Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

முற்போக்கு கூட்டணி ! 5

அதிரைநிருபர் பதிப்பகம் | March 16, 2015 | , , , ,


காற்றுக்கேது வேலி !

கா.மூ.தொ. கூட்டணியினை அதாவது E.N.T - மருத்துவர்கள் மட்டுமல்ல, பொதுமக்களாகிய நமக்கும் இது பரிச்சயமான வார்த்தைதான். காது (EAR), மூக்கு (NOSE). தொண்டை (THROAT) என்பதுதான், இதன் விரிவாக்கம்.

பொதுவாக, நம் உடலில் உள்ள ஒவ்வோர் உறுப்புக்கும் தனித்தனி மருத்துவப் பிரிவு இருக்கிறது. அந்த பிரிவில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள், குறிப்பிட்ட உறுப்புக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கண்டு அறிந்து சரி செய்கிறார்கள். ஆனால், காது, மூக்கு, தொண்டை ஆகிய உறுப்புகளை மட்டும் ஒரே கூட்டணியாக்கி அதை ஈ.என்.டி (கா.மூ.தொ) என்ற பிரிவின் கீழ் கொண்டு வந்திவிட்டார்கள். இதற்கு என்ன காரணம்?

விசேஷமாக ஒன்றும் இல்லை. இந்த மூன்று உறுப்புகளுமே காற்றை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றன என்பது முதல் காரணம். செயல்படும் விதத்திலும் இவை மூன்றும் ஒன்றோடு ஒன்று நெருக்கமான தொடர்பில் இருக்கின்றன என்பது இன்னொரு காரணம்.

உதாரணமாக, நமக்குக் காது நன்றாகக் கேட்க வேண்டும் என்றால், அதற்குத் தொண்டையின் பங்களிப்பும் அவசியம். மூக்கில் இருந்து ஆரம்பிக்கும் நமது சுவாசப் பாதை, தொண்டை வழியாகத்தான் பயணப்படுகிறது. ஆக, நமது சுவாசம் சரிவர நடைபெற, இந்த இரண்டு உறுப்புகளும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டியிருக்கிறது. இப்படி, இந்த மூன்று உறுப்புகளுமே பல வகையில் கூட்டணியாகப் பணியாற்றுவதாலும் இவை ஒரே பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.

அமைப்பு ரீதியாகப் பார்த்தாலும், இவை அருகருகே, பக்கமாக, நெருக்கமாக அமைந்துள்ளன என்பது மூன்றாவதாகச் சொல்லப்படும் காரணம். மூன்று உறுப்புகளுக்கும் சேர்த்து மூன்று காரணங்களைச் சொல்லியாகிவிட்டது. இனி, ஒவ்வோர் உறுப்பு பற்றியும் தனித்தனியாகப் பேசலாம்.

காது: 

இந்த உலகத்தோடு நம்மைத் தொடர்புபடுத்தும் உறுப்புகளுள் காதுக்கு மிக முக்கியமான பொறுப்பு உண்டு. நாம் காது என்று பொதுவாக எதை நினைத்துக் கொண்டிருக்கிறோமோ அதுமட்டும் காது அல்ல. அதாவது, வெளியில் நாம் பார்க்கிற காதுமடல் மட்டுமே காது அல்ல.

நமது காது, வெளிப்புறக் காது, நடுக் காது, உள் காது என மூன்று பகுதிகளைக் கொண்டது. ஓர் ஒலியை கேட்டு உணர்வதில் இந்த மூன்று பகுதிகளும் ஒவ்வொரு மீடியமாகச் செயல்படுகின்றன. வெளிப்புறக் காது, வாயு மீடியம்; நடுக் காது திட மீடியம்; உள் காது திரவ மீடியம். எப்படி என்று பார்க்கலாம்.

ஒலியை நாம் உணர்வது பல கட்டங்களாக நடைபெறுகிறது. கேட்கப்படும் ஒலியைக் காற்றின் மூலமாக உள்வாங்கி, அதை நடுக் காதின் பக்கம் அனுப்பிவைப்பதுதான் முதல் கட்டம். வெளிப்புறக் காதின் வசம்தான் இந்த முதல் கட்டம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. காற்றுதான் இங்கே மீடியமாகச் செயல்பட்டு, ஒலியை வெளியிலிருந்து உள்ளே எடுத்துச் செல்கிறது. ஓர் ஒலியின் அளவு, திசை போன்றவற்றை உணர்ந்து கொள்ளும் முக்கியமான வேலையிலும் வெளிப் புறக் காது பங்கேற்கிறது.

வெளிக் காதையும் நடுக் காதையும் பிரிக்கும் பகுதியை செவிப்பறை (EAR DRUM) எனப்படும். புனல் போன்று தோன்றும் காது மடல், ஒரு குறுகிய பாதையின் வழியே நீண்டு செவிப்பறையை அடைகிறது. இந்த செவிப்பறையின் பின்புறம் ஹாமர், அன்வில், ஸ்டிர்ரப் (HAMMER, ANVIL and STIRRUP) ஆகிய மூன்று எலும்புகள் உள்ளன. இந்த அமைப்புதான் நடுக் காது எனப்படுகிறது.

வெளிப்புறக் காதின் வழியாக உள்ளே வரும் ஒலியின் அலை வரிசைக்கு ஏற்ப, செவிப்பறை அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. மேலே குறிப்பிட்டுள்ள அந்த மூன்று எலும்புகள்தான் திட மீடியமாகச் செயல்பட்டு, செவிப்பறையில் ஏற்படும் அதிர்வுகளைக் கடத்துகின்றன. செவிப்பறை உண்டாக்கும் அதிர்வுகளைப் பொறுத்துதான் இது எந்த வகையான ஒலி என்பதை உணர்ந்து கொள்கிறோம்.

அடுத்து அமைந்துள்ளதுதான் உள் காது. உள்ளே துளை உடைய பகுதி இது. நம் உடலில் மிக அடர்த்தியான எலும்புக்குள் இது புதைந்திருக்கிறது. உள் காதில், பெரிலிம்ப், எண்டோலிம்ப் என்ற இரண்டு வகையான திரவங்கள், இரண்டு அடுக்குகளாகக் காணப்படுகின்றன. நடுக் காதில் உள்ள ஸ்டிர்ரப் எலும்புதான், மனித உடலில் உள்ள மிகமிகச் சிறிய எலும்பு. செவிப்பறையில் ஏற்படும் அதிர்வால் இந்த எலும்பு அசையும்போது உள் காதில் உள்ள எண்டோலிம்ப் திரவத்திலும் அதிர்வுகள் உண்டாகின்றன.

இந்தத் திரவத்தைச் சுற்றிலும் புரதத்தால் ஆன மிக மெல்லிய ரோம செல்கள் அமைந்திருக்கின்றன. திரவம் அதிரும்போது, இந்த செல்கள் தூண்டப்பட்டு ஒருவகையான ரசாயனத்தை வெளிப்படுத்துகின்றன.

எலும்புகளால் கடத்தப்படும் ஒலி அலைகள், ரசாயனத்தோடு சேர்ந்து மின் அலைகளாக மாற்றப்பட்டு, திரவத்தில் மிதந்து கொண்டிருக்கும் செவியுணர்வு நரம்புகள் மூலமாக, மூளைக்கு அனுப்பப்படுகின்றன. இந்த மின் அலைகளுக்கு ஏற்ப, குறிப்பிட்ட ஒலியை காரின் ஹார்ன் சத்தமா, உம்மாவின் இனிய குரலா என்று மூளை அடையாளம் கண்டு கொள்கிறது.

காது என்பது கேட்பதற்கான முக்கியப் பகுதி மட்டுமல்ல, தள்ளாடாமல், தடுமாறாமல் நம்மை நிலைநிறுத்தச் செய்து கொண்டு நிலையாக நிற்கவும், நடக்கவும் உதவியாக இருக்கிறது. உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவதிலும், காதுக்குப் பங்கு இருக்கிறது. தள்ளாடாமல் நிலையாக நிற்கும் விஷயத்தில் கண்கள், மத்திய நரம்பு மண்டலம் ஆகியவற்றுக்கும் மிக முக்கியமான பொறுப்பு இருக்கிறது.

சிறு வயதில் உங்களையே நீங்கள் சுற்றிக் கொண்டிருப்பீர்கள். அப்போது உங்களின் தலை கிர்ர் என்ற சத்தத்தோடு சுற்றுவது போல் ஓர் அனுபவம் உங்களுக்குக் கிடைத்திருக்கும். ஆனால், நீங்கள் சுற்றிவிட்டு நின்றபிறகும் காட்சிகளும் தடுமாறுவதுபோல் இருக்கும். இதற்குக் காரணம் நம் காதுதான்.

நாம் சுற்றும்போது காதுக்குள் உள்ள திரவமும் அசைகிறது. இந்த திரவம், காதுக்குள் உள்ள சிறு சிறு ரோமக் கால்கள் மூலம், இப்போது உடல், எந்தத் திசையில், எங்கே, எப்படி இருக்கிறது என்று மூளைக்குத் தகவல் அனுப்புகிறது. சுற்றி முடித்தவுடன் உடம்பு நின்றுவிடுகிறது. ஆனால், காதில் உள்ள திரவம் தொடர்ந்து சிறிது நேரம் அசைந்துவிட்டுத்தான் ஓய்வு நிலையை எட்டுகிறது. இதனால்தான், உடல் ஒரு நிலைக்கு வந்த பிறகும் நமக்குத் தடுமாற்றங்கள் ஏற்படுகின்றன.

மேலே குறிப்பிட்ட மூன்று பாகங்களும் மூளைக்கு அனுப்பும் செய்தியில் வேறுபாடு ஏற்பட்டால் தலை சுற்றுவது போன்ற உணர்வு ஏற்படத்தான் செய்யும். நாம் நின்றுவிட்டோம் என்பதை கண்கள் உணர்த்துகின்றன. ஆனால், காதுகளோ (திரவத்தின் அசைவுகள் தொடர்வதால்) 'உடல் தொடர்ந்து சுற்றுகிறது' என்ற தவறான செய்தியை மூளைக்கு உணர்த்துகின்றன. இதனால்தான், மூளையும் குழம்பி தலை சுற்றுகிற உணர்வை ஏற்படுத்துகிறது.

சிறிது நேரம் கழித்து திரவத்தின் அசைவு நின்றுபோக, "உடல் இப்போது அசைவில்லாமல் இருக்கிறது" என்ற தகவலைக் காதும் உறுதி செய்ய, மூளையும் குழப்பம் விலகி உத்தரவுகளைப் பிறப்பிக்க, தலை சுற்றுவது நிற்கிறது.

ஏதோ ஓர் உடல் பிரச்சினையின் காரணமாக, காதுக்குள் உள்ள திரவத்தின் அசைவில்லாத் தன்மை பாதிக்கப்படும்போது, நம் உடலின் நடுநிலையும் பாதிக்கப்படுகிறது என்பதைத்தான் நீங்கள் இங்கே புரிந்து கொள்ள வேண்டும்.

நம் உடலின் சில குறிப்பிட்ட பாகங்கள் சரியாக வேலை செய்யாததாலும், பேலன்ஸ் தவறிப்போகலாம். பார்க்கின்ஸன்ஸ் நோய், பக்கவாதம் போன்ற பாதிப்புகள் மூளையில் உள்ள சில நரம்புகள் சரிவர இயங்காததால் உண்டாகின்றன இவற்றால் பாதிக்கப்பட்டவர்களால் தங்கள் உடலை ஒழுங்காக நேர் நிலைச் செய்ய முடியாது, நீரிழி நோய், பாதங்களில் உள்ள நரம்புகள் பாதிக்க, அப்போதும் ஒழுங்காக நடக்கமுடியாமல் போகலாம்.

சிலர், 'வெர்டிகோ; (VERTIGO) என்ற பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். உயரமான இடங்களுக்குச் சென்று கீழே பார்த்தால் இவர்களுக்குத்ட் தலை சுற்றும். காதுகளின் உள்புறத்தில் ஏற்படும் சிக்கல்களின் காரணமாகத்தான் இப்படி ஏற்படுகிறது.

நீர்ச்சத்து குறைதல் (DEHYDRATION), ரத்தச் சோகை, சில வகை மருந்துகள், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் தானியங்கி நரம்பு மண்டலத்தில் உள்ள குறைபாடுகள் ஆகியவற்றின் காரணமாகவும் இவை ஏற்படலாம். கேடராக்ட் க்ளுகோமோ போன்ற கண் பார்வைக் குறைபாடுகளாலும் உடலைச் சீராக நடக்கவைக்க முடியாமல் போகலாம்.

எல்லாவற்றுக்கும் மேல், உடலுக்குக் கொஞ்சம் சக்தியாவது வேண்டும். இடுப்பு, முழங்கால் போன்ற பாகங்களில் உள்ள தசைகள் நாம் நேராக நிற்பதற்கு முகவும் அவசியம். அவை பலவீனமாக இருந்தால் நிமிர்ந்த நேர்கொண்ட பார்வையும் சாத்தியமில்லை.

இப்படிக்கு
கா.மு.தொ.முற்போக்கு கூட்டணி !

நன்றியுடன் : காது-மூக்கு-தொண்டை (பிரச்சினைகள் - தீர்வுகள்) கையடக்க புத்தகத்திலிருந்து (காசு கொடுத்து) சுட்டதும், மனதைத் தொட்டதும்... (அபுஇபுறாஹிம்)

5 Responses So Far:

sabeer.abushahruk said...

அ இ,

கா மூ தொ கூட்டணி ஒரு வெற்றிக் கூட்டணி.

கா ஓகே.

மூ தொ- எ?

- ச அ அ ஷா

Ebrahim Ansari said...
This comment has been removed by the author.
Ebrahim Ansari said...

இந்தக் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் ஒத்துழைத்தால் வாழ்க்கை வெற்றிதான்.

Iqbal M. Salih said...

'அல்லாஹும்ம ஆஃபினீ ஃபீ பதனீ 'என்று உடல்நல்சுகம் தருமாறு துஆவைத் துவங்கி, அத்துடன் தனியாக, 'அல்லாஹும்ம ஆஃபினீ ஃபீ சம்ஈ' என்று 'செவி நலத்தைப் பற்றித்' தனியாகவும் 'அல்லாஹும்ம ஆஃபினீ ஃபீபசரீ' லா இலாஹ இல்லா அன்த்த என்று 'கண்பார்வை நலனைப் பற்றித் தனியாகவும்' குறிப்பிட்டு துஆ கேட்குமாறு ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே, இப்போது நாம் பேசும் E.N.T பற்றி, நமக்கு நற்சுகம் போதித்த நாயகம் (ஸல்) அவர்கள் அன்றே 'அழகிய முன் மாதிரியாக' நமக்குக் காட்டித் தந்திருப்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம் அல்லவா? ஜஸாக்கல்லாஹு க்ஹைர் தம்பி அபுஇபுறாஹீம்!

sheikdawoodmohamedfarook said...

காவன்னா.மூனா.தொனா.கூட்டணிதான்நிலையானகூட்டணி. சந்தர்ப்பங்களுக்கும்சம்த்திங்களுக்கும்அங்கேஇங்கேதாவாதகூட்டணி. என்காதுஒருமாசமாஅரிக்கிறது.உள்ளங்கைஅரித்தால்பணம்வரும்என்பார்கள்.காதுஅரித்தால்நல்லசேதிவருமோ?

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு