Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஒரு புத்தகம் பிறக்கிறது - தொடர் - 4 13

அதிரைநிருபர் பதிப்பகம் | September 01, 2013 | , , , , , , ,

பதினான்காம் நுற்றாண்டுகளில் ஜெர்மனியில் ஜான்கூட்டன் பெர்க் என்பவர் அச்சு இயந்திரம் கண்டுபிடித்தார். இது சீனாவின் காகிதத்துக்கு கிடைத்த பொருத்தமான ஜோடியாக அமைந்தது.  சீனாவின் காகிதமும் ஜெர்மனின் ‘அச்சு-வீட்டு’ இயந்திரமும் பெரியவங்களை  கொஞ்சம் கூட கலந்துக்காமே கலப்பு திருமணம் செய்துக்கிட்டாங்கன்னா பார்த்துக்கிடுங்களேன்! காலம் அப்போவே தலை கீழே மாறிப்போச்சு!!.

இதன் விளைவு நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள்  வெளிவர ஆரம்பித்தன. ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் வாழும் மக்கள் புத்தகத்தின் மீது நீங்கா மோகம் கொண்டனர். மோகம் தணிக்க மேலும் மேலும் புதிய புதிய புத்தகங்கள் வந்து விழுந்து கொண்டே இருந்தன.  அறியாமை எனும் அஜீரணக் கோளாறால் அவதிப்பட்ட மக்களுக்கு நோய் தீர்க்கும் மருந்தாக புத்தகம் வந்தது. மனிதனுக்கு தேவையான அனைத்து துறைகளிலும் புத்தகங்கள் வெளிவந்தது.  புத்தகம் மனிதனின் ஞானப் பசிக்கு பால் கொடுக்க வந்த ஞானப்பசு. பசித்தவர்கள் மட்டும் புசித்துப் பலன் பெற்றனர்.


பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் தன் எண்ணங்களை ஈரக்களிமண் ஓடுகளில் எழுதியபோது தொடங்கிய தேடல் ‘பசி’ இன்று உலகெங்கும் அறிவு ஜோதியாய் பிரகாசிக்கிறது.  அவன் கண்ட ஊமைக் கனவுகள் இன்று ஒளிமயமான காலத்தை நமக்குத் தந்தன. மனிதன் அன்றைய ஓடுகளில் மண் போட்ட கீறல் ஒரு கிறுக்கன் போட்ட வெறும் கீறல் அல்ல; அது  தனக்குப் பின்  வரும் மனித சமுதாயத்திற்கு அவன் போட்ட பொற்பாதை. கல்லிலும் முள்ளிலும் மலையிலும் மடுவிலும் அவன் நடந்து நடந்து போட்ட படிக்கட்டுக்கள் எல்லாம் நமக்காகவே போட்ட பாதைகள். அவன் சிந்திய ரத்த வியர்வைத் துளிகளுக்கும் கண்ணீர் சொட்டுகளுக்கும் ஈடாக நாம் கோடிகோடி வைரமணிகளை கூடை கூடையாக கொட்டிக் கொடுத்தாலும்  அவன் செய்த தியாகத்துக்கும் சிந்திய வியர்வைக்கும் ஈடாகுமோ? அன்று மனிதன் களிமண் ஓட்டில் கீறிய கீறல்கள் இன்று பல கோடி மக்கள் படித்துப் பயனடையும் புத்தகங்களை தந்தது.

ஒரு நாட்டின் முன்னேற்றதுக்கு இயற்கை வளங்கள் மட்டும் போதாது. அறிவுசார் மனித வளமும் வேண்டும் அவைகள் உருவாக மக்கள் கொண்ட விரிவான அறிவு வளர்ச்சி நான்கு சுவர்களுக்குள் மட்டும் அடங்கிய பள்ளிக் கல்வி மட்டும் அல்ல, அதற்கு அப்பாலும் ஒன்று உண்டு அதுதான் புத்தகம். புத்தகம் அறிவையும்  அனுபவத்தையும் வளர்க்கும் . புத்தகம் ஒரு இடைத் தரகர் அதைநாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். காலத்தை வீணே கழித்து விடாமல் நல்ல நல்ல புத்தகங்களைப்  படித்து பயனடையலாம். மேலை நாடுகள் கீழை நாடுகளைவிட முன்னேறியதற்கு கல்வி ஒரு முக்கிய காரணம். 

சுதந்திரத்துக்கு முன் தமிழ் முஸ்லிம்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. நம் முன்னோர்கள் ஆங்கில மொழியுடன் நம் மார்க்கத்தையும் போட்டு குழப்பினார்கள்’. உயர்கல்வி (இங்கிலீஷ்) தன் மகன் படித்தால் கிறிஸ்துவ மதத்துக்கு மாறிவிடுவான்,” என்ற கற்பனை பயம் தன் பிள்ளைகளை உயர்கல்வி கற்க பள்ளிக்கு அனுப்ப தடை போட்டது. எப்படி அமாவசைக்கும் அப்துல்லாவுக்கும் சம்பந்தம் இல்லையோ அப்படியே இங்கிலீஷ்சுக்கும் ‘ஈசா-நபி’க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 

ஈசா நபிக்கு இங்கிலீஷ்  தெரியாது, அவர்களின் தாய்மொழி ஹிப்ரு மொழி. ஆங்கில மொழி கிருஸ்தவ மொழி என்னும் பிரமையில் அதை கற்பதை வெறுத்தோம். மறுத்தோம், பகைத்தோம், வீழ்ந்தோம், ஆனாலும் முற்றிலுமாக வீழ்ந்தே விடவில்லை. நம்மை எழுப்பிவிட “கொக்கொ றோக்கோ.......” என்று ஒரு சேவல் கூவியது.

கூவியது சேவல் அல்ல; காதிர் முகைதீன் உயர் நிலைப் பள்ளி!, சில ஆண்டுகளுக்கு பின் அதற்கு மேலே படிக்க ஒரு அண்ணன் பிறந்தான். அவன் பெயர் காதிர் முகைதீன் கல்லூரி. “பொழுது விடிந்தது, தூங்கியது போதும் எழுந்திரு" என்றது காலம். விழித்து எழுந்தவர்கள் எல்லாம் 'விழித்துக்’கொண்டார்கள். “நல்ல பொழுதை எல்லாம் தூங்கி கழித்தோமே”யென அலுத்தும் கொண்டார்கள், என்றாலும் ஒளி மயமான எதிர் காலம் தங்கள் வருங்கால சந்ததிகளுக்கு காத்துக் கிடக்கிறது என்ற நம்பிக்கையின் கயிற்றைப்  பற்றிப் பிடித்து கொண்டார்கள்.


மேலை நாடுகளின் முன்னேற்றதுக்கு அவர்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் ஒரு காரணம்.மேலை நாடுகளை எடுத்துக் கட்டாக சொல்வதை விட நம் அடுத்த வீடு சிங்கப்பூரை கொஞ்சம் எட்டிப் பாருங்களேன் காரணம் தெரியும்.

பள்ளி படிப்போடு படிப்பதை நிறுத்தாமல் தொடர்ந்து படிப்பது மலேசியா, சிங்கப்பூரில் அன்றாடம் கடமைகளில் ஒன்றாக செய்கிறார்கள். பஸ், விமானம், ரயில் பயணங்களிலும் கூட படிப்பதை நிறுத்துவதில்லை. புத்தக கண்காட்சிகள் நடத்தி படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறார்கள். படிக்கும் பழகத்தை வளர்க்க அரசு சலுகை செய்கிறது. புத்தகங்கள் பற்றிய கலந்துரையாடல் பத்திரிகைகளில் நூல் அறிமுகம் ஆகியவை பொது அறிவை வளர்க்கும் தூண்டுகோள்கள். 

ஆனால் இங்கோ நடிகைகளின் காதல் கிசுகிசுக்களை (goosip) தவறாமல் போடுவதால் வளரும் இளைய தலை முறையின் எதிர் காலம் இருள் மயமாகிறது.

நடிகர் நடிகைகளுக்கு ரசிகர் மன்றம் அமைத்ததோடு நில்லாமல் ஒரு நடிகைக்கு கோயிலே கட்டி கும்பாபிசேகமும் செய்து அம்பிகையின் {நடிகையின்}’ அருளையும் ஆசியையும்’ பெற்றார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்களேன்!,..

புத்தகம் வாங்குபவர்களுக்கு மலேசிய அரசு வருமான வரிவிலக்கு அளிக்கிறது. ஏறத்தாழ அறுபது சதவிகிதத்தினர் பத்திரிகை அல்லது புத்தகம் படிக்கும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். இந்தியர்களை இந்தக் கணக்கில் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நலம். குறிப்பாக தமிழ் முஸ்லிம்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்களுக்கு புத்தகம் எட்டிக் காயாக கசக்கும். சுட்டாலும் புத்தகத்தில் கை வைக்கவே மாட்டார்கள். அவர்களின் “தீண்டாமை” கொள்கை வட்டத்தில் புத்தகம் முதலிடம் பெறுகிறது.

மலேசியாவில் பெரிய புத்தகக் கடை ஒன்றில் தனி இடம் ஒதுக்கி வேலையில் ஓய்வு பெற்ற முதியோர்களுக்கு இலவசமாக புத்தகம் படிக்கும் வாய்ப்பை அளித்திருக்கிறார்கள். ஓய்வு  பெற்றவர்களுக்கு விலைகொடுத்து புத்தகம் வாங்கி படிக்கும் அளவுக்கு பொருளாதார நிலை இல்லாமல் போகலாம். பொருளாதார குறைபாடு படிக்கும் பழக்கத்திற்க்கு ‘தடையாக’ இருக்கக்கூடாது என்ற நல்ல மனதோடு இதை செய்துள்ளார்கள்.

சில்லறை வியாபாரம் செய்யும் புத்தகக்கடைகளுக்கு மலேசியா அரசு சலுகை கொடுத்து ஊக்கப்படுத்துகிறது. ஆண்டு ஒன்றுக்கு பல இலட்சம் மலேசியா ரிங்கிட் [ரிங்கிட் என்பது மலேசிய நாணயம்] மதிப்பிலான புத்தகங்களை நூலகங்களுக்கு விநியோகம் செய்கிறது. 

ஆனால் நம்ம தமிழ் நாட்டுலே ஏதாச்சும் புத்தகம் படிக்கலாம்ன்னு நூலகத்துக்கு போனால்,  ’’இன்னா நாய்னா சொல்லு! தளவல்கிதா?  வஊறு வல்கித? சொல்லு. வூசிகுத்றேன்’’ன்னு சொல்றான். ‘எந்த எடத்துக்கு வந்தோம்’னு விசாரிச்சுப் பாத்தா நூலகம் இருந்த இடம் ஒரே இரவுல ஆஸ்பத்ரியா போச்சு. அலிபாபா கைலே அற்புத விளக்கே புடிச்சுகிட்டு நம்ம ஊருக்கு வந்துட்டான் போலே.
தொடரும்...
S.முஹம்மது ஃபாரூக்

13 Responses So Far:

Unknown said...

காக்கா !

புத்தகத்தின் அவசியத்தின் அலசல் இந்த பதிவில் மின்னுகின்றது. புத்தகம் உருவாக ஆரம்ப விதை போட்டவன் நம் நெஞ்சத்தில் என்றும் நிலைத்திருப்பவனே. ஆனால் புத்தகம் படிக்கும் பழக்கம் இன்னும் நம்மவர்கள் மத்தியில் ஒரு ஈர்ப்புடன் , ஆவலுடன் உள்ள விஷயமாக இதுவரை இல்லை. சினிமா தியேட்டருக்கு போகும் வேகம் நூலகத்திற்கு போவதற்கு காட்டுவது இல்லை.

ஆங்கிலம் படிப்பது ஹராம் என்றும் அது அந்நிய குப்ரியத்தில் உள்ள மொழி என்று நாம் நம் முன்னோர்களால் மூளைச்சலவை செய்து வைக்கப்பட்டதன்
விளைவு படிப்பறிவில் பின் தங்கியே வந்திருக்கின்றோம். மார்க்கத்தை தவறாக புரிந்து அதை போதித்ததின் காரணமாக நாம் கடந்த காலத்தில் நம்மை அறியாமலேயே வஞ்சிக்கப்பட்டிருக்கின்றோம்.

உண்மையிலே காதிர் முஹைதீன் அவர்களின் தோற்றம் நம் ஊரின் கல்வித்தாகத்திர்க்கு ஒரு ஊற்றாகவே அமைந்தது என்பது யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாத ஒன்று. நம் ஊர் என்றுமே மறக்கவே முடியாத ஒரு ஜீவன் கல்வித்தந்தை காதிர் முஹைதீன் அவர்கள்.


அபு ஆசிப்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

வாசிக்கும் பழக்கம் நெடுநாட்களாக பழகிய ஒன்றே என்று இருந்த என்னை இன்னும் அதிகம் தேட வைத்த இந்த தொடர் !

பேப்பருக்கும் என் வேலைசார்ந்த தொடர்பு இருப்பதால் இந்தப் பதிவு வேறொரு பாதையைக் காட்டியிருக்கிறது சென்றுபார் என்று...

நகைச்சுவைக்கு சொல்ல வேண்டியதில்லை !

நிறைவில் சென்னை தமிழ் நூலகத்தில் புலம் பெயர்ந்ததை சட்டென்று சொன்ன விதம் அற்புதம் !

காக்கா, நீங்கள் அல்லவா அல்வா கொடுத்து வாசிக்க வைக்கிறீங்க ! :)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//கூவியது சேவல் அல்ல; காதிர் முகைதீன் உயர் நிலைப் பள்ளி!, சில ஆண்டுகளுக்கு பின் அதற்கு மேலே படிக்க ஒரு அண்ணன் பிறந்தான். அவன் பெயர் காதிர் முகைதீன் கல்லூரி. “பொழுது விடிந்தது, தூங்கியது போதும் எழுந்திரு" என்றது காலம். விழித்து எழுந்தவர்கள் எல்லாம் 'விழித்துக்’கொண்டார்கள். “நல்ல பொழுதை எல்லாம் தூங்கி கழித்தோமே”யென அலுத்தும் கொண்டார்கள், என்றாலும் ஒளி மயமான எதிர் காலம் தங்கள் வருங்கால சந்ததிகளுக்கு காத்துக் கிடக்கிறது என்ற நம்பிக்கையின் கயிற்றைப் பற்றிப் பிடித்து கொண்டார்கள்.//

அனைத்து அதிரையர்களின் எண்ண ஓட்டத்தில் இருப்பதைச் சொன்ன விதம் அழகு !

//ஈசா நபிக்கு இங்கிலீஷ் தெரியாது, அவர்களின் தாய்மொழி ஹிப்ரு மொழி. ஆங்கில மொழி கிருஸ்தவ மொழி என்னும் பிரமையில் அதை கற்பதை வெறுத்தோம். மறுத்தோம், பகைத்தோம், வீழ்ந்தோம், ஆனாலும் முற்றிலுமாக வீழ்ந்தே விடவில்லை. //

கிளாஸிக் !

அ.கா. காக்கா:

கல்வித் தந்தை என்று அழைக்கப்படுவது "SMS" அவர்களைத்தான்.

Unknown said...

//அ.கா. காக்கா:

கல்வித் தந்தை என்று அழைக்கப்படுவது "SMS" அவர்களைத்தான்.//

அந்த நாட்களில் பள்ளிக்கூட பல மேடைகளில் கேட்டிருக்கின்றேன் "கல்வித்தந்தை காதிர் முஹைதீன்" என்று. இது சொர்ப்பொழிவாளர் தவறா அல்லது யாரும் தவறாக அவர்களுக்கு தகவல் கொடுத்திருப்பார்களா என்று தெரியவில்லை.

மொத்தத்தில், பள்ளியின் இந்த பிரமாண்டமான நில ஒதிக்கீடு காதிர் மொஹைதீன் அவர்களாலேயே ஏற்பட்டது. என்பதுதான் உண்மை.

அபு ஆசிப்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//மொத்தத்தில், பள்ளியின் இந்த பிரமாண்டமான நில ஒதிக்கீடு காதிர் மொஹைதீன் அவர்களாலேயே ஏற்பட்டது. என்பதுதான் உண்மை. //

ஆம் ! நிச்சயமாக...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

புத்தகம் உருவான சரித்திரத்தை சுவையூட்டி விழிப்புணர்வு தந்தது இனிமை.

ஜஸாக்கல்லாஹ் ஹைர். காக்கா.

Yasir said...

அறிவுக்கு விருந்து தரும் தொடர்....அதனை சுறுசுறுப்பாக சுடச்சுட காலை நாளிதழ் படிப்பதுபோல் சுவை குறையாமல் கொண்டு செல்லும் எழுத்துநடை.....மாஷா அல்லாஹ் தொடருங்கள் மாமா

sabeer.abushahruk said...

யாசித்தேனும் வாசிக்க வேண்டும் என்று சொல்லிவந்த தமிழ் பரம்பரையில் நமக்கு மட்டும் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ என்பது போல் படிப்பது விடுபட்டுப் போய்விட்டது. காரணம் மதத்தையும் மொழியையும் போட்டுக் குழப்பிக் கொண்டதுதான் என்று அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

இன்னமும் இப்படி மதத்தையும் மொழியையும் போட்டுக் குழப்பிக் கொள்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். மற்ற எந்த மொழியையும்விட யார்க்கும் தத்தம் தாய்மொழியில் படித்தாலே தீர விளங்கும். அதற்கேற்ப ஏராளமான புத்தகங்கள் கிடைக்கப் பெற்றும் நாம் வாசிப்பதை நேசிப்பதில்லை.

அந்தக் காலத்தில், பள்ளிக்கூடம் செல்லும்போது வீட்டில், ‘வாங்கித் திங்க’ தரும் ஐந்து காசுகளை செலவு செய்யாமல் சேர்த்து வைத்து, முத்து காமிக்ஸ், அம்புலிமாமா, அணில், முயல் போன்ற புத்தகங்களை வாங்கி, ஒழித்து வைத்து படிப்பேன். வீட்டில் பார்த்துவிட்டால், “இப்படி காசையெல்லாம் வீணாக்குறானே”ன்னு வையும் அளவுக்குத்தான் புத்தகங்களில்மீது நம் சமுதாய மக்களுக்கு நாட்டம் இருந்தது.

ஆழ்ந்து படிக்கும்போது கிடைக்கும் ஆனந்தமே அலாதிதான்.

அற்புதமாகச் செல்கிறது தொடர். அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, மாமா.

ZAKIR HUSSAIN said...

கோயில் கட்டப்பட்டு வழிபடப்பட்ட நடிகைதான் இன்றைக்கு பகுத்தறிவு பாசறையில் இருக்கிறது.

நடிகை என்பதற்காக கேவலமாக சொல்லவில்லை. ஏதாவது உருப்படியாக பேசுகிறதா...எல்லாம் இந்தியாவின் தனித்தன்மையை பாதிக்கும் விசயங்களை "சுதந்திரம்" என்று சொல்லி ஜல்லியடிக்கிறது.


//ஆங்கில மொழி கிருஸ்தவ மொழி என்னும் பிரமையில் அதை கற்பதை வெறுத்தோம். மறுத்தோம், பகைத்தோம், வீழ்ந்தோம், ஆனாலும் முற்றிலுமாக வீழ்ந்தே விடவில்லை. //

முற்றிலும் வீழாமல் இருந்தால் சரிதான். இருந்தாலும் மார்க்கம் பேசுகிறேன் என்று சிலர் மற்றவர்கள் நல்லது சொன்னாலும் ஏற்றுக்கொள்வதில்லை. இதில் அவர்கள் [மற்றவர்கள்] கண்டுபிடித்த மருந்துகள் மட்டும் விதி விலக்கு


KALAM SHAICK ABDUL KADER said...

வரலாறு, மொழியியல், புவியியல், அறிவியல் என்று எல்லா வகுப்பையும் ஒரே தொகுப்பில் தங்களால் மட்டுமே நடத்த முடியும் எனதற்கு இந்த் ஆக்கம் தான் சான்று; அல்ஹம்துலில்லாஹ்!

மறந்து விட்டப் பாடங்களை மீண்டும் தேர்வு நேரத்தில் அவசர அவசரமாகப் புரட்டிப் பார்பதுபோல் இருந்தாலும், ஆழமாய்ப் படித்தலிலும் ஓர் ஆனந்தம் உள்ளது (கவிவேந்தரை வழிமொழிகிறேன்).

”படி படிக்கப்படுவாய்;
எழுது எழுதப்படுவாய்”

என்ற வைரமுத்துவின் வரிகளை உண்மைப்படுத்தின தங்களின் ஆக்கம். ஆம். தாங்கள் நன்றாக- ஆழமாகப் படித்திருக்கின்றீர்கள்; அதனால் ஈண்டுப் படிக்கப்படுகின்றீர்கள்!

Ebrahim Ansari said...

நடிகர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி போஸ்டர் ஒட்ட செலவு செய்யும் பணத்தை
திருமணம், காதணி விழா, குடிபுகுவது, இறந்த நாள் பிறந்த நாள் போன்ற எல்லா நிகழ்ச்சிகளுக்கும் இப்போது பிளாக் போட்டு ஊரின் முக்கிய இடங்களில் நிறுத்தி வைப்பதற்கு ஆகும் பணத்தை

நூல்கள் வாங்கிப் பரிசளித்தால் உருப்பட ஒரு வழி பிறக்கலாம்.

பள்ளி விழாக்களில் கூட இன்று நூல்களை பரிசளிப்பது குறைந்துவிட்டது.

திருமணங்களுக்கு வருகை தருபவர்களுக்கு சன்பீஸ்ட் மேரி பிஸ்கட் கொடுப்பதற்கு பதிலாக ஏதாவது ஒரு ஆசிரியரின் மலிவுப் பதிப்பு நூலைப் பகிர்வதை யாராவது அறிமுகமாகத் தொடங்கலாம்.

வரும் ஐந்தாம் தேதி அதிரை காதிர் முகைதீன் உயர் நிலைப் பள்ளியில் நடைபெற இருக்கும் ஆசிரியர் தின விழாவில் அப்துல் ரகீம் அவர்கள் எழுதி யுனிவர்சல் பப்ளிஷர்ஸ் வெளியிட்ட " நபிகள் நாயகம் " என்கிற 320 பக்க நூலை இலவசமாக அதிரை நிருபர் வலைதளத்தின் சார்பாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்து இருக்கிறோம் என்பதை நெறியாளரின் அனுமதியுடன் தெரிவிக்கிறேன்.

Ebrahim Ansari said...

//வரும் ஐந்தாம் தேதி அதிரை காதிர் முகைதீன் உயர் நிலைப் பள்ளியில் நடைபெற இருக்கும் ஆசிரியர் தின விழாவில்//

தவறுக்கு வருந்துகிறேன்.

காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் என்று இருந்து இருக்க வேண்டும்.

மரியாதைக்குரிய பள்ளியின் முன்னாள் மாணவரும் தலைமை ஆசிரியருமான ஹாஜாமுகைதீன் சார் அவர்கள் தலைமையில் சிறப்பு சொற்பொழிவு ஆற்றும் பணி எனக்கு வழங்கப் பட்டு இருக்கிறது.

Anonymous said...

அன்பு அ. நி. அபிமான அன்பர்களே'!

ஒரு புத்தகம் பிறக்கிறது!' தொடர்-4 கருத்தையும் பாராட்டையும் தெரிவித்த அன்பர்கள் எல்லோருக்கும் என் உளமார்ந்த நன்றியும் சலாத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மீண்டும்சந்திப்போம்.

அன்புடன்

S.முஹம்மதுபாரூக்.அதிராம்பட்டினம்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு