அலைகடல் அரிமா குஞ்சாலி மரைக்காயரின் வாரிசுகள் - தொடர் - 8 29

அதிரைநிருபர் பதிப்பகம் | November 30, 2013 | , ,


இந்திய மண்ணில் அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்து முதல் கல்லை எடுத்து வீசிய அலைகடல் அரிமா முஹம்மத் குஞ்ஞாலி மரைக்காயர் அவர்களின் மறைவுக்குப் பிறகும் அவர் தொடங்கி வைத்த அரும் பணி ஓய்ந்து விடவில்லை. போர்த்துக்கீசியர்கள் ,  அவர்கள் எவ்வளவுதான் குடம் குடமாமாய் குடித்திருந்தாலும் அவர்களின்  இரவுத்தூக்கம் பறி போனது. அதைப்  பறித்தவர் , வரலாற்றில் இரண்டாம் குஞ்சாலி மரைக்காயர் என்று குறிப்பிடப் படும் இன்னொரு திருமகன் ஆவார்.  கடற்படையை வெற்றிகரமாகக் கையாள்வதிலும் வெற்றி பெறுவதிலும் எதிரிகளை மிரண்டோட வைப்பதிலும் வெற்றிக்  கொடி நாட்டுவதிலும் தன்னிரகற்ற தலைவராகத் திகழ்ந்தவர் இரண்டாம் குஞ்சாலி மரைக்காயர் ஆவார். 

வரலாற்றுக் குறிப்புகளின்படி இரண்டாம் குஞ்ஞாலி மரைக்காயர் முதல் குஞ்ஞாலி மறைக்காயருடைய உறவினராகவோ அல்லது சீடராகவோ அல்லது அவரிடம் பயிற்சிபெற்றவராகவோ இருந்து இருக்கலாம். இவருக்கு சுதந்திர உத்வேகத்தைத் தூண்டிய ஒரு நிகழ்வைத்தான் நாம் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். 

கேரளத்தின் கண்ணனூர் நகரத்தின் முக்கிய வீதியில் தனது கணவனின் இறந்து போன பிணத்துடன் ஒரு முஸ்லிம் பெண் கதறிக் கொண்டிருந்தார். 1564- ல் மெஸ்கிட்டோ என்ற கொடிய போர்ச்சுக்கீசியனால் கடலில் வைத்துக் கொலை செய்யப்பட்டு  கண்ணனூர் கடற்கரையில் ஒதுங்கிய அவளது கணவனின் பிணம்தான் அந்தப் பெண்ணின் கரங்களில் இருந்தது. இப்படி அந்நியரால் முஸ்லிம் ஆண்மக்கள் கொல்லப் படுவதை சகித்துக் கொண்டு கேளாக் காதினராக இருக்கவேண்டுமா என்ற கண்ணீரில் தோய்த்தெடுத்த அந்தப் பெண்ணின் கேள்விதான் இரண்டாம்   குஞ்ஞாலி மரைக்காயரை வேள்விக் களத்தில் இறக்கிவிட்டது. இந்த அநியாயத்துக்குக் காரணமானவர்களை ஒழித்துக் கட்ட வீர சபதம் எடுத்தார். சமர்க்களத்துக்கு சங்க நாதம் ஊதினார்.  

1570 ஆம் ஆண்டு போப்பூர் நதிக்கரையில் அமைந்து இருந்த சாலியன் கோட்டைப்யில்  நடைப்பெற்ற போரை  இரண்டாம் குஞ்ஞாலி மரைக்காயர் தலைமை தாங்கி நடத்தி போரில் வெற்றிக் கனியைப் பறித்தார். மேலும் கண்ணனூர் துறை முகத்துக்குள் புகுந்து அங்கு நின்று கொண்டிருந்த இருபது போர்த்துக் கீசியக் கப்பல்களைக் கடுமையாகத் தாக்கி, அளவிட முடியாத சேதத்தை அவர்களுக்கு விளைவித்தார். இதனை முன்னிட்டு கோவாவில் இருந்து டீ-லிமா என்கிற பரங்கித்தலையனின் தலைமையில் வந்த போர்த்துக்கீசிய கடற்படையையும் எதிர்த்து முறியடித்து ஓடவைத்தார். அதன் பின்னர், டிமேல்லோ என்பவனின் தலைமையில் வந்த மற்றொரு கப்பற்படையையும் எதிர்த்து போரிட்டு வெற்றி பெற்றனர். இந்தப் போரில் டிமேல்லோ படுகாயம் அடைந்தான். படுகாயம் அடைந்தவன் படுக்கக்கவில்லை. மாறாக, தலைமறைவானான். அந்த வெற்றிக் கனியின் ருசி அதன்பின் 65 ஆண்டு காலம் அந்நியரின் கடல் ஆதிக்கத்தை முறியடித்து குஞ்ஞாலி  மரிக்காயரின் முன் மண்டியிட வைத்தது. அத்தனை ஆண்டுகளும் போர்த்துகீசியரின் பேச்சு மூச்சையே காணோம். அதன் பின்னர் பொன்னானியில் தனக்காக ஒரு கோட்டையை இரண்டாம் குஞ்சாலி மரைக்காயர் கட்டினார். ஆனால் தான் கட்டிய கோட்டையில் நீண்ட நாள் வாழ இறைவன் அவருக்கு வாழ்நாளை அளிக்கவில்லை. கோட்டை கட்டி முடிக்கப் பட்ட சில நாட்களிலேயே  இறைவன் தன்பால் அவரை அழைத்துக் கொண்டான். 

இந்த இடத்தில் ஒரு செய்தியை குறிப்பிட விரும்புகிறேன். குஞ்ஞாலி மரைக்காயர் கோட்டை கட்டிய பொன்னானி என்கிற இடம் கேரளத்தில் இன்றைய மஞ்சேரி பாராளுமன்றத் தொகுதியில் இருக்கிறது. இந்தத் தொகுதி இந்திய முஸ்லிம் லீகின் கோட்டையாக இன்றுவரைத் திகழ்கிறது. தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்ட கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப்  அவர்கள் மூன்று முறைகள் தொடர்ந்து கேரளத்தின் இந்தப் பாராளுமன்றத் தொகுதியில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப் பட்டார். இத்தனைக்கும் தேர்தல் பணிகளுக்காக, அவர் ஒரு முறை கூட அந்தத் தொகுதியின் பக்கம் சென்றவரல்ல  என்பது நவீன கால வரலாறு. இந்த வரலாறு இன்று வரைத் தொடரக் காரணம் குஞ்ஞாலி மரைக்காயர் கட்டிய கோட்டையும் அவர் விதைத்து விட்டுச் சென்ற வித்துக்களும்தான் என்பதை மறுக்க இயலாது.    

இரண்டாம் குஞ்ஞாலி மரைக்காயரின் தீரத்தை பாராட்டும் வண்ணம் கொச்சினில் உள்ள கொச்சின் பல்கலைகழகத்தின் அறிவியல் மற்றும் தொழில் கல்விப் பிரிவின் கப்பல் கட்டும் பொறியியல் தொடர்பான பிரிவு இரண்டாம் குஞ்ஞாலி மரைக்காயர் உடைய பெயரில் தொடங்கப்பட்டு திகழ்ந்து வருகிறது. 

Cochin University of Science and Technology in Cochin, Keral has got its new Marine Engneering Department named after Kunjali II as Kunjali Marakkar  School of Marine Engineering.   

மேலும், முதலாம் குஞ்ஞாலி மரைக்காயருக்கு தரத்தவறிய  கவுரவத்தை இரண்டாம் குஞ்ஞாலி மரைக்காயருக்கு வழங்கிய இந்திய கடற்படை, மும்பை கொலாபாவில் உள்ள கடற்படை சார்ந்த பயிலரங்கத்துக்கு அவர் பெயரை சூட்டி இருக்கிறது.  

The India Navy shore- based naval air training centre at Colaba, Mumbai is named Maritime Academy INS Kunjali II in honour of the second Marakkar.   

இரண்டாம் குஞ்ஞாலிப் புயலுக்குப் பிறகு கடலில் உருவான மற்றொரு புயல் சின்னமே  மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயர் ஆவார். கோழிக் கோட்டின் சாமுத்திரி மன்னன் அந்நியரின் கைப் பாவையாய் ஆகி தனது  ஆளுமைக்கு உட்பட்ட கடல் மற்றும் கடற்கரைப் பிரதேசத்தை போர்த்துகீசியருக்கு தாரைவார்த்ததை இந்த நாட்டுக்கு ஏறபட்ட அவமானம் என்ற சுதந்திர உணர்வுடன் சீறினார் மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயர். அதே உணர்வுடன் சாமுத்திரி மன்னன்  தனக்கு அளித்திருந்த கடற்படைத் தளபதி என்கிற பதவியை எட்டி உதைத்துத் தள்ளிவிட்டு வெளியேறினார். இந்த மண்ணை க் காக்கும் சக்தியாக அந்நியரை எதிர்த்துப் போராட முஸ்லிம்களின் சக்தி மட்டும் போதாது அத்துடன்  இந்துக்களின் சக்தியும் தேவை என்று இருமதத்தவரையும் ஒன்றுதிரட்டி  ஒன்றிணைத்து ஒட்டுமொத்த     மக்கள் சக்தியாக சாமுத்திரி மன்னனுக்கும் போர்த்துகீசிய ஆக்கிமிப்பாளருக்கும் எதிராக  உருவெடுக்கவைத்தார். 

1572 ல் போர்த்துக்கீசியரின் கொலைவெறி வன்முறைப் படை, முஸ்லிம்களின் பள்ளிவாசல்களையும் இந்துக்களின் கோயில்களையும் கொள்ளையிட்டு கோழிக் கோடு, திருக்கோடி, கப்பக்காடு, பொன்னானி ஆகிய துறைமுகங்களுக்குப் பெரும் இழப்புகளை ஏற்படுத்தியது. அந்நியரின்  இந்த அழித்தொழிப்பு ஏற்படுத்திய அந்நிய எதிர்ப்புணர்வால் தூண்டப்பட்ட மூன்றாம் குஞ்ஞாலி  மரைக்காயர்  முதன்முதலாக 1586 - ல் அன்னியர் படையை வெற்றி கொண்டார். அதனைத் தொடர்ந்து 1592 –ல் பொன்னானி முதல் கோவாவரை இருந்த கடல் பிரதேசத்தை தனது கைக்குள் அடக்கி அந்தப் பகுதி என்றாலே   மூன்றாம் குஞ்ஞாலி என்று சொல்லும் அளவுக்கு தனது விரல்நுனியின் ஆதிக்கத்தில் வைத்து இருந்தார். அப் பகுதிகளில் அன்னியர் புகவே அஞ்சினர். மீறிப் புகுந்தோர் கதிகலங்க அடிக்கப் பட்டனர்.  

1597- ல் போக்கிடம் இல்லாத போர்த்துக் கீசியருடன் பொல்லாங்கு கொண்ட சாமுத்திரி மன்னனின் மண்ணாங்கட்டிப் படையும் கைகோர்த்துக் கொண்டு மூன்றாம் குஞ்ஞாலி அவர்களின் கோட்டையை முற்றுகை இட்டன.  மூன்று மாதங்கள் இந்த முற்றுகை நீடித்தது. அதுவரை பொறுமையாக இருந்த மூன்றாம் குஞ்ஞாலியின் எதிர்பாராத திடீர் தாக்குதலால் நில குலைந்து போன எதிர்ப் படையினர் தோற்றுப் போய் கொச்சியை நோக்கி ஓடி அங்கு தஞ்சம் புகுந்தனர். சாமுத்திரியின் படையோ கோழிக் கோட்டை நோக்கி போட்டது போட்டாற்போல் புறமுதுகிட்டு ஓடியது. போர்த்துக்கீசியனின் இந்தத் தோல்வி கோவாவில் கொடிபோட்டு ஆண்டுகொண்டிருந்த அவர்களின் கவர்னருக்கு கவுரவப் பிரச்னை ஆகிவிட்டது. ஒரு சிற்றரசுக்குக் கூட சொந்தக்காராக இல்லாத மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயர் தங்களை ஓட ஓட  விரட்டுவதைக் கண்டு ஆத்திரமடைந்த ஆக்கிரமிப்பாளர்களின் கவர்னர் பெரும் தாக்குதலுக்குத் திட்டமிட்டு தனது ஒட்டு மொத்தப் படையின் பெரும்பகுதியை அனுப்பி வைத்தான். 

மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயர், தனக்கும் உதவ ஒத்த கருத்துடைய சில குறுநில மன்னர்களின் உதவிகளை நாடியபோது  உல்லல் ராணியும் மாதுரையை ஆண்டுகொண்டிருந்த நாயக்கரும் முன் வந்தனர். உல்லல் ராணி உணவுப் பொருட்களையும் படைக் கலங்களையும் மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயருக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அவை போர்த்துக்கீசியரால் வழிமறிக்கப் பட்டு வழிப்பறி செய்யப் பட்டன. மதுரை  நாயக்கரின் உதவி வந்து சேருவதில் காலதாமதம் ஏற்பட்டது. 

மீண்டும் ஒரு உக்கிரமான போர் மூண்டது. இருதரப்பிலும் பல உயிர்கள் வெட்டி சாய்க்கப் பட்டன. மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயரின்   கோட்டைக்குள் அன்னியப் படைகள் புகுந்தன.  கோட்டைக்குள் இருந்த பெண்களையும் குழந்தைகளையும் பணயப் பொருளாக  அன்னியர் பிடித்துக் கொண்டதால் வேறு வழி இன்றி போர்த்துக்கீசியனின் அடிவருடியாக மாறிவிட்ட சாமுத்திரி மன்னனுடன் ஒரு சமாதான உடன்படிக்கைக்கு மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயர் சம்மதிக்க வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப் பட்டார். அப்படி ஒரு சமாதானத்துக்கு வந்த மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயரை போர் தர்மத்தை மீறி ,  போர்த்துக் கீசியப் படை சுற்றி வளைத்து கைது செய்து கடற்கரைப் பிரதேசத்தை தனது கைகளுக்குள் வைத்திருந்த அவருடைய வீரத்தின் விளை நிலமான அவரது கைகளில் விலங்கிட்டது. மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயர் உடைய கோட்டை கொத்தளங்கள் இடித்துத் தரை மட்டமாக்கப் பட்டன. பள்ளிவாசல்கள் தீக்கிரையாக்கப் பட்டன. அதற்குப் பின் நடந்த சம்பவங்கள் கண்ணீரால் எழுதப் பட வேண்டியவை. 

மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயர் மற்றும் அவரது முக்கிய சீடர்கள் ஆகியோர் கைகளில் விலங்கு மற்றும் கால்களில் சங்கிலி பூட்டப்  பட்டு யாருக்கும் தெரியாமல் கோவாவுக்கு கொண்டு செல்லப் பட்டனர். தங்களை ஓட  ஓட அடித்த மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயர் மற்றும் அவரது தோழர்கள் பிடிக்கப் பட்டு கோவாவுக்கு கொண்டுவரப் படுவதை அறிந்த வெறி கொண்ட போர்த்துக்கீசியர்கள் பழிவாங்கும் உணர்வோடு கோவா கடற்கரையில் திரண்டனர். கப்பலில் இருந்து கைகளில் விலங்கு பூட்டப்பட்டு  இறக்கப் பட்ட மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயர் உடைய தோழர்கள் நான்கு பேர்களை இரக்கமற்ற பாவிகள் சாகும்வரை கல்லாலேயே அடித்துக் கொன்றனர். முன்பு வாஸ் கோடகாமாகாமாவால் நடுக் கடலில் சிந்தவைக்கப் பட்ட முஸ்லிம்களின் ரத்தம் கோவாவின் கடற்கரையில் மீண்டும் அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்த குற்றத்துக்காக சிந்தப் பட்டது. அப்போது மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயர் மட்டும் கொல்லப் படவில்லை. அதற்குக் காரணம் இருந்தது. 

மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயர் உடைய தலையை மக்கள் மன்றத்தின் நடுவில் கொலைக்  களத்தில் வைத்து துண்டிக்க வேண்டுமென்பதே போர்த்துக் கீசியரின் விருப்பமாக இருந்தது. அதன்படி மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயர் தனிமைச் சிறைக் கொட்டடிக்கு கொண்டு செல்லப் பட்டார். வாஸ்கோடகாமா வந்து இறங்கிய காலம் தொட்டு ஒரு நூற்றாண்டு காலம் அந்நிய சக்தியை தாய்மண்ணில் கால்பதிக்கவிடாமல் எதிர்த்துப் போராடிய வம்சத்தின் வாரிசு மரணத்தைக் கண்டு அஞ்சவில்லை. நாட்டுக் காக ஷஹீத் ஆவதில் மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயருக்கு வருத்தம் ஒன்றுமில்லை. ஆனால் அந்நியரை எதிர்க்க வேண்டிய சாமுத்திரி மன்னன்  அவர்களின் அட்டூழியத்துக்குத் துணை நின்றதே மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயருக்கு வருத்தம் தந்த விஷயமாக இருந்தது.  தன் சாவால் கூட அந்நிய ஆதிக்கம் என்கிற அநியாயத்தை தடுத்து நிறுத்த முடியாத கையறு நிலையே அவரது கவலைக்குக் காரணம். 

தனிமைச்சிறையில் இருந்த மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயரைத் தேடி ஒரு பாதிரியார் வந்ததாக சிறைக் காவலன் செய்தி சொன்னான். யார் என்று எட்டிப் பார்த்தபோது ஒரு வெள்ளை உடை அணிந்த பாதிரியார் நின்று இருந்தார். மூளைச்சலவை செய்ய இவர்கள் உபயோகிக்கும் முதல் வார்த்தை மகனே! என்பதுதான். வீரனும் – வித்தகனும் ஆன  மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயரை மகனே என்று புன்சிரிப்புடன் அழைத்த பாதிரியார் மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயரும் அவரது கூட்டத்தினரும் கிருத்துவ மதத்தை தழுவிக் கொண்டால்  , உயிர்ப் பிச்சை வாங்கித் தருவதாக ஆசைகாட்டினார். மீண்டும் கடற்படைத்தளபதியாக பதவி வாங்கித்தருவதாகவும் ஆசை காட்டினார்.  ஒரு வீரத்தாயால்  இரத்தத்தின் நாடி நரம்புகளில் இஸ்லாமிய ரத்தம் செலுத்தப் பட்ட மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயர் அப்படி ஒரு நிலைக்கு நான் ஆளாகி வாழ்வதை விட போர்த்துக் கீசியரின் கொலைவாள் எனது கழுத்தை முத்தமிடுவதையே நான் விரும்புகிறேன். உடனே அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று பாதிரியாரை முகத்தில் அடித்து திருப்பி அனுப்பினார். வீரன் வீரனாகவே மடிய விரும்புவான் . மாற்றாருக்கு முன் மண்டியிடுவதைக் காட்டிலும் மரணமே மேல் என்று அந்த வீரர் முடிவுசெய்தார். 

அதன்பின் அன்று ஒருநாள் கோவா நகரமே விழாக் கோலம் கொண்டது. இசையும் நாட்டியமும் எங்கும் ஒலித்தன. கவர்னரின்  கண் முன்னே கூடி இருந்த கூட்டத்தின் நடுவே  மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயர் கொண்டுவரப் பட்டு நிறுத்தப் பட்டார். தீட்டிய அரிவாலும் கொலை மேடையும் தயாராக இருந்தன.  கைகால்களில் விலங்கிடப் பட்டு மரண தண்டனை மேடையின் மேல் ஒரு பஞ்சு மெத்தையின் மேல் ஏறுவது போல் வீரமாக நிமிர்ந்து  நின்றார் மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயர்.  அவரது வாய்மட்டும் கலிமாவை உச்சரித்துக் கொண்டு இருந்தது.. தனது தலையை கொலை மேடையின் மீது வைத்தார். அந்நிய ஆதிக்க சக்தியின் அரிவாள் அவரது கழுத்தில் இறங்கியது. அந்நிய ஆட்சியின் கீழ் அடிமைப் பட்ட பாவத்தால் நிரப்பப்பட்ட அந்த கோவாவின் மண்ணில் ஒரு வீரப் பரம்பரையின் உண்மை வீரனின் இரத்தம் சிந்தப் பட்டு இந்திய  மண்ணோடு கலந்தது. 

இன்றைக்கும் சிதிலமடைந்த கண்ணனூர் கோட்டை  மூன்றாம் குஞ்ஞாலி மரைக்காயருடைய வீரத்துக்கு சான்று பகர்ந்துகொண்டு இருக்கிறது. அந்தக் கோட்டையை கடல் அலைகள் அமைதியாக முத்தமிட்டுச் செல்கின்றன.  அவர் அங்கேயே அடக்கம் செய்யப் பட்டார். அவரது  மண்ணறையின் அருகிலேயே அவரது வீரத்தாயின் மண்ணறை இன்றும், இந்திய சுதந்திரத்துக்கு முஸ்லிம்கள் செய்த தியாகத்துக்கு சான்றாகத்திகழ்ந்துகொண்டு இருக்கிறது. கண்ணுள்ளோர் கண்ணனூர் சென்றால் இன்றும் காணலாம். ஆனால் இந்திய நாட்டின் சுதந்திரப் போராட்ட வரலாற்றை எழுதியவர்களுக்கு மட்டும்தான் கண் அவிந்து போய்விட்டது. 

இன்னும் பல சரித்திரங்கள் வர இருக்கின்றன இன்ஷா அல்லாஹ்...!

குறிப்பு:  குஞ்ஞாலி மரைக்காயர்களுடைய இந்த வரலாற்றுப் பதிவை இங்கு வடித்துத் தர  உதவியோர்கள் : சத்திய மார்க்கம் வலைத்  தளம் -  மஹதி எழுதிய குஞ்ஞாலி மரைக்காயர் வரலாறு- பேராசிரியர் மு. அப்துல் சமது அவர்கள் எழுதிய தியாகத்தின் நிறம் பச்சை என்கிற நூல் – இன்னும் சில வரலாற்றுக் குறிப்புகள் . எழுதும்போது விழுந்தவை பல சொட்டுக் கண்ணீர்த் துளிகள். 

இப்ராஹீம் அன்சாரி

காது கொடுத்து கேளுங்கள் - ப்ளீஸ் ! 6

அதிரைநிருபர் பதிப்பகம் | November 29, 2013 | ,

இறைவனின் அருட்கொடையாக மனிதகுலம் அனைத்திற்கும் வழங்கப்பட்ட அருள்மறைத் திருக்குர்ஆனிலிருந்து இறை வசனங்களை ஓதக் கேட்டாலும் அதன் பொருள் அறியாவிட்டாலும் அப்படியே நம் மனதை ஈர்க்கும். அன்றாடம் தொழுகையில் ஓதப்படும் இறைவசனங்களை முழுவதுமாக அர்த்தங்கள் பொதிந்த அவ்வசனங்களை கேட்கும்போது உள்ளத்தில் ஏற்படும் மாற்றத்தை ஒவ்வொருவராலும் அப்பட்டமாக உணரப்படும்.

இந்த வாரம் அல்குர்ஆனில் இரண்டாவது அத்தியாயத்திலிருந்து 286ம் வசனம் ஓதுப்படும் அழகிய உச்சரிப்பையும் அதன் அர்த்தம் அறிந்து உருகி கண்ணீர் சிந்தி ஓதுவதையும் காது கொடுத்து கேட்போம் இன்ஷா அல்லாஹ் !

ஸூரத்துள் பகரா

வசனம் 286

[2:286.] அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை; அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்:) “எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!”


அதிரைநிருபர் பதிப்பகம்

இத்தியாதி இத்தியாதி - வெர்ஷன் - 3 26

அதிரைநிருபர் பதிப்பகம் | November 28, 2013 | , , , , , , , , ,

குறுக்கம்:

அவனுக்கு இருபத்தியோரு வயதிருக்கும். பாகிஸ்தானியருக்கே உரித்தான நல்ல உயரமும் நிறமும் வசீகரமான முகமும் கொண்டவனாக என் முன் நின்றான்.  முகத்தில் தாடியாகவும் கிருதாவாகவும் அவன் வரைந்து வைத்திருந்த  நளினம் நவ நாகரிகத்தின் தன்மையதாக இருந்தது.  படிப்பறிவு கிடையாது என்பதை அவன் பார்வையும் தோரணையும் பறைசாற்றிக் கொண்டிருந்தது.

"உனக்குச் செய்து காண்பிக்கச் சொல்லும் சோதனையெல்லாம் கிடையாது. உன் அண்ணன் கம்ரான் ஏற்கனவே என்னிடம் பேசிவிட்டான். ஒழுங்காக நாளையிலிருந்து வேலைக்கு வா.  உன் பாஸ்போட் காப்பி மற்றும் ஒரு பாஸ்போட் சைஸ் புகைப்படமும் கொடு. விசா ஏற்பாடு செய்கிறேன்." என்று சொன்னதும்,

"நன்றி சார்ஜி" என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டான். 

அவனை எங்களின் பணிமனையில் ஸ்ப்ரே பெயின்ட்டராக வேலைக்குச் சேர்க்கச் சொல்லி ஏற்கனவே அவன் அண்ணன் கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தான். அவன் ஊரில் ஊதாரியாகத் திரிவதாகவும் ஸ்ப்ரே பெயின்ட்டிங் தெரிந்து வைத்திருந்தும் ஓரிடத்தில் கூட தொடர்ந்து வேலை செய்வதில்லை என்றும், ஆகவே உதவுமாறும் ரொம்பக் கெஞ்சினதால், எங்களுக்கும் பெயின்ட்டர் தேவைப்பட்டதால் வரச் சொல்லியிருந்தேன். அப்படி விசிட் விசாவில் ஷார்ஜா வந்தவனிடம்தான் நாளை வருமாறு சொல்லி அனுப்பினேன்.

எங்கள் பணிமனையில் புல்டோஸர், வீல் லோடர், மோட்டர் கிரேடர், ரோட் ரோலர், கிரேன் போன்ற பலதரப்பட்ட கனரக எந்திரங்களையும் பழுது பார்ப்போம், டென்டிங் பெயின்டிங் செய்து புதுப்பிப்போம். அத்தகைய பணிமனையை நிர்வகிக்கும் பொறுப்பில் நான் இருந்ததால் என் கோரிக்கையின்படி அந்த கம்ரானின் தம்பி ரிஸ்வானுக்கு வேலை தர ஹெச் ஆர் ஒப்புக்கொண்டனர்.  விசா ப்ரொஸஸிங்கும் துவங்கியது.

விசா அடிக்கப்படும் வரை அவனை வேலைக்கு வரச் சொல்லி விட்டேன். எனவே, அவனும் தினமும் வேலைக்கு வரலானான். அவன் அண்ணன் கம்ரான் எனக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டான்.  

திடீரென ஹெச் ஆரிலிருந்து வந்த மின்னஞ்சலில் உடனே அவனை வேலையை விட்டு நிறுத்தும்படியும் ஹெச் ஆரை வந்து சந்திக்கும்படியும் சொல்லப்பட்டிருக்கவே என்ன ஏதுவென்று விசாரிக்கலானேன்.

விசா விண்ணப்பிக்க வேண்டிய ஷரத்களில் ஒன்றாகிய  மருத்துவ பரிசோதனையில் அவன் ஃபெயிலாகி விட்டதாகச் சொன்னார்கள்.  சிகிச்சை எடுத்துக் கொண்டு மீண்டும் விண்ணப்பிக்கலாமே என்ற என் யோசனையை மறுத்த ஹெச் ஆர் வெளியே சொல்ல வேண்டாம் அவனுக்கு ஹெச் ஐ வி பாஸிட்டிவ் என்று குண்டைத் தூக்கிப் போட்டனர்.  அவனிடமும் சொல்ல வேண்டாம். பாகிஸ்தான் போய் பரிசோதித்து விட்டு வரச்சொல்வோம் என்று தீர்மானிக்கப் பட்டது.

அவனிடம் அப்படியே சொல்லி ஊருக்குப் போய் சிகிச்சைச் செய்து குணப்படுத்திக் கொண்டு வா என்று சொல்லிவிட்டு அவனிடம் தனியாகக் கேட்டேன்,

"ரிஸ்வான், உண்மையைச் சொல். உனக்குப் பெண்கள் தொடர்பு உள்ளதா?"

"இல்லை சார் ஜி, எப்பவாவது நண்பர்களோடு ரண்டிகளிடம் செல்வதுண்டு"

"உன் வயதுக்கும் அழகுக்கும் நல்ல மனைவி கிடைக்கும் வரை உனக்குப் பொறுமை இல்லாது போனதே"

"ஏன் சார்ஜி, ஏதும் கெட்ட வியாதியா எனக்கு?"

"சரியாத் தெரியலப்பா. ஊருக்குப் போய் சோதித்துக் கொள்"

அவன் பாகிஸ்தான் போய்  7 வது நாள் அவன் அண்ணன் கம்ரான் அழுது கதறிக்கொண்டே வந்து எமர்ஜென்ஸி லீவ் கேட்டு நின்றான்.  ஏன் என்று வினவ, தன் தம்பி தற்கொலை செய்து கொண்டதாகவும் உம்மா தனியாக ஆறுதலின்றி தவிப்பதாகவும் சொன்னான். நெஞ்சுக்குள் எனக்கு என்னவோ செய்தது.  அவனை உடனே அனுப்ப ஏற்பாடுகள் செய்யச் சொல்லி ஹெச் ஆருக்கு தெரிவித்துவிட்டு ரொம்ப வேதனைப்பட்டேன்.

என்னாச்சு இந்த இளைய சமுதாயத்துக்கு.  எத்தனையோ விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட்டும் இப்படி மனித வாழ்க்கையை விட்டிலின் வாழ்நாளைப் போல சுறுக்கிக்கொள்கிறார்களே என்கிற ஆதங்கம் எனக்கு ஒரு வாரத்திற்கு சரியாகத் தூங்க விடாமல் வாட்டியது.  அந்தப் பையனின் முகமும் அதில் வரையப்பட்டிருந்த தற்காலிக கிருதா தாடியும் நிழலாடிக்கொண்டே இருந்தது.

ஹெச் ஐ வி பாஸிட்டிவ் மானிட வாழ்க்கைக்கு நெகட்டிவ் என்பதை மனிதன் என்றுதான் உணரப்போகிறானோ.

தப்பாட்டம்

அப்போது நான் துபை தேராவில் என் நண்பன் ஆடிட்டர் கபீரின் அறைத் தோழனாக இருந்து வந்தேன். நாங்கள் இருந்த மூன்றாவது மாடியின் பால்கனியில்தான் சின்னச் சின்னதாக உடற்பயிற்சி செய்வோம். காற்று வாங்குவோம், சபகா வீதியின் போக்குவரத்தை வேடிக்கைப் பார்ப்போம். மேலும், அங்கிருந்து பார்த்தால் சபகா ரோட்டின் அந்தப் பக்கமாக இருக்கும் ஹோட்டல்கள் தெளிவாகத் தெரியும்.


மற்ற நாட்களை விட வார இறுதி நாட்களும் விடுமுறை நாட்களும் மிகவும் புழக்கமாக இருக்கும்.  இரவு முழுதும் தேரா தூங்காது.  அப்படித்தான் ஒரு நாள் பால்கனியிலிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அது ஒரு பெருநாள் தினத்தின் மாலை நேரம். அந்த ஹோட்டலில் புழக்கம் அதிகமாக இருந்தது.  நான் என் நண்பனை அழைத்து அதைக் காட்டி'" அங்கே என்னடா நடக்கிறது? " என்று கேட்டேன். அவன், " உனக்கு விளங்கலையா? ப்ராத்தல்டா. நான் சொல்றதெல்லாம் நடக்கிறதா இல்லையா என்று பார்" என்று வரிசையாகச் சொல்லத் துவங்கினான்.

"இப்ப பாரு அந்த பட்டான் அங்கே மருவிக்கொண்டே வர்ரானா. அந்த பங்காளியைப்பாரு அவனை அனுகுவான்"

அனுகினான்.

"ஒன்னும் பேசிக்க மாட்டானுக ஆனா ஹோட்டலுக்கு இவனை அவன் பின் தொடர்வான் பாரு"

தொடர்ந்தான்.

"கொஞ்ச நேரத்திலே வெளியே வந்து வேற கிராக்கி தேடுவான் பாரு"

வந்தான். ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு போவோர் வருவோரின் முகம் பார்க்கலானான்.

"இப்படித்தான் பார்ப்பானுக. யாராவது கொஞ்சம் இவனுகளை உற்றுப்பார்த்தால் கிட்ட வந்து கொக்கிப் போட்டுருவானுக. இது இங்கே சகஜம்டா.  ஒழுக்கமா இருக்க நினைப்பவர்கள் மட்டுமே இங்கே ஒழுக்கமா வாழ முடியும். எப்படியும் வாழ விரும்புபவர்களுக்கு துபை தேரா சொர்க்கம்டா" என்றான்.

எனக்கு நம் சமுதாயத்தை நினைத்து ரொம்ப வேதனையாக இருந்தது. அதுவும் ஈத் போன்ற நாட்களில் பீர் குடிப்பதும் விலை மாதர்களை நாடி போவதும் மிகவும் சகஜம் என்று கேள்விப்பட்டு கவலையாக இருந்தது

இப்படித்தான் ஒருமுறை ஒரு பச்சையிடம் (பாகிஸ்தானியரை இப்படித்தான் குறியிட்டு அழைப்போம்) " நீ தண்ணி அடிப்பியா?" என்று கேட்க அவன் சொன்னான், " நயி சார்ஜி, சிர்ஃப் ஈத்கா தின் பீயகா" என்றான்.  "ஏன்டா அது தியாகத் திருநாள்டா அன்னிக்கு ஏன்டா குறிப்பா குடிக்கிறீங்க?' என்ற என்னை விநோதமாகப் பார்த்துவிட்டு,

"தினமும் குடிக்கக்கூடாது சார்ஜி. ஈத் கா தின் குடிச்சே ஆகனும்" என்றான்.

மது மாது இரண்டிலும் மூழ்கி கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கும் நம் சமுதாயத்தை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயக் காலக் கட்டத்தில் நாம் இருக்கிறோம் என்பதை எல்லோரும் உணர்ந்தாக வேண்டும்.  வெளியே சொல்ல பயந்தோ வெட்கப்பட்டோ  மறைத்தோமேயானால் புறையோடிப் போய் விடும் வியாதி இது.

மைய வாடிக்குச் செல்லும் வழி:

அந்த
வழிகாட்டிப் பலகையில்
அம்புக்குறியிட்டுக் காட்டும்
ஒரு வழிப் பாதையை
வாசிக்கும் நிலையில்
அவர் இருப்பதில்லை

அதற்கு முன்
பூடகமாகச் சொல்லப்பட்ட
மது 
முறையற்ற மாது
பழக்கங்களுக்கு எதிரான
எந்த எச்சரிக்கையையும்
புரிந்து கொள்ளும் நிலையில்
அவரை
வைத்திருக்கவில்லை அந்தப் போதை

சில்லரை இன்பங்களுக்காக
நிரந்தர சந்தோஷத்தை
இழந்துபோதல் அறிவா?

யாவற்றையும்
சடுதியில் முடித்துக்கொண்டு
சட்டென 
அற்ப ஆயுளில்
அடங்கும் அவசரம் ஏன்?

மென்று விழுங்கினாலே செரிக்கும்
மெல்ல அனுபவித்தாலே நிலைக்கும்

சுத்தம்
வயிற்றுக்கு மட்டுமல்ல
செயலில் சுத்தம்
வாழ்நாள் முழுக்க
சோறு போடும்

மது மாது வாயிலாக
மைய வாடியிலிருந்து வரும்
அத்துணை அழைப்பிதல்களையும் 
நல்லமல்களைக் கொண்டுப்
புறக்கணியுங்கள்
நிர்ணயிக்கப் பட்ட
நெடும் பயணக் 
காலம் வரும் வரை!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் – தொடர் – 19 6

அதிரைநிருபர் பதிப்பகம் | November 27, 2013 | ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்.

முந்தைய பதிவில் அம்மார் (ரலி) அவர்களின் தாயார்  சுமைய்யா அவர்கள் தந்தை யாசிர் (ரலி) அவர்கள் இருவரின் வாழ்வில் நிகழந்தவைகளின் மூலம் நாம் பெற வேண்டிய படிப்பினைகள் பார்த்தோம், தொடர்ச்சியாக இந்த வாரம் அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவியதற்காக அவர்கள் பட்ட கஷ்டங்கள் சொல்லெனா இன்னல்கள் பற்றி மேலும் அறிந்து நாமக்கு அவற்றிலிருந்து எவ்வகை படிப்பினைகள் இருக்கிறது என்பதை அறியலாம். இன்ஷா அல்லாஹ்.

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தூய இஸ்லாத்தை எத்தி வைத்த காலகட்டத்தில், ஆரம்ப காலங்களில் இஸ்லாத்தை ஏற்ற அனைவருக்கும் குரைஷிகள் காஃபிர்களால் தொந்தரவு கொடுக்கப்பட்டது குறிப்பாக பனுமக்சூம் என்ற கூட்டத்தினரால். ஆனால், அன்றைய சூழலில் அடிமைகளாக இருந்தவர்களும் இஸ்லாத்தை தழுவியதால் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தொந்தரவுகள் சித்தரவதைகள் சொல்லால் எடுத்துரைக்க இயலாது. அதிலும் அடிமையின் வாரிசுகளுக்கு கொடுமைகள் இன்னும் அதிகம். அடிமைகளாக இருந்த தம்பதியருக்கு பிறந்த அம்மார் (ரலி) அவர்கள் எண்ணிலடங்காத் துன்பங்களை சந்தித்தார்கள். கல்நெஞ்சம் கொண்டவர்களின் நெஞ்சம்கூட கரைந்து விடும் அளவிற்கு அம்மார் (ரலி) அவர்கள் போன்றவர்களுக்கு இழைக்கப்பட்டது.

குரைஷி காஃபிர்களுக்கு தூய இஸ்லாத்தை தழுவிய முஸ்லீம்களை கொடுமைப்படுத்துவது என்பது ஒரு பொழுது போக்காகவே இருந்து வந்துள்ளது. ஒவ்வொரு நாளும் காலை அம்மார்(ரலி) அவர்களை அழைத்து இஸ்லாத்தை விட்டுவிடு என்று சொல்லி அம்மார்(ரலி) அவர்களுக்கு மயக்கம் வரும் வரை அடிப்பார்கள், மயங்கிவிடுவார் அந்த பொறுமைசாலியான அல்லாஹ்வின் அடிமை. செத்தான் அடிமையின் மகன் என்று சொல்லி அந்த இடத்தைவிட்டுச் செல்வார்கள் பனுமக்சூம் குரைஷிக் காஃபிர் கூட்டம். அம்மார்(ரலி) அவர்கள் சற்று மயக்கம் தெளிந்து அமர்ந்திருகும்போது.

அதே நாள் மாலை மீண்டும் தரதரவென இழுத்து வீதிகளுக்கு கொண்டு வந்து, இஸ்லாத்தை விட்டு விடு என்று சொல்லியே அடிப்பார்கள் மறுபடியும் மயக்கமடைந்து விடுவார்கள் அம்மார்(ரலி) அவர்கள். இது ஒரு நாள், வாரம், மாதம் என்று நின்றுவிடவில்லை, தொடர்ந்து பல நாட்கள் இதுபோன்ற கொடுமைகளைச் சந்தித்து வந்திருக்கிறார்கள் பொறுமையின் சிகரம் அம்மார்(ரலி) அவர்கள். சுப்ஹானல்லாஹ்…!

அம்மார்(ரலி) அவர்களை ஒரு நாள் கடுமையாக தீ மூட்டப்பட்டு தக தகவென்று எரியும் அந்த தீயில் அம்மார்(ரலி) அவர்களின் முதுகை பிடித்து காய்ச்சினார்கள். கோழி, மாட்டுக்கறியை எறியும் அடுப்பில் சுடுவது போல் அம்மார்(ரலி) அவர்களின் முதுகை தீயினால் சுட்டார்கள் அந்த கல் நெஞ்சக்காரர்கள். தன் உடம்பை தீயினில் காய்சினாலும் தன்னுடையை உள்ளத்தில் உள்ள இஸ்லாத்தை எடுக்க முடியாது என்பதில் உறுதியாக இருந்து பொறுத்துக் கொண்டவர்கள்தான் அம்மார்(ரலி) அவர்கள். வேதனை தாங்க முடியாமல், துடியாய் துடித்துப் போனார் தியாகத் தம்பதியரின் அருமைப் புதல்வரான அம்மார் (ரலி) அவர்கள். 

ஒரு நாள் மனிதருள் மாணிக்கம் நபி(ஸல்) அவர்கள் அம்மார்(ரல்) அவர்களை கடந்துச் சென்றார்கள். அப்போது அம்மார்(ரலி) அவர்கள் “யா ரசூலுல்லாஹ்! என்னுடைய மேனியில் துன்பமும் வேதனையும், உடம்பின் ஒரு பாகத்தைக்கூட விடவில்லை யா ரசூலுல்லாஹ்!, எங்கள் உடம்பில் சகித்துக் கொள்ள வேறு இடமே இல்லை யா ரசூல்லுல்லாஹ்!, எல்லா வேதனையும் எங்களுக்கு தந்துவிட்டார்கள்” என்று கூறினார்கள். 

இதனை கேட்டு விட்டு அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அம்மார்(ரலி) அவர்களுக்கு ஆறுதல் சொல்லி விட்டு பிரார்த்தனை செய்தார்கள் “ யா அல்லாஹ் எப்படி இபுறாஹீம்(அலை) அவர்களை பகைவர்கள் தீ குன்றத்தில் தூக்கி எரியும்போது எப்படி நீ அந்த தீ குன்றத்தை குளிர் அடைய செய்தாயோ அது போல் இந்த அம்மாருக்கு யாராவது தீயின் மூலம் தீங்கிழைத்தால் அவருக்கு அந்த தீயை குளிர செய்வாயாக யா அல்லாஹ்” மேலும் இது போன்ற ஆறுதல் வார்த்தைகளைக் கொண்டு நபி(ஸல்) அவர்களால் சொல்ல முடிந்தது.

ஒவ்வொரு காலைப் பொழுது வந்தால் அம்மார்(ரலி) அவர்களுக்கு பதற்றம் அதிகரித்து விடும், காரணம் காலைப் பொழுதில் “எங்கே அந்த அடிமையின் மகன்” என்று சொல்லி அந்த மக்கத்துக் குரைஷிக் காஃபிர்கள் அம்மார்(ரலி) அவர்கள் கொடுமைப்படுத்த ஆரம்பித்து விடுவார்கள். ஒரு நாள் மூன்று கொடுமைகளை ஒரே நேரத்தில் செய்தார்கள் மக்கத்துக் காஃபிர்கள். நீண்ட வாள்களை தீயில் காட்டி பழுக்க வைத்து, அம்மார்(ரலி) அவர்கள் முதுகில் பாலம் பாலமாக கோடு போட்டனர். மீண்டும் அம்மார்(ரலி) அவர்களை அந்த பாலைவன வீதிக்கு இழுத்து வந்து காயம்பட்ட அவர்களின் முதுகை சுடு மணலில் படும்படி போட்டதோடு அல்லாமல், நெஞ்சின் மீது பாரங்கற்களை வைத்து எந்தப் பக்கமும் அசைய முடியாத அளவுக்கு வைத்து கொடுமை செய்தனைர். அந்த மக்கத்துக் காஃபிர்கள் சொன்னது ஒன்றே ஒன்று தான். அந்த முஹம்மதை திட்டு, முஹம்மதை கேவலமாக பேசு, லாத்து உஸ்ஸாவை வணங்குகிறேன் என்று வாயால் சொல்லு, அது போதும் உன்னை விட்டு விடுகிறோம். ஆனால், அந்த பொறுமையின் சிகரம் அம்மார்(ரலி) அவர்கள் பதில் ஏதும் கூறாமல் மவுனம் சாதித்தார்கள். 

சினங்கொண்ட அந்த கயவர்கள் பாதி மயக்கத்தில் இருந்த அம்மார்(ரலி) அவர்களை ஒரு தண்ணீர் தொட்டி அருகே கொண்டு வந்து தலையை பிடித்து அந்த தண்ணீரில் முழ்கி எடுத்தார்கள். மூச்சுத் திணறினார்கள். இன்றோடு தான் மரணித்து விட்டுவேனோ என்று நினைத்திருந்திருக்கிறார்கள் அம்மார்(ரலி) அவர்கள். ஒரு பக்கம் பிலால்(ரலி) அவர்களுக்கு கொடுமை, இன்னொரு பக்கம் அம்மார்(ரலி) அவர்களுக்கு கொடுமை. அப்போதையச் சூழலில் அவர்களைச் சுற்றி இஸ்லாத்தின் வீர வாள்கள் உமர்(ரலி) இல்லை, அலி(ரலி) அவர்கள் இல்லை, ஹம்ஜா(ரலி) இல்லை, காலித் பின் வலித் (ரலி)  இல்லை, முஸ்ஹப்(ரலி) இல்லை. விரல் விட்டு எண்ணக்கூடியவர்களுடன் இருந்த நபி(ஸல்) அவர்களால் அப்போது ஆறுதல் வார்த்தைகள் மட்டுமே சொல்லி அல்லாஹ்விடமே கையேந்த மட்டுமே முடிந்தது. 

உடலாலும் உள்ளத்தாலும் சகிக்க முடியாத கொடுமையாலும், தாங்க முடியாத வேதனையாலும், தன் உடம்பில் உயிர் இருந்தால் இந்த தூய இஸ்லாத்தை இன்னும் பலருக்கு சென்று சேர்க்க வேண்டும் என்ற தூய எண்ணத்தினாலும், வேறு வழியே இல்லாமல் வாயளவில் லாத்து உஸ்ஸாவை வணங்குகிறேன் என்னை விடுங்கள் என்று சொல்லி அவர்களிடம் அன்றைய தினம் தப்பித்தார்கள் அம்மார்(ரலி) அவர்கள். இருப்பினும் அந்த கயவர் கூட்டம் “நாளை வருகிறோம்” என்று சொல்லிச் சென்றார்கள்.

வேதனை தாங்க முடியாமல் தன் வாயால் “லாத்து உஸ்ஸாவை வணங்குகிறேன்” என்று இறை நிராகரிப்பு வார்த்தையை சொல்லிவிட்டோமே என்று தன் உடல் வேதனைகளை காட்டிலும் பல மடங்கு மனதில் வேதனையுடன் துடியாய் துடித்துப் போய் அன்றைய காலகட்டத்தில் தன் மேல் பாசம் வைத்துள்ள ஒரே ஜீவன், அறுதல் வார்த்தை சொல்லி தன் உள்ளத்தைச் சமாதானப்படுத்தும் அண்ணல் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள் அம்மார்(ரலி) அவர்கள். நபி(ஸல்) அவர்களிடம் நடந்த சம்பவத்தைச் சொல்லி அழுதார்கள் அம்மார்(ரலி) அவர்கள். அப்போது அம்மார்(ரலி) அவர்களின் கண்ணீரைத் துடைத்துவிட்டு அண்ணல் பெருமானார் நபி(ஸல்) அவர்கள் “என்னுடைய அம்மாரே, லாத்து உஸ்ஸாவை வணங்குகிறேன் என்று நீங்கள் சொன்ன நேரத்தில் உங்களுடைய உள்ளத்தில் ஈமான் எப்படி இருந்தது” என்று கேட்டார்கள். அதற்கு அம்மார்(ரலி) அவர்கள் “ யா ரசூலுல்லாஹ் என்னுடைய உள்ளம் ஈமானால் நிரம்பி இருந்தது யா ரசூலுல்லாஹ், நான் அதை நாவால் தான் சொன்னேன் யா ரசூலுல்லாஹ்! என்னை நான் காப்பாற்ற, இஸ்லாத்திற்காக வேண்டி நான் உழைக்க வேண்டும் என்பதால் நான் வாயளவில் சொன்ன வாசகம் தான் அது யா ரசூலுல்லாஹ்” என்று சொன்னார்கள். அந்த சமயத்தில் தான் பின் வரும் வசனம் இறக்கப்பட்டது.

எவர் ஈமான் கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கிறாரோ அவர் (மீது அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது) - அவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவரைத் தவிர - (எனவே அவர் மீது குற்றமில்லை) ஆனால் (நிர்ப்பந்தம் யாதும் இல்லாமல்) எவருடைய நெஞ்சம் குஃப்ரைக்கொண்டு விரிவாகி இருக்கிறதோ - இத்தகையோர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும்; இன்னும் அவர்களுக்குக் கொடிய வேதனையும் உண்டு. அல்குர்ஆன் (16:106)

இந்த வசனத்தை நபி(ஸல்) அவர்களின் நாவின் மூலம் ஓதக் கேட்ட பின்பு வேதனையில் இருந்த அம்மார்(ரலி) ஆறுதல் அடைந்தார்கள். வஹியின் மூலம் அல்லாஹ் எனக்காக இந்த வசனத்தை இறக்கியுள்ளானே என்று உள்ளத்தில் ஏற்பட்ட வேதனையை அனைத்து உத்வோகமுற்றார்கள் உத்தம நபியின் உன்னத தோழர் அம்மார் (ரலி) அவர்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் அம்மார்(ரலி) அவர்களைப் பார்த்து “அம்மாரே இந்த மக்காவில் யாராவது உங்களை லாத்து உஸ்ஸாவை வணங்குகிறேன் என்று சொன்னால் சொல்லுங்கள், என்னை திட்டச் சொன்னால் திட்டுங்கள் ஆனால் உங்கள் உள்ளத்தில் உள்ள ஈமானை பாதுகாத்துக் கொள்ளுங்கள். இந்த அம்மார் இந்த பூமியில் உயிர் வாழ வேண்டும்” உருக்கமாகக்கூறி அம்மார்(ரலி) அவர்களை நபி(ஸல்) அவர்கள் நேசித்தார்கள் என்பதை ஹதீஸ் தொகுப்புகளில் வாசிக்கும் போது கண் கலங்காமல் இருக்க முடியவில்லை.

ஒரு முறை இஸ்லாத்தின் போர் வாள் என்று அழைக்கப்படும் காலித் பின் வலித்(ரலி) அவர்கள் அம்மார்(ரலி) அவர்களை மனம் புண்படும்படியான வார்த்தையைச் சொல்லிவிட்டார். இதனால் அம்மார்(ரலி) அவர்கள் மனவேதனை அடைந்தார்கள். இதனை கேள்வியுற்ற நபி(ஸல்) அவர்கள் அம்மார்(ரலி) கையை பிடித்து மக்களின் செவிகளில் விழும்படிச் சொன்னார்கள் “ யார் இந்த அம்மாருடைய கோபத்திற்கு உள்ளாகிறார்களோ, அவர் அல்லாஹ்வுடைய கோபத்திற்கு உள்ளாகிறார், யார் அம்மாரை வேதைப் படுத்துகிறாரோ அவரை அல்லாஹ் வேதனை செய்வான்”. இதனை கேட்ட காலித் பின் வலித்(ரலி) அவர்கள் உடனே அம்மார்(ரலி) அவர்கள் சந்தித்து ஆரக்கட்டித் தழுவி அவர் நெற்றியில் முத்தமிட்டு மன்னிப்புக் கோட்ட நிலை உருவானது என்றால். அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அம்மார்(ரலி) அவர்களை எந்த அளவுக்கு கண்ணியப்படுத்தியுள்ளார்கள் என்பதை இந்த சம்பவத்தின் மூலம் நாம் அறியலாம்.

இஸ்லாத்தை ஏற்ற தருணத்தில் செய்த தியாகத்திற்கு மட்டும் சொந்தக்காரர் இல்லை நம்முடைய உத்தம நபியின் உன்னத தோழர் அம்மார்(ரலி). மஸ்ஜித் நபவி கட்டப்படும் அந்தச் சூழலில் மற்ற சஹாபாக்களைவிட ஒரு மடங்கு அதிகம் கற்களைச் சுமத்து கொண்டு வந்தார்கள். உடம்பில் தூசியோடு கற்களை அம்மார்(ரலி) அவர்கள் சுமந்து வருவதைக் கண்ட அண்ணல் நபி(ஸல்), ஒரு தாய் தனது சேய்க்கு பாசம் காட்டுவது போல் பாசம் காட்டி அம்மார்(ரலி) அவர்கள் மேனியில் இருந்த தூசியைத் தட்டிவிட்டு, அவரின் முகத்தில் இருக்கும் மண்ணை தட்டிவிட்டு முஹாஜிர்கள் மற்றும் அன்சாரிகள் குழுமியிருந்த அந்த இடத்தில் சொன்னார்கள் “அட்டூழியக்கார மக்களால் என்னுடைய அம்மார்(ரலி) அவர்கள் கொல்லப்படுவார்”. இது நபி(ஸல்) அவர்களின் முன்னறிவுப்பாகவே இருந்தது. 

இதுபோலவே யூதக் கைக்கூலி இப்னு-சபா மற்றும் காரிஜியாக்கள் ஏற்படுத்திய குழப்பதின் காரணமாக முஆவிய(ரலி) அவர்களுக்கும் அலி(ரலி) அவர்களுக்கும் ஏற்பட்ட விரும்பதகாத சம்பவத்தால், அநியாயக்கார காரிஜியாக்களின் சூழ்ச்சியினால் அம்மார்(ரலி) அவர்கள் தன்னுடையை 93 வது வயதில் கொல்லப்பட்டு ஷஹீதானார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். இரத்தம் படிந்த அம்மார்(ரலி) அவர்கள் ஜனாஸாவை அலி(ரலி) அவர்கள் சுமந்துச் சென்று ஜனாஸா தொழுகை வைத்தார்கள் என்ற செய்தி ஹதீஸ் தொகுப்புகளில் வாசிக்கும் போது உள்ளம் உருகுகிறது.

“என்னுடைய அம்மாருடைய ஈமானுடைய நம்பிக்கை அவருடைய எலும்புக்கு உள்ளேயும் புகுந்துள்ளது” என்று ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஈமானில் முதிர்ச்சி பெற்றிருந்த அம்மார்(ரலி) அவர்களிடம் ஈமானிய உணர்வுகள் உள்ளத்தில் உரைந்திருந்தது. ஆனால் நம்மிடம் நாவளவில் மட்டுமே ஈமான் உள்ளதே என்பதை என்றைக்காவது நாம் கவலையுடன் பரிசீலனைச் செய்து பார்த்திருப்போமா?

அம்மார்(ரலி) அவர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகள் அல்லாஹ்வின் நாட்டம் என்பதால் அந்த தியாகத் திருமகன் அனைத்தையும் அல்லாஹ்வுக்காக பொறுத்துக் கொண்டிருந்தார். நமக்கு ஒரு சிரிய பொருளாதார கஷ்டத்தை அல்லாஹ் நிகழ்வில் காட்டித் தந்தால் நாம் உடனே வாட்டி எடுக்கும் நிலைக்கு நம்முடைய எண்ணம் செல்லுகிறது. ஆனால் மயக்கம் வரும் வரை அடி வாங்கி, மயக்கம் தெளிந்த பின்பும் அடிவாங்கிக் கொண்டு தூய இஸ்லாத்தை கடுகளவும் விட்டுக் கொடுக்காத அம்மார்(ரலி) அவர்களைப் போன்றவர்களின் வாழ்வின் சகிப்புத் தன்மை, அல்லாஹ்வின் மீது உள்ள நம்பிக்கை, ஈமானிய உணர்வு  நம்மிடம் உள்ளதா என்பது நாம் நம்மிடம் கேட்டுக் கொள்ள வேண்டிய ஆழமான கேள்வி.

இஸ்லாத்திற்காக உடலாலும் உள்ளத்தாலும், பொருளாதாரத்தாலும் சொல்ல இயலாத துன்பங்களை எதிர்கொண்டு தூய இஸ்லாத்தை இவ்வுலகில் அல்லாஹ்வின் உதவியோடு நிலைத்திருக்க வைத்ததோடு அல்லாம் நமக்கும் அதனை கொண்டு வருவதற்கு பாடுபட்டுள்ளார்கள். ஆனால், நம் சமுதாய கண்மணிகள் காதல் என்ற ஒரு அர்ப்ப காரணத்திற்காக, நபி(ஸல்) அவர்கள், யாஸிர்(ரலி) சுமைய்யா(ரலி), அம்மார்(ரலி), பிலால்(ரலி), மிக்தாத்(ரலி), ஹம்ஜா(ரலி), முஸ்ஹப்(ரலி) ஸஃஆத் இப்னு முஆத்(ரலி) உமர்(ரலி), உஸ்மான்(ரலி), அலி(ரலி), முஆவியா(ரலி) இன்னும் பல தியாகிகளால் வளர்க்கப்பட்ட இந்த இஸ்லாத்தை ஒரு நொடிப் பொழுதியில் தியாகம் செய்து பிற மதத்தவருடன் ஓடிப் போவதும் அல்லது கள்ளக் காதல் தொடர்பில் இருக்கும் கொடூர நிலை இன்னும் தொடரத்தான் செய்கிறது. சுத்தந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களைப் பற்றி அறிந்துக் கொள்வதற்கு முன்னர் இந்த அம்மார்(ரலி) அவர்கள் போன்றவர்களின் வரலாறுகள் நம் இளைய தலைமுறையினருக்கு எடுத்துக் கூறப்பட வேண்டும்.

அம்மார்(ரலி) அவர்களின் வாழ்வில் நிகழ்ந்த செய்திகளை வாசித்து விட்டு கண்ணீர் வடிக்கும் போது நம்முடைய ஈமான் வலுப்பெற வேண்டும், அந்த உண்மைச் சம்பவங்களின் மூலம் நாம் படிப்பினைகள் பெற வேண்டும். ஆனால் சீரழ்வின் உச்சம் சினிமாவினாலும், சின்ன சின்ன நிம்மதிகளை சின்னபின்னாமாக்கும் தொலைக்காட்சித் தொடர்களாலும், அவற்றில் தோன்றும்  பொய் கற்பனை கதாபாத்திரங்கள் வடிக்கும் கண்ணீர் காட்சி நடிப்பை பார்ப்பவர்கள் கண்ணீர்விடுவதால் ஏதேனும் பிரயோஜனம் உள்ளதா? என்பதை பற்றி நம் சமூதாய தாய்மார்கள் சிந்திக்க வேண்டும்.

கடந்த பதிவிலும் இந்த பதிவிலும் நாம் பெறவேண்டிய படிப்பினை என்னவென்றால். தாய் சுமைய்யா(ரலி), தந்தை யாசிர்(ரலி) மகன் அம்மார்(ரலி) அவர்கள் ஒட்டுமொத்த குடும்பமே இஸ்லாத்திற்காக எண்ணற்ற கொடுமைகளை சந்தித்து தங்களின் உயிர்களை தியாகம் செய்துள்ளார்கள். அந்த பாக்கியம் நமக்கு கிடைக்க அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும். ஷிர்க், பித் அத்துக்கள், அனாச்சாரங்கள், மூட பழக்க வழக்கங்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும், இதனால் ஏற்படும் கவுரம், அந்தஸ்து, பொருளாதாரம், உறவற்றுப் போகும் நிலை போன்ற இழப்புகளை தாங்கிக்கொள்ளும் தியாக உணர்வு உள்ள சகிப்புத்தன்மையுடைய மன நிலைக்கு வரவேண்டும். 

நம்முடைய உள்ளத்திலிருந்து தீமையான காரியங்களை இஸ்லாத்திற்காக விட்டுவிடும் தியாக உணர்வுள்ள பரிசுத்தமான உள்ளமாக, வல்லவன் ரஹ்மான் நம்மை ஆக்கி அருள் புரிவானாக. நாளை மறுமையில் இஸ்லாத்திற்காக தியாகம் செய்த இந்த உத்தமர்களோடு அல்லாஹ் நம் அனைவரையும் சொர்கத்தில் ஒன்று சேர்ப்பானாக.

யா அல்லாஹ் எங்கள் அனைவரையும், சத்திய சஹாபாக்கள் எவ்வாறு நபி(ஸல்) அவர்களின் சொல் செயல் ஆகியவற்றின் அங்கீகாரத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்களோ அதுபோல் நம் அனைவரையும் வாழ அருள் புரிவாயாக.
தொடரும்...
M தாஜுதீன்

தேவையில்லாமல் ஏன் எசல வேண்டும்? (ஒரு விமானப்பயண அனுபவம்) 11

அதிரைநிருபர் பதிப்பகம் | November 26, 2013 | , , , , , ,


ஒரு தடவை தம்மாமிலிருந்து கொழும்பு வழியாக திருச்சிக்கு சிறிலங்கன் ஏர்லைன்ஸ் மூலமாக ஊர் திரும்பும் சமயம்  சுங்க,குடியுரிமைச் சட்டங்களெல்லாம் நம்மை நொங்கெடுத்த பின் விமானத்திற்குள் பிரவேசித்தேன். அவரவர் இருக்கையில் அமர்ந்த பின் விமானப் பணிப்பெண்கள் விமானத்தின் சட்ட திட்டங்களையும், ஆபத்துக் காலங்களில் பயணிகள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளையும் கை,கால்,கண் செய்கையில் சப்தமின்றி விளக்க ஆரம்பித்தனர்.

நம் இருக்கைக்கு கீழே பொறுத்தப்பட்டுள்ள அந்த உயிர்காக்கும் பலூனை கழுத்தில் மாட்டி அதனுடன் உள்ள குழாயை வாயில் வைத்து ஊதும் பொழுது எல்லோர்க்கும் என்னவ்வோ திக்குதிக்கென்று குமீர்ப்பு,  சொலேர்ப்பாகவும் தான் இருக்கும். எல்லோரும் தங்களை அவரவர் இருக்கையில் நன்கு பெல்ட் கொண்டு கட்டிப்போட்டுக் கொண்டதும் விமானம் ஓடுபாதையில் மெல்ல,மெல்ல நகர்ந்தது. நாமும் பயண து'ஆவை ஓதிக்கொண்டோம். பிறகு அதன் வேகம் கூடிக்கொண்டே தரையை எட்டி உதைத்து வானிற்குத்தாவியது. போதிய உயரம் அடைந்ததும் விமானம் பறப்பது செங்குத்து நிலையிலிருந்து சமநிலைக்கு கொண்டு வரப்பட்ட பின் விமானத்திற்குள் விளக்குகள் எரியவைக்கப்பட்டன. எல்லோர் முகத்திலும் பூரிப்பு தான் களரியில் சகனுக்காக காத்துக்கிடக்கும் நம்மைப்போல.

விமானப் பணிப்பெண்கள் நம்மூரில் கலியாணப்பத்திரிக்கை மாதிரி வாய்க்கூப்பாடின்றி வெறும் கை நார்சா தருவது போல் அந்த சாப்பாட்டு மெனு கார்டை இருக்கையிலிருக்கும் ஒவ்வொருவருக்கும் கொடுத்துச்சென்று கொண்டிருந்தனர். அதில் வெள்ளடை ஆட்டுத்தலையாணமோ, ரால் போட்ட ப்ராச்சப்பம் கடல்பாசியோ, அப்பம் உளுந்துக்கஞ்சியுமோ, இடியப்பம் முட்ட மொளவு தண்ணியாணமோ, முட்ட ரொட்டி முர்தபாவுமோ தேடியும் எம் கண்களுக்குத்தென்படவில்லை.

அவரவர் இருக்கைக்கு முன் மடக்கி வைக்கப்பட்டுள்ள அந்த தட்டுகள் விரிக்கப்பட்டு பரிச்சை ஹாலில் வினாத்தாளை எதிர்பார்த்து அமர்ந்திருக்கும் மாணவர்கள் போல் சாப்பாட்டை எதிர்பார்த்து எல்லோரும் அமைதியாக அமர்ந்திருந்தனர். 

அந்த சம்பிரதாய மெனு கார்டில் உள்ள ஐயிட்டங்களில் சிலவற்றையே நமக்கு தந்து பரிமாறப்பட்டது. ஆனால் 'குடி'காரர்களின் பானங்கள் மட்டும் குளிர் ஆவி பறக்க வேண்டிய அளவை விட அவர்களுக்கு பரிமாறப்பட்டது. 'காஞ்ச மாடு கம்புல விழுந்த கதையாக' அவரவர் மறு சோறு, புளியாணம் கேட்பது போல் பணிப்பெண்களிடம் கேட்டு, கேட்டு வாங்கி குடித்து கும்மாளமிட்டுக் கொண்டிருந்தனர். 

கொஞ்ச நேரத்தில் டாய்லெட் சென்றால் ரொம்ப நாளுச்செண்டு குடிச்சி ஒத்துக்கிடாதவர்கள் வாந்தி எடுத்து அந்த வாஷ் பேஷனையே நிரப்பி வைத்திருந்தனர் (வாஷ் பேஷனின் சர்சராக்குழிகள் அடைத்துக்கொண்டன) இது போன்ற குடிகாரர்களுக்காக இனி ஒவ்வொரு விமானக்கழிவறைகளிலும் நமதூர் தென்னங்குச்சியால் செய்யப்பட்ட வெளக்கமரு ஒன்று வைத்தால் நல்லது.

கழிவறை செல்லும் வழியில் உள்ள வரிசையில் எனக்கு இருக்கை கிடைத்திருந்தது. சாப்பாட்டுத்தட்டுகள் சாப்பிட்ட பின் திரும்பிப்பெறப்பட்டு எல்லோருக்கும் தேநீர் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. வருடங்கள் பல கழிந்த பின் ஊருக்குப்போகும் சந்தோசத்தில் சிலருக்கு டீ குடிப்பதா? தண்ணீர் குடிப்பதா? ஜூஸ் குடிப்பதா? என்றக்குழப்பத்தில் வாயும், வயிறும் ஓடவில்லை. 

எல்லோரும் உணவு உண்ட பின் கொஞ்சம், கொஞ்சமாக உறங்க ஆரம்பித்தனர். விமானம் நடுநிசியில் வானுக்கும், கடலுக்கும் நடுவில் பறந்து கொண்டிருந்தது. குளிராக இருந்ததால் நானும் போர்வை ஒன்றை கேட்டு வாங்கி போர்த்திக்கொண்டு உறங்க ஆரம்பித்தேன். நல்ல அசந்த தூக்கம். திடீரென என் இருக்கை அருகே ஒருவர் தொப்பென்ற சப்தத்துடன் விழுந்து கிடந்தார். நானும் விமானத்திற்குத்தான் ஏதேனும் கோளாறு வந்து விட்டதோ என்றெண்ணி பதறியவனாக திடுக்குண்டு முழிச்சிட்டேன். 

பிறகு என்னை நானே ஆசுவாசப்படுத்திக்கொண்ட பின் தான் அறிந்து கொண்டேன். ஒரு மடாக்குடியன் அதிகளவு குடித்து விட்டு கழிப்பறை அருகே நடைபாதையில் வாந்தி எடுத்து மயக்கதில் விழுந்து கிடக்கிறான் என்று. பிறகு ஆத்திரத்தில் அவனை முதுகில் லேசாக ஒரு தட்டு தட்டி "ஏன்டா இப்புடி செய்றீங்க? அறிவுகெட்டவனே நாலு,அஞ்சு மணி நேரத்துக்குப்பிறகு ஊருக்குப்போய் நல்லா குடிச்சிக்கிட வேண்டியது தானே?" என்று ஆத்திரத்தில் அங்கேயே அவனை திட்டினேன்.

பிறகு வெட்கப்பட்டோ, வேதனைப்பட்டோ தட்டுத்தடுமாறி மெல்ல எழுந்து அவன் இருக்கையில் போய் அமர்ந்து கொண்டான். விமானப்பணிப்பெண் ஒருத்தி அவன் வாந்தி எடுத்த இடத்திற்கு வந்து அதன் மேல் ஒரு போர்வையை போர்த்திச்சென்றாள் ஏதோ வாந்திக்கு குளுவுற மாதிரி. என் இருக்கையிலிருந்து அவளை அழைத்தேன். எஸ் என்று அவளும் வந்து நின்றாள். பிறகு அவளிடம் கேட்டேன் "ஏன் இப்படி அளவுக்கு அதிகமாக வாந்தி எடுக்குமளவுக்கு நீங்கள் மதுவை பயணிகளுக்கு பரிமாறுகிறீர்கள்?" என்று. இப்பொழுது அவன் வழியில் வாந்தி எடுத்து விட்டானே உன்னால் அதை உடனே கழுவி சுத்தம் செய்ய முடியுமா? என்றேன்.

அதற்கவள் பேக்கபேக்க என்று முழித்து விட்டு சாரி சார், பயணிகள் கேட்கும் அளவு அவர்களுக்கு மது பரிமாற வேண்டுமென்று எங்கள் விமான நிறுவனத்தின் கட்டளை என்று சொன்னாள். குடிகாரர்களுக்கு வேண்டுமென்றால் ஆஹா, என்னா உபசரிப்பு? என்றிருக்கலாம். அது விமானத்தை அசுத்தப்படுத்தும் அளவுக்கு ஆகி விடுவது கூட மேலிட நாற்காலிகளுக்கு கொஞ்சம் விளங்கியும் வியாபார லாப நோக்கிற்காக அதை கண்டு கொள்வதில்லை.

கூலிக்கு மாரடிக்கும் அவளிடம் போய் வாக்குவாதம் செய்து என்ன பயன்? என்றெண்ணியவனாக என் உறக்கத்தைத்தொடர ஆரம்பித்தேன்.

இதே போன்ற அனுபவம் ஏர் இந்தியாவில் ஒரு முறை பயணிக்கும் பொழுதும் ஏற்பட்டது. ஒருவன் இருக்கையில் இருந்து நன்கு குடித்து விட்டு பிறகு எழுந்து சென்று பின்னால் காலியாக உள்ள இருக்கையில் அமர்ந்து கொண்டான் மீண்டும் ஒரு ரவுண்டு குடிப்பதற்காக. அதை கவனித்த ஒரு வயதான விமான பணி ஆண் தமிழிலேயே இப்படி அவனிடம் கேட்டார் "ஏன்யா இப்படி அலைறே, உன் எடத்திலெ உக்காருய்யா" என்று.

கடைசியில் விமானமும் ஒரு வழியாக கொழும்பு வந்திறங்கி மாற்று விமானத்தின் மூலம் திருச்சியும் வந்திறங்கினேன். நம்மை சாவடிக்கும் சுங்கச்சாவடி சட்டதிட்டங்கள் வரிசைக்குப்பின் முறையே நிறைவேறி பின் சாமான்கள் சுழலும் பெல்ட் பக்கம் வந்து நின்றேன். கொஞ்ச தூரத்தில் என்னிடம் குடி மயக்கத்தில் நடு வானில் அடிவாங்கிய அந்த இளைஞனும் நின்று என்னையே வெறிக்க,வெறிக்க குருகுருவென்று பார்த்துக்கொண்டிருந்தான். ஆஹா, நம்மளை அடையாளம் கண்டுகொண்டு விட்டானே? உள்ளூர்க்காரனாக இருந்து திருச்சி ஏர்போர்ட்டை விட்டு நாம் வெளியேறும் சமயம் நம்மை அடியாள் வைத்து டின்னுக்கட்டிருவானோ? என மனதின் ஓரத்தில் கொஞ்சம் பயம் வர ஆரம்பித்து விட்டது. அவனை கேர் செய்யாமல் நான் என் சாமான்கள் வரும் வழியை மட்டும் நோக்கிக்கொண்டிருந்தேன். 

இருந்தாலும் அவனை பார்க்காமல் இருக்க முடியவில்லை. அவன் பெட்டி ஒன்று சக்கர பெல்ட்டில் சுழன்று வந்து கொண்டிருந்தது. அதை பார்த்த அவன் உடனே லபக்குண்டு எடுத்தான். எதார்த்தமாக அந்த பெட்டியில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரை நோக்கினேன். அஸ்தஹ்ஃபிருல்லாஹ்!!! அதில் முஸ்லிம் பெயர் எழுதப்பட்டிருந்தது (பயத்தில் அந்த பெயரை மனதில் பதிய வைக்க முடியாமல் போனது). உடனே நேராக அவனிடம் சென்று அடப்பாவிப்பயலே என்று ஒரு கன்னத்தில் அரை விட்டு வர மனம் நாடியது. ஏன் தேவையில்லாமல் அவனிடம் சென்று எசல வேண்டுமென்று விட்டு விட்டு என்னை அழைத்துச்செல்ல திருச்சி விமான நிலையம் வந்திருந்த என் தகப்பனார், பிள்ளைகளுடன் நல்லபடி அன்று ஊர் வந்து சேர்ந்தேன். அல்ஹம்துலில்லாஹ்....... 

விமானத்தில் சில நேரங்கள் நம்ம ஆளுஹலும் யாருக்குத் தெரியப்போவுது? என்று குடித்து விடுவது ஒரு வேதனையான, விழிப்புணர்வு இல்லாத பாவச்செயலாகிவிடுகிறது. சகோ. அர. அப்துல் லத்திஃப் தன் கட்டுரையில் குறிப்பிட்டது போல அமெரிக்காவிலிருந்து வருபவர்கள் அடக்கமாகத்தான் வருகிறார்கள். இந்தியாவிற்கு அக்கம்பக்கத்து நாடுகளிலிருந்து வருபவர்கள் தான் அலிச்சாட்டியம் அதிகம் செய்கிறார்கள். 

இது தாங்க நடந்துச்சி.......

மு.செ.மு. நெய்னா முஹம்மது
இது ஒரு மீள்பதிவு

ஒளரங்கசீப் நான்மணி மாலை - பகுதி - 3 [வரலாறு பதிக்கப்படுகிறது] 4

அதிரைநிருபர் பதிப்பகம் | November 26, 2013 | , , , ,

சிந்தையின்றிப் பூட்டிச் சிறையினில் வாட்டியே
தந்தையையும் வீணாகத் தண்டித்த- விந்தைமிகுச்
செய்தியாகச் சொல்லுமவர் செய்தத் தவறென்ன
கைதியாய்த் தந்தையைக் காண்.

காணும் தவற்றினைக் கூறிப் பிதற்றிடும் காரணங்கள்
பேணும் ஒழுக்கம் பிறழா இணையிலாப் பேரெளிமை;
நாணும் அரசரின் ஆளும் விவேகமும் நானிலங்கள்
பூணும் விரிவினால் காழ்ப்பினைப் பொய்மையில் பூசினரே!

பூசி மறைக்கும் பொழுதினில்
.....பொய்யாய்த் திரித்துச் சரித்திரம்
பேசி மக்கள் மனத்தினில்
....பேதம் கொள்ளச் செய்வதே
கூசி டவைக்கும் இவர்களின்
...கூட்டுச் சதியாம் கதைகளைத்
தூசி தட்டி உள்ளமைத்
...தூய்மை ஈண்டு நிலவுமே!

நிலவிடும் தவறுகள் நிகழா வண்ணமே
பலவித முயற்சிகள் பரிவுடன் தடைகட்
செய்தார் ஔரங்க சீப்பென வெகுண்டே
பொய்கள் கொண்டுதான் புனைந்தனர் வரலாற்(று)
ஆசிரி யரென்போர் ஆரியர் குழுவாம்
மாசில் மன்னரின் மகிமையை மறைத்துப்
போட்டவைப் புலம்பலின் பொடியாய்க்
காட்டும் மெய்கள் கட்டுரை வழியே!

“கவியன்பன்” கலாம்

கண்கள் இரண்டும் - தொடர் - 13 26

அதிரைநிருபர் பதிப்பகம் | November 25, 2013 | , , , ,


கண்ணில் நீர் அழுத்தம்

சிலருக்கு சில வண்ணங்களைப் பார்த்தறிய முடியாத நிறப்பார்வைக் குறைவு (Colour Blindness) இருக்கும். இக்குறைபாட்டை பின்வரும் மூன்று சோதனைகள் மூலம் கண்டறியலாம்.

ஹோம்கிரீன் நிறக்கம்பளச் சோதனை (Holm green wool Test)
இஷிகாரா பல வண்ண எண் அட்டை சோதனை
எட்ரிட்ஜ் விளக்குச் சோதனை (எட்ரிட்ஜ் விளக்குச் சோதனை (Edridge lantem Test)

இராணுவம், கடற்படை, வான்படை, காவல் துறை, போக்குவரத்துத் துறை ஆகிய துறைகளில் வேலை வாய்ப்புகளை விரும்புவோர்க்கு நிறப்பார்வை குறைபாடு ஒரு தகுதிக் குறைவாகும்.  
     
க்ளகோமா எனப்படும் கண்நீர் அழுத்த நோய்:      

'க்ளாக்கோமா' என்பது கண்ணின் பார்வை நரம்பைப் பாதித்து, பார்வை இழப்பை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு ஆபத்து நிறைந்த கண் பிரச்னைகளின் தொகுப்பு. உலக அளவில், கண் பார்வை இழப்புக்கான காரணிகளில், 'க்ளாக்கோமா' இரண்டாம் இடத்தில் இருக்கிறது. 

நம் கண்ணின் முன்பகுதியில் உள்ள அறையில் சுரக்கும் நீரின் அழுத்தம், சாதாரண நிலையிலிருந்து படிப்படியாக அதிகரிக்கும்போது ஏற்படும் பிரச்னை இது. கண்ணின் உள் நீர் அழுத்தமானது, பார்வை நரம்பினால் தாங்கக் கூடிய அளவை தாண்டும்போது, 'க்ளாக்கோமா’ ஏற்படுகிறது.  "ஆரம்பக்கட்ட நிலையிலேயே கண்டுபிடித்து உரிய சிகிச்சையை வழங்கினால், குணம் பெறலாம். ஆனால், படிப்படியாகவே இதன் பாதிப்பு ஏற்படுவதால், தங்களுக்கு இந்நோய் இருக்கிறது என்பதே தெரியாதவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். அதனால் தான் மருத்துவர்கள் 'க்ளாக் கோமா'வை 'நமக்கே தெரியா மல் நம் கண்ணுக்குள் மறைந்திருந்து தாக்கும் கள்வன்' என்கிறார்கள். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், மரபுக் காரணங்களால், ஏற்கெனவே 'க்ளாக்கோமா’ நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த சொந்தங்களுக்கும், சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கும் மற்றும் அதிக கிட்டப்பார்வை உள்ளவர்களுக்கும் 'க்ளாக்கோமா’ பாதிப்பு ஏற்படலாம். 

தலைவலி, கண்வலி, சிவந்த கண்கள், குமட்டல், பக்கவாட்டுப் பார்வை பாதிப்பு, படிப்படியான பார்வை இழப்பு போன்ற கண் பிரச்னைகள், 'க்ளாக்கோமா'வுக்கான அறிகுறிகள். பொதுவாக நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் முழுமையான கண் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. 

அடிக்கடி கண் பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள், கண்ணின் உட்பகுதிகளை முழுமை யாக அறியும் சில சிறப்புப் பரிசோதனையின் மூலம், 'க்ளாக்கோமா' பாதிப்பை அறியலாம். நோயின் படிநிலையைப் பொறுத்து சொட்டு மருந்தில் இருந்து அறுவை சிகிச்சை வரை இதற்கான சிகிச்சைகள் விரிகின்றன. எனவே, கண் மருத்துவருடன் இணைந்து செயலாற்றுவதன் மூலம் பார்வையை பாதுகாக்க முடியும். 

நீரிழிவு விழித்திரை நோய்

பாரதம் நீரிழிவின் தலைநகரமாக உள்ளது. நீரிழிவின் தாக்கத்திற்குள்ளானவர்கள், வருடம் ஒரு முறை கண்டிப்பாக முழுமையான கண் பரிசோதனை செய்துகொள்வதன்மூலம் நீரிழிவு விழித்திரை நோயினால் பார்வையை இழப்பதைத் தடுக்க முடியும். மேலும் பெற்றோர்களுக்கு அல்லது பெற்றோர்களில் யாரேனும் ஒருவருக்கு நீரிழிவு  இருக்குமேயானால், அவர்களது சந்ததியினர் தமது முப்பது வயது முதல்,  வருடம் ஒரு முறையேனும், தமக்கு நீரிழிவு பிரச்னையிருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மருத்துவர்கள் ஆலோசனைப்படி வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள வேண்டும். அதன் மூலம் நீரிழிவு விழித்திரை நோய் உட்பட நீரிழிவு சார்ந்த உடல் நலப் பிரச்னைகளை தவிர்க்க வாய்ப்புள்ளது.

கண் பார்வையைப் பாதிக்கும் சர்க்கரை நோய்

சர்க்கரை நோய் என்பது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சாதாரணமாக இருப்பதைவிட அதிகமாயிருப்பதுடன் , இரத்த குழாய்களில் பாதிப்பையும் ஏற்படுத்தும், இது பரம்பரை வியாதியும் ஆகும். பெற்றோர்களுக்கு சர்க்கரை நோய் இருப்பின் நாற்பது வயதுக்கு மேல் சர்க்கரை நோய் பாதிப்பும், கண் பார்வை பாதிப்பும் ஏற்படும் வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது. சர்க்கரை நோய் இரு வகைப்படும்.

சிறுவயதிலேயே ஏற்படுவது
வயாதனவர்களுக்கு வருவது

சிறுவயதிலேயே ஏற்படும் சர்க்கரை நோய்க்கு இன்சுலின் கட்டாயம் தேவை.வயதானவர்களுக்கு வருவது- இவர்களுக்கு இன்சுலின் தேவையில்லை. இதை உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் மாத்திரையின் உதவியால் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள முடியும்.

அதிக்கப்படியான உடலுறவு, கொழுப்புச்சத்து உள்ளவர்கள், 40 வயது கடந்தவர்கள் , மது அருந்துவோர், ஆகியோருக்கு வர வாய்ப்புள்ளது, குழந்தைகளில் தட்டம்மை மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வர வாய்ப்புள்ளது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிக்கரிப்பதால் ஏற்படக்கூடிய விளைவுகள் மிகவும் அபாயம், குறிப்பாக பார்வை இழப்பு , நரம்புகள் பாதிப்பு, சிறுநீரகம் பாதிப்பு, இருதயம் பாதிப்பு, போன்ற பின்விளைவுகள் எவ்வித அறிகுறியும் இல்லாமலேயே ஏற்பட்டுவிடும். எப்பொழுதும் இரத்தத்தில் இருக்க வேண்டிய சர்க்கரையின் அளவு காலையில் சாப்பாட்டிற்கு முன் 120 கிராம்.

காலையில் சாப்பிட்ட 2 மணி நேரத்திற்குப்பிறகு 180 மி.கி இருப்பது இரத்தத்தின் அளவு சீராக இருப்பதை குறிக்கும் , நாம் சாப்பிடும் உணவிற்கேற்ப இரத்தத்தில் சர்கரையின் அளவில் மாற்றம் ஏற்படும் ஒருவரின் இரதத்ததில் சர்க்கரையின் அளவு 300மி.கி வரை எவ்வித அறிகுறியும். இல்லாமல் இருக்கலாம். மனித உடலில் சர்க்கரை என்பது கட்டுப்படுத்தலாமே ஒழிய பூரணமாக குணப்படுத்த முடியாது. சிலர் புகையிலை, சிகரெட் , மதுபானம் இவைகள் உபயோகிக்கும்பொழுது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். சர்க்கரை பாதிப்புள்ளவர்கள் குறைந்தது 3 மாதத்திற்கு ஒருமுறை கண், சிறுநீரகம், இருதயம், நரம்புகள் இவற்றில் பாதிப்பு உள்ளதா என்பதை பரிசோதித்து கொள்வது நல்லது. 

இரத்தத்தில் சர்க்கரையின் அளவை உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு, மாத்திரைகள் இவைகளை பயன்படுத்தி கட்டுப்படுத்த தவறினால் சர்க்கரை மிகவும் அதிகரித்த நிலையில் இரத்த குழாயில் பாதிப்பும் அடைப்பும் ஏற்பட்டும் மரணம் ஏற்படும் சூழல் உருவாகும், எனவே சர்க்கரை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்துவது நமது கண்களின் பார்வையிழப்பை தடுத்திட உதவும். பார்வைக் குறைபாடு ஏற்பட்டால் இவ்வியாதி முற்றிய நிலையில் முழுமையாக குணப்படுத்த முடியாது. கண்ணில் ஏற்படும் ஒளித்திரை மாறுபாடுகளைத் தவிர சர்க்கரை நோயினால் கண்புரை, கண்ணில் நீர் அழுத்தம் அதிகரித்தல் ஆகியவை ஏற்படலாம். இவற்றையும் கண் மருத்துவர் பரிசோதித்து தக்க சிகிச்சை அளித்திடுவார்.

மாறுகண்

நமது கண்களில் ஒவ்வொரு கண்ணிலும் 6 தசைநார்கள் உள்ளன. இவைகளின் உதவியால் இரு கண்களும் ஒரே சீராக ஒரே கோணத்தில் அசைகின்றன. நமது இரண்டு கண்களும் கீழ் நோக்கியோ, வலது புறமாகவோ, இடது புறமாகவோ, ஒன்று போல் அசைவதால் இரு கண்களின் பார்வையும் ஒன்றுபோல் அமைந்து, 

கண்ணால் பார்க்கப்படும் பொருளின் நீளம், அகலம் , உயரம் ஆகியவை பற்றி விவரமாக தெரிந்து கொள்ள முடிகிறது. இதற்கு இரு கண்களின்) பார்வையும் கண்ணாடி அணிந்தோ, அணியாமலோ ஓரே சீராக அமைந்திடல் வேண்டும். அப்போழுதுதான் இரு கண்களிலும் விழக்கூடிய பொருளின் பிம்பம் ஓரே சீராக பார்க்கப்பட்டு எடுத்துச்செல்லப்பட்டு மூளையின் பின்பகுதியில் உள்ள கார்டெக்ஸ் என்ற இடத்தில் பதிவு செய்யப்பட முடியும் இந்தச் செயல் சீராக அமையாவிட்டால் மாறுகண் ஏற்படுகிறது. மாறுகண் உள்ளவர்கள் பார்வை எங்கு விழுகிறது என்பதை சரியாக கூற முடியாது, பார்வை கண்ணுக்கு கண் மாறி இருப்பதால் இதனை மாறுகண் என்று கூறுகிறோம்

இன்ஷா அல்லாஹ் அடுத்து வரும் பதிவில் கண்களில் ஏற்படும் கண்புரை நோய்கள் பற்றியும் அதன் பாதிப்புகள் பற்றியும் தொடர்கின்றன.

தொடரும்
அதிரை மன்சூர்

உருவப்படம் வரைதல் - ஓர் ஆய்வு ! 15

அதிரைநிருபர் பதிப்பகம் | November 24, 2013 | , ,

றிவியல், நவீன கண்டுபிடிப்புகள், நவீன கருவிகள் இவற்றுக்கு இஸ்லாம் எதிரானதல்ல. ஒவ்வொரு நவீன கருவியும் அறிமுகமான தொடக்கத்தில் மார்க்கத்தின் மீதான அளவிலா பற்றின் காரணமாக அவற்றை இஸ்லாமிய அறிஞர்கள் எதிர்த்துத் தடை செய்து வந்தனர். பின்னர் படிப்படியாக அனுமதித்து நடைமுறைப் படுத்தலாம் என தீர்ப்பு வழங்கினார்கள்.

"குர்ஆன் மொழி பெயர்ப்பைத் தமிழில் தருவது ஹராம்" என்று தீர்ப்பு வழங்கினார்கள். இன்று குர்ஆனுக்குத் தமிழ் மொழி பெயர்ப்புகள் பல வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை மார்க்க அறிஞர்கள் ஏற்றுக் கொண்டனர்.

ஒலி பெருக்கி அறிமுகமான காலத்தில் அது "ஷைத்தானின் கருவி. ஷைத்தானின் கருவியைப் பயன்படுத்துவது ஹராம்" என்று அறிஞர்கள் தீர்ப்பு வழங்கினார்கள். அதனால் தொழுகைப் பள்ளிகளில் ஒலி பெருக்கி அமைப்பதற்குத் தடையாக இருந்தது. பின்னர் துணிச்சலுடன் சில அறிஞர்களும் பள்ளி நிர்வாகிகளும் முன்வந்து பள்ளிகளில் ஒலி பெருக்கி அமைத்தார்கள். இன்று ஒலிபெருக்கி வழியாக அறிஞர்கள் மார்க்கப் பிரச்சாரம் செய்கின்றனர்.

தொலைக்காட்சிப் பெட்டி - டிவி அறிமுகமான அந்தக் காலத்தில் "டிவியில் உருவங்கள் வருகின்றன. எனவே, ஷைத்தான் பொட்டியான டிவி ஹராமானது" என்று தீர்ப்பு வழங்கினார்கள். இந்தக் காலத்தில் அறிஞர்கள் டிவியில் தோன்றி மார்க்கப் பிரச்சாரம் செய்கின்றனர். இவ்வாறு நவீன கருவிகளுக்கெல்லாம் துவக்கத்தில் எதிர்ப்பும் அவை நடைமுறைக்கு வந்த பின்னர் அவற்றிலுள்ள நன்மைகளைக் கண்டு, படு உற்சாகத்துடன் அறிஞர்கள் அதில் பங்காற்றுவதைப் பார்க்கிறோம்.

அந்த வகையில், "உருவப்படம் வரைவது ஹராம்" என்று முன்னர் தீர்ப்பு வழங்கப்பட்டது. இன்று விளம்பர சுவரொட்டிகளில் தம் உருவப்படம் வரவில்லை என்றால் ஹராம் என்று சொல்லுமளவுக்கு பத்திரிக்கை, நோட்டீஸ், சுவரொட்டி, கம்ப்யூட்டர், டிவிடிக்கள், இணைய தளங்கள் என அறிஞர்களின் உருவங்கள் பதிவு செய்யப் படுகின்றன. கல்விப் பாடங்கள், அறிவியல் கல்வி, சமூக அவலங்கள் என பொதுமக்கள் நலனில் அக்கறை கொண்ட பயனுள்ளவைகளை தொலைக்காட்சியில் கண்டு மக்கள் அறிவை வளர்த்துக் கொள்கின்றனர். ஒரு டி.வி.டி யில் லட்சக் கணக்கான உருவப்படங்கள் பதிவு செய்யப் படுகின்றன என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

உருவப்படம் ஹராம் என்று சொல்பவர்களாலும் உருவப்படங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க இயலாது என்று சொல்லுமளவுக்கு இன்று உருவப்படங்கள் கட்டாயத் தேவை என்ற காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவே, 'இஸ்லாம் உருவப்படம் வரைதலைத் தடைசெய்துள்ளது' என்பதை எவ்வாறு விளங்க வேண்டும் என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.

ஓரிறைவனை வணங்குவது இஸ்லாமின் அடிப்படைக் கொள்கை. எல்லா இறைத்தூதர்களும் ஓரிறைக் கொள்கையின் அடிப்படையில் வாழ்க்கை நெறியினைப் போதித்தனர். ஒரு சமூகத்துக்கு அனுப்பப்பட்ட நபியின் மறைவுக்குப்பின், அச்சமுதாயத்தினர் மன ஆசைக்கு உட்பட்டு, தான்தோன்றித்தனமாக வாழ்க்கையை அமைத்து, "இதைத்தான் அல்லாஹ் எங்களுக்கு ஏவினான்" என்றும் வாய் கூசாமல் இறைவனின் மீது இட்டுக்கட்டிப் பொய்யுரைத்தனர்.

அவர்கள் ஏதேனும் ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்துவிட்டால், "எங்கள் மூதாதையர்களை இதன் மீதிருக்கவே கண்டோம். அல்லாஹ்வும் இதையே எங்களுக்கு ஏவினான்" என்றும் கூறுகின்றனர். அல்லாஹ் மானக்கேடானவற்றை ஏவமாட்டான். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (இட்டுக் கட்டிக்) கூறுகின்றீர்களா? என்று (நபியே) நீர் கேட்பீராக! (அல்குர்ஆன் 007:028)

மானக்கேடான காரியங்களைச் செய்வதற்கு மட்டுமல்லாமல், இறைவனுக்கு இணை தெய்வங்களை ஏற்படுத்தி அவற்றை வணங்குவதற்கும் முன்னோர்களை ஆதாரம் காட்டி நியாயப்படுத்தினர்.

"...எங்கள் மூதாதையர்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களை விட்டுவிட்டு அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்க வேண்டும் என்பதற்காகவா நீர் எம்மிடம் வந்துள்ளீர்?..." என்று கூறினர். (அல்குர்ஆன் 007:070) "...எமது மூதாதையர்கள் வணங்கியதை நாங்கள் வணங்குவதை விட்டும் எங்களைத் தடுக்கின்றீரா?..." என்று கூறினர். (அல்குர்ஆன் 011:062)

இஸ்லாத்தின் மீளெழுச்சியின்போது ஓரிறைக் கொள்கையை எதிர்த்தவர்கள், 'எம் மூதாதையர்களை எந்த வழியில் கண்டோமோ அந்த வழியை நாங்களும் பின்பற்றுவோம்' என்று கொள்கையளவில் பல தெய்வக் கொள்கையை நம்பிக் கொண்டிருந்தனர். உருவச் சிலைகளை வணங்கி வழிபாடு நடத்தி, "எங்கள் முன்னோர்களை இப்படித்தான் கண்டோம், நாங்களும் அவர்களையேப் பின்பற்றுவோம்" என்றும் கூறிவந்தனர். இக்கருத்தைக் குர்ஆன் நெடுகிலும் பல வசனங்களில் காணலாம்.

உருவச் சிலைகள், உருவப் படங்கள் ஆகியவை இறைவனுக்கு இணைகற்பித்தல் எனும் மாபெரும் பாவத்தைச் செய்திடத் தூண்டுதலாக அமைந்துள்ளன. தந்தை தெய்வமாக வணங்கிய உருவத்தை மகன் வணங்கி வழிபடுவது இயல்பு. இவ்வாறு தலைமுறை தலைமுறையாக உருவச்சிலைகள், உருவப்படங்கள் தொடர்ந்து வணங்கி வழிபாடு நடத்தப்பட்டு வந்தன. இறைவனுக்கு இணைவைக்கும் கொடிய பாவத்திலிருந்து மக்களை மீட்டெடுக்க உருவச் சிலைகள் செய்வதும் விற்பதும்,  உருவப்படங்கள் வரைதலும் விற்பதும் குற்றமெனத் தடைவிதித்து கடுமையாக எச்சரித்துள்ளது இஸ்லாம்!

கப்ரு - மண்ணறையை வணங்குதல்

நபி(ஸல்) அவர்களுக்கு மரண வேளை நெருங்கியபோது தங்களின் போர்வையைத் தங்களின் முகத்தின் மீது போடுபவர்களாகவும் மூச்சுத் திணறும்போது அதைத் தம் முகத்தைவிட்டு அகற்றுபவர்களாகவும் இருந்தனர். அந்த நிலையில் அவர்கள் இருக்கும்போது "தங்கள் நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணக்கஸ்தலங்களாக ஆக்கிய யூத-கிறிஸ்தவர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும்" எனக் கூறி யூத-கிறிஸ்தவர்களின் செய்கை பற்றி எச்சரித்தார்கள். (அறிவிப்பாளர்கள்: ஆயிஷா (ரலி) இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரி 435-0437; முஸ்லிம் 826 , நஸயீ 2047, அபூதாவூத் 3227, அஹ்மத்).

ஓர் இறைவனை வணங்கும்படி ஓரிறைக் கொள்கையின் பக்கம் அழைத்த நபிமார்களையும் யூத, கிறிஸ்தவர்கள் விட்டு வைக்கவில்லை. இறைவனிடமிருந்து செய்திகளைப் பெற்று மக்களுக்கு அறவுரைகளைப் போதிக்க நியமிக்கப்பட்ட நபிமார்கள் மரணித்து விட்டால், அவர்களின் அடக்கத்தலத்தில் ஆலயம் எழுப்பி வணக்கத்தலமாக்கி நபிமார்களின் மண்ணறைகளை வணங்கி வழிபாடு செய்தனர்.

உம்மு ஹபீபா(ரலி)வும் உம்மு ஸலமா(ரலி)வும் தாங்கள் அபிசீனியாவில் கண்ட உருவங்கள் இடம் பெற்ற (கிறிஸ்தவ) கோவிலைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அவர்களுள் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்துவிட்டால் அவரின் அடக்கஸ்தலத்தின் மேல் வணக்கஸ்தலத்தை அவர்கள் எழுப்பி விடுவார்கள். அந்த நல்லவர்களின் உருவங்களையும் அதில் பதித்து விடுவார்கள். மறுமை நாளில் அல்லாஹ்வின் சன்னிதியில் அவர்கள்தாம் படைப்பினங்களில் மிகவும் கெட்டவர்களாவர்" என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி 427, 434, 1341, 3873; முஸ்லிம் 822, நஸயீ 0704, அஹ்மத் 23731).

சமகாலத்தில் மக்களுடன் சேர்ந்து வாழ்ந்த நல்ல மனிதர் மரணமடைந்தால் அவரை அடக்கம் செய்து அவருடைய சமாதி மீது வணக்கத் தலத்தை நிறுவி, அதில் அவருடைய உருவப்படங்களைப் பொறித்துவிடுவார்கள். சமாதி, உருவ வழிபாடுகள் இப்படித் துவங்கி, பின்னாளில் சமாதிகளும் உருவங்களும் தெய்வங்களாக வழிபட்டுக் கொண்டாடப் படுகின்றன.

எடுத்துக் காட்டாக: கிறிஸ்தவ ஆலயங்களில் இறைத்தூதர் இயேசு அவர்களின் உருவச் சிலைகளும் உருவப்படங்களும் பதிக்கப்பட்டிருக்கும். அத்துடன் இயேசுவின் அன்னை மரியாவின் உருவச் சிலைகளும் உருவப்படங்களும் பதிக்கப்பட்டு, அன்னையும், மகனாரும் வணங்கப் படுவதைப் பார்க்கிறோம் - இயேசு, மரியா உருவ ஓவியங்கள் கிருஸ்தவர்களின் வீட்டில் வைத்து கடவுளாக வணங்கி ஆராதிக்கப் படுகின்றன - இச்செயலுக்கு முஸ்லிம்கள் சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்பது போல "தமிழகத்து தர்ஹாக்களைப் பார்த்து வருவோம்" என நல்லவர்கள் அடக்கம் செய்யப்பட்ட சமாதிகளின் மீது தர்ஹாக்களை எழுப்பி சமாதி வழிபாடு நடத்தி வருகின்றனர். - தர்ஹாக்களின் ஓவியங்கள் வீட்டில் வைத்து தீப ஆராதனையாக ஊதுவத்தி கொளுத்தி வைத்து வணங்கி ஆராதிக்கப்படுகின்றன - உருவ வழிபாடு கூடாது என இஸ்லாம் தடை விதித்திருப்பதால் தர்ஹாக்களில் உருவங்கள் பொறிக்கப்படவில்லை. மாறாக, சமாதியில் அடக்கம் செய்யப்பட்டவர் வணங்கப்படுகிறார். (தர்ஹாவின் சமாதி வழிபாடும், இறைவனுக்கு இணைகற்பிக்கும் செயலாகும் என்பது தனி விஷயம்)

உருவ வழிபாடுகளை ஒருபோதும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை! சமாதி வழிபாடு, உருவ வழிபாடு இவற்றை வேரோடும், வேரடி மண்ணோடும் அழித்திடவேண்டும் என்பதுதான் இஸ்லாத்தின் நிலைப்பாடு.

"மண்ணறை(கப்ரு)கள் மீது அமராதீர்கள், அவற்றை நோக்கித் தொழாதீர்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூமர்ஸத் கன்னாஸ் (ரலி) நூல்கள்: முஸ்லிம் 1768, திர்மிதீ 0971, நஸயீ 0760, அபூதாவூத் 3229, அஹ்மத்).

நாங்கள் ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்களுடன் ரோம் நாட்டிலுள்ள ரோடிஸ் தீவில் இருந்தோம். அங்கு எங்கள் நண்பர் ஒருவர் இறந்துவிட்டார். அப்போது ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்கள், எங்கள் நண்பரின் கப்ரைத் தரை மட்டமாக அமைக்கும்படி உத்தரவிட்டார்கள். "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கப்ரைத் தரை மட்டமாக்கும்படி உத்தரவிட்டதை நான் கேட்டுள்ளேன்" என்று சொன்னார்கள். (அறிவிப்பாளர்: ஸுமாமா பின் ஷுஃபை (ரஹ்) நூல்கள்: முஸ்லிம் 1763, நஸயீ 2030, அபூதாவூத் 3219, அஹ்மத்).

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அதே அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர், (தரையைவிட) உயர்ந்துள்ள எந்தக் கப்ரையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்!" என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபுல்ஹய்யாஜ் அல்அசதீ (ரஹ்) நூல்கள்: முஸ்லிம் 1764, திர்மிதீ 0970, நஸயீ 2031, அபூதாவூத் 3218, அஹ்மத்).

இறைவனுக்கு இணைவைக்கும் செயற்பாடுகளை இறைவன் மன்னிக்கவே மாட்டான் (அல்குர்ஆன் 004:116) என அறுதியிட்டுக் கூறியிருப்பதால், உருவ வழிபாடு என்பது இணைவைக்கும் செயல், அதனால் இஸ்லாம் உருவங்கள் வரைவதை, செதுக்குவதைத் தடைசெய்திருக்கின்றது.

உயிரினங்களின் உருவப் படங்கள் வரைவதைத் தடைசெய்வது தொடர்பான நம் அறிவுக்கெட்டிய சில அறிவிப்புகளைப் பார்த்துவிடலாம்.

முதல் வகை ஹதீஸ்கள்:

1) நான் இப்னு அப்பாஸ் (ரலி) உடன் இருந்தபோது ஒருவர் வந்து, 'அப்பாஸின் தந்தையே! நான் கைத்தொழில் செய்து வாழ்க்கை நடத்துபவன். நான் உருவங்களை வரைகிறேன்' எனக் கூறினார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), 'நபி(ஸல்) அவர்களிடம் நான் செவியுற்றதையே உமக்கு அறிவிக்கிறேன். "யாரேனும் ஓர் உருவத்தை வரைந்தால் வரைந்தவர் அதற்கு உயிர் கொடுக்கும்வரை அல்லாஹ் அவரை வேதனை செய்வான், அவர் ஒருக்காலும் அதற்கு உயிர் கொடுக்க முடியாது" என்று நபி(ஸல்) அவர்கள் கூற செவியுற்றுள்ளேன்' என்றார். கேட்டவர் அதிர்ச்சியுடன் பெருமூச்சுவிட்டார். அவரின் முகம் (பயத்தால்) மஞ்சள் நிறமாக மாறியது. அப்போது இப்னு அப்பாஸ் (ரலி), 'உமக்குக் கேடு உண்டாகட்டும்! நீர் உருவம் வரைந்துதான் தீர வேண்டும் என்றால் மரம் மற்றும் உயிரற்றவற்றை வரைவீராக!' என்றார். (அறிவிப்பாளர்: ஸயீது இப்னு அபில் ஹஸன் (ரஹ்) நூல்கள்: புகாரி 2225, 5963; முஸ்லிம் 4290, 4291, திர்மிதீ 1751, நஸயீ 5359, அபூதாவூத் 5024, அஹ்மத்).

2) நான் சிறியமெத்தை ஒன்றை விலைக்கு வாங்கினேன். அதில் உருவப் படங்கள் வரையப்பட்டிருந்தன. (வீட்டுக்கு வந்த) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அதைக் கண்டதும் வாசற்படியிலேயே நின்றுவிட்டார்கள், உள்ளே வரவில்லை. அவர்களின் முகத்தில் அதிருப்தி(யின் அறிகுறி)யினை நான் அறிந்து கொண்டு, 'இறைத்தூதர் அவர்களே! நான் அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் மன்னிப்புக் கோருகிறேன். நான் என்ன குற்றம் செய்துவிட்டேன்?' என்று கேட்டேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இது என்ன மெத்தை?' என்று கேட்டார்கள். அதற்கு நான், 'தாங்கள் இதில் அமர்ந்துகொள்வதற்காகவும், தலை சாய்த்துக் கொள்வதற்காகவும் இதைத் தங்களுக்காகவே நான் விலைக்கு வாங்கினேன்'' என்றேன். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'இந்த உருவப் படங்களை வரைந்தவர்கள் மறுமைநாளில் வேதனை செய்யப்படுவார்கள். மேலும் அவர்களிடம் 'நீங்கள் படைத்தவற்றுக்கு (நீங்களே) உயிர் கொடுங்கள்' என (இறைவன் தரப்பிலிருந்து இடித்து)க் கூறப்படும்'' என்று சொல்லிவிட்டு, 'உருவப்படங்கள் உள்ள வீட்டில் நிச்சயமாக (இறைவனின் கருணையைக் கொண்டுவரும்) வானவர்கள் நுழைவதில்லை'' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி 5181, 5937; முஸ்லிம் 4287, அஹ்மத், முவத்தா மாலிக்).

3) நான் அபூ ஹுரைரா(ரலி) அவர்களுடன் மதீனாவில் ஒருவரது வீட்டினுள் நுழைந்தேன். அதன் மேல் தளத்தில் உருவப் படங்களை வரைபவர் உருவங்களை வரைந்து கொண்டிருந்தார். அப்போது அபூ ஹுரைரா(ரலி), 'என் படைப்பைப் போன்று படைக்க எண்ணுபவனைவிட அக்கிரமக்காரன் வேறு யார் இருக்கமுடியும்? அவர்கள் ஒரு தானிய விதையையாவது படைத்துக் காட்டட்டும். ஓர் அணுவையாவது படைத்துக் காட்டட்டும் என்று (அல்லாஹ் கூறுவதாக) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல கேட்டேன்' என்றார்கள்... (நபிமொழிச் சுருக்கம், அறிவிப்பாளர்: அபூ ஸுர்ஆ பின் அம்ர் பின் ஜரீர் (ரஹ்) நூல்கள்: புகாரி 5953, 7559; முஸ்லிம் 4292, அஹ்மத்).

முஸ்லிம் ஹதீஸ் 4292இல், "மதீனாவில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த மர்வான் அல்லது ஸயீத் பின் அல்ஆஸுக்கு உரிய புதுமனை ஒன்றுக்கு நானும் அபூஹுரைரா (ரலி) அவர்களும் சென்றோம். அந்த மனையில் ஓவியர் ஒருவர் உருவப் படங்களை வரைந்து கொண்டிருந்தார்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

4) ...வட்டி (வாங்கி) உண்பவனையும், வட்டி உண்ணக் கொடுப்பவனையும், பச்சை குத்திவிடுபவளையும், பச்சை குத்திக் கொள்பவளையும், உருவப்படங்களை வரைகின்றவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள். (அறிவிப்பாளர்: அபூஜுஹைஃபா (ரலி) நூல்கள்: புகாரி 5962, அஹ்மத் 18281).

5) நாயும் (உயிரினங்களின் சிலைகள் அல்லது) உருவப் படங்களும் உள்ள வீட்டினுள் (இறைவனின் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ தல்ஹா (ரலி) நூல்கள்: புகாரி 3225, முஸ்லிம் 4278, திர்மிதீ 2804, நஸயீ 4282, அபூதாவூத் 4153, இப்னுமாஜா 3649, அஹ்மத்).

6) "உருவச் சிலைகளோ உருவப் படங்களோ உள்ள வீட்டில் (அருள்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 4293).

மேற்காணும் ஆறு அறிவிப்புகளும் உயிரினங்களின் உருவ ஓவியம் தீட்டுவதை வன்மையாகக் கண்டித்து எச்சரிக்கின்றன. உருவச் சிலையும், உருவப்படமும், நாயும் உள்ள வீட்டில் நன்மையைக் கொண்டுவரும் வானவர்கள் நுழையமாட்டார்கள் எனக் கூறி வீடுகளில் இவற்றைத் தவிர்க்கும்படியும் அறிவிக்கின்றன. இந்த அறிவிப்புகளின் கருத்துகளில் ஏறத்தாழ சற்று வார்த்தைகள் வித்தியாசத்தில் இன்னும் அனேக அறிவிப்புகள் உள்ளன. இந்த ஆதாரங்களின் அடிப்படைப் படிப்பினையாக,

உருவப்படம் வரைந்தவர் அந்த உருவத்துக்கு உயிர் கொடுக்கும்படி மறுமையில் வேதனை செய்யப்படுவார். அவரால் உயிர் கொடுக்க இயலாது. அதனால் வேதனையும் நீங்காது.

அடக்கத் தலத்தில் ஆலயம் எழுப்பி அங்கு அடக்கம் செய்யப்பட்டவரின் உருவப்படத்தை வரைந்து வைப்பவர்கள், படைப்பினங்களில் மகா மட்டமானவர்கள்.

"என் படைப்பைப் போன்று படைக்க எண்ணுபவனைவிட அக்கிரமக்காரன் யார்?" என்று அல்லாஹ் கேட்கிறான். 

உருவப் படங்கள் வரைபவர்களை நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்.

உருவப்படங்களும் நாயும் உள்ள வீட்டில் அருளைக் கொண்டுவரும் வானவர்கள் நுழைய மாட்டார்கள்.

ஆகியவற்றை எடுத்துச் சொல்லி "உருவப்படம் வரையக் கூடாது"' புகைப்படக் கருவியைக் கொண்டு உயிரினங்களின் உருவங்களைப் "புகைப்படம் எடுக்கக் கூடாது" ஒளிப்பதிவு செய்யும் கருவியைக் கொண்டு உயிரினங்களின் உருவங்களை "ஒளிப்பதிவு செய்யக் கூடாது" "வீடுகளில் உருவப்படங்களை வைத்திருக்கக் கூடாது" எனத் தீர்ப்பு வழங்குகின்றனர் சில அறிஞர்கள்.

முதல் வகையான மேற்கண்ட இவ்வறிவிப்புகளின் எச்சரிக்கை மட்டும் இருந்திருந்தால் மறுபேச்சுக்கே இடமில்லாமல், உயிரினங்களின் உருவப் படங்கள் வரைவதற்கும், உருவப் படங்களை பயன்படுத்துவதற்கும் தடையுள்ளது என்று சொல்லி முடித்து ஒதுங்கி விடலாம். ஆனாலும், விதிவிலக்காக வேறு சில அறிவிப்புகளும் உள்ளன அவற்றையும் இங்கு ஒப்பு நோக்க வேண்டும்.

இரண்டாம் வகை ஹதீஸ்கள்:

(1) எங்களிடம் திரைச் சீலையொன்று இருந்தது. அதில் பறவையின் உருவம் இருந்தது. ஒருவர் வீட்டுக்குள் நுழையும்போது அந்தத் திரையே அவரை வரவேற்கும். என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதை அப்புறப்படுத்து. நான் வீட்டுக்குள் நுழையும் போதெல்லாம் இவ்வுலக(த்தின் ஆடம்பர)ம்தான் என் நினைவுக்கு வருகிறது" என்று கூறினார்கள்... (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: முஸ்லிம் 4279, திர்மிதீ 2468, நஸயீ 5353, அஹ்மத்).

(2) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பி வந்தபோது, எனது வீட்டுவாசலில் நான் குஞ்சம் உள்ள திரைச் சீலையொன்றைத் தொங்கவிட்டிருந்தேன். அதில் இறக்கைகள் கொண்ட குதிரைகளின் உருவங்கள் இருந்தன. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை (அகற்றுமாறு) உத்தரவிட, அவ்வாறே அதை நான் அகற்றிவிட்டேன். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம் 4281).

(3) ஆயிஷா (ரலி) அவர்களிடம் உருவச் சித்திரங்கள் பொறித்த திரைச் சீலை ஒன்று இருந்தது. அதனால் வீட்டின் ஒரு பகுதி(யிலிருந்த அலமாரி)யை அவர்கள் மறைத்திருந்தார்கள். (அதை நோக்கித் தொழுத) நபி(ஸல்) அவர்கள், 'இதை அகற்றிவிடு. ஏனெனில், இதிலுள்ள உருவப்படங்கள் என் தொழுகையில் என்னிடம் குறுக்கிட்டுக் கொண்டேயிருக்கின்றன' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி) நூல்கள்: புகாரி 5959, முஸ்லிம் 4284, அஹ்மத் 12122. முஸ்லிம் நூல் அறிவிப்பில், ஆகவே "அதை நான் அப்புறப்படுத்தி அதைத் தலையணை(இருக்கை)களாக ஆக்கி விட்டேன்" என்று இடம்பெற்றுள்ளது).

(4) நான் என்னுடைய அலமாரி (நிலைப் பேழை) ஒன்றின் மீது (மிருகங்களின்)  உருவங்கள் (வரையப்பட்டு) இருந்த ஒரு திரைச் சிலையைத் தொங்க விட்டிருந்தேன். அதை நபி(ஸல்) அவர்கள் கிழித்துவிட்டார்கள். எனவே, அதிலிருந்து நான் இரண்டு மெத்தை இருக்கைகளைச் செய்து கொண்டேன். அவை வீட்டில் இருந்தன அவற்றின் மீது நபி (ஸல்) அவர்கள் அமர்வார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 2479).

நபி (ஸல்) அவர்களின் வீட்டில் உருவ பொம்மைகள் இருந்தன.

(5) நான் (சிறுமியாக இருந்தபோது) பொம்மைகளை வைத்து விளையாடுவேன். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்டதும் தோழியர் (பயந்து கொண்டு) திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பி வைப்பார்கள். தோழிகள் என்னுடன் (சேர்ந்து) விளையாடுவார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி 6130, முஸ்லிம் 4827, அபூதாவூத் 4931, இப்னுமாஜா 1982, அஹ்மத். முஸ்லிம் நூல் (4827) அறிவிப்பில், ''நான் நபி (ஸல்) அவர்கள் இல்லத்தில் பொம்மைகள் வைத்து விளையாடுவேன்'' என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது).

(6) நான் ஏழு வயதுடையவளாக இருந்தபோது, நபி (ஸல்) அவர்கள் என்னை மணந்து கொண்டார்கள். நான் (பருவமடைந்து) ஒன்பது வயதுடையவளாக இருந்தபோது, அவர்களிடம் அனுப்பிவைக்கப்பட்டேன். அப்போது விளையாட்டுப் பொம்மைகள் என்னுடன் இருந்தன. நான் பதினெட்டு வயதுடையவளாக இருந்தபோது, நபி (ஸல்) அவர்கள் என்னை விட்டு இறந்தார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: முஸ்லிம் 2780, நஸயீ 3378). 

விளையாட்டுப் பொம்மைகளில் உயிரினங்களின் உருவங்களும் இருந்தன.

(7) நபி (ஸல்) அவர்கள் தபூக் அல்லது கைபர் இரண்டில் ஏதோ ஒரு போர்க்களத்திலிருந்து திரும்பி வந்தார்கள். அப்போது காற்று வீசி ஆயிஷா (ரலி) அவர்களின் விளையாட்டுப் பொம்மைகளுக்குப் போடப்பட்டிருந்த திரை விலகியது. அதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் "யா ஆயிஷா என்ன இது?'' என்றார்கள். "என் பொம்மைகள்'' என்று  கூறினேன். அவற்றுக்கிடையே இரண்டு இறக்கைகளைக் கொண்ட குதிரை பொம்மை ஒன்றைக் கண்டு, அதோ நடுவில் உள்ள அந்தப் பொம்மை என்ன? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். "குதிரை'' என்று கூறினேன். குதிரையின் மேல் என்ன? என்று கேட்டார்கள். "இறக்கைகள்'' என்று கூறினேன். குதிரைக்கும் இரண்டு இறக்கைகளா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, "ஏன் சுலைமான் நபியிடம் இறக்கைகள் உள்ள குதிரை இருந்ததாக நீங்கள் கேள்விப்பட்டதில்லையோ?'' என்று கேட்டேன், இதைக் கேட்டதும், அவர்களின் கடவாய்ப்பற்களை நான் காணும் அளவுக்கு சிரித்தார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்: அபூதாவூத் 4932).

(7வது அறிவிப்பில், "கைபர் அல்லது தபூக்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கைபர் போர் ஹிஜ்ரி ஏழாம் ஆண்டு நடைபெற்றது. தபூக் போர் ஹிஜ்ரி ஒன்பதாம் ஆண்டு நடைபெற்றது).

உருவப் படங்கள் தொடர்பாக மேற்கண்ட இரண்டாம் வகை ஹதீஸ்களின் கருத்துக்களையொட்டி, சற்று முன்-பின் வாசகங்கள் வித்தியாசத்தில் இன்னும் அனேக அறிவிப்புகள் உள்ளன. இரண்டாம் வகை ஹதீஸ்களிலிருந்து, எவ்வித மதிப்பும் அந்தஸ்தும் வழங்காமல் சில காரண காரியங்களுக்காக வீடுகளில் உருவப்படங்களை வைத்திருக்கலாம்; உருவப்படங்களைப் பயன்படுத்தலாம் என்று விளங்க முடிகிறது.

உருவப் படம் உள்ள வீட்டில் வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்கிற அறிவிப்பிற்கு எதிராக இன்று உருவப் படங்கள் இல்லாத வீடு இல்லை எனும் அளவுக்கு, புகைப்படங்கள், குடும்ப அட்டை, காப்பீடு அட்டை, வாக்காளர் அட்டை, செய்தித் தாள்கள், புத்தகங்கள், கல்விப் புத்தகங்கள், ரூபாய் நோட்டுக்கள், சில்லரைக் காசுகள் என இப்படி எவ்வளவோ உருவப் படங்கள் பதிக்கப்பட்டவை வீடுகளில் உள்ளன. இவை தவிர்க்க முடியாதவை. தவிர்ப்பது நடைமுறை சாத்தியமற்றது.

எடுத்துக் காட்டாக: பாலர் கல்வியை எடுத்துக் கொள்வோம். துவக்கத்தில் குழந்தைகளுக்கு உயிர் எழுத்துகள் கற்றுத் தரப்படுகின்றன. அ, அம்மா அல்லது அணில். ஆ, ஆடு. இ, இலை. ஈ, ஈயின் உருவம். உ, உரல். ஊ, ஊஞ்சல். எ, எலி. ஏ, ஏணி. ஐ. ஐவர். ஒ, ஒட்டகம், ஓ, ஓடம். ஒள, ஒளவையார். என குழந்தைகள் மனத்தில் உயிர் எழுத்துகளைப் பதிய வைக்க பாடப் புத்தகத்தில் உயிரினங்களின் உருவப்படங்களும் வரைந்து காட்டி கல்வி போதிக்கப்படும். குழந்தைகள் வீட்டில் இருக்கும் போதும் பாடப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருப்பார்கள். பாடப் புத்தகங்கள் வீட்டில்தான் இருக்கும். பாடப் புத்தகத்தில் உயிரினங்களின் உருவப்படங்கள் இருப்பதால் வானவர்கள் வீட்டில் நுழையமாட்டார்கள் என்று சொல்ல மாட்டோம்.

உருவப் படம் உள்ள வீட்டில் வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்கிற அறிவிப்பிற்கு எதிராக இன்று உருவப் படங்கள் இல்லாத வீடு இல்லை எனும் அளவுக்கு, புகைப்படங்கள், குடும்ப அட்டை, காப்பீடு அட்டை, வாக்காளர் அட்டை, செய்தித் தாள்கள், புத்தகங்கள், கல்விப் புத்தகங்கள், ரூபாய் நோட்டுக்கள், சில்லரைக் காசுகள் என இப்படி எவ்வளவோ உருவப் படங்கள் பதிக்கப்பட்டவை வீடுகளில் உள்ளன. இவை தவிர்க்க முடியாதவை. தவிர்ப்பது நடைமுறை சாத்தியமற்றது. உருவப்படம் கூடாது என்று சொல்பவரின் சட்டைப் பையில் உருவப்படம் வரையப்பட்ட பணம் இருக்கும். உருவப்படம் உள்ள அடையாள அட்டையும் இருக்கும்.

இன்று தொலைதூரம் என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. பொருளாதார வசதி இருந்தால் நினைத்த நேரத்தில் விரும்பிய நாட்டிற்குச் சென்று வரலாம். இதற்குப் பாஸ்போர்ட் கட்டாயம் வேண்டும். பாஸ்போர்ட்டின் உரிமையாளரை அடையாளப்படுத்த புகைப்படம் தேவை. அயல் நாட்டினர் உம்ரா, ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டுமாயின் பாஸ்போர்ட் இல்லாமல் இறை ஆலயமான கஅபா இருக்கும் சவூதி அரேபியா நாட்டிற்குள் சட்டப்படி நுழைய இயலாது. 

தொலைந்து போனவர்களைத் தேடும் முயற்சியில் "காணவில்லை" என்று அறிவிப்புச் செய்வதற்கும் காணாமல் போனவரின் புகைப்படம் தேவை. காவல் துறையினர் திருடர்கள் பற்றிய எச்சரிக்கை செய்வதற்கும், அயல் நாட்டிற்குத் தப்பியோடிய குற்றவாளியை இன்டர் நெட் மூலம் அடையாளப்படுத்துவதற்கும் உளவுத் துறைக்குப் புகைப்படங்கள் பெரும் உதவியாக இருந்து வருகின்றன.

காவல் துறை, நீதித்துறை, அரசுத்துறை என பல துறைகளிலும் புகைப்படங்களும், ஒளிப்பதிவுகளும் ஆவணங்களாகப் பத்திரப்படுத்தப் படுகின்றன! இன்னும் சொல்வதென்றால், புகைப்படம், ஒளிப்படம் இவை முக்கிய சாட்சிகளாகவும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. மோசடியைத் தவிர்க்க, வீடு நிலம் என அசையாச் சொத்துக்கள் வாங்கும்போது விற்பவர், வாங்குபவரின் புகைப்படங்கள் முத்திரைப் பத்திரத் தாள்களில் ஒட்டிப் பதிவு செய்யப்படுகின்றன. உருவப் படங்களால் இவ்வளவு பயன் இருந்தாலும், இஸ்லாம் முற்றாகத் தடைவிதித்திருந்தால் முஸ்லிம்கள் மறு பேச்சின்றிக் கட்டுப்பட வேண்டும்; அதில் மாற்றுக் கருத்து இல்லை!

திரைச் சீலையில் உயிரினங்களின் உருவப் படங்கள் தேவையா?

மறைவுக்காக வீட்டின் நுழைவாயிலில் திரைச் சீலையைத் தொங்க விடுகின்றனர். வெளியில் நடமாடும் ஆட்களின் பார்வை வீட்டிற்குள் எட்டாமலிருக்க திரைச் சீலை ஒரு மறைவு அவ்வளவுதான். அதற்கு துணி மட்டும் போதும். அதில் உருவப்படங்களை வரைந்து அலங்கரிப்பது வீட்டின் நுழைவாயிலை மதிப்பு மிக்கதாகக் கருதுவதாகும். இது தேவையற்ற அலங்காரம் என்பதுடன் திரைத் துணியில் வரையப்படும் உயிரினங்களின் உருவங்கள் மதிக்கப்படுகின்றன.

உருவப்படங்களின் மீதான இந்த மதிப்பைத்தான் இஸ்லாம் இல்லாமல் ஆக்குகின்றது. அதேத் திரைத் துணியைக் கிழித்து தரையில் விரித்து அதன் மீது அமர்ந்து கொள்ளலாம். மிதியடியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது திரைத் துணியைச் சுருட்டி வீட்டில் ஒரு மூலையில் வைத்து விட்டாலும் வானவர்கள் நுழையத் தடையில்லை!

(8) ஜிப்ரீல் (அலை - ஒருமுறை) அல்லாஹ்வின் தூதரது (இல்ல வாயிலில் நின்று உள்ளே வர) அனுமதி கோரினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) "உள்ளே வரலாம்" என அனுமதி வழங்கினார்கள். (ஆனால்) "உங்கள் வீட்டுத் திரைச் சீலையில் (உருவப்) படங்கள் உள்ள நிலையில் நான் எப்படி உள்ளே வருவேன்?  அதன் தலைகளை வெட்டி விடுங்கள்; அல்லது உருவங்களைச் சிதைத்துவிடுங்கள். வானவர் கூட்டமாகிய நாங்கள் உருவங்கள் வரையப்பட்ட இல்லங்களில் நுழைய மாட்டோம்" என ஜிப்ரீல் பதிலுரைத்தார். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: நஸயீ 5395, திர்மிதீ 2806, அபூதாவூத் 4158, அஹ்மத் 8018).

நஸயீ நூல் தவிர திர்மிதீ, அபூதாவூத், அஹ்மத் ஆகிய நூல்களில் கூடுதலாக வரும் கீழ்க்காணும் செய்தி பதிவுசெய்யப்பட்டுள்ளது.

என்னிடம் ஜிப்ரீல் (அலை) வந்தார்கள், "நான் நேற்றிரவு உங்களிடம் வந்திருந்தேன். உங்கள் வீட்டு வாசலில் உருவப்படங்கள் இருந்ததன் காரணமாக வீட்டுக்குள் நுழையவில்லை" என்று ஜிப்ரீல் (அலை) கூறினார்கள். வீட்டுத் திரைச் சீலையில் உருவப்படங்கள் இருந்தன. வீட்டில் ஒரு நாயும் இருந்தது, உருவப்படத்தின் தலையை நீக்கி அதை மரத்தின் வடிவம் போல் ஆக்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அந்தத் திரைச் சீலையைத் துண்டாக்கி மிதிபடும் வகையில் இரண்டு தலையணைகள் தயாரிக்குமாறும், நாயை வெளியேற்றுமாறும் கட்டளையிட்டார்கள். ஹஸன் அல்லது ஹுஸைனுக்கு சொந்தமான நாய்க் குட்டி, நபி (ஸல்) அவர்களின் கட்டிலுக்கடியில் இருந்தது. பின், அது வெளியேற்றப்பட்டது.

மிதிபடும் வகையில் மதிப்பற்ற உருவப்படங்கள் வீட்டில் இருக்கலாம். அதனால் வானவர்கள் நுழைய தடை இல்லை என்பதை மேற்கண்ட அறிவிப்பிலிருந்து விளங்குகிறோம்.

உலகப் பயன் பெறுவதற்காகப் பயன்படுத்தப்படும் உருவப் படங்கள் வீட்டில் வைத்திருக்க மார்க்க ரீதியாக எவ்விதத் தடையும் இல்லை! அப்படியானால் முதல் வகை ஹதீஸ்களின் நிலை என்ன? என்கிற வினா எழுகின்றது. இதற்கு வணங்கப்படும் உருவச் சிலைகளை வடிவமைக்கக் கூடாது, வணங்கப்படும் உருவப் படங்களை வரையக் கூடாது, வணங்கி வழிபாடு நடத்தும் சிலைகளும், உருவப் படங்களும் உள்ள வீட்டில் வானவர்கள் நுழையமாட்டார்கள் எனப் பொருள் கொள்வதே பொருத்தமாகும்.

"நாய்கள், உருவப்படங்கள் இருக்கும் வீட்டில் வானவர்கள் நுழையமாட்டார்கள் என்ற ஹதீஸில், 'வணங்கப்படும் உருவப்படங்கள்' என்று நாமாக விளக்கம் இணைத்துக் கொள்ள நமக்கு அதிகாரம் உண்டா?"

இல்லை!, மார்க்கத்தில் ஒன்றைக் கூட்டவோ குறைக்கவோ ஹலால், ஹராம் என்று விதிக்கவோ எவருக்கும் அதிகாரமில்லை. அதிகாரம் யாவும் அல்லாஹ்வுக்குரியது! ஹதீஸ்களிலிருந்து புரிந்து கொண்டதையே விளக்கமாக வைத்துள்ளோம். நாய்களைப் பற்றித் தடை விதிக்கும் ஹதீஸ்களைப் போலவே, விதிவிலக்காக வேட்டை நாய்களை வளர்த்துக் கொள்ளலாம் என்று அல்லாஹ்வின் தூதர் அனுமதியளித்திருக்கின்றார்கள் (புகாரி 2322). இந்த அனுமதி, கட்டாயத் தேவையைக் கருத்தில் கொண்டு வழங்கப்பட்டதாகும்.

உருவச் சிலைகள் உருவப் படங்கள் மட்டும் வணங்கப்படுவதில்லை. சில மதச் சின்னங்களும் வணங்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. சிலுவை, திரிசூலம், வேல் ஆகியவற்றைக் கடவுள்களின் சின்னங்கள் எனப் பிற மதத்தவர் வணங்கி வழிபட்டு வருகின்றனர். சிலுவைச் சின்னம் இல்லாத கிறிஸ்தவ தேவாலங்களைக் காண இயலாது. சிலுவை ஒரு தெய்வச் சின்னம் எனக் கருதி கிறிஸ்தவ மக்கள் வணங்குவதால், தோற்றத்தில் சிலுவைக் குறி போன்றவற்றையும் நபி (ஸல்) அவர்கள் சிதைத்துள்ளார்கள். 

நபி (ஸல்) அவர்கள் தங்களின் வீட்டில் சிலுவை போன்ற உருவங்கள் உள்ள எந்தப் பொருளையும் சிதைக்காமல் விட்டுவைத்ததில்லை. (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி 5952, அபூதாவூத் 4151, அஹ்மத் 23740).

மதச் சின்னங்கள் வணங்கப்படுவதால் சிலுவை சின்னத்தைப் போல் தோற்றமளித்தவைகளை நபி (ஸல்) அவர்கள் சிதைத்துள்ளார்கள். வணங்கப்படும் உருவப் படங்களும் சிதைத்து அழிக்கப்பட வேண்டும் என்பது இதிலிருந்து விளங்க முடிகிறது. 

மரணமடைந்த முன்னோர்களின் உருவப்படங்கள் மரச் சட்டமடித்து கண்ணாடியிட்டு சுவற்றில் மாட்டி, அதற்கு நெற்றியில் குங்குமம் சந்தனம் பொட்டுவைத்து மாலையிட்டு அவை பூஜிக்கப்படுன்றன. பிறமதத்தினர் வீட்டின் பூஜையறையில் முன்னோர்களின் உருவப்படங்கள் தெய்வமாக வணங்கப்படுகின்றன.

அம்மி, குழவி, ஆட்டுக்கல், உரல், கல் தூண் என இவற்றை வடிவமைக்கும் சிற்பியிடம் வியாபார சிந்தனை மட்டுமே இருக்கும். வேறு உணர்வு அதிலிருக்காது. ஆனால் ஆண் தெய்வங்கள், பெண் தெய்வங்கள் என உருவச் சிலைகளை வடிவமைக்கும் சிற்பி, அதை உருவாக்கும் போதே அதற்கு தெய்வீக ஆற்றல் உள்ளதாகக் கருதி ஆச்சாரத்துடன் விரதமிருந்து சிலையை வடிக்கிறார். தெய்வப் படங்களை ஓவியம் தீட்டும் ஓவியரும் அதற்கு தெய்வீக ஆற்றல் இருப்பதாகக் கருதி பக்தியுடன் உருவங்களைத் தீட்டுகிறார்.

செல்வங்களை அள்ளித் தரும் பெண் தெய்வம் கையிலிருந்து பொற்காசுகள் கொட்டுவது போலவும், கல்விக்கான பெண் தெய்வம் கையில் வீணை வைத்திருப்பது போன்றும் ஓவியரின் கற்பனைக் கேற்ப, இணைகற்பிக்கும் இணை தெய்வங்களின் உருவங்களை வரைந்தவரிடம், அவர் வரைந்த உருவப் படத்திற்கு உயிர் கொடுக்கும்படி மறுமையில் வேதனை செய்யப்படுவார் என்று விளங்கினால் முரண்பாடு இல்லை.

முற்றும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே!


உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

OUR YOUTUBE CHANNEL

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு

Labels

அதிரை (412) கவிதை (353) இபுராஹீம் அன்சாரி (206) Alaudeen.S (195) அதிரை அஹ்மது (180) அதிரை செய்திகள் (143) ஜாஹிர் ஹுசைன் (142) MSM (136) சபீர் (127) சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக் (117) அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து (113) இஸ்லாம் (103) தாஜுதீன் (94) ஷாஹுல் ஹமீது (89) அபுஇபுறாஹிம் (69) நபிமணியும் நகைச்சுவையும் (65) இக்பால் M.ஸாலிஹ் (62) j1 (59) கல்வி விழிப்புணர்வு (57) ரமளான் (55) அதிரைநிருபர் (52) விழிப்புணர்வு (47) கல்வி (45) உமர் தம்பி (43) P.பகுருதீன் (41) அதிரை மன்சூர் (41) அதிரை மெய்சா (40) இன்று (40) படிக்கட்டுகள் (40) அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (39) கண்கள் இரண்டும் (39) a1 (37) crown (37) அரசியல் (37) நாளை (37) நேற்று (37) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (35) அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் (34) ADT (33) அதிரை அஹ்மத் (33) பேறு பெற்ற பெண்மணிகள் (33) சாஹுல் ஹமீது (32) S.அலாவுதீன் (31) ie (30) p1 (30) பேசும் படம் (30) மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் (30) வாவன்னா (28) தேனீ (27) SMF (26) அதிரை முஜீப் (26) மருத்துவம் (26) வரலாறுகள் (26) வழக்குகள் (26) ஹஜ் (26) கவியன்பன் (25) தேர்தல் (24) k1 (22) அதிரை தாருத் தவ்ஹீத் (22) இப்னு அப்துல் ரஜாக் (22) தமிழகம் (22) தமிழ் (22) துபாய் (22) நூருத்தீன் (22) பெண்கள் (22) யுனிகோட் (22) h1 (21) இபுராஹிம் அன்சாரி (21) ஏடு-இட்டோர்-இயல் (21) நினைவுகள் (21) நோன்பாளிகளே (21) பாலஸ்தீனம் (21) அபூஇப்ராஹீம் (20) என் இதயத்தில் இறைத்தூதர் (20) ஜமீல் M.சாலிஹ் (20) Sஹமீது (19) இந்தியா (19) எச்சரிக்கை (19) சேக்கனா M.நிஜாம் (19) மழை (19) adirai (18) editorial (18) loan (18) அதிரை சித்தீக் (18) கந்தூரி (18) அபுல்கலாம் (17) இயற்கை இன்பம் (17) சபீர் அஹ்மது அபுஷாஹ்ரூக் (17) நோன்பு (17) மரணம் (17) ரமழான் (17) ஹஜ் பெருநாள் (17) ஆசிரியர் தினம் (16) கவிதை ஓர் இஸ்லாமிய பார்வை - ஆய்வு (16) பழகு மொழி (16) புதுசுரபி (16) Zakir Hussain (15) harmys (15) அபு ஈஸா (15) அப்துல் ரஹ்மான் (15) அழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா (15) வரலாறு (15) Sabeer (14) ஊடகம் (14) காணொளி (14) படிப்பு (14) பெருநாள் (14) ஷஃபி அஹ்மது (14) M.H.ஜஹபர் சாதிக் (13) shameed (13) அதிரை என்.ஷாஃபாத் (13) அப்பா (13) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும் (13) கடன் (13) சத்தியமார்க்கம்.com (13) சிந்தனை (13) சிந்திக்க (13) MHJ (12) ஆரோக்கியம் (12) ஒற்றுமை (12) சகோதரியே (12) தண்ணீர் (12) தாருல் இஸ்லாம் ஃபேமிலி (12) பேரூராட்சி (12) மரபு (12) மு.செ.மு.சஃபீர் அஹமது (12) யாசிர் (12) ரஃபீக் (12) AM (11) s1 (11) அனுபவம் (11) ஆமினா முஹம்மத் (11) ஒரு புத்தகம் பிறக்கிறது (11) சரிதை (11) சென்னை (11) தொடர் (11) பேசும்படம் (11) மனு நீதி (11) முஹம்மது ஃபாருக் (11) Sabeer AbuShahruk (10) aknk (10) kavithai (10) அதிரை அஹமது (10) அதிரை ஷஃபாத் (10) அதிரைநிருபர் பதிப்பகம் (10) அமீரகம் (10) அமெரிக்கா (10) அலசல் (10) ஆய்வு (10) உதவி (10) ஏக்கம் (10) கலாம் (10) தொழில் முனைவோர் (10) படிகட்டுகள் (10) பெற்றோர் (10) முகம்மது அலி ஐ.பீ.எஸ் (10) முஹம்மது யாசிர் (10) விவாதக்களம் (10) SMS (9) அரும்புப் பாட்டு (9) ஊடக போதை (9) குறுந்தொடர் (9) சிந்திக்கத் தூண்டும் சித்திரங்கள் (9) சுகாதாரம் (9) ஜகாத் (9) துஆ (9) தேடல் (9) நோன்பு பெருநாள் (9) பரீட்சை (9) பிரார்த்தனை (9) பேட்டி (9) பேரன் (9) மனித குலம் (9) ரமழான் சிந்தனை (9) வினாடி வினா (9) வேலை (9) ஹதீஸ் (9) LMS (8) ZAEISA (8) msm rafiya (8) poem (8) அதிரைக்காரன் (8) அபூ ஆசிஃப் (8) அப்துல் காதர் (8) அஹ்மது இர்ஷாத் (8) இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளி (8) இளமை (8) இஸ்லாமியப் பெண்மணி (8) எழுத்துப் பிழைகள் (8) ஏற்றம் (8) கடற்கரைத் தெரு (8) கலைக்களஞ்சியம் (8) காது (8) சத்தியமார்க்கம் (8) செய்தி (8) தக்வா பள்ளி (8) தன்னம்பிக்கை (8) தொழுகை (8) நண்பர்கள் (8) நூல் வெளியீடு (8) பள்ளிவாசல் (8) பழைய நினைவுகள் (8) பாலஸ்தீன் (8) மரபு கவிதை (8) மலேசியா (8) மாணவர்கள் (8) மாலிக் (8) முகமது யாசிர் (8) வாழ்க்கைப் பயணத்தில் உறவுகள் (8) விபத்து (8) விவாதம் (8) வேண்டுகோள் (8) ARH (7) MSM MEERASHA RAFIA (7) SKM ஹாஜா முகைதீன் (7) SKM-H (7) history (7) அப்துர்ரஹ்மான் (7) அப்துல் மாலிக் (7) அம்மா (7) அல்குர்ஆன் (7) அல்லாஹ் (7) உணவு (7) கட்டுரையாளர் (7) கண் (7) கம்பன் (7) கல்வியாளர்கள் (7) காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளி (7) கால்பந்து (7) குழந்தை (7) சிந்திப்போம் (7) சின்னகாக்கா (7) சிரியா (7) தொண்டை (7) நன்றி (7) நபிமொழிகள் (7) பயணம் (7) பள்ளிக்கூடம் (7) மின்சாரம் (7) முஸ்லிம் (7) மொழி (7) விளக்கம் (7) ஸஹாபாக்கள் (7) 2012 (6) 2014 (6) A.R.அப்துல் லத்தீஃப் (6) AEAC (6) B. Ahamed Ameen (6) Dubai (6) M H Jahabar Sadik (6) N.ஜமாலுதீன் (6) Shahnaz Sabeer Ahmed (6) UAE (6) ashik (6) m2 (6) u1 (6) அதிரை தென்றல் (Irfan Cmp) (6) அதிரை நிருபர் (6) அலசல் தொடர் (6) ஆதங்கம் (6) இதிகாசங்கள் (6) இத்தியாதி இத்தியாதி (6) இப்ராஹிம் அன்சாரி (6) இப்ராஹீம் அன்சாரி (6) இரத்தம் (6) ஊழல் (6) ஓட்டு (6) கந்தூரி போதை (6) கல்லூரி (6) கிரவ்ன் (6) கோடைகால பயிற்சி (6) தடை (6) திருமணம் (6) நகைச்சுவை (6) நட்பு (6) நண்பன் (6) நானும் ஆஃப்ரிக்காவும் (6) நூலகம் (6) புத்தகம் (6) போதை (6) மக்கா (6) முதுமை (6) முஸ்லீம்கள் (6) முஹம்மத் ஆஷிக் (6) மூக்கு (6) வணக்கம் (6) வளைகுடா (6) விமர்சனம் (6) ஷிஃபா மருத்துவமனை (6) AEM (5) SKM - H (5) Sஹமீத் (5) m1 (5) moon (5) umar history (5) அதிரை ஈத்மிலன் (5) அதிரை ஹாலித் (5) அபூஇப்ராஹிம் (5) அறிவியல் (5) அழகு (5) அழைப்பு (5) ஆங்கிலப் புத்தாண்டு (5) ஆஸ்திரேலியா (5) இடஒதுக்கீடு (5) இயற்கை (5) இரவு (5) இஸ்லாத்திற்காக துளியளவு அற்பணித்திருக்கிறோமா (5) இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் (5) உறவு (5) கணினி (5) கண்டனம் (5) கனவு (5) கவிஞர் (5) கவிதை ஆய்வு (5) காலம் (5) குர்ஆன் (5) குழந்தைகள் (5) சட்டமன்றம் (5) சந்திப்பு (5) சபீர் அஹ்மது அபுஷாரூக் (5) சான்பிரான்சிஸ்கோ முதல் செக்கடி மோடு வரை (5) சேமிப்பு (5) தக்வா (5) தாய் (5) தொட்டால் தொடரும் (5) தொலைக்காட்சி (5) நாசர் மவ்லவி (5) நீதி (5) பழமை (5) பாசம் (5) பாபர் மஸ்ஜித் (5) பாலியலுக்கு பலியாகாதே (5) பெண்ணுரிமை (5) பொருளாதாரம் (5) போட்டி (5) போராட்டம் (5) மண்ணறை (5) மனைவி (5) மற்றும் (5) மாட்டுக்கறி (5) மாற்றி யோசி (5) முஹம்மது பாரூக் (5) மூடநம்பிக்கை (5) மூன்றாம் கண் (5) ரஃபியா (5) ரியல் எஸ்டேட் (5) வட்டார உரையாடல் (5) வாழ்க்கை (5) விருந்து (5) விழி (5) வெற்றி (5) வேலை வழிகாட்டி (5) ஸதக்கதுல்லாஹ் (5) 2013 (4) B. Ahamed Ameen (4) EA (4) M. தாஜுதீன் (4) MSM மீராஷா ரஃபியா (4) MSM(n) (4) adirainirubar (4) eo1 (4) syria (4) v1 (4) அதிரை அறிஞர் (4) அதிரை பைத்துல்மால் (4) அதிரை மீரா (4) அபுஇப்ராஹிம் (4) அபுநூரா (4) அரபி (4) அறிவுரை (4) அவதூறு (4) அஹ்மது ஆரிஃப் (4) ஆங்கிலம் (4) இன்றைய சவால் (4) இபாதத் (4) இபுறாஹீம் நபி (4) இமாம் ஷாஃபி ஸ்கூல் (4) இலக்கியம் (4) இலவசம் விலை போனதே (4) இஸ்லாமிய வங்கி (4) ஈகை (4) ஈகைத் திருநாள் (4) ஈத் பெருநாள் (4) ஊரில் மழையாமே (4) ஊர்வலம் (4) எதிர்ப்பு (4) கடிதம் (4) கட்சிகள் (4) கட்டுரை (4) கலக்கல் (4) கல்வி வழிகாட்டி (4) கா.மு.மே.பள்ளி (4) காது கொடுத்து கேளுங்கள் (4) குடும்பம் (4) குழந்தை வளர்ப்பு (4) குழந்தைகளுக்காக (4) கேமரா (4) கோரிக்கை (4) கோவை அய்யூப் (4) சஹாபாக்கள் (4) சிட்னி (4) சுதந்திரம் (4) செக்கடிக் குளம் (4) டி.வி. (4) டெல்லி (4) தனிமை (4) தமாம் (4) தமிழ்மாமணி (4) தமுமுக (4) திருச்சி (4) தெரு (4) தோல்வி (4) தோழன் (4) நடை (4) நபி முஹம்மது (ஸல்) (4) நம்பிக்கை (4) நிறைவு (4) நிலவு (4) நீர் (4) நேரம் (4) நோன்பு கஞ்சி (4) பயணங்களில் பரவசம் (4) பயன் தரும் பன்மொழித் தொடர்பு (4) பழக்கம் (4) பாங்கு (4) பாதுகாப்பு (4) பிறை (4) புன்னகை (4) புரளி (4) புறம் (4) பெண் (4) பெண்மை (4) பேயோடு ஒரு ஹாய் (4) மகன் (4) மது (4) மலேஷியா (4) மலை (4) மலையேறலாம் (4) மாற்றம் (4) யார் (4) ரமலான் (4) லஞ்சம் (4) லண்டன் (4) லெ.மு.செ.அபுபக்கர் (4) லைலதுல் கத்ர் (4) வரதட்சனை (4) வலைப்பூக்கள் (4) வாப்பா (4) வாழ்கை (4) வாழ்கைப் பயணத்தில் உறவுகள் (4) வாழ்வியல் (4) விலைவாசி (4) விளையாட்டு போட்டிகள் (4) வெளிநாடு (4) வெளிநாட்டு வாழ்க்கை (4) ஷம்சுல் இஸ்லாம் சங்கம் (4) ஷேக் முகைத்தீன் (4) ஹைதர் அலி ஆலிம் (4) -அபூஹாஷிமா (3) 1977 (3) 23 (3) AIM (3) CMN SALEEM (3) Darul Islam Family (3) Dhua (3) TAMS (3) aamf (3) abu easa (3) avnv (3) eye care (3) shafi ahamed (3) sv (3) tmmk (3) ஃபித்ரு (3) அகம் (3) அகல இரயில் பாதை (3) அச்சம் (3) அஜிஜுதீன் (3) அண்ணா (3) அதிராம்பட்டினம் (3) அதிரை வரலாறு (3) அன்புடன் மலிக்கா (3) அபு இஸ்மாயில் (3) அபுஈசா (3) அபுசாருக் (3) அபுபக்கர் (3) அப்துர் ரஹீம் ஜமீல் (3) அமைதி (3) அரஃபா (3) அரஃபாத் (3) அறிக்கை (3) அறிவிப்பு (3) அலாவுதீன் (3) அவசரம் (3) ஆம்புலன்ஸ் (3) ஆய்வுக் கட்டுரை (3) ஆவணப்படம் (3) ஆஷிக் அஹமது (3) இசை (3) இட ஒதுக்கீடு (3) இட ஒதுக்கீடும் (3) இன ஒதுக்கீடும் (3) இனிக்க (3) இன்று ஒரு தகவல் (3) இரயிலடி (3) இரயில் (3) இர்ஷாத் (3) இறைத்தூதர் (3) இலக்கணம் (3) இலங்கை முஸ்லீம்கள் (3) இலவசம் (3) இழப்பு (3) இஸ்மாயில் நபி (3) இஸ்லாமிய ஆட்சி (3) உரையாடல் (3) உலக செய்திகள் (3) உலகம் 2010 (3) உள்ளாட்சி தேர்தல் (3) ஊக்கம் (3) எம்.காம். (3) எம்ஜிஆர் (3) ஒடுக்கு இடர் (3) ஒளரங்கசீப் (3) கடல் (3) கடுதாசி (3) கமிட்டி (3) கருகும் காதல் (3) கருணாநிதி (3) கலந்துரையாடல் (3) கல்வித் தந்தை (3) கா.மு.கல்லூரி (3) காதிர் முகைதீன் (3) குடி (3) குணம் (3) குற்றாலம் (3) குளம் (3) குளிர் (3) குழப்பம் - ஆலோசனை - தீர்வு (3) கூடங்குளம் (3) கேள்விகள் (3) கொடைக்கானல் (3) சபிதா காதர் (3) சமோசா (3) சம்சுல் இஸ்லாம் சங்கம் (3) சவுதிஅரபியா (3) சஹன் (3) சாகுல் ஹமீத் (3) சாப்பாடு (3) சிக்கனம் (3) சிங்கப்பூர் (3) சுத்தம் (3) சுனாமி (3) செக்கடி மோடு (3) செலவு (3) ஜமீல் M.ஸாலிஹ் (3) டாக்டர் (3) த.மு.மு.க. (3) தந்தை (3) தமிழ் வளர்ந்த நினைவுகள் (3) தர்கா (3) தர்பியத் (3) தாய்மை (3) தினசரிகள் (3) திமுக (3) தியாகத் திருநாள் (3) திருக்குர்ஆன் (3) திறன் (3) தீவிரவாதம் (3) தொப்பி (3) தோழர்கள் (3) நடுத்தெரு (3) நபி (3) நாஞ்சிலன் (3) நிஜாம் (3) நினைக்க (3) நிம்மதி (3) நேர்மை (3) நேர்வழி (3) நோய் (3) படிப்பினை (3) பட்ஜெட் (3) பட்டம் (3) பணம் (3) பத்ரு யுத்தம் (3) பயணக் கட்டுரை (3) பயம் (3) பயான் (3) பயிற்சி முகாம் (3) பரிசு (3) பாராளுமன்றம் (3) பாலியல் வன்முறை (3) பினாங்கு (3) பிப்ரவரி 14 (3) புண்ணியவான் (3) பெண் கல்வி (3) பெருநாள் சந்திப்பு (3) பேய் (3) பொய் (3) மகள் (3) மதமாற்றம் (3) மதீனா (3) மதுவிலக்கு (3) மனது (3) மனிதம் (3) மனிதவளம் (3) மன்னிப்பு (3) மலரும் (3) மவுனம் (3) மஹர் (3) மாடு (3) மாட்டுகறி (3) மார்க்க சொற்பொழிவு (3) மார்க்கக் கல்வி (3) மின்னஞ்சல் (3) மு.செ.மு. (3) முகநூல் (3) முத்துப்பேட்டை (3) முன்னாள் மாணவர்கள் (3) முற்போக்கு கூட்டணி (3) முஸ்லிம் சாதனை (3) மூக்கு கண்ணாடி (3) மூளை (3) மெதுவடை (3) மெளனம் பேசியதே (3) மேகம் (3) மோடி (3) ரசனை (3) வட்டி (3) வதந்தி (3) வரவேற்பு (3) வலைக்காட்சி (3) வாக்கு கொடுத்தல் (3) வாங்க (3) வாடா (3) வாழ்த்து (3) வாவன்னாசார் (3) விடுதலை (3) விடுப்பு (3) விண்ணப்பம் (3) வித்தியாசமானவர்கள் (3) வின்வெளி (3) விருந்தோம்பல் (3) விவாதக் களம் (3) வேகம் (3) வேலை வாய்ப்பு (3) ஷேக் ஜலாலுதீன் (3) ஸஹாபிய பெண்கள் (3) ஹராம் (3) +2 தேர்வு முடிவுகள் (2) 06122010 (2) 10 வகுப்பு 2010 (2) 1995 (2) 80/90 (2) ABM (2) AET (2) December-6 (2) ECR சாலை (2) ENT (2) HAJ 2012 (2) IAS தேர்வு (2) IPL (2) KMHSc. (2) KVS. (2) Lives (2) M.Y.முஹம்மத் (2) Motor Bike Riders (2) NAS (2) Rafeeq (2) Risky (2) SELAMAT HARI RAYA (2) Shahnaz (2) Student (2) U.A.E. (2) affa (2) air india (2) alumni (2) an news (2) book (2) broad gauge (2) camera (2) cmp (2) cute (2) decision (2) diabetes (2) do not disturb (2) dua (2) eye (2) facebook (2) flash back (2) food (2) india (2) library (2) live (2) making of படிக்கட்டுகள் (2) marriage (2) mk1 (2) motivation (2) mychoice (2) networking (2) news (2) password (2) peer mohammed (2) politics (2) prayer (2) q12 (2) ramadan (2) shafi (2) silence please (2) tntj (2) walking (2) www.adirainirubar.in (2) yasir (2) youth (2) ஃபெஸ்டிவல் (2) ஃபோட்டோகிராஃபி (2) அ.ர.ஹிதாயத்துல்லாஹ் (2) அஃப்சல் ஹுசைன் (2) அசத்தல் மொழி (2) அசத்தல் மொழிகள் (2) அச்சு (2) அணு உலை (2) அதி அழகு (2) அதிமுக (2) அதிரை உலா (2) அதிரை எக்ஸ்பிரஸ் (2) அதிரை கல்விச் சேவையகம் (2) அதிரை பசுமை 2020 (2) அதிரை மொழி (2) அதிரைகாரன் (2) அதிரைத் தென்றல் (CMP Ifran) (2) அதிரைநிருபரின் நிழல்கள் (2) அதிரைபட்டினம் (2) அதிரைப்பட்டினம் (2) அதிரைமணம் (2) அதிரையின் முத்திரை (2) அது ஒரு அழகிய மழைக்காலம் (2) அநீதி (2) அந்நிய முதலீடு (2) அந்நியர் முதலீடு (2) அனைத்து முஹல்லா (2) அனைத்து முஹல்லா கூட்டமைப்பு (2) அபூ முஸ்அப் (2) அபூசுஹைமா (2) அபூஹாமித் (2) அபூஹாஷிமா (2) அப்துல் ரசீத் ஆலிம் (2) அமானிதம் (2) அம்மாபட்டினம் (2) அம்மார்(ரலி. அவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் (2) அரசியல் ஜெயலலிதா (2) அரசியல்வாதி (2) அரசு (2) அரசு வேலை (2) அர்த்தம் (2) அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (2) அறிந்தும் அறியாமலும் (2) அறிமுகம் (2) அற்புதம் (2) அலங்காரம் (2) அலி (2) அலுவலகம் (2) அலைபேசி (2) அல்மனார் செண்டர் (2) அழுத்தம் (2) அழைப்புப் பணியின் அவசியம் (2) அழைப்புப்பணி (2) அவனா யிராதே (2) ஆகாயம் (2) ஆசிட் (2) ஆசிரியர் பணி (2) ஆசை (2) ஆசைகள் (2) ஆடை (2) ஆட்டோ (2) ஆணாதிக்கம் (2) ஆராய்ச்சி (2) ஆஷிக் முஹம்மத் (2) இணையத்தில் வலைவீச்சு (2) இணையம் (2) இதுதான் இஸ்லாம் (2) இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு (2) இந்திய முஸ்லீம்கள் (2) இபுறாகீம் அன்சாரி (2) இப்போது எல்லோரும் எழுதலாம் (2) இயக்க மயக்கம் (2) இயக்கம் (2) இயற்கை சீற்றம் (2) இருதய சிகிச்சை (2) இறப்பது (2) இறுதி கடமை (2) இறைவனிடம் (2) இறைவன் (2) இறைவழிபாடு (2) இலக்கிய மன்றம் (2) இலங்கை (2) இலைகள் (2) இவனா யிரு (2) இவர்கள் (2) இவ்வுலகம் அழிவை நோக்கி செல்கிறதா? (2) இஸ்லாத்தில் குற்றவியல் சட்டங்கள் (2) இஸ்லாமிய வருடப்பிறப்பு (2) இஸ்லாமியப் பொருளாதரம் (2) ஈத்கா (2) ஈமான் (2) ஈழம் (2) உடற்பயிற்சி (2) உணர்ந்தவை (2) உண்மை வரலாறு (2) உண்மைகள் (2) உதவி திட்டம் (2) உன்னப்பனின் விண்ணப்பம் (2) உம்மா (2) உம்மு சுலைம்(ரலி) (2) உரிமை (2) உருவப்படம் வரைதல் (2) உலகம் 2011 (2) உளவு (2) உழைப்பில்லா உடல்களும் (2) ஊடக தீவிரவாதம் (2) ஊட்டி (2) ஊர் (2) ஊர் நலன் (2) எங்க சார் (2) எங்க டீச்சர் (2) எங்கே அமைதி (2) எண்ணங்கள் (2) எதற்காக? (2) எதிரிப்பு (2) எதில் கஞ்சத்தனம் (2) எத்தி வைப்பு (2) எத்தியோப்பியா (2) எந்தப் பாதை உங்கள் பாதை? (2) எனக்குத் தெரிந்த இஸ்லாம் (2) என்பது (2) எம்.ஃபில். (2) எழுத்து (2) எழுத்தும் (2) ஏன் ஹிஜாப் (2) ஏர் இந்தியா (2) ஏழை (2) ஐரோப்பா (2) ஒப்பந்தம் (2) ஒருங்கிணைந்த (2) ஒருங்குறி (2) ஒழுக்கம் (2) ஓடுகாலி (2) ஓர் இஸ்லாமிய பார்வை (2) கஞ்சி (2) கஞ்சி வருதப்பா (2) கடன் தள்ளுபடி (2) கடன் வாங்கலாம் வாங்க (2) கடற்கரை (2) கடற்கரைத் தெரு கந்தூரி (2) கடற்கரைத்தெரு புளியமரம் (2) கடவுச் சொல் (2) கடை (2) கணவன் (2) கண்டிக்கிறோம் (2) கண்தானம் (2) கதையல்ல நிஜம் (2) கந்தூரி தடை (2) கபுர் (2) கப்ரு (2) கருமையும் (2) கலரி (2) கலைஞன் (2) கல்யாணம் (2) கல்வி முறை (2) கல்வி விருது (2) கல்வியும் கற்போர் கடமையும் (2) கவனம் (2) கவிக்கோ அப்துல் ரகுமான் (2) கா.அப்துல் கபூர் எம்.ஏ. (2) காட்சி (2) காட்டுப் பள்ளி (2) காணொளி உரை (2) காதர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி (2) காமராசர் (2) காற்று (2) காலை (2) காவல்துறை (2) காவேரி (2) கி.பி: 2011 அது ஒரு மழைக்காலம் (2) கிரிக்கெட் (2) குகை (2) குஜராத் (2) குஞ்ஞாலி (2) குடி தண்ணீர் (2) குணக்குன்று (2) குத்துச் சண்டை (2) குப்பை தொட்டி (2) குறை (2) கூட்டணி (2) கேரளா (2) கையேந்துங்கள் (2) கொசு (2) கொடுமை (2) கொண்டாட்டம் (2) கொலை (2) கொழும்பு (2) கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (2) கோபம் (2) சத்தம் (2) சபுறு (2) சமச்சீர் கல்வி (2) சமரசம் (2) சமுதாய சீர்கேடு (2) சமூக மாற்றங்கள் (2) சம்சுல் இஸ்லாம் (2) சம்பாதித்தால் (2) சர்க்கரை (2) சவால் (2) சவால்கள் (2) சஹர் (2) சாத்தியமா? (2) சான்பிரான்சிஸ்கோ (2) சிகிச்சை (2) சிதறல்கள் (2) சித்தீக் பள்ளி (2) சிந்தனை துளி (2) சின்ன வயசு (2) சிராஜ் உத்-தெலா (2) சிரிப்பு (2) சிறப்பு (2) சிலந்தி வலை (2) சீனி (2) சுயம் அறிக (2) சுர்மா (2) செயற்க்கை கோள் (2) செய்திகள் (2) செய்யுமிடத்தில் (2) செய்வீர் (2) சேவை (2) சொத்து (2) சோதிடம் (2) சோம்பேறி (2) சோறு (2) ஜஃபருல்லாஹ் (2) ஜமாஅத் (2) ஜஹபர் சாதிக் (2) ஜாஃபருல்லாஹ் (2) ஜித்தா (2) ஞாபகம் வருதே (2) டாக்டர் அப்துல்லாஹ் (2) டிசம்பர் (2) தன்னபிக்கை (2) தன்னிலை சுகாதாரம் (2) தமிழ் நாடு (2) தமிழ்நாடு (2) தமிழ்நாட்டில் (2) தலைமை ஆசிரியர் (2) தலையங்கம் (2) தலைவர் (2) தலைவர்கள் (2) தவறு (2) தாகம் (2) தாக்குதல் (2) தான தர்மம் (2) தாய்மொழி (2) திக்ரு (2) திடல் தொழுகை (2) தினம் (2) தியாகப் பெருநாள் சிந்தனை (2) தியாகம் (2) திருட்டு தடுக்க (2) திருவிழா (2) திரை (2) திறமை (2) தீ (2) தீமை (2) துணைத் தலைவர் (2) தூண்கள் (2) தூய்மை (2) தென்றல் (2) தெளிவு (2) தேர்தல் களம் (2) தேர்வு (2) தொந்தரவு (2) தொன்னூறு (2) நடுப்பக்கத்தில் நட்சத்திரம் (2) நடுவுல கொஞ்சம் நட்சத்திரங்களைக் காணோம் (2) நபி(ஸல்) (2) நம்ம ஊர் (2) நம்மளுக்கு (2) நற் குணங்கள் (2) நலமில்லா நவீனமும் (2) நாட்டு நடப்பு (2) நாணம் (2) நாற்காலி (2) நாற்பது (2) நினனவுகள் (2) நினைவூட்டல் (2) நியூயார்க் (2) நிறம் மாறும் மனிதர்கள் (2) நிறைவுரை (2) நிலநடுக்கம் (2) நூருல் இப்னு ஜஹபர் அலி (2) நூல் (2) நெசவுத் தெரு (2) நெனப்பு (2) நேபாளம் (2) நேரலை (2) நேருக்கு நேர் (2) நேர்காணல் (2) பகதூர்ஷா ஜாஃபர் (2) பகுத்தறிவாளர்களின் மதம் (2) பக்கத்து ஊர் செய்திகள் (2) பக்கீர் முஹம்மது (2) பங்கு (2) பசுமை (2) பசுமை அதிரை 2020 (2) பட்டுக்கோட்டை (2) பணி (2) பண்பு (2) பதிவர்கள் (2) பயிற்சி (2) பரிவு (2) பரீட்சை நேரம் (2) பர்ஜ் கலிஃபா (2) பர்மா தேக்கு வீட்டுக்காரர் (2) பள்ளி (2) பஷீர் அஹம்து (2) பாடம் (2) பானு என்றென்றும் (2) பாம்பன் பாலம் (2) பாருக்குள்ளே நல்ல நாடு (2) பிடித்தது (2) பின்னூட்டம் (2) பின்னூட்டவாதி (2) பிரதமர் (2) பிரதர் (2) பிரியமில்லா பிரிவு (2) பிறப்பது (2) பிறமதம் (2) பிலால் (ரலி) (2) பிலிப்பைன்ஸ் (2) புகார் (2) புகைப் பிடித்தல் (2) புகைப்பட பொழுதுகள் (2) புகைப்படம் (2) புதிய பள்ளிவாசல் (2) புதிய மத்திய அரசு (2) புதுக்கிப்படாத திருமணங்கள் (2) புதுமை (2) புரிந்துணர்வு (2) புலவர் (2) பூகம்பம் (2) பெண்ணீயம் (2) பெண்ணுக்கு வீடு (2) பெண்ணுறிமை (2) பெண்ணே (2) பெரியவர்கள் (2) பேருந்து (2) பொட்டிக்கடை (2) பொற்காலம் (2) போடுங்கள் (2) போர் அடிக்குது (2) போஸ்டர் (2) மகளிர் (2) மடமை (2) மணமகன் (2) மணமகள் (2) மணிமாலை (2) மதச்சாயம் (2) மதிப்பு (2) மதிப்புரை (2) மதிப்பெண்கள் (2) மதீனாவில் நோன்பும் பெருநாளும் (2) மந்தி (2) மனசாட்சி (2) மனனம் (2) மனு (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா (2) மனுநீதி மனித குலத்துக்கு நீதியா ? (2) மன்றம் (2) மயக்கம் (2) மரண அறிவிப்பு (2) மரபுக் கவிதை (2) மருதநாயகம் (2) மர்யம் ஜமீலா (2) மறந்தவைகள் (2) மறுமை நாள் (2) மலர் வனம் (2) மலேசியா பெருநாள் (2) மலேஷியாவில் ரமளான் (2) மாணவமணிகளுக்காக (2) மாணவிகள் (2) மாணவியின் (2) மாது (2) மானிடா (2) மாப்புளே (2) மாயை (2) மார்க்கம் (2) மாலை (2) மாவீரன் (2) மின்சாரவாரியம் (2) மீன்கள் (2) மீள்பதிவு (2) மு.செ.மு.நெய்னா முஹம்மது (2) மு.மேக்தா (2) முகமது பாரூக் (2) முசெமு (2) முஜாஹித் (2) முடிவுகள் (2) முத்தம் (2) முன்னோர்கள் (2) மும்பை (2) முஸ்தகீம் (2) முஸ்லிம்கள் (2) முஸ்லீம் (2) முஸ்லீம் குரல் (2) முஹம்மத் அலீய் (2) முஹர்ரம் (2) மூணுக்கு வந்த டவுட்டு (2) மூனாறு (2) மூளைக்கு வேலை (2) மெரினா (2) மை (2) மையம் (2) யா அத்தஹாக் (2) யார்தான் சொல்வது (2) யாவாரம் (2) ரமலான் சிந்தனை (2) ரமளானுக்கு பின் (2) ராமாயணம் (2) ரியாஸ் அஹ்மது (2) ரிலாக்ஸ் ப்ளீஸ் (2) ரேங்க் கார்டு (2) வங்கி (2) வயோதிகம் (2) வரமா (2) வருக (2) வர்த்தகம் (2) வறுமைக்கோடு (2) வலைப்பூ (2) வலைவீச்சு (2) வழமை (2) வழிமுறைகள் (2) வழியனுப்புதல் (2) வா.உ.சிதம்பரனார் (2) வாகனம் (2) வாங்கடா (2) வாநிலை (2) வாய்க்கால் (2) வாவன்னா சார் (2) விஞ்ஞானம் (2) விதை (2) விமான பயணமும் விபரீதமும் (2) விமானப் பயணம் (2) விமானம் (2) விரயம் (2) விளம்பரங்கள் (2) விவேகம் (2) வெண்மையும் (2) வெந்நீர் ஒத்தடம் (2) வெரசன (2) வெளிச்சம் (2) வெள்ளிநிலா (2) ஷஃபான் (2) ஷப்-ஏ-அராஅத்து (2) ஷவ்வால் (2) ஷஹ்லா (2) ஷாஃபி M.I. (2) ஸதக்கத்துல்லாஹ் (2) ஸனது (2) ஸூரத்துல் பகரா (2) ஸ்ரீலங்கா விமானம் (2) ஹசினா அப்துல் பாசித் (2) ஹஜ் 2011 (2) ஹஜ் பெருநாள் சந்திப்பு (2) ஹபீப் முஹம்மத் (2) ஹலால் (2) ஹாஜா முகைதீன் (2) ஹிதாயத்துல்லாஹ் (2) ஹைதர் அலி (2) “பசு” ‘மை’பூசி அடி‘மை’ ஆகும் இந்தியா. (2) 'e'மான் (1) 'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு (1) .அதிரை (1) 10 வகுப்பு CBSE (1) 100வது நாளில் (1) 10ம் வகுப்பு (1) 1435 (1) 1600 கோடி வழங்கிய வள்ளல் (1) 1930 (1) 1970 (1) 1980 (1) 1984 (1) 1987 (1) 1993 (1) 2002 (1) 2012-13 (1) 2015 (1) 2015-2016. பட்ஜெட் (1) 2050 (1) 25000 அடி (1) 5-ம் (1) 50 வது பதிவு (1) 6 (1) 6-ம் (1) AAF (1) ABC (1) ALM ஆண்டுவிழா (1) ATCO (1) AZHAR HUSSEIN (1) Abdul Rahman (1) Albaqavi.com (1) American Adirai Forum (1) American Adirai Forum [A A F] – இரண்டாவது அமர்வு (1) Any suspended coffee (1) B.ஜமாலுதீன் (1) BBC (1) Beware of killer offers in Dubai (1) Budget 2012 (1) CMN சலீம் (1) CMண் சலீம் (1) Cancer Awareness Program (1) Cataract (1) December (1) ETA (1) Easy life leads to lazy life (1) Engineering career (1) Final Year MBBS (1) GROUP-1 (1) Glaucoma (1) Gulfnews (1) HABIT (1) HAJ 2015 (1) I am the Greatest (1) IAS (1) IFT (1) India is my country (1) Islam (1) J.A.தாஜுதீன் (1) JMC (1) KMHSSc (1) KVS (1) LOGO (1) London (1) M S M(n) (1) M.B.B.S. (1) M.L.A ரெங்கராஜன் (1) M.S.முகமது மீராசாகிப் (1) MANAGEMENT CAREER (1) MBA (1) MEDICINE CAREER (1) MF (1) MKN Trust (1) MMS (1) MOTHER (1) MS அப்துல் கஃபூர் (1) MSM(r) (1) Moinudeen (1) Moorthy (1) Motion Sickness (1) Mujahid Razeen (Srilanka) (1) Munawar (1) Naming and Calling Spiritually and Personally (1) Nizar Ahamed (1) Nursery School (1) PJ (1) PhD (1) Right Understanding (1) S.H.அஸ்லம் (1) S.சித்தீக்.M.Tech (1) SIS (1) SSLC (1) SSLC. (1) School (1) Shahbaz Mohamed (1) Sports Day (1) Stop N Shop (1) Straight line Stationery (1) TNPSC (1) Truly Asia (1) U.Aboobacker (1) UAE National Day (1) Union Budget 2017 - 2018 (1) abdul khader (1) abu hanifa (1) ac (1) activities (1) adco (1) adirai businessman (1) adirai classified (1) adirai educational mission (1) adirai news (1) adirampattinam (1) afghan (1) after ramadan (1) ayda (1) back2School (1) beach street (1) boxer (1) burkhalifa (1) cbse சமச்சீர் கல்வி (1) cc Sabeer appa (1) channel (1) chennai (1) citizen of world (1) cobol (1) computer (1) convert to islam (1) country club (1) credit card (1) cults (1) current affairs (1) dad (1) dare to dream (1) dc (1) demonetization (1) different thinking (1) drop box (1) dynamic cellcom (1) e-தமிழர் (1) ecr (1) editor-choice (1) email (1) emirates ID (1) engineer (1) english (1) family card (1) family tree (1) folder (1) forward (1) friend request (1) friendship (1) gulf (1) haj 0215 (1) haji marra (1) health (1) history of Rasoolullah (1) homework (1) ibraheem ansari (1) incredible (1) indian muslims (1) influences (1) inneram (1) inter school quiz competition (1) islamic bank (1) islamic banking (1) kalaam (1) kaveri (1) kayal (1) lagoon (1) life (1) living (1) m.nainathambi (1) madina (1) magazine (1) makkah (1) media (1) medical (1) mens way (1) mirage (1) mmk (1) mms பஹுருத்தீன் (1) mnt (1) mohamed ali (1) mp (1) mpmv (1) msf (1) msm1 (1) mumbai (1) music (1) national flag (1) notice (1) online (1) our (1) pain worth it (1) parotta (1) peach n berry (1) photography (1) physical (1) picture of play (1) police (1) power (1) programming (1) publisher (1) queenie padilla (1) real estate 1 (1) sabee (1) sad (1) sbeer (1) sha an sha (1) shaficast (1) sham (1) sharing (1) sharjah (1) shirt (1) shirts (1) smart phones (1) son (1) sp பட்டினம் (1) speech (1) srilankan muslim (1) syed abdul hameed (1) syria children (1) tamil (1) thajudeen (1) thamemunansari (1) treatment (1) truly asia (1) tweet (1) update (1) urdu (1) version 4.01 (1) we support (1) welcome Ramadhan (1) wikileaks (1) y1 (1) youtube (1) ஃபஜர் தொழுகை (1) ஃபாரூக் (1) ஃபிலிம் (1) ஃபேக்புக் (1) ஃபேஸ்புக் (1) ஃபோட்டூன் (1) ஃபோட்டோ (1) ஃபோன் (1) ஃபோர்ட்டூன் (1) ஃப்ரெண்டு ரெகுஸ்ட் (1) அ.ர.முஹமது தஸ்தகீர் (1) அஇதிமுக (1) அகத்தின் அழகு (1) அகிலம் (1) அங்கீகாரம் (1) அசத்தல் (1) அசைவு (1) அஜினோமோட்டோ (1) அஜீஸ் (1) அஜ்மான் (1) அஜ்மாஸ் நோன்பு கஞ்சி (1) அட (1) அடப் பாவிங்களா ? (1) அடிக்கல் (1) அடிமை (1) அடிமை வணிகர் அந்-நுஐமான் (ரலி) (1) அடியேனின் அகரம் (1) அட்லாண்டா (1) அணிவகுப்பு (1) அணு (1) அணை (1) அண்ணன் (1) அண்ணன் தம்பி உறவு (1) அண்ணே ! (1) அதிகாரம் (1) அதிகாரி (1) அதிகாலை (1) அதிசயம் (1) அதியற்புதம் (1) அதிராம்பட்டினம் 2011 (1) அதிராம்பட்டினம் 2012 (1) அதிராம்பட்டினம்2011 [2] (1) அதிரை ஃபாரூக் (1) அதிரை அபூபக்கர் (1) அதிரை அஸ்ரப் (1) அதிரை அஸ்லம் (1) அதிரை ஆத்திச்சூடி (1) அதிரை இலக்கிய மாமன்றம் (1) அதிரை இஸ்லாமிக் மிஷன் (1) அதிரை கல்வி CD (1) அதிரை கல்வி அறக்கட்டளை (1) அதிரை கல்வி விழிப்புணர்வு (1) அதிரை கீழத்தெரு (1) அதிரை சித்தீக் பள்ளி (1) அதிரை டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் (1) அதிரை தமுமுக (1) அதிரை பெருநாள் (1) அதிரை பெருமை (1) அதிரை பேரூராட்சி (1) அதிரை பொருட்காட்சி (1) அதிரை போஸ்ட் (1) அதிரை மாடு (1) அதிரை மாணவி (1) அதிரை வரலாற்றில் (1) அதிரை வள்ளல் (1) அதிரை வாசனை (1) அதிரைக் கடல் (1) அதிரைச் செய்தி (1) அதிரைமுஜீப் (1) அதிரையன் (1) அதிரையின் நிய்யத்து (1) அதிரையின் பூர்வ குடிமக்கள் (1) அதிரையின் விருந்து உபசரிப்புகள் (1) அதிரையில் (1) அதிரையில் பரவிவரும் அதிபயங்கர ஆபத்தான நோய் (1) அதிரையில் மழையாமே (1) அதிரையில் ஷவ்வால் நோன்பு - புறக்கனிக்கப்படுகிறதா (1) அதிர்ச்சிகள் (1) அது (1) அது ஒரு பொற்காலம் (1) அது ஒரு ஹஜ்ஜுப்பெருநாள் நேரம் (1) அந்த ஏழு நாட்கள் (1) அந்த திக் திக் நேரங்கள் (1) அந்தக் காலம் (1) அந்தரத்தில் (1) அந்தி (1) அனஸ்(ரலி) (1) அனுபவப் பாடம் (1) அனுமதி (1) அனைத்துத் தெருக்களும் அதிரையின் கருக்கள்.editorial (1) அன்னை (1) அன்னை ஆயிஷா சித்தீக்க(ரலி) (1) அன்னை கதீஜா மகளிர் கல்லூரி (1) அன்னையர் தினம் (1) அன்பளிப்புகள் (1) அன்பு (1) அன்புக் குறிப்புகள் (1) அன்புடன் புகாரி (1) அன்று பெய்தது மழை (1) அன்றைய நோன்பும் (1) அபராதம் (1) அபு பஜ்லு (1) அபு ஹனிஃபா (1) அபுமஹ்மூத் (1) அபுருமானா (1) அபுல் ஹசன் (1) அபுல்கலாம் ஆஷாட் (1) அபூ சுஹைமா (1) அபூ நூரா (1) அபூஇப்றாஹீம் (1) அபூபக்கர் (1) அபூபக்கர் ரழி (1) அபூஹனிஃப (1) அபூஹனிஃபா (1) அப்டேட் (1) அப்துர் ரஷீது ரஹ்மானி (1) அப்துர் ரஷீத் ரஹ்மானி (1) அப்துல் கறீம் (1) அப்துல் கலீம் (1) அப்துல் ஜப்பார் (1) அப்துல் நாசர் மதனி (1) அப்துல் ராஜிக் (1) அப்துல்லாஹ் (1) அப்பர் கோதையர் (1) அப்பா ஏசுவாஹ....(அதிரையின் மண் வாசனை) (1) அப்பாஸ் அலி (1) அமீரக தமிழ் மன்றம் (1) அமீருல் முஃமின் (1) அமெரிக்க அதிரையர்களின் கூட்டமைப்பு (1) அமெரிக்காவில் இறையில்லம் தீக்கிரை (1) அமைதியின் ஆளுமை (1) அமோஜான் (1) அம்மார்(ரலி. (1) அம்மாவைப் பிடித்த பேய் (1) அய்டா (1) அரஃபாத் 1987 (1) அரஅல (1) அரசினர் மேல்நிலை பள்ளி (1) அரசியலல்ல (1) அரசியல் களம் (1) அரசியல் முதல்வர் (1) அரசியல் வியாதிகளா? (1) அரசியல்வாதிகளா? (1) அரசு உதவிகள் (1) அரசு வேலை வாய்ப்பு (1) அரபிக் (1) அரபு நாடுகள் (1) அரபு நாட்டு பயணம் (1) அரபுலகம் (1) அரவணைக்க அருகதையற்றவர்களா அகதிகள் (1) அருட்பேறு (1) அருமறை (1) அரும்பு (1) அரும்பு பாட்டு (1) அரும்புப்பாட்டு (1) அரும்பேறு (1) அருளைச் சுமந்த ஹாஜிகளே...வருக (1) அருவி (1) அரேபியர்கள் (1) அர்-ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி (1) அர்ப்பணிப்பு (1) அறிகுறிகள் (1) அறிந்து (1) அறியாமைக் காலம் (1) அறிவிப்பு சம்சுல் இஸ்லாம் சங்கம் (1) அறிவியல் பாங்கு (1) அறிவுக்குப் புலப்படாத ஆழ்கடலே (1) அற்பணிப்பு (1) அலகே ஆயுதம் (1) அலைகள் (1) அலைபாயுதே (1) அல்-கத்ர் (1) அல்ஜஸீரா (1) அல்மாஸ் (1) அல்ல (1) அல்லாஹ் யாரை நேசிக்கிறான் (1) அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் 99 (1) அல்லாஹ்வின் சக்தி (1) அல்லாஹ்வுக்கு நன்றி (1) அழகியல் (1) அழகு மொழி (1) அழகுக் குறிப்புகள் (1) அழிக்க திட்டம் (1) அழுகை (1) அழுவதற்கா (1) அழைப்பு பணி (1) அழைப்பு பணி மதமாற்றம் ஆகுமா (1) அவசர இழப்பு (1) அவசர உலகம் (1) அவன் (1) அவர்கள் கண்ணீரும் நம் கண்ணீரும். சஹாபாக்கள் (1) அவலம் (1) அவளைச் சுற்றி (1) அவள் (1) அவஸ்தை (1) அவ்லியா (1) அஸார் (1) அஸ்மா(ரலி) (1) அஸ்மாவுல் ஹுஸ்னா அகவல் (1) அஸ்லம் (1) அஸ்லம் பாஷா (1) அஹமது பாக்கவி (1) அஹமது ஹாஜா (1) அஹமது ஹாஜி (1) அஹமதுல்லா ஷா (1) அஹ்மது (1) அஹ்மது அமீன் (1) அஹ்மது ஷஃபி (1) அஹ்மது ஹாஜா (1) அஹ்மத் தீதத் (1) ஆஃபியா புரூட் (1) ஆஃபீஸ் பாயும் - வெகேஷனும் (1) ஆஃப்பிரிக்கா (1) ஆகஸ்ட் (1) ஆக்ஃபோர்டு (1) ஆக்கமிடு அடுமடையா (1) ஆக்ரா (1) ஆசியாநெட் (1) ஆசிரியர்கள் (1) ஆசிரியைகள் (1) ஆசை கணவுகள் (1) ஆச்சர்யம் (1) ஆஞ்சியோ கிராஃபி (1) ஆடவரும் (1) ஆடு (1) ஆடையகம் (1) ஆட்சியதிகாரம் (1) ஆட்சியிழந்த கட்சி (1) ஆட்டம். (1) ஆட்டு மூளை (1) ஆண் (1) ஆண்கள் (1) ஆண்டவனே ஆள்பவனே (1) ஆண்டு விழா (1) ஆண்டுவிழா (1) ஆதரவு (1) ஆனந்தாவின் அபிநயம் (1) ஆனலைன் (1) ஆபூஇப்ராஹீம் (1) ஆப்பரேஷன் (1) ஆப்பிரிக்க (1) ஆப்பிள் (1) ஆப்ரேஷன் (1) ஆமினா முஹம்மது (1) ஆமை (1) ஆம் ஆத்மி (1) ஆயத்துல் குர்ஸி (1) ஆயிஷா பல் மருத்துவமனை (1) ஆய்ஷா ஃபாத்திமா (1) ஆரசியல் (1) ஆரிஃபா ஆலிமா (1) ஆர்நோத் வான் டோர்ன் (1) ஆர்வம் (1) ஆறிலிருந்து அறுபதுவரை (1) ஆறு (1) ஆலிம்சா (1) ஆளுக்கொரு சட்டம் (1) ஆளும் கட்சி (1) ஆளும் வளரனும் அறிவும் வளரனும் (1) ஆளூர் ஷாநவாஸ் (1) ஆவ்மியாக்கா (1) ஆஷி அஹ்மத் (1) ஆஷிக் அஹ்மத் (1) ஆஹா (1) இஃப்தார் (1) இக்கணம் (1) இக்றா (1) இங்கு எது முடியும் (1) இடர்கள் (1) இடி (1) இடியப்பம் (1) இடியாப்பம் (1) இடைத்த் தேர்தல் (1) இணைவத்தல் (1) இணைவைப்பு (1) இதயதளம் (1) இது எப்படி இருக்கு (1) இந்த வார செய்தி (1) இந்தக் காலம் (1) இந்தப் பாதை (1) இந்தவுளே (1) இந்திய அரசியல் (1) இந்திய ஊடகங்கள் (1) இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லீம்களின் பங்கு (1) இந்திய சுந்தந்திர தினம் (1) இந்திய ரூபாய் (1) இந்தியா சுதந்திர தினம் 1947 (1) இந்து (1) இந்துத்துவா (1) இந்தோனேஷியா (1) இந்நேரம் (1) இனப்படுகொலை (1) இனிக்கிறது (1) இனிமை (1) இனிய (1) இனிய திசைகள் (1) இன்டர்வியூ (1) இன்னுமா தயக்கம் (1) இன்பம் (1) இன்று 10.01.2011 (1) இன்று 18 02 2011 (1) இன்று இரு தகவல் (1) இன்று இரு தகவல்கள் (1) இன்று நாளை (1) இன்றும (1) இன்றைய வீம்பும் (1) இன்ஷூரனஸ் (1) இபுராகீம் அன்சாரி (1) இப்தார் நிகழ்ச்சி (1) இப்னு அப்பாஸ் (1) இப்ராஹீம் (1) இப்றாகிம் அன்சாரி (1) இமாம ஷாஃபி பள்ளி (1) இமாம் (1) இமாம் அபூஹனீஃபா (1) இமாம் புகாரீ (1) இமாம் ஷாஃபி (1) இம்தாதி (1) இயக்க வெறி (1) இயக்கங்கள் (1) இயற்கை இன்பன் (1) இயற்கை எங்கே (1) இரங்கற்பா (1) இரங்கல் (1) இரண்டாம் ஆண்டு (1) இரயில்வே (1) இரவேலர்கள் (1) இராஜமடம் (1) இராணுவம் (1) இராமநாதபுரம் (1) இருட்டு (1) இருதயம் (1) இருளும் ஒளியும் (1) இருவேறு துருவங்கள் (1) இர்ஃபான் (1) இறக்கை (1) இறக்கை கட்டிப் பறக்குதய்யா (1) இறப்பு (1) இறுதி மூச்சு (1) இறுதியாண்டு (1) இறை வசனங்கள் (1) இறைமறை (1) இறைமார்க்கம் (1) இறையச்சமுள்ள தந்தை (1) இறையச்சம் (1) இறையில்லத்தில் யாருடன் மல்லுக் கட்டுகிறார்கள் (1) இறைவனின் கூலிப்படைகள் (1) இறைவனுக்கு நன்றி (1) இறைவேதம் (1) இலக்கு (1) இலங்கை தமிழனின் இதையக் குரல் (1) இலட்சினை (1) இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் (1) இலவச மருத்துவ முகாம் (1) இலை (1) இல்ம் (1) இல்லறம் (1) இல்லல்லாஹ் (1) இல்லாள் (1) இளம் மனைவின் கடிதம் (1) இஸலாம் (1) இஸ்மாயில் ஸலஃபி (1) இஸ்லாத்திற்காக (1) இஸ்லாத்திற்கு எதிரான (1) இஸ்லாமிய தீவிரவாதம் (1) இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் (1) இஸ்லாமிய வரலாறு (1) இஸ்லாமிய வரலாற்று மின்னொளிகள் (1) இஸ்லாமியப் பாரவை (1) இஸ்லாம் மதத்திற்கு ஐரோப்பாவின் கடன் (1) ஈடிணையற்ற இறைவா (1) ஈத்மிலன் (1) ஈன்ற பொழுதின் (1) ஈமெயில் (1) ஈர நெஞ்சம் (1) ஈராக் (1) ஈர்ப்பு (1) உ.பியில் துவங்கவிருக்கும் போர் (1) உங்கள் ஓட்டு விறபனைக்கு அல்ல (1) உங்கள் வீட்டுத் திருமணத்தில் இது இருக்கா (1) உசுரு (1) உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு (1) உடல் ஆரோக்கியம் (1) உடல் பயிற்சி (1) உணர்வுகள் மூன்று (1) உண்டாயிருக்கேன் (1) உண்ணாவிரதம் (1) உண்மைச் சம்பவம் (1) உதவியது இஸ்லாம் (1) உன்டகலியான் அதிரையரின் உணவு (1) உன்னை அறி (1) உப்பு (1) உமர் (1) உமர் (ரலி) (1) உமர் கையாம் (1) உமர் ஷரீப் முப்தி (1) உமர்தம்பி (1) உம்மா'ன்டா சும்மாவா ? (1) உம்மி மக்தூம் (1) உம்ரா (1) உயர் கல்விக்கு உதவித் தொகை (1) உயிரெழுத்துகள் (1) உயிர் (1) உயிர்க் கொத்திப் பறவை (1) உரிமைகள் (1) உருகிய எதிர்ப்புகள் (1) உருகுதே அதிரை (1) உருக்கம் (1) உரைநடை (1) உர்து (1) உறவின் பிரிவு (1) உறவு வளர்ப்போம் (1) உறவுகள் எங்கே (1) உறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள் (1) உறுப்புகளின் நோய் (1) உலக அதிசயம் (1) உலகக் கோப்பை (1) உலகமயம் (1) உலகம் எப்படி உருவானது (1) உலகின் தலைசிறந்த பணக்காரர் (1) உலோகப்பறவை (1) உல்லாசம் (1) உளத்தூய்மை (1) உளவியல் (1) உளுச் செய்வது (1) உள்குத்து (1) உள்ளம் (1) உள்ளாட்சி (1) உள்ளாட்சி த் தேர்தல் (1) உள்ளாட்சித் தேர்தல் (1) உள்ளே (1) உழை (1) உழைப்பு (1) உஸ்மான்(ரலி) (1) ஊடக (1) ஊடக தேர்தல் பிரச்சாரம் 2016 பதிலடி (1) ஊடக விபச்சாரம் (1) ஊடகங்கள் (1) ஊடங்கள் (1) ஊனம் (1) ஊராட்சி (1) ஊரோடு உறவாடு (1) ஊர் செய்தி (1) ஊர் நடப்பு (1) ஊர் நினைவுகள் (1) ஊர் பார்வை (1) ஊர்க்காரர் (1) ஊர்வன (1) எக்ஸ்க்யூமி (1) எக்ஸ்பிரஸ் (1) எங்க முதலாளி (1) எங்கவூர் மாப்பிள்ளை (1) எங்கே (1) எங்கே நேரம் (1) எங்கே வீழ்ந்தோம் (1) எங்ஙனம்? (1) எச்சில் (1) எஞ்சினியர் (1) எடு-இட்டோர்-இயல் (1) எண்ணமும் (1) எண்ணம் (1) எண்ணிலடங்கா (1) எண்ணெய் (1) எதிரி (1) எதுக்கும் நல்ல மனசு வேணும் (1) எத்தீம்கானா (1) எந்தையே (1) எனக்காக (1) எனதூர் (1) என் ஃப்ரண்டப் போல யாரு மச்சான் (1) என் கண்ணான வாப்பாவே (1) என் கனவு (1) என் கேள்விக்கென்ன பதில் (1) என் பார்வை (1) என் மொழி (1) என் வீட்டுத் தோட்டத்தில் (1) என்.ஷஃபாத் (1) என்கவ்ன்ட்டர் (1) என்ன (1) என்ன கொடுமை (1) என்னாட்டின் (1) என்னால் இயன்ற அறம் (1) என்னைக் கண்டெடுத்தேன் (1) எபிக் வெப் பிரவுசர். (1) எப்படி அவர்களை மன்னிப்பேன் (1) எப்படிப் பிறந்தாய் நீ (1) எப்படியும் மரணம் முடிவாகி விட்டது (1) எப்புடீ (1) எம்.ஃபில் (1) எரிகல் (1) எர்மைல் தவாலும் (1) எறச்சி (1) எலும்பு உறுதிதன்மை (1) எலும்பு கூடு (1) எல்லாப் புகழும் இறைவனுக்கு (1) எல்லை (1) எல்லைக் கோடு (1) எழுதியதல்ல (1) எழுது (1) எழுத்தியல் (1) எழுவதற்கா? (1) ஏகத்துவம் (1) ஏஞ்சலா கொலின்ஸ் (1) ஏனெனில் திமிர் (1) ஏப்ரல் 1 (1) ஏமாற்றமா (1) ஏர்வாடி (1) ஏற்ற நாடு (1) ஏற்றமா (1) ஏழை மாணவர்கள் (1) ஏழ்மை (1) ஐ.ஏ.எஸ். (1) ஐ.பி.எல். கிரிக்கெட் (1) ஐக்கியம் (1) ஐந்து (1) ஐஸிஐ (1) ஐஸ்கிரீம் (1) ஒத்தடம் (1) ஒத்துமை (1) ஒரு உரையாடல் With சீனிவாசன் சார். (1) ஒரு கோணல் பார்வை (1) ஒரு ச்சிக்குபுக்கு பாதை (1) ஒரு பிள்ளையின் ஏக்கம் (1) ஒற்றுமை அழைப்பு (1) ஒற்றுமையே பலம் (1) ஒற்றுமை் (1) ஒற்றையாய் (1) ஒலி (1) ஒளரங்கசீப் நான்மணி மாலை (1) ஒளி (1) ஒளி வீசுமுன் (1) ஓடி விளையாடு (1) ஓடை (1) ஓர் அன்னையால் தன் மகனை எப்படி விற்க முடியும் (1) ஓர் ஆய்வு (1) ஓர் பார்வை (1) ஓலை (1) ஔரங்கசீப் நான்மணி மாலை (1) கசையடி (1) கஜினி முகமது (1) கஜ்ஜாலி (1) கஞ்சத்தனம் (1) கடன் அட்டை (1) கடமை (1) கடமைகள் (1) கடற்படை (1) கடி (1) கடி ஜோக்ஸ் (1) கடைத்தெரு (1) கட்சி (1) கட்சிகளின் தந்திரம் சுதந்திர தினம் (1) கட்டிடம் (1) கட்டுபாடு (1) கட்டுப்பாடு (1) கட்டுரைகள் (1) கணகள் இரண்டும் (1) கணினி தமிழ் (1) கண் தானம் (1) கண் பாதுகாப்பு (1) கண் பார்வை விழிப்புணர்வு (1) கண் மருத்துவம் (1) கண்காட்சி (1) கண்ணீர் (1) கண்பார்வை (1) கண்புரை (1) கண்மணி அன்போடு நான் (1) கதைகள் (1) கத்தனா (1) கந்தவரு (1) கந்தூரி மடமை (1) கந்தூரி வழிகேடு (1) கனவு மெய்ப்பட வேண்டும் (1) கனவும் நனவும் (1) கன்னிப் பதிவு (1) கபுரை இடிக்க வேண்டுமா? (1) கமாலுதீன் மதனி (1) கம்பி (1) கம்பியில்லா தொடர்பு (1) கம்யூனிசம் (1) கம்ளைண்ட் (1) கயவர்கள் (1) கரகரப்பு (1) கரன்ஸிக் களேபரங்கள் (1) கருணை (1) கருத்தாய்வு (1) கருத்து முரண்பாடுகள் (1) கருப்பு எலி (1) கருமையும் வெண்மையும் (1) கரும்புகை (1) கருவளையம் (1) கருவேலமரம் (1) கர்ப்பினி பெண்களுக்கு (1) கர்ழன் ஹஸனா (1) கறி (1) கறை (1) கற்கை (1) கலக்குங்க (1) கலப்படம் (1) கலரிச் சாப்பாடு (1) கலவியின் அவசியம் (1) கலாச்சார (1) கலிஃபா டவர் (1) கலிஃபோர்னியா (1) கலிஃபோர்னியா மாகாணம் (1) கலெக்டர் (1) கலை (1) கலைஞர் (1) கல்ந்துரையாடல் (1) கல்லும் (1) கல்வி நேரமில்லை (1) கல்வி மாநாடு (1) கல்வி வளர்ப்போம் (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு (1) கல்வி விழிப்புணர்வு மாநாடு நேரலை. கல்வி விழிப்புணர்வு (1) கல்விக் கூடம் (1) கல்வித்துறை (1) கல்வியாண்டு (1) கல்வியாளார்கள் (1) கல்வியும் கற்போரின் கடமையும் (1) கல்வியும் கற்போர் க்டமையும் (1) களஞ்சியம் (1) கள்ளக்காதல் (1) கழிப்பிடத்தில் (1) கவனமாக கேளுங்கள் (1) கவலை நேரத்திலும் கவிதையா (1) கவிக்கோ (1) கவிஞன் (1) கவிஞர்கள் (1) கவிதை கிரவ்ன் (1) கவிதை சபீர் அஹ்மது (1) கவிதை வாப்புச்சா (1) கவிதைக் காணொளி (1) கவிதைப் பேட்டி (1) கவிதையல்ல (1) கவிதையே தெரியுமா ? (1) கவிநடை (1) கவியனபன் (1) கவியுரையாடல் (1) கவுரவம் (1) காகிதம் (1) காக்கை (1) காசிருந்தால் எல்லாவற்றையும் வாங்கிவிட முடியுமா (1) காடுகள் (1) காணவில்லை (1) காதலர்கள் (1) காந்தி நாட்டு இஸ்லாமியன் (1) கானல் நீர் (1) கானா (1) கான் அகடமி (1) கான்சல (1) காப்பி அடிக்கிறது (1) காப்பீடு (1) காமெடி (1) காயல்பட்டினம் (1) காரை வீடுகள் (1) காற்றலை (1) காற்றாழையும் (1) காலண்டர் (1) காழ்ப்பு (1) காவந்து பண்ணும் கலை (1) காவல் (1) காவல் நிலையம் (1) காவி தீவிரவாதி (1) காவித்துறை (1) காஷ்மீர் (1) கிரடிட் கார்டு (1) கிரவ்னு (1) கிரஸண்ட் (1) கிரீடம் (1) கிறுக்கல்கள் (1) கிளாஃபத் (1) கிள்ளித் திரிந்த காலம் (1) கிழவி (1) கிழிந்தது. (1) கிஷார் முஹம்மது. (1) கிஸ்ஸாஸ் (1) கீற்று (1) கீழக்கரை (1) குஜராத் கலவரம் (1) குஜாராத் (1) குஞ்சுகளும் (1) குடியரசுதினம் (1) குடும்ப அட்டை (1) குடும்பங்களின் சந்திப்பு (1) குடும்பன் குறிப்புகள் (1) குடைக்குள் மொட்டு (1) குப்பகள் (1) குப்பை (1) குயினி படில்லா (1) குரல் (1) குருதி (1) குருவி (1) குருவியும் (1) குர்ஆன் ஓதுதல் (1) குர்ஆன் சுன்னா (1) குர்பானி (1) குறிக்கோள் (1) குறிப்புகள் (1) குறைபாடுகள் (1) குறைவற்ற செல்வ (1) குற்றாலம் 2011 (1) குல்ல்லா (1) குளச்சல் (1) குளுக்கோமா (1) குழந்தை தொழில் (1) குழப்பம் (1) கூக்குரல்கள் (1) கூட்டணிக் கொட்டகைகள் (1) கூட்டணிக் கொள்கைகள் (1) கூட்டுத் தொழுகை (1) கூறு (1) கேடி (1) கேட்ட நினைத்த'வைகள்' (1) கேன்ஷல்ல அனுப்பிடுங்க (1) கேன்ஸரிலிருந்து தப்புவது எப்படி (1) கேரளம் (1) கேள்வி (1) கைகள் (1) கைகாட்டி கலாசாரம் (1) கைது (1) கொக்கு (1) கொசு ஒரு தொடர்கதை. (1) கொசுத் தொல்லை (1) கொஞ்சூண்டு (1) கொடு (1) கொடுவா மீனு (1) கொண்டாட்டம் கிரவ்ன் (1) கொண்டாட்டம் மட்டுமா பெருநாள் (1) கொல்லைப்புர தட்சனைகள் (1) கோ எஜுகேசன் (1) கோடி (1) கோடு உயர்ந்தது! குன்றம் தாழ்ந்தது (1) கோடை கால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2016 (1) கோனார் ஹாஜியார் (1) கோப்பு (1) கோலாலம்பூர் (1) கோளாறு (1) கோள் (1) கோழி (1) க்ளாஸிக் (1) ஙே (1) சகக்ரை (1) சகன் (1) சகோதரகள் (1) சகோதரன் (1) சகோதரி (1) சங்கங்கம் (1) சங்கமம் (1) சங்கை மிகு ரமலான் (1) சட்டங்கள் (1) சட்டசபை (1) சட்டப்பேரவை (1) சட்டம் ஒழுங்கு பிரச்சினை (1) சட்டை (1) சதகா (1) சத்துணவு (1) சந்தேகம் (1) சந்தை (1) சந்தோஷம் (1) சன்டிகார் (1) சபிர் (1) சப்பிடலாம் (1) சமச்சீர் (1) சமய நல்லிணக்கம் (1) சமாதானக் கூட்டம் (1) சமாதி (1) சமுதாயம் (1) சமூக பிணைப்பு (1) சமூகம் (1) சரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 1 (1) சரி (1) சரித்திரம் (1) சர்தார்ஜி (1) சர்வீஸ் (1) சலுகை (1) சல்மான் கான் (1) சவுதி (1) சவுதியில் நடப்பது என்னா? (1) சவூதிச் சிறுமி லமா அல்-காமிதி (1) சாக்கடை (1) சாச்சா (1) சாச்சி (1) சாஜிதா புக் செண்டர் (1) சாதனயாளார் (1) சாதனைச் செம்மல் (1) சாதனைப் பெண்மனி (1) சாதி (1) சாதி ஒழிப்பு (1) சாதிக் பாட்சா (1) சான வயல் (1) சானவயல் (1) சாபமா (1) சாபாமா? (1) சாம்பல் (1) சார் (1) சார் பதிவாளர் (1) சார்ஜா (1) சார்ந்திருப்பவர்கள் (1) சாலைகள் (1) சி.எம்.பி.லைன் (1) சிகரம் (1) சிகெரட் (1) சிட்டுக்குருவி (1) சித்தப்பா (1) சிநேகிதிகள் (1) சிந்தனை அபு ஈசா (1) சிந்தனை ஏற்றத் தாழ்வு (1) சிந்தனைக் கோளாறு (1) சிந்தனைத் துறை (1) சிந்தியுங்கள் (1) சினிமா (1) சினிமாவும் முஸ்லீம்களும் (1) சின்னச் சின்ன ஆசைகள் (1) சிப்பி (1) சிப்பிக்குள் சூரியன் (1) சிரித்து (1) சிறப்பு நிகழ்வுகள் (1) சிறப்புரை (1) சிறுகதை (1) சிறுபன்மையினர் கல்லூரி (1) சிறுபான்மை (1) சிறுவர்கள் (1) சிறை (1) சில நேரங்களில் சில மனிதர்கள் (1) சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு (1) சிவகங்கை (1) சீ (1) சீச்சீ இந்த பழம் புளிக்கும் (1) சீதனமும் (1) சீதனம் (1) சீனப் பெண் (1) சீனா (1) சீரியல் (1) சுகங்கள் (1) சுடச்சுட அதிரை (1) சுட்டெரிக்கும் சூடு (1) சுட்டெரிக்கும் பாலையில் (1) சுதந்திர தினம் (1) சுதந்திர தினம் யாருக்கு (1) சுத்தமின்மை (1) சுப்ஹு (1) சுப்ஹு தொழுகை (1) சுமைய தாவூத் (1) சுமையா (1) சுமையாகிப்போனது (1) சும்மாதான் (1) சுய விளக்க உரை (1) சுயநலம் (1) சுரண்டல் (1) சுற்றித் திரியும் வாலிபமே (1) சுற்றுபுற சூழல் பாதுகாப்பு (1) சுவனத்தென்றல் (1) சுவனப்பிரியன் (1) சுவர்க்கம் (1) சூசன் பஷீர் (1) சூடு பறக்கும் விவாதம் (1) சூது சூழ் உலகு (1) சூனியம் (1) சூனியம் வைக்கத் தூண்டியது யார் (1) சூரத்தல் இஃக்லாஸ் (1) சூரத்துல் ஃபாத்திஹா (1) சூரத்துல் பஜ்ர் (1) சூரா லுக்மான் (31:32) (1) சூரியன் (1) செண்டர் (1) சென்சார் (1) சென்னை பல்கலைக்கழகம் (1) சென்ற வாரம் (1) சென்றுவா ரமளானே (1) செப்டம்பர் (1) செம்மல் (1) செயற்கை கண் (1) செய்தி சேனல்கள் (1) செய்தியாளர் (1) செய்முறை (1) செல்போன் டவர் (1) செல்லப் பிராணிகள் (1) செல்லப்பிள்ளை (1) செல்லம் (1) செல்வம் (1) சேது சமுத்திர திட்டம் (1) சேனல்கள் (1) சேய் (1) சேர்மன் (1) சேறு (1) சைலன்ஸ் ப்ளீஸ் (1) சொந்தம் (1) சொர்க்கம் (1) சொல் மந்திரம் (1) சொல்வதொன்றும் செய்வதொன்றுமாய் (1) சோம்பேறித்தனம் (1) சோலை (1) சோலையும் பாலையும் (1) ச‌ம்பாத்திய‌ம் (1) ஜக்காத் (1) ஜக்காத் நிதிப் பங்கீடு (1) ஜனநாயகத்தை விலைக்கு வாங்கிய பணநாயகம் (1) ஜனாதிபதி யார் (1) ஜப்பான் (1) ஜமாத் (1) ஜமால் மதனி (1) ஜமால் முகம்மது கல்லூரி (1) ஜலீலா கமால் (1) ஜாஃபர் (1) ஜாபிர் (ரலி) (1) ஜாமாத் (1) ஜாஸ்மின் (1) ஜாஹிர் (1) ஜும்மா (1) ஜும்மா பள்ளி (1) ஜூஸ் (1) ஜெ (1) ஜெஜெ. சொத்து குவிப்பு (1) ஜெட் (1) ஜெட்லி (1) ஜெய்தைக் காணவில்லை (1) ஜெய்னுல் ஆபிதீன் (1) ஜெர்மனி (1) ஜைனப்(ரலி) (1) ஜ்ஃபருல்லாஹ் (1) ஞானப் பயணம் (1) டாக்கி (1) டாக்டர் சுமையா தாவூத் (1) டாலர் (1) டி.வி. எச்சரிக்கை (1) டிக்கெட் (1) டிஜிட்டடல் (1) டிஜிட்டல் (1) டிஜிட்டல் இந்தியா (1) டியூசன் (1) டிரஸ்ட் (1) டிஸெம்பர் (1) டிஸைன்ஸ் (1) டீக்கடை (1) டீக்கடை குழுமம் (1) டெலஸ்கோப் (1) டேரா (1) ட்விட் (1) த.மு.முக. (1) தஃபீக் சுல்தானா (1) தகப்பன் (1) தகர்ப்பதற்கா? (1) தகவல் (1) தகவல் அறியும் உரிமைச் சட்டம் (1) தகவல் தொடர்பு (1) தகுதிக்கேற்ப தண்டனை (1) தக்பீர் (1) தங்க முதலாளி (1) தங்கச்சி (1) தங்கப் பதக்கம் (1) தங்கை (1) தடசணையும் (1) தடம் (1) தடைகள் (1) தடைக் கல் (1) தண்டனை (1) தண்டவாளம் (1) தண்ணீர் தாகம் தீர்க்கவா (1) ததஜ (1) தந்தி டிவி. (1) தந்தை மகள் (1) தந்தை வழி உறவு (1) தந்தையர் தினம் (1) தந்தையெனும் பாசம் (1) தனித் தன்மை (1) தனித் தூது (1) தனித்தமிழ் (1) தன்னடக்கமும் மரியாதையும் (1) தன்னிலை மேம்படுத்தல் (1) தன்னிலை விளக்கம் (1) தன்னிலை விள்க்கம் (1) தன்மை (1) தப்லீக் (1) தமிழக முதல்வர் (1) தமிழக முஸ்லீம்களின் ஒற்றுமை (1) தமிழர்கள் (1) தமிழும் ஆங்கிலமும் பேசிக்கொண்டால் (1) தமிழ் தாவா (1) தமிழ் தாவா பிரிவு (1) தமிழ்நாடு அரசு (1) தமீமுல் அன்சாரி (1) தயபுள்ளயளுவோ (1) தரகர் தெரு (1) தரமற்ற தாரகை விருப்பம் (1) தரமிழந்து வருகிறதா (1) தரவிரக்கம் (1) தராவிஹ் தொழுகை (1) தரைமட்டம் (1) தர்ஜுமா (1) தர்பியா மையம் (1) தர்பிய்யா (1) தர்மம் (1) தர்ஹா (1) தற்கொலை தீர்வாகுமா (1) தலை (1) தலைசிறந்த சமுதாயம் (1) தலைமை உருவாக்கம் (1) தலைமைத் தேர்வு (1) தலைமைத்துவம் (1) தலைவரின் தகுதிகள் (1) தலைவர் யார்? (1) தலைவியாகி (1) தள விளக்கம் (1) தள்ளி வண்டி (1) தழுவல் (1) தவாப் (1) தவிர்த்திடுங்கள் (1) தவிர்ப்போம் (1) தவ்ஃபீக் (1) தவ்ஹீத் (1) தவ்ஹீத்கான் (1) தஸ்தகீர் (1) தஹ்ஸின் நிலோஃபர் (1) தா.பாண்டியன் (1) தாஃவா (1) தாஜூதீன் (1) தாஜ் மஹால் (1) தாஜ்மஹால் (1) தாத்தா (1) தாம்பத்யம் (1) தாயின் அறிவுரை கேட்போம் (1) தாய் பாசம் (1) தாரூத் தவ்ஹீத் (1) தாரை வார்க்கவா? (1) தாலிச்சா (1) தால் (1) தாவஆ பணி (1) தாவா (1) தாஹா சார் (1) தி ஹிந்து தமிழ் (1) திக் திக் (1) திக்ர் (1) திடீர் கல்லறை (1) திட்ட அறிக்கை (1) திப்பு சுலதான் (1) திப்பு சுல்தான் (1) திமிங்கலச் சாவுகள் (1) தியாகிககள் (1) தியாகிகள் (1) திரட்டி (1) திரவியம் (1) திராம்பட்டினம் (1) திரிபு (1) திரு(தொடண்)டர்) (1) திருடன் (1) திருடாதே (1) திருட்டு (1) திருத்தம் (1) திருப்பூர் to அதிரை (1) திருமணங்கள் (1) திருமணத்திற்கு கவுன்சிலிங் (1) திருமறை (1) திரைகடலோடி திரவியம் தேடு (1) திரைகடல் (1) திரையங்குகள் (1) திரையரங்கம் (1) திரையில் சிறை (1) திறந்த மடல் (1) தில்லு முல்லு (1) தீ தீயனைப்பு நிலையம் (1) தீதும் நன்றும் பிறர்தர வாரா (1) தீன் (1) தீன்குல ஹீரோக்களுக்கு (1) தீரன் திப்பு (1) தீரன் திப்பு சுல்தான் (1) தீர்ப்பு (1) தீவிர (1) தீவு (1) துக்ளக் (1) துடிக்கக் கொன்றனர் (1) துணை போகாதீர் (1) துபாய் - அதிரை (1) துரோகம் (1) துர்நாற்றம் (1) துலங்கும் (1) துளி உலகம் (1) துளியளவு (1) தூக்கமற்ற பொழுதுகளில் (1) தூதரகம் (1) தூரோகம் (1) தென் தமிழகம் (1) தெரு சங்கங்கள் (1) தேச பக்தி (1) தேசிய கொடி (1) தேசிய தினம் (1) தேடுகிறேன் (1) தேத்தண்ணி (1) தேனி (1) தேன் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் கருத்துக் கணிப்புகள் (1) தேர்வு அட்டவனை (1) தேர்வு பள்ளித் தேர்வு முடிவுகள் (1) தேர்வு முடிவுகள் (1) தையல் (1) தொட (1) தொடர் சொற்பொழிவு (1) தொடு (1) தொட்டி (1) தொண்டர் (1) தொனா (1) தொலைக் காட்சி (1) தொலைத்தது (1) தொழிலாளி (1) தொழில் நுட்பம் (1) தொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம்அ (1) தோழி (1) தோழியர் (1) நகை (1) நக்கப்பா (1) நடிகையாயிருந்து (1) நடை பயிற்சி மேடை (1) நட்சத்திரமாக (1) நட்சத்திரம் (1) நட்புடன் ஜமால் (1) நண்டும் நரியும் (1) நந்தினி (1) நனா (1) நன்கொடை (1) நன்மையே வேண்டி. 4th year (1) நன்றியுரை (1) நன்றே (1) நபி பெருமானார் வரலாறுமுன்னுரை (1) நபி(ஸல்) வரலாறு (1) நபித் தோழர்கள் (1) நபித்தோழர் (1) நபிவழி (1) நமது கல்வி (1) நயவஞ்சத்திற்கு பகிரங்க எச்சரிக்கை (1) நரகம் (1) நலம் (1) நல்ல மனையாள் (1) நல்லது (1) நல்லாருக்கியாம்மா? (1) நல்லிணக்கம் (1) நல்லொழுக்கம் (1) நள்ளிரவு (1) நவீன மவ்லூது (1) நாக்கு (1) நாங்கள் அதிரை நிருபர் (1) நாங்கள்தான் (1) நாடி (1) நாடு (1) நாட்டாமை தீர்ப்பு (1) நானும் ஆஃப்ரிக்காவும் - தொடர்கிறது (1) நான் (1) நான் என்பது (1) நான் மிகச் சிறந்த மனிதன் (1) நான் முஸ்லிமாகிவிட்டேன் (1) நான் ரெடி நீங்க ரெடியா (1) நான்காம் ஆண்டிலும் (1) நான்காவதுத் தமிழ் (1) நான்றி ஆசான்களே (1) நாய்கள் (1) நாற்காலிகள் (1) நாளங்கள் (1) நாளை? (1) நாவு (1) நிகழ்சிகள் (1) நிகழ்வுகள் (1) நிசார் அஹ்மது (1) நிதானமும் (1) நிதி அமைச்சர் (1) நித்தியோன் முன் நான் (1) நினைவலைகள் (1) நினைவிருக்கா (1) நினைவு (1) நிருபர் (1) நிர்வாகம் (1) நிர்வாகிகள் (1) நிர்வாண பாரதம் (1) நிலத்தடி (1) நிலத்தடி நீர் (1) நிழற்பட கருவி (1) நிழலாடும் (1) நிழலின் அருமை (1) நீங்களுமா ஆலிம்ஸா இப்படி செய்தீர்கள் (1) நீங்களும் கிளிக்கலாம் (1) நீடூர் அலி (1) நீதம் (1) நீதித் துறை (1) நீதிமன்றம் (1) நுண்மென் (1) நுனிப்புல் (1) நூதன விளம்பரங்கள் (1) நெஞ்சில் உரமின்றி (1) நெய்னா முஹம்மது (1) நேசம் மாநபி (1) நேரான வழி (1) நேர்கானல் (1) நேறறு (1) நேறு (1) நைஜிரியா (1) நைஜீரியா (1) நொங்கு வண்டி (1) நோக்கம் (1) நோன்பு காலங்கள் (1) நோன்புக் கஞ்சி (1) நோன்புக்கு பிறகு (1) நோம்பு (1) நோம்பு கஞ்சி (1) நோம்பு கஞ்சி அரிசி (1) நோயற்ற வாழ்வு (1) ன் (1) ப.சிதம்பரம் (1) பகல் (1) பகிர்வு (1) பகுருதீன் (1) பகைமை (1) பகையன்று நகை (1) பக்கம் (1) பங்களாதேஷ் (1) பங்கு சந்தை (1) பசி போக்குமா? (1) பசிக்கட்டுகள் (1) பசியாறிட்டு சாப்பிடலாம் (1) பசுமை எங்கே (1) பஜக (1) பஜ்ஜி (1) பஜ்லுர் ரஹ்மான் (1) பஞ்ச் டயலாக் (1) படகு (1) படச் சுருள் (1) படம் சொல்லும் பாடம் (1) படிக்கச் சென்றனர் (1) படித்த (1) படித்தால் மட்டும் போதுமா (1) படை (1) படைத்தவனின் திருக்குர்ஆன் (1) படைத்தவனை நோக்கி (1) படைப்பாளி (1) படைப்பாளிகள் (1) படைப்புகள் (1) பட்ஜெட் 2013 (1) பட்ஜெட் 2013-2014 (1) பட்டதாரி (1) பட்டப்பெயர்கள் (1) பட்டான் (1) பட்டினி (1) பட்டேல் (1) பட்டோலை (1) பணத்தை பிணமாக்கிய மோடி (1) பணம் இங்கே (1) பணம் படுத்தும்பாடு (1) பணி வாழ்வும் பணி ஓய்வும் (1) பணிக்கர் (1) பண்புகள் (1) பதற்றம் (1) பதவி (1) பதவிகள் (1) பதில் (1) பதில் இல்லா கேள்விகள் (1) பதிவது எப்படி (1) பதிவர் உலகம் (1) பதிவிலக்கணம் (1) பதிவேடு (1) பத்தாம் வகுப்பு (1) பத்திரிகை (1) பந்தம் (1) பனி (1) பனிப் பொழிவு (1) பனிப்பொழுது (1) பம்முக்காலே (1) பயங்கரவாதம் (1) பயணிக்கும் பாதை (1) பயிலரங்கம் (1) பரபரப்பு (1) பரமக்குடி (1) பரிசுகள் (1) பரோட்டா (1) பர்ஜ்துபாய் (1) பர்தா (1) பர்மீய முஸ்லீம்கள் (1) பற (1) பறவைகள் (1) பற்றாக்குறை (1) பலம் (1) பல் (1) பல்கிஸ் (1) பல்வலி (1) பள்லிவாசல் நினைவுகள் (1) பள்ளி நினைவுகள் (1) பள்ளி விடுமுறையை எப்படி கழிப்பது (1) பழ மொழி (1) பழ மொழிகள் (1) பழகிய மொழியிலே (1) பழகுமொழி (1) பழைய குருடி கதவைத் திறடி (1) பழைய பேப்பர் (1) பஷீர் ஹாஜியார் (1) பஸ் (1) பஸ்ஸார் (1) பஸ்ஸுப் பயணம் (1) பஹ்ருதீன் அஹ்மது அமீன் (1) பாகிஸ்தான் (1) பாடப் புத்தகம் (1) பாடல் (1) பாட்டி சொன்னது (1) பாட்டி பேரன் உறவு (1) பாட்டு (1) பாபரி மஸ்ஜித் (1) பாரதமணி (1) பார்ட்னர் (1) பார்த்த (1) பார்த்தீனியம் (1) பார்வேர்டு (1) பார்வை (1) பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை (1) பாலைவனம் (1) பால் அருவி (1) பாஸ்வேர்டு (1) பாஸ்வேர்ட் (1) பி (1) பிகார் (1) பிசாசு (1) பிச்சைக்காரர்கள் (1) பிச்சைப் பாத்திரம் (1) பிஜே (1) பிஜேபியை ஆகாதவர்கள் ஆக்கிய பீஹாரிகள் (1) பிடி நழுவிய (1) பித்அத் (1) பித்ரா (1) பினாங்கு சபுறு மாப்புளே (1) பினாங்கு சபுறுமாப்புளே (1) பிரச்சாரம் (1) பிரச்சாரம். (1) பிரயாண வழியில் (1) பிரான்ஸ் (1) பிரி (1) பிரிட்டன் (1) பிரிவு (1) பிரெஞ்சு (1) பிரைல் எழுத்து (1) பிர்ண்டர்ஸ் (1) பிறகு (1) பிறப்பு (1) பிறர் சிரிக்க (1) பிற்பகலும் (1) பிலால் (1) பிலால் (ரழி) (1) பிலால் நகர் (1) பில்கிஸ் (1) பிள்ளைகள் (1) பிழையறப் பிழை (1) பீகார் (1) பீச் (1) பீர் முஹம்மது (1) புகாரி இமாம் (1) புகை (1) புகை வண்டி (1) புகைபப்டம் (1) புகைப்பிடித்தல் (1) புதிய தொடக்கம் (1) புதிய நினைவுகள் (1) புதிய நிர்வாகம் (1) புதிய நூல்கள் (1) புதிய பிரவுசர் (1) புதிய வேலை (1) புதியது (1) புதியதோர் உலகைச் செய்யும் (1) புதிய‌தோர் ஊர் (1) புதுமைப் பெண் (1) புத்தக காட்சி (1) புத்தக வெளியிடு (1) புனித மாதம் (1) புன்சிரிப்பு (1) புராணம் (1) புரிதல் (1) புரை (1) புரோகிதம் (1) புற்றுநோய் (1) புலவர் பஷீர் அஹ்மது (1) புவியீர்ப்பு (1) பூ (1) பூக்கள் (1) பூங்கா (1) பூஜை (1) பூரியான் ஃபாத்திஹா (1) பெங்களூரு (1) பெட்டகம் (1) பெட்ரோல் (1) பெண் இமைக்குள் ஆண்மை (1) பெண் உரிமை (1) பெண்களின் கருத்தென்ன (1) பெண்களுள் பேரறிஞர் (1) பெண்கள்ம் மார்கெட் (1) பெண்சுதந்திரம் (1) பெண்டிரும் (1) பெண்ணாய் பிறப்பதைப் போல்போ ரின்பம் வேறில்லை (1) பெண்ணினம் (1) பெண்ணியம் (1) பெண்மக்கள் (1) பெயரிலித் தோழர் (1) பெயர் கூறுமா..? (1) பெரிய கடிகாரம் (1) பெரியர்வர்கள் (1) பெரியார் (1) பெரியார்தாசன் (1) பெருநாள் ஒளி (1) பெருநாள் தக்பீர் (1) பெருநாள் தொழுகை (1) பெருநாள் வாழ்த்து (1) பெருபான்மை (1) பெருமை (1) பெருமை தீது (1) பெர்னாட்ஷா (1) பேகம் ஹஜரத் மஹல் (1) பேக்கரி (1) பேங்க் (1) பேச்சும் (1) பேச்சுலர் (1) பேப்பர் வேர்ல்டு (1) பேரண்டம் (1) பேரன்பு (1) பேராசிரியர் (1) பேராசிரியர் M H J அவர்களுக்கு (1) பேராவூரணி பலாப்பழம் (1) பேரிடம் (1) பேரிடர் (1) பேருராட்சித் தலைவர் (1) பேரூராட்சி தலைவர் (1) பேரூராட்சி மன்றத் தலைவர் (1) பொக்கிஷம் (1) பொடிசுகளின் த்லை நோன்பு (1) பொது அறிவு (1) பொது சிவில் (1) பொதுக்குழு (1) பொதுமக்கள் (1) பொதுவானவை (1) பொய் வழக்கு (1) பொய் வழக்குகள் (1) பொரிச்ச மீன் (1) பொருட்காட்சி (1) பொறாமை (1) பொறியியல் (1) பொற்காலம் 1977 (1) பொழுதுகள். (1) போக்கு (1) போடாதே தப்பு கணக்கு (1) போட்டி வலைப்பூ (1) போட்டிகள் (1) போதனை (1) போனஸ் (1) போராட்டும் (1) போற்றுவோம் (1) போலி (1) போலி ஆலிம் (1) போலி சான்றிதழ் (1) போலிகள் ஜாக்கிரதை (1) போலிகள் பயிரை மேயும் வேலிகள் (1) போலித் தொப்பிகள் (1) போலீஸ் (1) ப்ராப்ளம் (1) ப்ளஸ் 2 தேர்வு முடிவ்கள (1) ப்ளாக் ஹோல் (1) ப்ளாஸ்டிக் பை (1) ப்ளீஸ் (1) மகத்துவ மருதாணி (1) மகளிருக்கு மட்டும் (1) மகளெனப்படுவள் (1) மகுடம் (1) மக்கட்பேறில்லா மக்கட்கு (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள்தொகையா (1) மக்கா நேரலை (1) மக்தப் மதர்சா (1) மச்சான் (1) மச்சான்ஸ் (1) மடமையிலிருந்து விடுதலை பெறுவோம் (1) மணல் மேடு (1) மண் வாசனை (1) மண்சட்டி (1) மண்டல் கமிஷன் (1) மண்ணறை வாழ்க்கை (1) மண்ணின் மைந்தர்கள் (1) மண்வட்டு (1) மண்வாசனை (1) மதம் (1) மதராஸ் (1) மதவாதம் (1) மதியம் (1) மதீனா நேரலை (1) மதுக்கூர் (1) மதுப் பழக்கம் (1) மதுரை (1) மத்திய அரசு (1) மத்திய கிழக்கு (1) மத்ஹபு (1) மந்திரச் சொல் (1) மந்திரவாதி (1) மனப்பாடம் (1) மனமே தொட்டாசினுங்கிதானே. ஜாகிர் ஹுசைன் (1) மனம் திறந்து (1) மனம் மகிழுங்கள் (1) மனிக்பான் (1) மனித நேயம் (1) மனிதமும் (1) மனிதவளமா (1) மனிதவளமும் மண்ணின் மைந்தர்களும் (1) மனிதா திருடாதே (1) மனு நீதி மனித குலத்திற்கு நீதியா (1) மனுநீதி (1) மனோரா (1) மன்னித்தருள்வாய் இறைவா (1) மமக (1) மரண சிந்தனை (1) மரண தண்டனை (1) மரத்தடி (1) மரபணுக்கள் (1) மரபுகள் (1) மரமும் (1) மரம் வளர்ப்பது ஒரு அறம் (1) மருதாணி (1) மருத்துவ (1) மருத்துவ காப்பீடு (1) மருத்துவ முகாம் (1) மருத்துவக் கல்லூரி (1) மருத்துவமனை (1) மருத்துவர் ஜானகிராமன் (1) மருவண்டி (1) மர்பு கவிதை (1) மறக்க முடியவில்லை (1) மறக்க முடியா மனிதர் (1) மறக்க முடியாத மருத்துவர்கள் (1) மறுப்பு (1) மறுப்பும் (1) மறைந்த (1) மறைந்து வரும் மண்பாண்டப் பாத்திரங்கள் (1) மறைந்து வரும் வளர்ப்பு பிராணிகள் (1) மறைவான அழகே நிறைவானது (1) மலரும் நினைவு மொட்டுக்கள் (1) மலரும் நினைவுகள் (1) மலர்கள் (1) மலாலா (1) மலைமகன் (1) மலையேற்றம் (1) மல்லிபட்ணம் சாலமீது (1) மழலை (1) மழலைகள் (1) மழை இஸ்லாமியப் பெண்கள் (1) மழை வந்தாச்சு (1) மழைக்கு பயந்த மின்சாரம் (1) மவ்லாய (1) மவ்லீது (1) மவ்லூது (1) மவ்லூதுக்கு மகுடமா ? (1) மஸ்ஜிதுகள் (1) மஸ்ஜிதுல் ஹாரமில் (1) மஹ்பூப் அலி (1) மா (1) மாங்காய் (1) மாசு (1) மாடிவீடு (1) மாணவ (1) மாணவப் பருவம் (1) மாணவமணிகள் (1) மாணவராக வாழ்ந்த ஆசிரியர் (1) மாணவர்கள் போரட்டம் (1) மாணவி (1) மாண்பு (1) மாண்புமிகு மந்திருக்கு (1) மாத்தியோசி (1) மாநகர் (1) மாநிலங்கள் (1) மானம் ஒன்றே உயர் ஆயுதமாய் (1) மானிடா... மாடு வருகிறார் (1) மாப்பிள்ளை (1) மாப்பிள்ளைக் கடத்தல் (1) மாமன்னர் (1) மாமரன் (1) மாமழை (1) மாம்பழம் (1) மாயன் இன்னும் சாகவில்லை (1) மார்கெட் (1) மார்க்க அறிஞர்கள் (1) மார்க்க வரம்புக்கு உட்பட்டு (1) மார்க்க விரோதத்துக்கு துணை போகாதீர் (1) மார்க்க விரோதம் (1) மார்க்க(மான) விவாதம் (1) மாறுகண் (1) மாற்று திறனாளி (1) மாலைப் பொழுது (1) மாவு (1) மிக்க மேலானவன் (1) மிதிரிக்கட்டை நினைவிருக்கா? (1) மினா (1) மின் கம்பம் (1) மின் தடை (1) மின்அஞ்சல் குழுமம் (1) மின்சார வாரியம் (1) மின்னல் (1) மின்வாரியம் (1) மின்வெட்டு (1) மியாசி (1) மிருகங்களாகும் மனிதம் (1) மில்லினியர் (1) மிள்பதிவு (1) மீட்பு (1) மீரான் சாஹிப் (1) மீராஷாஹிப் UPSC (1) மீளுதல் (1) மு.செ.மு.சபீர் அஹமது (1) மு.செ.மு.முஹம்மது ஹனீஃபா (1) முஃஆத் (1) முஃப்தி அப்துல் கையூம் (1) முஅத்தின் (1) முஆத் (1) முகத்திரையும் (1) முகப்புத்தகம் (1) முகமது செயினுத்தீன் - திருவிதாங்கோடு (1) முகமூடிகள் (1) முகம்து அலி (1) முகம்மது புஹாரி (1) முகவரிகள் (1) முகாம் (1) முக்காடும் (1) முக்கிய சுட்டிகள் (1) முக்கோணங்கள் (1) முடி (1) முட்டையும் (1) முதற் குழந்தை (1) முதலாம் ஆண்டு (1) முதலீடுகள் (1) முதல் பட்டதாரி (1) முதல் பயணம் (1) முதல் பிறை (1) முதல் மதிப்பெண் (1) முதல் மிடறு (1) முதல் வகுப்பு (1) முதல்வர்கள் (1) முதியோர் (1) முதிர் கன்னி (1) முதிர் நிலா (1) முத்தலாக்கின் மூடுபொருள் (1) முத்து (1) முந்திய சுன்னத் (1) முந்துங்கள் (1) முனாகீனா (1) முனைவர் (1) முன் மாதிரி (1) முன்னேற்றப் பாதை (1) முன்னேற்றம் (1) முன்பதிவு (1) முன்மாதிரி வடிவங்கள் (1) முபாரக் (1) முயலாமை (1) முயலும் (1) முயல் (1) முராத் (1) முற்பகலும் (1) முற்பகல் (1) முல்லைப் பெரியார் (1) முல்லைப் பெரியாறு (1) முள் (1) முள்மகுடம் (1) முழக்கம் (1) முஸ்லி (1) முஸ்லிம்கள் பாகிஸ்தானையும் சவுதியையும் கொண்டாடுவது ஏன் (1) முஸ்லீம் பதிவர்கள் (1) முஸ்லீம் மக்கள் தொகை (1) முஸ்லீம் லீக் (1) முஹம்மது (1) முஹம்மது அபுபக்கர் (1) முஹம்மது அலியார் சார் (1) முஹம்மது ரஃபீக் (1) முஹல்லா (1) முஹல்லா சங்கங்கள் (1) மூன்றாமிடம் (1) மூன்றாம் ஆண்டு (1) மூன்றாம் உலகப்போர் (1) மூர்த்தி (1) மூலதனம் (1) மூவண்ணக் கொடி (1) மெடிக்கல் (1) மெட்ரிக் பள்ளிகள் (1) மெட்ரோ (1) மெய்யெழுத்துகள் (1) மெர்சினா (1) மெளன ஓலம்! (1) மெளலவி அப்துல் பாசித் புஹாரி (1) மெளலித் (1) மெஷின் (1) மேட்டூர் (1) மேலாளர் (1) மேலைநாடுகள் (1) மைக் டைசன் (1) மைக்ரோ (1) மைதா (1) மையல் (1) மையவாடி (1) மைல்கல் (1) மொழிப்பெயர்ப்பு (1) மொழியால் விழிபேசுகிறது (1) மோகம் (1) மோசடி (1) மோடியின் முதுகில் ஏறும் தோல்வி மூட்டைகள் (1) மோதினார் (1) மோமியாக்கா (1) யாசகம் (1) யாசீன் சுஃபியான் (1) யார் அங்கே ? எங்கே போனார்கள் (1) யார் திவிரவாதி (1) யார் வசம்.. (1) யுவான் ரிட்லி - துணிச்சலின் மறு பெயர் (1) யூசுபும் மொம்மாலியாக்காவும் (1) யூசுப் எஸ்டஸ் (1) யூசுப் ரியாஸ் (1) யூனுஸ் (1) யோகம் (1) யோசனை (1) யோசனைகள் (1) யோசி (1) யோசிக்கிறார் (1) ரஃபீக் சுலைமான் (1) ரகசியங்கள் (1) ரசாயன (1) ரஜினி (1) ரமளான் காணொளி (1) ரயிலடி (1) ரயில் (1) ரஷ்யா (1) ரஸூல் (1) ராக்கெட் (1) ராஜா வீட்டு விருந்தும் கறி (1) ராடார் (1) ராணி (1) ராஷித் அலி (1) ரிட்டர்ன் டிக்கெட் (1) ரியர் எஸ்டேட் (1) ரிஸல்ட் (1) ரிஸான நபீக் (1) ருசிக்க மான்பு (1) ரூபாய் (1) ரெடிமேட் (1) ரெட்டைக் கிளவி (1) ரேவடி (1) ரேஷன் கார்டு (1) ரொட்டி (1) ரோடு (1) ரோமாபுரியின் ரோஜா மலர் (1) ரோஷம் (1) லகும் தீனுக்கும் வலியதீன் (1) லகூன் (1) லக்கேஜும் நானும் (1) லஞ்சத்தை ஒழிக்க முடியாதா (1) லட்சம் (1) லண்டடன் (1) லண்டனில் கந்தூரி (1) லலுபிரசாத் (1) லாயிலாஹ (1) லேசர் (1) லைஃப் டைம் - Talk (1) லைசன்ஸ் (1) லைப்ரரி (1) வகிடும் (1) வக்ஃபு வாரியம் (1) வக்ப் வாரியம் (1) வசதி (1) வட இந்திய (1) வடியுது (1) வடிவும் (1) வட்டாட்சியர் முடிவு (1) வட்டார வழக்கு மொழி (1) வட்டியில்லா வங்கிச் சேவையை நோக்கி (1) வட்டிலப்பம் (1) வணங்குவோம் (1) வண்கொடுமை (1) வண்டூருது (1) வண்ணப்படம் (1) வண்ணம் (1) வதந்தியைப் பரப்பாதீர் (1) வன்மம் (1) வன்முறை (1) வன்மையாக கண்டிக்கிறோம் (1) வப்பா (1) வயசு (1) வயது (1) வயர்லெஸ் (1) வயலும் வாழ்வும் (1) வரம்பு (1) வரவுக்கும் செலவுக்கும் (1) வரிவரியாய் (1) வருகம் (1) வருமுன் (1) வருமுன் காப்போம் (1) வரும் முன் காப்போம் (1) வர்த்தக (1) வறட்டி (1) வலக்கரம் (1) வலி வழிச் செய்திகள் (1) வலைஞர்கள் (1) வலைத்தளங்கள் (1) வளம் (1) வளர்க (1) வளர்கிறாய் மகனே (1) வளர்ச்சிப்பாதையில் மோடி அரசு (1) வளைகுட (1) வளைகுடா பாதிப்பு (1) வளைகுடா வெயில் (1) வள்ளுவ (1) வழக்கம் (1) வழக்காடல் (1) வழக்கு (1) வழக்குக் கூண்டில் வறுமைக் கோடு (1) வழிகாட்டி (1) வழிகேடு (1) வழிமுறை (1) வஸ்வாஸ் (1) வா (1) வாகனங்கள் (1) வாகிங்க் (1) வாக்காளப் பெருமக்களே (1) வாக்கி (1) வாசனை (1) வாதம் (1) வாதி (1) வாப்பா பாட்டு (1) வாப்பிச்சா (1) வாயோதிக வலிகள் (1) வாய் (1) வாய் துர்நாற்றம் (1) வாரப் பத்திரிகை (1) வாழப் பழகுங்கள் (1) வாழவேண்டும் (1) வாழ்க சனநாயகம் (1) வாழ்கையின் வலக்கரம் (1) வாழ்க்கைத் தரம் (1) வாழ்க்கையின் பதிவேடுகள் (1) வாழ்ந்திடாதே (1) வாழ்வதற்கா? (1) வாழ்வு (1) வாழ்வு சிதைந்தது! வளம் குறைந்தது (1) வாஸ்கோடகாமா (1) விகடன் (1) விசா (1) விசாலம் (1) விசிட் (1) விடியலை நோக்கி (1) விடிவு (1) விடுமுறைக் காலம் (1) விடைபெறு (1) விண் கல் வீண் பயமா (1) விண்ணுலிருந்து மின்சாரம் (1) விண்வெளி (1) விதவை (1) விதி எண் 110 (1) விதி மீறல் (1) வித்தியாசமான வணிகர் (1) வித்தியாசமானவர்கள்.-பகுதி 3 (1) வித்யா (1) வினிகர் (1) வினோதினி (1) விபரீதம் (1) வியக்க வைக்கும் பயணக் கண்டுபிடிப்புக்கள் (1) வியாதி (1) வியாபாரம் (1) வியாபாரி (1) விரக்தி (1) விருட்சம் (1) விருது (1) விரைவு (1) விரோதம் (1) விலகல் (1) விலங்கினம் (1) விலாசம் (1) விலை (1) விளக்கு (1) விளைநிலங்கள் (1) விழலுக்கு வீணாகும் சிந்தனைகள் (1) விழா (1) விழி மொழி (1) விழிப்புணர்வு பக்கங்கள் (1) விழுஞாயிறு (1) விஷ வாயு (1) விஷுவல் (1) விஸ்வரூபம் (1) வீச்சு (1) வீடு கட்டுபவர்களின் கவனத்திற்கு (1) வீட்டுக்கு ஓர் ஆசான் (1) வீட்டுப் பாடம் (1) வீண் விரயம் செய்யாதீர்கள் (1) வீரர் (1) வீழ்வது (1) வெறியாட்டம் (1) வெற்றிலை (1) வெலக்காத் தெரு (1) வெல்லெஜொ (1) வெளியூர் (1) வெளியூர்காரர் (1) வெளியே (1) வெள்ளம் (1) வெள்ளிக்கிழமை (1) வெள்ளெழுத்து (1) வேங்கை (1) வேட்டு (1) வேட்பாளர்களின் நேர்காணல். நேர்காணல் (1) வேண்டாம் (1) வேண்டாம் கொண்டாட்டம் (1) வேண்டுதல் (1) வேண்டும் (1) வேதம் (1) வேற்றுமை (1) வேலை தேடுவோர்க்கு (1) வேலை வரைகலை (1) வேவு (1) வேவ்ரைடர் விமானம் (1) வேஷம் (1) வைத்தியன் (1) ஷஃபி (1) ஷபான பாஸிஜ் (1) ஷபே பராஅத் (1) ஷமீம் (1) ஷார்ஜா (1) ஷாஹிபா சபீர் அஹ்மது (1) ஷேக் (1) ஷேக் அப்துல் ரஹ்மான் சுதைஸி (1) ஷேக் உசேன் (1) ஷேக்கனா M.நிஜாம் (1) ஷைத்தான் (1) ஸலவாத் (1) ஸாத் பின் முஆத் (1) ஸூரத்துல் அஃலா (1) ஸூரத்துல் கியாமா (1) ஸூரத்துல் ளுஹா (1) ஸ்டாம்ப் (1) ஸ்டேஷனரி (1) ஸ்டேஷன் (1) ஸ்பீடு (1) ஸ்பெஷல் (1) ஸ்மார்ட் (1) ஹஜ் பெருநாள் (1) ஹஜ் 2012 (1) ஹஜ் கமிட்டி (1) ஹஜ்ஜின் மகத்துவம் (1) ஹஜ்ரத் மொஹானி (1) ஹத்தனா (1) ஹந்தூரி (1) ஹனீபா சார் (1) ஹலோ... ஹலோ... நலமா (1) ஹாபிட் (1) ஹாபிழ் (1) ஹாபிழ் பராஆ (1) ஹார்ட் (1) ஹாலித் (1) ஹிஜாப் (1) ஹிஜாப் S.அலாவுதீன் (1) ஹிஜாப் ஒரு கவசம் (1) ஹூமர் (1) ஹைக்கூ (1) ஹைடெக் காலம் (1)