Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

திரை கடல் ஓடும் முன் திட்டமிடுங்கள் ! 13

அதிரைநிருபர் பதிப்பகம் | February 01, 2012 | , , , , , ,


திரை கடல் ஓடியும் திரவியம் தேடு" என்பது பழமொழி ! 

நமது சமுதாயத்தில் கல்வி பயிலுபவர்களும் சரி அல்லது பாதியிலே நிறுத்திவிட்டு எனக்கு கல்வியே வேண்டாம்(?) என கூறுபவர்களும் சரி, இவர்கள் பதினெட்டு வயதை கடந்தவுடன் முதலில் ஆயத்தமாவது "பாஸ்போர்ட்" எடுப்பதற்கே ! 

"பாஸ்போர்ட்" எடுத்தவுடன் முதலில் அவர்கள் நாடிச்செல்வது நமது தரகர்களையே, இவர்கள் வளைகுடா நாடுகள், கிழக்காசிய நாடுகள், அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து ஆகிய நாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி அவர்களிடம் கணிசமான தொகையை பேசிவைத்துக் கொண்டு அதில் அட்வான்ஸாக ஒரு குறிப்பிட்ட பணத்தையும் பெற்றுக்கொள்கிறார்கள். பணத்தைக் கொடுத்தவர்களோ வருட கணக்கில் காத்துக்கிடக்க வேண்டும். 

பணத்தை பெற்றுக்கொள்ளும் இவர்கள், போலியாக ஆவணங்களைத் தயார் செய்து விசாக்களைப் பெறுகிறார்கள். அதுவும் டூரிஸ்ட் விசா, செங்கன் விசா (Schengen)  (இக்கட்டுரையின் கீழே செங்கன் விசாவைப் பற்றி விளக்கியுள்ளேன்.)

இவ்விசாவைக் கொண்டு பயணமாகி அங்கே வசிக்கும் தங்களால்...

1. சுதந்திரமாக பணி செய்ய முடிகிறதா ? 
2. குடும்பத்தை பிரிந்து வருட கணக்கில் நிம்மதியாக இருக்க முடிகிறதா ?
3.ஹலாலான பணிகளைத் தேர்ந்தெடுப்பது எவ்வளவு கஷ்டம் என உணர்கிறிர்களா ?
4. விசாவுக்காக பெற்ற கடன்களை அடைத்து விட்டீர்களா ?
5. நன்கு கல்வி கற்கவில்லையே, பாதியிலே படிப்பை நிறுத்திவிட்டேனே என வருந்துகிறீர்களா ?
6. ஒரு முறை சென்றுவிட்ட தங்களால் திரும்ப அதே நாட்டிற்கு செல்ல முடியுமா ?

சகோதரர்களே சிந்தியுங்கள் !

வளைகுடா , கிழக்காசிய போன்ற நாடுகளுக்குச் செல்வோரும் போதிய அனுபவம் இன்மையால் அவர்கள் பணிபுரியும் இடங்களில் பல சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது. மேலும் தரகர்கள் சொல்லி அனுப்பிய வேலை ஓன்று ஆனால் அங்கே தரக்கூடிய வேலைகளோ வேறொன்று !

இத்தரகர்களின் மோசடி வளையத்திற்குள் சிக்கிக்கொள்ளாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமாய் தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

என்னதான் தீர்வு ?

1. இளைய தலைமுறையினர் தங்களின் படிப்புகள் முடித்தவுடன் அரசு வேலை வாய்ப்பு அலுவலங்களில் முறையாக பதிவு செய்வதை தங்களின் கடமைகளாக பின்பற்ற வேண்டும்.

2. மேலும் தாங்கள் பயின்ற படிப்பு சம்பந்தமான துறைகளின் அலுவலகங்கள் மற்றும் தொழிற்கூடங்களில் பயிற்சிகள் மேற்க்கொள்ள வேண்டும்.

3. மேலும் நமது அரசு வழங்குகின்ற “ சிறு தொழில்கள் தொடங்குவதற்க்கான பயிற்சிகள் ” மூலம் பங்குபெற்று புதிய தொழில்களைத் தொடங்க முயற்சிக்கலாம்.

4. மேலும் நமது நாட்டிலேயே ஏராளமான தொழில்கள் உள்ளன. இவற்றின் ஏதாவது ஒன்றினை தேர்ந்தெடுத்து முறையாக தொடங்க முயற்சிக்கலாம்.

5. நமது நாட்டில் அரசு, அரசு சார்ந்த மற்றும் தனியார் போன்ற அலுவலகம் மற்றும் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளுக்கு முயற்சி செய்யலாம்.

6. இளைய தலைமுறையினர் வெளிநாடுகளுக்கு செல்லும் முன் தங்களின் ஆங்கில மொழி பேசும் திறமை மற்றும் வேலை அனுபவங்களையும் நன்கு வளர்த்துக் கொள்ள வேண்டும். 

7. விசாக்கள் பெறுவது எப்படி ? என்று அந்தந்த நாட்டின் ஒவ்வொரு வலைத்தளங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளதை பின்பற்றலாம். இதனால் செலவுத் தொகைகள் மிச்சமாகும்.

8. மேலும் வெளிநாடுகளில் வசிக்கக்கூடிய நமது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர்களின் நல்ல ஆலோசனைகளையும் கேட்டு தெளிவு பெறலாம்.

9. நாம் பயணம் செய்யும் ஒவ்வொரு விமான நிலையத்தைப் பற்றியும், அந்த நாட்டின் சட்ட திட்டத்தைப் பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது. 

10.செலவிற்குத் தேவையான பணம் அமெரிக்க டாலர்களில் (  Traveller Cheque  or  CASH  ) வைத்திருப்பது நல்லது.

11.ஏதாவது பிரச்சனை வந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்களை எழுதி வைத்து, தொடர்பு கொள்ள இலகுவாக ரோமிங் வசதிகளுடன் கூடிய அலைபேசியை வைத்துக்கொள்வது நல்லது.

12.இமிக்ரேஷன் கவுன்டரில் விமான நிலைய அதிகாரிகளின் சோதனையின் போது அவர்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு மன தைரியத்துடன் தெளிவாக, சுருக்கமாக, நாகரிகமான முறையில் பதில் அளியுங்கள். பயப்பட வேண்டாம் அவர்களும் நம்மைப்போல மனிதர்களே !

“செங்கன் விசா “ (Schengen)  என்றால் என்ன ?

ஐரோப்பியா யூனியன் நாடுகள் தங்களின் சுற்றுலாத் துறையின் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் சுற்றுலா பயணிகளுக்காக உருவாக்கப்பட்டதே “ செங்கன் விசா “  இச்சுற்றுலா விசாவில் இக்கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ள ஐரோப்பிய நாடுகளுக்கு பயணங்கள் மேற்கொள்ளலாம்.  

இவ்விசாக்களை எவ்வாறு பெறுவது ?

இந்தியாவில் மும்பை மற்றும் பெங்களூரில் உள்ள துணை தூதரகங்களில் அதற்குரிய விண்ணப்ப கட்டணத்தினை செலுத்தி கீழ்க்கண்ட “ டாக்குமெண்ட்ஸ் ” களை இணைத்து தாக்கல் செய்யலாம்.

தேவையான “ டாக்குமெண்ட்ஸ் ” கள் :-

1.“செங்கன் விசா" விண்ணப்ப படிவத்தில் நம்மைப்பற்றிய தகவல்களை அதில் பூர்த்தி செய்து இருக்க வேண்டும் 

2. நமது பாஸ்போர்ட்டின் முதல் மற்றும் கடைசி பக்க தெளிவான நகல்கள் (செல்லுபடியாகும் கால அளவு குறைந்தபட்சம் ஆறு மாதங்களாக இருக்குமாறு கண்காணிப்பது அவசியம் )

3. இரண்டு நம்முடைய புகைப்படங்கள் (அதில் ஒன்றரை விண்ணப்ப படிவத்தில் ஒட்டவும் மற்றொன்றை அதில் இணைத்து (stapled) கொடுக்கவும் )

4. உறுதி செய்யப்பட்ட விமான டிக்கட்டுகளின் நகல்.

5. நாம் தங்கக் கூடிய இடத்தின் ( HOTEL ) உறுதி செய்யப்பட்ட ரசீதுகள்.

6. ட்ராவல் / மெடிக்கல் இன்சூரன்ஸ் செய்து இருக்க வேண்டும்.

7. நிறுவனங்களின் நிர்வாகியாக இருக்கும் பட்சத்தில், கடந்த மூன்று ஆண்டுகாளாக நாம் செலுத்திய வருமான வரிகள் மற்றும் வங்கி கணக்கின் மூன்று மாத காலம் நாம் செய்து கொண்ட வரவு செலவுகளின் விவரங்கள் ஆகியவைகளை அதில் இணைக்க வேண்டும்.

8. நிறுவனங்களில் பணிபுரிபவர்களாக இருக்கும் பட்சத்தில், தங்கள் பணிபுரியும் நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட கடிதம் மற்றும் மூன்று மாத நாம் பெற்ற சம்பள ரசீதுகள் ஆகியவைகளை அதில் இணைக்க வேண்டும்.

குறிப்பு : 
1. மற்ற நாடுகளுக்கு ( America, Canada, England, Australia, New Zealand ) பயணம் மேற்கொள்பவர்களும் இம்முறையை பின்பற்றலாம்.

2. “செங்கன் விசா" வில் பயணம் மேற்கொள்வோர். அந்நாடுகளில் நிரந்தரமாக தங்கி பணிபுரிவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் சிக்கனமான பயணம் இனிதாக அமைய என் வாழ்த்தும் துவாவும் !

இறைவன் நாடினால்! தொடரும்...
-சேக்கனா M.நிஜாம்

13 Responses So Far:

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

சகோ. சேக்கான்னா நிஜாமின் நல்லதோர் பயண ஏற்பாட்டு கட்டுரை.


சிக்கனமாகவும், சீக்கனமாகவும் (விரைந்து) பயணம் அமைய வாழ்த்துக்கள்.

Yasir said...

சகோ.நிஜாம்...பிரச்சனைகளை மட்டுமல்லாமல் அதற்க்கான தீர்வுகளையும் அடுக்கி சொல்லும் விதம் அருமை....வளருட்டும் உங்கள் பிணி போக்கும் சமுகப்பணி.....வாழ்த்துக்கள்....

Unknown said...

மிக முக்கியமான ஒன்று நிஜாம் சிலர் தொழில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை மாஸ்ட்டர் டிகிரி முடித்து விட்டு 10 ஆம் வகுப்பு படித்தால் போதும் என்கிற வேலை பார்ப்பவர்கள் அதிகம்.

ஆனால் 10 ஆம் வகுப்போடு தொழில் கல்விக்கு(ITI) மாறி அதில் நன்கு தேர்ச்சி பெற்று வளைகுடாவில் குறிப்பிட்ட தொழில் பிரிவில் கலக்கிக் கொண்டு இருப்பவர்களும் உண்டு.(இன்னும் சொல்லப் போனால் அவர்களை எஞ்சினியர் எனதான் சவுதி ஆட்கள் அழைக்கின்றனர்).

ஆக மேற்படிப்புக்கு வசதியில்லாவிட்டாலும் பரவாயில்லை நல்ல தொழில் கல்வியை கற்று தேருங்கள் வெளிநாட்டில் வெற்றி பெறலாம்

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஆகையால் 'தொழிற்கல்வி படி; கை நிறைய காசை பிடி' என்பது பரவலாக அரபுநாடுகளில் நாம் கண்டு வரும் அன்றாட நிகழ்வுகள். சகோ. ஜாஃபர் சொல்வது போல் மாஸ்டர் டிகிரி படித்து விட்டு சரியான அனுபவமின்மையால் இங்கு சாதாரன மனிதர்களாக வேலை செய்பவர்களும் உண்டு. வெறும் பத்தாம் வகுப்பு வரை படித்து அத்துடன் ஏதேனும் ஐ.டி.ஐ. தொழிற்கல்வி படித்து வந்து இங்கு 'முஹந்திஸ்' (இன்‍ஜினியர்) களாக பணிபுரிந்து நல்ல சம்பளத்தில் சந்தோசமாக இருந்துவருபவர்கள் ஏராளம் உண்டு.

ZAKIR HUSSAIN said...

To Brother-சேக்கனா M.நிஜாம்

எல்லாம் புதிய செய்திகள். இது வயலார் ரவி இருக்கும் அமைச்சில் கூட தெரிந்து கொள்ள முடியாது.

வயலார் ரவி= A minister to help Indian's affairs working in Foreign

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

மிகவும் தெளிவாக புரியக்கூடிய பதிவு இப்பதிவை முன்பே பதிந்திருந்தால் நான்/என்னை போல் மற்ற நண்பர்களும் ஒரு சில தரகர்களிடம் அறியாமை என்ற காரணத்தினால் பணத்தை சுலபமாக விட நேர்ந்தது இருக்காது, இப்பதிவு போல் தெளிவாக முன்பே (?) நமது நிருபர்கள் பதிய முன்வரவில்லையே!

சகோ நிஜாம் அவர்களின் பதிவு தினந்தோறும் புதுமையாகவும், எளிமையாகவும் மெளனமாக சொல்லிவிட்டு செல்கிறார் உங்களின் பதிவுப்பணி தொடர வாழ்த்துக்கள்

B.இர்பான் (சி எம் பி லைன்)

sabeer.abushahruk said...

சகோ நிஜாமின் சேவைகள் தொடரவும் இத்தகு உபயோகமான தகவல்களைத்தந்து உதவுவது சிறக்கவும் என் வாழ்த்துகள்.

நன்றி சகோ.

Anonymous said...

//1. இளைய தலைமுறையினர் தங்களின் படிப்புகள் முடித்தவுடன் அரசு வேலை வாய்ப்பு அலுவலங்களில் முறையாக பதிவு செய்வதை தங்களின் கடமைகளாக பின்பற்ற வேண்டும்.//

மிக முக்கியமான குறிப்பு . இதை பின்பற்றுவோர் எத்தனை பேர் என்பதை சிந்தித்துப்பார்க்கவேண்டும். இவ்வளவு பெரிய மக்கள் தொகை உள்ள ஊர்- கல்வி நிலையங்கள் செழித்த ஊர்- உள் ஊரில் உள்ள கல்லூரியில் மட்டுமல்ல தலைநகரமான சென்னையில் சிறந்த கல்லூரிகளில் எல்லாம் படித்தவர்கள் நிறைந்த ஊர். ஆனால் அரசின் உயர் பதவிகளில் நம்மவர்கள் எத்தனை பேர் இருககிரார்கள்? உள்ளூர் கல்லூரியில் கூட பேராசிரியர் அப்துல் காதர் அவர்களுக்கு பிறகு மற்றொருவர் அங்கு பேராசிரியராக ஏன் வர முயலவில்லை? ஹாஜா முகைதீன் சாருக்கு பிறகு நம் ஊரில் தலைமை ஆசிரியராக வரும் தகுதிக்கு ஏன் யாரும் உயர முயலவில்லை?

எத்தனை வழ்க்கறிஞர்கள் நம் ஊரில் ? விரல் விட்டு எண்ணமுடியுமா? ஒரு தாசில்தார் உண்டா? ஒரு நீதிபதி உண்டா? ஒரே ஒரு அரசு வக்கீல் உண்டா? ஒரு துணை மாவட்ட ஆட்சியராவது உண்டா? ஏன்? ஏன்? ஏன்? " கட்டை விளக்குமாறு ஆனாலும் கப்பல் கூட்டும் விளக்குமாறு வேண்டும் ' என்ற கருத்து இரத்தத்தில் ஊறிவிட்டது. உள்ளுர் தொழில்கள் உதாசீனப்படுத்தப்பட்டன. உள் ஊரில் அன்னியர் ஆனோம்.

சகோதரர் சேகனா நிஜாம் அவர்கள் ஒரு விளக்கு ஏற்றி இருக்கிறார்கள்.
பாராட்டுக்கள். வரவேற்கிறேன்.

பல தலைமுறை இப்படி திரைகடல் ஓடிவிட்டோம். நாம் இழந்தது நமக்குத்தான் தெரியும்.இனி வரும் தலைமுறையாவது இப்படி அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் ஒளிந்து வாழும் தலைமுறையாக இல்லாமல் அரசுப்பதவிகளில் அமர்ந்து சமுதாயத்துக்கு உதவிடவேண்டும் கல்வியில் சிறந்திடவேண்டும்.

படிப்புக்கேற்ற பதவிகளில் அமர முயல வேண்டும்.

இபுராஹீம் அன்சாரி.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

திரைகடல் ஓடி(யும்) திரவியம் தேடு என்று சொல்லி விட்டு செங்கண் விசாவில் (//செங்கன் நாடுகளில் நிரந்தரமாக தங்கி பணிபுரிவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது//) சுற்றுலா சென்று திரும்பி வந்து
உள்நாட்டிலேயே சொந்த அல்லது அரசு வேலை அமைய வழியும் காட்டி உள்நாட்டுத் தொழிழுக்கு ஊக்கமளித்திருக்கிறீர்கள்.

நல்ல தகவல்களுக்கு வாழ்த்துக்கள்!

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

சகோ.நிஜாமின் நல்ல அறிவுரை உறுத்துகிறது வாழ்த்துக்கள்.இதுபோன்ற செய்திகளை இன்னும் உருக்கி தாருங்கள படிப்பினை பெற.

Anonymous said...

எவ்வளவு தான் சொன்னாலும் நம்மவர்கள் கேட்க்க மாட்டார்கள் படிப்பை அறையும்,குறையுமாக படிப்பை விட்டாலும் பரவாயில்லை.
நீ முதலில் பாஸ்போர்ட்டை எடு விசாவுக்கு நான் உனக்கு ஏற்பாடு பன்னுகிறேன் என்றல்லாம் சொல்லுவார்கள்.

வியாபாரத்திற்கு பணம் தாங்கள் என்று கேட்டால் தரமாட்டார்கள் அதை விசா அடிக்க பணம் தாங்கள் என்று சொன்னால் போதும் எவ்வளவு வேண்டும் என்று கேட்பார்கள். அந்த அளவுக்கு நமதூரில் வெளிநாட்டு மோஹம் கொண்டவர்கள். சகோதாரர். நிஜாம் அவர்களின் நல்ல ஆக்கம் மற்றும் படிப்பினை.

இப்னு அப்துல் ரஜாக் said...

சரியாக சிந்திக்கிறீர்கள்,சகோ நிஜாம்.வெல்டன்

சிங்கை நாராயணன் said...

வணக்கம் உங்கள் தொடர்பு என் என்ன அய்யா ?

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு