Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கடன் வாங்கலாம் வாங்க - 13 25

அதிரைநிருபர் | February 27, 2011 | , , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)    இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

நீண்ட இடைவெளிக்கு பிறகு கடன் தொடர் தொடர்கிறது. தொடர் 12வரை அனைத்து வகையான கடன் கொடுக்கல் வாங்கல் பற்றி பார்த்தோம். இனி நம்முடைய வருமானத்திட்டத்தை பற்றி பார்ப்போம்.
கடன் வாங்காமல் இருப்பதற்கு வருமானத்திட்டம்

எந்தக் காரியத்தையும் திட்டமிட்டுவிட்டு அந்தக்காரியம் நல்லபடியாக நடைபெற அல்லாஹ்விடம் உதவி தேடியபிறகு செயல்படும்பொழுது நம் காரியங்கள் அனைத்தும் இலகுவாகும். நம்மிடம் திட்டமிடும் பழக்கம் மிக குறைவாகவே உள்ளது.ஆனால் அசத்திய கொள்கையை பின்பற்றுபவர்கள் ஒரு வருடம், ஐந்து வருடம் இன்னும் பல வருடங்கள் என்று பல காரியங்களை  திட்டமிட்டு செயல்படுத்தி வெற்றி காண்கிறார்கள்.

ஆனால் நம்மால் ஒரு மாத வீட்டு செலவையே திட்டமிட்டு செயல்படுத்தத் தெரியாமல் வாழ்ந்து வருகிறோம். குடும்பத்தில் செலவாகும் மளிகை கணக்கு, மருந்து, மாத்திரை செலவுகள், இன்னும் பிற செலவுகளை நோட்டு போட்டு எழுதி வருபவர்கள் நம் சமுதாயத்தில் குறைவே. எழுதி வைத்து யாரிடம் காட்டப்போகிறோம், பணம் வருகிறது செலவு செய்கிறோம். இதற்கெல்லாம் நேரம் எங்கே இருக்கிறது என்று சொல்லிவிடுவீர்கள். காலம் ஒரே மாதிரி இருக்காது.

இன்றைய செல்வந்தன் நாளைக்கு ஏழையாகி விடுவதையும், ஏழை பணக்காரனாகி விடுவதையும் பார்த்து வருகிறோம். வல்ல அல்லாஹ் எல்லோரையும் எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரி வைப்பதில்லை. வாழ்க்கையில் சோதனைகள் மாறி மாறி வரக்கூடியது. அதனால் உங்களின் செலவுகளை சிக்கனமாக திட்டமிட்டு செலவு செய்து சேமிக்கும் பழக்கத்திற்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள். இந்த சேமிப்பு பல வகைகளில் உங்களை கடன் வாங்காமல் கை கொடுக்கும். நமக்கு கிடைக்கும் வருமானத்தை திட்டமிட்டு செயல்படுத்த சில சட்டங்களை நமக்குள் வகுத்துக்கொண்டால் இன்ஷாஅல்லாஹ் பலன் கிடைக்கும்.

எனக்கு காரைக்குடி செட்டியார் இனத்தைச் சேர்ந்தவர்கள் நண்பர்களாக இருந்தார்கள். அவர்கள் வீட்டில் அனைவருக்கும் ஒரு உண்டியல் தனித்தனியாக இருக்கும் அதில் காசு சேர்த்து வருவார்கள். சேமித்தால் உனக்கு தேவைப்பட்டதை வாங்கிக்கொள்ளலாம் என்பது அவர்களின் தாயாரின் அறிவுரை. மேலும் தீனிகள் (முறுக்கு, சீடை, இதுபோன்ற பொருள்கள்) வீட்டிலேயே தயார் செய்து வைப்பார்கள். வெளியில் கடையில் அதிகம் வாங்கி சாப்பிடமாட்டார்கள். இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால் அந்த உண்டியலில் அதிகமாக பணம் சேரப்போவது கிடையாது, இருந்தாலும் அந்த பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சேமிப்பின் அவசியத்தை உணர்த்தி விடுகிறார்கள். சிறு வயது முதலே எப்படி சிக்கனமாக இருக்க வேண்டும் என்பது மனதில் பதிந்து விடுகிறது.

நம் சமுதாய இளைஞர்களின் சேமிப்பு நிலையை மனதில் ஓட விடுங்கள். ஆளுக்கு ஒரு வண்டி. அதில் தேவையற்ற இடங்களுக்கு பெட்ரோல் போட்டுக் கொண்டு வீணாக அலைவார்கள். சில பேர் வீட்டுக்கு கூட வேலை பார்த்து கொடுப்பது கிடையாது. தாய்மார்களே பிள்ளைகளுக்கு பணத்தை கொடுத்து வீணான வழியில் செல்வதற்கு வழி ஏற்படுத்தி கொடுக்கிறார்கள். எந்த கேள்வியும் பிள்ளைகளை கேட்பதில்லை. அவன் வயது பிள்ளைகளிடம் பைக் இருக்கிறது. அவன் வயது பிள்ளைகளிடம் செல்போன் இருக்கிறது. என்று மிக அத்தியாவசியம்போல் மிக வருந்தி கையில் பணம் இல்லாவிட்டாலும் அவனின் தாயோ, சகோதரிகளோ நகைகளை வங்கியில் அடகு வைத்து அவனுக்கு பைக், செல்போன் போன்ற பொருட்களை வாங்கிக்கொடுக்கிறார்கள். வீட்டில் தந்தை அல்லது அண்ணன் வெளிநாட்டில் சம்பாரிப்பார்கள். பணம் எவ்வளவு சிரமத்துடன் வீட்டுக்கு வந்து சேர்கிறது என்ற எந்த கவலையும் இல்லாமல் பிள்ளைகள் காலரை தூக்கிவிட்டுக்கொண்டு அலைந்து கொண்டு இருக்கிறார்கள். காரணம் வீட்டில் உள்ள இளைஞர்களுக்கு தாய்மார்கள் எந்தவித குடும்ப கஷ்டங்களையும் தெரியப்படுத்துவதில்லை, உணர வைப்பதுமில்லை.

மாதச் சம்பளக்காரர்களாக இருந்தாலும், மாதா மாதம் வெளிநாட்டில் உள்ள கணவர், தந்தை, அண்ணன் இப்படி வீட்டுக்கு பொறுப்பாளியாக இருந்து யார் பணம் அனுப்பினாலும் தங்களுக்கு கையில் பணம் கிடைத்தவுடன் தாங்கள் செய்யவேண்டிய முதல் காரியம் (சில சகோதர, சகோதரிகள் பணம் கையில் கிடைத்தவுடன் நகை கடைக்கும் இன்னும் ஆடம்பர பொருள்கள் வாங்கவும் சென்று விடுவதாக கேள்விப்பட்டேன்) இப்படி ஆடம்பரங்களில் மூழ்கி விடாமல் பட்ஜெட் போடத் துவங்குங்கள். எப்படி பட்ஜெட் போடுவது உதாரணத்திற்கு  வருகிற மார்ச் மாதத்திற்கு என்னென்ன செலவுகள் உள்ளது என்பதை குறிப்பெடுங்கள்.

தங்கள் குடும்பத்தின் மளிகை செலவு, அரிசி, தண்ணீர் பில், கரண்ட பில், டெலிபோன் இணையதள பில், வீட்டு வரி, டாக்டர் செலவுகள், பிள்ளைகள் ஸ்கூல் பீஸ், எதிர்பாராத செலவுகள், சேமிப்பிற்கு ஒரு தொகை, கடன் எதுவும் இருந்தால் அதற்கும் ஒரு தொகை என்று குறிப்பெடுத்து விட்டு (மார்ச் மாதத்திற்கு என்ன செலவுகள் வரும் என்று தங்களுக்கு தெரியாமல் இருக்காது) பணத்தை சில்லரையாக மாற்றி (காசாக இல்லை - சில்லரை பணமாக) தனித் தனி கவரில் பணத்தை போட்டு மளிகை செலவுக்கு, கடனுக்கு, கரண்ட் பில்லுக்கு, டெலிபோன் பில்லுக்கு, டாக்டர் செலவுக்கு, தினச்செலவுக்கு, சேமிப்பிற்கு என்று கவரின் மேல் தனித் தனியாக எழுதி வைத்துக்கொள்ள வேண்டும். செலவுகளையும் நோட்டில் எழுதி வாருங்கள். (எந்த பொருட்கள் எந்த தேதியில் வாங்கினீர்கள் எத்தனை நாட்கள் பயன்பட்டிருக்கிறது என்ற விபரங்களை தெரிந்து கொள்ளலாம்) எந்த செலவுக்கு என்று பணத்தை தனியாக பிரித்து வைத்து இருக்கிறீர்களோ அதன்படிதான் செலவு செய்யவேண்டும்.

சேமிப்பிற்காக உள்ள பணத்தை பேங்கில் போட்டு வாருங்கள். பேங்கில் பணம் போடும்பொழுதும், எடுக்கும் பொழுதும் தங்கள் கணக்கு புக்கில் வரவு வைத்திருக்கிறார்களா? என்று கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்த திட்டத்தை அலட்சியம், சோம்பல் இல்லாமல் செயல்படுத்தி வாருங்கள். இன்ஷாஅல்லாஹ் பலன் கிடைக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக தங்கள் அனைவரிடமும் மனக்கட்டுப்பாடும் இருக்க வேண்டும். வீட்டை அழகுபடுத்துகிறோம் என்ற பெயரில் தேவையற்ற பொருள்களை வாங்கி சேர்த்து விடாதீர்கள்.

தற்சமயம் நான் கேள்விட்டது நம் ஊரில் பிறந்த நாள் விழா கொண்டாடுகிறார்களாம். மார்க்கம் காட்டித்தராத பால்குட விழா, பிறந்த நாள் விழா, பெண்கள் வயதுக்கு வந்தவிழா, காதணிவிழா, சுன்னத் விழா, இன்னும் என்னென்ன விழாக்கள் இருக்கிறதோ இவைகள் அனைத்தும் தவிர்க்கப்பட வேண்டும். மேலும் இந்த விழாக்களுக்கு செல்வதற்காக நாகரீக பெண்கள் (நம் சமுதாயத்து பெண்கள்)பியூட்டி பார்லர்களுக்கு செல்ல ஆரம்பித்து விட்டார்கள். அங்கு சென்று முக அழகு படுத்திக்கொண்டு இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள். ஆக இதனால் அறிய வேண்டியது என்னவென்றால் இந்த விழாக்கள் அனைத்தும் நம்மை கடனாளியாக்கும் நிலைக்கு தள்ளிவிடும். இதற்காக பியூட்டி பார்லர்களுக்கு சென்று முகத்தில் எதை எதையோ பூசி முக அழகு ஏற்படுவதற்கு பதிலாக அலர்ஜி ஏற்படுவதிலிருந்து பாதுகாப்பும், பண பாதுகாப்பும் ஏற்படும். பெண்களுக்கு நாம்தாம் அழகு என்ற தற்பெருமையும் விலகும். (பெண்கள் அழகே படுத்திக்கொள்ள வேண்டாம் என்று கூறவில்லை. கணவர் ஊரில் இருக்கும்பொழுது அலங்காரமாக இருப்பதில் தவறில்லை.  கணவர் வெளிநாடுகளில் இருக்கும்பொழுது அதிகபட்ச அலங்காரங்களை தவிர்த்துக் கொள்வது நன்மை அளிக்கும்).

தாய்மார்கள்: தந்தை, அண்ணன்  வெளிநாடுகளில் படும் சிரமங்களை அடிக்கடி பிள்ளைகளிடம் கூறி, சிக்கனமாக வீண் விரயம் செய்யாமல் எவ்வாறு வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பதை சிறு வயதிலிருந்தே மனதில் பதிய வைத்து கல்வியின் அவசியத்தையும் உணர்த்தி விட வேண்டும்.

வளைகுடா சகோதரர்களும் தங்களுக்கு சம்பளம் கையில் கிடைத்தவுடன், தாங்களும் இதுபோல் ஊருக்கு அனுப்புவது, இங்குள்ள செலவுகள், கடன், சேமிப்பு என்று தனித் தனி கவர்களில் பணத்தை பிரித்து வைத்து செலவு பண்ணி பாருங்கள். தங்களுக்கும் இதன் பலன் கிடைக்கும். சோதனை முயற்சியாக செய்து பார்த்து விட்டு பிறகு தங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

குறிப்பு : கடன் தொடர் 11ல் சில கேள்விகள் கேட்டிருந்தோம். அதற்கு பதில் அளித்த : சபீர், தாஜுதீன், யாசிர் சகோதரர்களுக்கு பரிசாக அர்ரஹீக் அல்மக்தூம் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு புத்தகம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
இன்ஷாஅல்லாஹ் வளரும்...

- அலாவுதீன். S.

கடன் வாங்கலாம் வாங்க 12                                     கடன் வாங்கலாம் வாங்க 14

                                                    கடன் வாங்கலாம் வாங்க முகப்பு

25 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சிறப்பன விழிப்புணர்வு தொடராக இதனை தாங்கள் பல சிரமங்களுக்கு இடையில் ஆக்கமாக எங்களுக்கு தொடர்ந்து தந்து கொண்டிருக்கும் உங்களுக்காக எங்களின் துஆ என்றென்றும் இருந்திடும் இன்ஷா அல்லாஹ் !

sabeer.abushahruk said...

அலாவுதீன்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
பொக்கிஷத்தை பரிசாக எங்களுக்கு அளித்தமைக்கு மிக்க நன்றி!

இந்த அத்தியாயத்தில் நீ அனுமானித்திருக்கும் நடப்புகள் உண்மையானவை.
ஏதோ ஒவ்வொரு வீடுகளுக்குள்ளும் எட்டிப் பார்த்ததுபோல மிக எதார்த்தமாகவும் நடப்பில் உண்மையாகவும் உள்ளதை எழுதி இருக்கிறாய்!

சிறுசேமிப்புப் பழக்கம் எனகெல்லாம் இருந்தது. இப்ப, சிறுவர்களிடையே அது மிகக் குறைந்துவிட்டது. அந்த காலத்தில் நாம் கண்டதெல்லாம் சேர்த்து வைத்தோம். இந்த காலத்தில் பசங்க காசு பணம்கூட சேர்ப்பதில்லை!

நினைவிருக்க உனக்கு? பள்ளி கோடை விடுமுறை காலங்களில் உன்னைக் காண கும்பகோனம் வந்து ஒரு மாத காலம் (அந்த தெரு பேர் என்ன?) அந்த தெருவையே உண்டு இல்லைனு பன்னுவோமே, அப்பவெல்லாம் நான் சேமித்த காசைத்தான் கொண்டு வருவேன்.

தொடரட்டும் உன் தொண்டு!

அதிரை அபூபக்கர் said...

சேமிப்பின் அவசியம், மற்றும் ஆடம்பரத்தின் நிலைப்பற்றியும் அழகாக சொல்லியுள்ளீர்கள்... அல்ஹம்துலில்லாஹ்

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

இன்றைக்கு என்ன வியாழக்கிழமையா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

Shameed சொன்னது…
அஸ்ஸலாமு அழைக்கும்
இன்றைக்கு என்ன வியாழக்கிழமையா? //

அலைக்குமுஸ்ஸலாம்... ஏன் அன்றுதான் கடன் வாங்கலாமா !?

இன்று அதற்கு பதில் சேமிப்பின் அவசியம் அற்புதமாக ஆய்வுக் கட்டுரையாக வந்திருப்பதனால் இன்று ஞாயிற்று கிழமையாம் (என்ன காக்கா சரியா)

Yasir said...

வழக்கம் போல வாழ்க்கைக்கு உதவும் குறிப்புகளுடன்....இப்படி வாழ்ந்துவிட்டால் துன்பம் ஏது...நன்றி காக்கா ..அல்லாஹ் உங்களுக்கு அனைத்தையும் தந்தருள்வான்

Yasir said...

///Shameed சொன்னது…
அஸ்ஸலாமு அழைக்கும்

இன்றைக்கு என்ன வியாழக்கிழமையா///

சம்பளம் வரும் நாளல்லாவா,அதான் சேமிப்புபற்றி கட்டுரை இன்று வந்துள்ளது...இக்கட்டுரையை வியாழக்கிழமை வெளிட்டு இருந்தால் சம்பளம்...சம்பவம் ஆகி இருக்கும்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பு பாசமிகு அலாவுதீன் காக்கா,

மிகப்பெரிய பொக்கிசத்தை பரிசாக எங்கள் மூவருக்கும் தந்தமைக்கு மிக்க நன்றி. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். அதைப் படித்து பயன்பெற்று நன்மைகள் அடையும் போது அதன் பங்கு இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு உண்டு.

கடன் வாங்கலாம் கட்டுரை தொடர் வெளிவந்தது மிக்க மகிழ்ச்சியே.

திட்டமிடல் பற்றி மிகத்தெளிவாக சொல்லியுள்ளீர்கள்.

இந்த நல்ல தொடர் பணியை செய்துவரும் உங்களுக்காக துஆ செய்கிறோம். அல்லாஹ் நால்லருள் புரிவானாக.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

// Yasir சொன்னது… சம்பளம் வரும் நாளல்லாவா,அதான் சேமிப்புபற்றி கட்டுரை இன்று வந்துள்ளது...இக்கட்டுரையை வியாழக்கிழமை வெளிட்டு இருந்தால் சம்பளம்...சம்பவம் ஆகி இருக்கும் //

சகோதரர் யாசிர் சொல்லியது போல் கட்டுரையை இன்று பதிந்தது சரிதான்.

Zakir Hussain said...

Bro அலாவுதீன்...ஊரின் நிதர்சனத்தை பதிந்தது சிறப்பு. நம் ஊர் பெண்கள்
ப்யூட்டி பார்லர் போய் முகத்தை அழகுபடுத்த ஆரம்பித்து விட்டார்களா?
அந்த அளவுக்கு விசயம் விபரீதம் ஆகும் பட்சத்தில் கணவன் வெளிநாட்டில்
இருக்கும் சூழ்நிலையில் விபச்சார வழக்குகள் / விவாகரத்துகள் பெருகும்.

ஊரின் முன்னேற்றம் இப்படி இருந்தால் சிறிது சிறிதாக இஸ்லாம் நம் ஊரை விட்டு விலகும். பிறகு ஈரான் நாட்டுக்கு ஏற்பட்ட சூழ்நிலைதான்.

அலாவுதீன்.S. said...

சகோ. அபுஇபுறாஹீமிற்கு: அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
தங்களின் கருத்திற்கு நன்றி! ஜஸாக்கல்லாஹ் ஹைர்!
*************************************************************************************
அலைக்குமுஸ்ஸலாம்... ஏன் அன்றுதான் கடன் வாங்கலாமா !?
இன்று அதற்கு பதில் சேமிப்பின் அவசியம் அற்புதமாக ஆய்வுக் கட்டுரையாக வந்திருப்பதனால் இன்று ஞாயிற்று கிழமையாம் (என்ன காக்கா சரியா)
********************
Yasir சொன்னது…
சம்பளம் வரும் நாளல்லாவா,அதான் சேமிப்புபற்றி கட்டுரை இன்று வந்துள்ளது...இக்கட்டுரையை வியாழக்கிழமை வெளிட்டு இருந்தால் சம்பளம்...சம்பவம் ஆகி இருக்கும்
====================================================================================
சகோ. சாகுல் இன்று வியாழக்கிழமையா என்று கேட்டதும் : தாங்களும் , சகோ. யாசிரும் பதில் அளித்தது நகைச்சுவையாக இருந்தது. சிரிக்க வைத்தது.

*************************************************************************************
என்ன சகோ. சாகுல் ஹமீது வியாழக்கிழமையா என்று கேட்டு விட்ட பிறகு ஆளை காணோம் வியாழக்கிழமைதான் மீண்டும் வருவதாக யோசனையா?

அலாவுதீன்.S. said...

சபீர் : வஅலைக்கும் ஸலாம் (வரஹ்) உன்னுடைய கருத்திற்கு நன்றி!

/// சிறுசேமிப்புப் பழக்கம் எனக்கெல்லாம் இருந்தது. இப்ப, சிறுவர்களிடையே அது மிகக் குறைந்துவிட்டது. அந்த காலத்தில் நாம் கண்டதெல்லாம் சேர்த்து வைத்தோம். இந்த காலத்தில் பசங்க காசு பணம்கூட சேர்ப்பதில்லை! ///

எதையும் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் இக்கால இளைஞர்களுக்கும் இல்லை. பெண்களுக்கும் இல்லை. கிடைப்பதை அன்றே செலவழிக்க வேண்டும். ஊதாரித்தனமாக திரிவதில் மிக கவனமாக இருக்கிறார்கள். எதிர் கால திட்டமும், சேமிப்பு திட்டமும் எதுவும் இல்லாமல்.

///நினைவிருக்கா உனக்கு? பள்ளி கோடை விடுமுறை காலங்களில் உன்னைக் காண கும்பகோனம் வந்து ஒரு மாத காலம் (அந்த தெரு பேர் என்ன?) அந்த தெருவையே உண்டு இல்லைனு பன்னுவோமே, அப்பவெல்லாம் நான் சேமித்த காசைத்தான் கொண்டு வருவேன்.///

நன்றாக ஞாபகம் இருக்கிறது. தெரு பெயர் ஏ.ஆர்.ஆர்,ரோடு, மொட்டை கோபுரம் அருகில். அது ஒரு நிலாக்காலம். ஆனந்தக்காலம்.

அலாவுதீன்.S. said...

அதிரை அபூபக்கர் சொன்னது…
/// சேமிப்பின் அவசியம், மற்றும் ஆடம்பரத்தின் நிலைப்பற்றியும் அழகாக சொல்லியுள்ளீர்கள்... அல்ஹம்துலில்லாஹ்!///
சகோதரரே அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) : தங்களின் கருத்திற்கு நன்றி!

அலாவுதீன்.S. said...

///Shameed சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும்
இன்றைக்கு என்ன வியாழக்கிழமையா?///

சகோதரரே : வஅலைக்கும் ஸலாம் (வரஹ்) : கருத்து எதுவும் சொல்லாமல் கேள்வியை கேட்டு விட்டு சென்று விட்டீர்கள். வியாழக்கிழமைதான் மீண்டும் வருவீர்களா?

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

வியாழக்கிழமை என்றால் எங்களுக்கு அலாவுதீன் காகா நினைப்புதான் வரும்

கடந்த சில நாட்களாக அதிரை நிருபர் தூள் கிளப்பிகொண்டுள்ளது ( முன்பு மட்டும் என்ன சும்மாவா என்று யாசிர் முண்டா தாட்டுவது புரிகின்றது)அதிரை நிருபரா அல்லது அசத்தல் நிருபரா?

அலாவுதீன்.S. said...

Yasir சொன்னது…
///வழக்கம் போல வாழ்க்கைக்கு உதவும் குறிப்புகளுடன்....இப்படி வாழ்ந்துவிட்டால் துன்பம் ஏது...நன்றி காக்கா ..அல்லாஹ் உங்களுக்கு அனைத்தையும் தந்தருள்வான்
சம்பளம் வரும் நாளல்லாவா,அதான் சேமிப்புபற்றி கட்டுரை இன்று வந்துள்ளது...இக்கட்டுரையை வியாழக்கிழமை வெளியிட்டு இருந்தால் சம்பளம்...சம்பவம் ஆகி இருக்கும்.///

சகோதரர் யாசிருக்கு : அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்): தங்களின் கருத்திற்கு நன்றி! ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

அலாவுதீன்.S. said...

தாஜுதீன் சொன்னது…

///அஸ்ஸலாமு அலைக்கும்,திட்டமிடல் பற்றி மிகத்தெளிவாக சொல்லியுள்ளீர்கள். இந்த நல்ல தொடர் பணியை செய்துவரும் உங்களுக்காக துஆ செய்கிறோம். அல்லாஹ் நால்லருள் புரிவானாக.///

வஅலைக்கும் ஸலாம் (வரஹ்) : சகோ. தாஜுதீன் தங்களின் கருத்திற்கு நன்றி! ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

அலாவுதீன்.S. said...

Zakir Hussain சொன்னது…
///Bro அலாவுதீன்...ஊரின் நிதர்சனத்தை பதிந்தது சிறப்பு. நம் ஊர் பெண்கள்
ப்யூட்டி பார்லர் போய் முகத்தை அழகுபடுத்த ஆரம்பித்து விட்டார்களா?
அந்த அளவுக்கு விசயம் விபரீதம் ஆகும் பட்சத்தில் கணவன் வெளிநாட்டில்
இருக்கும் சூழ்நிலையில் விபச்சார வழக்குகள் / விவாகரத்துகள் பெருகும்.///
/// ஊரின் முன்னேற்றம் இப்படி இருந்தால் சிறிது சிறிதாக இஸ்லாம் நம் ஊரை விட்டு விலகும். பிறகு ஈரான் நாட்டுக்கு ஏற்பட்ட சூழ்நிலைதான்.///
*********************************************************************
சகோ. ஜாகிர் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) தங்களின் கருத்திற்கு நன்றி!
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்களே பொறுப்பாளர்கள். இவர்கள்தான் தங்கள் குடும்பத்தில் நடக்கும் மார்க்க முரணான அனைத்து காரியங்களையும் தடுக்க முயற்சிகள் செய்ய வேண்டும். வீட்டில் உள்ள பெண்கள் கண்ணியமாக நடப்பதற்கும், மாற்றமாக நடப்பதற்கும் ஆண்களின் கவனக்குறைவும் காரணமாகிறது.

குடும்பத்தலைவனின் நிர்வாகம் ஒழுங்காக இருக்க வேண்டும். ஆண்கள் முதலில் மார்க்கத்தின்படி நடக்க ஆரம்பித்து வீட்டிலும் மார்க்க சூழல் உருவாவதற்கு உண்டான அனைத்து காரியங்களையும் செய்ய வேண்டும். அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று கேள்விப்பட்ட உடனே விவாகரத்து என்று செல்வதை விட ஆரம்பத்தில் இருந்தே மார்க்க சூழலை உருவாக்கி இறையச்சத்தை ஏற்படுத்தி விட்டால் கண்ணியக்குறைவான காரியங்கள் நடக்காமல் இருக்கும். எல்லாம் ஆண்கள் கையில்தான் இருக்கிறது.

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

திட்டமிடல் பற்றிய உங்களின் திட்டமிடல் அருமை

ஊரின் நடப்புக்களை அப்படியோ அச்சு அசலாக தரும் உங்கள் பாணியோ தனி

அலாவுதீன்.S. said...

Shameed சொன்னது…
///அஸ்ஸலாமு அலைக்கும் திட்டமிடல் பற்றிய உங்களின் திட்டமிடல் அருமை///

சகோ.சாகுல் ஹமீது வஅலைக்கும் ஸலாம் (வரஹ்) : இன்றே வந்து தங்களின் கருத்துக்களை பதிவு செய்ததற்கு நன்றி!

அதிரைநிருபர் said...

சகோதரர் அலாவுதீன் அவர்களின் கடின உழைப்பால் உருவான கடன் வாங்கலாம் வாங்க என்ற விழிப்புணர்வு தொடர் கட்டுரை நம் அதிரைநிருபர் வாசகர்கள் மட்டுமல்ல மற்ற ஊர் வாசகர்ளிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. எல்லோருக்கும் மீண்டும் அறிமுகப்படுத்துவதற்காக இந்த பயனுல்ல தொடர் கட்டுரையின் முதல் பகுதியை இங்கு ஞாபக்கப்படுத்துகிறோம். பகுதி 1 யை பார்வையிட இந்த சுட்டியை தட்டவும் http://adirainirubar.blogspot.com/2010/10/blog-post.html

Unknown said...

"எட்டு செட்டி குட்டியை கொடுத்துவிட்டு ஒரு துலுக்க குட்டியை வாங்கலாம்" என்பார்கள். எட்டு செட்டியார் வீட்டு பிள்ளைகள் செய்யும் செலவை ஒரு முஸ்லிம் வீட்டு பிள்ளை செய்யும் என்பதை விளக்கும் பழமொழி இது.

அலாவுதீன் காக்காவின் தொடர் கட்டுரை படிப்படியாக விளக்குவது அருமை. புரிந்துக்கொள்ளும்படியும் மனதில் பதிவதாவும் உள்ளது.அல்ஹம்துலில்லாஹ்!

அபு ஆதில் said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சேமிப்பின் அவசியத்தை தெளிவாக சொல்லி சிந்திக்க வைக்கும் அருமையான தொடர். லாடம் கிடைத்ததற்காக குதிரை வாங்க ஆசைப்படுபவர்கள் தான் நம்மில் பலர்.
" குடும்பத்தலைவனின் நிர்வாகம் ஒழுங்காக இருக்க வேண்டும். ஆண்கள் முதலில் மார்க்கத்தின்படி நடக்க ஆரம்பித்து வீட்டிலும் மார்க்க சூழல் உருவாவதற்கு உண்டான அனைத்து காரியங்களையும் செய்ய வேண்டும். அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று கேள்விப்பட்ட உடனே விவாகரத்து என்று செல்வதை விட ஆரம்பத்தில் இருந்தே மார்க்க சூழலை உருவாக்கி இறையச்சத்தை ஏற்படுத்தி விட்டால் கண்ணியக்குறைவான காரியங்கள் நடக்காமல் இருக்கும். எல்லாம் ஆண்கள் கையில்தான் இருக்கிறது."
உண்மை சகோ. அலாவுதீன் அவர்களே
எல்லாம் ஆண்கள் கையில்தான் இருக்கிறது

அலாவுதீன்.S. said...

அதிரைpost சொன்னது…
/// "எட்டு செட்டி குட்டியை கொடுத்துவிட்டு ஒரு துலுக்க குட்டியை வாங்கலாம்" என்பார்கள். எட்டு செட்டியார் வீட்டு பிள்ளைகள் செய்யும் செலவை ஒரு முஸ்லிம் வீட்டு பிள்ளை செய்யும் என்பதை விளக்கும் பழமொழி இது.///

"காசுக்கு எட்டுச் சட்டி வாங்கி"
சட்டி ஒன்னு எட்டுக்காசுன்னு விற்றாலும்
செட்டிப்பிள்ளை ஒன்றுக்கு ஈடாகுமா?

சகோதரரே அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்). தங்களின் கருத்திற்கு நன்றி!

அலாவுதீன்.S. said...

அபு ஆதில் சொன்னது…
/// அஸ்ஸலாமு அலைக்கும், : சேமிப்பின் அவசியத்தை தெளிவாக சொல்லி சிந்திக்க வைக்கும் அருமையான தொடர். லாடம் கிடைத்ததற்காக குதிரை வாங்க ஆசைப்படுபவர்கள் தான் நம்மில் பலர்.

" குடும்பத்தலைவனின் நிர்வாகம் ஒழுங்காக இருக்க வேண்டும். ஆண்கள் முதலில் மார்க்கத்தின்படி நடக்க ஆரம்பித்து வீட்டிலும் மார்க்க சூழல் உருவாவதற்கு உண்டான அனைத்து காரியங்களையும் செய்ய வேண்டும். அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று கேள்விப்பட்ட உடனே விவாகரத்து என்று செல்வதை விட ஆரம்பத்தில் இருந்தே மார்க்க சூழலை உருவாக்கி இறையச்சத்தை ஏற்படுத்தி விட்டால் கண்ணியக்குறைவான காரியங்கள் நடக்காமல் இருக்கும். எல்லாம் ஆண்கள் கையில்தான் இருக்கிறது."
உண்மை சகோ. அலாவுதீன் அவர்களே
எல்லாம் ஆண்கள் கையில்தான் இருக்கிறது. ////

சகோதரரே! வஅலைக்கும் ஸலாம்(வரஹ்). தங்களின் கருத்திற்கு நன்றி!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு