Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வரலாறுகள்! வழக்குகள்! வல்லரசுகள்! வடிக்கப்படும் இரத்தம்!

பாலஸ்தீனம்...

17

அதிரைநிருபர் பதிப்பகம் | August 16, 2014 | , , , , ,

தொடர் பகுதி : நான்கு

அல்ஹம்துலில்லாஹ் ! கலிபா ஹஜரத் உமர் அவர்களுடைய ஆட்சி காலத்தில் தனது எல்லைகளை விரிவுபடுத்தி நிலப்பரப்புக்களை வென்றெடுத்த இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் – நிலபரப்புகளை மட்டும் வென்றெடுக்கவில்லை . மாறாக, அந்த மண்ணில் வாழ்ந்த மக்களின் மனங்களையும் இஸ்லாத்தின்பால் ஈர்த்தெடுத்தது. வஞ்சகர்கள், வரலாற்றின் சில பக்கங்களில் உள்நோக்கங்களுடன் குறிப்பிட்டு இருப்பது போல் வாள்முனையில் இஸ்லாம் பரப்பப் படவில்லை. மாறாக, இஸ்லாத்தை ஏற்கனவே ஏற்றுக் கொண்டோரின் வாழ்க்கையின் நன்னெறி முறைகளைப் பார்த்து இதுவே நமக்கு ஏற்ற வழி என்று தாமாக முன்வந்து ஏற்றுக் கொண்டோரே ஏராளம். 

ஆனாலும், ஹஜரத் உமர் (ரலி) அவர்கள் கொலையுண்டு மறைந்த பின்னர் ஏற்பட்ட குழப்பங்களின் தொடர்ச்சியைத் தொடர்ந்து இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் ஒரு புறம் விரிவடைந்தாலும் தனது வலிமையை சிறுகச் சிறுக இழக்கத் தொடங்கியது என்பதையே வரலாற்றின் வரிகள் மெய்ப்படுத்திக் காட்டுகிறன. 

ஹஜரத் உமர் (ரலி) அவர்களுக்குப் பிறகு ஆளவந்த ஹஜரத் உதுமான் (ரலி) அவர்களும் குழப்பவாதிகளால் கொலை செய்யப்பட்டு உடலைப் புதைக்கக்கூட இடம்தேடி அலைந்த நிகழ்வுகளாகட்டும் அவர்களுக்குப் பின்னால், நான்காம் கலிபாவாக வந்தமர்ந்த ஹஜரத் அலி (ரலி) அவர்களுடைய ஆட்சிகாலமாகட்டும் இவையாவுமே இஸ்லாமிய ஆட்சியின் வரலாற்றில் ஒற்றுமையின்மையால் ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலைகளையே படம் பிடித்துக் காட்டுகின்றன. அவைகள் இன்றைக்கும் நாமெல்லாம் படித்துணரத்தக்க பாடமாவும் அமைந்திருக்கின்றன.

குடிசைக்கொரு கொடி பிடித்துத்திரியும் இந்த சமுதாயத்தின் இன்றைய இயக்கக் குஞ்சுகள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அவை. 

கலிபாக்களின் கட்டளைகள் மீறப்பட்ட வரலாற்று சம்பவங்கள் ஹஜரத் உதுமான் (ரலி) அவர்களின் காலத்திலேயே தொடங்கிவிட்டன. தன்னை நிலைப் படுத்திக் கொள்ள, தனது உத்தரவுகளை நிறைவேற்ற இணையற்ற இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் கலிபா அவர்கள் மற்றவர்களை கெஞ்சும் நிலக்குத் தள்ளப்பட்டதையும் பிறகு அவர்களே கொல்லப்பட்டதையும் நாம் காண்கிறோம். 

ஹஜரத் அலி (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் முஆவியா (ரலி) அவர்களோடு நிகழ்ந்த ஆதிக்கப்போட்டிகள் சாம்ராஜ்ய விரிவு மற்றும் நிர்வாகத்திலும் பல குழப்பங்களை ஏற்படுத்தின என்பதும் மறுக்க முடியாத உண்மைகள். இதனால் பாலஸ்தீனம், சிரியா, எகிப்து, லெபனான், ஜோர்டான் ஆகிய பகுதிகளில் இஸ்லாமிய சாம்ராஜ்யத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தின என்பது வரலாற்றின் பக்கங்களில் வடுக்கள் நிறைந்த அத்தியாயங்களே ஆகும். ஒற்றுமையின்மையும் தலைமைக்குக் கட்டுப்படாத தன்மைகளும் தனி நபர்களுக்கிடையிலான நீயா நானா போட்டிகளும் ஆணவமும் அகம்பாவமும் சந்தேகமும் ஒரு சாம்ராஜ்யத்தை வலுவிழக்கச் செய்யும் என்பதற்கு அன்று நடந்த நிகழ்ச்சிகள் அனைத்துமே உலகம் உள்ளளவும் நாம் உணரவேண்டிய உதாரணங்கள். 

