Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

வரலாறுகள்! வழக்குகள்! வல்லரசுகள்! வடிக்கப்படும் இரத்தம்!

பாலஸ்தீனம்...

10

அதிரைநிருபர் பதிப்பகம் | August 09, 2014 | , , , , ,

தொடர் பகுதி : மூன்று

படைத்த இறைவனின் கோபத்துக்கும் சாபத்துக்கும் ஆளான பாலஸ்தீனத்தில் வாழ்ந்த யூதர்களும் அந்த நாடும் எத்தனை ஆட்சியாளர்களின் கரங்களில் எடுப்பார் கைப்பிள்ளையாக ஆனார்கள் என்பதை வரலாறு வடிவமைத்துக் காட்டுகிறது.

  • முதலாவதாக 7 ஆம் நூற்றாண்டில் கி.பி.636–ல் கலீஃபா உமர் (ரலி) அவர்கள் ஆட்சியில் பாலஸ்தீனம் ரோம சாம்ராஜ்யத்திடமிருந்து கைப்பற்றப்பட்டு இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்தது. இது ஒரு வரலாற்றுத் திருப்புமுனை.
  • அடுத்து, 11ஆம் நூற்றாண்டில் கி பி 1095-ல் முதலாவது சிலுவை யுத்தத்தின் காரணமாக முஸ்லிம்கள் வசமிருந்த பாலஸ்தீனம் கிருத்தவர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. அப்போது, இன்று காசா வில் நடந்து வருவதைவிடக் கோரமான படுகொலைகளை திருச்சபைகளின் ஆதரவுடன் கிருத்துவப் படைகள் நடத்தின. இந்த ஆக்ரமிப்புகள் கிட்டத் தட்ட 90 ஆண்டுகள் தொடர்ந்தன.
  • இதனைத் தொடர்ந்து 12-ஆம் நூற்றாண்டில் 1190 -ல் மாவீரர் சலாஹுதீன் அய்யூபி அவர்கள் திட்டமிட்டுப் போராடி பாலஸ்தீனத்தை கிருத்துவர்களிடமிருந்து மீண்டும் மீட்டெடுத்து முஸ்லிம்கள் ஆளத் தொடங்கினர். அதைத் தொடர்ந்து சுமார் 725 ஆண்டுகள் முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ்தான் மீண்டும் பாலஸ்தீனம் இருந்தது.
  • 1924- ல் உதுமானிய கிலாஃபத்தை கலைத்து மீண்டும் பாலஸ்தீனத்தை சிலுவை யுத்த கொலைகாரர்களின் வாரிசுகள் உட்புகுந்து ஆக்கிரமிப்பு செய்தார்கள்.
  • யூதர்களை ஹிட்லர் தேடிப்பிடித்து தேடிப்பிடித்து கொத்துக் கொத்தாகக் கொன்று போட்டார். இந்தப் படுகொலைகள் உலக மக்களின் அனுதாபத்தை யூதர்களின்பால் திருப்பிவிட்டது. இன்று காசாவில் பாலஸ்தீனியர்கள் படும் பாட்டை விட நூறு மடங்கு அவதிகளை யூதர்களுக்கு ஹிட்லர் பரிசாக அளித்தார். அதைப்பற்றி தனி அத்தியாயம் பார்க்க இருக்கிறோம்.
  • 1948 – ல் இரண்டாம் உலகப் போருக்குப் பின் வல்லரசுகளின் வெற்றியால் அனுதாபத்தின் அடிப்படையில் இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்டு பாலஸ்தீனத்தின் நிலப்பகுதிகளில் வல்லரசுகளால் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டது. 
இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் இரண்டாவது கலிபாவான அமீருல் மூமினீன் என்று அழைக்கப்பட்ட ஹஜரத் உமர் (ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் ஜெருசலம் முஸ்லிம்களின் வசமானது. நீதி நியாயங்களைக் கடைப்பிடித்த ஹஜரத் உமர் (ரலி) அவர்கள் யூத , கிருத்துவ, இஸ்லாம் ஆகிய மூன்று மதங்களைச் சார்ந்தவர்களும் அவரவர்களுடைய மதங்களின் நியமங்களைப் பின்பற்றி அமைதியுடன் வாழ வழிவகுத்திருந்தார். ஒருவரை ஒருவர் மதித்து கண்ணியப்படுத்தி கருத்து மாறுபாடுகளின்றி மத நல்லிணக்கம் ஓங்கி வளர்ந்த இடமாகவும் தலைநகர் ஜெருசலமும் பாலஸ்தீனமும் திகழ்ந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக ஹஜரத் உமர் ( ரலி) அவர்களுடைய கொலைக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் பாலஸ்தீனத்தின் தனிப்பட்ட தன்மைகளை கவனத்தில் கொள்ளாமல் கையாண்டதால் பாலஸ்தீனம் கிருத்தவர்களின் கைகளுக்குப் போனது. இவ்விரு வரலாற்று சம்பவங்களையும் பகிர்வோம்.

முதலில் ஹஜரத் உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் பாலஸ்தீனின் நிலையைப் பற்றிப் பார்க்கலாம்.

ஹஜரத் உமர் (ரலி) அவர்களின் கட்டளைப்படி பாலஸ்தீனம் முஸ்லிம்களால் கைப்பற்றப்பட்டது. அவ்விதம் கைப்பற்றப்பட்டபோது பாலஸ்தீனத்தை ஆண்டவர்கள் ரோமானியர்கள் ஆவார்கள். பாலஸ்தீனத்தின் தலைநகரான ஜெருசலம் முஸ்லிம் வீரர்களால் முற்றுகையிடப் பட்டது. தலைநகர் ஜெருசலம் அவ்வளவு இலகுவாக வீழ்ந்து விடவில்லை. முற்றுகை நீடித்ததே தவிர அந்த முற்றுகையை தனது முழுபலத்துடன் எதிர்த்து நின்றது ரோம சாம்ராஜ்யத்தின் கிருத்தவப் படை. ஆனாலும் இறுதியில், நான்கு மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் நடைபெற்ற ஒரு வீராவேசப் போருக்குப் பின் ஜெருசலம் வீழ்ந்தது. அன்றைய நாள் இஸ்லாமியப் படைக்குத் தலைமை தாங்கிய தளபதி அபூ உபைதா (ரலி) அவர்கள் ரோமானியப் படைகளை தன்னிடம் சரணடைந்து முஸ்லிம்களுடைய ஆட்சியை நிறுவ சம்மதிக்க வேண்டுமென்று உத்தரவிட்டார்.
அந்த நேரம் ஜெருசலத்தின் பிரதான பாதிரியாராகவும் நகரத்தின் தலைவராகவும் இருந்தவரின் பெயர் (Sophranius) சோப்ரனியூஸ் என்பவராவரார். அவர் படைத்தளபதி அபூ உபைதா (ரலி) அவர்களுக்கு ஒரு செய்தி அனுப்பினார். அதன்படி வெற்றி கொள்ளப்பட்ட ஜெருசலத்தின் கையளிப்பு, இஸ்லாமிய உலகின் கலிபாவான ஹஜரத் உமர் (ரலி) அவர்களின் முன்னிலையிலே தர முடியுமென்றும் இதற்காக கலிபா உமர் (ரலி) அவர்களை ஜெருசலத்துக்கு வரச் சொல்லுங்கள் என்றும் கேட்டுக் கொண்டார். கலிபா அவர்களோ தொலைதூரத்தில் - மதினாவில் இருந்தார்கள்.

இந்த நிகழ்வை, The patriarch Sophranius appeared on the walls, and by the voice of an interpreter demanded a conference. After a vain attempt to dissuade the lieutenant of the Caliph from his impious enterprise, he proposed, in the name of the people, a fair capitulation , with this extraordinary clause , the articles of security should be ratified by the authority and presence of Omar himself. என்று அன்று நிகழ்ந்த நிகழ்வுகள் Decline and Fall of the Roman Empire - Volume II என்கிற புகழ் பெற்ற வரலாற்று நூலில் Edward Gibbon என்பவரால் pages 267 -268 – ல் விவரிக்கப்பட்டிருக்கிறது. 

இந்தத்தகவல் கலிபா உமர் (ரலி) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதும் உடனே உயர்மட்ட ஆலோசனைக் குழு மதினாவில் கூடியது. அந்தக் கூட்டத்தில் ஹஜரத் அலி (ரலி) அவர்களின் ஆலோசனையை ஏற்று கலிபா உமர் (ரலி) அவர்கள் ஜெருசலத்துக்குப் புறப்பட்டார்கள். 

பாலைவனப் பயணம் – நெடுந்தொலைவு ஆனாலும் தனது கஷ்டங்களை பொருட்படுத்தாமல் கலிபா உமர் (ரலி) அவர்கள், ‘தேவை இல்லாமல் இன்னும் ஒரு சொட்டு இரத்தம் கூட சிந்துவதற்கு இடம் தர மாட்டேன்’ என்று சொல்லி விட்டுப் புறப்பட்டு ஜெருசலம் வந்தடைந்தார்கள். 

ஜெருசலம் நகரத்தின் நுழைவாயிலில் கலிபா அவர்களுக்காக காத்திருந்த பாதிரியார், கோதுமை நிற ஒட்டகத்தில் வந்திறங்கிய அந்த மனிதரைக் கண்டதும், ஆச்சரியத்தால் வியந்து போனார். மேலே நான் குறிப்பிட்டு இருக்கிற வரலாற்றாசிரியரின் கூற்றுப்படி பனிரெண்டு இடங்களில் ஒட்டுப் போட்டுத் தைத்த மேலங்கி மற்றும் தோலறுந்த காலணியும் அணிந்து வந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் கலிபா அவர்களைக் கண்டு மலைத்துப் போனார் பாதிரியார். பெருமானார் (ஸல்) அவர்கள் மீதும் அவரது சீடரான கலிபா உமர் (ரலி) அவர்கள் மீதும் அங்கு திரண்டிருந்த மக்களுக்கு மரியாதை கூடியது. இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் தன்னிரகற்ற மன்னரின் எளிமை, எதிரிகளை வாயடைக்கச் செய்தது. முதல் பார்வையிலேயே அந்நகர மக்களின் நெஞ்சம் கவர்ந்தார் ஹஜரத் உமர் (ரலி) அவர்கள். 

ஜெருசலம் கை மாற்றப்பட்டது. அதன் அடையாளமாக நகரத்தின் சாவி கலிபா உமர் (ரலி) அவர்களிடம் ஒப்புக் கொடுக்கப்பட்டது. Sophranius bowed before his new master , and secretly muttered in the words of Daniel என்று வரலாறு குறிப்பிடுகிறது. நகரத்தின் பல்வேறு பகுதிகளையும் புதிய மன்னருக்குப் பாதிரியார் சுற்றிக் காட்டினார். விளக்கங்கள் கூறினார். கிருத்தவ தேவாலயங்களுக்குக் கூட்டிச் சென்றார். 

At the hour of prayer they stood together in the Church of Resurrection , but the Caliph refused to perform his devotions, and contented himself with praying on the steps of the Church of Constantine. To the Patriarch he disclosed his prudent and honourable motive. “Had I yielded “ said Omar “ to your request , the Moslems of a future age would have infringed the treaty under colour of imitating my example” என்று Edward Gibbon அவர்கள் அந்தக் காட்சியை வர்ணிக்கும் போது நமது விழிகள் வியப்பால் விரிகின்றன. சமூக நல்லிணக்கத்துக்கான சான்று அந்தக் காட்சி. 

அதாவது, பாதிரியாருடன் ஹஜரத் உமர் (ரலி) அவர்கள் அங்குள்ள கிருத்துவ தேவாலயங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும் பொது அசர் தொழுகைக்கான பாங்கு ஒலித்தது. தொழத்தயாரான உமர் (ரலி) அவர்களை தேவாலயத்திலேயே தொழுது கொள்ளும்படி பாதிரியார் வேண்டினார். ஆனால், கலிபா ஹஜரத் உமர் (ரலி) அவர்கள் சொன்னது என்ன தெரியுமா? “ இறைவனை நாங்கள் அவனால் படைக்கப்பட்ட எந்த இடத்தில் வேண்டுமானாலும் தொழலாம்; ஆனால் எனது செயல், எதிர்காலத்தில் ஒரு முன்மாதிரியாகி எனது தோழர்கள் உங்கள் தேவாலயத்தில் தொழுவதற்கு திரண்டு வந்துவிடக் கூடுமென்று நான் அஞ்சுகிறேன்" என்று கூறினார். கலிபா தொழுத இடம் என்று முஸ்லிம்கள் நாளைக்கு உரிமை கொண்டாடி அதனால் சிறுபான்மையினராகிய கிருத்துவர்களுக்குப் பாதிப்பு வரக்கூடாது என்று கலிபா உமர் (ரலி) அவர்கள் கவனமாக இருந்து வேறொரு இடத்தில் தனது தொழுகையை நிறைவேற்றினார்கள்.

ஜெருசலத்தில் தான் தங்கி இருந்த அந்த நாட்களில் பெருமானார் (ஸல்) அவர்கள் மிஹ்ராஜ் என்னும் விண்ணுலகப் பயணத்தை மேற்கொண்ட இடத்தையும் பெருமானார் அவர்கள் தொழுகை நடத்திய இடத்தையும் காண விழைந்த ஹஜரத் உமர் (ரலி) அவர்கள் அந்த இடங்களுக்குச் சென்றார். அந்த புனிதமான இடங்கள் கூளமும் குப்பையுமாகக் கிடந்தது. சரியான பராமரிப்பின்றிக் கிடந்ததைக் கண்ட கலிபா உமர் (ரலி) அவர்கள் தங்களுடன் வந்திருந்த சில தோழர்களுடன் இணைந்து தங்களின் கரங்களால் அந்த இடங்களை தூய்மைப் படுத்தினார்கள். அதன்பின் அந்த இடங்களில் தாங்களும் தொழுகை நடத்தினார்கள். இங்குதான் மஸ்ஜித்- அல் அக்ஸா அமைந்துள்ளது.

ஜெருசலம் நகரத்தை உமர் (ரலி) அவர்கள் பெற்றுக் கொண்டபோது அந்நகரில் அமைதி நிலவியது. அங்கு வாழ்ந்த கிருத்தவர்களுடன் கலிபா அவர்கள் ஒரு ஒப்பந்தத்தையும் செய்து கொண்டார். அந்த ஒப்பந்தம் 

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால் ....

எலியா (ஜெருசலத்தின் மறுபெயர்) நகரத்தின் மக்களுக்கு, நம்பிக்கையாளர்களின் தளபதியும் இறைவனின் சேவகனுமாகிய உமர் அளிக்கும் வாக்குறுதி. நோய்வாய்ப்பட்டவர்கள், நல்ல ஆரோக்கியமாக இருப்பவர்கள் உட்பட அனைவரின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் தேவாலயங்களுக்கும் சிலுவைகளுக்கும் அவர்கள் மதத்துடன் தொடர்புடைய அனைத்துக்கும் நான் பாதுகாப்பு அளிக்கிறேன். அவர்களது சர்ச்சுகள் வீடுகளாக மாற்றப்படாது. அவைகள் அழிக்கப்படாது. சர்ச்சுகளின் இணைப்புப் பகுதிகளும் அழிக்கபடாது. இந்நகரில் வாழும் குடி மக்களின் சிலுவைகளும் உடமைகளும் அழிக்கபடாது. அவர்களது மத நம்பிக்கையில் எவ்வித முட்டுக்கட்டையும் போடப்படாது . அவர்களில் ஒருவருக்குக் கூட எவ்வித துன்பமும் இழைக்கப்படாது." (பார்வை : கலிபாக்கள் வரலாறு – மஹ்மூத் அஹ்மத் கழன்பர் ) 

என்பதுதான் அந்த ஒப்பந்தம்.

போர்க் களங்களில் – வாள் முனையில்- கழுத்தில் கத்தி வைத்துப் பரப்பப்பட்டது இஸ்லாம் என்று கதைகளை அள்ளி விடுவோர் கவனத்தில் கொள்ள வேண்டிய நிகழ்வுகளாகும் இவை. அன்பாலும் அடக்கத்தாலும் பண்புமிக்க செயல்களாலும் பரப்பப்பட்டதுதான் இஸ்லாம் என்பதை கலிபா ஹஜரத் உமர் (ரலி) அவர்களின் நடவடிக்கைகளும் அணுகுமுறைகளும் பாரெங்கும் அறியப் பறைசாற்றுகின்றன.

கிருத்தவ மற்றும் யூத மக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் வழிபாட்டு உரிமைகளுக்கும் உத்திரவாதம் அளித்த ஹஜரத் உமர் (ரலி) அவர்கள் அந்த மக்கள் அரசுக்கு வரியை மட்டும் செலுத்த வேண்டுமென்று ஆணையிட்டார்கள். பணக்காரர்கள் மீது ஆண்டுக்கு ஐந்து தீனார்களும் நடுத்தர மக்கள் மீது நான்கு தீனார்களும் அடித்தட்டு மக்கள் மீது மூன்று தீனார்களும் வரியாக விதிக்கப்பட்டது. கிருத்துவ தேவாலயங்களில், முஸ்லிம்களின் பள்ளிகளின் தொழுகைக்கான பாங்கு நேரம் தவிர மற்ற நேரங்களில் தேவாலய மணிஓசை ஒலித்துக் கொள்ளவும் அனுமதியளிக்கப்பட்டது. கிருத்தவர்கள் தங்களின் சிலுவைகளைச் சுமந்து வீதிகளில் ஊர்வலம் வரவும் அனுமதியளிக்கப்பட்டது. முஸ்லிம்கள் அல்லாதவர்களின் சொத்துக்களை எவரும் சூறையாடவோ அத்துமீறி அனுபவிக்கவோ முயலக் கூடாதென கண்டிப்பாக அறிவுறுத்தப்பட்டனர். முஸ்லிம் அல்லாதவர் ஒருவரை ஒரு முஸ்லிம் கொலை செய்துவிட்டாலும் முஸ்லிம் அல்லாதவர்க்கு வழங்கப்பட்டதற்கு ஈடான அதே தண்டனையே முஸ்லிமுக்கும் வழங்கப்பட்டது. ஆடை அணிகலன்களை அந்தந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்களின் பாரம்பரிய முறையில் அவர்களின் சொந்த விருப்பத்தின்படி அணிந்துகொள்ள உரிமை அளிக்கப்பட்டது. இதனால் கலாச்சார அடையாளங்களை வெளிப்படுத்திக் கொள்ள பூரண சுதந்திரம் அளிக்கப்பட்டது.

 உமர் (ரலி) அவர்களின் ஜெருசலத்துக்க்கான விஜயமும் செய்து கொண்ட ஒப்பந்தமும் விதிக்கப்பட்ட வரி முறைகளும் அங்கு வாழ்ந்த மக்களையும் அதுவரை அவர்களை ஆண்டு கொண்டிருந்த பாதிரியார் சோப்ரோனியூசையும் மிகவும் கவர்ந்தது. இஸ்லாத்தின் இனிமையின்பால் அவர்களை ஈர்த்தது. இதனால் கத்தியின்றி இரத்தமின்றி பலர் இஸ்லாத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். இப்படி இணைத்துக் கொண்டவர்களில் பல யூதர்களும் அடக்கம்.

தனது ஆளுமைக்கு உட்பட்ட பகுதிகளில் அனைத்து மத மக்களையும் சரிசமமாக நடத்த வேண்டுமென்று கலிபா உமர் (ரலி) அவர்கள் கட்டளை பிறப்பித்து இருந்தார்கள். தனக்குப் பின் ஆட்சிக்கு வருபவர்களும் இந்த முறைகளைப் பின்பற்ற வேண்டுமென்றும் கூறி இருந்தார்கள். அதன்படி அடுத்த கலிபாவாக ஹஜரத் அலி (ரலி) அவர்கள் பதவி ஏற்றுக் கொண்ட பிறகும் கூட எல்லாம் சரியாகத்தான் போய்க் கொண்டு இருந்தது. கிட்டத்தட்ட நானூற்று ஐம்பது ஆண்டுகள் இவ்விதம் கடந்தன. 

அப்போதுதான் முதல் சிலுவைப் போர் வந்தது. அதையும் பார்க்கலாமே இன்ஷா அல்லாஹ்.

இபுராஹீம் அன்சாரி

10 Responses So Far:

sheikdawoodmohamedfarook said...

அருமையானவரலாற்றுதொடர்!தோற்றவர்களின்மீதுகலிபாஉமர்[ரலி] அவர்களின்ஒப்பந்தம்அல்லாவின்மீதுஅவர்களுக்குஇருந்த நம்பிக்கையையும்பயத்தையும்காட்டுகிறது. உலகின்ஒவ்வொருதலைவனும்மக்களும் இந்தமுன்மாதிரியைகடைபிடித்தால் உலகம்அமைதிபூங்காவாகமாறும். தொடரட்டும்இதுபோன்றவரலாற்றுதொடர்கள்.

sheikdawoodmohamedfarook said...

//பனிரெண்டுஇடங்களில்ஓட்டுபோட்டுதைத்தசட்டைதோலருந்தகாலணியுடன்ஒருகலிபாசென்றார்//இந்நாளில்சாதாரணஉடையில்கல்யாணபந்தலுக்குசென்றாலேகுடிக்கசர்பத்கூட கிடைக்காதே.

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

உமர்(ரலி) அவர்களின் எளிமை, மாற்று மதத்தவரும் போற்றிப் பேசுமளவிற்கு உலகப் பிரசித்தம் எனினும் பாலஸ்தீனப் பிரச்னையின் பிண்ணனியில் தாங்கள் சொல்லியிருக்கும் செய்தி எனக்குப் புதிது.

சரியான தருணத்தில் மெய்யான செய்திகளை அறியத்தரும் தங்களின் இந்த கட்டுரை முஸ்லீம்கள் மட்டுமல்லாது அனைத்து மதத்தவரும் தெரிந்து கொண்டால், தற்போதைய யூத நரிகளின் ரத்த வெறிபற்றிய ஒரு நீதமாக முடிவுக்கு வருவார்கள்.

அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா, காக்கா.

Ebrahim Ansari said...

தம்பி சபீர் அவர்கள் சொன்னது

// உமர்(ரலி) அவர்களின் எளிமை, மாற்று மதத்தவரும் போற்றிப் பேசுமளவிற்கு உலகப் பிரசித்தம் எனினும் பாலஸ்தீனப் பிரச்னையின் பிண்ணனியில் தாங்கள் சொல்லியிருக்கும் செய்தி எனக்குப் புதிது.//

எனக்கும்தான் புதிது.

பாலஸ்தீனம் பற்றி ஒரு விரிவான கட்டுரைத் தொடர் எழுத வேண்டுமென்று தாங்கள்தான் அன்புக் கட்டளை இட்டீர்கள். இது பற்றி மச்சான் அவர்களிடம் கலந்து பேசினேன். கட்டுரையில் குறிப்பிட்டுள்ள The Decline and Fall of Roman Empire என்கிற நூலின் இரண்டு (என் எடை அளவு) கனத்த தொகுதிகளைத் தூக்கித் தந்து இதை படித்துப் பார் உனக்கு நிறைய தகவல்கள் கிடைக்குமென்று கூறினார்கள். அதைப் படித்த பிறகுதான் நானும் இவற்றை அறிந்தேன்.

அவற்றின் அடிப்படையிலேயே இங்கு பகிர்ந்துள்ளேன். இன்னும் படித்துக் கொண்டு இருக்கிறேன்.

அத்துடன் சில மார்க்கம் தொடர்பான சந்தேகங்களை மவுலானா அசதுல்லா அவர்களிடம் கேட்டுத் தெரிந்து எழுதுகிறேன்.

கலிபோர்னியாவிலிருந்து அப்துல் கபூர் என்கிற ஒரு தம்பி தொடர்பு கொண்டு அவரும் சில தகவல்களை அனுப்பித் தந்து இருக்கிறார்.

இப்படிப் பலரின் அன்பிலும் அறிவுரையிலும் அரவணைப்பிலும் இந்தத் தொடர் பகிரப்பட்டு வருகிறது. இன்னும் சுவராஸ்யமாக இந்த அரசியல் மற்றும் மதம் கலந்த உணர்வுபூர்வமான சோகக்கதையைப் பகிர இன்ஷா அல்லாஹ் முயற்சிப்போம்.

Ebrahim Ansari said...

தம்பி சபீர் அவர்களுக்கு,

வ அலைக்குமுஸ் சலாம்.

வளைகுடா நாடுகளில் பணியாற்றிய பலரும் பாலஸ்தீநியர்களுடன் பழகி இருப்பார்கள். அதிலும் நான் நான்கு ஆண்டுகள் லெபனானில் பணியாற்றிய காலங்களில் அவர்களுடன் நிறைய நிறையப் பழகி இருக்கிறேன்.

பைபிளில் குறிப்பிடப்படும் சீதோன், ( சைதா) தீரு (Tyre) , அல் அன்சார் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்ற அனுபவங்களும் இஸ்ரேல் இராணுவத்தால் ஓரிரவு சிறைப் பிடிக்கப்பட்ட அனுபவமும் எனக்கு உண்டு.

நிறைய சோகக்கதைகள் என்னிடமும் தனிப்பட்ட முறையில் உள்ளன. இயன்றவரை அவற்றையும் பகிர்வோம். இன்ஷா அல்லாஹ்.

sabeer.abushahruk said...

காக்கா,

நான் பணியாற்றும் நிறுவனத்தின் அரபாபின் மூதாதையர் பாலஸ்தீனியர். எனக்குக் கீழ் 5 ஆண்டுகள் உதவி மேலாளராக வேலை செய்த எஞ்சினியர் பாலஸ்தீனின் காஸாவாசி.

முடிந்தால் மேலும் தகவல்கள் திரட்டி இந்தத்தொடரை ஒரு தன்னிகரற்ற முழுமையானத் தொடராக பரிணமிக்கச் செய்வோம் இன் ஷா அல்லாஹ்.

Ebrahim Ansari said...

தம்பி சபீர்!

தாங்கள் விரும்பிய வண்ணமே. இன்ஷா அல்லாஹ்.

sheikdawoodmohamedfarook said...

அன்புள்ளmyத்துனருக்கு!அஸ்ஸலாமுஅலைக்கும்.இந்தக்கட்டுரைக்கு உரமூட்டஇன்னும்ஒருபுத்தகம்கையில்கிடைத்திருக்கிறது.அது ''குர்ஆனில்ஜெருசலம்''அனுப்பிவைக்கிறேன்.அட்ரசைஎன்e-mailலுக்கு அனுப்பிவைக்கவும்.

adiraimansoor said...

///அதாவது, பாதிரியாருடன் ஹஜரத் உமர் (ரலி) அவர்கள் அங்குள்ள கிருத்துவ தேவாலயங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கும் பொது அசர் தொழுகைக்கான பாங்கு ஒலித்தது. தொழத்தயாரான உமர் (ரலி) அவர்களை தேவாலயத்திலேயே தொழுது கொள்ளும்படி பாதிரியார் வேண்டினார். ஆனால், கலிபா ஹஜரத் உமர் (ரலி) அவர்கள் சொன்னது என்ன தெரியுமா? “ இறைவனை நாங்கள் அவனால் படைக்கப்பட்ட எந்த இடத்தில் வேண்டுமானாலும் தொழலாம்; ஆனால் எனது செயல், எதிர்காலத்தில் ஒரு முன்மாதிரியாகி எனது தோழர்கள் உங்கள் தேவாலயத்தில் தொழுவதற்கு திரண்டு வந்துவிடக் கூடுமென்று நான் அஞ்சுகிறேன்" என்று கூறினார். கலிபா தொழுத இடம் என்று முஸ்லிம்கள் நாளைக்கு உரிமை கொண்டாடி அதனால் சிறுபான்மையினராகிய கிருத்துவர்களுக்குப் பாதிப்பு வரக்கூடாது என்று கலிபா உமர் (ரலி) அவர்கள் கவனமாக இருந்து வேறொரு இடத்தில் தனது தொழுகையை நிறைவேற்றினார்கள்.////

மாஷா அல்லாஹ் மிக அருமையான உண்மை வரலாற்று கட்டுரை
ஊமர் ரலியல்லஹ் அன்ஹு அவர்கள் ஆட்சி செய்ததுபோல்
இருந்த இந்தியாவின் நிலமை இந்த ஆர் எஸ் எஸ் வெறியர்களால் உறுமாற்றம் பெற்று இந்தியாவே காவிமயமாகிவிட்டது ராமரைவைத்து நாடகமாடும் ஆர் எஸ் எஸ் வெறியர்களை பற்றியும் உமர் ரலியல்லாஹ் அன்ஹு அவர்களின் ஆட்சிமுறையை பற்றியும் நமக்கு தெரிந்த ஹிந்து சகோதரர்களுக்கு சான்ஸ் கிடைக்கும்போதெல்லாம் விவரிக்க வேண்டும்

Ebrahim Ansari said...

அன்புள்ள தம்பி மன்சூர் அவர்களுக்கு,

தேசத்தந்தை காந்தி அவர்கள் கூட இந்தியாவில் ஹஜரத் உமருடைய ஆட்சியை ப் போல ஏற்பட வேண்டுமென்று சொன்னவர்தானே. காந்தியை சல்லடையாக துளைத்த பல குண்டுகளில் ஒரு குண்டு அப்படிச் சொன்னதற்காக அவருக்கு வழங்கப்பட்ட பரிசுதானே!

இந்திய வரலாறு முதல் முறையாக சிறுபான்மையினரின் ரம்ஜான் பண்டிக்கைக்கு ஒரு வாழ்த்து சொல்லக் கூட மனமில்லாத பிரதமரையும் இப்தார் விருந்தில் கூட கலந்து கொள்ள மனமில்லாத பிரதமரையும் கண்டு கொண்டு இருக்கிறது.

அல்லாஹ் கறீம்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு