“பசு” ‘மை’பூசி அடி‘மை’ ஆகும் இந்தியா - பகுதி : இரண்டு 14

அதிரைநிருபர் பதிப்பகம் | October 31, 2015 | ,

பசுமையில் பசுவின் கதையை கடந்த வாரம் பார்த்தோம்.

மையைப் பற்றிப் பார்க்கும் முன்பு ஒரு நாய் குறுக்கே வந்து விட்டது. ஆகவே நாயைப் பற்றியும் அதற்குக் காரணமான தீயைப் பற்றியும் பார்ப்போம்.

வறுமையை ஒழிப்போம்! வளமையைப் பெருக்குவோம் ! என்று வாக்குக் கேட்டு வந்தவர்களை நம்பி கோக்கு மாக்காக வாக்களித்து இன்று நாக்குத் தள்ளி நிற்கிறார்கள் பீஹார் ஹரியானா  மற்றும் உத்தரப்பிரதேசவாசிகள்.

நினைச்சது ஒன்னு! நடந்தது ஒன்னு!
அதனாலே முழிக்குதே அம்மா கண்ணு!
கணக்கும் தவறாகிப் போனதினாலே
கவலை கொள்ளுதே தனியா நின்னு” – 

என்று ஒரு பழையகாலப் பாட்டொன்று  இருக்கிறது.  வளர்ச்சியை நம்பி வாக்களித்த அந்த  மாநில  மக்கள் இந்தப் பாட்டைத்தான் இப்போது இந்தியில் பாடிக் கொண்டு இருக்கிறார்கள்.

நாட்டின் இன்றைய சகிப்புத் தன்மையற்ற பிரச்னைகளுக்குக் காரணம் ஒரு கையடக்க சதவீதமே  உள்ள சிலர்  நாட்டை இன்னும் ஆட்டிப் படைக்க நினைப்பதுதான்.  புத்தர் காலத்திலிருந்தே  இந்தப் பிரச்னை இன்னும் தீரவில்லை. இதோ இந்த வரலாற்று சிறப்புமிக்க உரையாடலைப் பாருங்கள்.

“அந்த குதிரையை ஏன் தீயில் இட்டு எரித்தீர்கள் ?”

“குதிரையை சுவர்கத்திற்கு அனுப்புகிறோம்.”

“அப்படியானால் நீங்கள் ஏன் உங்களையும் தீயில் போட்டு எரித்துக் கொண்டு சுவர்க்கம் செல்ல முயலவில்லை?  “

பிராமணரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டவர் யார்?  பெரியாரல்ல; புத்தர்.

அரியானாவில் ஜிதேந்திரா என்ற தலித் இனத்தவரின் வீட்டுக்கு, அதிகாலையில் உயர் ஜாதியினர் தீ வைத்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்தில் இரண்டு குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தன. அவை பொட்டலமாக் சுற்றப்பட்டு இறுதி ஊர்வலமாக வந்தநிகழ்வைக் கண்டு  கல்லும் கரைந்தது.

இதேபோன்று மற்றொரு சம்பவம் அதே  அரியானாவில் நடந்து உள்ளது.  கோஹனா நகரைச் சேர்ந்த தலித் சிறுவன் மீது மற்றொரு உயர் சமூகத்தினர், புறவாவைத் திருடியதாக புகார் ஒன்றை அளித்தனர். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த 15 வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்தான்.

இது பற்றி  கருத்து தெரிவித்த வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங், உள்ளுர் சம்பவங்களுக்கு மத்திய அரசை தொடர்பு படுத்துவது சரியல்ல. யாராவது சிலர் நாய் மீது கல் விட்டு எரிந்ததற்கு கூட மத்திய அரசை எப்படி பொறுப்பாக்க முடியும் என்று திருவாய் மலர்ந்து அருளினார். அங்கேதான் ஆரம்பித்தது பிரச்னை.

அதென்னவோ பிஜேபி கட்சிக்கும் நாய்களுக்கும் இருக்கும் தொடர்புக்கு என்ன காரணம் என்பது புரியவில்லை. ஏன் இந்தக் கேள்வி எழுகிறது என்றால் நாட்டில் நடக்கும் எந்த சம்பவத்தைப் பற்றியும் கருத்துத் தெரிவிக்க வேண்டுமென்றாலோ உதாரணம் காட்டவேண்டுமேன்றாலோ எங்கோ இனவிருத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிற நாய்களை இழுப்பது  சொல்வது பிஜேபியின் வாடிக்கையாகிவிட்டது. நாய் படாதபாடு என்பார்கள். நாய்களே மாட்டி கொள்ளும் இயல்புடையவைதான். இவர்களிடம் நாய்களே மாட்டிக் கொண்டு படாத பாடுபடுகின்றன.

இதற்கு முன் குஜராத்தில் நடைபெற்ற  வரலாற்றில் வடுக்களை ஏற்படுத்திய கலவரத்தை பற்றி பத்திரிக்கை நிருபர்கள் கேட்டபோது காரில் அடிபடும் நாய்க்குட்டிகள் என்று இன்றைய பிரதமர் உதாரணம் சொன்னார். இன்று அவரது அமைச்சரவையில் இருக்கும் ஒரு அமைச்சர் நாய்கள் மீது கல்லெறிவதை ஒப்பிட்டு உதாரணமாக சொல்கிறார். அநியாயமாகக் கொல்லப்படும் தலித்களின் உயிர்களுக்கு நாய்களை ஒப்பிடுவது ஒரு நாகரிகமான செயலாக மத்திய அமைச்சர்களுக்குத் தோன்றினால் அவர்களது வழி வழி வந்த நாகரிகம் பற்றி சிந்திக்க  வேண்டி இருக்கிறது  ஒரு ராணுவ அதிகாரியாக இருந்தவருக்கு இப்படிப்பட்ட  மனநிலை இருந்தால் அவர் பணியாற்றிய காலத்தில் தலித்களை எப்படி நடத்தி இருப்பார் என்று யோசிக்க வேண்டி இருக்கிறது.

மாட்டுக் கறி வைத்திருந்தார் என்ற அநியாயக் குற்றச்சாட்டில் ஒரு ஏழை முஸ்லிம் அடித்துக் கொல்லப்பட்டார் ; இரண்டு தலித் குழந்தைகள் எரித்துக் கொல்லப்பட்டனர்; ஒரு தலித் சிறுவன் காவல்துறையால் அடித்தே கொல்லப் பட்டான் . ஆனாலும் நாட்டை ஆளும் பிரதமர் இதுபற்றி வாய்திறக்க மறுக்கிறார். அவருக்கு பேசத் தெரியாதா? பேசத்தெரியும். இன்னும் சொல்லப் போனால் பேசியே அசத்துவதில் இவர்தான் சிறந்தவர். ஆனால் இவரது வாயில் ஆர் எஸ் எஸ் பூட்டு தொங்குகிறது. அதனால் இவரால் வாய் திறக்க  இயலவில்லை அல்லது வாய் திறக்க அனுமதி கிடைக்கவில்லை.

பிரதமர்  வாய் திறக்காவிட்டால் என்ன? நாட்டின் உண்மையான நிழல் பிரதமர் என்று ஒருவர் இருக்கிறார். அவர்தான் ஆர் எஸ் எஸ்ஸின் தலைவர் திரு. மோகன் பகவத். அண்மைக்காலங்களில் பிரதமர் கருத்துத் தெரிவிக்க வேண்டிய நேரங்களிலெல்லாம் திரு. மோகன் பகவத் தான் பேசுகிறார். இதோ  அவர் திருவாய் மலர்ந்து அருளிய வார்த்தைகள்    

“நாடு முழுவதும் நம்பிக்கை மற்றும் புத்துணர்ச்சி நிலவுகிறது. சிறு சிறு சம்பவங்களால், இந்துக்களின் பண்பாட்டையும், இந்தியாவையும் சிதைத்துவிட முடியாது” என்று ஆர் எஸ் எஸ்  அமைப்பின் 90வது ஆண்டுவிழாவில் பேசியிருக்கிறார் திரு.  மோகன் பகவத்.

அதாவது அவரது கருத்துப்படி,

உ.பியில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கொல்லப்பட்ட முகமது அக்லக், ஹரியானா மாநிலத்தில்  எரித்துக்கொல்லப்பட்ட இரண்டு தலித் குழந்தைகள், சிறுவனின் சாவு, நாடெங்கும் கல்வியாளர்கள் சுடப்படுவது, அறிஞர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட விலை மதிப்பற்ற விருதுகளை திருப்பி அளிப்பது சம்பவங்கள்யாவும் ,  ஆளும் பாஜகவுக்கு முதலாளியாகவும் வழிகாட்டியாகவும்  இருக்கும்,  ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவருக்கு புத்துணர்வு ஊட்டும்  சிறு பிரச்சினைகளாகத்  தெரிகின்றன.

திரு பகவத் உடைய கூற்றுப்படி மேற்கண்ட கொடுமைகள் சிறிய பிரச்னைகள் என்று எடுத்துக் கொள்ளும்போது , சென்னை மயிலாப்பூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு  சொந்தக் காரணங்களால் சில பிராமண சகோதரர்களின் பூணூல் நடுத்தெருவில் வைத்து சிலரால் அறுக்கப் பட்ட அவல  நிகழ்வு நமக்கு நினைவுக்கு வருகிறது.

இவ்வாறு மற்றவர்களுடைய புனித சின்னங்களை அவர்கள் அணிந்திருக்கும் நிலையில் அறுத்து அவமானப் படுத்துவது கண்டனத்துக்கும் தண்டனைக்கும் உரியதுதான்  இந்த செயலை செய்தவர்கள் உடனே கைது  செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டது. என்ன வழக்குத் தெரியுமா? பூணூல் அறுத்த வழக்கல்ல; பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த வழக்கல்ல ; தேசிய பாதுகாப்புச் சட்டபடி அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது. காரணம் இந்தச் செயலால் பாதிக்கப்பட்டவர்கள் உயர் சாதியினர்.

ஒரு பக்கம் குழந்தைகள் எரித்துக் கொலை, சிறுவன் அடித்துக்  கொலை, எழுத்தாளர்கள் சுட்டுக் கொலை இவைகள் எல்லாம் சிறு சிறு நிகழ்ச்சிகள் என்றும் புத்துணர்ச்சி என்றும்  வடிவமைக்கப்படுகின்றன. காரணம் இவற்றால் பாதிக்கப்பட்டோர் நாதியற்ற தலித்கள் மனுநீதியின்  மொழியில் சொல்லப்போனால் சூத்திரர்கள்.   மறு பக்கம்  பூணூல் அறுத்த  வழக்குக்கு  தேசிய பாதுகாப்புச்சட்டம் பாயக் காரணம் அவைகள் சிறு சம்பவங்களல்ல ஏனென்றால் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள் பாஷையில் பிராமணர்கள். இதுதானே  இந்த நாட்டின் நீதி?

வளர்ந்துவரும் மதவாத வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் கல்புர்கி, பன்சாரே, தபொல்கர்  ஆகியோர் தங்களது  கருத்துக்களை தெரிவித்த காரணத்தால் கொல்லப்பட்டதையும் எதிர்த்து கிட்டத்தட்ட 50 க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், கலைஞர்கள்  தங்களுடைய விருதுகளையும்  அங்கீகாரங்களையும்  அரசிடம் திருப்பிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பூனாவில் இருக்கும் திரைப்படக் கல்லூரி மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தேசிய விருது வாங்கிய பத்து கலைஞர்களும் தங்களது விருதுகளை திருப்பிக் கொடுத்து இருக்கிறார்கள். மேலும் நாடெங்கிலுமிருந்து பல அறிவியலாளர்கள் நாட்டில் நிலவும் பாதுகாப்பற்ற நிலையை சுட்டிக் காட்டி குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதி தங்களின் வருத்தங்களைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அறிஞர்கள், கலைஞர்கள்  முதல் உணர்வுமிக்க  எழுத்தாளர்கள் வரை முன்னெடுத்து இருக்கும் இந்த வகைப்  போராட்டங்கள் அலட்சியபடுத்தப்படக் கூடியதல்ல.  காரணம்,  எழுத்தாளர்கள்     விஞ்ஞானிகள், கலைஞர்கள்   ஆகியோர்  உலகத்தின்  சரித்திர சூரியனை  கிழக்கிலிருந்து மேற்கே உதிக்கச் செய்யும் ஆற்றல் பெற்றவர்கள். இவ்வகை மக்களின் இந்தச் செயல் இந்தியாவைத் தாண்டி உலகம் முழுவதும் கவனிக்கப்படுகிறது. இதை அரசு உணரவேண்டும்.

உலகை உலுக்கிய வரலாற்று நிகழ்வுகளைப் படித்துப் பார்த்தால் எழுத்தாளர்கள் எந்த அளவுக்கு சரித்திர மாறுதல்களுக்கு காரணமாக இருந்து இருக்கிறார்கள் என்பது புரியும். அரிஸ்டாட்டில், டார்வின், மார்டின் லூதர், கார்ல் மார்க்ஸ், சாக்ரடீஸ், ஐன்ஸ்டீன், நியூட்டன், பெர்னாட்ஷா, இங்கர்சால், பிளாட்டோ, தாமஸ் மால்தஸ், ஹோமர் போன்ற உலகில் புகழ்பெற்ற தலைவர்கள் ஒரு எழுத்தாளராகவும் அறிவியலார்களாகவும் கலைஞர்களாகவும்தான்  தங்களது வாழ்க்கையைத் துவங்கி இருக்கிறார்கள்.

இந்தியாவிலும் மகாத்மா காந்தி, ரவீந்திரநாத் தாகூர், பாரதியார், ஜவஹர்லால் நேரு, அண்ணா, போன்றவர்களின்   எழுத்துக்கள்  இந்த நாட்டின் வரலாற்றை புரட்டிப் போட காரணமாக இருந்து  இருக்கின்றன.   எழுத்தாளர்கள் இந்த மண்ணின் மனசாட்சிகள். உண்மைகளை உலகத்தின் கண்களுக்கு  காட்சியாக்கித் தரும்  கண்ணியம் மிகுந்தவர்கள். எப்போது எழுத்தாளர்களின்  விரோதத்தை இந்த அரசு சம்பாதித்துக் கொண்டதோ அதுவே ஆபத்துக்கு அறிகுறி என்பதை அரசு உணர வேண்டும். இப்போது எழுத்தாளர்களுடன் ஏனைய அறிவு ஜீவிகளும் இணைந்திருப்பது பற்றி  அரசு சிந்திக்க வேண்டும். எழுத்தாளர்களின் கரங்களில் இருப்பது எழுதுகோல் அல்ல அவை சுட்டெரிக்கும் துப்பாக்கிகள் என்பதை எந்த அரசாக இருந்தாலும் உணரவேண்டும்.

உயிர்ப்பலி வாங்கும் வன்முறைகள் ஒரு புறம் அரங்கேறிக் கொண்டிருக்க, இப்போது புதிதாக மை பூசும் அரசியல் நடவடிக்கை ஒன்று தொடங்கப்பட்டு இருக்கிறது. இதைத் தொடங்கி இருப்பவர்கள் மும்பையில் சிவசேனா  கட்சியைச் சேர்ந்த அதிரடி நண்பர்கள். இதுவரை கல்லையும் கம்பையும் கைகளில் எடுத்து மாற்று மாநிலத்தவரை மும்பையிலிருந்து நையப்புடைத்து விரட்டியடித்தவர்கள், வளர்ச்சியின் அடையாளமாக இப்போது  மையைக் கையில் எடுத்தார்களோ என்று தோன்றுகிறது.  ஏனென்றால், இந்தப் போராட்ட முறை உலகில் இதுவரை எந்த இயக்கமும் தங்களது கைகளில் எடுக்காத வழிமுறையாகும். .

பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் குர்ஷித் முஹம்மத் காசுரி  எழுதிய, “ பாகிஸ்தான் வெளியுறவு கொள்கையில் எனது பார்வை, பருந்தோ, புறாவோ அல்ல” என்ற ஆங்கில புத்தக வெளியீட்டு விழா மும்பையில்  நடைபெற்றது. இந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்தவர் மீது சிவசேனா தொண்டர்களால்  கருப்பு மை வீசப்பட்ட சம்பவம் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர் பிஜேபி கட்சியைச் சேர்ந்த சுதீந்திரா குல்கர்னி என்பவர்தான். தனது கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த  முக்கியத் தலைவருக்கே மையால் அபிஷேகம் செய்து ஆனந்தித்தது சிவசேனா. இந்த அரசியல் அத்துமீறலை  நாடே கண்டித்தது என்பதை விட முக்கியமானது இந்தச்செயலை பிஜேயின் மூத்த தலைவர் எல் கே அத்வானியும் கண்டித்துள்ளார்.

ஆனால், குல்கர்னி மீது வீசப்பட்டது மை அல்ல, எங்கள் வீரர்களின் ரத்தம் என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார். குல்கர்னி மீது மை வீசப்பட்டது ஒரு சாதாரண ஜனநாயக போராட்டம் என்றும் அவர் வினோதமான  விளக்கம் வேறு அளித்துள்ளார்

சிவசேனாவின் அந்த   அரசியல் அநியாயம் அதோடு நிற்கவில்லை.  பாகிஸ்தானின்  பாடகர் குலாம் அலியின் இசை நிகழ்ச்சி ஒன்று மும்பையில் ஏற்பாடு செய்யபட்டிருந்தது. ஆனால்  இசை நிகழ்ச்சி நடைபெற்றால் மும்பையில் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படுமென்று  சிவசேனா அச்சுறுத்தியதன்  காரணமாக அந்த இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. உலகறிந்த பாடகர் குலாம் அலிக்கு மும்பையில் ஏராளமான  ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் சிவசேனாவின்  இந்த  அராஜகத்தால் செவிக்குணவு இன்றி திகைத்து நின்றார்கள்.

அதைத் தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையேயான போட்டிகள் நடத்தப்படவேண்டுமென்ற  நோக்கில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் புதிய தலைவரான சஷாங் மனோகர் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷாரியார் கான் ஆகியோருக்கு இடையேயான பேச்சு வார்த்தை மும்பையில் நடைபெறும் என்கிற செய்தி வெளியானது.

இதற்காக சஹாரியார் கானும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் செயல் அதிகாரி நஜீம் சேத்தியும் இந்தியா வந்திருந்தனர். இந்நிலையில், பாகிஸ்தானுடன் கிரிக்கெட் தொடர் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிசிசிஐ அலுவலகத்தை சிவசேனாக் கட்சியினர் மை பாட்டில்களுடன் முற்றுகையிட்டனர். அப்போது, சஷாங்க் மனோகரின் இருக்கைக்கு முன்பாக சென்று, பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட அனுமதிக்கமாட்டோம்  என்று அநாகரீகமான கோஷங்களை எழுப்பி, ரகளையில் ஈடுபட்டனர்.

சிவசேனாவின் போராட்ட வடிவத்தை நாமும் வரவேற்க முடியும். எப்போதென்றால் திரு. மோடி பதவி ஏற்பு விழாவுக்கு பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷரீபை வரவழைத்தபோது ஒரு பச்சை மை பாட்டிலை அவர் மீது ஊற்றி இருந்தால் வரவேற்கலாம்; வெங்காயத்தின்  விலை வானளவுக்கு உயர்ந்ததால்   பாகிஸ்தானிலிருந்து  வெங்காயம் இறக்குமதி ஆனபோது அந்த லாரிகள் மீது மஞ்சள் நிற மையை ஊற்றி இருந்தால் வரவேற்கலாம்; இந்தியாவில் தேடப்படும் ஹபீஸ் சையித் என்பவரை ஆர் எஸ் எஸ் அமைப்பை சேர்ந்த வேத பிரதாப் விதிக் பாகிஸ்தானிலேயே சந்தித்துப் பேசிவிட்டு ஒன்றாக அமர்ந்து பிரியாணி சாப்பிட்டுவிட்டு ஏப்பம்விட்டுவிட்டு வந்தாரே அவர்மீது ஒரு காவி நிற மையை ஊற்றி இருந்தால் வரவேற்று இருக்கலாமே! டில்லியில் இருக்கும் பாகிஸ்தான் தூதரகத்துக்கு சென்று அந்நாட்டின் தேசிய தினத்தை ஒன்றாக சேர்ந்து கொண்டாடிவிட்டு வந்தார் சுப்ரமணியம் சுவாமி அவர்மீது கொஞ்சம் வெள்ளை மையையாவது ஊற்றி இருந்தால்  கொண்டாடியே  இருக்கலாமே! பிஜேபி ஆட்கள் மீது ஊற்ற  வெளியே வராத மை உள்ள பையும்  கையும் மற்றவர்கள் மீது மட்டும் ஊற்றி அவமானப்படுத்த வருவானேன்?  

இந்துக் கடவுளின் உருவத்தை பச்சைக் குத்தியிருந்தார் என்பதற்காக ஒரு ஆஸ்திரேலியா சுற்றுலாப்  பயணி, கடுமையான சொல்லடிக்கு உட்பட்டு காவல் நிலையத்தில் தவறு என்று எழுதிக் கொடுத்து மன்னிப்புக் கேட்கிறார். மாட்டிறைச்சி விருந்துகொடுத்தார் என்பதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதி மக்கள் மன்றத்திலேயே அடிக்கப்படுகிறார், பத்திரிகையாளர் மன்றத்தில் வைத்து அவர் மீது மை பூசப்படுகிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ,  எதிர்கருத்து பேசும் மனுஷ்யபுத்திரன் போன்றவர்களை  மிரட்டுகிறார்கள். ஞானி போன்ற சமூக சிந்தனையாளர்கள் மீதும் மை பூசுவோம் என்று வெளிப்படையாக தொலைக் காட்சியிலேயே மிரட்டுகிறார்கள்.

இவ்வாறான நாட்டின் அமைதியைப் பாழ்படுத்தும் சூழ்நிலைகள் இப்போது மெல்ல மெல்ல உச்ச கட்டத்துக்குப் போய்க்கொண்டு இருக்கின்றன. புது டில்லியில் கிருத்தவ ஆலயங்கள் கல்லெறிந்து தாக்கப்பட்டது, தாய் மதம் திரும்புவோம் என்று ஆசைகாட்டி “கர்வாப்சி” என்ற திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டது, மோடிக்கு வாக்களிக்காதவர்கள் பாகிஸ்தானுக்கு போகட்டும் என்று பேசியது, ராமருக்கு பிறக்காதவர்கள் தவறாகப் பிறந்தவர்கள் என்று பேசியது, இந்த நாட்டில் இஸ்லாமிய கிருத்தவ வழிபாட்டுத்தலங்கள் எதுவும் தேவை இல்லை அவற்றை இடித்து விடலாமென்று சுப்ரமணியம் சுவாமி கூறியது, சிறுபான்மையினரின் வாக்குரிமையைப் பறிக்க வேண்டும் என்று சிவசேனா கூறியது இப்போது மாட்டுக்கறி சாப்பிடுபவர்களை வேட்டையாடுவது,  எழுத்தாளர்களைக் கொல்வது, மாற்றுக் கருத்துடையோருக்கு மை பூசி அவமானபடுத்துவது, விவாதங்களில் மிரட்டுவது  இன்ன பிற செயல்கள் இந்த நாட்டின் பன்முகத்தன்மைக்கும் பாரம்பரியமான சகிப்புத்தன்மைக்கும் பங்கம் விளைவிப்பதாக இருக்கிறது.

ஆக, “சாரே ஜகான்சே அச்சா இந்துஸ்தான் ஹமாரா” என்று அல்லாமா இக்பால் அவர்களால் புகழப்பட்ட இந்தியாவில்- பன்முகத் தன்மைதான் இந்த தேசத்தின் உயிர்நாடி என்று இந்திய அரசியல் சட்டத்தை வடிவமைத்துத்தந்த அம்பேத்கர் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த காரணத்தால் தனது உயிரையே பலி தந்த காந்தியின் தேசத்தில் – “விந்திய ஹிமாசல உத்சல கங்கா திராவிட உத்ல்கல ரங்கா” என்று நாடு தழுவிய தேசியகீதம் முழங்கப்படும் நாட்டில் -  வாழும் சிறுபான்மை, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட  மக்கள் ஒருவித பதற்றமும் அச்சமும் கலந்த உணர்வுடனே நாட்டில் நடமாடும் நிலை  ஆட்சி மாற்றத்துக்குப் பின் பலவகையிலும் உருவாகி இருக்கிறது.

அரசே திருந்த வேண்டும். இல்லாவிட்டால் மக்களின்  தீர்ப்புகள் திருத்தப்படலாம். .  

இப்ராஹீம் அன்சாரி

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 012 1

அதிரைநிருபர் பதிப்பகம் | October 30, 2015 | , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)  குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும்குர்ஆனையும்,  நபி (ஸல்அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்.

''நல்லதை ஒருவர் பிறருக்கு அறிவித்துக் கொடுத்தால், அதை செய்தவனின் கூலி போன்றது அவருக்கும் உண்டு'' என நபி(ஸல்) கூறினார்கள்.  (அறிவிப்பவர்: (அபூமஸ்ஊத் என்ற) உக்பா இப்னு அம்ரூ அல்அன்சாரீ (ரலி) அவர்கள் (முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 173)

'தான் விரும்பியதை தன் சகோதரனுக்கும் விரும்பும் வரை உங்களில் ஒருவர் இறை விசுவாசியாக மாட்டார்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள்  (புகாரி, முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 183)

'உங்களில் ஒருவர் தீமையைக் கண்டால் தன் கையால் அதைத் தடுக்கட்டும், அதற்கு இயலாவிட்டால் தன் நாவால் தடுக்கட்டும் அதற்கும் இயலாவிட்டால் தன் இதயத்தால் (வெறுக்கட்டும்). இது, இறை நம்பிக்கையில் மிக பலவீனமானதாகும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள்  (முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 184)
  
''பாதைகளில் உட்காருவதை உங்களுக்கு எச்சரிக்கிறேன்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் பாதைகளில் சிறிது நேரம் பேசுவதற்காக உட்கார வேண்டியது ஏற்படுகிறது' என்று கூறினார்கள். 'உட்காரும் நிர்பந்தம் ஏற்பட்டால் பாதையில் அதற்குரிய உரிமையை வழங்கி விடுங்கள்' என்று நபி(ஸல்) கூறியதும் 'இறைத்தூதர் அவர்களே! பாதையின் உரிமை என்றால் என்ன?' என்று கேட்டார்கள். ''பார்வையை தாழ்த்துவது, இடையூறு தருவதை நீக்குவது ஸலாமிற்கு பதில் கூறுவது, நல்லதை ஏவுவது, தீயதை விட்டும் தடுப்பது தான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஸயீத் குத்ரீ(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்)
(ரியாளுஸ்ஸாலிஹீன்: 190)

'என் உயிரை தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! நீங்கள் நல்லதை ஏவுங்கள். தீயவற்றிலிருந்து தடுங்கள். இல்லையெனில் உங்கள் மீது தனது தண்டனையை அல்லாஹ் இறக்கி வைப்பான். பின் அவனை அழைத்தாலும், அவன் உங்களுக்கு பதில் கூறமாட்டான்' என்று நபி(ஸல்) கூறினார்கள்.
(அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலி) அவர்கள் (திர்மிதீ). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 193)

''போரில் மிகச் சிறந்தது, அநீதிக்கார அரசனின் முன் நீதத்தை எடுத்துக் கூறுவதுதான்'' என் நபி(ஸல்) கூறினார்கள்.  (அறிவிப்பவர்: அபூஸயீத் குத்ரீ (ரலி) அவர்கள்  ( முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 194)

'மறுமையில் ஒருவர் அழைத்து வரப்பட்டு, நரகிலும் போடப்படுவார். அப்போது அவரின் வயிற்றுக் குடல்கள் சரிந்து விடும். அவர் அந்த நிலையிலேயே கழுதை செக்கைச் சுற்றுவது போல் சுற்றுவார். அவரிடம் நரகவாசிகள் அனைவரும் வந்து, இன்னாரே! உனக்கு என்ன நேர்ந்தது? நீ நல்லதை ஏவி, தீயதை விட்டும் தடுத்துக் கொண்டு இருந்தீர்தானே? என்று கூறுவார்கள். அதற்கு அவர், ஆம் நல்லதை ஏவிக் கொண்டிருந்தேன். அந்த நன்மையை நான் செய்ய வில்லை. தீயதை விட்டும் தடுத்தேன். ஆனால் அந்த தீமைகளை நான் செய்தேன்'' என்று கூறுவார் என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: (அபூஸைத் என்ற) உஸாமா இப்னு ஸைத் (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்).  (ரியாளுஸ்ஸாலிஹீன்: 198)

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் : 3:104)

நம்பிக்கை கொண்டோரே! உங்களை காத்துக் கொள்ளுங்கள்! நீங்கள் நேர் வழி நடக்கும் போது வழி கெட்டவனால் உங்களுக்கு எந்தத் தீங்கும் தர முடியாது. (அல்குர்ஆன்: 5:105)

வேதத்தைப் படித்துக் கொண்டே உங்களை மறந்து விட்டு, மக்களுக்கு நன்மையை ஏவுகிறீர்களா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா? (அல்குர்ஆன் :2:44)

யாரேனும் நல்லறம் செய்தால் அது அவருக்கே நல்லது.
(அல்குர்ஆன் : 45:15 ) 

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபி(ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

 
'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

அலாவுதீன் S.

முந்தைய பகுதிகள் : 001 - 002 -  004 - 005 - 006 - 007 - 008 - 009 - 010 - 011

கி.பி: 2011 அது ஒரு மழைக்காலம் [காணொளி ஆவணப் படம்] 0

அதிரைநிருபர் பதிப்பகம் | October 29, 2015 | , , , ,


அன்றையச் சூழலில் ஆராவாரமாக அதிரை இணைய வரலாற்றில் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு இளம் படை, பெய்து கொண்டிருந்த தொடர் மழையின் தாக்கத்தையும், அதன் சூழலையும் அலசி ஆராயப் புறப்பட்டது. கொட்டும் மழையை அள்ளிக் கொண்டு வரலாம் என்று சென்றவர்களுக்கு அல்லாஹ்வின் அருட்கொடையான மழையை அளவுகோல் வைத்து அளந்து சொல்லும் ஓர் ஆராய்ச்சி மையம் ஒன்று கண்ணில் பட்டது.

அங்கே ! ஓர் பெண்மணி அலுவலகப் பொறுப்பாளர் திருமதி சின்னத்தாய் Msc., B.Ed. இவர், முன்னாள் பள்ளி ஆசிரியை, அதிரை வானிலை கண்கானிப்பு மையத்தின் அலுவலக பொறுப்பாளராக தன்னடக்கத்துடன் எங்களை வரவேற்று, அவர்களுக்கே உரிய ஆசிரியர் பணியின் அற்புதத்தால் அங்கே பயிலும் மாணாக்களாக சென்ற எங்களுக்கு விளக்கிய விதம் அருமை.

வானத்தை அன்னாந்து பார்த்துக் கொண்டு மழை வருமா? வந்தால் பள்ளிக்கூடங்கள் விடுமுறை விடுமா? என்ற காத்திருக்கும் மாணவர்களைப் போல் நாமும் அங்கிருந்த அனைத்து ஆராய்ச்சி பயண்பாட்டுச் சாதனங்களை பார்த்ததும் கேள்விகள் கேட்டோம், ஆச்சர்யப்பட்டோம் இதுநாள் வரை அதிரையில் இப்படியான மையம் இருப்பதை எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும் ? 

இந்த ஆராய்ச்சி மையத்தின் தொடர் பங்களிப்பாக, ஆகாய மார்க்கத்திர்க்கும், தரை வழி மற்றும் கடல் வழித் தடங்களுக்கும் எந்த அளவு பயன்படுகிறது என்பதனை திருமதி சின்னத்தாய் அவர்கள் தெளிவான பாடம் எடுத்தார்கள்.


அதிரைநிருபர் பதிப்பகம்
நன்றி : அதிரைபிபிசி

சாதனைச் செம்மல் முராத் கந்தவரு அலி மனிக்பான் 3

அதிரைநிருபர் பதிப்பகம் | October 28, 2015 | , , , , ,

அரேபியாவில் இருக்கும் அறிஞர்களை நாம் அறிந்து வைத்திருக்கும் அளவு அலிமனிக்பான் அவர்கள் எங்களுக்கு மத்தியில் பிரபலம் பெற்றிருக்கவில்லை. சமுத்திரவியலாளர், சுற்றுச்சூழலியலாளர், வானியல் நிபுணர், பிரபல வர்த்தகர் என்று அலி மனிக்பான் அவர்களின் பட்டங்கள் நீண்டு செல்கின்றன.

பசுமையான பூமி, விவாசயத்துறை போன்றவற்றுக்கும் அவர் மகத்தான பங்களிப்புக்களை வழங்கிவருகிறார். இஸ்லாமிய சட்டத்துறையில் ஆழமான அறிவு அவருக்கிருந்தாலும், சமுத்திரவியல், மற்றும் வானியல் துறைகளின் அவருக்கிருக்கும் ஈடுபாடு அதிகமாகும். இந்தியாவின் கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட அலிமனிக்பான் ஆங்கிலம் ,அரபு, திவஹி, சிங்களம், ரஷ்யன் உட்பட 15 மொழிகளில் நிபுணத்துவம் பெற்றவார்.

ஆலி மனிக்பான் அவர்கள் 19 வகையிலான மீன் இனங்களை கண்டுபிடித்துள்ளார்கள். சமுத்திரவியல் உயிரியலாளரான கலாநிதி சாந்தப்பன் ஜோன்ஸ் அவர்கள்; அலிமனிபான் அவர்கள் பற்றி கூறியுள்ள கருத்துக்கள் ஆச்சரியமானவை ‘மனிக்பான் அவர்களின் ஆய்வு என்னை கவர்ந்துவிட்டது என்று பெருமையுடன் கூறியுள்ளார்.

இயற்கைக்கு உகந்த வகையில் அவரது ஆய்வுகளும், கண்டுபிடிப்பக்களும் அமைந்திருக்கின்றன. அலி மனிக்பான் அவர்கள் 1981ம் ஆண்டில் அயர்லாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் டிம் செவேரின் (Tim Severin )என்பருக்காக ஒரு கப்பலைக் கட்டினார். 27மீட்டர் நீளமான கப்பலை நிர்மாணிக்கும் பணியை அலிமனிக்பான் வெறும் 12 மாதங்களில் கட்டிமுடித்தார். பண்டைய காலவடிவில் கட்டப்பட்ட கப்பலை நிர்மாணிக்க உலோகங்கள் பயன்படுத்தப்படவில்லை என்பது சிறப்பம்சமாகும்.

டிம் செவேரின் இந்தக் கப்பலில் ஓமானில் இருந்து சீனா வரை 9600 கீலோமீட்டர்கள் பயணிக்க 8 மாதங்கள் கடந்துள்ளன. டிம் செவேரின் தனது அனுபவத்தை The Sinbad Voyageஎன்ற நூலில் பகிர்ந்துகொண்டுள்ளார் அலிமனிக்பான் சந்திர நாள் காட்டியை அறிமுகம் செய்திருக்கிறார். ஹிஜ்ரி நாள் காட்டி மற்றும் பிறை சர்ச்சை போன்ற விடயங்கள் பற்றியும் அதற்கான தீர்வுகளையும் 1999ல் சவுதி அரேபிய அராசங்கத்திடம் சமர்ப்பித்தார் இது விரிவாக ஆராய வேண்டிய பகுதியாகும்

(டாக்டர் அஹமட் ருஷ்டி அவர்கள் இது பற்றி அலிமனிக்பானுடன் விரிவாக கலந்துரையாடடியதாகவும் எனக்கு அறியக்கிடைத்தது. அலிமனிக்பான் அவர்கள் டாக்டர் ருஷ்டயை சந்தித்த பின்னரே எனக்கும் ருஷ்டி அவர்களுக்கும் இடையிலான தொடர்பு ஏற்பட்டது) இந்திய ஹிஜ்ரி நாட்காட்டி குழுவின் தலைவராகவும் அவர் கடமையாற்றுகிறார் !

அலி மனிக்பான் ஆய்வாளர் என்ற வட்டத்திற்கு அப்பால் பணிவான ஒரு மனிதர். சுற்றுச்சூழலை நேசிப்பவர். அவர்களுக்கு 77 வயதாகிறது. அல்லாஹ்தஆலா அன்னாரின் ஆயுளை நீடித்து வைப்பானாகவும்.

“யாரும் எவரிலும் தங்கி வாழக்கூடாது ஒவ்வொருவரும் தமக்குரிய வாழும் வழியைத் தெரிந்துகொள்ள வேண்டும். நாம் நம்மில் தங்கியிருக்க வேண்டும்” – அலி மனிக்பான்(حفظ

இவரைக் குறித்து விக்கி பீடியா தகவல் களஞ்சியத்தில் அறிய



இவர்குறித்தஆவணப்படம்:


நன்றி:  ‘அதிரை பிறை’
பரிந்துரை & எடிட்டிங்: அதிரை அஹ்மத் 

"எண்பது, தொன்னூறுகளில் என் ஊர்" 2

அதிரைநிருபர் பதிப்பகம் | October 27, 2015 | , , , , , , ,



பழசை தனிமையில் நினைத்துப் பார்த்து நெஞ்சுக்குள் நமக்கு நாமே அவ்வப்பொழுது சிலாகித்துக் கொள்வதை அப்படியே இல்லா விட்டாலும் கொஞ்சமேனும் எழுத்துருவாய் இங்கு கொண்டு வந்து கிறிக்கிக் காண்பிப்பது என்பது சிரமம் தான். இருப்பினும் முயற்சித்துப் பார்ப்போம் என்ற எண்ணத்தில் அவை இங்கே கொஞ்சம் கிறுக்கி காண்பிக்கப்பட்டுள்ளன.

காலை வேளை சுபுஹுத் தொழுகைக்கு பின் ஊரில் நட்சத்திரங்கள் தன் இரவு டூட்டி முடிந்து மெல்ல,மெல்ல வானில் விடை பெற்று மறைந்து போகும். அந்த நீல வானமும் கொஞ்சம்,கொஞ்சமாய் சிவந்து, வெளுத்து விடிய ஆரம்பிக்கும். அதற்கு மரங்களில் அடைக்கலம் புகுந்திருக்கும் காக்கை, மைனா, சிட்டுக்குருவிகள் சுறுசுறுப்பாய் காச்மூச் என்று கத்தி அன்றைய பொழுதை அதற்கேயுரிய பிரத்யேக குரலில் விடியும்முன் வரவேற்கும்.

இவ்வளவு என வரையறுத்து இன்று கேட்டு வாங்கப்படும் பள்ளிக்கூட டியூசன் ஃபீஸ் போல் அல்லாமல் அன்று தானாகவே காலை குர்'ஆன் பள்ளி ஒஸ்தாருக்கு அன்பளிப்பாய் வாரமொருமுறை கொடுக்கப்படும் கம்சுகாசு (கமீஸ் வியாழன்).

நாளை கம்பனில் அயல்நாடுகளிலிருந்து வரும் உறவுகளை இறக்க இன்றே குதிரை வண்டிகள் முன்பதிவு செய்து வைக்கப்படும். மாமா கொண்டு வரும் அந்த கைக்கடிகாரம், மிட்டாய் சாமான்களுக்காக உற்சாகத்தில் அன்றைய இரவே உள்ளம் உறங்க மறுக்கும்.

காலை நாயக்கர் கடை இட்லி,வடை,சட்னி,சாம்பாருக்காக அணியணியாய் பெரியவர் முதல் சிறியவர் வரை அக்கடை நோக்கி நடக்க ஆரம்பிப்பர். குளத்தில் அல்லது தோப்பு போரில் சென்று நன்கு குளித்து வந்த பின் வீட்டில் வேறு காலை பசியாற தயாராக இருக்கும். அருணா பார் சோப்பு, அண்ணா பார் சோப்பும், குருவி சோப்பும் ஒன்றுக்கொன்று சந்தையில் போட்டி போடும்.

பத்திரிக்கைகளை நன்கு படித்து நாட்டு நடப்பு தெரிந்து கொள்வதற்கும் அதனுடைய இலவச வாராந்திர இணைப்புகளை முதல் நபராக பெறுவதற்கும் அப்படியே கடைத்தெருவுக்கும், மையின் ரோட்டிற்கும் கால்கள் அதுவே அழைத்துச்செல்லும்.


பால்காரன் மணியோசையுடன், புதினமாய் வந்திறங்கிய பாக்கெட் பாலும் வீடு வீடாய் கலியாண பத்திரிக்கை போல் போடப்படும் காலம்.

வீட்டுக்கிணற்றில் தனியே குளிர்ந்த நீரில் குளிக்க விருப்பமில்லாமல், நண்பர்களுடன் வேட்டி,டவலு,சோப்பு எடுத்துக்கொண்டு அதை நன்கு ஆலுபரோட்டா போல் மடித்து தெருக்குளக்கரை சென்று அதன் குருவிக்கூடு போன்ற குழிக்குள் திணித்து நண்பர்களுடன் படிக்கரையில் இறங்கி தண்ணீரை மெல்ல,மெல்ல உடல் சிலிர்க்க விளையாட்டாய் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு தற்காலிக அந்த குளிருக்கு தீர்வு காண தொபுக்கடீர் என குளத்திற்குள் குதிக்கும் அந்த உள்ளம் உற்சாகமடைந்து அதற்கு சான்றாக ஆழத்திற்கு சென்று மண் அள்ளி வந்து நண்பர்களிடம் காட்டி மகிழும்.

ஆசையாய் கலர்,கலர் கோழிக்குஞ்சுகளை கடைத்தெருவிலிருந்து வீட்டிற்கு வாங்கி வந்து இசட் பிரிவு பாதுகாப்பு போல் அதை தொட்டு,தொட்டு பாதுகாப்பாய் என்னதான் வளர்த்து வந்தாலும் செத்த நேரம் கண் அசரும் சமயம் அந்த காக்கச்சி கோழிக்குஞ்சை கீச்,கீச் சப்தத்துடன் கவ்விக்கொண்டு போகும் சமயம் அதைக் காணும் எம் கண்களில் கண்ணீர் தானாகவே வந்து அந்தக்காக்கச்சியை கண்டபடி வீடே திட்டித்தீர்க்கும்.

வேட்டிக்குள் அரிசியை வீட்டினருக்கு தெரியாமல் எடுத்து வந்து தெரு ஆச்சிக்கு கொடுத்து வேண்டியதை வயிறு நிரம்ப உண்டும்,திண்டும் மகிழும் பழக்க,வழக்கம் சரியானதாக இல்லாவிட்டாலும் அதை நினைக்கும் இன்று அது என்னவோ ஒரு சாதனையாகவே தெரிகிறது.

தெருவிலும், வீடுகள் இருக்கும் சந்துகளிலும் வீட்டின் அன்றாட சமையலுக்கு அடுப்பெரிக்க வாடியிலிருந்து வந்திறங்கிய தேங்காய் மட்டைகளும், பூக்கமளைகளும், வீடு கட்ட வந்திறங்கி இருக்கும் ஆற்று மணலும் குவியலாய் ஆங்காங்கே கிடக்கும். அந்த ஆற்று மணலே இரவில் சாகவசமாய் உட்கார்ந்து நண்பர்களுடன் அரட்டை அடிக்க பேருதவி செய்யும். அதில் மணல் வீடுகள் கட்டி, களிமண்ணும் எடுத்து விளையாடச்சொல்லும். அப்படியே இரவு அம்புலிமாவை பார்த்து யாரோ சொன்ன "அவ்வையார் அங்கு உரல் இடிக்கும் கதை" நினைவுக்கு வரும். அப்படியே வர இருக்கும் வாழ்க்கைத்துணை பற்றி வெட்கமாய் உள்ளத்தின் ஒரு ஓரத்தில் சிற்றோடை போல் ஓசையின்றி அந்த ஆசையும் அதுவாய் ஓடும்.

அன்றைய சைக்கிள் கடைகளெல்லாம் இன்று எப்படி எமக்கு கண்கொள்ளாக்காட்சி தரும் வண்ண,வண்ண பி.எம்.டபுள்யூ, ஆடி, மெர்சிடஸ் கார்களின் ஷோரூம்கள் போல் ஆசையாய் காட்சி தரும். அதில் வயது, உயரத்திற்கேற்ற கால், அரை, முக்கால், முழு வண்டிகள் வரிசையில் நிறுத்தப்பட்டிருக்கும். மணி வாடகை, நாள் வாடகைகள் தேவைக்கும் வசதிக்கும் தகுந்தார்போல் பெயரும், நேரமும் குறிப்பிட்டு எடுத்து உபயோகிக்கப்படும் அதற்கேற்ற வாடகையும் வசூலிக்கப்படும்.

இன்று வாட்ஸ்'அப் போல் அன்று வால்டீப்பு பஞ்சர் பற்றி அதிகம் பேசப்படும். காரணம் பெரும்பாலும் எல்லோர் வீடுகளிலும் சைக்கிள் பயன்படுத்தப்பட்டது.

மாமா கொண்டு வந்து தந்த சீக்கோ, கேசியோ வட்ட, சதுர கைக்கடிகாரங்களின் கண்ணாடிகளில் கீரல் விழுந்து பழசாகி விடாமல் இருக்க கடைத்தெரு வாட்ச் கடைகளில் விற்கும் கலர்,கலர் ஸ்டிக்கரை வாங்கி ஒட்டி மகிழும் காலம் அது.

வரும் பெரிய நோய்நொடிகளுக்கெல்லாம் ஒரு ஆட்டோ வாங்கும் செலவை வைக்கும் இன்றைய ஸ்கேன், ரத்த பரிசோதனைகளின்றி மீராசா, ஹனீபு, இபுறாகிம், ராஜ் டாக்டர்கள் போடும் ஒரே ஊசியில் அல்லாட காவலில் எல்லாம் ஓடிப்போகும்.

அடிக்கடி மின் தடை வருவதாலும், அரை கெரண்டு பிரச்சினைகளாலும் அயல்நாட்டு பெட்டி பிரிப்பில் அந்த சிகப்பு, பச்சை எமர்ஜென்சி லைட்டு அவசியம் இடம் பெறும்.

யாரோ வாங்கி ஓட்டி வந்த டி.வி.எஸ் மோட்டார் சைக்கிளை தட்டுத்தடுமாறி ஓட்டி பின் அதை ஒரு பெரும் சாதனை போல் மனதிற்குள்ளும், வெளியிலும் உள்ளம் சிலாகித்துக் கொள்ளும் காலம் அது.

கம்பூண்டும் வீட்டு, தெரு அப்பாக்களின் அதட்டல்களில் 144 தடை உத்தரவு போட்டது போல் சில சைத்தானிய சேட்டைகள் தன் வாலை பயந்து சுருட்டிக்கொள்ளும்.

ஒரு வகுப்பில் முன்னேறிய சீனியர் மாணவர்களிடம் பாதி விலைக்கு புத்தகங்களும், கோனார் உரையும் வாங்கி படிக்கும். அதன் மூலம் காசு பணம் கொஞ்சம் மிச்சம் செய்யும்.

பள்ளிக்கூடத்தில் ஏதோ தவறுக்காக பெற்றோரை கூட்டி வரச்சொன்ன ஆசிரியருக்கு தெரியாது என எண்ணி தெருவில் சென்ற தெரிஞ்ச ஆளைக்கூட்டி வந்து சிலவேளை தப்பித்தும் சிலவேளை மாட்டிக்கொண்டும் சங்கடப்படும்.

முட்டலாம்பு வைக்கும் வீட்டு மாடாக்குழிகளெல்லாம் இன்று புது வீடுகளாய் ஐஃபோன் சார்ஜ் பண்ணும் அலமாரிகளாக மாறிவிட்டன.

அன்று எட்டணா (50 காசு) காசுகளெல்லாம் நமக்கு இன்றைய எட்டு கிராம் தங்க காசுகள் போல் ஜொலிக்கும். அதை வைத்து வேண்டியதை கடையில் வாங்கி திண்டு மகிழும்.

ஒரு கிலோ ஆட்டுக்கறி எம்பது ரூபாய் என்ற கறிக்கடைகாரரிடம் அந்த கடையில் எழுபது ரூபாய் தானே என வாக்கு வாதம் செய்து பேரம் பேசும்.

கடைத்தெருவில் வாங்கும் முப்பது ரூபாய்க்கு மீனும், பத்து ரூபாய்க்கு காய்கறிகளும் வீட்டின் பகல், இரவு உணவுக்கு போதுமானதாக இருக்கும். (இன்று கருவாப்பிள்ளையும், பச்சமிளகாயுமே பத்து ரூபாய்க்கு தர மறுக்கின்றனர் காய்கறிகடைக்காரர்கள்).

குழல் பணியானும், நானா ஹத்தமும், அரியதரமும், வெங்காயப்பணியானும், பூவடையும், முட்டாசும், மைசூர் பாக்கும், சாதா, பீட்ரூட் ஹல்வாவும் சம்மந்திப்புறங்களை சமாதானப்படுத்த அதிகம் புழங்கும் அக்கால திண்பண்டங்கள். அதில் குறை வந்தால் சம்மந்தமே மாறிப்போகும் கொடுமை.

பாஸ்போர்ட் கிடைத்து விட்டால் அதுவே ஒரு நல்ல அரபு நாட்டு நிறுவனத்தில் சம்பளம், சகல வசதிகளுடன் வேலைவாய்ப்பு கிடைத்து விட்டது போல் சந்தோசப்பெருமூச்சு விடும். பாஸ்போர்ட் காப்பிகள் எடுக்கப்பட்டு அங்குமிங்கும் அயல்நாட்டு சொந்தபந்தங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.அதற்கு அக்கால தோனா.கானாவின் நடமாடும் தபால்துறையே பேருதவி புரியும்.

கருத்த நெகடிவ் ஃபோட்டோக்கள் வீட்டு பத்திரம் போல் பாதுகாக்கப்படும். அதிலிருந்து தேவைக்கு கழுவி காப்பிகள் போட்டப்படும்.

அப்பொழுது குளோபல் வார்மிங் (புவி வெப்பமாகுதல்), நீர் மேலாண்மை பற்றியெல்லாம் அதிகம் பேசப்படவில்லை. காரணம் உலகம் அதன் உண்மை வடிவில் இருப்பதாகவே நம்பப்பட்டது. அதற்கான அதிக கவலைகள் வெளிப்படுத்தப்படவில்லை.

ஆகாச வானி, செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண சுவாமியின் குரல் எல்லோருக்கும் பரிச்சயப்பட்ட ஒன்றாகவே இருந்து வந்தது. மாநிலச்செய்திகள் சரியான நேரத்தில் கேட்டு ஊர், உலக நடப்புகள் அறியப்பட்டன. புயல்களுக்கு தான் விரும்பிய பெயரூட்டி மகிழாத காலம் அது. காற்றின் வேகத்தின் அளவும், அது கடந்து செல்லும் ஊருமே அன்று வானிலை ஆய்வு மையத்தால் ரேடியோ மூலம் எச்சரிக்கப்பட்டு அறிவிக்கப்படும். பழுதடைந்த ரேடியோக்களும், எமர்ஜென்சி லைட்டுகளும் உடனே சரி செய்ய கொடுக்கப்பட்டன. அது பற்றி அடிக்கடி விசாரிப்புகளும் இருந்து வந்தன.

அந்த கறுத்த விரல் விட்டு எண்ணை சுற்றி வேண்டியவரை அழைக்கும் தொலைபேசி கொஞ்சம் நாகரிகமாற்றத்தில் புதுப்பொலிவு பெற்று வெள்ளை நிறத்திற்கு மாறி சந்தைக்கு வந்தது. டிரங்கால் புக் பண்ணுவது கொஞ்சம் முன்னேறி எஸ்.டி.டி, ஐ.எஸ்.டி என பரிணாமம் பெற்று தொலைத்தொடர்பு வளர்ந்தது.

டி.வி.எஸ். 50 மோட்டார் சைக்கிள் இருந்தாலே அந்த வீடு நிச்சயம் ஓரளவுக்கு வசதியான வீடாகவே கருதப்பட்டு வந்தது.

ஹஜ்ஜுக்கு போய் வந்த சொந்த,பந்த உறவுகள் ஆசையாய் தந்த ஜம்ஜம் தண்ணீரும், பேரிச்சம்பழமும், கண்ணுக்கு சுருமா, தசுமணி, மக்கத்து மோதிரம், தொப்பி, அத்தரு போன்றவை அக்காலத்தின் பெரும் பொக்கிஷங்களே. அதை அணிந்து மகிழ்வதால் ஆனந்தமே.

மாவில் சல்லடை, இடியப்ப உரல், பொரிச்ச முறுக்கு, ஐஸ் பம்பாய் (மூங்கிலில் தலையாட்டி பொம்மையுடன் சுற்றி சிறுவர்களின் கையில் ரயில், தேள், என செய்து விற்கப்படும் மிட்டாய்), ஷிஃபா மருத்துவமனையின் முக்கிய அறிவிப்பு பிரபல இருதய மருத்துவ நிபுணர், உள்ளாங்குருவி, கொக்கு,மடையான், பழைய இரும்பு, பிளாஸ்டிக் வாங்குறது, அருவா, கத்தி சாணெ புடிக்கிறது....பாத்திரம் அடைக்கிறது..குடை ரிப்பேர் பண்றது..பழைய கட்டில், அலிமாலு, பத்தாயம் வாங்குறது..நிலக்கடலை வண்டியின் சப்தம்..பழைய செண்டு பாட்டுலு வாங்குறது...ராலு, மீனு.... போன்ற வியாபார, வர்த்தக தனி நபர், வாகனங்களின் சப்தங்கள் மாறி, மாறி கேட்டுக்கொண்டே இருக்கும் ஊர் முச்சூடும்..... இன்று கண்ட, கண்ட சாமான் சட்டிகளுக்காகவும், கெட்டுப்போக இருக்கும் பழங்களுக்காகவும் உறங்கும் நேரத்தில் கூட ஊருக்குள் வந்து சப்தமாய் ஒலி பெருக்கியில் கூச்சலிட்டு செல்கின்றனர். எல்லோரையும் எரிச்சலடைய வைக்கின்றனர்.

அன்றைய ஆண்,பெண், சிறுவர்,சிறுமியர் தெருவில் விளையாடிய விளையாட்டுக்களை பட்டியலிட்டால் அதுவே ஒரு பெரும் கட்டுரையாக உருவெடுக்கும். அதை படித்த பின் உள்ளமோ இங்கு வந்து "உச்சி உருட்டு" விளையாடும்.

இன்று எங்கு பார்த்தாலும் மனித நேயத்தை குழிதோண்டி புதைக்கும் மத துவேசமும், கேன்சர் போன்ற ஆட்கொல்லி நோய்களும் ஒன்றோடொன்று ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகள் போல் வெகுவாக மிருக பலத்துடன் வளர்ந்தும் தன் விளையாட்டை சந்துபொந்துகளிலும் அரங்கேற்றி வருகின்றன. பலிகடாக்களாய் அப்பாவி பொது ஜனங்கள். சிறுவர்களைக்கூட ஈவு இரக்கமின்றி ரத்த வெள்ளத்தில் தன் அகோர ஆயுதத்தால் சாய்த்து விடுகின்றன. (சமீபத்திய முத்துப்பேட்டை சிறுவன் மீதான தாக்குதல் சம்பவமே சான்று).

இது போல் இன்னும் ஏராளமாய் எப்படியோ இருந்து வந்த என் ஊர் இன்று எப்படியோ மாறிப்போய் விட்டது. அதைக்கண்ட, அனுபவித்த எத்தனையோ என் மக்களும் அவரவர் போய்ச்சேர வேண்டிய இடமும் போய்ச்சேர்ந்து விட்டனர் நமக்கு முன்னரே.

இங்கு விடுபட்ட பழசுகளை உங்கள் பின்னூட்டம் மூலம் தொடரலாம் நீங்கள்.....

மு.செ.மு. நெய்னா முஹம்மது
படங்கள் : பாரிவள்ளல் [நன்றி]

இளமையின் ரசனை ஏராளம் - ஏழு மட்டும் இங்கே ! 12

அதிரைநிருபர் பதிப்பகம் | October 26, 2015 | , , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்கினிய வாசக நேசங்களே:

இளமை துள்ளும் எக்காரியமும் ரசிக்கத்தூண்டும் அதன் வேகம் மற்றும் விவேகமும் அதே நேரத்தில் அசர வைக்கும். அவ்வகையில் தனித்திறன் வாய்ந்த இளமையின் புதுமையை அறிமுகப்படுத்துவதில் என்றுமே முன்னோடியாக இருக்கும் அதிரைநிருபர் வலைத்தளம் கண்டெடுத்த மற்றுமொரு நிழற்பட கலைஞன்தான் அசத்தல் காக்கா ஜாகிர்ஹுசைன் அவர்களின் இளைய மகன் அஃப்ஸல் ஹுசைன். 

மலேசியாவில் தந்தையின் தனிப்பட்ட கனிவான கவனிப்பில் வளர்ந்து படித்து வரும் இவர் தமது மூன்றாம் கண்கொண்டு (அதாங்க கேமராவாமே) இறைவனின் படைப்புகளை உற்றுப் பார்ப்பதில் உவகை கொண்டவர் மட்டுமல்ல அப்படியே காட்சிப் படுத்தி ஆவணப்படுத்துவதில் கில்லாடி.

இவரை(யும்) ஊடகத்துறைக்கு அழைத்துவரும் முயற்சியாக இங்கு இவரின் கிளிக்ஸ் பதிவாக மட்டுமல்ல இளயவர் அஃப்ஸலை வரவேற்பதில் மகிழ்கிறோம்...!

அல்ஹம்துலில்லாஹ்.

அதிரைநிருபர் பதிப்பகம்


எழிலுறக்கம்:
ஆழிப் பேரலை யென
எழாத நீர்நிலை
அக்கினிக் குழம்போ வென
சுடாத வாநிலை 

பச்சை உறை யிட்ட
பெருமலையே தலையணை
பாதத்தில் புல்லுரசும்
பூமியே பஞ்சணை 

ஆரும் சீண்டாத
அமைதியே அதன் துணை
அதனைப் படம் பிடித்தது
அஃப்ஸலின் நல் ரசனை 


பால் வழியும் பாறை: 

ஈரம் இருக்கும் கல்
நீரை நிறுத்தாது
அருவி கொட்டும் பாறையோ
அருகி லிழுக்கும் யாரையும் 

கால் நனைத்துக் கடந்திருப்பர்
கண்விழித்துக் களித்திருப்பர்
அஃப்ஸல் கண்டதால்தான்
அழகாகப் பதிவு செய்தான் 



பசுமைக்கொடி:

கொடிகொண்ட வர்ணங்களாய்
பிடித்திருக்குப் படம்
பசுமைக்கு நடுவே
பாலென சிற்றருவி 

புற்குண்டு பிரித்து
புறப்பட்டதா அருவி
அருவியைக் குழந்தையென
பிரசவிக்கிறதா மலை

அருகிருந்து
அவதானித்த 
அஃப்ஸலுக்கே வெளிச்சம்



வெளிச்ச மழை: 
வெளிச்ச மழை
வீதியில் விழுகிறது
சிலிர்த்த இலை
சிந்தையில் உழுகிறது 

மூடு பனி மயங்கி
மரங்களில் ஒளிகிறது
வானவில் லொன்றை
காணவில்லை மறைக்கிறது 

பச்சைக் கானகத்தில்
வெள்ளை யடிக்கிறது
பசுமை புரட்சி செய்து
வெயிலையே எதிர்க்கிறது 

அஃப்சல் அழகியலில்
அசல் இந்த ஆதாரம்



பசுந் தென்றல்: 

கரும் பச்சையும்
கிளிப்பச்சையும் இரட்டையர் 

இங்கு
வசிக்க வொரு இடம்
வாய்த்துவிட்டால்
கதவில்லா வாயிலும்
கம்பியில்லா சாளரமும்
கூரையில்லா குடிசையுமாய்
வீடு ஒன்று வைக்க வேண்டும்
விடுமுறையைக் கழிக்க வேண்டும் 

படம்பிடித்த அஃஸல்
இடம்பிடித்துத் தருவானா?



மந்தகாச மந்தாரம்:

மேகம் மிதக்கிறதே அது
வானமா தடாகமா

மெல்ல விடிகிறதே அது
கிழக்கா விளக்கா

எத்தனை ஓவியங்கள் அது
வானமா வண்ணத்திரையா

அருமையாய் கைப்பற்றியது 
அஃப்சலா அம்சமா



தோற்ற மயக்கம்: 

பூக்களின் உடை உடுத்தி 
புது வர்ணத்தில் 
இலைகள் 

பச்சையம் இல்லாது 
பயனென்ன 
பார்க்கவும் ரசிக்கவும் 
பயமென்ன

அணிவகுப்பைத் தொடர
அஃசலுக்குத் தயக்கமென்ன

- Z. அஃப்சல் ஹுசைன்

- சபீர்

பசுமை எங்கே..? இயற்கை எங்கே..? 6

அதிரைநிருபர் பதிப்பகம் | October 25, 2015 | , ,

பசுமையும், இயற்கை வளமும் இறைவன் இவ்வுலகில் நமக்கு வழங்கிய அருட்கொடை. மனிதராய் பிறந்த நமக்கும், மற்றபிற அனைத்து உயிர் இனங்களுக்கும் இவ்வுலகில் உயிர் வாழவும், மற்றபிற தேவைகளுக்கும் பசுமையும் இயற்கை வளமும் பல வகையில் உதவியாய் இருக்கின்றது. 

பசுமை வளமும், இயற்கை வளமும் நமக்கு அரிதாய் கிடைத்த பொக்கிசங்கள். 

இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த பசுமையையும், இயற்கையையும் மனிதன் ஏதாவது ஒரு சுய தேவைகளுக்காக அழித்துக்கொண்டே தான் இருக்கின்றான். அதன் தாக்கத்தை இன்று நாம் கொஞ்சம் கொஞ்சமாக உணர்கிறோம், காணமுடிகிறது. [ பருவமழை பொய்த்து போதல்,அனல்காற்று, புழுதிமண், நிலத்தடி நீர் இன்மை,வைரஸ் கிருமிகள் பரவுதல்,ஓசனில் ஓட்டை,தட்பவெட்ப சூழ்நிலை மாற்றம்,] இன்னும் எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம். பசுமையை, இயற்கையை அழித்தல் நாம் நம்மையே அழித்துக்கொள்வதற்கு சமமே.

ஒரு பசுமையை, இயற்கையை அழித்து விட்டு நாம் ஒன்பதாயிரம் இன்னல்களுக்கு நடுவில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.

பசுமையையும், இயற்கையையும் அழித்ததால் நாம் இழந்தவைகளை கணக்கிட்டுச்சொல்ல முடியாது. அதில் சில நம்மால் மறக்க முடியாதவை

நம்மால் அழிந்த கொண்டு இருப்பவை...!!!

இதோ சில நினைவூட்டல்...

பச்சைப்பசேலென படர்ந்து கிடந்த வயல்வெளிகள் எங்கே..? 
பாதையாய் நாம் நடந்து சென்ற வாய்க்கால் வரப்புக்கள் எங்கே...?

பச்சிளம் நிறமாய் பளிச்சிட்ட புல்வெளிகள் எங்கே..? 
நித்தம் பூக்கும் பூமரங்கள் எங்கே...?

வாய் ருசிக்க சாப்பிட்ட கோவைப்பழங்கள் எங்கே..? 
வாய் வறண்டும் சாப்பிட்ட கோணப்புளியங் காய்கள் எங்கே...?

நாக்கு சிவக்க சாப்பிட்ட நாவப்பழங்கள் எங்கே...?
நாக்கு அரிக்க சாப்பிட்ட முந்திரிப்பழங்கள் எங்கே...?

அடர்த்தியாய் எழுந்து நின்ற அலிஞ்சிமரங்கள் எங்கே...?
நாம் அள்ளிக்கில்லி விளையாண்ட ஆமனக்குச்செடிகள் எங்கே...?

வீட்டு வேலியை பாதுகாத்த முல்லுமுருங்கைகள் எங்கே..?
ஆடு, மாடுகள் ருசித்துச்சாப்பிடும் அந்தக் கிலுவை இலைகள் எங்கே...?

தொட்டதும் மூடிக்கொள்ளும் தொட்டாசிணுங்கிகள் எங்கே..?
தோல் சிவக்க அரிக்கும் செந்தூண்டி இலைகள் எங்கே...?

கூட்டம் கூட்டமாய் பறந்து சென்ற பறவைக்கூட்டங்கள் எங்கே....?
கும்மாளம் அடித்துச்சென்ற பூநாரைகள் எங்கே...?

வெட்டிச்சென்று தாவி ஓடிய வெட்டுக் கிளிகள் எங்கே..?
விடிகாலைப்பொழுதில் உதயமாகும் ஈசைப் படைகள் எங்கே...?

ஓடிமறைந்து உற்று நோக்கும் ஓணான்கள் எங்கே..? ஒய்யாரமாய் பழம் ருசிக்கும் அழகிய அணில்கள் எங்கே..?

வண்ண வண்ண நிறத்தில் வட்ட மடித்த வண்ணத்துப்பூச்சிகள் எங்கே...?
வான் சரிந்த இருட்டினில் வெட்டி மின்னிய மின்னட்டாம் பூச்சிகள் எங்கே...?

தாவிப்பிடித்து தன் தம்பிக்கு கொடுத்த தட்டான்கள்(தும்பி) எங்கே..?
தங்க நிறத்தில் தன வீட்டில் தஞ்சமடையும் பொன்வண்டுகள் எங்கே.?

தூரத்து மரத்தில் கூடுகட்டி வாழ்ந்த தூக்கணாங்குருவி எங்கே..?
துள்ளிவந்து தோளில் அமரும் மைனாக்கள் எங்கே...?

நம்வீட்டில் மழலைப்பேச்சு பேசிய பச்சைக்கிளிகள் எங்கே..?
நாம் ரசித்துப்பார்த்த மரம் கொத்திப்பறவைகள் எங்கே...?

சப்த ஒலி மட்டும் கேட்டு ரசித்த சாரீர வண்டுகள் எங்கே....?
இன்னபல நம் கண்ணில்படா இயற்கை பிறவிகள் எங்கே...?

இவை அனைத்தும் இப்போது எங்கே...?

தீர்வு ?

மீண்டும் பசுமையை ஏற்படுத்துவோம்
இயற்கையை காப்போம்...!
இழந்ததை மீட்போம்...!
இன்பமாய் வாழ்வோம்...!

அதிரை மெய்சா

“பசு” ‘மை’பூசி அடி‘மை’ ஆகும் இந்தியா 25

அதிரைநிருபர் பதிப்பகம் | October 24, 2015 | ,


கடந்த சில நாட்களாக பல ஊர்களிலும் தங்களது ஊர்களை பசுமையாக்க வேண்டுமென்ற முனைப்பு, முன்னெடுக்கப்பட்டு அது தொடர்பாக சில ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

ஆனால்,

நாடு இப்போது போய்க் கொண்டிருக்கும் போக்கில் பசுமை என்கிற வார்த்தையில் இருக்கும் “ பசு ”  என்கிற வார்த்தையை சொன்னால் கூட வலங்கைமான் சேம்பர் செங்கல்லால் அடித்தே  கொன்றுவிடுவார்களோ என்று அச்சமாக இருக்கிறது. நான் பசுமை என்றுதான் சொன்னேன் பசு என்று சொல்லவில்லை என்று கதறக் கதற எடுத்துச் சொன்னாலும் கல்லால் அடிப்பது உயிர் நிற்கும்வரை  நிற்காது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

பசு என்கிற வார்த்தையோடு மை என்பதையும் சேர்த்துத்தான் பசுமை என்று சொன்னேன் என்று வாதாடினால் “ அடேய் !  எடுடா அந்த கருப்பு மையை! ஊற்றுடா!  இவன் தலையிலே!  என்று சொல்வார்களோ என்று அந்த அச்சமும் பின் தொடர்கிறது.

இப்படி ஒரு நிலைமை இந்தியாவில் ஏற்படுமென்று ‘என் விதி அப்போதே தெரிந்திருந்தாலே கர்ப்பத்தில் நானே கரைந்திருப்பேனே’ என்று வைரமுத்துக்கு ஒரு நன்றியை சொல்லிவிட்டுப் பாட வேண்டும் போல் இருக்கிறது.

தாத்ரி என்கிற உத்திரபிரதேச கிராமத்தில் ஒரு ஏழை முஸ்லிம் மாட்டுக் கறி வைத்திருந்தார் என்ற வதந்தியால் சங்கப் பரிவாரின் தொ(கு)ண்டர் படை தடவித்தடவி அடித்தது. இந்த அடி தாங்காமல் முகமது அக்லக்கின் உயிர் பறந்து போனது.

பாரதீய ஜனதாவின்  வளர்ச்சியை நோக்கிய இந்தப் பணியைத் தொடர்ந்து நாட்டில் வேலை இல்லாமல் இருந்த பல அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் கல்லாலேயே ஒருவரை அடித்துக் கொன்ற வளர்ச்சிப் பணியையும் ஜனநாயக நடவடிக்கையையும் எதிர்த்துக் குரல் எழுப்பினார்கள். தொலைக் காட்சிகள் வேறு வேலை இல்லாத காரணத்தால் இந்த சம்பவம் பற்றி விவாதங்களை நடத்தின.

அறிவை எப்படி வளர்ப்பது என்று ஆலாய்ப் பறந்து கொண்டிருந்த படித்த பலருக்கு  இந்த விவாதங்களை நோக்கும்போதுதான் அதுவும் பாரதீய ஜனதாக் கட்சியின் ஆதரவாளரான நித்தியானந்தம், எஸ். ஆர். சேகர் பிரபாகரன் ஆகியோர்  விவாதிக்கும் போதுதான் பசு என்பது வேறு மாடு என்பது வேறு என்று தெரிந்தது.  இத்தனை வருடங்களாக பசு என்பது மாட்டின் இனத்தைச் சேர்ந்ததுதான் என்று முட்டாள்தனமாக நினைத்துக் கொண்டிருந்தோம் . நமது அறிவுக்கு ஒளி பாய்ச்சிய அவர்களுக்கு நன்றி சொல்லும் முன்பு மனதின் அடித்தளத்தில் சில சந்தேகங்கள் எழுந்தன.

ஆரம்பப் பள்ளிக் கூடத்தில் படிக்கும் போதே  பசுவின் படத்தைப் பார்த்து பசு மாடு என்று படித்து இருக்கிறோமே , உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது பசுமாடு என்று பரிட்சைகளில் கட்டுரைகள் எழுதி இருக்கிறோமே என்றெல்லாம் மனதில் சந்தேகங்கள் எழுந்த  போது, ஆப்கி பார் மோடி சர்கார் என்று போனவருடம் காதில் விழுந்த கோஷம்  நினைவுக்கு வந்தது. ஓ! வளர்ச்சி!  வளர்ச்சி!  என்று கூவப்பட்டதே அதன் ஒரு அடையாளமாகத்தான்   பசுமாடு என்று நாம் படித்த பசு வேறு  மாடு வேறு என்று குலோனிங்க் முறையில்  பிரிந்துவிட்டதோ என்று  நினைக்கத்   தோன்றியது.

இனி வரும் காலங்களில் பசுமை, பசுந்தளிர், பசுநேசன், பசுமரத்தாணி   போன்ற வார்த்தைகளை பகலில் பக்கம் பார்த்தும் இரவில் அதுவும் பேசக்கூடாது என்றும் உணரவேண்டிய ஒரு காலம் வந்துவிட்டதோ என்று அச்சமாக இருக்கிறது.

அதோடு மாடு என்கிற வார்த்தை இணைந்து வரும் வார்த்தைகளைக் கூட தவிர்த்துக் கொள்வதும் புத்திசாலித்தனமாக  இருக்கக் கூடும் உதாரணமாக சுமைகளை தலைகளில் தூக்கிவைத்து இலகுவாக சுமக்க நமக்கு உதவும் “சும்மாடு” என்கிற வார்த்தையைக் கூட சொல்வது நமக்கு  இனி ஒரு சுமையாகவே ஆகலாம்  யார் கண்டது?

நல்ல வேளை , மாடு வாயில்லாப் பிராணிகளின் வரிசையில் சேர்ந்து விட்டது இல்லாவிட்டால் இப்போது மாட்டின் பெயரால் நடக்கும் கூத்துக்களை எல்லாம் பார்த்துவிட்டு நாக்கைப் பிடுங்கிக் கொள்கிறார்போல் நாலு நல்ல கேள்விகளை கேட்டுவிடும். அப்படி மாடு வாய் திறந்து கேட்டால் இப்படி எல்லாம் கேட்கலாம்.

“ஏன்யா என்னோட  கறியை சாப்பிடக் கூடாதுன்னு சொல்றியே!  என்னோட பாலைக் கறந்து கறந்து குடிக்கிறியே அந்தப் பால் நீ மூச்சு விடாமல் குடிக்கிறதுக்காக  என்னிடம் சுரந்ததா அல்லது என் கன்றுக்காக சுரந்ததா ? இது பசு வதை இல்லையா?

மனிதர்கள்தான் எங்களை  வஞ்சித்து எங்களின்  பாலைக் கறந்து குடல் நிறையக் குடிக்கிறார்கள் என்பதைக் கூட  ஏற்றுக் கொண்டாலும் அந்தப் பாலை யாருக்கும் உதவாமல் சிலைகளின் மேலே ஊற்றி பாலாபிஷேகம்    செய்கிறீர்களே அதை பார்த்து எங்களின்  பெற்ற வயிறு பற்றி எரியாதா? இந்தச் செயல் பசுவதையில் சேராதா?

சரி பால்தான் போகட்டும் என் பாலில் இருந்து நெய்யை தயாரிச்சு என்னென்னவோ  புரியாத  பாஷையிலே சொல்லி விலை அதிகம் என்று கூட நினைக்காமல் நெருப்பிலே அள்ளி அள்ளி  ஊத்துறியே அது பசுவதை இல்லையா?

என் கன்றுக்குட்டி செத்துப் போயிட்டா அதனோட  தோலுக்குள்ளே  வைக்கோலை வச்சு திணிச்சு  எனக்கு கண்ணில் காட்டிக் காட்டி ஏமாற்றி  பால் கறக்குறியே அது பசுவதை இல்லையா?

எனது மடியில்  பால் வற்றிப் போய்விட்டால் இனி கன்று போட இயலாது என்று வயசாகிவிட்டால் என்னை நடுத்தெருவில் அனாதையாக விட்டுவிடுகிறீர்களே அது பசுவதை இல்லையா?

இப்படி அனாதையாக விடப்படும் நான் நெடுஞ்சாலைகளில் விரைவாக வரும் வாகனங்களில் அடிபட்டு அனாதையாக இறந்து போகிறேனே அது பசுவதை இல்லையா?

நமது பங்குக்கு நாமும் சில கேள்விகளை கேட்கலாமா?

காய்கறி சாப்பிடுபவன் உயர்ந்த சாதி – கோழி, ஆட்டுக்கறி சாப்பிடுபவன் நடுத்தர சாதி மாட்டுக் கறி சாப்பிடுபவன் கீழ்சாதி என்று சாப்பாட்டை வைத்து சாதியை பிரிக்கிறீர்களே அது அநியாயம் இல்லையா?

பெரிய புராணத்தில், சிறுதொண்டர் நாயனார் தான் பெற்ற பிள்ளையையே சிவபெருமானுக்கு சமைத்து படைத்ததாக கூறப்பட்டிருக்கிறதே அதை கட்டுக்கதை என்று சொல்ல இவர்களுக்கு தைரியமும் மனசாட்சியும் இருக்கிறதா? மனிதக் கறியை கடவுள் சாப்பிடலாம்  மாட்டுக் கறியை ஏழை மக்கள் சாப்பிடக் கூடாதா?

காசியை புனிதத்தலம் என்று இந்தியப் பண்பாடு கருதுகிறது. காசிக்குப் போய் கங்கையில் குளித்தால் பாவங்கள் நீங்கிவிடும் என்பது பெரும்பான்மை இந்திய மக்களின் நம்பிக்கை. அந்தக் காசியில் அகோரிகள் என்கிற சாமியார்களின் ஒரு வகையினர்  இறந்து போன மனிதர்களின் மாமிசத்தை சாப்பிடுகிறார்களே அதைவிடவா மாட்டுக்கறி சாப்பிடுவது மோசமாகப் போய்விட்டது?

அரசியல் செய்வதற்கு ஆயிரம் காரணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அரசியல் செய்தால் -  ஆயிரம்தான் அரசியல்  சாக்கடை என்று கருதப்பட்டாலும் - அதில் ஒரு ஆர்த்தம் இருக்கும். ஆனால் இப்படி மாட்டை வைத்து மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு அரசியல் நடத்துவது அரசியல் வெறும் சாக்கடையல்ல அது  சாணமும் மாட்டு மூத்திரமும் கலந்த சாக்கடை என்று கருதப்படாதா?

விஷமுள்ள நல்ல பாம்பை கொன்றால்  அதை அடக்கம் செய்யும்போது அதனுடன் பாலைஊற்றி , பூக்களையும் போட்டுப் புதைக்கும்  ஒரு மரியாதையான வழக்கமாக இருக்கிறது. ஆனால் இவர்கள் இவ்வளவுதூரம் கொண்டாடும் ஒரு பசு மாடு இறந்து போனால் நல்ல பாம்புக்குக் கொடுக்கப்படும் மரியாதை கூட  கொடுக்கப்படுகிறதா? செத்த மாட்டை இலவசமாக தலித் மக்களிடம் கொடுப்பது இல்லையா?

மாடு உயிரோடு இருக்கும் நிலையில் அதை அறுத்து சாப்பிடக் கூடாது அது தெய்வம் என்று தடுப்பவர்கள் செத்த பிறகு அதற்கு  செய்ய வேண்டிய மரியாதையைக் கூட   செய்யாமல் தலித்களிடம் இலவசமாக தூக்கிக் கொடுப்பது மட்டும் ஏன்? இவர்களது இந்த பசுமாடு தெய்வம் என்கிற  சித்தாந்தத்தில் இவர்களுக்கு உறுதி  இருக்குமானால் செத்த மாட்டை பாடம் செய்து தங்களது வீடுகளில் வைத்து பூஜிக்க வேண்டும் அல்லது சுடுகாட்டில் எரித்து அதன் சாம்பலையாவது செம்பில் வைத்து பூஜை அறையில் வைக்க வேண்டும். அல்லது செத்த மாட்டை கொம்புடன் படம் பிடித்து தங்களின் முன்னோர்களின் படத்துடன் வீட்டுச் சுவர்களில் மாலை போட்டு மாட்ட வேண்டும். அப்படி செய்கிறார்களா?

இதெல்லாம் செய்யாமல், “ மாட்டுக் கறிக்காக கொல்லவும் தயார் கொல்லப்படவும் தயார் “ என்று அறிவிக்கும் சாத்தி மகராஜ் போன்ற வாய்க் கொழுப்பு எடுத்தவர்களை பிஜேபி மடியில் போட்டுக் கொஞ்சிக் கொண்டிருக்கிறது;  மாட்டுக்கறி சாப்பிட வேண்டுமானால் பாகிஸ்தானுக்குப் போய்விடுங்கள்  என்று சொல்லும் முக்தர் அப்பாஸ் நக்வி போன்ற கருப்பு ஆடுகளுக்கு கால் கழுவி விட்டுக் கொண்டிருக்கிறது.

காஷ்மீர் சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினரை சட்டமன்றத்துக்குள்ளேயே வைத்து நையப் புடைத்ததையும் அதே சட்டமன்ற உறுப்பினர் மீது கருப்பு மையை ஊற்றி குரங்குப் படைகள் (பஜ்ரங்க் தள்) அவமானப் படுத்தியதையும் அரசியல் சட்டம்  மட்டுமல்ல அகில உலகமும் கண்காணித்துக் கொண்டுதானிருக்கிறது.   

மாட்டுக்கறியை உண்ணுவதற்கான எதிர்ப்பும் அதைத் தொடர்ந்த வன்முறையும் எங்கிருந்து வருகிறது என்று ஆராய்ந்தால் 39,000 கோடி ரூபாய் அளவுக்கு மாட்டுகறியை ஏற்றுமதி செய்து டாலராக்கி தங்களின் வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொண்ட பாஜக வின் முக்கியத் தலைவர்களிடமிருந்தே வருகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இப்படி எல்லாம் அச்சமூட்டி மாட்டுக் கறியை மக்கள் உள்நாட்டில் உண்பதற்கு அணுகவிடாமல் செய்தால் ஏற்றுமதிக்கு தாராளமாக எங்கும்  கிடைக்கும் என்கிற வணிகச் சதியின் நோக்கம்தான் இதன் காரணமே தவிர மாடுகள் பாவம்! மாடுகள் தெய்வம்! மாடுகள் தேவதை! மாடுகள் குலமாதா!  என்கிற மாடுகளின் மீது இவர்களுக்குள்ள பாசமல்ல காரணம். 

“அரே பாய் வட்டி கட்டாமே டபாய்க்கிரே!  சேட்டு நிம்மல் வீட்டுமேல் வர்றான்” – என்று சுந்தரத் தமிழ் பேசும் வடநாட்டுப் பணமுதலைகள்- தங்களை உயிர்ப்பலியைத் தடுக்கும் புனிதர்கள் என்று வெளிவேஷமிட்டுக் கொண்டு அல்-கபீர் என்றும் அல்- ஹிலால் , அராபியன் எக்ஸ்போர்ட்ஸ் என்றும் அரபி மொழியில்  பெயர் சூட்டிக் கொண்டு, ஹலால் மாட்டுக் கறி என்று  ஏற்றுமதி செய்யும் கம்பெனிகளுக்கு சொந்தக்காரர்களாக இருக்கும்  சதீஷ் , அதுல் அகர்வால்,  சுனில் கபூர், மதன் அபாட் , எ.எஸ். பிந்த்ரா  ஆகிய கருப்பு மாடுகள் யாருடைய தோட்டத்திலிருந்து இந்த நாட்டை மேய வருகின்றன? சங்கப்பரிவார் கூட்டத்தின் தோட்டத்திலிருந்துதானே?        

ஒரு கிலோ மாட்டுக்கறி வைத்திருந்ததாக  குற்றம் சாட்டப்பட்ட  முகமது அக்லக்கை கல்லால் அடித்துக் கொல்வதுதான் தண்டனை என்றால் டன் கணக்கில் கண்டெயினரில் வைத்து  மாட்டுக்கறியை  ஏற்றுமதி செய்யும் இந்த பிஜேபி கும்பலுக்கு என்ன தண்டனை? அதற்காக ஒப்பந்தம் போட்ட பிரதமருக்கு என்ன தண்டனை ? 

ஆகவே  மாடு , பசுமாடு , தெய்வம்  உயிர்வதை , புலால் உண்ணாமை என்பதெல்லாம் பிஜேபியின் உதட்டளவுப் பாசமே.  இவைகளை காரணமாக வைத்து பெரும்பான்மை இனத்தவரை சிறுபான்மையினருக்கு எதிராகத் தூண்டிவிட்டு பேரினவாதத்தை வடிவமைத்து,  அதை வாக்கு வங்கியாக மாற்றி அதிகாரத்தில் நீடிக்கவேண்டுமென்பதே ஆர் எஸ் எஸ்ஸின் இந்த ஆபத்தான அரசியலின் அடையாளம். வாயில்லா ஜீவனை வைத்து தங்களது அரசியல் வண்டியை ஓட்டும் நாடகத்தின் காட்சிகள்தான் இன்று நாடெங்கும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இந்த நாடக மேடையின் திரைகள் தொங்கும் காலம் தூரத்தில் இல்லை. பீகாரில் இருந்து இதன் கடைசிக் காட்சிகள் தொடங்க இருக்கின்றன.     

பிஜேபி ஆட்சிக்கு வந்ததும் சிறுபான்மையினர் மீதான கருத்துத் தாக்குதலைத் தொடங்கி வைத்தவர் சிறுபான்மைத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட நஜ்மா ஹெப்துல்லா என்ற முக்காடு போடாத முஸ்லிம் பெண்மணிதான். முஸ்லிம்களை சிறுபான்மையினர் அல்ல என்றும் அதற்கான சலுகைகளைப் பெற்றிட அவர்களுக்குத் தகுதி இல்லை என்றும் வாய் கூசாமல் கூறினார் என்பதை நாம் மறக்க இயலாது. 

அன்று முதல் அடுக்கடுக்கான துயரங்களை முஸ்லிம்கள் மட்டுமல்ல  இதர சிறுபான்மை மற்றும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் இந்த நாட்டில் அனுபவித்து வருகின்றன.  வளர்ச்சியை எதிர்பார்த்து இவர்களுக்கு வாக்களித்தவர்களை கற்காலம் நோக்கி அழைத்துச் செல்லும் கலாச்சாரத்தை மக்கள் புரிந்து கொள்ளத் தொடங்கிவிட்டனர்.    

பசுமை’பூசி அடிமை ஆகும் இந்தியாவில் இதுவரை பசு படுத்தும் பாட்டைப் பார்த்தோம். 

இனி 'மை' படுத்தும் பாடு. அதற்காக ஒருவாரம் பொறுமை தேவை . இன்ஷா அல்லாஹ் சந்திக்கலாம்.

இப்ராஹீம் அன்சாரி

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 011 4

அதிரைநிருபர் பதிப்பகம் | October 23, 2015 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்.

'ஒரு முஸ்லிம் ஒரு மரத்தை நட்டு வைத்து, (அது வளர்ந்து) அந்த மரத்திலிருந்து காய்க்கும் கனிகளை ஏதேனும் சாப்பிட்டால் அது அவருக்கு தர்மமாக பதிவு செய்யப்படும். அதிலிருந்து பிறரால் திருடப்பட்டு எடுப்பவையிலும் அவருக்கு தர்மம் (செய்த கூலி) உண்டு. ஒருவர் அதன் கனிகளை பறித்துக் குறைத்தாலும், அவருக்கு தர்மம் (செய்த கூலியாகவே) தவிர இருப்பதில்லை''  என்று  நபி(ஸல்) கூறினார்கள். (ஜாபிர்(ரலி).

மற்றொரு அறிவிப்பில் (பின்வருமாறு) உள்ளது : -
ஒரு முஸ்லிம் மரம் ஒன்றை நட்டு, விவசாயம் செய்து அதிலிருந்து ஒரு மனிதன்,மிருகம் மற்றும் ஏதேனும் ஒன்று சாப்பிட்டால் அவனுக்கு அது தர்மமாகவே அமையும். என்று  நபி(ஸல்) கூறினார்கள். (அனஸ்(ரலி), அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) , அனஸ்(ரலி) அவர்கள்  (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 135)

''பேரீத்த பழத்(தின் பாதியை தர்மம் செய்) தேனும், நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள்''என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்).

இவ்விரண்டு நூல்களின் மற்றொரு அறிவிப்பில்(பின்வருமாறு உள்ளது:-

''உங்களில் எவரும் தன் இறைவனிடம் (மறுமையில்) பேசாமல் இருக்கமாட்டார். அவனுக்கும், அவருக்குமிடையே மொழி பெயர்ப்பாளர் இருக்கமாட்டார். தனது வலது புறம் பார்ப்பான். அங்கே தான் முன்பு அனுப்பி வைத்த (செயல்களை)த் தவிர வேறொன்றை பார்க்க மாட்டான். பின்பு இடது புறம் பார்ப்பான். தான் முன்பு செய்திட்டவற்றைத் தவிர (வேறான்றையும்) பார்க்க மாட்டான். தனக்கு முன்னே பார்ப்பான். அங்கே முகத்துக்கு நேராக நரகத்தைத் தவிர (மற்றதைப்)பார்க்கமாட்டான். எனவே பேரீத்தம் பழத்(தின் பாதியை தர்மம் செய்)தேனும் நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். அது கிடைக்கவில்லையானால், நல்ல வார்த்தையைப் பேசி (தர்மம் செய்யு)ங்கள் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அதீ இப்னு ஹாதம் (ரலி) அவர்கள்  (புகாரி, முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 139)

'ஒரு வேளை உணவை சாப்பிட்டு, இதற்காக அல்லாஹ்வைப் புகழ்ந்தும், அல்லது தண்ணீர் குடித்து விட்டு இதற்காக அல்லாஹ்வைப் புகழ்(ந்தும் வாழ்)கின்ற ஒரு அடியானைக் கண்டு அல்லாஹ் திருப்தியடைகிறான்.''என்று  நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள்  ( முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 140)

''ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் தர்மம் செய்வது கடமையாகும் என நபி(ஸல்) கூறினார்கள். 'தர்மம் செய்ய பொருள் - வசதி எதையும் பெற்றுக் கொள்ளவில்லையானால், அவர் என்ன செய்வது? என்று கேட்டேன். 'அவர் தன் கைகளால்  உழைத்து, தானும் பயன்பெற்று, பிறருக்கு தர்மம் செய்வார்' என்று நபி(ஸல்) கூறினார்கள். ''இதற்கும் இயலாதவர் குறித்து என்ன கூறுகிறீர்கள்'' என்று கேட்டேன். ''கவலையுடன் உள்ளவரின் தேவைக்கு உதவுவார்' என்று நபி(ஸல்) கூறினார்கள். இதையும் அவர் செய்யாவிட்டால் என்ன செய்வது? என்று கேட்டேன். 'தீமையை விட்டு தன்னைத் தடுத்துக் கொள்வார். இதுவும் தர்மம் (போல்)தான்'' என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி) அவர்கள்  (புகாரி,முஸ்லிம்). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 141)

'நிச்சயமாக மார்க்கம், எளிமையானதாகும். மார்க்கத்தை மறைத்து வைக்க எவர் முயற்சித்தாலும் அவரை அது வெற்றி காணும். நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். நடுநிலையைக் கடைப்பிடியுங்கள். ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் கூறிக்கொள்ளுங்கள். காலையிலும், மாலையிலும், இரவில் சிறிது நேரத்திலும் (வணங்குவதற்கு) பயன்படுத்திக் கொள்ளுங்கள்''என்று  நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)   அவர்கள்  (புகாரி). (ரியாளுஸ்ஸாலிஹீன்: 145)

'உங்களில் ஒருவர், தொழும் நிலையில் தூங்கினால், தன்னை விட்டும் தூக்கம் நீங்கும் வரை அவர் தூங்கட்டும்! உங்களில் ஒருவர் தூங்கிய நிலையில் தொழுதால், 'அவர் தன்னை மன்னிக்க வேண்டுகிறாரா? அல்லது தன்னைத் திட்டுகிறாரா' என்று அறிய மாட்டார் என்று  நபி(ஸல்) கூறினார்கள்.                               (அறிவிப்பவர்அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்   (புகாரி,முஸ்லிம்).(ரியாளுஸ்ஸாலிஹீன்: 147)

உங்களுக்கு மரணம் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுங்கள்! ''இறைவா! குறைந்த காலம் வரை எனக்கு நீ அவகாசம் அளித்திருக்கக் கூடாதா? தர்மம் செய்து நல்லவனாக ஆகியிருப்பேனே'' என்று அப்போது (மனிதன்) கூறுவான். (அல்குர்ஆன் : 63:10 )

தனது இறைவனிடம் குற்றவாளியாக வருபவனுக்கு நரகமே உள்ளது. அதில் அவன் சாகவும் மாட்டான். வாழவும் மாட்டான்.
(அல்குர்ஆன் : 20:74)           

...அல்லாஹ் உங்களுக்கு எளிதானதையே நாடுகிறான். சிரமமானதை உங்களுக்கு நாட மாட்டான். (அல்குர்ஆன் :2:185 )

நம்பிக்கை கொண்டோரே! நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்! நீங்கள் அல்லாஹ்வையே வணங்குவோராக இருந்தால் அவனுக்கே நன்றி செலுத்துங்கள்! (அல்குர்ஆன் : 2:172 )

யாரேனும் நல்லறம் செய்தால் அது அவருக்கே நல்லது.
(அல்குர்ஆன் : 45:15 ) 

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபி(ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

 '' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''

அலாவுதீன் S.


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

OUR YOUTUBE CHANNEL

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Labels

அதிரை (412) கவிதை (353) இபுராஹீம் அன்சாரி (206) Alaudeen.S (195) அதிரை அஹ்மது (180) அதிரை செய்திகள் (143) ஜாஹிர் ஹுசைன் (142) MSM (136) சபீர் (127) சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக் (117) அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து (113) இஸ்லாம் (103) தாஜுதீன் (94) ஷாஹுல் ஹமீது (89) அபுஇபுறாஹிம் (69) நபிமணியும் நகைச்சுவையும் (65) இக்பால் M.ஸாலிஹ் (62) j1 (59) கல்வி விழிப்புணர்வு (57) ரமளான் (55) அதிரைநிருபர் (52) விழிப்புணர்வு (47) கல்வி (45) உமர் தம்பி (43) P.பகுருதீன் (41) அதிரை மன்சூர் (41) அதிரை மெய்சா (40) இன்று (40) படிக்கட்டுகள் (40) அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (39) கண்கள் இரண்டும் (39) a1 (37) crown (37) அரசியல் (37) நாளை (37) நேற்று (37) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (35) அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் (34) ADT (33) அதிரை அஹ்மத் (33) பேறு பெற்ற பெண்மணிகள் (33) சாஹுல் ஹமீது (32) S.அலாவுதீன் (31) ie (30) p1 (30) பேசும் படம் (30) மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் (30) வாவன்னா (28) தேனீ (27) SMF (26) அதிரை முஜீப் (26) மருத்துவம் (26) வரலாறுகள் (26) வழக்குகள் (26) ஹஜ் (26) கவியன்பன் (25) தேர்தல் (24) k1 (22) அதிரை தாருத் தவ்ஹீத் (22) இப்னு அப்துல் ரஜாக் (22) தமிழகம் (22) தமிழ் (22) துபாய் (22) நூருத்தீன் (22) பெண்கள் (22) யுனிகோட் (22) h1 (21) இபுராஹிம் அன்சாரி (21) ஏடு-இட்டோர்-இயல் (21) நினைவுகள் (21) நோன்பாளிகளே (21) பாலஸ்தீனம் (21) அபூஇப்ராஹீம் (20) என் இதயத்தில் இறைத்தூதர் (20) ஜமீல் M.சாலிஹ் (20) Sஹமீது (19) இந்தியா (19) எச்சரிக்கை (19) சேக்கனா M.நிஜாம் (19) மழை (19) adirai (18) editorial (18) loan (18) அதிரை சித்தீக் (18) கந்தூரி (18) அபுல்கலாம் (17) இயற்கை இன்பம் (17) சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக் (17) நோன்பு (17) மரணம் (17) ரமழான் (17) ஹஜ் பெருநாள் (17) ஆசிரியர் தினம் (16) கவிதை ஓர் இஸ்லாமிய பார்வை - ஆய்வு (16) பழகு மொழி (16) புதுசுரபி (16) Zakir Hussain (15) harmys (15) அபு ஈஸா (15) அப்துல் ரஹ்மான் (15) அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா (15) வரலாறு (15) Sabeer (14) ஊடகம் (14) காணொளி (14) படிப்பு (14) பெருநாள் (14) ஷஃபி அஹ்மது (14) M.H.ஜஹபர் சாதிக் (13) shameed (13) அதிரை என்.ஷாஃபாத் (13) அப்பா (13) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் (13) கடன் (13) சத்தியமார்க்கம்.com (13) சிந்தனை (13) சிந்திக்க (13) MHJ (12) ஆரோக்கியம் (12) ஒற்றுமை (12) சகோதரியே (12) தண்ணீர் (12) தாருல் இஸ்லாம் ஃபேமிலி (12) பேரூராட்சி (12) மரபு (12) மு.செ.மு.சஃபீர் அஹமது (12) யாசிர் (12) ரஃபீக் (12) AM (11) s1 (11) அனுபவம் (11) ஆமினா முஹம்மத் (11) ஒரு புத்தகம் பிறக்கிறது (11) சரிதை (11) சென்னை (11) தொடர் (11) பேசும்படம் (11) மனு நீதி (11) முஹம்மது ஃபாருக் (11) Sabeer AbuShahruk (10) aknk (10) kavithai (10) அதிரை அஹமது (10) அதிரை ஷஃபாத் (10) அதிரைநிருபர் பதிப்பகம் (10) அமீரகம் (10) அமெரிக்கா (10) அலசல் (10) ஆய்வு (10) உதவி (10) ஏக்கம் (10) கலாம் (10) தொழில் முனைவோர் (10) படிகட்டுகள் (10) பெற்றோர் (10) முகம்மது அலி ஐ.பீ.எஸ் (10) முஹம்மது யாசிர் (10) விவாதக்களம் (10) SMS (9) அரும்புப் பாட்டு (9) ஊடக போதை (9) குறுந்தொடர் (9) சிந்திக்கத் தூண்டும் சித்திரங்கள் (9) சுகாதாரம் (9) ஜகாத் (9) துஆ (9) தேடல் (9) நோன்பு பெருநாள் (9) பரீட்சை (9) பிரார்த்தனை (9) பேட்டி (9) பேரன் (9) மனித குலம் (9) ரமழான் சிந்தனை (9) வினாடி வினா (9) வேலை (9) ஹதீஸ் (9) LMS (8) ZAEISA (8) msm rafiya (8) poem (8) அதிரைக்காரன் (8) அபூ ஆசிஃப் (8) அப்துல் காதர் (8) அஹ்மது இர்ஷாத் (8) இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளி (8) இளமை (8) இஸ்லாமியப் பெண்மணி (8) எழுத்துப் பிழைகள் (8) ஏற்றம் (8) கடற்கரைத் தெரு (8) கலைக்களஞ்சியம் (8) காது (8) சத்தியமார்க்கம் (8) செய்தி (8) தக்வா பள்ளி (8) தன்னம்பிக்கை (8) தொழுகை (8) நண்பர்கள் (8) நூல் வெளியீடு (8) பள்ளிவாசல் (8) பழைய நினைவுகள் (8) பாலஸ்தீன் (8) மரபு கவிதை (8) மலேசியா (8) மாணவர்கள் (8) மாலிக் (8) முகமது யாசிர் (8) வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் (8) விபத்து (8) விவாதம் (8) வேண்டுகோள் (8) ARH (7) MSM MEERASHA RAFIA (7) SKM ஹாஜா முகைதீன் (7) SKM-H (7) history (7) அப்துர்ரஹ்மான் (7) அப்துல் மாலிக் (7) அம்மா (7) அல்குர்ஆன் (7) அல்லாஹ் (7) உணவு (7) கட்டுரையாளர் (7) கண் (7) கம்பன் (7) கல்வியாளர்கள் (7) காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி (7) கால்பந்து (7) குழந்தை (7) சிந்திப்போம் (7) சின்னகாக்கா (7) சிரியா (7) தொண்டை (7) நன்றி (7) நபிமொழிகள் (7) பயணம் (7) பள்ளிக்கூடம் (7) மின்சாரம் (7) முஸ்லிம் (7) மொழி (7) விளக்கம் (7) ஸஹாபாக்கள் (7) 2012 (6) 2014 (6) A.R.அப்துல் லத்தீஃப் (6) AEAC (6) B. Ahamed Ameen (6) Dubai (6) M H Jahabar Sadik (6) N.ஜமாலுதீன் (6) Shahnaz Sabeer Ahmed (6) UAE (6) ashik (6) m2 (6) u1 (6) அதிரை தென்றல் (Irfan Cmp) (6) அதிரை நிருபர் (6) அலசல் தொடர் (6) ஆதங்கம் (6) இதிகாசங்கள் (6) இத்தியாதி இத்தியாதி (6) இப்ராஹிம் அன்சாரி (6) இப்ராஹீம் அன்சாரி (6) இரத்தம் (6) ஊழல் (6) ஓட்டு (6) கந்தூரி போதை (6) கல்லூரி (6) கிரவ்ன் (6) கோடைகால பயிற்சி (6) தடை (6) திருமணம் (6) நகைச்சுவை (6) நட்பு (6) நண்பன் (6) நானும் ஆஃப்ரிக்காவும் (6) நூலகம் (6) புத்தகம் (6) போதை (6) மக்கா (6) முதுமை (6) முஸ்லீம்கள் (6) முஹம்மத் ஆஷிக் (6) மூக்கு (6) வணக்கம் (6) வளைகுடா (6) விமர்சனம் (6) ஷிஃபா மருத்துவமனை (6) AEM (5) SKM - H (5) Sஹமீத் (5) m1 (5) moon (5) umar history (5) அதிரை ஈத்மிலன் (5) அதிரை ஹாலித் (5) அபூஇப்ராஹிம் (5) அறிவியல் (5) அழகு (5) அழைப்பு (5) ஆங்கிலப் புத்தாண்டு (5) ஆஸ்திரேலியா (5) இடஒதுக்கீடு (5) இயற்கை (5) இரவு (5) இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா (5) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (5) உறவு (5) கணினி (5) கண்டனம் (5) கனவு (5) கவிஞர் (5) கவிதை ஆய்வு (5) காலம் (5) குர்ஆன் (5) குழந்தைகள் (5) சட்டமன்றம் (5) சந்திப்பு (5) சபீர் அஹ்மது அபுஷாரூக் (5) சான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வரை (5) சேமிப்பு (5) தக்வா (5) தாய் (5) தொட்டால் தொடரும் (5) தொலைக்காட்சி (5) நாசர் மவ்லவி (5) நீதி (5) பழமை (5) பாசம் (5) பாபர் மஸ்ஜித் (5) பாலியலுக்கு பலியாகாதே (5) பெண்ணுரிமை (5) பொருளாதாரம் (5) போட்டி (5) போராட்டம் (5) மண்ணறை (5) மனைவி (5) மற்றும் (5) மாட்டுக்கறி (5) மாற்றி யோசி (5) முஹம்மது பாரூக் (5) மூடநம்பிக்கை (5) மூன்றாம் கண் (5) ரஃபியா (5) ரியல் எஸ்டேட் (5) வட்டார உரையாடல் (5) வாழ்க்கை (5) விருந்து (5) விழி (5) வெற்றி (5) வேலை வழிகாட்டி (5) ஸதக்கதுல்லாஹ் (5) 2013 (4) B. Ahamed Ameen (4) EA (4) M. தாஜுதீன் (4) MSM மீராஷா ரஃபியா (4) MSM(n) (4) adirainirubar (4) eo1 (4) syria (4) v1 (4) அதிரை அறிஞர் (4) அதிரை பைத்துல்மால் (4) அதிரை மீரா (4) அபுஇப்ராஹிம் (4) அபுநூரா (4) அரபி (4) அறிவுரை (4) அவதூறு (4) அஹ்மது ஆரிஃப் (4) ஆங்கிலம் (4) இன்றைய சவால் (4) இபாதத் (4) இபுறாஹீம் நபி (4) இமாம் ஷாஃபி ஸ்கூல் (4) இலக்கியம் (4) இலவசம் விலை போனதே (4) இஸ்லாமிய வங்கி (4) ஈகை (4) ஈகைத் திருநாள் (4) ஈத் பெருநாள் (4) ஊரில் மழையாமே (4) ஊர்வலம் (4) எதிர்ப்பு (4) கடிதம் (4) கட்சிகள் (4) கட்டுரை (4) கலக்கல் (4) கல்வி வழிகாட்டி (4) கா.மு.மே.பள்ளி (4) காது கொடுத்து கேளுங்கள் (4) குடும்பம் (4) குழந்தை வளர்ப்பு (4) குழந்தைகளுக்காக (4) கேமரா (4) கோரிக்கை (4) கோவை அய்யூப் (4) சஹாபாக்கள் (4) சிட்னி (4) சுதந்திரம் (4) செக்கடிக் குளம் (4) டி.வி. (4) டெல்லி (4) தனிமை (4) தமாம் (4) தமிழ்மாமணி (4) தமுமுக (4) திருச்சி (4) தெரு (4) தோல்வி (4) தோழன் (4) நடை (4) நபி முஹம்மது (ஸல்) (4) நம்பிக்கை (4) நிறைவு (4) நிலவு (4) நீர் (4) நேரம் (4) நோன்பு கஞ்சி (4) பயணங்களில் பரவசம் (4) பயன் தரும் பன்மொழித் தொடர்பு (4) பழக்கம் (4) பாங்கு (4) பாதுகாப்பு (4) பிறை (4) புன்னகை (4) புரளி (4) புறம் (4) பெண் (4) பெண்மை (4) பேயோடு ஒரு ஹாய் (4) மகன் (4) மது (4) மலேஷியா (4) மலை (4) மலையேறலாம் (4) மாற்றம் (4) யார் (4) ரமலான் (4) லஞ்சம் (4) லண்டன் (4) லெ.மு.செ.அபுபக்கர் (4) லைலதுல் கத்ர் (4) வரதட்சனை (4) வலைப்பூக்கள் (4) வாப்பா (4) வாழ்கை (4) வாழ்கைப் பயணத்தில் உறவுகள் (4) வாழ்வியல் (4) விலைவாசி (4) விளையாட்டு போட்டிகள் (4) வெளிநாடு (4) வெளிநாட்டு வாழ்க்கை (4) ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (4) ஷேக் முகைத்தீன் (4) ஹைதர் அலி ஆலிம் (4) -அபூஹாஷிமா (3) 1977 (3) 23 (3) AIM (3) CMN SALEEM (3) Darul Islam Family (3) Dhua (3) TAMS (3) aamf (3) abu easa (3) avnv (3) eye care (3) shafi ahamed (3) sv (3) tmmk (3) ஃபித்ரு (3) அகம் (3) அகல இரயில் பாதை (3) அச்சம் (3) அஜிஜுதீன் (3) அண்ணா (3) அதிராம்பட்டினம் (3) அதிரை வரலாறு (3) அன்புடன் மலிக்கா (3) அபு இஸ்மாயில் (3) அபுஈசா (3) அபுசாருக் (3) அபுபக்கர் (3) அப்துர் ரஹீம் ஜமீல் (3) அமைதி (3) அரஃபா (3) அரஃபாத் (3) அறிக்கை (3) அறிவிப்பு (3) அலாவுதீன் (3) அவசரம் (3) ஆம்புலன்ஸ் (3) ஆய்வுக் கட்டுரை (3) ஆவணப்படம் (3) ஆஷிக் அஹமது (3) இசை (3) இட ஒதுக்கீடு (3) இட ஒதுக்கீடும் (3) இன ஒதுக்கீடும் (3) இனிக்க (3) இன்று ஒரு தகவல் (3) இரயிலடி (3) இரயில் (3) இர்ஷாத் (3) இறைத்தூதர் (3) இலக்கணம் (3) இலங்கை முஸ்லீம்கள் (3) இலவசம் (3) இழப்பு (3) இஸ்மாயில் நபி (3) இஸ்லாமிய ஆட்சி (3) உரையாடல் (3) உலக செய்திகள் (3) உலகம் 2010 (3) உள்ளாட்சி தேர்தல் (3) ஊக்கம் (3) எம்.காம். (3) எம்ஜிஆர் (3) ஒடுக்கு இடர் (3) ஒளரங்கசீப் (3) கடல் (3) கடுதாசி (3) கமிட்டி (3) கருகும் காதல் (3) கருணாநிதி (3) கலந்துரையாடல் (3) கல்வித் தந்தை (3) கா.மு.கல்லூரி (3) காதிர் முகைதீன் (3) குடி (3) குணம் (3) குற்றாலம் (3) குளம் (3) குளிர் (3) குழப்பம் - ஆலோசனை - தீர்வு (3) கூடங்குளம் (3) கேள்விகள் (3) கொடைக்கானல் (3) சபிதா காதர் (3) சமோசா (3) சம்சுல் இஸ்லாம் சங்கம் (3) சவுதிஅரபியா (3) சஹன் (3) சாகுல் ஹமீத் (3) சாப்பாடு (3) சிக்கனம் (3) சிங்கப்பூர் (3) சுத்தம் (3) சுனாமி (3) செக்கடி மோடு (3) செலவு (3) ஜமீல் M.ஸாலிஹ் (3) டாக்டர் (3) த.மு.மு.க. (3) தந்தை (3) தமிழ் வளர்ந்த நினைவுகள் (3) தர்கா (3) தர்பியத் (3) தாய்மை (3) தினசரிகள் (3) திமுக (3) தியாகத் திருநாள் (3) திருக்குர்ஆன் (3) திறன் (3) தீவிரவாதம் (3) தொப்பி (3) தோழர்கள் (3) நடுத்தெரு (3) நபி (3) நாஞ்சிலன் (3) நிஜாம் (3) நினைக்க (3) நிம்மதி (3) நேர்மை (3) நேர்வழி (3) நோய் (3) படிப்பினை (3) பட்ஜெட் (3) பட்டம் (3) பணம் (3) பத்ரு யுத்தம் (3) பயணக் கட்டுரை (3) பயம் (3) பயான் (3) பயிற்சி முகாம் (3) பரிசு (3) பாராளுமன்றம் (3) பாலியல் வன்முறை (3) பினாங்கு (3) பிப்ரவரி 14 (3) புண்ணியவான் (3) பெண் கல்வி (3) பெருநாள் சந்திப்பு (3) பேய் (3) பொய் (3) மகள் (3) மதமாற்றம் (3) மதீனா (3) மதுவிலக்கு (3) மனது (3) மனிதம் (3) மனிதவளம் (3) மன்னிப்பு (3) மலரும் (3) மவுனம் (3) மஹர் (3) மாடு (3) மாட்டுகறி (3) மார்க்க சொற்பொழிவு (3) மார்க்கக் கல்வி (3) மின்னஞ்சல் (3) மு.செ.மு. (3) முகநூல் (3) முத்துப்பேட்டை (3) முன்னாள் மாணவர்கள் (3) முற்போக்கு கூட்டணி (3) முஸ்லிம் சாதனை (3) மூக்கு கண்ணாடி (3) மூளை (3) மெதுவடை (3) மெளனம் பேசியதே (3) மேகம் (3) மோடி (3) ரசனை (3) வட்டி (3) வதந்தி (3) வரவேற்பு (3) வலைக்காட்சி (3) வாக்கு கொடுத்தல் (3) வாங்க (3) வாடா (3) வாழ்த்து (3) வாவன்னாசார் (3) விடுதலை (3) விடுப்பு (3) விண்ணப்பம் (3) வித்தியாசமானவர்கள் (3) வின்வெளி (3) விருந்தோம்பல் (3) விவாதக் களம் (3) வேகம் (3) வேலை வாய்ப்பு (3) ஷேக் ஜலாலுதீன் (3) ஸஹாபிய பெண்கள் (3) ஹராம் (3) +2 தேர்வு முடிவுகள் (2) 06122010 (2) 10 வகுப்பு 2010 (2) 1995 (2) 80/90 (2) ABM (2) AET (2) December-6 (2) ECR சாலை (2) ENT (2) HAJ 2012 (2) IAS தேர்வு (2) IPL (2) KMHSc. (2) KVS. (2) Lives (2) M.Y.முஹம்மத் (2) Motor Bike Riders (2) NAS (2) Rafeeq (2) Risky (2) SELAMAT HARI RAYA (2) Shahnaz (2) Student (2) U.A.E. (2) affa (2) air india (2) alumni (2) an news (2) book (2) broad gauge (2) camera (2) cmp (2) cute (2) decision (2) diabetes (2) do not disturb (2) dua (2) eye (2) facebook (2) flash back (2) food (2) india (2) library (2) live (2) making of படிக்கட்டுகள் (2) marriage (2) mk1 (2) motivation (2) mychoice (2) networking (2) news (2) password (2) peer mohammed (2) politics (2) prayer (2) q12 (2) ramadan (2) shafi (2) silence please (2) tntj (2) walking (2) www.adirainirubar.in (2) yasir (2) youth (2) ஃபெஸ்டிவல் (2) ஃபோட்டோகிராஃபி (2) அ.ர.ஹிதாயத்துல்லாஹ் (2) அஃப்சல் ஹுசைன் (2) அசத்தல் மொழி (2) அசத்தல் மொழிகள் (2) அச்சு (2) அணு உலை (2) அதி அழகு (2) அதிமுக (2) அதிரை உலா (2) அதிரை எக்ஸ்பிரஸ் (2) அதிரை கல்விச் சேவையகம் (2) அதிரை பசுமை 2020 (2) அதிரை மொழி (2) அதிரைகாரன் (2) அதிரைத் தென்றல் (CMP Ifran) (2) அதிரைநிருபரின் நிழல்கள் (2) அதிரைபட்டினம் (2) அதிரைப்பட்டினம் (2) அதிரைமணம் (2) அதிரையின் முத்திரை (2) அது ஒரு அழகிய மழைக்காலம் (2) அநீதி (2) அந்நிய முதலீடு (2) அந்நியர் முதலீடு (2) அனைத்து முஹல்லா (2) அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (2) அபூ முஸ்அப் (2) அபூசுஹைமா (2) அபூஹாமித் (2) அபூஹாஷிமா (2) அப்துல் ரசீத் ஆலிம் (2) அமானிதம் (2) அம்மாபட்டினம் (2) அம்மார்(ரலி. அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (2) அரசியல் ஜெயலலிதா (2) அரசியல்வாதி (2) அரசு (2) அரசு வேலை (2) அர்த்தம் (2) அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (2) அறிந்தும் அறியாமலும் (2) அறிமுகம் (2) அற்புதம் (2) அலங்காரம் (2) அலி (2) அலுவலகம் (2) அலைபேசி (2) அல்மனார் செண்டர் (2) அழுத்தம் (2) அழைப்புப் பணியின் அவசியம் (2) அழைப்புப்பணி (2) அவனா யிராதே (2) ஆகாயம் (2) ஆசிட் (2) ஆசிரியர் பணி (2) ஆசை (2) ஆசைகள் (2) ஆடை (2) ஆட்டோ (2) ஆணாதிக்கம் (2) ஆராய்ச்சி (2) ஆஷிக் முஹம்மத் (2) இணையத்தில் வலைவீச்சு (2) இணையம் (2) இதுதான் இஸ்லாம் (2) இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு (2) இந்திய முஸ்லீம்கள் (2) இபுறாகீம் அன்சாரி (2) இப்போது எல்லோரும் எழுதலாம் (2) இயக்க மயக்கம் (2) இயக்கம் (2) இயற்கை சீற்றம் (2) இருதய சிகிச்சை (2) இறப்பது (2) இறுதி கடமை (2) இறைவனிடம் (2) இறைவன் (2) இறைவழிபாடு (2) இலக்கிய மன்றம் (2) இலங்கை (2) இலைகள் (2) இவனா யிரு (2) இவர்கள் (2) இவ்வுலகம் அழிவை நோக்கி செல்கிறதா? (2) இஸ்லாத்தில் குற்றவியல் சட்டங்கள் (2) இஸ்லாமிய வருடப்பிறப்பு (2) இஸ்லாமியப் பொருளாதரம் (2) ஈத்கா (2) ஈமான் (2) ஈழம் (2) உடற்பயிற்சி (2) உணர்ந்தவை (2) உண்மை வரலாறு (2) உண்மைகள் (2) உதவி திட்டம் (2) உன்னப்பனின் விண்ணப்பம் (2) உம்மா (2) உம்மு சுலைம்(ரலி) (2) உரிமை (2) உருவப்படம் வரைதல் (2) உலகம் 2011 (2) உளவு (2) உழைப்பில்லா உடல்களும் (2) ஊடக தீவிரவாதம் (2) ஊட்டி (2) ஊர் (2) ஊர் நலன் (2) எங்க சார் (2) எங்க டீச்சர் (2) எங்கே அமைதி (2) எண்ணங்கள் (2) எதற்காக? (2) எதிரிப்பு (2) எதில் கஞ்சத்தனம் (2) எத்தி வைப்பு (2) எத்தியோப்பியா (2) எந்தப் பாதை உங்கள் பாதை? (2) எனக்குத் தெரிந்த இஸ்லாம் (2) என்பது (2) எம்.ஃபில். (2) எழுத்து (2) எழுத்தும் (2) ஏன் ஹிஜாப் (2) ஏர் இந்தியா (2) ஏழை (2) ஐரோப்பா (2) ஒப்பந்தம் (2) ஒருங்கிணைந்த (2) ஒருங்குறி (2) ஒழுக்கம் (2) ஓடுகாலி (2) ஓர் இஸ்லாமிய பார்வை (2) கஞ்சி (2) கஞ்சி வருதப்பா (2) கடன் தள்ளுபடி (2) கடன் வாங்கலாம் வாங்க (2) கடற்கரை (2) கடற்கரைத் தெரு கந்தூரி (2) கடற்கரைத்தெரு புளியமரம் (2) கடவுச் சொல் (2) கடை (2) கணவன் (2) கண்டிக்கிறோம் (2) கண்தானம் (2) கதையல்ல நிஜம் (2) கந்தூரி தடை (2) கபுர் (2) கப்ரு (2) கருமையும் (2) கலரி (2) கலைஞன் (2) கல்யாணம் (2) கல்வி முறை (2) கல்வி விருது (2) கல்வியும் கற்போர் கடமையும் (2) கவனம் (2) கவிக்கோ அப்துல் ரகுமான் (2) கா.அப்துல் கபூர் எம்.ஏ. (2) காட்சி (2) காட்டுப் பள்ளி (2) காணொளி உரை (2) காதர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி (2) காமராசர் (2) காற்று (2) காலை (2) காவல்துறை (2) காவேரி (2) கி.பி: 2011 அது ஒரு மழைக்காலம் (2) கிரிக்கெட் (2) குகை (2) குஜராத் (2) குஞ்ஞாலி (2) குடி தண்ணீர் (2) குணக்குன்று (2) குத்துச் சண்டை (2) குப்பை தொட்டி (2) குறை (2) கூட்டணி (2) கேரளா (2) கையேந்துங்கள் (2) கொசு (2) கொடுமை (2) கொண்டாட்டம் (2) கொலை (2) கொழும்பு (2) கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (2) கோபம் (2) சத்தம் (2) சபுறு (2) சமச்சீர் கல்வி (2) சமரசம் (2) சமுதாய சீர்கேடு (2) சமூக மாற்றங்கள் (2) சம்சுல் இஸ்லாம் (2) சம்பாதித்தால் (2) சர்க்கரை (2) சவால் (2) சவால்கள் (2) சஹர் (2) சாத்தியமா? (2) சான்பிரான்சிஸ்கோ (2) சிகிச்சை (2) சிதறல்கள் (2) சித்தீக் பள்ளி (2) சிந்தனை துளி (2) சின்ன வயசு (2) சிராஜ் உத்-தெலா (2) சிரிப்பு (2) சிறப்பு (2) சிலந்தி வலை (2) சீனி (2) சுயம் அறிக (2) சுர்மா (2) செயற்க்கை கோள் (2) செய்திகள் (2) செய்யுமிடத்தில் (2) செய்வீர் (2) சேவை (2) சொத்து (2) சோதிடம் (2) சோம்பேறி (2) சோறு (2) ஜஃபருல்லாஹ் (2) ஜமாஅத் (2) ஜஹபர் சாதிக் (2) ஜாஃபருல்லாஹ் (2) ஜித்தா (2) ஞாபகம் வருதே (2) டாக்டர் அப்துல்லாஹ் (2) டிசம்பர் (2) தன்னபிக்கை (2) தன்னிலை சுகாதாரம் (2) தமிழ் நாடு (2) தமிழ்நாடு (2) தமிழ்நாட்டில் (2) தலைமை ஆசிரியர் (2) தலையங்கம் (2) தலைவர் (2) தலைவர்கள் (2) தவறு (2) தாகம் (2) தாக்குதல் (2) தான தர்மம் (2) தாய்மொழி (2) திக்ரு (2) திடல் தொழுகை (2) தினம் (2) தியாகப் பெருநாள் சிந்தனை (2) தியாகம் (2) திருட்டு தடுக்க (2) திருவிழா (2) திரை (2) திறமை (2) தீ (2) தீமை (2) துணைத் தலைவர் (2) தூண்கள் (2) தூய்மை (2) தென்றல் (2) தெளிவு (2) தேர்தல் களம் (2) தேர்வு (2) தொந்தரவு (2) தொன்னூறு (2) நடுப்பக்கத்தில் நட்சத்திரம் (2) நடுவுல கொஞ்சம் நட்சத்திரங்களைக் காணோம் (2) நபி(ஸல்) (2) நம்ம ஊர் (2) நம்மளுக்கு (2) நற் குணங்கள் (2) நலமில்லா நவீனமும் (2) நாட்டு நடப்பு (2) நாணம் (2) நாற்காலி (2) நாற்பது (2) நினனவுகள் (2) நினைவூட்டல் (2) நியூயார்க் (2) நிறம் மாறும் மனிதர்கள் (2) நிறைவுரை (2) நிலநடுக்கம் (2) நூருல் இப்னு ஜஹபர் அலி (2) நூல் (2) நெசவுத் தெரு (2) நெனப்பு (2) நேபாளம் (2) நேரலை (2) நேருக்கு நேர் (2) நேர்காணல் (2) பகதூர்ஷா ஜாஃபர் (2) பகுத்தறிவாளர்களின் மதம் (2) பக்கத்து ஊர் செய்திகள் (2) பக்கீர் முஹம்மது (2) பங்கு (2) பசுமை (2) பசுமை அதிரை 2020 (2) பட்டுக்கோட்டை (2) பணி (2) பண்பு (2) பதிவர்கள் (2) பயிற்சி (2) பரிவு (2) பரீட்சை நேரம் (2) பர்ஜ் கலிஃபா (2) பர்மா தேக்கு வீட்டுக்காரர் (2) பள்ளி (2) பஷீர் அஹம்து (2) பாடம் (2) பானு என்றென்றும் (2) பாம்பன் பாலம் (2) பாருக்குள்ளே நல்ல நாடு (2) பிடித்தது (2) பின்னூட்டம் (2) பின்னூட்டவாதி (2) பிரதமர் (2) பிரதர் (2) பிரியமில்லா பிரிவு (2) பிறப்பது (2) பிறமதம் (2) பிலால் (ரலி) (2) பிலிப்பைன்ஸ் (2) புகார் (2) புகைப் பிடித்தல் (2) புகைப்பட பொழுதுகள் (2) புகைப்படம் (2) புதிய பள்ளிவாசல் (2) புதிய மத்திய அரசு (2) புதுக்கிப்படாத திருமணங்கள் (2) புதுமை (2) புரிந்துணர்வு (2) புலவர் (2) பூகம்பம் (2) பெண்ணீயம் (2) பெண்ணுக்கு வீடு (2) பெண்ணுறிமை (2) பெண்ணே (2) பெரியவர்கள் (2) பேருந்து (2) பொட்டிக்கடை (2) பொற்காலம் (2) போடுங்கள் (2) போர் அடிக்குது (2) போஸ்டர் (2) மகளிர் (2) மடமை (2) மணமகன் (2) மணமகள் (2) மணிமாலை (2) மதச்சாயம் (2) மதிப்பு (2) மதிப்புரை (2) மதிப்பெண்கள் (2) மதீனாவில் நோன்பும் பெருநாளும் (2) மந்தி (2) மனசாட்சி (2) மனனம் (2) மனு (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா ? (2) மன்றம் (2) மயக்கம் (2) மரண அறிவிப்பு (2) மரபுக் கவிதை (2) மருதநாயகம் (2) மர்யம் ஜமீலா (2) மறந்தவைகள் (2) மறுமை நாள் (2) மலர் வனம் (2) மலேசியா பெருநாள் (2) மலேஷியாவில் ரமளான் (2) மாணவமணிகளுக்காக (2) மாணவிகள் (2) மாணவியின் (2) மாது (2) மானிடா (2) மாப்புளே (2) மாயை (2) மார்க்கம் (2) மாலை (2) மாவீரன் (2) மின்சாரவாரியம் (2) மீன்கள் (2) மீள்பதிவு (2) மு.செ.மு.நெய்னா முஹம்மது (2) மு.மேக்தா (2) முகமது பாரூக் (2) முசெமு (2) முஜாஹித் (2) முடிவுகள் (2) முத்தம் (2) முன்னோர்கள் (2) மும்பை (2) முஸ்தகீம் (2) முஸ்லிம்கள் (2) முஸ்லீம் (2) முஸ்லீம் குரல் (2) முஹம்மத் அலீய் (2) முஹர்ரம் (2) மூணுக்கு வந்த டவுட்டு (2) மூனாறு (2) மூளைக்கு வேலை (2) மெரினா (2) மை (2) மையம் (2) யா அத்தஹாக் (2) யார்தான் சொல்வது (2) யாவாரம் (2) ரமலான் சிந்தனை (2) ரமளானுக்கு பின் (2) ராமாயணம் (2) ரியாஸ் அஹ்மது (2) ரிலாக்ஸ் ப்ளீஸ் (2) ரேங்க் கார்டு (2) வங்கி (2) வயோதிகம் (2) வரமா (2) வருக (2) வர்த்தகம் (2) வறுமைக்கோடு (2) வலைப்பூ (2) வலைவீச்சு (2) வழமை (2) வழிமுறைகள் (2) வழியனுப்புதல் (2) வா.உ.சிதம்பரனார் (2) வாகனம் (2) வாங்கடா (2) வாநிலை (2) வாய்க்கால் (2) வாவன்னா சார் (2) விஞ்ஞானம் (2) விதை (2) விமான பயணமும் விபரீதமும் (2) விமானப் பயணம் (2) விமானம் (2) விரயம் (2) விளம்பரங்கள் (2) விவேகம் (2) வெண்மையும் (2) வெந்நீர் ஒத்தடம் (2) வெரசன (2) வெளிச்சம் (2) வெள்ளிநிலா (2) ஷஃபான் (2) ஷப்-ஏ-அராஅத்து (2) ஷவ்வால் (2) ஷஹ்லா (2) ஷாஃபி M.I. (2) ஸதக்கத்துல்லாஹ் (2) ஸனது (2) ஸூரத்துல் பகரா (2) ஸ்ரீலங்கா விமானம் (2) ஹசினா அப்துல் பாசித் (2) ஹஜ் 2011 (2) ஹஜ் பெருநாள் சந்திப்பு (2) ஹபீப் முஹம்மத் (2) ஹலால் (2) ஹாஜா முகைதீன் (2) ஹிதாயத்துல்லாஹ் (2) ஹைதர் அலி (2) “பசு” ‘மை’பூசி அடி‘மை’ ஆகும் இந்தியா. (2) 'e'மான் (1) 'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு (1) .அதிரை (1) 10 வகுப்பு CBSE (1) 100வது நாளில் (1) 10ம் வகுப்பு (1) 1435 (1) 1600 கோடி வழங்கிய வள்ளல் (1) 1930 (1) 1970 (1) 1980 (1) 1984 (1) 1987 (1) 1993 (1) 2002 (1) 2012-13 (1) 2015 (1) 2015-2016. பட்ஜெட் (1) 2050 (1) 25000 அடி (1) 5-ம் (1) 50 வது பதிவு (1) 6 (1) 6-ம் (1) AAF (1) ABC (1) ALM ஆண்டுவிழா (1) ATCO (1) AZHAR HUSSEIN (1) Abdul Rahman (1) Albaqavi.com (1) American Adirai Forum (1) American Adirai Forum [A A F] – இரண்டாவது அமர்வு (1) Any suspended coffee (1) B.ஜமாலுதீன் (1) BBC (1) Beware of killer offers in Dubai (1) Budget 2012 (1) CMN சலீம் (1) CMண் சலீம் (1) Cancer Awareness Program (1) Cataract (1) December (1) ETA (1) Easy life leads to lazy life (1) Engineering career (1) Final Year MBBS (1) GROUP-1 (1) Glaucoma (1) Gulfnews (1) HABIT (1) HAJ 2015 (1) I am the Greatest (1) IAS (1) IFT (1) India is my country (1) Islam (1) J.A.தாஜுதீன் (1) JMC (1) KMHSSc (1) KVS (1) LOGO (1) London (1) M S M(n) (1) M.B.B.S. (1) M.L.A ரெங்கராஜன் (1) M.S.முகமது மீராசாகிப் (1) MANAGEMENT CAREER (1) MBA (1) MEDICINE CAREER (1) MF (1) MKN Trust (1) MMS (1) MOTHER (1) MS அப்துல் கஃபூர் (1) MSM(r) (1) Moinudeen (1) Moorthy (1) Motion Sickness (1) Mujahid Razeen (Srilanka) (1) Munawar (1) Naming and Calling Spiritually and Personally (1) Nizar Ahamed (1) Nursery School (1) PJ (1) PhD (1) Right Understanding (1) S.H.அஸ்லம் (1) S.சித்தீக்.M.Tech (1) SIS (1) SSLC (1) SSLC. (1) School (1) Shahbaz Mohamed (1) Sports Day (1) Stop N Shop (1) Straight line Stationery (1) TNPSC (1) Truly Asia (1) U.Aboobacker (1) UAE National Day (1) Union Budget 2017 - 2018 (1) abdul khader (1) abu hanifa (1) ac (1) activities (1) adco (1) adirai businessman (1) adirai classified (1) adirai educational mission (1) adirai news (1) adirampattinam (1) afghan (1) after ramadan (1) ayda (1) back2School (1) beach street (1) boxer (1) burkhalifa (1) cbse சமச்சீர் கல்வி (1) cc Sabeer appa (1) channel (1) chennai (1) citizen of world (1) cobol (1) computer (1) convert to islam (1) country club (1) credit card (1) cults (1) current affairs (1) dad (1) dare to dream (1) dc (1) demonetization (1) different thinking (1) drop box (1) dynamic cellcom (1) e-தமிழர் (1) ecr (1) editor-choice (1) email (1) emirates ID (1) engineer (1) english (1) family card (1) family tree (1) folder (1) forward (1) friend request (1) friendship (1) gulf (1) haj 0215 (1) haji marra (1) health (1) history of Rasoolullah (1) homework (1) ibraheem ansari (1) incredible (1) indian muslims (1) influences (1) inneram (1) inter school quiz competition (1) islamic bank (1) islamic banking (1) kalaam (1) kaveri (1) kayal (1) lagoon (1) life (1) living (1) m.nainathambi (1) madina (1) magazine (1) makkah (1) media (1) medical (1) mens way (1) mirage (1) mmk (1) mms பஹுருத்தீன் (1) mnt (1) mohamed ali (1) mp (1) mpmv (1) msf (1) msm1 (1) mumbai (1) music (1) national flag (1) notice (1) online (1) our (1) pain worth it (1) parotta (1) peach n berry (1) photography (1) physical (1) picture of play (1) police (1) power (1) programming (1) publisher (1) queenie padilla (1) real estate 1 (1) sabee (1) sad (1) sbeer (1) sha an sha (1) shaficast (1) sham (1) sharing (1) sharjah (1) shirt (1) shirts (1) smart phones (1) son (1) sp பட்டினம் (1) speech (1) srilankan muslim (1) syed abdul hameed (1) syria children (1) tamil (1) thajudeen (1) thamemunansari (1) treatment (1) truly asia (1) tweet (1) update (1) urdu (1) version 4.01 (1) we support (1) welcome Ramadhan (1) wikileaks (1) y1 (1) youtube (1) ஃபஜர் தொழுகை (1) ஃபாரூக் (1) ஃபிலிம் (1) ஃபேக்புக் (1) ஃபேஸ்புக் (1) ஃபோட்டூன் (1) ஃபோட்டோ (1) ஃபோன் (1) ஃபோர்ட்டூன் (1) ஃப்ரெண்டு ரெகுஸ்ட் (1) அ.ர.முஹமது தஸ்தகீர் (1) அஇதிமுக (1) அகத்தின் அழகு (1) அகிலம் (1) அங்கீகாரம் (1) அசத்தல் (1) அசைவு (1) அஜினோமோட்டோ (1) அஜீஸ் (1) அஜ்மான் (1) அஜ்மாஸ் நோன்பு கஞ்சி (1) அட (1) அடப் பாவிங்களா ? (1) அடிக்கல் (1) அடிமை (1) அடிமை வணிகர் அந்-நுஐமான் (ரலி) (1) அடியேனின் அகரம் (1) அட்லாண்டா (1) அணிவகுப்பு (1) அணு (1) அணை (1) அண்ணன் (1) அண்ணன் தம்பி உறவு (1) அண்ணே ! (1) அதிகாரம் (1) அதிகாரி (1) அதிகாலை (1) அதிசயம் (1) அதியற்புதம் (1) அதிராம்பட்டினம் 2011 (1) அதிராம்பட்டினம் 2012 (1) அதிராம்பட்டினம்2011 [2] (1) அதிரை ஃபாரூக் (1) அதிரை அபூபக்கர் (1) அதிரை அஸ்ரப் (1) அதிரை அஸ்லம் (1) அதிரை ஆத்திச்சூடி (1) அதிரை இலக்கிய மாமன்றம் (1) அதிரை இஸ்லாமிக் மிஷன் (1) அதிரை கல்வி CD (1) அதிரை கல்வி அறக்கட்டளை (1) அதிரை கல்வி விழிப்புணர்வு (1) அதிரை கீழத்தெரு (1) அதிரை சித்தீக் பள்ளி (1) அதிரை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் (1) அதிரை தமுமுக (1) அதிரை பெருநாள் (1) அதிரை பெருமை (1) அதிரை பேரூராட்சி (1) அதிரை பொருட்காட்சி (1) அதிரை போஸ்ட் (1) அதிரை மாடு (1) அதிரை மாணவி (1) அதிரை வரலாற்றில் (1) அதிரை வள்ளல் (1) அதிரை வாசனை (1) அதிரைக் கடல் (1) அதிரைச் செய்தி (1) அதிரைமுஜீப் (1) அதிரையன் (1) அதிரையின் நிய்யத்து (1) அதிரையின் பூர்வ குடிமக்கள் (1) அதிரையின் விருந்து உபசரிப்புகள் (1) அதிரையில் (1) அதிரையில் பரவிவரும் அதிபயங்கர ஆபத்தான நோய் (1) அதிரையில் மழையாமே (1) அதிரையில் ஷவ்வால் நோன்பு - புறக்கனிக்கப்படுகிறதா (1) அதிர்ச்சிகள் (1) அது (1) அது ஒரு பொற்காலம் (1) அது ஒரு ஹஜ்ஜுப்பெருநாள் நேரம் (1) அந்த ஏழு நாட்கள் (1) அந்த திக் திக் நேரங்கள் (1) அந்தக் காலம் (1) அந்தரத்தில் (1) அந்தி (1) அனஸ்(ரலி) (1) அனுபவப் பாடம் (1) அனுமதி (1) அனைத்துத் தெருக்களும் அதிரையின் கருக்கள்.editorial (1) அன்னை (1) அன்னை ஆயிஷா சித்தீக்க(ரலி) (1) அன்னை கதீஜா மகளிர் கல்லூரி (1) அன்னையர் தினம் (1) அன்பளிப்புகள் (1) அன்பு (1) அன்புக் குறிப்புகள் (1) அன்புடன் புகாரி (1) அன்று பெய்தது மழை (1) அன்றைய நோன்பும் (1) அபராதம் (1) அபு பஜ்லு (1) அபு ஹனிஃபா (1) அபுமஹ்மூத் (1) அபுருமானா (1) அபுல் ஹசன் (1) அபுல்கலாம் ஆஷாட் (1) அபூ சுஹைமா (1) அபூ நூரா (1) அபூஇப்றாஹீம் (1) அபூபக்கர் (1) அபூபக்கர் ரழி (1) அபூஹனிஃப (1) அபூஹனிஃபா (1) அப்டேட் (1) அப்துர் ரஷீது ரஹ்மானி (1) அப்துர் ரஷீத் ரஹ்மானி (1) அப்துல் கறீம் (1) அப்துல் கலீம் (1) அப்துல் ஜப்பார் (1) அப்துல் நாசர் மதனி (1) அப்துல் ராஜிக் (1) அப்துல்லாஹ் (1) அப்பர் கோதையர் (1) அப்பா ஏசுவாஹ....(அதிரையின் மண் வாசனை) (1) அப்பாஸ் அலி (1) அமீரக தமிழ் மன்றம் (1) அமீருல் முஃமின் (1) அமெரிக்க அதிரையர்களின் கூட்டமைப்பு (1) அமெரிக்காவில் இறையில்லம் தீக்கிரை (1) அமைதியின் ஆளுமை (1) அமோஜான் (1) அம்மார்(ரலி. (1) அம்மாவைப் பிடித்த பேய் (1) அய்டா (1) அரஃபாத் 1987 (1) அரஅல (1) அரசினர் மேல்நிலை பள்ளி (1) அரசியலல்ல (1) அரசியல் களம் (1) அரசியல் முதல்வர் (1) அரசியல் வியாதிகளா? (1) அரசியல்வாதிகளா? (1) அரசு உதவிகள் (1) அரசு வேலை வாய்ப்பு (1) அரபிக் (1) அரபு நாடுகள் (1) அரபு நாட்டு பயணம் (1) அரபுலகம் (1) அரவணைக்க அருகதையற்றவர்களா அகதிகள் (1) அருட்பேறு (1) அருமறை (1) அரும்பு (1) அரும்பு பாட்டு (1) அரும்புப்பாட்டு (1) அரும்பேறு (1) அருளைச் சுமந்த ஹாஜிகளே...வருக (1) அருவி (1) அரேபியர்கள் (1) அர்-ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (1) அர்ப்பணிப்பு (1) அறிகுறிகள் (1) அறிந்து (1) அறியாமைக் காலம் (1) அறிவிப்பு சம்சுல் இஸ்லாம் சங்கம் (1) அறிவியல் பாங்கு (1) அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே (1) அற்பணிப்பு (1) அலகே ஆயுதம் (1) அலைகள் (1) அலைபாயுதே (1) அல்-கத்ர் (1) அல்ஜஸீரா (1) அல்மாஸ் (1) அல்ல (1) அல்லாஹ் யாரை நேசிக்கிறான் (1) அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் 99 (1) அல்லாஹ்வின் சக்தி (1) அல்லாஹ்வுக்கு நன்றி (1) அழகியல் (1) அழகு மொழி (1) அழகுக் குறிப்புகள் (1) அழிக்க திட்டம் (1) அழுகை (1) அழுவதற்கா (1) அழைப்பு பணி (1) அழைப்பு பணி மதமாற்றம் ஆகுமா (1) அவசர இழப்பு (1) அவசர உலகம் (1) அவன் (1) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும். சஹாபாக்கள் (1) அவலம் (1) அவளைச் சுற்றி (1) அவள் (1) அவஸ்தை (1) அவ்லியா (1) அஸார் (1) அஸ்மா(ரலி) (1) அஸ்மாவுல் ஹுஸ்னா அகவல் (1) அஸ்லம் (1) அஸ்லம் பாஷா (1) அஹமது பாக்கவி (1) அஹமது ஹாஜா (1) அஹமது ஹாஜி (1) அஹமதுல்லா ஷா (1) அஹ்மது (1) அஹ்மது அமீன் (1) அஹ்மது ஷஃபி (1) அஹ்மது ஹாஜா (1) அஹ்மத் தீதத் (1) ஆஃபியா புரூட் (1) ஆஃபீஸ் பாயும் - வெகேஷனும் (1) ஆஃப்பிரிக்கா (1) ஆகஸ்ட் (1) ஆக்ஃபோர்டு (1) ஆக்கமிடு அடுமடையா (1) ஆக்ரா (1) ஆசியாநெட் (1) ஆசிரியர்கள் (1) ஆசிரியைகள் (1) ஆசை கணவுகள் (1) ஆச்சர்யம் (1) ஆஞ்சியோ கிராஃபி (1) ஆடவரும் (1) ஆடு (1) ஆடையகம் (1) ஆட்சியதிகாரம் (1) ஆட்சியிழந்த கட்சி (1) ஆட்டம். (1) ஆட்டு மூளை (1) ஆண் (1) ஆண்கள் (1) ஆண்டவனே ஆள்பவனே (1) ஆண்டு விழா (1) ஆண்டுவிழா (1) ஆதரவு (1) ஆனந்தாவின் அபிநயம் (1) ஆனலைன் (1) ஆபூஇப்ராஹீம் (1) ஆப்பரேஷன் (1) ஆப்பிரிக்க (1) ஆப்பிள் (1) ஆப்ரேஷன் (1) ஆமினா முஹம்மது (1) ஆமை (1) ஆம் ஆத்மி (1) ஆயத்துல் குர்ஸி (1) ஆயிஷா பல் மருத்துவமனை (1) ஆய்ஷா ஃபாத்திமா (1) ஆரசியல் (1) ஆரிஃபா ஆலிமா (1) ஆர்நோத் வான் டோர்ன் (1) ஆர்வம் (1) ஆறிலிருந்து அறுபதுவரை (1) ஆறு (1) ஆலிம்சா (1) ஆளுக்கொரு சட்டம் (1) ஆளும் கட்சி (1) ஆளும் வளரனும் அறிவும் வளரனும் (1) ஆளூர் ஷாநவாஸ் (1) ஆவ்மியாக்கா (1) ஆஷி அஹ்மத் (1) ஆஷிக் அஹ்மத் (1) ஆஹா (1) இஃப்தார் (1) இக்கணம் (1) இக்றா (1) இங்கு எது முடியும் (1) இடர்கள் (1) இடி (1) இடியப்பம் (1) இடியாப்பம் (1) இடைத்த் தேர்தல் (1) இணைவத்தல் (1) இணைவைப்பு (1) இதயதளம் (1) இது எப்படி இருக்கு (1) இந்த வார செய்தி (1) இந்தக் காலம் (1) இந்தப் பாதை (1) இந்தவுளே (1) இந்திய அரசியல் (1) இந்திய ஊடகங்கள் (1) இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கு (1) இந்திய சுந்தந்திர தினம் (1) இந்திய ரூபாய் (1) இந்தியா சுதந்திர தினம் 1947 (1) இந்து (1) இந்துத்துவா (1) இந்தோனேஷியா (1) இந்நேரம் (1) இனப்படுகொலை (1) இனிக்கிறது (1) இனிமை (1) இனிய (1) இனிய திசைகள் (1) இன்டர்வியூ (1) இன்னுமா தயக்கம் (1) இன்பம் (1) இன்று 10.01.2011 (1) இன்று 18 02 2011 (1) இன்று இரு தகவல் (1) இன்று இரு தகவல்கள் (1) இன்று நாளை (1) இன்றும (1) இன்றைய வீம்பும் (1) இன்ஷூரனஸ் (1) இபுராகீம் அன்சாரி (1) இப்தார் நிகழ்ச்சி (1) இப்னு அப்பாஸ் (1) இப்ராஹீம் (1) இப்றாகிம் அன்சாரி (1) இமாம ஷாஃபி பள்ளி (1) இமாம் (1) இமாம் அபூஹனீஃபா (1) இமாம் புகாரீ (1) இமாம் ஷாஃபி (1) இம்தாதி (1) இயக்க வெறி (1) இயக்கங்கள் (1) இயற்கை இன்பன் (1) இயற்கை எங்கே (1) இரங்கற்பா (1) இரங்கல் (1) இரண்டாம் ஆண்டு (1) இரயில்வே (1) இரவேலர்கள் (1) இராஜமடம் (1) இராணுவம் (1) இராமநாதபுரம் (1) இருட்டு (1) இருதயம் (1) இருளும் ஒளியும் (1) இருவேறு துருவங்கள் (1) இர்ஃபான் (1) இறக்கை (1) இறக்கை கட்டிப் பறக்குதய்யா (1) இறப்பு (1) இறுதி மூச்சு (1) இறுதியாண்டு (1) இறை வசனங்கள் (1) இறைமறை (1) இறைமார்க்கம் (1) இறையச்சமுள்ள தந்தை (1) இறையச்சம் (1) இறையில்லத்தில் யாருடன் மல்லுக் கட்டுகிறார்கள் (1) இறைவனின் கூலிப்படைகள் (1) இறைவனுக்கு நன்றி (1) இறைவேதம் (1) இலக்கு (1) இலங்கை தமிழனின் இதையக் குரல் (1) இலட்சினை (1) இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் (1) இலவச மருத்துவ முகாம் (1) இலை (1) இல்ம் (1) இல்லறம் (1) இல்லல்லாஹ் (1) இல்லாள் (1) இளம் மனைவின் கடிதம் (1) இஸலாம் (1) இஸ்மாயில் ஸலஃபி (1) இஸ்லாத்திற்காக (1) இஸ்லாத்திற்கு எதிரான (1) இஸ்லாமிய தீவிரவாதம் (1) இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் (1) இஸ்லாமிய வரலாறு (1) இஸ்லாமிய வரலாற்று மின்னொளிகள் (1) இஸ்லாமியப் பாரவை (1) இஸ்லாம் மதத்திற்கு ஐரோப்பாவின் கடன் (1) ஈடிணையற்ற இறைவா (1) ஈத்மிலன் (1) ஈன்ற பொழுதின் (1) ஈமெயில் (1) ஈர நெஞ்சம் (1) ஈராக் (1) ஈர்ப்பு (1) உ.பியில் துவங்கவிருக்கும் போர் (1) உங்கள் ஓட்டு விறபனைக்கு அல்ல (1) உங்கள் வீட்டுத் திருமணத்தில் இது இருக்கா (1) உசுரு (1) உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு (1) உடல் ஆரோக்கியம் (1) உடல் பயிற்சி (1) உணர்வுகள் மூன்று (1) உண்டாயிருக்கேன் (1) உண்ணாவிரதம் (1) உண்மைச் சம்பவம் (1) உதவியது இஸ்லாம் (1) உன்டகலியான் அதிரையரின் உணவு (1) உன்னை அறி (1) உப்பு (1) உமர் (1) உமர் (ரலி) (1) உமர் கையாம் (1) உமர் ஷரீப் முப்தி (1) உமர்தம்பி (1) உம்மா'ன்டா சும்மாவா ? (1) உம்மி மக்தூம் (1) உம்ரா (1) உயர் கல்விக்கு உதவித் தொகை (1) உயிரெழுத்துகள் (1) உயிர் (1) உயிர்க் கொத்திப் பறவை (1) உரிமைகள் (1) உருகிய எதிர்ப்புகள் (1) உருகுதே அதிரை (1) உருக்கம் (1) உரைநடை (1) உர்து (1) உறவின் பிரிவு (1) உறவு வளர்ப்போம் (1) உறவுகள் எங்கே (1) உறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள் (1) உறுப்புகளின் நோய் (1) உலக அதிசயம் (1) உலகக் கோப்பை (1) உலகமயம் (1) உலகம் எப்படி உருவானது (1) உலகின் தலைசிறந்த பணக்காரர் (1) உலோகப்பறவை (1) உல்லாசம் (1) உளத்தூய்மை (1) உளவியல் (1) உளுச் செய்வது (1) உள்குத்து (1) உள்ளம் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சி த் தேர்தல் (1) உள்ளாட்சித் தேர்தல் (1) உள்ளே (1) உழை (1) உழைப்பு (1) உஸ்மான்(ரலி) (1) ஊடக (1) ஊடக தேர்தல் பிரச்சாரம் 2016 பதிலடி (1) ஊடக விபச்சாரம் (1) ஊடகங்கள் (1) ஊடங்கள் (1) ஊனம் (1) ஊராட்சி (1) ஊரோடு உறவாடு (1) ஊர் செய்தி (1) ஊர் நடப்பு (1) ஊர் நினைவுகள் (1) ஊர் பார்வை (1) ஊர்க்காரர் (1) ஊர்வன (1) எக்ஸ்க்யூமி (1) எக்ஸ்பிரஸ் (1) எங்க முதலாளி (1) எங்கவூர் மாப்பிள்ளை (1) எங்கே (1) எங்கே நேரம் (1) எங்கே வீழ்ந்தோம் (1) எங்ஙனம்? (1) எச்சில் (1) எஞ்சினியர் (1) எடு-இட்டோர்-இயல் (1) எண்ணமும் (1) எண்ணம் (1) எண்ணிலடங்கா (1) எண்ணெய் (1) எதிரி (1) எதுக்கும் நல்ல மனசு வேணும் (1) எத்தீம்கானா (1) எந்தையே (1) எனக்காக (1) எனதூர் (1) என் ஃப்ரண்டப் போல யாரு மச்சான் (1) என் கண்ணான வாப்பாவே (1) என் கனவு (1) என் கேள்விக்கென்ன பதில் (1) என் பார்வை (1) என் மொழி (1) என் வீட்டுத் தோட்டத்தில் (1) என்.ஷஃபாத் (1) என்கவ்ன்ட்டர் (1) என்ன (1) என்ன கொடுமை (1) என்னாட்டின் (1) என்னால் இயன்ற அறம் (1) என்னைக் கண்டெடுத்தேன் (1) எபிக் வெப் பிரவுசர். (1) எப்படி அவர்களை மன்னிப்பேன் (1) எப்படிப் பிறந்தாய் நீ (1) எப்படியும் மரணம் முடிவாகி விட்டது (1) எப்புடீ (1) எம்.ஃபில் (1) எரிகல் (1) எர்மைல் தவாலும் (1) எறச்சி (1) எலும்பு உறுதிதன்மை (1) எலும்பு கூடு (1) எல்லாப் புகழும் இறைவனுக்கு (1) எல்லை (1) எல்லைக் கோடு (1) எழுதியதல்ல (1) எழுது (1) எழுத்தியல் (1) எழுவதற்கா? (1) ஏகத்துவம் (1) ஏஞ்சலா கொலின்ஸ் (1) ஏனெனில் திமிர் (1) ஏப்ரல் 1 (1) ஏமாற்றமா (1) ஏர்வாடி (1) ஏற்ற நாடு (1) ஏற்றமா (1) ஏழை மாணவர்கள் (1) ஏழ்மை (1) ஐ.ஏ.எஸ். (1) ஐ.பி.எல். கிரிக்கெட் (1) ஐக்கியம் (1) ஐந்து (1) ஐஸிஐ (1) ஐஸ்கிரீம் (1) ஒத்தடம் (1) ஒத்துமை (1) ஒரு உரையாடல் With சீனிவாசன் சார். (1) ஒரு கோணல் பார்வை (1) ஒரு ச்சிக்குபுக்கு பாதை (1) ஒரு பிள்ளையின் ஏக்கம் (1) ஒற்றுமை அழைப்பு (1) ஒற்றுமையே பலம் (1) ஒற்றுமை் (1) ஒற்றையாய் (1) ஒலி (1) ஒளரங்கசீப் நான்மணி மாலை (1) ஒளி (1) ஒளி வீசுமுன் (1) ஓடி விளையாடு (1) ஓடை (1) ஓர் அன்னையால் தன் மகனை எப்படி விற்க முடியும் (1) ஓர் ஆய்வு (1) ஓர் பார்வை (1) ஓலை (1) ஔரங்கசீப் நான்மணி மாலை (1) கசையடி (1) கஜினி முகமது (1) கஜ்ஜாலி (1) கஞ்சத்தனம் (1) கடன் அட்டை (1) கடமை (1) கடமைகள் (1) கடற்படை (1) கடி (1) கடி ஜோக்ஸ் (1) கடைத்தெரு (1) கட்சி (1) கட்சிகளின் தந்திரம் சுதந்திர தினம் (1) கட்டிடம் (1) கட்டுபாடு (1) கட்டுப்பாடு (1) கட்டுரைகள் (1) கணகள் இரண்டும் (1) கணினி தமிழ் (1) கண் தானம் (1) கண் பாதுகாப்பு (1) கண் பார்வை விழிப்புணர்வு (1) கண் மருத்துவம் (1) கண்காட்சி (1) கண்ணீர் (1) கண்பார்வை (1) கண்புரை (1) கண்மணி அன்போடு நான் (1) கதைகள் (1) கத்தனா (1) கந்தவரு (1) கந்தூரி மடமை (1) கந்தூரி வழிகேடு (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கனவும் நனவும் (1) கன்னிப் பதிவு (1) கபுரை இடிக்க வேண்டுமா? (1) கமாலுதீன் மதனி (1) கம்பி (1) கம்பியில்லா தொடர்பு (1) கம்யூனிசம் (1) கம்ளைண்ட் (1) கயவர்கள் (1) கரகரப்பு (1) கரன்ஸிக் களேபரங்கள் (1) கருணை (1) கருத்தாய்வு (1) கருத்து முரண்பாடுகள் (1) கருப்பு எலி (1) கருமையும் வெண்மையும் (1) கரும்புகை (1) கருவளையம் (1) கருவேலமரம் (1) கர்ப்பினி பெண்களுக்கு (1) கர்ழன் ஹஸனா (1) கறி (1) கறை (1) கற்கை (1) கலக்குங்க (1) கலப்படம் (1) கலரிச் சாப்பாடு (1) கலவியின் அவசியம் (1) கலாச்சார (1) கலிஃபா டவர் (1) கலிஃபோர்னியா (1) கலிஃபோர்னியா மாகாணம் (1) கலெக்டர் (1) கலை (1) கலைஞர் (1) கல்ந்துரையாடல் (1) கல்லும் (1) கல்வி நேரமில்லை (1) கல்வி மாநாடு (1) கல்வி வளர்ப்போம் (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு நேரலை. கல்வி விழிப்புணர்வு (1) கல்விக் கூடம் (1) கல்வித்துறை (1) கல்வியாண்டு (1) கல்வியாளார்கள் (1) கல்வியும் கற்போரின் கடமையும் (1) கல்வியும் கற்போர் க்டமையும் (1) களஞ்சியம் (1) கள்ளக்காதல் (1) கழிப்பிடத்தில் (1) கவனமாக கேளுங்கள் (1) கவலை நேரத்திலும் கவிதையா (1) கவிக்கோ (1) கவிஞன் (1) கவிஞர்கள் (1) கவிதை கிரவ்ன் (1) கவிதை சபீர் அஹ்மது (1) கவிதை வாப்புச்சா (1) கவிதைக் காணொளி (1) கவிதைப் பேட்டி (1) கவிதையல்ல (1) கவிதையே தெரியுமா ? (1) கவிநடை (1) கவியனபன் (1) கவியுரையாடல் (1) கவுரவம் (1) காகிதம் (1) காக்கை (1) காசிருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா (1) காடுகள் (1) காணவில்லை (1) காதலர்கள் (1) காந்தி நாட்டு இஸ்லாமியன் (1) கானல் நீர் (1) கானா (1) கான் அகடமி (1) கான்சல (1) காப்பி அடிக்கிறது (1) காப்பீடு (1) காமெடி (1) காயல்பட்டினம் (1) காரை வீடுகள் (1) காற்றலை (1) காற்றாழையும் (1) காலண்டர் (1) காழ்ப்பு (1) காவந்து பண்ணும் கலை (1) காவல் (1) காவல் நிலையம் (1) காவி தீவிரவாதி (1) காவித்துறை (1) காஷ்மீர் (1) கிரடிட் கார்டு (1) கிரவ்னு (1) கிரஸண்ட் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (1) கிளாஃபத் (1) கிள்ளித் திரிந்த காலம் (1) கிழவி (1) கிழிந்தது. (1) கிஷார் முஹம்மது. (1) கிஸ்ஸாஸ் (1) கீற்று (1) கீழக்கரை (1) குஜராத் கலவரம் (1) குஜாராத் (1) குஞ்சுகளும் (1) குடியரசுதினம் (1) குடும்ப அட்டை (1) குடும்பங்களின் சந்திப்பு (1) குடும்பன் குறிப்புகள் (1) குடைக்குள் மொட்டு (1) குப்பகள் (1) குப்பை (1) குயினி படில்லா (1) குரல் (1) குருதி (1) குருவி (1) குருவியும் (1) குர்ஆன் ஓதுதல் (1) குர்ஆன் சுன்னா (1) குர்பானி (1) குறிக்கோள் (1) குறிப்புகள் (1) குறைபாடுகள் (1) குறைவற்ற செல்வ (1) குற்றாலம் 2011 (1) குல்ல்லா (1) குளச்சல் (1) குளுக்கோமா (1) குழந்தை தொழில் (1) குழப்பம் (1) கூக்குரல்கள் (1) கூட்டணிக் கொட்டகைகள் (1) கூட்டணிக் கொள்கைகள் (1) கூட்டுத் தொழுகை (1) கூறு (1) கேடி (1) கேட்ட நினைத்த'வைகள்' (1) கேன்ஷல்ல அனுப்பிடுங்க (1) கேன்ஸரிலிருந்து தப்புவது எப்படி (1) கேரளம் (1) கேள்வி (1) கைகள் (1) கைகாட்டி கலாசாரம் (1) கைது (1) கொக்கு (1) கொசு ஒரு தொடர்கதை. (1) கொசுத் தொல்லை (1) கொஞ்சூண்டு (1) கொடு (1) கொடுவா மீனு (1) கொண்டாட்டம் கிரவ்ன் (1) கொண்டாட்டம் மட்டுமா பெருநாள் (1) கொல்லைப்புர தட்சனைகள் (1) கோ எஜுகேசன் (1) கோடி (1) கோடு உயர்ந்தது! குன்றம் தாழ்ந்தது (1) கோடை கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2016 (1) கோனார் ஹாஜியார் (1) கோப்பு (1) கோலாலம்பூர் (1) கோளாறு (1) கோள் (1) கோழி (1) க்ளாஸிக் (1) ஙே (1) சகக்ரை (1) சகன் (1) சகோதரகள் (1) சகோதரன் (1) சகோதரி (1) சங்கங்கம் (1) சங்கமம் (1) சங்கை மிகு ரமலான் (1) சட்டங்கள் (1) சட்டசபை (1) சட்டப்பேரவை (1) சட்டம் ஒழுங்கு பிரச்சினை (1) சட்டை (1) சதகா (1) சத்துணவு (1) சந்தேகம் (1) சந்தை (1) சந்தோஷம் (1) சன்டிகார் (1) சபிர் (1) சப்பிடலாம் (1) சமச்சீர் (1) சமய நல்லிணக்கம் (1) சமாதானக் கூட்டம் (1) சமாதி (1) சமுதாயம் (1) சமூக பிணைப்பு (1) சமூகம் (1) சரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 1 (1) சரி (1) சரித்திரம் (1) சர்தார்ஜி (1) சர்வீஸ் (1) சலுகை (1) சல்மான் கான் (1) சவுதி (1) சவுதியில் நடப்பது என்னா? (1) சவூதிச் சிறுமி லமா அல்-காமிதி (1) சாக்கடை (1) சாச்சா (1) சாச்சி (1) சாஜிதா புக் செண்டர் (1) சாதனயாளார் (1) சாதனைச் செம்மல் (1) சாதனைப் பெண்மனி (1) சாதி (1) சாதி ஒழிப்பு (1) சாதிக் பாட்சா (1) சான வயல் (1) சானவயல் (1) சாபமா (1) சாபாமா? (1) சாம்பல் (1) சார் (1) சார் பதிவாளர் (1) சார்ஜா (1) சார்ந்திருப்பவர்கள் (1) சாலைகள் (1) சி.எம்.பி.லைன் (1) சிகரம் (1) சிகெரட் (1) சிட்டுக்குருவி (1) சித்தப்பா (1) சிநேகிதிகள் (1) சிந்தனை அபு ஈசா (1) சிந்தனை ஏற்றத் தாழ்வு (1) சிந்தனைக் கோளாறு (1) சிந்தனைத் துறை (1) சிந்தியுங்கள் (1) சினிமா (1) சினிமாவும் முஸ்லீம்களும் (1) சின்னச் சின்ன ஆசைகள் (1) சிப்பி (1) சிப்பிக்குள் சூரியன் (1) சிரித்து (1) சிறப்பு நிகழ்வுகள் (1) சிறப்புரை (1) சிறுகதை (1) சிறுபன்மையினர் கல்லூரி (1) சிறுபான்மை (1) சிறுவர்கள் (1) சிறை (1) சில நேரங்களில் சில மனிதர்கள் (1) சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1) சிவகங்கை (1) சீ (1) சீச்சீ இந்த பழம் புளிக்கும் (1) சீதனமும் (1) சீதனம் (1) சீனப் பெண் (1) சீனா (1) சீரியல் (1) சுகங்கள் (1) சுடச்சுட அதிரை (1) சுட்டெரிக்கும் சூடு (1) சுட்டெரிக்கும் பாலையில் (1) சுதந்திர தினம் (1) சுதந்திர தினம் யாருக்கு (1) சுத்தமின்மை (1) சுப்ஹு (1) சுப்ஹு தொழுகை (1) சுமைய தாவூத் (1) சுமையா (1) சுமையாகிப்போனது (1) சும்மாதான் (1) சுய விளக்க உரை (1) சுயநலம் (1) சுரண்டல் (1) சுற்றித் திரியும் வாலிபமே (1) சுற்றுபுற சூழல் பாதுகாப்பு (1) சுவனத்தென்றல் (1) சுவனப்பிரியன் (1) சுவர்க்கம் (1) சூசன் பஷீர் (1) சூடு பறக்கும் விவாதம் (1) சூது சூழ் உலகு (1) சூனியம் (1) சூனியம் வைக்கத் தூண்டியது யார் (1) சூரத்தல் இஃக்லாஸ் (1) சூரத்துல் ஃபாத்திஹா (1) சூரத்துல் பஜ்ர் (1) சூரா லுக்மான் (31:32) (1) சூரியன் (1) செண்டர் (1) சென்சார் (1) சென்னை பல்கலைக்கழகம் (1) சென்ற வாரம் (1) சென்றுவா ரமளானே (1) செப்டம்பர் (1) செம்மல் (1) செயற்கை கண் (1) செய்தி சேனல்கள் (1) செய்தியாளர் (1) செய்முறை (1) செல்போன் டவர் (1) செல்லப் பிராணிகள் (1) செல்லப்பிள்ளை (1) செல்லம் (1) செல்வம் (1) சேது சமுத்திர திட்டம் (1) சேனல்கள் (1) சேய் (1) சேர்மன் (1) சேறு (1) சைலன்ஸ் ப்ளீஸ் (1) சொந்தம் (1) சொர்க்கம் (1) சொல் மந்திரம் (1) சொல்வதொன்றும் செய்வதொன்றுமாய் (1) சோம்பேறித்தனம் (1) சோலை (1) சோலையும் பாலையும் (1) ச‌ம்பாத்திய‌ம் (1) ஜக்காத் (1) ஜக்காத் நிதிப் பங்கீடு (1) ஜனநாயகத்தை விலைக்கு வாங்கிய பணநாயகம் (1) ஜனாதிபதி யார் (1) ஜப்பான் (1) ஜமாத் (1) ஜமால் மதனி (1) ஜமால் முகம்மது கல்லூரி (1) ஜலீலா கமால் (1) ஜாஃபர் (1) ஜாபிர் (ரலி) (1) ஜாமாத் (1) ஜாஸ்மின் (1) ஜாஹிர் (1) ஜும்மா (1) ஜும்மா பள்ளி (1) ஜூஸ் (1) ஜெ (1) ஜெஜெ. சொத்து குவிப்பு (1) ஜெட் (1) ஜெட்லி (1) ஜெய்தைக் காணவில்லை (1) ஜெய்னுல் ஆபிதீன் (1) ஜெர்மனி (1) ஜைனப்(ரலி) (1) ஜ்ஃபருல்லாஹ் (1) ஞானப் பயணம் (1) டாக்கி (1) டாக்டர் சுமையா தாவூத் (1) டாலர் (1) டி.வி. எச்சரிக்கை (1) டிக்கெட் (1) டிஜிட்டடல் (1) டிஜிட்டல் (1) டிஜிட்டல் இந்தியா (1) டியூசன் (1) டிரஸ்ட் (1) டிஸெம்பர் (1) டிஸைன்ஸ் (1) டீக்கடை (1) டீக்கடை குழுமம் (1) டெலஸ்கோப் (1) டேரா (1) ட்விட் (1) த.மு.முக. (1) தஃபீக் சுல்தானா (1) தகப்பன் (1) தகர்ப்பதற்கா? (1) தகவல் (1) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (1) தகவல் தொடர்பு (1) தகுதிக்கேற்ப தண்டனை (1) தக்பீர் (1) தங்க முதலாளி (1) தங்கச்சி (1) தங்கப் பதக்கம் (1) தங்கை (1) தடசணையும் (1) தடம் (1) தடைகள் (1) தடைக் கல் (1) தண்டனை (1) தண்டவாளம் (1) தண்ணீர் தாகம் தீர்க்கவா (1) ததஜ (1) தந்தி டிவி. (1) தந்தை மகள் (1) தந்தை வழி உறவு (1) தந்தையர் தினம் (1) தந்தையெனும் பாசம் (1) தனித் தன்மை (1) தனித் தூது (1) தனித்தமிழ் (1) தன்னடக்கமும் மரியாதையும் (1) தன்னிலை மேம்படுத்தல் (1) தன்னிலை விளக்கம் (1) தன்னிலை விள்க்கம் (1) தன்மை (1) தப்லீக் (1) தமிழக முதல்வர் (1) தமிழக முஸ்லீம்களின் ஒற்றுமை (1) தமிழர்கள் (1) தமிழும் ஆங்கிலமும் பேசிக்கொண்டால் (1) தமிழ் தாவா (1) தமிழ் தாவா பிரிவு (1) தமிழ்நாடு அரசு (1) தமீமுல் அன்சாரி (1) தயபுள்ளயளுவோ (1) தரகர் தெரு (1) தரமற்ற தாரகை விருப்பம் (1) தரமிழந்து வருகிறதா (1) தரவிரக்கம் (1) தராவிஹ் தொழுகை (1) தரைமட்டம் (1) தர்ஜுமா (1) தர்பியா மையம் (1) தர்பிய்யா (1) தர்மம் (1) தர்ஹா (1) தற்கொலை தீர்வாகுமா (1) தலை (1) தலைசிறந்த சமுதாயம் (1) தலைமை உருவாக்கம் (1) தலைமைத் தேர்வு (1) தலைமைத்துவம் (1) தலைவரின் தகுதிகள் (1) தலைவர் யார்? (1) தலைவியாகி (1) தள விளக்கம் (1) தள்ளி வண்டி (1) தழுவல் (1) தவாப் (1) தவிர்த்திடுங்கள் (1) தவிர்ப்போம் (1) தவ்ஃபீக் (1) தவ்ஹீத் (1) தவ்ஹீத்கான் (1) தஸ்தகீர் (1) தஹ்ஸின் நிலோஃபர் (1) தா.பாண்டியன் (1) தாஃவா (1) தாஜூதீன் (1) தாஜ் மஹால் (1) தாஜ்மஹால் (1) தாத்தா (1) தாம்பத்யம் (1) தாயின் அறிவுரை கேட்போம் (1) தாய் பாசம் (1) தாரூத் தவ்ஹீத் (1) தாரை வார்க்கவா? (1) தாலிச்சா (1) தால் (1) தாவஆ பணி (1) தாவா (1) தாஹா சார் (1) தி ஹிந்து தமிழ் (1) திக் திக் (1) திக்ர் (1) திடீர் கல்லறை (1) திட்ட அறிக்கை (1) திப்பு சுலதான் (1) திப்பு சுல்தான் (1) திமிங்கலச் சாவுகள் (1) தியாகிககள் (1) தியாகிகள் (1) திரட்டி (1) திரவியம் (1) திராம்பட்டினம் (1) திரிபு (1) திரு(தொடண்)டர்) (1) திருடன் (1) திருடாதே (1) திருட்டு (1) திருத்தம் (1) திருப்பூர் to அதிரை (1) திருமணங்கள் (1) திருமணத்திற்கு கவுன்சிலிங் (1) திருமறை (1) திரைகடலோடி திரவியம் தேடு (1) திரைகடல் (1) திரையங்குகள் (1) திரையரங்கம் (1) திரையில் சிறை (1) திறந்த மடல் (1) தில்லு முல்லு (1) தீ தீயனைப்பு நிலையம் (1) தீதும் நன்றும் பிறர்தர வாரா (1) தீன் (1) தீன்குல ஹீரோக்களுக்கு (1) தீரன் திப்பு (1) தீரன் திப்பு சுல்தான் (1) தீர்ப்பு (1) தீவிர (1) தீவு (1) துக்ளக் (1) துடிக்கக் கொன்றனர் (1) துணை போகாதீர் (1) துபாய் - அதிரை (1) துரோகம் (1) துர்நாற்றம் (1) துலங்கும் (1) துளி உலகம் (1) துளியளவு (1) தூக்கமற்ற பொழுதுகளில் (1) தூதரகம் (1) தூரோகம் (1) தென் தமிழகம் (1) தெரு சங்கங்கள் (1) தேச பக்தி (1) தேசிய கொடி (1) தேசிய தினம் (1) தேடுகிறேன் (1) தேத்தண்ணி (1) தேனி (1) தேன் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் கருத்துக் கணிப்புகள் (1) தேர்வு அட்டவனை (1) தேர்வு பள்ளித் தேர்வு முடிவுகள் (1) தேர்வு முடிவுகள் (1) தையல் (1) தொட (1) தொடர் சொற்பொழிவு (1) தொடு (1) தொட்டி (1) தொண்டர் (1) தொனா (1) தொலைக் காட்சி (1) தொலைத்தது (1) தொழிலாளி (1) தொழில் நுட்பம் (1) தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம்அ (1) தோழி (1) தோழியர் (1) நகை (1) நக்கப்பா (1) நடிகையாயிருந்து (1) நடை பயிற்சி மேடை (1) நட்சத்திரமாக (1) நட்சத்திரம் (1) நட்புடன் ஜமால் (1) நண்டும் நரியும் (1) நந்தினி (1) நனா (1) நன்கொடை (1) நன்மையே வேண்டி. 4th year (1) நன்றியுரை (1) நன்றே (1) நபி பெருமானார் வரலாறுமுன்னுரை (1) நபி(ஸல்) வரலாறு (1) நபித் தோழர்கள் (1) நபித்தோழர் (1) நபிவழி (1) நமது கல்வி (1) நயவஞ்சத்திற்கு பகிரங்க எச்சரிக்கை (1) நரகம் (1) நலம் (1) நல்ல மனையாள் (1) நல்லது (1) நல்லாருக்கியாம்மா? (1) நல்லிணக்கம் (1) நல்லொழுக்கம் (1) நள்ளிரவு (1) நவீன மவ்லூது (1) நாக்கு (1) நாங்கள் அதிரை நிருபர் (1) நாங்கள்தான் (1) நாடி (1) நாடு (1) நாட்டாமை தீர்ப்பு (1) நானும் ஆஃப்ரிக்காவும் - தொடர்கிறது (1) நான் (1) நான் என்பது (1) நான் மிகச் சிறந்த மனிதன் (1) நான் முஸ்லிமாகிவிட்டேன் (1) நான் ரெடி நீங்க ரெடியா (1) நான்காம் ஆண்டிலும் (1) நான்காவதுத் தமிழ் (1) நான்றி ஆசான்களே (1) நாய்கள் (1) நாற்காலிகள் (1) நாளங்கள் (1) நாளை? (1) நாவு (1) நிகழ்சிகள் (1) நிகழ்வுகள் (1) நிசார் அஹ்மது (1) நிதானமும் (1) நிதி அமைச்சர் (1) நித்தியோன் முன் நான் (1) நினைவலைகள் (1) நினைவிருக்கா (1) நினைவு (1) நிருபர் (1) நிர்வாகம் (1) நிர்வாகிகள் (1) நிர்வாண பாரதம் (1) நிலத்தடி (1) நிலத்தடி நீர் (1) நிழற்பட கருவி (1) நிழலாடும் (1) நிழலின் அருமை (1) நீங்களுமா ஆலிம்ஸா இப்படி செய்தீர்கள் (1) நீங்களும் கிளிக்கலாம் (1) நீடூர் அலி (1) நீதம் (1) நீதித் துறை (1) நீதிமன்றம் (1) நுண்மென் (1) நுனிப்புல் (1) நூதன விளம்பரங்கள் (1) நெஞ்சில் உரமின்றி (1) நெய்னா முஹம்மது (1) நேசம் மாநபி (1) நேரான வழி (1) நேர்கானல் (1) நேறறு (1) நேறு (1) நைஜிரியா (1) நைஜீரியா (1) நொங்கு வண்டி (1) நோக்கம் (1) நோன்பு காலங்கள் (1) நோன்புக் கஞ்சி (1) நோன்புக்கு பிறகு (1) நோம்பு (1) நோம்பு கஞ்சி (1) நோம்பு கஞ்சி அரிசி (1) நோயற்ற வாழ்வு (1) ன் (1) ப.சிதம்பரம் (1) பகல் (1) பகிர்வு (1) பகுருதீன் (1) பகைமை (1) பகையன்று நகை (1) பக்கம் (1) பங்களாதேஷ் (1) பங்கு சந்தை (1) பசி போக்குமா? (1) பசிக்கட்டுகள் (1) பசியாறிட்டு சாப்பிடலாம் (1) பசுமை எங்கே (1) பஜக (1) பஜ்ஜி (1) பஜ்லுர் ரஹ்மான் (1) பஞ்ச் டயலாக் (1) படகு (1) படச் சுருள் (1) படம் சொல்லும் பாடம் (1) படிக்கச் சென்றனர் (1) படித்த (1) படித்தால் மட்டும் போதுமா (1) படை (1) படைத்தவனின் திருக்குர்ஆன் (1) படைத்தவனை நோக்கி (1) படைப்பாளி (1) படைப்பாளிகள் (1) படைப்புகள் (1) பட்ஜெட் 2013 (1) பட்ஜெட் 2013-2014 (1) பட்டதாரி (1) பட்டப்பெயர்கள் (1) பட்டான் (1) பட்டினி (1) பட்டேல் (1) பட்டோலை (1) பணத்தை பிணமாக்கிய மோடி (1) பணம் இங்கே (1) பணம் படுத்தும்பாடு (1) பணி வாழ்வும் பணி ஓய்வும் (1) பணிக்கர் (1) பண்புகள் (1) பதற்றம் (1) பதவி (1) பதவிகள் (1) பதில் (1) பதில் இல்லா கேள்விகள் (1) பதிவது எப்படி (1) பதிவர் உலகம் (1) பதிவிலக்கணம் (1) பதிவேடு (1) பத்தாம் வகுப்பு (1) பத்திரிகை (1) பந்தம் (1) பனி (1) பனிப் பொழிவு (1) பனிப்பொழுது (1) பம்முக்காலே (1) பயங்கரவாதம் (1) பயணிக்கும் பாதை (1) பயிலரங்கம் (1) பரபரப்பு (1) பரமக்குடி (1) பரிசுகள் (1) பரோட்டா (1) பர்ஜ்துபாய் (1) பர்தா (1) பர்மீய முஸ்லீம்கள் (1) பற (1) பறவைகள் (1) பற்றாக்குறை (1) பலம் (1) பல் (1) பல்கிஸ் (1) பல்வலி (1) பள்லிவாசல் நினைவுகள் (1) பள்ளி நினைவுகள் (1) பள்ளி விடுமுறையை எப்படி கழிப்பது (1) பழ மொழி (1) பழ மொழிகள் (1) பழகிய மொழியிலே (1) பழகுமொழி (1) பழைய குருடி கதவைத் திறடி (1) பழைய பேப்பர் (1) பஷீர் ஹாஜியார் (1) பஸ் (1) பஸ்ஸார் (1) பஸ்ஸுப் பயணம் (1) பஹ்ருதீன் அஹ்மது அமீன் (1) பாகிஸ்தான் (1) பாடப் புத்தகம் (1) பாடல் (1) பாட்டி சொன்னது (1) பாட்டி பேரன் உறவு (1) பாட்டு (1) பாபரி மஸ்ஜித் (1) பாரதமணி (1) பார்ட்னர் (1) பார்த்த (1) பார்த்தீனியம் (1) பார்வேர்டு (1) பார்வை (1) பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை (1) பாலைவனம் (1) பால் அருவி (1) பாஸ்வேர்டு (1) பாஸ்வேர்ட் (1) பி (1) பிகார் (1) பிசாசு (1) பிச்சைக்காரர்கள் (1) பிச்சைப் பாத்திரம் (1) பிஜே (1) பிஜேபியை ஆகாதவர்கள் ஆக்கிய பீஹாரிகள் (1) பிடி நழுவிய (1) பித்அத் (1) பித்ரா (1) பினாங்கு சபுறு மாப்புளே (1) பினாங்கு சபுறுமாப்புளே (1) பிரச்சாரம் (1) பிரச்சாரம். (1) பிரயாண வழியில் (1) பிரான்ஸ் (1) பிரி (1) பிரிட்டன் (1) பிரிவு (1) பிரெஞ்சு (1) பிரைல் எழுத்து (1) பிர்ண்டர்ஸ் (1) பிறகு (1) பிறப்பு (1) பிறர் சிரிக்க (1) பிற்பகலும் (1) பிலால் (1) பிலால் (ரழி) (1) பிலால் நகர் (1) பில்கிஸ் (1) பிள்ளைகள் (1) பிழையறப் பிழை (1) பீகார் (1) பீச் (1) பீர் முஹம்மது (1) புகாரி இமாம் (1) புகை (1) புகை வண்டி (1) புகைபப்டம் (1) புகைப்பிடித்தல் (1) புதிய தொடக்கம் (1) புதிய நினைவுகள் (1) புதிய நிர்வாகம் (1) புதிய நூல்கள் (1) புதிய பிரவுசர் (1) புதிய வேலை (1) புதியது (1) புதியதோர் உலகைச் செய்யும் (1) புதிய‌தோர் ஊர் (1) புதுமைப் பெண் (1) புத்தக காட்சி (1) புத்தக வெளியிடு (1) புனித மாதம் (1) புன்சிரிப்பு (1) புராணம் (1) புரிதல் (1) புரை (1) புரோகிதம் (1) புற்றுநோய் (1) புலவர் பஷீர் அஹ்மது (1) புவியீர்ப்பு (1) பூ (1) பூக்கள் (1) பூங்கா (1) பூஜை (1) பூரியான் ஃபாத்திஹா (1) பெங்களூரு (1) பெட்டகம் (1) பெட்ரோல் (1) பெண் இமைக்குள் ஆண்மை (1) பெண் உரிமை (1) பெண்களின் கருத்தென்ன (1) பெண்களுள் பேரறிஞர் (1) பெண்கள்ம் மார்கெட் (1) பெண்சுதந்திரம் (1) பெண்டிரும் (1) பெண்ணாய் பிறப்பதைப் போல்போ ரின்பம் வேறில்லை (1) பெண்ணினம் (1) பெண்ணியம் (1) பெண்மக்கள் (1) பெயரிலித் தோழர் (1) பெயர் கூறுமா..? (1) பெரிய கடிகாரம் (1) பெரியர்வர்கள் (1) பெரியார் (1) பெரியார்தாசன் (1) பெருநாள் ஒளி (1) பெருநாள் தக்பீர் (1) பெருநாள் தொழுகை (1) பெருநாள் வாழ்த்து (1) பெருபான்மை (1) பெருமை (1) பெருமை தீது (1) பெர்னாட்ஷா (1) பேகம் ஹஜரத் மஹல் (1) பேக்கரி (1) பேங்க் (1) பேச்சும் (1) பேச்சுலர் (1) பேப்பர் வேர்ல்டு (1) பேரண்டம் (1) பேரன்பு (1) பேராசிரியர் (1) பேராசிரியர் M H J அவர்களுக்கு (1) பேராவூரணி பலாப்பழம் (1) பேரிடம் (1) பேரிடர் (1) பேருராட்சித் தலைவர் (1) பேரூராட்சி தலைவர் (1) பேரூராட்சி மன்றத் தலைவர் (1) பொக்கிஷம் (1) பொடிசுகளின் த்லை நோன்பு (1) பொது அறிவு (1) பொது சிவில் (1) பொதுக்குழு (1) பொதுமக்கள் (1) பொதுவானவை (1) பொய் வழக்கு (1) பொய் வழக்குகள் (1) பொரிச்ச மீன் (1) பொருட்காட்சி (1) பொறாமை (1) பொறியியல் (1) பொற்காலம் 1977 (1) பொழுதுகள். (1) போக்கு (1) போடாதே தப்பு கணக்கு (1) போட்டி வலைப்பூ (1) போட்டிகள் (1) போதனை (1) போனஸ் (1) போராட்டும் (1) போற்றுவோம் (1) போலி (1) போலி ஆலிம் (1) போலி சான்றிதழ் (1) போலிகள் ஜாக்கிரதை (1) போலிகள் பயிரை மேயும் வேலிகள் (1) போலித் தொப்பிகள் (1) போலீஸ் (1) ப்ராப்ளம் (1) ப்ளஸ் 2 தேர்வு முடிவ்கள (1) ப்ளாக் ஹோல் (1) ப்ளாஸ்டிக் பை (1) ப்ளீஸ் (1) மகத்துவ மருதாணி (1) மகளிருக்கு மட்டும் (1) மகளெனப்படுவள் (1) மகுடம் (1) மக்கட்பேறில்லா மக்கட்கு (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள்தொகையா (1) மக்கா நேரலை (1) மக்தப் மதர்சா (1) மச்சான் (1) மச்சான்ஸ் (1) மடமையிலிருந்து விடுதலை பெறுவோம் (1) மணல் மேடு (1) மண் வாசனை (1) மண்சட்டி (1) மண்டல் கமிஷன் (1) மண்ணறை வாழ்க்கை (1) மண்ணின் மைந்தர்கள் (1) மண்வட்டு (1) மண்வாசனை (1) மதம் (1) மதராஸ் (1) மதவாதம் (1) மதியம் (1) மதீனா நேரலை (1) மதுக்கூர் (1) மதுப் பழக்கம் (1) மதுரை (1) மத்திய அரசு (1) மத்திய கிழக்கு (1) மத்ஹபு (1) மந்திரச் சொல் (1) மந்திரவாதி (1) மனப்பாடம் (1) மனமே தொட்டாசினுங்கிதானே. ஜாகிர் ஹுசைன் (1) மனம் திறந்து (1) மனம் மகிழுங்கள் (1) மனிக்பான் (1) மனித நேயம் (1) மனிதமும் (1) மனிதவளமா (1) மனிதவளமும் மண்ணின் மைந்தர்களும் (1) மனிதா திருடாதே (1) மனு நீதி மனித குலத்திற்கு நீதியா (1) மனுநீதி (1) மனோரா (1) மன்னித்தருள்வாய் இறைவா (1) மமக (1) மரண சிந்தனை (1) மரண தண்டனை (1) மரத்தடி (1) மரபணுக்கள் (1) மரபுகள் (1) மரமும் (1) மரம் வளர்ப்பது ஒரு அறம் (1) மருதாணி (1) மருத்துவ (1) மருத்துவ காப்பீடு (1) மருத்துவ முகாம் (1) மருத்துவக் கல்லூரி (1) மருத்துவமனை (1) மருத்துவர் ஜானகிராமன் (1) மருவண்டி (1) மர்பு கவிதை (1) மறக்க முடியவில்லை (1) மறக்க முடியா மனிதர் (1) மறக்க முடியாத மருத்துவர்கள் (1) மறுப்பு (1) மறுப்பும் (1) மறைந்த (1) மறைந்து வரும் மண்பாண்டப் பாத்திரங்கள் (1) மறைந்து வரும் வளர்ப்பு பிராணிகள் (1) மறைவான அழகே நிறைவானது (1) மலரும் நினைவு மொட்டுக்கள் (1) மலரும் நினைவுகள் (1) மலர்கள் (1) மலாலா (1) மலைமகன் (1) மலையேற்றம் (1) மல்லிபட்ணம் சாலமீது (1) மழலை (1) மழலைகள் (1) மழை இஸ்லாமியப் பெண்கள் (1) மழை வந்தாச்சு (1) மழைக்கு பயந்த மின்சாரம் (1) மவ்லாய (1) மவ்லீது (1) மவ்லூது (1) மவ்லூதுக்கு மகுடமா ? (1) மஸ்ஜிதுகள் (1) மஸ்ஜிதுல் ஹாரமில் (1) மஹ்பூப் அலி (1) மா (1) மாங்காய் (1) மாசு (1) மாடிவீடு (1) மாணவ (1) மாணவப் பருவம் (1) மாணவமணிகள் (1) மாணவராக வாழ்ந்த ஆசிரியர் (1) மாணவர்கள் போரட்டம் (1) மாணவி (1) மாண்பு (1) மாண்புமிகு மந்திருக்கு (1) மாத்தியோசி (1) மாநகர் (1) மாநிலங்கள் (1) மானம் ஒன்றே உயர் ஆயுதமாய் (1) மானிடா... மாடு வருகிறார் (1) மாப்பிள்ளை (1) மாப்பிள்ளைக் கடத்தல் (1) மாமன்னர் (1) மாமரன் (1) மாமழை (1) மாம்பழம் (1) மாயன் இன்னும் சாகவில்லை (1) மார்கெட் (1) மார்க்க அறிஞர்கள் (1) மார்க்க வரம்புக்கு உட்பட்டு (1) மார்க்க விரோதத்துக்கு துணை போகாதீர் (1) மார்க்க விரோதம் (1) மார்க்க(மான) விவாதம் (1) மாறுகண் (1) மாற்று திறனாளி (1) மாலைப் பொழுது (1) மாவு (1) மிக்க மேலானவன் (1) மிதிரிக்கட்டை நினைவிருக்கா? (1) மினா (1) மின் கம்பம் (1) மின் தடை (1) மின்அஞ்சல் குழுமம் (1) மின்சார வாரியம் (1) மின்னல் (1) மின்வாரியம் (1) மின்வெட்டு (1) மியாசி (1) மிருகங்களாகும் மனிதம் (1) மில்லினியர் (1) மிள்பதிவு (1) மீட்பு (1) மீரான் சாஹிப் (1) மீராஷாஹிப் UPSC (1) மீளுதல் (1) மு.செ.மு.சபீர் அஹமது (1) மு.செ.மு.முஹம்மது ஹனீஃபா (1) முஃஆத் (1) முஃப்தி அப்துல் கையூம் (1) முஅத்தின் (1) முஆத் (1) முகத்திரையும் (1) முகப்புத்தகம் (1) முகமது செயினுத்தீன் - திருவிதாங்கோடு (1) முகமூடிகள் (1) முகம்து அலி (1) முகம்மது புஹாரி (1) முகவரிகள் (1) முகாம் (1) முக்காடும் (1) முக்கிய சுட்டிகள் (1) முக்கோணங்கள் (1) முடி (1) முட்டையும் (1) முதற் குழந்தை (1) முதலாம் ஆண்டு (1) முதலீடுகள் (1) முதல் பட்டதாரி (1) முதல் பயணம் (1) முதல் பிறை (1) முதல் மதிப்பெண் (1) முதல் மிடறு (1) முதல் வகுப்பு (1) முதல்வர்கள் (1) முதியோர் (1) முதிர் கன்னி (1) முதிர் நிலா (1) முத்தலாக்கின் மூடுபொருள் (1) முத்து (1) முந்திய சுன்னத் (1) முந்துங்கள் (1) முனாகீனா (1) முனைவர் (1) முன் மாதிரி (1) முன்னேற்றப் பாதை (1) முன்னேற்றம் (1) முன்பதிவு (1) முன்மாதிரி வடிவங்கள் (1) முபாரக் (1) முயலாமை (1) முயலும் (1) முயல் (1) முராத் (1) முற்பகலும் (1) முற்பகல் (1) முல்லைப் பெரியார் (1) முல்லைப் பெரியாறு (1) முள் (1) முள்மகுடம் (1) முழக்கம் (1) முஸ்லி (1) முஸ்லிம்கள் பாகிஸ்தானையும் சவுதியையும் கொண்டாடுவது ஏன் (1) முஸ்லீம் பதிவர்கள் (1) முஸ்லீம் மக்கள் தொகை (1) முஸ்லீம் லீக் (1) முஹம்மது (1) முஹம்மது அபுபக்கர் (1) முஹம்மது அலியார் சார் (1) முஹம்மது ரஃபீக் (1) முஹல்லா (1) முஹல்லா சங்கங்கள் (1) மூன்றாமிடம் (1) மூன்றாம் ஆண்டு (1) மூன்றாம் உலகப்போர் (1) மூர்த்தி (1) மூலதனம் (1) மூவண்ணக் கொடி (1) மெடிக்கல் (1) மெட்ரிக் பள்ளிகள் (1) மெட்ரோ (1) மெய்யெழுத்துகள் (1) மெர்சினா (1) மெளன ஓலம்! (1) மெளலவி அப்துல் பாசித் புஹாரி (1) மெளலித் (1) மெஷின் (1) மேட்டூர் (1) மேலாளர் (1) மேலைநாடுகள் (1) மைக் டைசன் (1) மைக்ரோ (1) மைதா (1) மையல் (1) மையவாடி (1) மைல்கல் (1) மொழிப்பெயர்ப்பு (1) மொழியால் விழிபேசுகிறது (1) மோகம் (1) மோசடி (1) மோடியின் முதுகில் ஏறும் தோல்வி மூட்டைகள் (1) மோதினார் (1) மோமியாக்கா (1) யாசகம் (1) யாசீன் சுஃபியான் (1) யார் அங்கே ? எங்கே போனார்கள் (1) யார் திவிரவாதி (1) யார் வசம்.. (1) யுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர் (1) யூசுபும் மொம்மாலியாக்காவும் (1) யூசுப் எஸ்டஸ் (1) யூசுப் ரியாஸ் (1) யூனுஸ் (1) யோகம் (1) யோசனை (1) யோசனைகள் (1) யோசி (1) யோசிக்கிறார் (1) ரஃபீக் சுலைமான் (1) ரகசியங்கள் (1) ரசாயன (1) ரஜினி (1) ரமளான் காணொளி (1) ரயிலடி (1) ரயில் (1) ரஷ்யா (1) ரஸூல் (1) ராக்கெட் (1) ராஜா வீட்டு விருந்தும் கறி (1) ராடார் (1) ராணி (1) ராஷித் அலி (1) ரிட்டர்ன் டிக்கெட் (1) ரியர் எஸ்டேட் (1) ரிஸல்ட் (1) ரிஸான நபீக் (1) ருசிக்க மான்பு (1) ரூபாய் (1) ரெடிமேட் (1) ரெட்டைக் கிளவி (1) ரேவடி (1) ரேஷன் கார்டு (1) ரொட்டி (1) ரோடு (1) ரோமாபுரியின் ரோஜா மலர் (1) ரோஷம் (1) லகும் தீனுக்கும் வலியதீன் (1) லகூன் (1) லக்கேஜும் நானும் (1) லஞ்சத்தை ஒழிக்க முடியாதா (1) லட்சம் (1) லண்டடன் (1) லண்டனில் கந்தூரி (1) லலுபிரசாத் (1) லாயிலாஹ (1) லேசர் (1) லைஃப் டைம் - Talk (1) லைசன்ஸ் (1) லைப்ரரி (1) வகிடும் (1) வக்ஃபு வாரியம் (1) வக்ப் வாரியம் (1) வசதி (1) வட இந்திய (1) வடியுது (1) வடிவும் (1) வட்டாட்சியர் முடிவு (1) வட்டார வழக்கு மொழி (1) வட்டியில்லா வங்கிச் சேவையை நோக்கி (1) வட்டிலப்பம் (1) வணங்குவோம் (1) வண்கொடுமை (1) வண்டூருது (1) வண்ணப்படம் (1) வண்ணம் (1) வதந்தியைப் பரப்பாதீர் (1) வன்மம் (1) வன்முறை (1) வன்மையாக கண்டிக்கிறோம் (1) வப்பா (1) வயசு (1) வயது (1) வயர்லெஸ் (1) வயலும் வாழ்வும் (1) வரம்பு (1) வரவுக்கும் செலவுக்கும் (1) வரிவரியாய் (1) வருகம் (1) வருமுன் (1) வருமுன் காப்போம் (1) வரும் முன் காப்போம் (1) வர்த்தக (1) வறட்டி (1) வலக்கரம் (1) வலி வழிச் செய்திகள் (1) வலைஞர்கள் (1) வலைத்தளங்கள் (1) வளம் (1) வளர்க (1) வளர்கிறாய் மகனே (1) வளர்ச்சிப்பாதையில் மோடி அரசு (1) வளைகுட (1) வளைகுடா பாதிப்பு (1) வளைகுடா வெயில் (1) வள்ளுவ (1) வழக்கம் (1) வழக்காடல் (1) வழக்கு (1) வழக்குக் கூண்டில் வறுமைக் கோடு (1) வழிகாட்டி (1) வழிகேடு (1) வழிமுறை (1) வஸ்வாஸ் (1) வா (1) வாகனங்கள் (1) வாகிங்க் (1) வாக்காளப் பெருமக்களே (1) வாக்கி (1) வாசனை (1) வாதம் (1) வாதி (1) வாப்பா பாட்டு (1) வாப்பிச்சா (1) வாயோதிக வலிகள் (1) வாய் (1) வாய் துர்நாற்றம் (1) வாரப் பத்திரிகை (1) வாழப் பழகுங்கள் (1) வாழவேண்டும் (1) வாழ்க சனநாயகம் (1) வாழ்கையின் வலக்கரம் (1) வாழ்க்கைத் தரம் (1) வாழ்க்கையின் பதிவேடுகள் (1) வாழ்ந்திடாதே (1) வாழ்வதற்கா? (1) வாழ்வு (1) வாழ்வு சிதைந்தது! வளம் குறைந்தது (1) வாஸ்கோடகாமா (1) விகடன் (1) விசா (1) விசாலம் (1) விசிட் (1) விடியலை நோக்கி (1) விடிவு (1) விடுமுறைக் காலம் (1) விடைபெறு (1) விண் கல் வீண் பயமா (1) விண்ணுலிருந்து மின்சாரம் (1) விண்வெளி (1) விதவை (1) விதி எண் 110 (1) விதி மீறல் (1) வித்தியாசமான வணிகர் (1) வித்தியாசமானவர்கள்.-பகுதி 3 (1) வித்யா (1) வினிகர் (1) வினோதினி (1) விபரீதம் (1) வியக்க வைக்கும் பயணக் கண்டுபிடிப்புக்கள் (1) வியாதி (1) வியாபாரம் (1) வியாபாரி (1) விரக்தி (1) விருட்சம் (1) விருது (1) விரைவு (1) விரோதம் (1) விலகல் (1) விலங்கினம் (1) விலாசம் (1) விலை (1) விளக்கு (1) விளைநிலங்கள் (1) விழலுக்கு வீணாகும் சிந்தனைகள் (1) விழா (1) விழி மொழி (1) விழிப்புணர்வு பக்கங்கள் (1) விழுஞாயிறு (1) விஷ வாயு (1) விஷுவல் (1) விஸ்வரூபம் (1) வீச்சு (1) வீடு கட்டுபவர்களின் கவனத்திற்கு (1) வீட்டுக்கு ஓர் ஆசான் (1) வீட்டுப் பாடம் (1) வீண் விரயம் செய்யாதீர்கள் (1) வீரர் (1) வீழ்வது (1) வெறியாட்டம் (1) வெற்றிலை (1) வெலக்காத் தெரு (1) வெல்லெஜொ (1) வெளியூர் (1) வெளியூர்காரர் (1) வெளியே (1) வெள்ளம் (1) வெள்ளிக்கிழமை (1) வெள்ளெழுத்து (1) வேங்கை (1) வேட்டு (1) வேட்பாளர்களின் நேர்காணல். நேர்காணல் (1) வேண்டாம் (1) வேண்டாம் கொண்டாட்டம் (1) வேண்டுதல் (1) வேண்டும் (1) வேதம் (1) வேற்றுமை (1) வேலை தேடுவோர்க்கு (1) வேலை வரைகலை (1) வேவு (1) வேவ்ரைடர் விமானம் (1) வேஷம் (1) வைத்தியன் (1) ஷஃபி (1) ஷபான பாஸிஜ் (1) ஷபே பராஅத் (1) ஷமீம் (1) ஷார்ஜா (1) ஷாஹிபா சபீர் அஹ்மது (1) ஷேக் (1) ஷேக் அப்துல் ரஹ்மான் சுதைஸி (1) ஷேக் உசேன் (1) ஷேக்கனா M.நிஜாம் (1) ஷைத்தான் (1) ஸலவாத் (1) ஸாத் பின் முஆத் (1) ஸூரத்துல் அஃலா (1) ஸூரத்துல் கியாமா (1) ஸூரத்துல் ளுஹா (1) ஸ்டாம்ப் (1) ஸ்டேஷனரி (1) ஸ்டேஷன் (1) ஸ்பீடு (1) ஸ்பெஷல் (1) ஸ்மார்ட் (1) ஹஜ் பெருநாள் (1) ஹஜ் 2012 (1) ஹஜ் கமிட்டி (1) ஹஜ்ஜின் மகத்துவம் (1) ஹஜ்ரத் மொஹானி (1) ஹத்தனா (1) ஹந்தூரி (1) ஹனீபா சார் (1) ஹலோ... ஹலோ... நலமா (1) ஹாபிட் (1) ஹாபிழ் (1) ஹாபிழ் பராஆ (1) ஹார்ட் (1) ஹாலித் (1) ஹிஜாப் (1) ஹிஜாப் S.அலாவுதீன் (1) ஹிஜாப் ஒரு கவசம் (1) ஹூமர் (1) ஹைக்கூ (1) ஹைடெக் காலம் (1)