‘ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’ என்று சொல்வார்கள். அதே நேரம் அரேபியாவில் தோன்றிய இஸ்லாத்தின் படிப்படியான பரிணாம வளர்ச்சி ரோம சாம்ராஜ்யத்தையே வென்று- பைசாந்தியர்கள் என்று சொல்லப்பட்டவர்களை எல்லாம் பலமிழக்கச் செய்து- யூத மற்றும் கிருத்தவர்களின் புனித நகராகக் கருதப்பட்ட ஜெருசலத்தை எல்லாம் அவர்களிடமிருந்து கைப்பற்றி அங்கும் அல்லாஹ்வின் பாங்கொலியை ஒலிக்கச் செய்து – அங்கு தனது ஆட்சியை நிறுவும் வகையில் கவர்னர்களை நியமித்து – மனம் மாறிய பல கிருத்தவ யூதர்களை இஸ்லாத்தைத் தழுவச் செய்த செயல்பாடுகளை எல்லாம் கிருத்துவ உலகமும், திருச்சபைகளும், அந்தத் திருச்சபைகளின் பாதிரியார்களும் பொறாமைக் கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். ‘தம்பி எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும்’ என்று கழுகுப் பார்வை பார்த்தவர்களுக்கு இஸ்லாமியத் தலைவர்களுக்கிடையே ஏற்பட்ட பாகுபாடுகள் ‘பேய்க்கு சாம்பிராணி போட்டது போல்' ஆகியது.

இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் வரலாற்றின் சம்பவங்களுக்குள் நாம் நுழையப் போனால் இந்தத்தொடரில் நாம் சொல்ல வந்த செய்திகள் முக்கியத்துவம் இழந்துவிடும். ஆகவே சாம்ராஜ்யத்தின் தலைமைப் போட்டியால் வந்த விளைவுகளின் காரணமாக கி.பி 1086 -ல் துருக்கியர்களின் வசம் ஜெருசலம் கைமாறியது என்பதை மட்டும் குறிப்பிட்டு விட்டு தொடரலாம். 

ஹஜரத் உமர் (ரலி) அவர்களின் சகிப்புத் தன்மையையும் சமாதானத்தையும் சாந்தியையும் அதன்பின் சல்லடை போட்டுத் தேட வேண்டியதாயிற்று. துருக்கியர்கள் ஆண்டபோது சகித்தன்மை துருப்பிடித்துப் போனது. ஜெருசலத்தின் புனித திருத்தலங்களுக்கு உலகெங்கிலுமிருந்து வழிபடச் சென்ற கிருத்துவர்கள் துன்புறுத்தப்பட்டார்கள். கிருத்துவ தேவாலயங்கள் தங்களின் மாண்புகளை இழந்தன. எந்த அளவுக்கென்றால் தேவாலயங்கள் குதிரைகளைக் கட்டி வைக்கும் லாயங்களாக பயன்படுத்தப் பட்டன. இத்தகைய செயல்கள் கிருத்துவர்களின் மத உணர்வையும் மன உணர்வுகளையும் புண்படுத்தின. இதனால் உலகெங்கிலும் உள்ள கிருத்துவர்கள் ஒன்று கூடி உரையாட ஆரம்பித்தனர். ஐரோப்பாவில் இருந்த கிருத்தவர்கள் போர் செய்தாயினும் புனித இடங்களை மீட்டாக வேண்டுமென்று தீர்மானித்தனர். இந்தத் தீர்மானத்துக்கு திருச்சபை , ஐரோப்பிய நாட்டின் ஆட்சியின் தலைவர்கள், மன்னர்கள், மதத்தலைவர்கள் அனைவரும் ஆதரவும் கொடுத்து உறுதியும் மேற்கொண்டனர். 

இந்த இடத்தில், கிருத்துவப் பாதிரியாராக இருந்து போபாண்டவரான அர்பன் (Urban 2) என்பவரை நினைவு கொள்ளாமல் இருக்க இயலாது. புனித பூமியான பாலஸ்தீனத்தை முஸ்லிம்களிடமிருந்து மீட்டெடுக்க வேண்டுமென்று இரும்புத் தூணாக நின்றவர் இவர் ஆவார். தனது உணர்ச்சிகளைத் தூண்டும் பேச்சுக்களால் கிருத்தவர்களை ஆயுதம் தாங்கி சிலுவைப் போர்களில் ஈடுபடவைத்தவர்களில் முக்கியமானவர் அர்பன் ஆவார்.

சாதாரணமாக நாடுகளுக்குள் அல்லது அரசுகளுக்குள் ஒரு போர் மூண்டால் அந்தப் போரைத் தூண்டுபவர்களும் அந்தப் போரை முன் நின்று நடத்துபவர்களும் அந்தந்த நாட்டின் அரசர்களாகவோ, அமைச்சர்களாகவோ, ஆலோசகர்களாவோதான் இருப்பார்கள். ஆனால் சிலுவைப் போரைத் தூண்டியவர்களும் ஆலோசனை கூறி முன் நின்று நடத்தியவர்களும் பாதிரிமார்களே என்பதும் தலைமைதாங்கியவர் போப் ஆண்டவரே என்பதும் சிலுவைப் போரின் வித்தியாசமான வியப்பான அம்சம். அவர்களுள் மேற்குறிப்பிட்டுள்ள போப்பாண்டவராக ஆக்கப்பட்ட அர்பன் முக்கியப் பங்காற்றினார். புனித பூமியாக கருதப்பட்ட பாலஸ்தீனத்தையும் ஜெருசலத்தையும் முஸ்லிம்களிடமிருந்து மீண்டும் கைப்பற்றுவதற்காகப் போர் தொடுக்கும்படி கிறிஸ்தவர்களுக்கு ஆணையிட்டவர் அர்பன் ஆவார். 1088 ஆம் ஆண்டு அவர் போப் ஆண்டவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்திலிருந்தே போர் செய்து புனித இடங்களை மீட்க வேண்டுமென்ற வெறியுடன் மக்களைத் தூண்டினார். 

போப் ஆண்டவர் அர்பன் கிருத்துவ நாடெங்கும் சுற்றி உணர்ச்சியைத் தூண்டும் வகையில் உரையாற்றினார். துருக்கியர்கள் புனித பூமியை ஆக்கிரமித்துக் கொண்டு, புனித இடங்களை மாசுபடுத்துவதாகவும் கிறிஸ்தவ யாத்திரிகர்களுக்குத் தொல்லை கொடுப்பதாகவும் கூறி வன்மையாகக் கண்டித்தார். கிறிஸ்தவ உலகம் முழுவம் ஒரு புனிதப் போரில் ஒருங்கிணைந்து, புனித பூமியைக் கிருத்தவர்களே மீண்டும் கைப்பற்றுவதற்குப் பெரும் புனிதப் போரைத் தொடங்க வேண்டுமென்று வலியுறுத்தினார். 

மேலும் தமது உரையில் மிகவும் சாதுர்யமாக போர் செய்வதன் மூலம் வெற்றிகொண்டால் கிருத்தவ உலகத்துக்கு ஏற்படும் பொதுவான நல நோக்கங்களையும் பொருளாதாரக் காரணங்களையும் எடுத்துரைத்தார். புனித பூமி செல்வச் செழிப்புடையது என்பதையும், மக்கள் நெரிசல் மிகுந்த மற்ற கிறிஸ்துவ ஐரோப்பிய நாடுகளைவிட செல்வ வளம் மிக்கது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். இவை பற்றி பைபிளின் வாசகங்களை வாசித்துக் காட்டினார். இறுதியாக, மக்களின் நம்பிக்கையைத் தூண்டுவதற்காக இறைவன் பெயரைச் சொல்லி ஆன்மீகத்திலும் கை வைத்தார். இந்தப் புனிதப் போரில் பங்கு கொள்வதால் கடவுளின் ஆசிகிட்டுமென்றும், புனிதப் போராளிக்கு அவரது பாவங்கள் அனைத்திலிருந்தும் பாவமன்னிப்பு கிடைக்கும் என்றும் மூளைச்சலவை செய்தார். 

சிலுவைப்போரில் கலந்துகொள்ள தயாராகிவரும் வீரர்களுக்கு போப்பாண்டவர் சில சலுகைகளையும் அறிவித்தார். அவைகளில் முக்கியமானவை இந்தப் போரில் பங்கு பெறும் கிறிஸ்துவர்கள் அனைவரும் திருச்சபையின் நிரந்தரப் பாதுகாப்புக்கு உள்ளாவார்கள். அவர்களது உறவினர், வீடு, நிலம், இதர சொத்துக்கள் அனைத்தையும் திருச்சபையே பாதுகாக்கும். ஒவ்வொரு வீரரின் குடும்பத்துக்கும் தேவையான பண உதவிகளுக்கு திருச்சபையே பொறுப்பேற்கும். அதுவரை அவர்கள் யாரிடம் கடன் வாங்கி இருந்தாலும் அதைத் திருப்பிச் செலுத்த வீரர்களுக்குப் பொறுப்பில்லை. கடனை வசூலிக்க யாரும் வீரர்களின் மீது வழக்குத் தொடரக் கூடாது அதற்குரிய பண உதவிகளை திருச்சபையே செய்யும். வீரர்கள் அரசுக்கு செலுத்தவேண்டிய வரி பாக்கிகளை அரசுகள் தள்ளுபடி செய்துவிட வேண்டும். மேலும் வரிகள் கட்டுவதிலிருந்து அவர்களுக்கு வரிவிலக்கும் அளிக்கப்பட்டது.

சிலுவைப் போர்களின் முக்கிய அம்சமாக வரலாற்று ஆசிரியர்கள் காண்பது என்ன வென்றால் அமைதியை போதிக்க வேண்டிய ஒரு போப்பாண்டவரே அதைத் தூண்டிவிட்டதும் ஆயுதங்களைக் கரங்களில் கொடுத்து ஊக்கப்படுத்தியதும்தான். அடுத்து, இதை போப் ஆண்டவர் தலைமை ஏற்று நடத்தியதால் அனைத்து கிருத்தவ நாடுகளும் இந்தப் போரில் பங்கேற்றன. மாறாக , ஏதாவது ஒரு ஐரோப்பிய நாடு இந்தப் போருக்குத் தலைமை வகித்து இருக்குமானால் இன்னொரு ஐரோப்பிய நாடு இதில் கலந்து கொண்டிருக்காது. உதாரணமாக பிரான்சு தலைமை ஏற்றால் ஜெர்மனி கலந்து கொண்டிருக்காது. 

போப்பாண்டவர் அர்பன் ஆற்றிய வெறித்தனமான பேருரைகள் கூடிய கிருத்துவர்கள் மத்தியில் பெரும் உணர்வுக் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவரது உரைகளைக் கேட்ட அவர்கள் , மத உணர்வால் தூண்டப்பட்டுக் குமுறி எழுந்தார்கள். அர்பன் தமது உரையை முடிப்பதற்கு முன்னரே கூட்டத்தினர், "ஆண்டவர் அதை விரும்புகிறார்" என்று முழக்கமிட்டனர். இந்த முழக்கமே சிலுவைப் போர்களின் போர் பிரகடனமாகவும் முழக்கமாகவும் ஆகியது . 

இறைவனால் பரிசாக அளிக்கப்பட்டதாக நம்பப்பட்ட புனிதமான பாலஸ்தீனத்தையும் அதன் பெருமைக்குரிய தலைநகரான ஜெருசலத்தையும் முஸ்லிம்களிடமிருந்து மீட்டெடுக்கும் நோக்கத்துடன்தான் சிலுவைப் போர்கள் தொடங்கபப்ட்டன என்று சொல்லப்பட்டாலும் ஆனால் உண்மையில் இந்தப் போர்களின் நோக்கம், விரைவாகப் பரவிக் கொண்டிருந்த இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தி ஐரோப்பாவின் பக்கமும் முழுக்கப் போகவிடாமல் தடுப்பதுதான். கிருத்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஜென்மங்களுக்கும் பகை இருக்கும் அளவுக்கு ஒரு நிரந்தர இரும்புத்திரையை எற்படுத்திவிடவேண்டுமென்பதும் சிலுவைப்போர்களின் நோக்கம். அதுமட்டுமல்லாமல் இஸ்லாத்துக்கு எதிராக முழு கிருத்தவ உலகையும் திரட்டுவதும் அதன் நோக்கங்களில் மற்றொன்றாகும். அதனால்தான் திருச்சபைகளும் பாதிரியார்களும் இவற்றின் திட்டங்களில் பங்கேற்றனர். 

கி பி. 1096 முதல் 1270 வரை மொத்தம் எட்டு சிலுவைப் போர்கள் நடைபெற்றன. இந்தப் போர்களில் பங்கேற்கச் சென்ற கிருத்துவ வீரர்கள் செந்நிறத் துணியால் செய்யப்பட்ட சிலுவையின் அடையாளங்களை சின்னமாக அணிந்து போரிட்டதால் இப்போர்கள் சிலுவைப் போர்கள் என்று அழைக்கப்பட்டன.

முதலாவது சிலுவைப் போரில் கிருத்துவப்படை தோல்வியையே சந்தித்தது. ஆனால் கூடுதல் வெறித்தனமான உணர்வுடன் திரண்ட இரண்டாம் படையைச் சேர்ந்த வீரர்கள் வரும் வழியில் நடந்துகொண்ட அநாகரிகமான முறைகளால் உலக சரித்திர ஆசிரியர்களின் வெறுப்பான வார்த்தைகளை சம்பாதித்து கொண்டனர். இந்த சிலுவைப்போர் வீரர்களை, வரலாற்றாசிரியர் கிப்பன் (Gibbon), 'மூடர்கள்’, அநாகரிகமானவர்கள்' என்று வருணிக்கிறார்.

முதலாவது தோல்விக்குப் பின் ஏற்பட்ட இரண்டாம் சிலுவைப் போரில் கோட்டையின் படைத்தலைவனாக இருந்த ஃபிரஸ் (Firuz) என்பவன் கிறிஸ்துவ தளபதிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு துருக்கியில் இருந்த ஆண்டியோக் கோட்டைக் கதவுகளை கடைசி நிமிடத்தில் திறந்துவிட்டு விட்டபடியால், கோட்டை கிறிஸ்துவர்களின் வசமாகிப் போனது. சதியாலும் நிதியாலும்அவர்கள் ஜெருசலத்தை நோக்கி முன்னேற வழி வகுத்தது. 

இறுதியாக ஜெருசலம் கிருத்தவர்களால் கைப்பற்றப்பட்டது. இதற்கு இரு வாரங்களுக்குப் பிறகு 1099 ஆம் ஆண்டில் போப்பாண்டவர் அர்பன் காலமானார். இதில் ஒரு வினோதமான செய்தி என்னவென்றால் ஜெருசலத்தின் வெற்றிச் செய்தி அவரை சென்று அடையும் முன்பே அர்பன் அடிக்கடி தனது உரையில் குறிப்பிட்ட அந்த அந்த ஆண்டவர் அவரை அழைத்துக் கொண்டதுதான். ஆனால் போப்பாண்டவர் அர்பன் உயிருடன் இருந்த காலத்தில் உரையாற்றியது போல் அவர் நம்பிய ஆண்டவர் அவரது பாவங்களை மன்னித்தாரா என்று தெரியவில்லை. 

காரணம் சிலுவைப் போரின் நடைமுறைகளின்போது அன்பு மார்க்கம் என்று அடையாளமிட்டுக் கொள்ளும் கிருத்தவ மதத்தின் போர் வீரர்களின் அட்டகாசம் இன்று காசாவில் இஸ்ரேல் அரங்கேற்றும் அட்டூழியங்களுக்கு சற்றும் சளைத்ததல்ல. 

கோட்டைக்குள் இருந்த பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கிறிஸ்துவர்கள் கண்மண் தெரியாமல் வெட்டி வீழ்த்தினார்கள். வெற்றிக்களிப்புடன் எக்காளமிட்டபடி ஜெருசலேத்தை அடைந்து, எதிர்ப்பட்ட அத்தனை பேரையும் கொன்று வீழ்த்தியபடியே முன்னேறிச் சென்றார்கள். முஸ்லிம்களின் வீடுகள், வர்த்தகத் தலங்கள், வழிபாட்டிடங்கள் , அலுவலகங்கள் ஆகியன சூறையாடப்பட்டன.

ஜெருசலேத்தின் வீதிகள் அனைத்தும் பிணங்களால் நிறைந்திருந்தன. பிணம் தின்னும் கழுகள் பெரும் விருந்துண்ண ஏராளமாக வானில் வட்டமிட்டபடி இருந்தன. அதே கழுகளின் வாரிசுகள்தான் இன்று காசாவிலும் வட்டமிடுகின்றன. எங்கு பார்த்தாலும் அழுகுரல்கள், அவல ஓலங்கள். இடிந்த கட்டடங்களில் தீ வைக்கபட்ட்டதால் பெரும்புகை எழுந்து வானை நிரப்பியது. 

சிலுவைப் போர்களில் கிருத்துவ வீரர்கள் நடந்துகொண்ட முறைகள் இன்றளவும் அந்த மதத்தின் மீதான வரலாற்றுக் கரும்புள்ளியாகக் காட்சியளிக்கிறது. வெற்றி கொண்ட பகுதிகளில் இருந்த மாற்று மதத்தவர்களை அவர்கள் காட்டுமிராண்டிகள் போல் வெட்டிச் சாய்த்ததுதான் இன்றளவும் சிலுவைப் போர்களின் முதல் அடையாளமாகச் சொல்லப்பட்டு வருகிறது. 

அந்தச் சம்பவத்தின்போது மட்டும் எழுபதாயிரம் ஜெருசலத்துவாசிகள் கிறிஸ்துவர்களால் கொல்லப்பட்டதாக மிஷட் (Nafed Khaled Mishad) என்கிற சரித்திர ஆசிரியர் எழுதுகிறார். யுத்த நெறிமுறைகளை அவர்கள் காற்றில் பறக்க விட்டார்கள் என்பது அனைவரும் கூறும் ஒரு பொதுவான குற்றச்சாட்டு. 

மேலே நாம் குறிப்பிட்ட மிஸாட் என்கிற வரலாற்றாசிரியர், “கிருத்தவர்களை சும்மா விட்டால் உலகிலுள்ள அத்தனை முஸ்லிம் மற்றும் யூத மதத்தவர்களையும் கொன்று புதைத்து விட்டு, அவர்களைப் புதைத்த இடங்களிலெல்லாம் தேவாலயங்களை எழுப்பி, கொலைபாதக அடையாளங்களை மறைத்து விடும் வெறியில் இருந்தார்கள்” என்று அந்த வெறித்தனமான செயலை சித்திரிக்கிறார். சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி ஒருவரின் கூற்றை மேற்கோளாகக் கொண்டு எழுதும் மிஸாட், “கொல்லப்பட்டவர்களின் ரத்தம் உமர் மசூதியின் நுழைவு மண்டபத்தில் முழங்கால் அளவு மூழ்கும் ஆழத்தில் நின்றது ” என்றும் குறிப்பிடுகிறார். இவ்வளவு ஒப்பீடாக மற்ற வரலாற்று ஆசிரியர்கள் சொல்லாவிட்டாலும் கிருத்துவ வீரர்களின் அநியாயம் மற்றும் அட்டூழியங்களைப் பற்றிக் கணக்கு வழக்கில்லாத புள்ளிவிவரங்கள் காணக்கிடைக்கின்றன. 

முஸ்லிம்களை மட்டுமல்லாமல், கிருத்துவ வீரர்கள் தாங்கள் முன்னேறும் வழியிலெல்லாம் முதலில் யூதர்கள் கண்ணில் படுகிறார்களா என்று அவர்களையும் தேடித்தேடிக் கொன்று குவிக்கத் தொடங்கினார்கள். பல்லாயிரக்கணக்கான யூதர்களை அவர்கள் ஈவிரக்கமின்றிக் கொன்று குவித்ததை சரித்திர நூல்கள் பக்கம் பக்கமாக வருணிக்கின்றன.

இதில் பரிதாபம் என்னவெனில், யூதர்கள் தம்மை முஸ்லிம்கள் தாக்குவார்களோ என்றுதான் அப்போது பயந்துகொண்டிருந்தார்களே தவிர கிறிஸ்துவர்களிடமிருந்து அப்படி ஒரு தாக்குதலை அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை.நடப்பது கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமான யுத்தம்.

இதில் தங்களுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதுதான் அப்போது யூதர்களின் நிலையாக இருந்தது. ஏனெனில், ஜெருசலேம் அவர்களுக்கும் புனித நகரமே என்றாலும் அப்போது அது முஸ்லிம்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.

முஸ்லிம்களை எதிர்த்து, கிறிஸ்துவர்கள் போல போரில் இறங்க யூதர்களிடம் பெரிய படைபலமெல்லாம் அப்போது இல்லை. அவர்கள் சந்தேகமில்லாமல் சிறுபான்மையினர். ஆகவே, எத்தரப்புக்கும் சார்பின்றி நடுநிலைமை காக்கலாம் என்றே யூதர்கள் முடிவு செய்திருந்தார்கள். 

ஆனால் வெறிபிடித்த கிருத்தவர்கள் முஸ்லிம்களையும் யூதர்களையும் கிள்ளுக் கீரையாக நடத்தி பாலஸ்தீனத்தில் அக்கிரம ஆட்சி புரிந்தார்கள். ஐரோப்பிய கிருத்தவ நாடுகள் அனைத்தும் இந்த அக்கிரமங்களுக்கு மதத்தின் தலைமையின் துணையோடு துதிபாடி துணை நின்றன. 

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?

ஒரு நூற்றாண்டு இவ்விதம் சென்றது. சலாவுதீன் என்கிற குர்திய இனத்தைச் சேர்ந்த முஸ்லிம் தளபதி கிருத்தவர்களை விரட்டி அடித்து மீண்டும் பாலஸ்தீனத்தைக் கைப்பற்றும் வரை ஒரு நூற்றாண்டு சென்றது. அதன் பின் நடந்தவைகளை அடுத்துக் காணலாம் இன்ஷா அல்லாஹ்.

இபுராஹீம் அன்சாரி

17 Responses So Far:

இப்னு அப்துல் ரஜாக் said...

//ஆனால் போப்பாண்டவர் அர்பன் உயிருடன் இருந்த காலத்தில் உரையாற்றியது போல் அவர் நம்பிய ஆண்டவர் அவரது பாவங்களை மன்னித்தாரா என்று தெரியவில்லை. //
We believe in one God.so there is no need to ask this question.And the pope believed a fake god, Jesus.
The Jesus pbuh is a prophet and slave.
Your comment is unacceptable.

இப்னு அப்துல் ரஜாக் said...

//ஹஜரத் உமர் (ரலி) அவர்களின் சகிப்புத் தன்மையையும் சமாதானத்தையும் சாந்தியையும் அதன்பின் சல்லடை போட்டுத் தேட வேண்டியதாயிற்று. துருக்கியர்கள் ஆண்டபோது சகித்தன்மை துருப்பிடித்துப் போனது. ஜெருசலத்தின் புனித திருத்தலங்களுக்கு உலகெங்கிலுமிருந்து வழிபடச் சென்ற கிருத்துவர்கள் துன்புறுத்தப்பட்டார்கள். கிருத்துவ தேவாலயங்கள் தங்களின் மாண்புகளை இழந்தன. எந்த அளவுக்கென்றால் தேவாலயங்கள் குதிரைகளைக் கட்டி வைக்கும் லாயங்களாக பயன்படுத்தப் பட்டன. இத்தகைய செயல்கள் கிருத்துவர்களின் மத உணர்வையும் மன உணர்வுகளையும் புண்படுத்தின. இதனால் உலகெங்கிலும் உள்ள கிருத்துவர்கள் ஒன்று கூடி உரையாட ஆரம்பித்தனர். ஐரோப்பாவில் இருந்த கிருத்தவர்கள் போர் செய்தாயினும் புனித இடங்களை மீட்டாக வேண்டுமென்று தீர்மானித்தனர். இந்தத் தீர்மானத்துக்கு திருச்சபை , ஐரோப்பிய நாட்டின் ஆட்சியின் தலைவர்கள், மன்னர்கள், மதத்தலைவர்கள் அனைவரும் ஆதரவும் கொடுத்து உறுதியும் மேற்கொண்டனர். //

Where did you take this idea to write against truth. The real history is different.The Muslims were a peacekeepers since our prophet Muhammad sal amongst non believers.unfortunately, after sahabas died,they involved in a fighting between Muslims.But the chiristians took advantage of our divisions.

இப்னு அப்துல் ரஜாக் said...

//குடிசைக்கொரு கொடி பிடித்துத்திரியும் இந்த சமுதாயத்தின் இன்றைய இயக்கக் குஞ்சுகள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அவை. //
100% true

இப்னு அப்துல் ரஜாக் said...

Over all , your article is a superb one. We are expecting more from you.I am very sorry if my words hurt you .
Please forgive.
May Allah accept your work and give jannaththul Firdous

sheikdawoodmohamedfarook said...

//இஸ்லாமியதலைவர்கள்இடையேஉண்டானபாகுபாடுகள்பேய்க்கு சாம்புராணிபோட்டதுபோல்ஆகிறது// போட்டதுஒருஒன்னாநம்பர்சாம்புராணியோ?இன்னும்அந்தசாம்புராணிவாசம்மூக்கைதுளைக்கிறதே!

sheikdawoodmohamedfarook said...

//குடிசைகொருகொடிபிடித்து// அன்றுகோட்டையிலும்கபுர்இஸ்த்தானதிலும்தான்கொடிபறந்தது. இன்றோ குடிசையிலும் கொடிபறப்பது பெருமைதானே! காற்றுள்ளபோதேதூற்றிக்கொள்ளகாவிரியில்நீர்இல்லை.கொடியையாவதுபறக்கபறக்கவிடுவோமே!

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அற்புதமான தொடர். ஆழ்ந்த ஆய்வுகளின் வெளிப்பாடாய் புள்ளி விவரங்கள். புருவங்களை உயர்த்த வைக்கும் புத்தம் புது தகவல்கள்.

மாஷா அல்லாஹ்...

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா.

sabeer.abushahruk said...

//We believe in one God.so there is no need to ask this question//

Dear thambi,

Couldn't you observe the teaser in kaka's statement? It neither question s nor making an opinion, but a technic in writing. In kaka's all articles I never fail to notice this type of teasing on wrong believes, which outlines the sense of humor of the writer.

Further, I appreciate your dedication in reading this article deeply.

sabeer.abushahruk said...

//Where did you take this idea to write against truth//

Again thambi,

Kaka refers historical events of about 900 years ago and you are mixing it up with events of some 1,400 years ago.

I may be wrong. Let kaka clarifies.

sabeer.abushahruk said...

சகோ அரஅல,

இன்று மாலை கடற்கரைச் சாலையில் நடைப்பயிற்சியின்போது என் ப்ள்ளித்தோழன் இபுறாகீமோடு தங்கள் மூத்த சகோவையும் சந்தித்து பேசிக்கொண்டே நடந்தோம். அப்போது தங்களையும் கிரவுனையும் ஹிதாயத்துல்லாவையும் நினைவுகூர்ந்து மகிழ்ந்தோம்.

(அ.இ. காக்கா: பதிவுக்குத் தொடர்பில்லாத என் இந்த பின்னூட்டத்திற்கு மாப்பு)

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...!

தம்பி இப்னு அப்துல் ரஜாக்:

இ.அ.காக்கா அவர்கள் குறுந்தொடர் போன்று ஒரு குறும்பயணத்தில் இருக்கிறார்கள். ஊர் திரும்பியதும் நிச்சயம் தம்முடைய கருத்திற்கு பதிலுரைப்பார்கள் அதுவரை காத்திருக்கவும் இன்ஷா அல்லாஹ் !

Ebrahim Ansari said...

அன்புள்ள தம்பி இப்னு அப்துல் ரஜாக் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

தங்களின் அன்பான கருத்துக்களுக்கு மிக்க மகிழ்வைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதிலுரைக்க தாமதமான காரணம் தம்பி அபூ இப்ராஹீம் அவர்கள் சொல்லி இருக்கிரார்கள.
அதே போல் நான் சொல்ல வேண்டிய பதிலும் தம்பி சபீர் அவர்களால் சொல்லபட்டிருக்கிறது என்றே நினைக்கிறேன்.

இன்னும் உங்களுக்கு கேள்விகள் இருந்தால் நீங்கள் கேட்கலாம் மகிழ்வுடன் எந்த வரலாற்று நூலகளில் இருந்து குறிப்பு எடுக்கப்பட்டவை என்பதை சமர்ப்பிக்க சந்தோஷத்துடன் காத்திருக்கிறேன்.

இப்னு அப்துல் ரஜாக் said...

அன்புக்குரிய சகோ ஷபீர் காக்கா அவர்களுக்கு,அஸ்ஸலாமு அலைக்கும்.தங்களின் மேலான கருத்துக்கும்,அன்புக்கும் மிக்க நன்றி.உங்கள் கருத்தை வரவேற்கிறேன்.

நெறியாளரின் முறையான முன் அறிவிப்புக்கும் நன்றி.(ஒரு இணைய தள அல்லது ஒரு மீடியாவின் சிறந்த பண்பாக உங்கள் பணி இருக்கிறது,ஜஸாக்கல்லாஹ் கைர்.)

இப்னு அப்துல் ரஜாக் said...

//அன்புள்ள தம்பி இப்னு அப்துல் ரஜாக் அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும்.

தங்களின் அன்பான கருத்துக்களுக்கு மிக்க மகிழ்வைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதிலுரைக்க தாமதமான காரணம் தம்பி அபூ இப்ராஹீம் அவர்கள் சொல்லி இருக்கிரார்கள.
அதே போல் நான் சொல்ல வேண்டிய பதிலும் தம்பி சபீர் அவர்களால் சொல்லபட்டிருக்கிறது என்றே நினைக்கிறேன்.

இன்னும் உங்களுக்கு கேள்விகள் இருந்தால் நீங்கள் கேட்கலாம் மகிழ்வுடன் எந்த வரலாற்று நூலகளில் இருந்து குறிப்பு எடுக்கப்பட்டவை என்பதை சமர்ப்பிக்க சந்தோஷத்துடன் காத்திருக்கிறேன். //

காக்கா,நாங்கள் படிக்கும் மாணவர்கள்.நீங்கள் கற்றுத் தரும் ஒரு ஆசிரியர்.உங்களிடம் நிறைய கற்று வருகிறோம்.அதற்கு அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக ஆமீன்.
பெருந்தன்மையான உங்கள் அணுகுமுறை,அவசியம் பிற கட்டுரையாளர்களுக்கும் வேண்டும்,உங்களிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

காக்கா,ஔரங்கசீப் ரஹ் அவர்களைப் பற்றிய வரலாறை ஆங்கில மற்றும் பிராமண வரலாற்று புரட்டர்கள் எப்படியெல்லாம் பொய்யாக புனைந்துள்ளார்கள் என்பதை தாங்கள் அறிவீர்கள்.அதே உண்மையான வரலாறு,முஸ்லிம்களால் எழுதப்பட்டுள்ளது.அந்த வரலாறு சொல்கிறது,அந்த அரசரின் ஒழுக்க,சீரிய,சிறந்த,எளிமை நிறைந்த,நேர்மையான ஆட்சி முறையை.

அதே போன்று,நீங்கள் மேற்கோள் காட்டும் வரலாறு,முஸ்லிம் ஆசிரியர்களால் எழுதப்பட்டிருந்தால் சரியாக இருக்கும்,அதுவல்லாமல்,வெறி பிடித்த கிறிஸ்தவ,யூத புரட்டார்களால் எழுதப் பட்டதை நீங்கள் மேற்கோள் காட்டினால் அது ஒரு தவறான வரலாறாகவே இருக்கும் என்பது என் பணிவான கருத்து.
இந்த உந்துதலே,என் முந்தைய கருத்தின் சாரம்.தவறு இருப்பின் மன்னிக்கவும்.

Ebrahim Ansari said...

அன்புள்ள தம்பி இப்னு அப்துல் ரெஜாக் அவர்களுக்கு, தங்களின் அன்புக்கு மிகவும் கடமைப் பட்டு இருக்கிறோம்.

ஒளரங்க சீப் அவர்கள் பற்றிய உண்மை வரலாற்றை நானும் எடுத்து எழுதி இருக்கிறேன். அந்தத் தகவல்கள் முஸ்லிம் வரலாற்றாசிரியர்கள் மட்டுமே எழுதியதல்ல.

மேலும் பல கிருத்தவ யூதர்கள் முஸ்லிம்களின் பெயரில் ஒளிந்து கொண்டும் எழுதுகிறார்கள் என்பதையும் நீங்களும் நானும் அறிவோம்.

பல்கலைக்கழகங்களில் பொருளாதாரம் , வரலாறு , அறிவியல் ஆகிய நூல்கள் கிருத்தவர்கள் எழுதியதாகத்தான் நாமும் படிக்கிறோம்.
.
ஒன்றுக்கு நாலு பேர் ஒரே மாதிரி எழுதி இருப்பதைத்தான் குறிப்பிட்டிருந்தேன். அதற்காக நீங்கள் சொல்வதில் உண்மை இல்லை என்று நான் வாதாடவில்லை. இட்டுக்கட்டிய வரலாறுகள் இருப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதும் உண்மைதான்.

ஆனாலும் ஒரு பெரும்பான்மை கருத்தை எடுத்தாள வேண்டி இருக்கிறது.

முஸ்லிம்கள் எழுதுவது மட்டும் உண்மை என்றும் எடுத்துக் கொள்ள இயலாது. திருமறை குர் ஆனுக்கு எத்தனை மொழிபெயர்ப்புகள் வெவ்வேறு வகைகளில் முஸ்லிம்கள் தங்களின் கருத்தைத் திணித்து எழுதி இருப்பதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள். ஆகவே கருத்துத் திணிப்பு எங்கும் இருக்கிறது. நாம் இயன்றவரை அல்லாஹ்வுக்கு பயந்து எழுதுவோம்.

நாளை வரும் தொடரின் அடுத்த பகுதியை உங்களின் கேள்விகளுக்கு பதிலாக எழுதி இருக்கிறேன். உங்களைப் பற்றி நான் அறிந்தவன் என்றாலும் உங்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம் போல் மற்றவர்களுக்கும் வரக்கூடாது என்ற நோக்கத்திலேயே ஒரு அத்தியாயத்தை பதிலாக எழுதி இருக்கிறேன்.

தாங்களும் படித்துவிட்டு தங்களின் கருத்தைத் தெரிவிக்கவேண்டுகிறேன்.

உங்களின் கேள்விகள் எங்களை தடம் மாற்றாது ; புடம் போடும். அதற்காக நீங்கள் மன்னிப்பு என்றெல்லாம் எழுதி என்னை / எங்களை சங்கடத்துக்கு ஆளாக்க வேண்டாமென்று அன்புடன் கோருகிறேன்.

நீங்கள் எங்களில் ஒருவர் எங்களிடம் கேட்க உங்களுக்கு எல்லா உரிமைகளும் உள்ளன.

அப்படித்தானே தம்பி அபு இபு?

Ebrahim Ansari said...

பள்ளியில் நாம் கற்கும் பாடங்களிலேயே வரலாறு மட்டும் ஒரு வினோதமான சப்ஜெக்ட்.
நாம் படிக்கும் கணிதம், அறிவியல், கணக்கியல், கணினி அறிவியல், பொருளியல், விலங்கியல், வேதியியல் , தாவர இயல் போன்ற எந்தப் பாடத்திலும் யாருடைய கருத்தையும் திணித்து எழுதினால் அது தவறாகிவிடும்.

உதாரணமாக கணிதப் பாடத்தில் நான்கு சுவர்களின் பரப்பளவு என்பதற்கு ஒரு பார்முலா இருக்கும். அதைப் பாட நூலோ, பாடத்திட்டமோ, பயிற்றுவிப்பவர்களோ மாற்ற இயலாது மாற்றினால் தவறாகிவிடும்.

அதே போல் தண்ணீருக்கு வேதியியல் பெயரை எவரும் மாற்ற இயலாது.

ஆனால் வரலாறு மட்டுமே எடுப்பார் கைப்பிள்ளை. அவரவர் இஷ்டத்துக்கு எழுதலாம்.

நெப்போலியனை சக்கரவர்த்தி என்றும் எழுதலாம் அவரையே இன்னொருவர் சர்வாதிகாரி என்றும் எழுதலாம்.

ஹிட்லரை பாதகன் என்று வர்ணிக்கும் வரலாறுதான் கொடுமைக்காரகளிடமிருந்து காப்பாற்ற வந்த ரட்சகன் என்றும் கூறுகிறது.

நவீன காலத்தில் தானைத்தலைவர்கள் என்று தலையில் தூக்கிவைத்து ஆடப்படுகிறவர்களை ஊழல் பெருச்சாளி என்றும் சொல்லப்படுவதையும் கேட்கிறோமே!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//நீங்கள் எங்களில் ஒருவர் எங்களிடம் கேட்க உங்களுக்கு எல்லா உரிமைகளும் உள்ளன.

அப்படித்தானே தம்பி அபு இபு?//

ஆம் ! காக்கா...

வழிமொழிகிறேன் !

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு