Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பர்மா தேக்கு வீட்டுக்காரர் - தொடர்கிறது.... 17

அதிரைநிருபர் பதிப்பகம் | September 22, 2015 | , , ,

ஞாபகம் வருதே - [4] part - 2

அன்று இரவு சென்னையிலிருந்து கேலாலம்புருக்கு புறப்பட்டேன். காலை ஆறு மணிக்கு விமானாம் தரை இறங்கியது. முதலில் குடி நுழைவு துறை எல்லோ லைன் கடந்து பின் கஸ்டம்ஸ். இந்திய கஸ்டம்ஸ்காரர்களின் கண்ணில் விழித்தாலே நளவெண்பாவின் கதாநாயகன் நளனுக்கு பிடித்த ‘சனி’தமயந்தி நமக்கு மாலை. இடாத போதும் நம்மையும் வந்து பிடிக்கும். ஆனால் இங்கே சகோதரத்துவ-நட்பு முறை வாசனைப்பூ மணம் கமழும். செழிப்பான சிரித்த முகத்துடன் சுங்கதுரை அதிகாரிகள்.                    கொண்டு வந்த பெட்டியே தூக்கி மேஜையில் வைத்தேன். ‘’பெட்டிக்குள் என்னஇருக்கிறது?’’என்றார் ’என் சொந்த உபயோகத்துக்கான சாமான்கள்! என்றேன்

"புடைவைகள் எத்தனை இருக்கிறது?" என கேட்டார். 

"ஒரே ஒரு புடவை" என்றேன்.

"யாருக்கு? மனைவிக்கா?"

"மனைவி ஊரில் நானிங்கே?"

"அப்படியென்றால் Girl Friendகா கொண்டு போகிறாய்?" என்றார். 

"எனக்கு girl friend இல்லேயே" என்று செயற்கையான ஏக்கத்துடன் சொன்னேன்.

"u nampa handsome! cubalah.boleh dapat satu" என்றார் 

[நீ கவர்ச்சியாக இருக்கிறாய், முயற்சி செய்; ஒன்று கிடைக்கும்] இது போன்ற நட்பு-கேலி முறையிலான பேச்சுக்கள் வயது வரம்பு இன்றி அங்கே பேசிக்கொள்வது சகஜம். நம் பாரத பூமிபோல் பதவி பந்தாக்கள், மூஞ்சியே ‘உற்ர்ரர்ர்ர்’ என்று நாய் போல் நரி போல் வைத்துக் கொள்வதெல்லாம் அங்கே இல்லை!.

"பெட்டியே மூடு" என்றவர், அடுத்து கீழே  மாம்பழக்கூடையே பார்த்தார்.

"அது என்ன கூடையில் மாம்பழமா?’’

"ஆமாம்" 

"நிறைய இருக்கிறதே! வியாபாரம் செய்ய கொண்டு போகிறாயா?"

"இல்லை! என் நண்பர்களின் குடும்பம் இங்கே இருக்கிறது. அவர்களுக்கு கொடுக்ககொண்டுபோகிறேன். மற்றபடி இது மாதிரியான வியாபாரம் செய்யும் சில்லறைதனமான பழக்கமெல்லாம் என்னிடம் இல்லை!" என்றேன் 

"சரி! நம்புறேன்! நானொன்று கேட்கிறேன். நீ தப்பாக நினைக்காதே! என் பிள்ளைகள் இந்திய மாம்பழம் திங்க ஆசைப்படுகிறார்கள். இரண்டு பழம் கொடுக்க முடியுமா! காசு தந்து விடுகிறேன்!" எனக் கேட்டார்.

கூடையை திறந்து நாலு பழத்தை எடுத்துக் கொடுத்தேன். 

"இரண்டு போதுமே!  உன் நண்பர்களுக்கு வேண்டுமே?"

"நிறைய இருக்கிறது! பிள்ளைகளுக்கு கொடுங்கள்!"

காஸு கொடுக்க பர்ஸை திறந்து கொண்டே "பிறப்பா ரிங்கிட்?" [எத்தனை வெள்ளி] வினவினார்..

"இதை நான்காஸுக்கு விற்கவில்லை! உங்கள் பிள்ளைகளுக்கு என் அன்பளிப்பாக கொடுக்கிறேன்."

என்னை ஒரு பார்வை பார்த்தவர் "திரிமாகஸி! [நன்றி] என்றார். இந்த "திரிமாகசி" மலாய் மொழியில் அதிகம் உபயோகப்படும் வார்த்தை. அதிகம் உபோயோகப்பட்டதனால் அது தேய்ந்து போய் பழைய இரும்பு வியாபாரியிடம் பேரீச்சம் பழத்திற்கு எடை போட்டு கொடுத்து பண்டமாற்று செய்யப்பட வில்லை. மாறாக அது என்றும் வளர்ந்து கொண்டே வருகிறது. 

ஆனால் கல் தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடிகள் வாழும் நம் நாட்டில் `நன்றி` என்ற வார்த்தை பேங்க்லாக்கரில் saftyயாக இருக்கிறது. சில சமயங்களில் இது ஒப்புக்காக சொல்லப்படுகிறது. அடிமனதின் ஆழத்திலிருந்து உணர்வுபூர்வமாக இந்த வார்த்தை வருவதில்லை. எப்படி வரும்? சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்! 

நான் மலேசிய சுங்கசோதனையிலிருந்து மலர்ந்த முகத்துடன் வெளியாகி வீடு வந்து சேர்ந்தேன். 


அன்று ஞாயிற்றுக் கிழைமை. ஓய்வு! மறுநாள் மாலை சென்னையில் என் நண்பர் தந்த சாமான்களை எடுத்துக்கொண்டு ’லிட்டில்இந்தியா’ என்று அழைக்கப்படும் Malayan Mansion/Selangor Mansion பகுதிக்கு சென்றேன். அங்கே ‘வைர யாவாரி’ தங்கி இருக்கும் ரூமுக்கு போனேன். கதவில் பூட்டு தொங்கியது. ஆளில்லை. பக்கத்து ரூம்காரர் வெளியே வந்தார்.அவரிடம் கேட்டேன்.

"காலை எட்டு மணி சுமாருக்கு வெளியே போவார். ஒரு மணி சுமாருக்கு வருவார். கொஞ்சநேரம் இருந்து  விட்டு போறவர் இரவு ஒன்பது மணிக்கு மேல் வருவார்" என்றார்.

"நீங்கள் எந்த ஊர்?" எனக் கேட்டவரிடம், ஊர் பெயரைச் சொன்னேன்.

"அவர் உங்க ஊரா?" என்றார் 

"அடுத்த வீட்டுக்காரருக்கே இவரை யாரென்று இன்னும் தெரியவில்லை. இவருடைய பொது உறவு கொள்கையின் லட்சணம் இப்படி!

மண்ணுக்காகப் படைக்கப்பட்ட மனிதனை மனித நேயத்திலிருந்து எது பிரிக்கிறது?

"ஆமாம்! எங்க ஊர்தான். தெருவு வேறே!" என்றேன்.

அவருக்கு ஊரில் ஒருவர் கொடுத்த சாமானைக் கொடுக்க வந்திருக்கிறேன்! தயவுசெய்து அவரிடம் கொடுத்து விடுகிறீர்களா?’ என்றேன். 

இதைக் கேட்டு திடுக்கிட்டுப் போனவர்

"மன்னிச்சுக்கோங்க தம்பி! இதை வாங்கிட்டு அவரோடு என்னால் மல்லுக்கு நிக்க முடியாது! லாயர் Burrow* கேக்காத கேள்வி யெல்லாம் அவர் என்னிடம் கேட்பார். இந்த வம்பெல்லாம் நமக்கு வாணாம்! நீங்களே நேரடியா கொடுத்துடுங்கோ!" என்றார். 

கொண்டு போன சாமானுடன் திரும்பி விட்டேன். [*லாயர் Burrow. மலேயாவில் ஜப்பானியர் ஆட்சிக்கு முன் வெள்ளயார் ஆட்சிகாலத்தில் மேல் சொன்ன பெயரில் உச்ச நீதி மன்ற வழக்கறிஞராக வெள்ளைக்கார துரை ஒருவர் இருந்தாராம். அவர் தன் கட்சி காரருக்கு எதிரான சாட்சிகளை கூண்டில்லேற்றி ’எடக்கு-முடக்கான’ கேள்விகளைக் கேட்டு குழப்பு-குழப்பென்று குழப்பி திண்டாட வைத்து விடுவாராம். சாட்சிகள் குழம்பிப்போய் ‘உடும்பு வேணாம் கையைவிடு!’ என்று ஓடி விடுவார்களாம். இன்னும் புரியும்படி சொல்வதென்றால் ’ஆட்டைக் கழுதையாக்கிய ’நம்மூர்கதைதான்.] 

மறுநாள் பகல் ஒரு மணி சுமாருக்கு வைரயாவாரிக்கு டெலிபோன் போட்டேன். விஷயத்தைச் சொன்னேன்.

"நான் நீங்கள் வந்த அந்த நேரம் ரூமில் இருக்கமாட்டேன். ரெம்ப பிஸி. இரவு ஒன்பது மணிக்கு மேல்தான் ரூமில் இருப்பேன். அப்போ கொண்டு வந்து கொடுங்கள்!" என்றார். 

பேச்சில் கொஞ்சம் அதிகாரத் தொனி இழையோடியது.

"நான் மாலை 5.30க்குஅங்கே வருவேன்! 7.30க்கு திரும்பி விடுவேன். ஒன்பது மணிவரை அங்கிருந்தால் திரும்பி வர பஸ் கிடைக்காது. என் மாமா கடையில் கொடுத்து விட்டுப் போகிறேன். வாங்கிக் கொள்ளுங்கள்" என்றேன்.

"அங்கெல்லாம் நான் போய் வாங்க முடியாது! `யாரிடம் கொடுத்து விடுகிறேன்!` என்று ‘வாக்கு’கொடுத்து அதை வாங்கி வந்தீர்களோ அதை அவர் கையிலேயே ஒப்படைக்க வேண்டும். இதுதான் ’அமானிதம்’ என்பதன் அர்த்தம். இதுதான் முறை!" என்றுரைத்தார்.

"புண்ணியத்திற்கு உழைக்கும் மாட்டை பல்லை பிடித்து பதம் பார்ப்பது" என்று தமிழில் சொல்வார்கள். ஆங்கிலத்தில் Look not a gifted horse in the mouth. 

இதைக் கேட்ட எனக்கு ஏறியது ரத்தம்!

"நான் அதை உங்கள் திருவடி பணிந்து உங்களிடமே ஒப்படைக்கிறேன்" என்று வாக்கு கொடுத்து வாங்கி வரவில்லை. இது ஒன்றும் நேத்திக்கடன் அல்ல! வெள்ளிக்கிழமை இரவு அங்கே ’தலை போட்டு’ படுத்துவிட்டு நேத்திக் கடனையும் செலுத்தி வர!. வேண்டுமானால் ஒரு வாரத்திற்குள் இங்கே வந்து உங்கள்  சாமான்களை எடுத்துக் கொள்ளுங்கள். வருவதற்கு முன் அப்பாயின்மென்ட் வாங்கி வரவேண்டும். நான் ரெம்ப பிஸி" என்றேன்.

[வேணுமென்றே நானும் ஒரு’பந்தா’ பன்ணினேன்] டெலிபோனை வைத்து விட்டார். கொஞ்சநேரம் கழித்து டெலிபோன் மணி அடித்தது. என் மாமா பேசினார்

"என்னப்பா அவரிடம் தகராறு செய்கிறாயாமே?" கேட்க..

"ஒன்றும் தகராறு இல்லை" என்று நடந்ததை சொன்னேன்.

"அவர் குணம் அப்படித்தான். நாம்தான் பார்த்து அனுசரித்துப் போகணும் . பெரியமனுஷன். கொண்டுபோய் கொடுத்துவிடு"

"அவர் போடும் கண்டிசனுக்கும் சவுடாளுக்கும் நான் பணிந்து போக முடியாது. வேண்டுமென்றால் ஒரு வாரத்திற்குள் வந்து எடுக்கட்டும். இல்லையென்றால் இங்கேயே கிடக்கட்டும்" என்றேன்.  என் மாமாவுக்கு என் குணம் தெரியும்.

"நீ அதை என்னிடம் கொண்டு வந்து கொடுத்துவிடு. நான் கொடுத்து கொள்கிறேன்" என்றார். அடுத்த நாள் மாலை அங்கே போய் அதை என் மாமாவிடம் கொடுத்துவிட்டு வந்தேன்.  

பல மாதங்கள் கடந்து போனது. ஒரு நாள் மாலை லிட்டில் இந்தியா மலையன் மன்சனில் இருக்கும் புத்தக மொத்த வியாபாரம் செய்யும் கடைக்கு போனேன். அங்குள்ளவர்கள் அனைவரும் என் உடன் பிறவா சகோதரர்களும் நண்பர்களும் போல. நான் நம்மூர்காரர் ஒருவரின் நிறுவனத்தில் working partnerராய் இருந்து கடினமாக இரவு பகல் பாராமல் உழைத்து-உழைத்து ஓடாய்போய் பையிலும் கையிலும் காசில்லாமல் வீசியகையும் வெருங்கையுமாய் வெளியே வந்தபோது எனக்கு ஆதரவு கரம் நீட்டி நெஞ்சோடு நெஞ்சாக அணைத்துக் கொண்ட மனித இதயம் கொண்ட மனிதர்கள் அங்கே இருந்தார்கள். வாரத்திற்கு இரண்டு மூன்று தடவை அங்கே போய் வருவது என் வாடிக்கையான பொழுதுபோக்கு. 

ஒரு நாள் மாலைஅங்கே போய் பேசிக் கொண்டிருந்தபோது அந்த கம்பெனி டெலிபோன் மணி கினுகிணுத்தது. அதை எடுத்துக் கேட்ட மேனேஜர்

"உங்களுக்குத்தான். யாரோ பேச வேண்டுமாம்" என்று ரிஸிவரை என்னிடம் தந்தார். பேசியது வைரயாவாரி

"பாரூக்! நான் இங்கே மூனாவது மாடியில் பதினாளாம் நம்பர் ரூமில் இருக்கிறேன்! ஒரு செய்தி பேசவேண்டும். இங்கே வர முடியுமா?" என்றார். பேச்சில் பணிவும் கனிவும் சோகமும் இழையோடியது.

"அவர்தானா இவர்?" என்ற சந்தேகத்தை தூண்டும்படியான தொனி ஒலித்தது. அங்கே சென்றேன். முகத்தில் வாட்டம். ஆழ்ந்த யோசனை. என்னையே பார்த்துக்கொண்டு ஏதும் பேசாமல் யோசனையில் மூழ்கி இருந்தார். கொஞ்சநேரம் சென்றதும்.

"செய்தி சொல்ல கூப்பிட்டீர்களே? என்ன சேதி" என்று அவரை யோசனைலிருந்து கலைத்தேன். "ஒன்றுமில்லை! நானும் பல யாவாரங்கள் செய்தும் ஒன்றும் கை கொடுக்கவில்லை. ஜான் ஏறினால் முழம் வழுக்குது! கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை. ’கை’ முதல் எல்லாம் ’கை’ விட்டு  போய்விட்டது. தங்குமிடத்துக்கு மூன்று மாத பாக்கி நிக்கிது. கேட்டு இம்சை படுத்துகிறார். கையில் காசில்லை.கை செலவுக்கு நூறு வெள்ளி இருந்தால் கொடுங்கள் அப்புறம் தந்து விடுகிறேன்" என வேண்டினார்.

அப்பொழுது என்னிடம் இருந்தது ஆறுவெள்ளி சில்லரை மட்டுமே.

"இங்கேயே  இருங்கள் கொஞ்ச நேரத்தில் வருகிறேன்" என்று கீழேபோய் என் நண்பரிடம் பணம் வாங்கி கொடுத்து விட்டு வந்தேன்.

அவர் சொன்னது போல் யாவாரம் அவருக்கு மட்டும் தான் கை கொடுக்கவில்லை. பயறு கஞ்சி, பால் காய்ச்சி வித்தவர்கள் வடைசுட்டு வித்தவர்கள்," வாடா! வாடா! என்று மரியாதை குறைவாக கூறிகூறி "வாடா" விற்றவர்களும் ஆப்பம் சுட்டு யாவாரம் செய்தவர்களும் காஸு சம்பாதித்து ஊரில் மாடிவீடு கட்டினார்கள். அம்பாஸிடர் கார் வாங்கி விட்டார்கள். அவர்களையெல்லாம்  விட அனுபவத்திலும் கல்வியிலும் உடல் கவர்ச்சியிலும் பலமடங்கு மேலான இவர் ஏன் தோற்றார்? அவரை தடுத்த சீனத்து  சுவர் எது.? ஒரே ஒரு காரணம் "வாய்" அவருடைய ‘வாய்!’ வாயாலே கெட்டுச்சாம்  கௌதாரி’’ என்று சொல்வார்கள். 

அதன் முழுகதையும் தெரிந்தவர்கள் சொல்லலாம். சும்மாபோன குருட்டு பாம்பை பார்த்த தவளை வாயே வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் அதை பார்த்து கேலி செய்தது. கடைசியில் அந்த குருட்டு பாம்புக்கே அந்த தவளை இரையான கதை உங்களுக்கு தெரியும்.

1967 ஆண்டு வாக்கில் தென் இந்திய ரயில் நிலையங்களில் "வாய் நல்லதானால் ஊர் நல்லது" என்ற வாசகம் கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருந்தது.

நீண்ட நாட்களாக அந்த நபரின் நடமாட்டம் லிட்டில் இந்தியா பக்கம் இல்லை. மாதங்கள் பல கடந்தது. ஒரு நாள் மாலை என் கடைக்கு திடீரென வந்தார். முகத்தில் வாட்டம் இழையோடியது. வந்தவருக்கு சேர் எடுத்து போட்டு உட்காருங்கள் என்று சொன்னேன். அது டி’டைம்! இரண்டு.டி வந்தது. டி குடித்த பின் கொஞ்ச நேரம் எதையோ யோசித்துக் கொண்டிருந்தார்.

"யாவாரம் ஏதும் செய்கிறீர்களா?" எனக் கேட்டேன். 

"இல்லை! இந்த சபுர் நான் புறப்பட்டு வந்த நேரம் சரி இல்லை. ஊர்போய் இரண்டு மூன்று மாதம் நின்று விட்டு வந்து யாவாரம் பாக்கலாம் என்று இருக்கிறேன். அடுத்த வாரம் பயணம் டிக்கட்டுக்கு தோது செய்து விட்டேன். ஊருக்கு போனால் பிள்ளைகள் கையை-கையை பாக்கும். அதுகளுக்கு கொடுக்க சாமான்கள் வாங்க கையிலே காசில்லை. ஒரு நூறு வெள்ளி கொடுங்கள் வந்ததும் தந்து விடுகிறேன்" என்றார். 

கொடுத்தேன்.போய்விட்டார்.

அவர் போன அரை மணி நேரம் கழித்து  என் டெலிபோன் மணி கினு கிணுத்தது. எடுத்துக் கேட்டேன். நம் மூர்காரரின் குரல்.

"அவர் அங்கே வந்தாரா?" 

நான் "இல்லை" யென்றேன். 

அவர் என்னிடம் வந்ததை இவரிடம் சொன்னால் ஊரெங்கும் பறையரைவார். சந்தர்ப்ப சூழலில் மனிதனுக்கு ஏற்ற-தாழ்வுகள் இயற்க்கை. அதை யறியாது   ஒரு மனிதனை மட்டம் தட்டுவதும் இழித்து பேசுவதும் இந்த மனிதனின் habit. அதனால் அந்த நபர் வந்ததை நான் அவரிடம் சொல்லவில்லை. 

அவரைப் பற்றி நண்பர் சொன்னார்:

"என்னிடம் வந்து ஊருக்கு போக போரதாகவும் கையில் காசில்லை" என்றவர். 

"கொஞ்சம் பணம் கொடுத்தால் போய் விட்டு வந்து தருகிறேன்" என்று கேட்டிருக்கிறார்

`போய்விட்டு வந்து எங்கே தரப்போகிறார்?’ என்று நூறு வெள்ளி கொடுத்ததைச் சொன்னதும்.

அடுத்து,

"என்ன! நூறு வெள்ளியை தூக்கி போடுகிறீர்கள்? இதை வைத்து நான் என்ன செய்ய முடியும்? என் பேரப் பிள்ளைகளுக்கு சோக்லேட்டே வாங்க முடியாதே! நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்" என்று கொடுத்த பணத்தை நண்பரின் பக்கமே தள்ளி விட்டிருக்கிறார் அவர்.

"உங்கள்  பேரப் பிள்ளைகளுக்கு சொக்லேட் வாங்க நான் ஏன் பணம் கொடுக்க வேண்டும்?" என்று பணத்தை எடுத்து வைத்துக் கொண்டேன். போய்விட்டார்.

இந்த நிலைக்கு அவரை தள்ளியது எது? அவரின் கடந்த கால செல்வ செழிப்பும் அதனால் ஊறிய மமதையும். கால ஓட்டத்தையும் மாற்றத்தையும் கணிக்காமல் கால்போன பாதையெல்லாம் கண் போனது! கண்போன பாதையெல்லாம் மனம் போனது.

மனம்போன பாதையெல்லாம் வாய் போனது.
        வில் விட்டு புறப்பட்ட அம்பும் வாய்விட்டு 
புறப்பட்ட சொல்லும் திரும்ப வராது.

பெரும்பாலோர் தங்களின் கடந்த கால `பாட்டன் பூட்டன்` பெருமைகளை பேசிபேசியே  நிகழ்காலத்தை கைவிட்டார்கள். 

இவர்கள் "பொய் நெல்லை குத்தியே பொங்க நினைத்து கை நெல்லும் விட்டவர்கள்".

S.முஹம்மது பாருக்

17 Responses So Far:

Unknown said...

Very interesting! காலத்தால் மாறாத, கல்லில் பதிந்த நினைவுகள்! 'திரிமாகஸி'.

sheikdawoodmohamedfarook said...

Banyak Trimak kasih Tuan Adirai AhamedUntuk Coment Anda.Saya rasa coment Tuan adalah semacam tonikyang baik. //அதிரைஅஹமத்காக்காவின்பாராட்டுக்குமிக்கநன்றி!உங்களின்பாராட்டைஒருசிறந்த டானிக்காகஉணர்கிறேன்.//

Yasir said...

மலேசியாவில் நடந்த சம்பவத்தை பிளாக் அண்ட் ஒயிட்டில் பேக்ரவுண்டில் நேரில் பார்த்த உணர்வு....
வாய்தான் உயர்வுக்கும்-தாழ்வுக்கும் காரணம்...இவர் ஒரு சிறந்த உதாரணம்
//அவர் என்னிடம் வந்ததை இவரிடம் சொன்னால் ஊரெங்கும் பறையரைவார். சந்தர்ப்ப சூழலில் மனிதனுக்கு ஏற்ற-தாழ்வுகள் இயற்க்கை. // இந்த வரிகள் உங்கள் உயர்ந்த எண்ணத்தை பிரதிபலிக்கின்றது

அது சரி மாமா...அவர் முன்பு வாங்கிய கடனை 100 திரும்பி தந்தரா

sheikdawoodmohamedfarook said...

//அதுசரிமாமா!அவர்முன்புவாங்கியகடனை 100 திரும்பிதந்தாரா// மருமகன்கேட்டது யாசிர்வினவியது. அவர்தரவில்லை.நான்கொடுத்தபோதேஅவர்திரும்பதருவார்என்ற நம்பிக்கையில்கொடுக்கவில்லை.இல்லாதவரிடம்''கொடுத்ததைதிரும்பக்கொடு!''என்றுகேட்கமனமில்லை!

sheikdawoodmohamedfarook said...
This comment has been removed by the author.
Ebrahim Ansari said...

இவ்வளவு அருமையான எழுத்தோவியம் தீட்டும் இந்தக் கைகள் மலேசியாவில் மல்லாடிக் கொண்டிருந்ததற்கு பதிலாக உங்களிடம் திரண்டிருந்த இந்தத் திறமையை இங்கே பயன்படுத்தி இருந்தால் பல வாழ்வோவியங்கள் கிடைத்திருக்குமென்று நினைக்கிறேன்.

Shameed said...

//அது சரி மாமா...அவர் முன்பு வாங்கிய கடனை 100 திரும்பி தந்தரா//

நல்ல வேலை ஆள் யாரென்று யாசிருக்குதெரியவில்லை தெரிந்தால் அந்த நூறு வெள்ளியை வாங்கி யாசிர் எனக்கு அனுப்பி இருப்பார்!!

Unknown said...

Assalamu Alaikkum

Dear Uncle,

Thanks a lot for sharing lessons of life with us here. Its interesting and very useful for personal life and for business.

Thanks and best regards

.B.Ahamed Ameen from Dubai.

sabeer.abushahruk said...

தமிழ் தொலைக்காட்சி மெகா தொடர் தயாரிப்பாளர்களுக்கு இதைத் தந்தால் உண்மைச்சம்பவங்களை வைத்து 2 வருடங்களுக்கு எபிஸோட் எடுத்து விடுவார்கள்.

அனுபவப் பாடம் அருமை.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, ஃபாரூக் மாமா

sabeer.abushahruk said...

//மண்ணுக்காகப் படைக்கப்பட்ட மனிதனை மனித நேயத்திலிருந்து எது பிரிக்கிறது?//

அதே மண்தான்.

மண்ணாசைதான்.

மண்ணாகவும் மனைக்கட்டாகவும் வாய்க்காலாகவும் வரப்பாகவும்
சந்தாகவும் சாளரத்தாவாரமாகவும்
வீதியாலவில் ஆக்ரமிக்கப்பட்ட
வீதியாகவும்
மண்ணேதான்.

sabeer.abushahruk said...

//வீதியாலவில்//

வீதியளவில்

அதிரை.மெய்சா said...

சுவராஸ்யமான உங்களது அனுபவப் பாடம் இத்தகைய அனுபவமில்லாதவர்களுக்கு பெரும் உதவியாகவும் பல உலக விஷயங்களை அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாகவும் இருக்கும். வாழ்த்துக்கள்.

sheikdawoodmohamedfarook said...

இப்பதிவைகருத்தூன்றிபடித்துகருத்துக்கூறியஅன்புநெஞ்சங்கள் அனைவருக்கும்மற்றும்அதிரைநிருபர்வலைதளநிர்வாகத்தினருக்கும் என் நெஞ்சங்கனிந்த நன்றியுடன்கூடிய சலாத்தையும் அன்புடன் சமர்ப்பிக்கிறேன்.

Unknown said...


To: Mr. Ahamed Ameen.
I have a suggestion. Since you've commented as follows,
//Thanks a lot for sharing lessons of life with us here.//
why don't you, from now on, start translating these episodes in to English and name the book as 'Lessons of Life' ? Simultaneously, Tamil and English versions can be released when this serial ends. What's your opinion?

Adirai anbudhasan said...

மிக அழகாக நிகழ்வுகளை கோர்வை செய்கிறீர்கள், படிக்க இனிமையாக உள்ளது.
" பெருமை என்னுடைய மேலங்கி அதனை, யார் என்னிடமிருந்து பறிக்க நினைக்கிறார்களோ, அவர்கள் என்னுடன் போராட தயாராகுங்கள் " என்பது போன்று பொருள் தரும் வசனம் திரு குர்ஆன் வசனம் கேள்விப்பட்டிருக்கலாம்.

/// நானும் பல யாவாரங்கள் செய்தும் ஒன்றும் கை கொடுக்கவில்லை. ஜான் ஏறினால் முழம் வழுக்குது! கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை. ’கை’ முதல் எல்லாம் ’கை’ விட்டு போய்விட்டத ///

இப்படியான ஒரு சூழ் நிலையில், அல்லாஹ்விடம் இறைஞ்சி அழுது, எனக்கு என்ன காரணம் என்று தெரிய வில்லை, நீயே அறிவித்து தா என்று கேட்டதன் பின், அல்லாஹ் தன கிருபையால் , நண்பர்களுடன் பல பேச்சுக்கு இடையில், பெற்றுக்கொண்ட நிஹ்மத்துகளுக்கு சுக்கூர் செய்யாதது என்று உணரவைக்கப்பட்டு, தௌபா செய்து மீண்டேன். அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் இன்று மிக நன்றாக வைத்திருக்கிறான்.
பெருமை, தான் என்ற அகம்பாவம் மிக மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது, அல்லாஹ் காப்பற்றட்டும்.

Unknown said...

Assalamu Alaikkum

Respected brother Mr. Adirai Ahmad,

Thanks for your nice suggestion to translate the article into English language. I will do it. InshaAllah.

Thanks and best regards

B. Ahamed Ameen from Dubai.

Eid Mubarak to all of AN forum brothers and sisters....

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு