Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சார்ந்திருப்பவர்கள்... 0

அதிரைநிருபர் பதிப்பகம் | April 28, 2016 | , ,

முன்னொரு காலத்தில் ஆப்பிரிக்க நாடான ஹபஷா(எதியோப்பியா)வை ஆண்டு கொண்டிருந்த கிறிஸ்தவ மன்னரின்மீது அதே நாட்டைச் சேர்ந்த ஒரு சாரார் போர் தொடுத்தனர். அந்த நாட்டில் முஸ்லிம்களும் வசித்து வந்தனர். சிறுபான்மையினர். அதுவும் அந்நிய நாட்டிலிருந்து அங்கு வந்து குடியேறி தஞ்சமடைந்து இருந்தவர்கள். அவர்களுக்கு இந்தப் போர் அளவற்றக் கவலையை அளித்துவிட்டது.

ஏனெனில் அந்தக் கிறிஸ்தவ மன்னர் தம் நாட்டில் அடைக்கலம் புகுந்திருந்த முஸ்லிம்களுக்கு உரிய வசதிகள் அளித்து வெகு பத்திரமாகப் பாதுகாத்து வந்தார். இந்நிலையில் அவருக்கு எதிரான இந்தப் போரில் அவர் தோற்றுவிட்டால் வெல்பவன் தங்களை என்ன செய்வானோ, ஏது செய்வானோ என்ற அவர்களுக்கு இயல்பான கவலையும் அச்சமும் ஏற்பட்டுப் போனது.

போர் தொடங்கியது. நதிக்கு மறுபுறம் களத்தில் சண்டை நடக்க, இங்கு நகரில் பதட்டத்துடனும் கவலையுடனும் அமர்ந்திருந்தார்கள் முஸ்லிம்கள். யாராவது களத்திற்குச் சென்று என்ன நடக்கிறது என்று தெரிந்து வந்து சொன்னால் நன்றாயிருக்கும் என்று அவர்களுக்குத் தோன்றியது.

‘நதியைக் கடந்து சென்று அங்கு நடப்பவற்றை அறிந்து வந்து சொல்ல யாராவது தயாரா?’ என்று கேட்டுக் கொண்டார்கள்.

“நான் செல்கிறேன்” என்று ஒருவர் தம் கையை உயர்த்தினார்.

“நீயா?” என்று ஏக ஆச்சரியத்துடன் கேள்வி எழுந்தது. ஏனெனில் கையை உயர்த்தியவர் இளவயதுச் சிறுவர். தொலைவில் உள்ள போர்க் களத்திற்குச் செல்ல வேண்டும்; அதுவும் நதியை நீந்திக் கடக்க வேண்டும். ‘இந்தச் சிறுவர் எப்படி?’ என்று அவர்கள் அஞ்ச,அவரோ உறுதியுடன் தலையசைத்தார்,

தோல்துருத்தியில் காற்றடைத்து, அவரது நெஞ்சுடன் அதைக் கட்டி நதியோடு போய் வா என்று இறக்கி விட்டார்கள். நீந்தி, போர் நடைபெறும் பகுதியை அடைந்தார் அந்த இளைஞர். இங்கு இருந்த முஸ்லிம்களோ அந்த மன்னருக்கு வெற்றி வாய்க்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொண்டிருந்தனர். போரில் அந்த மன்னர் வெற்றி அடைந்தார். இளைஞர் மீண்டும் நீந்தி இப்பால் வந்து, தம் ஆடையின் ஒரு பகுதியைக் கழட்டி உயர்த்திக் கொடிபோல் வீசிக்கொண்டு முஸ்லிம்களிடம் ஓடிவந்தார்.

“மக்களே மகிழுங்கள்! நம் மன்னருக்கு வெற்றி. அந்த எதிரிகளை அல்லாஹ் ஒழித்தான்.”

அதைக் கேட்டு அந்தச் சிறுபான்மை முஸ்லிம்கள் பெரும் உற்சாகமடைந்தார்கள். அன்னை உம்மு ஸலமா ரலியல்லாஹு அன்ஹா விவரித்துள்ள இந்த நிகழ்வு வரலாற்றில் குறித்து வைக்கப்பட்டுள்ளது. நபியவர்களின் காலத்தில் அபிஸீனியாவுக்கு முஸ்லிம்கள் புலம் பெயர்ந்து வாழ்ந்தபோது அங்கிருந்த நஜ்ஜாஷி மன்னர் ஈடுபட்ட போரும் அதில் அவர் அடைந்த வெற்றியும்தாம் மேற்சொன்ன நிகழ்வு. துறுதுறுவென்று தோல்துருத்தியைக் கட்டிக் கொண்டு நீந்திச் சென்றவர் புகழ் பெற்ற தோழர் ஸுபைர் இப்னுல் அவ்வாம் (ரலி).

முஸ்லிம்களுக்கு அப்படி என்ன அந்த நஜ்ஜாஷி மன்னரின்மீது பிரியம்? அவர் வெல்ல வேண்டும் என்று முஸ்லிம்கள் இறைவனிடம் இறைஞ்சும் அளவிற்கு நேசமாக இருந்திருக்கிறார்களே, அப்படியானால் அவர்கள் அந்த மன்னர் மீது எந்த அளவிற்கு அன்பும் மதிப்பும் வைத்திருந்தார்கள் என்பதை நாம் அறிய வேண்டியது முக்கியம். சமகாலத்தில் வெகு முக்கியம்.

மக்காவில் இஸ்லாம் மீளெழுச்சியுற்ற ஆரம்பக் காலங்களில் முஸ்லிம்களின் எண்ணிக்கை சொற்பம். அவர்களை மக்க நகரத்துக் குரைஷிகள் புரட்டியெடுத்தனர். அடி பின்னி எடுத்தார்கள். பாலை மணலில் வெற்றுடம்புடன் படுக்க வைத்து வறுத்து எடுத்தார்கள்.வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டார்கள். அவர்களது கொடுமையும் தீங்கும் உச்சத்தை எட்டிய தருணத்தில் முஸ்லிம்கள் புலம்பெயர அனுமதி அளித்தார்கள் முஹம்மது நபி (ஸல்). நபித்துவத்தின் ஐந்தாம் ஆண்டில் 12 ஆண்களும் 4 பெண்களும் அடங்கிய முதல் குழுவினரும் அடுத்து 83 ஆண்களும் 18 பெண்களும் கொண்ட இரண்டாவது குழுவினரும் இரகசியமாக மக்காவிலிருந்து அபிஸீனியா நாட்டிற்கு வந்து இறங்கினார்கள்.

அபிஸீனிய நாட்டை நஜ்ஜாஷி என்ற மன்னர் ஆண்டு கொண்டிருந்தார். நேர்மையான அரசர். மீண்டும் ஒருமுறை அழுத்தி வாசிக்கவும். முஸ்லிமல்லாதவராக இருந்தாலும் அவர் நேர்மையான அரசர். “வாங்க” என்று வந்தவர்களை வரவேற்று, தங்க இடம்,உண்ண உணவு அனைத்திற்கும் மேலாகப் பாதுகாப்பு அளித்தார் அந்த மன்னர். பாதுகாப்பு என்றால் ஒப்புக்கான பாதுகாப்பன்று. மெய்யான பாதுகாப்பு.

எப்படி?

தங்களிடமிருந்து தப்பித்த முஸ்லிம்கள் அபிஸீனியாவில் பத்திரமாக வாழ்கிறார்கள் என்று தெரிய வந்ததும் மக்காவில் உள்ள குரைஷிகளுக்கு வியர்க்க ஆரம்பித்தது. தப்பித்துப் போனார்கள், விட்டுத் தொலைவோம் என்று இல்லாமல் அம்ரிப்னுல்-ஆஸ், அப்துல்லாஹ் இப்னு அபீரபீஆ என்ற இருநபர் குழுவை, ‘ஒன்று அந்த அயல்நாட்டு மண்ணிலேயே அந்த முஸ்லிம்கள் கொன்று புதைக்கப்பட வேண்டும்; அல்லது அங்கிருந்து மக்காவி்ற்கு அவர்கள் விரட்டியடிக்கப்பட வேண்டும். அதற்கு அபிஸீனியா மன்னர் நஜ்ஜாஷியைச் சந்தித்துக் கச்சிதமாய் பேசி இந்தக் காரியத்தை நிறைவேற்றுங்கள்’ என்று கூறி அனுப்பி வைத்தார்கள்.

