும். இரண்டையுமே கோட்டை விட்டதற்கு காரணம் இவர் நடந்து கொண்ட விதம் அப்படி.

இப்படி எத்தனையோ நிகழ்வுகள் அரபு நாடுகளில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதில் எப்படியும் மலையாளிகள் பங்கு கணிசமாக இருந்து கொண்டுதான் இருக்கின்றது.

அந்த அரபி முதலாளியின் நடத்தை இவரை இஸ்லாத்தில் கொண்டு வந்து சேர்த்திருக்கின்றது என்பதில் கடுகளவு சந்தேகம் இல்லை என்றாலும், அரபுலகின் எல்லா முதலாளிகளும் இவரைப்போல் இருந்து விட்டால் , இறை நிராகரிப்பாளர்களாக சென்ற அனைவரும் , இறை பொருத்தத்தை பெற்றவர்களாக நாடு திரும்ப வாய்ப்பு இறைவன் மூலம் கிடைக்கப்பெறும்.

அல்லாஹ்வின் நாட்டத்தில். இதைப்போல் எத்தனை கோனாரோ அல்லாஹ்வே அறிந்தவன்.

அபு ஆசிப்.

KALAM SHAICK ABDUL KADER said...

\\கோனார் புதிய உலகத்திற்கே போனார்!|\

கோனார் தமிழுரையை விஞ்சும் கோனார் ஹாஜியார் பற்றிய விளக்கவுரை. ஆசான் அஹ்மத் காக்கா அவர்களின் எழுத்தில் இலக்கணத் தூய்மை, சொல்லில் வாய்மை இருப்பது போலவே, முத்திரையிட்ட இறுதி வரிகளில் கவித்துவம் மிளிர்வதும் இயல்பான ஒன்று. அவர்களின் நீண்ட ஆயுளுக்காகவும் ஆரோக்யத்திற்காகவும் துஆ செய்கிறேன்; இப்புனித ரமலானில் கேட்கும் துஆவை அல்லாஹ் அங்கீகரிப்பானாக!

அப்துல்மாலிக் said...

மாஷா அல்லாஹ், வல்ல இறைவன் இதே ஹிதாயத்தை இஸ்லாத்தை அறிந்துக்கொள்ள துடிப்பவருக்கும் இன்று நபி(ஸல்) அவர்களையும் இஸ்லாத்தையும் பழிப்பவர்களுக்கும் கொடுப்பானாகவும் - ஆமீன்

adiraimansoor said...
This comment has been removed by the author.
adiraimansoor said...

காக்கா ஒரு கோனாரோடு நிப்பாட்டிவிடாதீர்கள்
ஒளித்து வைத்திருக்கும் மற்ற கோனாரையும் வருசைக்குமா
ஒவ்வொன்றா எடுத்து விடுங்க காக்கா

ஒருகோனார் கதையிலே சிலருக்கு செருப்படியும் பலருக்கு படிப்பினையும் இருந்தது

பாராட்டுக்கள் யாருக்கு ?
கோனாருக்கல்ல
கோனார் கதையின் மூலமாக பலபேருக்கு படிப்பினை தந்த அஹ்மது கக்காவுக்கு.

அதிரைமன்சூர்
ரியாத்

Ebrahim Ansari said...

தம்பி அதிரை மன்சூர்! அஸ்ஸலாமு அலைக்கும்.

இஸ்லாமிய பொருளாதாரச் சிந்தனைகள் தொடரில் இஸ்லாமிய வங்கி முறைகளை எழுதிவிட்டு உங்களின் கருத்தை எதிர்பார்த்தேன். நேரமிருந்தால் படித்துவிட்டு கருத்துரைக்க வேண்டுகிறேன். தொடர்ந்து வரும் வாரமும் இன்ஷா அல்லாஹ் உங்களின் கருத்துரையை எதிர்பார்ப்பேன். வேண்டுகிறேன்.

வஸ்ஸலாம்.

adiraimansoor said...

அஸ்ஸலாமு அலைக்கும்

இ.அ. காக்கா வேலையின் நிமித்தம் 10 நாட்கள் மட்டும் ஜித்தா சென்ற காரணத்தினாலும் இடையே ரமலான் நேரமாக இருப்பதால் இபாதத்தில் கொஞ்சம் கவணம் செலுத்துவதினாலும்

உங்களின் தொடரை படிக்க நேரமில்லாமல் போய்விட்டது நினைத்து மனதை
உருத்திக்கொண்டே இருந்தது

அதற்குள் நீங்களே என்னை எதிர்பார்த்த உங்களின் பின்னூட்டம் கண்டு மகிழ்சியுற்றேன்.
ஜசாக்கல்லாஹ் கைர்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு