Tuesday, April 01, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஊரில் மழையாமே II 3

அதிரைநிருபர் பதிப்பகம் | August 20, 2015 | , , ,

இரவு முழுதும்
பூமியோடு
உறவு கொண்ட மழை
விடியற்காலையில்
விடைபெற்றுச் சென்றிருக்க

காற்றின் ஈரம்
காது மடல்களில் குளிரும்

மழை நின்ற காலையில்
கிளை உலுப்ப
தலையெல்லாம் பெய்யும்
இழை தளைகளில்
தங்கிய மழை

கண்டிப்பான மாமியாருக்கு
கட்டுப்பட்ட மருமகளாய்
மழை
தரையை யெல்லாம்
தேய்த்து
கழுவி விட்டிருக்கும்

ஊர்க் காற்றில்
ஈரமிருக்கும்
ஓடும் ஆற்றிலொரு
ராகமிருக்கும்

தற்காலிக ஓடைகளின்
தடம் பதிந்த மண்ணில்
நேற்றிரவு மழையின்
தடயம் இருக்கும்

தேநீர்க் கடைகளின்
ஈரமான
கீற்றுக் கூரைகள்
பொது இடமென்றும் பாராமல்
புகை பிடிக்கும்

அசைபோடும் பசுக்களின்
கழுத்து மணியின்
இசை பிடிக்கும்

ராப்போது பொழிகையில்
மழை மலடாகி
வானவில்லை பிரசவிப்பதில்லை

தூர ரயில் சப்தம்
துயில் எழுப்ப
ஈர வெயிலில் நடக்கயில்
திசை மாறிய மயில் ஒன்று
சாலை வழி
காணக் கிடைக்கும்

பருவமழை கணக்கீடுகளை
இயற்கை மாற்றிப்போட
அகலப்பாதை திட்டங்களை
அரசாங்கம் தள்ளிப்போட

மழை பெய்த மறுநாளின்
காட்சிகள் மாறி...

கரையும் காகமும்
கலைந்து
விரையும் மேகமும்
உலர்ந்த தரையும்
தற்காலிக மழையின்
எச்சங்களாக
இன்றைய அதிரையில்
காணக்கிடைக்கின்றன

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
காணொளி : Sஹமீது

3 Responses So Far:

நட்புடன் ஜமால் said...

ஊரில் பெய்த மழையை
விசை பலகையின்
இசை கொண்டு
எங்களையும்
நனைய வைத்து விட்டீர்கள்

அதிரை.மெய்சா said...

இடியொலியுடன் இனிய ராகம் பாடி
இன்னிசை முழக்கத்துடன்
மின்னல் வெளிச்சம் காட்டி
வான் பிளந்து பூமியழப்பெய்தது
அதிரையில் மழை

sheikdawoodmohamedfarook said...

//ஊர்காற்றில்ஈரமிருக்கும்ஓடும்நதியில்ராகமிருக்கும்//இந்தவரிகள்நெஞ்சில்ஈரத்தையும்காதில்ராகத்தையும்விதைத்தது.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.