வந்தவர்கள் ராஜ பிரதானிகளுக்கும் மன்னருக்கும் அன்பளிப்புகளை அள்ளி இறைத்து, “ஓ மன்னா! எங்கள் குலத்தைச் சேர்ந்த கீழ்குல மக்களின் கூட்டத்தினர் தங்களது இராச்சியத்தில் அடைக்கலம் புகுந்துள்ளனர். நாங்களோ அல்லது நீங்களோ அறியாத புதிய மதமொன்றை அவர்கள் புகுத்த ஆரம்பித்துள்ளார்கள். எங்கள் மதத்தை விட்டு நீங்கிவிட்ட அவர்கள், உங்கள் மதத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களின் அப்பன், சிற்றப்பன், பெரியப்பன், மாமன், எங்கள் குலத்தின் உயர்குடித் தலைவர்கள் ஆகியோர் எங்களை இங்கு அனுப்பியுள்ளார்கள். இவர்களை மீட்டு அவரவர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் இந்த இளையவர்கள் அங்கு நிகழ்த்தியுள்ள குழப்பத்தையும் சச்சரவையும் அவர்களே நன்கு அறிந்தவர்கள்” என்றுவேண்டுகோள் வைத்தார்கள்.

“இவர்கள் உண்மையைத்தான் உரைக்கிறார்கள் மன்னா. அந்த மக்களது சொந்த மக்களே அவர்களது செயல்பாட்டைச் சிறப்பாய் உணர்ந்து தீர்ப்பு சொல்லக் கூடியவர்கள். அவர்களைத் திருப்பி அனுப்பிவிடுங்கள். மக்காவின் தலைவர்களே இவர்களை என்னசெய்வது என்று தீர்மானித்துக்கொள்ளட்டும்” என்று ஆமோதித்தார்கள் அன்பளிப்புகளில் மயங்கிய ராஜபிரதானிகள்.

முகம் சிவந்தார் நஜ்ஜாஷி! எந்தப் பரிந்துரையை சாதமாக்கிக் கொள்ளலாம் என்று குரைஷிக் குழு நினைத்ததோ அதுவே அவர்களுக்கு நேர்விரோதமாய் வேலை செய்தது.

“இறைவன் மீதாணை! – முடியாது! அவர்கள்மீது கூறப்படும் இந்தக் குற்றச்சாட்டை அவர்களை அழைத்து விசாரிக்காதவரை அவர்களை யாரிடமும் ஒப்படைக்க மாட்டேன். இவர்கள் கூறுவது உண்மையாக இருப்பின், இவர்களிடம் அந்த முஸ்லிம்களை ஒப்படைப்பேன். ஆனால் விஷயம் அவ்வாறு இல்லையெனில் நான் அவர்களுக்குப் பாதுகாவல் அளிப்பேன். சிறந்த அண்டை நாட்டினனாய் இருப்பேன். அவர்கள் விரும்பும் காலமெல்லாம் என்னுடைய நாட்டில் வாழலாம்”

சொன்னது போலவே முஸ்லிம்களை தமது அவைக்கு அழைத்துவரச் சொன்னார் நஜ்ஜாஷி. “அழைத்து வாருங்கள் அவர்களை”

நடந்தவை அனைத்தையும் அறிந்த முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் சஞ்சலம் ஏற்பட்டுப்போனது. ‘உங்களுடைய சங்காத்தமே வேண்டாம் என்றுதானேய்யா இங்கு வந்துவிட்டோம். அப்பவும் விடமாட்டீர்களா?’ மல்லுக்கட்ட பின்தொடர்ந்து வந்துவிட்ட குரைஷிக்குழுவின் திட்டத்தை எப்படி எதிர்கொள்வது என்று கூடிப்பேசினார்கள்.

“அரசர் நம்மிடம் நம் மார்க்கத்தைப் பற்றி விசாரிக்கப் போகிறார். நமது இறைநம்பிக்கையைப் பற்றித் தெளிவாய் அவரிடம் சொல்லிவிடுவோம். நம் சார்பாய் ஒருவர் மட்டும் பேசட்டும். மற்றவர்கள் அமைதியாய் இருப்போம்” என்று அவர்கள் ஜஅஃபர் பின் அபீதாலிப் ரலியல்லாஹு அன்ஹுவைத் தேர்ந்தெடுத்தார்கள். சிந்தித்துப் பார்த்தால் உண்மையிலேயே அது பிரமிக்கவைக்கும் கட்டுப்பாடு; செயல்பாடு. மிக மிக நெருக்கடியான அந்தச் சூழ்நிலையில் நிதானமாய் ஆலோசனை புரிந்து தெளிவான ஒரு வழிமுறை,அதுவும் சிறந்ததொரு வழிமுறையை அவர்கள் தேர்ந்தெடுத்தது அவர்களது ஈமானின் வலுவையும் நபியவர்களிடம் அவர்கள் அதுவரை கற்றிருந்த வழிமுறையின் சிறப்பையும் நமக்கு எடுத்துச்சொல்லும்.

அனைத்து முஸ்லிம்களும் நஜ்ஜாஷியின் அவையை அடைந்தனர். நஜ்ஜாஷியின் இருபுறமும் பாதிரியார்கள். அனைவரும் வீற்றிருந்தார்கள். எதிரே அவர்களது நூல்கள். அம்ரிப்னுல்-ஆஸும், அப்துல்லாஹ் இப்னு அபீரபீஆவும் அவையில் ஆஜராகியிருந்தனர்.

முஸ்லிம்கள் வந்ததும் அவர்களை நோக்கித் திரும்பிய நஜ்ஜாஷி, “நீங்கள் கண்டுபிடித்திருக்கும் உங்களது புதிய மதத்தைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள். இந்தப் புது மதத்தின் நிமித்தமாய் நீங்கள் உங்கள் மக்களின் மதத்திலிருந்து நீங்கி விட்டிருக்கின்றீர்கள்.நீங்கள் எங்கள் மதத்திலும் இணையவில்லை; நாம் அறிந்த வேறு மதத்திலும் இணைந்ததாக நாம் அறியவில்லை” என்றார்.

தங்களுக்கு ஆதரவு அளிக்கும் வேற்றுமத அரசன்முன் மிகவும் பலவீனமான நிலையில் சிறுபான்மை முஸ்லிம்கள். அவர்களைக் கொத்தி தூக்கிப் பறக்க கழுகு போல் தயாராகக் காத்து நிற்கும் எதிரிகள். எத்தகைய அபாயமான இக்கட்டான சூழ்நிலை அது? வாழ்வா சாவா என்ற நிலை அல்லவா அது? எனினும், அவர்கள் அல்லாஹ்வைச் சார்ந்திருந்தவர்கள்.

ஜஅஃபர் இப்னு அபீதாலிப் பேச ஆரம்பித்தார். புகழாரமில்லை. முகஸ்துதி இல்லை. எங்கே மன்னர் தங்களுக்கு அளிக்கும் பாதுகாப்பைத் திரும்பப் பெற்றுக்கொள்வாரோ என்ற அச்சம் சிறிதும் இல்லை.

“மன்னரே! நாங்கள் அறியாமையில் இருந்தோம்; சிலைகளை வணங்கினோம்; இறந்த பிராணிகளை உண்டோம்; மானக்கேடான காரியங்களில் ஈடுபட்டோம்; உறவுகளைத் துண்டித்துக்கொண்டு அண்டை வீட்டாருக்குக் கெடுதிகள் விளைவித்து வாழ்ந்து வந்தோம்; எங்களில் எளியோரை வலியோர் அழித்து வந்தோம். இவ்விதமாய் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும்போதுதான் எங்களில் ஒருவரையே அல்லாஹ் எங்களுக்குத் தூதராக அனுப்பினான். அவர் உண்மையாளர், நம்பகத்தன்மை மிக்கவர், மிக ஒழுக்கசீலர் என்பதையும் அவர் வமிசத்தையும் நாங்கள் நன்கு அறிவோம்”;

“நாங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும்; நாங்களும் எங்களது மூதாதையர்களும் வணங்கி வந்த கற்சிலைகள், புனித ஸ்தலங்கள் போன்றவற்றிலிருந்து நாங்கள் விலக வேண்டும்; உண்மையையே உரைக்க வேண்டும்; அடைக்கலப் பொறுப்பான அமானிதத்தை நிறைவேற்ற வேண்டும்; உறவினர்களோடு இணைந்து வாழவேண்டும்; அண்டை வீட்டாருடன் அழகிய முறையில் நடந்து கொள்ள வேண்டும்; அல்லாஹ் தடைசெய்தவற்றையும் கொலைக் குற்றங்களையும் விட்டு விலகிவிடவேண்டும் என அத்தூதர் எங்களுக்குக் கட்டளையிட்டார்”;

“மேலும் மானக்கேடானவைகள், பொய் பேசுதல், அனாதையின் சொத்தை அபகரித்தல், பத்தினிப் பெண்கள்மீது அவதூறு கூறுவது போன்றவற்றிலிருந்து எங்களைத் தடுத்தார். அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும்; அவனுக்கு இணைவைக்கக் கூடாது; தொழ வேண்டும்; செல்வந்தர்கள் ஏழைகளுக்கு வளவரி செலுத்த வேண்டும்; நோன்பு நோற்க வேண்டும் என்றும் அத்தூதர் எங்களுக்கு கட்டளையிட்டார்”;

“நாங்கள் அவரை உண்மையாளர் என்று நம்பினோம்; அவரிடம் விசுவாசம் கொண்டோம்; அவர் எங்களுக்கு அறிமுகப்படுத்திய அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பின்பற்றினோம்; அல்லாஹ் ஒருவனையே வணங்க ஆரம்பித்தோம்; அவனுக்கு இணை வைப்பதை விட்டுவிட்டோம்; அவன் எங்களுக்கு விலக்கியதிலிருந்து விலகிக் கொண்டோம்; அவன் எங்களுக்கு அனுமதித்ததை அப்படியே ஏற்றுக் கொண்டோம். இதனால் எங்களது இனத்தவர் எங்கள் மீது அத்துமீறி நடந்துகொள்ள ஆரம்பித்தனர்; எங்களை வேதனை செய்தனர். அல்லாஹ்வை வணங்குவதை விட்டுவிட்டு சிலைகளை வணங்க வேண்டும்; முன்போலவே தீயவற்றைச் செய்ய வேண்டும் என்று எங்களை கட்டாயப்படுத்தி எங்களது மார்க்கத்திலிருந்து திருப்ப முயன்றனர். எங்களை அடக்கி, அநியாயம் புரிந்து, நெருக்கடியை உண்டாக்கி எங்களது மார்க்கத்தைப் பின்பற்றுவதற்கும் மதச் சுதந்திரத்துக்கும் அவர்கள் தடை ஏற்படுத்திய போதுதான் உங்களது நாட்டுக்கு நாங்கள் வந்தோம். உங்களை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். உங்களிடம் தங்குவதற்கு விருப்பப்பட்டோம். அரசே! எங்களுக்கு இங்கு அநீதி இழைக்கப்பட மாட்டாதென்று நம்புகிறோம்”.

தெளிவான, சீரான, நேர்மையான பேச்சு அது. இஸ்லாமிய வரலாற்றின் சிறப்பானதொரு பிரசங்கம்.

ஜஅஃபரின் பேச்சை உற்றுக்கேட்ட நஜ்ஜாஷி, “இறைவனைப் பற்றி உங்களுக்கு உங்கள் நபி அளித்தது ஏதாவது தெரிவிக்க முடியுமா?”

‘தெரியும்’ என்ற ஜஅஃபர் ஓத ஆரம்பித்தார். குர்ஆனின் 19ஆவது அத்தியாயம் சூரா மர்யமின் வசனங்களை – “காஃப், ஹா, யா, ஐன், ஸாத். (நபியே! இது) உம்முடைய இறைவன் தன் அடியாராகிய ஜகரிய்யாவுக்கு அருளிய பேரருளைப் பற்றியதாகும்” ஆரம்பத்திலிருந்து துவக்கி,

"நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையுடன் எப்படிப் பேசுவோம்?" என்று கேட்டனர். "நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான். "இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னைப் பெரும்பேறு பெற்றவனாக ஆக்கியிருக்கின்றான்; மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும் ஜகாத்தையும் (நிறைவேற்ற) எனக்கு அறிவுறுத்தி (கட்டளையிட்டு) இருக்கின்றான். "என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்;) பேறுகெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை. "இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்" என்று (அக்குழந்தை) கூறியது”

என்று 33ஆவது வசனத்தை ஜஅஃபர் ஓதி முடிக்கும்போது நஜ்ஜாஷியின் கண்களிலிருந்து தாரை தாரையாய்க் கண்ணீர் அவரது தாடி நனைந்து கொண்டிருந்தது! அருகிலிருந்த பாதிரிகள் கண்களில் கண்ணீர். அவர்களது வேதநூல்கள் நனைந்து கொண்டிருந்தன. ஏக இறைவன் அருளிய குர்ஆன் வசனங்களின் அழுத்தமும் தெளிவும் வசீகரமும் அவர்களை ஏகத்துக்கும் கலக்கியிருந்தன.

தங்களது கொள்கையில் எவ்வித சமரசமும் இன்றி, உள்ளது உள்ளபடி உண்மையை உரத்து உரைத்த ஜஅஃபரின் பேச்சில் இன்றைய முஸ்லிம் தலைவர்களுக்கும் முஸ்லிம்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் ஏகப்பட்ட பாடம் ஒளிந்துள்ளது. ஏனெனில்அவர்களது சூழ்நிலைதான் அவர்களை பலவீனர்களாக்கி இருந்ததே தவிர, உள்ளத்தில் குடிகொண்டிருந்த ஈமானில் அவ்வளவு அசாத்திய பலம்! ஏக இறைவன்மீது அசைக்க இயலாத நம்பிக்கை!

“எங்களுக்கு ஈஸா கொண்டுவந்த ஒளி எங்கிருந்து வந்ததோ அங்கிருந்தே உங்கள் நபியும் உங்களுக்கு ஒளி கொண்டுவந்துள்ளார்” என்று கூறிய நஜ்ஜாஷி மக்கத்துக் குழுவினரிடம் திரும்பி, “நீங்கள் வந்த வழியே உங்கள் ஊருக்குப் போகலாம். நான் இவர்களை ஒப்படைப்பதாக இல்லை”

தூது வந்த குழு ஏமாற்றத்துடன் திரும்ப, சிறுபான்மை முஸ்லிம்களுக்குத் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தினார் அந்த மன்னர் நஜ்ஜாஷி. சிறந்த அண்டை நாட்டில் சிறந்த தோழமையில் தங்கியிருக்க ஆரம்பித்தார்கள் முஸ்லிம்கள்.பத்து ஆண்டுகள் நஜ்ஜாஷியின் அபிஸீனிய நாட்டில் அமைதியான பாதுகாப்பான வாழ்க்கை அமைந்திருந்தது முஸ்லிம்களுக்கு.

அவ்விதம் பாதுகாப்பு அளித்த  நீதியரசருக்குத்தான் அவர் போரில் வெற்றியடைய பிரார்த்தனை புரிந்தார்கள் அந்தச் சிறுபான்மை முஸ்லிம்கள்.

மாறாக, இன்று நம் நாட்டின் சிறுபான்மை முஸ்லிம்களின் நிலை என்ன?

அமைச்சர் பதவிக்கு ஆசைப்படும் பிற மதப் பிரபலங்களே C வடிவில் வளைந்து கும்பிடு போடும்போது, அவர்களையும் விஞ்சி, தன்மானத்தை அடகு வைத்துவிட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர், கேவலம் சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்காக தலைகீழ் L வடிவில் கும்பிடு போட்டுக் கொண்டு ருகூவில் நிற்கும் கேவலம் அரங்கேறி வருகிறது.  பார்க்கும்போதே வயிற்றைக் குமட்டவில்லை?

இவர்களெல்லாம் தம்மை முஹம்மது நபியின் உம்மத்துகள்; காயிதே மில்லத்தின் அரசியல் வாரிசுகள்; சமுதாயத்தின் காவலர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்வது அசிங்கத்தின் உச்சமில்லையா?

"இன இழிவு நீங்கிட இஸ்லாமே நன்மருந்து" என்று பெரியார் கூறினார். ஆனால், நம்முடைய இனமே இஸ்லாத்திற்கு இழிவைத் தேடித் தருவதற்கு முனைப்புக் காட்டி நிற்பகும் காலத்தின் கோலத்தை என்னென்பது?

நம்முடைய ஈமானைப் பாதுகாத்துக் கொள்வதே இன்றைய நிலையில் நமது தலையாய தேவையாக இருக்கின்றது.

இறைவா!

உன் பார்வையில் நரகின் எரிகொள்ளிகளான மனிதர்களைத் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆடுகின்ற, அவர்களின் அநியாயங்களுக்குத் துணை போகின்ற, வக்காலத்து வாங்குகின்ற, சப்பைக்கட்டு கட்டுகின்ற முஸ்லிம் பெயர் தாங்கிகளின் வரம்பு மீறிய செயல்களுக்காக அவர்களோடு சேர்த்து எங்களையும் தண்டித்துவிடாதே!
நாங்கள் உன்னையே சார்ந்திருப்பவர்கள்!


நூருத்தீன்

0 Responses So Far:

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு