அல்ஹம்துலில்லாஹ் ! கலிபா ஹஜரத் உமர் அவர்களுடைய ஆட்சி காலத்தில் தனது எல்லைகளை விரிவுபடுத்தி நிலப்பரப்புக்களை வென்றெடுத்த இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் – நிலபரப்புகளை மட்டும் வென்றெடுக்கவில்லை . மாறாக, அந்த மண்ணில் வாழ்ந்த மக்களின் மனங்களையும் இஸ்லாத்தின்பால் ஈர்த்தெடுத்தது. வஞ்சகர்கள், வரலாற்றின் சில பக்கங்களில் உள்நோக்கங்களுடன் குறிப்பிட்டு இருப்பது போல் வாள்முனையில் இஸ்லாம் பரப்பப் படவில்லை. மாறாக, இஸ்லாத்தை ஏற்கனவே ஏற்றுக் கொண்டோரின் வாழ்க்கையின் நன்னெறி முறைகளைப் பார்த்து இதுவே நமக்கு ஏற்ற வழி என்று தாமாக முன்வந்து ஏற்றுக் கொண்டோரே ஏராளம்.

ஆனாலும், ஹஜரத் உமர் (ரலி) அவர்கள் கொலையுண்டு மறைந்த பின்னர் ஏற்பட்ட குழப்பங்களின் தொடர்ச்சியைத் தொடர்ந்து இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் ஒரு புறம் விரிவடைந்தாலும் தனது வலிமையை சிறுகச் சிறுக இழக்கத் தொடங்கியது என்பதையே வரலாற்றின் வரிகள் மெய்ப்படுத்திக் காட்டுகிறன.
ஹஜரத் உமர் (ரலி) அவர்களுக்குப் பிறகு ஆளவந்த ஹஜரத் உதுமான் (ரலி) அவர்களும் குழப்பவாதிகளால் கொலை செய்யப்பட்டு உடலைப் புதைக்கக்கூட இடம்தேடி அலைந்த நிகழ்வுகளாகட்டும் அவர்களுக்குப் பின்னால், நான்காம் கலிபாவாக வந்தமர்ந்த ஹஜரத் அலி (ரலி) அவர்களுடைய ஆட்சிகாலமாகட்டும் இவையாவுமே இஸ்லாமிய ஆட்சியின் வரலாற்றில் ஒற்றுமையின்மையால் ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலைகளையே படம் பிடித்துக் காட்டுகின்றன. அவைகள் இன்றைக்கும் நாமெல்லாம் படித்துணரத்தக்க பாடமாவும் அமைந்திருக்கின்றன.
குடிசைக்கொரு கொடி பிடித்துத்திரியும் இந்த சமுதாயத்தின் இன்றைய இயக்கக் குஞ்சுகள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அவை.
கலிபாக்களின் கட்டளைகள் மீறப்பட்ட வரலாற்று சம்பவங்கள் ஹஜரத் உதுமான் (ரலி) அவர்களின் காலத்திலேயே தொடங்கிவிட்டன. தன்னை நிலைப் படுத்திக் கொள்ள, தனது உத்தரவுகளை நிறைவேற்ற இணையற்ற இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் கலிபா அவர்கள் மற்றவர்களை கெஞ்சும் நிலக்குத் தள்ளப்பட்டதையும் பிறகு அவர்களே கொல்லப்பட்டதையும் நாம் காண்கிறோம்.
ஹஜரத் அலி (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் முஆவியா (ரலி) அவர்களோடு நிகழ்ந்த ஆதிக்கப்போட்டிகள் சாம்ராஜ்ய விரிவு மற்றும் நிர்வாகத்திலும் பல குழப்பங்களை ஏற்படுத்தின என்பதும் மறுக்க முடியாத உண்மைகள். இதனால் பாலஸ்தீனம், சிரியா, எகிப்து, லெபனான், ஜோர்டான் ஆகிய பகுதிகளில் இஸ்லாமிய சாம்ராஜ்யத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தின என்பது வரலாற்றின் பக்கங்களில் வடுக்கள் நிறைந்த அத்தியாயங்களே ஆகும். ஒற்றுமையின்மையும் தலைமைக்குக் கட்டுப்படாத தன்மைகளும் தனி நபர்களுக்கிடையிலான நீயா நானா போட்டிகளும் ஆணவமும் அகம்பாவமும் சந்தேகமும் ஒரு சாம்ராஜ்யத்தை வலுவிழக்கச் செய்யும் என்பதற்கு அன்று நடந்த நிகழ்ச்சிகள் அனைத்துமே உலகம் உள்ளளவும் நாம் உணரவேண்டிய உதாரணங்கள்.
‘ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’ என்று சொல்வார்கள். அதே நேரம் அரேபியாவில் தோன்றிய இஸ்லாத்தின் படிப்படியான பரிணாம வளர்ச்சி ரோம சாம்ராஜ்யத்தையே வென்று- பைசாந்தியர்கள் என்று சொல்லப்பட்டவர்களை எல்லாம் பலமிழக்கச் செய்து- யூத மற்றும் கிருத்தவர்களின் புனித நகராகக் கருதப்பட்ட ஜெருசலத்தை எல்லாம் அவர்களிடமிருந்து கைப்பற்றி அங்கும் அல்லாஹ்வின் பாங்கொலியை ஒலிக்கச் செய்து – அங்கு தனது ஆட்சியை நிறுவும் வகையில் கவர்னர்களை நியமித்து – மனம் மாறிய பல கிருத்தவ யூதர்களை இஸ்லாத்தைத் தழுவச் செய்த செயல்பாடுகளை எல்லாம் கிருத்துவ உலகமும், திருச்சபைகளும், அந்தத் திருச்சபைகளின் பாதிரியார்களும் பொறாமைக் கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். ‘தம்பி எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும்’ என்று கழுகுப் பார்வை பார்த்தவர்களுக்கு இஸ்லாமியத் தலைவர்களுக்கிடையே ஏற்பட்ட பாகுபாடுகள் ‘பேய்க்கு சாம்பிராணி போட்டது போல்' ஆகியது.
இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் வரலாற்றின் சம்பவங்களுக்குள் நாம் நுழையப் போனால் இந்தத்தொடரில் நாம் சொல்ல வந்த செய்திகள் முக்கியத்துவம் இழந்துவிடும். ஆகவே சாம்ராஜ்யத்தின் தலைமைப் போட்டியால் வந்த விளைவுகளின் காரணமாக கி.பி 1086 -ல் துருக்கியர்களின் வசம் ஜெருசலம் கைமாறியது என்பதை மட்டும் குறிப்பிட்டு விட்டு தொடரலாம்.
ஹஜரத் உமர் (ரலி) அவர்களின் சகிப்புத் தன்மையையும் சமாதானத்தையும் சாந்தியையும் அதன்பின் சல்லடை போட்டுத் தேட வேண்டியதாயிற்று. துருக்கியர்கள் ஆண்டபோது சகித்தன்மை துருப்பிடித்துப் போனது. ஜெருசலத்தின் புனித திருத்தலங்களுக்கு உலகெங்கிலுமிருந்து வழிபடச் சென்ற கிருத்துவர்கள் துன்புறுத்தப்பட்டார்கள். கிருத்துவ தேவாலயங்கள் தங்களின் மாண்புகளை இழந்தன. எந்த அளவுக்கென்றால் தேவாலயங்கள் குதிரைகளைக் கட்டி வைக்கும் லாயங்களாக பயன்படுத்தப் பட்டன. இத்தகைய செயல்கள் கிருத்துவர்களின் மத உணர்வையும் மன உணர்வுகளையும் புண்படுத்தின. இதனால் உலகெங்கிலும் உள்ள கிருத்துவர்கள் ஒன்று கூடி உரையாட ஆரம்பித்தனர். ஐரோப்பாவில் இருந்த கிருத்தவர்கள் போர் செய்தாயினும் புனித இடங்களை மீட்டாக வேண்டுமென்று தீர்மானித்தனர். இந்தத் தீர்மானத்துக்கு திருச்சபை , ஐரோப்பிய நாட்டின் ஆட்சியின் தலைவர்கள், மன்னர்கள், மதத்தலைவர்கள் அனைவரும் ஆதரவும் கொடுத்து உறுதியும் மேற்கொண்டனர்.
இந்த இடத்தில், கிருத்துவப் பாதிரியாராக இருந்து போபாண்டவரான அர்பன் (Urban 2) என்பவரை நினைவு கொள்ளாமல் இருக்க இயலாது. புனித பூமியான பாலஸ்தீனத்தை முஸ்லிம்களிடமிருந்து மீட்டெடுக்க வேண்டுமென்று இரும்புத் தூணாக நின்றவர் இவர் ஆவார். தனது உணர்ச்சிகளைத் தூண்டும் பேச்சுக்களால் கிருத்தவர்களை ஆயுதம் தாங்கி சிலுவைப் போர்களில் ஈடுபடவைத்தவர்களில் முக்கியமானவர் அர்பன் ஆவார்.
சாதாரணமாக நாடுகளுக்குள் அல்லது அரசுகளுக்குள் ஒரு போர் மூண்டால் அந்தப் போரைத் தூண்டுபவர்களும் அந்தப் போரை முன் நின்று நடத்துபவர்களும் அந்தந்த நாட்டின் அரசர்களாகவோ, அமைச்சர்களாகவோ, ஆலோசகர்களாவோதான் இருப்பார்கள். ஆனால் சிலுவைப் போரைத் தூண்டியவர்களும் ஆலோசனை கூறி முன் நின்று நடத்தியவர்களும் பாதிரிமார்களே என்பதும் தலைமைதாங்கியவர் போப் ஆண்டவரே என்பதும் சிலுவைப் போரின் வித்தியாசமான வியப்பான அம்சம். அவர்களுள் மேற்குறிப்பிட்டுள்ள போப்பாண்டவராக ஆக்கப்பட்ட அர்பன் முக்கியப் பங்காற்றினார். புனித பூமியாக கருதப்பட்ட பாலஸ்தீனத்தையும் ஜெருசலத்தையும் முஸ்லிம்களிடமிருந்து மீண்டும் கைப்பற்றுவதற்காகப் போர் தொடுக்கும்படி கிறிஸ்தவர்களுக்கு ஆணையிட்டவர் அர்பன் ஆவார். 1088 ஆம் ஆண்டு அவர் போப் ஆண்டவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்திலிருந்தே போர் செய்து புனித இடங்களை மீட்க வேண்டுமென்ற வெறியுடன் மக்களைத் தூண்டினார்.
போப் ஆண்டவர் அர்பன் கிருத்துவ நாடெங்கும் சுற்றி உணர்ச்சியைத் தூண்டும் வகையில் உரையாற்றினார். துருக்கியர்கள் புனித பூமியை ஆக்கிரமித்துக் கொண்டு, புனித இடங்களை மாசுபடுத்துவதாகவும் கிறிஸ்தவ யாத்திரிகர்களுக்குத் தொல்லை கொடுப்பதாகவும் கூறி வன்மையாகக் கண்டித்தார். கிறிஸ்தவ உலகம் முழுவம் ஒரு புனிதப் போரில் ஒருங்கிணைந்து, புனித பூமியைக் கிருத்தவர்களே மீண்டும் கைப்பற்றுவதற்குப் பெரும் புனிதப் போரைத் தொடங்க வேண்டுமென்று வலியுறுத்தினார்.
மேலும் தமது உரையில் மிகவும் சாதுர்யமாக போர் செய்வதன் மூலம் வெற்றிகொண்டால் கிருத்தவ உலகத்துக்கு ஏற்படும் பொதுவான நல நோக்கங்களையும் பொருளாதாரக் காரணங்களையும் எடுத்துரைத்தார். புனித பூமி செல்வச் செழிப்புடையது என்பதையும், மக்கள் நெரிசல் மிகுந்த மற்ற கிறிஸ்துவ ஐரோப்பிய நாடுகளைவிட செல்வ வளம் மிக்கது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். இவை பற்றி பைபிளின் வாசகங்களை வாசித்துக் காட்டினார். இறுதியாக, மக்களின் நம்பிக்கையைத் தூண்டுவதற்காக இறைவன் பெயரைச் சொல்லி ஆன்மீகத்திலும் கை வைத்தார். இந்தப் புனிதப் போரில் பங்கு கொள்வதால் கடவுளின் ஆசிகிட்டுமென்றும், புனிதப் போராளிக்கு அவரது பாவங்கள் அனைத்திலிருந்தும் பாவமன்னிப்பு கிடைக்கும் என்றும் மூளைச்சலவை செய்தார்.
சிலுவைப்போரில் கலந்துகொள்ள தயாராகிவரும் வீரர்களுக்கு போப்பாண்டவர் சில சலுகைகளையும் அறிவித்தார். அவைகளில் முக்கியமானவை இந்தப் போரில் பங்கு பெறும் கிறிஸ்துவர்கள் அனைவரும் திருச்சபையின் நிரந்தரப் பாதுகாப்புக்கு உள்ளாவார்கள். அவர்களது உறவினர், வீடு, நிலம், இதர சொத்துக்கள் அனைத்தையும் திருச்சபையே பாதுகாக்கும். ஒவ்வொரு வீரரின் குடும்பத்துக்கும் தேவையான பண உதவிகளுக்கு திருச்சபையே பொறுப்பேற்கும். அதுவரை அவர்கள் யாரிடம் கடன் வாங்கி இருந்தாலும் அதைத் திருப்பிச் செலுத்த வீரர்களுக்குப் பொறுப்பில்லை. கடனை வசூலிக்க யாரும் வீரர்களின் மீது வழக்குத் தொடரக் கூடாது அதற்குரிய பண உதவிகளை திருச்சபையே செய்யும். வீரர்கள் அரசுக்கு செலுத்தவேண்டிய வரி பாக்கிகளை அரசுகள் தள்ளுபடி செய்துவிட வேண்டும். மேலும் வரிகள் கட்டுவதிலிருந்து அவர்களுக்கு வரிவிலக்கும் அளிக்கப்பட்டது.
சிலுவைப் போர்களின் முக்கிய அம்சமாக வரலாற்று ஆசிரியர்கள் காண்பது என்ன வென்றால் அமைதியை போதிக்க வேண்டிய ஒரு போப்பாண்டவரே அதைத் தூண்டிவிட்டதும் ஆயுதங்களைக் கரங்களில் கொடுத்து ஊக்கப்படுத்தியதும்தான். அடுத்து, இதை போப் ஆண்டவர் தலைமை ஏற்று நடத்தியதால் அனைத்து கிருத்தவ நாடுகளும் இந்தப் போரில் பங்கேற்றன. மாறாக , ஏதாவது ஒரு ஐரோப்பிய நாடு இந்தப் போருக்குத் தலைமை வகித்து இருக்குமானால் இன்னொரு ஐரோப்பிய நாடு இதில் கலந்து கொண்டிருக்காது. உதாரணமாக பிரான்சு தலைமை ஏற்றால் ஜெர்மனி கலந்து கொண்டிருக்காது.
போப்பாண்டவர் அர்பன் ஆற்றிய வெறித்தனமான பேருரைகள் கூடிய கிருத்துவர்கள் மத்தியில் பெரும் உணர்வுக் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவரது உரைகளைக் கேட்ட அவர்கள் , மத உணர்வால் தூண்டப்பட்டுக் குமுறி எழுந்தார்கள். அர்பன் தமது உரையை முடிப்பதற்கு முன்னரே கூட்டத்தினர், "ஆண்டவர் அதை விரும்புகிறார்" என்று முழக்கமிட்டனர். இந்த முழக்கமே சிலுவைப் போர்களின் போர் பிரகடனமாகவும் முழக்கமாகவும் ஆகியது .
இறைவனால் பரிசாக அளிக்கப்பட்டதாக நம்பப்பட்ட புனிதமான பாலஸ்தீனத்தையும் அதன் பெருமைக்குரிய தலைநகரான ஜெருசலத்தையும் முஸ்லிம்களிடமிருந்து மீட்டெடுக்கும் நோக்கத்துடன்தான் சிலுவைப் போர்கள் தொடங்கபப்ட்டன என்று சொல்லப்பட்டாலும் ஆனால் உண்மையில் இந்தப் போர்களின் நோக்கம், விரைவாகப் பரவிக் கொண்டிருந்த இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தி ஐரோப்பாவின் பக்கமும் முழுக்கப் போகவிடாமல் தடுப்பதுதான். கிருத்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஜென்மங்களுக்கும் பகை இருக்கும் அளவுக்கு ஒரு நிரந்தர இரும்புத்திரையை எற்படுத்திவிடவேண்டுமென்பதும் சிலுவைப்போர்களின் நோக்கம். அதுமட்டுமல்லாமல் இஸ்லாத்துக்கு எதிராக முழு கிருத்தவ உலகையும் திரட்டுவதும் அதன் நோக்கங்களில் மற்றொன்றாகும். அதனால்தான் திருச்சபைகளும் பாதிரியார்களும் இவற்றின் திட்டங்களில் பங்கேற்றனர்.
கி பி. 1096 முதல் 1270 வரை மொத்தம் எட்டு சிலுவைப் போர்கள் நடைபெற்றன. இந்தப் போர்களில் பங்கேற்கச் சென்ற கிருத்துவ வீரர்கள் செந்நிறத் துணியால் செய்யப்பட்ட சிலுவையின் அடையாளங்களை சின்னமாக அணிந்து போரிட்டதால் இப்போர்கள் சிலுவைப் போர்கள் என்று அழைக்கப்பட்டன.
முதலாவது சிலுவைப் போரில் கிருத்துவப்படை தோல்வியையே சந்தித்தது. ஆனால் கூடுதல் வெறித்தனமான உணர்வுடன் திரண்ட இரண்டாம் படையைச் சேர்ந்த வீரர்கள் வரும் வழியில் நடந்துகொண்ட அநாகரிகமான முறைகளால் உலக சரித்திர ஆசிரியர்களின் வெறுப்பான வார்த்தைகளை சம்பாதித்து கொண்டனர். இந்த சிலுவைப்போர் வீரர்களை, வரலாற்றாசிரியர் கிப்பன் (Gibbon), 'மூடர்கள்’, அநாகரிகமானவர்கள்' என்று வருணிக்கிறார்.
முதலாவது தோல்விக்குப் பின் ஏற்பட்ட இரண்டாம் சிலுவைப் போரில் கோட்டையின் படைத்தலைவனாக இருந்த ஃபிரஸ் (Firuz) என்பவன் கிறிஸ்துவ தளபதிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு துருக்கியில் இருந்த ஆண்டியோக் கோட்டைக் கதவுகளை கடைசி நிமிடத்தில் திறந்துவிட்டு விட்டபடியால், கோட்டை கிறிஸ்துவர்களின் வசமாகிப் போனது. சதியாலும் நிதியாலும்அவர்கள் ஜெருசலத்தை நோக்கி முன்னேற வழி வகுத்தது.
இறுதியாக ஜெருசலம் கிருத்தவர்களால் கைப்பற்றப்பட்டது. இதற்கு இரு வாரங்களுக்குப் பிறகு 1099 ஆம் ஆண்டில் போப்பாண்டவர் அர்பன் காலமானார். இதில் ஒரு வினோதமான செய்தி என்னவென்றால் ஜெருசலத்தின் வெற்றிச் செய்தி அவரை சென்று அடையும் முன்பே அர்பன் அடிக்கடி தனது உரையில் குறிப்பிட்ட அந்த அந்த ஆண்டவர் அவரை அழைத்துக் கொண்டதுதான். ஆனால் போப்பாண்டவர் அர்பன் உயிருடன் இருந்த காலத்தில் உரையாற்றியது போல் அவர் நம்பிய ஆண்டவர் அவரது பாவங்களை மன்னித்தாரா என்று தெரியவில்லை.
காரணம் சிலுவைப் போரின் நடைமுறைகளின்போது அன்பு மார்க்கம் என்று அடையாளமிட்டுக் கொள்ளும் கிருத்தவ மதத்தின் போர் வீரர்களின் அட்டகாசம் இன்று காசாவில் இஸ்ரேல் அரங்கேற்றும் அட்டூழியங்களுக்கு சற்றும் சளைத்ததல்ல.
கோட்டைக்குள் இருந்த பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கிறிஸ்துவர்கள் கண்மண் தெரியாமல் வெட்டி வீழ்த்தினார்கள். வெற்றிக்களிப்புடன் எக்காளமிட்டபடி ஜெருசலேத்தை அடைந்து, எதிர்ப்பட்ட அத்தனை பேரையும் கொன்று வீழ்த்தியபடியே முன்னேறிச் சென்றார்கள். முஸ்லிம்களின் வீடுகள், வர்த்தகத் தலங்கள், வழிபாட்டிடங்கள் , அலுவலகங்கள் ஆகியன சூறையாடப்பட்டன.
ஜெருசலேத்தின் வீதிகள் அனைத்தும் பிணங்களால் நிறைந்திருந்தன. பிணம் தின்னும் கழுகள் பெரும் விருந்துண்ண ஏராளமாக வானில் வட்டமிட்டபடி இருந்தன. அதே கழுகளின் வாரிசுகள்தான் இன்று காசாவிலும் வட்டமிடுகின்றன. எங்கு பார்த்தாலும் அழுகுரல்கள், அவல ஓலங்கள். இடிந்த கட்டடங்களில் தீ வைக்கபட்ட்டதால் பெரும்புகை எழுந்து வானை நிரப்பியது.
சிலுவைப் போர்களில் கிருத்துவ வீரர்கள் நடந்துகொண்ட முறைகள் இன்றளவும் அந்த மதத்தின் மீதான வரலாற்றுக் கரும்புள்ளியாகக் காட்சியளிக்கிறது. வெற்றி கொண்ட பகுதிகளில் இருந்த மாற்று மதத்தவர்களை அவர்கள் காட்டுமிராண்டிகள் போல் வெட்டிச் சாய்த்ததுதான் இன்றளவும் சிலுவைப் போர்களின் முதல் அடையாளமாகச் சொல்லப்பட்டு வருகிறது.
அந்தச் சம்பவத்தின்போது மட்டும் எழுபதாயிரம் ஜெருசலத்துவாசிகள் கிறிஸ்துவர்களால் கொல்லப்பட்டதாக மிஷட் (Nafed Khaled Mishad) என்கிற சரித்திர ஆசிரியர் எழுதுகிறார். யுத்த நெறிமுறைகளை அவர்கள் காற்றில் பறக்க விட்டார்கள் என்பது அனைவரும் கூறும் ஒரு பொதுவான குற்றச்சாட்டு.
மேலே நாம் குறிப்பிட்ட மிஸாட் என்கிற வரலாற்றாசிரியர், “கிருத்தவர்களை சும்மா விட்டால் உலகிலுள்ள அத்தனை முஸ்லிம் மற்றும் யூத மதத்தவர்களையும் கொன்று புதைத்து விட்டு, அவர்களைப் புதைத்த இடங்களிலெல்லாம் தேவாலயங்களை எழுப்பி, கொலைபாதக அடையாளங்களை மறைத்து விடும் வெறியில் இருந்தார்கள்” என்று அந்த வெறித்தனமான செயலை சித்திரிக்கிறார். சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி ஒருவரின் கூற்றை மேற்கோளாகக் கொண்டு எழுதும் மிஸாட், “கொல்லப்பட்டவர்களின் ரத்தம் உமர் மசூதியின் நுழைவு மண்டபத்தில் முழங்கால் அளவு மூழ்கும் ஆழத்தில் நின்றது ” என்றும் குறிப்பிடுகிறார். இவ்வளவு ஒப்பீடாக மற்ற வரலாற்று ஆசிரியர்கள் சொல்லாவிட்டாலும் கிருத்துவ வீரர்களின் அநியாயம் மற்றும் அட்டூழியங்களைப் பற்றிக் கணக்கு வழக்கில்லாத புள்ளிவிவரங்கள் காணக்கிடைக்கின்றன.
முஸ்லிம்களை மட்டுமல்லாமல், கிருத்துவ வீரர்கள் தாங்கள் முன்னேறும் வழியிலெல்லாம் முதலில் யூதர்கள் கண்ணில் படுகிறார்களா என்று அவர்களையும் தேடித்தேடிக் கொன்று குவிக்கத் தொடங்கினார்கள். பல்லாயிரக்கணக்கான யூதர்களை அவர்கள் ஈவிரக்கமின்றிக் கொன்று குவித்ததை சரித்திர நூல்கள் பக்கம் பக்கமாக வருணிக்கின்றன.
இதில் பரிதாபம் என்னவெனில், யூதர்கள் தம்மை முஸ்லிம்கள் தாக்குவார்களோ என்றுதான் அப்போது பயந்துகொண்டிருந்தார்களே தவிர கிறிஸ்துவர்களிடமிருந்து அப்படி ஒரு தாக்குதலை அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை.நடப்பது கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமான யுத்தம்.
இதில் தங்களுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதுதான் அப்போது யூதர்களின் நிலையாக இருந்தது. ஏனெனில், ஜெருசலேம் அவர்களுக்கும் புனித நகரமே என்றாலும் அப்போது அது முஸ்லிம்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.
முஸ்லிம்களை எதிர்த்து, கிறிஸ்துவர்கள் போல போரில் இறங்க யூதர்களிடம் பெரிய படைபலமெல்லாம் அப்போது இல்லை. அவர்கள் சந்தேகமில்லாமல் சிறுபான்மையினர். ஆகவே, எத்தரப்புக்கும் சார்பின்றி நடுநிலைமை காக்கலாம் என்றே யூதர்கள் முடிவு செய்திருந்தார்கள்.
ஆனால் வெறிபிடித்த கிருத்தவர்கள் முஸ்லிம்களையும் யூதர்களையும் கிள்ளுக் கீரையாக நடத்தி பாலஸ்தீனத்தில் அக்கிரம ஆட்சி புரிந்தார்கள். ஐரோப்பிய கிருத்தவ நாடுகள் அனைத்தும் இந்த அக்கிரமங்களுக்கு மதத்தின் தலைமையின் துணையோடு துதிபாடி துணை நின்றன.
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?
ஒரு நூற்றாண்டு இவ்விதம் சென்றது. சலாவுதீன் என்கிற குர்திய இனத்தைச் சேர்ந்த முஸ்லிம் தளபதி கிருத்தவர்களை விரட்டி அடித்து மீண்டும் பாலஸ்தீனத்தைக் கைப்பற்றும் வரை ஒரு நூற்றாண்டு சென்றது. அதன் பின் நடந்தவைகளை அடுத்துக் காணலாம் இன்ஷா அல்லாஹ்.
இபுராஹீம் அன்சாரி