Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நிலத்தடிநீர் வளத்தைப் புதுப்பிக்க மழைநீர் சேகரிப்பு ஒன்றே வழி 6

அதிரைநிருபர் பதிப்பகம் | September 14, 2015 | , , , , ,

அறிவியல் கதிர் - நிலத்தடிநீர் வளத்தைப் புதுப்பிக்க மழைநீர் சேகரிப்பு ஒன்றே வழி - பேராசிரியர் கே. ராஜு

நம் நாட்டில் நகரங்களாக இருந்தாலும் கிராமங்களாக இருந்தாலும் பருவகாலங்களில் அடைமழை, மற்ற காலங்களில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஆகிய இரண்டையும் மாறிமாறி சந்திப்பது வழக்கமாகிவிட்டது. 

நகரங்களில் ஏராளமான அடுக்குமாடி வீடுகள் அடுத்தடுத்து கட்டப்படுகின்றன. இந்த வீடுகளுக்குத் தேவையான தண்ணீரைப் பெற 200 அடி வரையும் அதற்குக் கீழேயும் ஆழத்தில் குழாய்க் கிணறுகள் (bore wells) தோண்டப்படுகின்றன. நிலத்தடி நீர்வளத்தைப் புதுப்பிக்காமல் இந்த குழாய்க் கிணறுகளிலிருந்து எத்தனை நாட்களுக்குத் தண்ணீரைப் பெற முடியும்? மழைநீரைச் சேகரிக்கவில்லையெனில் அது சாக்கடை நீருடன் கலந்து நகரை மேலும் மாசுபடுத்தும் வேலையையே செய்யும். 

தற்போது அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. மழைநீரை வீணாக்காது அதன் ஒவ்வொரு துளியையும் சேமித்துப் பயன்படுத்திட மழைநீர் சேகரிப்பு மையங்களை உருவாக்கி நிலத்தடி நீரை வலுப்படுத்துவது  ஒன்றே இப்பிரச்சனைக்குத் தீர்வாக இருக்க முடியும். 

சென்னை போன்ற மாநகரங்களில் பெருவாரியான மக்களிடையே இது குறித்துப் போதுமான விழிப்புணர்வு இல்லை.  நிபுணர்களிடமிருந்து இது பற்றித் தெரிந்துகொள்ள உதவும் அறிவியல் சுற்றுச்சூழல் மையங்களை (Centre of Science and Environment - CSE)  நாடு முழுதும் உருவாக்க அவற்றின் நிறுவன இயக்குநர் அனில் அகர்வால் திட்டமிட்டார். அதன்படி அமைக்கப்பட்டதுதான் சென்னை மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள மழைநீர் மையம் (Rain Centre Chennai). ஆகாஷ் கங்கா என்ற அமைப்பு இந்த மையத்தை நிறுவி பராமரித்து வருகிறது. 

பொதுமக்கள் இந்த மையத்தை அணுகி தங்கள் வீடுகளுக்கேற்ற மழைநீர் சேகரிப்பு மாடலைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு தக்க ஆலோசனைகளைப் பெற முடியும்.   மொட்டை மாடியில்  விழும் மொத்த மழைநீரும் சென்று அடையும் வகையில் சேகரிப்பு மையத்தை உருவாக்க வேண்டும். இதைத் திறம்படச் செய்தால் கிணறுகளிலும் குழாய்க் கிணறுகளிலும் உள்ள நீரின் தரமும் அளவும் மேம்படும். கைபேசிகளை அவ்வப்போது ரீசார்ஜ் செய்துகொள்வதுபோல், நிலத்தடி நீரை ரீசார்ஜ் செய்துகொள்ள வேண்டும். 

இதற்கு 4லிருந்து 8 மீட்டர் ஆழம் உள்ள குழியை பொருத்தமான விட்டத்தில் தோண்டி அதில் பிவிசி குழாயை முழு ஆழத்திற்கும் வருமாறு பதிக்க வேண்டும்.  ஜல்லிகள், கூழாங்கற்களை இட்டு நிரப்பி அவற்றின் வழியே மழைநீர்  சென்று குழியின் அடிப்பாகத்தை அடையுமாறு செய்ய வேண்டும். 

இது ஒரு சேகரிப்பு மாடல். வீட்டின் அளவைப் பொறுத்து மாடலின் தன்மையும் மாறும். முன்பு சென்னையைச் சுற்றி 3000 ஏரிகள் இருந்திருக்கின்றன. இன்று ஏரிகள் எல்லாம் கட்டடங்களாக மாறி எஞ்சியிருப்பவை மூன்றில் ஒரு பகுதி ஏரிகளே. 

இவற்றைப் பாதுகாப்பது, புதிய நீர்நிலைகளை உருவாக்குவது, மழைநீரைச் சேகரிப்பது போன்ற பன்முக நடவடிக்கைகளின் மூலமே எதிர்காலத்திற்கான தேவைகளைச் சமாளிக்க முடியும். 

மேற்கொண்டு தகவல் வேண்டுவோர் சென்னை மழைநீர் மையத்தின்  இயக்குநர் திரு. சேகர் ராகவனை 96770 43869 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி: முதுவை ஹிதாயத்
www.mudukulathur.com

பரிந்துரை : அதிரை அஹ்மது

6 Responses So Far:

Ebrahim Ansari said...

நிலத்தடி நீர் வளம் இயற்கையாக, இயற்கையாலேயே புதுப்பிக்கப்படும் வளம் ஆகும். நிலத்தடி நீர் படிவங்களில் உள்ள நிலத்தடி நீருடன் மழைநீரை செலுத்தினால் அதை வங்கியில் செலுத்தப்படும் வளரும் மாதச் சேமிப்புக்கு ஒப்பிடலாம்.

மழைக்காலங்களில் பெய்யும் மழையின் ஒரு பகுதி நிலத்தடி நீர் படிவங்களில் சென்று சேகரமாகிறது. அந்தச் சேகரத்திலிருந்து நாம் ஆண்டுதோறும் நிலத்திலிருந்து எடுத்துப் பயன்படுத்தும் நீரின் அளவு ஆண்டுதோறும் மழை கொடுக்கும் நீரின் அளவைவிடக் குறைவாக இருந்தால் சேகரம் வற்றாது. பருவமழை தவறி, வறட்சி ஏற்படும் ஆண்டுகளில் ஓரளவு சேகரிப்பிலிருந்து எடுக்கலாம். அடுத்த ஆண்டு சராசரி மழையைவிட அதிக மழை பெய்தால், இந்தக் குறைவு நிவர்த்தி செய்யப்பட்டுவிடும். ஆனால், தொடர்ந்து சேகரத்திலிருந்து அதிக அளவு நிலத்தடி நீரை எடுத்தால், முதலுக்கே மோசம் வந்துவிடும். இப்படி முதலைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் பொழியும் மழை நீரை வீணாக்காமல் நிலத்தடியில் சேமிக்க வேண்டும்.

மழை நீரை நிலத்தடியில் சேமிக்க வேண்டுமானால் அதற்காக இரண்டுவிதங்களில் செயல்படலாம். ஒன்று மழை நீரை நிலத்தடி நீர்ப் படிகங்களோடு சென்று அடையச் செய்வது. மற்றொன்று அப்படியே உபயோகத்துக்காக சேமித்துவைப்பது. இதற்காக வல்லுனர்கள் சில முறைகளை வழிகாட்டி இருக்கிறார்கள். வீடுகளில் டிஷ் ஆண்டெனா வைக்கிறோம்; சோலார் மின்சாரம் தயாரிக்கும் அமைப்பைப் பொருத்துகிறோம்; பரவலாக குளிர்சாதனம் வந்துவிட்டது; ஏன் சில வீடுகளில் உடற்பயிற்சி சாதனங்கள் கூட வந்துவிட்டன. இந்த சூழ்நிலையில் , மழைநீரைக் கொண்டு நிலத்தடி நீர் வளத்தைப் பெருக்கிக் கொள்ளும் எளிய முறைகளையும் அமைத்து நாம் கையாள்வதும் இன்றைய சூழலில் காலத்தின் கட்டாயமாகும்.

Ebrahim Ansari said...

நடைமுறையில், தற்போது பெருநகரங்களில் வீடுகள், கட்டிடங்கள் நெருக்கமாக கட்டப்படுவதாலும் திறந்தவெளிகளை சிமெண்ட் தளங்கள் அமைத்தும், டைல்ஸ் போட்டு ஒட்டியும் தார் சாலைகள் அமைத்தும் மூடி விடுவதால், பெய்யும் மழை நீரில் 5% அளவிற்கு கூட நிலத்தால் உறிஞ்சப்படுவதில்லை. இந்த சதவிகிதத்தை அதிகரிக்கவே மழை நீர் சேகரிப்புத் திட்டம் கட்டாயமாக்கப்பட வேண்டும். மக்களும் இதன் அவசியத்தை உணரவேண்டும்.

நமது ஊர் போன்ற கடலோர நகரங்களில் நிலத்தினுள் புகும் நீர் அளவு குறைவது ஒருபக்கமும் , மறுபக்கம் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நிலத்தடி நீர் அதிகமாக எடுக்கப்படும் போது, அருகிலுள்ள கடல் நீர், நிலத்தடி நீரோடு கலந்து பயன்படுத்தத் தகுதி இல்லாத அளவுக்கு உப்பு கலந்த நீராக மாறி விடுகிறது. இந்தக் குறைபாட்டை நாம் மழை நீர் சேகரிப்பு முறைகளை அமைப்பதன் மூலம் தவிர்க்கலாம்.

Ebrahim Ansari said...

குறைந்தபட்சம் நாம் பயன்படுத்தும் தண்ணீர் சாக்கடையாக வெளியேறி தெருக்களை அசுத்தபடுத்தாமல் , நமது வீடுகளில் வளர்க்கும் செடி கொடிகளுக்கே சென்றுவிடும்வண்ணம் சில மாற்றங்களை செய்துகொண்டால் கூட ஓரளவுக்குப் பயன் ஏற்படும்.

sheikdawoodmohamedfarook said...
This comment has been removed by the author.
sheikdawoodmohamedfarook said...

சுமார்நூற்று ஐம்பது ஆண்டுகளுக்குமுன் நம்ஊர் பகுதிதுகளில் மழை இல்லையம் .கானலோடிபுனலெனபாய்ந்ததாம்.ஓர்தட்டிலேநெல்லும் ஒர்தட்டிலேபொன்னும்ஒக்கவிக்கும்கார்தட்டியபஞ்சகாலமாம்.அப்பொழுதுகடல்கரைதெருவெட்டிக் குளம்பொறுக்கு வெடித்து கிடந்ததாம். ஆலிம்கள் கூடி யோசனைசெய்தார்கள்.மழைவர மழைபைத்து ஏழுநாள்கள் ஓதுவது என்றுமுடிவுசெய்தார்கள்.இஸாதொழுகைமுடிந்துஒன்பதுமணிக்கு ஆரம்பித்து பதினோருமணிக்கு முடியுமாம். நார்ஸா? வாழைப்பழம். பைத்து ஓதஅட்டேண்டன் ஸ்?.அஞ்சுஆறு பேர்மட்டுமே. ஏழாம்நாள் கூட்டமோ கூட்டம் பெருங்கூட்டம்.வெட்டிகுளத்தில்ஓதியசத்தம் காட்டுக்குளம்வரைஎட்டியது.கூட்டத்திற்குகாரணம்நார்ஸாரொட்டியும் கறியுமே. கடைசிநாள்என்பதால்அரைமணிநேரம்பைத்துநீட்டிக்கப்பட்டது. மணிபதினொனுக்குரொட்டியும்கறியும்தயாராகிகொண்டிருந்தது. அப்பொழுதுவானம்இருண்டது!மேகம்திரண்டது!மின்னல்வெட்டியது! இடிஇடித்தது மழை சோவெனபெய்ததாம் .ஓதவந்தவர்களும் ரொட்டியும் கறியும்உண்னவந்தவர்களும்ஓட்டமோஓட்டமென்றுஓடிவிட்டார்களாம். அந்தமழைபைத்தைநம்மூரின்வற்றியகுளங்களில்நடுவே ஒதினால்என்ன?

sheikdawoodmohamedfarook said...

குளக்காரையோரம்வீடுகட்டுவோற்க்குகுளம்வற்றவற்றசொந்தம்.சிலர் குளத்திலேயே வீடுகட்டிவிட்டார்கள். குளக்கரை யோரம்மனைக்கட்டு வாங்கியோர்புத்திசாளிகள்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு